Sidebar

27
Thu, Aug

ஒளியிலிருந்து

-பி.ஜே

(1986 ஆம் ஆண்டு பீஜே அந்நஜாத் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த போது செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரை)

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; இறுதி நபியாகவும், மறுமையில் ஷஃபாஅத் என்னும் பரிந்துரை செய்வர்களாகவும், மாகமுன் மஹ்மூத் என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த சிறப்புக்கள் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டிவிடுவது மிகப் பெரும் குற்றமாகும். காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்புகள் அல்லாஹ் சொல்லாமல் நாமாக அறிந்து கொள்ள இயலாத ஒன்றாகும்.

இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஷைத்தான் உங்களைக் கெடுத்து விடவேண்டாம் நான் அப்துல்லாவின் மகன் முஹம்மதாவேன், மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்.

நூல் : அஹ்மத், பைஹகீ, ஸுனன் ஸயீது இப்னுமன்ஸுர்

எனது தகுதிக்கு மேல் என்னை உயர்த்தாதீர்கள் ! ஏனெனில் அல்லாஹ் என்னை அவனது தூதராக ஆக்குமுன்பே என்னை அவனது அடியானாக ஆக்கி விட்டான்.

நூல்கள் : ஹாகீம், தப்ரானி

 கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் மீறிப் புகழாதீர்கள்!

நூல்கள் : புகாரி, தாரமி, அஹமத், ஷமாயில் திர்மிதீ, மஜ்வுல் பவாயித்

மேற்கூறிய மூன்று நபிமொழிகளிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை வரம்பு மீறிப் புகழ்வதைக் கண்டித்துள்ளார்கள். அவர்கள் உத்தரவுக்கு மாற்றமாகப் புகழ்கிறோம் என்ற எண்ணத்தில் வரம்பு மீறுவது உண்மையில் புகழாகாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகிவிடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்டபின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாக நுழைவோம்.

முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்கின்றது. ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாவுக்கும், ஆமீனாவுக்கும் மகனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். ஈஸா (நபி) தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ, அப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இது தான் குர் ஆன் ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

 இன்னும் அவன் தான் மனிதனை (ஒரு குறிப்பிட்ட) நீரிலிருந்து படைத்தான்

(அல் குர் ஆன் 25 :54)

 அவனை நாம் விந்துவிலிருந்து படைத்தோம் என்பதை மனிதன் அறிய வேண்டாமா?

(அல் குர் ஆன் 36 :77)

இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப் பொருளாக விந்துத் துளியையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

 களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்.

(அல் குர் ஆன் 32:7)

 அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான்.

(அல் குர் ஆன் 35 :11)

இது போன்ற ஏராளமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

இதற்கு மாற்றமாக

முதலில் அல்லாஹ் , முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான் . அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புக்களையும் படைக்கத் துவங்கினான் என்று கூறுவது திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுவதாகும்.

 களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அல்லாஹ்) துவக்கினான்.

(அல்குர் ஆன் 32:7)

இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராயந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே களிமண்தான் என்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களி மண்தான் மனிதப் படைப்பின் துவக்கம் ,ஆரம்பம், என்று அல்லாஹ் கூறிகொண்டிருக்க, இல்லை! முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளிதான் ஆரம்பம் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு தாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித் தனமாகவும் தோன்றவில்லையா? (நவூதுபில்லாஹ்)

அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும், நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறவே இல்லை. நபி (ஸல்) அவர்களும் தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான் என்று கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படவில்லை.

இந்தக் கதையைக் கட்டி விட்டவர்கள் முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற ஹதீஸ் நூலில் இது உள்ளதாக ஆதாரம் காட்டிக் கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளாக இது நம்பப்பட்டு வந்தது. வழிகெட்ட பரேலவிகள் இந்த முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் எனற நூலையே தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூல் உண்மையும், பொய்யும் கலந்த ஒரு நூல் . அது ஆதாரமாக எடுத்து வைக்கும் அளவுக்கு உயர்ந்த நூல் அல்ல என்பதால் அறிஞர்கள் அந்த நூலுக்கு முக்கியத்துவம் தரவில்லை . அவர்கள் கூறுவது அந்த நூலிலாவது இருக்கிறதா என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தர்ஜுமானுல் ஹதீஸ் என்ற மாத இதழின் ஆசிரியர், இஹ்ஸான் இலாஹி ழஹீர் என்ற அறிஞர் வரிக்கு வரி பார்வையிட்டு அந்தக் கதை அதில் இல்லை என்று கூறிய பிறகு தான். இந்த அறிவீனர்கள் எவ்வளவு துணிந்து பொய் சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மை உலகுக்குத் தெரியலாயிற்று.

(முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூல் இந்தியாவிலும் அச்சிடப்பட்டு தற்போதும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சந்தேகமுள்ளவர்கள் பார்த்துக் கொள்லாம்)

எந்த நூலில் இந்தக் கதை இருப்பதாக இதுகாலம் வரை கூறிக் கொண்டிருந்தார்களோ, எதை நம்பி, பல நூல்களில் எழுதி வைத்து சென்றார்களோ. அந்த நூலிலேயே அது இல்லை என்று நிரூபணமாகி விட்டபின், எள்ளளவும் ஆதாரமற்ற கட்டுக் கதைதான் அது என்பது ஜயத்திற்கிடமின்றி முடிவாகி விட்டது.

இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ்ப்புறத்திலும் எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக ! என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆ செய்பவர்களாக இருந்துள்ளார்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள் : புஹாரி, முஸ்லிம், அபுதாவூத், திர்மிதீ, அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் ஒளியால் உருவாக்கப்பட்டிருந்தாலோ, அவர்களே ஒளியாக இருந்திருந்தாலோ, இந்தப் பிரார்த்தனையை அடிக்கடி செய்திருக்க வேண்டியதில்லை. ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது இதை சொல்பவர்களின் நிலை என்ன ?

நூரே முஹம்மதியா எனறு கூறித் திருபவர்களின் நிலை என்ன? அதையும் அல்லாஹ்வின் தூதரே தெளிவுபடுத்துகிறார்கள்.

எவன் என்மீது திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்கிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் . இந்த நபிமொழி இடம்பெறாத ஹதீஸ் நூலே இல்லை.

முதவாதிர் என்ற அந்தஸ்து பெற்ற ஹதீஸ்களில் முதலிடத்தை வகிக்கின்ற ஹதீஸ் இது. இதற்கு ஆதாரம் குறிப்பிடக் கூற வேண்டாத அளவு , எல்லா ஹதீஸ் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை மீறி துணிந்து இப்படிப் பொய்யைப் பிர்ச்சாரம் செய்வர்கள் எங்கே செல்ல விரும்புகின்றனர்?

நபி (ஸல்) அவர்களின் உண்மையான தனி சிறப்புக்களைச் சொல்லவே நேரம் போதவில்லை. அவர்களின் ஒழுக்கம், நேர்மை, தூய்மையான அரசியல், சிறந்த இல்லறம், வணக்க வழிபாடு, அவர்களின் வீரம் , தியாகம், போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள். மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த போது ஏற்பட்ட கிரகணத்திற்கு ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டிய போது நபி (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக்கண்டித்துள்ள வரலாறு ( புஹாரி, முஸ்லிம்) எவரும் அறிந்த ஒன்று

இந்தக் கதையை அடிப்படையாக வைத்து நபி (ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது என்ற துணைக்கதை வேறு. இதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது. இது போன்ற பொய்களைக் கூறி நரகத்திற்கு ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்.

17.04.2013. 23:30 PM

நபி அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதை ஹிஜ்ரத் ஆண்டின் கணக்கின் அடிப்படையில் நபிகளார் பிறந்த ஆண்டைக் கண்டுபிடிக்கலாம்.

தற்போது ஹிஜ்ரி 1433 ஆண்டாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து 1433 ஆண்டுகள் ஆகியுள்ளது. நபிகளார் நாற்பது வயதில் இறைத் தூதராகிறார்கள். இறைத்தூதரான பிறகு 13 வருடங்கள் மக்காவில் இருந்தார்கள். அதன் பின்னரே ஹிஜ்ரத். செய்தார்கள். எனவே அவர்கள் பிறந்த வருடத்தை அறிந்து கொள்ள 1433 உடன் 53 வருடத்தை நாம் கூட்ட வேண்டும். கூட்டினால் 1486 வருடங்கள்.

தற்போது உள்ள 2012 வருடத்தில் 1486 ஐ கழித்தால் 526 கிடைக்கும்.

நபிகளார் பிறந்து 1486 வருடங்கள் என்பது சந்திரகணக்கின் படி உள்ளதாகும். கி.பி. என்பது சூரிய வருடக்கணக்கில் உள்ளதாகும்.

எனவே சந்திரக் கணக்கை சூரியக் கணக்கிற்கு மாற்ற வேண்டும்.

சந்திர கணக்கின் படி வருடம் என்பது 354.37 நாட்களாகும். இதில் சூரிய வருடத்தைக் கழித்து பார்த்தால் 365-354=11 நாட்கள் வித்தியாசம் வருகிறது. வருடத்திற்கு 11 நாட்கள் வித்தியாசம் என்றால் 1486 வருடங்களுக்கு 1486 ல 11=16346 நாட்களாகும்.

இதை சூரிய கணக்கின்படி வகுத்தால் 16346-365=44.78 ஆகும்.

44 வருடங்கள் வித்தியாசம் வருகிறது. இதை 526 உடன் கூட்டவேண்டும். கூட்டினால் நபிகளாரின் பிறப்பு சூரிய கணக்கின்படி வரும். 526+44=570 ஆகும். நபிகளார் பிறந்தது கி.பி. 570 ஆகும்

16.04.2014. 8:25 AM

நபித்துவ முத்திரை என்பது உண்மையா?

அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது 1996 ஜனவரியில் அளித்த பதில்

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் இரு புஜங்களுக்கிடையே நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது புறாமுட்டை போன்று இருந்தது என்று ஸாயிப் பின் யஸீது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 190 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூவமான ஹதீஸா? ஆம் எனில் அந்த முத்திரை நபிகள் நாயகம் (ஸல்) பிறக்கும் போதே இருந்ததா?

மு.யூசுப் ரஹ்மத்துல்லாஹ் சேட், மத்திய சிறை, திருச்சி

(கேள்வி கேட்டவர் நாகூர் கலவரத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தள்ளாத வயதில் கைத்தடி ஊன்றி நடக்கும் நிலையில் இருந்த அவரை கலவர வழக்கில் அப்போதைய அரசு கைது செய்தது. அவர் சிறையில் இருந்த போது இக்கேள்வியைக் கேட்டார்.)

நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் தோள்புஜத்தில் புறா முட்டை போன்ற சதை இருந்தது என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் சான்றுகளாக உள்ளன.

باب حدثنا عبد الرحمن بن يونس قال حدثنا حاتم بن إسماعيل عن الجعد قال سمعت السائب بن يزيد يقول ذهبت بي خالتي إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن ابن أختي وجع فمسح رأسي ودعا لي بالبركة ثم توضأ فشربت من وضوئه ثم قمت خلف ظهره فنظرت إلى خاتم النبوة بين كتفيه مثل زر الحجلة

190 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சிறிய தாயார் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக் கொடுத்து எனது பரக்கத் வேண்டி பிரார்த்தித்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் உளூ செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதை நான் அருந்தினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது.

நூல் : புகாரி 190

ஸல்மான் பார்ஸி அவர்கள் அந்த அடையாளத்தைப் பார்த்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபியென அறிந்து கொண்டதாக அஹ்மதில் சில ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. முஹம்மத் (ஸல்) அவர்களின் தனிப்பட்ட அடையாளமாக முந்தைய வேதங்களில் இது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் ஊகம் செய்யலாம்.

இந்த அடையாளத்தை நபித்துவ முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை. வருவோர் போவோரிடமெல்லாம் அந்த அடையாளத்தைக் காட்டி இந்த அடையாளம் இருப்பதால் நான் நபி என நபிகள் நாயகம் (ஸல்) வாதிட்டதாகவும் எந்த ஹதீஸும் இல்லை.

தம் வாழ்நாளில் முதுகுப் பகுதியைப் பெரும்பாலும் அவர்கள் மறைத்தே இருந்தனர். அது விலகக் கூடிய ஓரிரு சந்தர்ப்பங்களில் ஓரிரு நபித்தோழர்கள் அதைப் பார்த்துள்ளனர். நபி என்பதற்கே அது தான் அடையாளம் என்றால் அதைக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவத்தை வாதிட்டிருப்பார்கள்.

ஒரு நபரைப் பற்றி அடையாளம் கூறும் போது அவரது கண், வாய், உயரம், நிறம், மச்சம் மற்றும் பல அடையாளங்களைக் கூறுவோம். அது போன்ற அடையாளமே இது.

வேறு யாரிடமும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மட்டும் அது காணப்பட்டதால் நபித்தோழர்களில் சிலர் அதை நபித்துவ முத்திரை என்று புரிந்து குறிப்பிட்டனர். இப்படித் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி என்பதற்கான ஆதாரமாக இறைவன் இட்ட முத்திரை என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு இருந்திருந்தால் அதை அனைத்து மக்களிடமும் நபிகள் நாயகம் (ஸல்) காட்டி தமது நுபுவ்வத்தை நிரூபித்திருப்பார்கள்.

அந்த சதைப் பகுதியில் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று பதியப்பட்டிருக்கும் என்றெல்லாம் சிலர் கூறுவர் . இது ஆதாரமற்ற பொய்யாகும். எந்த ஹதீஸ் நூலிலும் இவ்வாறு கூறப்படவில்லை.

