ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்
முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.
صحيح البخاري
1308 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَى أَحَدُكُمْ جِنَازَةً، فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا، فَلْيَقُمْ حَتَّى يَخْلُفَهَا أَوْ تُخَلِّفَهُ أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَهُ»
உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1308
صحيح البخاري
1311 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: مَرَّ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجِنَازَةَ، فَقُومُوا»
ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்தோம். அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா என்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1311, 1313
எழுந்து நிற்கும் சட்டம் மாற்றப்படவில்லை
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். பின் வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
صحيح مسلم
2274 - وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ سَمِعْتُ مَسْعُودَ بْنَ الْحَكَمِ يُحَدِّثُ عَنْ عَلِىٍّ قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا. يَعْنِى فِى الْجَنَازَةِ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் எழுந்ததைக் கண்டோம். நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்ததைக் கண்டோம். நாங்களும் உட்கார்ந்தோம்
அறிவிப்பவர் அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1599
இந்த ஹதீஸை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர்.
எழுந்து நின்றார்கள்; பின்னர் எழுந்து நிற்கவில்லை என்பது போன்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் முதலில் எழுந்துவிட்டு பின்னர் எழாமல் இருந்துள்ளனர் என்று பொருள் கொள்ள முடியும்.
ஆனால் மேற்கண்ட ஹதீஸின் வாசகம் அவ்வாறு இல்லை. எழுந்தார்கள்; நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்தார்கள்; நாங்களும் உட்கார்ந்தோம் என்று தான் ஹதீஸின் வாசகம் உள்ளது. அதாவது ஜனாஸாவைக் கண்டவுடன் எழுந்தார்கள். பின்னர் உட்கார்ந்தார்கள் என்ற கருத்திலேயே மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.
ஜனாஸாவைக் கண்டவுடன் நின்று கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை; எழுந்துவிட்டு உட்கார்ந்து விடலாம் என்ற கருத்தைத் தான் இது தரும்.
எழுந்தார்கள் என்பதை எழவில்லை அல்லது எழுவதைத் தடுத்தார்கள் என்பன போன்ற சொற்கள் தான் மாற்றும்.
எழுந்தார்கள் என்பதை பின்னர் உட்கார்ந்தார்கள் என்பது மாற்றாது.
இந்தக் கருத்தில் அமைந்த மற்றொரு ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
صحيح مسلم
2271 - وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ أَنَّهُ قَالَ رَآنِى نَافِعُ بْنُ جُبَيْرٍ وَنَحْنُ فِى جَنَازَةٍ قَائِمًا وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ فَقَالَ لِى مَا يُقِيمُكَ فَقُلْتُ أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ لِمَا يُحَدِّثُ أَبُو سَعِيدٍ الْخُدْرِىُّ. فَقَالَ نَافِعٌ فَإِنَّ مَسْعُودَ بْنَ الْحَكَمِ حَدَّثَنِى عَنْ عَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ أَنَّهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ثُمَّ قَعَدَ.
நாங்கள் ஒரு ஜனாஸாவில் நின்று கொண்டிருக்கும் போது என்னை நாஃபிவு பின் ஸுபைர் என்பார் பார்த்தார். ஜனாஸா வைக்கப்படுவதை எதிர்பார்த்தவராக அவர் உட்கார்ந்திருந்தார். ஏன் எழுந்து நிற்கிறாய்? என்று என்னிடம் கேட்டார். ஜனாஸா வைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்; இவ்வாறு அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்கள் அறிவித்துள்ளனர் என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்துவிட்டு பின்னர் உட்கார்ந்தார்கள் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவித்ததாக மஸ்வூத் பின் ஹகம் எனக்குக் கூறினார் என அவர் பதிலளித்தார்.
அறிவிப்பவர்: வாகித் பின் அம்ர்
நூல்: முஸ்லிம் 1597
இந்த ஹதீஸும் இவர்கள் கூறுகின்ற கருத்தில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்; பின்னர் உட்கார்ந்தார்கள் என்ற சொற்றொடர் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டையும் செய்தார்கள் என்ற கருத்தைத் தருமே தவிர எழுந்து நிற்பதை விட்டு விட்டார்கள் என்ற கருத்தைத் தராது.
ஜனாஸாவைப் பின் தொடர்ந்தவர் அது கீழே இறக்கப்படும் வரை உட்காரக் கூடாது
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றவர் ஜனாஸாவை முந்திக் கொண்டு அடக்கத்தலம் சென்றுவிடலாம். அப்படி முந்திச் சென்றவர்கள் உடனே அமர்ந்து விடக் கூடாது. ஜனாஸா வரும் வரை காத்திருக்க வேண்டும். ஜனாஸா கொண்டு வரப்பட்டு தோள்களிலிருந்து கீழே இறக்கப்படும் வரை நின்றுவிட்டு கீழே இறக்கப்பட்ட பின் தான் உட்கார வேண்டும்.
صحيح البخاري
1307 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ» قَالَ سُفْيَانُ: قَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، قَالَ: أَخْبَرَنَا عَامِرُ بْنُ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَادَ الحُمَيْدِيُّ: «حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ»
அது உங்களைக் கடக்கும் வரை அல்லது கீழே வைக்கப்படும் வரை நில்லுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 1307, 1308, 1310
கடக்கும் வரை என்பது ஜனாஸாவுடன் தொடர்ந்து செல்லாதவருக்காகச் சொல்லப்பட்டது. கீழே வைக்கப்படும் வரை என்பது பின் தொடர்ந்து அடக்கத்தலம் வரை செல்பவருக்காகக் கூறப்பட்டது.
صحيح البخاري
1309 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا فِي جَنَازَةٍ، فَأَخَذَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ بِيَدِ مَرْوَانَ فَجَلَسَا قَبْلَ أَنْ تُوضَعَ، فَجَاءَ أَبُو سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَخَذَ بِيَدِ مَرْوَانَ، فَقَالَ: قُمْ فَوَاللَّهِ لَقَدْ عَلِمَ هَذَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنْ ذَلِكَ» فَقَالَ أَبُو هُرَيْرَةَ صَدَقَ
நாங்கள் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (அன்றைய ஆட்சியாளரான) மர்வானின் கையைப் பிடித்து ஜனாஸா கீழே வைக்கப்படுவதற்கு முன்னர் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்தார். அப்போது அபூ ஸயீத் (ரலி) அவர்கள் வந்து மர்வானின் கையைப் பிடித்து எழுங்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுத்தார்கள் என்பதை இவர் (அபூ ஹுரைரா) அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக அறிந்து வைத்துள்ளார் என்றும் கூறினார். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், இவர் சொல்வது உண்மை தான் என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் அல் மக்புரி
நூல்: புகாரி 1309
صحيح البخاري
1310 - حَدَّثَنَا مُسْلِمٌ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ»
ஜனாஸாவை நீங்கள் கண்டால் எழுங்கள்! யார் அதைப் பின் தொடர்ந்து செல்கிறாரோ அவர் ஜனாஸா (கீழே) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்: புகாரி 1310
ஜனாஸாவைக் கண்டால் எழ வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டதா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode