பிறையின் அளவை வைத்து தீர்மானிக்கலாமா?

பிறை பார்த்தல் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பிறையின் அளவை வைத்து தீர்மானிக்கலாமா?

பிறையைக் கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை மற்றொரு ஹதீசும் கூறுகிறது. அந்த ஹதீஸ் இது தான்.

صحيح مسلم

2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا الْبَخْتَرِىِّ قَالَ أَهْلَلْنَا رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا رَجُلاً إِلَى ابْنِ عَبَّاسٍ – رضى الله عنهما – يَسْأَلُهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ – رضى الله عنهما – قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ».

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம். (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர். நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிக் கூறினோம். அதற்கவர்கள் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்?'' என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம் என்று விடையளித்தோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவில் தான் அது பிறந்தது'' என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபுல்பக்தரீ நூல்: முஸ்லிம்

வானில் பிறை இருப்பதோ, கணிக்கப்படுவதோ, அல்லது வேறு எங்கோ பார்த்ததாகத் தகவல் கிடைப்பதோ பிறையைத் தீர்மானிக்க உதவாது. மாறாக நாளைத் தீர்மானிக்க நமது பார்வையில் தென்படுவது மட்டுமே ஒரே அளவு கோல் என்று இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது.

பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

என்ன அற்புதமான வாசகம் என்று பாருங்கள்.

இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் பயன்படுத்திய சந்தர்ப்பம் கவனிக்கத் தக்கது.

பிறையின் அளவு பெரிதாக இருப்பதால் ஒரு பிறையைத் தவற விட்டு விட்டோமே என்று சிலரும், இல்லை இல்லை நாம் இரண்டு பிறைகளைத் தவற விட்டு விட்டோம் என்று மற்றும் சிலரும் கூறுகிறார்கள். அவர்களில் யாருமே அதைத் தலைப்பிறை என்று நினைக்கவில்லை. காரணம் பிறையின் அளவு பெரிதாக இருந்தது தான்.

அது போன்ற சமயத்தில் தான் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்களோ அந்த இரவின் பிறை தான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இதைத் தீர்மானிக்கும் உரிமை பார்வைகளுக்கே உள்ளது என்ற நபிமொழியையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

உண்மையில் பிறை பிறந்திருக்கலாம்; ஏதோ காரணத்தால் அதைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். அவ்வாறு பார்க்காததால் மாதம் பிறந்தும் அதைத் தவற விட்டு விட்டோமே என்று யாரும் எண்ணக் கூடாது.

பிறை பிறந்தது உண்மையாகவே இருந்தாலும் அது தெரியாவிட்டால் முதல் மாதத்திற்கு ஒரு நாளை அல்லாஹ் நீடித்து விடுகிறான். உண்மையில் அடுத்த மாதத்தின் தலைப்பிறை தோன்றியிருந்தால் கூட அல்லாஹ் நம் மீது கருணை கொண்டு, நம் சிரமத்தைக் குறைப்பதற்காகவும், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவும் அம்மாதத்தின் ஒரு நாளை நீட்டித்து சலுகை அளித்து விடுகிறான்.

விஞ்ஞானக் கணிப்புப்படி தலைப்பிறை இன்று பிறந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் யாரும் பிறையைப் பார்க்கவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். வானியல் கணிப்புப்படி அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கும் சலுகை காரணமாக முந்தைய மாதமே இன்னும் நீடிக்கிறது.

வானியல் அறிவு மூலம் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பதை நாம் மறுக்க மாட்டோம். இதைப் பின்னர் விளக்கவுள்ளோம். ஆனால் மாதம் எப்போது துவங்குகிறது என்பதற்கு இதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது. அல்லாஹ்வின் பார்வையில் ரமளான் எப்போது துவங்குமோ அப்போது நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ்வின் பார்வையில் ஷவ்வால் பிறந்து விட்டால் பெருநாள் கொண்டாட வேண்டும்.

பத்து நாட்கள் மேக மூட்டம் இருந்தால் பத்து நாட்கள் அம்மாதத்தில் அதிகமாகி விடுமா என்று சிலர் விதண்டாவாதம் பேசுகின்றனர்.

பிறை பார்க்க வேண்டும் என்பதே சந்தேகத்திற்குரிய 30ஆம் இரவில் தான். அன்று பிறை தெரியவில்லை என்றால் முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என முடிவு செய்து அடுத்த நாளை தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும். இது தான் அந்த ஹதீஸின் கருத்து.

மாதத்துக்கு முப்பது நாட்கள் தான் அதிக பட்சம் என்று ஹதீஸ் உள்ளதால் இது 30ஆம் இரவுக்கு மட்டும் உரியது. முப்பது முடிந்து விட்டால் பிறை பார்க்கத் தேவையில்லை.

மாதம் நீட்டப்படுகிறது என்பதை இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்றால் ஒரு நாள் நீட்டியுள்ளான் என்பதே பொருள்.

மேக மூட்டம் காரணமாக முப்பது நாட்களைப் பூர்த்தி செய்துவிட்டு மறுநாள் தலைப்பிறை என்று முடிவு செய்கிறோம். ஆனால் வானில் பிறை சற்று பெரிதாகத் தெரிகின்றது. ஆஹா இது இரண்டாவது பிறையல்லவா? முதல் பிறையைத் தவறவிட்டு விட்டோமே? என்று அலட்டிக் கொள்ளக் கூடாது. முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

பிறையைப் பார்த்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரம். வானில் பிறை இருக்கிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அது நம் கண்ணுக்குத் தெரிகின்றதா என்பது தான் முக்கியம்

 

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account