Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும்

நூலின் பெயர் : குற்றச்சாட்டுகளும் பதில்களும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் : 136

விலை ரூபாய் : 25.00

பதிப்புரை

இஸ்லாம் குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் மூன்று நூல்களை நாம் வெளியிட்டுள்ளோம்.

இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக முதல் நூலை வெளியிட்டோம்.

அந்த நூலில் தலாக், பர்தா, பலதாரமணம், பாகப்பிரிவினையில் பாரபட்சம் போன்ற பெண்கள் சம்பந்தமாக முஸ்லிமல்லாதவர்கள் எழுப்பும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் மிக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அந்த நூல் பல பதிப்புகள் வெளியானதிலிருந்து அதன் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக இரண்டாவது நூலை வெளியிட்டோம்.

இவ்விரு குற்றச்சாட்டுகள் தவிர எஞ்சிய எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிப்பதற்காகக் குற்றச்சாட்டுகளும், பதில்களும் என்ற மூன்றாவது நூலை வெளியிட்டோம். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் தக்க சான்றுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த நூலில் பல குற்றச்சாட்டுகள் விடுபட்டிருந்தன. இன்னும் கூடுதல் விளக்கம் சேர்க்கப்பட வேண்டிய நிலையும் இருந்தது. எனவே அந்த நூலை முற்றிலும் மாற்றியமைத்து விடுபட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் உரிய விளக்கங்களைச் சேர்த்து முற்றிலும் புதிய வடிவில் மீண்டும் உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்.

இந்த நூல் இஸ்லாம் குறித்த எல்லா ஐயங்களையும் நீக்கும் என்று பெரிதும் நம்புகிறோம். அந்த நம்பிக்கை வீண் போகாதிருக்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

-அன்புடன்

நபீலா பதிப்பகம்

பொருளடக்கம்

குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றது

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளன

எம்மதமும் சம்மதமா?

இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்

இந்துக்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது

ஜிஸ்யா வரி

திக்கை வணங்கும் முஸ்லிம்கள்

ஹஜ் பயணமும், புனித யாத்திரையும்!

கருப்புக் கல் வழிபாடு?

நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?

குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வரும் போது முஸ்லிம்கள் மட்டும் மக்கள் தொகையைப் பெருக்கிப் பெரும்பான்மையாகி வருகின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்தக் குற்றச்சாட்டைப் பல வழிகளில் அலசிப்பார்க்க வேண்டும்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு மற்றும் இடப் பற்றாக்குறையும், வறுமையும் ஏற்படும் என்ற வாதம் சரியானதா என்பதை முதலில் பார்ப்போம்.

வறுமையும், உணவுப் பற்றாக்குறையும் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த காலகட்டங்களிலும் உலகெங்கும் இருந்துள்ளன. இன்று உலகில் வாழும் மக்கள் தொகையை 600 கோடியிலிருந்து வெறும் ஆறு கோடியாகக் குறைத்தாலும் வயிற்றுக்கு உணவு கிடைக்காதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் எதார்த்த நிலையாகும்.

மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்திலும், மக்கள் தொகை மிகுதியாக உள்ள காலத்திலும் தேவைகளுக்கு அதிகமாகவே உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்று 600 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் 1000 கோடி மக்களுக்குப் போதுமான உணவுகள் உலகில் உள்ளன.

உணவுப் பொருள்கள் சிலருக்குக் கிடைக்காமல் போவதற்குக் காரணம் விநியோக முறையில் ஏற்படும் தவறுகளும், பலருக்குப் போதுமான உணவுகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பதும் தான். ஏழை நாடுகள் உணவுக்காக அலை மோதும் போது பணக்கார நாடுகள் உணவுப் பொருள்களைக் கடலில் கொட்டுவதை நாம் பார்க்கிறோம்.

ஏழை நாடுகளில் வாழும் பரம ஏழைகள் ஒரு கவள உணவுக்கு ஏங்கும் போது பணத்திமிர் பிடித்த ஏழை நாட்டுச் செல்வந்தர்கள் உணவையும், பொருளாதாரத்தையும் விரயம் செய்து வருகின்றனர். இதுதான் சிலருக்கு உணவுகள் கிடைக்காமல் போவதற்கு உண்மைக் காரணம்.

இந்தியாவில் 120 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5 கோடி மக்களிடம் 200 கோடி மக்களுக்குத் தேவையான செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்திய மக்கள் தொகையை 120 கோடியிலிருந்து 10 கோடியாகக் குறைத்தால் வறுமையும், பசியும் நீங்கிவிடப் போவதில்லை. அப்போதும் அதில் ஒரு கோடிப் பேர் பட்டினி கிடக்கும் நிலை தான் ஏற்படும். 5 லட்சம் பேரிடம் 20 கோடி மக்களுக்கான உணவுகள் குவிந்திருக்கும் நிலை தான் ஏற்படும். அப்போதும் பற்றாக்குறையும், பசியும் ஒரு பக்கத்தில் இருக்கத் தான் செய்யும்.

உலக மக்கள் தொகையை வெறும் நூறு நபர்களாகக் குறைத்தால் கூடப் பத்துப் பேருக்கு உணவு கிடைக்காது என்பது தான் எதார்த்தமான நிலை. எனவே உணவுப் பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறிக் குடும்பக்கட்டுப்பாட்டை நியாயப்படுத்த முடியாது.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் இடப்பற்றாக்குறை ஏற்படுமா? என்றால் அதுவும் தவறாகும்.

உலகில் உள்ள நிலப்பரப்புகளில் ஐந்து சதவிகிதம் இடம் கூட மனிதர்களால் பயன்படுத்தப்படவில்லை. 95 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்கள் உபரியாகத் தான் உள்ளன.

குறிப்பிட்ட இடத்தில் தான் குடியிருப்போம் என்ற மக்களின் மனநிலை காரணமாகவே பெரும் நகரங்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பெரு நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் மனிதன் நவீன வசதிகளைப் பயன்படுத்தி சமாளிக்கக் கற்றிருக்கிறான்.  சிமெண்ட் போன்ற கலவையைக் கண்டுபிடித்து ஒரு வீடு கட்டுவதற்கு உரிய இடத்தில் பல மாடிக் கட்டடங்களை எழுப்பி அதையும் மனிதன் சமாளிக்கிறான்.

ஏனைய பொருட்களின் பற்றாக் குறையும் இத்தகையது தான்.

ஆகவே மக்கள் தொகைப் பெருக்கத்தால் தான் வறுமையும், பற்றாக்குறையும் ஏற்படும் என்பதும், மக்கள் தொகை குறைவதால் பசியும், வறுமையும் பறந்தோடி விடும் என்பதும் பொய்யான வாதமாகும்.

இன்னும் சொல்லப் போனால் மக்கள் தொகை பெருகுவதால் உலகத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தன; இனியும் கிடைக்கும் என்பதே உண்மையாகும்.

மனிதனுக்கு நெருக்கடியும், நிருபந்தமும் ஏற்படும் போது தான் அவன் அறிவைப் பயன்படுத்தித் தீர்வு காண முயல்கிறான். எத்தகைய பிரச்சனைகளையும் சமாளிக்கும் திறனுடன் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

மக்கள் தொகை குறைவாக இருந்த போது நெல்லை விதைத்து ஆறு மாதங்கள் கழித்து அறுவடை செய்தான். மக்கள் தொகை பெருகும் போது மூன்று மாதங்களில் அறுவடை செய்யக் கூடிய அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய ரக நெல்லைக் கண்டுபிடித்தான். இன்னும் மக்கள் தொகை பெருகும் போது காலையில் விதைத்து விட்டு மாலையில் அறுவடை செய்யக் கூடிய நெல்லை மனிதன் நிச்சயம் கண்டுபிடிக்கத் தான் போகிறான். அப்போது தாறுமாறாக உணவுகள் குவியக் கூடிய அற்புதத்தை உலகம் காணத் தான் போகிறது.

மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் மழை நீர், கிணற்று நீர், ஆற்று நீர் ஆகியவற்றை மட்டும் பருகி வந்த மனிதன் இன்று ஆழ் கிணறுகளைத் தோண்டுகிறான். செயற்கை மழை பெய்ய வைக்கிறான். கடல் நீரைக் குடிநீராக்குகிறான். கழிவு நீரையும் குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றுகிறான். இது மக்கள் தொகைப் பெருக்கத்தினால் மனிதனுக்குக் கிடைத்த நன்மை.

ஒரு கோழிக்குஞ்சு கோழியாக வளர்வதற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தொகை குறைவாக உள்ள போது இது தான் நிலைமை. மக்கள் தொகை பெருகிய பின் மிக விரைவாகவும், அதிக எடையுடனும் வளரக் கூடிய கோழி இனங்களைக் கண்டுபிடித்து விட்டான். சேவல் இல்லாமல் தினந்தோறும் முட்டை இடும் கோழி இனத்தையும் மனிதன் கண்டுபிடித்துள்ளான்.

ஒரு படி பால் கறப்பதற்கே தாளம் போட்ட நிலை மாறி 100 லிட்டர் வரை பால் கறக்கும் பசுக்களையும் மனிதன் கண்டுபிடித்து விட்டான். ஆடுகள், மாடுகள், தாவரங்கள், மீன்கள் மற்றும் அனைத்திலும் அசுர வளர்ச்சியை மனிதன் ஏற்படுத்தி விட்டான். இதற்கெல்லாம் காரணம் மக்கள் தொகைப் பெருக்கமே.

அது மட்டுமின்றிக் காய்கள், பழங்கள் மட்டுமின்றி ஆடு, மாடு போன்றவற்றையும் பல மடங்கு பெரிய அளவில் உருவாக்குவதில் மனிதன் வெற்றி கண்டு விட்டான். ஐந்து கோழிகள் தேவைப்படக்கூடிய குடும்பத்திற்கு ஒரு கோழியே போதுமானது என்ற நிலை விரைவில் ஏற்படவுள்ளது. கோழியை ஒரு ஆட்டின் அளவுக்குப் பெரிதாக உற்பத்தி செய்வதை மனிதன் கண்டுபிடித்து விட்டான். மனித குலம் பல்கிப் பெருகியது தான் இந்தக் கண்டுபிடிப்புகளுக்குக் காரணம்.

குடிசை வீடுகள் மாடி வீடுகளாக மாறியதும், அகல் விளக்குகள் மின் விளக்குகளாக மாறியதும், மாட்டுவண்டிகள் பேருந்துகளாகவும், விமானங்களாகவும் மாறியதும், எல்லாத் தயாரிப்புகளும் இயந்திர மயமானதும் மக்கள் தொகைப் பெருக்கத்தினாலேயே.

சந்திரன், செவ்வாய் கிரகங்கள் பற்றி மனிதன் ஆராய்ச்சி செய்வதற்கும் மக்கள் தொகைப் பெருக்கம் தான் காரணமாக இருக்கிறது.

சாதாரண நடைமுறை உண்மையையே இதற்குச் சான்றாகக் கூறலாம்.

நம்முடைய பாட்டன்மார் காலத்தில் ஒரு தேவைக்காக நூறு முட்டைகள் வாங்க முயன்றால் கடைத் தெருவில் அவ்வளவு இருப்பு இருக்காது. இன்றைக்கு இலட்சம் முட்டைகள் வேண்டுமானாலும் வாங்கலாம். இருப்பு உள்ளது. வாங்குவதற்குப் பலரிடம் பணம் தான் இருப்பதில்லை. உணவுப் பொருளுக்கு எந்தப் பற்றாக்குறையும் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படவில்லை. விநியோக முறையில் உள்ள தவறுகளால் தான் சிலருக்குக் கிடைப்பதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இன்னொரு கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனிதனை இறைவன் படைக்கும் போது வெறும் வயிற்றை மட்டும் கொடுத்து அனுப்பவில்லை. மூளையையும் கொடுத்தே அனுப்புகிறான்.

பிறக்கவிருந்த 1000 சிசுக்களைக் குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அழித்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அந்த ஆயிரத்தில் ஒருவன், ஐம்பதாயிரம் மக்களின் வறுமையைப் போக்கும் வழியைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுடையவனாக இருப்பான். பெரிய விஞ்ஞானியாக  அவர்களில் இருக்கக் கூடும். குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அத்தகையோர் உருவாகாமல் தடுப்பது மனிதக் குலத்திற்குக் கேடு விளைவிக்குமே தவிர நன்மை பயக்காது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே குடும்பக் கட்டுப்பாடு செய்வதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட நபர்கள் தமது சுய விருப்பத்தின் படி தமது குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பினால் அதைச் சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதிக்கின்றது. எல்லோரும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தவோ, பிரச்சாரம் செய்யவோ உரிமை இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

காண்டம் (ஆணுறை) போன்றவற்றைப் பயன்படுத்திக் கர்ப்பம் அடைவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்களுக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்ற, கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது, ஆண்களுக்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்ற வாசக்டமி போன்ற அறுவை சிகிச்சைகளைச் செய்வது, குழந்தை பெறுகின்ற தன்மையை ஆணோ பெண்ணோ அடியோடு நீக்கிக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது.

தனது எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வதும், கடவுள் கொடுத்த குழந்தை பெறும் தன்மையை அடியோடு நீக்கி விடுவதும் குற்றம் என இஸ்லாம் கூறுகிறது.

ஒரு தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்பதால் அவர்கள் குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராமல் இரண்டு குழந்தைகளும் மரணித்து விட்டால் குழந்தை பெறும் தன்மையை யாரால் திருப்பித் தர இயலும்? இப்படி அறிவுபூர்வமாக இஸ்லாம் சிந்திக்கச் சொல்கிறது.

சுருங்கச் சொல்வதென்றால் தாயின் உடல் நலக்குறைவு, இயலாமை போன்ற காரணங்களுக்காகச் சுயக் கட்டுப்பாட்டுடன் குறைவான குழந்தைகளைப் பெற்றெடுத்தால், அல்லது குழந்தை பெறுவதை அறவே தவிர்த்துக் கொண்டால் அது அவர்களின் உரிமை. அதை இஸ்லாம் தடுக்கவில்லை.

இது நமக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்று பிரச்சாரம் செய்தால் அதில் எள் முனையளவு கூட உண்மை இல்லை என்பதால் இஸ்லாம் அதை எதிர்க்கும்.

குடும்பக் கட்டுப்பாட்டை நிராகரித்து முஸ்லிம்கள் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தவறானதாகும்.

குடும்பக் கட்டுப்பாடு என்பது பயனற்ற திட்டம் என்று முஸ்லிம்களுக்கு மட்டும் இஸ்லாம் போதிக்கவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் போதிக்கின்றது. முஸ்லிமல்லாதவர்களும் இந்தப் போதனையை ஏற்றுக் கொண்டு தமது மக்கள் தொகையைப் பெருக்கிக் கொண்டால் இஸ்லாமோ, முஸ்லிம்களோ இதற்குத் தடையாக இருக்க மாட்டார்கள். மாறாக வரவேற்பார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் ஒரு தவறான பிரச்சாரத்தை நம்பி ஏமாந்தால் அதைப் போல் முஸ்லிம்களும் ஏமாற வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

மாறாக முஸ்லிம்கள் எவ்வாறு இந்த விஷயத்தில் பொய்ப்பிரச்சாரத்தை மெய்யென நம்பி ஏமாறாமல் இருக்கிறார்களோ அதுபோல் மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க முயல்வது தான் அறிவுடைமையாகும்.

ஏதோ இந்தியாவில் பெரும்பான்மையாக ஆவதற்காக இந்திய முஸ்லிம்கள் செய்து கொண்ட முடிவல்ல இது.

மாறாக முற்றிலும் முஸ்லிம்களே வாழ்கின்ற நாடுகளிலும் இஸ்லாத்தின் நிலைபாடு இது தான் என்பதை உணர்ந்தால் இது போன்ற குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா?

முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளிவாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது.

அரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமாகும் என்பது இஸ்லாத்திற்கு எதிராகக் கூறப்படும் விமர்சனங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

இவையெல்லாம் அரபு மொழியில் ஏன் அமைந்துள்ளன என்பதை அறிவதற்கு முன்னால் மொழிகளைப் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

ஒவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும் தமது மொழியே உலகில் சிறந்த மொழி என்று நினைக்கின்றனர். அம்மொழியைப் பேசுவதால் தம்மைச் சிறந்த சமுதாயத்தினர் எனக் கருதுகின்றனர்.

படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் மட்டும் தான் இவ்வாறு நம்புகின்றார்களா? என்றால் பண்டிதர்களும், பகுத்தறிவாதிகளும் இப்படித்தான் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையை இஸ்லாம் எதிர்க்கிறது. மனிதன் தான் நினைக்கின்ற கருத்தை மற்றவர்களுக்குக் கூறுகின்ற ஒரு சாதனம் தான் மொழி. இதைத் தவிர மொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.

எல்லா மொழிகளும் சமமான மதிப்புடையவை தான். எந்த மொழியும் மற்ற எந்த மொழியையும் விடத் தாழ்ந்ததுமில்லை; உயர்ந்ததுமில்லை. எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழி பேசக்கூடியவர்களை விடச் சிறந்தவர்களுமல்லர்; தாழ்ந்தவர்களுமல்லர் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

தமிழகத்தில் பிறந்து தமிழ்மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு யாரும் தமிழகத்தில் பிறக்கவில்லை. பெற்றோர்களும், சுற்றத்தாரும் நம் மீது தமிழைத் திணித்ததால் தமிழ் பேசுகிறோம். வேறு எங்காவது நாம் பிறந்திருந்தால் அங்குள்ள மொழியில் நமது கருத்தைத் தெரிவிப்போம். எனவே இதில் பெருமையடிக்கவோ, சிறுமையாகக் கருதவோ இடமில்லை என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமுதாயத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழிவெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை.

தம்மை அரபுகள் எனக் கூறிக் கொண்ட அந்தச் சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள் (வாயில்லாத ஜீவன்கள்) என்று குறிப்பிடுவர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருதியதில்லை. மற்றவர்களின் மொழியை வாயில்லா ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.

மொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்தார்கள். தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.

இறைவனின் பார்வையில் எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விடச் சிறந்ததில்லை என்பதை இன்னும் தெளிவாக இஸ்லாம் அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும். அவர்கள் மட்டும் தான் கடவுளின் ஒரே தூதர் என்று முஸ்லிம்கள் நம்பக் கூடாது. மாறாக நபிகள் நாயகத்துக்கு முன் அவர்களைப் போலவே எண்ணற்ற இறைத்தூதர்கள் வந்துள்ளனர் என்றும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அரபுச் சமுதாயத்தில் தோன்றியது போலவே மற்றவர்களும் அரபுச் சமுதாயத்தில் தான் தோன்றினார்களா? இல்லவே இல்லை.

நபிகள் நாயகத்திற்கு முன்னர் அனுப்பப்பட்ட ஏராளமான இறைத்தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே வேதங்களும் அருளப்பட்டன.

எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியுடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம்.

திருக்குர்ஆன் 14:4

என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபிகள் நாயகம் காலத்துக்கு முன்னர், தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் பேசும் இறைத்தூதர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரென நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தமிழில் தான் இறைச் செய்தியை எடுத்துரைத்தனர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுளின் பார்வையில் மொழிக்கு என எந்தச் சிறப்பும் கிடையாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

கடவுளிடம் ஒரு முஸ்லிம் தனது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும் போது அவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பிரார்த்தனை செய்யலாம். திருமணம் போன்ற சடங்குகளைத் தாய் மொழியிலேயே நடத்திக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

எந்த மொழியும் உயர்ந்த மொழியில்லை என்றால் பள்ளிவாசல்களில் தினமும் ஐந்து தடவை கூறப்படும் பாங்கு ஏன் அரபு மொழியில் அமைந்துள்ளது? தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் மொழியிலேயே பாங்கு எனும் அழைப்பை விடுக்கலாமே? என்ற கேள்விக்கு என்ன விடை என்பதைப் பார்ப்போம்.

இதற்குக் காரணம் அரபு மொழி தேவமொழி என்பதல்ல. தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு உலகமெங்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே காரணம். இத்தகைய உலக ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு மொழியில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்க வேண்டும்.

அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற பாங்கை அதே பொருளுடைய வேறு அரபுமொழி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறலாமா? என்றால் கூடாது என்றே இஸ்லாம் கூறுகிறது.

நபிகள் நாயகம் எதைக் கற்றுத் தந்தார்களோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் கூற வேண்டுமே தவிர அரபு மொழியில் இதற்கு நிகரான எந்த வார்த்தையையும் கூறிவிட முடியாது. அரபு மொழிக்குக் கூடுதல் சிறப்பு உண்டு என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பகுதியில் உள்ள முஸ்லிம்களும் அவரவர் தாய் மொழியில் தொழுகைக்கான அழைப்பைக் கூறலாம் என்றால் அதனால் குழப்பங்கள் தான் ஏற்படும். உலக ஒருமைப்பாடு சிதைந்து விடும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது. அவர் இது வரை கேள்விப்பட்டிராத வார்த்தைகளை இப்போது தான் கேள்விப்படுகிறார். இதைக் கேட்டவுடன் அந்தப் பகுதியில் ஒரு பள்ளிவாசல் இருப்பதாக அவர் எண்ண மாட்டார். தொழுகைக்காக அழைப்பு விடப்படுவதாகவும் புரிந்து கொள்ள மாட்டார்.

உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத் தொழுகைக்கான அழைப்பு அமைந்திருந்தால் எந்த மொழியினரும் தொழுகைக்கான அழைப்பை அறிந்து கொள்வர். பள்ளிவாசலை அடையாளம் கண்டு கொள்வர். தொழுகை எனும் கடமையை நிறைவேற்ற இது வாய்ப்பாக அமையும்.

நாமே ஏற்றுக் கொண்ட ஒரு உதாரணத்தின் மூலம் இதை நாம் தெளிவாக விளங்கலாம்.

இந்தியாவின் தேசியக் கீதம் வங்காள மொழியில் அமைந்துள்ளது. வங்காள மொழி தான் இந்திய மொழிகளில் சிறந்த மொழி என்பதற்காக இவ்வாறு அமைக்கவில்லை. மாறாக அதை இயற்றியவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்காகவும், அதன் கருத்துக்காகவும் தான் தேசியக் கீதமாக்கப்பட்டது.

தமிழில் அதை விடச் சிறந்த கவிதைகளை எழுத முடியும். ஆனாலும் தேசியக் கீதத்தை நாம் மாற்றுவதில்லை. ஏதாவது ஒரு பாடலைத் தான் தேசியக் கீதமாக ஆக்க முடியும். எந்த மொழியில் அது அமைந்தாலும் மற்ற மொழிகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படத் தான் செய்யும். எனவே நாட்டின் ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு வங்காள மொழி தேசியக் கீதத்தை அனைவரும் ஏற்றிருக்கிறோம்.

தமிழகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அதன் பொருள் தெரியாது. ஆனாலும் அப்பாடல் இசைக்கப்படும் போது தேசியக் கீதம் பாடப்படுகிறது என்பது மட்டும் தெரியும்.

இது போல் தான் உலகளாவிய ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் அல்லாஹு அக்பர் எனத் தொடங்கும் பாங்கு சொல்லப்படுகிறது. அதன் பொருள் எல்லா முஸ்லிம்களுக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால் தொழுகைக்காக அழைப்பு விடப்படுகிறது என்பது தெரியும். இவ்வாறு உலகம் முழுவதையும் ஒருங்கிணைக்கத் தான் அரபு மொழியில் அழைப்பு விடுகின்றனர்.

நிச்சயமாக அரபு மொழி உலகத்திலேயே சிறந்த மொழி என்பதற்காகச் செய்யப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்திருந்தால் தமிழில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்கும்.

ஒருமைப்பாட்டிற்காக எத்தனையோ விஷயங்களில் நாம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறோம். இராணுவத்தினர், காவல் துறையினர் பயிற்சியின் போது லெப்ட், ரைட் எனக் கூறி நடைபோடுகின்றனர். வலது, இடது எனக் கூற வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. பல்வேறு மொழியினர் வாழும் நாட்டில் கட்டளைகளை அனைவரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தமிழை விட ஆங்கிலம் சிறந்த மொழி என்பது இதன் கருத்தல்ல.

இதைப் புரிந்து கொள்வது போலவே அரபு மொழியில் பாங்கு கூறப்படுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். மொழி, இனம், நாடு, குலம், கோத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் திட்டவட்டமாக மறுக்கிறது. அரபுமொழி மற்ற மொழிகளை விடச் சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரபு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஏனைய மொழிகளை இஸ்லாம் இழிவுபடுத்தவில்லை என்றால் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வதில்லை. தமிழர்களுக்கு அன்னிய மொழியாக இருக்கும் அரபு மொழியில் பெயர் சூட்டிக் கொள்ளக் காரணம் என்ன? என்பது மற்றொரு சந்தேகம்.

இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூஸுஃப், யூனுஸ், தாவூத், ஸுலைமான் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள்.

இப்பெயர்களில் ஒன்று கூட அரபு மொழிச் சொல் இல்லை. அந்த இறைத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அந்தந்த மொழிச் சொற்களே தவிர அரபு மொழிச் சொற்கள் அன்று.

மேற்கண்ட அரபு மொழியல்லாத வேற்று மொழிப் பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் சூட்டிக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டார்கள். இது அரபு மொழிச் சொல் அன்று.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை உலக முஸ்லிம்கள் மேற்கண்ட பெயர்களைச் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது மொழியிலேயே தமது பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர்.

பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாகிஸ்தான் மக்களின் தாய்மொழியான உருதுப் பெயர்களேயன்றி அரபு மொழிப் பெயர்கள் அன்று.

நவாஸ், பேநஸீர் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம். இந்தோனேசிய முஸ்லிம்கள் சுகர்னோ, சுகர்டோ போன்ற இந்தோனேசியப் பெயர்களைத் தமக்குச் சூட்டிக் கொள்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் பெரும்பாலும் தமது தாய் மொழியான பாரசீக மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அரபு மொழியில் தான் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்தக் கட்டளையும் இல்லை என்பதற்காகவே இந்த விபரங்களைக் கூறுகிறோம்.

அப்படியானால் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள என்ன தடை?

சட்டப்படி எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நமது நாட்டின் நடைமுறை காரணமாக இங்குள்ள முஸ்லிம்கள் தாமாகவே அதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன.

இஸ்லாம் மார்க்கம் சாதி வேறுபாட்டை அறவே ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். பல்வேறு சாதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இரண்டு தலைமுறை கடந்த பின் தாங்கள் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றோம் என்பதைக் கூட மறந்து விடுகிறார்கள்.

நமது நாட்டில் சாதியிலிருந்து மக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பின் ஒருவர் தமது பழைய பெயரையே வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தமது பெயரைக் கூறிய உடன் நீங்கள் எந்தச் சாதி என்று கேட்கும் வழக்கம் இங்கே உள்ளது. இவன் என்ன சாதிக்காரனாக இருப்பான் என்பதை எந்த வகையிலாவது அறிந்து கொள்ள முற்படுவார்கள்.

நமது நாட்டில் நடைமுறையில் இல்லாத பெயர்களைச் சூட்டிக் கொண்டால் அவரது சாதி என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

ராமசாமி என்று கூறினால் என்ன சாதி என்று கேட்கும் சமூக அமைப்பு, அப்துல்லா என்றால் என்ன சாதி என்று கேட்பதில்லை. அந்த ஒரு நன்மையைக் கருதி தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்களே தவிர தமிழை இழிவுபடுத்தி அரபு மொழியை உயர்த்துவதற்காக அல்ல.

இந்தோனேசியா, ஈரான் போன்ற நாடுகளில் சாதி அமைப்பு இல்லாததால் தத்தம் மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வது போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு அடியோடு ஒழிந்து விடும் பட்சத்தில் தமிழக முஸ்லிம்களும் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வார்கள்.

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா?

மனிதனின் உணவுக்காக உயிரினங்களைக் கொல்ல்லாம் என்று இஸ்லாம் சொல்கிறது. இது ஜீவகாருண்யத்துக்கு எதிரானதல்லவா?

இஸ்லாத்திற்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் முக்கியமானதாகும்.

மனிதன் தனது உணவுக்காகச் சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இதை இஸ்லாம் அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் இந்தக் குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.

மனிதன் தனது நன்மைக்காக உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பது போலித்தனமான வாதமாகும். ஏனெனில் உயிரினங்களைக் கொல்லாமல் மனிதன் வாழ முடியாது. உயிர்வதை கூடாது என்று கூறக் கூடியவர்கள் கூட அவ்வாறு வாழ்வது கிடையாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவை தண்ணீர். தண்ணீர் அருந்தாமல் எவரும் இவ்வுலகில் வாழ முடியாது.

தண்ணீரில் கிருமி எனும் இலட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. தண்ணீரை அருந்தும் போது இலட்சக்கணக்கான உயிர்களையும் சேர்த்துத் தான் அருந்துகிறோம். தண்ணீரைக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் அந்த உயிரினங்களை வேக வைத்துச் சாப்பிடுகிறோம்.

அந்த உயிர்களுக்கு மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற எல்லா உறுப்புகளும் உள்ளன. மற்ற உயிர்களைப் போலவே இயங்குகின்றன. மற்ற உயிர்களைப் போலவே இனவிருத்தியும் செய்கின்றன.

நமது சாதாரணக் கண்களுக்கு அவை தென்படாவிட்டாலும் அதற்குரிய கண்ணாடிகள் மூலம் அவற்றைப் பார்க்க முடியும்.

உயிர் வதை கூடாது என்பதில் உறுதியான நம்பிக்கையுடையவர்கள் தண்ணீரைக் கூட அருந்தாமல் தவிர்க்க வேண்டும். ஆனால் அவர்களால் அதைத் தவிர்க்க முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

உயிர்களைக் கொல்லாமல் மனிதன் வாழவே முடியாது என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

அது மட்டுமின்றி சிந்தித்தால் உயிரினங்களில் பல வகைகள் உள்ளன.

மனிதன் பகுத்தறிவு வழங்கப்பட்டு இடம் விட்டு இடம் செல்லக்கூடிய உயிரினமாக இருக்கிறான். ஏனைய நடப்பன, ஊர்வன, பறப்பன யாவும் பகுத்தறிவு இல்லாமல் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்களாக உள்ளன. இவ்விரண்டை மட்டும் தான் நாம் உயிரினம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இடம் விட்டு இடம் பெயராமல் சுயமாக வளர்ச்சி பெறக் கூடியவையும், இனவிருத்தி செய்யக்கூடியவையும் உயிரினங்கள் தான் என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

மரம், செடி, கொடிகள் போன்றவற்றுக்கு உயிர் இருப்பதால் தான் அவை வளர்கின்றன. பல்வேறு பருவங்களை அடைகின்றன. அவற்றில் ஆண், பெண் வேறுபாடு உள்ளது. இனப் பெருக்கமும் செய்கின்றன.

உயிரினங்களை வதை செய்யக் கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றையும் உணவாக உட்கொள்ளக் கூடாது, அவ்வாறு உட்கொண்டால் அவர்கள் உயிரினங்களைக் கொன்றவர்களாகத் தான் ஆவார்கள்.

மனிதனும், ஆடு மாடுகளும் உயிரினங்கள் என்றாலும் இரண்டு உயிர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போலவே தான் ஆடுமாடுகளுக்கும், தாவரங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வித்தியாசம் இருக்கிறது என்பதற்காக அவற்றுக்கு உயிர் இல்லை என்று கூறக் கூடாது.

மேலும் மனிதனுக்குக் கேடு விளைவிக்கிறது என்பதற்காக எத்தனையோ உயிர்களை அனைவரும் கொல்கின்றனர். கொசு, எலி, கரப்பான், பல்லி போன்றவற்றை விஷ மருந்துகளைப் பயன்படுத்திக் கொலை செய்கின்றனர். மனிதனின் நன்மைக்காக இவற்றைக் கொல்வதை அங்கீகரிப்பவர்கள் உண்பதற்காகச் சில உயிரினங்களைக் கொன்றால் மட்டும் உயிர்வதை என்கின்றனர்.

மனிதனுக்குத் தேவையான புரதச் சத்துகள் பல அசைவ உணவில் இருக்கின்றன. விஞ்ஞானிகள் இதை நிரூபித்துள்ளனர். மருத்துவர்களும் பல சமயங்களில் அசைவ உணவைப் பரிந்துரைக்கின்றனர். உயிர் வதை கூடாது என்ற பெயரில் மாமிசத்தைத் தவிர்ப்பவர்களில் கணிசமானோர் புரதச்சத்து குறைவுடையவர்களாக ஆகின்றனர்.

மேலும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மீன் எண்ணெய் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அசைவம் கூடாது என்ற கொள்கை உள்ளவர்களும் அவற்றை உட்கொள்கின்றனர்.

மாடுகளில் பால் கறந்து அருந்துவதை ஜீவகாருண்யம் பேசுவோர் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். இது ஏன் அவர்களுக்கு உயிர்வதையாகத் தெரியவில்லை? மாடு அசைவ உணவு என்றால் அதன் மாமிசம், எலும்பு, குடல், இரத்தம் ஆகியவை அசைவமாக உள்ளது போல் அதிலிருந்து பெறப்படும் பாலும் அசைவமாகத் தான் கருதப்பட வேண்டும்.

மேலும் மாடுகளுக்குச் சுரக்கக்கூடிய பால் அதன் கன்றுகளுக்காகவே சுரக்கின்றது. முழுமையாகக் கன்றுக்கே பால் சொந்தமாக வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரானது ஏதுமில்லை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஏனைய உயிரினங்களுக்கும் அவற்றின் தாய்ப்பால் தான் சிறந்ததாகும்.

கன்றுகளுக்குச் சேர வேண்டிய பாலை மனிதன் பயன்படுத்தும் போது கன்றுகள் வதைக்கப்படுகின்றன. அவை ஏமாற்றப்படுகின்றன. இவை வதை எனத் தெரிந்தாலும் அதனால் மனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

காளைமாடுகள் ஏர்களிலும், வண்டிகளிலும் பூட்டப்படுகின்றன. கடுமையான வேலைகள் அவற்றிடம் வாங்கப்படுகின்றன. ஒரேடியாகக் கொல்வதை விட இந்தச் சித்ரவதை கொடுமையானது; கொடூரமானது ஆனாலும் மனிதன் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்பதை அனைவரும் ஒப்பு கொள்கிறோம்.

அப்படியானால் மனிதன் உணவுத் தேவைக்காக அவற்றைக் கொல்வதை மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?

உயிர்வதை கூடாது என்பது இவர்களின் வாதமா? உண்ணக் கூடாது என்பது இவர்களின் வாதமா? என்பதையும் சிந்திக்க வேண்டும். உயிர்வதை கூடாது என்பது தான் வாதம் என்றால் மேற்கண்டவற்றையும் தவிர்க்க வேண்டும்.

எலி, பாம்பு, பல்லி, தேள், கொசு போன்றவற்றைக் கொல்கிறோம். நமக்குத் தீங்கிழைக்கிறது என்பதற்காக இவற்றைக் கொல்வதை அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் நன்மைக்காக மற்ற உயிர்களை உணவுக்காகக் கொல்லலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

உயிர்வதை, ஜீவன்களின் மீது காருண்யம் என்றெல்லாம் கூறுபவர்கள் அவற்றில் உண்மையாளர்களாக இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் போது அனைவரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டால் விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிடும். ஏழைகள் எந்த உணவையும் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அசைவ உணவு உட்கொள்பவர் பலர் உள்ளதால் தான் தட்டுப்பாடின்றிச் சைவ உணவு கிடைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் துருவப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு மீனைத் தவிர வேறு எந்த உணவும் கிடைக்காது.

உயிர்களைக் கொல்லக் கூடாது என்று அவர்களுக்குப் போதனை செய்தால் அவர்கள் செத்து மடிந்து விடுவார்கள். கடுமையான குளிர்ப் பிரதேசங்களில் குளிரைத் தாங்கும் வலிமையை அசைவ உணவு தான் அளிக்க முடியும்.

இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்கள் சாகப் பட்சிணி, மாமிசப் பட்சிணி என இரு வகைகளாக உள்ளன.

மாமிசத்தை உணவாக உட்கொள்ளக் கூடிய உயிரினங்களின் குடல் அமைப்பும், பல் அமைப்பும் அவ்வுணவை அரைக்கவும், ஜீரணிக்கவும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

அது போல் சாகப் பட்சிணிகளின் குடல் அமைப்பும், பல் அமைப்பும் சைவ உணவை மட்டும் ஜீரணிக்க ஏற்றதாக அமைந்துள்ளன. சாகப் பட்சிணியாக உள்ள பிராணிகள், மாமிசத்தை உட்கொண்டால் அவ்வுணவை ஜீரணிக்க முடியாமல் செத்துப் போய்விடும்.

ஆனால் மனிதனின் பற்களும், குடல் அமைப்பும் எவ்வாறு அமைந்துள்ளன? என்று சிந்தித்தால் நாமே ஆச்சரியப்படும் படி இரு வகை உணவுகளையும் சரியாக ஜீரணிக்க ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வகை உணவுகளில் எதை உட்கொண்டாலும் மனிதனின் உடல் அதை அரைத்துச் சக்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

நமது உடல் அமைப்பு இரண்டு வகையான உணவுகளையும் ஏற்றுக் கொள்ளும் முறையில் இருப்பதால் அதுவே இயற்கை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும். ஜீவகாருண்யம் என்று கூறுவோர் இந்துக்களில் ஒரு சாரார் மட்டுமே. ஆயினும் இந்து மதத்தின் ஆதாரங்களிலிருந்து இவர்களின் வாதத்திற்கு ஆதாரம் காட்ட இயலாது.

இந்து மன்னர்களும், அவதாரப் புருஷர்களும், கடவுளர்களும் உயிரினங்களை வேட்டையாடியதைப் புராண இதிகாசங்கள் கூறுகின்றன. யாகங்கள் என்ற பெயரால் குதிரைகள், மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இன்றைக்கும் கூட முஸ்லிம்களை விட இந்துக்களே அதிக அளவில் அசைவ உணவு உட்கொள்கின்றனர். 500 கோடி மக்களில் மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தாம் அசைவ உணவைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இதிலிருந்து முழுச் சைவம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதை அறியலாம்.

மேலும் ஒருவருக்கு அசைவ உணவில் விருப்பமில்லாவிட்டால் அதைத் தவிர்த்துக் கொள்வதற்கு இஸ்லாம் தடையாக இல்லை. அசைவ உணவை உட்கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது தானே தவிர அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றல்ல என்பதையும் உணர வேண்டும்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு உடனே அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காகவே உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதைச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1-முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2 -அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3 -உணர்வு திரும்பியதும். முழுவதுமாகக் குணமடையப் பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4 -அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5 -மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6 – பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G. மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G. மூளையின் நிலையையும், E.C.G. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:

1-இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.G. ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2-மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3 -மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கோ அல்லது வதைக்கோ ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4 -மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும், உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை:

1 -இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2 -அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G. பதிவு காட்டியது.

3 -அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

எனவே இஸ்லாம் ஜீவகாருண்யமில்லாத மார்க்கம் என்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்பதில் ஐயமில்லை.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

முஸ்லிமல்லாதவர்களால் விமர்சனம் செய்யப்படும் விஷயங்களில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களும் ஒன்றாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்து விட்டால் கொலை செய்தவன் கொல்லப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. ஒருவனது அங்கத்தை மற்றொருவன் சேதப்படுத்தி விட்டால் சேதப்படுத்தியவனின் அதே அங்கம் சேதப்படுத்தப்பட வேண்டும். திருடினால் கையை வெட்ட வேண்டும் என்றெல்லாம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தச் சொல்கிறது இஸ்லாம்.

இஸ்லாத்தில் உடன்பாடில்லாத பிற மதத்தவர்கள் இந்தச் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். இது என்ன கொடுமை! திருடியதற்காகக் கையை வெட்டச் சொல்வது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? விபச்சாரத்திற்காக மரண தண்டனை வழங்குவது மனிதாபிமானமற்றதல்லவா? நாகரீகத்தின் உச்சிக்கு மனிதன் சென்றுவிட்ட காலத்தில் இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற சட்டங்கள் பொருந்துமா? என்று வினாக்களை எழுப்பி வருகின்றனர்.

தண்டனை வழங்குவதன் நோக்கம்

குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். என்று இஸ்லாம் கூறுவது போலவே மற்றவர்களும் கூறுகின்றார்கள். கடுமையான தண்டனைகள் வழங்குவதா? கடுமை குறைந்த தண்டனைகள் வழங்குவதா? என்பதிலேயே இஸ்லாத்துடன் இவர்கள் முரண்படுகிறார்கள். இரண்டு வகையான தண்டனைகளில் எது அறிவுப்பூர்வமானது என்பதை நாம் ஆராய்வோம்.

குற்றவாளி ஒருவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இது விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்துவிடப் போவதில்லை. கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்பவும் கிடைத்துவிடப் போவதில்லை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறிபோனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது. இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதின் காரணம் என்ன?

குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக நம்ப வேண்டும். அவன் மனநிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்களிருக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் நோக்கங்கள் இவை தான் என்பதை மாற்றுக் கருத்துடையவர்களும் மறுக்க மாட்டார்கள்.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களெல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறவில்லை.

குற்றங்களுக்கெதிராகப் பல்வேறு தண்டனைகளை வழங்கி வரும் அரசுகள் இந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

குற்றம் செய்பவனையும், செய்ய நினைப்பவனையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு வலிமை மிக்கதாக எந்த நாட்டின் சட்டமும் இல்லாததே இதற்குக் காரணமாகும். அது மட்டுமின்றிக் குற்றவாளிகளுக்குச் செய்து தரப்படுகின்ற வசதிகளைக் காணும் ஒருவன் நாமும் குற்றம் செய்தால் அந்த வசதிகளை அனுபவிக்கலாமே என்று எண்ணுகின்றான். குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்? அறிவு ஜீவிகள் இதைப் பற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஒருவன் திருடுகிறான்; அல்லது கற்பழிக்கிறான்; கொலை செய்கிறான்; கொள்ளையடிக்கிறான்; அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடுகிறான்; இன்ன பிற குற்றங்களில் ஈடுபடுகிறான். இத்தகைய சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதம் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன. இருக்கின்ற வசதிகள் போதாதென்று குற்றவாளிகளுக்கான வசதியைப் பெருக்க என்ன செய்யலாம் என்பதைக் கண்டறியக் கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடம் இருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழித்தானோ அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனை, குற்றவாளிகளின் மனப்பான்மையைக் கடுகளவும் மாற்றியதாகக் காணோம். சிறைச் சாலையிலிருந்து விடுதலை பெற்று வரும் ஒருவன், மீண்டும் குற்றம் புரிந்து விட்டு மாமியார் வீட்டுக்குப் போகிறேன் என்று திமிருடன் கூறிக் கொண்டு மீண்டும் சிறைச் சாலையில் தஞ்சமடைகிறான்.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது! 15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது! என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை குற்றம் புரிகிறான். 53 தடவையும் கைது செய்யப்படுகிறான். 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தக் காணோம். அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதக் காணோம்.

மணியடித்தால் சோறு! மாமனாரு வீடு! என்று சிறைச் சாலையில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச் சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே; என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகிறார்கள். குற்றங்கள் பெருகுகின்றன. குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப்பணம் பாழாக்கப்படுகின்றது. அறிவு ஜீவிகள் (?) வக்காலத்து வாங்கும் மனிதாபிமானச் சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

அடுத்ததாக, பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருடியவனை என்ன செய்யலாம் என்று திருட்டுக் கொடுத்தவனிடம் கேட்டால் ஆறு மாதம் சோறு போடலாம் எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய்க் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் பதினாலு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

இஸ்லாமோ இதையும் கவனத்தில் கொள்கிறது. ஒருவன் பத்துப் பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். உலகின் பல நாடுகளில் கருணை மனுவின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விடுகிறான். இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விடுவதாக அறிவித்தால், அல்லது எதிரியிடமிருந்து ஏதேனும் தொகை கிடைத்தால் போதும் என்று கூறினால் குற்றவாளியின் கண் குருடாக்கப்படாது.

அது போலவே கொல்லப்பட்டவனின் மகன் அல்லது தந்தை அல்லது மற்ற வாரிசுகள் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறுவார்களானால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தைப் பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர்.

குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.

இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இப்படிக் கையை வெட்டினால் அவர்கள் தொடர்ந்து திருடமாட்டார்கள். திருடவும் முடியாது. மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டார்கள் என்பது ஒரு நன்மை. முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைத் திருட்டுக் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

 இவர்கள் இங்கே இருக்கிறார்களா? என்று திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனை வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி, குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப்பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கிறது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியமிராது.

பாவம்! கையை வெட்டுகின்றீர்களே! என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று அறிவு ஜீவிகள் எண்ணுகின்றனர். பரிதாபப்பட வேண்டியது தான். அதை நாம் ஆட்சேபிக்கவில்லை. யாருக்குப் பரிதாபப்படுவது?

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்து வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தை அபேஸ் செய்கிறான். இந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றித் தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

தன் மகளின் திருமணத்திற்காக உழைத்துச் உழைத்து சேர்த்த பணத்தைத் திருடன் பறித்துக் கொள்கிறான். பணத்தையும், மகளின் வருங்காலத்தையும் பறிகொடுத்து நிற்கிறானே அவனுக்கு யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக்கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்பதைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டார்களாம். அவனை நடுத்தெருவில் நிறுத்திய அயோக்கியனுக்காகப் பரிதாபப்படுவார்களாம்? என்னே மனிதாபிமானம்! என்னே காருண்யம்? அறிவை அடகு வைத்துவிட்டு அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தான் அறிவு ஜீவிகளாம்!

பரிதாபப்படுபவர்கள் அதை முழுமையாகப் பட்டுத் தொலைக்க வேண்டியது தானே. எந்தக் குற்றவாளிக்கும் எந்தத் தண்டனையும் தேவையில்லை என்று கூறினால் முழு மனிதாபிமானம் என்று ஏற்றுக் கொள்ளலாம். சிறைச்சாலை போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றிற்குச் செய்யும் செலவுகளாவது மிச்சமாகும்.

ஆனால் இவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

இதிலிருந்து மனிதாபிமானம் காரணமாக இவ்வாறு இவர்கள் வாதிடவில்லை என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம். லஞ்சம், ஊழல் மற்றும் எண்ணற்ற கிரிமினல் நடவடிக்கைகளில் இறங்குவோர் நாளை சிறைச்சாலைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். அப்போது தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

இப்படியே கையை வெட்டிக்கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகிவிடுமே என்றெல்லாம் புத்திசாலித்தனமான(?) கேள்விகளையும் இந்த அறிவு ஜீவிகள் எழுப்புகின்றனர்.

நிச்சயம் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனுக்குக் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது. வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

சவுதி அரேபிய அரசாங்கம் இந்தத் தண்டனைகளைக் கடுமையான முறையில் கடைப்பிடிக்கின்றது. பல ஆண்டுகளாக இந்தச் சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது. அங்கே கையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாகத் திருடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உலகத்திலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் நாடு என்ற பெருமையை அந்த நாடு பெற்றுள்ளது.

உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன. கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே மற்றவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய்விட்டன. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சி அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.

காலம் கடந்தாவது சில பேர் இன்று இதை உணரத் தலைப்பட்டுள்ளனர். பெண்கள் கற்பழிக்கப்படுவது பெருகி வருவதைக் கண்டு கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு அரபு நாடுகளில் உள்ளது போல் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளனர். பல்வேறு பெண்கள் மாநாடுகளில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெயரளவிலான தண்டனைகளால் பயனேதும் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உலகம் அறிந்து வருகிறது. குற்றவியல் சட்டங்கள், குற்றங்களைக் குறைப்பதில் படுதோல்வியடைந்து விட்டதை ஒவ்வொரு அரசும் புரிந்து கொண்டது.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் இந்தத் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்திக் கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் அதன் பயனை இந்த அறிவு ஜீவிகள் அனுபவப்பூர்வமாக உணர்வார்கள். அதன் பிறகு இஸ்லாமியச் சட்டத்தை விமர்சிக்க மாட்டார்கள்.

திருடனைப் பிடித்தவுடன் அவனுக்குக் கையை வெட்டிவிட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்ப வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது. மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைக் கூறினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றிச் சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?

இஸ்லாம் மார்க்கம் ஜாதிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்து விட்டாலும் வேறு விதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் பிற மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன்வைக்கின்றனர்.

மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும், தக்னி, லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகளையும், ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகளையும் இவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் பெண் எடுப்பதோ, கொடுப்பதோ இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பதாக வாதிடுவதைத் தான் நாம் மறுக்கிறோம்.

இவ்வாறு மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்

முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பது அவர்களது அறியாமையினால் அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறுகளால் உருவானதாகும்.

இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக உள்ள திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலும் இத்தகைய பிரிவுகள் பற்றிக் குறிப்பிடவில்லை.

நீங்கள் அனைவரும் ஒரு சமுதாயம் தான்.

திருக்குர்ஆன் 21:92

உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து நாம் படைத்தோம். உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியிருப்பது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கே. நிச்சயமாக அல்லாஹ்விடம் சிறந்தவர் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே!

திருக்குர்ஆன் 49:13

தங்கள் மார்க்கத்தைப் பலவாறாகப் பிரித்து விட்டார்களே அவர்களுடன் (முஹம்மதே) உமக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

திருக்குர்ஆன் 6:159

பலவாறாகப் பிரிந்துவிடக் கூடாது என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எல்லா மக்களுக்கும் மூலப் பிதா ஒருவர் தான். எல்லா மக்களுக்கும் மூல அன்னையும் ஒருவரே என்று திட்டவட்டமாக இஸ்லாம் பிரகடனம் செய்து விட்டது.

இஸ்லாத்தின் போதனைகளை மறந்து விட்டதன் காரணத்தால் தான் இவ்வாறு பிளவுபட்டு விட்டார்களே தவிர இஸ்லாம் பிளவுபடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இரண்டாவது காரணம்

ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்குக் கிடைக்கும் தகுதியாகும். ஒரு சாதியில் பிறந்தவன் இன்னொரு சாதிக்காரனாக மாறவே முடியாது. இது தான் சாதிக்குரிய இலக்கணம்.

முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் இந்தப் பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உருவானதன்று.

ஷியா, சன்னி, ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹம்பலி, அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு கொண்டதால் ஏற்பட்ட பிரிவாகும்.

ஷியா பிரிவின் குடும்பத்தில் பிறந்தவன் அவர்களது கொள்கையை நிராகரித்துவிட்டு மற்ற எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஷாஃபி என்பவர் ஹனஃபி பிரிவில் சேரலாம். ஹனஃபி என்பவர் ஷாஃபி பிரிவில் சேரலாம்.

இது பிறப்பின் அடிப்படையில் வருவதன்று. ஒருவன் விரும்பித் தேர்வு செய்வதால் ஏற்படுவது. யாரும் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனும் போது இந்தப் பிரிவைச் சாதியுடன் சேர்ப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாகாது.

மரைக்காயர், லெப்பை, இராவுத்தர் போன்ற பிரிவுகளும் அக்காலத்தில் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் உருவானதாகும்.

குதிரையைப் பயிற்றுவிப்பவர் இராவுத்தர் எனப்படுவார். அன்றைய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து குதிரைகளுக்குப் பயிற்சி அளித்து விற்று வந்தனர். இந்தத் தொழில் காரணமாக அவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்களே தவிர பிறப்பின் அடிப்படையிலோ, உயர்வு தாழ்வு கற்பிக்கும் அடிப்படையிலோ இவ்வாறு அழைக்கப்பட்டதில்லை.

மரக்கலத்தில் சென்று வணிகம் செய்த முஸ்லிம்கள் மரக்கலாயர் என்று அழைக்கப்பட்டனர். இதுவே மரைக்காயர் என்று ஆனது.

அரபு நாட்டைத் தாயகமாகக் கொண்ட சிலர் இங்கே வந்து குடியேறினார்கள். அவர்கள் லெப்பை என்று அழைக்கப்பட்டனர்.

யாரேனும் அழைத்தால் ஓ என்று நாம் மறுமொழி அளிப்போம். அன்றைய அரபு நாட்டில் லப்பைக் என்று மறுமொழி கூறிவந்தனர். இங்கு வந்து குடியேறிய அரபு முஸ்லிம்களும் அந்த வழக்கப்படி அடிக்கடி லப்பைக் என்று கூறி வந்ததால் அவர்கள் லப்பை என்றே குறிப்பிடப்பட்டனர். உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்காக இவ்வாறு அழைக்கப்படவில்லை.

எனவே இதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளன எனக் கூறுவது ஏற்க முடியாத விமர்சனமாகும்.

மூன்றாவது காரணம்

கொள்கை, மற்றும் தொழில் காரணமாக இவ்வாறு பல பெயர்களில் முஸ்லிம்கள் பிரிந்து கிடந்தாலும் இதன் காரணமாகத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை. வேறு பிரிவினரிடம் திருமணச் சம்பந்தம் கூடச் செய்து கொள்கின்றனர்.

இதனைச் சாதியாக முஸ்லிம்கள் கருதியிருந்தால் ஒருவர் மற்ற பிரிவில் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ மாட்டார். எனவே இந்தக் காரணத்தினாலும் இஸ்லாத்தில் ஜாதி கிடையாது என அறிந்து கொள்ள முடியும்.

உருது, தமிழ் என்பது போன்ற பிரிவுகளுக்கிடையே சகஜமாகத் திருமணங்கள் நடப்பதில்லை என்பது உண்மை தான்.

இதற்குக் காரணம் சாதி அமைப்பு அல்ல. தம்பதிகள் தமக்கிடையே நல்லுறவை வளர்த்து இல்லறத்தை இனிதாக்கிட ஒரு மொழியை இருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.

ஒருவரது மொழி மற்றவருக்குத் தெரியாத நிலையில் அவர்களது இல்லறம் சிறக்கும் எனச் சொல்ல முடியாது. இது போன்ற காரணங்களுக்காகத் திருமணச் சம்பந்தத்தைச் சிலர் தவிர்க்கின்றனர். உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காக இல்லை.

தமிழ் முஸ்லிம் உயர்ந்தவன் இல்லை. உருது முஸ்லிம் தான் உயர்ந்தவன் என்ற அடிப்படையில் திருமணச் சம்பந்தத்தைத் தவிர்த்தால் தான் அதைச் சாதியாகக் கருத முடியும்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தெரியாத சில முஸ்லிம்கள்  தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டு திருமண உறவுகளைத் தவிர்க்கின்றனர். இதற்கும் இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை.

இது போன்ற பிரிவுகளையும் கூடத் தவிர்ப்பது இத்தகைய விமர்சனங்களைத் தடுக்கும் என்பதை முஸ்லிம்களும் உணர்ந்து இதைக் கைவிட வேண்டும். என்பதையும் முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரையாகக் கூறிக் கொள்கிறோம்.

அவர்கள் கைவிடாவிட்டாலும் அதைச் சாதியாகக் கருதுவது முற்றிலும் தவறாகும்.

எம்மதமும் சம்மதமா?

இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றக் கூடியவர்கள் எம்மதமும் சம்மதமே என்று கருதுகின்றனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறைகளை மற்ற சமயத்தவர்கள் கடைபிடிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர் என்பதும் இஸ்லாம் குறித்து பிறமதத்தவர்கள் செய்யும் விமர்சனமாகும்.

தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாகப் பல சான்றுகளை முன்வைக்கின்றனர்.

முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையின் போது வழங்கும் உணவுப் பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிமல்லாத மக்கள் தங்கள் பண்டிகைகளின் போது வழங்கும் உணவுகளை முஸ்லிம்கள் உண்பதில்லை.

முஸ்லிம்கள் தாங்கள் அறுக்கும் மாமிசத்தை மட்டும் தான் உண்ணுகிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் அறுக்கும் மாமிச உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை.

முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களில் முஸ்லிமல்லாதவர்கள் வழிபாடு நடத்துகின்றனர். ஆனால் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் வழிபாட்டு தலங்களில் வழிபடுவதில்லை.

முஸ்லிமான ஆணோ, பெண்ணோ முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்ய முஸ்லிம்கள் அனுமதிப்பதில்லை. முஸ்லிமாக மாறினால் தான் திருமணம் செய்து தருவோம் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.

இது போன்ற காரணங்களை எடுத்துக்காட்டி முஸ்லிம்கள் எம்மதமும் சம்மதம் என்ற தத்துவத்துக்கு வேட்டு வைக்கின்றனர் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

எம்மதமும் சம்மதம் என்ற தத்துவம் சரிதானா என்பதை முதலில் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

உலகில் பல மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின் கொள்கைகள் உள்ளன. கொள்கையில் மட்டுமின்றிச் சட்டத் திட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால் தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன. முரண்பாடுகள் இல்லாவிட்டால்  ஒரே ஒரு மதம் தான் உலகில் இருக்கும். இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும் எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதை இரண்டாவதாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை.

பல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின் கொள்கை.

இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும். முதல் கொள்கையை நம்பும் போது இரண்டாவது கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டாவது கொள்கையை நம்பும் போது முதல் கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இரண்டும் எனக்குச் சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கடவுளுக்கு மனைவியர் உண்டு. மக்கள் உண்டு. கடவுளுக்குத் தூக்கம் உண்டு, கடவுளுக்கு அறியாமை உண்டு என்று ஒரு மதம் கூறுகிறது.

இவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாது. இவை கடவுள் தன்மைக்கு எதிரான பலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது.

முரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிர இரண்டையும் நம்ப முடியாது.

கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதை நம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.

இந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவே நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லை; நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது தான் பொருள்.

முஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நம்பவில்லை; நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது அதன் பொருள்.

மதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாத படி ஆழமாக வேரூன்றியுள்ளன. கட்சிகள், சங்கங்கள். இயக்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை.

மதங்களை விடக் குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோ, திமுக, அதிமுக கட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாது. எல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தர்ப்பவாதியாகவே கருதப்படுவார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அங்கம் வகிக்க முடியாது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால் மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டை எப்படி ஒரு நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம் சித்தாந்தம் அமைந்திருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை. இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச் சொல்கிறது. போலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.

எனக்கு என் மார்க்கம் தான் பெரிது. உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன் என்பது இஸ்லாத்தின் நிலை

உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு

என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)

அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது என்ற இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. போலித்தனமும் இல்லை. நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.

இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இனித் தங்கள் விமர்சனத்தை நியாயப்படுத்துவதற்காக எம்மதமும் சம்மதம் எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அறுக்கப்பட்ட உயிரினங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. இந்தக் கட்டளையின் காரணமாகவே மற்றவர்கள் அறுப்பதை உண்ண மறுக்கின்றார்களே தவிர காழ்ப்புணர்வின் காரணமாக அல்ல.

கடவுளுக்கு எந்தத் தேவையுமில்லை. கடவுளுக்காக எந்தப் பொருளையும் படைக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை. இந்தக் கொள்கையில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் படையல் செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

கடவுளுக்குத் தேவைகள் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்து விடக் கூடாது என்பதற்காகவும், பல கடவுள் கொள்கையை நம்பிவிடக் கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிட்டுள்ளது. இதற்குக் காழ்ப்புணர்வு காரணமில்லை.

முஸ்லிம்கள் எப்படி மற்றவர்கள் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டுமோ அது போல் மற்றவர்களும் முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையை மதித்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

இந்து மதத்தில் சைவ உணவு உட்கொள்ளக் கூடிய பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமுக்கு நண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். முஸ்லிம் நண்பர் தனது பெருநாள் பண்டிகையைக் கொண்டாடும் போது மாமிச உணவைச் சமைத்து வைத்து நண்பரை அழைத்தால் அவர் அவ்விருந்தை உண்ண மாட்டார். இந்து நண்பர் எதை விரும்ப மாட்டாரோ அந்த உணவை இந்து நண்பருக்குக் கொடுக்காமல் அவர் விரும்புகிற உணவை வழங்குவது தான் அவரையும், அவரது மதத்தையும் மதிப்பதாக ஆகும்.

இந்து நண்பர் முஸ்லிம் நண்பரின் அசைவ உணவை மறுப்பதால் அவர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமானப்படுத்தி விட்டதாக யாரும் எண்ணுவதில்லை.

இதே போல் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு வழங்காமல் இருப்பதே இஸ்லாத்தை மதிப்பதற்கு அடையாளமாகும். இவ்வாறு இரு சாராரும் நடந்து கொள்வதன் மூலம் ஒரு மதத்தவர் மற்ற மதத்தினரை மதித்து நடக்குமாறு இஸ்லாம் கூறுவதை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

வழிபாட்டு முறையிலும் இது போன்ற பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாட்டில் வேறுபாடுகள் உள்ளன. அவரவர் தத்தம் மதத்தின்படி வழிபாடு நடத்திக் கொள்வதை மற்றவர்கள் அங்கீகரிப்பது தான் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். ஒருவரது வழிபாட்டை மற்றவர் மீது திணித்தால் நல்லிணக்கத்திற்குப் பதிலாகத் துவேஷம் தான் வளரும்.

ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கை. இந்தக் கொள்கையில் உறுதியுடன் முஸ்லிம்கள் இருந்தால் அதைக் குறை கூறுவது நியாயமாகாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர் கருணாநிதியின் படத்தை வீட்டில் மாட்டியிருப்பார். அவரது அண்ணா தி.மு.க நண்பர் ஜெயலலிதாவின் படத்தையும் மாட்டுமாறு கூறினால் அவர் ஏற்க மாட்டார். இவ்வாறு கூறுவது சரி தான் என்று யாரும் ஏற்க மாட்டோம். அநாகரீகம் என்போம்.

கடவுள் நம்பிக்கை இதை விட வலிமையானதாகும். எனவே ஒருவரது கடவுளை மற்றவரும் ஏற்க வேண்டும் என்று கருதுவது ஏற்க முடியாததாகும்.

இந்துக்களின் வழிபாட்டு முறையில் முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் வழிபாட்டு முறையில் இந்துக்களோ குறுக்கிடாமல் இருப்பதும், தமது நம்பிக்கையை மற்றவர்கள் மீது கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துவது உண்மை தான். இதில் மத நல்லிணக்கத்துக்கு எந்த ஊறும் ஏற்படாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதிவிட்டுச் சாதி, மதம் விட்டு மதம் திருமணம் செய்யும் போது தான் இரண்டு சமுதாயங்களுக்கிடையே கலவரங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாகப் பல உயிர்கள் பலியாகியுள்ளன. பெரும்பாலான சாதி மதச் சண்டைகளின் பின்னணியில் பெண் விவகாரமே முக்கிய காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே இதைத் தவிர்ப்பதால் மனித குலத்திற்கு எந்தக் கேடும் ஏற்படப் போவதில்லை.

இனக் கவர்ச்சியினால் ஆணின் குறைபாடுகள் பெண்ணுக்கும், பெண்ணின் குறைபாடுகள் ஆணுக்கும் ஆரம்பத்தில் தெரியாது. மோகம் தணிந்த பின் யதார்த்த நிலையை இருவரும் உணர்வார்கள்.

வீட்டில் கடவுள் படங்களை மாட்டுவதிலிருந்து பெற்ற குழந்தைக்குப் பெயர் சூட்டுவது, வளர்ப்பது, சொத்துரிமை போன்ற பல விஷயங்களில் தகராறுகள் ஏற்படும். யாராவது ஒருவர் தனது மதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது பிரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்படும்.

பின்னால் ஏற்படக் கூடிய இந்த நிலையைத் தான் இஸ்லாம் முன்கூட்டியே கூறுகிறது. முஸ்லிமான ஆணை மணக்க விரும்பும் பெண்ணோ, முஸ்லிமான பெண்ணை மணக்க விரும்பும் ஆணோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ இஸ்லாம் தமக்கு முக்கியமில்லை எனக் கருதி வேறு மதத்தவர்களை மணந்து கொண்டால் அதை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆரம்பத்திலேயே இதைப் பற்றித் தீர்க்கமான முடிவெடுத்துக் கொள்வது எதிர்காலத்தில் ஏற்படும் பிளவையும், பிணக்கையும் தவிர்க்கும் என்ற தூர நோக்கோடு தான் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிடுகிறது.

கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகர், கடவுள் நம்பிக்கையில்லாத குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பினால் அதைக் கொள்கைப் பிடிப்பு என்று எடுத்துக் கொள்கிறோம். இஸ்லாம் என்பதும் அது போன்ற ஒரு கொள்கை தான்.

இஸ்லாம் இவ்வாறு வலியுறுத்தியதையும், முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொள்வதையும் இது போன்ற கொள்கைப் பிடிப்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.

ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்ன தான் முயன்றாலும் இன்னொரு சாதிக்காரராக முடியாது. இஸ்லாம் இது போன்ற சாதி கிடையாது. யாரும் இஸ்லாத்தின் கொள்கையை ஏற்று முஸ்லிமாக முடியும்.

இதைப் புரிந்து கொண்டால் மத நல்லிணக்கத்துக்கு இஸ்லாம் எந்த வகையிலும் ஊறு விளைவிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும், மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும், பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர். இஸ்லாம், பிற மதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கு அது வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றாக உள்ளன.

முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும், நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள்.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தது உண்மை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை. ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவது தான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது, பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்துக்கும், முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்கள் செய்யப்பட்டன.

அன்றைக்குத் தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனிநாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு.

இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு.

மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தைத் திணித்த வரலாறும் உண்டு.

பல நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு.

தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரி செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது. அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பு.

முஸ்லிம் படையெடுப்புகள்

வெண்ணி, வாகை, புள்ளலூர், பரியலம், மணிமங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தெள்ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம் மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவை தாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ, மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன. இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும், அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களைப் பெருமளவு நியமித்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எப்படி இருந்திருக்க முடியும்?

இஸ்லாத்தை விட்டு வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாய உணர்வுடைய எவருமே கூறத் துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வௌ்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ளனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் படையினரின் எண்ணிக்கையே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தாலோ, வாள் முனையில் மிரட்டியிருந்தாலோ ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும் ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த படு மோசமான இந்து மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்தது. இல்லையென்றால், மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

படு மோசமான ஆட்சியாளர்களைக் கண்டு வெறுப்புற்றிருந்த மக்களுக்கு முஸ்லிம்களின் ஆட்சி சிறப்பானதாகத் தென்பட்டதாலேயே அவர்களை ஆளவிட்டார்கள்.

முஸ்லிம் மன்னர்கள் பரங்கியர்களிடம் தான் ஆட்சியைப் பறிகொடுத்தார்களே மக்கள் அவர்களை விரட்டியடிக்க எந்தப் போராட்டமும் நடத்தியதில்லை.

இந்து மன்னர்கள் நடத்திய போர்களை இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படிக் கூற முடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாம் தூண்டிவிட்டது என்றும் கூற முடியாது.

சுருங்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்ப முடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும், இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே! அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே? இதற்கு என்ன கூறுகிறீர்கள்? என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.

அது பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்க்களங்கள் எந்த அடிப்படையிலானவை? என்பதை விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம் அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூற்றுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் பத்ர் எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஓடலாயிற்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும்.

விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலைநகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகிவிடக் கூடிய அருமையான சூழ்நிலை இருந்தது. வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அது தான்.

பத்ர்  எல்லையைத் தாண்டி அவர்கள் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

உம்ரா வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹுதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்குப் பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகியிருக்கும்.

ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறு தான்.  நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்காகவா?

எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.  தாயிஃப்  நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதினாவை விட வளமானதாக இருந்ததில்லை. பொருளாதாரத்தைக் கொள்ளை அடிப்பது போருக்கான நோக்கமாக இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக  நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

 திருக்குர்ஆன் 4:94

கொள்ளையடிப்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா?

எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றி வீரராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழிவாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்களும், அவர்கள் நாடு துறக்கக் காரணமானவர்களும், அவர்களின் தோழர்களைச் சுடுமணலில் கிடத்தியவர்களும், தூக்கில் தொங்கவிட்டவர்களும், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்களும், இப்படிப் பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொதுமன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழி வாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்கு போதுமான சான்றாகும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்?

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்கள் : புகாரி, முஸ்லிம்

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும், மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : முஸ்லிம்

போர்க்களத்தில் எந்தத் தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் விசாலமானதாக இருந்தது. எனவே பழி வாங்குதல் என்பதை அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாது.

மதமாற்றம் செய்வதற்காகவா?

மற்றவர்களை மதமாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.

இம்மார்க்கத்தில் எந்தவித நிருபந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாக உள்ளது.

திருக்குர்ஆன் 2 : 256

அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாய மதமாற்றத்தை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு தம் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யா வரி பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)

இணை வைப்பவர்களில் (அதாவது பிற மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்கு பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! எனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்.

திருக்குர்ஆன் 9:6

பிற மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

எதற்காகப் போர் செய்தனர்?

மேற்கண்ட காரணங்களுக்காகப் போர் நடக்கவில்லை என்றால் அவர்களே போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விக்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. கமண்டலமும், ஜெப மாலையும் வைத்துக் கொண்டு சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்றும் நாம் சொல்லவில்லை.

தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள். மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். இதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு நியாயமான சில காரணங்கள் இருந்தன.

முதலாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் பூண்டோடு கருவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்தச் சமுதாயமும் அழிந்துவிடக் கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபிகள் நாயகம் (ஸல்) போர்களைச் சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காண மாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

 உஹதுப் போர்  என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர்  உஹத்  எனும் மலையடிவாரத்தில் நடந்ததால்  உஹதுப் போர்  என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்து விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்கள் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்த நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்கள் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.

பத்ருப் போர்  என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

வலியப் போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்துவிட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?)

திருக்குர்ஆன் 9:13

போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள் தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டன. இதையும் குறை கூற முடியாது.

இரண்டாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையாண்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால் தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபணைக்கிணங்க திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறுக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்றுவிட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்துமீறுபவர்களை வழிமறிக்கவும் அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் மக்காவின் தலைவரான அபூசுஃப்யானின் வணிகக் கூட்டம் வழிமறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தத்தமது நாடுகளில் இத்தகைய அத்துமீறல்களை எந்த ஆட்சியாளரும் அனுமதிப்பார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை   சொந்த நாட்டை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றி கொண்டனர். இழந்ததை மீட்பதற்காக நடத்தப்படும் போர்களும் நியாயமான போர்களே.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு (அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து  எங்கள் இறைவன் அல்லாஹ்  என்று கூறியதற்காக அநியாயமாக வெளியேற்றப்பட்டனர்.

திருக்குர்ஆன் 22 : 39

அநீதியிழைக்கப்பட்டவர்கள் அடங்கிப் போகாமல் எதிர்த்துப் போரிடுமாறு திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது. இழந்ததை மீட்பதற்காகக் கூட போர் செய்யக் கூடாது என்று யாரும் கூற மாட்டார்கள்.

தங்கள் தாயகத்தை மீட்பதற்காகப் போராடும் பாலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.

நான்காவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படிச் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அது போலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் யூதர்கள் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர் (மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில்லறை விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜெண்டுகளாகச் செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டவையே.

இதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காகப் போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று மாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம். இவையல்லாத மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஐந்தாவது காரணம்

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்தக் கொள்கை அவசியமானது தான்.

ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினி போடுகிறான். அப்போது கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று விட்டு விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப் போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று பேசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.

ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான். தாங்க முடியாத அளவுக்குக் கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலைய மாட்டானா? இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறி விடுவோமா? என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும்  எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்துவிட்டது.

திருக்குர்ஆன் 4 : 75

யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராகப் போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.

மக்களைச் சுரண்டி, கொள்ளையடித்து, நிற்பதற்கு வரி, நடப்பதற்கு வரி, பேசுவதற்கு வரி, எழுத வரி, திருமண வரி, சாவு வரி, வியாபார வரி, விவசாய வரி, வாகனத்துக்கு வரி, குழந்தை பிறப்பதற்கு வரி என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்தி, இப்படிப் பெறப்பட்ட பணத்தை மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரிந்த நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீஃபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.

இதையும் நியாய உணர்வுடைய எவரும் குறை சொல்ல மாட்டார்.

பங்களாதேஷ் என்று அறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை எதிர்த்து முஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்தது. அவரால் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டது.

அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தை அனுப்பியது. பங்களாதேஷ் என்ற தனிநாட்டை அம்மக்களுக்காக உருவாக்கியது.

விடுதலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகிவிட்டாலும், அவர்கள் வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்ட போது இந்தியாவின் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.

மாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்திய அதிரடிப்படை சென்று அதை மீட்டுக் கொடுத்தது.

உலகமகா பயங்கரவாத நாடான அமெரிக்கா, ஈராக் மீதும், அடிக்கடி அநியாயத் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மக்கள் மீது மிருகவெறியாட்டம் நடத்தி வருகிறது. இவற்றுக்கெல்லாம் எந்த நியாயமும் இல்லை. அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதற்கும், வட்டி வாங்குவதற்கும் உலக நாடுகள் மௌனமாக இதை அங்கீகரிக்கின்றன. இந்த அக்கிரமத்தை ஆதரிப்போர் நியாயமான காரணங்களுக்காக நபிகள் நாயகம் அன்னிய நாட்டில் தலையிட்டதைக் குறை கூறுவது தான் வேடிக்கையானது.

அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபிகள் நாயகமும் போர் செய்துள்ளனர்.

நியாயமான காரணங்களுக்காக போர் நடத்தப்பட்டு நபிகள் நாயகம் வெற்றி பெற்ற பின் அவர்கள் நடந்து கொண்ட முறையை ஆராய்ந்தால் உண்மையை உணர்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருப்பதால் அவர்கள் போர்க்களத்தில் பங்கெடுத்ததை ஏற்க இயல்பாகவே சிலருக்குத் தயக்கம் உள்ளது.

போர் என்பது என்ன? என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே இவ்வாறு தயக்கம் காட்டுகின்றனர்.

பொதுவான தர்மங்களும், போர் தர்மங்களும் வெவ்வேறானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும். பிறர் பொருளை அபகரிப்பதும், சூறையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.

பொதுவாக, இந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால் இதையெல்லாம் செய்து தான் ஆக வேண்டும். இவ்வாறு செய்வது தான் போர் தர்மம்.

பொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்து விடுகின்றன.

இராமன், கண்ணன், அர்ஜுனன், கர்ணன், பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போன்ற புராணப் பாத்திரங்களாக இடம் பெறுவோர், பல கொலைகளைச் செய்துள்ளனர். சாதாரண சமயத்தில் இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள். போர்க்களத்தில் செய்ததால் அவர்கள் வீரர்கள் என போற்றப்படுகின்றனர்.

தமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான். போர்க்களத்தில் கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

போர்க்களத்தில் மட்டுமின்றி. ஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற கொலைகள் நடந்துள்ளன. அதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாக மதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல், தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். கொலைகாரர்களாகக் கருதப்படுவதில்லை.

போருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.

உலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) போரிலும் கூட புதுநெறி புகுத்தினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போது துன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப்பட்டார்கள். மதீனா சென்று அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள் சந்தித்தார்கள். இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராக பிரவேசித்தார்கள். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரைப் படுகொலை செய்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்திருந்தார்கள்.

மக்கத்து எதிரிகளைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் அவர்களைக் கொன்று குவித்திருக்க முடியும். அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழி வாங்கியிருக்க முடியும்.

சக்தி மிக்க ஆட்சியாளராகவும், தனது கட்டளைக்குக் காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.

உலக வரலாற்றில் சக்திமிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது, ஒரு நாட்டை வெற்றி கொண்டது இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி, விளை நிலங்களுக்குத் தீ வைத்து, தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து, தோற்றவனின் மூக்கை அறுத்து கோரப்படுத்தி, தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து, போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து இன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் போற்றுகின்றவர்கள் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவது வேடிக்கையானதே.

இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லுகிறதா?

இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது

என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும்.

திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்.

இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக்  கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம்.

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம். இரண்டாம் அத்தியாயத்தில் 191 வது வசனம் இது.

இவ்வசனத்தில்  அவர்களைக் கொல்லுங்கள்  என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 2:190

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?

போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன்  அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்  எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காஃபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவாக முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல்  உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை  எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

போர் வந்து விட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.

எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது; அர்த்தமற்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.

இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிற மதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

திருக்குர்ஆன் 6:108

எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40

தான தர்மங்கள் செய்வதிலும், உதவிகள் புரிவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 60:8

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

முஸ்லிமல்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.

பிற மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள்.  உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்  என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  இவளைக் கொன்று விடட்டுமா?  என நபித்தோழர்கள் கேட்டதற்கு  கூடாது  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம், அஹ்மது ஆகிய நூல்களில் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இஸ்லாமியச் சட்டப்படி அவளைக் கொல்ல அனுமதியிருந்தும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.

மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்துக்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது.

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காஃபிர்கள் என்றும், முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.

அதாவது இந்துக்களைக் காஃபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காஃபிர்கள் தாம் என்பது உண்மையே.

ஆனால் காஃபிர்கள் என்றால் அது ஏசும் சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை.

காஃபிர் என்பதற்கு கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும். அப்படியெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை.

காஃபிர் என்ற அரபுச் சொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர், ஏற்காதவர் என்பது தான். இஸ்லாத்தை ஏற்றவர்களை முஸ்லிம்கள் (ஏற்றவர்கள்) என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்காதவர்களை ஏற்காதவர்கள் (காஃபிர்கள்) எனக் கூறுகிறது. ஏற்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூற முடியாது. ஏற்காதவர்கள் என்று தான் கூற முடியும். இதில் ஏசுவது ஒன்றுமே இல்லை.

இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும் போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏச்சாக யாரும் கருத மாட்டார்கள். இது போன்ற வார்த்தைப் பிரயோகமே காஃபிர் என்பது.

சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும் போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறது. முஷ்ரிக் என்றால்  பல கடவுள்களை நம்புபவர்கள்  என்பது பொருள். பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைத் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. பல கடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று தானே கூற முடியும்! இது எப்படி ஏச்சாக ஆகும்!

இந்துக்களையோ, இன்ன பிற மக்களையோ வசைச் சொற்களால் குர்ஆன் ஏசவில்லை என்பது தான் உண்மை.

ஜிஸ்யா வரி

பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில்  ஜிஸ்யா வரி  என்பதும் ஒன்றாகும்.

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர்  என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும், அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையே. அதில் உள்ள நியாயத்தையும், முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டதாக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. பாரபட்சமாகவும், அநியாயமாகவும் தோன்றலாம். உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்படவில்லை.

ஒரு அரசாங்கம் தனது குடிமக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்து கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம்; விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.

முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.

வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி  வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துகளை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.

வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.

இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

ஜகாத்  என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே  ஜிஸ்யா  எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.

சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியாவாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விட பல மடங்கு குறைவானதாகும்.

சொத்துவரி, விற்பனைவரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் மறை(முகமாகவும்) இந்தியக் குடிமகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விட பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது. இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள். அவர்களின் சலுகைக்கு வழி வகுத்த ஜிஸ்யா வரியைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

இந்த இடத்தில் எழக் கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கி கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்தது. முஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லை. எந்த வரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம்? என்ற என்பதே அந்த ஐயம்.

இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வி தவறாகும்.

நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்துப் பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை விட அதிகமாகும்.

முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும்.

ஒரு லட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் ஜிஸ்யா வரியைவிட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் ஜகாத் வரி அதிகமாகும்.

அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாத ஏழைகளும் கூட சலுகை பெற்றிருந்தார்கள். முஸ்லிமல்லாத ஏழைகள் இஸ்லாமிய அரசு விதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக் கூட விலக்கு பெறுவார்.

 எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்

என்று குர்ஆன் கூறுகிறது.

எனவே ஜிஸ்யா வரியைக் குறை கூற நியாயம் ஏதும் இல்லை. நியாய உணர்வு படைத்த பிற மதத்தினர் இதைக் குறை கூற மாட்டார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச்சாட்டும் தவறானதே.

மிக மிக சொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள், பெண்கள், பைத்தியங்கள், சிறுவர்கள், முதியவர்கள் விலக்களிக்கப்பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக தங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும் ஏற்க முடியாது.

ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை (அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்) சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்? இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளற மாட்டார்கள்.

முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா?

ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களைப் போல பல கடவுள் வழிபாடு செய்பவர்களாகவே உள்ளனர்  என்பது பிற மதத்தவர்களின் விமர்சனங்களில் முக்கியமானதாகும்.

இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன் வைக்கின்றனர்.

முஸ்லிம்கள் ஒரே கடவுளை வணங்குவதாகக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் மேற்குத் திசையைத் தான் வணங்குகின்றனர். எல்லாப் பள்ளிவாசல்களும் மேற்கு நோக்கித் தான் கட்டப்பட்டுள்ளன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் சான்றுகளில் ஒன்றாகும்.

பாமர மக்கள் மட்டுமின்றி பண்டிதர்களும் கூட இவ்வாறு விமர்சனம் செய்துள்ளனர். பாரதியார் கூட முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும் போது  திக்கை வணங்கும் துருக்கர்  எனப் பாடியுள்ளார்.

முஸ்லிம்கள் திசையை வணங்குவதாகக் கூறுவதே அடிப்படையில் தவறான வாதமாகும்.

மக்கா நகரில் கஅபா எனும் ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. மேற்குத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை.

மக்காவில் அமைந்த கஅபா ஆலயம் இந்தியாவுக்கு மேற்கில் உள்ளதால் இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கி ஏக இறைவனை வணங்குகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு நோக்கித் தொழ மாட்டார்கள். தொழவும் கூடாது.

மக்காவிற்கு மேற்கில் உள்ளவர்கள் கிழக்குத் திசை நோக்கியும், மக்காவுக்கு வடக்கே உள்ளவர்கள் தெற்குத் திசை நோக்கியும் மக்காவுக்கு தெற்கே உள்ளவர்கள் வடக்குத் திசை நோக்கியும் தொழுகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்குத் திசை நோக்கித் தொழுதால் தான் முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்கள் என்ற விமர்சனத்தில் உண்மை இருக்க முடியும்.

முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குகிறார்கள் எனக் கூறுவது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். கஅபாவின் திசையை வணங்குகிறார்கள் என்று கருதலாம் அல்லவா? என்று மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இதுவும் கூட தவறான எண்ணம் தான். ஒன்றை நோக்குவது அதை வணங்குவதாக ஆகும் என்பது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

மனிதர்கள் எல்லா நிலையிலும் ஏதேனும் ஒரு திசையை நோக்காமல் இருக்க முடியாது. ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் ஏதேனும் ஒரு திசையை நோக்குவதைத் தவிர்க்கவே இயலாது. எனவே நோக்குவதையெல்லாம் வணக்கம் என்று யாருமே கூற மாட்டார்கள். வணங்குவது வேறு, நோக்குவது வேறு. இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.

ஒரு பொருளை வணங்குவது என்றால் நமது குறைகளைத் தீர்க்கும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. நாம் தவறு செய்தால் நம்மைத் தண்டிக்கும் வலிமையும் அதற்கு இருக்கிறது என்று நம்பி அதையே கடவுளாகப் பாவித்தால் தான் அதை வணங்குகிறார்கள் எனக் கூற முடியும்.

கஅபா எனும் ஆலயத்தைப் பற்றி முஸ்லிம்கள் இப்படி நம்புகிறார்களா? நிச்சயமாக இல்லை.

கஅபா ஆலயம் நம்மைப் பாக்காது. நமக்கு எந்த உதவியும் செய்யும் ஆற்றல் அதற்குக் கிடையாது. நாம் செய்யும் தவறுகளுக்காக அந்த ஆலயத்தால் நம்மைத் தண்டிக்க முடியாது. மற்ற பொருட்களெல்லாம் அழிந்து போகும் போது அந்த ஆலயமும் அழிந்து போய்விடும் என்று தான் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அப்படித் தான் நம்ப வேண்டும்.

கஅபா ஆலயமே! நீ தான் எங்களின் துன்பங்களைத் துடைக்க வேண்டும் எங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்று இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு ஞானமுள்ள முஸ்லிம்கள் கூட நினைப்பதில்லை. நினைக்கவும் கூடாது.

கஅபா எனும் ஆலயத்தை நோக்கித் தொழுமாறு கட்டளையிடும் திருக்குர்ஆன் அக்கட்டளையுடன் முக்கிய அறிவுரையையும் சேர்த்துக் கூறுகிறது.

 நீங்கள் எத்திசையில் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திருமுகம் உள்ளது.

திருக்குர்ஆன் 2 : 15

என்பது தான் அந்த அறிவுரை.

கஅபாவை நோக்கும் போது கஅபா தான் கடவுள் என்றோ, கஅபாவுக்குள் தான் கடவுள் இருக்கிறான் என்றோ எண்ணி விடக் கூடாது. என்று தெளிவாக அறிவுறுத்தி விட்டுத்தான் கஅபாவை நோக்குமாறு குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.

எனவே முஸ்லிம்கள் மேற்கையும் வணங்கவில்லை. கஅபாவையும் வணங்கவில்லை. கஅபா இருக்கும் திசையையும் வணங்கவில்லை. மாறாக கடவுளின் கட்டளைப்படி கஅபாவை நோக்கியவர்களாக அந்த ஒரு கடவுளைத் தான் வணங்குகிறார்கள்.

கஅபாவை நோக்கி முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தான் வணங்குகிறார்கள் என்பதை தொழுகையில் கூறப்படும் ஜெபங்களிலிருந்தும் உறுதி செய்யலாம்.

தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹ் பெரியவன் என்று தான் முஸ்லிம்கள் கூறுவார்கள். தொழுகையின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் போதும் அல்லாஹ் பெரியவன் என்று தான் கூறுவார்கள். தொழுகைக்கு உள்ளேயும் அல்லாஹ்வைத் தான் புகழ்வார்கள்.

இந்த இடத்தில் மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். கடவுளை வணங்கும் போது நோக்குவதற்கு கஅபா ஆலயத்தைக் குறிப்பாக ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்திற்கும் திருக்குர்ஆன் தெளிவான விடையை வைத்திருக்கிறது.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி கடவுள் ஒரே ஒரு ஜோடி மனிதர்களைத் தான் படைத்தான். அந்த ஒரே ஒரு ஜோடியின் மூலமாகத் தான் மனித குலம் பல்கி இன்று அறுநூறு கோடியைத் தாண்டியுள்ளது.

கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட ஆதம், இப்போது மக்கா நகரம் என்றழைக்கப்படும் பகுதியில் இப்போது கஅபா ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரே இறைவனை வணங்குவதற்காக ஒரு ஆலயத்தை எழுப்பினார்.

உலகில் ஒரே கடவுளை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் என்பதால் அதை நோக்கித் தொழுகை நடத்துமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. கஅபா ஆலயத்தை நோக்குமாறு கட்டளையிட்டதற்கு இது தான் முக்கிய காரணம்.

மனித சமுதாயத்திற்கு (இறைவனை வணங்குவதற்காக) முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் பக்கா (எனும் மக்கா)வில் உள்ள ஆலயமாகும்.

திருக்குர்ஆன் 3 : 36

முதன் மனிதரால் உலகின் முதல் ஆலயமாக எழுப்பப்பட்ட ஆலயத்தை நோக்கி அந்த ஒரே இறைவனை வணங்குவது மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.

கஅபா ஆலயத்தை முஸ்லிம்கள் வணங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள மற்றுமொரு சான்றையும் பார்க்கலாம்.

கஅபா ஆலயம் எத்திசையில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஒருவருக்கு ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் இருப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம். தொழுது முடித்த பின்னர் அவர் தொழுதது கஅபாவுக்கு எதிரான திசை என்பது தெரிய வந்தால் ஏற்கனவே தொழுததை மீண்டும் தொழ வேண்டியதில்லை என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

கஅபா ஆலயம் தான் வணங்கப்படுகிறது என்றிருந்தால் கஅபா ஆலயம் இருக்கும் திசை தெரியாவிட்டால் தொழக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருக்கும். அல்லது தொழுத பின் கஅபா இருக்கும் திசையில் தொழவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கட்டளையிடப்படாததால் முஸ்லிம்கள் கஅபாவை கடவுளாகக் கருதுகிறார்கள் என்பதும், கஅபாவை வணங்குகிறார்கள் என்பதும் முற்றிலும் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் சிலருக்கு மற்றொரு சந்தேகம் ஏற்படலாம்.

கஅபாவை நோக்கி கடவுளை வணங்குமாறு கூறாமல் அவரவர் விருப்பத்தின் பால் இதை விட்டு விடலாமே! என்பதே அந்தச் சந்தேகம்.

தொழுகை எனும் வணக்கத்தை முஸ்லிம்கள் ஓரிடத்தில் கூட்டாக நடத்த வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பலரும் கூட்டாகக் குழுமி வணங்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி நின்றால் அதில் கட்டுப்பாடோ, ஒழுங்கோ இருக்காது. அனைவரும் ஒரே திசையை நோக்கியவர்களாக நின்றால் தான் அதில் ஒழுங்கு இருக்கும்.

ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக தொழும் போது கூட ஒழுங்கு அவசியமானது தான். ஒருவர் வடக்கு நோக்கியும், மற்றொருவர் தெற்கு நோக்கியும், இன்னொருவர் கிழக்கு நோக்கியும், வேறொருவர் மேற்கு நோக்கியும் தொழுதால் அதில் கூட ஒழுங்கின்மை தான் வெளிப்படும்.

இந்த ஒழுங்கை ஏற்படுத்துவதற்காகத் தான் ஏதாவது ஒரு திசையை நோக்குமாறு அனைவருக்கும் கட்டளையிட வேண்டி வருகிறது.

இதைப் புரிந்து கொண்டவர்கள் முஸ்லிம்கள் திசையையோ, கஅபா ஆலயத்தையோ வணங்குகிறார்கள் என்று கூறமாட்டார்கள்.

ஹஜ் பயணமும் புனித யாத்திரையும்!

வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை மக்கா எனும் நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

ஏனைய மதங்களில் எவ்வாறு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறதோ அது போன்ற ஒரு யாத்திரையாகத் தான் ஹஜ் யாத்திரையும் அமைந்துள்ளது.

இருந்த இடத்திலேயே கடவுளை வணங்கலாம் என்று ஒரு புறம் கூறிக் கொண்டு கடவுளை வணங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வீணாக்கச் சொல்வது ஏன்?

பல தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் இவ்வாறு செய்வதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அவர்கள் எதைக் கடவுளென நம்புகிறார்களோ அதைத் தரிசிக்க அவர்கள் புனித யாத்திரை செய்கிறார்கள்.

கஅபா ஆலயம் கடவுளை வழிபடும் இடமே தவிர கடவுள் அல்ல என்று ஒரு புறம் கூறிக் கொண்டு அதைத் தரிசிப்பதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டுமா? இந்தப் பணத்தை எத்தனையோ நல்ல வழிகளில் செலவிடலாமே என்பதும் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாகும்.

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனத்துக்கு உரிய விடை கிடைத்து விடும்.

ஒரே ஒரு கடவுள் வணக்கத்தை நிலை நாட்டுவது தான் இஸ்லாத்தின் பிரதான நோக்கம் என்றாலும் அந்த வணக்கத்திற்குள்ளேயும் மனித குலத்திற்கு நன்மைகள் அடங்கியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது.

தொழுகையை எடுத்துக் கொள்வோம். கடவுளை ஒவ்வொருவரும் தத்தமது இல்லத்தில் இருந்த கொண்டே வணங்க முடியும். ஆனாலும் ஒரு வணக்கத்தலத்தில் வந்து கூடி கூட்டாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம்  கட்டளையிடுகிறது. இதனால் கடவுள் வணக்கம் நிறைவேற்றப்படுவதுடன் மனித குலத்திற்கும் அளப்பரிய நன்மைகள் கிடைக்கின்றன.

ஒன்றன் பின் ஒன்றாக   வரிசையாக   அணிவகுத்து இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நிறைவேற்றும் போது யார் முதலில் பள்ளிவாசலுக்கு வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்க வேண்டும். வருபவரது பொருளாதார நிலை, குலம், கோத்திரம், பதவி, அந்தஸ்து, அறிவு, ஆற்றல் எதுவுமே அங்கு கவனத்தில் கொள்ளப்படாது. நாட்டின் அதிபராகவே இருந்தாலும் அவர் கடைசியில் வருவாரேயானால் அவர் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும்.

ஏதோ ஒரே ஒரு நாள் இப்படி நின்று விட்டால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தினமும் இப்படி நிற்க வேண்டும். தினசரி ஐந்து தடவை இப்படி அணிவகுத்து நிற்க வேண்டும்.

பிறப்பால் தன்னை உயர்ந்தவனாகக் கருதிய ஒருவன் இன்று தான் இஸ்லாத்தை ஏற்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு முன்னால் தாழ்ந்த குலமாகக் கருதப்பட்டவன் நிற்பான். இது உயர்ந்த குலத்தவன் என்று தன்னைப் பற்றி நினைத்துக் கொள்பவனுக்கு உறுத்தலாக இருக்கும். மீண்டும் நிற்கிறான். அந்த உறுத்தல் சிறிது குறையும். மீண்டும், மீண்டும் தினசரி ஐந்து தடவை இப்படியே பழகும் போது இந்த உறுத்தல் அடியோடு நீங்கிவிடும். தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்திலிருந்து அவன் முற்றிலுமாக விடுபட்டு விடுவான்.

அது போல் தாழ்ந்தவனாகக் கருதப்பட்டவனின் தாழ்வு மனப்பான்மையும் படிப்படியாகக் குறைந்து முடிவில் தனது தாழ்வு மனப்பான்மையிலிருந்து முற்றிலுமாக அவனும் விடுபடுவான்.

தொழுகை என்பது வெறும் நிற்பது மட்டுமின்றி ஒவ்வொரு தொழுகையின் போதும் பலமுறை நெற்றியை நிலத்தில் வைத்துக் கடவுளை வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கும் போது முதல் வரிசையில் உள்ள தாழ்த்தப்பட்டவனாகக் கருதப்பட்டவனின் பாதம் உயர்ந்தவனாகக் கருதப்பட்டவனின் தலையில் படும். அதையும் அவன் சகிக்கப் பழகிக் கொள்கிறான். இப்படியே நாள் தோறும் அளிக்கப்பட்ட பயிற்சியின் காரணமாகவே முஸ்லிம்களிடம் தீண்டாமை எள் முனையளவும் இல்லை. எத்தனையோ சட்டங்களைப் போட்டும் ஒழிக்க முடியாத ஒரு கொடுமையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மிக எளிதாக ஒழித்துக் கட்டி விட்டது. இதற்குத் தொழுகையும் ஒரு காரணமாகவே உள்ளது.

இந்திய முஸ்லிம்கள் பல்வேறு சாதிகளிலிருந்து இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பது அனைவருமே அறிந்த உண்மை. ஆனால் எந்த முஸ்லிமுக்கும் தனது முன்னோர் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றனர் என்பது தெரியாது.

தனது பூர்வீக சாதி எது என்பது கூட தெரியாத அளவுக்கு இஸ்லாம் சாதி வேறுபாட்டை ஒழித்துக் காட்டியது.

எந்தச் சட்டத்தினாலும் சாதிக்க முடியாததை தொழுகை எனும் வணக்கத்தின் மூலம் இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டியது.

