யாஸீன், தாஹா தாஸீன் ஆகியவை முஹம்மது நபியின் பெயர்களா?
திருக்குர்ஆனின் 20 வது அத்தியாயம் தாஹா என்று துவங்குகிறது.
36 வது அத்தியாயம் யாஸீன் என்று துவங்குகிறது.
27 வது அத்தியாயம் தாஸீன் என்று துவங்குகிறது
இம்முன்று சொற்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர்களாகும் என்று சிலர் கூறுகிறார்கள். யாஸீன், தாஹா தாஸீன் ஆகியவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர்கள் என்றால் அவ்வாறு அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது இம்முன்றும் எனது பெயர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை.
அல்லது நபித்தோழர்களாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இம்மூன்று பெயர்களால் அழைத்து இருக்க வேண்டும். அப்படி அழைத்த்தற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
எந்த ஆதாரமும் இல்லாமல் பயான்களில் சொல்லப்பட்டதை நம்பி தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு யாஸீன் என்றும் தாஹா என்றும் தாஸீன் என்றும் பெயர் சூட்டலானார்கள்.
இவை நபிகள் நாயகத்தின் பெயர்கள் என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு பெயர் சூட்டி வருகிறார்கள்.
மார்க்க அறிவற்ற கவிஞர்கள் கவிதை எழுதி நாகூர் ஹனிபா பாடிய பாடல்களிலும் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
ஆளும் இறைவன் தூதர் நபி என்ற பாடலில் யாஸீன் நபி தாஸீன் நபி என்று பாடி பொய்யைப் பரப்பி விட்டார்கள்.
அமைதி மேவும் மதீனா என்ற நாகூர் ஹனீஃபாவின் பழைய பாடலில் அண்ணல் முஸ்தபா எங்கள் தாஹா ரசூலே எனப் பாடி இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் எனப் பரப்பி விட்டார்கள்.
இது ஆதாரமற்ற பொய்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்கு ஐந்து பெயர்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்கள்.
صحيح البخاري
3532 - حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ "
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது (புகழப்பட்டவர்) ஆவேன். நான் அஹ்மத் (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ (அழிப்பவர்) ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர் (ஒன்று திரட்டுபவர்) ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல் : புகாரி 3352
இந்த ஐந்து பெயர்களில் தாஹாவும், யாஸீனும் தாஸீனும் இல்லை. தனக்கு ஐந்து பெயர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணிச் சொல்லி இருக்கும் போது தாஹா, யாஸீன் தாஸீன் என்று மேலும் மூன்று பெயர்களைச் சேர்த்து எட்டுப் பெயர்களாக ஆக்குவ்து நபிகளின் கூற்றைப் பொய்யாக்குவதாக அமையும்.
மேற்கண்ட ஐந்து பெயர்களுக்கு அரபு மொழியில் அர்த்தம் இருக்கிறது. தாஹா, யாஸீன் தாஸீன் ஆகியன நபிகளின் பெயர்கள் என்றால் இப்பெயர்களின் அர்த்தம் என்ன? எந்த அர்த்தமும் இல்லை.
எல்லா மொழிகளிலும், எழுத்துக்களும் அந்த எழுத்துக்களால் உருவான சொற்களும் உள்ளன.
உதாரணமாக ஆதம் என்பதை எடுத்துக் கொள்வோம்.
இதில் ஆவண்ணா தானா, இம்மன்னா ஆகிய எழுத்துக்கள் உள்ளன. இவற்றை இணைத்து சொல்லாக ஆக்கி ஆதம் என்கிறோம். இப்படி சொல்லும் போது இதற்கு அர்த்தம் வரும்.
ஆவன்னா தானா இம்மன்னா என்று நாம் கூறினால் இம்மூன்றையும் இணைத்து சொல்லாக நாம் ஆக்கவில்லை. எனவே இதற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆவன்னா தானா இம்மன்னா ஆகிய மூன்று எழுத்துக்களை நாம் கூறியுள்ளோம். அவற்றை இணைத்து சொல்லாக ஆக்கவில்லை.
ஆங்கிலத்தில் புக் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் உள்ளது.
பீ ஓ ஓ கே என்று இணைக்காமல் சொன்னால் அதற்கு அர்த்தம் இல்லை. ஏனெனில் நாம் இதைச் சொல்லாக ஆக்கவில்லை.
இது போல் தான் அலிப் லாம் மீம் என்பன மூன்று எழுத்துக்களாகும். இப்படி நாம் கூறினால் இவற்றை இணைத்துச் சொல்லாக நாம் ஆக்கவில்லை. இதனால் இதற்குப் பொருள் இல்லை.
இம்மூன்றையும் இணைத்து அலம என்று சொல்லாக ஆக்கினால் வேதனைப்பட்டான் என்ற பொருள் கிடைக்கும்.
தா ஹா என்பதில் தா என்பது ஒரு எழுத்தின் பெயர். ஹா என்பது ஒரு எழுத்தின் பெயர். இரண்டு எழுத்தைக் கூறினோம் என்பதைத் தவிர இதற்கு அர்த்தம் இல்லை.
அது போல் யா ஸீன் என்பதில் யா என்பது ஒரு எழுத்து. ஸீன் என்பது இன்னொரு எழுத்து. அவ்வளவு தான்,
தா ஸீன் என்பதில் தா என்பது ஒரு எழுத்தின் பெயர். ஸீன் என்பது ஒரு எழுத்தின் பெயர்
எந்தப் பொருளையும் தராத எழுத்துக்கள் நபிகள் நாயகத்தின் பெயராக இருக்க முடியாது.
திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் இப்படி சில எழுத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை அர்த்தம் தரும் சொற்கள் அல்ல. ஏன் இவ்வாறு கூறப்படுகிறது என்பதை விபரமாக அறிய கீழ்க்காணும் ஆக்கத்தைப் பார்க்கவும்.
யாஸீன் தாஹா ஆகியவை முஹம்மது நபியின் பெயர்களா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode