Sidebar

19
Thu, Sep
1 New Articles

கூடங்குளம் அணுமின் திட்டம் தேவையா?

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கூடங்குளம் அணுமின் திட்டம் தேவையா?

கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தச் சொல்லி உள்ளூர் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது. சில அரசியல் கட்சிகள் ஆதரவு தருகிறார்கள்., அணுமின் நிலையத்தால் மக்களுக்கு நன்மையா தீமையா விளக்கவும் ?

- அபுதாஹிர், தாராபுரம் திருப்பூர்

கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு என்ன?

- கடையநல்லூர் மசூது

நவீன வசதிகள் எதை எடுத்தாலும் அதற்கு அதிகமான விலையை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நவீன வாகனங்கள் மூலம் நாம் சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. ஆனால் வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுக்களால் காற்று மாசுபடுகிறது. கெட்ட காற்றை சுவாசித்து நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்கிறோம்.

அது போல் குளிர் சாதனங்களால் நாம் சொகுசாக வாழ முடிகிறது என்றாலும் இதன் காரணமாக ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்து பெரிதாகி வருகின்றது. சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கெட்ட கதிர்களை ஓஸோன் படலம்தான் வடிகட்டி பூமியை சூரியனின் கேட்டில் இருந்து பாதுகாக்கிறது. அந்தப் பாதுகாப்பை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.

மேற்கண்ட சாதனங்களுடன் டிவி, கம்ப்யூட்டர் இன்னும் எண்ணற்ற இயந்திரங்கள் காரணமாக பூமி அதிகமாக வெப்பம் அடைந்து வருகிறது. பனிப்பாறைகள் உருகி கடலில் கலந்து கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. நாளடைவில் பல ஊர்கள் கடலுக்கு இரையாகி விடும் என்று அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஐம்பது கோடி மக்கள் இருந்த போது அரிசி கிடைக்கவில்லை. ரேஷன் மூலம்தான் வாராந்தோறும் புளுத்த அரிசியை வாங்கும் நிலை இருந்தது. விவசாயத்தைப் பெருக்குவதற்காக நவீன ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் தான் உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது. ரசாயன உரங்களால் தான் உணவுப் பொருள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. ஆனால் இந்த உணவுப் பொருள்கள் நமது உடல் நலனைக் கெடுத்து வருவதை இன்னொரு பக்கம் நாம் உணர்கிறோம்.

சில நோய்களுக்காக நாம் உட்கொள்ளும் மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும் அந்த நோயில் இருந்து விடுபட்டால் போதும் எனக் கருதி அதையும் சகித்துக் கொள்கிறோம்.

 செல்போன் பேசுவதால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மூளையைச் சிறிய அளவில் பாதிக்கும் என்ற போதும் காதின் கேட்கும் திறன் பாதிக்கும் என்ற போதும் நாம் அதைச் சகித்துக் கொள்கிறோம்.

அதிகப்படியான வெளிச்சம் கூட கண்களைப் பாதிக்கும் என்ற போதும் நாம் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். எந்த நவீன முன்னேற்றமாக இருந்தாலும் அதனால் நமக்குப் பல கேடுகளும் சேர்ந்தே ஏற்படுகின்றன.

இன்றைக்கு நமக்கு மின்சாரம் என்பது மிக அவசியமான ஒன்றாக ஆகி விட்டது. மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை என்பதற்காக ஆட்சியையே மாற்றும் அளவுக்கு அது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

நிலக்கரி மூலமும் தண்ணீர் வீழ்ச்சியின் மூலமும் காற்றாலை மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே தான் குறைந்த செலவில் அதிக மின்சாரம் பெறும் நோக்கத்தில் அணு மின்சாரம் தயாரிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டது.

எந்த வகை மின்சாரத்தையும் விட அணு மின்சாரம் அதிக லாபமானது என்பது உண்மைதான்.

ஆனால் இதில் ஆபத்தும் அதிகம்தான். அணு உலை வெடித்தால் பல உயிர்கள் பலியாகும், பலருக்கு உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்படும், பயிர் பச்சைகளும் கூட பாதிக்கப்படும், அந்தப் பகுதி வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்றெல்லாம் இதன் ஆபத்துகளைப் பட்டியலிடுகிறார்கள். மேலும் அணுக்கழிவுகளை அழிப்பதும் அதிக காலம் பிடிக்கக் கூடியது. இப்படி இன்னும் பல கேடுகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

அணு உலை வெடித்தால் ஆபத்து அதிகம் என்பது உண்மைதான். ஆனால் வெடிப்பதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அணு விஞ்ஞானிகளும் மத்திய அரசும் சொல்கின்றனர்.

இதுதான் இப்போதுள்ள பிரச்சினை. மக்கள் அஞ்சும் போது அந்த அச்சம் விலகும் வரை அணு உலையின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதுதான் நல்லது. ஏனெனில் அந்தப் பகுதி மக்கள்தான் அணு உலை வெடித்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள்.

ஆனாலும் அவர்களை விட அணு உலையில் பணியாற்றும் விஞ்ஞானிகளும், பல்லாயிரம் பணியாளர்களும் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் அங்கே பணிபுரிகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அதன் பாதுகாப்பு அம்சத்தில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த திட்டத்தைத் துவக்கும் போதே இதற்கு எதிராக இவ்வளவு கடும் எதிர்ப்பைக் காட்டி இருந்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு இறுதிக் கட்டம் வரை மத்திய அரசு வந்திருக்காது.

நம்முடைய பணம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு நாளைக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலையில் மக்களை அமெரிக்காவின் கைக்கூலி என்று விமர்சிக்கப்படும் உதயகுமார் வகையறாக்கள் தூண்டி விடுகின்றனர், பீதியைக் கிளப்பி விடுகின்றனர். இந்த அணு உலை ரஷ்யாவின் ஒத்துழைப்போடு முடிக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்படிருந்தால் நிச்சயம் பாதிரிகளும், உதயகுமார்களும் இவ்வளவு எதிர்ப்பு காட்டியிருக்க மாட்டார்கள் என்ற பிரச்சாரத்தில் அர்த்தம் உள்ளதையும் நாம் மறந்து விட முடியாது.

உணர்வு 16:12

16.12.2011. 9:51 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account