Sidebar

23
Sun, Jun
0 New Articles

நபிவழியில் நம் தொழுகை

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபிவழியில் நம் தொழுகை

தொகுப்பாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

வெளியீடு

மூன்பப்ளிகேசன்ஸ்

83/3 மூர்தெரு

மண்ணடி சென்னை 1

தொழுகையின் முக்கியத்துவம்

முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும், முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும்.

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!

திருக்குர்ஆன் 2:238

எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலைநாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 14:31

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

திருக்குர்ஆன் 4:103

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21

‘இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 116

‘நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: நஸாயீ

இதைப் போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுகின்றன.

தொழுவதால் ஏற்படும் நன்மைகள்

(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

திருக்குர்ஆன் 29:45

‘உங்களில் ஒருவரது வாசலில் ஒரு ஆறு (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்’ என்று நபித்தோழர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித்தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ

‘ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 394

தொழாததால் ஏற்படும் தீங்குகள்

கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும். அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ‘உங்களை நரகத்தில் சேர்த்தது எது?’ என்று விசாரிப்பார்கள். ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’ எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 74:41-43

ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, ‘அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்’ என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

நூல்: புகாரீ 1143

இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமையான தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர்.

தொழுகைக்கு நபியே முன் மாதிரி

ஓர் ஊரில் ஒரு பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களைக் கவனித்தால் ஒருவரின் தொழுகைக்கும் மற்றவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். நபிகளார் காட்டித்தந்த சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

صحيح البخاري

631 – … وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»

‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரீ 631

இந்த நபி மொழியின் படி நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.

உளூவின் சட்டங்கள்

உளூவின் அவசியம்

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

صحيح البخاري

135 – قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟، قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ

‘உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 135

தண்ணீர்

உளூச் செய்வதற்குத் தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆயினும் உளூ செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.

ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம்; குளிக்கலாம் என்பதை அனைவரும் சரியாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

கடல் நீர்

கடல் நீரால் உளூச் செய்யக் கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.

‘கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் அது தண்ணீரின் கணக்கில் சேராது’ என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடல் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.

مسند أحمد

7233 – عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَاءِ الْبَحْرِ: ” هُوَ الطَّهُورُ مَاؤُهُ، الْحَلَالُ مَيْتَتُهُ “

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது; அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அஹ்மத் 382

எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம்.

பயன்படுத்திய தண்ணீர்

‘சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடும் என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. சில மத்ஹப்களிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்து தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் நம்புகின்றனர்.

صحيح البخاري

159 – حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِإِنَاءٍ، فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ، فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ، فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»،

உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், ‘எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்

நூல்: புகாரீ 160

உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். (புகாரீ 192)

நபி அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டுமின்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.

صحيح البخاري

162 – عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ..وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»

‘உங்களில் ஒருவர் தூக்கத்திருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரில் கையை விடுவதற்கு முன் கையைக் கழுவிக் கொள்ளட்டும்; ஏனெனில் அவரது கை எங்கெங்கே பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 162

படக் கூடாத இடத்தில் கை பட்டிருக்கும் என்பதற்காகவே கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழுவச் சொல்கின்றார்கள். இவ்வாறு கழுவி விட்டால் பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீர் எடுத்து உளூச் செய்யலாம் என்று தெளிவான அனுமதியை அளித்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான அனுமதியளித்த பின் அதை நிராகரிக்க எந்தக் காரணத்தை யார் கூறினாலும் ஏற்கத் தேவையில்லை.

மீதம் வைத்த தண்ணீர்

பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும்.

صحيح البخاري

263 – عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ جَنَابَةٍ»

‘கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரீ 263

கடமையான குளிப்பும் உளூவைப் போலவே மார்க்க அடிப்படையிலான தூய்மைப்படுத்துதல் ஆகும். ஒரு நேரத்தில் ஒரு பாத்திரத்தில் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் எடுத்துக் குளிக்கும் போது இருவர் மேனியில் பட்ட தண்ணீர் துளிகள் பாத்திரத்தில் விழாமல் இருக்காது. தண்ணீரை எடுப்பதற்காகக் கையைக் கொண்டு செல்லும் போது கையிருந்து பாத்திரத்தில் தண்ணீர் விழும். அப்படியிருந்தும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொருட்படுத்தவில்லை.

எனவே உளூச் செய்யும் போதும், கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் ஒருவர் மீதம் வைத்த தண்ணீரை மற்றவர் பயன்படுத்துவது குற்றம் இல்லை என்பதை இதிருந்து விளங்கலாம்.

வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர்

மனிதர்களை அண்டி வாழும் கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும்.

مسند أحمد

عَنْ كَبْشَةَ قَالَتْ: رَأَيْتُ أَبَا قَتَادَةَ أَصْغَى الْإِنَاءَ لِلْهِرَّةِ فَشَرِبَتْ فَقَالَ: أَتَعْجَبِينَ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَنَا: ” أَنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّهَا مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ “

அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார். ‘என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?’ என்று கேட்டார். நான் ஆம் என்றேன். ‘இவை அசுத்தமில்லை. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்.

அறிவிப்பவர்: கப்ஷா

நூல்: அஹ்மத்

பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும், அத்தண்ணீரில் உளூச் செய்யலாம் என்பதும் இதிலிருந்து தெரிகின்றது. மேலும் ‘இவை உங்களைச் சுற்றி வரக் கூடிய பிராணிகள்’ என்ற வாக்கியம், காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதை விளக்குகின்றது.

மனிதர்களுடன் அண்டி வாழும் பிராணிகளில் நாயைத் தவிர மற்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யலாம்.

صحيح البخاري

172 – ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا شَرِبَ الكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا»

‘நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவ வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரீ 172

சூடாக்கப்பட்ட தண்ணீர்

சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர்.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபிகள் நாயகம் (ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய் வரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) பெயரால் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.

காலித் பின் இஸ்மாயீல், வஹப் பின் வஹப், ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர்.

எனவே சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், நெருப்பால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை.

வீட்டில் உளூச் செய்தல்

வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.

صحيح البخاري

477 – عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” صَلاَةُ الجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ، خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ، وَأَتَى المَسْجِدَ، لاَ يُرِيدُ إِلَّا الصَّلاَةَ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ المَسْجِدَ، وَإِذَا دَخَلَ المَسْجِدَ، كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي – يَعْنِي عَلَيْهِ المَلاَئِكَةُ – مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ “

‘ஒருவர் தமது வீட்டிலும், கடை வீதியிலும் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்கு ஒரு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான். தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே கருதப்படுவார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை அளிக்காத வரையில் இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!’ என்று வானவர்கள் கூறுகின்றனர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 477

பள்ளிவாசலில் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்

வீட்டில் உளூச் செய்ய வசதியுள்ளவர்கள் வீட்டிலேயே உளூச் செய்வது தான் சிறப்பு என்றாலும் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, பள்ளிவாசலின் சார்பில் ஏற்பாடு செய்வது குற்றமில்லை.

صحيح البخاري

3575 – عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: حَضَرَتِ الصَّلاَةُ فَقَامَ مَنْ كَانَ قَرِيبَ الدَّارِ مِنَ المَسْجِدِ يَتَوَضَّأُ، وَبَقِيَ قَوْمٌ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِخْضَبٍ مِنْ حِجَارَةٍ فِيهِ مَاءٌ، «فَوَضَعَ كَفَّهُ، فَصَغُرَ المِخْضَبُ أَنْ يَبْسُطَ فِيهِ كَفَّهُ، فَضَمَّ أَصَابِعَهُ فَوَضَعَهَا فِي المِخْضَبِ فَتَوَضَّأَ القَوْمُ كُلُّهُمْ جَمِيعًا» قُلْتُ: كَمْ كَانُوا؟ قَالَ: ثَمَانُونَ رَجُلًا

‘தொழுகை நேரம் வந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் யாருடைய இல்லங்கள் அமைந்திருந்தனவோ அவர்கள் உளூச் செய்ய (வீட்டிற்குச்) சென்றனர். சிலர் எஞ்சினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு கல் பாத்திரம் தண்ணீருடன் கொண்டு வரப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை வைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அதனுள் தமது கையை விரிக்க இயவில்லை. எனவே தமது விரல்களை இணைத்து அப்பாத்திரத்தில் வைத்தனர். எஞ்சிய அனைவரும் உளூச் செய்தனர்’ என்று அனஸ் (ரலி) கூறினார்கள். ‘(அப்போது) எத்தனை பேர்கள் இருந்தனர்?’ என்று அவர்களிடம் நான் கேட்டேன். ‘எண்பது பேர்கள்’ என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுமைத்

நூல்: புகாரீ 3575

உளூச் செய்யும் முறை

நிய்யத் எனும் எண்ணம்

ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.

ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.

உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.

இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.

உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.

எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

صحيح البخاري

1 – «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، …»

‘அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

நூல்: புகாரீ 1,

நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.

நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.

மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.

ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.

‘நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன்’ என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.

பல் துலக்குதல்

உளூச் செய்யத் துவங்கும் முன் பற்களைத் துலக்கிக் கொள்வது நபிவழியாகும்.

பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும்.

صحيح مسلم

ثُمَّ رَجَعَ إِلَى الْبَيْتِ فَتَسَوَّكَ وَتَوَضَّأَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உடனே உளூச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1233

பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் ‘உளூச் செய்தார்கள்’ என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் ‘பல் துலக்கினார்கள்’ என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது.

மேலும் பல் துலக்குதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

صحيح البخاري

888 – قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ»

‘பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 888

பல் துலக்கும் குச்சி

குறிப்பிட்ட மரத்தின் குச்சியால் பல் துலக்குவது தான் சுன்னத் என்ற கருத்து சில முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது. இதை மிஸ்வாக் குச்சி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

மிஸ்வாக் என்ற சொல்லுக்கு பல் துலக்கும் சாதனம் என்பது தான் பொருள். குறிப்பிட்ட மரத்தின் குச்சி என்று இதற்கு அர்த்தம் கிடையாது.

பல் துலக்க விரலைப் பயன்படுத்தினாலும், பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும் அனைத்துமே மிஸ்வாக்கில் அடங்கும். அது போல் எந்த மரத்தின் குச்சியைப் பயன்படுத்தினாலும் அதுவும் மிஸ்வாக்கில் அடங்கும். அனைத்துமே இதில் சமமானவை தான்.

பல் துலக்குதல் தான் நபிவழியே தவிர குறிப்பிட்ட குச்சியாகத் தான் இருக்க வேண்டும் என்பது நபிவழியல்ல!

இந்தக் குச்சியால் தான் பல் துலக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்துவதால் இதை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.

பல் துலக்கிய பின்னர் உளூச் செய்ய வேண்டும். உளூச் செய்யும் போது செய்ய வேண்டிய காரியங்களை வரிசையாக உரிய ஆதாரங்களுடன் இனி அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் பெயர் கூறுதல்

உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும்.

سنن النسائي

عَنْ أَنَسٍ قَالَ: طَلَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوءًا. فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ مَاءٌ؟» فَوَضَعَ يَدَهُ فِي الْمَاءِ وَيَقُولُ: «تَوَضَّئُوا بِسْمِ اللَّهِ». فَرَأَيْتُ الْمَاءَ يَخْرُجُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ قَالَ ثَابِتٌ: قُلْتُ لِأَنَسٍ: كَمْ تُرَاهُمْ؟ قَالَ: نَحْوًا مِنْ سَبْعِينَ

நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். (தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்து, ‘அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவர்களின் விரல்களுக்கு இடையிலிருந்து தண்ணீர் வெளியேறியதை நான் பார்த்தேன். கடைசி நபர் வரை அதில் உளூச் செய்தார்கள். இவ்வாறு அனஸ் (ரலி) கூறினார்கள். ‘மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘சுமார் எழுபது நபர்கள்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: கதாதா

நூல்: நஸாயீ

முன் கைகளைக் கழுவுதல்

உளூச் செய்யும் போது முதலில் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும்.

سنن النسائي

أَمَّا الْوُضُوءُ فَإِنَّكَ إِذَا تَوَضَّأْتَ فَغَسَلْتَ كَفَّيْكَ، فَأَنْقَيْتَهُمَا خَرَجَتْ خَطَايَاكَ مِنْ بَيْنِ أَظْفَارِكَ وَأَنَامِلِكَ

… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிலிருந்து வெளியேறுகின்றன’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)

நூல்: நஸாயீ

வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்

இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.

صحيح البخاري

159 فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ، فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ، فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

நூல்: புகாரீ 160, 164

வாய் கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம்.

صحيح البخاري

140 – عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ «تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ، أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَمَضْمَضَ بِهَا وَاسْتَنْشَقَ، …ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்… (பின்னர்) ‘இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்’ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் யஸார்

நூல்: புகாரீ 140

ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும்.

صحيح البخاري

159 – فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ، فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ، فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்து, மூக்கையும் சீந்தினார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

நூல்: புகாரீ 159, 164

முகத்தைக் கழுவுதல்

இதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும்.

இரு கைகளால் கழுவுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது,

 

صحيح البخاري

140 – عَنِ ابْنِ عَبَّاسٍ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَجَعَلَ بِهَا هَكَذَا، أَضَافَهَا إِلَى يَدِهِ الأُخْرَى، فَغَسَلَ بِهِمَا وَجْهَهُ

ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் யஸார்

நூல்: புகாரீ 140

ஒரு கையால் கழுவுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது,

 

صحيح البخاري

186 – ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا

தமது ஒரு கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா

நூல்: புகாரீ 186

தாடியைக் கோதிக் கழுவுதல்

தாடி வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

 

سنن الترمذي

31 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَامِرِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُخَلِّلُ لِحْيَتَهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)

நூல்: திர்மிதி

இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்

முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்.

صحيح البخاري

ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்

நூல்: புகாரீ 159

முகம், கை, கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்

முகத்தைக் கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை.

صحيح البخاري

136 – «إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ القِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ»

‘உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம், கை, கால்கள் வெண்மையானவர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். யார் தமது வெண்மையை அதிகப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 136

எனவே முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.

தலைக்கு மஸஹ் செய்தல்

இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது,

صحيح البخاري

185 – ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ حَتَّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا إِلَى المَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ

தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா

நூல்: புகாரீ 185

இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும்.

தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.

எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்?

தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவைகளோ மஸஹ் செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது,

صحيح البخاري

186 -ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً،

இரு கைகளை (பாத்திரத்தில்) நுழைத்து இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா

நூல்: புகாரீ 186

سنن النسائي

99 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ، وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: நஸாயீ

காதுகளுக்கு மஸஹ் செய்தல்

தலைக்கு மஸஹ் செய்யும் போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழியாகும்.

سنن النسائي

102 – ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ بَاطِنِهِمَا بِالسَّبَّاحَتَيْنِ وَظَاهِرِهِمَا بَإِبْهَامَيْهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: நஸாயீ

பிடரியில் மஸஹ் செய்ய வேண்டுமா?

தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது.

இரண்டு கால்களையும் கழுவுதல்

இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதலில் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது,

صحيح البخاري

140 – ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَرَشَّ عَلَى رِجْلِهِ اليُمْنَى حَتَّى غَسَلَهَا، ثُمَّ أَخَذَ غَرْفَةً أُخْرَى، فَغَسَلَ بِهَا رِجْلَهُ، يَعْنِي اليُسْرَى

ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் யஸார்

நூல்: புகாரீ 140

صحيح البخاري

165 – «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ»

உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) ‘உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத்

நூல்: புகாரீ 165

எத்தனை தடவை கழுவ வேண்டும்?

தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம்.

صحيح البخاري

157 – «تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி).

நூல்: புகாரீ 157

صحيح البخاري

158 – أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரீ 158

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது,

صحيح البخاري

159 – ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»،

தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்

நூல்: புகாரீ 159

எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும், இரண்டு தடவை கழுவுவதும், மூன்று தடவை கழுவுவதும் நபிவழி தான். நம் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒரு உளூவிலேயே கூட முகத்தை இரு தடவை கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது,

صحيح البخاري

185 – فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ مَرَّتَيْنِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى المِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ حَتَّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا إِلَى المَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ”

தமது இரு முன் கைகளிலும் தண்ணீரை ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய்கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா

நூல்: புகாரீ 185

மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது

உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.

سنن النسائي

140 – أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا يَعْلَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ، فَأَرَاهُ الْوُضُوءَ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَكَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, ‘இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்’ எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப் (ரலி)

நூல்: நஸாயீ

வரிசையாகச் செய்தல்

மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும் என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் கண்டோம்.

காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம்.

صحيح البخاري

182 – فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ»

நான் ஒரு பிரயாணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: முகீரா (ரலி)

நூல்: புகாரீ 182

பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாமா?

பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு ஹதீஸ்களில் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.

மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது அதைக் கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அச்சிரமம் இரு பாலருக்கும் பொதுவானது என்பதால் இச்சலுகையும் பொதுவானது தான்.

காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய நிபந்தனைகள்

இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன.

காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.

صحيح البخاري

206 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ بْنِ المُغِيرَةِ، عَنْ أَبِيهِ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ: «دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ». فَمَسَحَ عَلَيْهِمَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், ‘அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்’ என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)

நூல்: புகாரீ 206

காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது.

காலுறையை அணியும் போது உளூவுடன் இருக்க வேண்டும்.

ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் அவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.

ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும் கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன் பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக் கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம்.

சலுகையின் கால அளவு

உளூவுடனும், கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர், காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது.

தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இன்று காலை 10 மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வதே போதும். 24 மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன் காலுறையை அணிந்து கொள்ள வேண்டும்.

பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள் உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவிவிட்டு உளூவுடன் காலுறையை அணிய வேண்டும்.

صحيح مسلم

جَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ، وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ»

பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்’ என்று அலீ (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஷுரைஹ்

நூல்: முஸ்லிம் 414

குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை

குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது.

سنن الترمذي

رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفَرًا أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، إِلَّا مِنْ جَنَابَةٍ، وَلَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ

நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)

நூல்: திர்மிதீ

மேற்புறத்தில் மஸஹ் செய்தல்

سنن أبي داود

وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهِرِ خُفَّيْهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: அபூதாவூத்

எவ்வாறு மஸஹ் செய்வது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை.

எனவே தான் ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும்; மூன்று விரல்களால் மஸஹ் செய்ய வேண்டும்; காலுறையின் அதிகமான பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக குறிப்பிட்ட அளவு எதுவும் கூறப்படாததால் மஸஹ்’ என்று சொல்லப்படும் அளவுக்கு காலுறையின் மீது தடவ வேண்டும் என்று மக்களிடமே அந்த உரிமையை விட்டு விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட முறையைத் திணிக்கக் கூடாது.

இது தவிர காலுறைகள் தோலால் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும் பல விதிகளைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல்

காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம்.

صحيح البخاري

205 -رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفَّيْهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி)

நூல்: புகாரீ 205

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் தலையின் மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

صحيح مسلم

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.

அறிவிப்பவர்: பிலால் (ரலி)

நூல்: முஸ்லிம் 413

முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், கிமார்’ என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும், பெண்கள் அணியும் தலைத் துணி – அதாவது முக்காட்டையும் குறிக்கும்.

பெண்களின் முக்காட்டைக் குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள ‘குமுரிஹின்ன’ என்பது கிமார்’ என்பதன் பன்மையாகும்.

புகாரீ 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் கிமார்’ என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தலைப்பாகையை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை.

தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா என்ற மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரீ, அஹ்மத் பின் ஹம்பல், இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர்.

எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகைக்கும், முக்காடுகளுக்கும் கிடையாது.

உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.

உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது நபிவழியாகும்.

صحيح مسلم

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரஸூலுஹு

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.

அல்லது

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ هُ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.

உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 345

ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி துஆக்கள் இல்லை

ஷாபி, ஹனபி மத்ஹப் கிதாபுகளிலும், தப்லீக் ஜமாஅத்தினரின் வெளியீடுகளிலும் ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் ஓத வேண்டிய துஆக்கள் என்று சில வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சிலர் இதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.

இத்தகைய துஆக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது எந்த துஆவையும் ஓதியதில்லை.

எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையின் அடிப்படையிலேயே மேற்கண்ட துஆக்களை ஓதுகின்றனர். இதை அறவே தவிர்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தராததை நாமாக ஓதுவது பித்அத் ஆகும். பித்அத்கள் நரகில் சேர்க்கும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும்.

உளுவுக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுதல்

உளூச் செய்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அதிகம் நன்மையைப் பெற்றுத் தருவதாகும்.

صحيح البخاري

مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

‘எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)

நூல்: புகாரீ 160

صحيح البخاري

1149 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ: «عِنْدَ صَلاَةِ الفَجْرِ يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ

ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன்’ என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 1149

ஒரு உளூவில் பல தொழுகைகளைத் தொழுதல்

ஒரு தடவை உளூச் செய்த பின் அந்த உளூ நீங்காத வரை எத்தனை தொழுகைகளையும் தொழலாம். ஒவ்வொரு தொழுகை நேரம் வந்ததும் உளூச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

صحيح البخاري

214 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: ح وحَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ عَامِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ» قُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: يُجْزِئُ أَحَدَنَا الوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூச் செய்வது வழக்கம்’ என்று அனஸ் (ரலி) கூறினார்கள். ‘அப்படியானால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘உளூ நீங்காத வரை ஒரு உளூவே எங்களுக்குப் போதுமானதாகும்’ என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரீ 214

தயம்மும் சட்டங்கள்

தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால், அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து தொழ வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:43

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

தயம்மும் செய்யும் முறை

صحيح البخاري

338 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أُصِبِ المَاءَ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ لِعُمَرَ بْنِ الخَطَّابِ: أَمَا تَذْكُرُ أَنَّا كُنَّا فِي سَفَرٍ أَنَا وَأَنْتَ، فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ، وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فَصَلَّيْتُ، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صلّى الله عليه وسلم، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا» فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَفَّيْهِ الأَرْضَ، وَنَفَخَ فِيهِمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ

உள்ளங்கைகளால் தரையில் அடித்து, வாயால் அதில் ஊதி விட்டு அல்லது கைகளை உதறிவிட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவ வேண்டும்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை’ என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங் கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி, இப்படிச் செய்வது உமக்குப் போதுமே!’ எனக் கூறினார்கள்’ என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

நூல்: புகாரீ 338

صحيح البخاري

347 – فَضَرَبَ بِكَفِّهِ ضَرْبَةً عَلَى الأَرْضِ، ثُمَّ نَفَضَهَا، ثُمَّ مَسَحَ بِهِمَا ظَهْرَ كَفِّهِ بِشِمَالِهِ أَوْ ظَهْرَ شِمَالِهِ بِكَفِّهِ، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ

… நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இரு கைகளால் பூமியில் ஒரு அடி அடித்து, பின்னர் இரு கைகளையும் உதறிவிட்டு தமது வலது கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தமது இடது கரத்தால் வலது புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரு கைகளால் தமது முகத்தைத் தடவி விட்டு, ‘இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்மார் (ரலி)

நூல்: புகாரீ 347

புகாரீ, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ‘ஒரு தடவை தான் தரையில் அடிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகளில் இரண்டு தடவை அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவை ஆதாரப்பூர்மானவை அல்ல.

தயம்மும் செய்ய ஏற்றவை

தயம்மும் செய்வது பற்றிக் கூறும் மேற்கண்ட இரு வசனங்களிலும் தூய்மையான மண்’ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மண்ணில் தான் தயம்மும் செய்ய வேண்டும்.

மண் என்பது அதன் அனைத்து வகைகளையும் குறிக்கும். களிமண், மணல், இறுகிய மண்ணாங்கட்டி, மண் சுவர் போன்ற அனைத்துமே மண்ணில் அடங்கும்.

صحيح البخاري – حَتَّى أَقْبَلَ عَلَى الجِدَارِ، فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுவற்றில் அடித்துத் தயம்மும் செய்தார்கள்’ என்று புகாரீ 337வது ஹதீஸில் கூறப்படுகின்றது.

மண் என்பது உதிரியாகக் கிடப்பவை மட்டும் அல்ல; ஒன்று சேர்த்து திரட்டப்பட்டவையும் மண்’ என்பதில் அடங்கும் என இதிலிருந்து விளங்கலாம்.

குளிர் தாங்க முடியாத போது தயம்மும் செய்தல்

தாங்க முடியாத குளிர் இருந்தாலும் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்யலாம்.

سنن أبي داود

334 – حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، أَخْبَرَنَا أَبِي قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ يُحَدِّثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ الْمِصْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: احْتَلَمْتُ فِي لَيْلَةٍ بَارِدَةٍ فِي غَزْوَةِ ذَاتِ السُّلَاسِلِ فَأَشْفَقْتُ إِنِ اغْتَسَلْتُ أَنْ أَهْلِكَ فَتَيَمَّمْتُ، ثُمَّ صَلَّيْتُ بِأَصْحَابِي الصُّبْحَ فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا عَمْرُو صَلَّيْتَ بِأَصْحَابِكَ وَأَنْتَ جُنُبٌ؟» فَأَخْبَرْتُهُ بِالَّذِي مَنَعَنِي مِنَ الِاغْتِسَالِ وَقُلْتُ إِنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ: {وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء: 29] فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْ شَيْئًا

தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். ‘அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். ‘உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்’ என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் (4:29) என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.

அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: அபூதாவூத்

தயம்மும் செய்து தொழுத பின்னர் அந்தத் தொழுகையின் நேரம் முடிவதற்குள் அல்லது நேரம் முடிந்த பின் தண்ணீர் கிடைத்தால் அந்தத் தொழுகையை மீண்டும் தொழத் தேவையில்லை.

ஒரு தயம்முமில் பல தொழுகை

நாம் தயம்மும் செய்து ஒரு தொழுகையைத் தொழுகின்றோம். பின்னர் அடுத்த தொழுகையின் நேரம் வருகின்றது. அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. உளூவை நீக்கும் காரியம் எதுவும் நம்மிடம் நிகழவில்லை. இந்த நிலையில் ஒரு தொழுகைக்குச் செய்த அதே தயம்மும் மூலம் அடுத்த தொழுகையையும் தொழலாமா? என்றால் இதிலும் இரண்டு கருத்துக்கள் உள்ளன.

ஒரு தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகை தொழுவது தான் நபிவழி. மற்ற தொழுகைக்கு மீண்டும் தயம்மும் செய்ய வேண்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹஸன் பின் உமாரா என்பவர் வழியாக இது அறிவிக்கப்படுகின்றது. இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு முடிவெடுக்கக் கூடாது.

ஒரு தடவை தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகையைத் தான் தொழ வேண்டும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லை.

எனவே ஒரு உளூவைக் கொண்டு எத்தனை தொழுகைகளையும் தொழலாம் என்பது போல் உளூவின் மாற்றாக அமைந்துள்ள தயம்முமையும் கருதுவதே சரியானதாகும். ஒரு தயம்மும் மூலம் ஒரு தொழுகை தொழுத பின் அடுத்த தொழுகை நேரத்திலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் அந்தத் தொழுகையையும் அதே தயம்மும் மூலம் தொழலாம்.

உளூவை நீக்குபவை

உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. அவற்றைக் காண்போம்.

மலஜலம் கழித்தல்

உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:43

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

மலம் கழித்த ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும் என்பதையும், தண்ணீர் கிடைத்தால் உளூச் செய்வது அவசியம் என்பதையும், ஏற்கனவே செய்த உளூவை மலம் கழித்தல் நீக்கி விடும் என்பதையும் இவ்விரு வசனங்கள் கூறுகின்றன.

சிறுநீர் கழிப்பது உளூவை நீக்கி விடும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்திக்கும் போது அறிய முடியும்.

سنن النسائي

127 – أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ الرُّهَاوِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ وَمَالِكُ بْنُ مِغْوَلٍ وَزُهَيْرٌ وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ قَالَ: سَأَلْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُنَا إِذَا كُنَّا مُسَافِرِينَ أَنْ نَمْسَحَ عَلَى خِفَافِنَا وَلَا نَنْزِعَهَا ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ إِلَّا مِنْ جَنَابَةٍ»

‘நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும் உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும்’ எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)

நூல்: நஸாயீ

சிறுநீர் கழித்தலும் உளூவை நீக்கி விடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

காற்றுப் பிரிதல் உளூவை நீக்கும்

மலஜலம் கழிப்பதால் உளூ நீங்குவது போலவே காற்றுப் பிரிவதாலும் உளூ நீங்கி விடும்.

صحيح البخاري

135 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟، قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ

‘ஹதஸ் ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த்’ என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் ‘அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?’ என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி), ‘சப்தத்துடனோ, அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான்’ என்று விளக்கமளித்தார்கள்.

நூல்: புகாரீ 135, 176

காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால்

சிலருக்குக் காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்]

صحيح البخاري

137 – حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «لاَ يَنْفَتِلْ – أَوْ لاَ يَنْصَرِفْ – حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا».

‘தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரீ 137

சமைத்த உணவுகளை உண்பது உளூவை நீக்குமா?

பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதால் உளூ நீங்காது என்பதில் மாறுபட்ட ஹதீஸ்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை உண்பதால் உளூ நீங்காது.

சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்குமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்களைத் தரும் ஹதீஸ்கள் உள்ளன.

صحيح مسلم

90 – (351) وَحَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، قَالَ: قَالَ ابْنُ شِهَابٍ: أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّ خَارِجَةَ بْنَ زَيْدٍ الْأَنْصَارِيَّ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْوُضُوءُ مِمَّا مَسَّتِ النَّارُ»

‘நெருப்பு தீண்டியவற்றின் காரணமாக (சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் காரணமாக) உளூச் செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: முஸ்லிம் 528

சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உளூச் செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறினாலும் இந்தச் சட்டம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டது.

سنن النسائي

185 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ: «كَانَ آخِرُ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكَ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ»

சமைத்த பொருட்களைச் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல், உளூச் செய்யாமல் விட்டு விடுதல் ஆகிய) இரு காரியங்களில் உளூவை விட்டு விடுவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதியாக நடைமுறைப்படுத்தியதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸாயீ

‘சமைக்கப்பட்ட பொருட்களை உண்பதால் உளூச் செய்ய வேண்டும்’ என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்ததையும், பின்னர் அது மாற்றப்பட்டு விட்டதையும் இந்த ஹதீஸ் மூலம் விளங்கலாம். எனவே சமைக்கப்பட்ட உணவை உண்பதால் உளூ நீங்காது.

ஒட்டகத்தின் இறைச்சியை உண்பது உளூவை நீக்கும்

எதைச் சாப்பிட்டாலும் உளூ நீங்காது என்றாலும் ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிடுவது உளூவை நீக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.

صحيح مسلم

97 – (360) حَدَّثَنَا أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَوْهَبٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَأَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟ قَالَ: «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ، وَإِنْ شِئْتَ فَلَا تَوَضَّأْ» قَالَ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟ قَالَ: «نَعَمْ فَتَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ» قَالَ: أُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: أُصَلِّي فِي مَبَارِكِ الْإِبِلِ؟ قَالَ: «لَا»

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஆட்டிறைச்சியை உண்பதால் உளூச் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் உளூச் செய்து கொள்! விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்’ என்று கூறினார்கள். ‘ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?’ என்று அவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘ஆம்! ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல்: முஸ்லிம் 539

மதீ’ வெளியானால் உளூ நீங்கும்

ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ’ – இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல.

மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகியவை உளூவை நீக்குவது போலவே இந்த மதீ’ எனும் இச்சை நீர் வெளிப்படுவதும் உளூவை நீக்கும்.

صحيح البخاري

132 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ، فَقَالَ: «فِيهِ الوُضُوءُ»

அதிக அளவில் மதீ’ வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். ‘அதற்காக உளூச் செய்ய வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரீ 132

تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ

‘ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 269வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா?

வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் எனக் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. எனவே வாந்தி எடுத்தால் உளூ நீங்காது.

இரத்தம் வெளியேறுதல்

உளூச் செய்த பின்னர் உடலிலிருந்து இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கும் எனக் கூறும் ஹதீஸ்கள் சில உள்ளன. அவையனைத்தும் பலவீனமானவையாகும். எனவே இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்பதே சரியானதாகும்.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

ஆண்கள் பெண்களைத் தொட்டாலோ, அல்லது பெண்கள் ஆண்களைத் தொட்டாலோ அவர்களின் உளூ நீங்கி விடுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

4:43 வசனத்திலும், 5:6 வசனத்திலும் பெண்களைத் தீண்டினால் தயம்மும் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

தீண்டுதல் என்ற சொல்லின் நேரடிப் பொருள் தொடுதல் என்பது தான். எனவே பெண்களைத் தொட்டால் உளூ நீங்கி விடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

தீண்டுதல் என்பதன் பொருள் தொடுவது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் தீண்டுதல் என்ற சொல்லைப் பெண்களுடன் இணைத்துக் கூறும் போது சில நேரங்களில் தொடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும்.

இந்த வசனங்களில், ‘பெண்களைத் தீண்டினால்’ என்ற சொல்லுக்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று மற்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் வேறு சான்றுகள் இல்லாவிட்டால் முதல் சாராரின் கூற்றையே நாம் தேர்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நேரடிப் பொருளின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் புறச்சான்றுகள் பல உள்ளதால் பெண்களைத் தீண்டினால்’ என்பதற்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால்’ என்று இவ்விரு வசனங்களுக்கும் பொருள் கொள்வது தான் பொருத்தமானது.

صحيح البخاري

519 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا القَاسِمُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: بِئْسَمَا عَدَلْتُمُونَا بِالكَلْبِ وَالحِمَارِ «لَقَدْ رَأَيْتُنِي وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا مُضْطَجِعَةٌ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ، فَإِذَا أَرَادَ أَنْ يَسْجُدَ غَمَزَ رِجْلَيَّ، فَقَبَضْتُهُمَا»

‘நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், கிப்லாவுக்கும் குறுக்கே படுத்துக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாவுக்குச் செல்லும் போது என் கால்களைக் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரீ 519

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களாகவே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? அவர்கள் காலில் விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று எழும் கேள்விக்கும் – இக்கேள்வியை யாரும் கேட்காதிருந்தும் – ஆயிஷா (ரலி) விடையளித்துள்ளார்கள்.

صحيح البخاري

382 – قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ

‘அந்தக் காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது’ என்பது தான் அந்த விடை!

பார்க்க புகாரீ: 382, 513

வீடு முழுவதும் இருட்டாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யப் போவதை விரலால் குத்தினால் தான் அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கின்றது.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது அந்த வசனங்களின் பொருளாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியின் கால்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். தொட்டவுடன் தொடர்ந்து தொழுதிருக்கவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு என்ன பொருள் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தான் இதற்குத் தீர்வாக முடியும்.

தமது மனைவியின் மேல் தற்செயலாகக் கைகள் பட்டன என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. ‘கால்களை மடக்கிக் கொள்’ என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக வேண்டுமென்றே அவர்கள் தமது மனைவியைத் தொட்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. எனவே மேற்கண்ட வசனத்தில் பெண்களைத் தீண்டினால்’ என்பதற்கு, பெண்களைத் தொட்டால்’ என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.

இந்த ஹதீஸைப் பார்த்த பிறகும் சிலர் புதுமையான விளக்கத்தைக் கூறி தங்களின் கருத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகத் தொட்டார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவர்கள் மீது ஆடை இருந்திருக்கும்; அந்த ஆடையின் மேல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குத்தியிருக்கலாம் அல்லவா? என்பது இவர்கள் தரும் புதுமையான விளக்கம்.

வெளிச்சமாக இருந்திருந்தால் ஆடையால் மூடப்பட்ட இடத்தைப் பார்த்து விரலால் குத்தினார்கள் என்று கருத முடியும். விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருந்ததால் காலில் ஆடை கிடக்கின்றதா? இல்லையா? என்று தேடிப் பார்த்து தமது விரலால் குத்தவில்லை என்பது தெளிவாகின்றது எனவே பெண்களைத் தொட்டால் உளூ முறியாது என்பதை அறியலாம்.

தூக்கம் உளூவை நீக்குமா?

தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.

காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: நஸாயீ

மலஜலம் கழிப்பது எவ்வாறு உளூவை நீக்குமோ அவ்வாறே தூக்கமும் உளூவை நீக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதற்கு மாற்றமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

صحيح مسلم

185 – (763) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بِتُّ لَيْلَةً عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ، فَقُلْتُ لَهَا: إِذَا قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَيْقِظِينِي، ” فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُمْتُ إِلَى جَنْبِهِ الْأَيْسَرِ، فَأَخَذَ بِيَدِي فَجَعَلَنِي مِنْ شِقِّهِ الْأَيْمَنِ، فَجَعَلْتُ إِذَا أَغْفَيْتُ يَأْخُذُ بِشَحْمَةِ أُذُنِي، قَالَ: فَصَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ احْتَبَى حَتَّى إِنِّي لَأَسْمَعُ نَفَسَهُ رَاقِدًا، فَلَمَّا تَبَيَّنَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ”

எனது சிறிய தாயார் (நபிகள் நாயகத்தின் மனைவி) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவு நான் தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இடது புறத்தில் நான் நின்று கொண்டேன். என் கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் தூங்கி வழியும் போது என் காது சோனையைப் பிடிப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1277

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நின்று கொண்டு தூங்கியது நிச்சயமாக ஆழ்ந்த தூக்கமாக இருக்காது; அரைகுறை தூக்கமாகத் தான் இருந்திருக்கும். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைக்கும் வண்ணம் ‘ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும்; அரைகுறை தூக்கம் உளூவை நீக்காது’ என்று முடிவு செய்யலாம்.

மர்மஸ்தானத்தைத் தொடுவது உளூவை நீக்குமா?

ஆண்களோ, பெண்களோ உளூச் செய்த பின்னர் தங்களின் மர்மஸ்தானத்தைத் தொட்டால் உளூ நீங்குமா என்பதில் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்தப் பிரச்சனையில் மாறுபட்ட கருத்துடைய ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது தான் கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாகும்.

مسند أحمد

7076 – حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ مُحَمَّدٍ يَعْنِي الْخَطَّابِيَّ، حَدَّثَنِي بَقِيَّةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ الزُّبَيْدِيِّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ لِي  رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ مَسَّ ذَكَرَهُ، فَلْيَتَوَضَّأْ، وَأَيُّمَا امْرَأَةٍ مَسَّتْ فَرْجَهَا فَلْتَتَوَضَّأْ ” (2)

யாரேனும் தனது ஆணுறுப்பைத் தொட்டால் உளூச் செய்யட்டும். ஒரு பெண் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் உளூச் செய்யட்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: அஹ்மத்

ஆண்களாயினும், பெண்களாயினும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர்களின் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த நபிமொழிகள் தெளிவாக அறிவிக்கின்றன.

இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமான கருத்துடைய ஹதீஸ்களும் உள்ளன.

سنن النسائي

165 – أَخْبَرَنَا هَنَّادٌ، عَنْ مُلَازِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ قَالَ: خَرَجْنَا وَفْدًا حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ جَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَى فِي رَجُلٍ مَسَّ ذَكَرَهُ فِي الصَّلَاةِ؟ قَالَ: «وَهَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْكَ أَوْ بِضْعَةٌ مِنْكَ»

‘தொழும் போது ஒருவர் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்ற உறுப்பு தானே?’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்க் இப்னு அலீ (ரலி)

நூல்: நஸாயீ

இந்தக் கருத்துடைய ஹதீஸ் திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், இப்னு ஹிப்பான், தாரகுத்னீ, தப்ரானியின் அல்கபீர் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரப்பூர்வமான இரண்டு ஹதீஸ்கள் ஒன்றோடொன்று மோதுவது போல் தோற்றமளித்தால் அவ்விரு செய்திகளையும் தக்க முறையில் இணைத்து முடிவு செய்யலாம்.

ஒருவன் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது இரண்டு வகைகளில் ஏற்படலாம்.

மற்ற உறுப்புகளைப் போன்ற உறுப்பாகக் கருதி தொடுவது முதல் வகை.

அந்த உறுப்பின் தனித் தன்மையைக் கருதி தொடுவது இரண்டாவது வகை.

முதல் வகையான தொடுதலால் உளூ நீங்காது.

இரண்டாவது வகையான தொடுதலால் உளூ நீங்கும் என்று முடிவு செய்யலாம்.

உடலில் குறிப்பிட்ட இடத்தில் எறும்பு கடித்தால் அந்த இடத்தில் நம் கையை வைத்து சொறிந்து கொள்கிறோம். இது போல மர்மஸ்தானத்தில் எறும்பு கடிப்பது போன்றோ, ஏதோ ஒன்று ஊர்வது போலவோ தோன்றும் போது அந்த இடத்தையும் சொறிந்து கொள்கிறோம். அந்த உறுப்பின் தனித்தன்மை கருதி அவ்வாறு செய்வதில்லை. மற்ற உறுப்புக்களைப் போல் கருதியே இதைச் செய்கிறோம். இவ்வாறு தொட்டால் உளூ நீங்காது.

உள்ளாடை அணியும் போது நம்மையும் அறியாமல் அவ்வுறுப்பின் மீது நமது கை பட்டு விடலாம். மற்ற உறுப்புகளில் எவ்வாறு கை படுகின்றதோ அவ்வாறு பட்டு விட்டது என்று தான் இதை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு பட்டாலும் உளூ நீங்காது.

இவ்வாறு இல்லாமல் இச்சையுடன் தொட்டால் மற்ற உறுப்பைப் போல் தொட்டதாகக் கருத முடியாது. அவ்வுறுப்பின் தனித்தன்மை கருதி தொட்டதாகத் தான் கருத முடியும். இப்படித் தொட்டால் உளூ நீங்கி விடும்.

‘அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்றது தானே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகத்திலிருந்து இந்தக் கருத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

உளூ அடிக்கடி நீங்கும் நோயாளிகள்

அடிக்கடி சிறுநீர் சொட்டுக்கள் விழுதல், அடிக்கடி காற்றுப் பிரிதல், தொடர் உதிரப் போக்கு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு உளூவை நீக்கும் காரியங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய உபாதைகள் உடையவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு தடவை உளூச் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்த பின் அவர்களிடமிருந்து மேற்கண்ட உபாதைகளின் வெளிப்பாடு இருந்து கொண்டே இருந்தாலும் அதனால் உளூ நீங்காது. அடுத்தத் தொழுகை நேரம் வந்தவுடன் மீண்டும் உளூச் செய்ய வேண்டும்.

صحيح البخاري

228 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» – قَالَ: وَقَالَ أَبِي: – «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»

தொடர் உதிரப் போக்குடைய ஃபாத்திமா என்ற பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கின்றேன். நான் தூய்மையாவதேயில்லை. எனவே தொழுகைகளை நான் விட்டு விடலாமா?’ என்று அவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது மாதவிடாய் அல்ல! மாறாக ஒரு நோயாகும். எனவே (வழக்கமான) மாதவிடாய் நேரம் வந்ததும் தொழுகையை விட்டு விடு! அது நின்றவுடன் இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 228

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட உபாதைகள் உள்ளவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டும்.

கடமையான குளிப்பு

ஒரு மனிதன் குளிப்பது எப்போது கடமையாகும்? குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை? என்பதைக் காண்போம்.

உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்

ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டால் இருவர் மீதும் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் அவர்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

صحيح البخاري

291 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، ح وحَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ

‘ஒரு ஆண் தனது மனைவியின் கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர் முயற்சி செய்தால் குளிப்பு கடமையாகி விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 291

صحيح مسلم   وَإِنْ لَمْ يُنْزِلْ

முஸ்லிமின் 525 அறிவிப்பில் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்ற வாக்கியம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்

பெரும்பாலும் ஆண்களுக்கும் மிகச் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.

விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.

விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.

صحيح البخاري

3328 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الحَقِّ فَهَلْ عَلَى المَرْأَةِ الغَسْلُ إِذَا احْتَلَمَتْ؟ قَالَ: «نَعَمْ، إِذَا رَأَتِ المَاءَ» فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ، فَقَالَتْ: تَحْتَلِمُ المَرْأَةُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَبِمَ يُشْبِهُ الوَلَدُ»

‘அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?’ என்று உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்’ என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ‘பெண்களுக்கும் விந்து வெளிப்படுமா?’ என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப் பிறக்கின்றது?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரீ 3328

விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் நின்றதும் குளிப்பது அவசியம்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது என்பதை நாம் அறிவோம். மாதவிடாய் நின்றவுடன் அவர்கள் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.

صحيح البخاري

320 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ، فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي»

அபூஹுபைஷ் என்பாரின் மகள் ஃபாத்திமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்கிலிருந்து சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘(தொழுகையை விடக்) கூடாது. அது ஒரு நோய் தானே தவிர மாதவிடாய் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது (மட்டும்) தொழுகையை விட்டு விடு! மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 320

மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

ஜும்ஆவுக்கு முன் குளிப்பது அவசியம்

வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமையாகும். இது பற்றி மிகத் தெளிவான கட்டளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

صحيح البخاري

858 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الغُسْلُ يَوْمَ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»

‘பருவ வயது அடைந்த ஒவ்வொருவர் மீதும் வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரீ 858, 879, 880, 895, 2665

வெள்ளிக்கிழமை குளிப்பது அவசியம் என்று பொதுவாகக் கூறப்படுவதால் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவுக்குப் பின்னர் கூட குளிக்கலாம் என்று கருதக் கூடாது. ஏனெனில் வேறு ஹதீஸ்களில் ஜும்ஆவுக்கு முன்னரே குளித்து விட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري

877 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَاءَ أَحَدُكُمُ الجُمُعَةَ، فَلْيَغْتَسِلْ»

‘உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்து விடட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 877

குளிக்கும் முறை

மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

صحيح البخاري

260 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ الحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الحَائِطَ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)

நூல்: புகாரீ

வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று புகாரீ 259வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

உளூச் செய்தல்

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

صحيح البخاري

248 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ

صحيح البخاري

249 – ، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ المَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ، فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الجَنَابَةِ»

குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)

நூல்: புகாரீ 249

தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்

صحيح البخاري

248 – ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 248

صحيح البخاري

272 – حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ، أَفَاضَ عَلَيْهِ المَاءَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ»

பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 272

இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும்

கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

صحيح البخاري

257 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَتْ مَيْمُونَةُ: «وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً لِلْغُسْلِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)

நூல்: புகாரீ 257

நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

صحيح مسلم

54 – (327) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، – قَالَ: يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ – حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: تَمَارَوْا فِي الْغُسْلِ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: أَمَّا أَنَا فَإِنِّي أَغْسِلُ رَأْسِي كَذَا وَكَذَا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَنَا فَإِنِّي أُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثَ أَكُفٍّ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், ‘நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

நூல்: முஸ்லிம் 493

صحيح البخاري

254 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ: حَدَّثَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا، وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا»

‘நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது.

கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.

பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா?

பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம்.

இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன.

صحيح مسلم

58 – (330) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ – قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا سُفْيَانُ – عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ؟ قَالَ: «لَا. إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ».

‘அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 497

எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.

சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாங்கு – இகாமத்

கடமையான தொழுகைக்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும்.

صحيح البخاري

631 – فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»

‘தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் தொழ வைக்கட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரீ 631

பாங்கு என்பது தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக உள்ள குறிப்பிட்ட வாசகங்களாகும்.

இகாமத் என்பது கடமையான தொழுகை துவங்குவதற்கு முன் கூறப்படும் குறிப்பிட்ட வாசகங்களாகும்.

பாங்கின் வாசகங்கள்

سنن أبي داود

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ                أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ     أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

حَيَّ عَلَى الصَّلَاةِ                            حَيَّ عَلَى الصَّلَاةِ

، حَيَّ عَلَى الْفَلَاحِ                         حَيَّ عَلَى الْفَلَاحِ

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

ஹய்ய அலஸ் ஸலாஹ்

ஹய்ய அலஸ் ஸலாஹ்

ஹய்ய அலல் ஃபலாஹ்

ஹய்ய அலல் ஃபலாஹ்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ்

பொருள்:

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்.

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன்.

தொழுகையின் பக்கம் வாருங்கள்

தொழுகையின் பக்கம் வாருங்கள்

வெற்றியின் பக்கம் வாருங்கள்

வெற்றியின் பக்கம் வாருங்கள்

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்,

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: அபூதாவூத் 421

பாங்கில் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது பாங்கு சொல்பவர் வலது புறமும். இடது புறமும் தலையைத் திருப்பியதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

صحيح مسلم

وَأَذَّنَ بِلَالٌ، قَالَ: فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا – يَقُولُ: يَمِينًا وَشِمَالًا – يَقُولُ: حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்… அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறும் போது இங்கும் அங்குமாக, அதாவது வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் 866

பாங்கு சொல்லும் போது பஜ்ர் தொழுகையில் மட்டும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறிய பின்னர் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூற வேண்டும்.

سنن النسائي

647 – أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي سَلْمَانَ، عَنْ أَبِي مَحْذُورَةَ قَالَ: ” كُنْتُ أُؤَذِّنُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ أَقُولُ فِي أَذَانِ الْفَجْرِ الْأَوَّلِ: حَيَّ عَلَى الْفَلَاحِ. الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. اللَّهُ أَكْبَرُ. اللَّهُ أَكْبَرُ. لَا إِلَهَ إِلَّا اللَّهُ ”

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பாங்கு சொல்பவனாக இருந்தேன். நான் பஜ்ருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுபவனாக இருந்தேன்.

அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)

நூல்: நஸாயீ

பாங்கிற்கு முன்னால் ஸலவாத்துச் சொல்வதும் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி … என்று துவங்கும் வாசகங்களைக் கூறுவதும் பித்அத் ஆகும். இவ்வாறு சொல்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தரவில்லை.

பாங்கின் அழைப்பிற்குப் பதில் கூறுதல்

பாங்கைக் கேட்பவர்கள் பாங்கிற்குப் பதில் அளிப்பது அவசியமாகும். பாங்கு சொல்பவர் சொல்வதைப் போன்று கூற வேண்டும். ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது மட்டும்

صحيح البخاري

613 – لَمَّا قَالَ: حَيَّ عَلَى الصَّلاَةِ، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»،

‘லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றில் ஈடுபடவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது) என்று கூற வேண்டும்.

‘பாங்கைக் கேட்டால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்று நீங்களும் கூறுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)

நூல்: புகாரீ 613

பாங்கிற்கு இவ்வாறு பதில் சொல்லி முடித்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

صحيح مسلم

11 – (384) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ، وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى الله عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ»

‘நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 628

ஸலவாத்தின் வாசகங்கள்

صحيح البخاري

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ  عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

பொருள்: ‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி (பரகத்) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி (பரகத்) செய்வாயாக! நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்’. அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரீ 3370

ஸலவாத் கூறிய பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

صحيح البخاري

614 – اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ ”

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்

பொருள்: ‘முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’

என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரீ 614

மேற்கூறப்பட்ட துஆவையோ, அல்லது பின்வரும் துஆவையோ ஓதிக் கொள்ளலாம்.

صحيح مسلم

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ»

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லஷரீ(க்)க லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. ரளீத்து பில்லாஹி ரப்பன் வபி முஹம்மதி(ன்)ர் ரஸூலன் வபில் இஸ்லாமி தீனா

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள். அல்லாஹ்வை அதிபதியாகவும், முஹம்மதை (இறைத்) தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்றுக் கொண்டேன்.

என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 631

இகாமத்

கடமையான தொழுகையை நிறைவேற்றும் முன்பு இகாமத் சொல்லி தொழுகையைத் துவங்க வேண்டும். இகாமத் என்பது பாங்கைப் போன்றது தான். எனினும் அதில் சில மாற்றங்கள் உள்ளன.

صحيح البخاري

605 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ، إِلَّا الإِقَامَةَ»

பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் கத்காமதிஸ் ஸலாஹ் என்பதைத் தவிர மற்ற வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 605

இகாமத்தின் வாசகங்கள்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

ஹய்ய அலஸ் ஸலாஹ்

ஹய்ய அலல் ஃபலாஹ்

கத்காமதிஸ்ஸலாஹ் கத்காமதிஸ்ஸலாஹ்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ்

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்

இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகைகளை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

திருக்குர்ஆன் 4:103

சுப்ஹுத் தொழுகையின் நேரம்

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு.

صحيح مسلم

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «وَقْتُ الظُّهْرِ مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ، وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، وَوَقْتُ الْمَغْرِبِ مَا لَمْ يَسْقُطْ ثَوْرُ الشَّفَقِ، وَوَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ، وَوَقْتُ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ»

‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1075

லுஹர் தொழுகையின் நேரம்

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு.

‘லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1075

அஸ்ர் தொழுகையின் நேரம்

அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை உண்டு.

سنن  الترمذي

، ثُمَّ صَلَّى العَصْرَ حِينَ كَانَ كُلُّ شَيْءٍ مِثْلَ ظِلِّهِ …ثُمَّ صَلَّى العَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ…  ثُمَّ التَفَتَ إِلَيَّ جِبْرِيلُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ، وَالوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الوَقْتَيْنِ

(ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது… ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ

وَوَقْتُ صَلَاةِ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، وَيَسْقُطْ قَرْنُهَا الْأَوَّلُ

‘அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1076

மக்ரிப் தொழுகையின் நேரம்

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.

وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ إِذَا غَابَتِ الشَّمْسُ، مَا لَمْ يَسْقُطِ الشَّفَقُ

‘மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1076

இஷாத் தொழுகையின் நேரம்

صحيح مسلم

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ: «صَلِّ مَعَنَا هَذَيْنِ – يَعْنِي الْيَوْمَيْنِ – ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ،… وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ.. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: «وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நம்முடன் தொழுகையில் கலந்து கொள்வீராக!’ என்று கூறினார்கள். இதையடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம்… செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறு நாள் பிலால் (ரலி) அவர்களிடம் … இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், ‘கேள்வி கேட்டவர் எங்கே? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1079

وَوَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ

‘இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1074

இஷாத் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஃபஜ்ரு வரை இஷாவின் நேரம் நீடிக்கிறதா? இரவின் பாதி வரை நீடிக்கிறதா? அல்லது இரவின் மூன்றில் ஒரு பங்கு வரை நீடிக்கிறதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

‘இரவில் பாதி வரை இஷா நீடிக்கிறது’ என்பதற்கும், ‘இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை இஷா நீடிக்கிறது’ என்பதற்கும் நேரடியான ஆதாரங்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் சுப்ஹ் வரை நீடிக்கிறது என்ற கருத்தில் நேரடியாக எந்த ஹதீஸும் இல்லை.

சூரியன் 6 மணிக்கு மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதல் இரவு ஆரம்பமாகி விடுகிறது. சுப்ஹ் 5 மணிக்கு வருகிறது என்றால் காலை நேரம் வந்து விட்டது என்று பொருள். இதில் இரவின் பாதி என்பது இரவு 11.30 மணியாகும். இது போல் சூரிய அஸ்தமனம் மற்றும் சுப்ஹ் நேரம் ஆகியவற்றைக் கொண்டு இரவின் பாதியைக் கணக்கிட்டு அதற்குள் இஷாவைத் தொழுது விட வேண்டும் என்பதே சரியானதாக கருத்தாகத் தோன்றுகிறது.

சுத்ரா – தடுப்பு

இமாமும், தனியாகத் தொழுபவரும் தமக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்வது அவசியமாகும்.

صحيح ابن خزيمة

820 – أَنَا أَبُو طَاهِرٍ، نَا أَبُو بَكْرٍ، نَا بُنْدَارٌ، ثَنَا أَبُو بَكْرٍ -يَعْنِي الْحَنَفِيَّ- ثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: “لَا تُصَلُّوا إِلَّا إِلَى سُتْرَةٍ، وَلَا تَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْكَ، فَإِنْ أَبَى فَلْتُقَاتِلْهُ؛ فَإِنَّ مَعَهُ الْقَرِينَ”.

‘சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு ஹுஸைமா

தடுப்பாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். இன்ன பொருள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தூணோ அல்லது சுவரோ இருந்தால் அதைத் தடுப்பாக்கிக் கொண்டு தொழலாம். தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக இருந்து தொழ வேண்டும்.

صحيح البخاري

496 – حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الجِدَارِ مَمَرُّ الشَّاةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்: புகாரீ 496

صحيح البخاري

376 – ثُمَّ رَأَيْتُ بِلاَلًا أَخَذَ عَنَزَةً، فَرَكَزَهَا وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ، مُشَمِّرًا  صَلَّى إِلَى العَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ مِنْ بَيْنِ يَدَيِ العَنَزَةِ»

… பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தக் கைத்தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் ஆடு, மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)

நூல்: புகாரீ 376

صحيح البخاري

507 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ «كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ، فَيُصَلِّي إِلَيْهَا»، قُلْتُ: أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ؟ قَالَ: «كَانَ يَأْخُذُ هَذَا الرَّحْلَ فَيُعَدِّلُهُ، فَيُصَلِّي إِلَى آخِرَتِهِ – أَوْ قَالَ مُؤَخَّرِهِ -» وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَفْعَلُهُ ”

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள். ‘ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டால்?’ என்று கேட்டேன். ‘ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதைத் தமக்கு நேராக வைத்துக் கொண்டு அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிவு

நூல்: புகாரீ 507

தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே செல்வது குற்றமாகும்.

صحيح البخاري

510 -: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ المَارُّ بَيْنَ يَدَيِ المُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ» قَالَ أَبُو النَّضْرِ: لاَ أَدْرِي، أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا، أَوْ شَهْرًا، أَوْ سَنَةً

‘தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தேன்றும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஜுஹைம் (ரலி)

நூல்: புகாரீ 510

தொழும் முறை

கஅபாவை முன்னோக்குதல்

தொழுபவர் மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழகத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! ‘இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

திருக்குர்ஆன் 2:144

صحيح البخاري

6667 – «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ، فَأَسْبِغِ الوُضُوءَ، ثُمَّ اسْتَقْبِلِ القِبْلَةَ، فَكَبِّرْ

…நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 6667

திசை தெரியவில்லையானால்

சில நேரங்களில் கஅபா உள்ள திசை தெரியாமல் போகலாம். அப்போது ஏதாவது ஒரு திசையை நோக்கி நாம் தொழுது கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த ஒரு மனிதனையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:115

நிய்யத் (எண்ணம்)

முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் வணக்கம் செய்கின்றோம் என்ற எண்ணத்துடன் தான் செய்ய வேண்டும். இந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.

உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார்.

எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

صحيح البخاري

1 -«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ،

‘அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

நூல்: புகாரீ 1

நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.

உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி… என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.

மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.

ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.

நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.

தக்பீர் தஹ்ரீமா

தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.

صحيح البخاري

6667 – «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ، فَأَسْبِغِ الوُضُوءَ، ثُمَّ اسْتَقْبِلِ القِبْلَةَ، فَكَبِّرْ ..

… நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 6667

இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி

நிற்கும் போது இரு கால்களுக்கிடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவர்களின் செயல் முறைகளிலிருந்தும் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரவர் இயல்புக்குத் தக்கவாறு அடுத்தவருக்கு இடையூறு இல்லாத வகையில் நடுத்தரமாக நின்று கொள்ள வேண்டும்.

இரு கைகளை உயர்த்துதல்

அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரை அல்லது காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல் நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும்.

صحيح البخاري

735 – أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ ”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரீ 735

நெஞ்சின் மீது கை வைத்தல்

கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும்.

مسند أحمد

21967 – حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي سِمَاكٌ، عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: ” رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ، وَرَأَيْتُهُ، قَالَ، يَضَعُ هَذِهِ عَلَى صَدْرِهِ ” وَصَفَّ يَحْيَى: الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَوْقَ الْمِفْصَلِ

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். (தொழுகையில்) இதை நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன்’ என்று ஹுல்புத் தாயீ (ரலி) கூறினார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் இதை என்று சொல்லும் போது, வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைத்துக் காட்டினார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் குறிப்பிடுகின்றார்கள்.

நூல்: அஹ்மத் 20961

صحيح البخاري

740 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ اليَدَ اليُمْنَى عَلَى ذِرَاعِهِ اليُسْرَى فِي الصَّلاَةِ» قَالَ أَبُو حَازِمٍ لاَ أَعْلَمُهُ إِلَّا يَنْمِي ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِسْمَاعِيلُ: يُنْمَى ذَلِكَ وَلَمْ يَقُلْ يَنْمِي

தொழும் போது மக்கள் தம் வலக்கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்: புகாரீ 740

سنن النسائي

ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது முன் கை, இடது மணிக்கட்டு, இடது குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: நஸாயீ

سنن النسائي

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ قَائِمًا فِي الصَّلَاةِ قَبَضَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது… தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: அபூதாவூத்

கையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை.

தொப்புளுக்குக் கீழே கையை வைப்பது நபிவழி என்று அலீ (ரலி) அறிவிப்பதாக அபூதாவூத் உள்ளிட்ட சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிவிப்புக்களும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்கூஃபி என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகின்றன. இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், புகாரீ, அபூஸுர்ஆ, அபூஹாத்தம், அபூதாவூத் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மேலும் சிலர் நெஞ்சின் இடது புறம் கைகளை வைக்கிறார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.

பார்வை எங்கு இருக்க வேண்டும்?

தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது.

صحيح البخاري

750 -قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلاَتِهِمْ»، فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ، حَتَّى قَالَ: «لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ»

‘தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்துவோருக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்; இல்லை எனில் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 750

صحيح البخاري

751 – عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ العَبْدِ»

தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ‘ஒரு அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 751

முன்னால் உள்ளவர்களைப் பார்ப்பது தவறில்லை.

صحيح البخاري

746 – حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قُلْنَا لِخَبَّابٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟، قَالَ: نَعَمْ، قُلْنَا: بِمَ كُنْتُمْ تَعْرِفُونَ ذَاكَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹரிலும், அஸரிலும் ஓதுவார்களா?’ என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். ‘நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமஃமர்

நூல்: புகாரீ 746

தொழுகையின் ஆரம்ப துஆ

கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். ‘இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும், கிராஅத்துக்கும் (குர்ஆன் ஓதுதலுக்கும்) இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?’ என நான் கேட்டேன். அதற்கு,

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ

‘அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்

என்று ஓதுவேன்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 744

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவை ஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள்.

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّي، وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கீன். இன்ன ஸலா(த்)தீ வநுசு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீ(க்)கலஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த, வஅன அப்து(க்)க ளலம்(த்)து நஃப்ஸீ, வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபஃக்பிர்லீ துனூபி ஜமீஆ, லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா, லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த, லப்பை(க்)க வஸஃதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீயதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்(த்)த வ(த்)தஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க, வஅ(த்)தூபு இலை(க்)க

பொருள்: இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல் கட்டுப்பட்டவனாக, வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும், என் இதர வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டேன். எனவே என் குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் குற்றங்களை மன்னிக்க முடியாது. நற்குணத்தின் பால் எனக்கு வழி காட்டுவாயாக! உன்னைத் தவிர யாரும் வழி காட்ட முடியாது. தீய குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! உன்னைத் தவிர யாரும் தீய குணங்களை விட்டும் காக்க முடியாது. இதோ உன்னிடம் வந்து விட்டேன். அனைத்து நன்மைகளும் உன் கைகளிலே உள்ளன. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே சரணடைந்தேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றேன். உன்னை நோக்கி மீள்கின்றேன்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம்

தொழுகையை துவக்கும் போது சுப்ஹானகல்லாஹும்ம எனும் துஆவை ஹனபி மத்ஹபினர் ஓதுகின்றனர்.

இது குறித்து பல ஹதீஸ்கள் பலவீனமாக இருந்தாலும் சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானதாகவும் உள்ளன.

سنن النسائي

899 – أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ: «

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ கைருக என ஓதுவார்கள்.

நூல் : நஸாயீ

துஆவின் பொருள்

இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியமானது. உன் வல்லமை உயர்ந்துள்ளது. உன்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் அலீ என்பார் இடம் பெற்றுள்ளார்.

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் வரும் அலீ பின் அலீ என்பார் பலவீனர் என்று கூறி இந்த ஹதீஸை பலர் ஆதாரமாகக் கொள்ளவில்லை.

இவரைப் பற்றிய குறை நிறைகளை முழுமையாக ஆய்வு செய்தால் இவர் நம்பகமான அறிவிப்பாளர் என்பதே சரியாகும்.

சூரத்துல் பாத்திஹா ஓதுதல்

தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.

صحيح البخاري

756 – لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ»

‘சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: உபாதா (ரலி)

நூல்: புகாரீ 756

சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனங்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலி(க்)கி யவ்மித்தீன். இய்யா(க்)க நஅபுது வஇய்யா(க்)க நஸ்(த்)தயீன். இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம். ஸிரா(த்)தல்லதீன அன்அம்(த்)த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்

பொருள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே! அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன். தீர்ப்பு நாளின் அதிபதி. இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எவர்களுக்கு பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக! உன் கோபத்துக்கு ஆளானவர்களின் வழியுமல்ல; நெறி கெட்டவர்களின் வழியுமல்ல.

பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா

ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என சப்தமிட்டோ, மெதுவாகவோ கூற வேண்டும்.

‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பது சூரத்துல் ஃபாத்திஹாவின் ஒரு வசனம் என்பதால் அதையும் ஓத வேண்டும்.

صحيح البخاري

5046 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَتْ مَدًّا»، ثُمَّ قَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கிராஅத் (குர்ஆன் ஓதுதல்) எவ்வாறு இருந்தது?’ என அனஸ் (ரலி)யிடம் விசாரிக்கப்பட்ட போது ‘அவர்கள் நீட்டி நிறுத்தி ஓதினார்கள்’ என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான் ரஹீம் என்ற வார்த்தைகளை நீட்டி ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா,

நூல்: புகாரீ 5046

‘ صحيح البخاري

743 – حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانُوا يَفْتَتِحُونَ الصَّلاَةَ بِ {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2] ”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொழுகையைத் துவங்குவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 743

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைச் சப்தமின்றி ஓதினார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும். சப்தமிட்டு பிஸ்மில்லாஹ் ஓதுவதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

المستدرك على الصحيحين للحاكم

849 – حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ الْمِصْرِيُّ، ثنا أَبِي وَشُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَا: ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، وَأَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ، ثنا مُحَمَّدُ بْنُ الْهَيْثَمِ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، قَالَ: كُنْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ ” فَقَرَأَ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] ثُمَّ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ حَتَّى بَلَغَ {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] “، قَالَ: «آمِينَ» ، وَقَالَ النَّاسُ: آمِينَ، وَيَقُولُ كُلَّمَا سَجَدَ: «اللَّهُ أَكْبَرُ» ، وَيَقُولُ إِذَا سَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. «هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ، وَشَاهِدُهُ» நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதி விட்டுப் பிறகு அல்ஹம்து சூராவை ஓதினார்கள்…. ‘அல்லாஹ்வின் மீதாணையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போல் நான் உங்களுக்குத் தொழுது காட்டினேன்’ என்று அபூஹுரைரா (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர்

நூல்: ஹாகிம்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குக் கேட்கும் வகையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என ஓதிவிட்டு நபிகள் இப்படி தொழுததாகக் குறிப்பிடுகிறார்கள்.

பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா?

இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 7:204

‘இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 612

ஆமீன் கூறுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ‘ஆமீன்’ கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.

صحيح البخاري

782 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا قَالَ الإِمَامُ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} [الفاتحة: 7] فَقُولُوا: آمِينَ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ” تَابَعَهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنُعَيْمٌ المُجْمِرُ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

‘இமாம் ‘கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 782

இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். எனவே ஆமீன் என்பதைச் சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம்.

துணை சூராக்கள்

சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.

முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும், துணை சூராவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள்.

صحيح البخاري

776 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي العَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும், இரண்டு துணை அத்தியாயங்களையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும், சுப்ஹிலும் செய்வார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரீ 776

ஒரு அத்தியாயத்தை எல்லா ரக்அத்களிலும் ஓதுதல்

سنن أبي داود

816 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، أَنَّ رَجُلًا، مِنْ جُهَيْنَةَ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ  النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ فِي الصُّبْحِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا» فَلَا أَدْرِي أَنَسِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் இதா ஸுல்ஸிலத்தில் அர்லு’ என்று தொடங்கும் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்களிலும் ஓதினார்கள்.

நூல்: அபூதாவூத் 693

வரிசை மாற்றி ஓதுதல்

துணை அத்தியாயங்களை ஓதும் போது குர்ஆனில் உள்ள வரிசைப்படி ஓத வேண்டும் என்பது அவசியமில்லை. வரிசை மாற்றியும் ஓதலாம். உதாரணமாக 114 வது அத்தியாயமாக உள்ள நாஸ் அத்தியாயத்தை முதலில் ஓதிவிட்டு 113 வது அத்தியாயமாக உள்ள ஃபலக் என்ற அத்தியாயத்தை பின்னர் ஓதலாம்.

صحيح مسلم

عَنْ حُذَيْفَةَ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَافْتَتَحَ الْبَقَرَةَ، فَقُلْتُ: يَرْكَعُ عِنْدَ الْمِائَةِ، ثُمَّ مَضَى، فَقُلْتُ: يُصَلِّي بِهَا فِي رَكْعَةٍ، فَمَضَى، فَقُلْتُ: يَرْكَعُ بِهَا، ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ، فَقَرَأَهَا، ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ، فَقَرَأَهَا، يَقْرَأُ مُتَرَسِّلًا

ஒரு நாள் இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது முதலில் (இரண்டாவது அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (நான்காவது அத்தியாயமான) ஸூரத்துந் நிஸாவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (மூன்றாவது அத்தியாயமான) ஸூரத்து ஆலஇம்ரானை ஓத ஆரம்பித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் 1291

ஒரு அத்தியாயத்தைப் பிரித்து ஓதுதல்

துணை சூரா ஓதும் போது ஒரு அத்தியாயத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஓதுவதும் கூடும்.

سنن النسائي

991 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، وَأَبُو حَيْوَةَ، عَنْ ابْنِ أَبِي حَمْزَةَ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِسُورَةِ الْأَعْرَافِ فَرَّقَهَا فِي رَكْعَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்துகளில் பிரித்து ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ

ருகூவு செய்தல்

நிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும்.

ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் முட்டுக்கால்கள் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ, உயர்த்தியோ இருக்கக் கூடாது.

صحيح البخاري

735 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ: ” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ ”

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரீ 735

سنن الترمذي

260 – حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ  قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ سَهْلٍ، قَالَ: اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ، وَأَبُو أُسَيْدٍ، وَسَهْلُ بْنُ سَعْدٍ، وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ، فَذَكَرُوا صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو حُمَيْدٍ: «أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكَعَ، فَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ كَأَنَّهُ قَابِضٌ عَلَيْهِمَا، وَوَتَّرَ يَدَيْهِ، فَنَحَّاهُمَا عَنْ جَنْبَيْهِ».

அபூஹுமைத் (ரலி), அபூஉஸைத் (ரலி), ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) ஆகியோர் ஒன்று கூடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அபூஹுமைத் (ரலி) அவர்கள், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களை விட நான் நன்கு அறிந்தவன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தமது இரு கைகளாலும் இரண்டு மூட்டுக் கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். மேலும் தமது இரு கைகளையும் (வளைவு இன்றி) நேராக ஆக்கினார்கள். மேலும் இரு கைகளையும் விலாப்புறத்தை விட்டும் விலக்கி வைத்தார்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்பாஸ் பின் ஸஹ்ல்,

நூல்: திர்மிதீ

صحيح مسلم

وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ، وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ

நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தலையை உயர்த்தவும் மாட்டார்கள்; ஒரேயடியாகத் தாழ்த்தவும் மாட்டார்கள்; இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வைப்பார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 768

سنن النسائي

1027 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»

‘ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)

நூல்: நஸாயீ

ருகூவில் ஓதவேண்டியவை

பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ, அல்லது ஒன்றையோ ருகூவில் ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது.

سنن النسائي

ثُمَّ رَكَعَ نَحْوًا مِنْ قِيَامِهِ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ

சுப்ஹான ரப்பியல் அழீம்

(மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும்.

நூல்: நஸாயீ

صحيح البخاري

794 – سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ”

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி

(இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)

நூல்: புகாரீ 794

صحيح مسلم

كَانَ يَقُولُ: «فِي رُكُوعِهِ وَسُجُودِهِ  سُبُّوحٌ قُدُّوسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ»

ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயி(க்)க(த்)தி வர்ரூஹ்

(ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)

நூல்: முஸ்லிம் 752

صحيح مسلم

عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ: «نَهَانِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ وَأَنَا رَاكِعٌ أَوْ سَاجِدٌ»

ருகூவு செய்யும் போதும், ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 740

ருகூவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பிய அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள்.

صحيح البخاري

817 – عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: ” كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ” يَتَأَوَّلُ القُرْآنَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி’ என்று அதிகமதிகம் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 817

ருகூவிலிருந்து எழும் போது

ருகூவிலிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்தி, பின்னர் கைகளைக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து என்று கூற வேண்டும்.

صحيح البخاري

789 – كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرَّكْعَةِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ: رَبَّنَا لَكَ الحَمْدُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா லக்கல் ஹம்து’ என்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 789

صحيح البخاري

735 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ: ” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ ”

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரீ 735

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம்.

رَبَّنَا لَكَ الحَمْدُ

ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 789

رَبَّنَا وَلَكَ الحَمْدُ

ரப்பனா வல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 732

اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ

அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 796

اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الحَمْدُ

அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து

(பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!)

நூல்: புகாரீ 795

رَبَّنَا وَلَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ

ரப்பனா ல(க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ

(இறைவா! தூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே உரியது!)

நூல்: புகாரீ 799

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று இமாம் கூறும் போது பின்பற்றித் தொழுபவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறத் தேவையில்லை. மேற்கூறப்பட்ட வாசகங்களில் ஏதாவது ஒன்றைக் கூறினால் போதுமானது.

وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الحَمْدُ

ஏனெனில் ‘இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறும் போது நீங்கள் ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரீ 722

ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?

சிலர் ருகூவிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். சவூதி அரேபியாவில் இருந்த அறிஞர் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள், ‘ருகூவிலிருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டும்; இது விடுபட்ட நபி வழி’ என்று கூறினார். இதன் அடிப்படையில் சிலர் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டி வருகின்றனர்.

இது நபிவழிக்கு மாற்றமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றைக் கவனித்தால் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டக் கூடாது, கீழே விட வேண்டும் என்பதை அறியலாம்.

رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ، ثُمَّ هَصَرَ ظَهْرَهُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும் போது ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிருவார்கள்.

நூல்: புகாரீ 828

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்து எப்படி நிற்பார்கள் என்பதை விளக்கும் நபித்தோழர்கள் ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிருவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரவேண்டுமானால் கைகளைக் கீழே விட்டால் தான் சாத்தியம். கைளைக் கட்டினால் மூட்டுக்கள் அதனதன் இடத்துக்கு வராது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கீழே விடுவது தான் நபிவழி என்பதை அறியலாம்.

ஸஜ்தா அல்லது சுஜூது

ருகூவிலிருந்து எழுந்து, ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர், அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைப் பார்ப்போம்.

கைகளை முதலில் வைக்க வேண்டும்

ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதலில் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து, பின்னர் மூட்டுக்களை வைக்க வேண்டும்.

سنن النسائي

1091 – أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارِ بْنِ بِلَالٍ مِنْ كِتَابِهِ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ وَلَا يَبْرُكْ بُرُوكَ الْبَعِيرِ»

‘உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: நஸாயீ

தரையில் பட வேண்டிய உறுப்புகள்

ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

* கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும்.

* இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.

* ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது.

* ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ, அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும்.

* இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும்.

* தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.

صحيح البخاري

812 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الجَبْهَةِ، وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَاليَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ القَدَمَيْنِ وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ»

‘நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் – நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் – ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 812

سنن النسائي

ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது முன் கைகளைத் தமது காதுகளுக்கு நேராக வைத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: நஸாயீ

صحيح مسلم

234 – (494) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ إِيَادٍ، عَنْ إِيَادٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَجَدْتَ، فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ»

‘நீ ஸஜ்தாச் செய்யும் போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூல்: முஸ்லிம் 763

صحيح البخاري

828 – فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلاَ قَابِضِهِمَا، وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ القِبْلَةَ

…நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது கைளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தமது கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள்…

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)

நூல்: புகாரீ 828

صحيح ابن خزيمة

قَالَتْ عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ مَعِي عَلَى فِرَاشِي، فَوَجَدْتُهُ سَاجِدًا رَاصًّا عَقِبَيْهِ، مُسْتَقْبِلًا بِأَطْرَافِ أَصَابِعِهِ الْقِبْلَةَ،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இரு குதிகால்களையும் இணைத்து விரல்களைக் கிப்லாவை முன்னோக்கி வைத்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: இப்னுஹுஸைமா

நாய் விரிப்பதைப் போல் கைகளை வைக்கக் கூடாது

தொடைகளும், வயிறும் ஒட்டாமல் அகற்றி வைக்க வேண்டும். நாய் அமருவது போல் முன்கைகளைத் தரையில் பரப்பி வைப்பதைப் போன்று வைக்கக் கூடாது.

صحيح البخاري

822 -: «اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ»

‘ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 822

ஸஜ்தாவில் ஓத வேண்டியவை

ஸஜ்தாவில் பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ, அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது.

صحيح البخاري

817 – عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: ” كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ” يَتَأَوَّلُ القُرْآنَ

சுப்ஹான ரப்பியல் அஃலா

(உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும்.

நூ; : புகாரீ 817

صحيح البخاري

794 – عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: ” كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ”

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)

நூல்: புகாரீ 794

ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிக(த்)தி வர்ரூஹ்

(ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)

நூல்: முஸ்லிம் 752

ருகூவு செய்யும் போதும், ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 740

ஸஜ்தாவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பிய அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி’ என்று அதிகமதிகம் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 817

ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம்

ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது, தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம்.

صحيح مسلم

وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ»

‘…ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 824

இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்

முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே,

سنن النسائي

وَكَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي

‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ

(இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: நஸாயீ

இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்த அனைத்தையும் இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாம் ரக்அத்

முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல் அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு வர வேண்டும். பின்னர் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.

صحيح البخاري

823 – فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்காராமல் நிலைக்கு வர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)

நூல்: புகாரீ 823

முதல் ரக்அத்தில் ஓதிய அனைத்தையும் இரண்டாம் ரக்அத்திலும் ஓத வேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் ஸூரத்துல் ஃபாத்திஹாவிற்கு முன் ஓதிய ஆரம்ப துஆக்கள் இரண்டாம் ரக்அத்தில் கிடையாது.

صحيح مسلم

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَهَضَ مِنَ الرَّكْعَةِ الثَّانِيَةِ اسْتَفْتَحَ الْقِرَاءَةَ بِـ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَلَمْ يَسْكُتْ»

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 941

இரண்டாம் ரத்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத வேண்டும்.

صحيح البخاري

776 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي العَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும், துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும், சுப்ஹிலும் செய்வார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரீ 776

பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதில் ஓதவேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும்.

ஸஜ்தாவிலிருந்து எழும் முறை

ஸஜ்தாவிலிருந்து எழும் போது இரு கைகளையும் மாவு குழைப்பதைப் போல் மடக்கி தரையில் ஊன்றி எழ வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமாதாகும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் எழும் போது மாவு குழைப்பவர் வைப்பதைப் போன்று கைகளைத் தரையில் வைத்து எழுவார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஒரு செய்தியை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸுல் ஹபீர் என்ற நூலில் குறிப்பிட்டு விட்டுப் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

‘இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! அறியப்பட்டதும் அல்ல! இதை ஆதாரமாகக் கொள்வது கூடாது’ என்று இப்னுஸ் ஸலாஹ் கூறுகிறார். மேலும் இமாம் நவவீ அவர்கள், ‘இந்தச் செய்தி பலவீனமானதாகும்; அல்லது அடிப்படையே இல்லாத பொய்யான செய்தியாகும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1, பக்கம்: 260

தரையில் கைகளை எப்படி வைப்பது என்று கூறப்படாததால் நாம் சாதாரணமாக எப்படி எழுவோமோ அதைப் போன்று இரு முன் கைகளின் உட்பகுதியைத் தரையில் ஊன்றி எழ வேண்டும்.

முதல் இருப்பு

இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்து, இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது.

கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும், இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும்.

மூன்று, நான்கு ரக்அத் தொழுகைகளின் போது முதலாம் இருப்பில் இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைக்க வேண்டும்.

கடைசி இருப்பாக இருந்தால் மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி, அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைக்க வேண்டும்.

صحيح البخاري

828 – فَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ اليُسْرَى، وَنَصَبَ اليُمْنَى، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ اليُسْرَى، وَنَصَبَ الأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து, வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி வைத்து, தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூ ஹுமைத் (ரலி)

நூல்: புகாரீ 828

இருப்பின் போது அமரும் முறைகள்

سنن النسائي

ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، وَوَضَعَ كَفِّهِ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இடது கையை இடது தொடையின் மீதும், இடது மூட்டுக் கால் மீதும் வைப்பார்கள். வலது முழங்கையின் மூட்டுப் பகுதியை வலது தொடையின் மீது வைப்பார்கள்.

நூல்: நஸாயீ

صحيح مسلم

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ فِي الصَّلَاةِ، جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ، وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى، وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَأَشَارَ بِإِصْبَعِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இடது கையை இடது மூட்டுக் கால் மீதும், வலது கையை வலது தொடையின் மீதும் வைத்தார்கள்.

நூல் முஸ்லிம்: 909

விரலசைத்தல்

அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி, அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது பார்வை ஆட்காட்டி விரலை நோக்கி இருக்க வேண்டும்.

سنن النسائي

ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، وَوَضَعَ كَفِّهِ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً، ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ”

‘…நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: நஸாயீ

இச்செய்தி தாரமீ, அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான், தப்ரானீ கபீர், பைஹகீ, நஸாயியின் ஸுனனுல் குப்ரா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

விமர்சனமும் விளக்கமும்

விரலசைத்தல் சம்பந்தப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இப்னுல் மதீனீ என்பவர் ‘இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என்று விமர்சனம் செய்துள்ளார். இதை அடிப்படையாக வைத்து சிலர் விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் பலவீனமானது’ என்று கூறுகின்றனர். இது தவறாகும்.

