Sidebar

01
Wed, Jul
சமீபத்திய செய்திகள்

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா?

மனுஷ்ய புத்திரனுக்கு கொலை மிரட்டல் விட்டதைக் கண்டித்து சிலர் அறிக்கை விட்டுள்ளார்களே?

மசூத், கடையநல்லூர்

இவருக்கு கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல் துறைக்குச் சென்று கொலை மிரட்டல் விட்டவர்களுக்கு எதிராகப் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முற்போக்குகளாவது கொலை மிரட்டலுக்கான மெயில் அல்லது கடிதம் அல்லது போன் நம்பர் ஆகியவற்றுடன் அவரை அழைத்துச் சென்று புகார் கொடுத்திருக்க வேண்டும்.

அல்லது அநாமதேயமான மிரட்டல் என்றால் அது பற்றி அலட்சியப்படுத்த வேண்டும்.

அப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பதில் இருந்து கொலை மிரட்டலை இவரே தயாரித்துக் கொண்டார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

யாராவது கொலை மிரட்டல் விட்டால் அது கண்டிக்கத்தக்கது என்பதில் நாமும் உடன்படுகிறோம். . ஆனால் இது தனக்குத்தானே இவர் அளித்துக் கொண்டது என்ற சந்தேகம் தான் நமக்கு வருகிறது.

28.01.2013. 23:42 PM

மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா?

ஆண்டுதோறும் மகாவீர்ஜெயந்தி அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று அரசாங்கம் தடைபோடுவது நியாயம்தானா? தவ்ஹீத் ஜமாஅத் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

மசூது, கடையநல்லூர்

மதுபானக்கடைகள் போன்ற தீமைக்குத் துணை போகும் கடைகள் எப்போதும் மூடவேண்டியவை என்பதால், குறிப்பிட்ட நாட்களிலாவது மூடுகிறார்களே என்று வரவேற்கலாம்.

நல்லவற்றுக்குத் துணை செய்யும் கடைகளை மூடச்சொல்வது கண்டிக்கத்தக்கது. யாரோ ஒருவர் அறிவில்லாமல் புலால் உண்ணக் கூடாது என்று சொன்னால், அதில் நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடித்து விட்டுப் போக வேண்டியது தான். அதை நம்பாத மக்களிடமும் அதைத் திணிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை.

மகாவீரராக இருந்தாலும், வள்ளுவராக இருந்தாலும் அவர்கள் புலால் உண்ணக்கூடாது என்ற கொள்கையில் இருந்தால் அதுவே தவறு என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். கிறித்தவர்கள் நம்புகின்றனர். இந்து மதத்தில் உள்ள சிறுபிரிவைத் தவிர மற்ற அனைவரும் நம்புகின்றனர்.

அறிவுக்குப் பொருந்தாததும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததுமான இந்தக் கொள்கையைக் கண்டிக்க வேண்டுமே தவிர அதற்கு மதிப்பளிக்கக்கூடாது.

ஆட்சியில் இருப்பவர்கள் அப்படி மதிப்பளிப்பதாக இருந்தால் காலமெல்லாம் கசாப்புக்கடையை மூடிக்காட்டட்டும். யாரையோ திருப்திப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடிக்கின்றன. ஒருநாள் மட்டும் கசாப்புக்கடையை மூடிவிட்டு மற்ற நாட்களில் சாப்பிடுங்கள் என்பது தான் மகாவீரரின் கொள்கையா? ஆட்சியில் உள்ளவர்களுக்குச் சிந்திக்கும் திறன் இருந்தால் இதுபோல் மக்கள் விரோதச் சட்டங்களைப் போடமாட்டார்கள்.

எவருடைய பிறந்த நாளுக்காகவும் ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்ற மதத்தினர் மீது திணிப்பது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

பெருநாள் தினத்தில் மகாவீர் ஜெயந்தி வந்து, அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று உத்தரவு போட்ட கொடுமையை மூன்று ஆண்டுகளுக்கு முன் நாம் சந்தித்தோம். இதை எதிர்த்து கசாப்புக் கடைக்காரர்கள் தான் போராடினார்கள். அதில் முஸ்லிம் சமுதாயம் பெரிய அளவில் பங்கு கொள்ளவில்லை. கிறித்தவர்களும் பங்கு கொள்ளவில்லை. அசைவ உணவு உட்கொள்ளும் இந்துக்களும் பங்கு கொள்ளவில்லை.

இது அனைத்து மதத்தினருக்குமான பிரச்சனை. அடிப்படை உரிமை சம்பந்தமான பிரச்சனை என்று மக்கள் விளங்காமல் உள்ளனர். இதனால் தான் இந்தச் சட்டம் இன்னும் குப்பைக் கூடைக்குப் போகாமல் உள்ளது.

மற்றவர்கள் ஒதுங்கி இருந்தாலும் முஸ்லிம்களாவது நம்முடைய உரிமைகளுக்கு எதிரானதாகவும், நம்முடைய மதநம்பிக்கைக்கு எதிரானதாகவும் உள்ளது என்று கருத வேண்டும். அவ்வாறு கருதாமல் கசாப்புக் கடைக்காரர்களின் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள். எங்கள் மதநம்பிக்கையில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஊரே திரண்டு போராடினால் இது போன்ற சட்டங்கள் குப்பைக் கூடைக்குப் போய் இருக்கும்.

பெருநாள் தினத்தில் மகாவீர் ஜெயந்தி வந்தால் தயிர் சாதம் தான் சாப்பிட வேண்டிவரும் என்பதையும், ஹஜ்ஜுப் பெருநாளின் போது குர்பானி கொடுப்பதற்கும் தடை செய்யப்படும் என்பதையும் புரிந்துகொண்டு அனைவரும் இதற்கு எதிராகத் திரள வேண்டும். பெருநாள் மட்டுமின்றி தனி மனிதனின் திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், விருந்தினரை உபசரித்தல் போன்ற நேரங்களில் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவோம்.

ரமலான் மாதத்தில் நாங்கள் நோன்பு வைப்பதால், எல்லா ஹோட்டல்களையும் பகலில் அடைக்க வேண்டும் என்று நாம் கோரினால் இவர்கள் ஏற்பார்களா?

பெரியாரின் பிறந்த நாள் அன்று எல்லா கோவில்களும் மூடப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவார்களா?

ஏசுவின் பிறந்த நாளையொட்டி அனைவரும் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பார்களா?

என்றெல்லாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அந்த நிலை சமுதாயத்தில் ஏற்பட நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்து, இதன் மோசமான விளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தயார் படுத்திய பிறகே போராட்டத்தில் இறங்க வேண்டும்.

அடுத்த மகாவீர் ஜெயந்திக்குள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்தச் சட்டம் குப்பைக் கூடைக்குப் போகாவிட்டால் சமுதாயமே திரண்டு எதிர்கொள்ள வேண்டும். இதை இப்படியே விடக்கூடாது

நீதிமன்றத்தை அணுகினால் மதச்சார்பின்மை அடிப்படையிலும், சட்டத்தின்படியும் தீர்ப்பு வழங்குவார்களா என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது. பாபர் மசூதி தீர்ப்பைப் போலவும், ஒட்டகத்தை குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தீர்ப்பைப் போலவும் தீர்ப்பு வழங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. நீதிமன்றத்தை அணுகவே அஞ்சும் நிலைதான் நமக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் இதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திப் பார்க்கலாம்.

இன்ஷா அல்லாஹ் - இது கசாப்புக் கடைக்காரர்களின் பிரச்சினை இல்லை என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாய மக்களுக்கும் புரிய வைத்து பின்னர் நாம் கடுமையான போராட்டத்தை இதற்காக நடத்துவோம்.

30.04.2013. 6:02 AM

வஞ்சிக்கபடும் முஸ்லிம் சமுதாயம்!

மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி 5 வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 64 பேர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பந்தமாக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் புனே பேருந்து நிலையத்தில் வைத்து மிர்சா ஹிமாயத் பெய்க் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தவிர அபு ஜிண்டால் என்பவரையும் இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தனர்.

ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது அபு ஜிண்டால் வெளியில் இல்லை. மாறாக மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார். இப்படி சிறைக்குள் இருந்தவரைத் தான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த வழக்கில் போலீசார் சேர்த்தனர்.

ஒருவர் சிறைக்குள் இருந்துகொண்டு, வெளியில் வந்து ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்தார் எனில் இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யாக இருக்க வேண்டும். அல்லது சிறை அதிகாரிகள் இவரை சட்டவிரோதமான முறையில் வெளியில் அனுப்பி குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் போது அபு ஜிண்டாலுடன் சேர்த்து, சிறை அதிகாரிகளையும் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்க வேண்டும். இதில் எதையுமே செய்யவில்லை.

இதில் இன்னொரு கூத்தும் நடந்துள்ளது. அபு ஜிண்டாலை ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் போலீசார் சேர்த்தார்களே தவிர இந்த வழக்கில் இவரை போலீசார் கைது செய்யவே இல்லை. கைது செய்து, போலீஸ் கஸ்டடியில் எடுத்து இவரை விசாரிக்கவும் இல்லை. இவர் மீதான வழக்கை நடத்தவும் இல்லை. இவருக்கு நீதிமன்றம் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை. ஆனால் ஹிமாயத் பெய்க்குக்கு மட்டும் புனே அமர்வு நீதிமன்றம் 18.04.2013 அன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பெய்க்கின் வழக்கறிஞர் அப்துர் ரஹ்மான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது பெய்க் புனேவிலேயே இல்லை. மாறாக அவர் ஔரங்காபாத்தில் இருந்தார். ஔரங்காபாத்தில் இருந்துகொண்டு ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் புனேயில் எப்படி வெடிகுண்டு வெடிக்கச் செய்ய முடியும்? இதை நீதிபதி கவனிக்கத் தவறி விட்டார். எனவே நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தார்.

இந்த நாட்டில் குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவரை தூக்கில் போடுவதற்கு அவர் குற்றம் செய்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் முஸ்லிமாக இருந்தால் போதும். இந்த குறைந்தபட்ச தகுதிக்காகவே அவர் தூக்கில் போடப்படுவார் என்பது கடந்த கால வரலாறு.

பாராளுமன்றத் தாக்குதலில் பேராசிரியர் ஜிலானி, அப்சல் குரு ஆகியோருக்கு நேரடியான எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த இருவருக்கும் செசன்ஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து, உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்து, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் பேராசிரியர் ஜிலானி குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்பட்டு அப்சல் குரு மட்டும் தூக்கில் போடப்பட்டார்.

அப்சல் குருவும் கூட பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து சுட்டார் என்பதற்காக அவர் தூக்கிலிடப்படவில்லை. ஆதாரங்களும், சாட்சிகளும், ஆவணங்களும் உள்ளன என்பதற்காகவும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.  அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லியும் இவருக்கு நீதிபதிகள் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை.

மாறாக கூட்டு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது. அப்சல்குரு தாக்குதல் நடத்தினார் என்று நிரூபிக்கப்படவில்லையாயினும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கிறோம் என்று சொல்லித் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்தனர். அவரும் தூக்கில் போடப்பட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து செசன்ஸ் நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டில் உள்ள எல்லா கீழ் நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கலாம்.

அதனால் ஹிமாயத் பெய்க் குற்றம் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவும் வேண்டியதில்லை. மாறாக கூட்டு மனசாட்சி அடிப்படையில் ஆதாரங்கள், சாட்சிகள், ஆவணங்கள் இல்லாமலும் பெய்க்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இப்படி கூட்டு மனசாட்சி அடிப்படையில் எந்த நாட்டிலும் எவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும்தான், அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இந்த வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இதை எதிர்த்து முஸ்லிம்கள் எதுவும் பேசி விடக்கூடாது. அவ்வளவுதான்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 அப்பாவி முஸ்லிம்களை மோடியின் அமைச்சரவையில் இருந்த பெண் மந்திரி மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி தலைமையிலான கும்பல் கொடூரமாகக் கொன்று குவித்தது. இவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. அப்போது நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும்?

97 அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற இவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்திருக்க வேண்டும். அப்படி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.

மாறாக அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏனெனில் கொலையாளிகள் அனைவரும் காவிக் கட்சிக்காரர்கள். கொல்லப்பட்ட 97 பேரும் அப்பாவி முஸ்லிம்கள். முஸ்லிம்களின் உயிருக்கு இந்த நாட்டில் அவ்வளவுதான் மதிப்பு. இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட மாயா சோட்னானிக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை? ஔரங்காபாத்தில் இருந்த ஹிமாயத் பெய்க்குக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேள்வி கேட்டால் அது தேசத் துரோகமாகிவிடும். நீதிமன்ற அவமதிப்பும் ஆகிவிடும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது குல்பர்க் சொஸைட்டியில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.இஹ்ஸான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் சங்பரிவார பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலைக் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. 17 பேர் மரணத்திற்கு காரணம் என சொல்லப்படும் ஹிமாயத்திற்கு ஏன் தூக்குத் தண்டனை?

69 முஸ்லிம்களைக் கொன்று குவித்த காவி பயங்கரவாதிகளுக்கு ஏன் ஆயுள் தண்டனை? இவ்வாறு முஸ்லிம்கள் இந்த நாட்டில் நியாயம் பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிராவதிகள், பயங்கரவாதிகள் என்று அவர்களுக்குப் பட்டம் சூட்டப்படும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது தர்வாஜா என்ற இடத்திலும் அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். இந்த பச்சைப் படுகொலைகளுக்காகவும் சங் பரிவார பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக இருந்ததே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. இதைத் தெரிந்து முஸ்லிம்கள் கேள்வி கேட்டு, ஹிமாயத் பெய்க்குக்கு பரிந்து பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிரவாதி, பயங்கரவாதி பட்டத்தைத்தான் சுமக்க வேண்டி வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பு, மர்ம கோவா குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, நான்டெட் குண்டு வெடிப்பு ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளைச் செய்து நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை நாடு முழுவதும் திட்டமிட்டுக் கொன்று குவித்த பெண் சாமியார் பிரக்யா சிங், ஆண் சாமியார் அசிமானந்த், கர்னல் புரோஹித் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை பல்லாண்டுகள் ஆன பிறகும் நடக்கவில்லை. இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர்.

ஆனால் ஹிமாயத் பெய்க் மீதான வழக்கு 2 ஆண்டுகளுக்குள் விசாரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. முஸ்லிம் மீதான வழக்கு மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரம் விசாரிக்கப்படுகிறது? காவி பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் மட்டும் ஏன் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகின்றன என்று கேள்வி கேட்க இரண்டாம் தர குடி மக்களான முஸ்லிம்களுக்கு உரிமையில்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஹிமாயத் பெய்க்கிற்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம்தான் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேல் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இந்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து, ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால் தான் அவர் தூக்கில் போடப்படுவார் என எதிர்பார்க்கக் கூடாது. ஆள்வோர் நினைத்தால் நாளையே கூட பெய்க்கை தூக்கில் போட்டு விடுவார்கள். இதற்கும் முன் உதாரணங்கள் உள்ளன. ஆம். அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன் இவ்விருவரும் கமுக்கமாக தூக்கில் போடப்பட்டார்கள்.

காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர் சிங் புல்லாரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். அதற்காக புல்லாரை ஆட்சியாளர்கள் தூக்கில் போடவில்லை. கருணை மனு நிராகரிக்கப்பட்ட புல்லார் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை குறைக்க மனு செய்ய ஆள்வோரால் அனுமதிக்கப்பட்டார். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அதற்குப் பிறகும் புல்லார் தூக்கில் போடப்படவில்லை. புல்லாருக்காக வளைந்த சட்டம் அஜ்மல் கசாபுக்கும், அப்சல் குருவுக்கும் ஏன் வளையவில்லை? என்று கேட்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள். புல்லார் முஸ்லிம் அல்லாதவர்; இதை முஸ்லிம்கள் புரிந்து அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளிகளான மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், உள்ளிட்ட 16 தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து நீண்ட வருடங்களாகி விட்டது.

அஜ்மல் கசாபையும், அப்சல் குருவையும் போல கருணை மனு நிராகரிக்கப்பட்ட இவர்கள் ஏன் தூக்கில் போடப்படவில்லை? என்று எந்த முஸ்லிமும் கேள்வி கேட்கக் கூடாது. ஏனெனில் முஸ்லிம் சமுதாயம் அடிமைச் சமுதாயம். இப்படி அடிமைச் சமுதாயமாக இருப்பதற்காகத் தான் ஆங்கிலேயரிடம் இருந்து போராடி விடுதலை பெற்று, இன்றைய ஆள்வோருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து அடக்கமுடன்(?) நடந்துகொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் - முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானது என்று உலகுக்கே தெரியும்! ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாபரி மஸ்ஜிதை 3 பங்காகப் பிரித்து அதில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு உரியது. மீதி இரண்டு பங்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உரியது என்று அளித்த வினோதத் தீர்ப்பை இன்றுவரை முஸ்லிம்களால் மாற்ற முடிந்ததா?

25 கோடி முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பாபரிமஸ்ஜித் பிரச்சினையிலேயே இப்படித்தான் தீர்ப்பு இருக்கும் என்று அறிந்த பிறகு, பெய்க் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பது அறியாமை ஆகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கே நீதி கிடைக்கவில்லை எனும் போது தனிப்பட்ட பெய்க்கிற்கு எப்படி நீதி கிடைக்கும்? என முஸ்லிம் சமுதாயம் புரிந்து அடங்கி நடந்து கொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சாத்வி ரிதம்பரா, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், தொகாடியா ஆகியோருக்கு இருந்த பங்கு அகில உலக பிரசித்தம். பாபர் மஸ்ஜித் வழக்கில் இவர்களுக்கு எதிரான ஆதாரம் இருந்த அளவுக்கு இந்தியாவில் நடந்த எந்த வழக்குக்கும் ஆதாரம் இருக்கவில்லை.

அதற்காக இவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டார்களா? இல்லையே! இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பெய்க்கிற்காக முஸ்லிம்கள் உரிமைக் குரல் எழுப்பி தேசத்தின் அமைதியை கெடுக்கக் கூடாது. இந்த நாடு மதசார்பற்ற நாடு. ஆனால் இங்கு சட்டம் ஆட்சி செய்யவில்லை. மனு நீதிதான் ஆள்கிறது. ஆள்வோரின் மற்றும் அதிகார வர்க்கத்தின் உள்ளத்தில் இந்த மனுநீதிதான் மண்டிப்போய் கிடக்கிறது.

இந்நிலை மாறாதவரை முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் நடக்கத்தான் செய்யும். இந்த அவலநிலை மாறி, சட்டத்தின் முன் முஸ்லிம்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமெனில் முஸ்லிம் மக்கள் திரண்டெழுந்து வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.

உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த அநியாயங்களுக்கு எதிராக உரத்து உரிமை முழக்கமிடவேண்டும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றக் கதவுகளை பொது நலன் வழக்குப்போட்டு ஓங்கித் தட்ட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் இவற்றில் இட ஒதுக்கீடு பெற்று, ஆளும் இடத்திற்கு முஸ்லிம்கள் வரவேண்டும்.

(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்கள் விஷயத்தில் (இதுவே நமது) வழி முறையாகும். நமது வழி முறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்!

அல்குர் ஆன் 17 : 76, 77

24.04.2013. 11:55 AM

ஊனமுற்றோருக்காக போராடுவீர்களா?

மாற்றுத் திறனாளிகளின் வேலை வாய்ப்புக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தலாமே?

முஹம்மது, துபாய்

மாற்றுத் திறனாளிகள் எனும் உடல் ஊனமுற்றவர்களுக்காக உதவுவதும் அவர்களின் உணவு உடை மற்றும் தேவைகளுக்காக தக்க ஏற்பாடு செய்வதும் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஊனமுற்றவர்களுக்கு பேருந்து, இரயில்களில் கட்டணச் சலுகை, தனி இருக்கைகள் ஒதுக்குதல் மாதந்தோறும் அவர்களுக்கு உதவி வழங்குதல் போன்ற திட்டங்களை நாம் வரவேற்கலாம்.

ஆனால் மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக பிறரைப் பாதிக்கும் வகையிலான வேலைகள் அவர்களுக்கு வழங்குவதை நாம் ஆதரிக்க முடியாது.

அரைகுறைப் பார்வையுள்ள ஒருவரை ஆசிரியராக நியமித்து மாணவர்களின் பரீட்சை பேப்பரைத் திருத்தும் பொறுப்பை நியமித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். கண்ணுக்கு பக்கத்தில் வைத்து பேப்பரைப் பார்க்கும் பல ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு காட்டும் கருணை மற்றவர்களுக்கு அநீதி இழைப்பதாக அமையக்கூடாது.

அது போல் கண் தெரியாதவர்களையும் காது கேளாதவர்களையும் மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக ஆசிரியர்களாக நியமிக்கின்றனர். வாய் பேசுவது மட்டும் ஆசிரியர் பணிக்குப் போதுமா? மாணவர்களைக் கவனிக்க வேண்டாமா? மாணவர்கள் வகுப்பறையில் பாடத்தைக் கவனிக்கிறார்களா என்பதை வாயை மட்டும் வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா? இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுபோல் செவிட்டுத் தன்மை உள்ளவர் அதிகாரியாகவோ, ஆசிரியராகவோ நியமிக்கப்பட்டால் மக்களின்/ மாணவர்களின் கருத்தை அவர் எப்படி புரிந்து கொள்வார்? மற்றவர்களைப் பாதிக்கும் இது போன்ற வேலைகளை எப்படி வழங்க முடியும்.

கால் ஊனமுற்றவர்கள், கைகள் ஊனமுற்றவர்கள் மற்றும் பார்வையற்றவர்களை போலிசிலோ இராணுவத்திலோ சேர்க்க மாட்டார்கள். இவர்களால் இப்பணியைச் செய்ய முடியாது என்பது தான் காரணம். இதே காரணம் அரசு அதிகாரிகள் பணி, ஆசிரியர் பணி போன்றவற்றுக்கும் பொருந்தும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நன்மை செய்கிறோம் என்ற பெயரில் நாட்டின் முன்னேற்றத்திற்கு இவர்கள் கேடு செய்கிறார்கள். பலரது எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.

இவ்வாறு செய்வதை விடுத்து ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் ஊனத்திற்கு ஏற்ப மற்றவர்களைப் பாதிக்காத வகையில் ஏதேனும் வேலை இருந்தால் வழங்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் மாதந்தோறும் அவர்களுக்கு எவ்வித வேலையும் இல்லாமல் ஊதியம் வழங்கலாம்.

கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ் கேட்கும் போது கவனிக்கும் பல விஷயங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கும் போது கவனிக்காமல் முட்டாள்தனமாக சட்டத்தை உருவாக்குகின்றனர். இதை நாம் எதிர்க்க வேண்டுமே தவிர ஒருக்காலும் ஆதரிக்க முடியாது.

22.04.2013. 15:20 PM

ரேஷன் கார்டு தேவை தானா?

கேள்வி :

'ரேசன் கார்டு' எனும் குடும்ப அட்டை முறை, நம் நாட்டில் இருந்தால் நல்லதா...? ஒழிந்தால் நல்லதா...?

- சாமு. அப்துல் காதர், நாகூர்

பதில் :

இது போன்ற நிர்வாக நடைமுறைகள் காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியது என்பதால் பொதுவாக ஒரு நிலைபாட்டை நாம் எடுக்க முடியாது.

ஒரு காலத்தில் ரேஷன் கார்டு அவசியமாக இருக்கும். இன்னொரு காலத்தில் அது தேவையற்றதாக ஆகி விடும்.

1965 முதல் 1967 வரை தமிழகத்தில் கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. காசு கொடுத்தால் கூட சந்தையில் அரிசி கிடைக்கவில்லை. எலிக்கறி சாப்பிடுங்கள் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். எலிக்கறி தின்னச் சொன்ன காங்கிரசுக்கா ஓட்டு என்று திமுகவினர் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ரேஷன் கடையில் வாரத்துக்கு ஒரு நாள் புளுத்துப்போன அரிசியைப் போடுவார்கள். இதை வாங்குவதற்காக காலை நான்கு மணிக்கே ரேஷன் கடை வாசலில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் கியூ நிற்க ஆரம்பித்து விடும். அரிசிக்கு பழகிப்போன மக்கள் நரிப்பயறு, பணிப்பயறு, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றைச் சாப்பிட்டு வாழும் நிலையில் ரேஷன் அரிசி தான் கை கொடுத்தது. இந்தக் கால கட்டத்தில் ரேஷன் முறை அவசியமாக இருந்தது. இல்லாவிட்டால் ஆயுதப் புரட்சி ஏற்பட்டு இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

ஆனால் இன்று ரேஷனில் போடப்படும் புளுத்துப் போன அரிசியை அதிகமான மக்கள் வாங்குவதில்லை. வாங்கும் சிலரும் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துகின்றனர். அல்லது கால்நடை உணவு தயாரிக்கும் நிறுவனத்துக்கு கிலோ ஆறு ரூபாய் என்ற கணக்கில் விற்று விடுகின்றனர். மக்களால் வாங்கப்படாத அரிசியை வழங்கியதாகக் கணக்குக் காட்டி ரேஷன் கடை உரிமம் பெற்றவர்கள் விற்று சம்பாதிக்கின்றனர்.

மேலும், அரிசியைப் பொருத்தவரை உற்பத்தியானதில் இருந்து ஒரு வருடம் வரைதான் பயன்படுத்தலாம். நல்ல முறையில் பராமரித்தால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தலாம். ஆனால், விவசாயிகளிடம், லெவி என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் அரிசியைச் சேமித்து வைக்கப் போதுமான கிடங்குகள் இல்லை. திறந்த வெளியில் போட்டு மூடி வைக்கின்றனர். பத்து ஆண்டுகள் பதினைந்து ஆண்டுகள் ஆகியும் அதை விநியோகமும் செய்யாமல் நீதிமன்றங்கள் கண்டிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. உண்ணத் தகுதியற்ற, மக்களுக்குக் கேடு விளைவிக்கின்ற அந்த அரிசியைத் தான் இவர்கள் விலையில்லா அரிசி என்று வழங்குகின்றனர்.

ஏழை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கட்டாயக் கொள்முதல் செய்வதும், சேமித்து வைக்க வசதிகள் இல்லாமல் இருந்தும் மீண்டும் கொள்முதல் செய்வதும் அந்த உணவுப் பொருட்கள் வீணாகிப்போன பின் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதும் இப்போது ரேஷன் அவசியமில்லை என்ற முடிவுக்கு நம்மைத் தள்ளுகின்றன.