ஆயினும் அன்றைய நாளில் வேறு எவரிடமும் காணப்படாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மாத்திரம் அது இருந்தது என்பதும் இறுதி நபிக்குரிய பல அடையாளங்களில் ஒன்றாக அதுவும் கூறப்பட்டிருந்தது என்பதும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

27.09.2010. 22:59 PM

நபிகளாருக்கு ஸஃபர்  மாதத்தில் தான் நோய் ஏற்பட்டதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஃபர்  மாதத்தில் புதன் கிழமையில் நோய் ஏற்பட்டதால் அன்றைய நான் பீடை நாள் என்று கூறுகிறார்கள். நபிகளாருக்கு சஃபர் மாதத்தில் தான் நோய் ஏற்பட்டதா?

பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல நேரங்களில் நோய் ஏற்பட்டிருந்தாலும் இறுதி காலத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாக நபிமொழிகளில் அதிகம் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري

1330 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ هِلاَلٍ هُوَ الوَزَّانُ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: «لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا»، قَالَتْ: وَلَوْلاَ ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

நூல் : புகாரி  1330

صحيح البخاري

198 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: لَمَّا ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ رَجُلَيْنِ، تَخُطُّ رِجْلاَهُ فِي الأَرْضِ، بَيْنَ عَبَّاسٍ وَرَجُلٍ آخَرَ. قَالَ عُبَيْدُ اللَّهِ: فَأَخْبَرْتُ  عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ فَقَالَ: " أَتَدْرِي مَنِ الرَّجُلُ الآخَرُ؟ قُلْتُ: لاَ. قَالَ: هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ " وَكَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تُحَدِّثُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ، بَعْدَمَا دَخَلَ بَيْتَهُ وَاشْتَدَّ وَجَعُهُ: «هَرِيقُوا عَلَيَّ مِنْ سَبْعِ قِرَبٍ، لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ، لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ» وَأُجْلِسَ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ طَفِقْنَا نَصُبُّ عَلَيْهِ تِلْكَ، حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا: «أَنْ قَدْ فَعَلْتُنَّ». ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்த போது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கினர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

நூல் : புகாரி  198

இது போன்ற ஹதீஸ்கள் இருந்தாலும் எந்த நாளில் எந்த மாதத்தில் இந்த நோய் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்  வரிசையில் எந்தச் செய்தியும் இடம் பெறவில்லை.

دلائل النبوة ـ للبيهقى

أخبرنا أبو عبد الله الحافظ قال أخبرنا أحمد بن كامل قال حدثنا الحسن بن علي البزاز قال حدثنا محمد بن عبد الأعلى قال حدثنا المعتمر بن سليمان عن أبيه أن رسول الله مرض لإثنتين وعشرين ليلة من صفر وبدأه وجعه عند وليدة له يقال لها ريحانة كانت من سبي اليهود وكان أول يوم مرض فيه يوم السبت وكانت وفاته اليوم العاشر يوم الاثنين لليلتين خلتا من شهر ربيع الأول لتمام عشر سنين من مقدمه المدينة

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ

நூல் : தலாயிந் நுபவா – பைஹகீ

இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர்  நபித்தோழர்  அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

الطبقات الكبرى

2241- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ ، حَدَّثَنِي أَبُو مَعْشَرٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَى يَوْمَ الأَرْبِعَاءِ لِإِحْدَى عَشْرَةَ لَيْلَةً بَقِيَتْ مِنْ صَفَرٍ سَنَةَ إِحْدَى عَشْرَةَ ، فَاشْتَكَى ثَلاَثَ عَشْرَةَ لَيْلَةً , وَتُوُفِّيَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ لِلَيْلَتَيْنِ مَضَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الأَوَّلِ سَنَةَ إِحْدَى عَشْرَةَ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் ஸஃபர் மாதம் 11 ஆம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் கைஸ்

நூல் : தபகாத்துல் குப்ரா

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஹம்மத் பின் கைஸ் என்பவர்  நபித்தோழர்  அல்ல. எனவே இந்தச் செய்தியும் தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதில் ஐயமில்லை.

மேலும் இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூமிஃஷர்  என்பவர்  பலவீனமானவராவார். மற்றொரு அறிவிப்பாளர் முஹம்மத் பின் உமர்  என்ற அல்வாகிதி என்பவர்  பொய் சொல்பவர்  என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.

எனவே இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது.

நபிகளார்  இறுதிக் காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்டது உண்மை. ஆனால் அது ஸஃபர்  மாதம் என்பதற்கும் புதன் கிழமை என்பதற்கும் ஆதாரம் இல்லை. மேலும் குறிப்பிட்ட நாளில் நோயுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

02.04.2014. 1:33 AM

More Articles …