Sidebar

27
Sat, Jul
5 New Articles

ஆல்கஹால் பயன்படுத்தலாமா?

ஹராமான வருவாய்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஆல்கஹால் பயன்படுத்தலாமா?

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

ஹாமின்

பதில் :

ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடியவற்றை உட்கொள்வது மட்டுமே தவறு; உட்கொள்ளாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري

அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனிலிருந்து அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும், வாற்கோதுமையிலிருந்து மிஸ்ர் என்ற பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல் : புகாரி 6124

سنن الترمذي

1865 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ دَاوُدَ بْنِ بَكْرِ بْنِ أَبِي الفُرَاتِ، عَنْ ابْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ»

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல்கள் : திர்மிதீ, நஸயீ

3725 و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا–  رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால், போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : முஸ்லிம்

3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.

நூல் : முஸ்லிம்

போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காகவே இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது என மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து அறியலாம். ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் தான் போதை ஏற்படும். எனவே அதைப் பருகுவது கூடாது. ஆனால் இந்தப் பானம் உடலிலோ, ஆடையிலோ பட்டால், அல்லது அதை நுகர்ந்தால் போதை ஏற்படாது.

மேலும் நறுமணத்தை வெளியில் கொண்டு வந்து ஆடையில் சேர்ப்பிக்கும் வேலையைத் தான் வாசனைத் திரவியங்களில் ஆல்கஹால் செய்கின்றது. பாட்டிலிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த ஆல்கஹால் காற்றில் பட்டு ஆவியாகி விடுகின்றது. ஆடையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. நறுமணம் மட்டுமே ஆடையில் தங்குகிறது.

உண்பதற்குத் தடுக்கப்பட்டவைகளை உண்ணுதல் அல்லாத வகையில் பயன்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்ததை பின்வரும் ஹதீஸையும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

صحيح البخاري

1492 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: " وَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً، أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ: قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபிகள் (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். இது செத்ததாயிற்றே? எனத் தோழர்கள் கூறியதும், இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1492

எனவே ஆல்கஹால் கலந்த வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதை மார்க்கம் தடை செய்யவில்லை.

14.01.2011. 7:24 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account