ஆஸிம் பின் குலைப் என்பவரை இப்னுல் மதீனீ என்பவரைத் தவிர அனைவரும் பாரட்டியுள்ளனர், நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இவரைப் பற்றி விமர்சனம் செய்யும் இப்னுல் மதீனீ அவர்கள் ‘அவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது’ என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்குரிய சான்றைச் சமர்ப்பிக்கவில்லை. எனவே இப்னுல் மதீனீ அவர்களின் விமர்சனம் ஏற்றுக் கொள்வதற்குரிய தகுதியை இழந்து விடுகிறது.

விரலசைத்தல் தொடர்பான செய்தி ஷாத் வகையைச் சார்ந்தது என்று காரணம் சொல்லி சிலர் மறுக்கின்றனர்.

மிக நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக, அதை விடக் குறைந்த அளவு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தியும், பல நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக, குறைவான எண்ணிக்கையிலுள்ள அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்தியும் ஹதீஸ் கலையில் ஷாத் எனப்படும்.

விரலசைத்தல் தொடர்பான செய்தியின் அறிவிப்பாளர்களை விட இஷாரா செய்தார்கள்’ என்று அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் மிக அதிகமாக உள்ளனர். எனவே விரலசைத்தல் தொடர்பான செய்தி ஷாத் என்ற மறுக்கப்பட வேண்டிய செய்தியாகிறது என்று கூறுகின்றனர்.

இந்த விமர்சனமும் தவறாகும்.

இஷரா செய்தார்கள் என்ற செய்தியும், அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்று அவர்கள் எண்ணுவதால் வந்த கோளாறாகும்.

இஷாரா என்ற வார்த்தைக்கு, சைகை செய்தல் என்பது பொருள். அதாவது வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கு இஷாரா எனப்படும்.

சில நேரங்களில் அசைவுகள் மூலமாகவும் இஷாரா அமைந்திருக்கும். அசைவுகள் இல்லாமலும் இஷாரா அமையலாம்.

பள்ளிவாசல் எங்கே இருக்கிறது? என்று ஒருவரிடம் கேட்கும் போது, பள்ளிவாசல் இருக்கும் திசையை நோக்கி அவர் விரலை நீட்டுவார். எவ்வித அசைவும் இல்லாமல் விரலை நீட்டியவாறு பள்ளிவாசல் இருக்கும் திசையைத் தெரியப்படுத்துகின்றார். இது அசைவு இல்லாத இஷாராவாகும்.

ஒருவரை எச்சரிக்கும் போது, தொலைத்து விடுவேன் என்பது போல் ஆட்காட்டி விரலை பல முறை திரும்பத் திரும்ப ஆட்டி எச்சரிப்பார்கள். இது அசைவுடன் கூடிய இஷாராவாகும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாராச் செய்தார்கள்’ என்ற ஹதீஸ் ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அந்த ஹதீஸ் ஷாத் என்ற நிலைக்கு செல்லும். ஆனால் இஷாராச் செய்தார்கள் என்ற ஹதீஸ் விரலசைத்தார்கள் என்ற ஹதீஸுக்கு முரண்படவில்லை.

இஷாரா என்பதற்கு ‘அசைக்கவில்லை’ என்று இவர்கள் தவறாகப் பொருள் செய்வதால், ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸுக்கு இது முரண்படுவதாகக் கூறி ஷாத் என்கின்றனர்.

இஷாரா என்ற சொல்,

* அசைவு மூலம் ஒரு கருத்தைத் தெரிவித்தல்

* அசைக்காமல் ஒரு கருத்தைத் தெரிவித்தல்

ஆகிய இரண்டு அர்த்தங்களைக் கொண்டதாகும். இஷாரா செய்தார்கள் என்ற ஹதீஸுக்கு இவ்விரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் கொடுக்க வேண்டும் என்பதை, ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

இஷாரா என்ற விரிந்த பொருள் உள்ள வார்த்தைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அர்த்தத்தில் நடைமுறைப்படுத்தினார்கள் என்ற கூடுதல் விவரத்தையே விரலசைத்தார்கள் என்ற ஹதீஸ் தருகிறது.

எனவே இரண்டு ஹதீஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்பதால் இது ஷாத் என்ற வகையைச் சார்ந்தது அல்ல.

‘விரலை அசைக்க மாட்டார்கள்’ என்று ஒரு செய்தி அபூதாவூத், நஸாயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

துஆ செய்யும் போது இஷாரா செய்வார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொழுகையில் என்று கூறப்படவில்லை.

துஆ செய்யும் போது விரலை அசைக்க மாட்டார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகிறது. அத்தஹியாத் இருப்பைப் பற்றி இது பேசவில்லை.

முதல் இருப்பில் ஓத வேண்டியவை

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும்.

அத்தஹிய்யாத் துஆ

صحيح البخاري

1202 – التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு

பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

எனத் தொழுகையில் அமரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரீ 1202

ஸலவாத்

அத்திஹிய்யாத் ஓதிய பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓத வேண்டும்.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள் நபிகளாரிடம் இருந்தோம். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம் எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத் சொல்வது?’ என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே’ என்று நாங்கள் நினைக்கும் அளவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) ‘நீங்கள் என் மீது ஸலவாத் சொல்வதாக இருந்தால்

اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்

பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!

என்று கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி)

நூல்: அஹ்மத் 16455

மற்றொரு ஸலவாத்

صحيح البخاري

3370 – اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ  عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ”

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரீ 3370

முதல் இருப்பில் நபிகள் மீது ஸலவாத் கூறுவதற்கு நேரடியான ஆதாரமில்லை.  அதிகமான அறிஞர்கள் முதல் இருப்பில் தஷஹ்ஹுத் மட்டும் ஓதினால் போதும்; ஸலவாத் அவசியம் இல்லை என்று கூறுகிறார்கள்.

ஆயினும் வித்ரு தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு இருப்புக்களிலும் ஸலவாத் கூறியுள்ளார்கள். அதாவது ஒன்பது ரக்அத் வித்ரு தொழும் போது ஏழு ரக்அத்களுக்கு இருப்பு இல்லை. எட்டாவது ரக்அத்திலும் ஒன்பதாவது ரக்அத்திலும் இருப்பு உள்ளது என்பதை நாம் அறிவோம்.

مستخرج أبي عوانة

 فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَنْبِئِينِي عَنْ وِتْرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيهِ وَسَلَّمَ، فَقَالَتْ: “كُنَّا نُعِدُّ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيهِ وَسَلَّمَ سِوَاكَهُ وَطَهُورَهُ فَيَبْعَثُهُ اللَّهُ فِيمَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ وَيَتَوَضَّأُ، ثُمَّ يُصَلِّي تِسْعَ رَكَعَاتٍ لاَ يَجْلِسُ فِيهِنَّ إِلاَّ عِنْدَ الثَّامِنَةِ، فَيَدْعُو رَبَّهُ وَيُصَلِّي عَلَى نَبِيِّهِ، ثُمَّ يَنْهَضُ وَلاَ يُسَلِّمُ، ثُمَّ يُصَلِّي التَّاسِعَةَ فَيَقْعُدُ، ثُمَّ يَحْمَدُ رَبَّهُ وَيُصَلِّي عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيهِ وَسَلَّمَ وَيَدْعُو، ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمًا يُسْمِعُنَا، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ مَا يُسَلِّمُ وَهُوَ قَاعِدٌ، فَتِلْكَ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يَا بُنَيَّ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்பது ரக்அத் வித்ரு தொழும்போது எட்டாவதில் அமர்ந்தார்கள். அதில் ஸலவாத் ஓதினார்கள். ஒன்பதாவது ரக்அத்திலும் அமர்ந்தார்கள். அதிலும் ஸலவாத் ஓதினார்கள் என்று ஆயிஷா (ரலி)அறிவிக்கும் ஹதீஸ் முஸ்தக்ரஜ் அபீ அவானாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு இருப்புக்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலவாத் ஓதியுள்ளதில் இருந்து மற்ற தொழுகைகளிலும் இதையே கடைப்பிடிப்பது தான் சிறப்பானது.

இரண்டாம் ரக்அத் இருப்பில் விரும்பிய அனைத்து துஆவையும் கேட்கலாம்.

سنن النسائي

، ثُمَّ لِيَتَخَيَّرْ مِنَ الدُّعَاءِ بَعْدُ أَعْجَبَهُ إِلَيْهِ يَدْعُو بِهِ ”

‘நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்) லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: நஸாயீ

மூன்றாம் ரக்அத்

இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் சூரத்துல் ஃபாத்திஹா மட்டும் ஓதினால் போதுமானது. விரும்பியவர் வேறு துணை சூராக்களை ஓதிக் கொள்ளலாம். இதற்குரிய ஆதாரங்களை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.

صحيح البخاري

739 – وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 739

நிலையில் ஓத வேண்டியதை ஓதிய பின்னர் ஏற்கனவே கூறிய படி ருகூவு, ஸஜ்தாக்களை நிறைவேற்ற வேண்டும்.

நான்காம் ரக்அத்

மூன்றாம் ரக்அத் முடித்த பின்னர் நான்காம் ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி எழ வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப் போல் நான்காம் ரக்அத்துக்கு எழும் போது கைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் செய்ததைப் போன்றே அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.

நான்காம் ரக்அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்த பின்னர் இருப்பில் அமர வேண்டும். இருப்பில் அமரும் போது மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து, இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைக்க வேண்டும். இதற்குரிய ஆதாரங்களை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம்.

பின்னர் முதல் இருப்பில் ஓதிய அத்தஹிய்யாத், ஸலவாத் ஆகியவற்றை ஓத வேண்டும். அத்துடன் பின் வரும் துஆக்களையும் ஓத வேண்டும்.

இருப்பில் ஓதும் துஆக்கள்

صحيح مسلم

أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ «

اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

‘அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால். பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 924

‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஓதுவதற்குரிய ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று நான் கேட்டேன்.

صحيح البخاري

834 –  اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ ”

‘அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்.

(பொருள்: இறைவா! எனக்கே நான் அதிகம் அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்) என்று கூறுவீராக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி)

நூல்: புகாரீ 834

அத்தஹிய்யாத் ஓதிய பின்னரோ, அல்லது மேற்கூறிய துஆக்கள் ஓதி முடித்த பின்னரோ நமக்கு ஏற்படும் தேவைகளை நமது தாய் மொழியிலேயே கேட்டு துஆச் செய்யலாம்.

صحيح البخاري

835 -ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو ”

(அத்தஹிய்யாத் ஓதிய பின்னர்) உங்களுக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் துஆச் செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரீ 835

ஸலாம் கூறி முடித்தல்

இதன் பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும்.

سنن النسائي

1142 – أوَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ

வலது புறமும், இடது புறமும் திரும்பி ‘அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்  : நஸாயீ

صحيح مسلم

كُنْتُ أَرَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ يَسَارِهِ، حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களது கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன்.

அறிவிப்பவர்: ஸஅது (ரலி)

நூல்: முஸ்லிம் 916

நிதானமாகச் செய்தல்

தொழுகையில் மேற்கூறிய காரியங்கள் அனைத்தையும் நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. அவ்வாறு அவசரமாகத் தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

صحيح البخاري

757 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ المَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ وَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى، ثُمَّ جَاءَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ» ثَلاَثًا، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ، فَعَلِّمْنِي، فَقَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ القُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘திரும்பிச் சென்று நீர் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போலவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பிச் சென்று தொழுவீராக நீர் தொழவே இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக! இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார்.

‘நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் நிதானமாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து நேராக நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே தொழுகை முழுவதும் செய்வீராக!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 757

தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்

அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)

صحيح البخاري

842 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ: أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّكْبِيرِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 842

صحيح مسلم

135 – (591) حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ أَبِي عَمَّارٍ، اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ: «اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர்,

(அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும்

اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம்

(பொருள்: இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்!) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் 931

صحيح البخاري

844 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: أَمْلَى عَلَيَّ المُغِيرَةُ بْنُ شُعْبَةَ فِي كِتَابٍ إِلَى مُعَاوِيَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ مَكْتُوبَةٍ: «

لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)

நூல்: புகாரீ 844

صحيح البخاري

6370 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنِي غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ يَأْمُرُ بِهَؤُلاَءِ الخَمْسِ: وَيُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ

‘அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ர்.

(பொருள்: இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் (ரலி)

நூல்: புகாரீ 6370

مسند أحمد

اللهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்

(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: அஹ்மத்

صحيح مسلم

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، لَا إِلَهَ إِلَّا اللهُ، وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ، وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لَا إِلَهَ إِلَّا اللهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன். நல்லவற்றைச் செய்வதற்கோ, தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன) என ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

நூல்: முஸ்லிம் 935

صحيح مسلم

146 – (597) حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِي عُبَيْدٍ الْمَذْحِجِيِّ – قَالَ مُسْلِمٌ: أَبُو عُبَيْدٍ مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ – عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَبَّحَ اللهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، فَتْلِكَ تِسْعَةٌ وَتِسْعُونَ، وَقَالَ: تَمَامَ الْمِائَةِ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ ”

‘யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு 100 வதாக

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்)

எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 939

ஸஜ்தா ஸஹ்வு

தொழுகையில் ஏற்படும் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும்.

முதல் இருப்பை விட்டு விட்டால்….

صحيح البخاري

829 – «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمُ الظَّهْرَ، فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلاَةَ وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ كَبَّرَ وَهُوَ جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ، ثُمَّ سَلَّمَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி)

நூல்: புகாரீ 829

ரக்அத்தை அதிகமாக்கினால்….

صحيح البخاري

1226 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ خَمْسًا، فَقِيلَ لَهُ: أَزِيدَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «وَمَا ذَاكَ؟» قَالَ: صَلَّيْتَ خَمْسًا، فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ

(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்துகள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் ‘தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். ‘நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்’ என்று ஒருவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரீ 1226

ரக்அத்தைக் குறைத்து விட்டால்….

صحيح البخاري

482 – حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلاَتَيِ العَشِيِّ – قَالَ ابْنُ سِيرِينَ: سَمَّاهَا أَبُو هُرَيْرَةَ وَلَكِنْ نَسِيتُ أَنَا – قَالَ: فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي المَسْجِدِ، فَاتَّكَأَ عَلَيْهَا كَأَنَّهُ غَضْبَانُ، وَوَضَعَ يَدَهُ اليُمْنَى عَلَى اليُسْرَى، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ، وَوَضَعَ خَدَّهُ الأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ اليُسْرَى، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ المَسْجِدِ، فَقَالُوا: قَصُرَتِ الصَّلاَةُ؟ وَفِي القَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَفِي القَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ، يُقَالُ لَهُ: ذُو اليَدَيْنِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ؟ قَالَ: «لَمْ أَنْسَ وَلَمْ تُقْصَرْ» فَقَالَ: «أَكَمَا يَقُولُ ذُو اليَدَيْنِ» فَقَالُوا: نَعَمْ، فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، فَرُبَّمَا سَأَلُوهُ: ثُمَّ سَلَّمَ؟ فَيَقُولُ: نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ: ثُمَّ سَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒரு தொழுகையை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக் கொண்டார்கள். தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசரக்காரர்கள் பள்ளியில் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு ‘தொழுகை குறைக்கப்பட்டு விட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர் இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?’ என்று கேட்டார். ‘குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) ‘துல்யதைன் கூறுவது சரி தானா?’ என்று கேட்க, மக்கள் ஆம் என்றனர். தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 482

ரக்அத் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால்

صحيح مسلم

88 – (571) وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا، فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ، فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعْنَ لَهُ صَلَاتَهُ، وَإِنْ كَانَ صَلَّى إِتْمَامًا لِأَرْبَعٍ كَانَتَا تَرْغِيمًا لِلشَّيْطَانِ»

தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகம் ஏற்பட்டால் குறைந்ததை, அதாவது மூன்று தான் தொழுதுள்ளோம் என்று கணக்கிட்டு மேலும் ஒரு ரக்அத் தொழ வேண்டும். மேலும் இதற்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.

‘உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா?’ என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் 990

களாத் தொழுகை

ஐவேளைத் தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்து விடவேண்டும். அதைப் பிற்படுத்துவது கூடாது. கடமையான தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல், அந்தத் தொழுகையின் நேரம் முடிந்த பின் தொழலாம் என்று சிலர் கருதுகின்றனர். இதைக் களாத் தொழுகை என்றும் குறிப்பிடுகின்றனர். இது தவறாகும்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

திருக்குர்ஆன் 4:103

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஐவேளைத் தொழுகையின் ஆரம்ப நேரம் மற்றும் இறுதி நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த நேரங்களில் தொழுகைகளை முடித்துவிட வேண்டும்.

ஒருவர் மறந்து தொழாமல் இருந்து விட்டால் அவர் நினைவு வந்ததும் தொழுது விடவேண்டும். உறங்கி விட்டால் விழித்ததும் தொழ வேண்டும். இது தான் அதற்குரிய பரிகாரம்.

صحيح البخاري

597 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي} [طه: 14]

‘யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர வேறு பரிகாரம் எதுவுமில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 597

மறதி, தூக்கம் இந்த இரண்டைத் தவிர வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லை. அவ்வாறு தொழுகையை விட்டவர் வல்ல அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு, திருந்திக் கொள்வதே வழியாகும்.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நரகத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 19:59,60

இந்த வசனத்தில் பிற்காலத்தில் வரும் சிலரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவர்கள் தொழுகையைத் தொழாமல் இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றான். இவர்களுக்கு மன்னிப்புக் கிடைக்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டுமென கட்டளையிடும் இறைவன், விட்ட தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கட்டளையிடவில்லை. எனவே தூக்கம், மறதி அல்லாத வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விட்டவர் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு விட்டு, இனி வரும் காலங்களில் தொழுகையை விடாமல் தொழ முயற்சிக்க வேண்டும்.

கூட்டுத் தொழுகை (ஜமாஅத் தொழுகை)

கடமையான ஐவேளைத் தொழுகையை ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தான் தொழ வேண்டும்.

صحيح البخاري

645 – صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»

‘தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 645

ஜமாஅத் தொழுகையின் ஒழுங்குகள்

ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர்களும், பெரியவர்களும், அதற்கடுத்து சிறியவர்களும், கடைசி வரிசையில் பெண்களும் நிற்க வேண்டும்.

صحيح البخاري

380 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

என் பாட்டி முளைக்கா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டுப் பின்னர் ‘எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள். பயன்படுத்தப்பட்டதால் கருத்துப் போய் விட்ட எங்களுடைய ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வசிக்கும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முளைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுகை நடத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 380

‘உங்களில் பருவம் அடைந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் 739

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்குக் கூடுதல் நன்மை உண்டு.

صحيح البخاري

615 – لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»

‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும், (தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதன் நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கி எடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 615

வரிசையில் இடைவெளியின்றி நெருக்கமாக இருக்க வேண்டும்

صحيح البخاري

723 – سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ»

வரிசையை நேராக்குங்கள்! ஏனெனில் வரிசைகளை நேராக்குவது தொழுகையை நிலை நாட்டுதலில் உள்ளதாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 723

صحيح البخاري

717 – لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ»

‘உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரீ 717

இருவர் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழும் போது

இருவர் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழும் போது இமாமும் பின்பற்றித் தொழுபவரும் முன் பின்னாக நிற்காமல் சேர்ந்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இமாமின் வலப்புறம் நிற்க வேண்டும்.

صحيح البخاري

728 – عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «قُمْتُ لَيْلَةً أُصَلِّي عَنْ يَسَارِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي – أَوْ بِعَضُدِي – حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، وَقَالَ بِيَدِهِ مِنْ وَرَائِي»

ஒரு இரவு நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக எனது கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 728

ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது நிதானமாக வருதல்

ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது தொழுகையில் சேர வேண்டும் என்பதற்காக அவசப்பட்டு ஓடி வரக்கூடாது. நிதானமாகவே வர வேண்டும்.

صحيح البخاري

636 – إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ، فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالوَقَارِ، وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا

‘இகாமத் சொல்வதை நீங்கள் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியான, கண்ணியமான முறையிலும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 636

கடமையான தொழுகையை நிறைவேற்றியவர் பள்ளிக்கு வந்தால்

سنن الترمذي

219 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ قَالَ: حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ، فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الخَيْفِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ انْحَرَفَ فَإِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي أُخْرَى القَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ، فَقَالَ: «عَلَيَّ بِهِمَا»، فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا»، فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ»

பள்ளியில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் அங்கு வந்தால் அத்தொழுகையை வேறு இடத்தில் நிறைவேற்றியிருந்தாலும் அந்த ஜமாஅத்துடன் சேர்ந்து மீண்டும் தொழ வேண்டும்.

ஆதாரம் : திர்மிதீ

இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகை இல்லை

கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையைத் தொழக் கூடாது.

صحيح مسلم

إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ

‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1160

இமாமின் தகுதிகள்

ஜமாஅத் தொழுகையில், தொழுகை நடத்துபவர் திருக்குர்ஆனை நன்றாக ஓதக் தெரிந்தவராகவும் தொழுகையின் சட்டங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுள்ளவராகத் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

صحيح مسلم

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً، فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ سِلْمًا، وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ، وَلَا يَقْعُدْ فِي بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ» قَالَ الْأَشَجُّ فِي رِوَايَتِهِ: مَكَانَ سِلْمًا سِنًّا،

‘அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். மக்கள் அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபி வழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் (தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அனுமதியின்றி அமர வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1192

சுருக்கமாகத் தொழுவித்தல்

இமாமாக இருப்பவர் தொழுவிக்கும் போது பின்பற்றித் தொழுபவரின் நிலையைக் கவனத்தில் கொண்டு தொழுகையைச் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

صحيح البخاري

702 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: سَمِعْتُ قَيْسًا، قَالَ: أَخْبَرَنِي أَبُو مَسْعُودٍ، أَنَّ رَجُلًا، قَالَ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ: «إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالكَبِيرَ وَذَا الحَاجَةِ»

‘அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்திற்குச் செல்வதில்லை’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். ‘(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கின்றனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)

நூல்: புகாரீ 702

பின்பற்றித் தொழுபவர் பேண வேண்டியவை

இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும்; வேறு எதையும் ஓதக் கூடாது.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 7:204

صحيح مسلم

وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا

‘இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 612

இமாமை முந்தக் கூடாது

இமாமைப் பின்பற்றித் தொழுபவர், தொழுகையின் எந்தச் செயலையும் இமாமை விட முந்திச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.

صحيح البخاري

688 – إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»

‘இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 688

صحيح البخاري

691 – حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَمَا يَخْشَى أَحَدُكُمْ – أَوْ: لاَ يَخْشَى أَحَدُكُمْ – إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ، أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ، أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ ”

‘உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் (மறுமையில்) அவருடைய தலையை கழுதையின் தலையாகவோ, அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 691

தாமதமாக வந்தால்

ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.

صحيح البخاري

636 -عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ، فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالوَقَارِ، وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»

‘நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 636

தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.

سنن الترمذي

3 – عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»

‘தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல் : திர்மிதீ

ரக்அத்தை அடைவது

ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் தொழுகையில் ருகூஃவிலிருந்து  நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம்.

இக்கருத்தில் பலவீனமான நபிமொழிகள் இருந்தாலும் பின்வரும் நபிமொழி ஆதாரப்பூர்வமானதாகும்.

صحيح البخاري

783 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنِ الأَعْلَمِ وَهُوَ زِيَادٌ، عَنِ الحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ»

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது நான் வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 783

இந்தச் செய்தியில் ருகூவை அடைந்தால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம் என்ற கருத்து அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூஃவில் இருக்கிறார்கள். அப்போது, அபூ பக்ரா (ரலி) அவர்கள் வேகமாக வந்து வரிசையில் இணைவதற்கு முன்பாகவே ருகூஃவு செய்துவிட்டு பின்பு வரிசையில் வந்து இணைந்திருக்கிறார்.

ருகூஃவில் இணைந்து விட்டால் ரக்அத் கிடைத்துவிடும் என்பதால் தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர் வேகமாக ஓடி வந்ததைத் தான் இவ்வாறு இனிமேல் செய்யாதே என்று சொல்கின்றார்கள்.

மேலும், ருகூஃவில் இணைந்த அவருக்கு ரக்அத் தவறியிருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ரக்அத்தை எழுந்து தொழக் கட்டளையிட்டிருப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.

அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் கூறியதிலிருந்து அவர் ரக்அத்தை அடைவதற்காக வேகமாக வருகிற ஆர்வத்தைப் பற்றித் தான் இந்தச் செய்தி பேசுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

ருகூவை அடைந்தால் அந்த ரக்அத் நமக்குக் கிடைத்துவிடும் என்பது இந்தச் செய்தியிலிருந்து தெளிவாகிறது.

இமாமின் தவறைச் சுட்டிக் காட்டுதல்

தொழுகையில் இமாம் ஏதேனும் தவறு செய்து விட்டால் ஆண்கள் ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறுவதன் மூலமும், பெண்கள் கை தட்டுதல் மூலமும் சுட்டிக் காட்ட வேண்டும்.

صحيح البخاري

1203 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ»

‘(தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 1203

குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால்

இமாமிற்கு திருக்குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால் பின்னால் தொழுபவர் அதைத் திருத்திக் கொடுக்க வேண்டும்.

سنن أبي داود

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” صَلَّى صَلَاةً، فَقَرَأَ فِيهَا فَلُبِسَ عَلَيْهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ لِأُبَيٍّ: «أَصَلَّيْتَ مَعَنَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا مَنَعَكَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் ஓதினார்கள். அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. தொழுகை முடித்தவுடன் உபை (ரலி) அவர்களிடம், ‘நம்முடன் நீர் தொழுதீரா?’ என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்போது ‘(தவறைத் திருத்திக் கொடுப்பதற்கு) உம்மைத் தடுத்தது எது?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வினவினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத்

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பள்ளிவாசலில் ஆண்கள் ஜமாஅத்துடன் தொழுவது போல் பெண்களும் பள்ளிக்கு வந்து தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

صحيح البخاري

5238 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ إِلَى المَسْجِدِ فَلاَ يَمْنَعْهَا»

‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரீ 5238

صحيح البخاري

578 – أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، قَالَتْ: «كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ»

முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 578

صحيح البخاري

707 – عَنْ أَبِيهِ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ»

‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரீ 707

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது கட்டாயமில்லை. அனுமதிக்கப்பட்டது தான்.

ஆயினும் அவர்கள் தமது வீடுகளிலே தொழுது கொள்வது தான் சிறந்தது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

سنن أبي داود

567 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْعَوَّامُ بْنُ حَوْشَبٍ، حَدَّثَنِي حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ، وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ»

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகள் தான் அவர்களுக்குச் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவூத்

பெண்கள் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.

صحيح مسلم

143 – (444) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي فَرْوَةَ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ»

‘நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 675

நோயாளியின் தொழுகை

சிலர் உடல் நலக் குறைவால் குறிப்பிட்ட முறையில் தொழ முடியாமல் போகலாம். அவர்களுக்கு இஸ்லாம் சில சலுகைகளைத் தந்துள்ளது. நின்று தொழ முடியாதவர் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாதவர் படுத்தும் தொழலாம்.

صحيح البخاري

1117 – عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»

எனக்கு மூல நோய் இருந்தது. ‘எவ்வாறு தொழுவது?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரீ 1117

சுன்னத் தொழுகைகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த, கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும்.

முன் பின் சுன்னத்துகள்

கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள்.

கடமையல்லாத, உபரியான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்தது.

صحيح البخاري

731 – فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ المَرْءِ فِي بَيْتِهِ إِلَّا المَكْتُوبَةَ»

‘கடமையான தொழுகையைத் தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல் : புகாரீ 731

பஜ்ருடைய சுன்னத்

முன் பின் சுன்னத்துக்களில் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

صحيح البخاري

1169 – عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ لَمْ يَكُنْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنْ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيْ الْفَجْرِ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 1163

சுப்ஹுத் தொழுகை தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகையையும் தொழக் கூடாது. ஆனால் ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் இருந்தால் அதைத் தொழுவதற்கு அனுமதி உள்ளது.

صحيح البخاري

581 – أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ

சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல் : புகாரீ 581

ஃபஜ்ருடைய ஜமாஅத் நடக்கும் போது பள்ளிக்கு வருபவர் முன் சுன்னத்தைத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்துடன் சேர்ந்து ஃபஜ்ரு தொழும் வழக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் இது தவறாகும். ஏனெனில் இகாமத் சொல்லப்பட்ட பிறகு வேறு தொழுகைகள் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

صحيح مسلم

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»

‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1160

லுஹருடைய சுன்னத்

லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழலாம்.

صحيح البخاري

937 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரீ 937

صحيح البخاري

1182 – عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الغَدَاةِ»

‘லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1182

அஸருடைய சுன்னத்

அஸருடைய முன் சுன்னத் நான்கு ரக்அத்களாகும்.

سنن الترمذي

429 – عَنْ عَلِيٍّ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلَائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: திர்மிதீ

மஃரிபுடைய சுன்னத்

மஃரிப் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள், பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.

صحيح البخاري

1183 – عَبْدُ اللَّهِ المُزَنِيُّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلُّوا قَبْلَ صَلاَةِ المَغْرِبِ»، قَالَ: «فِي الثَّالِثَةِ لِمَنْ شَاءَ كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً»

‘மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை ‘விரும்பியவர் தொழட்டும்’ என்றார்கள்.

நூல்: புகாரீ 1183

صحيح البخاري

937 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் வீட்டில் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 937

இஷாவுடைய சுன்னத்

இஷாத் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் ஆகும். இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.

صحيح البخاري

624 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ المُزَنِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، ثَلاَثًا لِمَنْ شَاءَ»

‘ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு’ என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) ‘விரும்பியவர்கள் தொழலாம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : புகாரீ 624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று கூறியுள்ளார்கள். ஆனால் எத்தனை ரக்அத்கள் என்று தெளிவுபடுத்தவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டும், நான்கும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் அடிப்படையில் நாம் இஷாவுடைய முன் சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம்.

صحيح البخاري

937 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 937

லுஹா தொழுகை

முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம்.

இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை.

முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி ஒரு ஹதீஸ் (1237) இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளரில் இடம் பெற்றுள்ள அல்காஸிம் அஷ்ஷைபானீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

எனினும் லுஹா என்ற சொல்லின் பொருளிலிருந்து அதன் நேரத்தை நாம் அறிந்து கொள்ளலாம். லுஹா என்பதற்கு முற்பகல் என்று பொருள். எனவே இத்தொழுகையை முற்பகலில் (அதாவது சூரியன் உதித்தது முதல் உச்சிக்கு வருவது வரை) தொழ வேண்டும் என்று முடிவு செய்யலாம்.

 லுஹா இரண்டு ரக்அத்கள்

صحيح البخاري

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلاَثٍ: «صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيِ الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ»

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகையைத் தொழுமாறும் ஆகிய இம்மூன்று விஷயங்களை என் தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 1981

லுஹா நான்கு ரக்அத்கள்

سنن الترمذي

475 – عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «ابْنَ آدَمَ ارْكَعْ لِي أَرْبَعَ رَكَعَاتٍ مِنْ أَوَّلِ النَّهَارِ أَكْفِكَ آخِرَهُ»

‘ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள் தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப்பேற்கிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: திர்மிதீ

லுஹா எட்டு ரக்அத்துகள்

‘صحيح البخاري

1103 – حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ: مَا أَخْبَرَنَا أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  صَلَّى الضُّحَى غَيْرُ أُمِّ هَانِئٍ ذَكَرَتْ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ اغْتَسَلَ فِي بَيْتِهَا، فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، فَمَا رَأَيْتُهُ صَلَّى صَلاَةً أَخَفَّ مِنْهَا غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானி குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா

நூல்: புகாரீ 1103

ஜுமுஆத் தொழுகை

வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும்.

நேரம்

ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري

904 – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ»

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 904

صحيح البخاري

4168 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى المُحَارِبِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الجُمُعَةَ ثُمَّ نَنْصَرِفُ، وَلَيْسَ لِلْحِيطَانِ ظِلٌّ نَسْتَظِلُّ فِيهِ»

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.

அறிவிப்பவர்: ஸலமா (ரலி)

நூல்: புகாரீ 4168

صحيح البخاري

940 – عَنْ حُمَيْدٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: «كُنَّا نُبَكِّرُ إِلَى الجُمُعَةِ، ثُمَّ نَقِيلُ»

ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 940

صحيح البخاري

عَنْ سَهْلٍ، بِهَذَا، وَقَالَ: «مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلَّا بَعْدَ الجُمُعَةِ»

ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல் : புகாரீ 939

ஜுமுஆக்குக் குளிப்பது

ஜுமுஆத் தொழுகைக்காக வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமையாகும். தலைக்கு எண்ணெய் மற்றும் நறுமணமும் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டும்.

صحيح البخاري

894 -: «مَنْ جَاءَ مِنْكُمُ الجُمُعَةَ فَلْيَغْتَسِلْ»

‘உங்களில் எவரும் ஜுமுஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 894

صحيح البخاري

895 – عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»

ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரீ 895

குத்பாவிற்கு முன்பே வருதல்

ஜும்ஆவில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் பள்ளிக்கு வர வேண்டும்

صحيح البخاري

929 – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ يَوْمُ الجُمُعَةِ وَقَفَتِ المَلاَئِكَةُ عَلَى بَابِ المَسْجِدِ يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، وَمَثَلُ المُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً، ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً، ثُمَّ كَبْشًا، ثُمَّ دَجَاجَةً، ثُمَّ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ، وَيَسْتَمِعُونَ الذِّكْرَ».

‘ஜுமுஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும், அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 929

வியாபாரத்தை விட்டு விடுதல்

ஜுமுஆ நாள் அன்று தொழுகை நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது. பாங்கு சொல்லப்பட்டு விட்டால் உடனடியாகத் தொழுகைக்கு விரைய வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.

திருக்குர்ஆன் 62:9

ஜுமுஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

صحيح مسلم

عَنْ أُخْتٍ لِعَمْرَةَ، قَالَتْ: «أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِي كُلِّ جُمُعَةٍ».

காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)

நூல்: முஸ்லிம் 1442

ஜுமுஆத் தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்

سنن أبي داود

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً: عَبْدٌ مَمْلُوكٌ، أَوِ امْرَأَةٌ، أَوْ صَبِيٌّ، أَوْ مَرِيضٌ

‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல்: அபூதாவூத்

ஜுமுஆ பாங்கு

ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.

صحيح البخاري

916 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ: «إِنَّ الأَذَانَ يَوْمَ الجُمُعَةِ كَانَ أَوَّلُهُ حِينَ يَجْلِسُ الإِمَامُ، يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَلَمَّا كَانَ فِي خِلاَفَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَثُرُوا، أَمَرَ عُثْمَانُ يَوْمَ الجُمُعَةِ بِالأَذَانِ الثَّالِثِ، فَأُذِّنَ بِهِ عَلَى الزَّوْرَاءِ، فَثَبَتَ الأَمْرُ عَلَى ذَلِكَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 916

எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை கடை வீதியில் அறிவிப்பு செய்தார்கள் என்பதே சரியானதாகும்.

ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கை ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்.

குத்பாவின் போது பேசக் கூடாது

ஜுமுஆத் தொழுகையில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பேசக் கூடாது.

صحيح البخاري

934 – أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الجُمُعَةِ: أَنْصِتْ، وَالإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ ”

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு’ என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 934

ஓத வேண்டிய சூராக்கள்

صحيح مسلم

فَصَلَّى لَنَا أَبُو هُرَيْرَةَ الْجُمُعَةَ، فَقَرَأَ بَعْدَ سُورَةِ الْجُمُعَةِ، فِي الرَّكْعَةِ الْآخِرَةِ: إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ، قَالَ: فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ حِينَ انْصَرَفَ، فَقُلْتُ لَهُ: إِنَّكَ قَرَأْتَ بِسُورَتَيْنِ كَانَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ».

ஜும்ஆ அத்தியாயத்தையும், முனாபிகூன் அத்தியாயத்தையும் ஓதி அபூ ஹுரைரா (ரலி) எங்களுக்குத் தொழுவித்தார்கள். நபிகள் நாயகம் இவ்வாறு ஓதித் தொழுவித்ததை நான் செவியுற்றுள்ளேன் எனவும் கூறினார்கள்.

நூல் முஸ்லிம்

صحيح مسلم

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ، وَفِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»، قَالَ: «وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ، فِي يَوْمٍ وَاحِدٍ، يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلَاتَيْنِ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளிலும், ஜும்ஆவிலும் சப்பிஹிஸ்ம ரப்பிக, ஹல் அதாக ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர்.

நூல் : முஸ்லிம்

ஜுமுஆவுடைய சுன்னத்

ஜுமுஆத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் பயான் செய்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட வேண்டும்.

صحيح البخاري

931 – دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ أَصَلَّيْتَ قَالَ لَا قَالَ قُمْ فَصَلِّ رَكْعَتَيْنِ

ஜுமுஆ நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். ‘(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரீ 931

صحيح مسلم

يَا سُلَيْكُ قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ، وَتَجَوَّزْ فِيهِمَا»

முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக ‘அந்த இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழு!’ என்று இடம் பெற்றுள்ளது.

صحيح البخاري

937 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்குப் பின்னர் (வீட்டிற்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 937

صحيح مسلم

67 – قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا»

‘உங்களில் ஒருவர் ஜுமுஆத் தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1457

பயணத் தொழுகை

கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகவும் சுருக்கித் தொழலாம்.

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும், நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்.

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

صحيح مسلم

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ الشَّاكُّ – صَلَّى رَكْعَتَيْنِ»

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் 1116

மூன்று மைல் தொலைவு பயணம் செய்தால் கஸர் சலுகை உண்டா? அல்லது ஒன்பது மைல் தொலைவு பயணம் செய்தால் கஸர் சலுகை உண்டா? சந்தேகத்துடன் அறிவிப்பாளர் இதைக் கூறுவதால் இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இதை நாம் ஆய்வு செய்து இரண்டில் எது சரியானது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

காலத்தைக் குறித்தோ, அளவைக் குறித்தோ குறிப்பிடும் போது இதையோ, அதையோ கூறினார்கள் என்று அறிவிப்பாளர் கூறினால் அந்தச் சந்தேகத்தைப் போக்கி உறுதியாக ஒரு அளவைக் குறிப்பிடும் ஹதீஸ் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு கிடைத்தால் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு சந்தேகத்துடன் அறிவிக்கப்படும் செய்தியை விட்டுவிட வேண்டும். அவ்வாறு கிடைக்காவிட்டால் இரு அளவுகளில் எது உறுதியானதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது போல் ஒன்பது மைல் தொலைவில் கஸர் செய்தது உறுதியானது. மூன்று மைலில் கஸர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மூன்று ஃபர்ஸக் என்பதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.

ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

صحيح البخاري

1089 – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «صَلَّيْتُ الظُّهْرَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»

‘மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா புறப்பட்டார்கள். (இடையில் உள்ள ஊரான) துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.’

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1089

பயணத்தில் இருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.

விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.

அதே போல் மஃரிப் தொழுகையையும் ,இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம்.

அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்.

அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர், இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்தாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாவும் தொழ வேண்டும்.

صحيح مسلم

فَتَوَضَّأَ ثُمَّ رَكِبَ، ثُمَّ أَتَى الْمُزْدَلِفَةَ فَجَمَعَ بِهَا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்து தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம்

صحيح البخاري

1111 – كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ العَصْرِ، ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا، وَإِذَا زَاغَتْ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ»

சூரியன் சாய்வதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1111

صحيح البخاري

1091 – ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ المَغْرِبَ، حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ العِشَاءِ» قَالَ سَالِمٌ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ ”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 1091

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழும் போது இரண்டு தொழுகைக்கும் சேர்த்து ஒரு பாங்கு சொல்ல வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக இகாமத் சொல்லியோ, அல்லது இரண்டு தொழுகைக்கும் ஒரேயொரு இகாமத் மட்டும் சொல்லியோ தொழலாம்.

صحيح مسلم

حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ، فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ، وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا شَيْئًا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும், இஷாவையும் ஒரு பாங்கு இரண்டு இகாமத் சொல்லி தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

صحيح مسلم

«جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ لَيْسَ بَيْنَهُمَا سَجْدَةٌ، وَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ، وَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2268

சுருக்கித் தொழுவது கட்டாயம் இல்லை

பயணியாக இருப்பவர் தொழுகையைச் சுருக்கித் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பினால் முழுமையாகவும் தொழலாம்.

سنن النسائي

عَنْ عَائِشَةَ، أَنَّهَا اعْتَمَرَتْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ حَتَّى إِذَا قَدِمَتْ مَكَّةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، بَأَبِي أَنْتَ وَأُمِّي قَصَرْتَ، وَأَتْمَمْتُ، وَأَفْطَرْتَ، وَصُمْتُ، قَالَ: «أَحْسَنْتِ يَا عَائِشَةُ»، وَمَا عَابَ عَلَيَّ

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்’ என்று நான் கேட்ட போது ‘ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!’ என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ

எத்தனை நாட்கள்

ஒருவர் பயணத்தில் இருக்கிறார் என்பதற்கு இரு கருத்துக்கள் கொடுக்கலாம்.

பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கருத்து கொடுக்கலாம்.

பயணம் செய்து வெளியூரில் சில நாட்கள் தங்கினாலும் பயணம் என்று கருத்து கொடுக்கலாம்.

இந்த இரண்டாவது கருத்து தான் சரியானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்கான பயணம் செய்யும் போது போகும் வழியில் மட்டுமில்லாமல் சில நாட்கள் மக்காவில் தங்கிய போதும் கஸர் செய்துள்ளார்கள். சொந்த ஊருக்கு திரும்பும் வரை உள்ள காலம் பயணமாக கருதப்படும்.

صحيح البخاري

4298 – حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ تِسْعَةَ عَشَرَ يَوْمًا يُصَلِّي رَكْعَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பத்தொன்பது நாட்கள் தங்கிய போது இரண்டுரக் அத்களாக தொழுதார்கள்.

நூல்; புகாரி

ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை.

சொந்த ஊரைவிட்டு வெளியூரில் எவ்வளவு காலம் தங்கினாலும் அவருக்கு இச்சலுகை உண்டு.

உள்ளூரில் ஜம்வு செய்தல்

ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.

صحيح البخاري

543 – عَنِ ابْنِ عَبَّاسٍ: ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا: الظُّهْرَ وَالعَصْرَ وَالمَغْرِبَ وَالعِشَاءَ “، فَقَالَ أَيُّوبُ: لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ، قَالَ: عَسَى

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும், மஃரிபையும், இஷாவையும் ஏழு, எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 543

صحيح مسلم

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1267

இஸ்திகாரா தொழுகை

நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் கீழ்க்காணும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள துஆவை ஓத வேண்டும்.

صحيح البخاري

1162 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي

قَالَ وَيُسَمِّي حَاجَتَهُ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

‘உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர்,

அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பிஇல்மி(க்)க லஅஸ்தக்திரு(க்)க பிகுத்ரதி(க்)க வஅஸ்அலு(க்)க மின் ஃபழ்லி(க்)கல் அளீம். ஃப இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வதஃலமு வலா அஃலமு வஅன்(த்)த அல்லாமுல் குயூப். அல்லாஹும்ம இன்குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைரு(ன்)ல் லீ ஃபீதீனீ வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ ஃபக்துர்ஹுலீ வயஸ்ஸிர்ஹுலீ ஸும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன்குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ரு(ன்)ல்லீ ஃபீதீனீ வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ழினீ பிஹி’

(பொருள்: இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன் மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன். நான் ஆற்றலுள்ளவன் அல்லன். நீஅனைத்தையும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவானவற்றையும் நீ அறிபவன். இறைவா! எனது இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது மறுமைக்கும் சிறந்தது என நீ கருதினால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் விருத்தி செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் கெட்டது என நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு! எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றுக்கு ஆற்றலைத் தா! பின்னர் அதில் எனக்கு திருப்தியைத் தா!)

என்று கூறட்டும். தனது தேவையையும் குறிப்பிடட்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரீ 1162

மழைத் தொழுகை

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

* சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்.

* மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* திடலில் தொழ வேண்டும்.

* இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

* அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.

* முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும்.

* தொழுத பின்னர் இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் இறைவனைப் பெருமைப்படுத்தல், பாவமன்னிப்புத் தேடல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகயும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

* இரு கைகளையும் மற்ற துஆக்களில் உயர்த்துவதைப் போன்று அல்லாமல் புறங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு கைகளைக் கவிழ்த்து உயர்த்த வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

صحيح البخاري

1012 – عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى المُصَلَّى فَاسْتَسْقَى فَاسْتَقْبَلَ القِبْلَةَ، وَقَلَبَ رِدَاءَهُ، وَصَلَّى رَكْعَتَيْنِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரீ 1012

صحيح البخاري

1024 – خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي، فَتَوَجَّهَ إِلَى القِبْلَةِ يَدْعُو وَحَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالقِرَاءَةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 1024

صحيح مسلم

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى، فَأَشَارَ بِظَهْرِ كَفَّيْهِ إِلَى السَّمَاءِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1632

سنن الترمذي

558 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَاقَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَرْسَلَنِي الوَلِيدُ بْنُ عُقْبَةَ وَهُوَ أَمِيرُ المَدِينَةِ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ عَنْ اسْتِسْقَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَأَتَيْتُهُ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مُتَبَذِّلًا مُتَوَاضِعًا مُتَضَرِّعًا، حَتَّى أَتَى المُصَلَّى، فَلَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ، وَلَكِنْ لَمْ يَزَلْ فِي الدُّعَاءِ وَالتَّضَرُّعِ وَالتَّكْبِيرِ، وَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا كَانَ يُصَلِّي فِي العِيدِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ

இந்த ஹதீஸில் ‘பெருநாள் தொழுகையைப் போல் தொழுவித்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகையைப் போல் என்று வர்ணிப்பது பெருநாள் தொழுகையில் கூறப்படும் கூடுதல் தக்பீர்களைத் தான். எனவே பெருநாள் தொழுகையில் கூறுவதைப் போல் முதல் ரக்அத்தில் 7 கூடுதல் தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 கூடுதல் தக்பீர்களும் சொல்ல வேண்டும்.

سنن أبي داود

1169 – حَدَّثَنَا ابْنُ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ يَزِيدَ الْفَقِيرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَوَاكِي، فَقَالَ:

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا، مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ

قَالَ: فَأَطْبَقَتْ عَلَيْهِمُ السَّمَاءُ

மழைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا، مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.

(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 988

صحيح البخاري

اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا

அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா

(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!) அறிவிப்பவர்: அனஸ் (ரலி

நூல்: புகாரீ 1013

 கிரகணத் தொழுகை

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

* கிரகணம் ஏற்படும் போது இன்னஸ்ஸலாத்த ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.

* பள்ளியில் தொழ வேண்டும்

* இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

* இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும் 8 ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்

* நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்

* கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

صحيح البخاري

فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَافْزَعُوا إِلَى الصَّلاَةِ

‘நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1046

صحيح البخاري

إِنَّ الصَّلاَةَ جَامِعَةٌ،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது ‘இன்னஸ் ஸலாத்த ஜாமிஆ’ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரீ 1051

صحيح البخاري

خَسَفَتِ الشَّمْسُ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ إِلَى المَسْجِدِ، فَصَفَّ النَّاسُ وَرَاءَهُ فَكَبَّرَ فَاقْتَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِرَاءَةً طَوِيلَةً

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்…

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1046

صحيح البخاري

1065 – جَهَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلاَةِ الخُسُوفِ بِقِرَاءَتِهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1065

صحيح البخاري

1046 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا عَنْبَسَةُ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ إِلَى المَسْجِدِ، فَصَفَّ النَّاسُ وَرَاءَهُ، فَكَبَّرَ فَاقْتَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِرَاءَةً طَوِيلَةً، ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقَامَ وَلَمْ يَسْجُدْ، وَقَرَأَ قِرَاءَةً طَوِيلَةً هِيَ أَدْنَى مِنَ القِرَاءَةِ الأُولَى، ثُمَّ كَبَّرَ وَرَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ أَدْنَى مِنَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، ثُمَّ سَجَدَ، ثُمَّ قَالَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِثْلَ ذَلِكَ، فَاسْتَكْمَلَ أَرْبَعَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ، وَانْجَلَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَنْصَرِفَ، ثُمَّ قَامَ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ: «هُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَافْزَعُوا إِلَى الصَّلاَةِ» وَكَانَ يُحَدِّثُ كَثِيرُ بْنُ عَبَّاسٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ يُحَدِّثُ يَوْمَ خَسَفَتِ الشَّمْسُ، بِمِثْلِ حَدِيثِ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، فَقُلْتُ لِعُرْوَةَ: ” إِنَّ أَخَاكَ يَوْمَ خَسَفَتْ بِالْمَدِينَةِ لَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ مِثْلَ الصُّبْحِ؟ قَالَ: أَجَلْ، لِأَنَّهُ أَخْطَأَ السُّنَّةَ ”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் – முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் – ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள். பின்னர் ‘இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1046

صحيح مسلم

عَنْ عَائِشَةَ، أَنَّ الشَّمْسَ خَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ مُنَادِيًا: «الصَّلَاةُ جَامِعَةٌ»، فَاجْتَمَعُوا، وَتَقَدَّمَ فَكَبَّرَ، وَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ، وَأَرْبَعَ سَجَدَاتٍ

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1515

صحيح البخاري

1044 -فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَادْعُوا اللَّهَ، وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا»

‘கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1044

பெருநாள் தொழுகை

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

தொழுகை நேரம்

صحيح البخاري

956 – «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الفِطْرِ وَالأَضْحَى إِلَى المُصَلَّى، فَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلاَةُ،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரீ 956

صحيح البخاري

951 – إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا»

‘இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்’ என்று அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூல்: புகாரீ 951

பெருநாள் தினத்தில் முதல் காரியமாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன. பெருநாள் தொழுகையைத் தாமதப்படுத்தாமல் காலை நேரத்திலேயே தொழுது விட வேண்டும்.

திடலில் தொழுகை

இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். ‘மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்’ (புகாரீ 1190) என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

صحيح البخاري

956 – كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الفِطْرِ وَالأَضْحَى إِلَى المُصَلَّى،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரீ 956

 பெருநாள் தொழுகையில் பெண்கள்

பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

صحيح البخاري

351 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا»، وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ: حَدَّثَنَا عِمْرَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?’ என்றார். அதற்கு, ‘அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)

நூல்: புகாரீ 351

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்

பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.

صحيح البخاري

986 – «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ»

பெருநாள் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரீ 986,

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்

நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்ணாமல் புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாளில் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிலிருந்து) முதலில் சாப்பிடுவார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் சாப்பிட்டு விட்டுத் தான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்களிலும் நாம் காணமுடிகின்றது.

ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதை புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

صحيح البخاري

955 – حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الأَضْحَى بَعْدَ الصَّلاَةِ، فَقَالَ: «مَنْ صَلَّى صَلاَتَنَا، وَنَسَكَ نُسُكَنَا، فَقَدْ أَصَابَ النُّسُكَ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ، فَإِنَّهُ قَبْلَ الصَّلاَةِ وَلاَ نُسُكَ لَهُ»، فَقَالَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ خَالُ البَرَاءِ: يَا رَسُولَ اللَّهِ، فَإِنِّي نَسَكْتُ شَاتِي قَبْلَ الصَّلاَةِ، وَعَرَفْتُ أَنَّ اليَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ، وَأَحْبَبْتُ أَنْ تَكُونَ شَاتِي أَوَّلَ مَا يُذْبَحُ فِي بَيْتِي، فَذَبَحْتُ شَاتِي وَتَغَدَّيْتُ قَبْلَ أَنْ آتِيَ الصَّلاَةَ، قَالَ: «شَاتُكَ شَاةُ لَحْمٍ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّ عِنْدَنَا عَنَاقًا لَنَا جَذَعَةً هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْنِ، أَفَتَجْزِي عَنِّي؟ قَالَ: «نَعَمْ وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர் என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையத்தார்கள்.

அறிவிப்பவர்: பராஃ (ரலி)

நூல்: புகாரி 955

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொழுதுவிட்டு வந்து ஹஜ் பெருநாளில் சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுது விட்டு சாப்பிடலாம்.

சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கின்றார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.

முன் பின் சுன்னத்துகள் இல்லை

இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.

صحيح البخاري

1431 – خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 1431

பாங்கு இகாமத் இல்லை

இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.

صحيح مسلم

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَيْنِ، غَيْرَ مَرَّةٍ وَلَا مَرَّتَيْنِ، بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ»

இரு பெருநாள் தொழுகையை பாங்கும், இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1470

தொழும் முறை

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். தக்பீர் தஹ்ரீமாவுக்குப் பின்னர், முதல் ரக்அத்தில் அல்லாஹும்ம பாயித் பைனீ… அல்லது வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ… என்ற துஆவை ஓதி விட்டு, அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை இமாம் கூற வேண்டும்.

பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றிக் கூற வேண்டும்.

பின்னர் ஸூரத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூராக்கள் ஓதி ருகூவு, ஸஜ்தா மற்றும் மற்ற தொழுகையில் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.

பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.

பின்னர் மற்றத் தொழுகைகளைப் போல் ஸூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி, ருகூவு, ஸஜ்தா போன்ற அனைத்துக் காரியங்களையும் செய்து தொழுகையை முடிக்க வேண்டும். கூடுதல் தக்பீர் கூறும் போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துஆவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே கூடுதல் தக்பீர்களுக்கிடையில் எந்த துஆவும் ஓதக் கூடாது.

سنن أبي داود

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ الْأُولَى سَبْعًا، ثُمَّ يَقْرَأُ، ثُمَّ يُكَبِّرُ، ثُمَّ يَقُومُ فَيُكَبِّرُ أَرْبَعًا، ثُمَّ يَقْرَأُ، ثُمَّ يَرْكَعُ»،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: அபூதாவூத்

ஓத வேண்டிய சூராக்கள்

صحيح مسلم

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ، وَفِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.

நூல் : முஸ்லிம்

صحيح مسلم

كَانَ يَقْرَأُ فِيهِمَا بِ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ، وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ»

(இரு பெருநாள் தொழுகைகளில்) காஃப் (50வது) அத்தியாயத்தையும் ஸூரத்துல் கமர் (54வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.

நூல் : முஸ்லிம்

சுத்ரா (தடுப்பு)

இரு பெருநாள் தொழுகையிலும் திடலில் தொழும் போது இமாமிற்கு முன்னால் எதையாவது தடுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

صحيح البخاري

972 – عَنِ ابْنِ عُمَرَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ تُرْكَزُ الحَرْبَةُ قُدَّامَهُ يَوْمَ الفِطْرِ وَالنَّحْرِ، ثُمَّ يُصَلِّي»

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (தடுப்பாக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 972

صحيح البخاري

973 – عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْدُو إِلَى المُصَلَّى وَالعَنَزَةُ بَيْنَ يَدَيْهِ تُحْمَلُ، وَتُنْصَبُ بِالْمُصَلَّى بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பு கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டு, தொழுமிடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கித் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 973

மிம்பர் இல்லை

سنن أبي داود

1140 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِسْمَاعِيلَ  بْنِ رَجَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، ح وَعَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: أَخْرَجَ مَرْوَانُ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ، فَبَدَأَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا مَرْوَانُ، خَالَفْتَ السُّنَّةَ، أَخْرَجْتَ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ، وَلَمْ يَكُنْ يُخْرَجُ فِيهِ، وَبَدَأْتَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ،

மதீனாவின் ஆட்சியாளர் மர்வான் பெருநாள் தினத்தில் மிம்பரை ஏற்படுத்தினார். தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தினார். அப்போது ஒரு மனிதர் மர்வானே நீர் நபிவழிக்கு மாற்றமாக நடந்துள்ளீர். பெருநாள் தினத்தில் மிம்பர் வைக்கப்படுவதில்லை. நீர் மிம்பர் ஏற்படுத்தியுள்ளீர் என்று கேட்டார்

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

நூல் : அபூதாவூத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

سنن ابن ماجه

1288 – حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ أَخْبَرَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَخْرُجُ يَوْمَ الْعِيدِ، فَيُصَلِّي بِالنَّاسِ رَكْعَتَيْنِ، ثُمَّ يُسَلِّمُ فَيَقِفُ عَلَى رِجْلَيْهِ  فَيَسْتَقْبِلُ النَّاسَ وَهُمْ جُلُوسٌ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: இப்னுமாஜா 1278

சொற்பொழிவு பெண்களுக்குக் கேட்காவிட்டால்

இரு பெருநாள்களிலும் பெண்களுக்கும் சொற்பொழிவு கேட்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்குக் கேட்கவில்லையானால் தனியாக அவர்களுக்கு பயான் செய்யலாம்.

صحيح البخاري

1449 – حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ، فَأَتَاهُنَّ وَمَعَهُ بِلاَلٌ نَاشِرَ ثَوْبِهِ، فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ»، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي وَأَشَارَ أَيُّوبُ إِلَى أُذُنِهِ وَإِلَى حَلْقِهِ

(பெருநாளன்று) நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கவனித்தேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்னால் தொழுவித்தார்கள். பிறகு தமது உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பிலால் (ரலி), ஒரு ஆடையை ஏந்தியவராக நின்றிருந்தார்கள். அப்போது பெண்கள் அதில் (தமது அணிகலன்களைப்) போடலானார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 1449

தக்பீரும் பிரார்த்தனையும்

இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.

صحيح البخاري

971 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ العِيدِ حَتَّى نُخْرِجَ البِكْرَ مِنْ خِدْرِهَا، حَتَّى نُخْرِجَ الحُيَّضَ، فَيَكُنَّ خَلْفَ النَّاسِ، فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ، وَيَدْعُونَ بِدُعَائِهِمْ يَرْجُونَ بَرَكَةَ ذَلِكَ اليَوْمِ وَطُهْرَتَهُ»

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)

நூல்: புகாரீ 971

அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.

துஆ, திக்ர், தக்பீர்களை உரத்த சப்தமின்றியே கூற வேண்டும்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 7:205

ஜுமுஆ அன்று பெருநாள்

வெள்ளிக்கிழமையன்று பெருநாள் வந்து விட்டால் விரும்பியவர் பெருநாள் தொழுகையை மட்டும் தொழுதுவிட்டு ஜுமுஆத் தொழுகையை தொழாமல் இருக்கலாம். விரும்பியவர் இரண்டு தொழுகைகளையும் நிறைவேற்றலாம்.

صحيح مسلم

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ، وَفِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»، قَالَ: «وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ، فِي يَوْمٍ وَاحِدٍ، يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلَاتَيْنِ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பபிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும் ஜுமுஆவும் ஓரே நாளில் வந்து விட்டால் அப்போதும் இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1452

இந்த ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையையும், ஜுமுஆத் தொழுகையையும் நிறைவேற்றியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

سنن أبي داود

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «قَدِ اجْتَمَعَ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ، فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ، وَإِنَّا مُجَمِّعُونَ»

‘இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜுமுஆ தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜுமுஆ தொழுகையை நடத்துவோம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத்

ஜனாஸா தொழுகை

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுக்குத் தொழுவித்து அடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும். இறந்தவருக்கு எப்படித் தொழுவிக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அவற்றைக் காண்போம்.

தொழுவிக்கும் இடம்

பள்ளிவாசலின் உள்பகுதி, வெளிப்பகுதி, வீடுகள், திறந்த வெளி மற்றும் எந்த இடத்திலும் மய்யித்தை வைத்துத் தொழுவிக்கலாம்.

صحيح مسلم

عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَمَرَتْ أَنْ يَمُرَّ بِجَنَازَةِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فِي الْمَسْجِدِ، فَتُصَلِّيَ عَلَيْهِ، فَأَنْكَرَ النَّاسُ ذَلِكَ عَلَيْهَا، فَقَالَتْ: مَا أَسْرَعَ مَا نَسِيَ النَّاسُ، «مَا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سُهَيْلِ ابْنِ الْبَيْضَاءِ إِلَّا فِي الْمَسْجِدِ»

ஆயிஷா (ரலி) அவர்கள், ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சடலத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு சென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ‘எவ்வளவு விரைவாக மக்கள் மறந்து விடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில் தான் தொழுகை நடத்தினார்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்பாத் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 1770

صحيح البخاري

1329 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ اليَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ زَنَيَا «فَأَمَرَ بِهِمَا، فَرُجِمَا قَرِيبًا مِنْ مَوْضِعِ الجَنَائِزِ عِنْدَ المَسْجِدِ»

தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவரை யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 1329

இந்த ஹதீஸில் ஜனாஸாத் தொழுகை தொழுமிடத்திற்கு அருகில் என்று வருகின்றது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இதற்கென தனியாக இடம் ஒதுக்கி வைத்திருந்ததை அறியலாம். இந்த இடம் பள்ளிவாசலின் வெளிப்பகுதியில் இருந்துள்ளது. அதனால் தான் அந்த இடத்தில் வைத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளார்கள்.

المستدرك على الصحيحين للحاكم

أَنَّ أَبَا طَلْحَةَ «دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ حِينَ تُوُفِّيَ، فَأَتَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ، وَلَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். (தொழுவிப்பதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா

நூல்கள்: ஹாகிம், பைஹகீ

இந்த ஹதீஸினடிப்படையில் வீட்டிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம்.

தொழக் கூடாத நேரங்கள்

صحيح مسلم

ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ، أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: «حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ»

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம் எனவும் இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் எனவும் எங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை

சூரியன் உச்சிக்கு வந்தது முதல் சாயும் வரை

சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிருந்து நன்கு மறையும் வரை

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1511

குழந்தைக்கு ஜனாஸாத் தொழுகை

பருவ வயதை அடையாத குழந்தையாக இருந்தால் தொழுவிக்கலாம்; தொழுவிக்காமலும் அடக்கம் செய்யலாம்.

سنن أبي داود

عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ ابْنُ ثَمَانِيَةَ عَشَرَ شَهْرًا فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

பதினெட்டு மாதக் குழந்தையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்குத் தொழுவிக்கவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி

நூல்: அபூதாவூத்

سنن النسائي

عَنْ خَالَتِهَا أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ قَالَتْ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ مِنْ صِبْيَانِ الْأَنْصَارِ، فَصَلَّى عَلَيْهِ

அன்ஸாரி சிறுவர்களில் ஒரு சிறுவரின் உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதும் அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ 1921

ஜனாஸா வைக்கும் முறை

ஜனாஸாவை இமாமுக்கு முன்னால் குறுக்கு வசமாக வைக்க வேண்டும்.

صحيح البخاري

383 – أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهِيَ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ اعْتِرَاضَ الجَنَازَةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது, ஜனாஸா கிடத்தப்பட்டது போன்று அவர்களுக்கும், கிப்லாவிற்கும் இடையில் நான் குறுக்கு வசமாகப் படுத்துக் கிடப்பேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 383

இந்த ஹதீஸிலிருந்து ஜனாஸாவைக் குறுக்கு வசமாக வைக்க வேண்டும் என்பதை அறியலாம்.

இமாம் நிற்க வேண்டிய இடம்

ஆண் ஜனாஸாவாக இருந்தால் தலைப்பகுதியை நோக்கியும் பெண் ஜனாஸாவாக இருந்தால் வயிற்றுப் பகுதியை நோக்கியும் இமாம் நிற்க வேண்டும்.

سنن الترمذي

1034 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَامِرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي غَالِبٍ، قَالَ: صَلَّيْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ عَلَى جَنَازَةِ رَجُلٍ، فَقَامَ حِيَالَ رَأْسِهِ، ثُمَّ جَاءُوا بِجَنَازَةِ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ، فَقَالُوا: يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا، فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيرِ، فَقَالَ لَهُ العَلَاءُ بْنُ زِيَادٍ: هَكَذَا رَأَيْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى الجَنَازَةِ مُقَامَكَ مِنْهَا وَمِنَ الرَّجُلِ مُقَامَكَ مِنْهُ؟ قَالَ: «نَعَمْ». فَلَمَّا فَرَغَ قَالَ: احْفَظُوا

ஒரு ஆணுடைய ஜனாஸா தொழுகையில் அனஸ் (ரலி)யுடன் நானும் கலந்து கொண்டேன். அப்போது அவர் (மய்யித்தின்) தலையை நோக்கி நின்றார். பிறகு குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடைய ஜனாஸா கொண்டு வரப்பட்டது. ‘அபூஹம்ஸாவே! இவருக்குத் தொழ வையுங்கள்’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டனர். அப்போது கட்டிலின் நடுப்பகுதியை நோக்கி நின்றார். அப்போது அவர்களிடம் அலா பின் ஸியாத் என்பார், ‘ஆண் ஜனாஸாவுக்கு தலைப்பகுதியிலும், பெண் ஜனாஸாவுக்கு இப்போது நீங்கள் நின்ற இடத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்ட போது, அனஸ் (ரலி) அவர்கள், ஆம் என்று கூறினார். தொழுது முடித்ததும் ‘(இதை) கவனத்தில் வையுங்கள்’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகாலிப்

நூல்: திர்மிதீ

பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை

ஆண் ஜனாஸாவும், பெண் ஜனாஸாவும் ஒரே நேரத்தில் வந்தால் கிப்லாவிலிருந்து முதலில் பெண் ஜனாஸாவும் அடுத்து ஆண் ஜனாஸாவும் வைக்கப்பட்டு, ஆண் ஜனாஸாவுக்கு அருகில் இமாம் நிற்க வேண்டும். பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை தொழுவிக்கலாம்.

سنن النسائي

1978 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ نَافِعًا يَزْعُمُ، أَنَّ ابْنَ عُمَرَ صَلَّى عَلَى تِسْعِ جَنَائِزَ جَمِيعًا «فَجَعَلَ الرِّجَالَ يَلُونَ الْإِمَامَ، وَالنِّسَاءَ يَلِينَ الْقِبْلَةَ، فَصَفَّهُنَّ صَفًّا وَاحِدًا، وَوُضِعَتْ جَنَازَةُ أُمِّ كُلْثُومِ بِنْتِ عَلِيٍّ امْرَأَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، وَابْنٍ لَهَا يُقَالُ لَهُ زَيْدٌ وُضِعَا جَمِيعًا وَالْإِمَامُ يَوْمَئِذٍ سَعِيدُ بْنُ الْعَاصِ، وَفِي النَّاسِ ابْنُ عُمَرَ، وَأَبُو هُرَيْرَةَ، وَأَبُو سَعِيدٍ، وَأَبُو قَتَادَةَ، فَوُضِعَ الْغُلَامُ مِمَّا يَلِي الْإِمَامَ»، فَقَالَ رَجُلٌ: فَأَنْكَرْتُ ذَلِكَ، فَنَظَرْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَبِي سَعِيدٍ، وَأَبِي قَتَادَةَ، فَقُلْتُ: مَا هَذَا؟ قَالُوا: «هِيَ السُّنَّةُ»

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒன்பது ஜனாஸாக்களுக்குச் சேர்த்து ஒரே தொழுகையாகத் தொழுதார். ஆண் ஜனாஸாக்களை இமாமை அடுத்தும் பெண் ஜனாஸாக்களை ஒரே வரிசையில் கிப்லா (திசையில் உள்ள சுவரை) அடுத்தும் வைத்தார்கள்.

(இன்னொரு தொழுகையின் போது) உம்மு குல்ஸும் என்ற பெண்ணின் ஜனாஸாவும், ஸைத் என்று அழைக்கப்படும் அவரது மகன் ஜனாஸாவும் சேர்த்து வைக்கப்பட்டன. ஸயீத் பின் அல்ஆஸ் அன்றைய தினத்தில் இமாமாக (ஆட்சியாளராக) இருந்தார். இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி), அபூகாதாதா (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். இமாமை அடுத்து சிறுவரின் ஜனாஸா வைக்கப்பட்டது. இது எனக்கு வெறுப்பாகத் தோன்றியது. உடனே நான் இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி) அபூகதாதா (ரலி) ஆகியோரை நோக்கி, ‘இது என்ன முறை?’ என்று கேட்டேன். அதற்கு, ‘இது நபிவழி’ என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிவு

நூல்: நஸாயீ

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸாத் தொழுகைக்காக உளூச் செய்ய வேண்டும்.

உளூச் செய்ய வேண்டியதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ‘ஜனாஸா தொழுகை என்பது மற்ற தொழுகைகளைப் போன்றதல்ல; இதில் ருகூவு, ஸஜ்தா கிடையாது. அது ஒரு துஆ தான்; எனவே இதற்கு உளூ தேவையில்லை’ என்பதே இவர்களது வாதம்.

ஆனால் ஜனாஸா தொழுகை துஆ என்றாலும் அந்த துஆ தொழுகைக்கு உள்ளே தான் செய்யப்படுகின்றது.

سنن الترمذي

3 عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»

‘தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனும்) தஸ்லீம் ஆகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: திர்மிதீ

இந்த ஹதீஸ் அடிப்படையில் தொழுகை என்பது தக்பீரில் தொடங்கி தஸ்லீமில் முடிப்பது தான். ருகூவு, ஸஜ்தா இல்லை என்பதற்காக தொழுகை இல்லை என்றாகி விடாது. ஜனாஸா தொழுகையும் தக்பீரில் ஆரம்பித்து, தஸ்லீமில் முடிப்பதாகத் தான் உள்ளது. மேலும் அல்லாஹ் தனது திருமறையில்…

அதே போல் கிப்லாவை முன் நோக்குதல், முதல் தக்பீரில் கைகளை உயர்த்துதல், நெஞ்சின் மீது கைகளை வைத்தல் ஆகிய அனைத்தும் மற்ற தொழுகைகளில் செய்வதைப் போலவே ஜனாஸா தொழுகையிலும் செய்ய வேண்டும்.

எத்தனை தக்பீர்கள்?

ஜனாஸாத் தொழுகையில் கூடுதலாக நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூற வேண்டும்.

صحيح البخاري

1245 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى النَّجَاشِيَّ فِي اليَوْمِ الَّذِي مَاتَ فِيهِ خَرَجَ إِلَى المُصَلَّى، فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னர்) இறந்த அன்று அவரது மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு முஸல்லா என்ற திடலுக்குச் சென்று மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 1245

صحيح مسلم

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: كَانَ زَيْدٌ يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا، وَإِنَّهُ كَبَّرَ عَلَى جَنَازَةٍ خَمْسًا، فَسَأَلْتُهُ فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُهَا»

ஸைத் பின் அர்க்கம் (ரலி) அவர்கள், எங்களில் இறந்தவருக்காகத் தொழுவிக்கும் போது நான்கு தக்பீர்கள் (வழமையாக) சொல்பவர்களாக இருந்தனர். ஒரு முறை ஒரு ஜனாஸா தொழுகையில் ஐந்து தக்பீர்கள் சொன்னார்கள். அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜந்து தக்பீர்கள் சொல்லி இருக்கிறார்கள்’ என்று பதில் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா

நூல்: முஸ்லிம் 1589

ஒவ்வொரு தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்த வேண்டுமா?

முதல் தக்பீருக்கு கைகளை உயர்த்தி, நெஞ்சின் மீது வைக்க வேண்டும். முதல் தக்பீரையும் சேர்த்து நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூற வேண்டும்.

தக்பீர் கூறும் போது கைகளை உயர்த்த வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இல்லை. எனவே முதல் தக்பீர் தவிர மற்ற தக்பீர்களில் கைகளை உயர்த்தக் கூடாது.

தக்பீர்களுக்கிடையில் ஓத வேண்டியவை

முதல் தக்பீருக்குப் பின்னால் ஸூரத்துல் ஃபாத்திஹாவும், இரண்டாம் தக்பீருக்குப் பின்னால் தொழுகையில் ஓதுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தும், மற்ற தக்பீர்களுக்குப் பின்னால் மைய்யித்துக்காக ஹதீஸில் வந்துள்ள துஆக்களையும் ஓதவேண்டும்.

صحيح البخاري

1335 – عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ قَالَ: «لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ»

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, ‘நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)’ என்றார்.

அறிவிப்பவர்: தல்ஹா

நூல்: புகாரீ 1335

السنن الكبرى للبيهقي

6959 – وَأَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْقَاضِي، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، أنبأ الشَّافِعِيُّ، أنبأ مُطَرِّفُ بْنُ مَازِنٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ أَنَّهُ أَخْبَرَهُ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَنَّ السُّنَّةَ فِي الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ أَنْ يُكَبِّرَ الْإِمَامُ، ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ بَعْدَ التَّكْبِيرَةِ الْأُولَى سِرًّا فِي نَفْسِهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيُخْلِصُ الدُّعَاءَ لِلْجِنَازَةِ، فِي التَّكْبِيرَاتِ لَا يَقْرَأُ فِي شَيْءٍ مِنْهُنَّ، ثُمَّ يُسَلِّمُ سِرًّا فِي نَفْسِهِ ”

‘ஜனாஸா தொழுகையில் இமாம் முதல் தக்பீர் கூறிய பின்னர் ஃபாத்திஹா அத்தியாயத்தை சப்தமில்லாமல் ஓதுவதும் பின்னர் மீதமுள்ள தக்பீர்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வதும் உளப்பூர்வமான முறையில் (மய்யித்திற்கு) பிரார்த்தனை செய்வதும் குறைந்த சப்தத்தில் ஸலாம் கூறுவதும் நபிவழியாகும்’ என்று ஒரு நபித்தோழர் அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூ உமாமா

நூல்: பைஹகீ

துஆக்கள்

மய்யித்திற்காக துஆச் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மற்றும் அவர்கள் ஓதிய துஆக்கள் ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளன.

صحيح مسلم

اللهُمَّ، اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

‘அல்லாஹும்மக்ஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஅஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்சில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கை(த்)தஸ் ஸவ்பல் அப்யள மினத்தனஸ். வப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅஇத்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின் நார்.

(பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவருக்குச் சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! மேலும் இவரது நுழைவிடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக! வெண்மையான ஆடையை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும், ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையை விடச் சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக! கப்ருடைய வேதனை, நரக வேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!)

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 1600

سنن الترمذي

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ

அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வ காயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வ உன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பய்தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். அல்லாஹும்ம லாதஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு

(பொருள்: எங்களில் உயிருடனிருப்பவர்களுக்கும், இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்போருக்கும், வராதோருக்கும், சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இறைவா! நீ மன்னிப்பாயாக! எங்களில் எவரை நீ வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்குத் தடுத்துவிடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்துவிடாதே!)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதி

ஸலாம் சொல்லுதல்

நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறிய பின்னர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று இரு புறமும் கூற வேண்டும்.

المعجم الكبير للطبراني

‎9880 – ‎حَدَّثَنَا خَلَفُ بن عَمْرٍو الْعُكْبَرِيُّ، وَأَبُو عَقِيلٍ أَنَسُ بن سَلْمٍ الْخَوْلانِيُّ، قَالا: حَدَّثَنَا الْمُعَافَى بن سُلَيْمَانَ، حَدَّثَنَا ‏مُوسَى بن أَعْيَنَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بن أُنَيْسَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، عَنِ ابْنِ ‏مَسْعُودٍ، قَالَ:خِلالٌ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُنَّ، تَرَكَهُنَّ النَّاسُ، إِحْدَاهُنَّ تَسْلِيمُ الإِمَامِ فِي الْجَنَازَةِ مِثْلَ ‏تَسْلِيمِهِ فِي الصَّلاةِ‎.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவற்றை விட்டு விட்டனர். தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையிலும் ஸலாம் கூறுவதும் அம்மூன்றில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: தப்ரானீ கபீர்

سنن النسائي

‎1325 – ‎أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: أَنْبَأَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو ‏إِسْحَقَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، وَأَبِي الْأَحْوَصِ، قَالُوا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، ” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْمَنِ، وَعَنْ يَسَارِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ ‏حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْسَرِ‎ “‎

(தொழுகையை முடிக்கும் போது) வலது புறமும், இடது புறமும் திரும்பி ‘அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்’ என்று முகத்தைத் திருப்பி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலாம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்: நஸாயீ

ஜனாஸாத் தொழுகையில் பெண்கள்

ஆண்களைப் போன்று பெண்களும் ஜனாஸாத் தொழுகையில் பங்கெடுக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் பங்கெடுத்துள்ளார்கள்.

المستدرك على الصحيحين للحاكم

‎1350 – ‎حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثنا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ بْنِ مُهَاجِرٍ، ثنا أَبُو الطَّاهِرِ، وَهَارُونُ بْنُ ‏سَعِيدٍ، قَالَا: ثنا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ‏طَلْحَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا طَلْحَةَ «دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ حِينَ تُوُفِّيَ، فَأَتَاهُمْ رَسُولُ ‏اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ ‏وَرَاءَ أَبِي طَلْحَةَ، وَلَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَسُنَّةٌ غَرِيبَةٌ فِي إِبَاحَةِ صَلَاةِ النِّسَاءِ ‏عَلَى الْجَنَائِزِ، وَلَمْ يُخَرِّجَاهُ‎ “‎

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். தொழுவிப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா

நூல்: ஹாகிம்

பள்ளியில் அமர்வதற்கு முன்னால் தொழுதல்

பள்ளிவாசலுக்கு ஒருவர் சென்றால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் பள்ளியில் அமரக் கூடாது. கடமையான தொழுகையையோ அல்லது கடமையான தொழுகையின் முன் சுன்னத்தையோ நிறைவேற்றினாலும் இக்கடமை நிறைவேறி விடும். தொழுகை இல்லாத நேரங்களில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

صحيح البخاري

444 – «إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ»

‘உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரீ 444

உளூச் செய்த பின் தொழுதல்

ஒருவர் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் இரண்டு ரக்அத்கள் அல்லது விரும்பிய அளவு தொழுவது சிறப்பிற்குரியதாகும்.

صحيح البخاري

1149ِ- حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ أَبِي حَيَّانَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الْإِسْلَامِ فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ قَالَ أَبُو عَبْد اللَّهِ دَفَّ نَعْلَيْكَ يَعْنِي تَحْرِيكَ.

ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்பு சப்தத்தைச் சொர்க்கத்தில் நான் கேட்டேன்’ என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 1149

இரவுத் தொழுகை

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

‘ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1982

இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

  1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)

2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்)

  1. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)
  2. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.

இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 990

இரவுத் தொழுகையின் நேரம்

இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1216

இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 7452

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 376

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 183

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 996

ரக்அத்களின் எண்ணிக்கை

8+3 ரக்அத்கள்

‘ரமலானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.

‘அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?’ என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா

நூல்: புகாரீ 1147

12+1 ரக்அத்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 183

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 1138

10+1 ரக்அத்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1339

8+5 ரக்அத்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1341

9  ரக்அத்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரீ 1139

7 ரக்அத்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரீ 1139

5 ரக்அத்கள்

‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்: நஸாயீ

3  ரக்அத்கள்

‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்: நஸாயீ

1 ரக்அத்

‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

நூல்: நஸாயீ

தொழும் முறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: நஸாயீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ 1698

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ 1699

… நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ 1700

ஸஜ்தா திலாவத்

தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.

இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தாச் செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். ஆனால் குர்ஆனின் ஓரத்தில் மொத்தம் 15 வசனங்களில் ஸஜ்தாச் செய்ய வேண்டுமென எழுதி வைத்துள்ளனர். 15 வசனங்களில் ஹஜ் எனும் அத்தியாயத்தில் இரண்டு வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இமாம் அபூஹனீபா அவர்கள் ஹஜ் அத்தியாயத்தில் ஒரேயொரு ஸஜ்தா வசனம் மட்டுமே உள்ளது என்று கூறுகின்றார். ஆனால் அதே சமயம் ஸாத் எனும் அத்தியாயத்தில் வரும் வசனத்தை ஸஜ்தா வசனமாக எடுத்துக் கொள்கின்றார்.

இமாம் ஷாஃபி அவர்கள் ஹஜ் அத்தியாயத்திலுள்ள இரண்டு வசனங்களையும் ஸஜ்தா வசனங்களாகக் கணக்கிடுகின்றார். ஆனால் ஸாத் (38வது) அத்தியாயத்திலுள்ள வசனத்தை விட்டு விடுகின்றார். ஆக இரண்டு பேருமே 14 வசனங்களை ஸஜ்தா வசனங்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் இதற்குச் சான்றாக வைக்கப்படும் ஹதீஸ்கள் பலவீனமானவையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்’ என்று அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193 வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல! இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.

‘நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால் முஃபஸ்ஸலான அத்தியாயங்களிலிருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை. அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல், ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்’ என்று அபூ தர்தா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.

‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். நஜ்ம் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்’ என்று அபூதர்தா (ரலி) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519 வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045 வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்து.

இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை.

‘ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: திர்மிதீ 527

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இதை வலுவற்றது என்று கூறுகின்றார்கள். மேலும் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர். இதில் இடம் பெறும் இன்னோர் அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து மறுக்கப்படத்தக்க செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாக உள்ளது.

மொத்தத்தில் 15 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்ற கருத்துக்களாகி விடுகின்றன. அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனை? என்று பார்க்கும் போது, நான்கு வசனங்களை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ, மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரீ 1067, 1070

இதே கருத்து புகாரீயில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 1069, 3422

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷாத் தொழுத போது, இதஸ்ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டு தான் இருப்பேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிவு

நூல்: புகாரீ 766, 768, 1078

இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 905, 906

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்

நஜ்மு (53வது அத்தியாயம்),

ஸாத் (38வது அத்தியாயம்),

இன்ஷிகாக் (84வது அத்தியாயம்),

அலக் (96வது அத்தியாயம்)

ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தாச் செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தாச் செய்யலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரீ 1072, 1073

ஸஜ்தா திலவாத் துஆ

தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஸஜ்தா வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். அப்போது ஓதுவதற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ

ஸஜத வஜ்ஹிய லில்லதீ கல(க்)கஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி

பொருள்: என் முகத்தைப் படைத்து அதில் செவிப் புலனையும் பார்வைப் புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.

நூல்: திர்மிதீ

தொழுகை எனும் முக்கியமான வணக்கத்தை நபி வழியில் ஆதாரங்களுடன் அறிந்து பின்பற்றும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account