Sidebar

25
Sat, Jul

முபாஹலா எனும் சத்தியப் பிரமாணத்துக்கு அறைகூவல்

குர்பானி, அகீகா, நேர்ச்சை, சத்தியம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

94. முபாஹலா எனும் சத்தியப் பிரமாணத்துக்கு அறைகூவல்

இவ்வசனத்தில் (3:61) இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு சத்தியப்பிரமாண அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது.

ஒருவர் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறார் என்றால் அக்கொள்கையில் அவருக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான் என்றார்கள். கடவுளுக்கு மகன் கிடையாது எனவும், ஈஸா நபியவர்கள் கடவுளின் மகன் கிடையாது எனவும் அடித்துச் சொன்னார்கள்.

இயேசு இறைவனின் மகன் என்று வாதிட்டவர்களுக்குத் தமது கொள்கையில் இருந்த நம்பிக்கையை விட பன்மடங்கு அதிகமான நம்பிக்கை, அதற்கு எதிரான கொள்கையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தமது கொள்கையில் இருந்தது.

இதனால் தான் "நான், எனது மனைவி மக்களுடன் வருகிறேன். நீங்கள் உங்கள் மனைவி மக்களுடன் வாருங்கள்! இரு சாராரில் யார் தவறான கொள்கையில் இருக்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை இருவரும் சேர்ந்து வேண்டுவோம்'' என அழைப்பு விடுமாறு இவ்வசனம் கட்டளையிட்டது.

இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்பு விட்டனர். இந்த அறைகூவலை அன்றைக்கு இருந்த கிறித்தவர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தமது கொள்கையின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை உறுதி செய்யப்படுகிறது.

முபாஹலா எனும் சத்தியப் பிரமாணம் குறித்து மேலும் அறிய 449வது குறிப்பைப் பார்க்கவும்.