Sidebar

22
Sat, Feb
8 New Articles

உமர் அலியுடன் முபாஹலா நடந்ததா?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

உமர் அலியுடன் முபாஹலா நடந்ததா?

உமர் அலி முபாஹலாவுக்கு சவால் விட்டதாகவும், அதை பீஜே ஏற்றுக் கொண்டதாகவும் உமரலி விவாதம் ஏன் என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முபாஹலா நடந்ததா என்று சிலர் கேட்டு எழுதியுள்ளனர். அது குறித்து இலங்கை ஹஃபீல் அவர்கள் எழுதிய ஆக்கத்தையே பதிலாகத் தருகிறோம்.

- இலங்கை ஹஃபீல்

உமர் அலியின் தயக்கமும், தட்டிக்கழிப்பும்

புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்ற விவாதத்தில் பீஜே அவர்கள் உமர் அலியிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தால் மாட்டிக் கொள்வேன் என்று கூறிய உமர் அலி முபாஹலா என்ற பூச்சாண்டி காட்டி தப்பிக்க முனைந்தார்.

விவாதம் முடிந்த சில நாட்களில் உமர் அலி தனது ஆதரவாளர்களைத் தக்க வைப்பதற்காக கிட்டத்தட்ட ஒன்பது ஆடியோ கெஸட் வெளியிட்டார். அது விவாதத்தில் நான் மாட்டிக் கொள்வேன் என்று கூறியதை விட தமாசாக இருந்தது.

அசகாயசூரன் போன்று வாய்ச்சவடால் விட்ட உமர் அலி முபாஹலா செய்ய இந்தியா செல்லவில்லை. விவாதத்தின் பின்னர் இருவருக்குமிடையே பல கடிதப் போக்குவரத்துகள் நடந்தன. அவர் பீஜேவிற்கு அனுப்பிய கடிதங்களையும் அவற்றிற்கு பீஜே எழுதிய பதில்களையும் உமர் அலி அவர்கள் ஏத்தாளையில் உள்ள அவரது பள்ளிக்கு முன்னாலுள்ள அவரது விளம்பரப் பலகையில் தொங்க விடுவார்.

 நான் ஸலஃபிய்யாவில் மாணவனாக இருக்கும் போது  அங்கு எனது உறவினர் வீட்டுக்கு விடுமுறையில் செல்லும் போது அவற்றைப் படிப்பதுண்டு. அப்போதெல்லம் உமர் அலி ஏன் தயங்குகின்றார் என்ற கேள்வி எழும்.

உமர் அலிக்கு எனது குடும்பத்தோடு நெருக்கமும் இருந்தது. பைஅத் பிரசாரத்தை உமரலி துவக்குமுன்னர் அவர் ஸலஃபிய்யாவில் ஆசிரியராக இருந்த போது எங்கள் வீட்டுக்கு ஒரு தடவை எனது தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது என்னை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு நீங்கள் எல்லாம் வஹ்ஹாபியாக மாறி விட்டீர்கள்;  நாங்கள் திருத்த வந்துள்ளோம் என்று கூறிச் சிரித்தார்.

அவர் எங்கள் ஊருக்கு வரும் போது தவ்ஹீத் பிரசாரம் சூடு பிடித்திருந்தது. நான் பள்ளியில் விரல் ஆட்டியதற்காக சிகரட்டால் முகத்தில் சுடப்பட்டேன். அப்போது எனக்கு வயது எட்டைக் கூடத் தாண்டவில்லை. எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்திருந்தார்கள். எனது தந்தை தாக்கப்பட்டு எங்கள் குடும்பமே மக்கா வாழ்க்கையை அனுபவித்த நேரம் அது. அந்த இக்கட்டான சூழலில் உமர் அலி வடக்கில் வந்து பல இடங்களில் உரையாற்றி மக்களின் ஐயங்களுக்குப் பதில் அளித்தார்.

எனது பாட்டனை உமர் அலி அடிக்கடி சந்தித்து தன்னிடம் பைஅத் செய்யுமாறு வலியுறுத்தி வந்தார். என் பாட்டனார் ஏகத்துவக் கொள்கையில் தெளிவாக இருந்ததால் பைஅத் செய்யாமலேயே வஃபாத்தாகி விட்டார். முபாஹலா பற்றி அவர் என்னிடம் பேசிய நினைவு உண்டு. உமர் அலி முபாஹலாவுக்கு தயங்கியது எனது பாட்டனார இவரிடமிருந்து காப்பாற்றிய காரணங்களில் ஒன்று என நான் நினைக்கின்றேன்.

பீஜே அவர்கள் உமர் அலி அவர்களுக்குக் கடிதம் மூலமாகவும், அல்ஜன்னத் மாத இதழிலும் பகிரங்க அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்கள். உமர் அலி தயக்கத்தால் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தார்.

பல மதாங்கள் ஆன பின்னரும் அவர் வரத் தயங்கிக் கொண்டிருந்த போது அல்ஜன்னத்தில் பீஜே அவர்கள்  உமர் அலியே வருக! தயக்கமா தட்டிக்கழிப்பா என்று பகிரங்கமாகப் பின்வரும் அழைப்பை விடுத்திருந்தார்கள்.

உமர் அலியே வருக!

கடந்த ஜுலை மாதம் இலங்கையில் உமரலியுடன் விவாதம் நடந்ததும், விவாதத்தின் இடையிலேயே முபாஹலாவுக்கு அவர் அறைகூவல் விடுத்ததும் அதை நான் ஏற்றதும் அனைவரும் அறிந்ததே.

நான் இலங்கையை விட்டுப் புறப்படும் முன் இந்தியாவில் எந்த இடத்திலும், எந்த நாளிலும் முபாஹலாவுக்காக நீங்கள் வரலாம்; பதினைந்து நாட்களுக்கு முன் எனக்குத் தெரிவித்து விட வேண்டும்  என்று கடிதம் எழுதி அவரிடம் சேர்ப்பித்து விட்டு அவரும் அவரது குடும்பத்தாரும் இந்தியா வந்து செல்லும் செலவுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து விட்டு வந்தேன்.

மாதங்கள் பல உருண்டோடியும் உமரலி வந்த பாடில்லை. வரும் எண்ணமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இடம்,  நாள் உட்பட எல்லா லிஷயத்திலும் முடிவு செய்யும் அதிகாரத்தை அவரிடமே வழங்கி எழுதிக் கொடுத்திருந்தும் ஒப்பந்தம் செய்யாததால் வர இயலவில்லை என்று மழுப்பல் கடிதம் அனுப்பியிருக்கிறார். நாம் கையெழுத்திட்டு ஆட்கள் வழியாக நேரில் சமர்ப்பித்த கடிதத்தையே ஒப்பந்தமாக எடுத்துக் கொண்டு அவர் வந்திருக்க வேண்டும்.

அவரது வழியில் அவருக்கே நம்பிக்கையில்லாத நிலையில் முபாஹலாவைச் சந்திக்க அவர் தயங்குகிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது. அவரை நம்பிய அவரது சகாக்கள் யாரேனும் இருந்தால் அவரை நிர்பந்தம் செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர் மறுத்தால் அவர் தமது கொள்கை தவறு என்பதை ஒப்புக் கொள்ளுமாறு அவரது சகாக்கள் நிர்பந்திக்க வேண்டும். அதற்கும் மறுத்தால் அவரை இனம் கண்டு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவரை வரவழைக்கும் வகையில் கடிதப் போக்குவரத்துக்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்பதை இலங்கைச் சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். முபாஹலா அழைப்பை நான் ஏற்றுக் கொண்டதால் இவ்விளக்கம் அவசியமாகிறது.

அன்புடன்

பி. ஜைனுல் ஆப்தீன்.

இந்த அழைப்புக்கும் உமர் அலி பதில் அளிக்கவில்லை. இவர் தயங்குகின்றார் இனி இவரை அழைத்துப் பயன் இல்லை என்பதால் பீஜே அவர்கள் உமர் அலியை அழைப்பதை விட்டு விட்டார்கள். அந்த அறிவிப்பையும் அல்ஜன்னத்தில் பகிரங்கமாகவே வெளியிட்டிருந்தார்கள்.

14.01.2011. 7:37 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account