அரிசி மட்டும் இல்லாமல் ரேஷனில் போடப்படும் எல்லாப் பொருட்களும் இந்தத் தரத்தில் தான் இருக்கும். நல்ல தரத்தில் இருந்தால் சரியான எடையுடன் தரப்படாது. இதை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி மாதம் தோறும் இதற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டு குடும்பத்துக்கு ஆயிரமோ, ஐநூறோ மாதம் தோறும் கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான அரிசியை மக்கள் வாங்கிக் கொள்வார்கள். ஊழலுக்கு இதில் வாய்ப்பு குறைவு. உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து பாழாக்குவதால் ஏற்படும் இழப்புகளும் இருக்காது. ரேஷன் கடை வாடகை ஊழியர் சம்பளம் அதிகாரிகளுக்கான சம்பளம் போன்றவை மிச்சமாகும்.

இன்று உலக நிலவரத்தைப் பார்க்கும் போது உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போக வாய்ப்பே இல்லை. அப்படி ஏற்பட்டாலும் உடனடியாக இறக்குமதி செய்து சமாளித்து விடலாம். எனவே லெவி முறையில் ஏழை விவசாயிகளிடம் அரிசியை வாங்கிக் சேமிக்கிறோம் என்ற பெயரில் வீணாக்கும் அவசியம் இந்த நவீன யுகத்தில் இல்லை.

இப்போது தேவை பணம் தான். அரசாங்கம் மக்களுக்குப் பணமாகக் கொடுத்தால் அரசுக்கும் நல்லது. லாபமானது. மக்களுக்கும் நல்லது. பயனாளிகளுக்கு இதன் பயன் உறுதி செய்யப்படும். ஓட்டுக்களை அறுவடை செய்வதற்குக் கூட இது தான் நன்கு பயன்படும்.

ரேஷன் கார்டு என்பது ரேஷன் முறையில் உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது இந்தக் குடும்ப அட்டை முகவரிச் சான்றாகவும், அடையாள அட்டையாகவும், பயன்பட்டுக் கொண்டிருப்பதால் இதற்கு மாற்றுவழி காணும் வரை இதன் அவசியம் கருதி இதை ஒழிப்பது சரியானதல்ல. அதற்கான மாற்று வழியைக் கண்டால் இது தேவையில்லாமல் ஆகிவிடும்.

07.06.2012. 7:00 AM

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்?

உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்?

- ஏ. அப்துல் நாசர், திருச்சி-1.

முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக இருந்தாலே நம் நிலை இப்படித்தான் இருக்குமோ என்ற கருத்தை விதைக்கின்றனர்.

ஆனால் உலகில் எல்லா மக்களையும் தான் துன்பங்கள் தொடர்கின்றன. முஸ்லிம்களை விட அதிகத் துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவோரும் துன்பங்களை அனுபவிப்போரும் அதிகமாக உள்ளனர்.

எத்தனையோ நபிமார்கள் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அது போல் நல்ல மக்கள் இன்றும் பல சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அது போல் கெட்டவர்களும் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்; உள்ளாக்கப் படுகின்றனர்.

இந்த உலகில் ஏற்படும் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் பொதுவான ஒரு காரணத்தைக் கூற முடியாது. ஒவ்வொரு மனிதனின் துன்பத்துக்கும் வெவ்வேறு காரணம் இருக்கலாம். அல்லது மறுமையில் பெரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக இறைவன் சோதிக்கலாம். எனவே முஸ்லிம்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற கற்பனை வாதத்தில் இருந்து விடுபடுங்கள். இது போன்ற தவறான எண்ணத்தை விதைப்பதால் சமுதாய மக்களுக்கு அதிக மன அழுத்தம் தான் ஏற்படும்.

உணர்வு 16:8

21.11.2011. 5:49 AM

திருட்டுக்கு கையை வெட்டுதல் நிபந்தனை உண்டா?

உரை:பீ.ஜைனுல் ஆபிதீன்

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள்

நிர்பந்தம் காரணமாக முஸ்லீம் அல்லாதவர்களின் மதசடங்குகளுக்கு உதவி செய்யலாமா?

உரை:பீ.ஜைனுல் ஆபிதீன்

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள்

More Articles …