Sidebar

19
Wed, Aug

குடல்வால் எனும் பயனற்ற உறுப்பு ஏன்?

கடவுள் என்று ஒருவன் இருந்தால் ஒரு பயனும் இல்லாத குடல்வால் எனும் உறுப்பை ஏன் படைக்க வேண்டும்? இதற்கு முஸ்லிம்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா என்று சில பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்களே? இதற்கு என்ன பதில்?

ஷரஃபுத்தீன்

இறைவன் செய்யும் எதுவும் தக்க காரணத்துடன் தான் இருக்கும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. தக்க காரணம் இருக்கும் என்பதால் அந்தக் காரணங்கள் அனைத்தும் மனிதனுக்குத் தெரியும் என்பது அர்த்தமல்ல.

இப்போது குடல்வால் பற்றி கேட்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இன்னும் ஏராளமான விஷயங்கள் பற்றி ஞானமில்லாமல் கடவுளைக் கேள்வி கேட்டார்கள். அவற்றின் பயன்கள் குறித்து இப்போது மனிதன் கண்டறிந்து விட்டான். குடல்வால் எனும் உறுப்பு மனிதனுக்கு ஏன் என்ற கேள்வியும் இது போன்றது தான்.

ஆனால் இது கூட சரி இல்லை. ஏனெனில் குடல்வால் எனும் உறுப்பால் ஒரு பயனும் இல்லை என்று நீண்ட காலமாக இருந்து வந்த கருத்து இப்போது உடைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீற்று எனும் இணைய தளத்தில் குடல்வால் மூலம் மனிதனுக்கு நன்மை உள்ளது என்று கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நமது உடலில் சிறு குடலும், பெருங்குடலும் இணையும் இடத்தில் குடல்வால் என்றொரு உறுப்பு உள்ளது. ஒரு புழுவின் வடிவத்திலான பை போன்ற இந்த உறுப்பு நான்கு அங்குல நீளமும், அரை அங்குல விட்டமும் உடையது. இந்தக் குடல்வால் உடலுக்கு தேவையில்லாத உறுப்பு என்றே கருதப்பட்டது. மூளை, இதயம், தோல் போன்ற உறுப்புகள் மனிதன் உயிர்வாழ அவசியமானவை. ஆனால் குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர் வாழமுடியும். டான்ஸில், ஞானப்பல், உடல் ரோமம் போன்றவையும் உடலுக்கு தேவையற்ற உறுப்புகள் என்றே கருதப்படுகின்றன.

நகங்கள், கால் பெருவிரலின் ரோமங்கள், காதுகளின் தொங்கு தசை இவையெல்லாம் மனிதன் உயிர் வாழ அவசியம் தானா? இந்த தேவையற்ற உறுப்புகள் உடலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வது மட்டுமன்றி, நோய்த் தொற்றுகளுக்கு இலக்காகி நம்முடைய நிம்மதியைக் கெடுக்கின்றன. இது போன்ற தேவையற்ற உறுப்புகளை நாம் நம்முடைய உடலில் இருந்து ஏன் அப்புறப்படுத்தக் கூடாது என்பது போன்ற கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல. நம்முடைய உடலில் தேவையற்ற உறுப்புகளாகக் கருதப்படுபவை நாம் எந்த இடத்தில் வாழ்கிறோம் என்பதையும், எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்பதையும் பொறுத்து அவசியமான உறுப்புகளாக மாறி விடுகின்றன. நவீன மருந்துகளை உற்பத்தி செய்வதில் இது பற்றிய ஆய்வுகள் பயன்படுகின்றன. மேலும் நம்முடைய மூதாதையர்களைப் பற்றிய அறிவும் இந்த ஆய்வுகள் மூலம் நமக்குக் கிடைக்கிறது. வில்லியம் பார்க்கர் என்னும் அறிஞர் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறித்து ஆராய்வதில் ஆர்வமுடையவர். ஆனால் அவருடைய ஆய்வு அவரையறியாமலேயே குடல்வால் பற்றிய ஆய்விற்கு இட்டுச்சென்றது. உணவைச் செரிக்கும் வேலையை சிறுகுடல் செய்யும் போது, குடல்வால் வெறுமனே அந்த இடத்தில் உட்கார்ந்திருப்பதாக அவர் நினைக்கவில்லை.

மனித உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றுள் நன்மை செய்பவையும், தீமை செய்பவையும் உண்டு. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவைச் செரிக்க வைப்பதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பாக்டீரியாக்களை செழிக்கச் செய்வது கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு சமம். இவ்வாறு செழிப்படைந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உயிர்ப் படலங்களாக குடல்வாலின் சுவர்களை ஆக்கிரமித்துக் கொண்டு தீமை செய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. குடல்வால் எனும் உறுப்பு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என்பதும், தீமை செய்யும் பாக்டீரியாக்கள் உடலைத் தாக்கும் போது நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வெளிப்பட்டு உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது என்பதும் வில்லியம் பார்க்கரின் கருத்தாகும்.

என்று குறிப்பிட்டுள்ளனர்.

விஞ்ஞானி வில்லியம் பார்க்கர் அவர்களின் ஆய்வின் மூல நூலை வாசித்தவர்கள் இது பற்றிய பகுதியை அனுப்பினால் அதையும் இத்துடன் இணைத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வின் படைப்பில் ஒரு பயனும் அற்றவை என்று மனிதன் நினைத்தால் அதை அவன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று அர்த்தமே தவிர பயன் இல்லை என்று அர்த்தமல்ல.

ஆதாரத்துக்கு பார்க்க

http://www.dukemagazine.duke.edu/issues/030408/depqa.html

www.dukemagazine.duke.edu/issues/030408/depqa.html

13.01.2012. 11:41 AM

நோன்பின் நன்மைகள் குறித்து இந்து நாளேடு 17-1-2019 வெளியான இந்து நாளிதழில் நோன்பின் நன்மைகள் குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காண்க நோன்பின் நன்மைகள் குறித்து பீஜே அவர்கள் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் எழுதிய ஆக்கத்தைக் காண்க நோன்பு நல்லது  

எழுத்தாளர் சுஜாதாவின் பார்வையில் குர்ஆன்

"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்ன தான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.

நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.

அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத் தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.

காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.

'சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!'

'திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை

படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்

உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்'

என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம் தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."

–சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)

More Articles …

Page 2 of 3