Sidebar

29
Wed, Jul

தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ ஆதாரம் உண்டா?

கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை.

சிலர் விரும்பி ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால் நபிவழியில் அதற்கு அனுமதி உள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

மைமூனா (ரலி) வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

صحيح البخاري

117 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا [ص:35] الحَكَمُ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ إِلَى مَنْزِلِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ قَالَ: «نَامَ الغُلَيِّمُ» أَوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ قَامَ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ، حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ أَوْ خَطِيطَهُ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். சிறுவன் தூங்கி விட்டானா?' என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள். நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள். அப்போது ஐந்து ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப் புறப்பட்டார்கள்.

நூல்: புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859, 992, 1198, 4570, 4571, 4572, 5919, 6316

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ் தனியாகத் தொழாமல் நபிகள் நாயகத்துடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில் இல்லாதது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

صحيح البخاري

729 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فِي حُجْرَتِهِ، وَجِدَارُ الحُجْرَةِ قَصِيرٌ، فَرَأَى النَّاسُ شَخْصَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاَتِهِ، فَأَصْبَحُوا فَتَحَدَّثُوا [ص:147] بِذَلِكَ، فَقَامَ اللَّيْلَةَ الثَّانِيَةَ، فَقَامَ مَعَهُ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاَتِهِ، صَنَعُوا ذَلِكَ لَيْلَتَيْنِ – أَوْ ثَلاَثًا – حَتَّى إِذَا كَانَ بَعْدَ ذَلِكَ، جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَخْرُجْ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ النَّاسُ فَقَالَ: «إِنِّي خَشِيتُ أَنْ تُكْتَبَ عَلَيْكُمْ صَلاَةُ اللَّيْلِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள். அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் பார்க்க முடியும். விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 729, 924, 1129

صحيح البخاري

2012 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي المَسْجِدِ، وَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ فَصَلَّى فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ المَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ المَسْجِدُ عَنْ أَهْلِهِ، حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْتَرَضَ عَلَيْكُمْ، فَتَعْجِزُوا عَنْهَا»، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالأَمْرُ عَلَى ذَلِكَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு) வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும் மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வராமல்) பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, 'நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி விடுவீர்களோ என்று அஞ்சினேன்' என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2012

இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால் மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.

மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்னர் அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத் தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.

இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் ஒரு செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

صحيح البخاري

3316 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ كَثِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، رَفَعَهُ، قَالَ «خَمِّرُوا الآنِيَةَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ العِشَاءِ، فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً، وَأَطْفِئُوا المَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ»، قَالَ: ابْنُ جُرَيْجٍ وَحَبِيبٌ، عَنْ عَطَاءٍ «فَإِنَّ لِلشَّيَاطِينِ»

இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 3316, 6295

விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும் நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.

ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால் வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.

எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில் உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.

இது போல் தான் நபிகள் நாயகம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.

இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன் இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.

எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகத் தான் இறைவன் கடமையாக்குவான். நபிகள் நாயகம் (ஸல்) இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள் எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை கடமையாகப் போவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப் பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

வீடுகளில் தொழுவதே சிறந்தது

பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.

صحيح البخاري

731 – حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً – قَالَ: حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ – فِي رَمَضَانَ، فَصَلَّى فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ، فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ: «قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ المَرْءِ فِي بَيْتِهِ إِلَّا المَكْتُوبَةَ» قَالَ عَفَّانُ: حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مُوسَى، سَمِعْتُ أَبَا النَّضْرِ، عَنْ بُسْرٍ، عَنْ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். இதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன். மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரி 731, 6113, 7290

இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே இல்லை என்று கூறுகின்றீர்களே! மேற்கண்ட ஹதீசுக்கு என்ன விளக்கம்?

பதில் :

حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا سَأَلَهُ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ لَا يَلْبَسُ الْقَمِيصَ وَلَا الْعِمَامَةَ وَلَا السَّرَاوِيلَ وَلَا الْبُرْنُسَ وَلَا ثَوْبًا مَسَّهُ الْوَرْسُ أَوْ الزَّعْفَرَانُ فَإِنْ لَمْ يَجِدْ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الْكَعْبَيْنِ

'இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளை அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 366, 1542, 1842

இந்த ஹதீஸில் இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணியக் கூடாது என்று கூறியிருப்பதால் இஹ்ராமைக் களைந்தவுடன் அவற்றை அணிய வேண்டும் என்பது தான் பொருள் என்று கேள்வி கேட்கின்றீர்கள்.

புரிந்து கொள்வதற்கான முறையில் இதைப் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள்.

குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் மற்ற சந்தர்ப்பங்களில் அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற சந்தர்ப்பங்களில் அதைச் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நோன்பாளிகள் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றால் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்றுதான் பொருள் வரும். இரவில் கண்டிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.

ஜும்மாவுக்கு பாங்கு சொன்ன உடன் கடையைத் திறந்திருக்கக் கூடாது என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது? ஜும்மா முடிந்தவுடன் விரும்பினால் கடையைத் திறக்கலாம். திறக்காமலும் இருக்கலாம் என்று தான் புரிந்து கொள்வோம்.

அது போல தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராமுடன் இருக்கும் போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

தொப்பி அணிவது அனுமதிக்கப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது கட்டாயம் இல்லை என்பது தான் நமது நிலைப்பாடு. அந்த நிலைபாட்டுக்கு ஆதாரமாகத் தான் இந்த் ஹதீஸ் அமைந்துள்ளது.

ஒரு வாதத்துக்காக நீங்கள் புரிந்து கொள்வது போல் புரிந்து கொள்வது என்றால் மொத்த ஹதீஸையும் அவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது இஹ்ராம் அணிந்தவர் தொப்பி அணியக்கூடாது என்பதை மட்டும் இந்த ஹதீஸ் கூறவில்லை. அத்துடன் சட்டை, பேன்ட், காலுறை ஆகியவற்றையும் இஹ்ராமின் போது அணியக் கூடாது எனக் கூறுகிறது. இஹ்ராம் அல்லாத நேரத்தில் இம்மூன்றையும் அணிவது கட்டாயக் கடமை என்று நீங்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை? இதைச் சிந்தித்தால் புரிந்து கொள்வதில் உங்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தை நீங்கள் உணரலாம்.

தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.

தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

ஜமாஅதுல் உலமா தலைவர் சம்சுல்ஹுதாவுடன் ஓர் சந்திப்பு

எம். ஷம்சுல்லுஹா

1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும், வீரியத்தையும் பார்க்க முடிந்தது. அங்கு தான் ஆலிம்களின் வெறித் தனத்தையும் காண முடிந்தது. காரணம் தமிழகத்திலேயே அதிகமான அரபி மதரஸாக்கள் தஞ்சையில் தான் நிறுவப்பட்டிருந்தன.

சோழ நாடு சோறுடைத்து என்ற தஞ்சையின் மண் வளத்தைப் போலவே அங்கு வாழும் முஸ்லிம்களின் மன வளமும் அமைந்திருந்தது. அத்துடன் அந்த மக்களின் சிங்கப்பூர், மலேஷிய பயணங்கள் அவர்களது செல்வச் செழிப்பை மேலும் வளமாக்கின.

அந்த வளத்திற்குத் தக்க, தான தர்மங்கள், விருந்தோம்பல்கள் இன்று வரை அந்த மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் அடையாளச் சின்னங்கள் தான் இந்த அரபி மதரஸாக்கள்.

நீடூர், கிளியனூர், அரங்கக்குடி, அத்திக்கடை, அதிராம்பட்டிணம், கூத்தாநல்லூர், பொதக்குடி, சங்கரன்பந்தல் போன்ற பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஊர்களில் அதிகமான அரபி மதரஸாக்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆலிம்களின் சங்கமமாக தஞ்சை அமைந்து விட்டது.

இதனால் அங்கு தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பலைகள் மிக வேகமாகக் கிளம்பின. இந்த மதரஸாக்களில் முக்கியமானதாக விளங்கியது நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா என்ற மதரஸாவாகும்.

எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்கள் இந்த மதரஸாவின் அன்றைய முதல்வராக இருந்தார். அத்துடன் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும் இருந்தார்.

இம்மாதிரியான பொறுப்பில் உள்ளவர்கள் மாறி விட்டால் மொத்த சமுதாயமும் மாறுவதற்கு வாய்ப்பாக அமையுமே என்று கருதி அன்னாரிடம் சந்திப்புக்கான நாள் கேட்டோம். அது போல் அவர் சந்திப்பதற்கு நாள் வழங்கினார்.

ஒரு நாள் இரவு நேரம். இஷாவுக்குப் பின் மவ்லவி பி.ஜே., நான், பொட்டல்புதூரைச் சார்ந்த ஒரு மவ்லவி ஆகிய மூவரும் ஷம்சுல்ஹுதா அவர்கள் நீடூரில் இமாமாகப் பணி புரியும் பள்ளியில் போய் சந்தித்தோம்.

ஷம்சுல்ஹுதா அவர்கள் முன்னிலையில் அவரது மாணவர்கள் சம்மணமிட்டு உட்காரக் கூடாது; மண்டியிட்டுத் தான் உட்கார வேண்டும். இது மாணவர்கள் அன்றிலிருந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை. இந்த நடைமுறையைப் பேண வேண்டுமே என்ற விவகாரம் வந்தது.

பி.ஜே.யைத் தவிர மற்ற இருவரும் ஷம்சுல்ஹுதா அவர்களின் மாணவராக இருந்தாலும், மண்டியிட்டு அமர்வதற்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்பதால் சம்மணமிட்டுத் தான் அமர வேண்டும் என்று கண்டிப்புடன் பி.ஜே. தெரிவித்திருந்தார். அதன் படி அவர் முன்னிலையில் முதன் முறையாக மண்டியிடாமல் சம்மணமிட்டு உட்கார்ந்தோம்.

சந்திப்பு துவங்கும் முன், கையில் எடுத்துச் சென்ற டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து கொள்ளலாமா? என்று அவரிடம் பி.ஜே. அனுமதி கேட்டார். அதற்கு அவர் கூடாது என்று ஒரேயடியாக மறுத்து விட்டார்.

பி.ஜே. தனது வாதத்தைத் தொடங்கினார்.

பி.ஜே. : ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்பதற்கு என்ன ஆதாரம்?

ஷம்சுல்ஹுதா: உதாரணமாக மார்க்கத்தை பால் என்று எடுத்துக் கொண்டால் அதில் தயிர், மோர் என்று இருக்கின்றதல்லவா? அது போல் தான் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று மார்க்கம் நான்கு வகைகளில் அமைந்திருக்கின்றது.

பி.ஜே. : ஹஜ்ரத்! நான் உங்களிடம் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் கேட்கின்றேன். நீங்களோ உதாரணம் காட்டுகின்றீர்கள்.

ஷம்சுல்ஹுதா: ஏன் உதாரணம் கூறக் கூடாதா?

பி.ஜே. : உதாரணம் கூறக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆதாரத்தைக் கேட்கும் போது, குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வெறுமனே உதாரணத்தை மட்டும் கூறக் கூடாது என்கிறேன். சரி! நீங்கள் மார்க்கத்தை பாலாக சித்தரித்து உதாரணம் காட்டினீர்கள். இப்போது நான் மார்க்கத்தைத் தண்ணீர் என்று உதாரணம் காட்டுகிறேன். நீங்கள் இதில் பால் தயிர் வெண்ணை என்று பிரித்துக் காட்டுங்களேன்.

ஷம்சுல்ஹுதா: (மவ்னம் - சிறிய இடைவெளிக்குப் பிறகு) குர்ஆன் ஏழு எழுத்துக்களில் அருளப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு வசனத்திற்கு ஒரு நேர்முகக் கருத்தும் ஓர் அந்தரங்கக் கருத்தும் இருக்கின்றது. (இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு ஹிப்பான், மஜ்மவுஸ் ஸவாயித், முஸ்னதுல் பஸ்ஸார், அல்முஃஜமுல் அவ்ஸத் ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் உள்ளது) என்று வருகின்றதல்லவா? இந்த அடிப்படையில் தரீகத் என்ற மறைமுக ஞானம் இருக்கலாம் அல்லவா?

பி.ஜே. : அப்படியானால் நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். இது ஒரு வசனம். ஒவ்வொரு வசனத்துக்கும் உள் அர்த்தம் வெளி அர்த்தம் உள்ளதாக நீங்கள் கூறிய அடிப்படையில் இதற்கு வெளிரங்க, அந்தரங்கக் கருத்தைக் கூறுங்கள்.

ஷம்சுல்ஹுதா : (மவ்னம்)

பி.ஜே. : அல்ஹம்துலில்லாஹி என்று சொல்லும் போது, புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது என்பது நேரடி அர்த்தம். எந்த ஒரு நன்மையான காரியத்தின் போதும் நாம் அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்று விளங்கிக் கொள்கிறோம் அல்லவா? இது மறைமுகக் கருத்து. அவ்வளவு தானே! இதல்லாத மறைமுகக் கருத்து இதில் என்ன இருக்கின்றது?

ஷம்சுல்ஹுதா: கிழ்ர் நபி, மூஸா (அலை) சம்பவத்தில் அல்லாஹ், அல்லம்னாஹு மில்லதுன்னா இல்மா - நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம் என்று சொல்கின்றான். எனவே, இல்ம லதுன்னி (இறைவனிடமிருந்து வந்த தனிப்பட்ட ஞானம் ஆகும். அதாவது வஹ்யீயைப் போன்று வெளிப்படையாக வராத, அந்தரங்கமாக வரும் அகமிய ஞானம் ஆகும்) என்ற அடிப்படையில் அந்தரங்க, அகமிய ஞானம் ஒன்று உள்ளதல்லவா?

பி.ஜே. : லதுன் என்று வருகின்ற வார்த்தையை வைத்து அகமிய ஞானம் என்று முடிவுக்கு வருகிறீர்கள். ஜக்கரியா நபி இறைவனிடம் பிரார்த்திக்கும் போது, லதுன் என்ற வார்த்தை தான் இடம் பெறுகின்றது. அவர்கள் கேட்டது போன்று யஹ்யா என்ற குழந்தையையும் அல்லாஹ் கொடுக்கிறான். அதனால் அந்தக் குழந்தைக்கு வலத் லதுன்னி அல்லது துர்ரியத் லதுன்னி அல்லாஹ்விடமிருந்து வந்த தனிப்பட்ட குழந்தை என்று கொள்வோமா? நிச்சயமாகக் கொள்ள மாட்டோம். அது போல் தான் இந்த இல்ம லதுன்னி. இது தனிப்பட்ட ஞானத்தையெல்லாம் ஒரு போதும் குறிக்காது. எனவே கிழ்ர், மூஸா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்த அகமியக் கல்விக்கு எந்தவொரு ஆதாரமும் எடுக்க முடியாது.

ஷம்சுல்ஹுதா: (மவ்னம்)

பி.ஜே. : இறந்து விட்ட நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்ய ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? இறந்து போன நல்லடியார்கள் பதிலளிப்பார்களா?

ஷம்சுல்ஹுதா: நபி (ஸல்) அவர்கள் உஹத் போரின் போது, அதில் ஷஹீதானவர்களிடம் வழியனுப்புவது போன்று பேசிக் கொண்டிருந்தார்களே?

பி.ஜே. : நீங்கள் கூறும் அந்த நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்கள் தான் அங்கு பேசியிருக்கின்றார்கள். அங்கிருந்து ஏதேனும் பதில் வந்ததா?

ஷம்சுல்ஹுதா: அங்கிருந்து பதில் வரவில்லை.

பி.ஜே. : அங்கிருந்து பதில் வரவில்லை எனும் போது, இறந்தவர்களிடம் எப்படிக் கேட்க முடியும்? எனவே அது இணை வைப்பாகத் தான் அமையும்.

இதன் பிறகு சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் வெளியேறுகின்றோம்.

முடிவுரை

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வரும் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற விஷயத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? என்று தமிழகத்தில் மாபெரும் மேதை என்று மதிக்கப்பட்ட ஷம்சுல்ஹுதா ஆலிமிடம் கேள்வி தொடுக்கப்பட்ட போது அதற்கு அவரால் பதில் அளிக்க முடியாமல் தலையைத் தொங்கப் போட்டார்.

இது ஷம்சுல்ஹுதா மீது நான் அளவு கடந்து கட்டி வைத்திருந்த மரியாதைக் கோட்டையை ஒரு நொடிப் பொழுதில் மடமடவென்று தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கி விட்டது.

ஷம்சுல்ஹுதா அவர்கள் பார்ப்பதற்கு எடுப்பான தோற்றத்தைக் கொண்டவர். தன்னை விட சிறியவராக இருந்தாலும், வாடா போடா என்றெல்லாம் பேசாமல், தம்பி! வாங்க! என்று அழைத்துப் பேசுகின்ற தனிப் பாங்கைப் பெற்றிருந்தார்.

எப்போதும் வெள்ளை ஆடை தான் அணிவார். கவர்ச்சி மிக்க மேடைப் பேச்சு! காந்தத்தைப் போல் கவருகின்ற ரீங்காரக் குரல், கிராஅத்! பாடம் நடத்துவதிலும் தனக்கென தனி பாணியைத் தன்னகத்தே கொண்ட ஒருவர் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் விழி பிதுங்கியது, மொழி தடுமாறியது எல்லாம் இவர் சத்தியத்தில் இல்லை என்ற எண்ணத்தை என்னிடம் ஆழமாகப் பதிய வைத்தது. சத்தியத்தில் ஆணித்தரமாக அடியெடுத்து வைக்க உதவியது. இங்கு இதை நான் கூற முன் வருவதற்குக் காரணம் என்னுடைய மன மாற்றத்தைக் கூறுவதற்காக அல்ல!

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற கருத்துக்கு இவர்களிடம் கடுகளவு கூட ஆதாரம் இல்லை. எனவே அவையெல்லாம் மாயாஜால, மந்திரக் கதைகளாக அமைந்து விட்டன.

அது போல் இறந்து விட்ட பெரியார்களிடம் உதவி தேடுவதற்கு, பிரார்த்தனை செய்வதற்கு எள்ளளவும் ஆதாரத்தை இந்த மாபெரும் மேதைகளால் சமர்ப்பிக்க இயலவில்லை என்பதை இந்தக் கலந்துரையாடல் வடிவில் அமைந்த விவாதம் தெரிவிக்கின்றது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)

இந்த விவாதத்தை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மதீனாவில் கையேந்தும் காசுக்காக இங்கு வேலை செய்யும் வர்க்கத்தில் உள்ளவர்கள் இல்லை நாங்கள்! ஏகத்துவம் என்ற வெளிச்சம் 80களில் எங்கள் உள்ளங்களில் வெள்ளமாய் பாய்ச்சப்பட்ட மாத்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை சத்தியத்தைச் சொல்கிறோம். இன்ஷா அல்லாஹ் இறுதி மூச்சு வரை சொல்வோம் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

அடுத்து கிளியனூர் மத்ரஸாவின் முதல்வர் அப்துஸ்ஸலாம் அவர்களிடம் நடந்த விவாதத்தை இன்ஷா அல்லாஹ் காண்போம்.

05.08.2009. 6:30 AM

பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு

8.5.2005 அன்று தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வேலூரில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேலூர் பாக்கியாத் மதரஸா மிகவும் முயன்றது. அதன் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அல்லாஹ்வின் மகத்தான அருளால் குறிப்பிட்ட தேதியில் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் திரண்டு வந்து சத்திய மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்டுப் பயனடைந்தனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பேசும் போது, மார்க்க அறிஞர்களைத் தயார் செய்து தமிழகத்துக்கே வழங்கும் சிறப்பு பெற்றது வேலூர். மிகச் சிறந்த உலமாக்கள் இவ்வூரில் நிறைந்துள்ளனர். இத்தகைய உலமாக்கள் நிறைந்த இவ்வூரில் நான் அறைகூவல் விடுகின்றேன். மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு விரோதமானவை. மத்ஹபு நூற்களில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான சட்டங்களும் உளறல்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பட்டியலிடுகின்றேன் என்று குறிப்பிட்டார். மேலும் மத்ஹபு நூற்களில் உள்ள அபத்தங்களில் சிலவற்றையும் அரபு மூலத்துடன் பாகம், பக்கத்துடன் வாசித்துக் காட்டி, இதைச் சரியென நிரூபிக்க இயலுமா? என்று சவால் விட்டார்.

நான் கூறியது தவறு என்றால் பாக்கியாத் உலமாக்களோ, வேறு எந்த உலமாக்களோ பகிரங்கமான விவாதத்துக்கு முன் வரட்டும் என்றும் அறைகூவல் விட்டார்.

விவாதத்திற்கான பி.ஜே.யின் இந்த அழைப்பை ஏற்று, தாங்கள் போற்றி மதிக்கும் மத்ஹபுகளைச் சரி என்று நிரூபிக்க வேண்டியது உலமாக்களின் கடமையாகும். ஆனால் அவர்களோ, பி.ஜே. பொய் சொல்கின்றார். அவரை நம்பாதீர்கள். பல முறை விவாதத்திற்கு அழைத்தும் அவர் வர மறுக்கின்றார் என்று உள்ளூர் பிரமுகர்களைத் தேடிச் சென்று சமாதானப்படுத்த முயன்றனர்.

அவ்வாறு அவர்கள் சந்தித்த பிரமுகர்களில் முனவ்வர் என்ற சகோதரரும் ஒருவர். அவர் உண்மையை அறிய விரும்பி, பி.ஜே.யைத் தொடர்பு கொண்டு விபரம் கேட்டார். உடனே முனவ்வர் அவர்களுக்கு பி.ஜே. ஒரு கடிதம் எழுதுகின்றார்.

அந்தக் கடிதத்தில்...

பாக்கியாத் உலமாக்கள் என்னை விவாதத்திற்குப் பல முறை அழைத்ததாகவும், நான் அதை ஏற்காமல் பின்வாங்கி விட்டதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். அது உண்மையா? என்று கேட்டீர்கள்.

பாக்கியாத் உலமாக்களோ, ஜமாஅத்துல் உலமா சபையினரோ, தப்லீக் ஜமாஅத்தினரோ என்னை விவாதத்திற்கு ஒரு காலத்திலும் அழைத்ததில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தர்கா வழிபாடு, மத்ஹபுகள், கத்தம் பாத்திஹாக்கள் போன்ற பித்அத்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றியும் குர்ஆன் மற்றும் மற்றும் நபிவழியின் அடிப்படையில் விவாதம் நடத்த நான் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாக்கியாத் உலமாக்களிடம் இந்தக் கடிதத்தின் நகலைக் காட்டி அவர்கள் விவாதத்திற்குத் தயாரா? என்று கேட்டு எனக்குத் தகவல் தரவும்....

என்று பி.ஜே. குறிப்பிட்டிருந்தார்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், உலமா சபையினருக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகளில் முதன்மையாக உள்ளது மத்ஹபு தான். வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பி.ஜே. பேசும் போதும், மத்ஹபுகள் குறித்து பேசிய கருத்துக்கள் தான் உலமாக்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது.

விவாதத்திற்கு ஒப்புக் கொண்டு நாம் கடிதம் கொடுத்தும் பாக்கியாத் அதைக் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது. ஆனால் பொது மக்கள் விடுவதாக இல்லை. வேலூர் மக்களின் நச்சரிப்பு தாங்காமல் இரண்டு மாதங்கள் கழித்து 12.07.05 அன்று பாக்கியாத் அரபிக் கல்லூரியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் ஹய்அத்தின் சார்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்வது. பி.ஜே. விவாதத்திற்கு வந்தால் பாக்கியாத் சார்பாக மவ்லானா மஹ்மூதுல் ஹஸன், மவ்லான இக்பால் காசிமி ஆகிய இருவருடன் ஹய்அத் விரும்பும் ஆலிம்களைச் சேர்த்துக் கொள்வது. இது சம்பந்தமாக ஹாஜி முனவ்வர் பாஷாவுடன் பேசி இதற்கான ஏற்பாடுகளைச் செய்வது.

என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

பொது மேடையில் பி.ஜே. விவாதத்திற்கு சவால் விட்டிருந்தும், அதை 10.05.05 அன்று எழுதிய கடிதத்தில் பி.ஜே. உறுதி செய்திருந்தும், பி.ஜே. வந்தால் நாம் விவாதம் செய்வது என்று பாக்கியாத் வேண்டா வெறுப்பாக முடிவு செய்தது.

பொதுக் கூட்டத்தில் பி.ஜே. கூறிய மத்ஹபுகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல்

அஹ்லு சுன்னத்தும் தக்லீதும்

குர்ஆன் ஹதீஸ் இருந்த போதும் இஜ்மா கியாஸ் அவசியம் என்ன?

கொள்கைக் குழப்பங்களும் தெளிவுகளும்

என்ற தலைப்புகளில் கே.ஏ. நிஜாமுத்தீன், முஹம்மத் இக்பால் காசிமி, கலீல் அஹ்மத் கீரனூரி ஆகியோரைக் கொண்டு மத்ஹபுகளை நியாயப்படுத்திப் பேசுவதற்கும் அதே கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? நமக்கும், அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை மத்ஹபு தான் என்பதற்கு இது சான்றல்லவா!

இதைத் தொடர்ந்து வேலூர் ஆலிம்கள், இமாம்கள், முத்தவல்லிகள் ஆகியோரின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் 12.07.05 அன்று அனுப்பப்பட்டது.

உருது மொழியில் அனுப்பப்பட்ட அந்த அழைப்பிதழில்...

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நம்முடைய ஊர் வேலூரில் அஹ்லெ சுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படையான கொள்கைகளையும் ஃபிக்ஹ் மஸாயில்களையும் எடுத்துக் கொண்டு சில தவறான ஜமாஅத்தார்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரில் இளைஞர்களை மூளைச் சலவை செய்ய அதிக முயற்சி செய்து வருகின்றனர்.

சங்கை மிகு ஸஹாபாக்களையும், மேன்மை மிக்க உலமாக்களையும் பிரபலமான பிக்ஹ் நூல்களையும் உண்மை மற்றும் பொய்யான விஷயங்களைக் கற்பனையாகத் திரித்துக் கூறுவது அவர்களுடைய பிரியத்திற்குரிய வேலையாக உள்ளது. பல இடங்களில் இவர்களது பிரச்சாரத்தின் மூலம் சண்டை சச்சரவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்....

என்று குறிப்பிட்டு அது தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது.

பிக்ஹ் மஸாயில்களை எடுத்துக் கொண்டு குழப்பம் செய்கிறார்கள்; பிரபலமான பிக்ஹ் நூல்களைப் பற்றி உண்மை மற்றும் பொய்யான விஷயங்களைக் கற்பனையாகத் திரித்துக் கூறுவதன் மூலம் சண்டை சச்சரவை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றெல்லாம் நம்மைப் பற்றிக் குறிப்பிட்டு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தது ஏன்?

நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனையே மத்ஹபு தான் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

12.07.05 அன்று பாக்கியாத் ஆலோசனைக் கூட்டம்

16.07.05 அன்று ஆலிம்கள், இமாம்கள், முத்தவல்லிகள் ஆலோசனைக் கூட்டம்

21.07.05 அன்று ஹய்அத்து ஷரீஆ மற்றும் விஷேச அழைப்பாளர்கள் கூட்டம்

31.07.05 அன்று மத்ஹபு விளக்கக் கூட்டம் என்று அடுத்தடுத்துப் போடப்பட்ட கூட்டங்களும் அவற்றுக்கிடையே முக்கியஸ்தர்களைத் தனித்தனியே சந்தித்து மத்ஹபை நியாயப்படுத்தி விளக்கங்கள் அளித்ததும் எதற்காக?

நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை மத்ஹபு தான் என்பதற்கு இவை அனைத்தும் சான்றுகளாக உள்ளன.

ஆனால் விவாதம் என்று வந்து விட்டால் மத்ஹபுகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்பதாலும் மத்ஹபு நூல்களில் உள்ள பைத்தியக்காரத் தனமான சட்டங்கள் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதாலும் பாக்கியாத் அந்தர் பல்டி அடிக்க முயற்சி செய்தது.

01.08.05 அன்று மத்ஹபைப் பற்றி விவாதிக்க மறுத்தும், வேறு ஒரு தலைப்பில் மட்டும் தான் விவாதம் செய்வோம் என்று கூறியும் முனவ்வர் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.

அந்தக் கடிதத்தில்....

தர்கா வழிபாடு, மத்ஹபுகள், கத்தம் பாத்திஹாக்கள் போன்ற பித்அத்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றியும் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் விவாதம் நடத்த பி.ஜே. தயாராக உள்ளதாக தங்களுக்கு வந்த கடிதத்தை அனுப்பியிருந்தீர்கள். ஆனால் எங்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள அடிப்படைப் பிரச்சனையான பின்வரும் தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நிலையாகும்.

எனவே ஷரீஅத் பேரவை தலைமையில் பாக்கியாத் உலமாக்களும் இவ்விஷயத்தில் விவாதம் செய்யத் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவாதத் தலைப்பு: ஷரீஅத்துடைய அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன், ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா?

என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

நமக்கும் பாக்கியாத்திற்கும் இடையே ஒரேயொரு விஷயத்தைத் தவிர வேறு எதிலும் பிரச்சனை இல்லை என்பதைப் போல் எழுதியுள்ளனர்.

தர்ஹா, கத்தம் பாத்திஹா, தரீக்கா போன்ற விஷயங்களில் அவர்களுக்கு உள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடுகள். அந்தத் தலைப்புகளில் அவர்கள் விவாதிக்க ஒப்புக் கொண்டாலே பாக்கியாத் பல கூறுகளாகப் பிரிந்து விடும். ஷரீஅத் பேரவையும் பல துண்டுகளாகி விடும். ஜமாஅத்துல் உலமா சிதைந்து சின்னாபின்னமாகி விடும்.

எனவே மேற்கண்ட தலைப்புகளில் விவாதம் செய்வதால் உலமாக்களுக்கு இடையே பிளவுகள் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுவதில் நியாயம் இருக்கின்றது.

ஆனால் மத்ஹபைப் பற்றி அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ஜமாஅத்துல் உலமாவில் அங்கம் வகிக்கும் அனைத்து உலமாக்களும் மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பதில் ஒருமித்தக் கருத்தில் தான் உள்ளனர். நாம் மட்டும் தான் மத்ஹபுகளைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

எனவே பாக்கியாத் குறிப்பிட்டுள்ள தலைப்பை விட, மத்ஹபைப் பற்றி விவாதிக்கத் தான் அவர்கள் முன் வந்திருக்க வேண்டும்.

குர்ஆன், ஹதீஸை அனைவரும் புரிந்து கொள்ள இயலும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் இதை விட முக்கியமான பிரச்சனையான மத்ஹபைப் பற்றியும் விவாதம் நடத்த அவர்கள் ஒப்புக் கொள்வது தான் முறையாகும்.

குர்ஆன், ஹதீஸை அனைவரும் புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் ஒருவேளை நிரூபித்து விட்டாலும் அதனால் மத்ஹபு நூல்களில் உள்ள உளறல்கள் அனைத்தும் சரி என்று ஆகி விடாது. மத்ஹபு நூல்களில் எழுதப்பட்டது சரியா? தவறா? என்று தனி விவாதம் நடத்தித் தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

எனவே நழுவுவதற்கான தந்திரங்களைக் கையாள்வதை விட்டு விட்டு பாக்கியாத் உலமாக்கள் கருத்து வேறுபாடுள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் அவற்றுள் முதன்மையான மத்ஹபு பற்றியும் விவாதிக்க முன் வர வேண்டும்.

பாக்கியாத்தின் திருப்திக்காக அவர்கள் கூறும் தலைப்பில் விவாதம் செய்ய நாம் தயார். அதே சமயம் மற்றொரு தலைப்பாக மத்ஹபும் விவாதிக்கப்பட வேண்டும்.

இதை ஒப்புக் கொள்வதே நியாயமானது என்று தெரிவிக்கிறோம்.

பாக்கியாத் உலமாக்கள் குறிப்பிட்டது போல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விவாதிக்கும் குழுவில் பி.ஜே.யும் இன்ஷாஅல்லாஹ் இடம் பெறுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு நாம் பாக்கியாத்திற்குப் பதில் கடிதம் அனுப்பியிருந்தோம்.

நாம் அனுப்பிய இக்கடிதத்திற்குப் பதிலாக பாக்கியாத் சார்பில் 21.08.05 அன்று வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.

அதில், மத்ஹபைப் பற்றி நாம் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே அவர்கள் பதில் சொல்லி விட்டதாகவும், தற்போது ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற தலைப்பில் மட்டுமே நாங்கள் விவாதிப்போம் என்பதை அந்தப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இவர்களது இந்த அறிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இறுதியாகக் கொடுத்த பதில் இதோ:

நாங்கள் தயார்!

நீங்கள் தயாரா?

ஹைஅத்துஷ் ஷரீஅத்தின் வெள்ளை அறிக்கையும் விவாத ஒப்பந்தமும் என்ற தலைப்பில் 21.08.05 அன்று பாக்கியாத் மத்ரஸா மூலம் வெளியிடப்பட்ட பிரசுரம் கிடைக்கப் பெற்றோம்.

ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற தலைப்பில் மட்டுமே நாங்கள் விவாதிப்போம் என்று நீங்கள் மிகவும் பிடிவாதமாக உள்ளீர்கள்.

நீங்கள் கூறிய தலைப்பிலும் விவாதிக்கத் தயார். ஆனால் அந்தத் தலைப்பு முழுமையாக இல்லை என்று நாங்கள் காரண, காரியங்களோடு விளக்கியிருந்தோம்.

ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளை குர்ஆன் ஹதீஸில் இருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? அல்லது ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் மத்ஹபு நுல்களிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்று தலைப்பின் வாசகத்தை திருத்தம் செய்யக் கோரினோம்.

அதற்கு பதிலளிக்கும் வண்ணம்,

வாதத் தலைப்பு : ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற மார்க்க அடிப்படையை நிர்ணயிக்கிற, இன்று இவர்கள் முன்வைக்கிற மத்ஹப் முதற்கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி தீர்வு காண முடிகிற அர்த்தபுஷ்டியுள்ள ஒரு தலைப்பை நாம் விவாதத்துக்குக் கொடுத்துள்ளோம். ஏனெனில் தனித்தனியே ஒவ்வொன்றையும் விவாதிப்பதென்பது எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாக ஆகாது. நாம் கொடுத்துள்ள இந்தத் தலைப்பு எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒட்டு மொத்தமாகத் தீர்வு கிடைத்து விடுகிற ஓர் உயர்ந்த தலைப்பு. அவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கும் மத்ஹபு பற்றிய விவாதத்துக்கும் இறுதி முடிவு கிடைத்துவிடும்

என்று நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.

நீங்கள் கொடுத்துள்ள விளக்கத்தை உள்ளடக்கிய மேற்கண்ட தலைப்பை ஏற்றுக் கொள்கிறோம். மத்ஹப் முதற்கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி தீர்வு காண முடிகிற அர்த்தபுஷ்டியுள்ள ஒரு தலைப்பு என்று நீங்கள் விளக்கம் தருகின்ற, ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற அந்த தலைப்பிலேயே உங்களுடன் விவாதம் செய்ய நாங்கள் தயார். எவருடனும் விவாதம் செய்ய நாம் தயார் என்ற போதும் 8.05.2005ல் நாம் பாக்கியாத்திற்குத் தான் நேரடி அறைகூவல் விடுத்தோம். ஹைஅத்துஷ் ஷரீஅத் எங்களின் சவாலை ஏற்று பதிலளித்தது. நாங்களும் அதனை ஏற்றுக் கொண்டோம். எனவே இந்த விவாதம் பாக்கியாத் மற்றும் ஹைஅத்துஷ் ஷரீஅத் என்ற இரு அமைப்புகள் அடங்கிய ஒரு அணிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற மற்றொரு அணிக்கும் இடையில் நடக்கும் விவாதமாகும். எங்களது முந்தயை அறிக்கையில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்ற தேதியை அறிவிக்கும்படி உங்களைக் கேட்டிருந்தோம். அதற்கு நீங்கள் அளித்த பதிலில் நாங்கள் மேற்குறிப்பிட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரத்தக்க அத்தலைப்பில் எப்போதும், எங்கும் ஒளிவு மறைவின்றி விவாதிக்கவும், அதற்குரிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறோம்

என்று தெரிவித்துள்ளீர்கள். எப்போதும் தயார் என்று எழுதி ஒப்பந்தத் தேதியை அறிவிக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டதற்கு மிக்க நன்றி. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விவாத ஒப்பந்தம் செய்வதற்காக 01.10.2005 திங்கட் கிழமை பகல் 12.00 மணிக்குக் கீழ்க்காணும் முகவரியில் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்.

(இன்ஷாஅல்லாஹ்) பசபஓ மஸ்ஜிதே நூர் காம்பவுன்ட்

5, அப்துல் கலாம் நகர்,ரஹ்மத் பாலா, வேலூர். 1

நேரடியாக 01.10.2005 அன்று சந்திப்பதைத் தவிர வேறு எதனையும் உங்களிடம் நாங்கள் எதிர் பார்க்கவில்லை. நீங்கள் இனியும் இழுத்தடிக்கும் கடிதங்களை எழுதினால் அவற்றை நாங்கள் அலட்சியப்படுத்தி விடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். விவாத ஒப்பந்தத்தில் பேசி இறுதி செய்வதற்காக எங்கள் தரப்பில் ஐந்து பேர் வருகிறோம். தாங்களும் ஐந்து பேருக்கு மிகாமல் வரவும். எங்கள் தரப்பில் வீடியோ பதிவு செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து கொள்கிறோம். உங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு நாம் பதில் எழுதியிருந்தோம். இதற்கு அவர்கள் இன்று வரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை.

நேரில் சென்றும் வரவில்லை

இறுதியாக நாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல் 01.10.05 அன்று நம் சார்பில் ஐந்து பேர் அடங்கிய குழு வேலூருக்குச் சென்றது. சரியாக காலை 11.45 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்தில் காத்திருந்தும் பாக்கியாத் தரப்பிலிருந்து யாரும் விவாத ஒப்பந்தத்திற்கு வரவில்லை.

வெகு நேரமாகியும் யாரும் வராததைக் கண்ட நமது குழுவினர் பாக்கியாத் மதரஸாவிற்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். தொலைபேசியை பாக்கியாத் மதரஸாவின் வாட்ச்மேன் எடுத்தார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விவாத ஒப்பந்தத்திற்குக் கடிதத்தில் குறிப்பிட்டபடி நாங்கள் வந்துள்ளோம். நீங்கள் வரவில்லையா? உங்கள் முதல்வரைக் கூப்பிடுங்கள் என்று நமது குழுவினர் கூறினர். அங்கிருந்த பாக்கியாத் முதல்வரிடம் இது குறித்து வாட்ச்மேன் கேட்டு விட்டு, முதல்வர் வர மறுத்து விட்டார் என்று கூறி போனை வைக்கச் சொல்லி விட்டார் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

பல அறிஞர்களை தமிழ்நாட்டிற்கு சப்ளை செய்யும் தமிழகத்தின் தாய்க் கல்லூரி என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் வேலூர் பாக்கியாத்தில் உள்ள ஒருவருக்குக் கூட விவாத ஒப்பந்தத்திற்கு வருவதற்குத் துணிவில்லாமல் போய் விட்டது தான் வேதனைக்குரிய விஷயம்.

மத்ஹபுகள் தான் இஸ்லாத்தின் வழிகாட்டி என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் விவாதத்திற்கு அழைத்ததை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதி அவர்கள் வந்திருக்க வேண்டும்.

நமது தரப்பில் எவ்வளவோ இறங்கிச் சென்றும், அவர்கள் சொல்லும் நிபந்தனைகள் அத்தனைக்கும் சம்மதித்தும், அவர்கள் சொல்லிய தலைப்பிலேயே விவாதிக்க ஒப்புக் கொண்ட பிறகும் விவாதம் செய்ய அவர்கள் வர மறுக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

மத்ஹபு நூல்களில் உள்ள பைத்தியக்காரத்தனமான உளறல்களுக்கும், ஆபாசக் களஞ்சியத்திற்கும் அவர்களால் ஒரு போதும் பதில் சொல்ல முடியாது என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை.

மத்ஹபுகள் தான் மார்க்கத்தின் வழிகாட்டி என்று இவர்கள் பிரச்சாரம் செய்வது மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் என்பதையும், மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு முரணானவை என்று தெரிந்து கொண்டே தான் இந்த ஆலிம்கள் மார்க்கத்தை மறைக்கின்றார்கள் என்பதையும் பாக்கியாத் உலமாக்களின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்தி விட்டன.

உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எப்படியேனும் விவாதத்தை நடத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்த பிரமுகர்களும், பொதுமக்களும் பாக்கியாத் உலமாக்களிடம் உண்மையில்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

மத்ஹபுகள் மார்க்க ஆதாரங்கள் அல்ல; குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்கள் என்ற சத்தியக் கருத்துக்கு அல்லாஹ் அளித்த மகத்தான வெற்றி இது என்றால் மிகையல்ல.

05.08.2009. 6:21 AM

ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம்

காலம் சென்ற ரஹ்மத் எனும் மாத இதழின் ஆசிரியரும் அன்றைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத்தலைவருமான கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்களுடன் நாம் நடத்திய எழுத்துப் போரை ஆரம்ப கால கொள்கைவாதிகள் மறந்திருக்க மாட்டார்கள். அவரது கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே தவ்ஹீத் இயக்கம் இருப்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியக் காரணமாக இருந்தது.

மத்ஹபை எதிர்த்து நாம் பிரச்சாரம் செய்வதைக் கண்டு கொந்தளித்த கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்கள் தமது ரஹ்மத் இதழில் நமக்கு அளித்த பதில் தான் மக்களை விழிப்படையச் செய்தது. உதாரணமாக அபூ ஹனீபா இமாமின் பெயரால் உருவாக்கப்பட்டது ஹனபி மத்ஹப். ஆனால் அவர் எழுதிய எந்த நூலும் உலகில் இல்லை. அப்படியானால் ஹனபி மத்ஹபுக்கும் அபூஹனீபா இமாமுக்கும் என்ன சம்மந்தம் என்று நாம் கேட்ட போது கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்கள் அளித்த பதில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அபூஹனீபா அவர்கள் ஏராளமான நூல்கள் எழுதினார்கள். ஆனால் அவற்றை எதிரிகள் எரித்து விட்டனர். ஆகவே இப்போது அபூ ஹனீபா இமாமின் நூல் உலகில் இல்லை என்று அவர் பதில் அளித்த போது தான் அபூஹனீபாவுக்கும் ஹனபி மத்ஹபுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை மக்கள் விளங்கிக் கொண்டனர்.

ஆதம் அலை அவர்கள் முதன் முதலில் ஜவ்வரிசி பயிரிட்டார்கள் என்று அவர் எழுதிய போது ஜவ்வரிசி பயிரிடும் பொருளா? தயாரிக்கப்படும் பொருளா என்று நாம் எழுப்பிய கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்தது. அது போல் அவரை நோக்கி நேயர் ஒருவர் எழுதிய கடிதத்தை அல்ஜன்னத் இதழில் நாம் வெளியிடோம். அதில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பக் கட்டத்தில் எவ்வாறு வீரியமாக இருந்தது என்ப்தை அறிந்து கொள்ள உதவும் என்பதால அதை இப்போது வெளியிடுகிறோம்.

 பெருமதிப்பிற்குரிய ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .

ஒரு மாத இதழ் உங்ளுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தையும் அதற்கு தாங்கள் அளித்துள்ள பதிலையும் கண்டேன்.

எனக்குள்ள சில சந்தேகங்கள் பற்றியும் பகிரங்கமாக உங்களுக்குக் கடிதம் எழுதினால் முறையான விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த மடல் வரைகிறேன். நான் இஸ்லாமிய மாத இதழ்கள் அனைத்தையும் படித்து அவற்றில் நல்லதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

நீங்கள் அளித்துள்ள பதிலில் எனக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றை நீஙகள் பகிரங்கமாகவே தீர்த்து வைத்தால் சமுதாயத்தில் நல்ல பயன் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஜமாஅத்துல் உலமா சபையினரின் கருத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு நீஙகள் அளித்துள்ள பதிலையும் அதில் எனக்கு எழும் ஐயங்களையும் இந்தக் கடிதத்தில் நான் வரிசைப்படுத்தி உள்ளேன்.

சந்தேகம்-1

அரபு மொழியில் இலக்கணம், இலக்கியம், அணி இலக்கணம், கவியாக்கும் முறை இவையெல்லாம் தெரியாத காரணத்தால் அவர்கள் (தவ்ஹீத்வாதிகள்) புர்தா ஷரீப் மவ்லிது கிதாபுகளிலும் கூறப்பட்டுள்ள கவிதைகளுக்கு அர்த்தம் செய்யத் தெரியாது அனர்த்தப்படுத்திக் கொண்டிக்கின்றார்கள்.

 என்று நீங்கள் உங்கள் எதிராளிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் இரு சாராரில் யாருடைய அரபு மொழி அறிவு அதிகம் என்ற பிரச்சனை பற்றி நான் ஆராய விரும்பவில்லை . வருமானத்தைத் தருகின்ற துறையாக மவ்லிது இருப்பதால் தான் அதற்கு முதலிடம் தந்து வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள் என்று உங்கள் எதிராளிரகள் கூறுவதைப் பற்றியும் நான் அலச விரும்பவில்லை.

நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் மவ்லிதுக்குத் தப்பான அர்த்தத்தைச் செய்து கொண்டு மவ்லிதை மறுப்பதாக நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஏன் ஒரு ஆதாரத்தையும் காட்டாமல் விட்டுவிட்டீர்கள்? எந்தெந்த வரிகளுக்கு அவர்கள் தப்பர்த்தம் செய்து விட்டார்கள்? அதன் உண்மை அர்த்தம் என்ன? என்ற விபரங்களைத் தந்திருந்தால் என் போன்றவர்கள் தெளிவடையலாமே?

ஒரு ஆதாரமும் காட்டாமல் உங்கள் எதிராளிகள் தப்பர்த்தம் செய்து விட்டார்கள் என்பதை நம்புவது சிரமமாக இருக்கிறதே? விரிவாக அவர்கள் செய்துள்ள தப்பர்த்தங்களைப் பட்டியல் போட்டு அடையாளம் காட்டுவது உங்கள் கடமை அல்லவா? அதைச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

சந்தேகம்-2

அரபு நாடுகளில் ஊதியம் பெற்று அந்த ஊதியத்திற்குத் தன் கடமை நிறைவேற்றுவதற்காக அவர்களில் சிலர் கூறும் தப்பர்த்தங்களை இவர்கள் தமிழகத்திலும் பரப்ப முயலுகிறார்கள் என்று உங்கள் எதிராளிகள் மீது இரண்டாம் குற்றச் சாட்டைச் சுமத்தியுள்ளீர்கள்.

அரபு நாடுகளில் ஊதியம் பெறுகிறார்களா? இல்லையா என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை. அரபு நாடுகளில் ஊதியம் வாங்குவதாக வைத்துக் கொண்டாலும் நீங்கள் தமிழ் நாட்டில் ஊதியம் பெறாமலா சேவை செய்கிறீர்கள் என்றும் நான் கேட்க மாட்டேன். கூட்டங்களில் பேசுவதற்கு 100, 500 என்று கட்டணம் பேசாமலா மார்க்கத்தைச் சொல்கிறீர்கள் என்றெல்லாம் கேட்க நான் விரும்பவில்லை.

நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் சொந்தமாக மவ்லிதுக்குத் தப்பர்த்தம் செய்யவில்லை. அரபு நாட்டு அறிஞர்கள் சிலர் கூறும் அர்த்தத்தையே கூறுகிறார்கள் என்று இதன் மூலம் ஒப்புக் கொள்கிறீர்கள்.

இந்தக் குற்றச் சாட்டு முதல் குற்றச் சாட்டை முற்றாக மறுக்கிறதே அது ஏன்? இது தான் என் கேள்வி.

உங்கள் எதிராளிக்கு அரபு மொழி ஞானம் இல்லாமல் தப்பர்த்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று முதல் சந்தேகத்தில் தெரிவித்துள்ளீர்கள். அவர்களுக்குத் தான் அரபு மொழி ஞானம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாலும் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு அதில் புலமையும் திறமையும் கொண்ட அரபு நாட்டு அறிஞர்களை விட நீங்களோ உங்கள் எதிராளிகளோ அந்த மொழி பற்றி அதிகம் அறிந்திருக்க முடியாது என்பது என் எண்ணம்.

அரபு நாட்டு அறிஞர்கள் கூறும் அர்த்தத்தை நாலு வார்த்தை அரபியில் பேச முடியாத தமிழ்நாட்டு அறிஞர்கள் தப்பு என்று கூறுவது சரியாகத் தெரியவில்லை. உங்கள் எதிராளிகளோ அரபு நாட்டு அறிஞர்களின் கூற்றைத் தான் எடுத்துச் சொல்வதாக நீங்கள் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். அப்படியே அரபு நாட்டு அறிஞர் பெருமக்களும் உங்கள் எதிராளியான உலமாக்களும் அரபு மொழிக்குச் சரியான அர்த்தம் தரும் அளவுக்கு ஞானம் இல்லாதவர்கள் என்று உரை கல்லில் உரசிப் பார்த்தால் உங்கள் அர்த்தத்தை விட உங்கள் எதிராளிகள் அர்த்தம் செய்வது தானே சரியாக இருக்க முடியும். இதைக் கொஞ்சம் விளக்குவீர்களா?

சந்தேகம்-3

இதற்குரிய விளக்கங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச் சொல்லியும் எடுத்து விளக்கியும் தங்களின் அறியாமைமையை அறியாதிருக்கும் அவர்கள் மீண்டும் மீண்டும் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடுத்தக் குற்றச் சாட்டை எழுதியுள்ளீர்கள்.

சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்குரிய விளக்கங்களை எடுத்துச் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் என்றால் யார்? யார்? என்பதை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே? அதைத் தான் குறிப்பிடாவிட்டாலும் அவர்களுக்கு எடுத்து விளக்கிய விளக்கங்கள் எவை? எப்போது விளக்கினீர்கள்? என்ற விபரங்களை என் போன்றவர்கள் அறிந்து கொள்ள பகிரங்கப்படுத்தலாமே? குழம்பி நிற்பவர்கள் தெளிவு அடையலாமே செய்வீர்களா?

சந்தேகம் -4

திருக்குர்ஆன் ஆயத்துக்களுக்கு முன் பின் ஆயத்துக்களின் தொடரை விட்டுத் தனிமைப்படுத்தி திருக்குர்ஆன் விரிவுரையாளர்களான ஸஹாபாக்கள் முன்னோர்களால் அங்கீகரிக்கப்பட்ட விளக்கங்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை கூறும் இவர்கள் தாங்கள் தான் திருக்குர்ஆனுக்கு வாரிசுகளைப் போன்று பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்று எழுதியுள்ளீர்கள்.

திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு நீங்கள் தான் முன் பின் தொடரை விட்டுவிட்டு அர்த்தம் செய்வதாக உங்கள் எதிராளிகள் கூறுகிறார்கள்.

உதாரணத்திற்கு 4;59 வசனத்தைப் பாதியோடு நிறுத்திக் கொள்வதாக அவர்கள் குறறம் சுமத்துகிறார்கள்.

ஸஹாபாக்களின் விரிவுரைகளை விட்டுவிட்டு பிற்காலத்தில் வந்தவர்களிடன் கருத்துக்களுக்கு நீங்கள் தான் முக்கியத்துவம் அளித்து விட்டீர்கள் என்று உங்கள் எதிராளிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

உதாரணமாக நன்டு சாப்பிடலாம் என்ற விஷயத்தில் ஸஹாபாக்களின் கருத்தை விட்டுவிட்டு பின்னால் வந்தவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று கூறுகிறார்கள். அது பற்றி நான் சந்தேகம் தெரிவிக்க விரும்பவில்லை.

நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் தங்கள் கூற்றுக்கு ஆதாரங்கள் எடுத்து வைத்தது போல் நீங்கள் உதாரணத்திற்கு ஒன்று கூட கூறவில்லையே அது ஏன்? மற்ற குற்றச் சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கூறாதது போல் இதற்கும் கூறவில்லையே? என் போன்றவர்களுக்கு இதில் சந்தேகம் ஏற்படுகிறதே தீர்த்து வைப்பீர்களா?

சந்தேகம் -5

எனது வழிமுறையையும் எனது குலபாக்களின் வழி முறைகளையும் இறுக்கப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை மறுத்து வருவதாக உங்கள் எதிராளிகள் மீது குறறம் சுமத்தியுள்ளீர்கள்.

நபிமொழியை மறுக்கக் கூடாது என்று தான் உங்கள் எதிராளிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த நபிமொழியை எங்கே எப்போது மறுத்தார்கள் என்று விபரம் கூறினால் குழம்பிக் கிடக்கும் மக்கள் தெளிவு அடைவார்கள் அல்லவா? அதைச் செய்வீர்களா?

(இது பற்றி ஆக்கம் பார்க்க)

சந்தேகம் -6

எனது தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர் வழி பெறுவீர்கள் என்று ஹதீஸை இருட்டடிப்புச் செய்து...........

என்று குற்றம் சுமத்தியுள்ளீர்கள் உங்கள் எதிராளிகளோ அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்கிறார்களே இதன் உண்மை என்ன என்பதைத் தெளிவாக்கலாம் அல்லவா?

 (ஆசிரியர் குறிப்பு: இந்த ஹதீஸ் எவ்வாறு இட்டுக் கட்டப்பட்டது என்பது பற்றி தனிக் கட்டுரை இந்த இதழில் பிரசுரமாகி உள்ளது)

அது இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 சந்தேகம் -7

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சரித்திரம் உலக மக்களுக்குத் தெரிந்துவிட்டால் ததங்களின் தகிடு தத்தங்கள் வெளியாகிவிடும் என்பதற்காக மீலாது விழாக்களைப் புறக்கணித்து.........................

என்று உங்கள் எதிராளிகளின் செயலுக்குக் காரணம் கற்பிக்கிறீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் கூறுவதை நம்புவதற்கு எவருக்கும் சிரமமாகவே இருக்கும். மற்ற எந்தக் கூட்டங்களை விடவும் உங்கள் எதிராளிகள் நடத்தும் கூட்டங்களில் தான் நபி (ஸல்) அவர்களின் வரலாறு அதிகமாகக் கூறப்படுகிறது. அவர்களின் பொன் மொழிகள் அதிகமாகக் கூறப்படுவதும் உங்கள் எதிராளிகள் கூட்டங்களில் தான். உங்கள் அணியினரின் கூட்டங்களில் தனி நபர் துதியும் பெரியார்களின் அற்புதங்களும் தானே கூறப்படுகிறது. இப்படி ஒரு அவதூரை உங்களைப் போன்றவர்கள் கூறலாமா?

நபித் தோழர்களான ஸஹாபாக்களோ இமாம்களோ யாருடைய பிறந்தநாள் விழாவையும் கொண்டாடவில்லை என்ற காரணத்தினால் தானே அவர்கள் மீலாதை மறுப்பதாகக் கூறுகிறார்கள். நபித்தோழர்களோ இமாம்களோ மீலாது விழாக் கொண்டாட சொல்லி இருந்தால் அதை நீங்கள் தெளிவுபடுத்தலாம் அல்லவா? அதன் மூலம் உங்கள் எதிராளிகளை அடையாளம் காட்டலாம் அல்லவா?

 சந்தேகம் -8

போலீஸ் பாராவுடன் கொள்கைப் பிரச்சாரம் செய்யும் இவர்கள்.............

என்று அடுத்த குற்றச்சாட்டை எடுத்து வீசி இருக்கிறீர்கள். அந்த நிலையை ஏற்படுத்தியது யார்? கொல்லுங்கள் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் அளவுக்கு உங்கள் அணியினர் ரவுடித்தனமான பிரச்சாரம் செய்வது தானே இதற்குக் காரணம். உங்கள் எதிரணியினரின் பொறுப்பில் உள்ள பள்ளிவாசலையே அடித்து நொறுக்கித் தள்ளுங்கள் என்று கூட மக்கள் மத்தியில் பேசப்பட்டதே? கருத்தை கருத்தால் சந்திப்பதை விடுத்து வன்முறையைத் தூண்டிவிட்டுவிட்டு இந்த நிலையைத் தோற்றுவித்துவிட்டு குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? .

சந்தேகம் -9

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பேசித் தீர்த்து முடிவாக அறிவிக்கப்பட்ட தராவீஹ் போன்ற பிரச்சனைகளை மீண்டும் கிளப்பி.............

என்கிறீர்கள் பேசித்தீர்த்து முடிவு அறிவித்தவர் யார்? எப்போது எங்கே பேசித் தீர்க்கப்பட்டது? யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற விபரங்களை எல்லாம் இது வரை நீங்கள் சொல்லியதாகத் தெரியவில்லையே.

பேசித் தீர்க்கப்பட்டது என்பதை வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும் அதில் அவர்கள் கிளப்புகின்ற சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் கடமை உங்களுக்கு இல்லையா? அவர்கள் தராவீஹ் பற்றி கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே தராவீஹ் 20 ரக்அத்களா? என்று உங்கள் அணியினர் வெளியிட்ட நூலைப் படித்தாலே தராவீஹ் எட்டு ரக்அத்கள் தான் என்று தெளிவாகத் தெரிகின்றதே? அந்த லெட்சணத்தில் தானே உங்கள் மறுப்பு நூல் அமைந்திருக்கிறது.

சந்தேகம் -10

பித்அத்களை உலமாக்கள் கண்டிப்பதாகவும் முறையான பதில்கள் அளித்துள்ளதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்

பித்அத் ஒருபுறம் இருக்கட்டும். பச்சை ஷிர்க் என்று உங்கள் அணி உலாமாக்களில் பலர் உங்கள் அணிச் செயலாளர் ஆகியோர் தீர்ப்பளித்த குத்பிய்யத் என்ற இருட்டு திக்ரை நீங்களே சாட்சாத் நீங்களே தான் ஷிர்க் அல்ல என்று தீர்ப்பு வழங்கினீர்கள். உங்கள் பத்வாவின் ஜெராக்ஸ் காப்பியை நானும் பார்த்திருக்கிறேன். பச்சை ஷிர்க் என்று உங்கள் உலமாக்களில் பலர் தீர்ப்பளித்ததையே நியாயப்படுத்தும் நீங்களா பித்அத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறீர்கள்.?

மவ்லிது பற்றி பல மதரஸாக்கள் கூடாது என்று தீர்ப்பு அளித்தது உங்கள் கைக்குக் கிடைத்த பின்பும் அதையும் நியாயப்படுத்ததும் நீங்களா பித்அத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறீர்கள்?

(குறிப்பு: ஜ,உ,தலைவரின் முறையற்ற பதில்களை நாம் விரைவில் வெளியிடுகிறோம்.. ஆசிரியர்)

சந்தேகம் -10

மஸ்ஜிதுன் நபியில் தொழக் கூடாது என்று உங்கள் எதிரணியினர் கூறுவதாகக் குற்றம் சுமத்துகிறீர்கள்.

இது அபாண்டம் இல்லையா? வீண் அவதூறு இல்லையா? இதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

சந்தேகம் -11

பிக்ஹ் என்று இன்றைக்குக் கூறப்படுவது குர்ஆனுக்கும் ஹதீஸுக்கு முரணானவைகளே என் ஏற்படுத்தி வருவதாக உங்கள் எதிராளிகள் மீது சாடி இருக்கிறீர்கள்.

அவர்கள் பல பிக்ஹ் சட்டங்களை எடுத்துக்காட்டி அவை குர்ஆன் ஹதீஸுடன் எப்படி முரண்படுகின்றன என்று பட்டியல் போட்டார்களே? நேரடியாக இது பற்றி விவாதம் செய்யத் தயாரா? என்று சவால் விட்டார்களே இன்று வரை அதை நீங்கள் ஏற்காததன் காரணம் என்ன?

குறைந்த பட்சம் அவர்கள் காட்டிய உங்கள் மஸாலாக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை எழுதியிருக்கலாம் அல்லவா? அதையாவது செய்தீர்களா? இனியாவது செய்வீர்களா?

சந்தேகம் -11

அவர்கள் எழுப்பும் சந்தேகங்கள் அனைத்துக்கும் நேரடியாகவும் பத்திரிக்கையின் மூலமாகவும் பதில் தரப்பட்டன என்கிறீர்கள்.

இது உண்மைதானா? நேரடியாக யாரிடம் பதில் கூறினீர்கள்? என்ன பதில் கூறினீர்கள்? பத்திரிக்கையில் அவர்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் உண்மையிலேயே பதில் கூறி விட்டீர்களா? எந்தப் பத்திரிக்கையில் ? சொல்வீர்களா? நாங்களும் வாங்கிப் படித்து உண்மையை விளங்கலாம் அல்லவா? ஒரு வேளை வேறு மொழிப் பத்திரிக்கையில் பதில் இருக்கிறீர்களோ என்னவோ?

மொத்தத்தில் உங்கள் பதிலைப் படிக்கும் சாதாரண அறிவு படைத்தவனும் அர்த்தமும் ஆதாரமும் இல்லாத வெற்றுக் குற்றச் சாட்டுகள் என்று புரிந்து கொள்வான் . அந்த நிலையிலேயே உங்கள் பதில் அமைந்துள்ளது.

அன்புடன்

அப்துல் அஸீஸ் நாகர் கோவில்

27.10.2010. 22:00 PM

உலமாக்களின் கருத்து வேறுபாடு அல்லாஹ்வின் அருளாகுமா?

முரண்பாடுகள் களைவோம்

அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அவர் எழுதிய கட்டுரை- திருத்தங்களுடன்

திருக்குர்ஆனையும். நபிவழியையும் மட்டுமே தங்கள் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரண்படும் எவரது கருத்தையும் நிராகரித்து விடும் கடமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதில் சர்வ அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.

இதெல்லாம் சாதாரண விஷயங்கள் என்று கூறி தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையே இவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்ற என்ன காரணம்?

திருக்குர்ஆனையும், நபிவழியையும் புறக்கணிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்களா? இல்லை.

இத்தகைய அலட்சியப் போக்கை ஏற்படுத்துவதற்காகவே சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பல பொய்களைப் புனைந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் சொன்னதாக சிலரால் உருவாக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் (?) தான் இந்தச் சமுதாயம் குர்ஆன் ஹதீஸைப் புறக்கணித்துச் செல்லக் காரணமாகி விட்டன.

அவற்றில் அதிக அளவில் மவ்லவிகளால் அரங்கேற்றப்படும் ஒரு ஹதீஸை (?) நாம் ஆராய்வோம்.

அந்த ஹதீஸ் மேடைகள் தோறும் சமீபகாலமாக முழங்கப்படுகின்றன. ஏடுகளில் எழுதவும்படுகின்றன. தங்களின் தவறான போக்குகளை நியாயப்படுத்திட அந்த ஹதீஸ் (?) இவர்களுக்கு பெரிதும் துணையாக இருக்கின்றது. சாதாரணமாகச் சிந்தித்துப் பார்ப்பவனுக்கும் கூட பொய்யென்று தெரிந்துவிடும் இந்த நச்சுக் கருத்தை துணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் சொல்ல எப்படித் துணிந்தார்கள்? வேண்டுமென்றே இதைக் கூறுகிறார்களா? அல்லது அறியாமை இருளில் அவர்கள் சிக்கிக் கொண்டார்களா? என்பது நமக்குப் புரியவில்லை.

اختلاف العلماء رحمة للامة

இக்திலாபுல் உலமாயி ரஹ்மதுன் லில் உம்மா

உலமாக்களின் கருத்து வேறுபாடு சமுதாயத்திற்கு அருட்கொடையாகும்.

اختلاف امتي رحمة

இக்திலாபு உம்மதீ ரஹ்மா

என் சமுதாயத்தினரின் கருத்து வேறுபாடு ரஹ்மத் (எனும் இறையருள்) ஆகும்.

இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் இந்த நச்சுக் கருத்தைத் தான் நபிகள் நாயகத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். திருக்குர்ஆனின் எத்தனை வசனங்களுடன் இது நேரடியாக மோதுகின்றது. ஆதாரப்பூர்வமான நபிமொழிகளைப் பொய்யாக்க முற்படுகின்றது என்பதை ஏனோ இவர்கள் உணர மறுக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் சொன்னார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால்

நபிகள் நாயகத்திடம் இதைச் ச்செவியுற்றவர் யார்?

அவரிடமிருந்து செவியுற்ற மற்ற அறிவிப்பாளர்கள் யார்?

அவர்களின் தகுதிகள் என்ன?

எந்த நூலில் இது பதிவாகியுள்ளது?

என்றெல்லாம் அலசி ஆராய்ந்த பின்பே நபிகள் நாயகம் (ஸல்) பெயரால் எந்த ஒன்றையும் கூற வேண்டும்.

இவ்வாறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டவர்கள் இதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. யாருக்கோ வந்த விருந்தாகவே மார்க்கத்தைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் அரபியில் சொல்லப்படுமானால் ஆமீன் சொல்வதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு விட்டார்கள். இந்த ஹதீஸின் தரத்தை நாம் ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுபவைகளை அறிவிப்பவர் நினைவாற்றல் குறைந்தவராகவோ, தீய நடத்தை உடையவராகவோ இருந்தால் அந்தச் செய்திகள் பலவீனமானவை என்று தள்ளப்பட்டுவிடும்.

அறிவிப்பவர் திட்டமிட்டுப் பொய் கூறுபவராக இருந்தால் அவர் மூலம் வருகின்ற செய்தி இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறி முற்றாக நிராகரிக்கப்பட்டு விடும்.

இட்டுக்கட்டப்பட்டவை என்றாலும், பலவீனமானவை என்றாலும் ஏதேனும் ஹதீஸ் நூலில் அது இடம் பெற்றிருக்கும். ஆனால் மவ்லவிமார்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஹதீஸ் எந்த ஹதீஸ் நூலிலும் இடம் பெறவே இல்லை. இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை விடவும் ஒரு படி கீழே இறங்கி வடிகட்டிய பச்சைப் பொய்யாகி விடுகின்றது.

இந்த ஹதீஸ், ஹதீஸ் கலை வல்லுனர்களிடம் அறிமுகமானதல்ல. ஆதாரப்பூர்வமான அல்லது பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாளர் வரிசை கூட இதற்கு உள்ளதாக எனக்குத் தெரியவில்லை என்று ஸுப்கீ என்னும் அறிஞர் குறிப்பிடுகிறார். ஸுப்கீ அவர்களின் நூல்களில் சில அரபிக்கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் உள்ளது.

பைளாவி என்னும் நூலின் ஓரக் குறிப்பில் ஷைகு ஜகரிய்யா அன்சாரி என்பவரும் இதை ஊர்ஜிதம் செய்கிறார்.

இந்த மவ்லவிகள் தாங்கள் ஒப்புக் கொண்ட அறிஞர்களின் கூற்றையாவது நம்பி இந்தப் பொய்யை அரங்கேற்றுவதைத் தவிர்க்க வேண்டாமா?

பல தவறான கருத்துக்களையும் நியாயப்படுத்தும் ஸுயூத்தி என்ற அறிஞர் நமக்குக் கிடைக்காத ஏதேனும் ஹதீஸ் நூலில் இது இருக்கக்கூடும் என்று விசித்திரமான தீர்ப்பு வழங்குகிறார். ஹதீஸ் கலையில் ஓரளவாவது ஈடுபாடு உள்ளவர்களும் இவரது அர்த்தமற்ற வாதத்தை ஏற்க மாட்டார்கள்.

இந்த நூலில் தான் இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிந்த பின்பும் கூட அறிவிப்பவர்களின் தகுதிகளைப் பரிசீலனை செய்தே எற்க வேண்டும் என்றிருக்க ஏதோ ஒரு நூலில் இருக்கலாம் என்ற அனுமானம் எப்படிப் போதுமாகும்?

நபிகள் நாயகம் (ஸல்) பெயரால் பல பொய்கள் உருவாக்கப்பட்ட நேரத்தில் அறிவிப்பாளர்களை எடைபோட்டுப் பரிசீலிக்கும் துறையில் இறங்கி ஹதீஸ் கலை வல்லுநர்கள் பொய்களைக் களை எடுத்தனர். இவரோ ஏதோ ஒரு நூலில் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே இதைச் சரி காண்கிறார்.

இது எவ்வளவு ஆபத்தான வாதம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாதத்தை மக்கள் ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு பாதுகாப்பற்றதாக ஆகி விடும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நபிமொழி என்று கூறமுடியும். ஆதாரம் கேட்டால் நாம் பார்க்காத ஏதோ கிதாபில் இருக்கலாம் என்று சொல்லிவிட முடியும்.

இது எந்த ஹதீஸ் நூலிலும் பதிவு செய்யப்படவில்லை என்பதே இதைத் தூக்கி எறிய போதுமானதாகும். இதன் கருத்து ஆபத்தானதாகவும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையிலும் இருக்கும் போது இதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?

அறிஞர்களும், சமுதாயமும் ஆளுக்கொரு விதமாக நடப்பது அல்லாஹ்வின் அருட்கொடை என்ற கருத்து சரியானது தானா என்று ஆராய்வோம்.

أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 4:82

இந்தக் குர்ஆனில் முரண்பாடு இல்லாமல் இருப்பது தான் இறை வேதம் என்பதற்கு சரியான சான்று என்று அல்லாஹ் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறான். முரண்பாடுகள் தான் அருட்கொடை என்றிருந்தால் எவ்வளவு முரண்பாடு பார்த்தீர்களா என்றல்லவா அல்லாஹ் சொல்லியிருப்பான்.

ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين(118)إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين(119)

உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.

திருக்குர்ஆன் 11:118,119

இறைவனின் அருள் பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவே நீடிப்பார்கள் என்று அல்லாஹ் கூறுவது கருத்து வேறுபாடுகளை நீக்கிக் கொள்வது தான் அல்லாஹ்வின் அருள் என்ற கருத்தைத் தருகிறது. கருத்து வேறுபாடு தான் அல்லாஹ்வின் அருள் என்று கூறுவது அல்லாஹ்வின் மேற்கண்ட வசனத்துடன் நேரடியாக மோதுகிறது.

கருத்து வேறுபாடு கொண்டு அதை நியாயப்படுத்துவது கொள்கை கெட்டவர்களின், வழிகேடர்களின் செயல் என்று பின்வரும் வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم(213)2

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்களே அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.

திருக்குர்ஆன் 2:213

إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب(19)3

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

திருக்குர்ஆன் 3:19

ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم(105)3

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 3:105

وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون(19)10

மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர். பின்னர் முரண்பட்டனர். உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிராவிட்டால் அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்.

திருக்குர்ஆன் 10:19

ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون(93)10

இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை. உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.

திருக்குர்ஆன் 10:93.

وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون(64)16

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

திருக்குர்ஆன் 16:64

إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون(76)27

இஸ்ராயீலின் மக்கள் முரண்பட்டவற்றில் அதிகமானவற்றை இக்குர்ஆன் அவர்களுக்கு விவரிக்கிறது.

திருக்குர் ஆன் 27:76

ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب(45)41

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து வார்த்தை முந்தியிருக்காவிட்டால் இவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இவர்கள் இதில் கடுமையான சந்தேகத்தில் உள்ளனர்.

திருக்குர் ஆன் 41:45

وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون(17)45

இம்மார்க்கம் பற்றி பல சான்றுகளையும் அவர்களுக்கு வழங்கினோம். அவர்களுக்கு அறிவு வந்த பின்னரே அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமை காரணமாக முரண்பட்டனர். உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் தீர்ப்பளிப்பான்.

திருக்குர்ஆன் 45:17

கருத்து வேறுபாடுகளைக் களை எடுத்து இறவனின் ஒரே வழிகாட்டலின் பால் அழைப்பதே இறவனின் விருப்பம் என்று இவ்வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே கருத்து வேறுபாடுகளை நியாயபடுத்துவதும், அது அல்லாஹ்வின் அருள் என்று வாதிடுவதும் இஸ்லாத்துக்கு எதிரான வாதமாகும்.

அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவதைக் கண்டால் அதில் எது சரியானது என்பதை நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்து சரியான ஒரே கருத்தையே ஏற்று மற்றதை மறுக்க வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் சரியான பாதையாகும்.

More Articles …