ஒரு ஊரில், ஒரு தெருவில், ஒரு நாட்டில் வசிக்கும் மக்களிடையே தொழுகையின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்திய இஸ்லாம், ஹஜ் எனும் வணக்கத்தின் மூலம் இந்தச் சமத்துவத்தை உலகளாவிய அளவில் நிலை நாட்டிக் காட்டுகிறது.

வெள்ளைத் தோல் காரணமாகத் தம்மை உயர்ந்தவரென எண்ணும் ஐரோப்பியரின் தலையில் கருப்பு நிற ஆப்பிரிக்கரின் கால்கள் படுகின்ற அற்புதத்தை அங்கே தான் காண முடியும்.

இந்தியன் இந்தியனல்லாதவன் என்ற வேறுபாடு அங்கே கிடையாது. தமிழன், வேற்று மொழி பேசுபவன் என்ற பேதமும் அங்கே கிடையாது. பூர்வீக முஸ்லிம், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவன் என்ற பாகுபாடும் அங்கே கிடையாது.

மனிதனைப் பேதப்படுத்துகின்ற தேசம், மொழி, நிறம் போன்ற எல்லா வேறுபாடுகளும் மறக்கப்படும் ஒரே இடமாக அது திகழ்கின்றது.

எல்லா விதமான வேற்றுமைகளையும் வேரறுத்து உலக சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மாநாடு என்றும் ஹஜ்ஜைக் குறிப்பிடலாம்.

ஹஜ் கடமையை நிறைவேற்றி முடிக்கும் வரை அனைவரும் ஒரே விதமான ஆடை அணிந்து இருக்கும் காட்சியையும், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் காட்சியையும் அங்கே காணலாம்.

அரஃபா எனும் திறந்த வெளியில் அனைவரும் ஒரே நேரத்தில் குழும வேண்டும். அங்கே ஒரு சிறப்புரை ஆற்றப்படும். அவ்வுரையில் ஓரிறைக் கொள்கையும், உலக சமத்துவமும் வலியுறுத்தப்படும். அவ்வுரையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

 மனிதர்களே! உங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை தான். அரபு மொழி பேசுவோருக்கு மற்ற மொழி பேசுவோரை விட எந்தச் சிறப்பும் இல்லை. சிவந்தவருக்கு கறுப்பரை விட எந்தச் சிறப்பும் இல்லை. என்று அந்த மைதானத்தில்   ஹஜ் பயணத்தின் போது   நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்தார்கள் என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே இவ்வளவு செலவு செய்து அங்கே போக வேண்டுமா? என்ற கேள்வியும் தவறாகும். பயனுள்ள செலவு வீண் செலவு என்பதெல்லாம் அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்தே மதிப்பிடப்படும்.

ஆயிரம் சட்டங்கள் போட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக முயன்றும் ஒழிக்க முடியாத தீண்டாமையையும், நிறவெறியையும் ஒழித்துக்கட்டும் நன்மை இதனால் ஏற்படுகிறது. இந்த நன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது செய்யப்படும் செலவு அற்பமானது தான். இதை விட அதிகமாகச் செலவு செய்தும் ஒரு நாட்டிலேயே தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. அதை விடக் குறைவாகச் செலவு செய்து உலக சகோதரத்துவம் நிலைநாட்டப்படும் போது செலவைப் பற்றி எண்ணிப் பார்ப்பது முறையில்லை.

மனித குலம் ஒன்றுபடுவதற்காக எவ்வளவு செலவு செய்தாலும் அது வீண் செலவாக ஆகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணம் செய்பவர்கள் மக்காவில் கடவுள் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு அங்கே செல்வதில்லை. மக்காவில் உள்ள எந்தக் கட்டடத்தையும், அல்லது அங்குள்ள வேறு எதையும் நிச்சயமாக வணங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொண்டால் ஹஜ் பயணம் குறித்து எழுப்பப்படும் சந்தேகம் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கருப்புக் கல் வழிபாடு?

மக்காவில் உள்ள ஆலயமாகிய கஅபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜ்ருல் அஸ்வத்  எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழிபாட்டுக் கொண்டு, இன்னொரு புறம் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறுவது முரணாக அமைந்துள்ளது. இஸ்லாத்தின் கடவுள் கொள்கையில் தெளிவின்மையை இது காட்டுகிறது என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

நாங்களும் கல்லை வணங்குகிறோம்; நீங்களும் கல்லை வணங்குகிறீர்கள்; எனவே உங்களின் கடவுள் கொள்கை தனித் தன்மை கொண்டதோ, சிறந்ததோ அல்ல என்ற அடிப்படையிலேயே இவர்களின் விமர்சனம் அமைந்துள்ளது.

இவர்களின் இந்த விமர்சனம் ஒரு செய்தியைத் தவறாகப் புரிந்து கொண்டதால் எழுந்ததாகும். ஏனெனில் முஸ்லிம்கள் எவரும் கருப்புக் கல்லை வணங்குவதுமில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை. ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் கஅபாவில் பதிக்கப்பட்டுள்ள கறுப்புக் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறு செய்துள்ளனர். இதைத் தான் இவர்கள் வணங்குவதாகக் கருதிக் கொண்டார்கள்.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும், விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர்.

 ஹஜ்ருல் அஸ்வத்  பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா?  நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக்கல் நாம் பேசுவதைக் கேட்கும், நமது பிரார்த்தனையை நிறைவேற்றும். அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத சாதாரணக் கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகின்றது.

 இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்  என்று கூறினார்கள்.

இந்த வரலாற்றுச் செய்தி ஆதாரப்பூர்வமான நூல்களில் இடம் பெற்றுள்ளது.

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் பெற்ற நபித்தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறிவிட்ட பின், தமது முன்னோர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) உடைத்து எறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படிக் கூறியிருக்க முடியும்?

ஹஜருல் அஸ்வத் எனும் கல்லுக்கு எந்த விதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

கடவுள் தன்மை அக்கல்லுக்கு உள்ளது என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அச்சிறப்பு காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

ஹஜருல் அஸ்வத் எனும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்தச் சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்தச் சொர்க்கத்தின் பொருள் இவ்வுலகிலேயே காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும் தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்து பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது.

இவ்வுலகில் காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்கள் அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை. இத்தகைய நம்பிக்கை எள்ளளவும் எந்த முஸ்லிமுக்கும் கிடையாது.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

சந்திரனிலிருந்து ஆம்ஸ்ட்ராங் தலைமையில் சென்ற குழுவினர் அங்கிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர், இவ்வாறு செய்ததால் அம்மண்ணை வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்ததாகும் என்ற நம்பிக்கையினடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர வேறு எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுக்குப் பயணம் செல்பவர்கள் அந்த கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறிவிடும். அது வழிபாட்டுக்குரியதாக இருந்தால் ஹஜ்ஜின் விதிகளில் ஒன்றாக அதுவும் ஆக்கப்பட்டிருக்கும்.

எனவே கருப்புக் கல்லை இஸ்லாம் வழிபடச் சொல்கிறது என்பது அறியாமையில் எழுந்ததாகும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக் கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

இவ்வளவு தெளிவாக இஸ்லாம் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின் கறுப்புக் கல்லை முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள் எனக் கூறுவது தவறு என்பதில் சந்தேகமில்லை.

நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?

இஸ்லாம் புரோகிதத்தை எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது முதல் மரணிக்கும் வரை எந்தத் தொழிலும் செய்யவில்லை. எனவே இஸ்லாம் எனும் மதத்தை வைத்துத் தான் அவர்கள் பிழைப்பு நடத்தியிருக்க வேண்டும்.

புரோகிதர்கள் எப்படி பக்தர்களிடம் காணிக்கைகளைப் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்களோ அது போலவே நபிகள் நாயகமும் நடத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வாறு பல மனைவியருடன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) தமது வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளித்திருக்க முடியும்?

என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும். இந்த விமர்சனம் இந்தியாவில் எழுப்பப்படாவிட்டாலும் மேலை நாட்டவர்கள் இத்தகைய விமர்சனங்களைச் செய்கின்றனர்.

மதீனாவுக்கு விரட்டப்பட்டு அங்கே ஒரு ஆட்சியை நிறுவிய நபிகள் நாயகம் (ஸல்) அந்த ஆட்சியைப் பயன்படுத்தி வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளித்திருக்க முடியும் எனவும் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சித் தலைவராக இருந்த போதும் தமது வருமானத்துக்காக எந்தத் தொழிலும் செய்யவில்லை.

மக்காவில் இருந்தவரை மதத் தலைமையின் மூலம் வாழ்க்கை நடத்தினார்கள். மதீனா வந்ததும் மதத் தலைமை,  ஆட்சித் தலைமை ஆகிய இரு தலைமைகள் மூலமும் வாழ்க்கை நடத்தினார்கள் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

இதுவும் தவறான குற்றச்சாட்டாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத் தலைமை, ஆட்சித் தலைமை இரண்டையும் தமது வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. இது பற்றி மிகவும் விரிவாக விளக்குவோம்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விபரம் தெரிந்த நாள் முதல் உழைக்கலானார்கள். மரணிக்கும் வரை உழைத்தார்கள். சின்னஞ்சிறு பாலகராக இருந்த சமயத்தில் கூட தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கோ, தன் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கோ அவர்கள் பாரமாக இருந்ததில்லை. தம் வாழ்க்கைத் தேவைக்கு தாமே உழைத்தார்கள் அந்த மாமனிதர்.

மதீனத்து மாமன்னராக அன்றைய உலகில் மிகவும் அதிக அதிகாரங்களையும், கட்டுப்பாடான தோழர்களையும் கொண்டவராக, வல்லரசுகளையும் நடுநடுங்கச் செய்தவராக உயர்ந்த நிலையைப் பெற்றிருந்த சமயத்தில் தன் சிறு பிராயத்தை நினைவு கூறும் போது,

எந்த நபியும் ஆடு மேய்க்காதவராக இருந்தது கிடையாது என்றார்கள். அவர்களின் தோழர்கள்  அல்லாஹ்வின் தூதரே தாங்களுமா? என்று கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! மக்காவாசிகளிடம் சில  கீராத்  கூலிக்காக நான் ஆடு மேய்ப்பவனாக இருந்திருக்கிறேன்  என்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்தச் சம்பவம் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

அரபு நாட்டில் அன்று வழக்கிலிருந்த  தீனார்  எனும் நாணயத்தில் பன்னிரெண்டில் ஒரு பங்கு  கீராத்  எனப்படும்.

சின்னஞ்சிறு பிராயத்திலேயே   அவர்களின்  இரத்தத்திலேயே   உழைக்க வேண்டும் என்ற எண்ணம்  ஊறிப் போய் இருந்ததது. இளமைக் காலத்தில் பெரிய தந்தை அபூதாலிபுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள், அண்டை நாடுகளுக்கெல்லாம் சரக்குகளை ஒட்டகத்தில் ஏற்றிச் சென்று வியாபாரம் செய்வார்கள். அபூதாலிபின் செல்வ நிலையும், நபிகளின் கடின உழைப்பால் மிகவும் உயர்ந்தது. மக்காவில் வாழ்ந்த முக்கியமான சில வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஆனார்கள்.

சிறு வயது முதல் உழைத்துப் பழகியவர் உழைத்து உழைத்து உயர் நிலையை அடைந்தவர், இருபத்தி ஐந்து வயதிலேயே பெரும் வணிகராக ஆனவர், உழைக்காமல் உண்பதற்காக மதத்தை உருவாக்கியிருப்பாரா?

தமது இருபத்தி ஐந்தாம் வயதில் மக்காவிலேயே மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகத் திகழ்ந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். தமது எல்லாச் சொத்துகளையும் தம் கணவருக்கே அன்னை கதீஜா (ரலி) அவர்கள் உடமையாக்கினார்கள். இதனால் நபியவர்களின் செல்வ நிலை மேலும் உயர்ந்தது. பல தலைமுறைகளுக்குப் போதுமான சொத்தைப் பெற்றிருந்த நபிகளார் வயிற்றுப் பிழைப்புக்காக மதத்தை உருவாக்கினார்கள் என்பது நம்பக் கூடியது தானா?

இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு முன் போதிய செல்வத்தைப் பெற்றிருந்தவர், ஏழை எளியவர்களின் நலனுக்காகத் தம் செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிய வள்ளல், கொடுத்தே பழகிய கைகளுக்குச் சொந்தக்காரர், பிழைப்புக்கு வழியாக மதத்தை உருவாக்கினார் என்பது அபத்தமான குற்றச்சாட்டு அல்லவா?

உண்மையைச் சொல்வதென்றால் அவர்கள் தம்மைக் கடவுளின் தூதரென அறிவிப்பதற்கு முன்னர் தான் செழிப்பான வாழ்க்கைக்கு உரியவராக இருந்தார்கள். இறைவனின் தூதர், நபி என்று தம்மை அறிவித்துக் கொண்ட பின் இருந்த செல்வங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். தம்மை நம்பியவர்கள் கஷ்டப்படும் போதெல்லாம் அனைத்துச் செல்வங்களையும் வாரி இறைத்தார்கள்.

முடிவில் அவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்து  அபூதாலிப் கணவாய்  எனும் இடத்தில் ஒதுக்கி வைத்த போது உண்பதற்குக் கூட உணவு இன்றி காய்ந்து போன சருகுகளையும், சுட்ட தோலையும் உண்டு வாழ்வைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவ்வுலகச் செல்வங்களைப் பொறுத்தவரை அவர்கள் இறைத்தூதராக ஆன பின் இழந்தது தான் அதிகம். தான் பிரச்சாரம் செய்யும் மார்க்கம் உண்மையானது, மறுமை வாழ்வே நிறந்தரமானது என்ற நம்பிக்கையினால் தான் பிரச்சாரம் செய்தார்கள். இவ்வுலகில் உயர்ந்த இடத்தை அடைவதற்காக அல்ல.

இருக்கின்ற சொத்துகளைக் கூட காப்பாற்ற எண்ணாமல் கொள்கையைக் காப்பதற்காக அனைத்தையும் துறந்துவிட்டு அகதியாய் வெளியேறத் துணிந்தார்கள். உலக வரலாற்றில் எந்த மனிதனின் வாழ்விலும் காண முடியாத அளவுக்கு கொள்கைவாதியாக இன்றளவும் காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மதீனாவுக்கு அகதியாய் வந்து, பிறகு மதீனாவின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்த சமயத்திலும் கூட அரசுப் பணத்தையோ மக்களின் காணிக்கைகளையோ எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தவில்லை.

தன் சொந்த உழைப்பால் உண்ணுவதை விட உயர்ந்த உணவை எவரும் உண்ண முடியாது  என்று உழைப்பின் பெருமையைப் பறைசாற்றினார்கள் . (புகாரி)

இப்படிச் சொன்னவர்கள் தம் வாழ்க்கைத் தேவைக்காக உழைக்காமல் இருந்திருப்பார்களா?

 ஒரு மனிதன் யாசிப்பதை விட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விறகு வெட்டி அதை விற்று வாழ்க்கை நடத்துவது சிறந்தது.  என்று கூறியவர்கள் (புகாரி) பிறரிடம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தியிருப்பார்களா?

உஹத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தால் மூன்று நாட்களுக்கு மேல் என் மார்க்கத்திற்கு தேவையானதைத் தவிர அதில் எதுவுமே என்னிடம் எஞ்சியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்.

நூல்கள் : புகாரி, முஸ்லிம்

என்று கூறியவர்கள் மதத்தின் மூலம் செல்வம் திரட்ட எண்ணியிருப்பார்களா?

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வும், மக்களும் என்னை நேசிக்கக் கூடிய ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்  என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகத்தை அளவுக்கதிகமாக நேசிக்காதே. அல்லாஹ் உன்னை நேசிப்பான். மக்களிடம் உள்ளவற்றைப்பெற வேண்டுமென விரும்பாதே! மக்கள் உன்னை விரும்புவார்கள்  என்று விடையளித்தார்கள்.

நூல்கள் : இப்னுமாஜா, தப்ரானி, ஹாகிம்

மக்களை எதிர்பார்த்து வாழ்ந்தால் மக்களின் நேசம் கிடைக்காது என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்திருக்க முடியுமா? அப்படி நடந்தால் அந்த மக்கள் தான் அவர்களை நேசித்திருப்பார்களா?

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை எப்படித் தான் நடந்தது? முழு நேரமும் மார்க்கப் பிரச்சாரத்திற்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் வயிற்றுத் தேவைக்கு என்ன தான் செய்தார்கள்?

மக்களிடம் யாசிக்கவும் கூடாது! அவர்கள் தரும் அன்பளிப்புக்காகக் காத்திருக்கவும் கூடாது. சொந்த உழைப்பிலேயே காலம் தள்ளவும் வேண்டும். சொந்த உழைப்பில் ஈடுபடும் போது பிரச்சாரத்திற்கும், ஆட்சியை நடத்துவதற்கும் இடையூறு ஏற்படவும் கூடாது. முழு நேரத்தையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டு, ஆட்சியையும் கவனித்துக் கொண்டு சொந்த உழைப்பையும் செய்ய வேண்டிய நிலை நபியவர்களுடையது.

உலகத் தேவைக்காக உழைக்கும் போது ஆட்சியையும், மார்க்கத்தையும் மறந்தால் இரண்டுக்குமே அது ஆபத்தாகும். இரண்டையும் கவனித்துக் கொண்டு மக்களை நம்பியே வாழ்ந்தால் அது அவர்களின் தகுதிக்குக் கேடாகும்.

இதையெல்லாம் மிகவும் கவனமாகக் கருத்தில் கொண்டு மிகுந்த ஜாக்கிரதையுடன் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த வழியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் குடும்பத்தையும், ஆட்சியையும், மார்க்கத்தையும் ஒரு சேர நிர்வகித்தார்கள்.

மதீனாவுக்குச் சென்றதும் நூறு ஆடுகளைக் கொண்ட ஒரு ஆட்டுப் பண்ணையைத் தம் வாழ்க்கைச் செலவுக்காக ஏற்படுத்திக் கொண்டார்கள். அதற்காக மேய்ப்பவரையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள். இதற்கான சான்று வருமாறு :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். நமது ஆடு ஈன்றது  கிடாய்க்  குட்டியா? பெட்டையா? என்றார்கள். அவர்  கிடாய்  என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி  நான் உமக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன அவற்றில் ஒரு ஆடு, குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாகப் பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம் என்று கூறினார்கள்.

லகீத் இப்னு ஸபுரா (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

நூறு ஆடுகளைக் கொண்ட பண்ணையில் சராசரியாக மாதத்திற்கு எட்டு ஆடுகள் அதிகமாகும். நமது நாட்டு ஆடுகளைப் போலன்றி அதிக அளவு பால் தரக்கூடியதாகவும் அரபு நாட்டு ஆடுகள் இருந்தன. அன்றாடச் செலவுக்குப் போதுமான அளவுக்குப் பால் கிடைக்கும். மாதம் எட்டு ஆடுகள் லாபம் கிடைக்கும். இதை வைத்துத் தான் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள்.

மூலதனமாகப் போட்ட நூறு ஆடுகள் குறையாதவாறு பார்த்துக் கொண்டார்கள். ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஆட்டுக்குட்டி பிறந்தவுடன் பெரிய ஆடு ஒன்றை விற்று விடுவார்கள். அல்லது அறுத்து விடுவார்கள். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்ற பிறகு உள்ள வாழ்க்கை.

ஐந்தாறு நாட்களுக்கு ஒரு ஆடு அல்லது அதன் விலை போதுமென்றாலும் பல மனைவியரைக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது எப்படிப் போதுமாகும்? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இந்தக் கேள்வி முற்றிலும் நியாயமான கேள்வியே.

நாம் நம்முடைய வாழ்க்கையைப் போல் நபியவர்களின் வாழ்வையும் பார்ப்பதால் இந்த ஐயம் எழுகின்றது. நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. தமக்கு வருகின்ற வருவாயைக் கொண்டு எந்த அளவுக்கு வாழ்க்கை நடத்த இயலுமோ அந்த அளவுக்கு அவர்கள் தம் தேவைகளைக் குறைத்துக் கொண்டார்கள். அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை கண்முன்னே கொண்டு வரும் சான்றுகளைத் தருகிறோம். அது போல் வாழ்க்கை நடத்தினால் நாமும் கூட பத்திற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பத்தைச் சமாளிக்க முடியும்.

மக்கள் நல்ல செல்வ நிலையை அடைந்து விட்ட காலத்தில் நபியவர்கள் தமது வயிற்றை நிரப்புவதற்கு மட்டரகமான பேரீச்சம்பழம் கூட கிடைக்காமல் சில நாட்கள் சுருண்டு படுத்து விடுவதை நான் கண்டிருக்கிறேன்.  என நுஃமான் பின் பஷீர் (ரலி) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறார கோதுமை ரொட்டி உண்டது கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை இந்த நிலை தான்.

நூல்கள் :   புகாரி, முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தன் தூதராக ஆக்கியதிலிருந்து மரணிக்கும் வரை சல்லடையைப் பர்த்ததே இல்லை. (அதாவது மாவைச் சலித்து மிருதுவானதைப் பயன்படுத்தியதே இல்லை) என்று ஸஹ்ல் (ரலி) குறிப்பிட்டார்கள்.  சலிக்காத கோதுமையை எப்படி உண்பீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. கோதுமையைத் திரிகையில் அரைப்போம். பிறகு வாயால் ஊதுவோம். பறக்க வேண்டியவை பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்து உண்போம்.  என்று விடையளித்தார்கள்.

ஒரு மாதம் இரண்டு மாதங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இல்லங்களில் அடுப்பு மூட்டப்படாமலேயே சென்று விடும் என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அப்போது நான் என் சிறிய அன்னையே! அப்படியானால் உங்கள் வாழ்க்கை எப்படித் தான் கழியும்? (எதைத் தான் உண்பீர்கள்?)  என்று கேட்டேன்.  பேரீச்சம் பழங்களும் தண்ணீரும் தான்  என்றார்கள்.

(புகாரி, முஸ்லிம்)

நபியவர்கள் தங்க நாணயத்தையோ, வெள்ளி நாணயத்தையோ, அடிமைகளையோ விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றவை அவர்கள் சவாரி செய்த கோவேறுக் கழுதை அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வழிப்போக்கர்களுக்கு பயன்படும் விதமாக அவர்கள் தானமாக வழங்கிய நிலம் ஆகியவையே அவர்கள் விட்டுச் சென்றவையாகும். (புகாரி)

கடினமான ஒரு வேட்டியையும், கடினமான ஒரு போர்வையையும் ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் காட்டி இவ்விரண்டு ஆடைகள் அணிந்த நிலையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) மரணித்தார்கள் என்றார்கள்.

(புகாரி, முஸ்லிம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்களின் ஆட்டுப் பண்ணை போதுமானது அல்லவா?

அப்படியும் போதாத நிலை ஏற்பட்டது உண்டு. அப்போதும் எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் கவச ஆடை 30 மரக்கால் கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. அதை மீட்காமலேயே மரணித்தார்கள்.

நூல்கள் :  புகாரி, முஸ்லிம்

உயிரையும் தருவதற்குத் தயாரான உற்ற நண்பர்கள் பலரிருந்தும் அவர்களிடம் அடமானம் வைத்தால் அவர்கள் இலவசமாகத் தந்து விடுவார்களோ என்ற பயத்தில் தானோ என்னவோ ஒரு யூதரிடம் அடமானம் வைத்திருக்கின்றார்கள்.

மதத்தை வைத்து எதையும் அவர்கள் சம்பாதிக்கவே இல்லை. மதத்தைக் கூறிய பிறகு இருப்பதை இழந்தார்கள். முன்பை விட கஷ்டப்பட்டார்கள்.

ஆட்சியை வைத்தாவது சம்பாதித்ததுண்டா? என்றால் அதுவும் கிடையாது. மற்றவர்களை விட தமக்கும், தம் குடும்பத்துக்கும் அதிகமான நிபந்தனைகளை விதித்துக் கொண்டார்கள்.

அன்றைக்கு அரசுக்கு வந்த வருமானம்  ஜகாத்  அடிப்படையில் வசூலிக்கப் படுபவையாகத் தான் இருந்தன. இந்த  ஜகாத்  எனும் நிதியைத் தமக்கும் தம் குடும்பத்துக்கும்  ஹராம்  (விலக்கப்பட்டது) என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள். தம் குடும்பத்தினர் எவராவது அரசு நிதியிலிருந்து எதையும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவர்கள் செய்த முன்னேற்பாடாகக் கூட இதைக் கருதலாம்.

நபிகளின் பேரன் ஹுஸைன் (ரலி)  ஜகாத்தாக  வசூலிக்கப்பட்ட பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டதைக் கண்ட நபிகளார்  துப்பு! துப்பு!  என்று கூறி அதைத் துப்பச் செய்து விட்டு இது நமக்கு ஹலால் இல்லை  என்றும் கூறிவிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

உலக முடிவு நாள் வரைக்கும் அவர்களின் பரம்பரையினர் ஜகாத் நிதியைப் பெறக் கூடாது என்று கண்டிப்பாகத் தடை விதித்து விட்டார்கள்.

அரசுச் சொத்தை தமக்கு ஹராமாக்கிக் கொண்டது மட்டுமின்றி, தம் சொந்த உழைப்பால் திரட்டிய செல்வங்களை (ஆட்டு பண்ணை உட்பட) அரசுக்குச் சொந்தமாக்கி விட்டுச் சென்றார்கள்.

நபிமார்களின் சொத்துகளுக்கு எவரும் வாரிசாக முடியாது  என்பது அவர்களின் அமுத மொழி .

நூல்கள் : அஹ்மத், திர்மிதீ

இதனால் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்கள் குடும்பத்தினர் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது.

அவர்களின் அருமை மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் தந்தை விட்டுச் சென்ற நிலத்தை ஜனாதிபதி அபூபக்ரிடம் கேட்ட போது நபிமார்களின் சொத்துகளுக்கு எவருமே வாரிசாக முடியாது என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்கள் தர மறுத்து ஏழைகளுக்கு அதைப் பொதுவுடைமையாக்கினார்கள்.

கேட்டாலே கண் கலங்கும் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். எவரும் வாழ்ந்து காட்ட முடியாத எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். முழு அரசுப் பணத்தையும் அவர் எடுத்துக் கொண்டால் கூட எவருமே ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நிலையில் அதில் கடுகளவையும் தன் மீது ஹராமாக்கி (விலக்கப்பட்டது)  கொண்டவர் தான் அண்ணலார் அவர்கள்.

நபியவர்களுக்கு இன்னொரு விதத்திலும் வருவாய் வந்ததுண்டு. அதாவது போர்க்களங்களில் வெற்றியடையும் போது வென்றவர்கள், தோற்றவர்கள் விட்டுச் சென்ற பொருளை எடுத்துக் கொள்வது உலகெங்கும் ஏற்கப்பட்ட வழக்கமாக இருந்தது.

அந்த அடிப்படையில் கிடைக்கும் பொருட்களை போரில் பங்கு கொண்ட வீரர்களுக்குப் பங்கிட்டு வழங்குவார்கள். நபியவர்களும் பல போர்க்களங்களில் நேரில் ஈடுபட்டதால் அவர்கள் தமக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில சமயங்களில் நண்பர்கள் அவர்களாக வந்து அன்பளிப்புச் செய்வர். அதை நபியவர்கள் மறுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களும் திரும்ப அன்பளிப்புச் செய்வார்கள். இப்படி நண்பர்கள் அளிக்கும் அன்பளிப்புகள், போர்க்களங்களில் கிடைத்த பங்குகள், ஆட்டுப் பண்ணையின் மூலம் வரும் வருமானம் ஆகியவை மூலம் தான் நபிகள் நாயகம் (ஸல்) தமது வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள்.

புரோகிதத்தின் மூலம் ஒரு சல்லிக்காசையும் அவர்கள் பெற்றதில்லை. அவ்வாறு பெற்று வந்த ஏனைய மதத்தின் புரோகிதர்களைக் கடுமையாகக் கண்டித்தே வந்தார்கள்.

ஆட்சித் தலைமையை ஏற்றபின் அரசாங்கப் பணத்தையோ, பொருட்களையோ, இன்ன பிற வசதிகளையோ அவர்கள் எள்ளவும் அனுபவிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

முடிவுரை

இஸ்லாத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் நமது கவனத்திற்கு வந்த குற்றச்சாட்டுகள் இவை தாம். இவை தவிர இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக ஏற்கனவே தனி நூலை வெளியிட்டிருந்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற குற்றச்சாட்டுக்கும் தனி நூலை பதிலாக வெளியிட்டுள்ளோம்.

எஞ்சிய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் இந்த நூலில் விளக்கமளித்துள்ளோம்.

இவை தவிர மேலும் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிய வந்தால் அதை நமது கவனத்தில் கொண்டு வருபவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்போம். அவற்றுக்கும் விளக்கம் தருவோம். உள்ளதை உள்ளபடி விளங்கி நடக்க நம் அனைவருக்கும் இறைவன் அருள்புரியட்டும்!

25.05.2010. 14:53

அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

ஆக்கம் பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் 88

விலை ரூபாய் 20.00

  • அமீருக்குக் கட்டுப்படுவதன் அவசியம்
  • அமீர் என்றால் யார்
  • ஒரு நாட்டில் பல அமீர்கள் இருக்க முடியுமா
  • அதிகாரமில்லாதவர் அமீர் என்று அழைக்கப்படலாமா
  • இந்திய முஸ்லிம்களுக்கு அல்லது தமிழக மூஸ்லிம்களுக்கு அமீர் யார்
  • தலமைப் பதவியின் வகைகள்
  • இயக்கங்களின் தலைவர்கள் அமீர்கள் அல்லர்
  • இந்தியாவில் யாரும் அமீர்கள் அல்லர்

என்பன போன்ற விஷயங்கள் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இஸ்லாத்தின் பெயரால் உலகில் ஏராளமான இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானவையாக இருந்த போதும் அந்த இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அந்த இயக்கங்களில் இருந்து விடுபடுவதற்கும், விலகுவதற்கும் தயங்குகின்றனர்.

காரணம் இயக்கத்தின் தலைவர் அமீர் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இஸ்லாத்தில் அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளதால், தான் சார்ந்துள்ள இயக்கம் தவறான இயக்கம் என்பது தெரிந்த பின்னும், தன் தலைவர் தவறான தலைவர் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னும் அதில் இருந்து விலக ஒருவர் தயங்குகிறார். இது அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற மார்க்கக் கடமையை மீறியதாக ஆகி அல்லாஹ்விடம் நாம் குற்றவாளியாக நேருமோ என்று அவர் அஞ்சுகிறார்.

மக்களிடம் காணப்படும் அமீர் பற்றிய இந்த அறியாமை தான் இஸ்லாத்தின் பெயரில் இயக்கம் நடத்துவோரின் ஒரே மூலதனமாக உள்ளது.

தங்களின் தவறான கொள்கை குறித்து தங்களின் தொண்டர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு கேள்வி கேட்கும் நிலையோ, எதிர் விமர்சனம் செய்யும் நிலையோ ஏற்படும் போதெல்லாம் அவர்களை வாயடைக்கச் செய்ய இவர்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது தான்.

நான் அமீர் ஆக இருக்கிறேன். அமீருக்குக் கட்டுப்படுவது மார்க்கக் கடமை. எனவே என்னை எதிர்ப்பதோ, கேள்வி கேட்பதோ என்னை விட்டு விலகுவதோ மாபெரும் பாவம் என்று தொண்டன் மிரட்டப்படுகிறான்.

அமீரிடம் எத்தகைய தவறுகளைக் கண்டாலும் அமீரிடம் இருந்து ஒருவன் விலகுவதற்கு அனுமதி இல்லை என்று மூளைச் சலவை செய்யப்படுகிறான். இதனால் தான் தவறான பல இயக்கங்கள் உயிர் பிழைத்துள்ளன.

தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, அஹ்லே ஹதீஸ், ஜிஹாத் என்ற பெயரில் ரகசிய இயக்கம் நடத்துவோர், கிலாஃபத் என்ற பெயரில் கள்ள இயக்கம் நடத்துவோர் ஆகிய அனைவரும் அமீருக்குக் கட்டுப்படுதல் என்பதைத் தான் கவசமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நாங்கள் உருவாக்கிய ஜாக் என்ற அமைப்பிலும் அமீர் என்ற சித்தாந்தம் உள்ளது. அதை நாமும் ஏற்றிருந்தோம். அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் எனக் கூறி தலைமைக்கு எதிராக நடப்பவர்களை நாமும் எச்சரித்தது உண்டு. காரணம் நாமும் அமீருக்குக் கட்டுப்படுவதைப் பற்றி இவர்கள் விளங்கியது போல் தான் விளங்கி இருந்தோம்.

இந்த நிலையில் ஜாக் இயக்கம் குர்ஆன் ஹதீஸுக்கு முரணாக பல நிலைபாட்டை எடுத்த போது தான் எங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான கருத்தைச் சொல்லும் போது கூட எதிர்க்கக் கூடாது என்று மார்க்கம் சொல்லுமா? அமீருக்குக் கட்டுப்படுதல் எனக் கூறி தீமையையும், அநியாயத்தையும் தட்டிக் கேட்பதை இஸ்லாம் தடுக்காது என்று எங்கள் மனசாட்சிக்குத் தெரிந்தாலும் அமீருக்குக் கட்டுப்படுவது குறித்த ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானவையாகவும் இருந்தன.

எனவே நாம் புரிந்து கொண்டதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.

எனவே அமீருக்குக் கட்டுப்படுதல் குறித்து இன்றைக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள மூத்த அறிஞர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் கூடி அமீர் குறித்து பல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினோம்.

அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அது போல் இந்த நாட்டில் உள்ள எந்தத் தலைவரும் அமீர் கிடையாது என்பதும் உண்மையை என்பதை அப்போது தான் நாங்கள் அறிந்து கொண்டோம்.

அமீருக்குக் கட்டுப்படுவதற்கு மட்டும் அமீர் குறித்த ஆதாரங்களைத் தேடும் நாம் அமீர் என்றால் யார் என்பதற்கும் குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரத்தைத் தேடி இருந்தால் இது போன்ற மோசடி அமீர்களின் பிடியில் இருந்து விடுபட்டிருக்கலாமே என்றும், மக்களையும் விடுவிக்கலாமே என்றும் அப்போது தான் எங்களுக்குப் புரிந்தது.

எனவே இது குறித்து விரிவாக ஆய்வு நூல் எழுத வேண்டும் என்று அந்த அறிஞர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமீர் ஓர் ஆய்வு என்ற நூலை எழுதி வெளியிட்டோம்.

அந்த நூல் வெளியான பின்னர் தான் ஜாக் இயக்கத்தின் தீய கொள்கைகளால் மனம் வெறுத்து அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற காரணத்தால் அமைதி காத்தவர்களும், சகித்துக் கொண்டு மன வெறுப்புடன் அந்த இயக்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவர்களும் அதில் இருந்து பெருமளவில் விடுபட்டனர்.

அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற போர்வையில் தலைவர்களின் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயங்கிய பல சகோதரர்கள் அநியாயத்துக்கு எதிராகக் களம் இறங்கினார்கள். ஜாக் போதையில் இருந்து விடுபடலானார்கள்.

ஆனாலும் மற்ற இயக்கங்களில் அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது, தலைவர்களின் தவறுகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க நினைப்பவர்களுக்கு இன்றும் தடையாக இருக்கத் தான் செய்கிறது.

எனவே ஏற்கனவே வெளியிட்ட அமீர் ஓர் ஆய்வு எனும் நூலை அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு என்று பெயர் மாற்றம் செய்து தேவையான பல விஷயங்களைச் சேர்த்தும் தேவையில்லாதவற்றை நீக்கியும் இந்த நூலை மீண்டும் வெளியிடுகிறோம்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் ஏராளமான கட்சிகள், இயக்கங்கள், அமைப்புக்கள், கழகங்கள், சங்கங்கள் எனப் பல்வேறு பெயர்களில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் இன்றைய ஜனநாயக மரபுப்படி தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற அடிப்படையில் செயல் படக்கூடிய அமைப்புக்களும் உள்ளன. வெறும் தலைவரை மட்டும் வைத்துச் செயல்படும் அமைப்புக்களும் உள்ளன.

இந்த அமைப்புக்களில் ஒரு உறுப்பினர் தங்கள் தலைவருக்குக் கட்டுப்பட மறுத்து விட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள். அதைச் சகித்துக் கொண்டு அந்த உறுப்பினர் அந்த அமைப்பில் நீடிப்பார், அல்லது விலகி விடுவார். ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் ஒருவர் திருந்தவில்லை என்றால் அவர் அந்த அமைப்பில் இருந்து நீக்கப்படுவார். இவையெல்லாம் அந்தந்த அமைப்புக்கள் கொண்டிருக்கும் நிர்வாக சுதந்திரம். இத்தகைய இயக்கங்கள் தங்களுக்குக் கட்டுப்படுவது மார்க்கக் கடமை எனக் கூறுவதில்லை. இதன் தலைவர்கள் அமீர் என்று அழைக்கப்படுவதும் இல்லை. ஆகவே இந்த அமைப்புகள் இந்த ஆய்வுக்குள் அடங்காது.

வேறு சில அமைப்புக்கள் உள்ளன. இந்த அமைப்புக்கள் தம்மை இஸ்லாமிய அமைப்புக்கள் என வாதிடுகின்றன. இவ்வமைப்புக்களின் தலைவருக்குக் கட்டுப்படுதலை மார்க்கத்தின் கடமைகளில் ஒன்று எனவும், அவ்வாறு கட்டுப்படாதவர் மார்க்கத்தை விட்டே வெளியேறி விடுவார் எனவும் கூறுகின்றன.

அமீருக்குக் கட்டுப்படுதலை வலியுறுத்துகின்ற குர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் இவ்வமைப்புக்கள் தங்களின் வாதத்திற்குச் சான்றாக எடுத்து வைக்கின்றன. எனவே திருக்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அமீர் மற்றும் அமீருக்குக் கட்டுப்படுதல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் முழுமையாக நாம் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். எனவே அமீர் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அமீருக்குக் கட்டுப்படுதலின் அவசியம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

திருக்குர்ஆன் 4:59

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا شُعْبَةُ قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اسْمَعُوا وَأَطِيعُوا وَإِنْ اسْتُعْمِلَ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ

காய்ந்த திராட்சை போன்ற தலையைக் கொண்ட அபீசினிய நாட்டுக்காரர் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் நீங்கள் அவருக்குச் செவிசாயுங்கள், கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 693 மற்றும் 696, 7142

و حدثني سلمة بن شبيب حدثنا الحسن بن أعين حدثنا معقل عن زيد بن أبي أنيسة عن يحيى بن حصين عن جدته أم الحصين قال سمعتها تقول حججت مع رسول الله صلى الله عليه وسلم حجة الوداع قالت فقال رسول الله صلى الله عليه وسلم قولا كثيرا ثم سمعته يقول إن أمر عليكم عبد مجدع حسبتها قالت أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا

உயர்வான அல்லாஹ்வின் வேதத்தின் படி உங்களை வழி நடத்திச் செல்லும் கருத்த, உடல் ஊனமுற்ற ஓர் அடிமை உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் செவிசாயுங்கள்! கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்முல் ஹூஸைன் (ரலி)

நூல் : முஸ்லிம்.

و حدثني محمد بن سهل بن عسكر التميمي حدثنا يحيى بن حسان ح و حدثنا عبد الله بن عبد الرحمن الدارمي أخبرنا يحيى وهو ابن حسان حدثنا معاوية يعني ابن سلام حدثنا زيد بن سلام عن أبي سلام قال قال حذيفة بن اليمان قلت يا رسول الله إنا كنا بشر فجاء الله بخير فنحن فيه فهل من وراء هذا الخير شر قال نعم قلت هل وراء ذلك الشر خير قال نعم قلت فهل وراء ذلك الخير شر قال نعم قلت كيف قال يكون بعدي أئمة لا يهتدون بهداي ولا يستنون بسنتي وسيقوم فيهم رجال قلوبهم قلوب الشياطين في جثمان إنس قال قلت كيف أصنع يا رسول الله إن أدركت ذلك قال تسمع وتطيع للأمير وإن ضرب ظهرك وأخذ مالك فاسمع وأطع

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தீமையில் இருந்தோம். இந்த நிலையில் அல்லாஹ் நன்மையைக் கொண்டு வந்தான். அந்த நன்மையில் நாம் இருக்கிறோம். இந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா? எனக் கேட்டேன். அதற்கும் அவர்கள் ஆம் என்றார்கள். அது எப்படி இருக்கும்? என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள் எனது நேர்வழியைக் கொண்டு திருந்தாத எனது நடைமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்களில் மனித உடல்களையும், ஷைத்தானின் உள்ளங்களையும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செலுத்துவார்கள் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! அந்த நிலையை அடைந்து விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அந்த அமீர் உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி, உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் நீ அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹூதைபா (ரலி)

நூல் : முஸ்லிம்.

حدثنا مسدد حدثنا يحيى بن سعيد عن عبيد الله حدثني نافع عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة

பாவமான காரியத்தை ஏவாத வரை தான் விரும்பியவற்றிலும், விரும்பாதவற்றிலும் அமீருக்குச் செவி சாய்த்துக் கட்டுப்படுவது முஸ்லிமான ஒருவர் மீது கடமையாகும். அவர் பாவத்தை ஏவினால் செவிசாய்ப்பதோ, கட்டுப்படுவதோ கூடாது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : புகாரி 7144, மற்றும் 2955

حدثنا إسماعيل حدثني ابن وهب عن عمرو عن بكير عن بسر بن سعيد عن جنادة بن أبي أمية قال دخلنا على عبادة بن الصامت وهو مريض قلنا أصلحك الله حدث بحديث ينفعك الله به سمعته من النبي صلى الله عليه وسلم قال دعانا النبي صلى الله عليه وسلم فبايعناه فقال فيما أخذ علينا أن بايعنا على السمع والطاعة في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وأثرة علينا وأن لا ننازع الأمر أهله إلا أن تروا كفرا بواحا عندكم من الله فيه برهان

எங்களது விருப்பிலும், வெறுப்பிலும் எங்களது கஷ்டமான சூழ்நிலையிலும், இலகுவான சூழ்நிலையிலும் எங்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் நாங்கள் (அமீருக்கு) செவிசாய்ப்போம், கட்டுப்படுவோம் என்றும் அல்லாஹ்விடமிருந்து அமைந்திருக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும் இறை நிராகரிப்பைக் காணாத வரை அதிகாரம் உடையவர்களிடம் போட்டி போட மாட்டோம் எனவும் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்தோம்.

அறிவிப்பவர் : உப்பாதா பின் ஸாமித் (ரலி)

நூல் : புகாரி 7056

அமீராக இருப்பவர், பாவமான காரியங்களைச் செய்யுமாறு கூறினால் அதில் தவிர மற்ற அனைத்திலும் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று மேற்கண்ட குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும் கூறுகின்றன. அமீர் என்பவர் எந்தக் குலமாக இருந்தாலும், உடல் ஊனமுற்ற அடிமையாக இருந்தாலும், அவர் நம்மை அடித்து நமது பொருளைப் பறித்தாலும் அவருக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

மேலும் அவரிடம் இறை நிராகரிப்பைக் காணாத வரை அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விடக் கூடாது எனவும் கூறுகின்றன. பாவமான காரியங்களைச் செய்யுமாறு அமீர் நம்மை ஏவினால் அதைச் செய்யக் கூடாது எனவும், பாவமான காரியங்களை அமீர் செய்தால் அதற்காக அவர் ஏவக்கூடிய நல்ல காரியங்களில் அவருக்குக் கட்டுப்படாமல் இருக்கக் கூடாது எனவும் மேற்கண்ட ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. அமீரின் கட்டளைக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்திக் கூறுவதுடன் அமீரின் கட்டளையை மீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் நபிமொழிகளில் கடுமையான எச்சரிக்கையும் காணப்படுகிறது.

حدثنا مسدد حدثنا عبد الوارث عن الجعد عن أبي رجاء عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال من كره من أميره شيئا فليصبر فإنه من خرج من السلطان شبرا مات ميتة جاهلية

ஒருவர் தனது அமீரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் ஒருவர் அமீரை விட்டு ஒரு ஜான் அளவு வெளியேறி விட்டாலும் அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 7053

அமீரை விட்டு ஓர் இஸ்லாமியக் குடிமகன் விலகி அவருக்குக் கட்டுப்பட மறுத்தால் அவன் மறுமையில் நரகம் புகுவான் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. எனவே அமீருக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மேலும் அமீருக்குக் கட்டுப்படுவது வணக்க வழிபாடுகள் போல் வலியுறுத்தப்பட்டுள்ளதை மேற்கண்ட சான்றுகள் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன.

அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது தலைவன், தொண்டனிடையே ஏற்படும் சதாரண உறவு முறையல்ல. விரும்பினால் கட்டுப்பட்டு விட்டு, விரும்பாத போது வெளியேறி விடும் கட்சித் தலைமை போன்றதும் அல்ல. மாறாக அமீரிடம் எத்தகைய குறைபாடுகளைக் கண்டாலும் அவரை விட்டு விலகக் கூடாது, விலகுவது பாவம் என்ற அளவுக்கு வலியுறுத்தப்பட்ட மார்க்கக் கடமையாகும்.

எனவே இது விஷயத்தில் கூடுதலான ஆய்வையும் கவனத்தையும் நாம் செலுத்த வேண்டும்.

அமீர் என்பவர் யார்

அமீருக்குக் கட்டுப்படுதலின் அவசியத்தை அறிந்து கொண்ட நாம் நமது அமீர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரேயொரு அமீரா? அல்லது நாடுகள் தோறும், ஊர்கள் தோறும் பல அமீர்கள் இருக்க முடியுமா? நாடுகள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் நாம் வாழும் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அமீர் யார்?

அல்லது ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒரு அமீர் இருக்கலாமா? அப்படியானால் அவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது? அல்லது அகில உலகுக்கும் ஒரே ஒரு அமீர் தான் இருக்க முடியுமா? அப்படியானால் அந்த ஒருவர் யார்? அதை எப்படித் தீர்மானிப்பது?

ஒரு மாநிலத்தில் நூற்றுக் கணக்கான இயக்கங்கள் இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு அமீர்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு இயக்கமும் தத்தமது அமீருக்குக் கட்டுப்படுவது தான் மார்க்கக் கடமை எனக் கருதுகின்றன, பிரச்சாரமும் செய்கின்றன.

இன்னும் சொல்வதென்றால் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பல பிரிவுகளாகி ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அமீர்கள் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது?

அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆசைப்படுபவன் இந்தக் கேள்விகளால் குழம்பிப் போகின்றான்?

முஸ்லிம்களை ஓர் அணியில் ஒன்று திரட்டிக் கட்டுக்கோப்பைக் காப்பதற்காகத் தான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுகிறது. இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அமீர்கள் என்ற பெயரில் மக்கள் பிரிக்கப்பட்டு ஒற்றுமை குலைக்கப்படுவதைக் கண்டு அவன் தடுமாறுகிறான்.

ஏராளமான அமீர்கள் உருவாகும் போது சமுதாயம் பல பிரிவுகளாகச் சிதறுகிறது. அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற சித்தாந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமை ஏற்படுவதைக் காணும் ஒரு உண்மை முஸ்லிம் மேலும் குழம்பிப் போகிறான்.

ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் ஏற்படுத்திய ஒரு சித்தாந்தம் ஒரு போதும் வேற்றுமை ஏற்படுத்தாது என்ற உணர்வோடு அமீருக்குக் கட்டுப்படுதலை நாம் ஆய்வு செய்தால் குழப்பங்கள் விலகும். தெளிவும் பிறக்கும். இன்ஷா அல்லாஹ்.

தலைமைப் பதவியும் அதன் வகைகளும்.

அமீர் என்றால் தலைவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தலைவரைக் குறிப்பதற்கு அமீரைப் போலவே வேறு சொற்களும் அரபி மொழியில் காணப்படுகின்றன. அவை கலீஃபா, இமாம், அமீருல் முஃமினீன், அமீருல் ஆம்மா, மலிக், சுல்த்தான், ஆமில் ஆகியவையாகும்.

எனவே இந்தச் சொற்கள் அனைத்தையும் முழுமையாக நாம் ஆய்வு செய்வதின் மூலம் அமீர் என்பதற்கான சரியான இலக்கணத்தை நாம் அறிய முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இந்தச் சமுதாயத்தின் முதல் தலைவராக இருந்தார்கள். அமீருக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்திய அவர்கள் தம்மை அமீர் என்று சொல்லிக் கொள்ளவில்லை. நபித்தோழர்களாலும் அவர்கள் அமீர் என அழைக்கப்படவோ குறிப்பிடப்படவோ இல்லை.

அவர்களின் தலைமைத்துவம் அல்லாஹ்வின் தூதர் என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டது.

ரிஸாலத் - இறைத்தூதர் எனும் தகுதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த போது அந்தச் சமுதாயத்தின் தலைவராக அவர்களே இருந்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்களின் தலைமை ஓர் வித்தியாசமான தலைமை எனலாம்.

அவர்கள் மக்காவில் இருந்த காலம் வரை ஒடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் மதீனா சென்று நல்லாட்சியை நிறுவிய பின் அந்தச் சமுதாயத்தின் ஆட்சித் தலைவராகவும் அவர்களே இருந்தார்கள். அதே சமயம் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் ஆன்மிகத் தலைவராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்ற ஆன்மிகத் தலைமை, ஆட்சித் தலைமை என இரண்டு தலைமைகள் அவர்களிடம் இருந்தாலும் அவர்கள் ஆட்சித் தலைவர் என்ற கருத்தைத் தரும் மேலே நாம் எடுத்துக் காட்டிய எந்த வார்த்தையையும் தமக்காகப் பயன்படுத்தியதில்லை. அவர்களிடம் பாடமும், பயிற்சியும் பெற்ற தோழர்களும் அவர்களை மன்னா! ஆட்சித் தலைவா! என்றெல்லாம் ஒரு போதும் கூறியதில்லை. மாறாக ஆன்மிகத் தலைமையைக் குறிக்கும் அல்லாஹ்வின் தூதர் என்பதைத் தான் நபித்தோழர்கள் பயன்படுத்தினார்கள்.

ஆட்சித் தலைவர் என்ற பொறுப்பைக் குறிக்கும் எந்த வார்த்தையும் நபியவர்களுக்குப் பயன்படுத்தப்படாமல் இருந்ததற்குக் காரணங்களும் இருந்தன.

முக்கியமான காரணம் என்னவெனில் நபியவர்கள் நடத்திய ஆட்சி தமது சுயவிருப்பத்தின் படி நடத்திய ஆட்சி அல்ல. மாறாக தொழுகை, நோன்பு போன்ற வணக்க, வழிபாடுகளை இறைவனிடமிருந்து அவர்கள் பெற்றது போல அரசு நடத்துவதற்கான சட்டங்களையும் அந்த இறைவனிடமிருந்தே பெற்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வின் ஆணைப்படி வணக்க வழிபாடுகளைக் கற்றுத் தந்து நடைமுறைப்படுத்துபவர் என்பது மட்டும் பொருளன்று. அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆட்சி நடத்துபவர் என்ற பொருளும் அதனுள் அடங்கி இருந்தது.

எனவே தான் அமீர், கலீஃபா, சுல்த்தான், அமீருல் முஃமினீன் என்பன போன்ற வார்த்தைகளால் நபியவர்கள் குறிப்பிடப்படவில்லை. அதை விட விரிந்த, அதே சமயம் ஆட்சித் தலைமையையும் உள்ளடக்கிய ரஸூலுல்லாஹ் - அல்லாஹ்வின் தூதர் - என்ற வார்த்தையால் அவர்கள் குறிப்பிடப்பட்டனர்.

ரிஸாலத் - நுபுவ்வத் என்பதில் ஆட்சியும் அடக்கம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்தும் நாம் அறியலாம்.

حدثنا سليمان بن داود الطيالسي حدثني داود بن إبراهيم الواسطي حدثني حبيب بن سالم عن النعمان بن بشير قال كنا قعودا في المسجد مع رسول الله صلى الله عليه وسلم وكان بشير رجلا يكف حديثه فجاء أبو ثعلبة الخشني فقال يا بشير بن سعد أتحفظ حديث رسول الله صلى الله عليه وسلم في الأمراء فقال حذيفة أنا أحفظ خطبته فجلس أبو ثعلبة فقال حذيفة قال رسول الله صلى الله عليه وسلم تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء الله أن يرفعها ثم تكون ملكا عاضا فيكون ما شاء الله أن يكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون ملكا جبرية فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة ثم سكت قال حبيب فلما قام عمر بن عبد العزيز وكان يزيد بن النعمان بن بشير في صحابته فكتبت إليه بهذا الحديث أذكره إياه فقلت له إني أرجو أن يكون أمير المؤمنين يعني عمر بعد الملك العاض والجبرية فأدخل كتابي على عمر بن عبد العزيز فسر به وأعجبه

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்குமுறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள்.

நூல் : அஹ்மத் 17680

இந்த ஹதீஸில் ஆட்சி முறையைப் பற்றி நபியவர்கள் அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள் எனினும் தன்னுடைய ஆட்சி முறையைப் பற்றிக் குறிப்பிடும் போது, நபித்துவம் இருக்கும் என்றே குறிப்பிடுகின்றார்கள். எனவே அல்லாஹ்வின் திருத்தூதர் என்ற பெயரைத் தவிர வேறு ஆட்சி முறைகளைக் குறிப்பிடும் எந்த அடை மொழியிலும் நபியவர்களை அழைப்பது சரியல்ல என்பதை இதில் இருந்து உணரலாம்.

இவ்வாறு ரிஸாலத்தை (அல்லாஹ்வின் தூதர் எனும் தகுதியை) அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் ஆட்சி செலுத்தவில்லை. இஸ்ரவேல் மக்களையும் நபிமார்கள் இப்படித் தான் ஆட்சி செலுத்தியுள்ளனர்.

حدثني محمد بن بشار حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن فرات القزاز قال سمعت أبا حازم قال قاعدت أبا هريرة خمس سنين فسمعته يحدث عن النبي صلى الله عليه وسلم قال كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون قالوا فما تأمرنا قال فوا ببيعة الأول فالأول أعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم

இஸ்ரவேலர்களை நபிமார்களே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஒரு நபி மறைந்ததும் இன்னொரு நபி அவருக்குப் பதிலாக பொறுப்பு வகிப்பார். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. கலீஃபாக்கள் உருவாவார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நபியவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! (அது தொடர்பாக) எங்களுக்கு என்ன கட்டளையிடப் போகிறீர்கள் எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள், அவர்களில் முதலில் யாரிடத்தில் உடன்படிக்கை செய்தீர்களோ அவரிடத்திலேயே அதை நிறைவேற்றுங்கள். அவர்களுடைய கடமையை அவர்களுக்குச் செலுத்தி விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் விசாரனை செய்வான் என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : புகாரி 3455

இவ்விரு ஹதீஸ்களும் ரிஸாலத் (அல்லாஹ்வின் தூதர் எனும் தகுதி) என்பதில் ஸியாஸத் (அரசியல் தலைமை)யும் அடங்கும் என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன.

கிலாஃபத்

அல்லாஹ்வின் தூதருக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சித் தலைவரைக் குறிக்க பல்வேறு வார்த்தைகள் உள்ளன என்பதை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். அவற்றுள் எந்த ஒன்றையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலீஃபத்து ரஸூலில்லாஹ் - அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதி என்பதைத் தான் அவர்கள் பயன்படுத்தினார்கள். நபித்தோழர்களும் அவர்களை கலீஃபத்து ரஸூலில்லாஹ் என்று தான் அழைத்தனர்.

கலீஃபா என்ற சொல்லுக்கு அதிபர் என்ற பொருள் கிடையாது. பிரதிநிதி என்பதே அதன் நேரடிப் பொருளாகும். கலீஃபத்து ரஸூலில்லாஹ் என்றால் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதி என்ற பொருள் வரும். பின்னர் கலீஃபத்து ரஸூலில்லாஹ் என்பது கலீஃபா என்று சுருங்கியது.

மன்னர், அதிபதி என்று பொருள் படும் மலிக், சுல்த்தான் போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு நபியவர்களின் பிரதிநிதி எனப் பொருள்படும் கலீஃபா என்ற வார்த்தையையே அவர்கள் விரும்பினார்கள். அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் தன்னுடைய வழியில் நடக்கும் ஆட்சியை கிலாஃபத் எனவும், அத்தகைய ஆட்சியாளர்களைக் கலீஃபாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் நபியவர்கள் பயன்படுத்திய நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்ற வாசகத்தில் இருந்து இதை நாம் அறியலாம்.

பின்வரும் ஹதீஸிலும் நபிவழியில் நடத்தப்படும் நல்லாட்சி கிலாஃபத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

حدثنا علي بن حجر حدثنا بقية بن الوليد عن بحير بن سعد عن خالد بن معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن العرباض بن سارية قال وعظنا رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاة الغداة موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل إن هذه موعظة مودع فماذا تعهد إلينا يا رسول الله قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن عبد حبشي فإنه من يعش منكم يرى اختلافا كثيرا وإياكم ومحدثات الأمور فإنها ضلالة فمن أدرك ذلك منكم فعليه بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ قال أبو عيسى هذا حديث حسن صحيح وقد روى ثور بن يزيد عن خالد بن معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن العرباض بن سارية عن النبي صلى الله عليه وسلم نحو هذا حدثنا بذلك الحسن بن علي الخلال وغير واحد قالوا حدثنا أبو عاصم عن ثور بن يزيد عن خالد بن معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن العرباض بن سارية عن النبي صلى الله عليه وسلم نحوه والعرباض بن سارية يكنى أبا نجيح وقد روي هذا الحديث عن حجر بن حجر عن عرباض بن سارية عن النبي صلى الله عليه وسلم نحوه

அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும், அமீர் கருத்த அடிமையாக இருந்தாலும் சரி அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் நான் உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன். ஏனெனில் எனக்குப் பின் உங்களில் வாழ்பவர்கள் அதிகம் கருத்து வேறுபாடுகளைக் காண்பார்கள். அப்போது நீங்கள் என்னுடையை வழிமுறையையும், நேர்வழி பெற்ற நேர்மையான கலீஃபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றுங்கள். அதைப் பற்றிப் பிடித்து கடைவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இர்ஃபாள் பின் ஸாரியா (ரலி)

நூல் : திர்மிதி 3600

தனக்குப் பின் வரக்கூடிய, தன்னுடைய வழியில் நடக்கக் கூடிய ஆட்சியாளர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலீஃபாக்கள் என்று இந்த ஹதீஸிலும் குறிப்பிடுகிறார்கள்.

حدثنا موسى بن داود حدثنا نافع يعني ابن عمر عن ابن أبي مليكة قال قيل لأبي بكر رضي الله عنه يا خليفة الله فقال أنا خليفة رسول الله صلى الله عليه وسلم وأنا راض به وأنا راض به وأنا راض

அல்லாஹ்வுடைய கலீஃபாவே என்று அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதருடைய கலீஃபா ஆவேன். (அல்லாஹ்வின் கலீஃபா அல்ல) இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன், இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன், இவ்வாறு அழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ முலைக்கா

நூல் : அஹ்மத் 56

மேற்கண்ட ஹதீஸ்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்துவத்தின் அடிப்படையில் நடக்கும் ஆட்சிக்கு கிலாஃபத் என்றும், அந்த அடிப்படையில் ஆட்சி நடத்துபவர்கள் கலீஃபா என்றும் கூறப்பட்டிருப்பதைக் கானலாம்.

இமாம் - இமாமத்

நல்ல முறையில் ஆட்சி நடத்தினாலும் அது அல்லாத முறையில் ஆட்சி நடத்தினாலும் அவர்களைக் குறிப்பிட இமாம் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுவதுண்டு.

இமாம் என்பது தொழுகை நடத்தக் கூடியவரைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம். முழுமையான அதிகாரம் பெற்ற மன்னரையும் இவ்வார்த்தை குறிக்கும்.

நபியவர்கள் இமாம் என்ற வார்த்தையை இவ்விரு அர்த்தங்களிலும் பயன்படுத்தியுள்ளனர். உதாரணத்துக்கு புகாரியில் இடம் பெற்ற கீழ்க்காணும் ஹதீஸ்களைக் குறிப்பிடலாம்.

378, 651, 691, 688, 689, 691, 722, 732, 733, 734, 780, 782, 796, 805, 881, 883, 910, 912, 915, 929, 934, 1113, 1114, 1170, 1236, 3211, 3228, 4475, 5658, ஆகிய ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாம் என்ற சொல்லை தொழுகை நடத்துபவர் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.

இமாம் என்ற வார்த்தையை அதிபர் என்ற பொருள் தரும் வகையில் பின்வரும் ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

وبهذا الإسناد من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن يطع الأمير فقد أطاعني ومن يعص الأمير فقد عصاني وإنما الإمام جنة يقاتل من ورائه ويتقى به فإن أمر بتقوى الله وعدل فإن له بذلك أجرا وإن قال بغيره فإن عليه منه

இமாம் என்பவர் ஒரு கேடயமாவார்! அவருக்குப் பின்னால் நின்று மக்கள் போராடுவார்கள். அவரையே மக்கள் அரணாக ஆக்கிக் கொள்வார்கள். அவர் அல்லாஹ்வின் அச்சத்தை ஏவி, நீதமாக நடந்தால் அதற்குரிய கூலி அவருக்குக் கிடைத்து விடும். அதற்கு மாறானதை அவர் சொன்னால் அந்தப் பாவத்தில் அவருக்குப் பங்கு கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : புகாரி 2957

இமாம் என்பவர் கேடயமாக இருப்பார்; அவருக்குப் பின்னால் நின்று போர் புரிய வேண்டும் என்ற சொற்கள் ஆட்சியும் அதிகாரமும் உள்ளவர் தான் இமாம் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறுகிறது.

حدثنا محمد بن بشار بندار قال حدثنا يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (நியாயத் தீர்ப்பு) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள் நீதி மிக்க அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன், பள்ளிவாசல்களுடன் பினைக்கப்பட்ட இதயத்தை உடையவன், அல்லாஹ்வுக்காகவே நேசித்து அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் அழைத்த போது நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன் எனக் கூறியவன், தனது இடது கரத்துக்குத் தெரியாமல் வலது கரத்தால் தர்மம் செய்தவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோர் ஆவர்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : புகாரி 660, 1423, 6806

இந்த ஹதீஸில் நீதி மிக்க அரசன் என்பதற்கு இமாம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

893, 2358, 2409, 2558, 2751, 3449, 3606, 5188, 7084, 7138, 7212, ஆகிய ஹதீஸ்களிலும் இமாம் என்ற சொல்லை ஆட்சி செலுத்தும் தலைவர் என்ற பொருளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

திருக்குர்ஆனை ஆய்வு செய்கையில் இமாம் என்ற வார்த்தை வழிகாட்டி, பிரமுகர் என்ற அர்த்தத்திலும் இடம் பெற்றுள்ளது.

நிராகரிப்பவர்களின் இமாம்களுடன் போர் செய்யுங்கள்.

திருக்குர்ஆன் 9:12

(இப்ராஹீமே!) நான் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகின்றேன் என்று கூறினான்.

திருக்குர்ஆன் 2:124

இன்னும் நம் கட்டளைகளைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 21:73

மேலும் அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியினரிடமுமிருந்து எங்களுக்கு கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

திருக்குர்ஆன் 26:74

மேற்கண்ட வசனங்களிலும், இன்னும் இது போன்ற வசனங்களிலும் இமாம் என்ற வார்த்தை வழிகாட்டி, பிரமுகர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

சுல்த்தான்

மன்னருக்கு இமாம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது போல் சுல்த்தான் என்ற வார்த்தையும் மன்னரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

حدثنا مسدد حدثنا عبد الوارث عن الجعد عن أبي رجاء عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال من كره من أميره شيئا فليصبر فإنه من خرج من السلطان شبرا مات ميتة جاهلية

ஒருவர் தனது ஆட்சியாளரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் ஒருவர் சுல்த்தானை ஆட்சியாளரை விட்டு ஒரு ஜான் அளவு வெளியேறினால் அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 7053

இந்த ஹதீஸில் ஆட்சியாளர் என்பதற்கு சுல்த்தான் என்ற வாசகம் இடம் பெறுகின்றது.

மலிக்

மன்னரைக் குறிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலிக் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர்.

حدثنا سليمان بن داود الطيالسي حدثني داود بن إبراهيم الواسطي حدثني حبيب بن سالم عن النعمان بن بشير قال كنا قعودا في المسجد مع رسول الله صلى الله عليه وسلم وكان بشير رجلا يكف حديثه فجاء أبو ثعلبة الخشني فقال يا بشير بن سعد أتحفظ حديث رسول الله صلى الله عليه وسلم في الأمراء فقال حذيفة أنا أحفظ خطبته فجلس أبو ثعلبة فقال حذيفة قال رسول الله صلى الله عليه وسلم تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء الله أن يرفعها ثم تكون ملكا عاضا فيكون ما شاء الله أن يكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون ملكا جبرية فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة ثم سكت قال حبيب فلما قام عمر بن عبد العزيز وكان يزيد بن النعمان بن بشير في صحابته فكتبت إليه بهذا الحديث أذكره إياه فقلت له إني أرجو أن يكون أمير المؤمنين يعني عمر بعد الملك العاض والجبرية فأدخل كتابي على عمر بن عبد العزيز فسر به وأعجبه

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள்.

நூல் : அஹ்மத் 17680.

இந்த ஹதீஸில் மன்னராட்சி என்பதை மலிக் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமீருல் ஆம்மா - பொது அமீர்

மன்னரைக் குறிப்பிட அமீர் என்ற வார்த்தையுடன் ஆம்மா என்பதைச் சேர்த்து அமீர் ஆம்மா (பொது அமீர்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

حدثنا زهير بن حرب حدثنا عبد الصمد بن عبد الوارث حدثنا المستمر بن الريان حدثنا أبو نضرة عن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم لكل غادر لواء يوم القيامة يرفع له بقدر غدره ألا ولا غادر أعظم غدرا من أمير عامة

மறுமை நாளில் ஒவ்வொரு ஏமாற்றுக்காரனுக்கும் ஒரு கொடி உண்டு. அவன் ஏமாற்றிய அளவுக்கு அது அவனுக்கு உயர்த்திக் காட்டப்படும். அறிந்து கொள்ளுங்கள். (மோசடி செய்யும்) அமீருல் ஆம்மாவை (அரசனை) விட மிகப் பெரிய ஏமாற்றுக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் ஆட்சியாளருக்கு அமீருல் ஆம்மா எனக் கூறப்படுகிறது. அமீருல் ஆம்மா என்ற சொல்லுக்கு பொது அமீர் என்பது பொருள்.

சின்ன சின்ன அதிகாரம் படைத்தவர்கள் அமீர் என்றும் அனைத்து அமீர்களுக்கும் மேலே உள்ள அதிபர் - முழு அதிகாரம் படைத்தவர், அமீருல் ஆம்மா - பொது அமீர் என்றும் குறிப்பிடப்படுவர். இவருக்குக் கீழ் பல அமீர்கள் இருப்பார்கள்; ஆனால் இவருக்கு மேல் எந்த அமீரும் இருக்க மாட்டார் என்பதால் பொது அமீர் என்ற சொல்லால் இவர் குறிப்பிடப்படுகிறார்.

எனினும் இமாம், சுல்த்தான், அமீருல் ஆம்மா ஆகியவர்களுக்கும், கலீஃபாக்களுக்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது.

அதாவது கலீஃபாக்கள் நபித்துவ வழியில் ஆட்சி நடத்தக் கூடியவர்கள் என்பதாகும். இமாம், சுல்த்தான், மலிக், அமீருல் ஆம்மா ஆகிய சொற்களின் பொருள் பொதுவாக ஆட்சி செலுத்துபவர்கள் - அரசர்கள் என்பதாகும். நபிவழியில் ஆட்சி செய்யாவிட்டாலும் இந்தச் சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால் கலீஃபா என்ற சொல்லை நபிவழியில் ஆட்சி செலுத்துபவர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

அமீருல் முஃமினீன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் அமீர் என்று அழைக்கப்படவில்லை என்பதை முன்னர் பார்த்தோம். அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்த ஆட்சியாளர்களான உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரும் தம்மை அமீர் என்று கூறிக் கொள்ளவில்லை. மக்களும் அவர்களை அமீர் என்று அழைக்கவில்லை.

அவர்கள் அனைவரும் நபித்துவத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்தியதால் கலீஃபாக்கள் என்றே அழைக்கப்பட்டனர். உமர் (ரலி) அவர்களின் கால கட்டத்தில் தான் அமீருல் மூமினீன் (இறை நம்பிக்கையாளர்களின் தலைவர்) என்று அழைக்கும் மரபு ஆரம்பமாகியது.

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த போது அமீருல் மூமினீன் எனவும் அழைக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து ஆட்சி நடத்திய ஏனைய கலீஃபாக்களும் சில நேரங்களில் அமீருல் மூமினீன் என்று குறிப்பிடப்பட்டனர்.

அமீருல் மூமினீன் என்பதில் அமீர் என்ற ஒரு சொல்லும் மூமினீன் என்ற ஒரு சொல்லும் உள்ளன. எந்தக் கலீஃபாவும் அமீர் என்று மட்டும் குறிப்பிடப்படவில்லை. அனைத்து மூமின்களின் தலைவர் என்ற விரிந்த பொருளுடைய அமீருல் மூமினீன் என்ற சொற்றொடரால் தான் அவர்கள் அழைக்கப்பட்டனர் என்பது கவனிக்கத் தக்கது.

அனைத்து மூமின்களுக்குமான ஒரே தலைவர் என்ற கருத்துப்பட அமீருல் மூமினீன் என்ற சொற்றொடர் அமைந்துள்ளது. இதில் இருந்து இவருக்குக் கீழ் சிறு அதிகாரம் வழங்கப்பட்ட அமீர்கள் பலர் இருப்பார்கள் என்ற கருத்து அடங்கியுள்ளது. அதனால் தான் அமீர் என்று மட்டும் சொல்லப்படாமல் மூமின்கள் அனைவருக்குமான அதிபர் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர்.

அமீர்

தலைமைப் பதவி வகிப்பவர்களுக்குப் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்து நாம் இது வரை அறிந்தோம். இனி அமீர் என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதைப் பார்ப்போம்.

முதலில் இந்தச் சொல்லின் நேரடிப் பொருள் என்ன என்று பார்ப்போம். அம்ரு என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததே அமீர் எனும் சொல். அம்ர் என்றால் உத்தரவு போடுதல், கட்டளையிடுதல் என்பது பொருளாகும். அமீர் என்றால் கட்டளையிடுபவர், உத்தரவு இடுபவர் என்பது இதன் நேரடிப் பொருளாகும்.

ஒருவரிடம் ஒன்றைச் செய்யுமாறு சாதாரணமாகக் கூறுவதற்கும், கட்டளையிடுவதற்கும் உள்ள வித்தியாசம் நாம் அறிந்தது தான்.

ஒன்றைச் செய்யுமாறு நாம் ஒருவரிடம் கூறினால் அவர் விரும்பினால் அதைச் செய்வார். விரும்பாவிட்டால் செய்ய மறுப்பார். அவரை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

ஒருவர் கட்டளை இடுகிறார் என்றால் அதை நாம் செய்தே ஆக வேண்டும். செய்யத் தவறினால் அவர் நம்மைத் தண்டிப்பார். அதற்கான அதிகாரம் அவரிடம் இருக்கும். வேறு வார்த்தையில் இதைச் சொல்வதாக இருந்தால் யாரிடம் தண்டிக்கும் அதிகாரமும், கட்டாயப்படுத்தும் அதிகாரமும் உள்ளதோ அவர் தான் கட்டளை இட முடியும். எவ்வித அதிகாரமும் இல்லாதவர் கட்டளை பிறப்பிக்க முடியாது.

அமீர் என்று ஒருவரைப் பற்றி கூற வேண்டுமானால் அவர் அதிகாரம் உடையவராக இருக்க வேண்டும். தனது கட்டளையை மீறக் கூடியவரை அவர் தண்டிக்க நினைத்தால் தண்டிக்க சக்தி இருக்க வேண்டும்.

அரபு மொழியில் எத்தனையோ சொற்களின் பொருள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த பொருளில் இருந்து மாறிவிட்டன. ஆனால் அமீர் என்ற சொல் அன்று முதல் இன்று வரை அதிகாரம் உடையவர் என்ற பொருளில் தான் அரபு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

அமைச்சர்கள், ஆளுனர்கள் போன்றவர்களே அங்கே அமீர் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறார்கள்.

அமீர் என்ற சொல்லே நமக்குத் தேவையான விளக்கத்தை அளித்து விடுகிறது.

ஆனால் இன்று ஜமாஅத்தே இஸ்லாமி அமீர், ஜாக் அமீர், அஹ்லே ஹதீஸ் அமீர், இரகசிய இயக்க அமீர் ஆகியோருக்கு துரும்பு அளவுக்குக் கூட அதிகாரம் இல்லை. அவர்களுக்குக் கட்டுப்பட மறுத்தால் அவர்கள் நம்மைச் சிறையில் தள்ள முடியாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களே மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நிலையில் இருக்கிறார்கள். இதில் இருந்து அமீருக்குக் கட்டுப்படுதல் என்பதை வைத்து இவர்கள் மோசடி செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடம் இவர்களை அமீர் என்று அறிமுகப்படுத்தினால் கலெக்டர் என்று தான் புரிந்து கொள்வார்கள். மடாதிபதிகளைப் போன்ற தலைவர் என்று புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இவர்களில் பலர் அரபு நாடுகளிடம் நிதி உதவி கேட்டு கடிதம் எழுதுகிறார்கள். அந்தக் கடிதங்களைப் பார்த்தால் இவர்களின் சாயம் வெளுத்து விடும்.

உதாரணமாக அந்தக் கடிதங்களில் ஜாக் அமீர் என்று தங்களைக் குறிப்பிட மாட்டார்கள். ஜாக் ரயீஸ் என்றே குறிப்பிட்டிருப்பார்கள். அமீர் என்று கூறினால் அரபுகள் கைகொட்டி சிரிப்பார்கள் என்பதால் இப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள். அரபு அல்லாதவர்கள் மத்தியில் அமீர் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அரபு மக்களிடம் அமீர் என்று தங்களைக் கூறிக் கொள்ள மாட்டார்கள்.

அகராதி அடிப்படையில் மட்டும் இன்றி இஸ்லாத்தின் அடிப்படையிலும் அமீர் என்றால் அதிகாரம் உள்ளவர் தான்.

ஒரு நாட்டில் பல பகுதிகள் இருக்கும். அனைத்துப் பகுதியையும் ஒரே ஒருவர் நேரடியாக நிர்வாகம் செய்ய முடியாது. எனவே அதிபராக இருப்பவர் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரை அதிகாரியாக நியமித்து அவர் மூலம் தான் நிர்வாகம் செய்ய முடியும். இப்படி அதிபரால் சில பகுதிகளை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் தான் இஸ்லாத்தில் அமீர்கள் எனப்படுவார்கள்.

அது போல் ஒரு நாட்டில் ஏராளமான துறைகளை அதிபர் நிர்வாகம் செய்ய வேண்டும். அனைத்தையும் ஒரு அதிபரே செய்ய முடியாது. எனவே குறிப்பிட்ட பணியை அதிபரின் கட்டளைப்படி செய்து முடிக்கும் அதிகாரம் பெற்றவரும் அமீர் எனப்படுவார்.

எவ்வித அதிகாரமும் இல்லாமல் அதிபரால் நியமிக்கப்படாமல் பத்துப் பேர் கூடி ஒருவரை அமீர் என்று கூறிக் கொண்டால் அவர் இஸ்லாத்தில் அமீர் எனக் கூறப்பட மாட்டார்.

அதிபராக இருப்பவர் குறிப்பிட்ட பணிகளுக்காக அமீர் நியமித்தல்

حدثنا عبيد الله بن موسى عن إسرائيل عن أبي إسحاق عن البراء رضي الله عنه قال لقينا المشركين يومئذ وأجلس النبي صلى الله عليه وسلم جيشا من الرماة وأمر عليهم عبد الله وقال لا تبرحوا إن رأيتمونا ظهرنا عليهم فلا تبرحوا وإن رأيتموهم ظهروا علينا فلا تعينونا فلما لقينا هربوا حتى رأيت النساء يشتددن في الجبل رفعن عن سوقهن قد بدت خلاخلهن فأخذوا يقولون الغنيمة الغنيمة فقال عبد الله عهد إلي النبي صلى الله عليه وسلم أن لا تبرحوا فأبوا فلما أبوا صرف وجوههم فأصيب سبعون قتيلا وأشرف أبو سفيان فقال أفي القوم محمد فقال لا تجيبوه فقال أفي القوم ابن أبي قحافة قال لا تجيبوه فقال أفي القوم ابن الخطاب فقال إن هؤلاء قتلوا فلو كانوا أحياء لأجابوا فلم يملك عمر نفسه فقال كذبت يا عدو الله أبقى الله عليك ما يخزيك قال أبو سفيان اعل هبل فقال النبي صلى الله عليه وسلم أجيبوه قالوا ما نقول قال قولوا الله أعلى وأجل قال أبو سفيان لنا العزى ولا عزى لكم فقال النبي صلى الله عليه وسلم أجيبوه قالوا ما نقول قال قولوا الله مولانا ولا مولى لكم قال أبو سفيان يوم بيوم بدر والحرب سجال وتجدون مثلة لم آمر بها ولم تسؤني

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போர் நாளன்று அப்துல்லாஹ் பின் ஜூபைரை அம்பெய்யும் வீரர்களுக்கு அமீராக நியமித்தார்கள்.

அறிவிப்பவர் : பராஃ (ரலி)

நூல் : புகாரி 4044

الله عنهما قال أمر رسول الله صلى الله عليه وسلم في غزوة مؤتة زيد بن حارثة فقال رسول الله صلى الله عليه وسلم إن قتل زيد فجعفر وإن قتل جعفر فعبد الله بن رواحة قال عبد الله كنت فيهم في تلك الغزوة فالتمسنا جعفر بن أبي طالب فوجدناه في القتلى ووجدنا ما في جسده بضعا وتسعين من طعنة ورمية

முஅத்தா போரின் போது ஸைத் பின் ஹாரிஸாவை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அமீராக நியமித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 4261

حدثنا عبد الرحمن بن مهدي حدثنا الأسود بن شيبان عن خالد بن سمير قال قدم علينا عبد الله بن رباح الأنصاري وكانت الأنصار تفقهه فأتيته وهو في حواء شريك بن الأعور الشارع على المربد وقد اجتمع عليه ناس من الناس فقال حدثنا أبو قتادة الأنصاري فارس رسول الله صلى الله عليه وسلم قال بعث رسول الله صلى الله عليه وسلم جيش الأمراء فقال عليكم زيد بن حارثة فإن أصيب زيد فجعفر بن أبي طالب فإن أصيب جعفر فعبد الله بن رواحة الأنصاري فوثب جعفر فقال بأبي أنت وأمي يا رسول الله ما كنت أرهب أن تستعمل علي زيدا قال امضه فإنك لا تدري أي ذلك خير فانطلقوا فلبثوا ما شاء الله ثم إن رسول الله صلى الله عليه وسلم صعد المنبر وأمر أن ينادى الصلاة جامعة فقال رسول الله صلى الله عليه وسلم ناب خير أو بات خير أو ثاب خير شك عبد الرحمن ألا أخبركم عن جيشكم هذا الغازي إنهم انطلقوا فلقوا العدو فأصيب زيد شهيدا فاستغفروا له فاستغفر له الناس ثم أخذ اللواء جعفر بن أبي طالب فشد على القوم حتى قتل شهيدا أشهد له بالشهادة فاستغفروا له ثم أخذ اللواء عبد الله بن رواحة فأثبت قدميه حتى قتل شهيدا فاستغفروا له ثم أخذ اللواء خالد بن الوليد ولم يكن من الأمراء هو أمر نفسه ثم رفع رسول الله صلى الله عليه وسلم إصبعيه فقال اللهم هو سيف من سيوفك فانصره فمن يومئذ سمي خالد سيف الله ثم قال انفروا فأمدوا إخوانكم ولا يتخلفن أحد قال فنفر الناس في حر شديد مشاة وركبانا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (போருக்காக) ஒரு படையை அனுப்பினார்கள். அவர்களுக்கு ஸைத் பின் ஹாரிஸாவை அமீராக நியமித்தார்கள். ஸைத் கொல்லப்பட்டு விட்டால் உங்கள் அமீர் ஜஃபர் ஆவார். அவர் கொல்லப்பட்டுவிட்டால் உங்களுடைய அமீர் அப்துல்லாஹ் பின் ரவாஹா ஆவார் என்று கூறி ஸைத் பின் ஹாரிஸாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமீராக நியமித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)

நூல் : அஹ்மத் 21523

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا وكيع بن الجراح عن سفيان ح و حدثنا إسحق بن إبراهيم أخبرنا يحيى بن آدم حدثنا سفيان قال أملاه علينا إملاء ح و حدثني عبد الله بن هاشم واللفظ له حدثني عبد الرحمن يعني ابن مهدي حدثنا سفيان عن علقمة بن مرثد عن سليمان بن بريدة عن أبيه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو سرية أوصاه في خاصته بتقوى الله ومن معه من المسلمين خيرا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இராணுவத்திற்கு, அல்லது ஒரு சிறு படைக்கு அமீரை நியமித்தால் தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று அறிவுரை வழங்குவார்கள்.

அறிவிப்பவர் : சுலைமான் பின் புரைதா (ரலி)

நூல் : முஸ்லிம் 3261

حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال الذي حفظناه من عمرو بن دينار قال سمعت جابر بن عبد الله يقول بعثنا رسول الله صلى الله عليه وسلم ثلاث مائة راكب أميرنا أبو عبيدة بن الجراح نرصد عير قريش فأقمنا بالساحل نصف شهر فأصابنا جوع شديد حتى أكلنا الخبط فسمي ذلك الجيش جيش الخبط فألقى لنا البحر دابة يقال لها العنبر فأكلنا منه نصف شهر وادهنا من ودكه حتى ثابت إلينا أجسامنا فأخذ أبو عبيدة ضلعا من أضلاعه فنصبه فعمد إلى أطول رجل معه قال سفيان مرة ضلعا من أضلاعه فنصبه وأخذ رجلا وبعيرا فمر تحته قال جابر وكان رجل من القوم نحر ثلاث جزائر ثم نحر ثلاث جزائر ثم نحر ثلاث جزائر ثم إن أبا عبيدة نهاه وكان عمرو يقول أخبرنا أبو صالح أن قيس بن سعد قال لأبيه كنت في الجيش فجاعوا قال انحر قال نحرت قال ثم جاعوا قال انحر قال نحرت قال ثم جاعوا قال انحر قال نحرت ثم جاعوا قال انحر قال نهيت

குறைஷிகளின் ஒட்டகக் கூட்டத்தை எதிர்பார்த்துத் தாக்குவதற்காக எங்களை நபியவர்கள் அனுப்பினார்கள். எங்கள் படையில் முன்னூறு குதிரை வீரர்கள் இருந்தார்கள். எங்களுடைய அமீராக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் இருந்தார்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் :புகாரி 4361

حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن نافع عن نبيه بن وهب أن عمر بن عبيد الله أراد أن يزوج طلحة بن عمر بنت شيبة بن جبير فأرسل إلى أبان بن عثمان يحضر ذلك وهو أمير الحج فقال أبان سمعت عثمان بن عفان يقول قال رسول الله صلى الله عليه وسلم لا ينكح المحرم ولا ينكح ولا يخطب

உமர் பின் உபைதுல்லாஹ், ஷைபாவின் மகளை தல்ஹாவுக்கு நிக்காஹ் முடித்து வைக்க விரும்பினார். இதில் கலந்து கொள்வதற்காக அபான் பின் உஸ்மானுக்கு அழைப்பு அனுப்பியிருந்தார். அப்போது அவர் ஹஜ் விவகாரத் துறைக்கு அமீராக இருந்தார்.

அறிவிப்பவர் : நபீஹ் பின் வஹப்

நூல் :முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நல்லாட்சி நடத்திய கலீஃபாக்களும் குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிக்க அதிகாரம் கொடுத்து அமீர்களை நியமித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு அமீர்களை நியமித்தல்

حدثنا إسماعيل بن عبد الله قال حدثني إسماعيل بن إبراهيم بن عقبة عن موسى بن عقبة قال ابن شهاب حدثني عروة بن الزبير أن المسور بن مخرمة أخبره أن عمرو بن عوف وهو حليف لبني عامر بن لؤي كان شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم أخبره أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح إلى البحرين يأتي بجزيتها وكان رسول الله صلى الله عليه وسلم هو صالح أهل البحرين وأمر عليهم العلاء بن الحضرمي فقدم أبو عبيدة بمال من البحرين فسمعت الأنصار بقدومه فوافته صلاة الصبح مع رسول الله صلى الله عليه وسلم فلما انصرف تعرضوا له فتبسم رسول الله صلى الله عليه وسلم حين رآهم وقال أظنكم سمعتم بقدوم أبي عبيدة وأنه جاء بشيء قالوا أجل يا رسول الله قال فأبشروا وأملوا ما يسركم فوالله ما الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتلهيكم كما ألهتهم

நபியவர்கள் பஹ்ரைன் நாட்டு மக்களிடம் உடன்படிக்கை செய்து அந்நாட்டு மக்களுக்கு அலா பின் அல் ஹழ்ரமியை அமீராக நியமனம் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு பின் அல் அவ்ஃப் அல் அன்சாரி (ரலி)

நூல் : புகாரி 6425

حدثنا يحيى حدثنا وكيع عن شعبة عن سعيد بن أبي بردة عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم بعث معاذا وأبا موسى إلى اليمن قال يسرا ولا تعسرا وبشرا ولا تنفرا وتطاوعا ولا تختلفا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆதையும், அபூ மூஸாவையும் யமனுக்கு (அமீர்களாக) அனுப்பிய போது நீங்கள் இருவரும் நளினமாக நடங்கள்! கடுமையாக நடக்காதீர்கள். மக்களிடம் மகிழ்ச்சியை உருவாக்குங்கள். வெறுப்பை உருவாக்கி விடாதீர்கள். ஒருவர் இன்னொருவருக்கு இணங்கி நடங்கள்! கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ புர்தா (ரலி)

நூல் : புகாரி 3038

و حدثني سلمة بن شبيب حدثنا الحسن بن أعين حدثنا معقل عن زيد بن أبي أنيسة عن يحيى بن حصين عن جدته أم الحصين قال سمعتها تقول حججت مع رسول الله صلى الله عليه وسلم حجة الوداع فرأيته حين رمى جمرة العقبة وانصرف وهو على راحلته ومعه بلال وأسامة أحدهما يقود به راحلته والآخر رافع ثوبه على رأس رسول الله صلى الله عليه وسلم من الشمس قالت فقال رسول الله صلى الله عليه وسلم قولا كثيرا ثم سمعته يقول إن أمر عليكم عبد مجدع حسبتها قالت أسود يقودكم بكتاب الله تعالى فاسمعوا له وأطيعوا

காய்ந்த திராட்சையைப் போன்ற தலையைக் கொண்ட அபீஸீனியர் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் நீங்கள் செவிசாயுங்கள், கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري سمعت عروة بن الزبير يحدث عمر بن عبد العزيز في إمارته أخر المغيرة بن شعبة العصر وهو أمير الكوفة فدخل عليه أبو مسعود عقبة بن عمرو الأنصاري جد زيد بن حسن شهد بدرا فقال لقد علمت نزل جبريل فصلى فصلى رسول الله صلى الله عليه وسلم خمس صلوات ثم قال هكذا أمرت كذلك كان بشير بن أبي مسعود يحدث عن أبيه

கூஃபாவின் அமீராக முகீரா இருக்கும் போது நான் பள்ளிக்கு வந்தேன்......என அலீ பின் ரபீஆ அறிவிக்கின்றார்.

நூல் : புகாரி 4007

أخبرنا محمد بن المثنى قال حدثنا خالد وهو ابن الحارث قال حدثنا حميد عن الحسن قال قال ابن عباس وهو أمير البصرة في آخر الشهر أخرجوا زكاة صومكم فنظر الناس بعضهم إلى بعض فقال من هاهنا من أهل المدينة قوموا فعلموا إخوانكم فإنهم لا يعلمون أن هذه الزكاة فرضها رسول الله صلى الله عليه وسلم على كل ذكر وأنثى حر ومملوك صاعا من شعير أو تمر أو نصف صاع من قمح فقاموا خالفه هشام فقال عن محمد بن سيرين

பஸராவுடைய அமீராக இருக்கும் போது இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்தார்கள்......

அறிவிப்பவர் : ஹஸன்

நூல் : நஸாயீ 2461

قال حدثنا عبد الرازق أخبرنا داود بن قيس الصنعاني قال حدثني عبد الله بن وهب عن أبيه قال حدثني فنج قال كنت أعمل في الدينباذ وأعالج فيه فقدم يعلي بن أمية أميرا على اليمن وجاء معه رجال من أصحاب النبي صلى الله عليه وسلم فجاءني رجل ممن قدم معه وأنا في الزرع أصرف الماء في الزرع ومعه في كمه جوز فجلس على ساقية من الماء وهو يكسر من ذلك الجوز ويأكل ثم أشار إلى فنج فقال يا فارسي هلم قال فدنوت منه فقال الرجل لفنج أتضمن لي غرس هذا الجوز على الماء فقال له فنج ما ينفعني ذلك فقال الرجل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بأذني هاتين من نصب شجرة فصبر على حفظها والقيام عليها حتى تثمر كان له في كل شيء يصاب من ثمرتها صدقة عند الله عز وجل فقال فنج أنت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم قال نعم قال فنج فأنا أضمنها قال فمنها جوز الدينباذ

ஏமனுக்கு அமீராக யஃலா பின் உமையா அவர்கள் வருகை தந்தார்கள். அவருடன் நபித் தோழர்களில் முக்கியமானவர்களும் வந்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வஹப்

நூல் :அஹ்மத் 15991

حدثنا شيبان بن فروخ حدثنا سليمان بن المغيرة حدثنا حميد بن هلال عن خالد بن عمير العدوي قال خطبنا عتبة بن غزوان فحمد الله وأثنى عليه ثم قال أما بعد فإن الدنيا قد آذنت بصرم وولت حذاء ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يتصابها صاحبها وإنكم منتقلون منها إلى دار لا زوال لها فانتقلوا بخير ما بحضرتكم فإنه قد ذكر لنا أن الحجر يلقى من شفة جهنم فيهوي فيها سبعين عاما لا يدرك لها قعرا و والله لتملأن أفعجبتم ولقد ذكر لنا أن ما بين مصراعين من مصاريع الجنة مسيرة أربعين سنة وليأتين عليها يوم وهو كظيظ من الزحام ولقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم ما لنا طعام إلا ورق الشجر حتى قرحت أشداقنا فالتقطت بردة فشققتها بيني وبين سعد بن مالك فاتزرت بنصفها واتزر سعد بنصفها فما أصبح اليوم منا أحد إلا أصبح أميرا على مصر من الأمصار وإني أعوذ بالله أن أكون في نفسي عظيما وعند الله صغيرا وإنها لم تكن نبوة قط إلا تناسخت حتى يكون آخر عاقبتها ملكا فستخبرون وتجربون الأمراء بعدنا و حدثني إسحق بن عمر بن سليط حدثنا سليمان بن المغيرة حدثنا حميد بن هلال عن خالد بن عمير وقد أدرك الجاهلية قال خطب عتبة بن غزوان وكان أميرا على البصرة فذكر نحو حديث شيبان

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (இஸ்லாத்தின் துவக்க காலத்தில்) இருந்த ஏழு பேரில் நானும் ஒருவன். எங்களுக்கு இலை, தழைகளைத் தவிர வேறு உணவு கிடையாது. இதனால் எங்கள் வாய்கள் புண்ணாகி விட்டன. நான் ஒரு போர்வையை எடுத்து எனக்கு ஒரு துண்டு, ஸஅதுக்கு ஒரு துண்டு என இரண்டாகக் கிழித்தேன். பாதியை அவர் அணிந்தார். மீதிப் பாதியை நான் அணிந்தேன். ஆனால் இன்று எங்களில் யாரும் நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தில் அமீர் பொறுப்பை வகிக்காமல் இல்லை.

அறிவிப்பவர் : உத்பா பின் கஸ்வான் (ரலி)

நூல் : முஸ்லிம்

حدثنا شيبان بن فروخ حدثنا سليمان بن المغيرة حدثنا حميد بن هلال عن خالد بن عمير العدوي قال خطبنا عتبة بن غزوان فحمد الله وأثنى عليه ثم قال أما بعد فإن الدنيا قد آذنت بصرم وولت حذاء ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يتصابها صاحبها وإنكم منتقلون منها إلى دار لا زوال لها فانتقلوا بخير ما بحضرتكم فإنه قد ذكر لنا أن الحجر يلقى من شفة جهنم فيهوي فيها سبعين عاما لا يدرك لها قعرا و والله لتملأن أفعجبتم ولقد ذكر لنا أن ما بين مصراعين من مصاريع الجنة مسيرة أربعين سنة وليأتين عليها يوم وهو كظيظ من الزحام ولقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم ما لنا طعام إلا ورق الشجر حتى قرحت أشداقنا فالتقطت بردة فشققتها بيني وبين سعد بن مالك فاتزرت بنصفها واتزر سعد بنصفها فما أصبح اليوم منا أحد إلا أصبح أميرا على مصر من الأمصار وإني أعوذ بالله أن أكون في نفسي عظيما وعند الله صغيرا وإنها لم تكن نبوة قط إلا تناسخت حتى يكون آخر عاقبتها ملكا فستخبرون وتجربون الأمراء بعدنا و حدثني إسحق بن عمر بن سليط حدثنا سليمان بن المغيرة حدثنا حميد بن هلال عن خالد بن عمير وقد أدرك الجاهلية قال خطب عتبة بن غزوان وكان أميرا على البصرة فذكر نحو حديث شيبان

முஆவியா (ரலி) ஸஅத் அவர்களை அமீராக நியமித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அமீர்கள் நியமிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.

இதிலிருந்து தெரிவதென்ன?

இஸ்லாமிய ஆட்சி முறையில் ஒரே ஒரு தலைவர் இருப்பார். அவர் கலீஃபா அல்லது அமீருல் மூமினீன் என்று கூறப்படுவார். அவர் பல பணிகளுக்கும், பகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமிப்பார். அவர்களே அமீர்கள் எனப்பட்டனர் என்பதை மேலே நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளிலிருந்து அறியலாம்.

ஒருவர் அமீராக இருக்க வேண்டுமானால் அவருக்கு மேலே ஒரு இமாம், கலீஃபா, சுல்த்தான், அமீருல் மூமினீன் இருந்தாக வேண்டும். அவர்களால் அவர் நியமிக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகமும் கூட இதை விளக்குகின்றது. அமீராக ஆக்கினார்கள், அமீராக நியமித்தார்கள் போன்ற வார்த்தைகள் தான் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர அவர்களாக அமீராக ஆனார்கள் என்று கூறப்படவில்லை. அல்லது மக்களால் அமீராக ஆக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படவில்லை.

மக்கள் ஒரேயொரு தலைவரை, கலீஃபாவை மட்டும் தான் தேர்வு செய்வார்கள். அவர் தான் எல்லாப் பகுதிகளுக்கும் அமீரை நியமிப்பார்.

எனவே நாம் ஒருவரை அமீர் என்று கூறுவதானால் அவரை அமீராக நியமித்த இமாம் ஒருவர் இருந்தாக வேண்டும். எவ்வித அதிகாரமும் இல்லாமல் தானாக ஒருவர் அமீராகலாம், அல்லது மக்களில் சிலர் ஒருவரை அமீராக்கலாம் என்று கூறுவோர் அதற்கான ஒரே ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாது. நாம் தேடிய வரை அப்படி ஒரு ஆதாரத்தைக் காண முடியவில்லை.

இந்த விளக்கத்தை நாம் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை.

புகாரி இமாம் அவர்கள் இமாமுக்குக் கட்டுப்படுதல் என்ற தலைப்பில் ஒரு பாடத்தை புகாரியில் இடம் பெறச் செய்துள்ளார். ஆனால் அப்பாடத்தில் அவர் எடுத்துக் காட்டும் ஹதீஸ்கள் அமீருக்குக் கட்டுப்படுவதைத் தான் கூறுகின்றன. இமாமுக்கு கட்டுப்படுவதைப் பற்றி எந்த ஹதீஸையும் அப்பாடத்தில் அவர் கூறவில்லை.

இதற்கு விளக்கம் கூறும் போது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்:

இப்பாடத்தில் இமாமுக்குக் கட்டுப்படுதல் பற்றி ஒரு ஹதீஸையும் கூறாமல் இமாமுக்குக் கட்டுப்படுதல் என்று புகாரி தலைப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் அமீர் என்பவர் இமாமால் நியமிக்கப்பட்டவர் தான். எனவே அமீருக்குக் கட்டுப்படுவது உண்மையில் இமாமுக்குக் கட்டுப்படுவது தான்'' இவ்வாறு இப்னு ஹஜர் அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

அமீர் என்பவர் இமாமால் நியமிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை இவ்விளக்கம் உறுதி செய்கிறது. இது வரை நாம் பார்த்த செய்திகளிலிருந்து எல்லா அதிகாரங்களும் படைத்த ஒரு ஆட்சியாளரால் ஒரு குறிப்பிட்ட பகுதியை நிர்வகிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட பணியைப் பூர்த்தி செய்ய நியமிக்கப்பட்டவர்கள் தான் அமீர்கள். எனவே அமீர் என்பவர் குறுகிய அதிகாரம் படைத்த அதிகாரி என்பது தெளிவாகின்றது.

அதிகாரம் இல்லாமல் இமாமோ, அமீரோ இருக்க முடியாது.

ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் இமாமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ, பணிக்கோ நியமிக்கப்பட்ட அமீராக இருந்தாலும் சரி தம்முடைய தலைமையின் கீழ் உள்ளவர்கள் மீது அதிகாரம் செலுத்துபவராக அவர்கள் இருக்க வேண்டும். தனது உத்தரவுக்குக் கட்டுப்பட மறுப்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் உட்பட எல்லா அதிகாரங்களையும் உடையவராக இருக்க வேண்டும்.

இதற்கான ஆதாரங்கள் இன்னும் உள்ளன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.

حدثنا عبدان أخبرنا عبد الله عن يونس عن الزهري أخبرني أبو سلمة بن عبد الرحمن أنه سمع أبا هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني

யார் எனக்குக் கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யார் எனக்கு மாறு செய்வாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். யார் எனது அமீருக்கு கட்டுப்பட்டாரோ அவர் எனக்குக் கட்டுப்பட்டார். யார் என்னுடைய அமீருக்கு மாறு செய்கிறாரோ அவர் எனக்கு மாறு செய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 7147

ஒருவர் அமீருக்கு மாறு செய்தால் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தார் என்று மக்கள் பரவலாகக் கூறி வருகின்றனர். ஆனால் இந்த ஹதீஸில் என்னுடைய அமீருக்கு யார் கட்டுப்பட்டாரோ என்ற வாசகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

என்னுடைய அமீர் என்றால் என்னால் நியமிக்கப்பட்ட அமீர் என்பது கருத்தாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை அமீராக நியமித்தால் அவரை எதிர்ப்பது நியமித்தவரையே எதிர்ப்பதாகும் என்ற கருத்து தான் இதில் அடங்கியுள்ளது. அது அறிவுக்கும் பொருத்தமாக உள்ளது.

நாலு பேர் கூடிக் கொண்டு ஒருவரை அமீர் என்று இவர்களாக நியமித்துக் கொண்டு அவருக்குக் கட்டுப்படுவது அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதற்குச் சமம் என்று கூறினால் அது மாபெரும் மோசடியாகும்.

எவனோ ஒருவனுக்குக் கட்டுப்படுவது ஒரு காலத்திலும் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதாக ஆகவே ஆகாது.

இன்றைக்குக் கூட ஒரு அதிபர் சில பகுதிகளை நிர்வாகம் செய்ய ஒரு அமீரை நியமித்தால் அவருக்குக் கட்டுப்படுவது அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதாக ஆகாது. மாறாக எந்த அரசாங்கம் அவரை நியமித்ததோ அந்த அரசாங்கத்துக்கும் அதன் அதிபருக்கும் கட்டுப்படுவதாகத் தான் அது அமையும்.

என்னுடைய அமீருக்கு என்ற வாசகத்தில் இருந்து இதை நாம் சிந்தித்து விளங்கலாம்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள். (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் அதை அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இது தான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும்.

திருக்குர்ஆன் 4:59

அமீருக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்தும் அல்லாஹ்வின் கட்டளை இது. அமீருக்குக் கட்டுப்படுங்கள் என்று இறைவன் கூறாமல் உலில் அம்ரி என்று கூறுகிறான்.

உலு என்றால் உடையவர்கள் என்று பொருள்.

அம்ர் என்றால் அதிகாரம் என்று பொருள்.

இரண்டையும் சேர்த்து உலுல் அம்ர் எனக் கூறினால் அதிகாரம் உடையவர் என்பது பொருளாகும்.

ஆட்சி, அதிகாரம் உள்ளவர்களுக்குக் கட்டுப்படுவதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

அதிகாரம் உடையவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது அதிகாரம் இல்லாதவர்கள் தங்களுக்கு மக்களைக் கட்டுப்பட வைக்க இவ்வசனத்தைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் செய்யப்படும் மிகப் பெரும் மோசடியாகும்.

அகராதியின் பொருளின் படியும், அல்லாஹ் பயன்படுத்திய வாசக அமைப்பின் படியும் அமீர் என்பவர் ஆட்சி அதிகாரம் உடையவரே! அவ்வாறில்லாதவர் ஒரு போதும் அமீராக மாட்டார்.

அமீரின் அதிகாரங்கள்

ஸகாத்தை எடுத்துக் கொள்ளும் அதிகாரம்.

حدثنا أبو عاصم الضحاك بن مخلد عن زكرياء بن إسحاق عن يحيى بن عبد الله بن صيفي عن أبي معبد عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا رضي الله عنه إلى اليمن فقال ادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله فإن هم أطاعوا لذلك فأعلمهم أن الله قد افترض عليهم خمس صلوات في كل يوم وليلة فإن هم أطاعوا لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم

நபியவர்கள் ஏமனுக்கு (ஆளுனராக) முஆதை அனுப்பி வைக்கும் போது வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று ஒப்புக் கொள்வதற்கு அம்மக்களை அழையுங்கள். அதற்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால், அல்லாஹ் ஒவ்வொரு இரவு, பகலிலும் ஐந்து நேரத் தொழுகையை அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் அறிவித்து விடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுடைய பொருளில் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்; அந்த ஸக்காத்தை அவர்களிடம் உள்ள செல்வந்தர்களிடமிருந்து எடுத்து அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்குங்கள் என்று அவர்களிடம் தெரிவித்து விடுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் :புகாரி 1395

இந்த ஹதீஸில் ஸகாத்தை எடுத்து என்ற வாசகம் இடம் பெறுகின்றது. ஸக்காத்தை எடுப்பதை அதிகாரம் இல்லாமல் செய்ய முடியாது. எனவே அமீராக இருப்பவர் ஒரு பகுதிக்காக நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர் ஸக்காத்தை வசூலிக்கும் அதிகாரத்தை உடையவராக இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஸக்காத் தர மறுத்தவர்களிடம் போர் செய்யும் அதிகாரம்

حدثنا أبو اليمان الحكم بن نافع أخبرنا شعيب بن أبي حمزة عن الزهري حدثنا عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود أن أبا هريرة رضي الله عنه قال لما توفي رسول الله صلى الله عليه وسلم وكان أبو بكر رضي الله عنه وكفر من كفر من العرب فقال عمر رضي الله عنه كيف تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فمن قالها فقد عصم مني ماله ونفسه إلا بحقه وحسابه على الله فقال والله لأقاتلن من فرق بين الصلاة والزكاة فإن الزكاة حق المال والله لو منعوني عناقا كانوا يؤدونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها قال عمر رضي الله عنه فوالله ما هو إلا أن قد شرح الله صدر أبي بكر رضي الله عنه فعرفت أنه الحق

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரனித்து அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சி வந்ததும் அரபிகளில் சிலர் (ஸக்காத்தை மறுத்ததின் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் செய்ய அபூ பக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் தனது உயிரையும், உடைமையையும் என்னிடம் இருந்து காத்துக் கொண்டார். தண்டனைக்குரிய குற்றங்களைப் புரிந்தவரைத் தவிர! அவரது விசாரனை அல்லாஹ்விடமே உள்ளது'' என நபியவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் இந்த மக்கள் மீது எப்படிப் போர் தொடுக்க முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரை நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும், ஸக்காத்தையும் பிரித்துப் பார்ப்பவர்களுடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸக்காத் செல்வந்தர்களுக்குரிய கடமையாகும். அல்லாஹ் மீது ஆணையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஒரு ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதைத் தர மறுத்ததற்காக நான் அவர்களுடன் போர் தொடுப்பேன்'' என்று கூறினார்கள். இது பற்றி உமர் அவர்கள் கூறும் போது அல்லாஹ் மீது ஆணையாக அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமானதாக ஆக்கி இருப்பதால் தான் அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரி என்பதை நான் விளங்கிக் கொண்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

ஆதாரம் : புகாரி 1400

ஸக்காத்தை எடுக்க வேண்டும் என்ற முந்தைய ஹதீஸூக்கு இந்த ஹதீஸ் விளக்கமாக அமைந்துள்ளது. மேலும் ஸக்காத்தைத் தர மறுப்பவர்களிடம் போர் செய்து, ஸக்காத்தை வசூலிக்கும் அதிகாரம் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. இந்த அதிகாரம் இமாமுக்கும் இமாமால் நியமிக்கப்படும் அமீருக்கும் இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

வரி வசூல் செய்யும் அதிகாரம்.

حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال حدثني عروة بن الزبير عن المسور بن مخرمة أنه أخبره أن عمرو بن عوف الأنصاري وهو حليف لبني عامر بن لؤي وكان شهد بدرا أخبره أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح إلى البحرين يأتي بجزيتها وكان رسول الله صلى الله عليه وسلم هو صالح أهل البحرين وأمر عليهم العلاء بن الحضرمي فقدم أبو عبيدة بمال من البحرين فسمعت الأنصار بقدوم أبي عبيدة فوافت صلاة الصبح مع النبي صلى الله عليه وسلم فلما صلى بهم الفجر انصرف فتعرضوا له فتبسم رسول الله صلى الله عليه وسلم حين رآهم وقال أظنكم قد سمعتم أن أبا عبيدة قد جاء بشيء قالوا أجل يا رسول الله قال فأبشروا وأملوا ما يسركم فوالله لا الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتهلككم كما أهلكتهم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் அல் ஜாராஹை பஹ்ரைனில் ஜிஸ்யா (வரி) வசூலித்து வர அனுப்பினார்கள். நபியவர்கள் பஹ்ரைன் நாட்டவரிடம் உடன்படிக்கை செய்து அவர்களுக்கு அலா பின் அல்ஹழ்ரமியை அமீராக நியமித்தார்கள். அபூ உபைதா பஹ்ரைனிலிருந்து அந்தப் பொருளுடன் வந்தார். அபூ உபைதா பொருளுடன் வந்திருக்கிறார் என அன்ஸாரிகள் கேள்விப்பட்டனர்.....

அறிவிப்பவர் : அம்ர் பின் அவ்ஃப் (ரலி)

நூல் :புகாரி 3158

கைது செய்யும் அதிகாரம்.

حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث قال حدثنا سعيد بن أبي سعيد سمع أبا هريرة قال بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد فجاءت برجل من بني حنيفة يقال له ثمامة بن أثال فربطوه بسارية من سواري المسجد فخرج إليه النبي صلى الله عليه وسلم فقال أطلقوا ثمامة فانطلق إلى نخل قريب من المسجد فاغتسل ثم دخل المسجد فقال أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله

நஜ்தை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குதிரைப் படையை அனுப்பினார்கள். அந்தப் படையினர், பனூ ஹனீப் கூட்டத்தைச் சேர்ந்த சுமாமா பின் அஸால் என்பவரைக் கைது செய்து அழைத்து வந்தனர். பள்ளியின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டிருந்தனர். அவரை நோக்கி நபியவர்கள் வந்து சுமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்றார்கள். பள்ளிக்குப் பக்கத்திலுள்ள பேரீச்சைத் தோப்பை நோக்கிப் போய் அவர் குளித்து விட்டு பள்ளிக்கு வந்தார். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் யாருமில்லை. நிச்சயமாக முஹம்மதவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்' என்று சான்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : புகாரி 462

அதிகார துஷ்பிரயோகம்.

و حدثني محمد بن سهل بن عسكر التميمي حدثنا يحيى بن حسان ح و حدثنا عبد الله بن عبد الرحمن الدارمي أخبرنا يحيى وهو ابن حسان حدثنا معاوية يعني ابن سلام حدثنا زيد بن سلام عن أبي سلام قال قال حذيفة بن اليمان قلت يا رسول الله إنا كنا بشر فجاء الله بخير فنحن فيه فهل من وراء هذا الخير شر قال نعم قلت هل وراء ذلك الشر خير قال نعم قلت فهل وراء ذلك الخير شر قال نعم قلت كيف قال يكون بعدي أئمة لا يهتدون بهداي ولا يستنون بسنتي وسيقوم فيهم رجال قلوبهم قلوب الشياطين في جثمان إنس قال قلت كيف أصنع يا رسول الله إن أدركت ذلك قال تسمع وتطيع للأمير وإن ضرب ظهرك وأخذ مالك فاسمع وأطع

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தீமையில் இருந்தோம். நாங்கள் எந்த நன்மையில் இருக்கிறோமோ (இஸ்லாம்) அந்த நன்மையில் அல்லாஹ் எங்களைக் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை உண்டா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அது எப்படி இருக்கும் என்று வினவினேன். அதற்கு அவர்கள் எனது நேர்வழியைக் கொண்டு திருந்தாத, எனது நடைமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்களில் மனித உடல்களையும், ஷைத்தானின் உள்ளங்களையும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செலுத்துவார்கள் எனப் பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே அந்த நிலையை நான் அடைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் அந்த அமீர் உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் நீ அவருக்குச் செவி சாய்த்துக் கட்டுப்படு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹூதைஃபா (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸ் அமீருக்குக் கட்டுப்படுவதைச் சொன்னாலும் அந்த அமீரின் தன்மைகளைப் பற்றி நபியவர்கள் கூறும் செய்தி குறிப்பிடத்தக்கது. உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் சரியே என்ற வாசகத்தில் இருந்து அமீர் என்றால் எந்தளவுக்கு அதிகாரம் படைத்தவர் என்பது தெளிவாகின்றது.

حدثنا محمد بن المثنى ومحمد بن بشار قالا حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن سماك بن حرب عن علقمة بن وائل الحضرمي عن أبيه قال سأل سلمة بن يزيد الجعفي رسول الله صلى الله عليه وسلم فقال يا نبي الله أرأيت إن قامت علينا أمراء يسألونا حقهم ويمنعونا حقنا فما تأمرنا فأعرض عنه ثم سأله فأعرض عنه ثم سأله في الثانية أو في الثالثة فجذبه الأشعث بن قيس وقال اسمعوا وأطيعوا فإنما عليهم ما حملوا وعليكم ما حملتم و حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا شبابة حدثنا شعبة عن سماك بهذا الإسناد مثله وقال فجذبه الأشعث بن قيس فقال رسول الله صلى الله عليه وسلم اسمعوا وأطيعوا فإنما عليهم ما حملوا وعليكم ما حملتم

ஸலமா பின் யஸீத் அல் ஜஃபி என்பவர் நபியவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார். அப்போது அவர் தங்கள் உரிமைகளை (வரிகளை) பெற்று விட்டு எங்களுக்குரிய உரிமைகளை (குடிமக்களுக்குச் செய்ய வேண்டிய வசதிகளை) மறுக்கின்ற அமீர்கள் எங்களை ஆளுகின்ற நிலை வரும் போது நீங்கள் எங்களுக்கு என்ன உத்தரவிட நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கேள்வியை அலட்சியம் செய்தார்கள். மீண்டும் அவர் கேட்கவே நபியவர்கள் அவரை அலட்சியம் செய்தார்கள். இரண்டாவதோ, அல்லது மூன்றாவதோ அவர் கேட்டதும் அவரை அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் இழுத்துச் சென்று செவிசாயுங்கள், கட்டுப்படுங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது அவர்களுக்கு. உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களுக்கு என்று அவரிடம் கூறினார்கள். இவ்வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அந்த மனிதரிடம் கூறியதாக மற்றொரு அறிவிப்பில் உள்ளது.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹழ்ரமி (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸ் வரி விதித்துவிட்டு வசதிகள் செய்யாத அமீரைப் பற்றியதாகும். வரிகள் விதிப்பதும், வசதிகள் செய்து கொடுப்பதும் அமீரின் அதிகாரங்களில் உள்ளதாகும். அதே நேரம் வரியை மட்டும் வாங்கி விட்டு வசதிகளை மறுப்பதும் குற்றம் என்றாலும் அதைச் செய்யும் அதிகாரம் அமீரிடம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம்.

حدثنا محمد بن خالد الذهلي حدثنا الأنصاري محمد بن عبد الله قال حدثني أبي عن ثمامة عن أنس بن مالك قال إن قيس بن سعد كان يكون بين يدي النبي صلى الله عليه وسلم بمنزلة صاحب الشرط من الأمير

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கைஸ் பின் ஸஅத் (ரலி) அவர்கள் ஓர் அமீரிடம் பணியாற்றும் இரானுவ அமைச்சரின் பதவியை வகித்தார்கள். அதாவது நபியவர்களின் கட்டளைகளில் கவனம் மேற்கொண்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் :புகாரி 7155

மேற்கண்ட ஹதீஸ் ஒரு இமாமோ அல்லது அமீரோ தேவையான பதவிகளை உருவாக்கி அதற்கென அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றது.

போர்ப் படையை அனுப்பும் அதிகாரம்.

حدثنا خالد بن مخلد حدثنا سليمان قال حدثني عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما قال بعث النبي صلى الله عليه وسلم بعثا وأمر عليهم أسامة بن زيد فطعن بعض الناس في إمارته فقال النبي صلى الله عليه وسلم أن تطعنوا في إمارته فقد كنتم تطعنون في إمارة أبيه من قبل وايم الله إن كان لخليقا للإمارة وإن كان لمن أحب الناس إلي وإن هذا لمن أحب الناس إلي بعده

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படையை அனுப்பினார்கள். அந்தப் படைக்கு உஸாமா பின் ஸைதை அமீராக நியமித்தார்கள். உஸாமாவை அமீராக ஆக்கியதை சிலர் குறை கண்டனர். (இதைக் கேள்விப்பட்ட) நபியவர்கள் இவருடைய தலைமைப் பதவியில் நீங்கள் குறை கண்டீர்கள் என்றால், இதற்கு முன் இவருடைய தந்தையுடைய தலைமையிலும் நீங்கள் குறை கண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவராக இருந்தார். மக்களிலேயே எனக்கு மிக விருப்பமானவராக இருந்தார். அவருக்குப் பின் இவர் (உஸாமா) எனக்கு மிக நேசத்திற்குரியவராக இருக்கிறார் என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 3730

وبهذا الإسناد من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن يطع الأمير فقد أطاعني ومن يعص الأمير فقد عصاني وإنما الإمام جنة يقاتل من ورائه ويتقى به فإن أمر بتقوى الله وعدل فإن له بذلك أجرا وإن قال بغيره فإن عليه منه

இமாம் என்பவர் ஒரு கேடயமாவார்! அவருக்குப் பின் நின்று மக்கள் போராடுவார்கள். அவரையே மக்கள் அரணாக ஆக்கிக் கொள்வார்கள். அவர் அல்லாஹ்வின் அச்சத்தை ஏவி நீதமாக நடந்தால் அதற்குரிய கூலி அவருக்குக் கிடைத்து விடும். அதற்கு மாறானதை அவர் சொன்னால் அந்தப் பாவத்திலிருந்து அவருக்குப் பங்கு கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : புகாரி2957

حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال الذي حفظناه من عمرو بن دينار قال سمعت جابر بن عبد الله يقول بعثنا رسول الله صلى الله عليه وسلم ثلاث مائة راكب أميرنا أبو عبيدة بن الجراح نرصد عير قريش فأقمنا بالساحل نصف شهر فأصابنا جوع شديد حتى أكلنا الخبط فسمي ذلك الجيش جيش الخبط فألقى لنا البحر دابة يقال لها العنبر فأكلنا منه نصف شهر وادهنا من ودكه حتى ثابت إلينا أجسامنا فأخذ أبو عبيدة ضلعا من أضلاعه فنصبه فعمد إلى أطول رجل معه قال سفيان مرة ضلعا من أضلاعه فنصبه وأخذ رجلا وبعيرا فمر تحته قال جابر وكان رجل من القوم نحر ثلاث جزائر ثم نحر ثلاث جزائر ثم نحر ثلاث جزائر ثم إن أبا عبيدة نهاه وكان عمرو يقول أخبرنا أبو صالح أن قيس بن سعد قال لأبيه كنت في الجيش فجاعوا قال انحر قال نحرت قال ثم جاعوا قال انحر قال نحرت قال ثم جاعوا قال انحر قال نحرت ثم جاعوا قال انحر قال نهيت

குரைஷிகளுக்குரிய ஒட்டகக் கூட்டத்தை எதிர்பார்த்துத் தாக்குவதற்கு எங்களை நபியவர்கள் அனுப்பினார்கள். எங்களின் படையில் 300 குதிரை வீரர்கள் இருந்தார்கள். எங்களுடைய அமீராக அபூ உபைதா பின் ஜர்ராஹ் இருந்தார்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 4361

மேற்கண்ட ஹதீஸ்களின் படி ஒரு இமாம் அல்லது அமீர் என்பவர் போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தையும், போருக்குப் படையை அனுப்பும் அதிகாரத்தையும் பெற்றவராக இருக்க வேண்டும். இன்னும் படையை நடத்திச் சென்று போரிடும் அதிகாரத்தையும், சக்தியையும் பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமன்றி களத்தில் இறங்கி முன்னின்று போரிட்டு மக்களைக் காக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன.

தீர்ப்பு வழங்கும் அதிகாரம்.

حدثنا قتيبة بن سعيد حدثنا ليث عن ابن شهاب عن عروة عن عائشة رضي الله عنها أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت فقالوا ومن يكلم فيها رسول الله صلى الله عليه وسلم فقالوا ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم فكلمه أسامة فقال رسول الله صلى الله عليه وسلم أتشفع في حد من حدود الله ثم قام فاختطب ثم قال إنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد وايم الله لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها

மக்ஸூமி குலத்துப் பெண்னொருத்தி (பாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாகினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் பேசுவது யார்? என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் அவர்களைத் தவிர இதற்கு வேறு யாருக்குத் துணிவு வரும் என்று கூறினார்கள். உஸாமா அவர்கள் அவள் விஷயமாக நபியிடம் பேசினார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனை விஷயத்திலா நீ பரிந்துரை செய்கிறாய் என்று (கோபத்துடன்) கேட்டு விட்டு பிறகு எழுந்து உரை நிகழ்த்தினார்கள். பிறகு உங்களுக்கு முன் சென்றவர்கள் அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடி விட்டால் அவனை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களில் பலவீனமான(பிரிவைச் சேர்ந்த)வன் திருடினால் அவனுக்குத் தண்டனை அளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஹம்மதின் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 3475

இந்த ஹதீஸில் ஆட்சியாளர் என்பவர் எந்த அளவுக்கு நேர்மையாளராக இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்ற அதே வேளையில் தீர்ப்பு சொல்லக் கூடிய அதிகாரமும் அவருக்கு இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

தண்டனை வழங்கும் அதிகாரம்.

و حدثني محمد بن العلاء الهمداني حدثنا يحيى بن يعلى وهو ابن الحارث المحاربي عن غيلان وهو ابن جامع المحاربي عن علقمة بن مرثد عن سليمان بن بريدة عن أبيه قال جاء ماعز بن مالك إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله طهرني فقال ويحك ارجع فاستغفر الله وتب إليه قال فرجع غير بعيد ثم جاء فقال يا رسول الله طهرني فقال رسول الله صلى الله عليه وسلم ويحك ارجع فاستغفر الله وتب إليه قال فرجع غير بعيد ثم جاء فقال يا رسول الله طهرني فقال النبي صلى الله عليه وسلم مثل ذلك حتى إذا كانت الرابعة قال له رسول الله فيم أطهرك فقال من الزنى فسأل رسول الله صلى الله عليه وسلم أبه جنون فأخبر أنه ليس بمجنون فقال أشرب خمرا فقام رجل فاستنكهه فلم يجد منه ريح خمر قال فقال رسول الله صلى الله عليه وسلم أزنيت فقال نعم فأمر به فرجم فكان الناس فيه فرقتين قائل يقول لقد هلك لقد أحاطت به خطيئته وقائل يقول ما توبة أفضل من توبة ماعز أنه جاء إلى النبي صلى الله عليه وسلم فوضع يده في يده ثم قال اقتلني بالحجارة قال فلبثوا بذلك يومين أو ثلاثة ثم جاء رسول الله صلى الله عليه وسلم وهم جلوس فسلم ثم جلس فقال استغفروا لماعز بن مالك قال فقالوا غفر الله لماعز بن مالك قال فقال رسول الله صلى الله عليه وسلم لقد تاب توبة لو قسمت بين أمة لوسعتهم قال ثم جاءته امرأة من غامد من الأزد فقالت يا رسول الله طهرني فقال ويحك ارجعي فاستغفري الله وتوبي إليه فقالت أراك تريد أن ترددني كما رددت ماعز بن مالك قال وما ذاك قالت إنها حبلى من الزنى فقال آنت قالت نعم فقال لها حتى تضعي ما في بطنك قال فكفلها رجل من الأنصار حتى وضعت قال فأتى النبي صلى الله عليه وسلم فقال قد وضعت الغامدية فقال إذا لا نرجمها وندع ولدها صغيرا ليس له من يرضعه فقام رجل من الأنصار فقال إلي رضاعه يا نبي الله قال فرجمها

மாயிஸ் பின் மாலிக் என்ற அஸ்லம் கிளையைச் சார்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நான் விபச்சாரம் செய்து விட்டேன்; எனக்குத் தண்டனை வழங்குங்கள் என்று கூறினார். நபியவர்கள் அவரைப் பல தடவை திருப்பி அனுப்பினார்கள். பிறகு மக்களிடத்தில் அவர்கள் விசாரித்தார்கள். அவர் மீது நாங்கள் எந்தத் தவறையும் காணவில்லை; எனினும் தன் மீது தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தவிர வேறு எதுவும் ஈடாகாது என்று கருதும் அளவுக்கு அவர் தப்பைச் செய்திருக்கிறார் என்று நபித் தோழர்கள் பதிலளித்தார்கள். மீண்டும் அவர் நபியவர்களிடம் வந்தார். அவரைக் கல்லால் எறிந்து கொல்லுமாறு நபியவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல் : முஸ்லிம்.

இது வரை அமீர் என்றால் யார்? அவருக்குரிய அதிகாரங்கள் என்ன? என்பதைப் பார்த்தோம்.

அடுத்து இன்றைக்கு தமக்குத் தாமே அமீர் பட்டம் சூட்டி மக்களை ஏமாற்றி வருவோர் அமீர்கள் என்ற பட்டத்துக்கு உரியவர்களா என்பதைப் பார்ப்போம்.

அமீர் வாதமும் அயோக்கியத்தனமும்

இன்று இஸ்லாத்தை விட்டு விட்டு இன்னொரு மார்க்கம் கண்ட காதியானிகள் முதல் தூய இஸ்லாத்தை அனைத்து துறைகளிலும் கடைப்பிடிப்போம் என்று சொல்லக்கூடிய அமைப்புக்களும் சிறு தலைவர்களைக் கொண்ட சின்னஞ் சிறு கூட்டங்களும், குர்ஆன் கூறும் ஜிஹாதை குறுகிய அளவில் விளங்கிக் கொண்டு செயற்படும் குழுக்களும் தத்தமது அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற வாதத்தையே எடுத்து வைக்கின்றன.

உண்ணும் போது உன்னை அமீர் கூப்பிட்டாலும் ஓடி வர வேண்டும்

உறங்கும் போது உன்னை அமீர் கூப்பிட்டாலும் ஓடி வர வேண்டும்

என்று மூளைச் சலவை செய்கின்றன.

அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்; இல்லையேல் காஃபிராக ஆகி விடுவாய் என்று ஒவ்வொரு அமைப்புமே தத்தமது உறுப்பினர்களை அச்சுறுத்தி வைத்துள்ளன.

எனவே நாம் மேலே எடுத்து வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது அமீர் என்று சொல்லப்படக் கூடியவர்களிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தங்களை அமீர் என்று சொல்லக் கூடியவர்கள் முழுமையான ஆட்சி அதிகாரம் படைத்த மன்னர் என்ற கருத்தில் அமைந்த கலீஃபா, இமாம், சுல்த்தான், மலிக், அமீருல் முஃமினீன், அமீருல் ஆம்மா என்ற பொருளில் தங்களை அமீர் என்று சொல்லிக் கொள்கிறார்களா?

அல்லது மன்னர்களால் பல பகுதிகளுக்கு, பல பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அமீர் என்று தங்களை சொல்லிக் கொள்ளப் போகிறார்களா?

அமீருல் முஃமீனீன் என்ற பொருளில் தங்களை இவர்கள் அமீர் என்று கூறுவார்களேயானால் அது நகைப்புக்குரியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏனெனில் அகில உலகையும் அடக்கியாளும் எந்த அதிகாரமும் இவர்களிடம் இல்லை.

ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது பணிக்காக நியமிக்கப்பட்ட அமீர் என்று பதில் சொல்வார்களானால் எந்தப் பகுதிக்கு நியமிக்கப்பட்டார்கள்? எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள்? இவர்களை நியமித்த இமாம் யார்? என்ற கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

இமாமாகவோ, அமீராகவோ இருப்பவர்களின் அதிகாரங்களைப் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து நாம் அறிந்து கொண்டோம். இந்த அதிகார வரம்புகளை இப்போது அமீர் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பொருத்திப் பார்த்து முடிவு செய்வது அவசியமாகும்.

அமீர் என்பவர் ஜக்காத்தை வசூலித்து அதை ஏழைகளுக்குப் பங்கிடும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். ஜக்காத்தைத் தர மறுப்பவர்களிடம் போர் செய்யும் அதிகாரமும் இருக்க வேண்டும். இன்று எத்தனையோ பணக்காரர்கள் ஜக்காத்தை வழங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எந்த அமீராவது போர் தொடுத்தார்களா?

தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பேசுவோம். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரிடமும் ஜக்காத்தை வசூலிக்கும் அதிகாரம் தமிழ் மாநில அமீருக்கு உள்ளதா? எல்லா முஸ்லிம்களிடமும் வேண்டாம், தன்னுடைய அமைப்பின் கீழ் உள்ள உறுப்பினர்களிடத்திலாவது முறைப்படி ஜக்காத்தை எடுத்து ஏழைகளுக்கு வழங்குகிறார்களா? தர மறுப்பவர்களுடன் போர் செய்ய இவர்களால் முடியுமா? நிச்சயமாக முடியாது. எனவே ஹதீஸ்களில் வரும் அமீருக்கும் இவர்கள் கூறும் அமீருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை உணரலாம்.

வரி வசூல் செய்யும் அதிகாரமும் அமீருக்கு உண்டு என்று கண்டோம். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்களிடம் போய் வரி வசூல் செய்யக் கூடிய அமீர்கள் யாராவது இருக்கிறார்களா? ஜக்காத்தையே வாங்க முடியாதவர்களிடம் ஜிஸ்யாவைப் பற்றி பேச முடியுமா? அல்லாஹ்வின் தூதர் காட்டிய அமீருக்கும் இவர்கள் சொல்கின்ற அமீருக்கும் உள்ள வித்தியாசத்தை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

கைது செய்யும் அதிகாரமும் அமீருக்கு உண்டு என்று ஹதீஸ்களிலிருந்து அறிந்தோம். நமது அமீர்களிடத்தில் போய் இஸ்லாத்திற்கு மாற்றமாக நடப்பவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க சொல்வோம். அவ்வாறு அவர் செய்து விட்டால் அமீர் என்று அவரை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்வோம். (அப்போதும் அவரை நியமித்த இமாம் இருக்க வேண்டும்) ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? தாங்கள் கைதாகி விடக்கூடாது என அஞ்சி ஓடி ஒளிந்து கொள்ளும் நிலையில் தான் அமீர்கள் என்று கூறிக் கொள்வோர் இருக்கின்றார்கள்.

அமீர்கள் என்பவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நம்மைத் தாக்கி நம்மிடம் உள்ள பொருட்களைப் பறித்துக் கொள்ளும் வலிமை படைத்தவர் என்பதை நாம் அறிவோம். அப்படிச் செய்தால் மறுமையில் அதற்குரிய தண்டனை இருக்கிறது என்பது ஒரு புறமிருக்க இந்த அளவுக்கு அதிகாரத்தை இந்த அமைப்புக்களின் அமீர்கள் பெற்றிருக்கிறார்களா? என்பதே நமது கேள்வி.

யாரேனும் ஒரு அமீர் அப்படிச் செய்தால் அவரின் நிலை என்னவாகும்? என்பதைச் சிந்தித்தால் போதும்.

இஸ்லாம் கூறும் அமீருக்கும் இவர்கள் கூறும் அமீருக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதை இதில் இருந்தும் அறியலாம்.

இவ்வாறு நாம் கூறும் போது அடுத்தவரின் பொருளை அபகரிப்பது அமீரின் தகுதி என்று கூறுவதாக விளங்கக் கூடாது. அமீர் என்பவருக்கு அதற்குரிய சக்தி இருக்க வேண்டும் என்றே கூறுகிறோம். அதுவும் நமது இஷ்டத்திற்குக் கூறவில்லை. ஹதீஸ்களில் வருவதைத் தான் கூறுகின்றோம்.

அமீருக்கு அமைச்சர்கள் உண்டு என்பதைப் பார்த்தோம். இந்த இயக்கங்களின் அமீர்களுக்கு ரானுவ அமைச்சர் யார்? உள்துறை அமைச்சர் யார்? என்று கேட்க வேண்டும். அதெல்லாம் இல்லை என்றால் நீங்கள் அமீரும் இல்லை என்று நாம் அவர்களை நோக்கிக் கூற வேண்டும்.

அடுத்து இஸ்லாத்தைப் பாதுகாக்க போர்ப் படையைத் தயார் செய்து அனுப்பவும், தானே முன்னின்று போரிடவும் அதிகாரம் உடையவர் தான் அமீர் என்று ஹதீஸ்களில் பார்த்தோம்.

இன்று இஸ்லாத்திற்கு எதிராக எத்தனையோ விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் ஆலயமாம் பாபர் மசூதி அயோக்கியர்களால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட போது அதுவும் இந்தத் தேதியில் செய்வோம் எனக் கயவர்கள் அறிவித்து விட்டுச் செய்த போது தூய்மையான இஸ்லாத்தின் தனிப்பெரும் அமீர் நான் தான் என தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள் ஒரு படையைத் தயார் செய்து அதற்குத் தானே தலைமையேற்றுச் சென்றிருக்க வேண்டுமல்லவா? இல்லையே.

கள்ள பைஅத் வாங்கி ஜிஹாத் என்று மூளைச் சலவை செய்த கூட்டத்தின் அமீராவது அதைச் செய்ததுண்டா? வசூல் வேட்டைக்கும் மட்டும் தான் ஜிஹாத் வேடமா?

பாபர் பள்ளியை இடித்துவிட்டு அதிலும் திருப்தியடையாத ஓநாய்கள் மும்பையில் முஸ்லிம்களைக் கருவறுத்தார்களே! கத்னா செய்திருக்கிறானா என்று ஆடைகள் விலக்கிப் பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்களே? அதற்காவது எந்த அமீராவது ஒரு படையைத் தயாரித்து அனுப்பினார்களா? இல்லையே?

கோவையில் கயவர்கள் சிலர் காவலர் ஒருவரைக் கொன்றதால் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீதும் பழியைப் போட்டு அங்கு முஸ்லிம்கள் துப்பாக்கி குண்டுக்குப் பலியானார்கள்! அப்போதாவது இந்த இயக்கத் தலைவர்கள் படையை அனுப்பினார்களா? இல்லவே இல்லை.

கோவையில் அநியாயமாக முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும், அதைத் தொடர்ந்து முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட போதும் தட்டிக் கேட்க தனது படையை அனுப்பினார்களா? இல்லையே! அவ்வாறு படையை அனுப்புவதற்கு இவர்கள் சக்தியாவது பெற்றிருக்கிறார்களா? இல்லை. அப்படியானால் இவர்கள் யாருக்கு அமீர்?

அல்குர்ஆன் வசனத்தையும், ஹதீஸ்களையும் தங்கள் அமீர் பதவிக்கு ஆதாரமாகக் காட்ட இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அடுத்ததாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அமீரிடம் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். இன்றைய அமீர்களிடத்தில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் சிறிதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவ்வாறு இவர்கள் தீர்ப்பு வழங்கினால் அதற்குக் கட்டுப்பட யாராவது இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. அப்படியென்றால் இஸ்லாம் கூறிய அமீருக்கும் இந்த அமீருக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகவில்லையா?

தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மட்டுமல்ல. அதைச் செயல்படுத்தி தண்டனை வழங்கும் அதிகாரமும் அமீருக்கு இருக்க வேண்டும் என்பதை ஹதீஸ்கள் மூலம் அறிந்தோம்.

இன்று யாராவது விபச்சாரம் செய்து விட்டால் அதை இங்கிருக்கும் அமைப்புக்களின் அமீரிடத்தில் தெரிவித்தால் அந்த அமீர் விபச்சாரம் செய்தவனைக் கல்லெறிந்து கொல்ல உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்ல யாராவது திருடிவிட்டால் அவனை விசாரித்து அவன் கையை வெட்ட வேண்டும். இப்படியே எண்ணற்ற குற்றவியல் சட்டங்களை அமீராக இருப்பவர் நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு குற்றவியல் சட்டங்களை நிறைவேற்ற முடியுமா? அப்படியே நிறைவேற்றினாலும் அடுத்து இந்த அமீர் எங்கு இருப்பார்? அவரே தண்டனைக்குள்ளாகி இருக்க மாட்டாரா?

குர்ஆனும், ஹதீஸூம் கூறிய அமீர்கள் இவர்களில்லை என்பது இதிலிருந்து விளங்கவில்லையா? இஸ்லாம் கூறக் கூடிய சட்டங்களைச் செயல்படுத்த முடியாதவர் எப்படி இஸ்லாம் கூறக்கூடிய அமீராக இருக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?.

இது வரை நாம் கூறிய விஷயங்களை நன்றாகச் சிந்தித்தால் அமீர் என்பதற்கு இஸ்லாம் கூறும் இலக்கணம் விளங்கும்.

அதாவது அதிகாரம் இருப்பவர் தான் இஸ்லாத்தில் அமீராகக் குறிப்பிடப்படுகின்றார். அமீருக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்தும் ஹதீஸ்களும் அத்தகைய அதிகாரமுடைய அமீருக்குக் கட்டுப்படுவதையே வலியுறுத்துகின்றன என்பதை விளங்கலாம்.

மேலும் இந்த அதிகாரங்களில் எதுவுமே இல்லாத இயக்கங்களின் தலைவர்களை அமீர் என்று கூறுவதையோ, அவருக்குக் கட்டுப்படாதவர் காஃபிராகி விடுவார் என்று கூறுவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.

போட்டி அமீருக்கு வழங்கப்படும் தண்டனை.

حدثنا زهير بن حرب وإسحق بن إبراهيم قال إسحق أخبرنا و قال زهير حدثنا جرير عن الأعمش عن زيد بن وهب عن عبد الرحمن بن عبد رب الكعبة قال دخلت المسجد فإذا عبد الله بن عمرو بن العاص جالس في ظل الكعبة والناس مجتمعون عليه فأتيتهم فجلست إليه فقال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فنزلنا منزلا فمنا من يصلح خباءه ومنا من ينتضل ومنا من هو في جشره إذ نادى منادي رسول الله صلى الله عليه وسلم الصلاة جامعة فاجتمعنا إلى رسول الله صلى الله عليه وسلم فقال إنه لم يكن نبي قبلي إلا كان حقا عليه أن يدل أمته على خير ما يعلمه لهم وينذرهم شر ما يعلمه لهم وإن أمتكم هذه جعل عافيتها في أولها وسيصيب آخرها بلاء وأمور تنكرونها وتجيء فتنة فيرقق بعضها بعضا وتجيء الفتنة فيقول المؤمن هذه مهلكتي ثم تنكشف وتجيء الفتنة فيقول المؤمن هذه هذه فمن أحب أن يزحزح عن النار ويدخل الجنة فلتأته منيته وهو يؤمن بالله واليوم الآخر وليأت إلى الناس الذي يحب أن يؤتى إليه ومن بايع إماما فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر فدنوت منه فقلت له أنشدك الله آنت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم فأهوى إلى أذنيه وقلبه بيديه وقال سمعته أذناي ووعاه قلبي فقلت له هذا ابن عمك معاوية يأمرنا أن نأكل أموالنا بيننا بالباطل ونقتل أنفسنا والله يقول يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما قال فسكت ساعة ثم قال أطعه في طاعة الله واعصه في معصية الله و حدثنا أبو بكر بن أبي شيبة وابن نمير وأبو سعيد الأشج قالوا حدثنا وكيع ح و حدثنا أبو كريب حدثنا أبو معاوية كلاهما عن الأعمش بهذا الإسناد نحوه و حدثني محمد بن رافع حدثنا أبو المنذر إسمعيل بن عمر حدثنا يونس بن أبي إسحق الهمداني حدثنا عبد الله بن أبي السفر عن عامر عن عبد الرحمن بن عبد رب الكعبة الصائدي قال رأيت جماعة عند الكعبة فذكر نحو حديث الأعمش

யார் ஓர் இமாமிடத்தில் பைஅத் செய்து அவரிடத்தில் கைப்பிடித்து உளமாற உறுதி வழங்குகின்றாரோ அவர் இயன்ற வரை அந்த இமாமுக்குக் கட்டுப்படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னோருவர் கிளம்பி விட்டால் அந்த போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

ஒரு அமீர் இருக்கும் போது அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பினால் அவரைக் கொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. நபியவர்களின் இந்தக் கட்டளை தான் அமீர்களைக் கண்டு பிடிக்க சரியான உரை கல்லாகும்.

இன்று தமிழத்தில் மட்டுமே நூற்றுக்கணக்கான சங்கங்கள், அமைப்புகள், ஜம்மிய்யாக்கள் உள்ளன என்பதை முன்பே குறிப்பிட்டோம். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அமீர்கள் உள்ளனர். மேற்கண்ட ஹதீஸின்படி ஒருவர் இருக்கும் போது இன்னொருவர் அமீர் என்றால் அவரைக் கொல்ல வேண்டும்.

அப்படியானால் யார், யாரைக் கொல்வது?

அடுத்த இயக்கத்தில் உள்ள அமீரைப் பற்றிக் கூட கூற வேண்டியதில்லை. தங்கள் அமைப்பிலேயே போட்டி அமீர் வந்தால் என்ன செய்வார்கள்? அவரைக் கொல்ல வேண்டும் என்று இவர்கள் கொள்கை அளவில் கூட ஒத்துக் கொள்வதில்லை.

ஒரு இயக்கத்தின் கொள்கை சரியில்லை என்றால் சர்வ சாதாரனமாக அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து இன்னொரு இயக்கத்தைத் துவங்குகிறார்கள். இப்போது முதல் இயக்கத்தின் அமீர் என்பவர் இந்த ஹதீஸைச் செயல்படுத்துவாரா? நிச்சயமாகச் செய்ய மாட்டார். அப்படியானால் இவர்களின் மனசாட்சிக்கு தாங்கள் கூறுவது தவறு என்பது தெரிந்திருந்தும் அமீர் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் என்ன சந்தேகம்?

பயணத்தில் அமீர்.

ஆட்சியும், அதிகாரமும் பெற்றவர் தான் அமீர் என்று குறிப்பிடப்படுகின்றார். அத்தகையவருக்குக் கட்டுப்படுவதைத் தான் அமீருக்குக் கட்டுப்படுவது குறித்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்பதை இது வரை கண்டோம்.

ஆட்சி, அதிகாரம் வழங்கப்படாதவர் அமீர் எனக் குறிப்பிடப்பட்டதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் காண முடியவில்லை.

நாம் தேடிப்பார்த்த வகையில் பயணத்தில் மூவர் சென்றால் அதில் ஒருவர் அமீராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஹதீஸ் தான் இவர்களின் ஒரே ஆதாரமாக உள்ளது.

மூன்று பேர் பயணம் புறப்பட்டால் ஒருவரை அமீராக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றதே! இந்த அமீரிடம் ஆட்சியும், அதிகாரமும் கிடையாதே என்று வாதிட முடியும்.

எனவே இது குறித்து விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

حدثنا علي بن بحر بن بري حدثنا حاتم بن إسمعيل حدثنا محمد بن عجلان عن نافع عن أبي سلمة عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم

மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி

நூல் : அபூதாவூத் 2241

حدثنا علي بن بحر حدثنا حاتم بن إسمعيل حدثنا محمد بن عجلان عن نافع عن أبي سلمة عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا كان ثلاثة في سفر فليؤمروا أحدهم قال نافع فقلنا لأبي سلمة فأنت أميرنا

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபியவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூ ஸலமா நாஃபிவு இடம் கூறிய போது நீங்கள் எங்கள் அமீராக இருங்கள் என்று நாஃபிவு கூறினார்.

நூல் : அபூதாவூத் 2242

இவ்விரு ஹதீஸ்களிலும் ஃபல் யுஅம்மிரூ (அமீராக்கிக் கொள்க) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மூவர் பயணம் சென்றால் அதில் ஒருவர் அமீராக இருக்கட்டும் என்ற வாசகம் அதிகாரம் இல்லாதவர்களுக்கும் அமீர்கள் எனக் கூறலாம் என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்று வாதிடுகின்றனர்.

பிரயாணத்தில் அமீராகத் தேர்வு செய்யப்பட்டவர் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிலை நாட்ட முடியாது. கட்டாயப்படுத்தி ஸக்காத்தை வசூலிக்க முடியாது. இன்ன பிற அமீரின் கடமைகளை அவரால் செய்ய இயலாது. அவ்வாறு இருந்தும் அவர் அமீர் எனக் கூறப்பட்டுள்ளது. இது முன்னர் நாம் எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களுக்கும் எதிராக இருப்பது போல் தோன்றுகிறது.

ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அமீராக்கிக் கொள்ளட்டும் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும் இவரை விட பலமான அறிவிப்பாளர்கள் அமீராக்கிக் கொள்ளட்டும் என்பதற்கு பதிலாக இமாமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதால் அதுவே சரியான அறிவிப்பாகும். எனவே இந்த ஹதீஸ் இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படுகிறது என்ற வாதம் அடிபட்டு விடுகிறது. இது குறித்த விபரங்களை விரிவாக நாம் காண்போம்

அபூ தாவூதில் இடம் பெற்ற முதல் ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வருமாறு :

1-நபிகள் நாயகம் கூறியதாக அபூ சயீதுல் குத்ரி

2-அபூசயீதுல் குத்ரீ கூறியதாக அபூஸலமா

3-அபூஸலமா கூறியதாக நாஃபிவு

4-நாஃபிவு கூறியதாக முஹம்மத் பின் அஜ்லான்

5-முஹம்மத் பின் அஜ்லான் கூறியதாக ஹாதிம் பின் இஸ்மாயீல்

6-ஹாதிம் பின் இஸ்மாயீல் கூறியதாக அலி பின் பஹ்ர்

7-அலீ பின் பஹ்ர் கூறியதாக அபூ தாவூத்

அபூ தாவூதில் இடம் பெற்ற இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர்கள்.

1-நபிகள் நாயகம் கூறியதாக அபூஹுரைரா

2-அபூஹுரைரா கூறியதாக அபூஸலமா

3-அபூஸலமா கூறியதாக நாஃபிவு

4-நாஃபிவு கூறியதாக முஹம்மத் பின் அஜ்லான்

5-முஹம்மத் பின் அஜ்லான் கூறியதாக ஹாதிம் பின் இஸ்மாயீல்

6-ஹாதிம் பின் இஸ்மாயீல் கூறியதாக அலி பின் பஹ்ர்

7-அலீ பின் பஹ்ர் கூறியதாக அபூ தாவூத்

ஆய்வுக்குள் நுழையும் முன் இந்த அறிவிப்பாளர்களின் பெயர்ப் பட்டியலை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆய்வுக்கு இந்தத் தகவலை நினைவுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.

இவ்விரு ஹதீஸ்களும் அலீ பின் பஹ்ர் என்பவர் வழியாக இமாம் அபூ தாவூதுக்குக் கிடைத்துள்ளது.

அபூ தாவூதை விட வயதில் மூத்தவர்களான ஹதீஸ்கலை அறிஞர்கள் இமாம் அபூ சுர்ஆ, இமாம் அபூ ஹாதம் ஆகியோருக்கும் இந்த ஹதீஸ்கள் கிடைத்தன. இவ்விருவருக்கும் அலீ பின் பஹ்ர் வழியாக அந்த ஹதீஸ் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு முந்தைய அறிவிப்பாளரான ஹாதிம் பின் இஸ்மாயில் வழியாக இந்த ஹதீஸ்கள் இவ்விருவருக்கும் கிடைத்துள்ளன.

அதாவது இமாம் அபூ தாவூத் எவரிடம் இதைக் கேட்டாரோ அந்த அலீ பின் பஹ்ர் என்பவரும் இந்த இரு இமாம்களும் சம காலத்தவர்கள். இந்த ஹதீஸை அலீ பின் பஹ்ர் யாரிடம் கேட்டாரோ (ஹாதிம் பின் இஸ்மாயீல்) அவரிடம் இவ்விருவரும் கேட்டுள்ளனர். இந்த விபரத்தையும் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் தகவல்களைப் பாருங்கள்.

علل الحديث لابن أبي حاتم (ص: 228):

225- وسألت أبي وأبا زرعة عن حديث رواه حاتم بن إسماعيل ، عن محمد بن عجلان ، عن نافع ، عن أبي سلمة ، عن أبي هريرة ، عن النبي صلى الله عليه وسلم ، قال إذا كان ثلاثة في سفر فليؤمهم أحدهم فقالا روي عن حاتم هذا الحديث بإسنادين فقال بعضهم عن حاتم ، عن ابن عجلان ، عن نافع ، عن أبي سلمة ، عن أبي سعيد وقال بعضهم عن أبي هريرة والصحيح عندنا ، والله أعلم عن أبي سلمة ، أن النبي صلى الله عليه وسلم مرسل قال أبي ورواه يحيى بن أيوب ، عن ابن عجلان ، عن نافع ، عن أبي سلمة ، أن النبي صلى الله عليه وسلم ، وهذا الصحيح ومما يقوي قولنا أن معاوية بن صالح ، وثور بن يزيد ، وفرج بن فضالة ، حدثوا عن المهاصر بن حبيب ، عن أبي سلمة ، عن النبي صلى الله عليه وسلم هذا الكلام قال أبو زرعة وروى أصحاب ابن عجلان ، هذا الحديث عن أبي سلمة مرسلا قلت من ؟ قال الليث أو غيره

ஹாதிம் பின் இஸ்மாயீல் - முஹம்மத் பின் அஜ்லான் - நாபிவு - அபூ ஸலமா - அபூ ஹூரைரா என்ற அறிவிப்பாளர்கள் வழியாக ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் பற்றி அபூ ஸூர்ஆவிடமும் என் தந்தையிடமும் (அபூ ஹாதம்) கேட்டேன். அதற்கு அவ்விருவரும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்கள் தொடரில் இடம் பெற்றுள்ளது. ஒன்று அபூ ஹூரைரா மற்றொன்று அபூ ஸயீத் என்று விடையளித்தார்கள்.

நூல் : இப்னு அபீ ஹாத்தம்

அபூ தாவூத் எந்த அறிவிப்பாளர் வழியாக இந்த ஹதீஸை அறிவித்துள்ளாரோ அதே ஹதீஸ் பற்றித் தான் இவ்விரு இமாம்களிடமும் கேட்கப்படுகிறது. அமீராக ஆக்கிக் கொள்ளட்டும் (ஃபல் யுஅம்மிரூ) என்ற இடத்தில் (ஃபல் யவும்முஹூம்) இமாமத் செய்யட்டும் என்று இடம் பெற்றுள்ளது.

அதாவது இமாம் அபூ தாவூதை விட மூத்தவர்களான ஹதீஸ்களை ஆய்வு செய்வதில் மேதைகளாகத் திகழ்ந்த இவ்விரு இமாம்களும் மூவர் பயணம் மேற்கொண்டால் அவர்கள் ஜமாத்தாகத் தொழ வேண்டும், ஒருவர் இமாமத் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிடுகின்றனர். இமாமத் செய்யட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது தான் அமீராக்கட்டும் என்று அபூதாவூதில் தவறுதலாக இடம் பெற்றுள்ளது என்பதை இத்தகவலில் இருந்து அறியலாம்.

மேலும் பயணத்தில் செல்லும் குழுவுக்கு அமீர் என்பவர் அவசியம் இல்லை. அவர் அதிகாரம் படைத்தவராக இருக்க முடியாது என்பதால் அபூதாவூதை விட மூத்தவர்கள் அபூதாவூதின் ஆசிரியரின் ஆசிரியரிடம் கேட்டுப் பதிவு செய்தது தான் அபூதாவூதின் அறிவிப்பை விட சரியான அறிவிப்பாக இருக்க முடியும்.

இன்னும் பல நூல்களிலும் அமீராக்கிக் கொள்ளட்டும் என்பதற்கு பதிலாக இமாமாக ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்று இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விபரம் வருமாறு:

1-பைஹகீ

سنن البيهقي الكبرى (3/ 89):

4905 - أخبرنا أبو بكر محمد بن الحسن بن فورك أنبأ عبد الله بن جعفر ثنا يونس بن حبيب ثنا أبو داود ثنا هشام عن قتادة عن أبي نضرة عن أبي سعيد أن النبي صلى الله عليه و سلم قال : إذا كانوا ثلاثة في سفر فليؤمهم أحدهم وأحقهم بالإمامة أقرؤهم أخرجه مسلم من حديث هشام الدستوائي وغيره عن قتادة

2-முஸ்னத் அபீ யஃலா

مسند أبي يعلى (2/ 319):

1054 - حدثنا محمد بن عباد حدثنا حاتم عن ابن عجلان عن نافع عن أبي سلمة : عن أبي سعيد أن النبي صلى الله عليه و سلم قال : إذا خرج ثلاثة في سفر فليؤمهم أحدهم

قال حسين سليم أسد : إسناده حسن

3-முஸ்னத் தயாலிஸீ

مسند الطيالسي (ص: 286):

2152 - حدثنا أبو داود قال حدثنا هشام عن قتادة عن أبي نضرة عن أبي سعيد ان النبي صلى الله عليه و سلم قال : إذا كانوا ثلاثة في سفر فليؤمهم أحدهم واحقهم بالإمامة أقرؤهم

4-நஸயீ குப்ரா

السنن الكبرى للنسائي (1/ 280):

(857) أنبأ عبيد الله بن سعيد عن يحيى عن هشام قال حدثنا قتادة عن أبي نضرة عن أبي سعيد عن النبي صلى الله عليه وسلم قال إذا كانوا ثلاثة فليؤمهم أحدهم وأحقهم بالامامة أقرؤهم اجتماع القوم وفيهم الوالي

5-தப்ரானி அவ்சத்

المعجم الأوسط (4/ 230):

عن بن عمر عن رسول الله صلى الله عليه و سلم قال اذا كان ثلاثة في سفر فليؤمهم احدهم لم يرو هذا الحديث عن نافع بن أبي نعيم إلا زياد بن يونس

6-நஸாயீ

سنن النسائي (2/ 77):

782 - أخبرنا عبيد الله بن سعيد عن يحيى عن هشام قال حدثنا قتادة عن أبي نضرة عن أبي سعيد عن النبي صلى الله عليه و سلم قال : إذا كانوا ثلاثة فليؤمهم أحدهم وأحقهم بالإمامة أقرؤهم  قال الشيخ الألباني : صحيح

7-முஸ்னத் அஹ்மத்

مسند أحمد بن حنبل (3/ 24):

11206 - حدثنا عبد الله حدثني أبي ثنا يحيى ثنا هشام وشعبة قالا ثنا قتادة عن أبي نضرة عن أبي سعيد عن النبي صلى الله عليه و سلم : إذا كانوا ثلاثة فليؤمهم أحدهم وأحقهم بالإمامة أقرؤهم  تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم

8-தாரிமி

سنن الدارمى (4/ 22، بترقيم الشاملة آليا) :

1301- أَخْبَرَنَا عَفَّانُ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَبِى نَضْرَةَ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-; إِذَا اجْتَمَعَ ثَلاَثَةٌ فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ ، وَأَحَقُّهُمْ بِالإِمَامَةِ أَقْرَؤُهُمْ . تحفة 4372 إتحاف5674

9- இப்னு குஸைமா

صحيح ابن خزيمة (3/ 4):

1508 - أخبرنا أبو طاهر نا أبو بكر نا بندار نا يحيى بن سعيد ثنا شعبة حدثني قتادة و ثنا بندار ثنا يحيى بن سعيد عن سعيد بن أبي عروبة و هشام و ثنا بندار ثنا ابن أبي عدي عن سعيد و هشام عن قتادة عن أبي نضرة عن أبي سعيد الخدري : عن النبي صلى الله عليه و سلم قال : إذا كانوا ثلاثة فليؤمهم أحدهم و أحقهم بالإمامة أقرؤهم

மேற்கண்ட அனைத்து அறிவிப்புக்களிலும் பிரயாணத்தில் அமீரை ஏற்படுத்துங்கள் என்பதற்கு பதிலாக இமாமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற வாசகம் தான் இடம் பெற்றுள்ளது.

மேலும் முஹம்மத் பின் அஜ்லான் என்ற அறிவிப்பாளர் நாபிவு என்பார் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் வார்த்தைக் குழப்பம் உள்ளது என்று உகைலி என்ற ஹதீஸ் கலை அறிஞர் கூறுகின்றார். அபூ தாவூதில் இடம் பெரும் ஹதீஸை நாபிவு வழியாகவே முஹம்மத் பின் அஜ்லான் அறிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஹம்மத் பின் அஜ்லான் வழியாக மற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் மூவர் பயணம் சென்றால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று குறிப்பிடப்படுவதே சரியான அறிவிப்பாக இருக்க முடியும் என்பது உறுதியாகிறது.

மேலும் அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. மூவர் இருந்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று தான் அந்த ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது.

صحيح مسلم (2/ 133):

1561 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِى نَضْرَةَ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-  إِذَا كَانُوا ثَلاَثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ وَأَحَقُّهُمْ بِالإِمَامَةِ أَقْرَؤُهُمْ 

ஆகவே பிரயாணத்தில் செல்பவர்கள் தனித்துத் தொழுது விடாமல் மூவரில் ஒருவரை இமாமாக ஏற்படுத்தித் தொழ வேண்டும் என்பது தான் சரியான அறிவிப்பாகும். பயணத்தில் அமீர் ஏற்படுத்துங்கள் என்பது சரியான அறிவிப்பாகாது.

இப்னு அஜ்லான்

நாபிவு

என்ற வழியாக அமைந்திருப்பதே இவ்வாறு முடிவு செய்யப் போதுமான காரணமாகும்.

இஸ்லாத்தில் அமீர் என்ற வார்த்தை ஆட்சி அதிகாரம் இல்லாத எவருக்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. எனவே அமீருக்குக் கட்டுப்படுங்கள் என்பது ஆட்சி, அதிகாரமில்லாதவர்களுக்குப் பொருந்தாது என்பது சந்தேகமற நிரூபணமாகின்றது.

ஆட்சி, அதிகாரமின்றி, இஸ்லாமிய அரசியல் சட்டங்களை அமுல்படுத்த முடியாத பகுதியில் ஒரு குழுவினர் தமக்கென ஒருவரைத் தலைவராக ஆக்கிக் கொள்வதும், ஆக்கிக் கொள்ளாமலிருப்பதும் அவர்களின் சொந்த அபிப்பிராயத்தில் செய்யப்படும் செயலாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

அவ்வாறு தலைவராக ஆக்கப்பட்டவர் தன்னை அமீர் என கூறிக் கொள்வதும், தனக்கென மற்றவர்கள் கட்டுப்படுவது மார்க்கத்தின் கடமை எனக் கூறுவதும் கட்டுப்படத் தவறினால் மார்க்கத்தில் குற்றமென வாதிடுவதும் மோசடியாகும்.

இன்றைய சங்கங்கள், ஜம்மியாக்கள், இயக்கங்களில் உள்ள தலைவர்களை அமீர் என்று அழைக்காமல் தலைவர் செயலாளர் போன்ற சொற்களால் அல்லது இவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட சொற்களால் அழைத்துக் கொள்ளலாம். மார்க்கத்துடன் முரண்படாத வகையில் அந்த இயக்கத்திற்காக விதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த விதிகளை மீறுவோர் மீது இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் நான் தான் அமீர். அமீருக்குக் கட்டுப்படுவது மார்க்கக் கடமை; எனக்குக் கட்டுப்பட மறுத்தால் அல்லாஹ்விடம் தண்டணைக்கு உள்ளாவீர்கள் என்று வாதிடுவது அப்பட்டமான மோசடியாகும்.

முடிவுரை

இஸ்லாமிய சமூக அமைப்பில் உலகம் முழுவதும் ஒரே ஆட்சி தான் நடக்க வேண்டும். அந்த ஒரே ஆட்சித் தலைவரின் பிரதிநிதிகளாக பல பகுதிகளுக்கும் அமீர்கள் (ஆளுனர்கள்) நியமிக்கப்படுவார்கள்.

இந்தக் கட்டுக்கோப்பு குலைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அமீருக்குக் கட்டுப்படுதல் வலியுறுத்தப்பட்டுள்ளது.. அமீர்களும் மனிதர்கள் என்பதால் அவர்கள் தமது பணியில் தவறுகள் செய்யலாம். அதற்காக அவர்களுக்கு எதிராகப் புரட்சியிலும், கிளர்ச்சியிலும் மக்கள் இறங்கினால் இஸ்லாமிய அரசு பலவீனமடையும். முஸ்லிம்கள் சிதறி சின்னாபின்னமாகி விடுவார்கள். இதைத் தடுக்கவே அமீருக்குக் கட்டுப்படுதல் மார்க்கக் கடமையாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று ஆளாளுக்கு அமீர் பட்டம் சூட்டிக் கொண்டு முஸ்லிம்களைச் சிதறடிப்பதற்கு அமீர் என்பதைப் பயன்படுத்துவது கொடுமையிலும் கொடுமையாகும்.

தனக்குக் கீழே உள்ள மக்களின் வறுமையைப் போக்குதல், அவர்களுக்கு ஆபத்து நேரும் போது களமிறங்கி போர் செய்தல் போன்ற உயரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமியத் தலைமையாக இங்கே உள்ள எந்தத் தலைமையும் ஆக முடியாது.

தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி, ஜாக், ஜமாஅத்துல் முஸ்லிமீன், சிம், அஹ்லே ஹதிஸ், ஸலப், பைஅத் கூட்டம் போன்ற ஏராளமான அமைப்புக்கள் தங்கள் தலைமை இஸ்லாமியத் தலைமை எனக் கூறிக் கொள்கின்றன.

அமீருக்குக் கட்டுப்படுதல் பற்றிய ஆதாரங்களையெல்லாம் எடுத்துக் காட்டி தங்களுக்குக் கட்டுப்படுவது மார்க்கக் கடமை என்கின்றனர்..

இது முற்றிலும் தவறாகும். உன்மையான இஸ்லாமிய அமைப்பில் இத்தனை இயக்கங்களும், இத்தனை அமீர்களும் இருக்க முடியாது.

மக்களை ஒன்றுபடுத்துவதற்காகக் கூறப்பட்ட அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது மக்களைப் பிரிப்பதற்கும் தங்களுக்கெனத் தனிக் கூட்டத்தை உருவாக்குவதற்கும் இவர்களால் பயன்படுத்தப்படுவது விசித்திரமாக உள்ளது.

அமீருக்குரிய கடமைகள் பலவற்றில் ஒரு கடமையைக் கூட தங்களால் செய்ய முடியாது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டே இவர்கள் இவ்வாறு வாதிட்டு வருகின்றனர்.

இவர்கள் இயக்கம் நடத்துவதே தவறு என நாம் கூறவில்லை இஸ்லாமிய ஆட்சி முறை இல்லாத நிலையில் நம்மால் இயன்ற அளவுக்குச் செயல்படுவதில் தவறு இல்லை.

எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப் படுத்தமாட்டான். இதைக் கவனத்தில் கொண்டு தனித்துச் செயல் படுவதை விட கூட்டாகச் செயல்படுவதால் பயன் அதிகமாகலாம் என்ற நோக்கத்தில் இத்தகைய இயக்கங்கள் செயல்படுவதை நாம் குறை கூறவில்லை.

நாம் கூறுவது என்னெவெனில் தங்களால் இயன்ற அளவுக்கு அவர்கள் செயல்படட்டும். ஆனால் இது தான் இஸ்லாமியத் தலைமை, இவர் தான் அமீர் எனக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம். அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது தம்மைப் போன்றவர்களுக்குக் கட்டுப்படுவது தான் என்றும் வாதிட வேண்டாம்.

இத்தகையோருக்கு கட்டளையிடும் அதிகாரம் ஏதும் கிடையாது. அவ்வாறு கட்டளையிடுவார்களானால் அதற்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது. அதை மீறுவோர் அமீருக்குக் கட்டுப்பட மறுத்த குற்றத்தைச் செய்தவராக மாட்டார். ஏனெனில் இவர்களில் யாரும் அமீர் அல்ல.

17.06.2011. 1:32 AM

திருமறையின் தோற்றுவாய்

நூலின் பெயர்: திருமறையின் தோற்றுவாய்

அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்கவுரை

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

வெளியீடு: நபீலா பதிப்பகம்

பதிப்புரை

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்கவுரையான இந்த நூல் உங்கள் கைகளில் ஆறாவது பதிப்பாகத் தவழ்கிறது.

குறுகிய காலத்தில் ஆறு பதிப்புகளைக் காண்பதிலிருந்து இந்த நூலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

சென்ற பதிப்புகளில் சுட்டிக் காட்டப்பட்ட பல குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. சலிப்பு ஏற்படாமல் வாசிக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் பெயரால் சமுதாயத்தில் நுழைந்து விட்ட தவறான கொள்கைகள் தக்க சான்றுகளுடன் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.

தவறான கொள்கைகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் முதுகெலும்பை முறிக்கும் வகையில் எதிர்வாதம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான ஆதாரங்கள் அரபு மூலத்துடனும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது

இது அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்கவுரையாக இருப்பதுடன் இஸ்லாத்தின் கொள்கை விளக்க நூலாகவும் அமைந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்!

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டும் வகையில் எண்ணற்ற நூல்களை வெளியிட்டுள்ள எங்கள் நிறுவனம் அல்ஹம்து அத்தியாயத்தின் ஆறாம் பதிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நபீலா பதிப்பகம்

சென்னை

முன்னுரை

திருக்குர்ஆனில் ஏழு வசனங்களைக் கொண்ட அல்ஹம்து அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் தாய் என்று சிறப்பித்துக் கூறியுள்ளனர். முழுக் குர்ஆனுக்கும் இது தாயாகத் திகழ்கிறது என்றால் அந்த அளவுக்கு ஆழமான கருத்துக்கள் இதனுள் அடங்கியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே தான் இந்த அத்தியாயத்துக்கு தனியாக விளக்கவுரை எழுதும் உந்துதல் ஏற்பட்டது. இந்த அத்தியாயத்தில் இன்னும் கவனம் செலுத்தி ஆராய்பவர்கள் இதை விட அதிகமான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இந்த அத்தியாயம் ஆழம் நிறைந்தது.

இந்த ஒரு அத்தியாயத்தை மட்டும் ஆழமாக ஒருவர் அறிந்து கொண்டால் மொத்தக் குர்ஆனிலும் கூறப்பட்ட போதனைகளை அறிந்து கொண்டவராவார்.

எனவே தான் இந்த அத்தியாயத்திற்கு விளக்கவுரை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

முந்தைய பதிப்புகளை விட இதில் ஏராளமான விளக்கங்கள் சேர்த்துள்ளேன். ஹதீஸ்களை அரபு மூலத்துடன் தந்துள்ளேன். தேவையற்றவை எனக் கருதும் விஷயங்களை நீக்கியுள்ளேன்.

இஸ்லாத்தின் ஜீவ நாடியாகத் திகழும் ஏகத்துவக் கொள்கை குறித்தும், அதற்கு எதிரான வாதங்களுக்கு எவ்வாறு விளக்கமளிப்பது என்பது குறித்தும் இயன்ற அளவு முழுமையான விளக்கத்தை உரிய இடத்தில் சேர்த்துள்ளேன்.

ஏகத்துவக் கொள்கையை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நூ-ன் ஒரே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

அன்புடன்,

பி.ஜைனுல் ஆபிதீன்.

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புக்கள்

திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் முதல் அத்தியாயமான அல் ஃபாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புக்கள் பலவற்றைப் பெற்றுள்ளது. திருக்குர்ஆனின் ஒரு பகுதியாக இந்த அத்தியாயம் அமைந்திருந்தாலும் திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஒரு இடத்தில் கூறப்படுகின்றது. வேறு எந்த அத்தியாயத்திற்கும் வழங்கப்படாத தனிச்சிறப்பாகும் இது.

நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும் மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம்.

(அல்குர்ஆன் 15:87)

இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன. இந்த அத்தியாயத்தைச் சிறப்பித்துக் கூறிய அளவுக்கு வேறு எந்த அத்தியாயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியதில்லை.

صحيح البخاري
4474 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ المُعَلَّى، قَالَ: كُنْتُ أُصَلِّي فِي المَسْجِدِ، فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ أُصَلِّي، فَقَالَ: " أَلَمْ يَقُلِ اللَّهُ: {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24]. ثُمَّ قَالَ لِي: «لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي القُرْآنِ، قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ المَسْجِدِ». ثُمَّ أَخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، قُلْتُ لَهُ: «أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي القُرْآنِ»، قَالَ: {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2] «هِيَ السَّبْعُ المَثَانِي، وَالقُرْآنُ العَظِيمُ الَّذِي أُوتِيتُهُ»

நான் ஒருமுறை தொழுது கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களு(டைய அழைப்பு)க்கு மறுமொழி கூறவில்லை. (தொழுது முடித்த பின்) அவர்களிடம் சென்றேன். (நான் அழைத்தவுடன்) வருவதற்கு என்ன தடை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் என்னை அழைக்கும் போது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று நான் கூறினேன். நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய ஒரு காரியத்திற்காக இந்தத் தூதர் அழைக்கும் போது இத்தூதருக்கும், அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்! (அல்குர்ஆன் 8:24) என்று அல்லாஹ் கூறவில்லையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டுவிட்டு, இந்தப் பள்ளியில் இருந்து நீ புறப்படுவதற்கு முன் குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன் என்று கூறி எனது கையையும் பிடித்துக் கொண்டனர். அவர்கள் பள்ளியிலிருந்து புறப்பட எத்தனித்த போது அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தைக் கற்றுத் தருவாதாகக் கூறினீர்களே! என்று நினைவுபடுத்தினேன். அவர்கள் ஆம்! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் பின் அல் முஅல்லா(ரலி)

நூல்: புகாரி (4474, 4647, 4703, 4704)

صحيح البخاري 
2276 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ، فَقَالَ بَعْضُهُمْ: لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا: يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ [ص:93] مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ: نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ، وَيَقْرَأُ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ: فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمْ: اقْسِمُوا، فَقَالَ الَّذِي رَقَى: لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا، فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ، فَقَالَ: «وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ»، ثُمَّ قَالَ: «قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ شُعْبَةُ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ، سَمِعْتُ أَبَا المُتَوَكِّلِ، بِهَذَا

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின தலைவனை (தேள்) கொட்டி விட்டது. உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்து சூராவை ஓதி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம் என்று சில நபித்தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்? என்று கேட்டுவிட்டு, எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2276

மற்றொரு அறிவிப்பில்

صحيح البخاري
5737 - حَدَّثَنِي سِيدَانُ بْنُ مُضَارِبٍ أَبُو مُحَمَّدٍ البَاهِلِيُّ، حَدَّثَنَا [ص:132] أَبُو مَعْشَرٍ البَصْرِيُّ هُوَ صَدُوقٌ يُوسُفُ بْنُ يَزِيدَ البَرَّاءُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ الأَخْنَسِ أَبُو مَالِكٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرُّوا بِمَاءٍ، فِيهِمْ لَدِيغٌ أَوْ سَلِيمٌ، فَعَرَضَ لَهُمْ رَجُلٌ مِنْ أَهْلِ المَاءِ، فَقَالَ: هَلْ فِيكُمْ مِنْ رَاقٍ، إِنَّ فِي المَاءِ رَجُلًا لَدِيغًا أَوْ سَلِيمًا، فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ، فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ عَلَى شَاءٍ، فَبَرَأَ، فَجَاءَ بِالشَّاءِ إِلَى أَصْحَابِهِ، فَكَرِهُوا ذَلِكَ وَقَالُوا: أَخَذْتَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا، حَتَّى قَدِمُوا المَدِينَةَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَخَذَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَقَّ مَا أَخَذْتُمْ عَلَيْهِ أَجْرًا كِتَابُ اللَّهِ»

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டீரே! என்று மந்திரித்தவரைக் கண்டித்தனர். இது பற்றி நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, கூலிகள் பெறுவதற்கு மிகவும் அருகதை உள்ளது அல்லாஹ்வின் வேதம் தான் என்று கூறினார்கள்.

இந்த இரண்டு அறிவிப்புகளும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்தைக் கொண்ட ஹதீஸ் முஸ்லிமிலும் உள்ளது.*

* குர்ஆனை ஓதிப்பார்த்து கூலி வாங்கலாமா என்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற பிற்சேர்க்கை எண் : 2 ல் பார்க்கவும்.

صحيح البخاري
756 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ»

இவ்வேதத்தின் தோற்றுவாயை (ஃபாத்திஹாவை) ஓதாதவருக்கு தொழுகை இல்லை! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 756

صحيح مسلم
38 - (395) وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ» ثَلَاثًا غَيْرُ تَمَامٍ.

எவர் உம்முல் குர்ஆன் (திருக்குர்ஆனின் தாய் என்று பொருள்படும் ஃபாத்திஹாவை) ஓதவில்லையோ அவரது தொழுகை குறைவுபட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: முஸ்லிம் 598

அடியார்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள கடமைகளில் தலையாயது தொழுகை தான். அதற்கு நிராக எந்தக் கடமையும் இல்லை. அந்தத் தொழுகையே ஃபாத்திஹா அத்தியாயம் ஓதப்படாவிட்டால் தொழுகையாக அங்கீகரிக்கப்படாது என்பதிலிருந்து ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பு எத்தகையது என்பதை உணர முடியும்.

صحيح مسلم 
38 - (395) وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ» ثَلَاثًا غَيْرُ تَمَامٍ. فَقِيلَ لِأَبِي هُرَيْرَةَ: إِنَّا نَكُونُ وَرَاءَ الْإِمَامِ؟ فَقَالَ: «اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ»؛ فإنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " قَالَ اللهُ تَعَالَى: قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، قَالَ اللهُ تَعَالَى: حَمِدَنِي عَبْدِي، وَإِذَا قَالَ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، قَالَ اللهُ تَعَالَى: أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَإِذَا قَالَ: {مَالِكِ يَوْمِ الدِّينِ}، قَالَ: مَجَّدَنِي عَبْدِي - وَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَيَّ عَبْدِي - فَإِذَا قَالَ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5] قَالَ: هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] قَالَ: هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ " قَالَ: سُفْيَانُ، حَدَّثَنِي بِهِ الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمنِ بْنِ يَعْقُوبَ، دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ مَرِيضٌ فِي بَيْتِهِ. فَسَأَلْتُهُ أَنَا عَنْهُ

தொழுகையில் ஓதுவதை எனக்கும் என் அடியானுக்குமிடையில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று ஒருவன் கூறும்போது என்னை என் அடியான் (புகழ வேண்டிய விதத்தில்) புகழ்ந்து விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் அர்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும்போது (என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில்) என் அடியான் பாராட்டி விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். மாலிகியவ்மித்தீன் (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்று கூறும்போது என்னைக் (கௌரவப்படுத்த வேண்டிய விதத்தில்) கௌரவப்படுத்தி விட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான். இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன் (உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும்போது இது தான் எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்... (இறைவா) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக! எவர்களுக்கு நீ பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை (செலுத்துவாயாக) எவர்கள் (உன்னால்) கோபிக்கப்படவில்லையோ அவர்களின் வழியிலும், எவர்கள் வழிகெடவில்லையோ அவர்களின் வழியிலும் (எங்களை செலுத்துவாயாக!) எனக் கூறும்போது என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 598

இந்த ஹதீஸ் ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பை உணர்த்துவதோடு, அதன் அமைப்பையும் நமக்குத் தெளிவாக்குகின்றது.

  1. முதல் மூன்று வசனங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றும் விதமாக அருளப்பட்டுள்ளன. இந்த வசனங்களை ஒருவன் கூறும் போது அல்லாஹ்வை உரிய விதத்தில் புகழ்ந்தவனாக இறைவனால் கருதப்படுகிறான்.
  2. நான்காவது வசனம், இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத் தெளிவாக்குகின்றது. அல்லாஹ்வை எஜமானனாக ஏற்றுக் கொண்டு அவனை மட்டுமே வணங்கி வருவதும் அவனிடம் மட்டுமே உதவி தேடுவதும் தான் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள உறவாகும். எஜமான் அடிமை என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் இல்லை என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.
  3. இறுதியில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இறைவனிடம் மிக முக்கியமான கோரிக்கையை முன் வைக்கும் விதமாக அருளப்பட்டுள்ளன. அந்தக் கோரிக்கை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த ஹதீஸ் அளிக்கின்றது.

அல்லாஹ் இந்த அத்தியாயத்தை மூன்று பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளதை இந்த ஹதீஸ் மூலம் அறிகிறோம். அந்த அடிப்படையிலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின் விரிவுரையை நாமும் காண்போம்.

ஃபாத்திஹா அத்தியாயம் உள்ளிட்ட அனைத்து அத்தியாயங்களின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதப்பட்டுள்ளது. 9-வது அத்தியாயத்தின் துவக்கத்தில் மட்டும் எழுதப்படவில்லை.

இந்தச் சொற்றொடரை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முதல்வசனம் என்று எடுத்துக் கொள்வதா? அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது என்பதற்கு அடையாளமாக எடுத்துக் கொள்வதா என்பதை முதலில் அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்தில் நுழைவோம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அத்தியாயத்தின் ஒரு பகுதியா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது ஃபாதிஹா அத்தியாயத்திலும், ஏனைய அத்தியாயங்களிலும் உள்ளடங்கியதா? அல்லது குர்ஆனுக்கு அப்பாற்பட்டதா? என்பதை முதலில் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனம் திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் அத்தவ்பா என்ற 9-வது அத்தியாயம் தவிர எல்லா அத்தியாயங்களின் துவக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. இதைத் தவிர அன்னம்லு என்ற 27-வது அத்தியாயத்தின் 30-வது வசனத்திலும் இடம் பெறுகின்றது. இதில் அன்னம்லு அத்தியாயத்தின் இடையில் வருகின்ற பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்பதில் எந்த அறிஞரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை.

113 அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அந்தந்த அத்தியாயங்களில் கட்டுப்பட்டதா? இல்லையா? என்பதில் தான் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். இரு கருத்துடையவர்களும் தங்களின் கருத்துக்குச் சில ஆதாரங்களையும் சமர்ப்பிக்கின்றனர்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்தந்த அத்தியாயங்களில் கட்டுப்பட்டதில்லை என்ற கருத்துடையோரின் ஆதாரங்களையும், அவர்களின் வாதங்களையும் முதலில் பார்ப்போம்.

முதல் ஆதாரம்

நாம் ஏற்கனவே ஃபாதிஹா அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி சில ஹதீஸ்களைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த ஹதீஸ்கள் அனைத்துமே இந்தக் கருத்துடையவர்களின் ஆதாரமாக உள்ளன.

குர்ஆனில் உள்ள மகத்தான அத்தியாயத்தைக் கற்றுத் தரட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் என்று கூறினார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது இந்த அத்தியாயத்தில் கட்டுப்பட்டதாக இருந்திருந்தால், அதிலிருந்து ஓதத் துவங்கி இருப்பார்கள் என்பது இந்த சாராரின் வாதம்.

இரண்டாவது ஆதாரம்

நீ தொழுகையைத் துவங்கியதும் என்ன ஓதுவாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று ஓதுவேன் என பதில் கூறினேன். அது தான் தலை சிறந்த அத்தியாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நபித்தோழர் ஃபாதிஹா அத்தியாயத்தை அல்ஹம்து விலிருந்தே தொடங்கி ஓதுகிறார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் அங்கீகரிக்கிறார்கள். பிஸ்மில்லாஹ்வும் அதன் ஒரு பகுதி என்றிருந்தால் திருத்திக் கொடுத்திருக்க மாட்டார்களா? இது இந்த சாராரின் கேள்வி.

மூன்றாவது ஆதாரம்

அபூஸயீதுல் குத்ரீ அவர்கள் ஒருவருக்கு ஓதிப்பார்க்கும் நிகழ்ச்சியில் அல்ஹம்துலில்லாஹி என்றே ஓதிப்பார்த்ததாக வந்துள்ளது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்றால் அதை அவர் விட்டிருக்க மாட்டார் அல்லவா? என்று இந்தக் கருத்துடையவர்கள் கேட்கிறார்கள்.

நான்காவது ஆதாரம்

தொழுகையில் ஓதுவதை எனக்கும், என் அடியானுக்கும் இடையில் நான் பங்கிட்டுள்ளேன் என்று வருகின்ற ஹதீஸில் அல்ஹம்து என்றே துவங்கப்படுகின்றது. இங்கேயும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறப்படாததால் அது அத்தியாயங்களில் சேர்ந்தது அல்ல என்கிறார்கள் இவர்கள்.

ஐந்தாவது ஆதாரம்

سنن أبي داود
1400 - حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا قَتَادَةُ، عَنْ عَبَّاسٍ الْجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سُورَةٌ مِنَ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً، تَشْفَعُ لِصَاحِبِهَا حَتَّى يُغْفَرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ "

திருக்குர்ஆனின் 30 வசனங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதுபவர் மன்னிக்கபடும் வரை அந்த அத்தியாயம் பரிந்துரை செய்து கொண்டே இருக்கும். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தபாரகல்லதீ பியதிஹில் முல்கு என்ற அத்தியாயமே அது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: அஹ்மத் 7634, அபூதாவூத் 1192, திர்மிதீ 2716

தபாரகல்லதீ அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டும் போது தபாரகல்லதீ என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதைக் குறிப்பிடவில்லை. மேலும் இந்த அத்தியாயத்தில் 30 வசனங்கள் உள்ளதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமைச் சேர்க்காமல் தான் 30 வசனங்கள் உள்ளன. அதைச் சேர்த்தால் 31 ஆகிவிடும். எனவே எந்த அத்தியாயத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கட்டுப்பட்டதல்ல என்று இவர்கள் கூறுகிறார்கள்.

ஆறாவது ஆதாரம்

صحيح مسلم
وَعَنْ قَتَادَةَ أَنَّهُ كَتَبَ إِلَيْهِ يُخْبِرُهُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَهُ قَالَ: " صَلَّيْتُ خَلَفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، فَكَانُوا يَسْتَفْتِحُونَ بِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا يَذْكُرُونَ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فِي أَوَّلِ قِرَاءَةٍ وَلَا فِي آخِرِهَا "

நான் அல்லாஹ்வின் தூதருடனும், அபூபக்ருடனும், உமருடனும் உஸ்மானுடனும் தொழுதிருக்கிறேன். அவர்கள் அல்ஹம்து லில்லாஹி ... என்றே துவங்குவார்கள். யாரும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை ஆரம்பத்திலோ கடைசியிலோ ஓதி நான் கேட்டதில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 605

இதே கருத்தை அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி) அவர்களும் அறிவிக்க அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்து என்றே ஓதத் துவங்கியதாக இந்த ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எனக் கூற மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.

எனவே அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அந்த அத்தியாயங்களின் ஒரு பகுதி அல்ல. ஒரு அத்தியாயம் முடிவுற்று, அடுத்த அத்தியாயம் துவங்குகிறது என்று அடையாளம் காட்டுவதற்காகவே அத்தியாயங்களின் துவக்கத்தில் அது எழுதப்படுகின்றது என்று இந்த சாரார் வாதிக்கிறார்கள்.

இந்த சாராரின் வாதங்கள் சரியானவை அல்ல. மாற்றுக் கருத்துக் கொண்டோரின் வாதங்களே பலமானவை. மாற்றுக் கருத்துடையோரின் வாதங்களையும் இந்த ஆதாரங்களுக்கு அவர்கள் தருகின்ற பதிலையும் பார்ப்போம்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஒரு நபித்தோழரோ, அல்லது பலரோ அதை நபிமொழி என்று அறிவித்திருப்பார்கள். ஆனால் ஒரு வசனத்தைக் குர்ஆனின் ஒரு பகுதி என்று கூற வேண்டுமானால் நபித்தோழர்கள் அனைவரும் அதைக் குர்ஆன் என அறிமுகம் செய்திருக்க வேண்டும்.

குர்ஆன் வசனம் என்று நிரூபணம் செய்ய ஒன்றிரண்டு நபித்தோழர்கள் அறிவிப்பது மட்டும் போதுமான ஆதாரமாகாது.

அல்ஃபாத்திஹா அத்தியாயம் குர்ஆனின் முதல் அத்தியாயம் என்று நாம் நம்புகிறோம். எவ்வாறு நம்புகிறோம்? ஒட்டுமொத்த சமுதாயமும் - ஒருவர் கூட மாற்றுக் கருத்துக் கொள்ளாமல் இதைக் குர்ஆனின் முதல் அத்தியாயம் என்று முடிவு செய்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினர்.

எனவே இது போல் வலிமையான சான்றின் மூலம் மட்டுமே குர்ஆன் வசனம் என்று முடிவு எடுக்க வேண்டும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டவுடன் அதை எழுதக் கூடியவர்களை உடனுக்குடன் அழைத்து எழுதி வைக்கச் செய்தார்கள். திருக்குர்ஆனுடன் திருக்குர்ஆன் அல்லாத எந்த வார்த்தையும் கலந்து விடாமல் இருக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்

உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனைத் தொகுத்த போது எழுத்தர்களான நபித்தோழர்கள் எந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்களோ, எந்த வரிசையில் மனனம் செய்திருந்தார்களோ அந்த அடிப்படையில் தான் தொகுத்தார்கள். எனவே எந்த வசனம் எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரிசைப்படுத்தி ஓதியும், எழுதச் செய்தும் வழிகாட்டியுள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒரு வசனத்தை எந்த இடத்தில் எழுத வேண்டும் என்பது உட்பட எல்லாக் குறிப்புகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி குர்ஆனில் அதிக அக்கரை செலுத்தியுள்ளார்கள் என்பது மேற்கூறிய ஹதீஸிலிருந்து தெளிவாகும்.

صحيح البخاري 
3758 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: ذُكِرَ عَبْدُ اللَّهِ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَقَالَ: ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ، بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اسْتَقْرِئُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ، مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَبَدَأَ بِهِ، وَسَالِمٍ، مَوْلَى أَبِي حُذَيْفَةَ [ص:28]، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ»، قَالَ: لاَ أَدْرِي بَدَأَ بِأُبَيٍّ، أَوْ بِمُعَاذِ بْنِ جَبَلٍ

அப்துல்லாஹ் பின் மஸ்வூது, ஸாலிம், முஆத், உபை பின் கஃபு ஆகிய நால்வரிடமிருந்து குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: புகாரி 3758, 3760, 3806, 3808

صحيح البخاري 
5000 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقُ بْنُ سَلَمَةَ، قَالَ: خَطَبَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ فَقَالَ: «وَاللَّهِ لَقَدْ أَخَذْتُ مِنْ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِضْعًا وَسَبْعِينَ سُورَةً، وَاللَّهِ لَقَدْ عَلِمَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي مِنْ أَعْلَمِهِمْ بِكِتَابِ اللَّهِ، وَمَا أَنَا بِخَيْرِهِمْ»، قَالَ شَقِيقٌ: فَجَلَسْتُ فِي الحِلَقِ أَسْمَعُ مَا يَقُولُونَ، فَمَا سَمِعْتُ رَادًّا يَقُولُ غَيْرَ ذَلِكَ

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருவாயிலிருந்து எழுபதுக்கும் அதிகமான அத்தியாயங்களைப் பெற்றிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் வேதத்தை நான் நன்கு அறிந்தவன் என்பதை நபித்தோழர்கள் விளங்கி இருக்கிறார்கள். (இதனால்) நான் அவர்களை விட (எல்லா விதத்திலும்) சிறந்தவனில்லை என்று ஒரு சொற்பொழிவில் இப்னு மஸ்ஊது (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா (ரலி)

நூல்: புகாரி 5000

صحيح البخاري 
5002 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ، مَا أُنْزِلَتْ سُورَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلَّا أَنَا أَعْلَمُ أَيْنَ أُنْزِلَتْ، وَلاَ أُنْزِلَتْ آيَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلَّا أَنَا أَعْلَمُ فِيمَ أُنْزِلَتْ، وَلَوْ أَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنِّي بِكِتَابِ اللَّهِ، تُبَلِّغُهُ الإِبِلُ لَرَكِبْتُ إِلَيْهِ»

அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் எவருமில்லை. அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் வேதத்தில் எந்த அத்தியாயம் அருளப்பட்டாலும் அது எங்கே இறங்கியது என்பதை நான் அறிவேன். எந்த வசனம் அருளப்பட்டாலும் அது யாரைப் பற்றி அருளப்பட்டது என்பதையும் நான் அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தை என்னை விட நன்கு அறிந்தவர்கள் ஒட்டகத்தில் சென்றடையும் தூரத்தில் இருந்தாலும் நான் அவர்களை நோக்கிப் பயணமாகி இருப்பேன் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி)

நூல்: புகாரி 5002

صحيح البخاري 
5003 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَنْ جَمَعَ القُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: " أَرْبَعَةٌ، كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ: أُبَيُّ بْنُ كَعْبٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ " تَابَعَهُ الفَضْلُ، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனைத் திரட்டியவர்கள் யார்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். உபை பின் கஃபு, முஆது பின் ஜபல், ஸைத் பின் ஸாபித், அபூஸைத் ஆகிய அன்ஸார்களைச் சேர்ந்த நால்வர் தான் என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா (ரலி)

நூல்: புகாரி 5003

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்அன் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டது என்பதையும், எந்த இடத்தில் யாரைப் பற்றி அந்த வசனங்கள் அருளப்பட்டன என்ற விபரங்கள் உட்பட எல்லா விபரங்களும் நபித்தோழர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன என்பதையும் இந்த ஹதீஸ்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு அருளப்பட்டு உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டவைகளை ஆண்டு தோறும் சரிபார்க்கும் பணியும் இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டது.

صحيح البخاري 
3624 - فَقَالَتْ: أَسَرَّ إِلَيَّ: «إِنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُنِي القُرْآنَ كُلَّ سَنَةٍ مَرَّةً، وَإِنَّهُ عَارَضَنِي العَامَ مَرَّتَيْنِ، وَلاَ أُرَاهُ إِلَّا حَضَرَ أَجَلِي، وَإِنَّكِ أَوَّلُ أَهْلِ بَيْتِي لَحَاقًا بِي». فَبَكَيْتُ، فَقَالَ: «أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ، أَوْ نِسَاءِ المُؤْمِنِينَ» فَضَحِكْتُ لِذَلِكَ

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். இந்த ஆண்டு இரண்டு முறை எனக்கு ஓதிக் காட்டினார்கள். இதன் மூலம் என் வாழ் நாள் (தவணை) நெருங்கி விட்டதாகவே நான் கருதுகின்றேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா (ரலி)

நூல்: புகாரி 3624

صحيح البخاري 
1902 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالخَيْرِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ، حَتَّى يَنْسَلِخَ، يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القُرْآنَ، فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ أَجْوَدَ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள். அதிலும் (குறிப்பாக) ரமளான் மாதத்தில் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனெனில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலானில் ஒவ்வொரு இரவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை எடுத்தோதுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6, 1902, 3220, 3554, 4997

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை திருக்குர்ஆனை எடுத்தோதிக் காட்டுவார்கள் என்ற ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு ஓதிக்காட்டியதன் மூலமும் ஒத்துப்பார்க்கப்பட்டுள்ளது என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

صحيح مسلم 
72 - (3004) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تَكْتُبُوا عَنِّي، وَمَنْ كَتَبَ عَنِّي غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ، وَحَدِّثُوا عَنِّي، وَلَا حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَيَّ - قَالَ هَمَّامٌ: أَحْسِبُهُ قَالَ - مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "

என் மூலம் குர்ஆன் அல்லாத எதனையும் எழுதி வைக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையும் பிறப்பித்திருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் 5326

பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்களை எழுதி வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர். ஆகவே மேற்கூறிய ஹதீஸுக்கு குர்ஆனுடன் கலந்து விடுமாறு எதனையும் எழுதி வைக்காதீர்கள் என்றே நாம் பொருள் கொள்ள முடியும்.

திருக்குர்ஆனில் இல்லாத எந்த ஒரு சொல்லையும் குர்ஆனுடன் இணைத்து எழுதாதீர்கள்! என்ற கட்டளையின் மூலம் குர்ஆன் விஷயத்தில் மிகமிக அதிக கவனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் உணரலாம். நபித்தோழர்களும் குர்ஆனில் சேராத எந்த ஒன்றையும் சேர்த்து எழுதியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அருளப்பட்ட எந்த வசனமும் எழுதப்படாமல் விடுபட்டதில்லை. எனினும் ஒட்டுமொத்தமாக நூல் வடிவில் அது தொகுக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக பல்வேறு நபித்தோழர்கள் தங்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை எழுதிக் கொண்டார்கள். சிலர் எழுதிக் கொண்டது வேறு சிலரிடம் இல்லாமல் இருந்தது.

சில வசனங்கள், அத்தியாயங்கள் அருளப்பட்ட போது சில நபித்தோழர்கள் எங்கேனும் சென்றிருந்தால் அவர்கள் அதை எழுதிக் கொள்ள முடியாமல் போனது.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் எல்லா நபித்தோழர்களும் எழுதி வைத்துள்ளதைத் திரட்டிஉ கோர்வை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் கட்டாயத்தை மேலும் உறுதிப் படுத்துவதற்கான நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

صحيح البخاري 
4679 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ - وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الوَحْيَ - قَالَ: أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ اليَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ عُمَرَ أَتَانِي، فَقَالَ: إِنَّ القَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ اليَمَامَةِ بِالنَّاسِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ القَتْلُ بِالقُرَّاءِ فِي المَوَاطِنِ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ القُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ، وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ القُرْآنَ "، قَالَ أَبُو بَكْرٍ: قُلْتُ لِعُمَرَ: «كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ عُمَرُ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي، وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ، قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ: وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لاَ يَتَكَلَّمُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ، وَلاَ نَتَّهِمُكَ، «كُنْتَ تَكْتُبُ الوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَتَتَبَّعِ القُرْآنَ فَاجْمَعْهُ، فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ القُرْآنِ، قُلْتُ: «كَيْفَ تَفْعَلاَنِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ أَبُو بَكْرٍ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ، فَقُمْتُ فَتَتَبَّعْتُ القُرْآنَ أَجْمَعُهُ مِنَ الرِّقَاعِ وَالأَكْتَافِ، وَالعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ، حَتَّى وَجَدْتُ مِنْ سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مَعَ خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهُمَا مَعَ أَحَدٍ غَيْرِهِ، {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} [التوبة: 128] إِلَى آخِرِهِمَا، وَكَانَتِ الصُّحُفُ الَّتِي جُمِعَ فِيهَا القُرْآنُ عِنْدَ أَبِي بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ، وَاللَّيْثُ [ص:72]، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنْ ابْنِ شِهَابٍ، وَقَالَ: مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، وَقَالَ مُوسَى: عَنْ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، مَعَ أَبِي خُزَيْمَةَ، وَتَابَعَهُ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، وَقَالَ أَبُو ثَابِتٍ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ. وَقَالَ: مَعَ خُزَيْمَةَ أَوْ أَبِي خُزَيْمَةَ

யாமாமா போர் நடந்த பின் அபூபக்ரு (ரலி) எனக்குத் தூது அனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்ற போது) உமர் (ரலி) அவர்களும் அவர்களுடனிருந்தனர். திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களை யமாமா போர்க்களம் அதிக அளவில் அழித்து விட்டது. இது போல் பல்வேறு போர்க்களங்களில் குர்ஆனை மனனம் செய்தவர்கள் அதிகம் கொல்லப்பட்டு விட்டால் குர்ஆனில் பெரும்பகுதி அழிந்துவிடுமோ? என அஞ்சுகிறேன். எனவே குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று உமர் என்னை வற்புறுத்துகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நான் எப்படிச் செய்வது என்று உமருக்கு நான் பதில் கூறினேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது மிகவும் சிறந்த பணி தான்! உமர் கூறினார். இறைவன் என் உள்ளத்திலும் அதன் நியாயத்தை உணர வைக்கும் வரை உமர் என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். (இறுதியில்) உமருடைய கருத்துக்கே நானும் வந்தேன் என்று என்னிடம் அபூபக்ரு (ரலி) விபரமாகக் கூறினார்கள். மேலும் என்னை நோக்கி, அறிஞனாகவும், இளைஞனாகவும் நீர் இருக்கிறீர்! நாம் உம்மைச் சந்தேகிக்க மாட்டோம். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீயை நீர் எழுதிக் கொண்டுமிருந்தீர்! எனவே குர்ஆன் வசனங்களைத் தேடி எடுத்து ஒன்று திரட்டுவீராக என்று அபூபக்ரு (ரலி) கட்டளையிட்டார்கள். குர்ஆனைத் திரட்டும் இந்தப் பணியை விட மலைகளில் ஏதேனும் ஒரு மலையை இடம் பெயர்க்கும் படி எனக்கு அவர் கட்டளையிட்டிருந்தால் அது எனக்கு அவ்வளவு சிரமமாக இருந்திருக்காது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்ய முடியும்? என்று நான் அவர்களிடம் கேட்டேன். இது மிகவும் சிறந்த பணி தான் என்று அவர்கள் கூறினார்கள். அபூபக்ரும், உமரும் கொண்ட கருத்தை நான் கொள்ளும் வரை அபூபக்ரு என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். பேரீச்சை மட்டைகள், ஓடுகள், மனித உள்ளங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆனை நான் திரட்டலானேன். தவ்பா அத்தியாயத்தின் இறுதிக்கு நான் வந்த போது லகத் ஜாஅகும் ரஸுலுன்... என்ற கடைசி வரிகளை அபூகுஸைமா அல் அன்ஸாரி என்பவரிடம் தவிர வேறு எவரிடமும் நான் காணவில்லை. அதை தவ்பா வின் இறுதியில் சேர்த்தேன். பிறகு அந்த ஏடு அபூபக்ரு அவர்களிடம் இருந்தது. அதன் பின் உமரிடம் இருந்தது. அதன் பின் உமருடைய மகள் ஹஃப்ஸாவிடம் இருந்தது.

அறிவிப்பவர்: ஸைது பின் ஸாபித் (ரலி)

நூல்: புகாரி 4679, 4986, 7191

இந்த வசனம் குஸைமா (ரலி) அவர்களிடம் மட்டும் எழுத்து வடிவில் இருந்தாலும் இது குர்ஆனில் உள்ளது தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

المستدرك على الصحيحين للحاكم 

3296 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا بَكَّارُ بْنُ قُتَيْبَةَ الْقَاضِي، ثنا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنِ عَمْرٍو الْعَقَدِيُّ، ثنا شُعْبَةُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، وَعَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «آخِرُ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ} » حَدِيثُ شُعْبَةَ عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ «صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخْرِجَاهُ»

[التعليق - من تلخيص الذهبي] 3296 - على شرط البخاري ومسلم

இந்த வசனம் தான் குர்ஆனில் இறுதியாக அருளப்பட்டது என்று உபை பின் கஅப் (ரலி) அறிவித்துள்ளார்கள்.

நூல் : ஹாகிம்

திருக்குர்ஆனைத் திரட்டும் பணியை மேற்கொண்ட ஸைது பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஒரு வசனத்தை குர்ஆனில் இணைக்கும் போது ஒரே ஒருவர் மட்டும் எழுதி வைத்திருந்தால் பதிய மாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ் உணர்த்துகின்றது.

லகத்ஜா அகும் ரஸுலுன்... என்ற வசனம் அபூகுஸைமா அல் அன்ஸாரி என்பவரிடம் மட்டுமே இருந்தது என்று கூறுவதன் மூலம் மற்ற வசனங்களை பலரும் எழுதி வைத்திருந்தார்கள் என்பதை நாம் உணரலாம். அந்த வசனம் மட்டும் தான் ஒரே ஒருவரிடம் இருந்திருக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். அந்த ஒரு வசனத்தைக் கூட உடனே ஸைது பின் ஸாபித் (ரலி) தவ்பா அத்தியாயத்தில் சேர்த்து விடவில்லை. அதையும் நன்கு பரிசீலனை செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படாத எந்த ஒரு வார்த்தையையும் மேம்போக்காக அந்த அறிஞர் குழுவினர் குர்ஆனுடன் சேர்த்து விடவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள மேற்கூறிய ஆதாரங்கள் போதுமானவையாகும்.

இந்த அறிஞர் குழுவின் மாபெரும் பரிசீலனையுடன் திரட்டப்பட்ட குர்ஆனில் தவ்பா தவிர எல்லா அத்தியாயங்களின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது.

صحيح البخاري
4987 - حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ: أَنَّ حُذَيْفَةَ بْنَ اليَمَانِ، قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ أَرْمِينِيَةَ، وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ العِرَاقِ، فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي القِرَاءَةِ، فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ، قَبْلَ [ص:184] أَنْ يَخْتَلِفُوا فِي الكِتَابِ اخْتِلاَفَ اليَهُودِ وَالنَّصَارَى، فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ: «أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي المَصَاحِفِ، ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ»، فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ، فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ العَاصِ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي المَصَاحِفِ "، وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ القُرَشِيِّينَ الثَّلاَثَةِ: «إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَيْءٍ مِنَ القُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ، فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ» فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي المَصَاحِفِ، رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ، وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا، وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ القُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ، أَنْ يُحْرَقَ

அபூபக்ரு (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் திரட்டப்பட்டு நூலுருவம் பெற்ற குர்ஆன் ஒரே ஒரு பிரதி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களின் வாழ்நாளில் அந்தப் பிரதி அவர்களிடம் இருந்து வந்தது. அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களிடம் அந்தப் பிரதி இருந்து வந்தது. அதன் பின் உமர் (ரலி) அவர்களின் மகளார் அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களிடம் அந்தப் பிரதி இருந்து வந்தது. உஸ்மான் (ரலி)யின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவிய போது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகத் திருக்குர்ஆனை ஓதலானார்கள். ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொள்ளும் ஒரே மூலப் பிரதி மதீனாவில் ஹஃப்ஸா (ரலி)யிடம் மட்டுமே இருந்தது. எல்லாப் பகுதி மக்களும் குர்ஆனை அதன் உண்மையான அமைப்பில் ஓதிட வேண்டும் என்பதற்காக மூலப் பிரதிக்கு பல நகல்கள் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கும் உஸ்மான் (ரலி) அனுப்பினார்கள். ஹுதைஃபதுல் யமான் (ரலி) அவர்கள் அர்மீனியா அஜர்பைஜான் வெற்றியின் போது அங்குள்ளவர்கள் குர்ஆனை ஓதுவதில் பல்வேறு முறைகளைக் கையாண்டு வந்ததைக் கண்டனர். இது அவர்களைத் திடுக்கமுறச் செய்தது (அப்போதை ஜனாதிபதி) உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து மூமின்களின் தலைவரே! யூத கிறித்தவர்கள் தங்கள் வேதங்களில் முரண்பட்டது போல் இந்தச் சமுதாயத்தினரும் முரண்படுவதற்கு முன்பாக இவர்களைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறினார்கள். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆன் (மூலப்) பிரதியை எங்களுக்குத் தந்துதவுங்கள். அதைப் போல் பல பிரதிகள் தயார் செய்து கொண்டு திருப்பித் தருகிறோம் என்று ஹஃப்ஸாவிடம் கேட்டு அனுப்பினார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்களும் தம்மிடமிருந்த பிரதியை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), ஸயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரைப் பல பிரதிகள் தயாரிக்கும்படி கட்டளையிட்டார்கள். அதன்படி பல பிரதிகளை அவர்கள் தயார் செய்தார்கள். மேற்கூறிய நால்வரில் ஸைத் பின் ஸாபித் (ரலி) (அவர்களைத் தவிர உள்ள) குறைஷிகளான மூவரையும் நோக்கி, நீங்களும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனில் (எப்படி ஓதுவது என்பதில்) கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதனை எழுதுங்கள்! ஏனெனில் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே குர்ஆன் இறங்கியது என்று கூறினார்கள். அப்படியே அவர்கள் செய்தார்கள். பல பிரதிகள் தயாரான பின் மூலப் பிரதியை ஹஃப்ஸா (ரலி)யிடம் உஸ்மான் (ரலி) ஒப்படைத்தார்கள். (நகல் எடுக்கப்பட்ட) பிரதிகளை நாலா பாகங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். அதைத் தவிர உள்ள மற்ற ஏடுகளைத் தீயிட்டு எரித்து விடும்படிக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 4988

மேற்கூறிய வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து விளங்கும் உண்மைகளை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் எவ்வாறு இறங்கியதோ அவ்வாறே எதையும் கூட்டாமல் குறைக்காமல் ஒரு பிரதியை அபூபக்ரு (ரலி) அவர்கள் தொகுத்தார்கள். பல அறிஞர்களின் தகுந்த பரிசீலனைக்குப் பின் அந்த ஒரு பிரதி தயாரிக்கப்பட்டது.

அந்த ஒரு பிரதியை பல நகல்களாக எடுக்கும் திருப்பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் மேற்கொண்டார்கள். அபூபக்ரு (ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட அந்த மூலப் பிரதியில் உள்ளதற்கு மேல் எந்த ஒன்றையும் அவர்கள் சேர்க்கவோ, நீக்கவோ இல்லை.

அவர்களால் தொகுக்கப்பட்டவற்றில் எவை எழுதப்பட்டிருந்ததோ அவை அனைத்துமே திருக்குர்ஆன் தான். ஸஹாபாக்கள் அத்தனை பேரின் ஒட்டுமொத்தமான கருத்தும் அது தான். அந்தப் பிரதிகளில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனமும் எழுதப்பட்டிருந்தது.

தவ்பா என்ற அத்தியாயத்தின் துவக்கத்தில் மட்டுமே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எழுதப்பட்டிருக்கவில்லை. ஸஹாபாக்கள் அனைவரும் எதைக் குர்ஆன் என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அதில் எந்த ஒன்றையும் குர்ஆன் அல்ல என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.

அபூபக்ரு (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனும், உஸ்மான் (ரலி) அவர்கள் அதிலிருந்து எடுத்த நகல்களும் ஸஹாபாக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்றிருந்தது. குர்ஆனில் இல்லாததைத் தவறுதலாகச் சேர்த்திருந்தால் நபித்தோழர்களில் எவராவது அதனை ஆட்சேபனை செய்திருப்பார். அது பற்றி சர்ச்சைகள் நடந்திருக்கும். அப்படி எதுவும் நடந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.

எனவே நபித்தோழர்கள் பெரும் சிரத்தையுடன் தொகுத்த குர்ஆனில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் எழுதப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பகுதி தான் என்பதற்கு இது வலுவான சான்றாகும்.

سنن أبي داود 
788 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، وَابْنُ السَّرْحِ، قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُتَيْبَةُ فِيهِ: عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتَّى تَنَزَّلَ عَلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»، وَهَذَا لَفْظُ ابْنِ السَّرْحِ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 669

அத்தியாயம் முடிந்ததன் அடையாளமாக பின்னால் வந்தவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமைச் சேர்க்கவில்லை என்பதையும், அது அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்டது என்பதையும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் அது எழுதப்பட வேண்டும் என்பது இறைவன் புறத்திலிருந்து வந்த கட்டளையே என்பதையும், எனவே அது குர்ஆனின் ஒரு பகுதி என்பதையும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் என்ற சொற்றொடர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது தவ்பா அத்தியாயம் தவிர எல்லா அத்தியாயங்களிலும் ஒரு வசனம் தான் என்பதைக் கண்டோம். முதல் சாரார் எடுத்து வைத்த ஆதாரங்களுக்கான விளக்கத்தை இனி காண்போம்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சில அத்தியாயங்களைக் குறிப்பிடும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறாமல் அந்த அத்தியாயங்களை ஓதி இருக்கிறார்கள். இந்தக் கருத்தில் ஐந்து ஹதீஸ்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அத்தியாயத்தின் ஒரு பகுதியில்லை என்பதற்குப் போதிய சான்றாக அவை ஆகமாட்டா.

ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு சில சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சில அத்தியாயங்களை ஓதிக் காட்டியுள்ளனர்.

صحيح مسلم 
53 - (400) حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْمُخْتَارِ، عَنْ أَنَسٍ، قَالَ: بَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا إِذْ أَغْفَى إِغْفَاءَةً ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسِّمًا، فَقُلْنَا: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللهِ قَالَ: «أُنْزِلَتْ عَلَيَّ آنِفًا سُورَةٌ» فَقَرَأَ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ} [الكوثر: 2] ثُمَّ قَالَ: «أَتَدْرُونَ مَا الْكَوْثَرُ؟» فَقُلْنَا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: " فَإِنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ، عَلَيْهِ خَيْرٌ كَثِيرٌ، هُوَ حَوْضٌ تَرِدُ عَلَيْهِ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ، آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ، فَيُخْتَلَجُ الْعَبْدُ مِنْهُمْ، فَأَقُولُ: رَبِّ، إِنَّهُ مِنْ أُمَّتِي فَيَقُولُ: مَا تَدْرِي مَا أَحْدَثَتْ بَعْدَكَ " زَادَ ابْنُ حُجْرٍ، فِي حَدِيثِهِ: بَيْنَ أَظْهُرِنَا فِي الْمَسْجِدِ. وَقَالَ: «مَا أَحْدَثَ بَعْدَكَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் எங்களுடன் இருந்த போது சிறிது நேரம் தலை கவிழ்ந்துவிட்டு பின்னர் சிரித்தவர்களாகத் தம் தலையை உயர்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதற்காகச் சிரிக்கின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். சற்று முன் எனக்கு ஒரு அத்தியாயம் அருளப்பட்டது. அதில் எனக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பதால் அதற்காக மகிழ்ச்சியுற்று சிரித்தேன் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இன்னா அஃதைனாகல் கவ்ஸர்... என்று ஓதிக் காட்டலானார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 607

ஒரு அத்தியாயம் இறங்கியதாகக் கூறி அந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்த்தே அதை ஓதிக் காட்டுகின்றார்கள்.

صحيح البخاري
5046 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَتْ مَدًّا»، ثُمَّ قَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருக்குர்ஆன் ஓதுதல் எவ்வாறு இருக்கும்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் விசாரிக்கப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீட்டி, நிறுத்தி ஓதுவார்கள் என்று கூறிவிட்டு, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான், ரஹீம் என்ற வார்த்தைகளைக் நீட்டி ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா

நூல்: புகாரி 5046

سنن أبي داود 
4001 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا ذَكَرَتْ أَوْ كَلِمَةً غَيْرَهَا " قِرَاءَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. الرَّحْمَنِ الرَّحِيمِ. مَلِكِ يَوْمِ الدِّينِ) يُقَطِّعُ قِرَاءَتَهُ آيَةً آيَةً " قَالَ أَبُو دَاوُدَ: «سَمِعْتُ أَحْمَدَ يَقُولُ الْقِرَاءَةُ الْقَدِيمَةُ {مَالِكِ يَوْمِ الدِّينِ}»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஓதுதல் பற்றி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஒவ்வொரு வசனமாக ஓதுவார்கள் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: அபூதாவூத் 3487

இந்த மூன்று நபிவழிகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்த்தே அத்தியாயங்களை ஓதி இருப்பது தெளிவாகக் கூறப்படுகிறது.

சில சமயங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடனும், வேறு சில சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இல்லாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை ஓதியுள்ளது முரண்பாடு போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் இதில் முரண்பாடு எதுவுமில்லை. ஏனெனில் ஆரம்ப காலங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வை இணைத்துக் கொள்ளும்படி இறைவனது உத்தரவு வராமல் இருந்து, பின்னரே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பே ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸை முன்னர் நாம் குறிப்பிட்டோம். இந்த ஹதீஸின் அடிப்படையில் மேற்கூறிய இரு கருத்துடைய ஹதீஸ்களை இணைக்கும் போது நமக்குத் தெளிவான விளக்கம் கிடைத்துவிடும்.

அதாவது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்குவதற்கு முன்னர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறாமலும், அதன் பின்னர் அதனைக் கூறியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதி இருக்கிறார்கள். இரண்டு வகையான ஹதீஸ்களுக்கும் அப்போது தான் அர்த்தமிருக்கும்.

سنن الدارقطنى
1207 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ وَاصِلٍ حَدَّثَنَا خَلاَّدُ بْنُ خَالِدٍ الْمُقْرِى حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ عَنِ السُّدِّىِّ عَنْ عَبْدِ خَيْرٍ قَالَ سُئِلَ عَلِىٌّ رضى الله عنه عَنِ السَّبْعِ الْمَثَانِى فَقَالَ (الْحَمْدُ لِلَّهِ) فَقِيلَ لَهُ إِنَّمَا هِىَ سِتُّ آيَاتٍ فَقَالَ (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ) آيَةٌ.

ஸப்வுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எவை? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றார்கள். அதில் ஆறு வசனங்கள் தானே உள்ளன என்று மறுபடியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (என்பதையும் சேர்த்து ஏழு வசனங்கள்) என்று பதில் கூறினார்கள்.

நூல் தாரகுத்னியில்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வையும் அந்தந்த அத்தியாயங்களில் ஒரு பகுதியாகவே நபித்தோழர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கும் திருக்குர்ஆனில் ஸப்வுல் மஸானி என்று கூறப்படுவது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உடன் சேர்ந்த ஃபாத்திஹா அத்தியாயம் தான் என்பதற்கும் இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓத மாட்டார்கள் என்று வருகின்ற ஹதீஸ்களின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அத்தியாயங்களின் ஒரு பகுதி இல்லை என்று கூறுவது ஏற்புடையதன்று. ஏனெனில் வேறு சில அறிவிப்புகளில் சப்தமிட்டு அதை ஓத மாட்டார்கள் என்று தெளிவாகக் கூறப்படுகின்றது. சப்தமிட்டோ, சப்தமிடாமலோ ஓதினார்கள் என்பதை வைத்து ஒன்றைக் குர்ஆனில் உள்ளதா? இல்லையா? என்று முடிவு செய்ய முடியாது.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் வேறு படுத்தி அறிந்து கொள்வதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று சிலர் கூறுவது பொருத்தமானது அல்ல.

பின்னர் வந்தவர்களால் பிரித்து அறிவதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எழுதப்பட்டது என்றால் இரண்டு சூராக்களுக்கிடையில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். முதல் சூராவாகிய ஃபாதிஹாவில் அது எழுதப்பட வேண்டியதில்லை.

பின்னர் வந்தவர்களால் பிரித்து அறிவதற்காக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சேர்க்கப்பட்டது என்றால் தவ்பா அத்தியாயத்திலும் அது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு அத்தியாயங்களைப் பிரித்துக் காட்டத் தான் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சேர்க்கப்பட்டது என்ற காரணம் சரியானது என்றால் தவ்பா, அன்பால் இரண்டையும் பிரித்துக் காட்ட பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் தேவையல்லவா?

ஒரு அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம் துவங்குகின்றது என்பதைக் காட்டுவதற்காக இப்படி ஒரு வாசகத்தைச் சேர்த்திருக்க வேண்டியதில்லை. ஒரு அத்தியாயம் முடிந்ததும், நீண்ட கோடு போன்ற அடையாளங்களைப் போட்டு வேறுபடுத்த முடியும். அர்த்தமும் கருத்துமுள்ள அழகான வசனத்தை உருவாக்கி குர்ஆனில் கட்டுப்பட்டதா? இல்லையா? என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வாசகத்தைச் சேர்த்திருக்க மாட்டார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சுருங்கச் சொல்வதென்றால் அல்லாஹ்வின் உத்தரவுப்படியே அந்த வசனம் அத்தியாயங்களின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. எந்த மனிதனுடைய அபிப்பிராயப்படியும் எதுவும் நபித்தோழர்களால் குர்ஆனில் சேர்க்கப்படவில்லை. அவ்வளவு வடிகட்டித் தான் குர்ஆன் தொகுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டால் இது பற்றிய ஐயங்கள் அகன்று விடும்.

அல்ஹம்து அத்தியாயத்தின் பொருள்

இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை அறிவதற்கு முன் இதன் நேரடிப் பொருளை அறிந்து கொள்வோம்.

* பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

* அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

* அர்ரஹ்மானிர் ரஹீம்

(அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

* மாலிகி யவ்மித்தீன்:

(அவன்) நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி

* இய்யா(க்)க நஃபுது

(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.

* வ இய்யா(க்)க நஸ்தயீன்

உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

* இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம்

(இறைவா) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!

* ஸிரா(த்)தல்லதீன அன் அம்(த்)த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்

அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

பிஸ்மில்லாஹ்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற இறை வசனத்திற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் என்று பொருள்.

இந்தச் சொற்றொடரில் பிஸ்மி அல்லாஹ் ரஹ்மான் ரஹீம் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. அல்லாஹ் என்ற சொல் அடுத்த வசனத்திலும் இடம் பெற்றுள்ளதால் அல்லாஹ் என்ற திருப்பெயர் பற்றி அந்த இடத்தில் விளக்குவோம். அது போல் ரஹ்மான் ரஹீம் ஆகிய சொற்கள் அதற்கு அடுத்த வசனத்தில் இடம் பெறுவதால் அந்த இடத்தில் இவ்விரு திருப்பெயர்கள் பற்றி விளக்குவோம். அல்லாஹ்வின் திருப்பெயர் கூறியே எந்தக் காரியத்தையும் துவக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கே விளக்குவோம்

முஸ்லிம்கள் தங்களின் எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கூறியே செய்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் மட்டுமின்றி, ஏனைய நபிமார்களும் அவர்களின் சமுதாயத்தினரும் இறைவனின் திருப்பெயர் கூறியே தங்கள் காரியங்களைத் துவங்கியுள்ளனர்.

நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் ஏறும் போது அல்லாஹ்வின் திருநாமத்தால் இதில் ஏறுங்கள்! என்று கூறியதாக திருக்குர்ஆனின் 11:41 வசனம் குறிப்பிடுகின்றது.

சுலைமான் (அலை) அவர்கள் அண்டை நாட்டு ராணிக்கு எழுதிய மடலில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியதாக திருக்குர்ஆனின் 27:30 வசனம் குறிப்பிடுகின்றது.

படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் நீர் ஓதுவீராக! என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனம். முதல் வசனத்திலேயே தனது திருநாமத்தால் ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதிலிருந்து பிஸ்மில்லாஹ்வின் மகத்துவத்தை நாம் தெளிவாக உணரலாம்.

திருக்குர்ஆனை ஓதும் போது மட்டுமின்றி எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கொண்டே நாம் துவக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

سنن النسائي 
78 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ قَالَ: طَلَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوءًا. فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ مَاءٌ؟» فَوَضَعَ يَدَهُ فِي الْمَاءِ وَيَقُولُ: «تَوَضَّئُوا بِسْمِ اللَّهِ». فَرَأَيْتُ الْمَاءَ يَخْرُجُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ قَالَ ثَابِتٌ: قُلْتُ لِأَنَسٍ: كَمْ تُرَاهُمْ؟ قَالَ: نَحْوًا مِنْ سَبْعِينَ

நபித்தோழர்கள் சிலர் உளூச் செய்வதற்காகத் தண்ணீரைத் தேடினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்தார்கள். அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் விரல்களிலிருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (அப்போது) நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்? என்று நான் கேட்டதற்கு சுமார் எழுபது நபர்கள் என்று அனஸ் (ரலி) பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித்

நூல்: நஸயீ 77

صحيح البخاري 
5376 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ الوَلِيدُ بْنُ كَثِيرٍ: أَخْبَرَنِي أَنَّهُ سَمِعَ وَهْبَ بْنَ كَيْسَانَ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ

உன் வலக்கரத்தால் உண்! அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உனக்கு அருகே உள்ளதை உண்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் அபீ ஸலமா (ரலி)

நூல்: புகாரி 5376

صحيح البخاري
3271 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " أَمَا إِنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ، وَقَالَ: بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَرُزِقَا وَلَدًا لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ "

மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பும் பிஸ்மில்லாஹ் கூற வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்துள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3271

அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போதும் இறைவனின் திருப்பெயர் கூறியே அறுக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆனின் 6:118, 6:121 ஆகிய வசனங்களும், நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன.

ஆனால் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற இதே சொல்லைத் தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. ஏனெனில் உண்ணும் போது, அறுக்கும் போது, உடலுறவு கொள்ளும் போது என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) பிஸ்மிக (உன் பெயரால்) என்பது போன்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

அது போன்ற சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு கற்றுத் தந்தார்களோ அதனையே கூறுவது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றுவதாகும். எந்தச் சந்தர்ப்பங்களில் வேறு விதமாக சொல்லித் தரவில்லையோ அது போன்ற சந்தர்ப்பங்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறலாம்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன், அர்ரஹ்மானிர் ரஹீம் மாலிகி யவ்மித்தீன்

ரப்புல் ஆலமீன்

ரஹ்மான்

ரஹீம்

மாலிகி யவ்மித்தீன்

ஆகிய நான்கு பண்புகளைக் கொண்ட அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பது இதன் கருத்து. இந்நான்கு பண்புகளிலும் இறைவனுக்குரிய அனைத்து இலக்கணங்களும் அடங்கியுள்ளன. இப்பண்புகளைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளும் எவரும் அல்லாஹ்வை முழுமையாகப் புரிந்து கொள்கின்றனர்.

இந்த நான்கு பண்புகளுக்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று இங்கே கூறப்படுவதால் அல்லாஹ் எனும் திருப்பெயர் பற்றி முதலில் ஆராய்ந்து விட்டு பின்னர் இந்நான்கு பண்புகளை ஆராய்வோம்.

அல்லாஹ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக எந்த மக்களைச் சந்தித்தார்களோ அந்த மக்கள் அல்லாஹ் எனும் ஏக இறைவனை அறிந்திருந்தார்கள். அகில உலகையும் படைத்து அனைத்து ஆற்றலையும் தன்னகத்தே கொண்டு அகில உலகையும் நிர்வகிக்கும் கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் அல்லாஹ் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி போதிக்கும் முன்பாகவே அம்மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அல்லாஹ் எனும் ஏக இறைவனை அம்மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறாகும். ஏராளமான சான்றுகளின் மூலம் இதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்துல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை என்பதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் நபியவர்களின் பாட்டனார் பெயர் சூட்டியிருப்பதிலிருந்து அம்மக்கள் அல்லாஹ்வைப் பற்றி முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை அறியலாம். அல்லாஹ் தான் எஜமான். மாந்தர் அனைவரும் அவனது அடிமைகளே என்ற நம்பிக்கை அம்மக்களுக்கு இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் பெயரிட்டிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத அம்மக்கள் அல்லாஹ்வை அறிந்திருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக அமைத்துள்ளான்.

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(அல்குர்ஆன் 29:61)

29:63, 31:25, 39:38, 43:87, 10:31, 23:84-89 ஆகிய வசனங்களிலும் அன்றைய காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) அல்லாஹ்வை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இய்யாக நஃபுது வசனத்தை விளக்கும் போது இது பற்றி விரிவாக நாம் விளக்கவுள்ளோம்.

அகில உலகைப் படைத்தவன், அனைத்து ஆற்றலும் உள்ளவன், அர்ஷில் வீற்றிருப்பவன், மழையையும் உணவையும் வழங்குபவன் அல்லாஹ் தான் என்று அம்மக்கள் நம்பியிருந்தனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் இவை.

அல்லாஹ்வை சர்வ சக்தியுள்ளவனாக நம்பிய மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏன் எதிர்த்தனர்?

அல்லாஹ்வின் முழு இலக்கணத்தை அவர்கள் விளங்காததே காரணமாகும்.

இதன் காரணமாகத் தான் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுடன் அல்லாஹ் நிறுத்திக் கொள்ளாமல் இறைவனுக்குரிய முழு இலக்கணத்தையும் அம்மக்களுக்கு விளக்குவதற்காக தொடர்ந்து நான்கு பண்புகளைக் கூறுகிறான். அப்பண்புகளை ஒவ்வொன்றாக நாம் காண்போம்.

ரப்புல் ஆலமீன்

அனைவரும் அடிமைகளே

முதலில் ரப்புல் ஆலமீன் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். ரப்பு என்ற சொல்லுக்கு எஜமான், பரிபாலனம் செய்பவன் என்று பொருள். ஆலமீன் என்றால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். பகுத்தறிவுள்ள, பகுத்தறிவற்ற, உயிருள்ள, உயிரற்ற, சரீரம் உள்ள, சரீரம் அற்ற எல்லவாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வார்த்தையே ஆலமீன் என்ற சொல்.

அகில உலகையும் பரிபாலனம் செய்பவன் என்பது ரப்புல் ஆலமீன் என்பதன் பொருள்.

படைப்பினங்களுக்கும், இறைவனுக்குமிடையே உள்ள உறவை வல்ல அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். அகில உலகுக்கும் அவன் எஜமானனாக இருப்பதால், அவனால் படைக்கப்பட்ட அனைவரும் அவனது அடிமைகளே. அடிமை - எஜமான் என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே கிடையாது.

இந்தப் பாடத்தை மறந்த காரணத்தினால் தான் மனித சமூகத்தில் பெரும்பாலோர் கடவுட் கொள்கையில் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் எவ்வளவு தான் இறைவனுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தாலும், எவ்வளவு தான் அதிசயங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்தாலும் அதிசயமான முறையிலே அவர் பிறந்தாலும் அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனுக்கு அவர் அடிமை தான்.

வேண்டுமானால் மற்ற அடிமைகளை விட சிறந்த அடிமை என்று கூறலாமே தவிர, அடிமை என்ற நிலையை விட்டும் உயர்ந்து விட்டார் என்று கூற முடியாது. இது தான் இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் பிரதான அம்சம். இந்த அம்சத்தைத் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடரில் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் இதை விரிவாக விளக்கமாக எடுத்து வைத்து அடிமைகள், அடிமைகள் தாம், எஜமான் எஜமான் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரையாக அமைந்த அத்தகைய வசனங்கள் சிலவற்றை நாம் பார்ப்போம்.

ஆதம் (அலை)

அல்லாஹ் தன் திருக்கரத்தால் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான்.

எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா? என்று (இறைவன்) கேட்டான்.

(அல்குர்ஆன் 38:75)

வானவர்களை அவர்களுக்கு ஸஜ்தாச் செய்யுமாறு கட்டளையிட்டு அவர்களின் மதிப்பை உயர்த்தினான். வானவர்களுக்கு கற்றுக் கொடுக்காததையெல்லாம் ஆதம் (அலை) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்.

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று அவர்கள் கூறினர். ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக! என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா? என (இறைவன்) கேட்டான். ஆதமுக்குப் பணியுங்கள்! என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

(அல்குர்ஆன் 2:31 - 34)

இவ்வளவு சிறப்புக்கள் வழங்கப்பட்டிருந்த ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஒரு கட்டளையைத் தான் மீறினார்கள். போனால் போகிறது என்று அல்லாஹ் விடவில்லை.அவர்களைத் தூக்கி எறிந்து விட்டான்.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன என்றும் கூறினோம்

(அல்குர்ஆன் 2:36)

(பார்க்க 2:38, 7:24, 20:123)

ஆதம் (அலை) அவர்கள் தமது தவறுக்காக வருந்தி பாவ மன்னிப்புக் கேட்ட பிறகு தான் அவர்களை மன்னித்தான்.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:37)

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:23)

அல்லாஹ் நேரடியாகப் படைத்த முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமான ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வால் அடிமையாகத் தான் நடத்தப்பட்டார்கள். அவர்களும் அடிமையாகத் தான் நடந்து கொண்டார்கள். இதற்குக் காரணம் அல்லாஹ், ரப்புல் ஆலமீனாக - அகிலத்துக்கும் எஜமானனாக இருப்பது தான்.

நூஹ் (அலை)

மிகப்பெரிய நபிமார்களில் நூஹ் (அலை) அவர்களும் ஒருவராவார்.

950 ஆண்டுகள் அவர்கள் மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்தார்கள்.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது

(அல்குர்ஆன் 29:14)

நூஹ் (அலை) அவர்களை மக்கள் நிராகரித்தனர். விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே அவர்களை ஏற்றனர். ஆனால் அவர்களின் மனைவியும், மகனும் அவர்களை ஏற்காத கூட்டத்தில் தான் இருந்தனர்.

அல்லாஹ்வுக்காக 950 ஆண்டு காலம் துன்பங்களைச் சகித்துக் கொண்டவர் என்பதால் அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்ற நிலையைக் கடந்து விட முடிந்ததா?

அப்படிக் கடந்திருந்தால் குறைந்த பட்சம் அவர்களது மகனையாவது அல்லாஹ் காப்பாற்றியிருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார். ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர் எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான். இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 11:42 - 47)

வெள்ளப் பிரளயத்திலிருந்து மகனைக் காப்பாற்ற நூஹ் (அலை) அவர்களால் இயலவில்லை. கப்பலில் ஏறச் சொல்லும் போது கூட நிராகரிப்பவர்களில் ஆகிவிடாதே எனக் கூறித் தான் அவனை அழைத்தார்கள். நபி என்ற காரணத்துக்காக மகனை ஏற்றிக் கொள்ளும் அதிகாரம் தமக்கு இல்லை என்பதை நூஹ் (அலை) உணர்ந்த காரணத்தினாலேயே கொள்கையை ஏற்று கப்பலில் ஏறச் சொல்கிறார்கள் என்பதை இவ்வசனங்களிலிருந்து அறிகிறோம்.

அழிக்கப்பட வேண்டியவர்கள் அழிக்கப்பட்ட பின் தமது மகன் பற்றி நூஹ் நபிக்கு நினைவு வருகிறது. தமது குடும்பத்தை அல்லாஹ் காப்பாற்றுவதாக வாக்களித்ததும் நினைவுக்கு வந்தது. எனவே தான் அவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனல்லவா! உன் வாக்குறுதி உண்மையானது தானே என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இதை அல்லாஹ் எவ்வளவு கடுமையாக எடுத்துக் கொள்கிறான் என்று பாருங்கள்!

அவன் உன் மகனில்லை

இவ்வாறு கேட்பது நல்ல செயல் கிடையாது.

உனக்கு அறிவு இல்லாததைப் பற்றி என்னிடம் இனிமேல் பேசக் கூடாது.

அறிவீனர்களில் ஒருவராக நீர் ஆகிவிடக் கூடாது.

நூஹ் நபிக்குச் சமமாகாதவர்களையெல்லாம் மகான்கள் எனவும் அவர்கள் நினைத்ததையெல்லாம் அல்லாஹ் செய்து கொடுக்கக் கடமைப்பட்டவன் போலவும் நம்புகிற சமுதாயமே! நூஹ் நபிக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையிலிருந்து பாடம் படியுங்கள்!

நான் எஜமான். நீர் அடிமை. நான் சொல்வதை நீர் கேட்க வேண்டுமே தவிர நீர் விரும்புவதையெல்லாம் நான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்று எவ்வளவு அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான் என்று சிந்தித்துப் பாருங்கள்!

இவ்வாறு அல்லாஹ் கண்டித்த உடன் நூஹ் நபி கூறியது தான் இங்கே மிகவும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்ன இறைவா! எனக்காக இதைக் கூட நீ செய்யக் கூடாதா? இதற்காக என்னைக் கோபித்துக் கொள்ளலாமா? என் மகனுக்காகக் கூட நான் பரிந்து பேச உரிமையில்லையா? என்று நூஹ் நபி கேட்கவில்லை.

இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன். அதற்காக என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் எனக்குத் தான் நட்டம் என்று தன் அடிமைத் தனத்தை நூஹ் நபி ஒப்புக் கொள்கிறார்கள்.

அல்லாஹ் தான் எஜமான். மற்றவர்கள் அவனுக்கு அடிமைகள் என்பதை இந்நிகழ்ச்சியிலிருந்து ஐயமற அறிந்து கொள்ளலாம்.

நூஹ் நபி அவர்களின் மகனுக்கு மட்டும் தான் இந்தக் கதி என்று நினைக்க வேண்டாம். அவரது மனைவியின் கதியும் இது தான். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்! என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன் 66:10)

மனைவியையோ, மகனையோ காப்பாற்றும் அதிகாரம் கூட எந்த நல்லடியாருக்கும் வழங்கப்படவில்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாகவுள்ளது.

இப்ராஹீம் (அலை)

இப்ராஹீம் (அலை) அவர்களுக்காகவும் கூட அல்லாஹ் அடிமைத்தனத்திலிருந்து விலக்களிக்கவில்லை. மற்ற எவருக்கும் அளிக்காத பல தனிச் சிறப்புக்களை அவர்களுக்கு வல்ல அல்லாஹ் வழங்கி இருந்தான். அந்தச் சிறப்புக்களைக் கவனிக்கும் எவருக்குமே இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் அடிமை என்ற நிலையைக் கடந்து விட்டவரோ என்று தான் எண்ணத் தோன்றும்.

உலகில் அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை புனர் நிர்மானம் செய்கின்ற பணியை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் வழங்கினான்.

(அல்குர்ஆன் 2:127)

அந்த இல்லத்தைத் தூய்மைப்படுத்தும் திருப்பணியும் இப்ராஹீம் (அலை) அவர்களிடமே வழங்கப்பட்டது.

(அல்குர்ஆன் 2:125)

இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற அந்த இடத்தில் தொழுமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன் 2:125)

இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மக்காவுக்கு அபயத்தையும், அந்தப் பாலைவனத்தில் பலவகையான உணவுகளையும் இன்றளவும் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

(அல்குர்ஆன் 2:126)

இப்ராஹீம் (அலை) அவர்களைப் பல்வேறு வழிகளில் சோதித்துப் பார்த்த போது அந்தச் சோதனையில் அவர்கள் வெற்றி பெற்றதாக அல்லாஹ் சொல்கிறான்.

(அல்குர்ஆன் 2:124)

மக்காவின் தனிச் சிறப்பைக் குறிப்பிடும் போது இப்ராஹீம் நின்ற இடமும் அங்கே உள்ளது என்று சிலாகித்துச் சொல்கிறான்.

(அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் என்ற தனி நபர் ஒரு சமுதாயமாகவே திகழ்ந்ததாக அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான்.

(அல்குர்ஆன் 16:120)

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆளரவமற்ற வனாந்திரத்தில் தமது மனைவியையும், குழந்தையாக இருந்த மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம் (அலை) விட்டு வந்தார்கள்.

(அல்குர்ஆன் 14:37)

குழந்தை தாகத்தால் தவித்த போது ஹாஜரா அம்மையார் அவர்கள் ஸஃபா மர்வா எனும் மலைகளில் ஏறி ஏதாவது வாகனக் கூட்டம் தென்படுகிறதா என்று பார்த்தார்கள்.

நம்மையும் அது போல் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன் 2:158)

இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தார் செய்த ஒரு காரியத்தை அனைவரும் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுவதாக இருந்தால் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீது அல்லாஹ் எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும்?

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆட்டைப் பலியிட்டதற்காக நாமும் அதைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன் 37:108)

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தான் மீது கல்லெறிந்ததற்காக நாம் ஷைத்தானைக் காணாவிட்டாலும் நாமும் கல்லெறிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

அவர்கள் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் நம் மீது மார்க்கக் கடமையாகவே ஆக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து அவர்கள் மீது அல்லாஹ் எந்த அளவு நேசம் வைத்திருக்கிறான் என்பதை விளங்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுவீராக என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன் 16:123)

இப்ராஹீமைத் தனது நண்பராக ஆக்கிக் கொண்டு விட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 4:125)

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம் . இப்ராஹீமுக்கு நீ அருள் புரிந்ததைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அருள் புரிவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துஆச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

(புகாரி 3370)

இதிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள இயலும்.

இவ்வளவு மகத்தான சிறப்புக்களைப் பெற்றிருந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு அடிமை என்ற நிலையிலிருந்து விலக்குப் பெறவும் இல்லை. எஜமான் என்ற தனது தன்மையில் அல்லாஹ் அவர்களுக்குப் பங்களிக்கவுமில்லை.

நம்முடைய அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யாஃகூப் ஆகியோரை (நபியே) நீர் நினைவு கூர்வீராக!

(அல்குர்ஆன் 38:45)

தன்னுடைய அடியார்களில் ஒருவராகவே அவர்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதனால் தான் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களில் சிலவற்றை அல்லாஹ் நிறைவேற்றாமலும் இருந்திருக்கிறான்.

அவர்களை அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு இமாமாக (தலைவராக) நியமித்த நேரத்தில் என் சந்ததிகளிலும் அத்தகையவர்களை ஏற்படுத்துவாயாக என்று கேட்கிறார்கள். அக்கிரமம் புரிபவர்களுக்கு என் வாக்குறுதி சேராது என்று அல்லாஹ் கூறி விடுகிறான்.

(அல்குர்ஆன் 2:124)

இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளாக இருக்கின்ற தகுதியை மட்டும் வைத்து எவரும் இறைவனின் அன்பைப் பெற இயலாது. இறைவனுக்கு அடிமைகளாக வாழ்வதோடு, அல்லாஹ் எஜமான் என்பதையும் ஏற்று வாழ வேண்டும் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதனால் தான் அவர்களின் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அனுமதி மறுக்கிறான்.

(அல்குர்ஆன் 9:114)

ஒவ்வொரு மனிதனும் தனது இளமைப் பருவத்தில் அல்லது நடுத்தர வயதில் தனக்கு ஒரு சந்ததி வேண்டும் என்று ஆசைப்படுவான். இது போன்ற ஆசை இப்ராஹீம் நபியவர்களுக்கும் இருந்தது. அல்லாஹ்வின் நண்பர் என்பதால் அவர்களது ஆசையை அவர்களாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வும் நிறைவேற்றவில்லை.

தள்ளாத வயதில் தான் அவர்களுக்கு இஸ்மாயில் இஸ்ஹாக் ஆகிய புதல்வர்களை அல்லாஹ் வழங்கினான்.

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான் என்று அவர் கூறினார்

(அல்குர்ஆன் 11:71,72)

நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர். எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

(அல்குர்ஆன் 15:53,54)

அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்! என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, நான் மலட்டுக் கிழவியாயிற்றே என்றார்.

(அல்குர்ஆன் 51:29)

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

(அல்குர்ஆன் 14:39)

ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படக் கூடிய வயதில் ஏன் ஒரு குழந்தையை அல்லாஹ் கொடுக்கவில்லை.

எதை விரும்புகிறானோ எப்போது விரும்புகிறானோ அப்போது செய்யும் அதிகாரம் படைத்த ரப்புல் ஆலமீன் என்பது தான் காரணம்.

ஈஸா (அலை)

ஈஸா (அலை) என்ற இறைத் தூதரின் பிறப்பு அதிசயமான ஒன்று. இது உலகின் இரண்டு பெரும் சமுதாயத்தினர் ஏற்றுக் கொண்ட உண்மை. தந்தையின்றி இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் அவர்கள் படைக்கப்பட்டார்கள். இதைத் திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

(அல்குர்ஆன் 3:47, 19:20)

இவ்வளவு அதிசயமான முறையில் பிறந்து விட்டதனால் இறைவனின் அடிமை என்ற நிலையை ஈஸா (அலை) கடந்து இறைவனுக்குச் சகோதரனாக, மகனாக ஆகிவிட முடியுமா? அவர்களையே அல்லாஹ் பின்வருமாறு கூறச் செய்து விடுகின்றான். அதுவும் அவர் பிறந்த உடனேயே இவ்வாறு கூறச் செய்கிறான்.

நான் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருக்கிறேன் என்று ஈஸா (அலை) கூறினார்கள்.

(அல்குர்ஆன் 19:30)

மஸீஹ் (என்ற ஈஸா) அவர்களும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

(அல்குர்ஆன் 4:172)

எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் அல்லாஹ் எஜமான் என்ற நிலையிலிருந்து தன்னை இறக்கிக் கொள்ள மாட்டான். எஜமான் தன்மையில் எவருக்கும் பங்களிக்கவும் மாட்டான் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

இவ்வளவு தெளிவாக விளக்கிய பிறகும் உண்மையை உணராது, அவர்களை அடிமை என்ற நிலையிலிருந்து உயர்த்தி வேறுவிதமான உறவுகளைக் கற்பனை செய்து கொள்பவர்களுக்கும் புரியக் கூடிய வகையில், அகில உலகுக்கும் எஜமான் என்பதை அல்லாஹ் தெளிவாக்குவதைக் கவனியுங்கள்!

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்

(அல்குர்ஆன் 5:17)

ஈஸா (அலை) அவர்கள் இறைக் கோட்பாட்டில் எந்தத் தவறும் செய்திடவில்லை. இறைவனுக்கு அடிமையாக இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை. அவர்களின் சமுதாயத்தினர் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் கற்பித்துக் கொண்ட தந்தை - மகன் என்ற உறவுக்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

அப்படி இருந்தும் இவ்வளவு கடுமையான வார்த்தைகளை அல்லாஹ் பிரயோகிக்கிறான். இதிலிருந்து அவன் ரப்புல் ஆலமீன் (அகில உலகின் எஜமான்) என்ற தனித்தன்மையை எவருக்கும் பங்கிட்டு வழங்கத் தயாராக இல்லை என்பதை உணரலாம்.

எந்த ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்று கருதிக் கொண்டு அவர்களை வணங்கி வழிபடுகின்றார்களோ அந்த ஈஸா (அலை) அவர்களையும், அவர்களின் தாயையும், உலகில் உள்ள அனைவரையும் நான் அழித்தொழிக்க முடிவு செய்தால் என்னை எவர் தடுக்க முடியும்? என்று கேட்டு ரப்புல் ஆலமீன் என்ற தன் உரிமையை மீண்டும் வலியுறுத்துகின்றான்.

எவரேனும் இறைத்தன்மையைப் பிறருக்குப் பங்கிட்டு வழங்க முயன்றால், இறைவனின் அடிமைகளை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க (?) எண்ணினால் அவர்களை அவர்களால் பூஜிக்கப்பட்வர்களே கைகழுவி விடும் நிலைமை மறுமையில் ஏற்படும் என்று வல்ல அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார். நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.

(அல்குர்ஆன் 5:116, 117)

ஈஸா (அலை) அவர்களுக்காகக் கூட அல்லாஹ் தன் ஆளுமையில் பங்களிக்கத் தயாரில்லை என்றால் மற்றவர்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

யஃகூப் (அலை)

இப்ராஹீம் (அலை) அவர்களின் பேரரான யஃகூப் நபியின் வரலாற்றையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவர்கள் தமது மகன் யூசுபின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்கள். அல்லாஹ் யூசுப் நபி அவர்களைச் சிறு பிராயத்திலேயே தந்தையிடமிருந்து பிரித்தான்.

மகனைப் பறிகொடுத்த சோகத்தில் அவர்கள் அழுது புலம்பத் தான் முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. மகன் உயிரோடு இருக்கிறாரா? எங்கே இருக்கிறார் என்ற மறைவான விபரம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு கவலைப்பட்டார்கள் என்பதைத் திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்) என்று அவர்கள் கூறினர். எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என்று அவர் கூறினார்

(அல்குர்ஆன் 12:84,85,86)

இஸ்ரவேல் எனும் சிறப்புப் பெயர் பெற்ற நல்லடியார் யஃகூப் நபியின் நிலை இது தான். தன் மகன் தன்னோடு இருக்க வேண்டும் என்று எல்லா மனிதர்களும் ஆசைப்படுவது போலவே அவர்களும் ஆசைப்பட்டார்கள்

ஆனால் அல்லாஹ் தான் நினைத்ததைத் தான் செய்தானே தவிர யஃகூப் நபியின் விருப்பத்தைக் கண்டு கொள்ளவில்லை.

அவன் ரப்புல் ஆலமீனாக இருப்பதே இதற்குக் காரணம்.

யூசுப் (அலை)

அழகிய வரலாறு என்று அல்லாஹ்வே யூசுப் நபியின் வரலாற்றைச் சிறப்பித்துக் கூறுகிறான்.

صحيح البخاري 
3390 - أَخْبَرَنِي عَبْدَةُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الكَرِيمُ، ابْنُ الكَرِيمِ، ابْنِ الكَرِيمِ، ابْنِ الكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمُ السَّلاَمُ»

பாரம்பரியத்தின் அடிப்படையில் மிகச் சிறந்தவர் என்று ஒருவரைக் கூற வேண்டுமானால் யூசுப் நபியைத் தான் கூற முடியும். ஏனெனில் அவரும் நபியாக இருந்தார். அவரது தந்தை யஃகூபும் நபியாக இருந்தார். அவரது பாட்டனார் இஸ்ஹாகும் நபியாக இருந்தார். அவரது முப்பாட்டனார் இப்ராஹீமும் நபியாக இருந்தார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3390

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நபியாக இருக்கிறாரே என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு அடிமைத் தனத்திலிருந்து விதி விலக்கு அளித்தானா?

உடன் பிறந்த சகோதரர்களால் கிணற்றில் தள்ளப்பட்டார்கள். சந்தையில் அடிமையாக விற்கப்பட்டார்கள். வீண் பழி சுமத்தப்பட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்கள். தந்தையைப் பல ஆண்டுகள் பிரிந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் யூசுப் என்ற அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.

தமக்கு எது நன்மையோ அதைத் தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கூட யூசுப் நபி உட்பட எந்த நபிக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. அவன் ரப்புல் ஆலமீன் (அகிலத்தாருக்கும் எஜமான்) ஆக இருப்பதே இதற்குக் காரணம்.

அய்யூப் (அலை)

அல்லாஹ்வால் அதிகமாகச் சோதிக்கப்பட்ட நபிமார்களில் அய்யூப் (அலை) அவர்களும் ஒருவராவார்.

பலவிதமான நோய்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். குடும்பத்தார் அவரிடமிருந்து பிரிந்து சென்றனர்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன் 21:83,84)

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). அவருக்கு அவரது குடும்பத்தினரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.

(அல்குர்ஆன் 38:41,42)

நோய் நொடிகளுக்கு ஆளாகி, மனைவியால் புறக்கணிக்கப்பட்டு, கடுமையான வேதனையை அவர்கள் அனுபவித்தார்கள். மகான்கள்(?) மற்றவர்களின் நோய்களை மகான்கள்(?) நீக்குவார்கள் என்று நம்புகிற சமுதாயமே! அய்யூப் நபியவர்களுக்கு ஏற்பட்ட நோயை தாமாகக் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்தனை தான் செய்ய முடிந்தது.

அவன் எப்போது விரும்பினானோ அப்போது குணப்படுத்தி குடும்பத்தினரையும் சேர்த்து வைத்தான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியும் ரப்புல் ஆலமீன் என்ற அல்லாஹ்வின் பண்புக்கு விளக்கவுரையாகும்.

ஸக்கரியா (அலை)

யஹ்யா (அலை) அவர்களின் தந்தையாகவும், மர்யம் (அலை) அவர்களை எடுத்து வளர்த்த காப்பாளராகவும், ஈஸா நபியின் வளர்ப்புத் தந்தையாகவும் ஸக்கரியா (அலை) திகழ்ந்தார்கள்.

மற்றவர்களைப் போல் தமக்கொரு சந்ததி வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கும் இருந்தது. ஆனால் இவர்களால் தமக்கொரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள இயலவில்லை.

அவர்கள் ஆசைப்பட்ட பருவத்தில் அல்லாஹ்வும் அவர்களுக்கு சந்ததிகளை வழங்கவுமில்லை.

பலமுறை அழுதழுது பிரார்த்தித்த பின்னால் அவர்களும் அவர்களது மனைவியும் தள்ளாத வயதை அடைந்த நிலையில் அவர்களுக்கு அல்லாஹ் ஓர் ஆண் மகனை வழங்கினான்.

அப்போது தான் ஸக்கரிய்யா இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன் என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்? என்று அவர் கேட்டார். தான் நாடியதை அல்லாஹ் இப்படித் தான் செய்வான் என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன் 3:38,39,40)

அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! என்றார். ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன் என்று அவர் கூறினார். அப்படித் தான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவன் கூறுகிறான் என்றார்.

(அல்குர்ஆன் 19:3-9)

என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன் என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21:89,90)

ஸக்கரிய்யா அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் செய்தியை அல்லாஹ் கூறிய போது அவர்களால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு தள்ளாத வயதை அடைந்திருந்தார்கள். இதனால் தம் மனைவி கர்ப்பமடைந்ததற்கு ஒரு அடையாளத்தை அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

எவ்வளவு தான் நல்லடியாராக இருந்தாலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் எவருக்கும் பங்கில்லை என்பதை இந்த நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

என்றோ மரணித்து விட்டவர்களின் மண்ணறைகளில் போய் சந்ததிகளைக் கேட்கும் சமுதாயமே! இவர்களெல்லாம் இப்ராஹீம் (அலை), ஸக்கரியா (அலை) அவர்களின் தூசுக்கும் கூட சமமாக மாட்டார்கள். அந்த நபிமார்களுக்கே தமக்கொரு சந்ததியை தாம் விரும்பும் நேரத்தில் உருவாக்கிக் கொள்ள முடியாத போது என்றோ மரணித்தவர்கள் எப்படி நமக்கு குழந்தைகளைத் தருவார்கள் என்று சிந்திக்க வேண்டாமா?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்பதையும் மற்றவர்கள் உங்களைப் போலவே எந்த அதிகாரமும் வழங்கப்படாத அடிமைகள் என்பதையும் உணர மாட்டீர்களா?

யூனுஸ் (அலை)

யூனுஸ் (அலை) அவர்கள் ஈமான் கொள்ளாத தம் சமூகம் அழிக்கப்பட வேண்டுமென விரும்பினார்கள். அதை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அந்த மக்கள் கடைசி நேரத்தில் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தி தங்கள் எஜமானனிடம் மன்னிப்புக் கேட்டபோது அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்களை அல்லாஹ் காப்பாற்றுகிறான்.

(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.

(அல்குர்ஆன் 10:98)

ஒரு நபியின் விருப்பத்துக்கு மாறாக சாதாரண மக்களின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

தமது விருப்பத்துக்கு மாறாக சாதாரண மக்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றதற்காக இறைவனிடமே யூனுஸ் (அலை) கோபித்துக் கொண்டு போகிறார்கள். இதன் காரணமாக மீன் வயிற்றில் சிறை வைக்கப்படுகின்றார்கள்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன் என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

(அல்குர்ஆன் 21:87)

தமது விருப்பப்படி தான் அல்லாஹ் நடக்க வேண்டும்; தாம் கேட்டதை எல்லாம் அல்லாஹ் தந்தாக வேண்டும் என்றெல்லாம் நபிமார்களும் கூட அல்லாஹ்வை வற்புறுத்த முடியாது என்பதை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகின்றது.

தாம் செய்த இந்தத் தவறுக்காக அல்லாஹ்வைத் துதித்து அவனிடம் மன்னிப்புக் கேட்கத் தவறி இருந்தால் யூனுஸ் கியாம நாள் வரை மீன் வயிற்றிலேயே சிறை வைக்கப்பட்டிருப்பார் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 37:144)

தன் விருப்பத்தை அல்லாஹ் நிறைவேற்றவில்லை என்று யூனுஸ்(அலை) கோபித்துச் சென்றதற்காக இறைவனது எஜமான் தனத்தில் குறை கண்டதற்காக எவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்கின்றான் தெரியுமா?

அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.

(அல்குர்ஆன் 68:49)

ஒவ்வொரு நபிமார்களையும் பின்பற்றி நடக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்ட அல்லாஹ் யூனுஸைப் போல் நீர் ஆகக் கூடாது என்கிறான். (அல்குர்ஆன் 68:48)

எந்த நபியாக இருந்தாலும் அவன் தீர்ப்பில் குறை காணக் கூடாது. அவனது அடிமை என்பதை மறந்து விடலாகாது என்பதால் தான் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்)

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அகில உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூட தனது அடிமை என்ற நிலையிலிருந்து விடுவிக்க அல்லாஹ் தயாராக இல்லை.

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:15)

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 6:50)

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:162, 163)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:188)

என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றும் கூறுவீராக! என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(அல்குர்ஆன் 23:97, 98)

என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக!

(அல்குர்ஆன் 23:118)

(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 114:1 - 4)

அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 113:1 - 5)

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 46:9)

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 72:22)

என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 67:28)

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 6:17)

இந்த வசனங்களை ஒன்றுக்குப் பல முறை வாசியுங்கள்! நபிமார்களிலேயே தலை சிறந்த - அல்லாஹ்வால் அதிகம் விரும்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளே இவை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டது மட்டுமின்றி இதை மக்களிடம் போய்ச் சொல்லுமாறும் ஆணையிடப்படுகின்றது.

உமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறாமல் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உமது வாயாலேயே மக்களிடம் கூறுவீராக என்ற கட்டளை அழுத்தமானதாகும்.

மகான்கள், பெரியார்கள் என்றெல்லாம் சிலரைப் பற்றி நாமாக முடிவு செய்து கொண்டு, அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் என்று நம்பிக்கை வைத்து மன்றாடுவதும், பிரார்த்தனை செய்வதும், நேர்ச்சை செய்வதும் எவ்வளவு தவறானவை என்பதை இந்த இடத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் கூட இத்தகைய அதிகாரத்தை அல்லாஹ் வழங்காத போது நாம் மகான்கள் என்று கற்பனை செய்து கொண்டவர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்குவானா என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அகிலத்துக்கும் அவன் எஜமான் (ரப்புல் ஆலமீன்) என்பதில் நபிமார்களே அடங்கும் போது மகான்கள் அடங்க மாட்டார்களா என்பதையும் உணர வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அன்றைய காபிர்கள் பல்வேறு அற்புதங்களைக் குறிப்பிட்டு அவற்றில் ஒன்றே ஒன்றை நிகழ்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அவ்வாறு நிகழ்த்திக் காட்டினால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகவும் கூறினார்கள். இந்த அற்புதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நிகழ்த்த முடிந்ததா? அல்லது அல்லாஹ் தான் அனுமதித்தானா?

அவர்கள் கேட்ட அற்புதங்கள் அனைத்தையுமோ, அவற்றில் ஒன்றையோ செய்வது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமா? இதற்கு முன்னர் நபிமார்கள் மூலம் எத்தனையோ அற்புதங்களை அவன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறானே?

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:90-93)

அவன் நாடும் போது நிகழ்த்திக் காட்டுவான். நாடினால் அதை மறுப்பான். இதைத் தேர்வு செய்யும் அதிகாரம் எந்த நபிமார்களுக்கும் கிடையாது. இதனால் தான் நான் கடவுள் இல்லை. நான் மனிதனாகவும் கடவுளின் தூதராகவும் தான் இருக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கூறச் செய்கிறான்.

இங்கேயும் நான் எஜமான் நீர் அடிமை என்பதைப் பிரகடனம் செய்கிறான்.

(அற்புதங்கள் - கராமத் குறித்து இய்யாக நஃபுது வசனத்தை விளக்கும் போது விரிவாக ஆய்வு செய்வோம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் தான் வளர்த்தார். அவர்களுக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்து, திருமணம் செய்து வைத்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது அவர்களுக்குக் கடுமையான எதிர்ப்பு வந்த போதெல்லாம் அதைத் தடுக்கும் அரணாக இருந்தார்.

அவர் இருந்த வரை நபிகள் நாயகத்தின் மீது யாரும் கை வைக்கத் துணியவில்லை. அவர்களின் தோழர்களைத் தான் துன்புறுத்தி வந்தனர். அபூதாலிப் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்ததால் அவரது சகோதரர் மகனாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்பு பெற்றிருந்தனர்.

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அல்லாஹ் நாடினால் இதைச் செய்து காட்டுவது பெரிய காரியமல்ல.

தனது நேசர் புன்படலாமா? அவர்களைக் கவலையில் ஆழ்த்தலாமா? என்றெல்லாம் அல்லாஹ் நினைக்கவில்லை. தான் விரும்பியதைத் தான் அவன் முடிவு செய்தான். யார் கவலைப்பட்டாலும் அது பற்றி அவன் கவலைப்படவே இல்லை.

صحيح البخاري 
3884 - حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الوَفَاةُ، دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ، فَقَالَ: «أَيْ عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ» فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ، تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَلَمْ يَزَالاَ يُكَلِّمَانِهِ، حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ: عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْهُ» فَنَزَلَتْ: {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الجَحِيمِ} [التوبة: 113]. وَنَزَلَتْ: {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ} [القصص: 56]

அபூதாலிப் மரண வேளையை நெருங்கிய போது அவரைச் சந்திக்கச் சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! ஒரு கொள்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்களுக்காக நான் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கிறேன் என்று எவ்வளவோ மன்றாடிக் கேட்டனர். நான் என் அப்பன் வழியிலேயே மரணிக்கிறேன் என்று கூறி காஃபிராகவே (இஸ்லாத்தை ஏற்காதவர்) அபூதாலிப் மரணித்து விட்டார். தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்காது மரணித்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடுமையான வேதனையை அளித்தது. இதற்காகப் பெரிதும் கவலை கொண்டார்கள். இடிந்து போனார்கள். அப்போது தான் பின் வரும் வசனம் அருளப்பட்டது. நிச்சயமாக நீர் விரும்பியவரை நேர்வழியில் செலுத்த முடியாது. (அல்குர்ஆன் 28:56)

அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி)

நூல்: புகாரி 3884, 4772

இந்த ஒரு நிகழ்ச்சியே ரப்புல் ஆலமீன் என்பதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

صحيح مسلم 
104 - (1791) حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَ أُحُدٍ، وَشُجَّ فِي رَأْسِهِ، فَجَعَلَ يَسْلُتُ الدَّمَ عَنْهُ، وَيَقُولُ: «كَيْفَ يُفْلِحُ قَوْمٌ شَجُّوا نَبِيَّهُمْ، وَكَسَرُوا رَبَاعِيَتَهُ، وَهُوَ يَدْعُوهُمْ إِلَى اللهِ؟»، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128]

உஹதுப் போர் முனையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல் உடைக்கப்பட்டு முகம் சேதப்படுத்தப்பட்ட போது நபியின் திருமுகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்று அவர்கள் கூறினார்கள். அதிகாரத்தில் உமக்கு எதுவுமில்லை (அல்குர்ஆன் 3:128) என்ற வசனத்தை அப்போது அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3346

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட காயம் காரணமாக மூர்ச்சையாகி மரணித்து விட்டார்களோ என்ற வதந்தி கிளம்பியது. காயம் அவ்வளவு கடுமையானதாக இருந்தது. அந்த வேதனை தாளாமல் தான் என் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? எனக் கேட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிமை எனும் நிலையிலிருந்து விடுபட்டு இருந்தால் அல்லாஹ்வும் இதை ஆமோதித்திருப்பான். உன் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெறலாம் எனக் கூறியிருப்பான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட துன்பத்தைப் பார்க்காத அல்லாஹ் அவர்கள் பயன்படுத்திய வார்த்தையைத் தான் பார்க்கிறான். இவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? என்று நீர் எப்படிக் கூறலாம்? ஒருவரை வெற்றி பெற வைப்பதும், தோற்க வைப்பதும் எனது அதிகாரமல்லவா? அதில் எப்படி நீர் தலையிடலாம் என்று உணர்த்திடவே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை எனக் கூறுகிறான்.

வேண்டியவராயிற்றே! உயிர் போகும் அளவுக்கு வேதனைப்படுகிறாரே! அந்த நேரத்தில் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றெல்லாம் அல்லாஹ் பார்க்கவில்லை. எந்த நேரத்திலும் அடிமைகள் அவர்கள் நிலைக்கு ஏற்ற வார்த்தைகளைத் தான் பேச வேண்டுமே தவிர எனக்கே உரித்தான வார்த்தைகளைப் பேசக் கூடாது என்று கற்றுத் தருகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதவர்களின் சமாதிகளில் மண்டியிடுவோர் ரப்புல் ஆலமீன் என்ற அல்லாஹ்வின் பண்பையும், அதற்கு விளக்கமாக அமைந்த இந்த நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்துத் திருந்தட்டும்!

ரப்புல் ஆலமீன் என்பதற்கு அனைவரும் அவனது அடிமைகளே என்பது மட்டும் தான் பொருள் என்று கருதக் கூடாது. ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

கடவுள் ஒருவரே

ரப்புல் ஆலமீன் என்ற வார்த்தைப் பிரயோகம் இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே உள்ள உறவுகளை மட்டும் கூறவில்லை. ஓரிறைக் கொள்கையின் அவசியத்தையும் இந்தச் சொற்றொடர் உறுதி செய்கின்றது.

அவன் அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்துக் காப்பவன் என்பதால் எல்லா இலாக்காக்களும் அவனது கையில் தான். தன் இலாக்காக்களைப் பங்கிட்டு எவரிடமும் அவன் கொடுக்கவில்லை என்பதையும் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் உள்ளடக்கியுள்ளது.

உங்கள் செவிப் புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

(அல்குர்ஆன் 6:46)

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப்படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 7:158)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

(அல்குர்ஆன் 27:60)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

(அல்குர்ஆன் 27:61)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

(அல்குர்ஆன் 27:62)

கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா? என்று கேட்பீராக! கியாமத் நாள் வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 28:71,72)

அனைத்து இலாக்காக்களையும் தான் ஒருவனே கவனித்துக் கொள்வதாக இவ்வசனங்கள் கூறுகின்றன. கடவுள் ஒரே ஒருவன் தான் என்பதையும் ஐயமற விளக்குகின்றன. அந்த வகையில் இவ்வசனங்கள் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடரின் விளக்கவுரைகளே!

ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை மற்றொரு இடத்தில் விளக்கமாகவே அல்லாஹ் கூறுகிறான்.

கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? அவர்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா? அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

(அல்குர்ஆன் 21:22)

இந்தப் பூமியையும், ஏனைய கோள்களையும், அண்ட வெளியையும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.

ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்துச் சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எப்போதோ ஏற்படக் கூடிய சூரிய, சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும்; எந்தெந்தப் பகுதியில் முழுமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.

பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால் தான் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை.

அகில உலகத்துக்கும் அவன் மட்டுமே எஜமானனாக - ரப்புல் ஆலமீனாக - இருப்பது தான் இதற்கு ஒரே காரணமாகும்.

இதைத் தான் மேற்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

ஆக்குவதற்கு ஒரு கடவுள்! அழிப்பதற்கு ஒரு கடவுள்! காப்பதற்கு ஒரு கடவுள்! துன்பத்தை நீக்க ஒரு கடவுள்! இன்பத்தை வழங்க மற்றொரு கடவுள்! மழைக்குத் தனி கடவுள்! உணவு வழங்க இன்னொரு கடவுள்! கல்விக்கு என்று ஒரு கடவுள்!

கடவுளை இப்படியெல்லாம் கூறுபோடுவதைத் தடுக்கும் விதத்திலேயே தன்னை ரப்புல் ஆலமீன் என்கிறான் அல்லாஹ்.

ஒரு மனிதனை அழிக்க வேண்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா? காக்கப்படுவானா?

இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?

தமிழனுக்கு ஒரு கடவுள்! மலையாளிக்கு மற்றொரு கடவுள்! இது என் கடவுள்! அது உன் கடவுள்! என்ற சித்தாந்தத்தையும் ரப்புல் ஆலமீன் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் தகர்த்தெறிகிறான். தமிழனாயினும், மலையாளியாயினும், இந்தியனாயினும், அராபியனாயினும், குரைஷியாயினும், ஹபஷியாயினும் அகில உலகுக்கும் நானே ரப்பு எஜமான் என்று அல்லாஹ் பிரகடனப்படுத்துகிறான்.

தமிழனுக்கும், மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும், அரபியனுக்கும் அல்லது குரைஷிக்கும் ஹபஷிக்கும் சண்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?

இதனால் தான் அல்லாஹ் தன்னை ரப்புல் ஆலமீன் அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலித்துக் காப்பவன் என்கிறான்.

ரப்புல் ஆலமீன் என்பதற்கு

அனைவரும் அவனது அடிமைகளே என்றும்

கடவுள் ஒருவரே என்றும்

பொருள் இருப்பது போல் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

கடவுள் தேவைகளற்றவன்

பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான்.

கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் நேரடியாகப் பார்க்கிறார்கள்.

கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்கு காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாரா? என்றால் அதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுளை ரப்புல் ஆலமீன் என்று நம்பினால் கடவுளின் பெயரால் எந்தச் சுரண்டலும் நடக்காது. எவரது சுயமரியாதையும் இதனால் பாதிக்கப்படாது.

ஏனெனில் ரப்புல் ஆலமீன் - அனைத்தையும் பரிபாலனம் செய்பவன் என்பதில் அவன் எந்தத் தேவையும் அற்றவன் என்ற கருத்தும் உள்ளடங்கியுள்ளது.

நான் உங்களுக்குத் தேவையானதைத் தந்து உங்களைப் பரிபாலிக்கக் கூடியவனே தவிர உங்களிடம் எதையும் கேட்பவனல்லன் என்று கூறி கடவுளின் பெயரால் நடக்கும் சுரண்டலையும் ஒழித்துக் கட்டுகிறான் அல்லாஹ்.

பத்தியையும், சாம்பிரானியையும், சர்க்கரையையும் கொண்டு வா! என்று தன் பக்தனிடத்தில் கேட்பவனும், தேங்காயும், வாழைப்பழமும், பூமாலையும் கொண்டு வா என்று தன் அடிமையிடத்தில் எதிர்பார்ப்பவனும் மெழுகுவர்த்தியையும், காணிக்கையையும் தந்தாக வேண்டும் என்று தன் படைப்புகளிடம் வேண்டுபவனும் அல்ல நான். உங்கள் அனைவருக்கும் எல்லாவற்றையும் தந்து உதவுபவன் நான் என்பதை ரப்புல் ஆலமீன் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான்.

உங்கள் இறைவனாகிய நான் தீப ஆராதனைகளையும், சந்தனம் பால் அபிஷேகத்தையும் பக்தனிடம் வேண்டுபவனோ படைப்புக்களால் பாதுகாக்கப்படுபவனோ வெயில் மழை போன்றவற்றிலிருந்து தன் அடிமையினால் காக்கப்படுபவனோ அல்லன். உங்கள் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் ரப்புல் ஆலமீன் ஆவேன் என்று அல்லாஹ் விளக்குகின்றான்.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகவும் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அந்த வசனங்கள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரைகளே.

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:195)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 7:197,198)

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 35:40)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:20, 21)

கடவுள் என்பவன் அனைத்தையும் படைத்தவனாகவும், அனைத்தையும் பரிபாலிப்பவனாகவும் இருக்க வேண்டும். எதையும் செய்ய இயலாமலும், பரிபாலிக்க இயலாமலும் இருப்போர் கடவுளாக முடியாது என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ரப்புல் ஆலமீன் (அகில உலகையும் படைத்துப் பரிபாலிப்பவன்) என்பதன் விளக்கவுரைகளே இவ்வசனங்கள்.

ரப்புல் ஆலமீன் என்பதற்கு

அனைவரும் அவனது அடிமைகளே என்றும்

கடவுள் ஒருவரே என்றும்

கடவுள் தேவைகளற்றவன் என்றும்

பொருள் இருப்பது போல் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

மனித குல ஒருமைப்பாடு

கடவுளை மறுப்பவர்கள் உருவாகிட மற்றொரு காரணம் பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகள்.

கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளை பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் போய் கடவுளை பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான். நாங்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும். நீங்கள் எங்கள் வழியாகத் தான் பூஜை செய்ய வேண்டுமே தவிர நேரடியாகச் செய்ய முடியாது என்கிறான்.

எனக்கு மந்திரம் தெரியும் எனக் கூறினாலும், நானும் சுத்தமாகக் குளித்து விட்டுத் தான் வந்துள்ளேன் எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.

இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவைதானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.

மனிதனின் முயற்சியால் பெறக்கூடிய கல்வி, பதவி, புகழ், போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதையாவது ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால் அதைக் கடவுளும் ஏற்றுக் கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது.

பிறப்பின் அடிப்படையில் மனிதனைக் கூறுபோட்டு வேறுபடுத்தும் சித்தாந்தத்துக்கு எதிராக ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் சம்மட்டி அடி கொடுக்கிறது.

அவன் ஒருவன் மட்டுமே எஜமான். மற்ற அனைவரும் அடிமைகள் தான். நான் எப்படி கடவுளின் அடிமையாக இருக்கிறேனோ அது போன்று தான் நீயும் ஒரு அடிமை. அடிமைகள் என்ற விதத்தில் இருவரும் சமமானவர்கள் தான். எஜமான் முன்னிலையில் நிற்கும் எவரும் அவனது அடிமைகளாகத் தான் நிற்க வேண்டும் என்ற சிந்தனையை மனிதனுக்கு ஊட்டி குலப் பெருமைக்கு சாவு மணி அடிக்கிறது ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர்.

கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே புரோக்கரும், புரோகிதரும் இல்லை என்பதையும் இந்தச் சொற்றொடர் தாங்கி நிற்கிறது.

கடவுளை நம்பும் மக்கள் அவனை ரப்புல் ஆலமீன் என்றும் நம்பி விட்டால் இது போன்ற அவமானங்களைச் சுமக்கும் நிலை ஏற்படாது. சுயமரியாதைக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்பதைக் கூறும் வசனங்கள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதற்கான விளக்கவுரைகளே!

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 49:13)

அற்பமானவை தவிர பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

(அல்குர்ஆன் 53:32)

எந்தச் சட்டங்களாலும் ஒழித்துக்கட்ட முடியாத வேற்றுமைகளையும், தீண்டாமையையும் ரப்புல் ஆலமீன் என்று கடவுளை நம்புவதன் மூலம் அடியோடு ஒழித்துக் கட்ட முடியும். இஸ்லாம் ஒழித்துக் கட்டிக் காட்டியது. இன்றும் கூட ஒழித்துக் கட்டி வருகிறது?

ரப்புல் ஆலமீன் எனும் போது மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்ற கருத்தும் அடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரப்புல் ஆலமீன் என்பதற்கு

அனைவரும் அவனது அடிமைகளே என்றும்

கடவுள் ஒருவரே என்றும்

கடவுள் தேவைகளற்றவன் என்றும்

மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்றும்

பொருள் இருப்பது போல் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

மனிதனுக்கு மனிதன் அடிமை அல்ல

மனிதன் கடவுளை மறுப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

கடவுளை இப்படி வணங்க வேண்டும். இந்த நாளில் வணங்க வேண்டும் என்றெல்லாம் ஒழுங்குகள் எல்லா மதங்களிலும் உள்ளன. இந்த ஒழுங்குகள் யாரால் உருவாக்கப்பட்டன என்று கேட்டால் அதற்குச் சரியான விடை கிடைப்பதில்லை. இன்றைக்கு மதகுருவாக இருப்பவர் கூட ஒரு வணக்கத்தை உருவாக்க முடியும்.

இதைப் பார்க்கும் ஒருவன் நம்மைப் போல் இருக்கின்ற இந்த மனிதன் இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம் என்று சிந்திக்கிறான்.

இந்த வழிபாட்டு முறை கடவுளிடமிருந்து வந்தது என்று அவர்கள் விடையளிக்க முடியாது. அப்படி விடையளித்தால் காலத்திற்கேற்ப வழிபாடுகள் மாறாது. புதுப்புது வழிபாடுகள் உருவாக முடியாது.

நம்மைப் போன்ற மனிதன் கண்டு பிடித்ததை ஏற்கும் போது அவனையே நாம் கடவுளாகக் கருதும் நிலை ஏற்படும்.

ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் அந்தக் குறையையும் நிவர்த்தி செய்துவிடுகிறது.

எந்த மதகுருவும் புதிதாக ஒரு வழிபாட்டு முறையை உருவாக்க முடியாது. கடவுள் எப்படி வழிபட வேண்டும் என்று குர்ஆன் மூலம் கட்டளையிட்டானோ அல்லது அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) மூலம் வழிகாட்டினானோ, அவை மட்டும் தான் வணக்க வழிபாடுகள். அதற்குப் பிறகு எந்த வணக்கமோ எந்தச் சட்டதிட்டமோ கிடையாது. ஏனெனில் ரப்புல் ஆலமீன் தான் அடிமைகளுக்கு எந்தக் கட்டளையும் பிறப்பிக்க முடியும்.

ஒரு அடிமை இன்னொரு அடிமையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதோ, அடிமைப்படுத்த எண்ணுவதோ எவ்விதத்திலும் நியாயமானதல்ல. எஜமான் தான் அடிமைகள் மீது ஆதிக்கம் செலுத்த அருகதை உள்ளவன்.

ஒன்றை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனப் பிரகடனப்படுத்தவோ, ஹராம் என்று தடை உத்தரவு பிறப்பிக்கவோ, ஒன்றைக் கடமையாக்கவோ, சட்டங்கள் வகுக்கவோ, வணக்கங்களுக்கு உரிமை கொண்டாடவோ எஜமான் மட்டுமே அருகதை உள்ளவன். எந்த ஒரு அடிமையும் இன்னொரு அடிமைக்கு இது போன்ற கட்டளைகளை இடமுடியாது என்பதையும் ரப்புல் ஆலமீன் என்ற உயர் பண்பு மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

தனது அதிகாரத்தை இதன் மூலம் ஊர்ஜிதம் செய்து கொள்ளும் அல்லாஹ், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சட்டங்கள் இயற்றி, அடிமைப்படுத்துவதைத் தடை செய்வதன் மூலம் மனிதனது சுயமரியாதையையும் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்.

மத குருமார்கள் மீது கொண்ட பக்தியின் காரணமாக மக்கள் மத குருமார்களின் கால்களில் விழுந்து வணங்குவதையும், அவர்களிடம் தம் தேவைகளை முறையிடுவதையும், அவர்களிடம் ஆசி பெறுவதையும், அவர்களுக்குக் காணிக்கை செலுத்துவதையும் நாம் காண்கிறோம்.

பதவிக்காகவும், பணத்துக்காகவும், இன்னும் பல ஆதாயம் கருதியும் தலைவர்களின் கால்களில் தொண்டர்கள் விழுந்து கிடப்பதையும், பாத பூஜை செய்வதையும் நாம் காண்கிறோம்.

மத குருமார்களோ, தலைவர்களோ யாராயினும் அவர்களும் மனிதர்களே! அவர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் தேவைப்படுகின்றன. மற்றவர்களைப் போல் அதை விட அதிகமாகவே அவர்களுக்கும் ஆசைகள் உள்ளன. போட்டி, பொறாமை, பழிவாங்குதல், பெருமை, ஆணவம் போன்ற எல்லா பலவீனங்களும் அவர்களிடமும் உள்ளன. மற்றவர்களைப் போலவே மலஜலத்தைச் சுமந்தவர்களாக அவர்களும் உள்ளனர்.

இதெல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இத்தகையவர்களிடம் தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து விடுகிறான். படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்த வேண்டும் என்பதை உணராததே இந்த அவலத்துக்குக் காரணம்.

அகில உலகுக்கும் ஒருவன் தான் எஜமான், மற்ற அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்பதை அறிந்தால் இத்தகைய இழிவை மனிதன் தன் மேல் சுமத்திக் கொள்ள மாட்டான்.

முஸ்லிம் சமுதாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தம் உயிரினும் மேலாக மதிக்கின்றது. மற்ற எந்த மதத்தவரும் தம் தலைவர்களை மதிப்பதை விட அதிமதிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் சமுதாயம் மதிக்கின்றது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வணங்கியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வந்தவர்களும் அவர்களை வணங்குவதில்லை.

صحيح بن حبان
4162 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم دَخَلَ حَائِطًا مِنْ حَوَائِطِ الأَنْصَارِ فَإِذَا فِيهِ جَمَلانِ يَضْرِبَانِ وَيَرْعَدَانِ فَاقْتَرَبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْهُمَا فَوَضَعَا جِرَانَهُمَا بِالأَرْضِ فَقَالَ مَنْ مَعَهُ سَجَدَ لَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَسْجُدَ لأَحَدٍ وَلَوْ كَانَ أَحَدٌ يَنْبَغِي أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا لِمَا عَظَّمَ اللَّهُ عَلَيْهَا مِنْ حَقِّهِ.

நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தார்கள். அங்கே இரு ஒட்டகங்கள் நடுங்கிக் கொண்டு மூட்டுக்களை தரையில் வைத்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தவர்கள் ஒட்டகங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று பேசிக் கொண்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவரும் எவருக்கும் ஸஜ்தாச் செய்வது கூடாது. ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்யலாம் என்று இருந்தால் பெண்கள் தமது கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். ஏனெனில் மனைவியின் மீது கணவனுக்குள்ள உரிமையை அல்லாஹ் முக்கியத்துவப்படுத்தியுள்ளான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : இப்னுஹிப்பான்

 

مسند أحمد
12345 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ (1) ، عَنْ أَنَسٍ قَالَ: " مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا لِمَا يَعْلَمُونَ (2) مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ " (3)

தமக்காகப் பிறர் எழுந்து நிற்பதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 2678, அஹ்மத் 11895

தாம் அடக்கம் செய்யப்பட்ட பின் தமது அடக்கத்தலம் வணக்கத்தலமாக ஆகக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 7054

صحيح البخاري
435 و 436 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

நபிமார்களின் அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கியதற்காக யூதர்களையும், கிறித்தவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

நபியவர்களின் இந்தப் போதனைகள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரைகளே.

ரப்புல் ஆலமீன் என்ற நம்பிக்கை எவரது உள்ளத்தில் பதிந்து விட்டதோ அவர்கள் ஒரு போதும் தன்மானத்தையும், சுயமரியாதையையும் எவர் முன்னிலையிலும் இழக்க மாட்டார். எவ்வளவு பெரிய மகானாக தலைவனாக இருந்தாலும் அவனும் தன்னைப் போன்ற ஒரு மனிதன் தான் என்பதை சரியாக உணர்ந்து கொள்வார்.

மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுவதிலிருந்து விடுவிக்கும் மந்திரச் சொல்லே ரப்புல் ஆலமீன்.

அனைவருக்கும் எஜமானாக

அனைவரையும் படைத்தவனாக

அனைத்தையும் பரிபாலனம் செய்பவனாக

மொழி, நிறம், இனம் என்ற பேதங்களைக் கடந்து அனைவரையும் இரட்சிப்பவனாக

போட்டியாக எந்த சக்தியும் இல்லாதவனாக

எதனையும் எப்போதும் செய்ய ஆற்றல் மிக்கவனாக

எல்லா இலாக்காக்களையும் தன் ஆதிக்கத்தில் கொண்டவனாக

திகழும் அந்த மகத்தான சர்வசக்தனைத் தவிர வேறு எவன் புகழுக்கு உரிமை கொண்டாட இயலும்?

அதனால் தான் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று அல்லாஹ் பிரகடனம் செய்கின்றான்.

அர்ரஹ்மான் - அர்ரஹீம்

ரஹ்மான், ரஹீம் ஆகிய இரு சொற்களும் ரஹிம என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ரஹிம என்ற சொல்லின் பொருள் அருளினான் அல்லது இரங்கினான் என்பதாகும்.

ஒரே மூலத்திலிருந்து இவ்விரு சொற்களும் பிறந்தாலும் இரண்டு சொற்களுக்கும் அருள் புரிவான் என்ற பொதுவான கருத்து இருந்தாலும் சிறிய வித்தியாசமும் உள்ளது.

வேண்டியவன், வேண்டாதவன், விருப்பமானவன், விருப்பமில்லாதவன் என்ற பாகுபாடு இன்றி அருள் புரிபவன் ரஹ்மான் என்றும், வேண்டியவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அருள் புரிபவன் ரஹீம் என்றும் அரபு மொழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வுலகில் ரஹ்மானாகவும், இரு உலகிலும் ரஹீமாகவும் இருப்பவனே என்று அல்லாஹ்வைக் குறிப்பிடும் வழக்கம் இருந்து வந்தது.

இவ்வுலகைப் பொருத்தவரை அவன் அருள் புரியும் போது நல்லவன், கெட்டவன் என்ற அடிப்படையில் செய்வதில்லை. அவனை மறுக்கக் கூடியவர்களுக்கும் இவ்வுலகில் பாக்கியங்களை வழங்கி வருகிறான். எனவே இவ்வுலகைப் பொருத்தவரை அவன் ரஹ்மானாக உள்ளான்.

அதே சமயம் தனது நல்லடியார்களுக்கு மட்டும் மறுமையில் பிரத்யோகமான அருளை வழங்குவான். இம்மையிலும் கூட வேண்டியவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அருள் புரிகிறான். அதனால் தான் இரு உலகிலும் ரஹீமாக இருப்பவனே என்று குறிப்பிடப்படுகிறது.

சுருக்கமாக கூறுவதென்றால் ரஹ்மானுக்கு அளவற்ற அருளாளன் என்றும், ரஹீமுக்கு நிகரற்ற அன்புடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

அருள், இரக்கம் என்பது வேண்டியவன் வேண்டாதவன் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. ஒரு பிச்சைக்காரனுக்குக் கூட அருள் செய்யலாம். அவன் நமக்கு வேண்டியவனோ, தெரிந்தவனோ கிடையாது. ஏன் நாய்க்குக் கூட அருள் - இரக்கம் காட்டலாம். இதனால் அதை நேசிக்கிறோம் என்று பொருள் இல்லை.

அன்பு என்பது வேண்டியவர்கள் மீது மட்டுமே ஏற்படுவதாகும்.

நண்பனுக்கு ஒரு பொருளை நாம் கொடுக்கும் போது அன்பும் உள்ளது. அருளும் உள்ளது.

அதையே ஒரு பிச்சைக்காரனுக்குப் போடும் போது அருள் மட்டுமே உள்ளது.

ரஹ்மான் என்பதற்கும், ரஹீம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான்.

எல்லா மனிதர்களுக்கும் அவன் ரஹ்மானாகவும் - அளவற்ற அருளாளனாகவும் - நல்ல மனிதர்களுக்கு மட்டும் ரஹீமாகவும் - நிகரில்லா அன்பு உடையவனாகவும் இருக்கிறான் என்பது அர்ரஹ்மானிர் ரஹீம் என்ற சொற்றொடரின் பொருளாகும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஏன் கூற வேண்டும் என்பதற்கு இப்போது கூடுதல் விளக்கம் கிடைக்கிறது.

அவன் ரப்புல் ஆலமீனாக இருப்பதனாலும்

அவன் ரஹ்மானாக இருப்பதனாலும்

அவன் ரஹீமாக இருப்பதனாலும்

அவனுக்கே புகழனைத்தும்

என்று காரணத்துடன் விளங்கிக் கொள்கிறோம்.

ரஹ்மான் என்ற திருப்பெயர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ, நபித்தோழர்களின் பேச்சுக்களிலோ பயன்படுத்தப்பட்டதே இல்லை. அல்லாஹ் என்ற சொல் எவ்வாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லையோ அதே போல் ரஹ்மான் என்பதும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லை.

அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

ரஹீம் என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது ரஹீம் என்ற அடைமொழியை அல்குர்ஆன் 9:128 வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.

ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.

ரஹீம் என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் இரக்க குணம் உள்ளவர் என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு நிகரற்ற அன்புடையவன் என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.

ரஹீம் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்கு காரணமாகும்.

ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 48:29)

இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

صحيح البخاري 
1284 - حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ - قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377, 7448

மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள்.

நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.

பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள்.

எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை ஸமீவுன் என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் அனைத்தையும் செவியுறுபவன் என்று கூறலாம்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன் என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2 வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14 வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59 வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23 ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீ என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணைக் கடல்

அல்லாஹ் தன்னை ரப்புல் ஆலமீன் என்று கூறியது மட்டும் போதாதா? அத்துடன் ஏன் இந்த இரண்டு பண்புகளையும் தொடர்ந்து கூற வேண்டும்? என்பதை இப்போது ஆராய்வோம்.

ரப்புல் ஆலமீன் அகில உலகுக்கும் அதிபதி என்று அல்லாஹ் தன்னை அறிமுகம் செய்யும் போது, மனித உள்ளங்களில் அல்லாஹ்வைப் பற்றி சில தப்பான அபிப்பிராயங்கள் தோன்றுவது இயல்பு.

அகில உலகுக்கும் அதிபதி (ரப்புல் ஆலமீன்) என்ற அறிமுகத்தைச் செவியுறும் மனிதன் சாதாரண அதிகாரம் படைத்த தலைவர்களே கொடூரமானவர்களாக இருக்கும் போது, அகில உலகுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருக்கும் அல்லாஹ் இவர்களை விடவும் கொடூரமானவனாக இருப்பானோ? என்று எண்ணலாம்.

இப்படிப்பட்ட எண்ணம் மனித உள்ளங்களில் தோன்றாமலிருக்கவும், ஏற்கனவே தோன்றி இருந்தால் அதை நீக்கவும் ரப்புல் ஆலமீன் என்ற பண்பைத் தொடர்ந்து அர்ரஹ்மான், அர்ரஹீம் என்ற அழகிய திருப்பெயர்களை அல்லாஹ் கூறுகிறான்.

நான் ரப்புல் ஆலமீன் அகில உலகுக்கும் அதிபதி. எனக்கு மேல் எந்த சக்தியும் கிடையாது. நான் எது செய்தாலும் எவரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது. உங்களின் சின்னஞ்சிறு தவறுகளையும் கூட நான் விசாரித்துத் தண்டனை வழங்க முடியும். ஆனாலும் நான் அப்படிச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்) நிகரற்ற அன்புடையவன் (அர்ரஹீம்)

நீங்கள் பார்த்து பழகிய உங்கள் தலைவர்களை விட என்னிடம் அதிகாரமும், ஆற்றலும், வல்லமையும் இருந்தாலும் நான் அர்ரஹ்மானாகவும், அர்ரஹீமாகவும் இருக்கிறேன் என்று பொருத்தமான இடத்தில் இந்தப் பண்புகளையும் அமைத்து விடுகிறான் அல்லாஹ்.

இவ்வாறு அளவற்ற அருளாளனாக இருப்பது எவரது வற்புறுத்தலுக்காகவோ, அல்லது வேண்டுகோளுக்காகவோ அல்ல. மாறாக தன் மீது தானே இதை விதியாக்கிக் கொண்டதாக இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறான்.

உங்கள் இறைவன் தன் மீது ரஹ்மத்தை (அருளை அன்பை) விதியாக்கிக் கொண்டான்.

(அல்குர்ஆன் 6:54, 6:12)

صحيح البخاري 
2856 - حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ يَحْيَى بْنَ آدَمَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ مُعَاذٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حِمَارٍ يُقَالُ لَهُ عُفَيْرٌ، فَقَالَ: «يَا مُعَاذُ، هَلْ تَدْرِي حَقَّ اللَّهِ عَلَى عِبَادِهِ، وَمَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ؟»، قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى العِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقَّ العِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَ مَنْ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أُبَشِّرُ بِهِ النَّاسَ؟ قَالَ: «لاَ تُبَشِّرْهُمْ، فَيَتَّكِلُوا»

முஆதே! அல்லாஹ்வுக்கு மனிதர்கள் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்? அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்றேன். அல்லாஹ்வுடன் எவரையும் இணையாக்காது அவனை வணங்குவதே அந்தக் கடமை என்று கூறிவிட்டு அல்லாஹ்வுக்கு மனிதர்கள் இணைவைக்காது இருந்தால் அவர்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்றேன். இணைவைக்காத எவரையும் நரகில் நுழையச் செய்யாதிருப்பது தான் அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை என்றார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: புகாரி 2856, 6267, 7373

தன் மீது எதுவும் கடமை இல்லாதிருந்தும், எவரும் தன் மீது எதையும் திணிக்க முடியாது என்று இருந்தும் அருளையும் அன்பையும் தன் மீது கடமையாக அல்லாஹ் ஆக்கிக் கொள்கிறான் என்றால் அவனது அளவற்ற அருளையும் நிகரற்ற அன்பையும் என்னவென்பது?

திருக்குர்ஆனின் பலநூறு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) மவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் ரஹ்மான் ரஹீம் ஆகிய இரு பண்புகளுக்கு விளக்கவுரைகளாகவே அமைந்துள்ளன.

صحيح البخاري
6491 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا جَعْدُ بْنُ دِينَارٍ أَبُو عُثْمَانَ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ العُطَارِدِيُّ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ: قَالَ: «إِنَّ اللَّهَ كَتَبَ الحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً»

யாரேனும் நல்ல காரியம் ஒன்றைச் செய்ய எண்ணி அதைச் செய்ய இயலாது போனால் (அவன் எண்ணியதற்காக) ஒரு முழுமையான நன்மையை அல்லாஹ் அவனுக்காகப் பதிவு செய்கிறான். நல்ல காரியம் ஒன்றைச் செய்திட எண்ணி, அதைச் செய்து விட்டாலோ (அவரின் எண்ணத் தூய்மைக்கேற்ப) பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை அல்லாஹ் நன்மைகளைப் பதிவு செய்கிறான். யாரேனும் தீய காரியம் ஒன்றைச் செய்ய எண்ணி (அல்லாஹ்வை அஞ்சி) அதைச் செய்யாது விட்டு விட்டால் அதற்கும் ஒரு நன்மையைப் பதிவு செய்கிறான். தீய காரியத்தைச் செய்ய எண்ணி அதைச் செய்து விட்டால் அதற்காக ஒரு தீமையைத் தான் அல்லாஹ் பதிவு செய்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6491, 7501

இந்த நபிமொழியை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள்! அவனது அளவற்ற அருளையும், அன்பையும் இதை விட வேறு வார்த்தைகளில் விளக்க முடியாது. நல்ல காரியம் ஒன்றைச் செய்தால் ஒரு கூலி தருவேன்; செய்ய நினைத்ததற்காக கூலி எதுவும் தர மாட்டேன் என்று அல்லாஹ் கூறினாலும் அருளாளன் என்ற பண்புக்குப் பாதகம் எதுவும் வந்து விடாது.

அவன் அளவற்ற அருளாளன் அல்லவா? அதனால் தான், நன்மையைச் செய்ய எண்ணியதற்கும் கூலி தருகிறான். செய்துவிட்டால் பத்து முதல் எழுநூறு வரை கூலி தருவேன் என்கிறான்.

தீமையைச் செய்ய எண்ணினால் ஒரு தண்டனை உண்டு என்று அவன் கூறினாலும் அருளாளன் என்ற பண்புக்குப் பங்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை. இந்த அளவற்ற அருளாளனோ தீமைகளைச் செய்ய எண்ணி அதைச் செய்யாது விட்டால், அதற்காகத் தண்டிக்க மாட்டான் என்பதையும் கடந்து அதற்கும் கூலி தருவேன் என்கிறான்.

صحيح البخاري 
4423 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَعَ مِنْ غَزْوَةِ تَبُوكَ فَدَنَا مِنَ المَدِينَةِ، فَقَالَ: «إِنَّ بِالْمَدِينَةِ أَقْوَامًا، مَا سِرْتُمْ مَسِيرًا، وَلاَ قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَهُمْ بِالْمَدِينَةِ؟ قَالَ: «وَهُمْ بِالْمَدِينَةِ، حَبَسَهُمُ العُذْرُ»

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் ஈடுபட்டிருந்தோம். அப்போது நோயின் காரணமாக போருக்கு வராமல் மதீனாவிலேயே சிலர் தங்கி விட்டனர். இந்த அறப்போருக்காக நீங்கள் மேற்கொண்ட சிரமமான பயணம் மற்றும் போரில் நீங்கள் சந்திக்கும் துன்பம் ஆகியவற்றுக்கு நீங்கள் அடையும் கூலியைப் போல் அவர்களும் பெறுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4423, 2839

صحيح البخاري
6424 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: مَا لِعَبْدِي المُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ، إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ، إِلَّا الجَنَّةُ "

ஒரு மூமினான அடியானுக்கு மிகவும் விருப்பமான ஒருவரை நான் கைப்பற்றிக் கொள்ளும் போது, பொறுமையுடன் என்னிடம் நன்மையை எதிர்பார்த்தால் அவனுக்கு சொர்க்கத்தைக் கூலியாக வழங்கியே தீருவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6424

صحيح البخاري 
3474 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَنِي «أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، وَأَنَّ اللَّهَ جَعَلَهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِبًا، يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ، إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ»

ஒரு அடியான் காலரா நோயினால் தாக்கப்பட்டு, தனது ஊரிலேயே பொறுமையுடனும், நன்மையை எதிர்பார்த்தும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் தனக்கு ஏற்பட முடியாது என்ற உறுதியான நம்பிக்கையுடனுமிருந்தால் அவனுக்கு ஷஹீத் உடைய கூலி கிடைப்பது நிச்சயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3474, 6619

صحيح البخاري 
5653 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ الهَادِ، عَنْ عَمْرٍو، مَوْلَى المُطَّلِبِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ اللَّهَ قَالَ: إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ، عَوَّضْتُهُ مِنْهُمَا الجَنَّةَ " يُرِيدُ: عَيْنَيْهِ، تَابَعَهُ أَشْعَثُ بْنُ جَابِرٍ، وَأَبُو ظِلاَلٍ هِلاَلٌ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

எனது அடியானின் இரு கண்களையும் நான் (சோதிக்கும் முகமாக) பழுதாக்கி விடும் போது அவன் பொறுமையை மேற்கொண்டால் அவ்விரு கண்களுக்கும் பகரமாக அவனுக்கு சொர்க்கத்தை நான் வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5653

صحيح البخاري 
5641 - حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا يُصِيبُ المُسْلِمَ، مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ، وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ»

ஒரு முஸ்லிமுக்கு நோய், கவலை, தொல்லை மற்றும் முள் குத்துதல் போன்ற துன்பங்கள் ஏற்பட்டால் அவற்றை அவன் செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தமாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 5642

இந்த நபிமொழிகளும், இந்தக் கருத்தில் அமைந்துள்ள ஏனைய நபிமொழிகளும் அர்ரஹ்மான், அர்ரஹீம் ஆகிய பண்புகளின் தெளிவுரைகளாகும். மனிதன் விரும்பிச் செய்கின்ற காரியங்களுக்குக் கூலி கொடுப்பது தான் தர்மம். மனிதன் விரும்பாமல், அவனுக்குச் சம்பவிக்கும் துன்பங்களுக்கும் கூட கூலி உண்டென்றால் அவனது அருளையும், அன்பையும் எவ்வாறு வர்ணிக்க முடியும்?

மனிதன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக செய்கின்ற காரியங்களையும் நல்லறமாக அந்த ரஹ்மான் கருதுகிறான். மனைவியுடன் ஒருவன் கூடும் போது தன்னுடைய இச்சையைத் தணித்துக் கொள்ள வேண்டும்; தனக்கென சந்ததியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தின் அடிப்படையிலேயே கூடுகிறான்.

இவன் இன்பம் அடைவதற்காக செய்யும் இது போன்ற காரியங்களுக்காக எவரும் கூலி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. இதற்கும் கூட கூலி தருவேன் என்று சொன்னால் அவனை விட அருளாளன், அன்புடையவன் எவனிருக்க முடியும்?

صحيح مسلم 
53 - (1006) حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ، ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ، قَالَ: " أَوَلَيْسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ؟ إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً، وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ»

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் கூடுவதும் நல்லறமே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! தன் இச்சையைத் தணித்துக் கொள்ளும் (இது போன்ற) காரியங்களுக்கும் கூலி கிடைக்குமா என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தடை செய்துள்ள வழிகளில் இந்த இச்சையைத் தணித்துக் கொண்டால் அதற்காக அவனுக்குத் தண்டனை உண்டல்லவா? அது போலவே அனுமதிக்கப்பட்ட முறையில் அவன் தன் இச்சையைத் தணித்துக் கொள்வதற்கும் கூலி உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1674

صحيح البخاري 
56 - حَدَّثَنَا الحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ: أَخْبَرَنَا [ص:21] شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ»

உன் மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற கவள உணவும் நல்லறமாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி 56, 1296, 5668, 5373

மனிதன் தனது சுய நலனுக்காக மனைவியுடன் நடந்து கொள்கின்ற முறைக்கும் அல்லாஹ் கூலி தருகிறான் என்பது அவனது அளவற்ற அருளை விளக்கிடப் போதுமானதாகும்.

மனிதன் மிகவும் அற்பமாகக் கருதுகின்ற, செய்வதற்கு எவருக்கும் எளிதில் சாத்தியமாகின்ற காரியங்களுக்குக் கூட அந்த ரஹ்மான் கூலி வழங்குவதாகக் கூறுவதும், அளவற்ற அருளாளன் என்ற பண்பின் வெளிப்பாடேயாகும்.

صحيح البخاري
2989 - حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ، يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ، وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَيُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ»

இரண்டு நபர்களுக்கிடையே நீதி வழங்குவதும் நல்லறமே! ஒரு மனிதன் அவனது வாகனத்தில் ஏற உதவுவதும் ஏற்றி வைப்பதும் நல்லறமே! அவனது பொருட்களை அவனுடைய வாகனத்தில் ஏற்றி வைப்பதும் நல்லறமே! நல்ல சொற்களைப் பேசுவதும் நல்லறமே. தொழுவதற்காக நடந்து செல்லும் போது நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் நல்லறமே! பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதும் நல்லறமே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2989

صحيح مسلم 
144 - (2626) حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ يَعْنِي الْخَزَّازَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ»

உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பது உட்பட எந்த நல்லறத்தையும் இலேசாக நீ எண்ணி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4760

صحيح البخاري 
2518 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُرَاوِحٍ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ»، قُلْتُ: فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ: «أَعْلاَهَا ثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا»، قُلْتُ: فَإِنْ لَمْ أَفْعَلْ؟ قَالَ: «تُعِينُ ضَايِعًا، أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ»،: قَالَ: فَإِنْ لَمْ أَفْعَلْ؟ قَالَ: «تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ»

அல்லாஹ்வின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்! அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்கள்: புகாரி 2518, முஸ்லிம் 119

இந்த நபிமொழிகள் யாவும் இந்த ரஹ்மான் ரஹீம் ஆகிய இரு பண்புகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் சான்றுகளாகும்.

ரப்புல் ஆலமீன் என்றவுடன் என்னைக் கொடூரமானவனாக எண்ணி விடாதீர்கள்! என்னால் எதுவும் செய்ய முடியும் என்றாலும் நான் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்பதைச் சொல்கிறான்.

அர்ரஹ்மான் அர்ரஹீம் ஆகிய அழகுத் திருப்பெயர்கள் மனித உள்ளங்களில் தோன்றுகின்ற மற்றொரு ஐயத்தையும் அகற்றி, இறைவனின் பால் மனிதனை நெருங்கி வருவதற்குத் தூண்டுகின்றன.

பாவிகளுக்கும் அருளுபவன்

எவரிடமிருந்தாவது அளவுக்கதிகமான உதவிகளை ஒருவன் பெற்று விட்டால் அவருக்கு விசுவாசமாக நடக்க வேண்டுமென்று விரும்புகிறான்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளஓ தவறி விடும் போது உதவி செய்த மனிதனைச் சந்திப்பதைத் தவிர்க்கிறான். தயக்கம் காட்டுகிறான். எந்த முகத்துடன் அவனைச் சந்திப்பது என்று வெட்கமடைகிறான். இதே கண்ணோட்டத்துடனேயே அல்லாஹ்விடத்திலும் மனிதன் நடந்து கொள்கிறான்.

நான் இறைவனுடைய பல கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்ந்து விட்டேன். எந்தத் தகுதியைக் கொண்டு நான் இறைவனிடம் என் தேவைகளைக் கேட்பேன்? இதன் காரணமாகவே இறைவனுக்கு நெருக்கமான அடியார்களைத் தேடிப் போய் என் கோரிக்கைகளை முன் வைக்கிறேன் என்று கூறக் கூடியவர்களை வாழ்க்கையில் நாம் சந்திக்கின்றோம்.

இவ்வாறு அவர்களைக் கூறச் செய்வது மேலே நாம் குறிப்பிட்ட அந்த மனநிலையேயாகும். அல்லாஹ்வைப் பற்றி அவனது அடியார்கள் அவ்வாறு கருதிவிடக் கூடாது என்பதற்காகவே ரப்புல் ஆலமீன் என்ற ஆதிக்கப் பண்பைத் தொடர்ந்து அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அல்லாஹ் குறிப்பிட்டு மனிதனின் அந்த மனநிலையை மாற்றுகிறான்.

மனிதன் என்ற முறையில் நீங்கள் தவறுகள் செய்பவர்கள்! அதற்காக என்னை விட்டு நீங்கள் வெருண்டோட வேண்டியதில்லை. நான் அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறேன் என அழைப்பு விடுக்கிறான்.

தன்னுடைய அருளும் அன்பும் எந்த அளவுக்கு விசாலமானது என்று மற்றொரு இடத்தில் அவன் கூறுவதைக் கவனிப்போம்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

இது எவ்வளவு அருள் நிறைந்த அழைப்பு! பாவிகளையே அழைத்து, என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்று கூறுவதென்றால் இந்தத் தாராளத்தை என்னவென்பது?

மன்னிப்புக் கேட்கும் போது மன்னிப்பவர்களைப் பார்த்திருக்கிறான் மனிதன். மன்னிப்புக் கேளுங்கள் என்று அழைப்பு விடக் கூடியவன் அந்த ரஹ்மானைத் தவிர வேறெவரும் இருக்க முடியாது.

திருக்குர்ஆனின் எத்தனை இடங்களில் மன்னிப்புக் கேளுங்கள் என்று அல்லாஹ் அழைப்பு விடுக்கிறானோ, அத்தனையும் அவன் அளவற்ற அருளாளனாக (ரஹ்மானாக) நிகரற்ற அன்புடையோனாக (ரஹீமாக) இருப்பதனாலேயே. மன்னிப்புக்கு அழைப்பு விடுக்கும் அத்தனை வசனங்களும் இந்த இரண்டு பண்புகளின் விளக்கவுரைகளேயாகும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஏதேனும் துரோகம் செய்து விட்டு, மன்னிப்புக் கேட்டால் அவன் மன்னிக்கக் கூடும்! மன்னிக்க மறுக்கவும் கூடும்! மன்னிக்கும் போது கூட வேண்டா வெறுப்பாகவே மன்னிப்பது மனித இயல்பு. ஆனால் அந்த ரஹ்மான் இந்த மன்னிப்பை எப்படி எடுத்துக் கொள்கிறான் என்பதை அறிந்தால் அவனது அருளையும், அன்பையும் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

صحيح البخاري
6309 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ، سَقَطَ عَلَى بَعِيرِهِ، وَقَدْ أَضَلَّهُ فِي أَرْضِ فَلاَةٍ»

ஒரு மனிதன் வனாந்திரத்தில் காணாமல் போன தன் வாகனத்துக்காக தவித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவனது வாகனம் கிடைத்து விட்டால் அவனது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. தன் வாகனத்தைக் கண்ட போது ஒருவன் அடையும் மகிழ்ச்சியை விட தன் அடியான் தன்னிடம் பாவ மன்னிப்புக் கோரும் போது பன்மடங்கு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6309

صحيح مسلم 
3 - (2744) حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ - وَاللَّفْظُ لِعُثْمَانَ، قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وقَالَ عُثْمَانُ: حَدَّثَنَا - جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، قَالَ: دَخَلْتُ عَلَى عَبْدِ اللهِ أَعُودُهُ وَهُوَ مَرِيضٌ، فَحَدَّثَنَا بِحَدِيثَيْنِ: حَدِيثًا عَنْ نَفْسِهِ، وَحَدِيثًا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ الْمُؤْمِنِ، مِنْ رَجُلٍ فِي أَرْضٍ دَوِّيَّةٍ مَهْلِكَةٍ، مَعَهُ رَاحِلَتُهُ، عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ، فَنَامَ فَاسْتَيْقَظَ وَقَدْ ذَهَبَتْ، فَطَلَبَهَا حَتَّى أَدْرَكَهُ الْعَطَشُ، ثُمَّ قَالَ: أَرْجِعُ إِلَى مَكَانِيَ الَّذِي كُنْتُ فِيهِ، فَأَنَامُ حَتَّى أَمُوتَ، فَوَضَعَ رَأْسَهُ عَلَى سَاعِدِهِ لِيَمُوتَ، فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَاحِلَتُهُ وَعَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَشَرَابُهُ، فَاللهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ الْعَبْدِ الْمُؤْمِنِ مِنْ هَذَا بِرَاحِلَتِهِ وَزَادِهِ "،

ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான், யாருமற்ற வெட்ட வெளியில் அவனது ஒட்டகம் அவனை விட்டு ஓடவிடுகின்றது. அவனது உணவுப் பொருட்களும் குடிப்பதற்கான தண்ணீரும் அந்த ஒட்டகத்தின் மீது தான் இருந்தன. இனிமேல் தன் ஒட்டகம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நம்பிக்கையிழந்து ஒரு மரத்தடியில் வந்து படுத்து விடுகிறான். இந்த நிலையில் திடீரென அவனது ஒட்டகம் அவன் கண் முன்னே நிற்கக் காண்கிறான். அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இறைவா! நீ எனது அடிமை, நான் உனது எஜமான் என்று மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன சொல்கிறோம் என்பது கூடப் புரியாமல் கூறி விடுகிறான். இந்த மனிதன் அடையும் மகிழ்ச்சியை விட ஒரு அடியான் பாவ மன்னிப்புக் கேட்கும் போது அல்லாஹ் பெரு மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4932

இறைவனின் பேரருளைப் பெருங்கருணையைப் புரிந்து கொள்ள இதை விடவும் அழகான உவமையைக் கூறவே முடியாது. பாலைவனப் பெருவெளியில் பயணம் செய்பவன் யாருமற்ற வெட்ட வெளியில் தன் வாகனத்தை இழந்து விடும் போதே தன் கதையும் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்து விடுவான்.

அவனது உணவும், தண்ணீரும் கூட அந்த வாகனத்துடன் காணாமல் போய் விட்டதென்றால் உயிர் பிழைப்போம் என்று எள்ளளவு கூட எதிர்பார்க்க மாட்டான். இத்துடன் எல்லாம் முடிந்தது என கையறு நிலைக்கு வந்த பின் அவனது வாகனம் திடீரென கிடைத்து விடுவது என்பது சாதாரண மகிழ்ச்சி தரும் விஷயமா என்ன?

தன் உயிரே திரும்பி வந்து விட்டதாக அதைக் கருதுவான். அந்த மகிழ்ச்சியைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவு அழகுற எடுத்துரைக்கிறார்கள்!

நான் உனது அடிமை! நீ எனது எஜமான் என்று கூறுவதற்குப் பதில் நான் உனது எஜமான்! நீ எனது அடிமை என்று அவன் கூறுகிறான் என்றால் அவன் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறான்.

இதை விடவும் அதிகமாக அந்த ரஹ்மான் மகிழ்ச்சியடைகிறான் என்றால் அந்தக் கருணையை வர்ணிக்க எந்த மொழியில் தான் வார்த்தைகள் இருக்கும்?

அல்லாஹ் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இந்த மனிதன் என்ன செய்து விட்டான்? பாவம் செய்தவன் மன்னிப்புக் கேட்பது பெரிய சாதனை ஒன்றும் இல்லை. இது பாராட்டப்பட வேண்டிய பெரிய சமாச்சாரமும் இல்லை. மன்னிப்புக் கேட்பதன் மூலம் மனிதன் தனக்கு வருகின்ற தண்டனையைத் தவிர்த்துக் கொள்கிறான்.

இதற்காக அல்லாஹ் மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிறது? மன்னிக்க முடியாது என்று கூறினாலும் அவனை எதிர்க் கேள்வி கேட்க முடியாது. ஒரு படி மேலே போய் மன்னித்தேன். தொலைந்து போ என்று கூறலாம்.

அப்படிக் கூறினாலேயே அவனது அளவற்ற அருளுக்கும், நிகரற்ற அன்புக்கும் குறைவு ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் பெருமகிழ்ச்சி அடைகிறான் என்றால், அந்த ரஹ்மானின் அன்புக்கும் அருளுக்கும் அளவேது?

அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் அருளியுள்ளான் அந்த அத்தியாயம் முழுவதும் அவன் மனித சமுதாயத்திற்கு அளித்துள்ள அருட்கொடைகளைப் பட்டியலிட்டுக் கூறுகிறான். அந்த அத்தியாயம் முழுமையுமே ரஹ்மான் என்ற பண்பின் விளக்கவுரையாக அமைந்துள்ளதை உணரலாம்.

இன்னும் கணக்கிலடங்கா அருட்கொடைகளை வாரி வழங்கி தனது அளவற்ற அருளை உலகறியச் செய்கிறான். அவனது அருட்கொடைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் வசனங்கள் யாவுமே இந்தத் திருப்பெயர்களின் விளக்கவுரைகளேயாகும்.

صحيح البخاري 
7405 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً "

ஒரு அடியான் ஒரு ஜான் என்னை நோக்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் வருகிறேன். அவன் ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் இரு கைகளையும் விரிக்கும் தூரம் நெருங்கி வருகிறேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7405

இறைவனுடைய அளவற்ற அருளையும், அன்பையும் எண்ணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே வியப்போடு சொல்லிக்காட்டுவதையும் கவனியுங்கள்!

صحيح مسلم
64 - (2999) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ، وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ، جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ - وَاللَّفْظُ لِشَيْبَانَ - حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ»

அல்லாஹ்வை நம்பிய மூமினுடைய எல்லாக் காரியங்களும் அவனுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளன. அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அதனை அவன் பொறுத்துக் கொண்டால் அதுவும் அவனுக்கு நன்மை தான். அவனுக்கு நன்மை ஏற்பட்டு அதற்காக நன்றி செலுத்தினால் அதுவும் அவனுக்கு நன்மை தான். மூமினுக்குக் கிடைத்த இந்த நிலை மிகவும் ஆச்சரியமானதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)

நூல்: முஸ்லிம் 5318

ரஹ்மான், ரஹீம் எனும் திருப்பெயர்களின் ஆழத்தை அறிந்து கொள்ள இவையே போதுமாகும். இனி மாலிகி யவ்மித்தீன் என்னும் பண்பைப் பார்ப்போம்.

மாலிகி யவ்மித்தீன்

ஒரு தந்தை தன் மக்களில் எவரையும், எந்தக் குற்றத்திற்காகவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த வகையிலும் தண்டித்ததே இல்லை என்றால், இனியும் தண்டிக்கவே மாட்டான் என்றால் அவனை இரக்கம் உடையவன் என்று எவரும் கூற மாட்டார்.

ஏமாளி என்றும், இளித்தவாயன் என்றும், கையாலாகாதவன் என்றும் அவன் குறிப்பிடப்படுவான். அளவற்ற அருள் என்றாலும், நிகரற்ற அன்பு என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை இருந்தால் தான் அருள், அன்பு எனக் கூற முடியும்.

இறைவனின் அருட்கொடைகளையும், பாக்கியங்களையும் ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக் கொண்டு அதற்கான நன்றியை இறைவனின் அடிமைகளுக்குச் செலுத்துவோரையும், அல்லாஹ் அளித்த பொருளையும், உறுப்புகளையும், அறிவையும், ஆற்றலையும் அல்லாஹ் விரும்பும் வழிகளில் பயன்படுத்த மறுப்போரையும் சில நாட்கள் விட்டு விடலாம். சில மாதங்கள் விட்டு விடலாம். சில ஆண்டுகள் விட்டு விடலாம். அல்லாஹ்வை ஏற்று, அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, இறைக் கட்டளைகளைச் செயல்படுத்தி வாழ்ந்தவர்கள் நாமும் அவர்களைப் போல் நம் இஷ்டத்திற்கு வாழ்ந்திருக்கலாமே! அதனால் ஒரு நஷ்டமும் ஏற்பட்டிருக்காதே என்று கருதும் அளவுக்கு அவர்களை எந்த விசாரணையும், தண்டனையுமின்றி, விட்டு வைத்தால் அதற்குப் பெயர் அருளும் அல்ல. அன்பும் அல்ல.

இதை உணர வைப்பதற்காகத் தான் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பதைத் தொடர்ந்து மாலிகி யவ்மித்தீன் நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி என்று பொருத்தமான இடத்தில் அல்லாஹ் இந்த வார்த்தையைப் பொருத்தி விடுகிறான்.

நான் அளவற்ற அருளாளன் தான்; நிகரற்ற அன்புடையவன் தான்; இந்த உலகில் வாழும் வரை நீங்கள் செய்த எந்தத் தவறுகளுக்காகவும் என்னிடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் உடனே மன்னிப்பவன் தான்; இந்த உலக வாழ்வு முடிந்து விடுமானால் நியாயமான தீர்ப்பு வழங்கும் நாள் ஒன்று உண்டு. நியாயத் தீர்ப்பு நாளில் நானே முழு அதிபதி. எவருக்கும் சுதந்திரம் எதுவும் வழங்கப்படாத நாள் அது என்று அல்லாஹ் சொல்கிறான்.

மறுமை நம்பிக்கையே இஸ்லாத்தின் ஆணிவேர்

மறு உலக வாழ்வு பற்றிய நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமாக மனித உள்ளத்தில் பதிந்திருக்கின்றதோ, அதற்கேற்ப ஒருவனது செயல்களில் மாற்றங்கள் நிகழும். இதனால் தான், தன் திருக்குர்ஆன் நெடுகிலும் அந்த நாளைக் குறிப்பிடுகின்றான். அதைப் பற்றி எச்சரிக்கின்றான்.

ஒருவனது செல்வம், அவன் பெற்றெடுத்த பிள்ளைகள், அதனுடன் பிறந்தவர்கள், அவனைப் பெற்றவர்கள், அவன் கட்டிய மனைவி, அவன் திரட்டிய செல்வாக்கு, செல்வாக்குமிக்கவர்களின் அறிமுகம் எதுவுமே பயன் தராத நாள் ஒன்று உள்ளது. அன்றைய தினத்துக்கு அதிபதியாக இருக்கும் அவன் திருப்தியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே தப்ப முடியும் என்பதைத் தான் மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பு மூலம் குறிப்பிடுகின்றான். மறுமையைப் பற்றிக் குறிப்பிடும் எல்லா வசனங்களும் இந்தப் பண்பின் விரைவுரைகள் தான்.

அவன், அவர்களை அழைக்கும் நாளில் எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?

(அல்குர்ஆன் 28:62)

என்று அவன் கேட்கத்தான் போகிறான்.

அல்லாஹ் சொன்னதைக் கேட்காமல், அவன் அனுப்பிய தூதர்கள் சொன்னதையும் கேட்காமல், பெரியார்கள், இமாம்கள், தலைவர்கள் சொன்னார்கள் என்று கருதிக் கொண்டு தவறான பாதையில் சென்றார்களே அவர்களும் அங்கே கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள்.

அந்த நாளில் சில முகங்கள் நரகில் போடப்பட்டு புரட்டப்படும். நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படாமல் போனோமே? தூதருக்கு வழிப்படாமல் போனோமே? எங்கள் பெரியார்களுக்கும், தலைவர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்ததனால் எங்களை அவர்கள் வழிகெடுத்து விட்டார்களே! (அல்குர்ஆன் 33:66) என்று புலம்பத்தான் போகிறார்கள்.

நாங்கள் இறைவனிடம் வாதாட வக்கீல்களை வைத்திருக்கிறோம் என்று சமாதிகளைக் கட்டி அழுவோரும் அங்கே வரத்தான் போகிறார்கள். அன்றைய தினத்தில் அவர்களின் வாய்கள் மீது நாம் முத்திரையிடுவோம். அவர்களின் கைகளும் கால்களும் அவர்கள் செய்தது பற்றிக் கூற ஆரம்பிக்கும்.

(அல்குர்ஆன் 36:65)

இந்த நிலையை வக்கீல்களும், வக்கீல்களை ஏற்படுத்தியவர்களும் சந்திக்கத்தான் போகிறார்கள்.

கடமை தவறியவர்கள், தடையை மீறியவர்கள், மனித உரிமையில் கை வைத்தவர்கள் யாராயினும் அதற்கான பலனை யவ்மித்தீனில் (நியாயத் தீர்ப்பு நாளில்) அனுபவித்தே ஆக வேண்டும். யாரும், எதன் மூலமும் தப்பித்து விட முடியாது என்பதைச் சொல்லித் தருவதற்கே தன்னை மாலிகியவ்மித்தீன் என்கிறான்.

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.

(அல்குர்ஆன் 26:88,89)

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை (எனவும் கூறுவார்கள்).

(அல்குர்ஆன் 74:40-47)

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்

(அல்குர்ஆன் 83:1-6)

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன் 9:34,35)

நியாயத் தீர்ப்பு நாள் பற்றிய நம்பிக்கையின் காரணமாகவே தமக்கு இழைக்கப்பட்ட அவ்வளவு துன்பங்களையும் நபிமார்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது. அந்நாளில் கிடைக்கப் போகும் பரிசுகளைப் பெரிதாக மதித்ததனாலேயே சுடு மணலையும் சிலரால் தாங்கிக் கொள்ள முடிந்தது. தூக்கு மேடையை முத்தமிட முடிந்தது. இருகூராகக் கிழிக்கப்படுவோம் என்று தெரிந்தும் கொள்கையில் உறுதியாக இருக்க முடிந்தது. நாட்டை விட்டு விரட்டப்படும் போதும், சமூகப் பரிஷ்காரம் செய்யப்படும் போதும், வம்புச் சண்டைக்கு வந்த போதும், வறுமை வாட்டிய போதும் அத்தனையையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

அவர்களைப் பைத்தியம் என்று பட்டம் சூட்டிய நேரமாகட்டும்! அவர்களின் மனைவியரின் ஒழுக்கத்தின் மீது களங்கம் சுமத்தப்பட்ட நேரமாகட்டும்! இத்தனையையும் அவர்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்தது? நியாயத் தீர்ப்பு நாளில் அந்த நாளின் அதிபதியிடம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தவிர இதற்கு வேறு காரணம் இல்லை.

மதுவிலும், மங்கையர் சுகத்திலும் மதி மயங்கியவர்களின் மயக்கம் தெளிந்ததற்கும்

இயல்பிலேயே அவர்களிடம் குடி கொண்டிருந்த முரட்டுத்தனம் இருந்த இடம் தெரியாமல் போனதற்கும்

தாழ்ந்த நிலையில் இருந்தவர்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் புழுவாய் மதித்தவர்கள், அவர்களையே தங்களின் தலைவர்களாக, உடன் பிறவாச் சகோதரர்களாக மதித்ததற்கும்

நேர்மை, நாணயம், நல்லொழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது வாழ்ந்தவர்கள் இவற்றையெல்லாம் உலகுக்கே படித்து தரும் ஆசான்களாக மாறியதற்கும்

அந்த நாளைப் பற்றிய நம்பிக்கையும், அந்த நாளின் அதிபதி பற்றி அவர்களுக்கிருந்த அச்சம் தான் காரணம்.

நியாயத் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை இல்லாததனாலேயே இந்த உலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

அனைத்தைப் பற்றியும் விசாரித்து தக்க தீர்ப்பு வழங்கப்படும் நாள் உண்டு என்ற நம்பிக்கை மட்டும் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்டு விட்டால் அனைத்து தீமைகளிலிருந்தும், அக்கிரமங்களிலிருந்தும் மனித குலம் விடுபடும். இதனால் தான் ரப்பு, ரஹ்மான், ரஹீம் என்பதுடன் மிகவும் அவசியமான மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பையும் சேர்த்து வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அந்த நாளை நம்புகின்றவர்களில் சிலர் குறுக்கு வழியில் தப்பித்து விடலாம் என்ற அளவுக்குத் தான் அந்த நாளை நம்புகிறார்கள். எந்தக் குறுக்கு வழியும் அங்கே உதவாது என்பதைப் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.

(அல்குர்ஆன் 82:19)

எனவே இந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு எந்த நன்மையும், தீங்கும் செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள். நீங்கள் பொய்யெனக் கருதிய நரகமெனும் வேதனையைச் சுவையுங்கள்! என்று அநீதி இழைத்தோருக்குக் கூறுவோம்.

(அல்குர்ஆன் 34:42)

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள். அவர்களை அவன் சரியாக எண்ணிக் கணக்கிட்டிருக்கிறான். அவர்கள் அனைவரும் கியாமத் நாளில் தன்னந்தனியாகவே வருவார்கள்.

(அல்குர்ஆன் 19:93,94,95)

அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது. ரூஹும், வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 78:37,38)

சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.

(அல்குர்ஆன் 78:40)

இந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் நிலையான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 22:56)

அவர்கள் வெளிப்பட்டு வரும் நாளில் அவர்களைப் பற்றிய எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. இன்றைய தினம் ஆட்சி யாருக்கு? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே. இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். சீக்கிரம் வரக்கூடிய நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.

(அல்குர்ஆன் 40:16,17,18)

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 2:254)

எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:25)

ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுள்ளவன்.

(அல்குர்ஆன் 3:30)

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்! என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்)

(அல்குர்ஆன் 3:106)

பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அது போல் இன்னொரு மடங்கும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு உடைமையாக இருந்து, கியாமத் நாளின் வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அவை ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 5:36)

இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும் என்று அல்லாஹ் கூறுவான்.

(அல்குர்ஆன் 5:119)

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக! அந்நாளில் வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி.

(அல்குர்ஆன் 6:15,16)

அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.

(அல்குர்ஆன் 11:105)

அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணி விடாதீர்! பார்வைகள் நிலை குத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.

(அல்குர்ஆன் 14:42)

அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.

(அல்குர்ஆன் 24:24)

அந்த நாள் பற்றி இப்படி ஏராளமான வசனங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். இந்த வசனங்களும் யவ்முல் ஆகிர் என்ற வார்த்தை இடம் பெறும் நூற்றுக்கணக்கான வசனங்களும், மாலிகியவ்மித்தீனுடைய விரிவுரைகளேயாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கமும், திருத்தூதர்கள் அனுப்பப்பட்ட நோக்கமும் அந்த நாள் பற்றி மனிதனுக்கு எச்சரிக்கை செய்வது தான். இந்த வகையில் முழுக் குர்ஆனுமே மாலிகி யவ்மித்தீன் எனும் பண்பின் விளக்கம் தான்.

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அர்ரஹ்மானிர் ரஹீம் மாலிகி யவ்மித்தீன் ஆகிய மூன்று திருவசனங்களுக்கும் உரிய பொருளை இப்போது காண்போம்.

அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அளவற்ற அருளும், நிகரற்ற அன்பும் ஒருங்கே அமையப் பெற்ற நியாயத் தீர்ப்பு நாளின் முழு அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பது இவ்வசனங்களின் பொருள்.

அல்லாஹ்வை ஏன் புகழ வேண்டும்?

இத்தகைய பண்புகளும், தகுதிகளும் உள்ள அல்லாஹ்வை ஏன் புகழ வேண்டும்? அதனால் இறைவனின் தகுதி எதுவும் அதிகமாகி விடப்போகிறதா? நிச்சயமாக ஏற்படப் போவதில்லை. புகழ்கின்ற மனிதர்கள் தான் இவ்வுலகிலும், மறு உலகிலும் அளப்பரிய நன்மைகளை இதனால் பெற்றுக் கொள்கின்றனர். மனிதர்களுக்கிடையே ஏற்படக் கூடிய பெறாமை, பெருமை, ஆணவம் ஆகிய எல்லாக் கெட்ட குணங்களிலிருந்தும் அல்லாஹ்வைப் புகழ்வதன் மூலம் மனிதன் விடுபடலாம்.

அல்லாஹ் சிலரை விட சிலருக்கு அறிவை அதிகம் வழங்கி இருக்கிறான். அந்தத் திறமையின் மூலம் ஏதேனும் சாதனைகளை நிகழ்த்தி விடும் போது அவனுக்குள் ஷைத்தான் தன்னுடைய வேலையைத் துவக்கி விடுகிறான். என்னைப் போல் எவருளர்? மற்றவர்கள் என்னை விட மட்டமானவர்களே என்று எண்ண ஆரம்பிக்கிறான்.

இதன் மூலம் அவனிடம் இருந்த எளிமை, நல்லொழுக்கப் பண்பாடுகள் யாவுமே தலைகீழாய் மாறி விடுவதைக் காண்கிறோம். இந்த அறிவும் ஆற்றலும் என்னைப் படைத்த இறைவனால் எனக்குத் தரப்பட்டவை. இதற்கான பெருமையும், புகழும் எனக்குரியதன்று. என்னைப் படைத்த இறைவனுக்கே இது சொந்தம் என்ற பக்குவத்தை அல்லாஹ்வைப் புகழ்வதன் மூலம் ஒருவன் பெற்றுக் கொள்கிறான். அல்ஹம்துலில்லாஹ்! (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று உணர்வதன் மூலம் மட்டுமே, சாத்தானின் இந்தத் தூண்டுதலிலிருந்து மனிதன் விடுபட முடியும்.

சிலருக்கு அல்லாஹ் அபரிதமான செல்வத்தை வழங்கியிருக்கிறான். வேறு சிலருக்கு நல்ல உடல் வலிமையை வழங்கியிருக்கிறான். சிலரை அழகிய தோற்றத்தில் படைத்திருக்கிறான். சிலருக்கு குழந்தைச் செல்வத்தைத் தாராளமாக அல்லாஹ் வழங்கியிருக்கிறான். இவற்றையெல்லாம் பெற்ற மனிதன் தன்னை உயர்ந்தவனாகவும், மற்றவர்களை மட்டமானவர்களாகவும் கருதி, மமதை கொள்ள முற்படுகிறான்.

மனிதர்களுக்கிடையே உள்ள நல்லுறவு இதனால் பாதிக்கப்பட்டு போட்டி, பொறாமை, பூசல், பகை போன்ற சீர்கேடுகளை மனிதன் சந்திக்க நேரிடுகின்றது. இதை முற்றாக அகற்ற என்ன வழி?

என்னிடம் உள்ள செல்வம், நான் பெற்றெடுத்த மழலைச் செல்வங்கள், என்னுடைய வலிமை, அழகு ஆகிய யாவுமே என்னைப் படைத்த அல்லாஹ் எனக்கு வழங்கிய அருட்கொடை. இதில் நான் பெருமை அடிக்க எதுவுமே இல்லை. அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் என்னைப் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே உரிமையானது என்று உணர்வதைத் தவிர இந்தத் தீய குணத்தை மாற்ற வேறு வழி எதுவுமில்லை.

உலகத்தில் வேறு எவருக்கும் வழங்காத பெரும் செல்வங்களைத் தன் தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கிவிட்டு, இது என் இறைவனின் அருட்கொடை என்று சொல்ல வைக்கிறான் வல்ல அல்லாஹ்.

(அல்குர்ஆன் 27:40)

இறைவனின் படைப்பினங்களிலேயே மிக உயர்வான இடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இது போன்ற கட்டளையை இட அல்லாஹ் தவறவில்லை.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்

(அல்குர்ஆன் 110:1-3)

இருபத்தி மூன்று ஆண்டுகள் படாத பாடுபட்டு, பல்வேறு தியாகங்கள் புரிந்து, நாடு துறந்து, நல்லோர் பலரைப் பலி கொடுத்து மக்களைச் சத்திய மார்க்கத்தின் பால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தனர்.

இவ்வளவு சிரமத்திற்குப் பின் மக்கள் கூட்டம் கூட்டமாக உண்மை மார்க்கத்தில் இணையும் போது இது என்னால் என் பிரச்சாரத்தால் என்னுடைய தியாகத்தால் தான் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காக உமது இறைவனின் புகழைப் பாடுவீராக! என்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு எண்ண மாட்டார்கள் என்றாலும் அவர்களுக்குச் சொல்வதைப் போல் நமக்குக் கற்றுத் தருகின்றான். இதுவும் அல்ஹம்து லில்லாஹ் வின் விளக்கவுரை தான்.

நான், எனது என்பது போன்ற ஆணவப் போக்கை மனிதன் கைவிட்டு எல்லாப் பெருமைகளையும், புகழமையும் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமாக்கி விட வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதற்காகத் தான் முதல் அத்தியாயத்திலேயே புகழுக்கு உரிமை கொண்டாடுகிறான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பக்குவப்படுத்துவதற்காக யார் யார் காலிலோ விழுந்து பொருளையும், சுயமரியாதையையும் பறிகொடுத்து வருகிறான்.

இஸ்லாம் கூறும் எளிமையான இந்த ஆன்மீக வழி உண்மையிலேயே மனிதனைப் பண்படுத்தி பக்குவப்படுத்துகிறது.

தனது நிலை உயரும் போதெல்லாம் இதற்கான புகழும், பெருமையும் என்னைச் சேராது. என் இறைவனையே சேரும் என்பதை மட்டும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு பாருங்கள்! உண்மையான ஆன்மீக நிலையை நீங்கள் அடைவதை நீங்களே உணர்வீர்கள்! நான் எனது என்ற ஆணவம் அழிந்து போவதைக் காண்பீர்கள்! ஆணவம் அழிந்த பின் உங்களிடமிருந்து வெளிப்படும் காரியங்கள் யாவும் மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே அமையும்.

அல்ஹம்துலில்லாஹ் எனும் மந்திரச் சொல் மூலம் மனித குலம் பெறுகின்ற மகத்தான நன்மை இது.

உண்மையில் எல்லாப் பெருமைக்கும் வல்ல அல்லாஹ் மட்டுமே உரிமையாளன் என்பதை ஏற்க மறுப்போர் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரும் என்று வல்ல அல்லாஹ் எச்சரிக்கிறான்.

مسند أحمد
7382 - حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سُفْيَانُ: أَوَّلَ مَرَّةٍ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَعَادَهُ فَقَالَ الْأَغَرِّ: عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: الْكِبْرِيَاءُ رِدَائِي، وَالْعِزَّةُ إِزَارِي، فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا، أُلْقِهِ (1) فِي النَّارِ " (2)

கவுரவம் எனது கீழாடை. பெருமை எனது மேலாடை. இவ்விரண்டிலும் எவன் என்னுடன் போட்டிக்கு வருகிறானோ அவனை நான் வேதனைப்படுத்துவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத்

صحيح البخاري 
4918 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، قَالَ: سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الخُزَاعِيَّ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ: كُلُّ عُتُلٍّ، جَوَّاظٍ مُسْتَكْبِرٍ "

நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டுவிட்டு பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

நூல்: புகாரி 4918, 6072, 6657

صحيح مسلم 
64 - (2865) وحَدَّثَنِي أَبُو عَمَّارٍ حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْحُسَيْنِ، عَنْ مَطَرٍ، حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ أَخِي بَنِي مُجَاشِعٍ، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ خَطِيبًا، فَقَالَ: «إِنَّ اللهَ أَمَرَنِي» وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، وَزَادَ فِيهِ «وَإِنَّ اللهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ» وَقَالَ فِي حَدِيثِهِ «وَهُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْغُونَ أَهْلًا وَلَا مَالًا»، فَقُلْتُ: فَيَكُونُ ذَلِكَ؟ يَا أَبَا عَبْدِ اللهِ قَالَ: نَعَمْ، وَاللهِ لَقَدْ أَدْرَكْتُهُمْ فِي الْجَاهِلِيَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَرْعَى عَلَى الْحَيِّ، مَا بِهِ إِلَّا وَلِيدَتُهُمْ يَطَؤُهَا

நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர், சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: இயாழ் பின் ஹிமார் (ரலி)

நூல்: முஸ்லிம் 5109

இது போன்ற ஹதீஸ்களும், பெருமையடிப்பவர்களை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று வருகின்ற வசனங்களும், இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு வரும் கட்டளைகளும் யாவுமே அல்ஹம்துலில்லாஹ் வின் விளக்கவுரைகளேயாகும்.

صحيح البخاري 
1130 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ المُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ - أَوْ سَاقَاهُ - فَيُقَالُ لَهُ فَيَقُولُ: «أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கால்கள் வீங்கிவிடும் அளவுக்கு நின்று வணங்குவதைக் கண்ட நபித்தோழர்கள் உங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்ட பிறகும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் இறைவனுக்கு நன்றியுள்ள ஒரு அடியானாக இருக்க ஆசைப்படக் கூடாதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: முகீரா (ரலி)

நூல்: புகாரி 1130, 4836, 4837, 6471

ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்த போதும் உயர்ந்து விட்டோம் என்று பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்புவதில்லை. யாவும் என் இறைவனுக்கே சொந்தம் என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே இறைவனின் திருப்தியை அடைய முடியும்.

صحيح مسلم 
89 - (2734) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ - وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ - قَالَا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا»،

ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு அல்லாஹ்வைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்திவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழும் போதும் அல்லாஹ் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திபடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4915

மிகப்பெரும் சாதனைகளைப் புரியும் போது மட்டுமல்ல. ஒரு கவள உணவைப் பெறும் போதும் அதற்கான நன்றியை அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி இறைவனுக்குச் சொந்தமாக்கி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தருகிறார்கள்.

இறைத்திருப்தியை அடைவதையே குறிக்கோளாகக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் தம் வாழ்வில் அடைகின்ற உயர்வின் போதும், சின்னஞ்சிறு அருட்கொடைகளைப் பெறும் போதும் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்பதை உணர்ந்து நடந்து கொள்வதன் மூலமே அந்தக் குறிக்கோளை எட்ட முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறைவனது திருப்தியை மறுமையில் அடைவதுடன் இம்மையிலும் கூட இந்தப் பண்பு மகத்தான மாறுதல்களை உருவாக்கி விடும். சண்டை, சச்சரவு, காழ்ப்புணர்ச்சி, போட்டி, பொறாமை, தீயகுணங்கள் யாவும் அகன்று சமத்துவமும், சகோதரத்துவமும் நிரம்பிய சமுதாயம் உருவாகி விடும். படைத்த இறைவனுக்கே எல்லாப் புகழையும் உரித்தாக்குவோம்.

இய்யாக நஃபுது

உன்னையே வணங்குகிறோம் என்பது இந்தச் சொற்றொடரின் பொருள். அல்லாஹ்வின் முன்னிலையில் அன்றாடம் எடுக்கப்படும் இவ்வுறுதிமொழியில் அல்லாஹ் கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம். இந்த ஒரு சொற்றொடர் மட்டும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுமானால் மனித வாழ்வில் மகத்தான மாறுதல் ஏற்பட்டு விடும்.

உன்னை வணங்குகிறோம் என்று அல்லாஹ் நமக்குக் கற்றுத் தராமல் உன்னையே வணங்குகிறோம் எனக் கற்றுத் தருகிறான். அதாவது அல்லாஹ்வை வணங்குவது மட்டும் போதாது. அவனைத் தவிர வேறு யாரையும் வணங்காமலிருக்க வேண்டும் என்பதாலேயே உன்னையே வணங்குகிறோம் எனக் கற்பித்துத் தருகிறான்.

லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற திருக்கலிமா எந்தக் கருத்தை வலியுறுத்துகின்றதோ அதையே இய்யாக நஃபுது என்பதும் வலியுறுத்துவதைக் காணலாம். அல்லாஹ்வை வணங்குவது மாத்திரம் போதாது. அல்லாஹ் அல்லாத வேறு யாரையும் எதையும் வணங்காமலிருக்க வேண்டும் என்பதையும் இவ்விரு சொற்களும் நமக்கு அறிவிக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் அனைவரும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்பதை மறுத்ததே இல்லை. இறைவனுடைய இறைத்தன்மையை அவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் நிராகரித்ததில்லை.

மாறாக, அல்லாஹ்வை அவர்கள் ஏற்றிருந்தார்கள். அவனையும் வணங்கி வந்தார்கள். அத்துடன் சில சமயங்களில் சில வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் அவர்கள் செய்து வந்தார்கள்.

உன்னை வணங்குகிறோம் என்பதில் அவர்களுக்கு ஆட்சேபனை எதுவும் இருக்கவில்லை. உன்னையே வணங்குகிறோம். (வேறு யாரையும் வணங்க மாட்டோம்) என்பதிலேயே அவர்களுக்கு ஆட்சேபனை இருந்தது.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன் 10:31)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான் எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 43:9)

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!) என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக! ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா;? என்று கேட்பீராக! பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:84,85,86,87)

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல்குர்ஆன் 29:63)

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(அல்குர்ஆன் 29:61)

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:88)

இந்த வசனங்களும், இந்தக் கருத்தில் அமைந்த ஏனைய வசனங்களும், மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள். அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

மக்கத்து காஃபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. அல்லாஹ்வை நம்பிய மக்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனக் கூறுவதேன்? அல்லாஹ்வை ஏற்ற மக்களுக்கு ஏன் இறைத் தூதரை அனுப்ப வேண்டும்? கடவுள் விஷயத்தில் அவர்கள் செய்த தவறு என்ன?

திருக்குர்ஆனை ஆராயும் போது அவர்கள் செய்த தவறு என்ன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அல்லாஹ்வைக் கடவுளாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சில வணக்கங்களை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் செய்து வந்தனர். இவர்களை நாம் திருப்திப்படுத்தினால் இவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள். நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே நெருக்கத்தை இவர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகவே அல்லாஹ் அல்லாதவர்களையும் வணங்கி வந்தனர்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் அவர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை தவறானது என்பதைச் சுட்டிக்காட்டித் திருத்தவே உன்னையே - உன்னை மட்டும் வணங்குகிறோம் என்று அவர்களுக்குக் கற்றுத் தருகிறான்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

(அல்குர்ஆன் 12:106)

கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.

(அல்குர்ஆன் 38:5)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.

(அல்குர்ஆன் 37:35,36)

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

(அல்குர்ஆன் 39:45)

படைத்தவன், உணவளிப்பவன், அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டவன் என்றெல்லாம் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்பியிருந்தாலும், இறைவனுக்கு இணையாக இன்னும் பல கடவுளர்களை அவர்கள் உருவாக்கி வழிபட்டு வந்தனர் என்பதை இந்த வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

இதன் காரணமாகவே உன்னை மட்டுமே வணங்குவோம் என்று உறுதிமொழி எடுக்குமாறு நமக்கு அல்லாஹ் கற்றுத் தந்து, அந்தத் தவறான நம்பிக்கையைத் தகர்த்தெறிகின்றான். அன்றைய மக்கள் எவ்வாறு இணை வைத்தனர் என்பதையும் அல்லாஹ் வேறு சில இடங்களில் அடையாளம் காட்டுகின்றான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

இந்த வசனங்கள் மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) அல்லாஹ்வை நம்பியதுடன் அந்த இறைவனிடம் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பரிந்துரைப்பதற்காக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அவர்களை திருப்திப்படுத்த முயன்றனர் என்பதை அறிவிக்கின்றன. அவர்களின் இத்தகைய நம்பிக்கையை முற்றாக மறுத்திடவே உன்னையே வணங்குகிறோம் என்று சொல்லுமாறு அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான்.

மொத்தத்தில் அன்றைய காஃபிர்களுக்கு (இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு) அல்லாஹ்வை வணங்குவதில் ஆட்சேபணை எதுவும் இருந்ததில்லை. அல்லாஹ்வை மதிக்கவும், அவனைப் போற்றவும் அவனை வணங்கவும் அவர்கள் தயாராகவே இருந்தார்கள்.

அவர்கள் செய்த தவறு என்னவென்றால் அல்லாஹ்வைக் கடவுள் என்ற முறையில் அவர்கள் வணங்கியதுடன் இறைவனின் அடியார்களை கடவுளிடம் பரிந்துரை செய்பவர்கள் என்ற முறையில் வணங்கி வந்தனர்.

இவ்வாறு பரிந்துரை செய்வார்கள் என்று அவர்களைத் திருப்திபடுத்த எண்ணுவதும் ஒரு சில வணக்கங்களை அவர்களுக்கு செய்ய முன்வருவதும் தவறான கொள்கை என்பதனாலேயே அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) என்றான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 29:65)

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள். பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.

(அல்குர்ஆன் 16:53,54,55)

அல்லாஹ்வை வணங்கி அவனிடமே பிரார்த்தனை செய்து வந்த அம்மக்கள் இறைவனல்லாதவர்களையும் வணங்கியதன் மூலம் இணைவைத்து வந்தனர் என்பதற்கு இந்த வசனங்களும் சான்றுகளாக உள்ளன.

அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு இறைவனல்லாதவர்களையும் வணங்கினால் அது இறைவனால் ஏற்கப்படாது. மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) இவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்ததை அல்லாஹ் ஏற்கவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

என்றோ மரணித்து விட்டவர்களை முஸ்லிம்களில் சிலர் அழைப்பதும், பிரார்த்திப்பதும் தவறல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்று விட்டோமே! பெரியார்களைப் பரிந்துரை செய்பவர்களாகத் தானே கருதுகிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் (இஸ்லாத்தை ஏற்காதவர்களும்) இது போல் தான் நம்பினார்கள். அல்லாஹ்வத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) கூறவேயில்லை.

கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நம்பிக்கையை ஒழிக்க அனுப்பப்பட்டார்களோ அதையே இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்வது தான் வேதனையானது.

மகான்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்புவதும் இணை வைத்தல் என்ற கடும் குற்றம் என்பதை விளங்க வேண்டும்.

இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படக் கூடிய ஒரு சந்தேகத்தை அகற்றுவது அவசியமாகும். மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தானே? மகான்களை அல்லவே? என்பதே அந்தச் சந்தேகம். இது அடிப்படையில்லாத சந்தேகமாகும்.

மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) நல்லடியார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிகின்ற நபிமார்களின் சிலைகளையும் இவ்வாறு வணங்கி வந்தனர். அந்தச் சிலைகள் மூலம் அவர்கள் நாடியது நபிமார்களைத் தான். நபிமார்களைத் தானே அவர்கள் திருப்திபடுத்துகின்றனர் என்பதால் அல்லாஹ் அதை அங்கீகரிக்கவில்லை.

صحيح البخاري 
1601 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ البَيْتَ وَفِيهِ الآلِهَةُ، فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ، فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ، وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَاتَلَهُمُ اللَّهُ، أَمَا وَاللَّهِ لَقَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ». فَدَخَلَ البَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது காபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றை தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3351, 4289

அன்றைய காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடவுள் என்று நம்பவில்லை. மாறாக இறைவனிடம் பரிந்து பேசி நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே நம்பினார்கள். அதற்காக சில வணக்கங்களையும் செய்து வந்தனர்.

இவ்வாறு நல்லடியார்களிடம் போய் பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

எந்த நல்லடியாராக இருந்தாலும் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று எண்ணி அவர்களைத் திருப்திப்படுத்த அனுமதி இல்லை. உன்னையே வணங்குகிறோம் என்று உறுதிமொழிக்கு இது மாற்றமானது என்பதாலேயே அந்தச் சிலைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

நாம் இவ்வாறு கூறுவதால் நபிமார்கள், நல்லவர்கள் மறுமையில் பரிந்துரை செய்வார்கள் என்பதை மறுப்பதாக எவரும் கருதலாகாது. இறைவனின் அனுமதி பெற்று இணை வைக்காதவர்களுக்காக நபிமார்கள் மறுமையில் பரிந்துரை செய்வார்கள் என்பது உண்மை தான்.

ஆனால் மறுமையில் நாம் கூறுவதை அவர்களும், அவர்கள் கூறுவதை நாமும் கேட்க முடிகின்ற விதத்தில் நேருக்கு நேர் சந்திக்கும் போது, இவ்வாறு கேட்பதற்குத் தடையில்லை. நபிமார்களிடம் அவர்களின் உம்மத்தினர் மறுமையில் இவ்வாறு கேட்பதாக ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.

நாம் மறுப்பது என்னவென்றால் இறந்து போனவர்களை - அவர்களின் சிலையை - சமாதியை பரிந்துரை செய்யுமாறு இம்மையிலேயே வேண்டுவதையும், அவர்களுக்காகவே சில வணக்கங்கள் புரிவதையும் தான்.

(பரிந்துரை பற்றி தனித் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதைக் காண்க)

நல்லவர்களைச் சிலையாக வடிவமைத்து அதற்கு வேண்டுதல் செலுத்துவது தான் கூடாது. அவர்களைச் சமாதி வடிவில் வைத்துக் கொண்டு இவ்வாறு பரிந்துரை செய்யுமாறு வேண்டுவதும் அவர்களுக்குச் சில வணக்கங்கள் புரிவதும் தவறல்ல என்பர் சிலர்.

அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்கலாகாது என்பது தான் இய்யாக நஃபுது வின் பொருள். சிலை வடிவமும், சமாதி வடிவமும் இதில் சமமானதேயாகும்.

صحيح البخاري 
435 و 436 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

مسند أحمد 
7358 - حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اللهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا، لَعَنَ اللهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ " (1)

என் சமாதியை வழிபாடு நடக்கும் இடமாக இறைவா ஆக்கி விடாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 7054

سنن أبي داود
2042 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ»

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 1746

சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தில் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.

صحيح البخاري
427 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

صحيح مسلم 
94 - (970) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதிகளின் மீது கட்டிடம் கட்டுவதையும் அது பூசப்படுவதையும் அதன் மீது உட்கார்வதையும் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

صحيح مسلم 
93 - (969) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ، قَالَ: قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ»

இந்தப் பூமியில் உள்ள எந்தச் சமாதியையும் இடித்துத் தரை மட்டமாக்காது விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டனர். அதே கட்டளையை நிறைவேற்ற உம்மை நான் அனுப்புகிறேன் என்று அலீ (ரலி) என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்

நூல்: முஸ்லிம் 1609,

இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும், சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.

கல்லை, மண்ணை, சமாதியை எதை வணங்கினாலும் உன்னை மட்டுமே வணங்குவோம் என்ற உறுதிமொழி அர்த்தமற்றதாகி விடும். அல்லாஹ்வைத் தவிர எதனையும் எந்த வடிவிலும் வணங்காமலிருக்கும் போது தான் உன்னை மட்டும் வணங்குவோம் என்ற உறுதிமொழிக்கு அர்த்தமிருக்க முடியும் என்பதை நாம் மறந்து விடலாகாது.

உன்னை மட்டும் வணங்குவோம் என்று இறைவனுக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியை மீறி இறைவனல்லாதவர்களை வணங்குவதும், அவர்களிடம் பிரார்த்தனை செய்வதும், இம்மையிலேயே அவர்களின் பரிந்துரையை மக்கா காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) வேண்டியது போல் வேண்டுவதும், இறைவனுக்குச் செய்கின்ற பாவங்களிலேயே பயங்கரமான கடுமையான குற்றமாகும்.

இணை வைத்தலின் விளைவுகள்

ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது. ஒரு காலத்திலும் இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. இணை வைத்தல் என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தைப் புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன் 4:48)

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன் 5:72)

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(அல்குர்ஆன் 6:88)

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 9:17)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன் 39:65,66)

صحيح البخاري 
1238 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ» وَقُلْتُ أَنَا: «مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ»

எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 1238

صحيح البخاري 
32 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، ح قَالَ: وحَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ أَبُو مُحَمَّدٍ العَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: لَمَّا نَزَلَتْ: {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا} [الأنعام: 82] إِيمَانَهُمْ بِظُلْمٍ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا لَمْ يَظْلِمْ؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الشِّرْكَ} [لقمان: 13]

விசுவாசங்கொண்டு தங்கள் விசுவாசத்துடன் அநீதியைக் கலக்காதவர்களுக்கே பாதுகாப்பு உண்டு (6:82) என்ற வசனம் இறங்கியதும், அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியுமா? என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக! இணைவைத்தல் தான் மிகப் பெரும் அநீதியாகும் (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 32, 6937

உன்னை மட்டுமே வணங்குவோம் என்ற உறுதிமொழிக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவது எவ்வளவு பயங்கரக் குற்றம் என்பதை உணர இந்தச் சான்றுகளே போதுமாகும்.

வணக்கம் என்றால் என்ன?

இய்யாக நஃபுது (உன்னை மட்டுமே வணங்குவோம்) என்று வல்ல இறைவனிடம் உறுதிமொழி எடுக்கும் போது வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்கும் செய்து வருவதைக் காண முடிகின்றது.

தொழுகை, நோன்பு போன்ற காரியங்கள் மாத்திரமே வணக்கம் என்று இவர்கள் தவறாக நம்புவதால் தொழுகை, நோன்பு போன்றவை அல்லாத ஏனைய வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்குச் செய்யத் துணிந்து விடுகின்றார்கள்.

உண்மையில் வணக்கம் என்பது தொழுகை நோன்பு போன்ற கடமைகள் மட்டுமில்லை. இவை அல்லாத இன்னும் பல வணக்கங்களும் உள்ளன.

அல்லாஹ்வை நேசிப்பதும் வணக்கமே!

தனக்காக தனது அடிமைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்று அல்லாஹ்தனது திருக்குர்ஆனிலும், தனது திருத்தூதர் வாயிலாகவும் கற்றுத் தருகிறானோ அவையாவும் வணக்கங்களேயாகும்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

(அல்குர்ஆன் 2:165)

அல்லாஹ்வை நேசிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லாமல், அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது என்றும், அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூமின்கள் என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.

யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார். இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியை மீறியவராவார். இறைவனளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

(அல்குர்அன் 39:45)

இறைவனின் பெயரைக் கூறும் போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் - இறைவனின் - அழைப்பை பாங்கை கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் அவனது உள்ளத்தில் இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடி கொண்டுள்ளது என்று பொருள். இய்யாக நஃபுது என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை.

இறைவனது கட்டளை இது தான் என்று கூறப்படும் போது எனது தந்தை, எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்! இய்யாக நஃபுது என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.

தவக்குல் வைப்பதும் வணக்கமே!

தனது இயலாமையை ஒப்புக் கொண்டு அடுத்தவர் மீது நம்பிக்கை கொண்டு அவரிடமே தனது காரியங்களை ஒப்படைத்து விடுவது தவக்குல் ஆகும். தனக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆற்றல்களையும், வசதிகளையும் பயன்படுத்திய பின்னரும் ஒரு காரியம் கைகூடாத போது தன்னைப் போன்ற மனிதர்களால் அந்தக் காரியத்தைச் செய்திட முடியாது என்பதை உணர்ந்து தனக்கும் மேலான சக்தி பெற்றவனிடம் காரியங்களை ஒப்படைப்பதே தவக்குல்.

என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்! என்று மூஸா கூறினார்.

(அல்குர்அன் 10:84)

அல்குர்ஆன் 3:122, 3:159, 3:160, 5:11, 5:23, 8:2, 8:49, 8:61, 9:51, 12:67, 14:11, 11:123, 14:12, 16:42, 16:99, 25:58, 29:59, 39:38, 42:36, 58:10, 64:13 ஆகிய வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் யார் மீதும் தவக்குல் வைக்கலாகாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இறைவனல்லாத எவர் மீதும் தவக்குல் வைப்பவர்கள் ஈமான் இல்லாதவர்கள்; இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் தெளிவாக்குகின்றான்.

பசியைப் போக்கிக் கொள்ள உழைக்காமல் படுக்கையில் படுத்துக் கொண்டு, அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று கூறுவதற்குப் பெயர் தவக்குல் அல்ல. செய்ய வேண்டிய எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவனிடம் காரியங்களை ஒப்படைப்பதே தவக்குல் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

صحيح البخاري 
1770 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ: قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: " ] كَانَ ذُو المَجَازِ، وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ، حَتَّى نَزَلَتْ: {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ} [البقرة: 198] فِي مَوَاسِمِ الحَجِّ "

அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு, எந்தத் தயாரிப்பும் இன்றி, ஹஜ்ஜுக்கு வந்து சிலர் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டித்து (ஹஜ்ஜுடைய காலங்களில் வியாபாரம் செய்வதன் மூலம்) உங்கள் இறைவனின் அருட்கொடைகளைத் தேடிக் கொள்வது தவறில்லை. (அல்குர்ஆன் 2:19) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1770, 2050, 2098, 4519

இதன் மூலம் தவக்குல் என்பதன் பொருளை நாம் அறியலாம். ஒருவன் திருமணம் செய்கிறான். தனக்குச் சந்ததி வேண்டுமென்பதற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறான். அதன் பிறகும் சந்ததி உருவாகவில்லை எனும் போது மருத்துவர்களை அணுகி, தன் உடலைச் சோதனை செய்கிறான். செய்ய வேண்டிய அனைத்தையும் மனித சக்திக்கு உட்பட்டு செய்து பார்த்த பின் இறைவனிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் போது அவன் அல்லாஹ் மீது தவக்குல் வைத்தவனாகின்றான்.

மற்றொருவன் இந்தக் கட்டத்தை அடையும் போது என்றைக்கோ இறந்து போய் விட்ட, தனக்கே ஒரு குழந்தையைச் சுயமாக உருவாக்கிக் கொள்ளச் சக்தியற்றவர்களிடம் போய் அவ்லியாவே! நீங்கள் தான் எனக்குப் பிள்ளை தர வேண்டும் என்று வேண்டுகின்றான் என்றால் அவனது தவக்குல் அல்லாஹ்வின் மீது இல்லை. அல்குர்ஆன் 5:23, 10:84 வசனங்களின் படி இஸ்லாத்தை விட்டு அவன் வெளியேறி விடுகிறான். இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியை மீறி விடுகிறான்.

தவக்குல் வைக்க வேண்டுமானால், அதற்கு மிக முக்கியமான தகுதி ஒன்று வைக்கப்படுபவரிடம் இருந்தாக வேண்டும். அந்தத் தகுதி எவரிடம் இல்லையோ, அவர் மீது தவக்குல் வைக்க முடியாது. அதாவது எவர் மீது தவக்குல் வைக்கப்படுகின்றதோ, அவர் உயிருடனிருக்க வேண்டும். உயிருடனிருப்பது மட்டும் கூட போதாது. ஒருக்காலும் அவருக்கு மரணமே ஏற்படாது இருக்க வேண்டும். இத்தன்மை கொண்டவரிடமே தவக்குல் வைக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

(அல்குர்ஆன் 25:58)

இந்தத் தகுதி அல்லாஹ்வைத் தவிர, வேறு எவருக்கேனும் இருக்க முடியுமா? பச்சிளம் பாலகனுக்குப் புரியும் விதமாக வல்ல அல்லாஹ் சொல்லித் தந்த பின்னரும் இறந்து போனவர்களைத் தேடிப்பிடித்து, அவர்கள் மீது தவக்குல் வைக்க சிலர் துணிந்து விடுகிறார்கள் என்றால் இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? இய்யாக நஃபுது என்று அன்றாடம் பலமுறை எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு ஏதாவது அர்த்தமிருக்கின்றதா?

பைத்தியம் பிடித்து, சிலர் சமாதிகளில் சரணடைவார்கள். பைத்தியம் அங்கே தெளியும் என்பர். பைத்தியத்தைக் குணப்படுத்தும் வல்லமை அந்தச் சமாதிகளுக்கு உண்டென்று நம்புவர்.

இவர்கள் மனநோய்க்கு ஆளானதும், பைத்தியம் பிடித்து அலைவதும், ஷைத்தானின் வலையில் இவர்கள் விழுவதும் எதனால்? எவர்கள் தங்களின் எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ் மீது தவக்குல் வைக்கத் தவறினார்களோ அவர்களே பைத்தியத்துக்கு ஆளாகின்றனர்.

குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்! நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.

(அல்குர்ஆன் 16:98,99,100)

வந்துவிட்ட மனநோய்க்காக அல்லாஹ் மீது மட்டும் தவக்குல் வைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. இந்த மனநோய் வந்ததற்கு காரணமே அல்லாஹ் மீது மட்டும் தவக்குல் வைக்காமல் எவர் மீதும், எதன் மீதும் தவக்குல் வைத்தது தான் என்பதை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உன்னை மட்டுமே வணங்குவோம் என்று நாம் உறுதிமொழி எடுத்துள்ளதால் தவக்குல் எனும் இவ்வணக்கத்தை எவருக்கும் செய்ய மாட்டோம் என்று எவர் நம்புகிறாரோ, அதன் படி நடக்கிறாரோ, அவர் தான் இய்யாக நஃபுது என்ற உறுதிமொழியை அர்த்தமுள்ளதாக ஆக்கியவராவார்.

நேர்ச்சையும், அறுத்துப் பலியிடலும் வணக்கமே!

இய்யாக நஃபுது (உன்னை மட்டுமே வணங்குவோம்) என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்ட முஸ்லிம்களில் சிலர், இறைவனல்லாத இறைவனின் அடியார்களுக்கு நேர்ச்சை செய்வதையும், அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதையும் சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றனர்.

இறைவனல்லாத எவரையும், எதனையும் வணங்கலாகாது என்று உறுதிமொழி எடுத்தவர்கள், இறைவனல்லாதவர்களுக்காக நேர்சச்சை செய்யவும், அவர்களுக்காகப் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதற்கு என்ன காரணம்? வணக்கத்தில் இவைகளும் அடங்கும் என்று அவர்கள் அறியாமலிருப்பதே காரணமாகும்.

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

(அல்குர்ஆன் 108:2)

இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை.

ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

தாமாக இறந்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், இறைவனல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றைத் தான் உங்கள் மீது அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான்.

(அல்குர்ஆன் 2:173)

இதே கருத்தை அல்குர்ஆன் 5:3 வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

பன்றியின் மாமிசமும், இரத்தமும், செத்த பிராணிகளும் எப்படி ஹராமாக உள்ளனவோ, அது போல் ஹலாலான ஆடு, மாடு போன்றவற்றை இறைவனல்லாத மற்றவர்களின் பெயரால் அறுத்துப் பலியிடும் போது அவையும் ஹராமாக உண்ணத் தகாதவையாக மாறிவிடுகின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.

இறைவனால் அனுமதிக்கப்பட்ட பிராணிகளேயானாலும் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடப்பட்டால் அவையும் ஹராமாகி விடுகின்றன என்றால் இதை அல்லாஹ் எந்த அளவுக்கு வெறுக்கின்றான் என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடப்பட்டவைகளும், பன்றியின் மாமிசமும், இறைவனின் பார்வையில் சமமானவையே. இதை விடவும் கடுமையான எச்சரிக்கை என்ன இருக்க முடியும்?

صحيح مسلم 
43 - (1978) حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَسُرَيْجُ بْنُ يُونُسَ، كِلَاهُمَا عَنْ مَرْوَانَ، قَالَ زُهَيْرٌ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ، قَالَ: كُنْتُ عِنْدَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسِرُّ إِلَيْكَ، قَالَ: فَغَضِبَ، وَقَالَ: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسِرُّ إِلَيَّ شَيْئًا يَكْتُمُهُ النَّاسَ، غَيْرَ أَنَّهُ قَدْ حَدَّثَنِي بِكَلِمَاتٍ أَرْبَعٍ، قَالَ: فَقَالَ: مَا هُنَّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: قَالَ: «لَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَهُ، وَلَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ، وَلَعَنَ اللهُ مَنْ آوَى مُحْدِثًا، وَلَعَنَ اللهُ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ»

யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான் (சபிக்கிறான்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 3657, 3658, 3659

படைத்த இறைவனே சபிக்கிறான் என்றால், தன்னுடைய அருளை விட்டும் அவனை அப்புறப்படுத்துகிறான் என்றால் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய ஒரு அடியானுக்கு இதை விட துர்பாக்கியம் என்ன இருக்க முடியும்? இறைவனுடைய சாபத்துக்கு ஆளாகிவிட்ட ஒருவன் எப்படி மறுமைப் பேறுகளைப் பெற முடியும்? இறைவனின் சாபத்துக்கு உரியவனாக ஒருவன் ஆகின்றான் என்றால் அவன் நரகத்திற்கு தகுதி படைத்தவனாக ஆகிவிடுகிறான் என்பது பொருள்.

உயிரே போய்விடும் என்ற நிலை ஏற்பட்டாலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் எதனையும் பலியிடக் கூடாது. அற்ப ஈ போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பலியிடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

நான் புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர்ச்சையும் வணக்கமாகும்

தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் நேர்ச்சை எனும் வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்யத் துணிய மாட்டார்கள்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

(அல்குர்ஆன் 2:270)

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

(அல்குர்ஆன் 22:29)

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

(அல்குர்ஆன் 76:7)

இந்த வசனங்கள் மூலம் நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

இறைவா! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காகத் தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன்; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டுமே தவிர இறைவனல்லாத எவருக்கும் செய்யலாகாது. அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றவும் கூடாது.

யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ அதை நிறைவேற்றலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696, 6700

நேர்ச்சையும், அறுத்துப் பலியிடலும் ஒரு வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன் படி நடக்கவில்லையோ அவர்கள் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதி மொழியை அர்த்தமற்றதாக்குகிறார்கள். இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.

அதிகாரம் படைத்தவன் என நம்புவதும் வணக்கமே

ஒன்றைக் கூடும் என்று சட்டமியற்றவோ, கூடாது என்று தடை விதிக்கவோ அதிகாரம் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. அப்படி நம்புவதும் இறை வணக்கங்களில் ஒன்றாகும். இறைவனல்லாத வேறு யாரும் இந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று எவர் நம்பினாலும் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழியை மீறியவராவார். இறைவனல்லாதவர்களையும் வணங்கியவராக அவர் கருதப்படுவார்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

(அல்குர்அன் 9:31)

பாதிரிமார்களையும், மதகுருக்களையும் யூத கிறித்தவர்கள் கடவுளர்களாக ஆக்கி விட்டதாக அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். உண்மையில் யூத கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார்களைக் கடவுளர்கள் என்று நம்பியதுமில்லை! அவர்கள் இறைத்தன்மை பெற்றவர்கள் என்று கொள்ளவுமில்லை!

அவர்கள் செய்த தவறு என்னவென்றால், தங்கள் மதகுருமார்களும் சட்டம் வகுக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்கள் என்று நம்பியது தான். இவ்வாறு நம்பியதாலேயே அவர்கள், தங்கள் பாதிரிமார்களைக் கடவுளர்களாகக் கருதினார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

எவ்வளவு பெரிய மேதைகள் என்றாலும், மகான்கள் என்றாலும், வேத விற்பன்னர்கள் என்றாலும், இமாம்கள் என்றாலும் அனைவரும் இறைவனின் அடிமைகளே! அல்லாஹ் இடும் கட்டளைக்குக் கட்டுப்படவும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். சுயமாக இறைவனின் வேத ஆதாரமின்றி இறைத்தூதரின் வழிகாட்டலின்றி எந்த ஒன்றையும் மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்று நம்புவது தான் இய்யாக நஃபுது என்று கூறுவதன் சரியான அர்த்தமாகும்.

இதற்கு மாறாக நடப்பவர்கள், மறுமையில் சந்திக்கும் விளைவை வல்ல அல்லாஹ் தெளிவாக நமக்கு அறிவிக்கிறான்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! (எனவும் கூறுவார்கள்.)

(அல்குர்ஆன் 33:66,67,68)

பெரியார்கள், இமாம்கள், நாதாக்கள், தங்கள்மார்கள் கூறுவதைக் கண்ணை மூடிக் கொண்டு அதற்குரிய சான்றுகள் உள்ளனவா? என்று ஆராயாமல் நம்பியவர்கள் மறுமையில் படும்பாட்டை இங்கே அல்லாஹ் படம்பிடித்துக் காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான வழிகாட்டுதலுக்குப் பிறகும் மத்ஹபுகள் என்றும், தரீக்காக்கள் என்றும் சமுதாயத்தைக் கூறுபோட்டுப் பெரியார்களின் காலடிகளில் வீழ்ந்து கிடக்க முஸ்லிம் சமுதாயம் துணிந்து விட்டது என்றால் இதற்கு காரணம் வணக்கம் என்றால் என்னவென்பது முழுமையாக விளக்கப்படாததேயாகும்!

வணக்க வழிபாடுகளாகட்டும்! அரசியலாகட்டும்! இல்லற நெறிகளாகட்டும், இன்ன பிற துறைகளாகட்டும்! அனைத்துமே அல்லாஹ் காட்டித் தந்த வழியில் தான் நடக்க வேண்டும். இதை நிர்ணயிக்கின்ற உரிமையை அல்லாஹ் எவரது கையிலும் ஒப்படைக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

மதகுருமார்கள் கூறுவதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்பது போலவே மூதாதையாரானலும், பெற்றெடுத்த தாய் தந்தையரானாலும் அவர்கள் கூறுவது இறைவனது வழிகாட்டலுக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்பதும் அவர்களை வணங்கியதாகவே பொருள்.

தங்கள் முன்னோர்கள் கூறினார்கள் என்பதற்காக, அவர்கள் செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் கூறுவதையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்துபவர்களை 9:23, 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 26:74, 31:21, 43:22, 43:23, 58:22 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கடுமையாகக் கண்டனம் செய்கிறான்.

பெற்றோர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக வேத ஆதாரமின்றி அவர்களுக்குக் கட்டுப்படுவதை 29:8, 31:15 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கண்டிக்கிறான்.

அது போல் பெரும்பான்மை மக்கள் ஒன்றைச் செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதும், சட்டமியற்றும் அதிகாரத்தை அவர்கள் கையில் ஒப்படைத்து விடுவதும் அவர்களை வணங்கியதாகவே கொள்ளப்படும். 6:116 வசனத்தில் பெரும்பான்மைக்கு வழிபடுவதை அல்லாஹ் மறுத்துரைக்கிறான். ஆக, எந்த விஷயத்திலும் சட்டமியற்றும் அதிகாரம் எவரிடமாவது இருப்பதாக நம்புவதும் அதைச் செயல்படுத்துவதும் உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழிக்கு மாற்றமாகும்.

பிரார்த்தனையும் ஒரு வணக்கமே!

துஆ எனும் பிரார்த்தனையும் வணக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாததால் இறைவனல்லாதவர்களிடம் பிரார்த்திக்கின்றனர் சிலர். உன்னையே வணங்குகிறோம் என்று இறைவனிடம் அளித்த உறுதிமொழிக்கு மாறாக நடக்கிறோம் என்று இவர்கள் உணரவில்லை.

பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: திர்மிதீ 2895

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: ஹாகிம் 1801

பிரார்த்தனை என்பது வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் எனத் தெளிவாக இந்த நபிமொழிகள் யாவும் அறிவிக்கின்றன. துஆ என்பது தலையாய வணக்கம் என நிரூபணமாகும் போது உன்னையே வணங்குகிறோம் என்பதில் துஆவும் அடங்கிவிடுமென்பதில் ஐயமில்லை.

யார் இறைவனல்லாத மற்றவர்களைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாகவே இறைவனால் கருதப்படுவர்.

ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணருவதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் துஆவில் கூடுதலாகவே உள்ளது எனலாம்.

என் இறைவனுக்குத் தான் யாவும் தெரியுமே என்று எவரேனும் கருதி இறைவனிடம் பிரார்த்திக்கத் தவறினால் இவன் இறைவனின் வல்லமையை உணர்ந்தவனாகக் கருதப்பட மாட்டான். மாறாக, தன் அடிமைத்தனத்தை ஏற்க மறுக்கும் அகம்பாவம் கொண்டவனாகவே கருதப்படுவான்.

யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் வெறுப்படைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3295

இறைவனின் அருட்கொடையை இறைவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: திர்மிதீ 3494

துஆ கேட்காதவர்களை அல்லாஹ் வெறுக்கிறான் என்றால், துஆ செய்யப்படுவதை எவ்வளவு விரும்புகிறான் என்பதை உணர முடியும். இறைவனுக்கு மிகவும் விருப்பமான இந்த வணக்கத்தை இறைவனல்லாதவர்களுக்குச் செய்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். அவ்வசனங்கள் யாவும் இய்யாக நஃபுது என்பதன் விளக்கவுரைகளேயாகும்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:194)

எவரையாவது பிரார்த்திப்பது கூடும் என்று வைத்துக் கொண்டால் அவர்கள் எத்தகையவர்களாக இருந்திட வேண்டும் என்று அல்லாஹ் இங்கே போதிக்கின்றான். அதாவது பிரார்த்திக்கப்படுவோர் எவருக்கும் அடிமைகளாக இல்லாதிருத்தல் அவசியம்.

அல்லாஹ் பல்வேறு வசனங்களில் நபிமார்களை நல்லவர்களை - வானவர்களைத் தனது அடிமைகள் என்றே குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

(2:23, 4:172, 8:41, 17:1,3, 18:1,6,5, 19:93, 38:17,30,44, 43:59, 54:9, 72:19, 53:10, 25:1, 57:9, 66:10 ஆகிய வசனங்களைக் காண்க!)

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன் 46:5)

இந்த வசனத்தில் இரண்டு உண்மைகளை அல்லாஹ் விளக்குகிறான். இறைவனல்லாத அழைக்கப்படுபவர்களுக்கு தாங்கள் அழைக்கப்படுவதே தெரியாது என்பது ஒரு உண்மை.

தங்களைப் பிரார்த்தனை செய்தது மறுமையில் தெரியும் போது தங்களுக்கும், இவர்களது பிரார்த்தனைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தாங்கள் அதை விரும்பவில்லை என்று கூறி, பிரார்த்தனை செய்தவர்களுக்கே எதிரிகளாகிப் போவர் என்பது மற்றொரு உண்மை. இதன் பின்னரும் யாரேனும் இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்யத் துணிவார்களா?

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

பிரார்த்தனை செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய மற்றொரு தகுதியை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். படைப்பாற்றல் எவனிடம் உள்ளதோ அவன் மாத்திரமே பிரார்த்திக்கப்பட அருகதையுடையவன். இறைவனன்றி பிரார்த்திக்கப்படுபவர்கள் நபிமார்களானாலும், நல்லடியார்களானாலும் அவர்களில் எவருமே ஒரு ஈயைக் கூடப் படைப்பதில்லை. படைக்க இயலாது. இந்த நிலையில் அவர்களை எங்ஙனம் பிரார்த்திக்கலாம்?

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

(அல்குர்ஆன் 27:62)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 2:186)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன் 10:106)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன் 7:197)

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன் 35:13,14,15)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:20,21)

இந்த வசனங்கள் யாவும் இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணைவைக்கும் பெரும்பாவம் என்பதையும் அறிவிக்கின்றன. இய்யாக நஃபுது என்பதன் விளக்கவுரைகளாக இவை அமைந்துள்ளன. இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்பும் இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்யலாம் என சிலர் கூறுவதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம்.

இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்ய வேண்டுமென்றோ, இறைத்தூதரின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ எந்த முஸ்லிமும் எண்ண மாட்டான். இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் தரப்பில் சில நியாயங்கள் வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கத் துணிகின்றனர். சிந்தித்துப் பார்க்கும் போது அவர்களது வாதங்கள் யாவுமே அர்த்தமற்றதாக அமைந்துள்ளதை உணரலாம்.

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

இறைவனல்லாத பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை. மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள் என்றே கூறுகிறோம். ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்றே நாங்கள் நம்புகிறோம். சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்? இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் சிந்திக்கும் போது இது பொருந்தாத வாதம் என்பதை உணரலாம்.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அத்தனையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்கின்றனர். நேரடியாக எதையும் தருவார்கள் என்று இவர்கள் நம்பாவிட்டாலும் தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கத் துணிகின்றனர்.

மக்கத்துக் காஃபிர்கள், (இஸ்லாத்தை ஏற்காதவர்) இறைவனல்லாத பெரியவர்களை இறைவனுக்குச் சமமாக எண்ணியிருக்கவில்லை. மாறாக, அல்லாஹ் தான் ஏக இறைவன்; படைப்பவன் அவனே; உணவளிப்பவன் அவனே; அனைத்து அதிகாரங்களும் அவன் கையில் தான் உள்ளன என்றே அவர்கள் நம்பினார்கள்.

(10:31, 29:61, 31:25, 39:93, 43:9,87, 34:24, 23:88 ஆகிய திருக்குர்ஆன் வசனங்களைக் காண்க)

இப்படியெல்லாம் அல்லாஹ்வைப் புரிந்து வைத்திருந்த மக்கத்து காபிர்கள், அல்லாஹ் விசயத்தில் செய்த தவறு தான் என்ன?

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

இவ்விரு வசனங்களும், மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இதை விடச் சான்று எதுவும் தேவையில்லை.

உதாரணங்கள் ஆதாரங்களாகுமா?

அதிகாரி

திருக்குர்ஆனையும், நபிவழியையும் அலட்சியம் செய்துவிட்டு நடைமுறை உதாரணங்களைக் காரணம் காட்டுவது, இவர்களிடம் உள்ள மற்றொரு நியாயம்.

அதாவது உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம்.

இவர்களை விட மிக மிக உயர்வான நிலையிலுள்ள அல்லாஹ்வை நாம் எப்படி நேரடியாக அணுக முடியும்? இதற்காகவே பெரியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கின்றனர். ஷைத்தான் இவர்களது தீய செயல்களை இவ்வாறே அழகானதாகக் காட்டுகிறான். உண்மையில் இதுவும் முட்டாள்தனமான வாதமேயாகும்.

உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது என்பது உண்மை தான். ஏன் அணுக முடியவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நம்மைப் பற்றித் தெரியாது. அந்த உயரதிகாரிக்கு எப்படி நம்மைப் பற்றித் தெரியாதோ அதே போல் இறைவனுக்கும் நம்மைப் பற்றி எதுவும் தெரியாதா? இந்தப் பெரியார்கள் நம்மைப் பற்றிச் சொன்னால் தான் இறைவனுக்கு நம்மைப் பற்றித் தெரியுமா? என்று இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

சாதாரண உயர் அதிகாரியின் நிலை எதுவோ அது தான் இறைவனது நிலையும் என்றல்லவா இவர்கள் எண்ணுகின்றனர்!

யாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற, முக்காலமும் உணர்ந்து வைத்திருக்கின்ற, மனதில் மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் துல்லியமாக அறிகின்ற வல்லவனை அவனது அடிமைகளில் ஒருவரான அதிகாரிக்குச் சமமாக எண்ணுவதை விடவும் மோசமான உதாரணம் என்ன இருக்க இயலும்?

வக்கீல்

நம் வழக்குகளில் நாமே வாதாடுவதில்லை. ஒரு வக்கீலை நியமித்துக் கொள்கிறோம். அவ்வாறிருக்க இறைவனிடம் வாதாட ஒரு வக்கீலாக வலிமார்களைக் கருதுவதில் என்ன தவறு? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.

நீதிபதியிடம் வாதாட வக்கீல் அவசியம் தான். அவர் தன் வாதத் திறமையால் குற்றவாளியையும் நிரபராதியாக்கி விடுவார். நிரபராதியையும் குற்றவாளியாக்கி விடுவார். அதை நீதிபதியும் நம்பி தீர்ப்பு அளித்து விடுவார்.

இறைவனின் நிலைமை நீதிபதியின் இந்த நிலைமை போன்றது தானா? திறமையான வாதத்தினடிப்படையில் குற்றவாளியை நிரபராதியென தீர்ப்பளிக்கும் நீதிபதியைப் போல் இறைவனும் தவறான தீர்ப்பை வழங்கக் கூடியவன் தானா? யார் உண்மையில் குற்றாவளி? யார் நிரபராதி? என்பது நீதிபதிக்குத் தெரியாதது போலவே இறைவனுக்கும் தெரியாது என்கிறார்களா?

இறைவனது நல்லடியார்களின் வேலையும் வக்கீலுடைய வேலை போன்றது தானா? குற்றவாளிகளை நல்லவர்கள் என்று இறைவனிடம் அவர்கள் வாதிடப் போகிறார்களா? இல்லை என்றால் வக்கீல் எதற்காக?

அல்லாஹ்வைப் பற்றி கூறுவதென்றால், வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 16:74)

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 42:11)

அவனுக்கு நிகராக யாருமில்லை

(அல்குர்ஆன் 112:4)

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.

(அல்குர்ஆன் 36:78)

அல்லாஹ்வைப் பற்றிப் பேசும் போது யாதொன்றையும் உதாரணமாகக் கூறலாகாது என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன.

பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்?

நாம் பாவங்கள் பல செய்தவர்கள். இறைவனின் பல கட்டளைகளை மீறியவர்கள். இவ்வாறிருக்க, எப்படி இறைவனிடம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தை அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம் என்பது இவர்களின் மற்றொரு நியாயம்.

அதாவது இறைவனிடம் கேட்பதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறிக் கொண்டு இவர்கள் திசை மாறிச் செல்கிறார்கள்.

யாசிப்பதற்கும், பிச்சை கேட்பதற்கும் தகுதி என்ன வேண்டிக் கிடக்கின்றது? என்பதை இவர்கள் உணரவில்லை. இவர்கள் அல்லாஹ்வுக்கு எதையோ கொடுக்கப் போவது போலவும் இவன் அவர்களிடம் வாங்கப் போவது போலவும் இருந்தால் இவர்களின் வாதத்தில் அர்த்தமிருக்கும். நாம் ரப்புல் ஆலமீனிடம் யாசகம் தான் கேட்கப் போகிறோம். தகுதியில் குறைந்தவர்கள் தான் யாசகம் கேட்க அதிகம் அருகதை உள்ளவர்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறியதால் நாம் அல்லாஹ்விடம் கேட்க முடியாது. அதனால் தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம் என்போர் அல்லாஹ்வின் அளவற்ற அருளாளன் பண்பையே மறுக்கிறார்கள். அல்லாஹ் கோபக்காரன் எனவும் அவ்லியாக்கள் அளவற்ற அருளாளர்கள் எனவும் நம்பக் கூடியவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும். அல்லாஹ்வை விட அவ்லியாக்கள் அதிகமாக அருள் புரிவார்கள் என்பது இணைவைத்தலை விட கொடிய குற்றமாகும். இது அல்லாஹ்வை விட அவ்லியாக்களை உயர்த்தும் கொடுஞ் செயலாகும்.

இவர்களின் இந்த அறியாமையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள் என்றார்.

(அல்குர்ஆன் 12:87)

மனிதன் எவ்வளவு தான் பாவங்கள் புரிந்தாலும் அவனும் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் கேட்டால் அவனது அருள் உண்டு என உத்திரவாதம் தருகிறான். பாவிகள் தன்னிடம் வரலாகாது என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக, பாவிகளையே அழைத்து என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்கிறான்.

ஆக, அல்லாஹ்வைத் தவிர எவரையும் எந்தக் காரணம் காட்டியும் பிரார்த்தித்தலாகாது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. எந்தக் காரணத்திற்காக மற்றவர்களை பிரார்த்தித்தாலும் அவர்கள் இய்யாக நஃபுது எனும் உறுதிமொழிக்கு மாறு செய்தவர்களே என்பதில் ஐயமில்லை.

அவ்லியாக்களின் அற்புதங்கள்!

நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு மகான்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம், பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

அற்புதங்கள் பற்றி முழுமையான விளக்கமில்லாத காரணத்தால் தான் இத்தகைய வாதத்தை அவர்கள் முன் வைக்கின்றனர்.

நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளது உண்மை தான். அதை மறுப்பவர் குர்ஆனை மறுத்தவராவார்.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த மாட்டார்கள். நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்ற உண்மையை விளங்காமலிருப்பது தான் அந்த வாதத்தன் அடிப்படையாகும்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 13:38)

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

(அல்குர்ஆன் 40:78)

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 14:11)

எந்த ஒரு அற்புதத்தைக் கொண்டு வருவதென்றாலும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் முடியாது என்பதற்கு மறுக்க முடியாத மாற்றுக் கருத்து கொள்ள முடியாத ஆதாரமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

இதைப் புரிந்து கொள்வதற்கு நபிமார்கள் வழியாக அல்லாஹ் நிகழ்த்திய சில அற்புதங்களை நாம் ஆராய்வோம்.

மூஸா நபி அவர்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களை வழங்கியிருந்தான். கைத்தடியைக் கீழே போட்டதும் அது பாம்பாக மாறுவதும் அவற்றுள் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 27:10, 20:19-21, 7:107, 26:32, 28:31 ஆகிய வசனங்களில் இந்த அற்புதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் கையில் இருந்த கைத்தடி எப்போது போடப்பட்டாலும் பாம்பாக மாறுமா? அல்லது அல்லாஹ்வின் கட்டளைப்படி போடும் போது மட்டும் பாம்பாக மாறுமா? இக்கேள்விக்கு திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விடையளிக்கிறது.

மூஸா நபியவர்கள் தாம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று கூறியபோது அம்மக்கள் ஏற்கவில்லை. மூஸா நபி செய்து காட்டிய அற்புதம் அவர்களுக்கு தந்திரக் கலையாகத் தோன்றியது. எனவே மூஸா நபிக்கும் அந்த நாட்டிலுள்ள மந்திரக் கலை நிபுணர்களுக்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். நீங்களே போடுங்கள்! என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். உமது கைத்தடியைப் போடுவீராக! என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

(அல்குர்ஆன் 7:115-117)

எதிரிகள் தமது வித்தையைக் காட்டியவுடன் மூஸா நபியவர்கள் தமது கைத்தடியைக் கீழே போட்டு தமது அற்புதத்தைக் காட்டவில்லை. மாறாக அல்லாஹ் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்த பிறகு தான் கைத்தடியைப் போட்டனர் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.

அற்புதம் செய்யும் ஆற்றல் மூஸா நபியின் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருந்தால், அல்லது அவர்களின் கைத்தடிக்கே மந்திர சக்தி அளிக்கப்பட்டிருந்தால் உடனே தமது கைத்தடியைப் போட்டிருப்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்கள் தமது கைத்தடியைக் கீழே போடவில்லை.

மற்றொரு இடத்தில் பின்வருமாறு இந்த நிகழ்ச்சியை அல்லாஹ் கூறுகிறான்.

மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா? என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர் என்று கூறினோம். உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் (என்றும் கூறினோம்.)

(அல்குர்ஆன் 20:65-69)

அல்லாஹ்வின் கட்டளை வருவதற்கு முன் அவர்கள் பயந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமது கைத்தடியின் மூலம் எதிரிகளை வெல்ல முடியும் என்று அவர்கள் நினைத்திருந்தால் பயந்திருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் அனுமதி கிடைத்தால் தான் தம்மால் அற்புதம் செய்து காட்டி எதிரிகளை வெல்ல முடியும் என்று அவர்கள் கருதியதால் தான் பயந்தார்கள் என்பதை இவ்வசனத்தைச் சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும்.

மூஸா நபி அவர்கள் தமது சமுதாயத்தை அழைத்துக் கொண்டு சென்ற போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே மக்கள் மூஸா நபியிடம் முறையிட்டனர்.

மக்கள் முறையிட்டவுடன் உங்களுக்குத் தண்ணீர் தானே வேண்டும்? இதோ எனது மந்திரக் கோல் மூலம் தண்ணீரை உண்டாக்கிக் காட்டுகிறேன் என்று கூறினார்களா? அல்லது இது அல்லாஹ் நாடினால் மட்டுமே நடக்கும் என்று கருதினார்களா?

இந்த நிகழ்ச்சியை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக! என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்! (என்று கூறினோம்)

(அல்குர்ஆன் 2:60)

அவர்கள் கையில் கைத்தடி இருந்தும் அதன் மூலம் அவர்களாக பாறையில் அடித்து தண்ணீரைக் கொண்டு வரவில்லை. அல்லாஹ் அடிக்கச் சொன்ன பிறகு தான் அடித்தார்கள் என்பதிலிருந்து அற்புதங்கள் நிகழ்த்துவது அல்லாஹ்வின் அதிகாரத்தின்பாற்பட்டது என்பதை அறியலாம்.

இந்த விபரம் 7:160 வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

மூஸா நபியை எதிரிகள் விரட்டி வருகின்றனர். மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டு ஓடுகின்றனர். எதிரில் செங்கடல் குறுக்கிடுகின்றது. மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் வசமாக மாட்டிக் கொண்டனர். பின்புறம் பிர்அவ்னுடைய வலிமையான படை. முன்புறம் செங்கடல். இந்த நிலையில் தம்மிடம் இருந்த கைத்தடியின் மூலம் தாமாக அற்புதம் நிகழ்த்தி அவர்கள் தப்பித்தார்களா? அல்லது அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்களா? இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன் 26:61-63)

மூஸா நபியவர்கள் மாட்டிக் கொண்ட போது தமது கைத்தடியால் தாமாகக் கடலில் அடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். கைத்தடியின் மூலம் கடலைப் பிளந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே தான் அவன் எனக்கு ஒரு வழியைக் காட்டுவான் என்று கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? அல்லாஹ் எப்போது போடச் சொல்கிறானோ அப்போது போட்டால் தான் அது பாம்பாகும். அல்லாஹ் பாறையில் அடிக்கச் சொல்லும் போது அடித்தால் தான் பாறையில் நீரூற்றுக்கள் பீரிட்டு வரும். அல்லாஹ் அடிக்கச் சொல்லும் போது கடலில் அடித்தால் தான் பிளந்து வழிவிடும். மூஸா நபி விரும்பும் போதெல்லாம் நடக்காது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

இது போலவே ஈஸா (அலை) அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஈஸா நபி சில நேரங்களில் இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளனர். குஷ்டரோகத்தையும் பிறவிக் குருடையும் குணப்படுத்தியுள்ளனர். களி மண்ணால் பறவை செய்து அவற்றை உயிருள்ள பறவையாக மாற்றிக் காட்டினார்கள். அல்குர்ஆன் 3:49, 5:110 ஆகிய வசனங்களில் இந்த விபரங்களைக் காணலாம்.

இவ்வளவு பெரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் ஆற்றலை அல்லாஹ் அவர்களது அதிகாரத்தில் அளித்தானா? அல்லது ஒவ்வொரு அற்புதம் நிகழ்த்தும் போதும் அல்லாஹ்விடம் அனுமதி பெற்றுத் தான் நிகழ்த்த முடிந்ததா? மேலே நாம் சுட்டிக்காட்டிய 3:49, 5:110 ஆகிய வசனங்களிலேயே இதற்கான விடையையும் காணலாம்.

என்னிடம் அனுமதி பெற்று இந்த அற்புதங்களை நீர் நிகழ்த்துவீர் என்று 5:110 வசனத்தில் அல்லாஹ் ஈஸா நபியிடம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அல்லாஹ்வின் அனுமதி பெற்று இவற்றைச் செய்வேன் என்று ஈஸா நபி அவர்கள் மக்களிடம் கூறியதாக 3:49 வசனம் கூறுகிறது.

தேவைப்படும் போதெல்லாம் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் அதிகாரம் ஈஸா நபிக்குக் கூட வழங்கப்பட்டதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இப்ராஹீம் நபியவர்கள் நெருப்பில் வீசப்பட்ட போது அவர்களாக அந்த நெருப்பிலிருந்து தப்பித்ததாக அல்லாஹ் கூறவில்லை. நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளிர்ந்து விடு என நாம் கூறினோம் (21:69) என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

நபிமார்களில் தலைசிறந்தவர்களான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். அந்த அற்புதங்களையெல்லாம் அவர்கள் நினைத்த உடனே நடத்திக் காட்டும் அதிகாரம் பெற்று நிகழ்த்தினார்களா? அல்லது அல்லாஹ் தான் விரும்பிய நேரத்தில் அவர்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினானா?

பின்வரும் வசனங்கள் இந்தக் கேள்விக்கு தெளிவாக விடையளிக்கின்றன.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:90-93)

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டவுடன் அவர்கள் இதைச் செய்யவில்லை. செய்யவும் முடியாது. கடவுள் தான் இவற்றைச் செய்ய முடியும். நான் கடவுள் என்று உங்களிடம் வாதம் செய்தால் என்னிடம் இவற்றைச் செய்யுமாறு கேட்கலாம். மனிதன் என்றும் கடவுளின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் கடவுளிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலில் அடங்கியுள்ளது.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். மனிதர்கள் மூலம் அவன் நாடும் போது வெளிப்படுத்துகிறான் என்பதையும் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதை அல்குர்ஆன் 3:112, 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களில் காணலாம்.

இங்கே சிந்திக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நபிமார்கள் நினைத்த மாத்திரத்தில் அன்றாடம் அற்புதம் நிகழ்த்தும் சக்தி வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலைமைய நீட்ட முடியாது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

நபிமார்களை எதிரிகள் கொல்ல வரும் போது, அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் அவர்களிடம் இருந்திருந்தால் அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதல்ல என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

இவை தவிர நபிமார்கள் பட்ட துன்பங்களையும் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. வறுமையில் வாடியுள்ளனர். சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அல்லாஹ் துன்பத்திலிருந்து விடுபட அற்புதம் செய்யும் ஆற்றலைப் பயன்படுத்தி துன்பங்களை வெல்ல முடியும். வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அற்புதங்களைப் பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்ட நேரத்தில் கூட எந்த அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டவில்லை என்பதிலிருந்து அற்புதங்கள் அலலாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளைத் துவம்சம் செய்திருக்க முடியும்.

நபிமார்கள் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்தவுடன் அதை அவர்கள் தமது ஆற்றலால் செய்கிறார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.

இதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வோம்.

நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றவர்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியது, அப்பறவை இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது. அல்குர்ஆன் 27:20 முதல் 27:28 வரை உள்ள வசனங்களில் இது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று அதைப் புரிந்து கொள்ள மாட்டோம். சுலைமான் நபிக்காக ஒரே ஒரு பறவைக்கு ஒரே ஒரு தடவை அந்த ஆற்றலை அல்லாஹ் அளித்தான் என்று தான் விளங்க வேண்டும். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று புரிந்து கொள்ளாமல் அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்பது தான் இதன் பொருள்.

இது போலவே எறும்பு பேசிய விபரமும் திருக்குர்ஆனில் உள்ளது. பேசியது மட்டுமின்றி மனிதர்களைப் போலவே வருபவர் சுலைமான் என்றும் அவருடன் அவரது படையினர் வருகிறார்கள் என்றும் புரிந்து கொள்கிறது.

அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும் எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எறும்பு, ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளான். இறைத்தூதர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தும் இறைத் தன்மையை வழங்கி விட்டான் என்று புரிந்து கொள்வது முற்றிலும் தவறானதாகும்.

பறவைகள் எறும்புகள் ஒருபுறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும் சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்கிறான். இந்த விபரங்களை அல்குர்ஆன் 20:85 முதல் 20:98 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை இவன் மூலம் நிகழ்த்திக் காட்டினான். இயல்பிலேயே இவன் நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தைச் செய்வான் என்று புரிந்து கொள்ள முடியாது. இவன் இப்போது செய்து காட்டிய அந்த அற்புதத்தையே மற்றொரு தடவையும் இவனால் செய்ய முடியாது என்பதை அல்குர்ஆன் 20:89 வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இது போலவே எதிர்காலத்தில் தஜ்ஜால் என்பவனும் சில அற்புதங்களை நிகழ்த்துவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால் அவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் ஆற்றலுடையவனாகி விட்டான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு தடவை இறந்தவரை அவன் உயிர்ப்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்திவிட்டனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 7132

ஏன் ஷைத்தான் கூட எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி அவர்களது எண்ணங்களையே மாற்றி விடுகிறான்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நம் கண் முன்னே ஒருவர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் உடனே அவரை மகான் என்றும் அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார் என்றும் கருதி விடக் கூடாது. ஏனெனில் மனிதர்களைச் சோதித்துப் பார்க்க கெட்டவர்களுக்கும் அல்லாஹ் அற்புதம் வழங்குவான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு சான்றுகளை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும் தங்கள் பழைய நம்பிக்கை விட்டு விட தயக்கம் காட்டுவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.

என்றோ மரணித்து விட்ட மனிதர்களின் அடக்கத்தலங்களில் போய் அற்புதங்களை எதிர்பார்க்கின்றனர். எவ்வளவோ அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றனவே என்று தங்கள் கூற்றை இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

அற்புதங்கள் பல நிகத்திய ஈஸா நபியை அழைக்கும் கிறிஸ்தவர்களை காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) என்று கூறுகின்ற இவர்கள் ஈஸா நபியின் கால் தூசுக்கு சமமாகாத மற்றவர்களை அழைப்பது இவர்களுக்கு ஈமானாகத் தோற்றமளிப்பது ஆச்சரியமாகவுள்ளது.

பல நபிமார்கள் மூலம் அல்லாஹ் அற்புதங்கள் நிகழ்த்தியதாக நாம் முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நடந்தன. அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவே இல்லை.

ஆனால் இவர்களோ இறந்தவர்களுக்கு அற்புதங்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.

மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்ம் 3084

உயிரோடு இருக்கும் போதே நினைத்த அற்புதங்களை யாரும் நிகழ்த்த முடியாது என்றால் இறந்த பின் அறவே எந்தச் செயல்பாடும் கிடையாது.

அப்படியானால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? இதை நாங்கள் பார்த்திருக்கிறோமே என்ற வாதத்துக்கு என்ன பதில்?

அற்புதங்கள் நடக்கட்டுமே! அதனால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்று ஆகிவிடுமா? சாமுரியும் தான் அற்புதம் நிகழ்த்தினான். அற்புதத்தைப் பார்த்துத் தான் மக்கள் ஈமானைப் பறிகொடுத்தார்கள்.

நாளை தஜ்ஜால் வந்து அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் போது அவனிடம் துஆச் செய்வார்களா? துஆச் செய்யலாம் எனக் கூறுவார்களா?

அற்புதங்கள் நிகழட்டும்! நிகழாமல் போகட்டும்! அதற்காக அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்திப்பது கூடும் என்று ஆகிவிடாது. கூடாது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அல்லாஹ் நம்மைச் சோதிக்கிறான் என்று கருதி சோதனையில் வெற்றி பெறுவது தான் உண்மையான முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றன எனக் கூறுகிறார்களே அது கூட உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர். இரண்டு பேர் 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கை கூடாத 998 பேர் வாயைத் திறப்பதில்லை. இவரெல்லாம் ஒரு மகானா என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைவித்துவிடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை. மாறாக கோவில்களில் நடக்கின்றன. சர்ச்சுகளில் நடக்கின்றன. இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன. இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் காணிக்கைகள் குவிகின்றன. தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாக காணிக்கைகள் சேர்கின்றன.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பதும் குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருந்தது. இந்த வாதத்தினடிப்படையில் கோவில், சர்ச்சுகளுக்குப் போய் பிரார்த்திப்பதையும் குறை காண முடியாது.

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே? இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒரு காரியம் ஒருவருக்கு நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும் போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.

அந்த நேரம் வரும் போது தர்காவில் இருப்பவர்கள் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் வரும் போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் வரும் போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும் பிந்தவும் செய்யாது என்பது குர்ஆனின் போதனை. (7:34, 10:49, 16:61)

எனவே அற்புதம் பற்றி தெளிவாக அறிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட முடியும்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்

வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவது போலவே குர்ஆனிலிருந்தும் கூட (தவறான வியாக்கியானம் கொடுத்து) இவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

(அல்குர்ஆன் 3:169)

நல்லடியார்கள் மரணித்த பின்பும் வாழ்கிறார்கள் என்று இந்த இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் தவறாகும்.

முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

இந்த வசனம் பற்றி நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சுவர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் 3500

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று, அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவார். அதன் பின்னர் புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு! எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)

நூல்: திர்மிதீ 991

உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? இந்தக் காரணத்தினாலும் இவர்களின் வாதம் அடிபட்டுப் போகின்றது.

இதையெல்லாம் கூட விட்டு விடுவோம். அவர்களின் வாதப்படி அவர்கள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய தகுதியைத் தந்து விடுமா?

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்?

ஈஸா நபி உண்மையாகவே உயிருடன் உள்ளனர். மலக்குகள் உயிருடன் உள்ளனர். ஈஸா நபியைப் பிரார்த்திப்பவர்களை காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்? இதனாலும் இவர்களின் வாதம் மேலும் பலவீனப்படுகின்றது.

சமாதி வழிபாடு

இன்னும் நாம் இதில் ஆழமாக இறங்கினால் சமாதி வழிபாட்டையும், சமாதிகளையும் தரைமட்டமாக்கும் சான்றுகள் பலவற்றைக் காணலாம்.

அவை யாவும் இய்யாக நஃபுதுவின் விளக்கமேயாகும்.

ஹபஷா தேசத்தில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவங்களையும் பற்றி உம்முஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள். அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறையின் மீது மஸ்ஜிதைக் கட்டி அந்த உருவங்களை அதில் செதுக்குவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்விடத்தில், படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கிய பொழுது யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள். இதை அறிவிக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், இவ்வாறு யூதர்கள், கிறிஸ்தவர்கள் செய்த செயலைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்யாதிருந்தால் அவர்களின் மண்ணறையை வீட்டுக்கு வெளியில் (பகிரங்கமாக) ஆக்கியிருப்பார்கள் என்றாலும் அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டுவிடுமோ என அஞ்சப்பட்டது.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330, 1390, 4441

உங்களில் ஒருவர் எனக்கு மிகவும் உற்ற தோழராக ஆகுவதை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன். ஏனெனில் நபி இப்ராஹீமை தன் உற்ற தோழராக அல்லாஹ் ஆக்கியதைப் போல என்னையும் ஆக்கிக் கொண்டான். (உண்மையாக) நான் என் சமுதாயத்தவர்களிலிருந்து ஒரு உற்ற தோழரை ஆக்குபவனாக இருந்தால் அபூபக்கரையே என் உற்ற தோழராக ஆக்கியிருப்பேன். முன்னிருந்தவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் மண்ணறைகளை மஸ்ஜிதாக ஆக்காதீர்கள். அதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 827

கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டவர்களே மக்களில் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி)

நூல்: அஹ்மத் 1602

உயரமான எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காது விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1609,

நல்லடியார்கள் என்று நம்பப்படுபவர்கள், நபிமார்கள் யாராயினும் அவர்களின் சமாதிகளை வழிபட இஸ்லாத்தில் இடமில்லை என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. இவை யாவும் இய்யாக நஃபுதுவின் விளக்கவுரைகள் தான்.

எவ்வகையிலும் இறைவனல்லாதவர்களை வணங்க அறவே அனுமதி இல்லை என்று யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே இய்யாக நஃபுது எனும் உறுதிமொழியில் உண்மையாளர்கள்.

கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்களே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.

கனவுகள் என்றால் என்ன என்பதைப் பற்றி இவர்கள் சரியான முறையில் அறியாததே இந்த வாதத்துக்குக் காரணம்.

யார் கனவில் என்னைக் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வர மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 110, 6197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தில் தவிர மற்ற எவருடைய வடிவத்திலும் எவருடைய பெயரைக் கூறிக் கொண்டும் ஷைத்தான் கனவில் வருவான் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும்.

கனவில் வரக்கூடியவர் நான் தான் அப்துல் காதிர் ஜீலானி என்று கூறுவதால் அவர் அப்துல் காதிர் ஜீலானியாக மாட்டார். ஷைத்தானே கனவில் வந்து நான் தான் அப்துல் காதிர் ஜீலானி எனக் கூறலாம்.

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயலுக்கு, தர்காவில் பிரார்த்தனை செய்யும் செயலுக்கு - அழைப்பு விடுப்பதிலிருந்து வந்தது ஷைத்தான் தான் என்பது உறுதியாகின்றது.

கனவில் ஒருவரை நாம் பார்த்து அடையாளம் காண்பது என்றால் அவரை நேரடியாக நாம் பார்த்திருக்க வேண்டும். நாம் நேரில் சந்திக்காத ஒருவரை கனவில் பார்த்து இன்னார் என்று கண்டு பிடிக்க முடியாது.

கனவில் அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்தவர்கள் அவர் காலத்தில் வாழவில்லை. அவரை அவர்கள் நேரடியாகப் பார்த்ததுமில்லை. பிறகு எப்படி இவர் தான் அப்துல் காதிர் ஜீலானி என்று கண்டு பிடித்தார்கள்?

கனவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. கனவில் ஒருவர் வருகிறார் என்றால் அவரே வருகிறார் என்று பொருள் இல்லை. உதாரணமாக என்னை நீங்கள் கனவில் காண்கிறீர்கள். நீங்கள் என்னை கனவில் காண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் நேற்றிரவு உங்கள் கனவில் வந்தேனே என்று என்னால் அவரிடம் கூற முடியாது. கனவில் என்னை யாராவது கண்டாலும் நான் எதையாவது கனவில் கூறுவதாகக் கண்டாலும் அதற்கும், எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

ஒரு மகானைக் கனவில் கண்டால் கூட அந்த மகானுக்கு இன்னார் கனவில் நாம் வருகிறோம் என்பது தெரியாது. அல்லாஹ் நல்ல நோக்கத்திற்காகவும் அல்லது சோதித்துப் பார்ப்பதற்காகவும் கனவுகளில் பலவிதமான காட்சிகளைக் காட்டுவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதால் மார்க்க சம்மந்தமான எந்த உத்தரவும் கனவில் வராது. மார்க்கத்தின் கட்டளைகளுக்கு எதிரான எந்த உத்தரவும் அல்லாஹ்விடமிருந்து கனவில் வராது.

எனவே ஒரு மகானையே கனவில் கண்டாலும் அவர் என்ன கூறினாலும் அவர் மகானுமல்ல; அவர் கூறுவது மார்க்கமும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் காலையில் எழுந்தவுடன் யாரும் போய் கிணற்றில் விழுந்து சாக மாட்டோம். பெரும் தொகையை ஒருவருக்கு கொடுப்பதைப் போல் நாம் கனவு கண்டால் விழித்தவுடன் அத்தொகையை அவரிடம் கொடுத்து விட மாட்டோம்.

உலக விஷயங்களில் மட்டும் மிகவும் விழிப்போடு தான் இருக்கிறோம். கனவில் கண்டதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டு கனவில் காண்பதை நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம்.

ஆனால் மார்க்க விஷயத்தில் தான் கனவைக் காரணம் காட்டி நாசமாகிறோம்.

நபிமார்களின் கனவுகள் தான் முழுக்க முழுக்க வஹீயாகும். இதன் காரணமாகத் தான் மகனை அறுப்பதாகக் கனவு கண்ட இப்ராஹீம் நபி அவர்கள் அதை நடைமுறைப்படுத்தத் தயாரானார்கள். மற்ற எவரது கனவும் நடைமுறைப்படுத்த வேண்டியவை அல்ல.

நமக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடிய சில பயன்கள் முன்கூட்டியே சில நேரத்தில் கனவு மூலம் அறிவிக்கப்படலாம். ஆனால் மார்க்கக் கட்டளைகள் ஒன்று கூட கனவில் வராது. இதைப் புரிந்து கொள்ள பின்வரும் நபிமொழி உதவுகிறது.

நற்செய்தி கூறக்கூடியவை தவிர, வஹியில் எதுவும் மிச்சமாக இருக்கவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நற்செய்தி கூறக்கூடியவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்ல கனவுகள் என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6990

நற்செய்திகள் தான் கனவில் வர முடியுமே தவிர மார்க்கத்தின் எந்தச் சட்டமும் கனவில் வராது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவில் ஷைத்தான் வர மாட்டான் என்பதால் அவர்களைக் கனவில் காண முடியுமல்லவா? என்று சிலர் கேட்கலாம்.

யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னை விழிப்பிலும் (நேரடியாகக்) காண்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

கனவில் கண்ட பின் நேரிலும் அவர்களைக் காண முடியும் என்றால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் சாத்தியமாகும்.

மதீனாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண்பார்கள். விடிந்தவுடன் அவர்கள் நேரில் காணும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவான்.

இன்றைக்கு ஒருவர் கனவில் நபிகள் நாயகத்தைப் பார்த்தால் விழித்தவுடன் நேரில் அவர்களைப் பார்க்க முடியாது. எனவே அவர் நபிகள் நாயகத்தைக் காணவில்லை என்பது தெளிவு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களை உலகில் யாரும் கனவில் காணவே முடியாது என்பதற்கு மேற்கண்ட நபிமொழி சான்றாக உள்ளது.

கனவுகள் பற்றிய இந்த விளக்கத்தை அறிந்து கொண்டால் அல்லாஹ்வைத் தவிர எவரிடமும் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்.

மறுமையில் பரிந்துரை

நல்லடியார்களும், நபிமார்களும் மறுமையில் பரிந்துரை செய்வார்களே என்ற காரணத்தைக் கூறி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். இதன் காரணமாகவே அவ்லியாக்களின் ஷபாஅத்தை வேண்டுகிறோம் என்று வாதிடுவோர் ஷபாஅத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள்.

எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதனையும் செய்து விட முடியாத எந்த ஆத்மாவிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் 2:48)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

(அல்குர்ஆன் 2:255)

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 10:3)

அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.

(அல்குர்ஆன் 20:109)

யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. முடிவில் அவர்களின் உள்ளங்களிலிருந்து நடுக்கம் நீங்கியதும் உங்கள் இறைவன் என்ன கூறினான்? எனக் கேட்டுக் கொள்வார்கள். உண்மையையே (கூறினான்.) அவன் உயர்ந்தவன்; பெரியவன் என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 34:23)

இந்த வசனங்களையும், இந்தக் கருத்தில் அமைந்த ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது பரிந்துரை செய்வதற்காக இறைவன் சிலருக்கு அனுமதி வழங்குவான். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வான் என்ற கருத்தைப் பெற முடிகின்றது.

ஒரு நபியோ, அல்லது மற்றவர்களோ தாங்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் பரிந்துரைக்க முடியாது. அப்படியே அவர்கள் பரிந்துரைத்தாலும் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளவும் படாது.

நான் ஹவ்லு (அல்கவ்ஸர்) எனும் தடாகத்தினருகே இருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அருந்துவார். அதை அருந்தியவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார். அப்போது என்னருகே சில சமூகத்தினர் (நீரருந்த) வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். அப்போது எனக்கும் அவர்களுக்குமிடையே தடை ஏற்படுத்தப்படும். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களாயிற்றே என்று நான் கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் புதிதாக உருவாக்கியவற்றை நிச்சயம் நீர் அறியமாட்டீர் என்று என்னிடம் கூறப்படும். எனக்குப் பின்னால் (மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களுக்குக் கேடு உண்டாகட்டும் என்று நான் கூறுவேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)

நூல்கள்: புகாரி 4740, 6526

இறைவனது படைப்புகளிலேயே மிகவும் உயர்வான இடத்தைப் பெற்றுள்ள இறைவனுக்கு மிகவும் நெருக்கமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திசைமாறிச் சென்ற தம் தோழர்களுக்காகப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனாலும் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படவில்லை. முஹம்மதே! நீர் பரிந்துரைக்கலாம் என்று இறைவன் அனுமதி வழங்காத நிலையில் அவர்கள் பரிந்துரை செய்ததனாலேயே இந்த நிலை. முஹம்மத் (ஸல்) அவர்களாக இருந்தால் கூட நினைத்த போது நினைத்த நபர்களுக்காகப் பரிந்துரைத்திட முடியாது என்பதற்கு இது தெளிவான சான்று. மற்றொரு ஹதீஸிலிருந்தும் இதை அறியலாம்.

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோசடி செய்வதைப் பற்றி எச்சரிக்கை செய்தனர். அது எவ்வளவு பயங்கரமான குற்றம் என்பதை விளக்கினார்கள். மேலும் தொடர்ந்து (ஒட்டகத்தை மோசடி செய்தவன்) மறுமை நாளில் தன் பிடரியின் மேல் அந்த ஒட்டகத்தைச் சுமந்து கொண்டு அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை. (உலகிலேயே) உனக்கு (இது பற்றி) எடுத்துரைத்து விட்டேன் என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள் (குதிரையை மோசடி செய்தவன்) குதிரையைத் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை. (சொல்ல வேண்டியவைகளை உலகிலேயே) உனக்குச் சொல்லிவிட்டேன் என்று நான் கூறி விடுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள். (ஆட்டை மோசடி செய்தவன்) ஆட்டைத் தன் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிடவில்லை. (சொல்ல வேண்டியவைகளை) உனக்குச் சொல்லி விட்டேன் என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்க வைத்து விடாதீர்கள். (ஏதேனும் ஒரு உயிர்ப் பிராணியை மோசடி செய்தவன்) அதைத் தன் தோளில் சுமந்தவனாக வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை. (முன்பே) உனக்குச் சொல்லி விட்டேன் என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்கள் எவரையும் நாம் சந்திக்கும்படி செய்து விடாதீர்கள். (அசையாப் பொருட்களில் மோசடி செய்தவன்) அதைத் தோளில் சுமந்தபடி வந்து அல்லாஹ்வின் தூதரே! (என்னைக்) காப்பாற்றுங்கள்! என்பான். உனக்காக எந்த ஒன்றையும் செய்ய நான் உரிமை பெற்றிருக்கவில்லை என்று நான் கூறுவேன். இந்த நிலையில் உங்களில் எவரையும் நான் சந்திக்குமாறு செய்து விடாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1402, 3073

முஹம்மதே பரிந்துரை செய்யுங்கள் என்று இறைவன் அனுமதி அளிப்பதற்கு முன் தன்னிச்சையாக அவர்கள் பரிந்துரை செய்ய மறுக்கின்றனர் என்பதை இதிலிருந்து நாம் விளங்கலாம். இறைவன் எப்போது அனுமதிக்கின்றானோ அப்போது தான் பரிந்துரை செய்ய முடியும் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக அறிவிக்கின்றது.

மக்களெல்லாம் தங்களுக்காகப் பரிந்துரை செய்யுமாறு ஆதம் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகியோரிடம் சென்று விட்டு அவர்களெல்லாம் மறுத்து விட முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது நான் ஸஜ்தாவில் விழுவேன். எவ்வளவு நேரம் என்னை (அந்த நிலையில் கிடக்க) அல்லாஹ் நாடினானோ அவ்வளவு நேரம் விட்டு விடுவான். பிறகு முஹம்மதே! (தலையை) உயர்த்துவீராக! கூறு! அது கேட்கப்படும். பரிந்துரை செய்! அது ஏற்கப்படும்! கேள்! கொடுக்கப்படுவாய் என்று இறைவன் கூறுவான். நான் தலையை உயர்த்தி என் இறைவன் கற்றுத் தந்த விதமாகப் புகழ்ந்துரைத்து விட்டுப் பரிந்துரை செய்வேன். அந்த பரிந்துரைக்கும் இறைவன் சில வரம்புகளை ஏற்படுத்துவான். (அதாவது குறிப்பிட்ட சில தகுதியுடையவர்கள் விஷயத்தில் மட்டும் பரிந்துரைக்க அனுமதிப்பான்) நான் அந்தத் தகுதி உள்ளவர்களை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் சேர்ப்பிப்பேன். இப்படியே பலமுறை நடக்கும். ஒவ்வொரு தடவையும் ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின் பரிந்துரைக்க வரம்பு ஏற்படுத்துவான். யாரைக் குர்ஆன் தடுத்து விட்டதோ அவர்களைத் தவிர அதாவது யாருக்கு நிரந்தர நரகம் என்று கூறி விட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களை நரகிலிருந்து வெளியேற்றுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மிகவும் நீண்ட ஹதீஸின் சுருக்கம் இது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4712, 6565

பரிந்துரை செய்தல் மறுமையில் உண்டு என்பதையும், இறைவன் அனுமதி வழங்கும் போது மட்டும் தான் பரிந்துரை செய்ய முடியும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

மேலும் யார் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்களோ அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

எனது உம்மத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காதவர்களுக்கே என் பரிந்துரை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 296

நபிமார்கள் மற்றும் பெரியார்களின் பரிந்துரையை எதிர்பார்த்து அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றவர்களுக்கு அதுவே பரிந்துரைக்குத் தடையாகிப் போகும். இதை முஸ்லிம்களில் உள்ள சமாதி வழிபாட்டுக்காரர்கள் உணர வேண்டும். பரிந்துரை செய்ய ஒருவருக்கு அனுமதியளிப்பதும் இறைவனது தனிப்பட்ட அதிகாரத்தின் பாற்பட்டது என்பதை உணர்ந்தால் இத்தகைய இணை வைத்தலில் இறங்க மாட்டார்கள்.

வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.

(அல்குர்ஆன் 53:26)

அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.

(அல்குர்ஆன் 21:28)

அறவே பரிந்துரை கிடையாது என்பவர்களின் கூற்றும் தவறானது. பரிந்துரை செய்யும் அதிகாரம் நல்லடியார்களின் கையிலே இருக்கிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை நரகிலிருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் தவறானது என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

யாரை, எப்போது, யாருக்காக பரிந்துரை செய்ய அனுமதிப்பது என்ற அதிகாரம் இறைவனுக்கேயுரியது என்ற காரணத்தினால் தான் - மக்கத்து காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) இறைவனை மறுக்காதவர்களாக இருந்தும் இறைவனின் வல்லமையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தும், பெரியோர்கள் சுயமாகப் பரிந்துரை செய்வார்கள் என்று கருதி அவர்களைத் திருப்திபடுத்த முயன்ற போது அவர்களை காஃபிர்கள் என்று இறைவன் பிரகடனம் செய்தான்.

நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காகப் பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால் அப்போது இறைவனை மட்டுமே வணங்கி இறைவனிடம் தான் இதைக் கேட்க வேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பரிந்துரை செய்யவை என்று கேட்க வேண்டுமே தவிர நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.

மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் நேரடியாகச் சந்திக்கும் போது மட்டுமே அப்படிக் கேட்பார்கள். அங்கு மட்டுமே அது தவறாக இறைவனால் கருதப்படாது. காரணம் மறுமையில் இறைவனது தனி அதிகாரம் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாயிருக்கும். இறைவனுக்கும், இறைவனது படைப்பினங்களுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாகியிருக்கும். நபிமார்கள் உட்பட அனைவரும் அஞ்சி நடுங்கி திடுக்குற்று இருப்பதை எல்லோரும் உணர முடியும். இந்தக் கட்டத்தில் பரிந்துரை செய்யச் சொல்லும் போது அங்கே இணைவைத்தலின் சாயல் கூட இருக்காது. இதனால் தான் மறுமையில் நேரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணும் போது அவர்களைப் பரிந்துரை செய்ய மக்கள் கேட்கின்றனர்.

மறுமையில் பரிந்துரை செய்வதற்காக இம்மையிலேயே எந்தப் பெரியாரிடமும் கேட்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) இவ்வுலகில் வாழ்ந்த போது அவர்களை நபித்தோழர்கள் நேரடியாகச் சந்தித்ததால் இவ்வாறு கேட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் மரணித்த பிறகு கேட்டதில்லை.

மறுமையில் பரிந்துரை பற்றி இவ்வாறே நாம் விளங்க வேண்டும். இந்தப் பரிந்துரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் என்று எவரும் விளங்கி விடக் கூடாது. மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்ய இறைவன் அனுமதிப்பான். இதையும் நாம் உணர வேண்டும்.

சொர்க்கத்திற்குச் சென்று விட்ட முஸ்லிம்கள் நரகத்தில் கிடக்கும் முஸ்லிம்களுக்காக எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன் நோன்பு நோற்றனர்; தொழுதனர்; ஹஜ் செய்தனர்; (அவர்களின் தவறுகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பாயாக) என்று பரிந்துரைப்பார்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகிலிருந்து) வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறப்படும். நரகிற்கு அவர்கள் ஹராமாக்கப்படுவார்கள். பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள். பிறகு இறைவா! நீ சொன்ன தகுதியில் உள்ள எவரும் நரகில் மிச்சமாக இல்லை என அவர்கள் கூறுவார்கள். அப்போது இறைவன் ஒரு தீனார் அளவு எவருடைய உள்ளத்தில் நல்லவை இருக்கின்றதோ அவர்களையும் நீங்கள் வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவான். அவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை நரகிலிருந்து வெளியேற்றுவார்கள். பிறகு இறைவன் யாருடைய உள்ளத்தில் அரை தீனார் அளவுக்கு நன்மை உண்டோ அவர்களையும் வெளியேற்றுங்கள் என்பான். அவர்கள் சென்று பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள். பிறகு யாருடைய உள்ளத்தில் அணு அளவு நன்மை உண்டோ அவர்களையும் வெளியேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவான். அவர்கள் சென்று பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவார்கள். பிறகு இறைவா! எஞ்சியிருப்பவர்களில் சிறிதளவும் நன்மையில்லை என்பார்கள். அப்போது இறைவன் மலக்குகள் பரிந்துரைத்து விட்டார்கள்; நபிமார்கள் பரிந்துரைத்து விட்டார்கள்; கருணையாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் கருணையாளனாகிய என்னைத் தவிர யாரும் மிச்சமில்லை என்று கூறிவிட்டு நரகிலிருந்து ஒரு பிடி அள்ளுவான். அவர்கள் அடுப்புக் கரியாக மாறியிருப்பார்கள். ஜீவநதி எனும் பெயருடைய நதியில் அவர்களைப் போடுவான். முத்துக்கள் போல் அவர்கள் வெளிப்படுவார்கள். அப்போது சுவர்க்கவாசிகள் இவர்கள் இறைவனால் விடுதலை செய்யப்பட்டவர்கள். ஒரு நன்மையும் செய்யாமல் இவர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைத்து விட்டானே என்பார்கள். அப்போது இவர்களுக்கு கிடைத்தது போல் இன்னொரு மடங்கு உங்களுக்கு உண்டு என்று கூறுவான். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: புகாரி 7440

பரிந்துரை என்பது மேலோட்டமாகப் பார்த்தால் யாரோ சொல்வதை இறைவன் கேட்பது போல் தோன்றினாலும் இந்த ஹதீஸைக் கவனிக்கும் போது இறைவன் சிலரை விடுவிக்க முடிவு செய்து விட்டு ஒரு பேச்சுக்காகத் தான் பரிந்துரைக்கச் சொல்கிறான். பரிந்துரை இல்லாமல் அதை விட அதிகமானோரை அவன் வெளியேற்றுவான் என்பதை உணரலாம்.

வஸீலா தேடுவது தவறா?

அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களிடம் எதையும் கேட்கக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைத்தாலும் அவற்றுக்கு எந்த மறுப்பும் சொல்ல முடியாதவர்கள் பொருத்தமில்லாத வாதங்கள் மூலம் தமது நிலையை நியாயப்படுத்த முயல்கின்றனர்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அவனளவில் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யுங்கள் (அல்குர்ஆன் 5:35) என்று கூறுகிறான்.

அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிடும் காரணத்தினால் தான் நாங்கள் அவ்லியாக்களிடம் வஸீலா தேடுகிறோம் என்று வாதிடுகின்றனர்.

அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிட்டிருக்கும் போது அதை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது.

ஆனால் வஸீலா என்பது என்னவென்பதில் இவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதே நமது வாதமாகும்.

வஸீலா என்பதன் பொருள் துணைச் சாதனம். கடலில் பயணம் செய்ய உதவும் கப்பல் வஸீலா எனப்படும். மேலே ஏற்றுவதற்கு உதவும் ஏணி அதற்கான வஸீலா எனப்படும். அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனங்களைத் தேடுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளனவே தவிர, ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.

அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனுக்காக எதையும் செய்யாமல் கேட்கக் கூடாது. அவனது கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவனிடம் கேட்க வேண்டும். நாம் கேட்பதற்கு அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளைக் கட்டி அழுங்கள் என்பது அதன் பொருள் அல்ல.

இதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே ஆதாரம் உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.

நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) நபித்தோழர்கள் மற்றும் யுக முடிவு நாள் வரை வரக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும் அடங்குவர்.

மூமின்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ் பிறப்பிக்கிறான். முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும். இந்தக் கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இக்கட்டளையின் படி இறைவனை அஞ்சியாக வேண்டும். அஞ்சினார்கள்.

இரண்டாவது கட்டளை அல்லாஹ்வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும். இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.

வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள் செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால் பொருந்திப் போகிறது.

வஸீலா என்பது நல்லடியார்களைப் பிடித்துக் கொள்வது என்று பொருள் கொண்டால் அந்தக் கட்டளை நபிகள் நாயகத்துக்கும் இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.

முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்

இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான்களுக்குக் கூட இந்தக் கட்டளை உள்ளது. அவர்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் இவர்கள் வஸீலாவாக்க வில்லையென்றால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?

எனவே வஸீலாவுக்கு இடைத் தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். நான் உங்களின் கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி வருகின்றேனே எனக்காக உதவக் கூடாதா? என்று கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.

இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள் என்று கேட்டால் நம்மை பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார். இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும் என்று கேட்பார்.

இன்னார் பொருட்டால் என்று இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாகே உள்ளது.

நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்கு கோபம் வராதா? நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்! நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.

ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக் காட்டி இன்னொருவர் உதவி கேட்பதை விட கோமாளித் தனம் எதுவும் இருக்க முடியாது. நம்மிடம் அப்படி யாரேனும் கேட்டால் நமக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கோமாளித் தனமாகக் கேட்டால் அவனுக்குக் கோபம் வராது என்றும், இந்தக் கோமாளித் தனத்தை அல்லாஹ் விரும்புவான் என்றும் நம்புகிறார்களே! இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகத்தின் பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை.

எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கன்னியத்தைக் குறைக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

ஸியாரத் ஒரு நபிவழியல்லவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர்.

இவர்கள் இறந்து போனவர்களிடம் எதையும் பிரார்த்திக்கலாகாது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

அவ்லியாக்களை அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு தான் கேட்கிறோம் என்கின்றனர்.

இந்த வாதத்திலும் பல தவறுகள் உள்ளன.

இவர்கள் ஸியாரத் செய்வதற்குத் தான் ஆதாரம் காட்டுகின்றனர். இறந்தவரிடம் போய் நமக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுமாறு வேண்டலாம் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அல்லாஹ்விடம் தங்களுக்காக துஆச் செய்யுமாறு நபித்தோழர்கள் கேட்டதுண்டு. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களது அடக்கத்தலம் வந்து நபித்தோழர்கள் யாரும் எங்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று கேட்டதில்லை. அடக்கத்தலம் வராமல் இருந்த இடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டதில்லை.

எனவே ஸியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தால் அதை மற்றொரு செயலைச் செய்வதற்கு ஆதாரமாகக் காட்டக் கூடாது.

இனி ஸியாரத் விஷயத்திற்கு வருவோம்.

கப்ர்களை - அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்து கொள்க! இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: திர்மிதி 974

இது தான் ஸியாரத் பற்றி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.

ஆரம்ப காலத்தில் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அனுமதி வழங்கினார்கள்.

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக ஆய்வு செய்தால் அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வதற்கு எதிரானதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதிக்கும் போது இவ்வாறு அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மறுமையை நினைவு படுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடக்கத் தலங்களுக்கு நாம் செல்லும் போது இவர்களைப் போல் நாமும் ஒரு நாள் மரணிக்க வேண்டி வரும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் ஸியாரத் அனுமதிக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.

அடக்கம் செய்யப்பட்டவர்கள் மகான்கள் என்பதற்காகவோ அல்லது அவர்களின் ஆசியை வேண்டுவதற்காகவோ இந்த அனுமதி அளிக்கப்படவில்லை.

இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடை முறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் வந்தால் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் தர்காக்களுக்குச் செல்வதால் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நோக்கம் நிறைவேறாது என்று கூற முடியும்.

ஏனெனில் அங்கே நடக்கும் காரியங்கள் மறுமையின் நினைவை மறக்கச் செய்வதாகவே உள்ளன. ஆடம்பரமான கட்டிடங்கள் நறுமணப் புகை, ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வது, சிறப்பான நாட்களில் நடக்கும் ஆடல் பாடல் ஆபாசக் கூத்துக்கள் யாவும் மறுமையின் சிந்தனையை மறக்கடிக்கச் செய்வதாகவே உள்ளன.

எந்த நோக்கத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்ய அனுமதித்தார்களோ அந்த நோக்கத்தை தர்காக்கள் நாசப்படுத்துகின்றன என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

நல்லடியார்களின் அடக்கத்தலம் செல்வது தான் ஸியாரத் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு நபிமொழியும் சான்றாகவுள்ளது.

என் தாயாருக்கு பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1621

எந்த ஒரு முஸ்லிமுடைய பாவத்துக்காகவும் பாவ மன்னிப்புத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்காக மட்டுமே பாவ மன்னிப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(அல்குர்ஆன் 9:113)

நமது தாயாருக்காக பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ் அனுமதி மறுக்கிறான் என்பதிலிருந்து அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என விளங்கலாம். முஸ்லிமாக இல்லாத தாயாரின் அடக்கத் தலத்தை ஸியாரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதிலிருந்து ஸியாரத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஸியாரத் என்பது நல்லடியார்கள் என்பதற்காக நடத்தப்பட வேண்டிய காரியமல்ல. மாறாக மரணத்தை நினைவு படுத்தும் காரியமே. முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தும் கூட இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1230

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அந்தப் பணிக்காக உன்னை நான் அனுப்புகிறேன். இம்மண்ணில் உயரமாக்கப்பட்ட எந்த சமாதியையும் தரைமட்டமாக்காது விடாதே என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்

நூல்: முஸ்லிம் 1609

என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) எதைத் தடை செய்தார்களோ அதைத் தேடிச் செல்வதை வணக்கமாகக் கருதுவது தகுமா? என்று சிந்திக்க வேண்டும்.

எனவே ஸியாரத்துக்கும், அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் போய் பிரார்த்தனை செய்வதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

உன்னையே வணங்குகிறோம் என்பதைச் சரியான முறையில் புரிந்து கொள்பவர்கள் இது போன்ற உளறல்கள் மூலம் தங்கள் செயல்களை நியாயப்படுத்த மாட்டார்கள். இந்தத் தெளிவான சான்றுக்கு முன்னால் சரணடைவார்கள்.

வஇய்யாக நஸ்தயீன்

உன்னையே வணங்குகிறோம் என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து உன்னிடமே உதவி தேடுகிறோம் (வஇய்யாக நஸ்தயீன்) என்று மற்றொரு உறுதிமொழி எடுக்குமாறும் அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான். அதனையும் ஐயத்திற்கிடமின்றி விளங்குவது அவசியமாகும். ஏனெனில் சில அறிவீனர்கள் இந்த உறுதிமொழியைக் கேலிக் கூத்தாகச் சித்தரித்து பலதெய்வ வணக்கத்தை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

அல்லாஹ் தன்னிடம் மட்டுமே உதவி தேடும்படி நமக்குக் கற்றுத் தருகிறான். ஆனால் நமது வாழ்க்கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின் உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் (ஸல்) உட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.

அப்படியானால் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பது செயல்படுத்த முடியாததாகவே உள்ளது. இறைவனல்லாத மற்றவர்களிடம் உதவி தேடுவது பாவம் என்றால் எந்த மனிதனும் இந்தப் பாவத்தைச் செய்யாமலில்லை. இப்படிப் போகிறது அந்த அறிவீனர்களின் சிந்தனை. இத்துடன் இவர்கள் நிறுத்திக் கொண்டார்களில்லை. ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து போய் விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று விரிகிறது இவர்களது சிந்தனை. இதன் காரணமாகவே இது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதன் சரியான பொருளை திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் நமக்கு விளக்குகின்றது.

நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 5:2) என்பதே அந்த வசனம்.

இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.

இறைவனே இவ்வாறு உதவிக் கொள்வதை அனுமதிப்பதால், உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதையும் மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதையும் மறுக்கும் விதத்தில் அருளப்படவில்லை என்பது தெளிவு. மாறாக மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவதை மட்டுமே இந்த வசனம் மறுக்கின்றது. இறந்து போன நல்லடியார் ஒருவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை. எப்படி என்று விளக்கமாகக் காண்போம்.

ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளன.

முதல் வித்தியாசம்

மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.

இறந்து போனவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாக இருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக் கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான். மறைவாக இருந்து கொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்து போனவக்கும் இவன் அளித்து விடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.

இரண்டாவது வித்தியாசம்

மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.

இறந்து போன நல்லடியாரை அணுகக் கூடியவனின் நம்பிக்கை இப்படி இல்லை. இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.

மூன்றாவது வித்தியாசம்

ஒரு மருத்துவரை அணுகும் போது இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.

இறந்து போன நல்லடியார் ஒருவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் அவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.

மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று நம்புகிறான். இறந்து போனவரின் கேட்கும் திறனோ இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.

நான்காவது வித்தியாசம்

மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.

இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.

ஐந்தாவது வித்தியாசம்

மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம்.

ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.

ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது.

உன்னிடமே உதவி தேடுகிறோம் என்றால் எல்லாக் காரியங்களிலும் எவ்வித இயலாமையும் இல்லாதவன் என்ற நம்பிக்கையிலும், எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அதைச் செவியுற்று நடவடிக்கை எடுக்கிறவன் என்ற நம்பிக்கையிலும், இறைவா! உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதே அதன் பொருளாகும்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்

இனி இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்பதன் விளக்கத்தைக் காண்போம்.

சூரதுல் ஃபாத்திஹாவில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைத் துவக்கத்திலேயே நாம் குறிப்பிட்டிருந்தோம். பிஸ்மில்லாஹிவையும் சேர்த்து முதல் நான்கு வசனங்கள் இறைவனின் பண்புகளைக் கூறும் விதமாக அமைந்துள்ளன. ஐந்தாவது வசனம் இறைவனிடம் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியைக் கற்றுத் தருகின்றது.

மூன்றாவது அம்சமான ஆறாவது, ஏழாவது வசனங்கள் இறைவனிடம் அவனது அடியார்கள் பிரார்த்தனை செய்வதைக் கற்றுத் தருகின்றன. இந்த மூன்றாவது அம்சத்தைக் கொண்ட அந்த வசனங்களின் விளக்கவுரைகயையே இப்போது நாம் காணவிருக்கிறோம்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் (இறைவா எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக!) என்று அன்றாடம் பல தடவை இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். ஆயினும் நாம் பிரார்த்திக்கின்ற நேரான வழி எதுவென்பதை அறிந்து கொள்ளாமலேயே இவ்வாறு பிரார்த்திக்கின்றோம். தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதையே நேரான வழி என்று கருதிக் கொண்டு பிரார்த்திப்பவர்களும் கூட உள்ளனர்.

நேர்வழி எதுவென்பதை அறிவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், அதில் நடப்பதற்கு முயலாமல் நேரான வழியைக் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

தொழுகையை நிறைவேற்றாத ஒருவன், தொழுவதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இறைவா! என்னைத் தொழுகையாளியாக்கு என்று பிரார்த்தனை செய்வது எவ்வாறு அர்த்தமற்றதோ அது போலவே நேரான வழியைக் காட்டு என்று பிரார்த்தனை செய்துவிட்டு நேரான வழியை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதும் அர்த்தமற்றதாகும்.

நேரான வழியைக் காட்டுமாறு பிரார்த்திக்கக் கற்றுத் தரும் அல்லாஹ் திருக்குர்ஆனின் பல இடங்களில் நேரான வழி என்னவென்பதை அடையாளம் காட்டுகிறான். அதை உணர்ந்து நேர்வழியைக் கேட்கும் போது தான் இந்தப் பிரார்த்தனை அர்த்தமுள்ளதாக அமையும்.

குர்ஆனும், ஹதீஸுமே நேர்வழி

குர்ஆன், ஹதீஸ் இரண்டுமே ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியாகும் என அல்லாஹ் திருக்குர்ஆன் நெடுகிலும் தெளிவுபடுத்துகிறான்.

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 43:43,44)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் இறைவனால் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றியாக வேண்டும். அது தான் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியாகும் என்று இங்கே வலியுறுத்துகின்றான்.

மார்க்கத்தின் எந்த அம்சமானாலும், அதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரம் உண்டா? என்று ஆராயாமல் கண்மூடி மற்றவர்களைப் பின்பற்றுபவர்கள் இந்தப் பிரார்த்தனையில் பொய்யுரைத்தவர்களாவார்கள்.

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு (ஸிராதுல் முஸ்தகீமுக்கு) அழைக்கிறீர்.

(அல்குர்ஆன் 42:52)

குர்ஆனையும், நபிவழியையும் விட்டு மத்ஹபுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இவ்வசனத்தில் போதுமான அறிவுரை இருக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, இந்த வேதம் அருளப்படுவதற்கு முன் விசுவாசம் என்றால் என்ன? வேதம் என்றால் என்ன? என்பதை அறிந்திருக்கவில்லை. இந்த வேதம் அருளப்பட்ட பின்பே அவர்களால் அறிய முடிந்தது. இதன் துணை கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸிராதுல் முஸ்தகீம் பால் மக்களை அழைக்கின்றனர் என்கிறான் அல்லாஹ்.

திருக்குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதுவும் நேர்வழி கிடையாது என்பதற்கு இது தெளிவான சான்று. இறைவா! உனது வேதத்தையும், உனது தூதருடைய வழிகாட்டுதலையும் சான்றுகளாகக் கொண்டு நடக்கின்ற நேர்வழியைக் காட்டுவாயாக என்பதுவே இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்பதன் பொருளாக ஆகிவிடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு முன் வந்த நபிமார்களும் கூட, அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருந்த வேதங்களின் மூலமே நேர்வழியை அடைய முடிந்தது. உலகைப் படைத்தது முதல் இதுவே இறைவனது நியதியாக இருந்து வந்திருக்கின்றது என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகின்றது.

அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை வழங்கினோம். அவ்விருவருக்கும் (ஸிராதுல் முஸ்தகீம் எனும்) நேரான வழியைக் காட்டினோம்.

(அல்குர்ஆன் 37:117,118)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களின் கட்டளையை சிரமேற் கொண்டவர்களைத் தவிர வேறு எவரும் விசுவாசிகளாக, நேர்வழி பெற்றவர்களாக ஆகவே முடியாது என்பதைப் பின்வரும் வசனங்களில் வல்ல அல்லாஹ் கற்பிக்கிறான்.

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 4:65)

இதைத் தொடர்ந்து வரும் வசனங்களில் தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும். மேலும் அவர்களுக்கு நேரான வழியையும் (ஸிராதுல் முஸ்தகீமையும்) நாம் காட்டி இருப்போம் எனவும் கூறுகிறான்.

உங்களையே கொன்று விடுங்கள்! அல்லது உங்கள் ஊர்களிலிருந்து வெளியேறுங்கள்! என்று அவர்களுக்கு நாம் கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதை நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும். அப்போது நாம் மகத்தான கூலியையும் அவர்களுக்கு வழங்கியிருப்போம். அவர்களுக்கு நேரான வழியையும் (ஸிராதுல் முஸ்தகீமையும்) காட்டியிருப்போம்.

(அல்குர்ஆன் 4:66,67,68)

தங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சமயத்தில் அதற்குத் தீர்வு காண்பதற்காக அல்லாஹ்வின் தூதரிடம் அதாவது அவர்களின் போதனையின் பால் செல்லாதவர்கள் மூமின்கள் அல்லவென்று அல்லாஹ் தெளிவாக அறிவிக்கின்றான். மேலும், இந்தப் போதனையின் படி யார் நடக்கின்றார்களோ அவர்களுக்கே நேர்வழி காட்ட முடியும் எனவும் நிபந்தனை விதிக்கிறான்.

ஸிராதுல் முஸ்தகீமை அடைவதற்கு எதனை அல்லாஹ் நிபந்தனையாக ஏற்படுத்துகின்றானோ அதை விட்டு விட்டு ஸிராதுல் முஸ்தகீமைக் காட்டுவாயாக! என கூறுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும்?

இதற்கு மாற்றமான எந்தக் கொள்கையும், செயல் முறைகளும் ஸிராதுல் முஸ்தகீமாக முடியாது.

இறைவனும், அவனது திருத்தூதரும் கூறக் கூடியவை நம்முடைய சிற்றறிவுக்கு எட்டவில்லையென்றாலும் அதையும் நம்பக் கூடியவர்கள் தான் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழியில் இருப்பவர்கள் என்பதற்கு அல்குர்ஆன் 43:61-வது வசனம் சரியான சான்றாக அமைந்துள்ளது.

அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே (ஸிராதுல் முஸ்தகீம் எனும்) நேர் வழி (எனக் கூறுவீராக.)

(அல்குர்ஆன் 43:61)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஒருவர் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிரோடு வானில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது நமது சிற்றறிவுக்கு எட்டாமலிருக்கலாம். வானில் இருப்பவர் எதை உண்கிறார்? எவ்வாறு அங்கே மலஜலம் கழிக்கிறார்? இரண்டாயிரம் ஆண்டுகளாக மரணிக்காமல் இருப்பது எப்படிச் சாத்தியமாக முடியும்? என்றெல்லாம் நம்முடைய அறிவு வினாக்களை எழுப்பலாம். உலக நடைமுறைக்கு இது முரணானது தான். நமது அறிவின் தீர்ப்புப் படி இது சாத்தியமற்றது தான்.

நமது அறிவுக்கு இது நம்ப முடியாததாக இருந்தாலும் இறைவனது ஆற்றலையும், வல்லமையையும் புரிந்து கொண்டவர்களுக்கு இது சாத்தியமானதாகவே தெரியும். எந்த அல்லாஹ் நடைமுறைக்கு மாற்றமாக ஈஸா நபியை தந்தையின்றி பிறக்கச் செய்தானோ அதே அல்லாஹ், ஈஸா நபியை எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் வாழச் செய்ய இயலும்.

அந்த அல்லாஹ் தான் ஈஸா கியாமத் நாளின் அடையாளமாகத் திகழ்கிறார் என்கிறான். அந்த அல்லாஹ் தான் இதிலே சந்தேகப்படக் கூடாது என்கிறான். அந்த அல்லாஹ் தான் இப்படி நம்பிக்கை கொள்வதை ஸிராதுல் முஸ்தகீம் என்கிறான்.

அந்த இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் (ஸல்) அவர்களும் இதைப் பற்றி இன்னும் விரிவாக தெளிவாகச் சொல்லித் தருகின்றார்கள்.

இறைவனால் உயர்த்தப்பட்ட ஈஸா (அலை) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள். நீதியை நிலைநாட்டுவார்கள். தஜ்ஜாலைக் கொல்வார்கள். அவர்கள் வரக்கூடிய காலத்தில் செல்வம் பெருக்கெடுத்து ஓடும். வாங்குவதற்குக் கூட எவரும் இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் தெளிவான முன்னறிவிப்புகளை செய்துள்ளனர்.

நூல்: புகாரி 2222, 2476,

இதில் ஐயம் கொள்பவனும், நம்ப மறுப்பவனும் நிச்சயமாக ஸிராதுல் முஸ்தகீமில் இல்லை.

இது ஈஸா (அலை) அவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இறைவனும், அவனது தூதரும் சொல்லக் கூடிய எல்லா விஷயங்களுக்கும் பொதுவானது தான். அவ்விருவரும் கூறுவதில் எந்த ஒன்றிலாவது எவருக்காவது சந்தேகமோ, மறுப்போ இருக்குமானால் அவர்கள் அசத்திய வழியில் செல்பவர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

இவை எல்லாவற்றையும் உள்ளடக்கி இரத்தினச் சுருக்கமாகப் பின்வருமாறு வல்ல அல்லாஹ் விளக்குகின்றான்.

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன் 6:153)

ஹனபி, ஷாபி, மாலிக், ஹம்பளி என்றும் ஷியா, காரிஜிய்யா, ராபிஜிய்யா என்றும் ஷாதுலிய்யா, காதிரிய்யா என்றும் நம்மிடையே எத்தனையோ மார்க்கங்கள்! ஒவ்வொரு பிரிவினருக்கும் கொள்கைள் தனி! இப்படியெல்லாம் பலவாறான வழிகளில் செல்வது நேர்வழி அல்ல. சாத்தானின் வழிகள் எனவும் இங்கே அடையாளம் காட்டுகிறான்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்று அன்றாடம் பல தடவை இறைவனிடம் பிரார்த்திக்கின்ற நாம் அல்லாஹ் எதனை நேர்வழி என அடையாளம் காட்டுகிறானோ, அதில் செல்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். பாரம்பரியப் பழக்கங்கள், முன்னோர்கள் சென்ற வழிமுறை, மதகுருமார்கள் மீது கொண்ட பக்தி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதருடைய வழியை மட்டும் பின்பற்றுவது பலருக்கு எளிதில் சாத்தியமாவதில்லை. இதற்கான காரணத்தையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்? என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான் என்று கூறுவீராக! இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:142, 143)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த சமயத்தில் கஃபாவை நோக்கித் தம் தொழுகைகளை தொழுது வந்தார்கள். மதீனா வந்த பின் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழலானார்கள். அதன் பின் இறைவனது கட்டளைக்கேற்ப மீண்டும் கஃபாவை நோக்கித் தொழலானார்கள்.

நூல்: புகாரி 41, 399, 4486

கஃபாவை விடுத்து பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழ ஆரம்பித்த போது மக்கத்துக் காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) பழைய கிப்லாவை விட்டும் புதிய கிப்லாவின் பால் இவர் திரும்பக் காரணம் என்ன? என்று விமர்சிக்கலானார்கள். பைத்துல் முகத்தஸை விடுத்து மீண்டும் கஃபாவை நோக்கித் தொழ ஆரம்பித்த போது மதீனத்து யூதர்கள் இது போன்ற விமர்சனத்தைச் செய்தார்கள். இப்படி விமர்சித்தவர்களையே அல்லாஹ் அறிவீனர்கள் என்கிறான்.

இவர் என்ன அடிக்கடி திசை மாறுகிறார்? என்று அன்றைய யூதர்களும், இணை வைப்பவர்களும் எண்ணியதைப் போல் எண்ணாமல் அல்லாஹ் நமது எஜமான்; சட்டமியற்றவும் கட்டளையிடவும் அவனுக்கு முழு அதிகாரம் உண்டு; அவனது கட்டளையை அவனது தூதர் அவர்கள் எடுத்து வைக்கும் போது அதற்கு அப்படியே கட்டுப்பட்டு நடப்பதே முஸ்லிமுக்குரிய இலக்கணமாகும் என்ற நம்பிக்கையுடன் இதை யார் ஏற்றுக் கொண்டார்களோ அவர்களை நேர்வழியில் - ஸிராதுல் முஸ்தகீமில் செலுத்துவதாக அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

மற்றவர்களுக்கு இது மிகப் பெரிய பாரமாகத் தென்பட்டாலும் உண்மை விசுவாசிகளுக்கு அதாவது இறைவனின் ஆளுமையையும், தனது அடிமைத்தனத்தையும் உணர்ந்து கொண்டவர்களுக்கு இது பெரிய விஷயமாகத் தோன்றாது எனவும் அல்லாஹ் இங்கே கற்றுத் தருகிறான்.

இந்த இரண்டு வசனங்களும் இறைவனது கட்டளை எதுவானாலும் இறைத்தூதரது வழிகாட்டுதல் எதுவானாலும் அதை அப்படியே ஏற்று நடப்பது தான் ஸிராதுல் முஸ்தகீம் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றன.

அல்லாஹ் இவ்வாறு கிப்லாவை அடிக்கடி மாற்றியது கூட இறைவனது கட்டளை எதுவானாலும் அப்படியே ஏற்கக் கூடியவர் யார்? தான் விரும்புவதை அல்லாஹ் கட்டளையிட்டால் மட்டும் ஏற்று மற்ற விஷயங்களில் அல்லாஹ்வை அலட்சியப்படுத்துபவர் யார் என்பதை அடையாளம் காட்டவே எனவும் அல்லாஹ் சொல்கிறான்.

இறைவனது கட்டளையும், இறைத்தூதருடைய வழிகாட்டுதலும் இது தான் என அறிந்த பின் அதை ஏற்க மறுப்பவர்களும், எதிர்த்து விமர்சனம் செய்பவர்களும் அறிவீனர்கள்; வந்த வழியே திரும்பிச் சென்றவர்கள். (அதாவது இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்) எனவும் இங்கே அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான்.

ஏற்கனவே ஒரு கிப்லாவை நோக்கியதாக அல்லாஹ் கூறுகிறானே அந்தக் கிப்லாவை நோக்குமாறு குர்ஆனில் எந்தக் கட்டளையும் இல்லை. குர்ஆன் கட்டளையில்லாமல் இன்னொரு வஹீ மூலம் நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியதை தனது கட்டளையாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். குர்ஆன் மட்டும் போதும் என்போர் யார்? இத்தூதரின் வழியையும் பின்பற்றுவோர் யார் என்பதை அறிந்திடவே கிப்லாவை மாற்றியதாக அவனே கூறுகிறான். இறைக் கட்டளையை மட்டுமின்றி இறைத்தூதரின் கட்டளையையும் சேர்த்துப் பின்பற்றுவதே நேரான வழி எனவும் அல்லாஹ் விளக்குகிறான்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என இறைவனிடம் பிரார்த்திக்கும் போது இறைவா! இது தான் நேர்வழி என்று எனக்குத் தெரிந்த பின் அதற்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்க அருள் புரிவாயாக! என் மனோ இச்சை இதை விரும்பாவிட்டாலும் அதை வெல்லக் கூடிய உறுதியை எனக்குத் தருவாயாக! என்ற எண்ணத்தை மனதிலிறுத்திப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வளவு அர்த்தமும் இந்த சின்னஞ்சிறு வாசகத்தில் உள்ளடங்கி இருக்கிறது.

ஸிராதுல் முஸ்தகீம் என்ற சொற்றொடரைப் பின் வரும் வசனங்களில் இறைவன் பயன்படுத்திள்ளான். இந்த வசனங்களைச் சிந்தித்தால் எவையெல்லாம் ஸிராதுல் முஸ்தகீமில் அடங்கும் என்பதை அறியலாம்.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர் தாம், அதற்கு முரண்பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துவான்.

(அல்குர்ஆன் 2:213)

அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏக இறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்தப்பட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 3:101)

வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் (ஸிராதுல் முஸ்தகீமை) காட்டுகிறான்.

(அல்குர்ஆன் 5:15,16)

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்கள்; ஊமைகள். இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துகிறான்.

(அல்குர்ஆன் 6:39)

ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். இதுவே உமது இறைவனின் (ஸிராதுல் முஸ்தகீம்) நேரான வழி. சிந்திக்கின்ற சமுதாயத்திற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

(அல்குர்ஆன் 6:125,126)

(முஹம்மதே!) கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும், அவர்களது உள்ளங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் நேரான பாதையை (ஸிராதுல் முஸ்தகீமை) காட்டுகிறான்.

(அல்குர்ஆன் 22:54)

நீர் அவர்களை நேரான வழியை (ஸிராதுல் முஸ்தகீமை) நோக்கி அழைக்கிறீர்! மறுமையை நம்பாதோர் அவ்வழியை விட்டும் விலகியவர்கள்.

(அல்குர்ஆன் 23:73,74)

தெளிவுபடுத்தும் வசனங்களை நாம் அருளினோம். தான் நாடியோரை அல்லாஹ் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) செலுத்துகிறான். அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர். உண்மை அவர்களுக்குச் சாதகமாக இருந்தால் அதற்குக் கட்டுப்பட்டு வருகின்றனர். அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதா? அல்லது சந்தேகம் கொள்கிறார்களா? அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு அநீதி இழைப்பார்கள் என்று அஞ்சுகிறார்களா? இல்லை! அவர்களே அநீதி இழைத்தவர்கள். அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 24:46 -52)

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 43:43,44)

நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் (ஸிராதுல் முஸ்தகீமில்) அமர்ந்து கொள்வேன் என்று கூறினான். பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய் (என்றும் கூறினான்).

(அல்குர்ஆன் 7:16,17)

இந்த வசனங்கள் அனைத்திலும் ஸிராதுல் முஸ்தகீம் எதுவென மிகத் தெளிவாக அல்லாஹ் விளக்குகின்றான். இறைவனது வசனங்களை விளங்கி நடப்பதும், இறைத்தூதர் கொண்டு வந்த மார்க்கத்தின் படி நடப்பதும் தான் ஸிராதுல் முஸ்தகீம். நூற்றுக்கு நூறு அதற்குக் கட்டுப்படுவதைத் தவிர வேறு எதுவும் ஸிராதுல் முஸ்தகீம் அல்ல. வாயளவில் அல்லாஹ், ரசூலுக்குக் கட்டுப்பட்டோம் எனக் கூறி விட்டுப் பெரியார்கள், மகான்கள் சொன்ன சொற்களெல்லாம் சான்றுகள் என எவர்கள் நம்புகிறார்களோ அவர்கள் மூமின்களே அல்லர் எனவும் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

வணக்கங்களை இறைவனுக்கு மட்டும் செய்வதும் நேர்வழியாகும்

வணக்க வழிபாடுகள் அனைத்தையும், இறைவனுக்கு மாத்திரமே உரித்தாக்கி, இறைவனல்லாத எவருக்கும் வணக்கத்தில் பங்கு எதையும் யார் அளிக்கவில்லையோ அவர்களும் நேர்வழியில் இருப்பதாக பல இடங்களில் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

மனிதர்களையும், மரங்களையும், கல்லையும், மண்ணையும், உயிருடனுள்ளவர்களையும், இறந்தவர்களையும், சிலைகளையும், சமாதிகளையும் ஒரு பக்கம் வணங்கிக் கொண்டு, அல்லாஹ்வையும் அவ்வப்போது வணங்குபவர்கள் நேர்வழியில் - ஸிராதுல் முஸ்தகீமில் இருப்பவர்கள் அல்லர் எனப் பல இடங்களில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும் (எனவும் கூறினார்)

(அல்குர்ஆன் 3:51)

அல்லாஹ்வே எனது இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி (என்று கூறுவீராக!)

(அல்குர்ஆன் 19:36)

அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி (என்றும் கூறினார்.)

(அல்குர்ஆன் 43:64)

6:81 முதல் 6:87 முடிய உள்ள வசனங்களில் இறைவனுக்கு இணை வைக்காது அவனை மாத்திரமே வணங்குவதே ஸிராதுல் முஸ்தகீம் என்று இறைவன் கூறுகிறான்.

11:53 முதல் 11:56 முடிய உள்ள வசனங்களில் இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இறைவனல்லாத போலித் தெய்வங்களுக்கு அஞ்சாது துணிவுடன் நடப்பதை ஸிராதுல் முஸ்தகீம் என்று இறைவன் கூறுகிறான்.

15:40 முதல் 15:43 முடிய உள்ள வசனங்களில் அல்லாஹ்வை மாத்திரமே வணங்குவது தான் ஸிராதுல் முஸ்தகீம் எனவும், ஷைத்தானால் இத்தகையோரை வழிகெடுக்க இயலாது எனவும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

16:120,121 வசனங்களில் இறைவனுக்கு எதையும், எவரையும் இணை வைக்காது இருப்பது ஸிராதுல் முஸ்தகீம் என்கிறான் அல்லாஹ்.

36:60,61 வசனங்களில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதே நேர்வழி எனவும், இறைவனல்லாத எவரையும் வணங்கினால் அது ஷைத்தானை வணங்கியதாகவே கொள்ளப்படும் என்றும் அறிவிக்கின்றான் அல்லாஹ்.

இந்த வசனங்கள் அனைத்தையும் ஊன்றிக் கவனிப்பவர்கள் எது நேர்வழி என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்று இறைவனிடம் கேட்கும் போது இறைவா! உன்னைத் தவிர வேறு எவரையும் வணங்காத, உன்னை மட்டுமே வணங்குகின்ற நேர்வழியைக் காட்டுவாயாக என்பது அதன் பொருளாக அமைந்து விடுகிறது.

ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்ஃகைரில் மஃக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்

இது ஃபாத்திஹா அத்தியாயத்தின் கடைசி வசனமாகும். இறைவா! எவருக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழியை எங்களுக்குக் காட்டுவாயாக! (உனது) கோபத்திற்கு ஆளானவர்களின் வழியையும், வழிதவறியவர்களின் வழியையும் எங்களுக்குக் காட்டாதே என்பது இதன் கருத்தாகும்.

ஸிராதல் முஸ்தகீம் எனும் நேர்வழியைக் காட்டுவாயாக! என்று தன்னிடம் பிரார்த்திக்குமாறு கற்றுத் தந்த அல்லாஹ் அதைத் தொடர்ந்து வரும் மேற்கண்ட வசனத்தில் ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழி எதுவென்பதை இரத்தினச் சுருக்கமாக விளக்குகின்றான். ஸிராதுல் முஸ்தகீம் என்பது மூன்று அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறான்.

  1. இறைவனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியாக அது இருக்கக் கூடாது.
  2. தவறான பாதையில் சென்றவர்களின் வழியாகவும் அது இருக்கக் கூடாது.
  3. மாறாக இறைவனின் நல்லருள் பெற்றவர்களின் வழியாக இருக்க வேண்டும்.

நாம் செல்லக் கூடிய வழி இந்த மூன்று அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளதா? என்பதை அறிந்து கொள்வது நாம் செல்லும் வழி நேர்வழி தானா என்பதைத் தெளிவாக அறிய உதவும் என்பதால் அது பற்றிய விபரத்தைக் காண்போம். இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் யார்? அவர்கள் இறை வெறுப்புக்குரியவர்களாக ஏன் ஆனார்கள்? என்ற விபரங்களை முதலில் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

கோழைகள் இறைவனின் கோபத்திற்குரியவர்களாவர்

நம்பிக்கை கொண்டோரே! முன்னேறி வரும் (ஏக இறைவனை) மறுப்போரை நீங்கள் சந்திக்கும் போது அவர்களுக்குப் புறங்காட்டி ஓடாதீர்கள்

(அல்குர்ஆன் 8:15)

நியாயமான காரணங்களுக்காகக் களத்தில் இறங்கிய பின் எவன் உயிருக்குப் பயந்து பின் வாங்குகின்றானோ அவன் இறைவனது கோபத்திற்குரியவன் என்று அல்லாஹ் இங்கே அடையாளம் காட்டுகின்றான்.

உயிருக்கு அஞ்சியவர்களும், கோழைகளும் இறைவனது கோபத்திற்குரியவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிய வருகின்றது.

அக்கிரமத்தையும், அநீதியையும் காணும் போது அதற்கெதிராகப் போராட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது போன்ற அறப்போரில் மடிந்து விட்டால் மறுமையில் இதற்கு வழங்கப்படும் பரிசுக்கு ஈடு இல்லை என்றெல்லாம் இஸ்லாம் கூறுகின்றது. அக்கிரமமும், அநீதியும், தீமைகளும் தலைவிரித்தாடும் போது அதைக் கண்டும் காணாதிருக்க முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.

யார் தனது பொருட்களை பிறரிடமிருந்து காக்கும் போராட்டத்தில் கொல்லப்படுகின்றாரோ அவரும் ஷஹீத் (உயிர்த் தியாகி) என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: புகாரி 2480

ஒரு பொருள் நமக்குச் சொந்தமானது என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அல்லது முஸ்லிம் சமுதாயத்திற்குச் சொந்தமானது என்று திட்டவட்டமாகத் தெரிகின்றது. அதை அநியாயமாக எவரேனும் பறித்துக் கொள்ள முயன்றால் அதை மீட்கும் போராட்டத்தில் மடிந்து விட்டாலும் அவன் ஷஹீத் எனும் உயர் பதவியை அடைகின்றான்.

தனக்குச் சொந்தமான ஒரு பொருளை அநியாயமாக எவரேனும் பறிக்க முற்படும் போது அந்தப் பொருளின் மதிப்பு உயர்ந்ததா? அல்லது தனது உயிரின் மதிப்பு உயர்ந்ததா? என்றெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உயிரை விட எந்தப் பொருளும் மதிப்பு மிக்கவை அல்ல என்பதில் ஐயம் இல்லை.

அப்படி இருந்தும் நபியவர்கள் இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கணக்குப் பார்த்திருந்தால் மேற்கண்ட பொன்மொழியைச் சொல்லி இருக்க மாட்டார்கள்.

பொருட்களை மீட்பதற்காகப் போராடி மடிய வேண்டாம். உயிரைக் காப்பாற்றிக் கொண்டு பொருட்களைப் பறிக்க வருபவனிடம் கொடுத்து விடுங்கள் என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறாமல் அதை மீட்கும் போரில் உயிரைப் பறிகொடுப்பவனுக்கு மகத்தான அந்தஸ்தை வாக்களிக்கின்றார்கள்.

அசத்தியத்திற்கெதிரான போராட்டங்களில் லாப நட்டக் கணக்குப் பார்க்க முடியாது. அக்கிரமத்தைக் கண்ட பிறகு வாளாவிருந்தால், அக்கிரமத்திற்குப் பணிந்தால் அக்கிரமம் மேலும் தலைவிரித்தாடும் நிலை ஏற்படும். நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி மிக அழகாகச் சொன்னார்கள்.

தனது குதிரையின் முதுகின் மீது தயார் நிலையில் இருந்து கொண்டு எங்காவது அக்கிரமமோ, அநியாயமோ நடக்கக் கண்டால் தனது குதிரையின் மீது பறந்து சென்று மரணம் தான் ஏற்படும் என்று தெரிந்தே அந்தத் தீமையைத் தடுக்க முயல்பவன் மனிதர்களில் மிகவும் சிறந்தவன் என்று நபிகள் நயயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3503

மரணம் நிச்சயம் என்று தெரிந்த நிலையில் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடுபவனே முஸ்லிம்களில் சிறந்தவன். அவனே உண்மையான முஸ்லிம்.

இப்படியெல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் உலகில் எந்த அறப்போராட்டமும் நடக்காது. நடந்திருக்காது. அக்கிரமம் மேலும் துணிவு பெறும். நியாயவான்கள் நேர்மையாளர்கள் அஞ்சி வாழும் நிலை ஏற்படும்.

முஸ்லிம்கள் நடத்தும் அறப்போராட்டங்கள் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இஸ்லாத்தை ஒரு ஜாதியாக எண்ணி, தன் இனத்தவர் செய்யும் அக்கிரமங்களை நியாயப்படுத்தவோ தவறு நம்மவர்களின் மீது இருக்கும் போது அவர்களுக்காகப் போராடவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நியாயம் அல்லாத எந்தப் போராட்டத்திலும் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். திடீரென்று இரண்டு மூன்று பேர் பயங்கர ஆயுதங்களுடன் எழுந்து கொள்ளையடிக்க முற்படுகிறார்கள். அந்தப் பேருந்தில் பயணம் செய்யும் அறுபது பேரும் பதுமைகளாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அன்றாடம் நடந்து வரும் நிகழ்ச்சி இது.

பகிரங்கமாகக் கொள்ளையடிக்க வருகிறான். அப்பாவி மக்களை அச்சுறுத்துகிறான். அறுபது நபர்களை அக்கிரமக்கார ஐந்து பேர் மிரட்டுகின்றனர். இந்த அக்கிரமத்தைக் கண்ட பின்பும் கற்சிலையாய் அமர்ந்திருக்கும் கோழைகளைக் காண்கிறோம். இந்த அக்கிரமத்தைக் கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கெதிராக எவன் போராடத் துணிகின்றானோ அவன் அப்போரில் கொல்லப்பட்டால் அவன் ஷஹீத் எனும் உயர் நிலையை அடைகிறான். இப்படி நான்கு பேர் துணிந்து விட்டால் இது போன்ற வழிப்பறிக் கொள்ளைகள் இல்லாது ஒழியும்.

இந்தக் கட்டத்திலும் கூட வாளாவிருந்து கையில் உள்ளதைக் கழற்றிக் கொடுப்பவனும், பையில் உள்ளதை எடுத்துக் கொடுப்பவனும் இறைவனின் கோபத்திற்கு உரியவனே. நேர்வழியில் இருப்பவன் ஒருக்காலும் அக்கிரமத்திற்குப் பணிய மாட்டான்.

அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சக் கூடியவன் வேறு எந்த சக்திக்கும் அஞ்ச மாட்டான். மறு உலக வாழ்வை மட்டுமே குறியாகக் கொண்டவன் உயிரைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்!

இறைவா! உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியை எங்களுக்குக் காட்டாதே! என்று பிரார்த்திக்கும் போது இறைவா! எங்களைக் கோழைகளாக ஆக்காதே! கோழைகளின் வழியில் எங்களை நடத்தாதே என்பதும் அதன் பொருளாக அமைந்து விடுகின்றது.

கோழைத்தனத்திலிருந்து விடுபவட்டவர்களே ஸிராதுல் முஸ்தகீம் எனும் நேர்வழிக்குரியவர்கள். இறை கோபத்திற்கு ஆளானவர்களின் பட்டியலை மேலும் காண்போம்.

மறுமையை நம்பாதோர்இறைவனின் கோபத்திற்குரியவர்கள்

இவ்வுலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறுவோரும், அதனடிப்படையில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் இறைவனின் கோபத்திற்கு உரியவர்களாவர்.

மறுமையை நம்பியுள்ளதாகப் பிரகடனம் செய்யும் முஸ்லிம்களில் பலரிடம் இது போன்ற போக்கைக் காண முடிகின்றது.

ஐங்காலமும் தொழுது, நோன்பு நோற்று, இன்ன பிற கடமைகளை நிறைவேற்றக் கூடிய பலர் பகிரங்கமாக பாவச் செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். வட்டி வாங்குவோர் நிரந்தர நரகை அடைவர் எனக் குர்ஆன் கூறுவதை அறிந்த பின்பும் நமது நாட்டில் இதெல்லாம் சாத்தியப்படுமா? என்று கூறி வட்டி வாங்குவோர் உண்மையில் மறுமை நம்பிக்கை இல்லாதவர்களே.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரைக் கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! (ஏக இறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் (எழுப்பப்படுவார்கள் என்பது) பற்றி நம்பிக்கை இழந்தது போல் இவர்கள் மறுமையைப் பற்றி நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

(அல்குர்ஆன் 60:13)

மறுமை நம்பிக்கையை இழந்து விட்ட காரணத்தினால் ஒரு சாரார் இறைவனது கோபத்திற்கு ஆளாகி விட்டனர் என்றும், அவர்களை நண்பர்களாகக் கூட ஆக்கி விடலாகாது என்றும் இங்கே அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

இறைவா! உன் கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே என்றால் இறைவா! மறுமை நம்பிக்கையற்றவர்களாக எங்களை ஆக்கி விடாதே என்ற கருத்து இதனுள் அடங்கி விடுவதை மேற்கண்ட விபரங்களிலிருந்து அறியலாம்.

அல்லாஹ் கூறுவது இது தான் எனத் தெரிந்த பின்னரும் அதை ஏற்க மறுப்பவர்களும் அவனது கோபத்திற்கு உரியவர்களாகின்றனர்.

அல்லாஹ் கூறுவது எதுவானாலும் அதற்கு அப்படியே தலை சாய்ப்பவன் மட்டுமே இறைவனது கோபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

உண்மையான மார்க்கத்தை எடுத்துச் சொல்வோரை அநியாயமாகத் தாக்குவதும் அவர்களைக் கொல்ல முயல்வதும் கூட இறைவனின் கடுமையான கோபத்திற்குரிய காரியங்களாகும்.

மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான் என்று நீங்கள் கூறிய போது, சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு என்று அவர் கூறினார். அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன் 2:61)

மூஸா (அலை) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் இறைவனது வசனங்களில் நம்பிக்கையிழந்ததினாலும், சத்தியத்தைப் போதிக்கும் நபிமார்களைக் கொல்ல முயன்றதாலும், கொன்றதாலும் இறைவனது கோபத்திற்கு ஆளானார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இது பற்றி இன்னும் விரிவாக அல்லாஹ் வேறு இடங்களில் குறிப்பிடுகிறான். நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இறைவனால் தூதராக நியமிக்கப்பட்ட போது அதை இஸ்ரவேலர்கள் தான் நம்ப மறுத்தார்கள். இதே இஸ்ரவேலர்கள் தான் இறுதி நபியின் வருகையை எதிர்பார்த்து, அவர் வந்ததும் அவரை ஏற்று பக்கபலமாக நிற்க வேண்டும் என்பதற்காக முன்னர் மதீனாவில் குடியேறினார்கள்.

தலைமுறை, தலைமுறையாக இறுதித் தூதரின் வருகையை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தனர். இறுதித் தூதரின் அடையாளங்கள் யாவும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வேதங்களிலும், அவர்களின் நபிமார்களின் போதனைகளிலும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

(அல்குர்ஆன் 2:146)

ஆனால் நபிகள் நயயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராக வருகை தந்த போது ஏற்க மறுத்து விட்டனர். இவர்கள் மறுத்ததற்குக் காரணம், தங்கள் விரும்புகின்ற தங்கள் இனத்தைச் சார்ந்தவரை அல்லாஹ் நபியாக அனுப்பவில்லை என்பது தான். அதாவது அல்லாஹ் கூட இவர்களின் விருப்பத்தின்படியே நடக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனை இருக்கிறது.

(அல்குர்ஆன் 2:90)

இறைவனது கட்டளையில் எதிர்க்கேள்வி கேட்போரும், அதில் ஆட்சேபனை எழுப்புவோரும், அதை நம்ப மறுப்போரும் கடுமையான கோபத்திற்குரியவர்கள் என இங்கே அல்லாஹ் கூறுகிறான்.

கோபத்திற்கு ஆளானவர்களின் வழியை எங்களுக்கு காட்டாதே! என்றால், உனது கட்டளையை அப்படியே ஏற்கும் பக்குவத்தைத் தருவாயாக என்பது உள்ளடங்கும்.

இரட்டை வேடம் போடுவோரும் இறைவனின் கோபத்திற்கு ஆளானவர்களே!

உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றைப் பேசுவோரும், இரட்டை வேடம் போடுவோரும் இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் என்று அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது.

(அல்குர்ஆன் 48:6)

அல்லாஹ்வைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவனுக்கு இணை வைக்கும் ஆண்களும், பெண்களும் தனது கோபத்திற்குரியவர்கள் என்றும் அது போலவே அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளாது, அவனைத் தவறாகப் புரிந்து கொண்டு இரட்டை வேடம் போடுவோரும் தனது கோபத்திற்காளானவர்கள் என்றும் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே என்று பிரார்த்திக்கும் போது இரட்டை வேடம் போடுவோராகவும் இணை வைப்போராகவும் ஆக்காதே என்ற கருத்தும் உள்ளடங்கியுள்ளது. கைரில் மக்லூபி அலைஹிம் என்று கூறும் போது இதுவும் நம் கவனத்திற்கு வர வேண்டும்.

கொலைப் பாதகம் புரிவோரும் அவனது கோபத்திற்கு ஆளானவர்கள்

தக்க காரணமின்றி கொலைப் பாதகம் புரிவோரையும் தனது கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று அல்லாஹ் இனம் காட்டுகிறான்.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 4:93)

இறைவனது கோபத்திற்கு ஆளானவர்கள் யார்? யார்? என்பதை மிகவும் சுருக்கமான முறையில் இன்னொரு இடத்தில் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் தூய்மையானதை உண்ணுங்கள்! இங்கே வரம்பு மீறாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) எனது கோபம் உங்கள் மீது இறங்கும். எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான்.

(அல்குர்ஆன் 20:81)

எல்லா விதமான அக்கிரமமும், வரம்பு மீறலும் யாருக்கு வாடிக்கையாகிவிட்டதோ அவர்களனைவரும் இறைவனது கோபத்திற்கு ஆளானவர்களே.

இறைவா! உனது கோபத்திற்கு ஆளானவர்களின் வழியில் எங்களை நடத்தாதே எனும் போது இவ்வளவும் நம் உள்ளத்தில் பதிய வேண்டும். இத்தகையோர் வழியில் நடத்தாதே என்ற எண்ணமும் நமக்கு ஏற்பட வேண்டும்.

வலள்ளால்லீன்

தவறான பாதையில் சென்றோரின் வழியையும் எங்களுக்குக் காட்டாதே என்பது வலள்ளால்லீன் என்பதன் கருத்தாகும். தவறான வழியில் சென்றோரைப் பொதுவாக இங்கே குறிப்பிட்டாலும் திருக்குர்ஆன் நெடுகிலும் எத்தகையோர் தவறான வழி சென்றோர் எனத் தெளிவாகவும் அவன் அடையாளம் காட்டுகிறான்.

பிறரது விருப்பத்துக்காகவும், அவர்களை அனுசரிக்க வேண்டுமென்பதற்காகவும் உண்மையை விட்டும் விலகிச் செல்பவர்களை வழிகெட்டவர்கள் என்கிறான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறுவீராக! உங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்ற மாட்டேன். (பின்பற்றினால்) வழி தவறி விடுவேன். நேர் வழி பெற்றவனாக ஆக மாட்டேன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:56)

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழி கெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழி காட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 45:23)

இந்த வசனமும் 33:36, 6:119, 28:50 வசனங்களும் வழிகெட்டவர்கள் யார் என்று விளக்கும் வசனங்களாகும்.

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது.

(அல்குர்ஆன் 31:6)

வீணான கதைகள், வெட்டிப் பேச்சுக்கள் ஆகியவற்றில் மூழ்கிக் கிடப்பவர்களும் வழிகெட்டவர்களே என்று இனம் காட்டுகின்றான்.

தங்களின் மார்க்க நடைமுறைகளுக்கு திருக்குர்ஆனையும், நபிமொழியையும் சான்றுகளாகச் சமர்ப்பிக்காமல் தங்களின் முன்னோர்களையும், சமகாலத்தவர்களையும், முன்னோடிகளாகக் கொண்டவர்களும் வழிகெட்டவர்களே.

உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்! என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக! என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று (அவன்) கூறுவான்.

(அல்குர்ஆன் 7:38)

அவர்கள் தமது முன்னோர்களை வழிகெட்டவர்களாகவே கண்டனர். அவர்களின் அடிச்சுவடுகளிலேயே இவர்களும் இழுக்கப்படுகின்றனர். முன்னோர்களில் அதிகமானோர் இவர்களுக்கு முன் வழிகெட்டிருந்தனர். அவர்களிடம் எச்சரிப்போரை அனுப்பினோம். தேர்வு செய்யப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர எச்சரிக்கப்பட்டோரின் முடிவு எவ்வாறு அமைந்தது என்று கவனிப்பீராக!

(அல்குர்ஆன் 37:69 - 74)

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 21:52 - 54)

பெரியவர்கள், மகான்கள் என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்ய முடியும் என்பதைக் கூட உணராமல் இவர்களாகவே சிலருக்கு அவ்லியாப் பட்டம் வழங்கி அவர்களை கண்மூடி பின்சென்றவர்களும் வழிகேடர்களேயாவர்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! (எனவும் கூறுவார்கள்.)

(அல்குர்ஆன் 33:66 - 68)

அல்லாஹ் வழங்கிய மகத்தான பாக்கியமான பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்களும் வழிகேடர்களே.

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான். அவர்கள் தங்குமிடம் நரகம். அதிலிருந்து தப்பிக்கும் வழியை அவர்கள் காண மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 4:118 - 121)

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

(அல்குர்ஆன் 7:179)

இங்கே குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழி கெட்டவராகவும் இருப்பார்.

(அல்குர்ஆன் 17:72)

அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள்.

(அல்குர்ஆன் 25:44)

இறைவனின் பேரருளில் நம்பிக்கை இழந்தவர்களும் (15:56), பெரும்பான்மையை பின்பற்றுபவர்களும் (6:116) வீண் தர்க்கத்தில் ஈடுபடுபவர்களும் (11:48, 25:9), பாவங்களில் மூழ்கிவிடுபவர்களும் (26:99), வீண் விரயம் செய்பவர்களும் (40:34) வழிகேடர்களே என்கிறான்.

வளல்லால்லீன் எனக் கூறும் போது இறைவா! இத்தகைய செயல்களை விட்டும் எங்களைக் காத்து நல்லவர்களின் பாதையில் நடக்கச் செய்வாயாக என்று உணர்ந்து கூற வேண்டும்.

ஆமீன்

இந்த அத்தியாயத்தை தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஓதும் போது முடிந்ததும் ஆமீன் என்று கூறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் ஆமீன் என்பது இந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என சிலர் தவறாக எண்ணுகின்றனர்.

ஆமீன் என்பது இந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி அல்ல.

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றைத் துவக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம். குர்ஆனில் இல்லாத எதுவும் குர்ஆனுடன் கலந்து விடாமலும், குர்ஆனில் உள்ளது எதுவும் விடுபட்டுப் போகாமலும் மிகுந்த சிரத்தையுடன் குர்ஆன் தொகுக்கப்பட்டது என்பதையும் முன்னர் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அவ்வாறு தொகுக்கப்பட்ட குர்ஆனில் ஃபாத்திஹா அத்தியாயத்தின் இறுதியில் ஆமீன் எழுதப்பட்டிருக்கவில்லை.

அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் அதை விட்டிருக்க மாட்டார்கள். எனவே ஆமீன் என்பது இந்த அத்தியாத்தின் ஒரு பகுதி அல்ல.

ஆனாலும் இந்த அத்தியாயத்தின் இறுதி மூன்று வசனங்களிலும் நேர்வழியில் செலுத்துமாறு நாம் பிரார்த்தனை புரிகிறோம். இந்தப் பிரார்த்தனை முடித்தவுடன் ஆமீன் இந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக என்று கூறப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்பதற்காக அல்ல.

அல்லாஹ் இந்தப் போதனைகளைப் பின்பற்றி நடப்பவர்களாக நம்மை ஆக்கட்டும்!

பிற்சேர்க்கை 1

அல்லாஹ்வின் தூதர் அழைக்கும் போது தொழுகையை எப்படி முறிக்கலாம்?

அல்லாஹ்வின் தூதர் அழைக்கும் போது தொழுகையை எப்படி முறிக்க முடியும்? இது சரிதானா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போது அவர்கள் யாரையேனும் அழைத்தால் அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கூட அதை விட்டு விட்டு அந்த அழைப்புக்கு மறுமொழி கூறியாக வேண்டும் என்று அந்த ஹதீஸ் தெளிவாகவே கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி வந்து கொண்டிருந்ததாலும் அவர்கள் வழியாகவே அனைத்துச் சட்டங்களையும் அறிந்து கொள்ள வேண்டியிருந்ததாலும் தொழும் முறை கூட அவர்கள் வழியாகவே நமக்குத் தெரிய வந்ததாலும் அவர்கள் அழைத்தால் உடனே சென்று தான் ஆக வேண்டும்.

தொழும் முறையையோ, அல்லது நேரத்தையோ, அல்லது தொழும் திசையையோ, அல்லது ரக்அத்களின் எண்ணிக்கையையோ இறைவன் மாற்றலாம். அதற்காகக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்திருக்கலாம். அல்லாஹ்வின் கட்டளையைச் சொல்லித் தரவே அவர்கள் அழைக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அந்த அழைப்பை ஏற்க வேண்டும். தொழுகை பெரிதா? தூதர் பெரியவரா? என்று ஒப்பு நோக்குவது அறியாமையாகும்.

தொழுகை அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது. அதைக் கூட விட்டு விட்டு ரஸுலுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை விட ரசூலுக்குக் கட்டுப்படுவதே சிறந்தது எனவும் சில வழி கேடர்கள் கூறுகின்றனர்.

தொழச் சொன்ன இறைவன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அழைக்கும் போது பதிலளிக்கச் சொல்கிறான். ரசூலின் அழைப்புக்காக தொழுகையை விட்டாலும் இறைவன் அவ்வாறு கூறுவதாலேயே தொழுகையை விடுகிறோம். இங்கேயும் இறைவனது கட்டளைக்காகவே ரசூலின் அழைப்பு ஏற்கப்படுகின்றது என்பதை இவர்கள் உணரவில்லை.

பிற்சேர்க்கை 2

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா?

இது குறித்து அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. குர் ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாம் என்ற கருத்துக்கும் கூலி வாங்கக் கூடாது என்ற கருத்துக்கும் இடம் தரும் வகையில் ஆதாரங்கள் உள்ளதால் இதில் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.

குர்ஆனுக்கு கூலி வாங்கலாம் என்ற கருத்தில் உள்ளவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்.

صحيح البخاري

2276 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ، فَقَالَ بَعْضُهُمْ: لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا: يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ  مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ: نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ، وَيَقْرَأُ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ: فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمْ: اقْسِمُوا، فَقَالَ الَّذِي رَقَى: لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا، فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ، فَقَالَ: «وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ»، ثُمَّ قَالَ: «قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ شُعْبَةُ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ، سَمِعْتُ أَبَا المُتَوَكِّلِ، بِهَذَا

2276, நபித் தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்ட போது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கும் கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர். அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது ஊதி, அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.... என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப் பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்ட போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல் : புகாரி 2276

மற்றொரு அறிவிப்பில்

صحيح البخاري

5737 - حَدَّثَنِي سِيدَانُ بْنُ مُضَارِبٍ أَبُو مُحَمَّدٍ البَاهِلِيُّ، حَدَّثَنَا  أَبُو مَعْشَرٍ البَصْرِيُّ هُوَ صَدُوقٌ يُوسُفُ بْنُ يَزِيدَ البَرَّاءُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ الأَخْنَسِ أَبُو مَالِكٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرُّوا بِمَاءٍ، فِيهِمْ لَدِيغٌ أَوْ سَلِيمٌ، فَعَرَضَ لَهُمْ رَجُلٌ مِنْ أَهْلِ المَاءِ، فَقَالَ: هَلْ فِيكُمْ مِنْ رَاقٍ، إِنَّ فِي المَاءِ رَجُلًا لَدِيغًا أَوْ سَلِيمًا، فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ، فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ عَلَى شَاءٍ، فَبَرَأَ، فَجَاءَ بِالشَّاءِ إِلَى أَصْحَابِهِ، فَكَرِهُوا ذَلِكَ وَقَالُوا: أَخَذْتَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا، حَتَّى قَدِمُوا المَدِينَةَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَخَذَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَقَّ مَا أَخَذْتُمْ عَلَيْهِ أَجْرًا كِتَابُ اللَّهِ»

5737,  (ஒரு பயணத்தின் போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா? இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கின்றார் என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப் பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை வெறுத்து அல்லாஹ்வின் வேதத்திற்கா நீர் கூலி வாங்கினீர்? என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக் கொண்டார் என்று சொன்னார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமேயாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5737

இந்த ஹதீஸில் கூலியை நிர்ணயித்துக் கேட்டுப் பெற்றுள்ளதாலும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்தது மட்டுமின்றி தமக்கும் அதில் ஒரு பங்கு வேண்டும் என்று கேட்டதாலும் ஊதியம் பெற்றிட குர்ஆன் மிகவும் தகுதியானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாலும் குர்ஆனுக்கு கூலி வாங்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கூறிய ஹதீஸ் மிகவும் ஆதாரப்பூர்வமானது என்பதையும் அவர்களின் அந்தக் கருத்துக்கு அதில் இடமுண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது.

صحيح البخاري

5871 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ سَهْلًا، يَقُولُ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: جِئْتُ أَهَبُ نَفْسِي، فَقَامَتْ طَوِيلًا، فَنَظَرَ وَصَوَّبَ، فَلَمَّا طَالَ مُقَامُهَا، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ، قَالَ: «عِنْدَكَ شَيْءٌ تُصْدِقُهَا؟» قَالَ: لاَ، قَالَ: «انْظُرْ» فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ: وَاللَّهِ إِنْ وَجَدْتُ شَيْئًا، قَالَ: «اذْهَبْ فَالْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ» فَذَهَبَ ثُمَّ رَجَعَ  قَالَ: لاَ وَاللَّهِ وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَعَلَيْهِ إِزَارٌ مَا عَلَيْهِ رِدَاءٌ، فَقَالَ: أُصْدِقُهَا إِزَارِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِزَارُكَ إِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَيْءٌ، وَإِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ» فَتَنَحَّى الرَّجُلُ فَجَلَسَ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا، فَأَمَرَ بِهِ فَدُعِيَ، فَقَالَ: «مَا مَعَكَ مِنَ القُرْآنِ» قَالَ: سُورَةُ كَذَا وَكَذَا، لِسُوَرٍ عَدَّدَهَا، قَالَ: «قَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»

5871, ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட வந்துள்ளேன் என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.

அவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மனிதர் (அல்லாஹ்வின் தூதரே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள் என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவருக்கு மஹ்ராகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்கள். அம்மனிதர், ஏதுமில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (ஏதேனும் கிடைக்குமா என்று) பார் என்றனர். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பி வந்து, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஏதும் கிடைக்கவில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மேலும் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை என்றார்.

அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டு கூட இருக்கவில்லை. அந்த மனிதர், எனது கீழங்கியை அவளுக்கு நான் மணக் கொடையாக வழங்குகிறேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது கீழங்கியா? அதை இவள் அணிந்து கொண்டால் அதிலிருந்து உம் மீது ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்து கொண்டால் அதிலிருந்து இவள் மீது ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்து கொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரச்சொல்ல அவரும் அழைத்து வரப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது? என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல் புகாரி 5871

மஹர் எனும் மனக்கொடை கொடுத்துத் தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் மணம் செய்ய கோரிக்கை வைத்தவரிடம் மஹராக கொடுக்க எதுவும் இல்லை. மாறாக அவர் சில குர்ஆன் அத்தியாயங்களை மனனம் செய்து இருந்ததால் அதையே மஹராக ஆக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். மஹருக்கு சமமாக குர்ஆனை ஆக்கியுள்ளதால் குர்ஆனுக்கு கூலி வாங்கலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

குர்ஆனை மஹராக ஆக்கவில்லை; அவர் குர்ஆனை மனனம் செய்திருந்த காரணத்தால் அதற்கு மதிப்பளித்து மஹரை விட்டுக் கொடுத்தார்கள் என்று தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம் அறிவிப்பு இந்த விளக்கத்துக்கு எதிராக அமைந்துள்ளது.

صحيح مسلم

77 - (1425) وَحَدَّثَنَاهُ خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الدَّرَاوَرْدِيِّ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، كُلُّهُمْ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، بِهَذَا الْحَدِيثِ، يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِ زَائِدَةَ، قَالَ: «انْطَلِقْ فَقَدْ زَوَّجْتُكَهَا فَعَلِّمْهَا مِنَ الْقُرْآنِ»

நீ செல்! உமக்கு இந்தப் பெண்ணை நாம் மணமுடித்துத் தந்தோம். எனவே குர்ஆனை இந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுப்பாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

இவருக்குத் தெரிந்த குர் ஆன் வசனங்களை கற்றுக் கொடுப்பதைத் தான் நபிகள் மஹராக ஆக்கியுள்ளனர். கற்றுக் கொடுப்பதற்கு கூலி வாங்கலாம் என்று இந்தக் கருத்துடையோர் வாதிடுகின்றனர்.

سنن النسائي

632 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ وَيُوسُفُ بْنُ سَعِيدٍ وَاللَّفْظُ لَهُ، قَالَا: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَيْرِيزٍ أَخْبَرَهُ وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي مَحْذُورَةَ حَتَّى جَهَّزَهُ إِلَى الشَّامِ - قَالَ: يَالَ لِأَبِي مَحْذُورَةَ إِنِّي خَارِجٌ إِلَى الشَّامِ وَأَخْشَى أَنْ أُسْأَلَ عَنْ تَأْذِينِكَ، فَأَخْبَرَنِي أَنَّ أَبَا مَحْذُورَةَ قَالَ لَهُ: " خَرَجْتُ فِي نَفَرٍ فَكُنَّا بِبَعْضِ طَرِيقِ حُنَيْنٍ مَقْفَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حُنَيْنٍ، فَلَقِيَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ الطَّرِيقِ، فَأَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلَاةِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْنَا صَوْتَ الْمُؤَذِّنِ وَنَحْنُ عَنْهُ مُتَنَكِّبُونَ، فَظَلِلْنَا نَحْكِيهِ وَنَهْزَأُ بِهِ، فَسَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّوْتَ فَأَرْسَلَ إِلَيْنَا حَتَّى وَقَفْنَا بَيْنَ يَدَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمُ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ قَدِ ارْتَفَعَ؟» فَأَشَارَ الْقَوْمُ إِلَيَّ وَصَدَقُوا، فَأَرْسَلَهُمْ كُلَّهُمْ وَحَبَسَنِي فَقَالَ: «قُمْ فَأَذِّنْ بِالصَّلَاةِ» فَقُمْتُ فَأَلْقَى عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّأْذِينَ هُوَ بِنَفْسِهِ قَالَ: " قُلِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: ارْجِعْ فَامْدُدْ صَوْتَكَ، ثُمَّ قَالَ: قُلْ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ "، ثُمَّ دَعَانِي حِينَ قَضَيْتُ التَّأْذِينَ فَأَعْطَانِي صُرَّةً فِيهَا شَيْءٌ مِنْ فِضَّةٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِالتَّأْذِينِ بِمَكَّةَ فَقَالَ: «أَمَرْتُكَ بِهِ»، فَقَدِمْتُ عَلَى عَتَّابِ بْنِ أَسِيدٍ عَامِلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَأَذَّنْتُ مَعَهُ بِالصَّلَاةِ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "

எனக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளியிருந்தது.

அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)

நூல்: நஸாயீ

பாங்கு என்ற வணக்கத்துக்குக் கூலியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிதளவு வெள்ளியை வழங்கியதாக இந்த ஹதீஸ் கூறுவதாலும், பொருளாகக் கொடுக்க வேண்டிய மஹருக்கு நிகராக குர்ஆனைக் கற்பிப்பதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹராக ஆக்கியுள்ளதாக இதற்கு முந்தைய ஹதீஸில் கூறப்படுவதாலும் ஆரம்பத்தில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தெளிவாகவே குர்ஆனுக்குக் கூலி வாங்கியதாகக் கூறப்படுவதாலும் குர்ஆன் ஓதுவதற்கும், இன்ன பிற வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இனி இதற்கு மாற்றமாக வந்துள்ள ஹதீஸ்களையும் பார்த்து விட்டு இரண்டையும் இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.

مسند أحمد

15529 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامٍ يَعْنِي الدَّسْتُوَائِيَّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ  ، عَنْ أَبِي رَاشِدٍ الْحَبْرَانِيِّ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شِبْلٍ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " اقْرَءُوا الْقُرْآنَ، وَلَا تَغْلُوا فِيهِ، وَلَا تَجْفُوا عَنْهُ، وَلَا تَأْكُلُوا بِهِ، وَلَا تَسْتَكْثِرُوا بِهِ "

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! அதில் எல்லை மீறாதீர்கள். அதை அலட்சியம் செய்யாதீர்கள் அதன் மூலம் சாப்பிடாதீர்கள்! அதன் மூலம் ஆதாயம் அடையாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி)

நூல்கள் : அஹ்மத், பைஹகீ, தப்ரானீ சகீர், தப்ரானி அவ்ஸத், முஸ்னத் அபீ யஃலா

سنن أبي داود

830 - حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَفِينَا الْأَعْرَابِيُّ وَالْأَعْجَمِيُّ، فَقَالَ: «اقْرَءُوا فَكُلٌّ حَسَنٌ وَسَيَجِيءُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَامُ الْقِدْحُ يَتَعَجَّلُونَهُ وَلَا يَتَأَجَّلُونَهُ»

அரபுகளும், வேற்றுமொழியினரும் கலந்திருந்து நாங்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த போது எங்களிடம் வந்த நபிகள் நாயகம் (ஸல்) ஓதுங்கள்! அனைவர் ஓதுவதும் அழகாக உள்ளன. ஈட்டி சீர்படுத்தப்படுவது போல் குர்ஆனைச் சீர்படுத்துவோர் தோன்றுவார்கள். அவர்கள் இவ்வுலகில் அதன் கூலியை எதிர்பார்ப்பார்கள். மறுமையில் எதிர்பர்க்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

நூல்: அபூதாவூத்

سنن أبي داود

831 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، وَابْنُ لَهِيعَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ وَفَاءِ بْنِ شُرَيْحٍ الصَّدَفِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَنَحْنُ نَقْتَرِئُ، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ كِتَابُ اللَّهِ وَاحِدٌ، وَفِيكُمُ الْأَحْمَرُ وَفِيكُمُ الْأَبْيَضُ وَفِيكُمْا لْأَسْوَدُ، اقْرَءُوهُ قَبْلَ أَنْ يَقْرَأَهُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَوَّمُ السَّهْمُ يُتَعَجَّلُ أَجْرُهُ وَلَا يُتَأَجَّلُهُ»

நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், எல்லாமே! (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத் தான் உள்ளது. அம்பு வளைவின்றி நேராக ஆக்கப்படுவது போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது, உச்சரிப்புக்கள், ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காக காத்திருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத்

المستدرك على الصحيحين للحاكم

715 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ الْفَقِيهُ، بِبَغْدَادَ، قِرَاءَةً عَلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مُحَمَّدٍ، وَأَنَا أَسْمَعُ، ثنا سَهْلُ بْنُ حَمَّادٍ، وَأَبُو رَبِيعَةَ، قَالَا: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، وَحَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، ثنا عَفَّانُ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، ثنا سَعِيدُ بْنُ إِيَاسٍ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْنِي إِمَامَ قَوْمِي، قَالَ: «أَنْتَ إِمَامُهُمْ، وَاقْتَدِ بِأَضْعَفِهِمْ، وَاتَّخِذْ مُؤَذِّنًا لَا يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا» عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ "

பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை ஏற்படுத்துவீராக என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)

நூல்: ஹாகிம்

எனது வசனங்களை அற்பக் கிரயத்துக்கு விற்று விடாதீர்கள்.

திருக்குர்ஆன் 2:41

மேற்கூறிய வசனத்திலும், நபிமொழிகளிலும் குர்ஆனுக்குக் கூலி வாங்குவதும் அதற்காக உலகப் பயன்களை மக்களிடம் எதிர்பார்ப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாகக் கவனிக்கும் போது இவற்றுக்கும் இதற்கு முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களுக்குமிடையே முரண்பாடு இருப்பது போல் தோன்றினாலும் கூறப்பட்ட சந்தர்ப்பங்களையும், பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளையும் கவனித்தால் இவ்விரண்டு கருத்துக்களிடையே முரண்பாடு எதுவுமில்லை என்று உணரலாம்.

குர்ஆன் சம்பந்தமாக எவ்விதக் கூலியும் பெறக் கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எவ்விதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதன்று.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது.

ஒரு எழுத்துக்கு பத்து நன்மையை நாடி தனது மறுமைக்காக ஓதுதல் ஒரு வகை

பிறருக்கு உதவுவதற்காக குர்ஆனை ஓதுதல் மற்றொரு வகை.

முதல் வகையான ஓதுதலுக்காக மனிதர்களிடம் கூலி வாங்கக் கூடாது.

இரண்டாம் வகை ஓதுதலுக்காக கூலி வாங்கலாம் என்று புருந்து கொண்டால் முரண்பாடு இல்லாமல் இரு வகையான ஹதீஸ்களும் இணங்கிப் போகின்றன.

தேள் கடி பட்டவருக்கு ஓதிப்பார்த்தது மறுமையில் கூலியை எதிர்பார்த்து அல்ல. குர்ஆனில் நோய் நிவாரணம் உண்டு; அந்த நிவாரணம் பெற பிறருக்கு உதவும் நோக்கத்தில் தான் அல்ஹம்து அத்தியாயத்தை நபித்தோழர் ஓதியுள்ளார். இதற்கு கூலி வாங்குவதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர். இதை அந்த ஹதீஸைச் சிந்தித்தாலே விளங்க முடியும்.

குர்ஆனை தனக்காக ஓதாமல் மனைவிக்கு கற்றுக் கொடுப்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹராக ஆக்கியுள்ளனர். மற்றவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக கூலி வாங்கினால் அது குர் ஆனுக்கு கூலி வாங்கியதாக ஆகாது என்று தான் மஹர் சம்மந்தப்படட் ஹதீஸைப் பரிந்து கொள்ள வேண்டும். அந்த ஹதீஸைச் சிந்தித்தால் அதில் இந்த அம்சம் அடங்க்யுள்ளதை அறியலாம்.

மாணவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டால் அதற்காக அவர் கூலி வாங்கலாம். அது குர்ஆனை ஓதி அதன் மூலம் சாப்பிட்டதாக ஆகாது. பிறருக்குக் கற்றுக் கொடுத்து அதற்காக கூலி வாங்கியதாகவே ஆகும்.

ஒருவர் குர்ஆனை எழுதிக் கேட்கிறார். அவருக்காக குர்ஆனை நாம் எழுதிக் கொடுத்தால் அதற்காக நாம் விரும்பினால் கூலி வாங்கலாம், அது குர்ஆனுக்கு கூலி வாங்கியதாக ஆகாது. மாறாக குர்ஆன் விஷயத்தில் மற்றவருக்கு உதவியதற்காகவே கூலி வாங்குகிறார்.

மார்க்கம் அனுமதித்துள்ள வழிகளில் குர்ஆன் மூலம் மற்றவருக்கு உதவினால் அதற்குக் கூலி வாங்கலாம். ஆனால் மார்க்கம் அனுமதிக்காத வகையில் குர் ஆனைப் பயன்படுத்துவதும் கூடாது. அதற்கு கூலி வாங்குவதும் கூடாது.

இறந்தவருக்கு மறுமை நன்மையைச் சேர்த்து வைக்க குர்ஆன் ஓதி விட்டு கூலி வாங்குவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஏனென்றால் குர்ஆனை ஓதி இறந்தவருக்கு நன்மை சேர்க்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை.

நோய் நிவாரணம் நாடி குர் ஆனை ஓதினால் கூலி வாங்கலாம் என்பதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நோய் நிவாரணம் நாடி அல்ஹம்து அத்தியாயம் ஓதிப் பார்த்து அதனால் நிவாரணம் ஏற்பட்ட பின்னர் தான் கூலி வாங்கியதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

மருந்து மாத்திரை ஊசி போன்ற உலகப் பொருட்களைப் பயன்படுத்தி மருத்துவம் பார்க்கும் போது நிவாரணம் கிடைத்தால் தான் கூலி தருவேன் எனக் கூற முடியாது. ஏனெனில் இவை முதலீடு செய்து பார்க்கும் தொழிலாகும். அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்காக கூலி வாங்கலாம்.

ஆனால் ஓதிப் பார்த்தல் என்பதற்கு முதலீடோ செலவோ இல்லை. அல்லாஹ்வின் அருளால் ஓதுபவரின் நல் எண்ணத்தால் தான் நிவாரணம் கிடைக்கும். எனவே நிவாரணம் கிடைப்பதற்குப் பின்னரே கூலியைப் பெற உரிமை உண்டு.

இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும், அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும், அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில் புத்தக விற்பனை என்பனவற்றில் தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக் கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.

தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது.

பாங்கு சொன்ன பிறகு அபூமஹ்தூரா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளது வணக்கங்களுக்குக் கூலி கொடுக்கலாம் என்பதற்கு சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.

கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணி புரிந்த பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா (ரலி) அவர்களுக்கு வழங்கியது பாங்கின் கூலியாக இருக்க முடியாது.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைத்துல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.

இமாமத் போன்ற மார்க்கப்பணி செய்வோருக்கு கூலி கொடுக்கலாமா என்ற கேள்விக்கான விடையயும் அறிந்து கொள்வது பொருத்தமாக அமையும்.

لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ (273) الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (274)

273. (பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

திருக்குர் ஆன் 2:274

இவ்வசனத்தில் (2:273) மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர்.

ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க இவ்வசனத்தில் (2:273) அல்லாஹ் ஆர்வமூட்டுகிறான்.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வது குறை கூறப்படக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர், வருமானத்திற்கு வேறு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுயமரியாதையை இழப்பதோ கூடாது.

எல்லா நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்கு மார்க்கப் பணியைக் காரணம் காட்டி இஸ்லாமிய அரசும், முஸ்லிம் சமுதாயமும் உதவி செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

02.12.2009. 11:01 AM

நூலின் பெயர் : திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

ஆசிரியர் : ஏ.கே.அப்துர் ரஹ்மான் பக்கங்கள் : 248 விலை ரூபாய் : 50.00

பொருளடக்கம்

பேரண்டத்தின் சுருக்கமான வரலாறு ............................................. 11

விரிந்து செல்லும் பேரண்டம் ......................................................... 79

ஆகாயங்களைப் படைக்கும் அதிசயக் குரங்கு ......................... 101

சீராக அமைந்த வானங்கள் ......................................................... 113

பூமியின் வடிவம் உருண்டை ............................................................. 128

நாள்தோறும் நடைபெறும் இராப்பகல் மாற்றம் ............................ 142

சுழற்றும் பூமி ..................................................................................... 161

பேரண்டத்திற்குக் கடவுளின் தேவை ........................................... 171

மனிதனின் சுயரூபம் ........................................................................ 190

பேரண்டம் படைக்கப்பட்டது எதற்காக? ...................................... 211

கேள்விக் கணைகள் ....................................................................... 223

மதிப்புரை

ஒவ்வொரு நபிக்கும் இறைவன் அற்புதங்களை வழங்கினான். எனக்கு வழங்கப்பட்ட பெரிய அற்புதம் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி)

இன்றைய நவீன உலகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை இன்று மெய்ப்பித்து வருகின்றது.

காட்டுமிராண்டிகள் காலம் என்று அறியப்படும் காலத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. அந்தக் காலத்தில் வாழ்ந்த எவ்வளவு பெரிய அறிவாளி பேசுவதாக இருந்தாலும் அந்தக் காலத்து அறிவுக்கேற்பவே பேச முடியும். எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் விஞ்ஞான உண்மைகளை மெய்ப்படுத்தும் வகையிலோ, அல்லது அதற்கு முரணில்லாத வகையிலோ அன்றைய மனிதர்களால் பேச முடியாது.

திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியலுக்கும் எதிராக அமையவில்லை என்பதுடன் பல அறிவியல் செய்திகளை முன்கூட்டியே அறிவித்தும் இருக்கிறது என்பது குர்ஆனை வாசிக்கும் அனைவருக்கும் புரியும் உண்மையாகும்.

அப்படியானால் குர்ஆன் முஹம்மது என்ற மனிதரால் கற்பனை செய்யப்பட்டது அல்ல. மாறாக அவர்களைத் தூதராக அனுப்பிய அனைத்தையும் படைத்த இறைவனின் கூற்றாகத்தான் இருக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஆயினும் இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் முழு அளவிலான ஆய்வு நூல் தமிழிலும் இன்னபிற மொழிகளிலும் வரவில்லை என்பது பெரும் குறையாக இருந்தது.

இந்தக் குறையைப் போக்கும் வகையில் அறிவியலையும் குர்ஆனையும் ஒப்புநோக்கும் ஆய்வை நீண்ட காலமாகச் செய்து வரும் எனது நண்பர் ஏ.கே.அப்துர் ரஹ்மான் அவர்கள்`` திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் என்ற நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். இரண்டு பாகங்களையும் முழுமையாக நான் வாசித்ததில் ஆய்வுக் கண்ணுடன் இஸ்லாத்தை அணுகும் அனைவருக்கும் பயன் தரும் என்று நம்புகிறேன்!

அத்தகையோருக்கு இந்நூலை பரிந்துரை செய்கிறேன்.

அன்புடன்

பி. ஜைனுல் ஆபிதீன்

முன்னுரை

புகழனைத்தும் அல்லாஹ்விற்கு!

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்நூல் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கிய ஒரு எளிய வாசகனால் எழுதப்பட்ட நூலாகும்.

அறிவியலைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டதன் காரணமாக இளம் வயதிலேயே அது தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். அறிவியல் செய்திகளில் ஓரளவு தனி ஈடுபாடு எனக்குள் இருப்பதைத் தாமதியாமல் புரிந்து கொண்டேன். சில வருடங்கள் கழித்து திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்று அதையும் படிக்கத் தொடங்கினேன். அப்போது அறிவியல் நூல்களில் நான் படித்த சில செய்திகள் செய்திச் சுருக்கம் போல் திருக்குர்ஆனில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். மேலும் படிக்கப் படிக்க சில செய்திகள் புரிகின்ற விதத்திலும், சில செய்திகள் புரியாதது போன்றும் தென்பட்டன. மற்றும் சில செய்திகள் நான் அது வரை எந்த அறிவியல் நூல்களிலும் படிக்காதவைகளாகவும் இருந்தன. எனவே படிக்காத அறிவியல் செய்திகளுக்காக புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்கத் தொடங்கினேன்.

இவ்வாறு ஒரு புறம் திருக்குர்ஆனையும் மறுபுறம் அறிவியல் நூல்களையும் மாறிமாறி படிக்கத் துவங்கிய போது திருக்குர்ஆனில் கொஞ்சமும் எதிர்பார்த்திராத அறிவியல் செய்திகள் ஏராளமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூலாக இல்லாமல் வேத நூலாக இருந்தும் கூட இவ்வளவு பெருவாரியான அறிவியல் செய்திகள் அதிலும் திருக்குர்ஆன் ஏழாம் நுற்றாண்டில் இறக்கப்பட்டிருக்க, அந்நூலில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அதிநவீன அறிவியல் உண்மைகள் கூட சொல்லப்பட்டிருக்கும் அற்புதத்தைக் கண்டு பிரமித்துப் போனேன்.

திருக்குர்ஆனிலிருந்து பெருவாரியான அறிவியல் செய்திகள் வரத் தொடங்கிய போது அவற்றுள் சில செய்திகள் முரண்படுவதைப் போன்றும், வேறு சில செய்திகள் விளங்காதது போன்றும் தென்படத் தொடங்கியது. எனவே திருக்குர்ஆனுடைய வசனங்களுக்குள் ஆழமாக இறங்கிச் சென்று சிந்திக்கத் தொடங்கினேன். இதன் விளைவாக விளங்காத செய்திகள் விளங்கத் தொடங்கி முரண்பாடுகளும் விலகத் தொடங்கின. சில முரண்பாடுகளின் தீர்வு அந்தந்த வசனங்களின் ஆழங்களிலேயே இருந்தன. மற்றும் சில முரண்பாடுகளின் தீர்வு வேறு வசனங்களில் கிடைத்தன. ஆயினும் வேறு சில முரண்பாடுகள் தீர்க்கப்படாமலே காணப்பட்டன. ஏனெனில் அந்த முரண்பாடுகளின் காரணம் உள்ளபடியே அறிவியல் அனுமானங்கள் தவறாக இருந்ததாகும். நமது பணியை மேலும் தொடர்ந்த போது தவறான அறிவியல் அனுமானங்கள் திருத்தப்பட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் திருக்குர்ஆனுடைய அறிவியலே உண்மை என நிரூபித்த அற்புதத்தையும் காண முடிந்தது.

ஆய்வுக் கண்களோடு பார்த்தால் திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதை நிரூபிப்பதற்காக ஏராளமான ஆதாரங்களை அது வழங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவைகளில் இறை இயல், அரசியல், நீதி, வரலாறு, தத்துவம், இலக்கியம் மற்றும் அறிவியல் போன்ற துறைகள் குறிப்பிடத் தக்கவைகளாகும். அவைகளில் நாம் அறிவியல் சார்ந்த ஆதாரங்களையே இந்நூலில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் இல்லை என்றும், அது இறைவனால் வழங்கப்பட்ட வேத நூலே என்றும் நாம் அறிவோம். இருப்பினும் இதில் இந்த அளவிற்கு அறிவியல் செய்திகள் வழங்கப்படுவதற்கு இரண்டு காரணங்களை நம்மால் காண முடிகிறது.

முதலாவதாக இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை பற்றிக் கூறும் போதும், மானிடர்க்கு இறைவன் செய்துள்ள அனுக்கிரகங்களைப் பற்றிக் கூறும் போதும் அதில் இயல்பாகவே அறிவியல் வந்து விடுகிறது.

இரண்டாவதாக திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட கடைசி வேத நூலாக இருப்பதால் இந்த உலகம் உள்ளளவும் அது உலக மக்கள் அனைவருக்குமான இறைவனின் வழிகாட்டியாக இருந்து வருகிறது. எனவே உலகில் தோன்றிய அறிவியல் புரட்சிக்குப் பிறகும் இங்கு வாழும் அறிவியல் அபிமானிகளுக்கு இது இறைவனிடமிருந்து வந்துள்ள வேத நூலே என்பதற்கான ஆதாரங்களைத் தரும் பொருட்டும் அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் கூறப்படும் தேவை ஏற்பட்டது. இந்த இரண்டாவது காரணம் நம்மை வெகுவாகக் கவர்கிறது.

இந்த அறிவியல் யுகத்தில் அறிவியல் அபிமானிகளாக வாழும் கோடிக்கணக்கான மக்கள் எதை நம்புவதாக இருந்தாலும் அது அறிவியலுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று ஆராய்ந்து தீர்மானிக்கும் இயல்பைப் பெற்றுள்ளார்கள். அம்மக்களில் பெரும்பாலானவர்களின் ஒரு பொதுவான கருத்து வேத நூல்கள் யாவும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவைகளே; எனவே அவை யாவும் கடவுளின் பெயரால் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளே என்பதுமாகும். ஆனால் திருக்குர்ஆனைப் பொருத்தவரை அவர்களுடைய இக்கருத்து உண்மைக்குப் புறம்பானதாகும்.

திருக்குர்ஆனைத் தவிர மேலும் சில வேத நூல்கள் திருக்குர்ஆனுக்கு முன்னர் இறைவனால் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் பிற்காலத்தில் அவைகளில் ஒரு பக்கம் மகான்களின் உபதேசங்கள் குடியேறிய போது மறுபக்கம் மத மேலாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பல திருத்தங்களும் நடைபெற்றுள்ளன என்று இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர். இவ்வாறு மனிதர்களின் சொந்தக் கருத்துக்களாகக் குடியேறிய வேத வசனங்களில் அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் தோன்றுவது இயல்பே. ஆயினும் திருக்குர்ஆன் இறைவனின் கடைசி வேத நூலாக இருப்பதாலும், உலகுள்ள காலம் வரை அது இறைவனின் வழிகாட்டியாக உலக மக்களுக்குப் பயன்பட வேண்டிய காரணத்தாலும் அதன் பாதுகாப்பை இறைவன் தானே ஏற்றுக் கொண்டான். எனவே திருக்குர்ஆனில் மானிடனின் வார்த்தைகள் - அவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்த போதிலும் - ஒன்று கூட உட்புக முடியவில்லை. திருக்குர்ஆனில் உள்ள 77 ஆயிரம் வார்த்தைகளும், 3,20,000 எழுத்துக்களும் இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடாகும்.

திருக்குர்ஆனில் எடுத்த எடுப்பிலேயே முரண்பாடாகத் தோன்றும் ஓரிரு செய்திகள் (சான்றாக பேரண்டம் படைக்கப்பட்டது ஆறு நாட்களில், ஆகாயம் பூமிக்குக் கூரை,ஆகாயத்தில் நிலைநாட்டப்பட்ட தராசு போன்றவை) நுனிப்புல் மேய்வதனால் தோன்றுவதாகும். வசனங்களுக்குள் ஆழமாக இறங்கிச் சென்று பார்த்தால் எதிர்பாராத நவீன அறிவியல் உண்மைகளின் அழுத்தத்தால் மூச்சுத் திணறலே ஏற்படக் கூடும். அந்த அளவிற்கு அபாரமான அறிவியல் உண்மைகள் அவற்றுக்குள் அடங்கி இருப்பதைக் காணலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் திருக்குர்ஆனுக்கு இருந்தும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சில அறிவியல் செய்திகளைப் பற்றிய ஆய்வுகள் மட்டுமே இத்துறையில் நடைபெற்றுள்ளதாகவே காண முடிகிறது.

ஆனால் உலகுள்ளளவும் உலக மக்கள் அனைவருக்குமாக இறைவன் இறக்கி வைத்த ஒரே வேதமாகிய இத்திருமறைக்குரிய அறிவியல் ஆதாரங்களின் மீது விரிவான ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உலக மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் திருக்குர்ஆனின் நம்பிக்கையாளர்களாக இருக்கும் தகுதி வாய்ந்த அறிவியலாளர்களின் கவனத்திற்கு அதில் கூறப்பட்டுள்ள புரட்சிகரமான நவீன அறிவியல் உண்மைகளைப் பற்றிய செய்திகள் சென்றடையவில்லை. இந்நூல் அவர்களின் கவனத்தைக் கவர்ந்து திருக்குர்ஆனிலுள்ள அறிவியல் ஆதாரங்களைச் சிறந்த முறையில் அவர்களிடமிருந்து வெளிவரச் செய்வதற்கான ஒரு முயற்சியாகும். இம்முயற்சி நிறைவேற இறைவன் துணை புரிவானாக!

அல்ஜன்னத் பத்திரிக்கையில் 1992-ல் இருந்து தொடர்ச்சியாக சில வருடங்கள் திருக்குர்ஆனுடைய அறிவியல் ஆதாரங்களைக் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருந்த போது வாசகர்கள் அளித்த அமோகமான வரவேற்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அக்கட்டுரைகள் கல்விக் கூடங்களையும் எட்டி சில கல்லூரிகளிலிருந்து திருக்குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதற்கான வாய்ப்பைக் கூட பெற்றுத் தந்துள்ளன. நான் எழுதிய கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிடும்படி நண்பர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இருப்பினும் திருக்குர்ஆனுடைய அறிவியல் ஆதாரங்களின் மீது வெளியிடப்படும் ஆய்வுப் புத்தகம் உள்ளபடியே தகுதி வாய்ந்த அறிவியலாளர்களிடமிருந்து வெளி வருவதே சிறப்பாக இருக்கும் எனக் கருதி நண்பர்களின் வற்புறுத்தல்களைத் தட்டிக் கழித்து வந்தேன்.

ஆனால் நான் எழுதிய கட்டுரைகள் வருடக் கணக்காக வெளியிடப்பட்ட மாதாந்திரப் பத்திரிகைகளில் சிதறிக் கிடப்பதால் அவை உரியவர்களின் கவனத்தைச் சென்றடையாத நிலையே ஏற்பட்டுள்ளது. இக்குறையை நீக்குவதற்காகவே நான் முதலில் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றோடு திருக்குர்ஆனிலிருந்து இது வரை வெளிப்படுத்தப்படாத மற்றும் பல அறிவியல் ஆதாரங்களையும் இணைத்து இந்த முதல் தொகுதியை உருவாக்கி உள்ளேன்.

இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் ஒரு எளிய அறிவியல் நூல் வாசகனால் திருக்குர்ஆனிலிருந்து இந்த அளவிற்கு அறிவியல் ஆதாரங்களைப் பெற முடிந்தால் உள்ளபடியே ஒரு அறிவியலாளர் இப்பணியைச் செய்திருந்தால் திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்டதே என்பதற்கு எந்த அளவிற்கு மேலும் சிறப்பான ஆதாரங்களைப் பெற முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் இது வரை திருக்குர்ஆனுடைய தோற்றுவாய் (ஆசிரியர்) யார் என்று அறியாத வாசகர்கள் இந்நூலில் காணும் அறிவியல் ஆதாரங்களைப் பார்வையிட்டு திருக்குர்ஆன் இறைவனிடமிருந்தன்றி வேறு யாரிடமிருந்தாவது வந்திருப்பதற்கு எள்ளளவாவது அல்லது எள்ளின் முனை அளவாவது வாய்ப்பிருக்கிறதா என்பதை விருப்பு வெறுப்பின்றி சிந்தித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என சகோதரப் பாசத்தோடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களது ஆய்வில் திருக்குர்ஆனின் தோற்றுவாய் இறைவனே என்பதை உங்கள் பகுத்தறிவு ஒப்புக் கொண்டால் திருக்குர்ஆனை உங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த போது, சந்திக்கும் போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தி பற்பல கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்பையும் உருவாக்கித் தந்த எஸ். கமாலுதீன் மதனீ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையில் எழுதுவதற்கு வாய்ப்பை உருவாக்கித் தந்து, திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்புக்களில் எனக்கேற்படும் ஐயங்களைத் தீர்த்து வைத்து எனது கட்டுரைகள் சிறப்பாக அமைய துணை புரிந்ததோடு மக்கள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தி பற்பல கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்புக்களையும் உருவாக்கி என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்திய அப்போதைய அல்ஜன்னத் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பி. ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மேலும் இப்புத்தகத்தை எழுதும் பணியிலும் பயனுள்ள பற்பல அரிய ஆலோசனைகளை வழங்கி புத்தகம் சிறப்பாக அமைய உதவியதற்காகவும் எனது மனமார்ந்த நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலை எழுதும் போது திருக்குர்ஆனுடைய மொழி பெயர்ப்புகளில் ஏற்பட்ட ஐயங்களை நிவர்த்தி செய்து தந்த மௌலவி யூசுஃப் பெரும்பாவூர் அவர்களுக்கும், அறிவியல் நூல்களைத் தந்து உதவிய அன்புச் சகோதரர்கள் பேராசிரியர் டி.சி. அப்துல் மஜீத் மற்றும் முஹம்மது நஜீப், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி மற்றும் ஹ.ஐ. அப்துல் மஜீத், பட்டிக்கரை ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னை அவ்வப்போது ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த பெயர் குறிப்பிடப்படாத சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த நூலை வல்ல இறைவனின் துணையோடு உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்

ஏ.கே. அப்துர் ரஹ்மான்

அத்தியாயம் 1

பேரண்டப் படைப்பின் சுருக்கமான வரலாறு

கல் தோன்றி முள் தோன்றி பற்பல பாலூட்டிகளும் தோன்றிய பின் மானிடனும் தோன்றி விண்ணை நோக்கி வியக்கத் துவங்கினான். அப்போது அவனுக்கு விண்ணகம் என்பது ஒரு சூரியனும், ஒரு சந்திரனும், துளித்துளியாய் ஒளிரும் ஏராளமான விண்மீன்களுமேயாகும். எல்லையற்ற பேருருவாய் விரிந்திருக்கும் பேரண்டம் பற்றி வேறொன்றும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் மனிதர்களில் பலர் விண்ணகப் பொருட்களைத் தெய்வங்களாகக் கருதி அவைகளுக்கு ஆலயங்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

பேரண்டம் வடிவமைத்த வல்லோன் வையகத்தை வழிநடத்த அவ்வப்போது அனுப்பி வைத்த வழிகாட்டிகளாம் தூதர்கள் அவ்விண்ணகப் பொருட்கள் தெய்வங்களன்று; அவையனைத்தும் மனிதர்களின் பயன்பாட்டிற்காக இறைவனால் படைக்கப்பட்ட படைப்பினங்கள்; ஆகவே ஏகனாகிய அவர்களின் இறைவனை மட்டுமே அவர்கள் வழிபட வேண்டும் எனப் போதித்து வந்தனர்.

அதே நேரத்தில் மக்களில் மற்றொரு சாரார் விண்ணில் காணப்படுபவையெல்லாம் விண்ணில் எவ்வாறு நிலைநிற்க முடிகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கினர். வெறும் கண்களால் பார்த்து அவர்களின் அறிவிற்கேற்றவாறு அவர்கள் விளங்கிக் கொண்டதை தலைமுறை தலைமுறையாக கைமாற்றி வந்தனர். இதன் விளைவாக படிப்படியாய் விண்ணில் மேலும் சில கோள்களும் துணைக்கோள்களும் இருப்பதை அவர்கள் விளங்கினர். இதைத் தெரிந்து கொண்ட போது இவை யாவும் விண்ணில் எவ்வாறு தோன்றின என்று அறிய ஆசை பிறந்தது. ஆயினும் அப்போது விண்ணகத்தைப் பற்றிய மிகக் குறைந்த தகவல்களே அவர்களிடம் இருந்ததால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தக் காரணத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாறா நிலைப் பேரண்டம்?

பேரண்டத்தைப் பற்றி மிகக் குறைந்த தகவல்களே அவர்களிடம் இருந்ததாலும் அவைகளிலும் பல தவறான அனுமானங்களாக இருந்ததாலும் பேரண்டம் என்றும் நிலையானது; மாற்றமில்லாதது; ஆதியோ அந்தமோ இல்லாதது; அது என்றென்றும் நிலைத்திருப்பது என்ற கருத்துக்கு வந்தனர். இக்கருத்தின் அடிப்படையில் பேரண்டம் என்பது தாமாக இருந்து கொண்டிருப்பது, மேலும் அதற்கு ஒரு படைப்பாளன் தேவை இல்லை என்ற முடிவை அவர்களில் சிலர் ஏற்றுக் கொண்டனர். இது ஏறத்தாழ 1948 ல் உருவாக்கப்பட்ட ``மாறா நிலைக் கோட்பாடு (steady state theory) என்பதைக் கிட்டத்தட்ட ஒத்திருக்கும் ஒரு கோட்பாடாகும்.

பற்பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பண்டைய உலகின் தலைசிறந்த விஞ்ஞானியும் தத்துவ மேதையுமான அரிடாட்டில் (aristotle 384 BC - 322 BC) இக்கருத்தை ஏற்றுக் கொண்டவராவார். ``பேரண்டம் ஆரம்பம் எதுவுமின்றி கடந்த காலத்திலும் இருந்துள்ளது. இனி எப்போதும் அது எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் என அரிஸ்டாட்டில் போதனை செய்து வந்தார். இது இறைத் தூதர்களால் போதிக்கப்பட்டு வந்த இறைவனின் வேத நூல்களுக்கு மாற்றமான கருத்தாகும். எனவே தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அரிஸ்டாட்டிலின் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பேரண்டம் இறைவனால் படைக்கப்பட்டது. ஆகவே அதற்கோர் ஆரம்பம் இருக்க வேண்டும் என நம்பினர்.

அறிவியல் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானியாகப் போற்றப்படும் ஐசக் நியூட்டன் (isaac newton 1672- 1727) பேரண்டத்தைப் புரிந்து கொள்வதற்குரிய மிகவும் பயனுள்ள பற்பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ஆனால் அவரால் பேரண்டம் தாமாகத் தோன்றியது என்பதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அவர் தமது புகழ் வாய்ந்த``பிரின்ஸிப்பியா (mathematical principles of natural philosophy - சுருக்கமாக `pircipia) எனும் நூலில் பேரண்டத்தை உருவாக்கிய பெருமையை கடவுளுக்கு வழங்கினார்.

பொதுவாக விண்ணகப் பொருட்களின் இயக்கம் குறித்து பற்பல விதிகளை அவரால் கண்டுபிடிக்க இயன்ற போதிலும் அது எப்போது எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி எதுவும் அவரால் கூற இயலவில்லை. இருப்பினும் இது குறித்து சரியான கருத்தொன்று ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியலாளர்களால் உருவாக்க முடிந்தது.

பெரு வெடிப்புக் கோட்பாடு

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கானன் லிமாயிட்டர் (conon limaitre) எனும் அறிவியலாளர் பேரண்டத்தின் தோற்றம் பற்றி இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் கருத்து ஒன்றை உருவாக்கினார். பேரண்டத்தைப் பற்றி அதுவரை அவருக்குக் கிடைத்த எல்லாத் தகவல்களையும் ஒன்றிணைத்து விரிவாகவும், ஆழமாகவும் பரிசீலனை செய்து இறுதியாக ஒரு கருத்துக்கு வந்தார். லிமாயிட்டர் இந்தக் கருத்தைக் கூறும் போது ஓர் அதிரடி வேட்டு நடந்த இடத்திற்கு ஒருவர் சென்றால் எப்படிப்பட்ட சுற்றுச் சூழலை அவரால் அங்கு உணர முடியுமோ அப்படிப்பட்ட ஓர் உணர்வை உணர முடிவதாக சில அறிவியல் எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வேட்டு வெடித்ததிலிருந்து தோன்றி கலைந்து கொண்டிருக்கும் புகை மூட்டமும் சற்று மிகுதியான வெப்பமும் உணர முடிவதைப் போன்று இப்போதும் பேரண்டம் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு காலகட்டம் (an epoch) இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு ``ஒரு முழு முதல் அணு (a primeval super atom) இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக் கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் (fraction of second) அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின் போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரமாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.

அந்த அணு எப்படித் தோன்றியது? அது ஏன் வெடித்தது? போன்ற கேள்விகளுக்கு இது வரை அறிவியலாளர்களால் விடை கூற இயலவில்லை. தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருவெடிப்புக்குப் பிறகு பொருட்கள் தோன்றிய விதத்தை விபரமாகக் கூறுகின்றன. அந்த விபரங்கள் வருமாறு :

விண்ணகப் பொருட்களின் தோற்றம்

பெரு வெடிப்பு நிகழ்ந்த வினாடியின் பல்லாயிரத்தில் ஒரு கண நேரத்தில் வெளியிடப்பட்ட வெப்பத்தின் அளவு எல்லையற்றது (infinite) என்கிறார் தற்கால விஞ்ஞானியர்களில் தலைசிறந்தவரான ஸ்டீஃபன் w. ஹாக்கிங் (stephon w. hawking) அவர்கள். ஒரு வினாடிக்குப் பிறகு இந்த வெப்பம் ஆயிரம் கோடி டிகிரியாகக் குறைந்திருக்கும் என்கிறார் அவர். அந்த நேரத்தில் பேரண்டத்தில் பெரும்பாலும் ஒளித் துகள்களும் (photons) மின் அணுக்களும் (electrons) நியூட்ரினோக்களும் (neutrinoes) அவைகளின் எதிர் துகள்களும் (antipartivles) மட்டுமே இருந்திருக்கக் கூடும் என்கிறார் ஹாக்கிங்.

பெருவெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் (deutrium) எனும் கன ஹைட்ரஜன் வாயுவின் மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் எனவும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவைகளிலிருந்து``லிதியம் மற்றும் ``பெரில்லியம் போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும் எனவும் ஹாக்கிங் கூறுகிறார். *

மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்தப் பொருட்களுமே இல்லாத ஆனால் பேரண்டம் மொத்தமும் பற்பல தனிமங்களின் மையக் கருக்களும் அடிப்படைத் துகள் (fundamental particles) களாலும் உருவாக்கப்பட்ட புகைமூட்டம் போன்று காணப்பட்டதாகத் தெரிகிறது. மணல் துளிகள் கூட இல்லாத இந்த வெறும் புகை மூட்டத்திலிருந்து மாபெரும் காலக்சிகளும், நட்சத்திரங்களும், ஏனைய விண்ணகப் பொருட்களும் எவ்வாறு உருவாயின என்பதைப் பற்றி கீழ்க்காணும் விபரங்களைத் தெரிவிக்கிறார் ஹாக்கிங்.

* (பார்க்க : பக்கம் 124 / எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் a brief history of time). இதற்கு மேல் ஹாக்கிங் அவர்களின் மேற்கோள்கள் அனைத்தும் இப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இப்புத்தகத்தில் நாம் விவாதிக்கும் அறிவியல் தொடர்பான தகவல்கள் பெரும்பாலானவைகளுக்கு ஹாக்கிங் அவர்களையே மேற்கோள் காட்டியுள்ளோம். ஏனெனில் இப்புத்தகத்தில் நாம் விவாதிக்கும் அறிவியல் விஷயங்களில் இன்றைய உலகின் தலைசிறந்த அறிவியலாளராகவும் ஏனைய விஞ்ஞானிகள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவராகவும் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று அறிவியல் மேதை நியூட்டன் அலங்கரித்த கேம்பிரிட்ஜின் லுக்கேஷியன் பேராசிரியராக (lucasian professor of mathematics) தற்போது பதவியில் அமர்ந்திருப்பவர் ஹாக்கிங் அவர்கள் என்பதே காரணமாகும்.)

காலக்சி (Galaxy) களின் தோற்றம்

சிலமணி நேரத்திற்குள் ஹீலியம் மற்றும் இதர தனிமங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும். அதன் பிறகு 10 லட்சக்கணக்கான (million years or so) வருடங்கள் குறிப்பிடும்படியான வேறு நிகழ்ச்சிகள் எதுவுமின்றி பேரண்டம் விரிவடைந்து கொண்டிருக்கும். படிப்படியாக வெப்பம் தணிந்து சில ஆயிரம் டிகிரிக்கும் குறைந்த போது அவைகளால் மின்காந்தக் கவர்ச்சியை வெல்ல முடியாமல் போகவே அவை அணுக்களாக இணையத் துவங்கின. பேரண்டம் மொத்தமும் விரிந்து குளிரவே அடர்த்தி மிகுதியாக இருந்த சில பகுதிகளில் ஈர்ப்பு விசையின் காரணமாக பேரண்டத்தின் விரிவாக்கத்தில் வேகக் குறைவு ஏற்பட்டிருக்கும். (பார்க்க : பக்கம் 125)

மேற்கண்ட தகவல்களிலிருந்து பல 10 லட்சக் கணக்கான வருடங்கள் பேரண்டத்தில் அணுக்கள் கூட உருவாக முடியாமல் அணுக்களின் மையக் கருக்களும் அடிப்படைத் துகள்களும் (போட்டான்கள், எலக்ட்ரான்கள், நியூரினோக்கள் போன்றவை) நிறைந்த புகைமூட்டம் போன்று காணப்பட்டது எனத் தெரிகிறது. அடிப்படைத் துகள்கள் அணுக்களாய் இணைய வேண்டுமாயின் அவைகளுக்கிடையே மின்காந்த விசை செயல்பட வேண்டும். (இது குறித்து இப்புத்தகத்தில் வேறு பகுதியில் கூறப்படுகிறது) ஆனால் மின்காந்த விசை அவ்வளவு உயர்ந்த வெப்ப நிலையில் செயல்பட இயலாது. எனவே வெப்பம் குறைவதற்கு 10 லட்சக் கணக்கான வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இந்நிலையில் வாயுக்களின் அடர்த்தி சில இடங்களில் மிகுதியாகக் காணப்படவே அப்பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் அதன் பயனாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இருந்தும் அப்பகுதிகளில்``காலக்சிகள் உருவாயின.

நட்சத்திரங்கள் மற்றும் இதர தனிமங்களின் தோற்றம்

காலப்போக்கில் காலக்சியில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் ஈர்ப்பு விசையால் சுருக்கமடைந்து வேறிட்டன. பிறகு இம்மேகத்திரள்களில் அணுக் கருக்கள் ஒன்றோடு ஒன்று மோதி அணுக்கரு இணைவிற்கு போதுமான வெப்பத்தை உற்பத்தி செய்தன. பிறகு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியமாக இணைந்து அதனால் உற்பத்தியான மிகுதியான வெப்பம் வெப்ப அழுத்தத்தை அதிகரித்து ஈர்ப்பு விசையை சமன் (balance) செய்தது. இதன் விளைவாக அம்மேகத்திரள்கள் மேலும் மேலும் சுருங்கி விடாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறு அம்மேகத் திரள்கள் நமது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களாக மாறின.

இவ்வாறு உருவாகும் நட்சத்திரங்கள் அணுக்கரு இணைவின் (nuclear fusion) மூலம் ஹைட்ரஜனை எரித்து ஹீலியமாக மாற்றி அதனால் உற்பத்தியாகும் ஆற்றலை ஒளியாகவும், வெப்பமாகவும் கதிர் வீச்சாகவும் (Radiation) வெளியேற்றுகிறது.

பேரண்டத்தில் நமது சூரியனை விட ஆயிரக்கணக்கான மடங்கு பெரிய நட்சத்திரங்களும் உள்ளன. பொருண்மை மிகுதியாக உள்ள நட்சத்திரங்கள் அவைகளின் மிகுதியான ஈர்ப்பு விசையைச் சமன் செய்வதற்கு மிகுதியான ஹைட்ரஜனை எரித்து வெப்ப அழுத்தத்தை மிகுதியாக்க வேண்டும். எனவே அவைகளில் உள்ள ஹைட்ரஜன் நூறு தச லட்சம் வருடங்களில் தீர்ந்து போகவே ஈர்ப்பு விசை மிகைத்து அவை சுருங்கத் தொடங்கும். இந்த நிலையில் ஹீலியம் வாயு கனமான கார்பன், ஆக்ஸிஜன் போன்ற தனிமங்களாக மாற்றமடைகின்றன.

நியுட்ரான் நட்சத்திரம், கருங்குழி, சூப்பர் நோவாக்கள்

சுருங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பொருண்மை மிகுந்த நட்சத்திர மையத்தில் அடர்த்தி கூடிக் கொண்டே வந்து அவை நியூட்ரான் (nutron stars) நட்சத்திரங்களாக மற்றும் கருங்குழி (black holes)களாக மாற்றமடைகின்றன. இந்த நட்சத்திரங்களின் வெளிப் பகுதி பிரமாண்டமான ஒளியுடன் வெடித்து சூப்பர் நோவாக்களாக (super novae) சிதைவடைகின்றன. சிதைவடைவதற்கு சற்று முன் அவற்றுள் மேலும் கனமான தனிமங்கள் தோன்றுகின்றன. இந்த நட்சத்திரங்கள் சிதைவுற்ற பின் (சூப்பர் நோவாவாக ஆன பின்) அவற்றின் சிதைவிலிருந்து உருவாகும் அடுத்த தலமுறை நட்சத்திரங்களில் இந்தக் கனமான தனிமங்கள் நேரடியாகச் சென்று விடுகின்றன. நமது சூரியனில் இப்படிப்பட்ட தனிமங்கள் இரண்டு சதவீதம் இருக்கின்றன. ஏனெனில் நமது சூரியன் இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறை நட்சத்திரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நமது சூரியன் 500 கோடி வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சூப்பர் நோவாவிலிருந்து உருவான நட்சத்திரமாகும்.

(மேற்கண்ட தகவல்கள் யாவும் ஹாக்கிங் எழுதியவையாகும். பார்க்க : பக்கம் - 125, 126)

சென்ற நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஹார்லோ ஷேப்லி (harlow shapley) கடந்த காலத்தில் 500 லிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் தெளிவாகக் குறிப்பிடக்கூடிய ஒரு ``படைப்புக் கணம் (s specifiable creative moment) நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

(page 43 of stars and men/bacom/may 1958. இதற்கு மேல் ஷேப்லியை மேற்கோள் காட்டும் அனைத்து குறிப்புகளும் இப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.)

பேரண்டம் நிரந்தரமானது. அதற்கு ஆரம்பமோ, முடிவோ இல்லை என நம்பி வந்த அறிவியல் உலகிற்கு பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது எனும் அறிவியல் கண்டுபிடிப்பு பெரும் வியப்பிற்குரியதாகும். ஹாக்கிங் அவர்களைப் பொருத்த வரை இந்த துவக்கம் 1000 - 2000 கோடி வருடங்களுக்கு இடைப்பட்டதாகும். (பார்க்க : பக்கம் - 9)

பெரு வெடிப்பின் வினோதப் போக்கு

ஷேப்லியின் கூற்றுப்படிப் பார்த்தால் பேரண்டப் படைப்பின் போது மிகவும் குழப்பமான கட்டங்கள் உருவாகி இருந்ததாகவும் அப்போது சிக்கலான விண்ணகப் பொருட்களாம் நெபுலாக்கள் (நட்சத்திரங்கள் தோன்றும் புகைமூட்டம் போன்ற மேகக் கூட்டங்கள்) நட்சத்திரக் கூட்டங்கள் (ளுவயச ஊடயளவநசள) காலக்சிகள் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டன எனவும் தெரிய வருகிறது. அதன் பிறகு விண்ணில் நடைபெற்ற விண்ணகப் பொருட்களின் தொடர்ச்சியான மோதல்களும், வெடிப்பு நிகழ்ச்சிகளும் குழப்பமான நிலையை நீடிக்கச் செய்தது. வெடித்துச் சிதறிய நட்சத்திரங்கள் மற்றும் இதர விண்ணகப் பொருட்கள் தூசுப்படலங்களாகவும், வாயுப்பொருட்களாகவும் மாறி அடுத்த தலைமுறை நட்சத்திரங்களை உருவாக்கின எனவும் தெரிய வருகிறது.

லிமாயிட்டரின் இப்பெருவெடிப்புக் கோட்பாடு பற்பல அறிவியல் தரிசனங்களுக்கு (டீளெநசஎயவடிளே) மிக உறுதியாக ஒத்து அமைந்த-முரண்பாடற்ற-அறிவியல் கருத்தாகும் எனக் கூறுகிறார் அறிவியலாளர் ஷேப்லி (பார்க்க : பக்கம் - 143)

இது மட்டுமன்றி ஐன்ஸ்டீனுடைய சார்பியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹாக்கிங் மற்றும் அவரது கூட்டாளி அறிவியலாளர் ``பென்ரோ (ஞநசேடிளந) அவர்களாலும் ``பெரு வெடிப்புக் கோட்பாடு மெய்யான அறிவியல் கோட்பாடு என 1970ல் நிரூபிக்க முடிந்தது. அதே நேரத்தில் மார்க்ஸினுடைய சித்தாந்தத்தின் நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் பணிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அத்துடன் பெருவெடிப்புக் கோட்பாடின் ``வினோதத் தன்மை* (ளுபேரடயவசைல) ஐன்ஸ்டீனுடைய கோட்பாட்டின் அழகை அழிப்பதாக எண்ணம் கொண்டவர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. (பார்க்க : பக்கம் - 54)

மாறாநிலைக் கோட்பாட்டின் தோற்றம்

பெருவெடிப்புக் கோட்பாடு என்பதே ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்பதை நாம் அறிவோம். அக்கோட்பாடு `காலத்திற்கு ஒரு தொடக்கம் எனக் குறிப்பிட்டது பலரையும் தொல்லைக்கு உள்ளாக்கியது. காலத்திற்கு ஒரு தொடக்கம் எனும் கருத்தும் கூட கடவுளின் அபாரமான படைப்பாற்றலுக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குவதை உணர்ந்து கொள்ளாமல் அக்கருத்து படைப்புப் பணியில் இறைவனின் தலையீட்டை மறுக்கக் கூடுமோ என பலரையும் ஐயம் கொள்ள வைத்ததே அவர்களைத் தொல்லைப்படுத்தியதற்குக் காரணமாகும்.

**``வினோதத் தன்மை (ளுபேரடயவசைல) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப்படும் அல்லது பயன்படாத நிலையே ``சிங்குலாரிட்டி (வினோதத்தன்மை) ஆகும். பெருவெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்தக் கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெருவெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெருவெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே பெருவெடிப்பு வினோதம் (க்ஷபை க்ஷயபே ளுபேரடயசவைல) ஆகும். (பார்க்க : பக்கம் - 9)

காலத்தின் தொடக்கம் என்பது பெருவெடிப்பாகும். வேறு வார்த்தையில் கூறினால் பெருவெடிப்பு நிகழ்ந்த மைக்ரோ கணத்தில் தாம் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெருவெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பதாகும். காலம் இல்லையேல் நிகழ்ச்சிகளும் இல்லை. எனவே பேரண்டத்தைப் படைத்தது இறைவனாக இருந்திருந்தால் படைப்புப் பணிகள் யாவும் பெருவெடிப்புக்குப் பிறகே இறைவன் நிகழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் பெரு வெடிப்புக்குப் பிறகு நடைபெற்ற யாவும் கடவுளின் தலையீடு இன்றி விதிகளின்படி செயல்பட்டதாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

இதுவே காலத்திற்கு ஒரு தொடக்கம் உண்டு எனும் கருத்து படைப்புப் பணியில் கடவுளின் தலையீட்டைத் தவிர்த்து விடுமோ என்று சிலர் ஐயப்படுவதற்குரிய காரணமாகும். ஆனால் பெருவெடிப்புக்குப் பிறகு இறைவனின் தலையீடு படைப்புப் பணியில் இருக்கவில்லை என்பதும் பெருவெடிப்புக்குப் முன்பு நிகழ்ச்சிகள் எதுவுமே நடைபெறவில்லை என்பதும் திருக்குர்ஆன் கூறும் இறைமைக் கோட்பாட்டையும் அந்த இறைவனின் படைப்புத் திறனையும் மிகமிக வலுவாக நிரூபித்துக் கொண்டிருக்கும் மாபெரும் அறிவியல் ஆதாரமாகும் என்பதை நாம் இந்நூலில் மற்றொரு இடத்தில் விரிவாக விளக்கியுள்ளோம்.

பெருவெடிப்புக் கோட்பாடு நிரூபிக்கப்பட்ட அறிவியலைப் போன்று பரவலாக அனைத்து அறிவியலாளர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருவதைக் கண்ட கத்தோலிக்க சபையினர் இம்முறை சுதாரித்துக் கொண்டனர். கோபர் நிக்கஸின் பிரச்சனையில் நடைபெற்றதைப் போல இந்த முறையும் நடைபெறாதவாறு பார்த்துக் கொண்டனர். எனவே பெருவெடிப்புக் கோட்பாடு பைபிளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளதாக அறிவித்தனர். உடனே நாத்திகச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பெருவெடிப்புக் கோட்பாட்டை மறுப்பதற்கு வகை தேடினர். ஹாக்கிங் கூறுகிறார் :

``மறு பக்கத்தில் கத்தோலிக்கச் சபையினர் 1951ல் பெருவெடிப்பு மாதிரி (க்ஷபை யெபே அடினயட) பைபிளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளதாகக் கூறி அதைப் பற்றிக் கொண்டனர். ஆகவே பெருவெடிப்பு நடைபெற்றது என்ற முடிவைத் தவிர்த்து விடவேண்டும் என்பதற்காகப் பற்பல முயற்சிகள் செய்யப்பட்டன. அவற்றுள் மாறாநிலைக் கோட்பாடு (ளுவநயனல ளவயவந வாநடிசல) மிகப் பரவலாக ஆதரவு பெற்ற கோட்பாடாக 1948ல் பெருவெடிப்புக் கோட்பாட்டின் எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. ஹெர்மன் போன்டி, தாம கோல்டு, ஃப்ரட் ஹோயல் ஆகிய மூவர் இதை உருவாக்கியவர்கள் ஆவார்கள். (பார்க்க : பக்கம் 50)

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு எவ்வளவு எதிர்ப்புகள் தோன்றிய போதிலும் முடிவில் ஹாக்கிங், மற்றொரு புகழ்பெற்ற அறிவியலாளராம் பென்ரோசுடன் இணைந்து பெருவெடிப்புக் கோட்பாடு உண்மையே என்று நிரூபித்ததோடு பெருவெடிப்பு நடைபெற்றதில் கடவுளின் தேவையையும் சில இடங்களில் வலியுறுத்தியுள்ளார். (இதைப் பற்றிய செய்தியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது) மேலும் பெருவெடிப்புக் கோட்பாட்டை எதிர்ப்பதற்காக முன் வைக்கப்பட்ட மாறாநிலைக் கோட்பாடும் முடிவில் அறிவியல் உலகிலிருந்து துடைத்தெறியப்பட்டது.

மாறாநிலைக் கோட்பாடு குறிப்பிடும்படியான எந்த திருத்தல்களோ, புதுமைகளோ இன்றி பழைய நாத்திகக் கோட்பாடாகிய பேரண்டம் ஆதி அந்தம் இல்லாத நிரந்தரமான அமைப்பு எனும் கொள்கையை தீவிரமாகவும், ஆர்வத்துடனும் திரும்பவும் உயிர்ப்பித்துக் கொண்டதே அன்றி வேறில்லை. கடவுட்கோட்பாட்டை அறிவியல் துணையுடன் எப்படியாவது எதிர்க்க வேண்டும் எனும் முயற்சியே இதுவாகும். ஆயினும் வீரமிக்க, நேர்மையான அறிவியலாளர்கள் பலரும் ஹாக்கிங் அவர்களைப் போன்றே பெருவெடிப்புக் கோட்பாடு கடவுளின் தேவையை ஏற்றுக் கொள்வதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.

அறிவியலாளர் ஷேப்லியைப் போன்றவர்கள் பெரு வெடிப்புக் கருதுகோளில் (ழலயீடிவாநளளை) கடவுள் நம்பிக்கையின் சுவை இருப்பதாகக் கூறுகிறார்கள். (பார்க்க : பக்கம் 43)

மாறா நிலைக் கோட்பாட்டின் வீழ்ச்சி

பேரண்டம் விரிவடைவதால் ஏற்படும் விண்ணகப் பொருட்களுக்கு இடையிலான இடைவெளிகளை புதிய காலக்சிகள் உருவாகி நிரப்பி விடுவதால் பேரண்டம் ஒரே நிலையாக (ளவளவஉ) எப்போதும் இருந்து கொண்டிருக்கும் என மாறா நிலைக் கோட்பாடு கூறியது. ஆனால் இக்கோட்பாடு ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தின்படி நேரடியாக ஏற்றுக் கொள்ள இயலாததால் சார்பியல் கோட்பாட்டில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியது. மேலும் புதிய காலக்சிகளை உருவாக்குவதற்குத் தேவை யான அளவு புதிய பொருட்கள் விண்ணில் தோன்று கின்றனவா என ஆய்வு செய்து பார்த்த போது புதிய காலக்சிகளை உருவாக்குவதற்குத் தேவையான அளவை விட மிகக் குறைந்த அளவு புதிய பொருட்களே (ஒரு கன கிலோ மீட்டருக்கு ஒரே ஒரு அடிப்படைத் துகள் மட்டுமே ஒரு வருடத்தில் உருவாகிறது) உருவாகுவதாகக் கண்டனர்.

இவை அனைத்திற்கும் மேலாக அறிவியலாளர்கள் பென்சியா மற்றும் வில்சன் (ஞநணேயைள யனே றுடைளடி) ஆகியவர்கள் 1965ல் செய்த விண்ணில் பரவியுள்ள நுண் அலை கதிர்வீச்சின் (ஆஉசடிறயஎந சயனயைவடி) கண்டுபிடிப்பு மாறாநிலைக் கோட்பாட்டிற்கு முரண்பட்டதால் இக்கோட்பாடு இறுதியாக அறிவியல் உலகிலிருந்து அகற்றப்பட்டு விட்டது. (பார்க்க : பக்கம் 51) அதன் பிறகு 1970ல் தனது கூட்டாளி `பென்ரோ அவர்களுடன் இணைந்து ஹாக்கிங் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் பெருவெடிப்புக் கோட்பாட்டை நிரூபித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை நாம் கண்ட அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புகளிலிருந்து பேரண்டத் தோற்றத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும் நம்பகமான செய்திகளால் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியல் கோட்பாடு பெருவெடிப்புக் கோட்பாடே என்பது தெளிவு. எனவே தூய திருமறைக் குர்ஆன் இது குறித்து என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். முதலாவதாக பெரு வெடிப்புக்கு முன் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஷேப்லி கூறும் மாபெரும் ஆதி அணுவைப் பற்றிப் பார்ப்போம்.

மாபெரும் ஆதி அணு?

கானன் லிமாயித்தரின் கணிப்புக்கு இசைய அறிவியலாளர் ஹார்லோ ஷேப்லி ஒரு மாபெரும் ஆதி அணுவைப் (ய ஞசஅநஎயட ளரயீநச யவடிஅ) பற்றிக் குறிப்பிட்டதை நாம் முன்னர் கண்டோம். இந்த அணு வெடித்துச் சிதறியதால் உருவான தூசுப் படலத்திலிருந்து நமது பேரண்டம் தோன்றி இருப்பதாக ஷேப்லி குறிப்பிடுகிறார். ஆனால் திருக்குர்ஆனை ஆதியோடந்தமாய் படித்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ஓர் அணு பேரண்டம் படைப்பதற்கு முன் இருந்ததாக எங்கும் காண முடியாது. எடுத்த எடுப்பிலேயே ஏன் இப்படி ஒரு சோதனை? மாபெரும் ஆதி அணுவாகக் குறிப்பிடப்படுவது யாது?

இந்த அணு நமது வியாழன் (துரயீவைநச) கோளின் அளவுற்கு இருந்திருக்கக் கூடும் என சில அறிவிலாளர்களால் அனுமானிக்கப்பட்டது. பேரண்டத்தில் இது வரை உள்ளதாக அறியப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களின் அடிப்படைத் துகள்களையும் மிக நெருக்கமாக அழுத்தினால் அப்பொருள் கணக்கிட முடியாத அளவு பளுவுடன் இருப்பினும் அதன் கொள் அளவு வெறும் வியாழன் கோள் அளவிற்குச் சுருங்கி விடும் எனக் கணக்கிடுகின்றனர். பேரண்டத்தில் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் உள்ள அடிப்படைத் துகள்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு எனப் பார்த்தால் ஷேப்லி அவர்களின் குறிப்புப்படி 1079 (ஒன்றுக்குப் பின் 79 சைபர்களைக் கொண்ட எண்ணுக்குக் குறையாததாகும்.(பார்க்க: பக்கம் 72,73) ஹாக்கிங் அவர்களின் கணக்குப்படி 1080 (ஒன்றுக்குப் பின் 80 சைபர்கள்) கொண்ட எண்ணுக்குச் சமமாகும்.

மேற்கூறப்பட்ட அதி பிரம்மாண்டமான அளவு துகள்கள் பேரண்டத்தில் இருப்பின் அவைகள் ஒரு வியாழன் கோள் அளவிற்குச் சுருக்க முடியுமா எனும் ஐயம் எழுவது இயற்கையே. இருப்பினும் விண்ணகப் பொருட்களுக்கு இடையே இருக்கும் காலி இடங்களை மட்டுமின்றி பொருட்களுக்குள் பொதுவாக காணப்படும் காலி இடங் களையும் கணக்கிலெடுத்தால் இந்த ஐயம் அகன்றுவிடும். அத்துடன் இவைகளைப் பற்றிய அறிவு இறைவனின் படைப்பாற்றல் எவ்வளவு மகத்தானது என்பதை சிறிதளவேனும் ஒருவருக்குப் புலப்படுத்தும்.

பொருட்கள் யாவும் மூலக் கூறுகளால் (அடிடநஉரடநள) உருவானவை என்பது நமக்குத் தெரியும். ஆயினும் மூலக் கூறுகளுக்கிடையில் நிறைய காலி இடம் உண்டு. அதைப் போல் மூலக் கூறுகள் அணுக்களால் உருவானவை என்பதும் நமக்குத் தெரியும். ஆயினும் அணுக்களுக்கிடையேயும் காலி இடம் உண்டு. அதைப் போல் அணுக்கள் என்பவை மையக்கரு, எலக்ட்ரான்களால் உருவானவை என்பதும் நமக்குத் தெரியும். இவைகளுக்கிடையேயும் காலி இடம் உண்டு. சான்றாக ஒரு அணுவின் பொருண்மை முற்றிலுமாக அதன் மையக் கருவிலேயே அடங்கியுள்ளது. ஆனால் அதன் மையக்கரு அணுவின் பரிமானத்தில் (ளுணைந) 1012 (ஒன்றுக்குப் பின் 12 சைபர்கள் கொண்ட எண் = ஒரு இலட்சம் கோடி)-ல் ஒரே ஒரு பங்கு மட்டுமேயாகும்! இது அணு என்பதே கிட்டத்தட்ட முற்றாகக் காலியிடம் எனப் பொருள்படுகிறதன்றோ? (இப்போது நாம் செல்களால் உருவாகியுள்ளோம்; ஆனால் நமது செல்கள் அணுக்களால் உருவாகியுள்ளன என்பதால் நாம் இப்போதும் கூட கிட்டத்தட்ட ஒன்றுமில்லாத ஒன்றால் ஒருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இது காட்டுகிறதன்றோ! இறைவனின் படைப் பாற்றலை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் உண்டா?) எனவே தாம் இப்பேரண்டத்தை அப்படியே ஓர் அழுத்து அழுத்தி அடிப்படைத் துகள்களுக்கிடையே இடைவெளியே இல்லாமல் சுருக்கினால் இப்பேரண்டம் நமது வியாழன் கோள் அளவிற்கு பரிமாணமுள்ள பொருளாக மாறும் எனக் கணக்கிட்டிருந்தனர் சில அறிவியலாளர்கள். ஆனால் திருமறைக்குர்ஆனில் இப்படிப்பட்ட பேரணுவைப் பற்றிய விபரம் எதுவும் இல்லவே இல்லை.

பேரணுவின் திடீர் மாயம்

இப்போது வியப்பிற்குரிய செய்தி என்னவெனில் பேரண்டம் படைக்கப்படுவதற்காக அதனுடைய அடிப்படைத் துகள்கள் அதற்கு முன்னரே தயாராக இருந்திருக்க வேண்டியதில்லை எனத் தெரிய வந்துள்ளது. மேலும் ஈடு இணையற்ற அந்த அதிரடி வேட்டு (க்ஷபை யெபே) நடைபெறுவதற்காகவும் எந்த ஒரு பொருளும் இருந்திருக்க வேண்டியதில்லை எனவும் அறிவியல் கூறுகிறது.

(இறைவன் உண்டு என்றும் அவன் எல்லாம் வல்லவன் என்றும் நம்புகின்றவர்களுக்கு மேற்கூறப்பட்ட நவீன அறிவியல் கருத்துக்கள் அவர்களது நம்பிக்கையை மேலும் வலுவாக்கும். அதே நேரத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்களால் இவை எப்படி நம்ப முடியும்?)

இப்போது பேரண்டம் உருவாக்கப்படுவதற்குத் தேவையான அடிப்படைத் துகள்கள் கூட முன்னர் இருக்கவில்லையெனில் வெறும் `வேட்டில் (நஒயீடடிளடி) இருந்து பொருட்கள் எப்படி உருவாயிற்று எனக் கேட்டால் ஹாக்கிங் பதிலளிக்கிறார். ``பதில் என்னவெனில் க்வாண்டம் கோட்பாட்டில் (ளூரயவேரஅ வாநடிசல) துகள்கள் ஆற்றலில் இருந்து துகள்/எதிர்த்துகள் எனும் ஜோடிகளாய் (ஞயசவஉடந / யவேயீயசவஉடந யீயசைள) உருவாக்கப்படும் (பார்க்க : பக்கம் 136) என்பதாகும்.

இப்போது எழும் மற்றொரு வினா என்னவெனில் பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்டவெளியில் ஒன்றுமே இல்லையெனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் ``பெருவெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிமாணம் பூஜ்யமாகும்; (ணநசடி ளணைந) அதன் வெப்பம் எல்லை அற்றதுமாகும் (கேவைந) என்கிறார். (பக்கம் 123)

இங்கு பெருவெடிப்புக்கு முன்னால் நமது பேரண்டத் தின் பரிமாணம் எவ்வளவு இருந்தது என்பதைப் பற்றி எதையும் கூறாமல் பெருவெடிப்பு நிகழும் நேரத்தில் அதன் அப்போதைய பரிமாணம் என்ன என்பதைப் பற்றியே ஹாக்கிங் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பெரு வெடிப்புக்கு முன்னால் என்ன இருந்தது அல்லது என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் அறிவியல் திறமையை பெருவெடிப்பின் வினோதத் தன்மை - சிங்குலாரிட்டி - நம்மிடமிருந்து பறித்து விட்டது. அத்துடன் பெருவெடிப்புக்கு முன்னால் இருந்திருந்தால் அல்லது நிகழ்ந்திருந்தால் அவைகள் நமது பேரண்டத்தோடு எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும் அறிவியல் விதிகள் கூறுகின்றன. எனவே பெருவெடிப்பு நிகழும் போது பேரண்டம் பூஜ்யமாக இருந்தது என்பதிலிருந்து வெடிப்பு நிகழ்ந்த பொருளின் பரிமாணம் பூஜ்யமாகவே இருந்தது என்பது தெளிவு!

ஆம்! பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை இறைவன் படைத்தான்! உங்கள் இறைவனின் படைப்பாற்றலை என்னவென்று மதிப்பிடுவீர்!

அதே நேரத்தில் அப்போது வெளியிடப்பட்ட ஆற்றலின் அளவு எல்லையற்றது எனக் கூறுகிறது அறிவியல் கண்டு பிடிப்புகள். வெப்பம் என்பது ஆற்றலின் `அருவம் என்பது நமக்குத் தெரியும். அந்த ஆற்றலே முதற்கண் அடிப்படைத் துகள்களாகி அவைகளே பிறகு அணுக் கருக்களாகி, அவைகளே பிறகு அணுக்களாகி, அவைகளே பிறகு மூலக் கூறுகளாகி, அவைகளே மீண்டும் பற்பல பருப் பொருட்களாகி அவைகளிலிருந்தே ஆயிரக்கணக்கான கோடி காலக்சிகளும், கோடானு கோடி ,கோடி நட்சத்திரங்களும், கோடனு கோடானு கோடி, கோடி விண்ணகப் பொருட்களும் உருவாயின என ஐயத்திற்கிடமின்றி அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

சுருங்கக் கூறின் இம்மாபெரும் பேரண்டம் வெறும் ஆற்றலிலிருந்து படைக்கப்பட்டிருப்பதாக அதிநவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவதை நாம் தெளிவாக அறிகிறோம். பேரண்டத்தைப் படைத்த வல்ல இறைவனின் மாட்சிமை மிக்க திருக்குர்ஆனில் கீழ்க்கண்டவாறு கூறுகிறான் :

``விண்ணகத்தை நாம் வல்லமை கொண்டு படைத்தோம்...

(51 : 47)

எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மையை இச்சிறு வாக்கியத்திற்குள் திருமறைக் குர்ஆன் கூறியுள்ளது! அடிப்படைத் துகள்கள் இடைவெளி இன்றித் திணிக்கப்பட்ட ஒரு பேரணுவால் பேரண்டம் படைக்கப்படாமல் வெறும் ஆற்றலைக் கொண்டே பேரண்டம் படைக்கப்பட்டது என ஒருவர் கூற வேண்டுமாயின் எந்த அளவிற்கு அறிவியல் ஞானம் அவருக்கு இருக்க வேண்டும் என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை அல்லவா!

1958ல் கூட சிறந்த அறிவியலாளராம் ஷேப்லி எழுதிய நூலில் (டிக வாந ளவயசள யனே அந) பல முறை இந்த ஆதிப் பேரணுவைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். (ஆயினும் 1970ல் எழுதப்பட்ட ஹாக்கிங் அவர்களின் நூலில் - ஹ செநைக ளைவடிசல டிக வஅந - இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.) ஆனால் ஆற்றலின் வரைவிலக்கணம் கூடத் தெரிந்திராத ஏழாம் நூற்றாண்டில் வந்த திருமறையாம் திருக்குர்ஆனால் இத்தவறான கற்பனைப் பொருளை மிக எளிதாகத் தவிர்க்க முடிந்தது மட்டுமின்றி பேரண்டத்தின் மெய்யான மூலப் பொருள் `ஆற்றலே என்பதையும் கூற முடிந்தது எனில் திருக்குர்ஆன் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை இது மிகத் தெளிவாகக் காட்டுகிறதல்லவா! மேலும் திருமறை கூறும் இந்த அறிவியல் ஆதாரம் பெருவெடிப்புக் கொள்கைக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

பேரண்டத்தில் பெருங்குழப்பம்

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கிசையப் பார்க்கும் போது பேரண்டத்தில் இன்று காணப்படும் நட்சத்திரங்கள் யாவும் ஆதியிலேயே தோன்றியவை இல்லையென்றும், ஆதியில் தோன்றிய நட்சத்திரங்களும் இதர விண்ணகப் பொருட்களும் ஒன்றோடொன்று மோதி உடைந்து சிதறியும் இரண்டாம் நிலை வெடிப்பு நிகழ்ச்சிகளால் (ளுநஉடினேயசல நஒயீடடிளடிளே) வெடித்துச் சிதறியும் பேரண்டம் தூசு துகள்களால் புகை மூட்டம் போல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இத்தூசுப் படலங்களிலிருந்து அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் தோன்றியதாகவும் தெரிகிறது.

பெருவெடிப்பு நிகழ்ந்து பேரண்டம் விரிவடையத் துவங்கியதும் அங்கு பெரும் குழப்பமான (உயடிள) நிலை காணப் பட்டதாக அறிவியலாளர் ஷேப்லி கூறுகிறார். ஆரம்பத்தில் சராசரி பொருளடர்த்தி (யஎயசயபந அயவநசயைட னநளேவைல) மிக அதிகமாக இருந்ததாகவும், நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருந்ததாகவும் பற்பல காலக்சிகள் தனித்தனி தொகுதிகளாகப் பிரிந்து இராமல் ஒன்றுக்குள் ஒன்று திணிக்கப்பட்டும் ஒன்றன் மீது ஒன்றாகக் குவிக்கப்பட்டும் இருந்தமையால் மோதல்களும், இரண்டாம் நிலை வெடித்தல்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார். குளிர்ச்சியான தொலைவுக்கு எறியப்பட்ட பறக்கும் வாயு விரைவிலேயே குளிர்ந்து,உறைந்து கோள்களைப் போன்ற பொருட்களாக பெருமளவிற்கு உருவாகி மீண்டும் மோதி வெடித்து அதனால் உருவாகும் புகை மூட்டம் போன்ற தூசுகளிலிருந்து அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் தோன்றின என அவர் கூறுகிறார்.

(பார்க்க : பக்கம் 53, 54)

சுருங்கக் கூறின் பேரண்டம் ஆரம்பக் கட்டங்களில் இப்போது இருப்பது போன்று ஒழுங்குடன் இல்லாமல் ஒழுங்கற்ற குழப்பமான நிலையிலேயே இருந்ததாகத் தெரிய வருகிறது.

அறிவியலாளர் ஹாக்கிங் இந்த சாத்தியத்தை ஒப்புக் கொள்வதோடு இப்படிப்பட்ட ஒரு குழப்பமான நிலையிலிருந்து இன்று காணப்படும் இவ்வளவு வழவழப்பான (ளுஅடிடிவா) மற்றும் ஒழுங்கான (சநபரடயச) பேரண்டம் எப்படித் தோன்றியது எனக் காண்பது கடினமாகும் எனவும் குறிப்பிடுகிறார். (பார்க்க : பக்கம் 129. 130)

குழப்பம் அகன்றது ஒழுங்கு வந்தது

இன்றைய உலகின் மிகச் சிறந்த அறிவியலாளராக மதிக்கப்படும் ஹாக்கிங் அவர்களை வியப்பிற்குள்ளாக்கிய பேரண்டத்தின் இன்றைய நிலை திருக்குர்ஆனுக்கு வியப்பளிக்கவில்லை. அது கீழ்க்கண்டவாறு அதன் காரணத்தைக் கூறுகிறது :

``பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை (ஒழுங்குபடுத்த) நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கட்டளையிட்டான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (பிறகு) இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான்...

(41 : 11,12)

இந்த வசனங்களில் அடங்கி இருக்கும் அறிவியல் சிந்திப்பவரை வியக்க வைப்பதாகும்.

முதலாவதாக இந்த வசனங்களில் வானங்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள் இம்மாபெரும் பேரண்டம் ஏழு வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட ஏழு பெரும் தொகுதிகளாக அமையப் பெற்றுள்ளது என்பதோ இல்லது இப்பேரண்டம் முழுவதும் ஒரே தன்மையினதாக இருப்பின் இப்பேரண்டத்தை தவிர வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட மேலும் ஆறு பேரண்டங்கள் இருக்கின்றன என்பதோ இதன் பொருளாக இருக்கலாம். இவற்றுள் எது உண்மை என்பதைக் கண்டுபிடிக்கும் திறமையை நமது அறிவியல் இன்னும் பெற்று விடவில்லை என்பதால் அறிவியலைக் கொண்டு இந்த விபரத்தை மதிப்பிட இயலாது என்பது தெளிவு.

ஆயினும் வானத்தை வகைப்படுத்தி அமைக்கும் பணி ஒரு கட்டத்தில் நடைபெற்றது என்பது அந்த விபரத்தில் தெளிவாகத் தென்படுகிறது. இதைத் தானே ஷேப்லி, ஹாக்கிங் போன்ற சிறந்த அறிவிளலாளர்களின் கூற்றிலிருந்து முன்பத்திகளில் கண்டோம். இருபதாம் நுற்றாண்டின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரிந்தது?

மேலும் பேரண்டப் படைப்பின் ஒரு கட்டத்தில் வானங்கள் வெவ்வேறு தொகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டது என திருமறை கூறியதிலிருந்து அதற்கு முன் ஒழுங்கற்ற ஒரே அமைப்பாக அது இருந்தது என்பது அதன் உட்பொருளாக விளங்குகிறதல்லவா! இந்த நவீன அறிவியல் உண்மை ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரிந்தது?

ஒழுங்குபடுத்துவதற்கு முன் வானங்கள் புகை வடிவாக இருந்ததாக திருமறை மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் இல்லையெனில் அது எப்படித் தெரிந்து கொண்டது?

மேலும் திருமறை வசனங்களில் வானங்கள் ஒழுங்கு படுத்தப்பட்ட காலகட்டம் என்ன என்பதைக் கூட மிகத் தெளிவாகக் கூறுவது நமது கவனத்தை மிகவும் கவர்கிற தல்லவா?வானங்கள் ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்ற போது நாம் வசிக்கும் இந்த பூமி படைக்கப்பட்டிருந்ததாக திருமறை வசனங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. நமது பூமி படைக்கப்பட்டிருப்பின் நமது சூரியனும் படைக்கப்பட்டுவிட்டது என்பது அதன் பொருள். இதிலிருந்து இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை நட்சத்திரமாகிய சூரியன் படைக்கப்படும் வரை நமது பூமி உட்பட அனைத்து கோள்களும், நட்சத்திரங்களும், இன்ன பிற விண்ணகப் பொருட்களும், காலக்சிகளும் கூட ஒன்றோடொன்று இரண்டறக் கலந்து ஒழுங்கற்ற தாறு மாறான ஒரேஒரு குழுவாகக் காணப்பட்டது எனத் தெரிய வருகிறது. இந்த அறிவியலைக் கூட மற்றொரு வசனத்தில் மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது திருக்குர்ஆன். அந்த அற்புதமான இறை வசனம் இதோ :

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதை யும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (இத்திருமறை நமது வார்த்தையல்ல என்று கூறி) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

(21 : 30)

எவ்வளவு அற்புதமாக வானங்களும், பூமியும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாகக் கலந்து ஒரே ஒரு தொகுதியாகக் காணப்பட்ட அறிவியல் உண்மையை திருமறைக் குர்ஆன் இந்த வசனத்தில் வெளிப்படுத்தியுள்ளது!

திருக்குர்ஆனுடைய கூற்றுக்கிசைய பூமி உட்பட அனைத்து விண்ணகப் பொருட்களும் போதுமான இடைவெளியின்றி ஒன்றாகக் கலந்து ஒரே தொகுதியாக இருந்திருப்பின் அந்தக் காலகட்டத்தில் அப்பொருட்களுக்கிடையே இடைவிடாத மோதல்களும் அதன் பயனாக விண்ணகப் பொருட்களின் தொடர்ச்சியான வெடித்துச் சிதறல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று எல்லாமே ஒரு குழப்பமாகவும் (ஊயடிள) மற்றும் விண்ணகப் பொருட்களின் ஒழுங்கற்ற இயக்கங்களாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பது தெளிவு. திருமறையிலிருந்து விளங்கப் பெறும் இக்கருத்தைத் தான் அறிவிளலாளர்கள் ஷேப்லி மற்றும் ஹாக்கிங் போன்றவர்கள் கூறியதாக முன்பத்திகளில் கண்டோம். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த இந்த அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனுக்கு ஏழாம் நூற்றாண்டில் எப்படித் தெரிந்தது? திருக்குர்ஆன் மனித அறிவால் உருவாக்கப்பட்டதில்லை என்பதை இது நிரூபிக்கிறதன்றோ!

(இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் உயிருள்ள அனைத்து பொருட்களும் தண்ணீரிலிருந்தே படைக்கப்பட்டது என்பதும் இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் அறிவியல் உண்மையாகும். இது உயிரியல் சார்ந்த அறிவியல் என்பதால் இப்பகுதியில் அது ஆய்வு செய்யப்படவில்லை.)

இப்போது முன்னர் கண்ட திருவசனங்களையும் (21 : 29, 41 : 11) இணைத்துப் பார்த்தால் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்ட நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரும் வானும் வானகப் பொருட்களும் ஒழுங்கற்ற தாறுமாறான நிலையில் இருந்ததாகவும் அவை இறைவன் நாடியவாறு ஒழுங்குற வேண்டும் என்பதற்காக ``நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டுப்பட்டு நடப்பீர்களாக எனும் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

திருமறையின் வேறுபட்ட நடை

இந்த இடத்தில் சிலருக்கு இறைவனுக்கும் அவனது உயிரற்ற படைப்பினங்களுக்கும் (வானமும், பூமியும்) இடையே நடைபெற்ற உரையாடல் சற்று புதிராகத் தோன்றலாம். ஆனால் படைப்பினங்களுடையதைப் போல இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதோ அல்லது அவனது ஆற்றல் எதையெல்லாம் உள்ளடைக்கியுள்ளது என்பதோ நம்மால் ஒருக்காலும் விளங்கிக் கொள்ள இயலாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் (சநடயவஎந ளவயவநள) ஒப்பீடுகளையும் (ஊடிஅயீயசளைடிளே) கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன் (ஹளெடிடரவந). எனவே அவனது அறிவாற்றல் உயிருள்ளவை அல்லது உயிரற்றவை எனும் வேற்றுமைகளால் பாதிக்கப்படாமல் உயிருள்ளவைகளைப் போன்றே உயிரற்றவைகளின் சிறப்பியல்புகளையும் உள்ளடக்கியதாகும்.

மற்றொரு விதத்தில் பார்த்தால் மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். சான்றாக நாம் ஒரு விண்வெளிக் கப்பலை (ளுயீயஉந சடிஉமநவ) எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் பறப்பதற்கும் பறத்தலில் செய்யப்பட வேண்டிய பற்பல மாற்றங்களுக்கும் பூமியில் இருந்து கொண்டே நாம் அவைகளுக்கு உத்தரவு இடுகிறோம். அவைகள் நமது உத்தரவுகளை வார்த்தை தவறாமல் நிறைவேற்றுகின்றன. ஒவ்வொரு முறையும் அவை விண்ணிற்கு ஏவப்படும் போது அவை ஏவப்படுவதற்குத் தயாராக உள்ளனவா எனத் தவறாமல் அவைகளை வினவுகிறோம். சில நேரங்களில் அவை தங்களது பரிபூரண சம்தத்தைத் (திருமறையில் ``நாங்கள் விரும்பியே கட்டுப்பட்டோம் என விண்ணும், மண்ணும் கூறியதைப் போன்று) தெரிவிக்கின்றன. எனவே அவை உடனே ஏவப்படுகின்றன. சில நேரங்களில் அவை தயக்கம் காட்டுகின்றன. உடனே பொறியாளர்கள் அவைகளை ஏவும் முயற்சியை நிறுத்திவிட்டு தயக்கத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து சீர் செய்து அதன் பிறகு அவைகளின் ஒப்புதலைப் பெற்று அவைகளை ஏவுகின்றனர்.

மேற்கூறப்பட்ட விபரங்கள் எதுவும் நமக்குப் புதிராக இருப்பதில்லை. நமக்கும் உயிரற்ற இப்பொருட்களுக்கும் இடையில் நடைபெறும் இக்கருத்துப் பரிமாற்றம் மனித மொழிகளிலன்றி மின் அணு மொழியிலாகும் என்பதும் நாம் தெரிந்திருக்கிறோம். ஆனால் படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய இறைவன் நம்மால் ஒரு போதும் விளங்கிக் கொள்ள இயலாத மேலும் சிறந்த மொழிகளில் தமது உயிரற்ற படைப்பினங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லவன் என்பது மிகவும் ஏற்கத்தக்கதேயாகும்.

ஒழுங்கீனத்திலிருந்து ஒழுங்கிற்கு...

இப்போது இறைவன் விண்ணையும் மண்ணையும் கட்டுப்படும்படி கட்டளையிட அக்கட்டளைக்கு அவை பணிந்த பிறகு என்ன நடந்தது எனப் பார்ப்போம். இந்தக் குழப்பமான நிலையிலிருந்து பேரண்டம் படிப்படியாக இப்போதிருக்கும் ஒழுங்கு நிலைக்கு வந்ததாக ஹாக்கிங் கூறுவதை முன்பத்திகளில் கண்டோம். திருமறைக் குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

(வானங்களும், பூமியும் அவை விரும்பியே கட்டுப்பட்டதாகக் கூறிய போது) இரண்டு நாட்களில் (அவைகளை அவன்) ஏழு வானங்களாக அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான்....

(41 : 12)

வானும், வானகப் பொருட்களும் ஒட்டுமொத்தமாகக் கலந்தும் குவிந்தும் ஒரே ஒழுங்கற்ற குழுவாகக் கிடந்த அமைப்பு, தனித் தனியான ஏழு பேரண்டங்களாகப் பிரிக்கப்பட்டதை இவ்வசனம் தெரிவிக்கிறது. அவற்றுள் ஒவ்வொரு பேரண்டத்திற்கும் அதன் இயக்கம் தொடர்பான கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டது என்பதிலிருந்து அவைகள் ஒவ்வொன்றும் அதன் பிறகு அக்கட்டளை களுக்கு (விதிகளுக்கு) இசையவே இயங்குகின்றன என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிய வருகிறது. இவ்வாறு ஓர் அமைப்பு அதற்குரிய விதிகளுக்கு இசைய இயங்கு வதைத்தாம் நாம் ஒழுங்கான இயக்கம் எனக் கூறுகிறோம்.

பேரண்டத்தின் திடீர் தோற்றம்

இம்மாபெரும் மகா மகா பேரண்டம் தோன்றியதில் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதமாகத் திகழ்வது இரண்டு நிகழ்ச்சிகளாகும். அதில் ஒன்று அதி, அதி கம்பீரமான ஒரு பிரமாண்ட வெடிப்பு நிகழ்ச்சி. இரண்டாவதாக இவ்வெடிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு மயிரிழையைப் பல்லாயிரம் பாகங்களாகக் கிழித்தாலும் அதில் ஓர் இழையின் அளவு கூடத் தாமதமின்றி நடைபெற்ற அவ்வெடிப்பாற்றலின் விரிவாக்கம். இவற்றுள் பேரண்டப் படைப்பின் முதல் கால்வைப்பாக இருக்கும் பெருவெடிப்பு என்பது வெறும் ஒரு மைக்ரோ கணத்தை விடக் குறைந்த நேரத்தில் திடீரெனத் தோன்றிய ஓர் அதிர் வேட்டாகும்.

தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே ஓர் ஊசிப் பட்டாசு கூட வெடிக்கும் எனும் போது ஈடு இணையற்ற அம்மாபெரும் அதிர் வேட்டு எப்படி நிகழ்ந்தது? வெடிப் பொருள் எப்படித் தோன்றியது? வெடிப்பதற்கு முன் எவ்விதமான சூழ்நிலை நிலவியது? என்பன போன்ற எந்தக் கேள்விக்கும் விடை கண்டுபிடிக்கும் ஆற்றல் நமது அறிவியலுக்குக் கிடையாது. அந்த அளவிற்கு பெரு வெடிப்பு வினோதம் (க்ஷபை யெபே ளபேரடயசவைல) நமது அறிவியலை முடமாக்கி விட்டது. இன்றைய உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாம் ஹாக்கிங், அறிவியலாளர் `பென்ரோ உடன் இணைந்து பெரு வெடிப்புக் கேட்பாட்டை நிரூபித்துள்ளதாக நாம் முன்னர் கண்டோம். அதைக் குறித்து அவர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

``பேரண்டம் எவ்வாறு தோற்றமெடுத்தது என்று ஒருவர் கூற வேண்டுமாயின் காலத்தின் துவக்கத்திலேயே நடைமுறையில் இருந்த விதிகள் பற்றிய அறிவு அவருக்கு இருக்க வேண்டும். பொது சார்பியல் தத்துவத்தின் நூலியல் கோட்பாடு (ஊடயளளஉயட வாநடிசல) சரியாக இருந்தால் நானும், ரோஜர் பென்ரோசும் நிரூபித்த வினோத சூத்திரங்கள் (ளுபேரடயசவைல வாநடிசநஅள) காலத்தின் துவக்கம் எல்லையற்ற அடர்த்தியும் (கேகேவந னநளேவைல) கால-இடத்தின் (ளுயீயஉந - வஅந) எல்லையற்ற வளைவாகவும் (கேவைந உரசஎயவரசந டிக ளயீயஉந - வஅந) உள்ள ஒரு புள்ளியாய் இருந்திருக்கும். அப்படிப்பட்ட புள்ளியில் அறியப்பட்ட எல்லா அறிவியல் விதிகளும் பழுதாகி (செநயம னடிற) விடும் (பார்க்க : பக்கம் 140)

உண்மையிலேயே பெரும் கண்டுபிடிப்பைத் தாம் இம்மாபெரும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட கூற்றிலிருந்து விளங்குகிறது. ஒரு பொருள் எல்லையற்ற அடர்த்தியைக் கொண்டிருந்தால் அதற்குள் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகள் நமக்கு வழங்கவில்லை. ஆயினும் எல்லையற்ற எதையும் கட்டுப்பட வைக்கும் விதிகளைக் கூட உருவாக்கி இப்பேரண்டத்தைத் தோற்றுவித்த இறைவனுக்கு கால அடர்த்தியின் எல்லையின்மையோ, அல்லது கால - இடத்தின் வளைவின்* எல்லையின்மையோ ஒரு பொருட்டல்ல. ஆகவே பேரண்டம் எப்படித் தோன்றியது என்பதை வினோத சூத்திரங்களால் அறிவு முடமாகிப் போன மானிடர்களுக்காக பேரண்டத்தை எப்படி அவன் தோற்றுவித்தான் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறான் :

``அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து ``ஆகு என்று கூறுவான். உடனே அது ஆகிவிடும்.

திருக்குர்ஆன் 2 : 117

* கால - இடத்தின் வளைவு : இது அறிவியல் மேதை ஐன்டீன் கண்டுபிடித்த அறிவியலாகும். இதில் இரண்டு அறிவியல் சித்தாந்தங்கள் இருக்கின்றன. முதலாவதாக பேரண்டத்திலுள்ள அனைத்தும் சார்பியல் நிலைக்கு உட்பட்டது. ஆனால் `காலம் மற்றும்`இடம் ஆகியவை தவிர. இவை சார்பியலுக்கு உட்படாத சுயேட்சையாகவே (யளெடிடரவந) எப்போதும் நிலை கொண்டிருக்கும் என ஐன்டீனுக்கு முன்புள்ள அனைத்து அறிவியலாளர்களும் நம்பி வந்தனர். ஆனால் ஐன்டீன் தன்னுடைய புகழ் வாய்ந்த சார்பியல் தத்துவத்தின் (வாநடிசல டிக சநடயவஎவைல) வாயிலாக காலம் மற்றும் இடம் ஆகியவைகளும் சார்பியலானவை எனக் கருதி சமன்பாடுகளால் நிறுவினார். இத்தத்துவத்தை பிரதிபலிப்பதற்காகவே `காலம் மற்றும் `இடம் எனும் வார்த்தைப் பிரயோகத்தையே மாற்றி `கால - இடம் (ளயீயஉந - வஅந) எனத் திருத்தி அமைக்கப்பட்டது.

இரண்டாவதாக ஆகாயம் வளைந்திருக்கிறது எனும் புரட்சிகரமான மற்றொரு சித்தாந்தத்தையும் தமது பொது சார்பியல் தத்துவத்தின் வாயிலாக நிறுவினார். அறிவியல் ஆய்வுகளால் இச்சித்தாந்தம் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த வளைவைத்தாம் தமது அறிவியல் ஆய்வுகளில் ஹாக்கிங் மற்றும் பென்ரோ ஆகியோர் அவ்வளைவுப் பேரண்டம் படைக்கப்படுவதற்கு முன் அப்பேரண்டம் ஒரு புள்ளியாக இருந்த காலகட்டத்தில் எல்லைக்கு உட்படாத, எல்லையற்றதாக இருந்தது எனக் கூறுகிறார்கள். (ஆகாயம் வளைந்திருக்கிறது என்பதோ ஒரு பொருளின் வளைவு எல்லைக்குட்படாதது என்பதோ நமது அறிவுக்கெட்டாத போதும் அது அறிவியல் கண்டுபிடிப்பு என்பதால் நாம் அதை நம்புகிறோம் என்பதையும் கருத்தில் கொள்க.)

இந்த அற்புதமான திருமறை வசனத்தில் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மிக முக்கியமாக கேள்விக்குத் தகுந்த பதில் கிடைக்கிறது. பேரண்டப் படைப்பு துவங்கு வதற்கு (பெருவெடிப்புக்கு) முன் அதற்குரிய சூழலாக என்ன இருந்தது? வெடித்த பொருள் எது?வெடிக்க வைத்த காரணங்கள் யாது? என்பதே நமது பிரதானமான கேள்வி களாகும். ஆனால் திருக்குர்ஆன் பேரண்டப் படைப்பு துவங்கு வதற்கு முன் அதற்காக பிரத்யேகமான எவ்விதச் சூழலும் இருந்ததில்லை எனவும் பேரண்டத்தை உருவாக்கியிருக்கும் பொருட்கள் கூட அதற்கு முன்னால் இருந்ததில்லை யெனவும் கூறுவதோடு படைப்பு நிகழ்ச்சி இறைவனுடைய கட்டளையால் தோன்றியது எனவும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.

காரணமில்லாக் காரியம்

பேரண்டம் தோன்றுவதற்கு என்னென்ன அறிவியல் காரணங்கள் (ளுஉநைவேகைஉ சநயளடிளே) இருந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது என ஆய்வு செய்யத் தலைப்பட்ட நம்மை பேரண்டம் தோன்றுவதற்கு எவ்வித அறிவியல் காரணங் களும் இல்லை எனப் பொருள்படும் திருமறையின் கூற்று பெரும் வியப்பிற்குள்ளாக்குகிறதன்றோ! எவ்வித அறிவியல் காரணங்களும் இன்றி கற்பனைக் கெட்டாத இம்மாபெரும் பேரண்டம் தோன்றி இருக்க முடியுமா என்ற கேள்விக்கு `ஆம்! பேரண்டம் தோன்றியதற்கு எவ்விதக் காரணமும் வினோத சூத்திரங்கள் காரணமாக நம்மால் கண்டுபிடிக்க இயலாது என்பதோடு ஒருகால் பெருவெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் கூட அதற்கும் பெரு வெடிப்பிற்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இருந்திருக்க முடியாது என்றும் எனவே பேரண்டப் படைப்பின் துவக்கமாகிய பெருவெடிப்பு எவ்விதக் காரணமும் இன்றி நிகழ்ந்தது எனக் கூறி அற்புதங்களின் அற்புதமாய் வான்மறைக் குர்ஆனில் நாம் என்ன கண்டோமோ அதை அப்படியே மெய்ப்பிக்கிறது உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாம் ஹாக்கிங் போன்றோர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகள்!

இவ்வளவு அற்புதமான இருபதாம் நூற்றாண்டின் அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிலும் அறிவியலாளர்களால் கூட நம்புவதற்குக் கடினமாக இருக்கும் மாபெரும் அறிவியல் அற்புதங்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரால்- அவர் ஒரு மாபெரும் விஞ்ஞானி யாகவே இருந்தால் கூட - கூறி இருக்க முடியும் என பகுத்தறியும் திறனுள்ள எந்த நபரால் ஏற்றுக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் கூறும் அறிவியலிலிருந்து இறைவன் எந்த நாளில் அதில் எந்தக் கணத்தில்`ஆகுக! எனக் கட்டளையிட்டானோ அதன் பிறகு ஒரு மைக்ரோ கம் கூடத் தாமதமின்றி உடனே பேரண்டத்தின் படைப்பு துவக்கம் (க்ஷபை யெபே) குறித்தது என்பதும் அதிலிருந்து இன்று வரை பேரண்டம் என்னென்ன பொருட்களால் எப்படி எப்படி வடிவமைய வேண்டும் என அவன் தனக்குள் வடிவமைப்பு செய்திருந்தானோ அவ்வாறே நிகழ்ந்து வருகிறது என்பதும் தெளிவாக விளங்குகிறது.

இறைவனின் சொல்லாற்றல்

இங்கு பலருக்கும் ஏற்படக் கூடிய ஐயம் யாதெனில் வெறும் `ஆகுக! (க்ஷந!) என்று ஒரு கட்டளை பிறப்பித்த உடன் அக்கட்டளை பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்யும் என்பதாகும். இந்த ஐயம் மனிதர்களாகிய நம்மைப் போன்றே இறைவனையும் கற்பனை செய்வதால் ஏற்படுவதாகும். நாம் `ஆகுக! என்று கூறும் போது நமது கட்டளை வெறும் காற்றின் அதிர்வலைகளாக வெளிவருவதால் அதற்கு எதையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் இருப்பதில்லை. நமது அறிவுத் திறன் என்பது வினோத சூத்திரங்களால் (ளுபேரடயசவைல வாநடிசநஅள) முடமாக்கப்பட்டு பெருவெடிப்புக்கு அப்பால் உள்ளதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத பலவீனத் துக்கு உட்பட்டதாகும். எனவே இறைவனின் இயற்பியலைப் பற்றி நமது அறிவுத்திறனால் புரிந்து கொள்ள முடியாது. நிலைமை இவ்வாறிருக்க இறைவனின் வார்த்தைகள் எந்த வடிவத்தில் வெளிப்படும் என்பதை எப்படி நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்? ஆயினும் நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட திருமறை வசனங்களிலிருந்து அவனது வார்த்தைகள் அவனது நாட்டத்தையும் உள்ளடக்கிய ஆற்றலின் வடிவாக வெளிப்படும் திறன் கொண்டது என்பது விளங்குகிறது!

மானிடர்க்கு வழிகாட்டியாய் வந்த மாமறைக் குர்ஆனின் வசனங்கள் பெரு வெடிப்புக்கு முன் இறைவனின் `ஆகுக! என்ற வார்த்தை தவிர மற்றவை யாவும் (பேரண்டத்தின் வடிவமைப்புப் பணிகள் - னநளபைபே றடிசமள) அவனுக்குள்ளேயே இருந்ததே அன்றி அண்ட வெளியில் எதுவும் தோன்றி இருக்கவில்லை எனப் பொருட்பட்டதாகக் கண்டோம். இதையே நாம் நமது வினோத சூத்திரங்களால் முடமாகிப் போன இயற்பியல் மொழியில் மொழி மாற்றம் செய்தால் அதன் பொருள் பெருவெடிப்புக்கு எதுவுமே காரணமாக இருந்திருக்கவில்லை என்றும் எனவே பெருவெடிப்பே பெரும் புதிரானது என மாற்றமடைவதைக் காணலாம். மிகச் சரியாக இதே கருத்தைத் தான் நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறி சத்தியத் திருமறையை மெய்ப்பித்துக் கொண்டு வருகின்றன.

இம்மாறைக்குர்ஆன் தெய்வீக வெளிப்பாடே அன்றி மானிடப் படைப்பன்று என்பதை மேற்கண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்குப் புலப்படுத்தவில்லையா?

விரிந்து செல்லும் பேரண்டம்

பேரண்டப் படைப்பில் பெருவெடிப்பிற்கு அடுத்தாற் போன்று பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் மற்றொரு இயற்பியல் காரணி பேரண்டத்தின் தொடர்ச்சியான விரிவாக்கமாகும். பெருவெடிப்பு நடைபெற்ற அதே கணத்தில் வெடித்தலில் இருந்து வெளிப்பட்ட ஆற்றலின் விரிவாக்கமும் பிறகு ஆற்றலில் இருந்து தோன்றிய பொருட்களின் விரிவாக்கமும் இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பேரண்டத்தின் இந்த விரிந்து சொல்லும் இயற்பியல் பண்பு இல்லாதிருந்தால் இப்பேரண்டம் பல கோடி வருடங்களுக்கு முன்னரே அழிவுற்றிருக்கும்.

பேரண்டத்தின் இந்த இயற்பியல் பண்பு சென்ற நூற்றாண்டின் புகழ் பெற்ற விஞ்ஞானி ஹப்பிள் (ழரடெந) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய நிறமாலை (ளுயீநஉவசடிளஉடியீந) ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட `ரெட் ஷிப்ட் (சுநன ளாகைவ) எனும் இயற்பியல் விளைவை `டாப்ளர் விளைவுடன் பொருத்திப் பார்த்து பேரண்டம் விரிந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்தார். திருமறையை இறை வேதம் என நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பை நாம் தனித் தலைப்பில் ஆய்வு செய்துள்ளோம். எனவே பேரண்டப் படைப்பு நிகழ்த்தப்பட்ட கால அளவைப் பற்றிய ஆய்விற்குள் செல்வோம்.

`ஆகுக! - உடனே ஆகி விடும்!

திருமறையில் நாம் முன்னர் கண்ட வசனத்தைச் சுட்டிக் காட்டி திருமறையின் விமர்சகர்கள் சிலர் திருக்குர்ஆன் பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளதாய் கூறுகிறார்கள். பெருவெடிப்புக் கோட்பாடு பேரண்டம் உருவாவதற்கு 500 லிருந்து 1500 கோடி வருடங்கள் அல்லது 1000 லிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டது எனக் கூறுவதை நாம் கண்டோம். ஆனால் திருக்குர்ஆன் இதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

``அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து ``ஆகு என்றே கூறுவான். உடனே அது ஆகிவிடும்.

திருக்குர்ஆன் 2 : 117

இறையாற்றலும் சார்பியல் கோட்பாடும்

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பேரண்டம் தோன்றுவதற்கு தேவைப்பட்டது 500 கோடியிலிருந்து 2000 கோடி வருடங்கள் என்பதைக் கண்டோம். ஆனால் இறைவன் ஏதேனும் ஒன்றைப் படைக்க நாடினால் அதனிடம் `ஆகுக! என்று சொல்வான். உடனே அது ஆகிவிடும் எனப் பல இடங்களில் திருக்குர்ஆன் கூறுகிறது. இதை ஒரு கோணத்தில் பார்த்தால் ``இறைவன் எவ்வாறு அதை உருவாக்க நாடினானோ அவ்வாறே எவ்விதத் தடங்கலோ தாமதமோ இன்றி அவ்வாறே உருவாகி விடும் என்பது அதன் விளக்கமாக இருக்கின்ற அதே வேளையில் மற்றொரு கோணத்தில் பார்த்தால் இறைவனின் கட்டளை பிறந்த மறுகணமே அவன் நாடியது எதுவோ அது அங்கு தோன்றி விடும் என்பது போன்ற அர்த்தமும் அதற்கு இருப்பது போன்று தோன்றுகிறது. இதன் விளக்கம் யாது என்பதே நமது கேள்வியாகும்.

இக்கேள்விக்குரிய பதில் ஐன்டீனின் சார்பியல் கோட்பாட்டில் அமைந்துள்ளது. அதை ஓரிரு உதாரணங்களுடன் சுருக்கமாகக் காண்போம்.

காலம் மற்றும் இடம் ஆகியவையும் சார்பியல் நிலைக்கு உட்பட்டது என ஐன்டீனின் சார்பியல் கோட்பாடு கூறுவதை நாம் முன்னர் கண்டுள்ளோம். நாம் ஒரு சாலை வழியாகப் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். அச்சாலையின் வலது பக்கம் இருக்கும் ஒரு குன்று அந்த இடத்தை விட்டு நகராமல் அதே இடத்தில் இருக்கும் போதே அதே சாலையில் (நாம் பயணம் செய்யும் திசைக்கு எதிராக) பயணம் செய்யும் வேறு சிலர் அக் குன்று சாலையின் இடது பக்கம் இருப்பதாகக் காண்பார்கள். இதிலிருந்து இடம் என்பது நிலையானதல்ல; சார்பானது (அதைப் பார்வையிடும் பார்வையாளர்களைச் சார்ந்தது) என்பது தெரிகிறது.

இதைப் போலவே இப்போது நாம் நமது சூரியனில் ஒரு பெரும் வால் நட்சத்திரம் மோதுவதைப் பார்க்கிறோம் என வைத்துக் கொள்வோம். நமது சூரியனிலிருந்து ஒரு இலட்சம் ஒளியாண்டு தொலைவில் மற்றொரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கிரகத்தில் அறிவு ஜீவிகள் இருப்பதாகவும் அவர்கள் நமது சூரியனை ஆய்வு செய்து கொண்டிருப்ப தாகவும் வைத்துக் கொள்வோம். ஆயினும் நாம் இப்போது நமது சூரியனில் கண்ட வால் நட்சத்திர மோதல் வேற்று கிரகத்தில் இருக்கும் அந்த அறிவு ஜீவிகளால் நாம் பார்த்த அதே நேரத்தில் பார்க்க இயலாது. அவர்கள் இந்த காட்சியைப் பார்க்க வேண்டுமாயின் ஒரு லட்சம் வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒருகால் சார்பியல் கோட்பாட்டைப் பற்றி எதுவுமே அறிந்திராத நபர் இப்புத்தகத்தைப் படிப்பதாக இருந்தால் இவருக்கு இது பெரும் புதிராகவே இருக்கக் கூடும். ஆயினும் மற்றவர்கள் இதற்குரிய காரணத்தைப் புரிந்து கொள்வதால் இது மிகச் சாதாரணமான எளிய உண்மையாக எடுத்துக் கொள்வார்கள்!

ஆம்! ஓரிடத்தில் நடைபெற்ற ஒரே நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி ஒரு சிலருக்கு உடனே நடைபெற்றதாகவும் வேறு சிலருக்கு ஒரு இலட்சம் வருடங்கள் கழித்து நடைபெற்றதாகவும் தெரிகிறது! இதில் ஏதேனும் ஒரு கூற்றை (உடனே நடந்ததாகக் கூறும் கூற்று) மெய் என்றும் மற்றதைப் பொய் என்றும் கூற முடியுமா? முடியவே முடியாது. இரண்டு கூற்றுமே மெய்யாகும்! ஏனிந்த விபரீதம்! வேறொன்றும் இல்லை சூரியன், வால் நட்சத்திரம், பார்வையிடும் நபர்கள் மட்டுமின்றி காலமும் சார்பானது என்பதாலேயே சூரியனில் நிகழ்ந்த மோதலின் காட்சி அதைப் பார்வையிடும் குழுக் களுக்கிடையில் வெவ்வேறு காலத்தில் தென்பட்டது. எனவே காலத்தின் இயல்பு அதைப் பார்வையிடும் பார்வையாளர் களைச் சார்ந்ததே என இதிலிருந்து விளங்குகிறது.

இப்போது நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தில் காலத்தைப் பார்வையிடும் நபர் நம் போன்று சார்பியல் நிலைக்கு உட்பட்டவர் அன்று. அவன் இம் மாபெரும் பேரண்டத்தின் படைப்பாளன். அவன் சார்பியலைக் கடந்த முழுமை (ஹளெடிடரவந)யானவன். எனவே அவன் முன்னர் இல்லாமல் இருந்து விட்டு நாளையும் இல்லாமல் போய் விடும் நபர் அன்று. அவன் எப்போதும் உள்ளவன். அவன் தனது இயற்பியல் குணத்தில் தன்னிறைவு பெற்று அதே நிலையில் (அந்த ஒரே நிலையில்) என்றென்றும் உள்ளவன். எனவே அவனுக்கு கடந்த காலம் அல்லது எதிர்காலம் என்பதெல்லாம் இல்லை. அவனுக்கு எல்லாமே நிகழ்காலம்!

இதையே வேறு விதத்தில் கூறினால் கடந்து சென்ற எல்லாக் காலங்களிலும் அவன் இருந்தான். அப்போது எந்தெந்த (அவனுக்கே உரிய) இயற்பியல் நிலையில் அவன் இருந்தானோ அதே நிலையிலேயே இப்போதும் இருக்கிறான். மேலும் வரப்போகும் எதிர்காலம் யாவிலும் அவன் இருப்பான். அப்போது என்னென்ன இயற்பியல் நிலையில் அவன் இருப்பானோ அதே நிலையிலேயே அவன் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறான் என்பதாகும்.

சுருங்கக் கூறின் ``முழுமை (ஹளெடிடரவந) எனும் சொல்லின் ஆழமான மற்றும் நிறைவான அர்த்தத்தில் அவன் முழுமை யானவன். எனவே கடந்த காலமோ,எதிர்காலமோ இல்லாத அவனுக்கு வெறும் 2000 கோடி வருடம் என்பது வினாடியைப் போன்று அற்பமானதே எனப் பொருள்படக் கூறினால் அது ஏழாம் நூற்றாண்டைப் பொருத்தவரை பிரமிக்கச் செய்யும் ஆழமான ஓர் அறிவியல் உண்மையன்றோ! எனவே``ஆகுக! என அவன் ஏதேனும் ஒன்றுக்கு (தன் மனதில் உள்ள நாட்டத் தில் உருவான பொருளுக்கு) கட்டளை இட்டால் `உடனே அது ஆகிவிடும் எனக் கூறினால் அவனைப் பொருத்த வரை (நம்மைப் பொருத்தன்று) மறுகணமே அது தோன்றி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மேலும் பெருவெடிப்பு நிகழ்ந்த போது காலம் என்பது எல்லையற்ற அடர்த்தி (கேவைந னநளேவைல) கொண்டதாக இருந்தது என ஹாக்கிங் கூறியதை நாம் முன்னர் கண்டோம். ஹாக்கிங் கூறியது மெய்யென்றால் இறைவனுடைய கட்டளைக்கும் பேரண்டத்தின் தோற்றத்திற்கும் இடையில் கால இடைவெளி எதுவும் இருக்க இயலாது என்பது மிகத் தெளிவாகும். ஏனெனில் காலம் அப்போது எல்லையற்ற அடர்த்தியைக் கொண்டிருந்தது என்பதால்!

மானிடப் பார்வையில் படைப்புக் காலம்

இறைவன் சார்பியல் நிலைக்கு அப்பாற்பட்டு எல்லா நிலைகளிலும் முழுமையானவனாக இருப்பதால் சார்பியல் பண்புகளுக்கு அவன் கட்டுப்படுவதில்லை. எனவே சார்பியல் பண்புகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட இயற்பியல் அமைப்பைக் கொண்ட மனிதர்களால் உணரப்படும் 2000 கோடி வருடத்தின் கால அளவு என்பது இறைவனைப் பொருத்தவரை அர்த்தமற்றதாகும். ஹாக்கிங் அவர்களின் காலத்தின் எல்லையற்ற அடர்த்தி பற்றிய அறிவியல் கண்டு பிடிப்பு நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட திருமறை வசனத்தை (உடனே ஆகிவிடும்!) மேலும் மேலும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது எனும் விபரங்களை இப்போது நாம் ஐயத்திற்கு இடமின்றி கண்டு தெளிந்தோம். எனவே இப்போது சார்பியல் நிலைக்குக் கட்டுப்பட்ட மனிதர்களின் பார்வையில் பேரண்டம் தோன்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு எவ்வளவு என்பதைப் பற்றித் திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

இது குறித்து திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

வானங்களையும், பூமியையும் அதற்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

(50 : 38)

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான்.

(7 : 54)

இறைவன் பேரண்டத்தை `ஆகுக! எனக் கட்டளை யிட்ட உடனே (மனிதர்களின் கால அளவின்படி மறுகணமே) பேரண்டம் தோன்றி விட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது எனக்கூறி திருக்குர்ஆனை விமர்சனம் செய்பவர்களின் கூற்று தவறானது என்பதை மேற்கண்ட திருமறை வசனங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஆயினும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு நமது கணக்கின்படி ஆறு நாட்கள் என்பது எந்த விதத்தில் சரியாகும் எனும் கேள்விக்குள் நுழையும் முன்னர் இவ்வசனங்களைக் குறித்து செய்யப்படும் மற்றொரு விமர்சனத்தை எடுத்துக் கொள்வது சிறப்பாகும்.

அந்த விமர்சனம் வருமாறு :

பேரண்டம் படைக்கப்படுவதற்கு ஆறு நாட்களே ஆயின என ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் வேறு சில வசனங்களுடன் இது முரண்படுகிறது என்பதே அந்த விமர்சனமாகும். முரண்படும் வசனங்களாக கீழ்க்காணும் வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவைகளாவன :

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகவும் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!

(41 : 9)

அதன் மேலே (பூமியின் மேல்) முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதில் உணவுகளை நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

(41 : 10)

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.

(41 : 11)

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்) இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.

(41 : 12)

மேற்கண்ட வசனங்களில் அடிக்கோடிட்ட நாட்களின் எண்ணிக்கையை கூட்டினால் (2+4+2)மொத்தம் எட்டு நாட்கள் கிடைக்கின்றன. எனவே பேரண்டம் படைக்கப் படுவதற்கு இந்த வசனங்களில் எட்டு நாட்கள் எனக் கூறி இருக்கும் போது முன்னர் கண்ட வசனங்களில் ஆறு நாட்கள் எனக் கூறி இருப்பது முரண்பாடாகும் என்பதே அவர்கள் கூறும் விமர்சனமாகும்.

இந்த விமர்சனம் தவறாகும். ஏனெனில் புகை மூட்டம் போன்ற மேகத்திலிருந்து பூமி கோள வடிவில் உருவாகி வருவதற்கே வசன எண் 41 : 9 ல் கூறப்பட்ட இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் அதற்கடுத்த வசனத்தில் பூமியைக் கோள வடிவில் உருவாக்கியதோடன்றி அதன் தனிச் சிறப்பான அடையாளங்களாம் (ளுயீநஉயைட கநயவரசநள) மலைகள் (வாயு மண்டலம், கடல்கள், காடுகள்) உட்பட அதன் உயிராதாரப் பொருட்கள் அனைத்தையும் உருவாக்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வசன எண் 41 : 9 ல் கூறப்பட்டுள்ள இரண்டு நாட்கள் வசன எண் 41 : 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நாட்களில் அடங்கி விடுகிறது. எனவே இந்த வசனங்களிலும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்களின் எண்ணிக்கை ஆறு என்பதால் முன்னர் கூறப்பட்ட முரண்பாடு அகன்று விடுகிறது.

நாட்களின் அளவு கோல்கள் யாவை?

திருக்குர்ஆனின் மீது நடத்தப்படும் அறிவியல் விமர்சனங்களில் மிக முக்கியமான விமர்சனமே இந்த ஆறு நாட்கள் தொடர்பானதாகும். வெறும் ஆறே நாட்களில் இவ்வளவு மகா மகா பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறுவது நகைப்பிற்கு இடமானதாகும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த விமர்சனம் ஒரு நாள் நம்முடைய கணக்கின்படியான 24 மணி நேரமாகும் எனக் கற்பனை செய்வதால் ஏற்பட்டதாகும்.

ஒரு நாள் என்பதன் கால அளவு 24 மணி நேரமாகும் என்பது நமது பூமிக்கு மட்டுமே செல்லுபடியாகும் கால அளவாகும். ஆனால் இந்தக் கால அளவு நமக்கு கூப்பிடு தொலைவில் இருக்கும் சந்திரனில் கூட செல்லுபடியாகாது. அங்கு ஒரு நாள் என்பது நம்முடைய 24 மணி நேரத்தைப் போன்று 28 மடங்காகும். அங்கு மாதமும் நாளும் ஒரே கால அளவைக் கொண்டதாகும். இதற்கு மாறாக வியாழன் (துரயீவைநச) கோளில் ஒரு நாள் என்பது வெறும் 10 மணி நேரமாகும்.

நாள் என்றால் எங்கும் எப்போதும் 24 மணி நேரமே எனும் பல்லவியை திருக்குர்ஆன் பாடிக் கொண்டிருப்பதில்லை என இத்திருமறையை ஒரே ஒருமுறை படித்தவர்களால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மேலும் திருக்குர்ஆன் நாள் என்ற சொல்லை வெவ்வேறு கால அளவைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தி இருப்பதையும் நாம் பார்க்க முடியும். சான்றாக பேரண்டம் அழிக்கப்பட்ட பிறகு அங்கு நிலைநிற்கப் போகும் நாளைப் பற்றிக் கூறும் போது அந்த நாள் நம் நமது பூமியில் கணக்கிடும் 50,000 வருடங்களுக்குச் சமமானது எனக் கூறுகிறது.

(பார்க்க 70 : 4)

இதைப் போன்றே இப்போது நாம் எந்தப் பூமியில் வசித்துக் கொண்டிருக்கிறோமோ மேலும் எந்தப் பூமியின் 24 மணி நேரத்தை ஒரு நாள் என்று கூறுகிறோமோ அதே பூமியின் ஒரு நாள் என்பது இறைவனிடத்தில் எந்த அளவு கோலால் அளக்கப்படுகிறது என்பதைக் கீழ்க்கண்டவாறு திருமறை கூறுகிறது :

(முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசர மாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.

(22 : 47)

மேற்கண்ட வசனத்திலிருந்து தெரியவரும் விபரங்களாவன : இறைவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து குற்றம் புரிந்தால் மறுமையில் வேதனை செய்யப்படுவீர்கள். மேலும் இந்த மறுமை சமீபமானது என இறைத்தூதர் மக்களை எச்சரித்த போது அதற்குப் பதிலாக அம்மக்கள் இறைத் தூதரிடம் ``நீ கூறுவது உண்மையாக இருந்தால் அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வா! எனக் கேலி செய்தனர். இதைக் குறித்து இறைவன் தன்னுடைய தூதரிடம் கூறும் விபரமே மேற்கண்ட வசனமாகும்.

இந்த வசனத்தில் மறுமை சமீபமானது என இறைத் தூதர் கூறத் தொடங்கி பல வருடங்கள் ஆன பிறகும் மறுமை வராததற்குக் காரணம் இந்த அற்பமான பூமியைப் பொருத்த அளவில் கூட இறைவனிடம் ஒரு நாள் என்பது எந்தக் கால அளவைக் கொண்டதோ அந்தக் கால அளவு நமது கணக்கின்படி 3,65,000 (1000 வருடங்களுக்கு) நாட்களுக்கு சமமானதாகும். எனவே மறுமை சமீபமானது என 1400 வருடங்களுக்கு முன் இறைத் தூதர் கூறியது மனிதர்களின் கணக்குப்படியன்று. அது பூமியைப் பொருத்த வரையிலான இறைவனின் கணக்குப்படியாகும். எனவே இறைவனின் கணக்குப்படி மறுமை அப்போதும் சமீபமாகவே இருந்தது என்பதை இறைத் தூதரைக் கேலி செய்த மக்களை இந்த வசனம் எச்சரிக்கிறது.

இந்த அற்பமான பூமியைப் பொருத்தவரை இறைவன் ஒரு நாள் எனக் குறிப்பிடுவது நாம் கணக்கிடும் 3,65,000 நாட்களையே எனில் இம்மாபெரும் பேரண்டத்தில் ஒரு நாள் என்பது நமது கணக்கின்படி மாபெரும் கால அளவைப் பெற்றதாகவே இருக்கக் கூடும் என நம்மால் யூகிக்க முடியுமேயன்றி பூமின் நாளைப் பற்றி இறைவன் வெளிப்படையாகக் கூறியதைப் போன்று பேரண்டத்தின் நாளின் (பேரண்டம் படைக்கப்படும் போது நிலவிலிருந்த நாளின்) கால அளவை இறைவனே கூறாதவரை நம்மால் அனுமானிக்க இயலாது.

நமது பூமியைப் பொருத்தவரை ஒரு நாள் என்பதற்கு நம்மிடம் இருக்கும் அளவு கோல் (ஊசநவநசடி) பூமி அதன் அச்சில் ஒரு முறை சுற்றும் கால அளவாகும். ஆனால் பூமியோ, இதர கோள்களோ, நட்சத்திரங்களோ, காலக்சிகளோ படைக்கப்பட்டிராத, ஆனால் அவை யாவும் படைக்கப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் `ஒரு நாள் என்பதன் அளவு கோல் என்ன என்பதை எப்படி நிர்ணயிப்பது? பேரண்டம் தோன்றுவதற்கு முன்னர் நிலை நின்ற காலத்தின் அளவு கோலை நம்மால் அறிய முடிந்தால் அதை வைத்தாவது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எவ்வளவு நாட்கள் தேவைப்பட்டன என்பதைக் கண்டறிய முடியும். ஆனால் நாம் அறிந்திருக்கும் அறிவியல் விதிகள் பேரண்டத்தின் தொடக்கம் குறித்த வினாடிக்கு முன்னர் உள்ள எதையும் கண்டுபிடிக்கும் திறமையைப் பெற்றிருக்கவில்லை.

இதைப் பற்றி ஹாக்கிங் இவ்வாறு கூறுகிறார்.

வரையறையில்லாத காலம்

`பேரண்டம் எல்லையற்ற அளவு சின்னதாகவும் எல்லை யற்ற அளவு அடர்த்தியாகவும் இருந்த போது, `பெருவெடிப்பு என அழைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது என ஹப்பிளின் தரிசனங்கள் (டீளெநசஎயவடிளே) அபிப்பிராயப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனம் (யீநசனஉவடி) செய்யும் அறிவியல் விதிகளின் அனைத்துத் திறமைகளும் பழுதடைந்து விடும். இந்தக் காலகட்டத்திற்கு முன் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்திருந்தால் அப்பொழுதும் இப்போதுள்ள கால கட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவைகளுக்கு அதனால் பாதிப்பை ஏற்படுத்த இயலாது. கிரகித்தறியக் கூடிய பின்விளைவுகள் எதுவும் அதற்கு இல்லாததால் அவைகளின் உள்ளமையைப் புறக்கணிக்கலாம். முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பில் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்தத் தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்.

(பக்கம் : 9)

மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் கூற்று பெரு வெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தால் அவைகளைக் கண்டு பிடிக்கும் திறமை நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு இல்லை என்பதைத் தெரிவிக்கிறது. அவ்வாறு ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தால் கூட அவை நடைபெறவில்லை எனப் புறக்கணிக்கலாம் என்கிறார் அவர். ஏனெனில் அவ்வாறு ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தால் அவைகளின் பின் விளைவுகள் பெருவெடிப்பு நிகழ்ச்சித் தொடர்களில் காணப்பட வேண்டும் எனவும் ஆனால் அப்படி ஏதும் இப்போது காணப்படவில்லை என்பதுமே இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் என்றும் கூறுகிறார். மேலும் மற்றொரு கருத்தையும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெருவெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.

மேற்கண்ட விபரங்களிலிருந்து பேரண்டம் படைக்கப்படும் முன்னர் வரையறுக்கப்பட்ட காலம் எதுவும் இல்லை என்பதாலும் அவ்வாறு இருந்திருந்தாலும் நம்மால் அதைக் கண்டு பிடிக்க இயலாது என்பதாலும் பேரண்டம் படைக்கப் பட்ட காலத்தில் ஒரு நாள் என்பது என்ன வென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் நிர்ணயிக்க முடியாது என்பது தெளிவு. இந்த இக்கட்டான நிலையில் பேரண்டம் படைப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக திருமறை கூறும் நாட்களின் கால அளவு என்ன என்பதை நம்மால் கண்டு பிடிக்க இயலாது என்பது தான் முடிவா? இதற்கோர் தீர்வே இல்லையா?

கண் சிமிட்டும் தீர்வு

திருமறை கூறும் பேரண்டம் படைக்கப்பட்ட நாட்களின் கால அளவை நம்மால் கண்டுபிடிக்க இயலவே இயலாதா? எனும் வினாவுடன் மெய்யும் பொய்யும் பிரித்தறிவிக்கும் இந்த அற்புதத் திருமறையை ஆய்வுக் கண்களோடு பார்வை யிட்டால் அறிவியல் கண்களைக் கூட இருட்டாக்கி விட்ட `வினோத சூத்திரங்களால் (ளபேரடயசவைல வாநடிசநஅள) இம்மியும் பாதிக்கப்படாமல் `அந்த நாட்களின் கால அளவை அறிவித் துக் கொண்டிருக்கும் `குர்ஆன் சூத்திரம் (ணுரசயஉ கடிசஅரடய) ஒன்று அதன் வசனங்களில் இழையோடுவதைக் கண்டு பிரமித்துப் போகிறோம்! திருமறை கூறுகிறது :

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(16 : 77)

பேரண்டத்தின் அழிவைப் பற்றிய தகவலே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் பேரண்டத்தின் அழிவு எப்போது ஏற்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவைக் குறிப்படுவதற்கு எந்த அளவுகோல் பயன்படுத்தப்பட்டதோ அதே அளவுகோலே அதன் அழிவு எப்போது எனக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானதாகும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது பேரண்டம் அழிவுறும் நேரம் என்பது இமை வெட்டுவதை விடக் குறைந்த நேரத்தில் வந்திருக்க வேண்டும். இது கூறப்பட்டு 1428 வருடங்களாகியும் அந்த நேரம் இன்னும் வந்து விடவில்லை! ஏன்?

காலம் சார்பற்றது, அது சுயம் பூரணமானது (ஹளெடிடரவந) என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை வாழ்ந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது. எனவே அதில் மனிதனுக்கும், இறைவ னுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர். இதன் காரணமாக இந்த வசனம் பேரண்டத்தின் அழிவு எப்போது என்று கூறவில்லை. ஆனால் பேரண்டம் அழிவைத் தொடங்கி விட்டால் எவ்வளவு நேரத்தில் அழிவு முடிவடையும் என்பதையே கூறுவதாக சிலர் எண்ணிக் கொண்டனர். ஆனால் இந்த அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் கண் இமைக்கும் நேரத்தில் இப்பேரண்டம் அழிவுற்று விடாது.

(இப்படி நினைப்பது உண்மையில் நகைப்புக்குரியதாகும் என்பதையும் கருத்தில் கொள்க.)

பேரழிவு நடைபெறும் போது நிகழக் கூடிய சில நிகழ்ச்சிகளைப் பற்றி திருமறை பல இடங்களில் கூறுகிறது. அவற்றுள் சில இவ்வாறு கூறுகிறது :

சூரியன் சுருட்டப்படும் போது; நட்சத்திரங்கள் உதிரும் போது; மலைகள் பெயர்க்கப்படும் போது; கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது; விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது

(81 : 1-5)

வானம் பிளந்து விடும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது, கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது

(82:1-3)

வானம் பிளந்து விடும் போது, கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அடிபணியும் போது, பூமி நீட்டப்படும் போது

(84 : 1-3)

மேற்கண்ட இறை வசனங்களை ஒரு முறை பார்த்தாலே எவ்வித விளக்கமும் தேவையின்றி இவை யாவும் வெறும் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடைபெற இயலாது என்றும் எனவே கண் இமைக்கும் நேரத்தை விட குறைவான நேரம் என்பதை நமது கணக்கின்படி எடுத்துக் கொண்டு பேரண்டம் அழிவுற்று முடியும் நேரத்தை அதனுடன் பொருத்திப் பார்த்தாலும் அந்த நேரத்திற்குள் பேரண்டம் அழிவுற்று முடிந்து விடாது. எனவே மேற்கூறப்பட்ட வசனத்தில் பேரண்டத்தின் அழிவைக் குறித்து தெரிவிக்கப்பட்ட கால அளவு எக்காரணத்தைக் கொண்டும் மனிதனின் காலக் கணக்கினடிப்படையிலன்றி பேரண்டத்தைக் குறித்து இறைவனிடம் உள்ள கணக்கினடிப்படையிலேயாகும் என்பது தெளிவாகிறது. இந்த முடிவை மற்றொரு கோணத்திலும் சரிபார்ப்போம்.

இறை மறுப்பாளர்களின் கேலியும், கேள்வியும்

பேரண்டம் எப்போது அழிவுறும் என இறைவன் கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. இறைவனால் அனுப்பப்பட்ட தூதராம் முஹம்மது (இறைவனின் சாந்தி அவர் மீது நிலவட்டுமாக!) நபியை ஏற்காமலும், இறைவனுக்குக் கட்டுப்படாமலும் இருந்தால் மறுமையில் தண்டிக்கப்படுவீர்கள் எனத் திருக்குர்ஆன் இடைவிடாமல் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. இதைக் கேட்ட இறை மறுப்பாளர்கள் ``மெய்யாகவே அப்படி ஒரு மறுமை இருந்தால் அது எப்போது வரும்? அது நடைபெறும் நேரத்தை எங்களிடம் கொண்டு வா! எனக் கூறி கேலி செய்து கொண்டே வந்தனர். இப்பரிகாசங்களுக்கு இறைவன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதில் சொல்கிறான். அதில் ஒன்றே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனமாகும். சான்றாக இறை மறுப்பாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதையும் அதற்கு இறைவன் தனது மாமறையில் பதிலளிப்பதையும் இவ்வாறு காணலாம் :

அந்த நேரம் எப்போது வரும் என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். அது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும் பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும் என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ``அது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

(7 : 187)

மேற்கண்ட இறை வசனத்தில் இறை மறுப்பாளர்கள் மறுமையின் நேரம் எப்போது எனக் கேட்பதையும் அந்த நேரத்தைப் பற்றிய அறிவு தன்னிடமே உள்ளது என்றும் அந்த நேரம் வந்தவுடன் நாமே அதை நிகழச் செய்வோம் என இறைவன் கூறுவதையும் கண்டோம். மற்றொரு சந்தர்ப்பத்தில் திருக்குர்ஆன் இறை மறுப்பாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறது.

``நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்) என்று அவர்கள் கேட்கின்றனர். ஒரே ஒரு சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே அது பிடித்துக் கொள்ளும்.

(36 : 48,49)

மேற்கண்டவாறு பலவிதமான எச்சரிக்கைகள் இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்ட பின்னரும் நிராகரிப் பாளர்கள் தங்களது நையாண்டியை நிறுத்தாமல் ``மறுமை உண்டென்றால் அது எப்போது? நீ உண்மையாளனாக இருந்தால் அதைக் கொண்டு வா எங்களிடம் எனக் கூறி இறைத் தூதரை அவமதித்து வந்தார்கள். அப்போது இறைவன் புறத்திலிருந்து மற்றொரு எச்சரிக்கை இவ்வாறு வருகிறது :

அவனே முந்தைய ஆது மற்றும் ஸமூது சமுதயத்தையும், (அதற்கு) முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் விட்டு வைக்காது அழித்தான். அவர்கள் மிகப் பெரும் அநீதி இழைத்து வரம்பு மீறியோர்களாக இருந்தனர். (லூத்துடைய சமுதாயமான) தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊரையும் ஒழித்தான். அதைச் சுற்றி வளைத்துக் கொள்ள வேண்டியது சுற்றி வளைத்துக் கொண்டது. உனது இறைவனின் அருட்கொடைகளில் எவற்றில் சந்தேகம் கொள்கிறாய்?இது முந்தைய எச்சரிக்கைகளில் ஒரு எச்சரிக்கை! நெருங்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது! அல்லாஹ்வையன்றி அதை வெளிப்படுத்துபவர் எவருமில்லை. இந்தச் செய்தியிலா ஆச்சரியப்படுகிறீர்கள்? அழாமல் சிரிக்கிறீர்கள். அலட்சியம் செய்வோராகவும் இருக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கே ஸஜ்தா (சிரம் பணிந்து) வணங்குங்கள்.

(53 : 50 - 62)

இறைவனுடைய இந்த எச்சரிக்கையில் மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களையும்,அட்டூழியங்களையும் இறைவன் அனுமதித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றும் குற்றவாளிகளை அவன் தண்டிப்பான் என்றும் அழுத்தமாகக் கூறுவதோடு அவர்களின் மூதாதையர்கள் அவ்வாறு கொடுமைகள் புரிந்த போது அவர்களைத் தண்டித்த வரலாறுகளை நிராகரிப்போர்களுக்கு நினைவூட்டுகிறான். மேலும் இறைவனின் இத்தூதர் (முஹம்மத் - இறைவனின் சாந்தி அவர் மீது நிலவட்டுமாக!) தூதர்களின் பட்டியலில் இறுதியானவர்களாக இருப்பதால் உலக மொத்தத்திற்கும் இவரே தூதராக அனுப்பப்பட்டுள்ளார். எனவே இவருக்குப் பிறகு இவ்வுலகின் ஆயுள் முடிவடைகிறது. எனவே மறுமையின் நேரமும் நெருங்கி விட்டது என மறுமையைப் பற்றி கூறப்படும் வசனங்களிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மறுமையின் நேரம் நெருங்கி விட்டது என்பதைத் திரும்பத் திரும்ப திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

(பார்க்க : 6:31, 12:107, 20:15, 21:40, 22:55, 31:34, 33:63, 38:15, 41:47, 43:66,85, 47:18, 79:42,43)

இருந்த போதிலும் நிராகரிப்பாளர்கள் மறுமையை மறுத்துக் கூறி இறைத் தூதரைக் கேலி செய்வது தொடர்ந்து கொண்டிருந்த போது மேலும் உறுதி வாய்ந்த மிகத் தெளிவான வார்த்தைகளால் அவர்களை எச்சரிக்கை செய்கிறான் பேரண்டத்தின் படைப்பாளனாம் வல்ல இறைவன். அந்த எச்சரிக்கை தாம் நாம் முன்னர் கண்ட வசனத்தில் (16 : 77) கூறப்பட்டிருக்கும் (கண் சிமிட்டுவதை விடக் குறைந்த நேரத்தில் மறுமையின் நேரம் வந்து விடும் எனும்) செய்தியாகும்.

கேள்விக்கேற்ற பதில்

நாம் இது வரை கேட்ட திருமறை வசனங்களிலிருந்து நிராகரிப்பாளர்களின் கேள்வி மறுமையின் நேரம் எப்போது என்பதைப் பற்றியே ஆகும் என்பதை விளங்கிக் கொண்டோம். இதற்கு மாறாக மறுமை தோன்றி விட்டால் அது எவ்வளவு நேரத்தில் முடிவடையும் எனும் செய்தியில் யாருமே அங்கு அக்கறை காட்டவில்லை என்பதையும் ஐயமற விளங்கிக் கொண்டோம். மறுமையையே நம்பாதவர்கள் ``மறுமை ஒன்று உண்டென்றால் அது எப்போது? எனும் கேள்வியைத் தாம் கேட்பார்களேயன்றி மறுமை வந்து விட்டால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் எனும் கேள்வியை எழுப்ப மாட்டார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

எனவே இறைத் தூதரிடம் அவர்கள் எழுப்பிய கேள்வி மறுமை (இப்பேரண்டம் அழிக்கப்பட்டு, மற்றொரு வடிவத்தில் இதைத் திரும்பப் படைத்து, மனிதர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, விசாரணை நடத்ததப்படுவதாகக் கூறப்படும் நிகழ்ச்சியின் நேரம்) எப்போது என்பதேயாகும் என்பதால் இறைத் தூதரிடம் அவர்கள் எதனைக் குறித்து கேள்வி தொடுத்துக் கொண்டிருந்தார்களோ அதனைக் குறித்தே திருமறையும் பதில் சொல்லியது என்பதை ஏற்றுக் கொள்வதில் இதற்கு மேல் யாருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லையன்றோ?

இப்போது நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட வசனத்தின் (16:77) பின்னணியை ஓரளவு விளங்கிக் கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள `நேரம் என்பது மறுமை எப்போது தொடங்கும் என்பதைப் பற்றியதே எனும் ஐயமறத் தெரிந்து கொண்டோம். எனவே இவ்வசனத்தில் குறிப்பிட்டபடி மறுமை ஏன் இன்னும் தொடங்கவில்லை என்பதை இப்போது ஆய்வு செய்வோம்.

வேறுபட்ட காலக் கணக்குகள்

நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட வசனத்தின் பொருள் சுருங்கக் கூறின் ``(மறுமை) நேரத்தின் காரியம் கண் இமை வெட்டுவது போன்றதா அல்லது அதை விட நெருங்கியதோ அன்றி வேறு இல்லை என்பதாகும். இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டதற்கேற்ப காரியம் நடைபெற்றிருந்ததால் இந்த வார்த்தைகள் சொல்லி முடிப்பதற்குள் மறுமையின் நேரம் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இந்த வார்த்தை கள் சொல்லப்பட்டு 1428 வருடங்கள் கழிந்த பிறகும் மறுமை நேரம் துவங்கவில்லை. இது ஏன் என்பதே இப்போது நம் முன் இருக்கும் கேள்வியாகும். பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான்.

ஆனால் அந்தக் கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். அக்காலத்தில் நாமும் இல்லை நாம் அறிந்தவரை பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக்கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படியன்று. எனவே இப்பேரண்டத்தின் அழிவு (மறுமையின் ஆரம்பம்) எப்போது என்பது குறித்து இறைவன் கூறியதும் நமது கணக்கின்படியன்று. மாறாகப் பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். இதன் காரணமாகவே மறுமை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதே இந்த வினாவிற்குரிய பதிலாகும்.

மேற்கண்ட பதிலைச் சரியாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு கண் இமை வெட்ட நமக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதைக் கவனிப்போம். இமை வெட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு வினாடியில் இரண்டு, மூன்று முறை நம்மால் இமை வெட்ட முடியும். ஆயினும் திருக்குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்துவிடும் எனக் கூறுவதில் திருப்தி அடையாமல் அதை விடக் குறைவான நேரத்தில் மறுமை வரக் கூடும் எனக் கூறுகிறது. எனவே இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட் (அடைட ளநஉடினே) கணத்தில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கம் இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

திருக்குர்ஆன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் அற்புதத்தின் பால் நாம் இப்போது வந்து சேர்ந்துள்ளோம்! ஆம்! யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவைக் கண்டுபிடிப்பதற்கான ஓர் அரிய சூத்திரத்தை இப்போது நாம் திருமறையிலிருந்து முதலாவதாகக் கண்டு விட்டோம். விளக்கமாகக் கூறுவோம்.

திருக்குர்ஆன் கூறும் கணித சூத்திரம்

பேரண்டத்தின் அழிவு (மறுமையின் ஆரம்பம்) எப்போது என்பது பற்றித் திருமறை கூறிய காலஅளவு ஏறத்தாழ 0.2 வினாடி எனத் திருமறை வசனத்திலிருந்து நாம் அனுமானித்தோம். ஆயினும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1428 வருடங்களாகியும் இப்பேரண்டம் இன்னும் அழிவுறத் துவங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதைய 1428 வருடங் களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1428 வருடங்களை விட அதிகம் என்பதாகும். சுருக்கமாக : 0.2 வினாடி ழூ 1428 வருடங்கள்

இந்த இடத்தில் திருமறையின் கணக்குப்படி பேரண்டத்தின் 0.2 வினாடி என்பது உலகியல் கணக்கின்படி 1428 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை `1428 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1428 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் நிலைபெறும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகும். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1428 வருடங்களுக்கு மேல் என்றே குறிப்பிட முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1428 என்ற எண் நிரந்தர (ஊடிளேவயவே)மான தன்று என்றும் அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1429, 1430, 1431 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் வாசகர்கள் எளிதாக விளங்கி இருப்பீர்கள்.

இப்போது வாசகர்களிடம் மற்றொரு வினா எழலாம். ``பேரண்டத்தின் 0.2 வினாடி என்பதன் சரியான விளக்கம் இப்போதும் மர்மமாகவே இருக்கிறதன்றி திட்டமாக அதன் காலத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லையே! இது ஏன்? என்பதே அந்த வினாவாக இருக்கும். இதை விளங்குவதற்கு நாம் வேறு சில விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே முதலாவதாக பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறப் பட்டிருக்கும் ஆறு நாட்கள் என்பதன் கால அளவு நமது உலகியல் கணக்குப்படி திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்தால் கணக்கிடுவோம். அக்கணக்கு வருமாறு:

கணக்கிடும் முறை

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி

ஒரு நாளில் உள்ள மொத்தம்

0.2 வினாடிகள் = 0.2 வினாடி ஒ வினாடி ஒ நிமிடம் ஒ மணி

5 ஒ 60 ஒ 60 ஒ 24

= 43200 (0.2 வினாடிகள்)

ஃ ஆறு நாட்களுக்கு = 43200 ஒ 6 = 2259000 ----- 1

பேரண்டத்தின் 0.2 வினாடியின்

காலஅளவு = 1428 (உ.வ.மே) *

ஃ 6 நாட்களில் மொத்தமுள்ள

0.2 வினாடிகளின் கால அளவுக்கு

நிகரான உலகியல் வருடங்கள் = 1428 ஒ 2259000

= 370,13,76,000 (உ.வ.மே)

என்னவென்று புகழ்வோம் இம்மாமறை தந்த கணித சூத்திரம் தனை!

திருக்குர்ஆன் விடுக்கும் அறை கூவலிலிருந்து உருவா கும் ஏனைய புரட்சிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் பளிச்சிடுவது அதன் அறிவுப் புரட்சியாகும். அந்த அறிவுப் புரட்சியின் ஓர் அம்சமே இது போன்ற அறிவியல் புரட்சியாகும். திருமறையில் காணப்படும் அதன் அறிவுப் புரட்சி வையகத்தில் அதை ஈடு இணையற்ற அற்புதமாக விளங்கச் செய்கிறது!

இது வரை உலகில் தோன்றிய மாபெரும் அறிவியலாளர் களால் நடத்தப்பட்ட பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கே இப்பேரண்டம் உருவாகுவ தற்கு 500 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்களாயின என்பது. இந்த அறிவியல் உண்மையன்றோ திருமறையின் கணித சூத்திரம் கூறிக் கொண்டிருக்கிறது!

பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாளிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லோ ஷேப்லி கூறுகிறார்!

பேரண்டம் உருவாகுவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் று. ஹாக்கிங்!

பேரண்டம் உருவாக்கப்படுவதற்கு 370 கோடி (முழுமை செய்த எண்ணில்) வருடங்களுக்கு மேல் தேவைப்பட்டன எனக் கூறுகிறது இந்த அற்புத் திரு மறையிலிருந்து நாம் கண்ட கணித சூத்திரம்!

திருமறை கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறிவிளலளர்களால் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளோடு ஒட்டி வருகிறதல்லவா!

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் திருக்குர்ஆனை மெப்பிக்கிறதா? அல்லது பொய்ப்பிக்கிறதா? என்பதைக் கண்டறிய முயற்சி செய்பவர்களுக்கு மிகச் சிறந்த ஆதாரமே பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைப் பற்றிய திருக்குர்ஆன் கூறும் கணித சூத்திரமாகும். ஏனெனில் திருக்குர்ஆன் அறிவியலுக்கு முரணானது எனக் கூற நிராகரிப்பாளர்கள் பயன்படுத்தி வந்த முக்கியமான விமர்சனமே திருமறை கூறும் பேரண்டத்தின் படைப்புக் காலமாகும். இப்போது அவர்கள் எண்ணி வந்ததற்கு மாறாக திருமறை கூறிக் கொண்டிருக்கும் பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவை அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிரூபிக்கும் பணியையே செய்து வருகின்றன எனப் புரிந்து கொள்வதில் இதற்கு மேல் யாருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லை.

எதிர் நோக்கும் விமர்சனம்

பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவைக் கண்டுபிடிக்க திருமறையிலிருந்து நாம் பெற்ற சூத்திரத்தைக் காணும் நமது விமர்சகர்கள் இக்கணித சூத்திரம் நமக்கு உதவுவதை விட அவர்களின் நிலைபாட்டிற்கே கூடுதலாக உதவும் என மீண்டும் தப்பெண்ணம் கொள்ளக்கூடும். ஏனெனில் இப்பேரண்டம் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் நிலைநின்றாலும் திருமறை கூறிய பேரண்டப் படைப்பின் கால அளவுக்கு (6 நாட்களுக்கு) அது சாதகமாகவே அமையும். அதே நேரத்தில் இப்பேரண்டம் இன்னும் கிட்டத்தட்ட ஒரு பதினாயிரம் வருடங்கள் நிலைத்திருந்தால் அது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிவியல் அனுமானத்திற்கு எதிராக அமையும்.

சான்றாக இப்பேரண்டம் இன்னும் 8572 வருடங்கள் நிலைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தால் திருக்குர்ஆன் வழங்கப்பட்டு அன்றைக்கு (8572வருடங்கள் கழித்து) 10,000 வருடங்கள் (1428 + 8572) ஆகிவிட்டது எனப் பொருளாகும். அந்த நிலையில் திருமறை அப்போதும் கூறிக் கொண்டிருக்கும் ``மறுமை நேரம் கண் இமைப்பது போன்றதோ அல்லது அதை விடக் குறைந்தோ அன்றி வேறில்லை எனும் திருமறை வசனத்திற்கு என்ன பொருளாக இருக்கக் கூடும்? அப்போது அதன் பொருள் பேரண்டத்தின்0.2 வினாடி (கண் இமைப்பதை விடக் குறைந்த நேரம்) என்பது உலகியல் கணக்குப்படி10,000 வருடங்களை விட மிகுதியானது என்பதாகும். இந்த நிலையில் திருமறையில் இருந்து நாம் பெற்ற சூத்திரத்தின்படி பேரண்டம் படைக்கப்பட்டதாகத் திருமறை கூறிய ஆறு நாட்களின் கால அளவு கணக்கிட்டால் அது இவ்வாறு அமையும்.

விமர்சகரின் கணக்கு

பேரண்டத்தின் 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி = 10,000 வருடங்கள்

6 நாட்களில் உள்ள மொத்தம்

0.2 வினாடி அலகுகள் =22,59,000 ----- 1

ஓர் அலகு 0.2 வினாடியின்

கால அளவு 10,000 வருடங்களுக்கு

மேல் என்றால் 22,59,000

அலகுகளின் கால அளவு = 22,59,000 ஒ 10,000

=2259,00,00,000 வருடங்களுக்கு மேல்.

மேற்கண்ட கணக்கின் அடிப்படையில் திருக்குர்ஆன் வழங்கப்பட்ட பின்னரும் பதினாயிரம் வருடங்கள் இப் பேரண்டம் நிலை பெற்றால் பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் உலகியல் கால அளவு திருமறையிலிருந்து பெற்ற கணித சூத்திரத்தினடிப்படையில் கணக்கிடும் போது 2,250 கோடி வருடங்களுக்கு மேல் எனும் இலக்கத்தைக் காட்டுகிறது. இது அறிவியலாளர் ஹாக்கிங் கூறும் உயர்ந்த அளவாகிய 2000 கோடி வருடங்களை மீறி விடுகிறது. எனவே நமது விமர்சகர்கள் இக்கணித சூத்திரம் திருக்குர்ஆன் அறிவியலுக்கு முரணானது எனும் கருத்தை ஊர்ஜிதப் படுத்தவே உதவுகிறது என வாதிடக் கூடும் எனக் கூறினோம்.

இந்த இடத்தில் இப்பேரண்டம் இன்னும் 8500 வருடங்களுக்கு மேல் நிலை பெற்றிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது எனும் மறுகேள்வி எழலாம். ஆயினும் இன்றைய அறிவியல் அனுமானங்களின்படி இச்சூரியக் குடும்பம் அழிவுறுவதற்கே பல மில்லியன் வருடங்கள் தேவைப்படும் எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். பேரண்டம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சம் 1000 கோடி வருடங்களுக்குள் அழிந்து விடுவதற்கான எவ்வித அறிகுறியும் இப்போது தென்படவில்லை எனக் கூறுகிறார் ஹாக்கிங்!

``1000 கோடி வருடங்கள் எங்கே! வெறும் 10,000 வருடங்கள் எங்கே? எனக் கூறி நமது கணிப்பை விமர்சகர்கள் எள்ளி நகைக்கக் கூடும். ஆனால் திருமறை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மற்றுமோர் அற்புதத்தையும் அவர்கள் பார்த்து விட்டுப் பிறகு நகைப்பதா அல்லது திகைப்பதா? என முடிவு செய்யட்டும்.

திகைக்க வைக்கும் திருக்குர்ஆன்

திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்திலிருந்து இப்பேரண்டம் வெறும் பதினாயிரம் வருடங்கள் கூட நீடிக்கப் போவதில்லை எனக் கண்டோம். ஆனால் இப்பேரண்டம் ஆயிரம் கோடி வருடங்களுக்குள் கூட அழிவுறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என ஹாக்கிங் கூறுகிறார். இப்போது திருக்குர்ஆன் கூறுவது உண்மையாக இருப்பின் ஒன்று ஹாக்கிங் செய்த அறிவியல் அனுமானம் தவறாக இருக்க வேண்டும் அல்லது பேரண்டம் விரைவிலேயே அழிவதற்கான அறிகுறிகள் தென்பட்டிருந் தும் அவர் பொய் கூறுவதாக இருக்க வேண்டும். இவற்றுள் எது உண்மை என திருக்குர்ஆனைக் கேட்டால் அதன் வரிகளுக்கிடையில் இருந்து வெளிப்படும் பதில் நம்மை வியக்கச் செய்கிறது.

ஆம்! ஹாக்கிங் அவர்களின் அறிவியல் அனுமானத்தி லும் தவறில்லை, அவர் கூறுவது பொய்யும் இல்லை என்பதே திருமறையின் பதிலாகும். இதெப்படி சாத்தியமாகும் என நம்மைத் திகைப்பிலாழ்த்தும் சத்தியத் திருமறை அதற்கான காரணத்தையும் அதன் பற்பல வசனங்களில் கூறிக் கொண்டி ருக்கிறது. சான்றாக :

உங்களிடம் அந்த நேரம் ``திடீரென வரும் வரை அல்லது (மறுப்போர்க்கு) பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏக இறைவனை) மறுப்போர் இதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள்.

(22 : 55)

அவர்கள் உணராத நிலையில் திடீரென்று அந்த நேரம் அவர்களிடம் வருவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?

(43 : 66)

பேரழிவுக்கு அறிகுறிகள் இல்லை

மேற்கண்ட திருமறை வசனங்களில் அடிக்கோடிடப்பட்ட வாசகங்களைக் கவனித்தால் அவற்றுள் பேரண்டத்தின் அழிவைப் பற்றி மிக முக்கியமாக இரண்டு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். முதலாவது பேரண்டத்தின் அழிவு திடீரென ஏற்படக் கூடியதாகும் என்றும் இரண்டாவது அந்த அழிவு நிகழப் போகும் விபரத்தை நம்மால் முன்கூட்டியே உணர்ந்து கொள்ள முடியாது என்பதுமாகும். பேரண்டத்தின் அழிவு நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்குரிய அறிகுறிகள் இப்பேரண்டத்தில் இருந்து வருவது நமது அறிவியல் கண்களுக்குப் புலப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அறிகுறிகள் எதுவும் தென்படாமல் பேரண்டம் அழிவுறுமாயின் அதுவே நம்மால் உணர்ந்து கொள்ள இயலாத நிலையிர் பேரண்டம் அழிவுறும் நிகழ்ச்சியாகும். இப் பேரண்டம் அப்படிப்பட்ட நிலையிலேயே அழிவுறும் என்பதே மேற்கண்ட திருமறை வசனங்கள் தெரிவிக்கும் செய்தி யாகும்.

(மேலும் பார்க்க 6 : 31, 12 : 107, 21 : 40, 47 : 18)

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பேரண்டத்தின் அழிவு எந்தக் கணத்தில் துவங்குமோ அந்தக் கணம் வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் நமக்குப் (நமது அறிவியல் அறிவுக்கு) புலப்படாது என்பதையே திருமறை கூறிக் கொண்டிருக்கிறது. திருமறையின் இக்கூற்றிலிருந்து 1000 கோடி வருடங் களுக்குள் பேரண்டம் அழிவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனும் ஹாக்கிங் அவர்களின் அனுமானம் தவறான அனுமானம் இல்லை என்பதும் அவர் கூறியது பொய் இல்லை என்பதும் ஐயமறத் தெளிவாகி, நம்மை வியப்பிற்குள் ஆழ்த்துகிறது!

ஹாக்கிங் அவர்களின் எந்த அறிவியல் அனுமானம் (ஆயிரம் கோடி வருடங்களுக்குள் இப்பேரண்டம் அழியாது எனும் அனுமானம்) திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்தை திருமறையின் விமர்சகர்களுக்குச் சாததகமாக மாற்றி விடும் எனக் கருத வாய்ப்பு இருந்ததோ உண்மையில் அதே ஹாக்கிங் அவர்களின் அதே அறிவியல் அனுமானத்தை இந்த ஒப்பற்ற மாமறை தனக்கே சாதகமாக, தன்னையே மெய்ப்பிக்கும் அறிவியல் அனுமானமாக மாற்றி விட்ட வித்தையைக் கண்டு திகைப்படையாமல் இருக்க முடியுமா?

இப்பேரண்டம் அழிவதற்கான எந்த அறிகுறியும் அது அழிவுறப் போகும் வினாடி வரை தென்படவே தென்படாது எனத் திருமறை கூறினால், ஆம்! ஆம்! தென்படவே தென்படவில்லை எனக் கூறி திருமறையை மெய்ப்பிக்க இத்துறையில் ஆற்றல் பெற்ற அறிவியல் நிபுணர்களும் இருக்க வேண்டுமல்லவா? உண்மையிலேயே அப்பணியைத் தான் ஹாக்கிங் போன்ற உலகின் தலை சிறந்த விஞ்ஞானி கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எனும் போது திகைப்பிற்கு மேல் திகைக்க வைக்கும் இம்மாமறை திருக்குர்ஆனின் தெய்வீக ஆற்றலுக்கு இதை விடச் சிறந்த அறிவியல் ஆதாரம் வேறென்ன வேண்டும்?

பேரண்டம் அழிவதற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படாமல் அது திடீரென அழிவுறும் என்பது இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு வியப்பளிப்பதில்லை. ஏனெனில் அதனை ஆக்கவும், அழிக்கவும் ஆற்றலுள்ளவன் தன் ஆளுகையில் அதை வைத்திருக்கிறான் என்றும் அழிப்பதற் கென்றே படைக்கப்பட்டிருக்கும் இப்பேரண்டத்தை அவன் நாடிய போது அழிப்பான்; ஆயினும் அவன் அழிக்கப் போகும் கணம் வரை அதில் அழிவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படப் போவதில்லை என்பதும் திருக்குர்ஆனிலிருந்து அவர்கள் விளங்கியுள்ளார்கள்.

சான்றாக உலகை உலுக்கிய இரண்டு அழிவுச் செய்திகளை சில வருடங்களுக்கு முன் நாம் பார்த்தோம். முதலாவது பாப்ரி மஸ்ஜிதின் கட்டிடத்திற்கு மேல் விஷமிகள் ஏறும் வரை அக்கட்டிடம் அழிவதற்கான எந்த அறிகுறியும் அக்கட்டிடத்தில் தென்படவில்லை. ஆனால் விஷமிகள் அதன் மீது ஏறிய அடுத்த கணமே அது அழியத் துவங்கிற்று. இதைப் போன்று உலக வர்த்தக மையத்தை (றுடிசடன கூசயனந உநவேநச) விஷமிகள் விமானத்தால் இடிக்கும் வரை அக்கட்டிடத்தில் அழிவதற்கான எந்த அறிகுறியும் தென்பட்டிருக்காது. ஆயினும் விஷமிகள் அதனைத் தாக்கியதும் அது அழிவுறத் துவங்கியது. இதைப் போன்று பேரண்டத்தை அழிக்க வல்ல பேரொலி (நம் அறிவுக்கு இது வரை எட்டாத விசித்திரமான ஒலி) ஒலிக்கப் பட்ட அதே கணத்தில் அதன் அழிவு தொடங்கி விடும்.

இயற்கையும் செயற்கையும் வெவ்வேறானவை

இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மிகமிக முக்கியமான செய்தி யாதெனில் உலக வர்த்தக மையம் சில விஷமிகள் தகர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறையிலிருந்து மிகவும் நம்பத் தகுந்த செய்திகள் அமெரிக்க ஜனாதிபதிக்கு அது தகர்க்கப்படும் சில நாட்களுக்கு முன் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தங்கள் நாட்டிலேயே மிகச் சிறந்த ஒரு பொறியாளர்கள் குழுவை அமைத்து அக்கட்டிடம் உடனே அழிவுறுவதற்கான அறிகுறிகள் ஏதேனும் அக்கட்டிடத்தில் தெரிகிறதா? என சோதித்து அறிக்கை சமர்ப்பிக்கக் கூறினால் அவரைப் பற்றி என்னென்று சொல்வது? ஒரு கால் ஒரு ஜனாதிபதி இப்படிப்பட்ட நிலையில் ஒரு பொறியாளர் குழுவை அமைத்ததாகவும் அக்கட்டிடத்தைச் சோதனையிட்டு அக்கட்டிடம் குறைந்த பட்சம் மூன்று நூற்றாண்டுகளுக்குள் அழிவுறும் அறிகுறிகள் எதுவும் அதில் தென்படவில்லை என அறிக்கை சமர்ப்பித்ததாகவும் வைத்துக் கொள்வோம்.

இந்த அறிக்கைக்கும் உளவுத்துறை சமர்ப்பித்த தகவலுக்கும் இடையில் என்ன தொடர்பு?

பொறியாளர்களின் இந்த அறிக்கையைப் பார்த்து விட்டு பகுத்தறிவுள்ள யாரும் பொறியாளர்களின் ஆய்வறிக்கையில் தவறு நேர்ந்துள்ளது என்றோ அல்லது அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றோ கூற மாட்டார்கள். ஆயினும் விஷமிகள் தடுக்கப்படவில்லையெனில் அக்கட்டிடம் உடனே தகர்க்கப்பட்டு விடும் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கும்.

இதைப் போலவே இப்பேரண்டம் 1000 கோடி வருடங்களுக்குள் அழிவுறும் அறிகுறிகள் அப்பேரண்டத்தில் தென்படவில்லை என அறிவியலாளர்கள் கூறினால் அக்கூற்று உண்மையாகவே இருந்த போதிலும் திருக்குர்ஆன் கூறும் பேரண்டத்தின் அழிவு அறிவியலாளர்கள் கூறுவதி லிருந்து வேறுபட்டதாகும் என்பது மிக எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். அறிவியலாளர்கள் பேரண்டத்தின் இயற்கையான (பேரண்டத்தை இயக்கும் விதிகளின்படி நடைபெறும் நிகழ்ச்சிகள்) அழிவைக் குறித்துப் பேசும் போது திருக்குர்ஆன் இறைவனால் நிகழ்த்தப்படும் செயற்கையான (நாம் இது வரை அறிந்திராத மற்றொரு விதியால் செய்யப் படுபவை) அழிவைக் குறித்தே பேசுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனின் அற்புதங்களில் இதுவும் ஒன்று

இந்த இடத்தில் நாம் மனதிற்கொள்ள வேண்டிய செய்தி யாதெனில் இப்பேரண்டம் ஆயிரம் கோடி வருடங்களுக்குள் அழியப் போவதில்லை எனும் அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் தீர்க்க தரிசனம் இப்பேரண்டத்தின் பேரழிவைப் பற்றிய திருக்குர்ஆனின் கூற்றைப் பொய்ப்பிக்கவில்லை மாறாக மெய்ப்பிக்கவே செய்கிறது என்பதாகும். ஏனெனில் மறுமை எப்போது நடைபெறும் என்பதை இறைவன் ஒருவனைத் தவிர வேறு ஒருவராலும் முன் கூட்டி அறிய முடியாது என்பதும் அதன் வருகை திடீர் வருகையாகவே இருக்கும் என்பதும் திருக்குர்ஆனின் கூற்றாகும். எனவே திருக்குர்ஆன் கூறியது உண்மையாக இருக்க வேண்டு மானால் பேரண்டம் அழிவதற்கான எந்த அறிகுறியும் பேரண்டத்தில் இப்போது தென்படக் கூடாது. எனவே பேரண்டம் இப்போது மட்டுமின்றி 1000 கோடி வருடங்களுக் கிடையில் கூட அழியப் போவதற் கான எந்த அறிகுறியும் அதில் தென்படவில்லை எனக் கூறி திருக்குர்ஆனை மெய்ப்பிக்கும் பணியைத் தான் ஹாக்கிங் செய்து கொண்டிருக்கிறார். தன்னை மறுப்பவர்களிலிருந்தே தமது மெய்மைக்குரிய சான்றுகளைக் கொண்டு வருவதும் திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகும்.

பெரும் சுருக்கத்தின் அறிகுறிகள்

பேரண்டத்தின் அழிவின் போது நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளில் பலவும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. அவற்றுள் சில முக்கியமானவை வருமாறு :

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (அதைச்) செய்பவராவோம்.

(21 : 104)

அந்நாளில் வானம் உருகிய செம்பு போல் ஆகும்.

(70 : 8)

நட்சத்திரங்கள் விழும் இடம் மீது சத்தியம் செய்கிறேன்.

(56 : 75)

சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது, மலைகள் பெயர்க்கப்படும் போது

(81 : 1,2)

அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் நீங்கள் அவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

(30 : 11,12)

பேரண்டத்திற்கு ஏற்படப் போகும் அழிவைக் கூட திருக்குர்ஆன் வர்ணிக்கும் போது இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்க கட்டம் வரை நாம் பெற்றுள்ள அறிவியல் அறிவால் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அமைந்திருப்பது திருமறையின் அறிவியல் ஆய்வாளர்களை வியப்பின் சிகரத்திற்கே அழைத்துக் செல்லக் கூடியதாகும். அவ்வர்ணனைகளில் கீழ்க்காணும் அறிவியல் தகவல்கள் அடங்கியுள்ளன :

  1. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானம் சுருட்டப்படுதல்
  2. பேரண்டப் படைப்பை முதலில் துவக்கியது போன்றே மீண்டும் தொடங்குதல்
  3. வானம் உருகிய செம்பைப் போல் ஆகுதல்
  4. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் இடங்கள்
  5. சூரியன் சுருட்டப்படுதல்
  6. மலைகள் பெயர்க்கப்படுதல்

மேற்கண்ட ஆறு பிரதான நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி எண்-2 ஐத் தவிர மற்றவை யாவும் இப்பேரண்டத்தின் அழிவைக் குறித்ததாகும். அறிவியல் நோக்கில் இப் பேரண்டத்திற்கு இப்போது இல்லாமல் 1000 கோடி வருடங்கள் கழித்தாயினும் ஓர் அழிவு உண்டு என்பதும் அதன் அழிவு ஒரு ``பெரும் சுருக்கம் (க்ஷபை உசரஉ) ஆகவும் இருக்கும். பேரண்டம் அவ்வாறு சுருங்கினால் என்னென்ன நிகழ வாய்ப்புண்டோ அந்த நிகழ்ச்சிகளே மேற்கண்ட வர்ணனை யில் கூறப்பட்டுள்ளது.

விரிவடைந்து கொண்டே இருக்கும் ஒரு பொருளின் விரிதலை நிறுத்தி விட்டு அப்பொருள் சுருட்டப்பட்டால் அப்பொருள் சுருங்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. வானகப் பொருட்கள் திட நிலையிலும், வாயு நிலையிலும், பிளாமா நிலையிலும் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அவை சுருக்கமடையும் போது திடப் பொருட்கள் மேலும் மேலும் அடர்த்தியாகும். பூமி சுருக்கமடையும் போது புடைத்து நிற்கும் கன் மலைகள் தெறித்து விழும் காட்சியைப் போன்றதே மலைகள் பெயர்க்கப்படுவதாக திருக்குர்ஆன் கூறும் நிகழ்ச்சியாக விளங்க முடிகிறது.

அவ்வாறே வாயுப் பொருட்களும் பிளாமாவும் சுருக்கமடையும் போது முதலில் அவை திரவப் பொருளாக மாறும். சூரியனும் அது போல் வானத்திலுள்ள கோடானு கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் ப்ளாமா நிலையிலுள்ள வாயுப் பொருட்களாக இருப்பதால் அவை சுருங்கும் போது சுருக்கமடைந்து முதலில் திரவமாக மாற்றமடையும். இந்த நிலையில் ஆகாயத்தைப் பார்த்தால் எவ்வாறு தென்படுமோ அந்த நிலையே வானம் உருகிய செம்பைப் போல் ஆகும் எனத் திருக்குர்ஆனின் வர்ணனையாக நமக்கு விளக்கம் கிடைக்கிறது.

வானத்தின் வாயு மற்றும் ப்ளாமாப் பொருட்கள் சுருக்கமடைந்து திரவமாக மாறிய பிறகும் அவை தொடர்ந்து சுருக்கமடைந்து திடப் பொருளாக மாறுகின்றன. இவ்வாறு திடப் பொருளாக மாறிய நட்சத்திரங்கள் முதலாவதாக அவைகளின் காலக்சியின் ஈர்ப்பு மையத்தில் வீழ்கின்றன. இந்த நிகழ்ச்சியையே திருக்குர்ஆன் நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் இடங்கள் எனக் கூறுவதாக விளங்குகிறோம். அதன் பிறகு அவை மீண்டும் சுருங்கி ஒவ்வொரு காலக்சியும் கற்பனைக் கெட்டாத அடர்த்தி மிகு பொருட்களாக மாறி பேரண்டத்தின் ஈர்ப்பு மையத்தில் வீழ்கின்றன. அதன் பிறகும் அங்கு நிலவும் அதி அதி பயங்கரமான ஈர்ப்பு விசையால் அப்பொருட்கள் யாவும் மேலும் மேலும் சுருக்கமடைந்து எல்லையற்ற அடர்த்திக்கு (ஐகேவைந னநளேவைல) உள்ளாகி அவை களின் பரிமாணம் பழையபடி ``பூஜ்யமாகி இப்பேரண்டமே இல்லாது போகின்றது.

பேரண்டமே இல்லாது போவதால் மீண்டும் ஒரு பேரண்டம் (பரலோகம் - மறுமை) இறைவன் படைக்க நாடினால் முதலில் அவன் படைத்தது போன்று `குன் எனும் கட்டளை பிறப்பிப்பான் என்றும் அந்த மைக்ரோ கணத்திலேயே மீண்டும் ஒரு பெருவெடிப்பும் அதிலிருந்து பரலோகமும் தோன்றும் என்பதையும் ``முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம் எனக் கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து நாம் விளங்கலாம்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து இப்பேரண்டத்திற்கு ஒரு அழிவு காலம் உண்டு என்பதும் அது தொலைவில் இல்லை மிக நெருக்கமானதே எனக் கூறும் திருக்குர்ஆன் செய்திகள் மனித அறிவிலிருந்து தோன்றியதில்லை என்றும் அது இறைஞானத்தின் வெளிப்பாடே என்பதில் இதற்கு மேல் ஐயம் கொள்ளத் தேவையில்லை. எனவே இப்பேரண்டத்திற்கு குறைந்த பட்சம் ஆயிரம் கோடி வருடங்களுக்கு முன் அழிவில்லை. எனவே அதைப் பற்றிய கவலை இப்போது தேவையில்லை என அறிவியலாளர் ஹாக்கிங் கூறுவது (பார்க்க : பக்கம் 157 மற்றும் 158) நாம் முன்னர் கூறிய உதாரணத்தில் குறிப்பிட்டவாறு கட்டிடத்தைச் சோதித்த பொறியாளர்களின் அறிக்கையைப் போன்றதாகும்.

எனவே ஹாக்கிங் அவர்களின் அறிக்கையில் தவறில்லையென்றாலும் இம்மாபெரும் பேரண்டம் (ஹாக்கிங் கூறும் பேரண்டத்தின் வயது - 1000 வடி 2000 கோடி வருடங்கள் என்பது - சரியாக இருந்தால்) இதற்கு மேல் அதிக பட்சம் வெறும் 7500 வருடங்கள் கூட நிலை நிற்கப் போவதில்லை. அதற்குள் இப்பேரண்டத்தின் சுருங்கு முகம் (உடிவேசயஉவபே யீயஉந) எப்போது வேண்டுமானாலும் ஆரம்பித்து விட வேண்டுமென்பதே திருக்குர்ஆனிலிருந்து நாம் கண்ட கணித சூத்திரத்திலிருந்து விளங்கும் செய்தியாகும்.

ஆறு நாட்களின் முக்கியத்துவம்

இந்த அத்தியாயத்தை முடிப்பதற்கு முன்னர் மற்றொரு பிரதான செய்தியைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைத் திருக்குர்ஆன் கூறும் போது உலகியல் கணக்குப்படி அன்றி பேரண்டத்தைத் தோற்றுவிக்கும் போது இறைவனிடம் கணக்கிடப்பட்ட காலத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாகும் என முன்னர் கண்டோம். எனினும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு ``ஆறு நாட்கள் தேவைப்பட்டன எனக் கூறியதற்கு பதில்

பேரண்டம் தோன்றுவதற்கு நீண்ட காலகட்டம் தேவைப்பட்டது எனக் கூறியிருந்தால் ஏராளமான விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் சிலருக்கேனும் தோன்றுகிறது. திருக்குர்ஆனின் மீது எழுகின்ற இது போன்ற விமர்சனங்கள் அது கூறும் செய்திகளுக்குள் இறங்கிச் சென்று ஆய்வு செய்யாமல் நுனிப்புல் மேய்வதால் ஏற்படுவதாகும் என்பதை இந்த அத்தியாயத்தில் நாம் நிறைவாகக் கண்டு விட்டோம். இப்படிப்பட்ட பிழையான விமர்சனங்கள் எக்காலத்திலும் இருந்தே தீரும். ஆயினும் நவீன அறிவியல் உலகம் பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைக் கூறும் கணக்கை திருக்குர்ஆனுடைய கணித சூத்திரத்திலிருந்து நாம் வந்தடைய வேண்டுமானால் திருக்குர்ஆன் பயன்படுத்திய ஆறு நாட்கள் என்ற வார்த்தைகள் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதும் அந்த வார்த்தைகளுக்குப் பதில் நீண்ட காலம் அல்லது நீண்ட யுகம் என்பன போன்ற விமர்சகர்கள் கூறும் வார்த்தைகள் ஒரு போதும் பயன் படுத்தப்பட்டிருக்கக் கூடாது என்பதே உண்மையாகும்.

உள்ளபடியே பேரண்டம் படைக்கப்பட்டதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் ஆறு நாட்கள் எனத் திருக்குர்ஆன் கூறியதன் காரணமாகவே திருக்குர்ஆனுடைய கணித சூத்திரத்தைப் பயன்படுத்தி நவீன அறிவியல் உலகின் கணிப்பு (பேரண்டம் தோன்றுவதற்கு 1000 வடி 2000 கோடி வருடங்கள் ஆயின எனும் கணிப்பு) திருக்குர்ஆனுடைய கணிப்பிற்கு ஒத்து வருகிறதா எனக் கண்டு பிடிக்க முடிந்தது. ஆனால் ஆறு நாட்கள் என்பதற்குப் பதில் நீண்ட கால அளவு அல்லது நீண்ட யுகங்கள் என்ற சொற்பிரயோகங்கள் திருக்குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் அக்கால கட்டங்களின் உலகியல் கால அளவை நம்மால் ஒரு போதும் கண்டு பிடித்திருக்க முடியாது என்பதோடு அறிவியல் சமுதாயத் திற்கு பெருவெடிப்புக் கோட்பாடு திருக்குர்ஆன் ஒப்புக் கொள்கிறதா என்பதைக் கண்டறிவதற்குப் பயன்படும் திருக்குர்ஆனுடைய முக்கியமான கணித சூத்திரமும் பயனற்றுப் போயிருக்கும். எனவே திருக்குர்ஆன் பயன் படுத்திய ஆறு நாட்கள் எனும் சொற்பிரயோகம் மிகவும் பொருட் செறிவுள்ளதும் தவிர்க்க முடியாததுமாகும்.

இந்த அத்தியாயத்தில் நாம் இது வரை விவாதித்த விபரங்கள் இப்பேரண்டம் எவ்வாறு படைக்கப்பட்டது எனத் திருக்குர்ஆன் கூறுகிறதோ அதற்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் சான்றளித்துக் கொண்டிருக்கிறது என்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாகிய பெருவெடிப்புக் கோட்பாட்டிலிருந்து பெறப்படும் இந்த அதி நவீன உண்மைகளெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் வந்த திருக்குர்ஆனில் கூறப்பட வேண்டுமானால் திருக் குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டதும் இறை ஞானத்தின் வெளிப்பாடுமாகும் என்பதற்கு இது ஒரு வலுவான அறிவியல் ஆதாரம் என்பதைப் புறக்கணிக்க முடியாது.

இந்த வசனத்தில் திருக்குர்ஆன் புரட்சிகரமான மற்றும் ஓர் அறிவியலைக் கூறுகிறது. சூரியன் கண்களைக் கூசும் பிரகாசத்துடன் வெண்மையான ஒளியை வெளியிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

நமது வாழ்நாளில் வெவ்வேறு வகையான ஒளிகளை சூரியன் வெளியிட்டதை நாமும் பார்த்ததில்லை அல்லது திருமறை இறங்கிய காலத்திலோ அதற்கு முன்னரோ உலகில் தோன்றிய விஞ்ஞானிகளில் யாரும் சூரியன் வேறு பல வகையான ஒளிகளையும் உள்ளடக்கியதாகும் எனக் கூறியதில்லை. ஆயினும் சூரியனைப் படைத்த இறைவன் அதனை ஒரே ஒளியாக அன்றி பல வகையான ஒளிகளாகப் படைத்துள்ளான் என ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி விட்டான்!

திருமறை கூறிய இந்த அறிவியல் உண்மையை அறிவியல் உலகம் கண்டுபிடிக்க மேலும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. திருக்குர்ஆன் பிறகு பதினொன்று நூற்றாண்டுகளில் அறிவியல் உலகம் பற்பல அறிவியல் உண்மைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கற்றுக் கொண்டே வந்து அவைகளின் துணையுடன் பதினெட்டாம் நூற்றாண் டுக்குள் நுழைந்ததும் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானியான ஐசக் நியூட்டன் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் கூறிய இந்த அறிவியல் உண்மையை முதன் முதலாகக் கண்டு பிடித்தார். ஏனைய விஞ்ஞனிகள் நியூட்டனின் கண்டு பிடிப்பை ஒரு புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்பு எனக் கூறி கவுரவித்தனர்.

இவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மையை திருக்குர்ஆன் கூறியதிலிருந்து இம்மாமறை குர்ஆன் மானிடப் படைப்பு இல்லை என்பதை எளிதாக விளங்கிக் கொள்ள இயலும்.

நிறமாலை நோக்கி

சூரியனின் சாதாரண வெண்ணிற ஒளி வெவ்வேறு அதிர்வெண்களையும் வெவ்வேறு நிறங்களையும் கொண்ட வெவ்வேறு ஒளிகளின் கலவை என நியூட்டன் சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் (ஞசளைஅ) செலுத்தி ஒளிப் பிரிகை செய்து வெவ்வேறு நிறங்களை உடைய வெவ்வேறு ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த வெவ்வேறு வர்ணங்களை உடைய வெவ்வேறு ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் (ஞசளைஅ) அதன் துணைக் கருவிகளும் (யஉஉநளளயசநைள) இணைந்த தொகுதியே நிறமாலை நோக்கி (ளுயீநஉவசயளஉடியீந) ஆகும்.

நிற மாலை நோக்கியின் காட்சிப் பதிவுடன் டாப்ளர் தத்துவத்தை இணைக்கும் போது விஞ்ஞானிகளால் நமது பேரண்டத்திலுள்ள காலக்சிகள் ஒன்றை ஒன்று நெருங்கி வருகிறதா? அல்லது ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கிறதா? என்பதைக் கண்டு பிடிக்க முடியும் எனக் கூறினோம். எனவே டாப்ளர் தத்துவம் என்பது என்ன என்று பார்ப்போம். முதலாவதாக இது ஒளியுடன் சம்மந்தப்பட்டதாகும்.

இரயில் எஞ்சினின் விசில் சப்தம் நம் அனைவருக்கும் அறிமுகமானதேயாகும். வழியோரம் நின்றிருக்கும் ஒருவரை நோக்கி இரயில் வண்டி வரும் போது அதன் விசில் சப்தம் சாதாரண நிலையிலிருந்து அசாதாரணமாகக் கூடுவதை அவரால் புரிந்து கொள்ள முடியும். இதைப் போன்று அந்த இரயில் வண்டி அவரைத் தாண்டி செல்லும் போது விசில் சப்தம் படிபடியாகக் குறையாமல் திடீர் எனக் குறைந்து விடுவதையும் சிலராவது கவனித்து இருக்க முடியும்.

செந்நிறப் பெயர்ச்சி

ஒலி அலைகளுக்குரிய இந்த இயற்பியல் பண்பு `ஒளி அலைகளுக்கும் பொருந்தும் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நிறமாலை நோக்கியில் தென்படும் காட்சிகளுக்கு டாப்ளர் விளைவைப் பொருத்திப் பார்த்தார்கள். பொதுவாக நிறமாலை நோக்கியில் விழும் சூரிய ஒளி நிறப்பிரிகை அடைந்து அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் அளவு கோலில் (ளஉயடந) ஒவ்வொரு நிறத்திற்கும் உரிய இடத்தில் அமையும் எனக் கண்டோம். இதைப் போன்று அண்ட வெளியிலுள்ள வெவ்வேறு காலக்சிகளின் ஒளிக் கற்றை களை நிறமாலை நோக்கியால் ஆய்வு செய்த போது அவற்றின் ஒளிக் கற்றைகள் சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்வதைக் கண்டு அறிவியலாளர்கள் மிகப் பெரிய வியப்பிற்கு ஆளானார்கள்.

அண்ட வெளியிலுள்ள காலக்சிகளின் ஒளிக் கற்றைகள் நிறமாலை நோக்கியின் அளவுகோலில் இடப் பெயர்ச்சி அடைவதற்குக் காரணம் அந்தக் காலக்சிகள் கூட அதனதன் இடத்தில் நிலைத்திருக்காமல் இடம் பெயர்ந்து கொண்டி ருக்கிறது என்பதாகும். இப்போது அந்த காலக்சிகள் சிவப்பு நிறத்தின் இடத்திற்கு மட்டும் இடப் பெயர்ச்சி செய்கிறது என்பதை டாப்ளர் தத்துவம் விளக்குகிறது.

நிறமாலை நோக்கியின் இரண்டு முனைகளில் ஒன்று குறுகிய அலை நீளம் கொண்ட ஊதா நிறத்திற்கும் மற்றொன்று நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்திற்கும் உரிய இடங்களாகும். அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நோக்கி வருவதாக இருந்தால் பூமிக்கும் காலக்சிக்கும் இடையிலுள்ள தூரம் குறுகிக் கொண்டே வருவதால் அதன் ஒளிக் கற்றைகளின் அலை நீளமும் குறுகிக் கொண்டே வரும். எனவே அந்தக் காலக்சியிலிருந்து வரும் ஒளிக் கற்றைகள் நிறமாலை நோக்கியில் குறுகிய அலை நீளம் கொண்ட ஊதா நிறத்தின் இருப்பிடத்தை நோக்கி இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும். ஆனால் நடப்பதோ நேர் மாற்றமான காட்சியாகும். ஏன்?

ஏனென்றால் அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நெருங்கி வரவில்லை. அதற்கு மாறாக பூமியை விட்டு விலகிச் செல்கிறது என்பதே அதன் காரணமாகும். காலக்சிகள் பூமியை விட்டு விலகிச் செல்வதால் பூமிக்கும் அந்தக் காலக்சிகளுக்கும் இடையிலுள்ள தூரம் விரிவடைந்து செல்வதால் அதன் ஒளிக் கற்றைகள் நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. அறிவியலாளர்கள் ஒளிக் கற்றைகளின் இந்த இயற்பியல் பண்பை `செந்நிறப் பெயர்ச்சி (சநன ளாகைவ) எனக் கூறுகிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் திறமை மிக்க அறிவியல் நிபுணராம் `எட்வின் ஹிப்பிள் அவர்களின் இக்கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் அறிவியல் புரட்சியைத் தோற்றுவித்த கண்டுபிடிப்பாகும். ஐன்டீன் அவர்களின் சார்பியல் தத்துவங்களின் தோற்றம் சென்ற நூற்றாண்டில் நிகழாமல் இருந்தால் ஹப்பிள் அவர்களின் கண்டுபிடிப்பு சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற கண்டுபிடிப்பு எனப் போற்றப்பட்டிருக்கும். ஹப்பிள் அவர்களின் கண்டுபிடிப்பைப் பற்றி இன்றைய உலகின் தலை சிறந்த விஞ்ஞானி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :

``கூந னளைஉடிஎநசல வாயவ வாந ரஎநசளந ளை நஒயீயனேபே றயள டிநே டிக வாந பசநயவ வேநடடநஉவரயட சநஎடிடரவடிளே டிக வாந வறநவேநைவா உநவேரசல (பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும். பக்கம் : 42)

பேரண்டத்தின் விரிவாக்கம் திருமறையில்

இருபதாம் நூற்றாண்டில் கூட உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளால் இவ்வளவு தூரம் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பை பாரறிய பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருக்குர்ஆனின் வார்த்தைகள் இதோ :

``வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம். நிச்சயமாக நாம் (அதை) விரிவாக்கம் செய்பவராவோம்.

(51:47)

பேரண்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றிய இரகசியம், இருபதாம் நூற்றாண்டு வரை இருட்டில் புதைந்து கிடந்ததாகக் கூறப்படும் அந்த மர்மம் திருக் குர்ஆனில் இதோ ஏழாம் நூற்றாண்டிலேயே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! ஆனால் யாருக்கும் எந்த அக்கறையும் அதன் பால் இல்லை. எந்த அறிவியலாளர்களின் நிறமாலை நோக்கிகளோ ஏனைய ஆய்வுக் கருவிகளோ இதன் பால் (விதிவிலக்காக ஒரு சிலரைத் தவிர) திரும்புவதில்லை. என்னதாம் நிகழ்ந்து விட்டது இம்மானிடர் தமக்கு?

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் உலகில் தோன்றிய அறிவியலாளர்களில் ஒருவர் கூட; ஆம்! உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளாம் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்டீன் போன்றவர்களும் கூட இப்பேரண்டம் விரிவடைந்து கொண்டு வருகிறது என்பதைக் கனவில் கூட கண்டதில்லை. அப்படிப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பையே திருக்குர்ஆனின் அறிவியல் ஏழாம் நூற்றாண்டில் கூறிக் கொண்டிருக்கிறது! திருக்குர்ஆன் ஒருகாலும் மனித அறிவிலிருந்து தோன்றியிருக்க முடியாது என்பதற்கு இதை விடச் சிறந்த அறிவியல் ஆதாரம் வேறு என்ன வேண்டும்? ஹாக்கிங் கூறுகிறார் :

``இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை என எண்ணிப் பார்ப்பது பொதுவான சிந்தனையின் சூழலில் கவனத்தை ஈர்ப்பதாகும். பேரண்டம் மாற்றமே இன்றி எக்காலமும் இருந்திருக்கிறது என்றோ அல்லது இன்று நாம் காண்பது போன்றே ஏறத்தாழ அதே நிலையில் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் படைக்கப்பட்டிருந்தது என்றோ பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இது அழிவற்ற உண்மைகளில் நம்புவதற்குரிய மக்களின் மனோ நிலைக்கு ஓரளவு காரணமாக இருந்தது...........

(பார்க்க : பக்கம்-6)

அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் கூற்றிலிருந்து எவ்வளவு விலை மதிப்பற்ற அரிய அறிவியல் பேருண்மை கள் திருக்குர்ஆனில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். திருமறையின் அறிவியல் ஞானத்தின் ஆழத்தை மேலும் புரிந்து கொள்வதற்காக நாம் இப்போது ஒரு வினாவை எழுப்புவோம்.

விழுந்து விடப் போகும் வானம்

பேரண்டத்தின் விரிவாற்றல் என்பது பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றலாகும். ஆனால் பேரண்டத்திற்கு இப்படி ஒரு ஆற்றல் உண்டு என அறியப் படாதிருந்த காலங்களில் அதன் ஈர்ப்பாற்றலால் எழும் பிரச்சனைகள் தோன்றாமல் கட்டுப்பட்டிருந்ததற்கு என்ன விளக்கத்தை அறிவியலாளர்கள் கூறி வந்தார்கள் என்பதே நமது வினாவாகும்.

மொத்தப் பேரண்டமும் ஈர்ப்பு விசையால் ஆளப்படு கிறது என்பதும் இதன் காரணமாக பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பேரண்டத்தில் உள்ள ஏனைய பொருட்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். இதன் விளைவாக ஒரு கட்டத்தில் பூமி உட்பட விண்ணகப் பொருட்கள் அனைத்தும் பேரண்டத்தின் ஈர்ப்பு மையம் செயல்படும் இடத்தில் வீழ்ந்து விட வேண்டும். அவ்வாறு விழும் போது பூமியிலுள்ளவர்களுக்கு பூமியின் மீது வானம் வீழ்வது போன்ற உணர்வே ஏற்படும். ஏனெனில் நாம் இரயில் வண்டியில் செல்லும் போது ஜன்னல் வழியாகப் பார்த்தால் நாம் நகராமல் இருப்பது போன்றும் பாதை ஓரத்தில் உள்ள மரங்கள் ஓடுவது போன்றும் தோன்றுவதைப் போல, பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்தாலும் பூமி அசையாமல் இருப்பது போன்றும், ஆனால் சூரியன் பூமியைச் சுற்றுவதைப் போன்றும் தோன்றுவதைப் போன்று பூமி பேரண்டத்தின் ஈர்ப்பு மையத்தில் வீழ்வதாக இருந்தாலும் வானம் பூமியின் மீது வீழ்வது போன்ற நிலையே பூமியிலுள்ள வர்களுக்கு ஏற்படும். ஆயினும் இப்படிப்பட்ட பேராபத்து இன்னும் நடைபெறவில்லை என்பது நமக்குத் தெரியும்.

இந்த இடத்தில் ``ஏன் இன்னும் நடைபொறவில்லை? என மற்றொரு வினாவை எழுப்பினால் இக்கேள்விக்கும் கூட நம்ப முடியாதபடி திருக்குர்ஆன் பதிலளித்துக் கொண்டி ருக்கும் அற்புதத்தை நம்மால் காண முடியும். திருமறை கூறுகிறது:

(முஹம்மதே!) பூமியில் உள்ளதையும் அவனது கட்டளைப் படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காக பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா?அவன் கட்டளை யிட்டால் தவிர பூமியின் மேல் வானம் விழாதவாறு தடுத்து வைத் துள்ளான். அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.

(22:65)

அற்புதத் திருமறையின் இந்த அறிவியல் வசனத்தில் வானம் பூமியின் மீது வீழ்ந்து விடாதவாறு தடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதும், எனவே அதைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ் இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து வானங்களின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளான் என்ற செய்தியைக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் அவன் மற்றொரு கட்டளை பிறப்பித்து விட்டால் வானம் இடிந்து பூமியின் மீது விழத்தான் செய்யும் என்பதும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி இன்றைய உலகின் அதிநவீன அறிவியல் உண்மைகளைப் பற்றிய அறிவிலிருந்து நாம் எழுப்பிய வினாவுக்குக் கூட மிகப் பொருத்தமான பதிலை இம்மாமறை தந்து கொண்டிருப்பது இம்மாமறையின் அறிவியல் ஞானத்தை நமக்கு அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறதன்றோ!

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை (ரஎநசளயட பசயஎவையவடி) பற்றியோ அல்லது அதன் பயன்பாடு மற்றும் செயற்பாடு பற்றியோ அல்லது அதன் விசையைக் கட்டுப்படுத்தா விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தோ திருக்குர்ஆனுக்கு எதுவும் தெரியவில்லையென்றால் ஆகாயம் வீழ்ந்து விடாதவாறு தடுக்க வேண்டிய தேவை உண்டு; அதனால் அது தடுக்கப்பட்டு வருகிறது என திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடியும்? எனவே குறைந்த பட்சம் பேரண்டத்திற்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதும் மேலும் அதை சமன் செய்யும் மற்றொரு ஆற்றல் இப்பேரண்டத்தில் வெயல்பட்டு வருகிறது எனும் கருத்தும் இந்த வசனத்தில் (22:65) இருந்து தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. அந்த ஆற்றல் எது என்பதையே முன்னர் கண்ட வசனத்தில் (51:47) கூறப்பட்டிருக்கும் பேரண்டத்தின் விரிவாக்க ஆற்றலாகும். திருக்குர்ஆனுடைய தெய்வீக ஞானத்தில் இன்னும் ஐயுறத் தேவையுண்டா?

ஐன்டீனுக்கும் அடி சருக்கும்

திருக்குர்ஆனுடைய தெய்வீக ஞானத்தில் இதற்கு மேலும் ஐயம் கொள்பவர்கள் திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தி இருக்கும் பேரண்டத்தின் விரிவாற்றல் குறித்தும், உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் கூட அதைக் கண்டு பிடிக்க முடியாமல் வழி தவறிப் போனது குறித்தும் ஹாக்கிங் அவர்களே தமது நூலில் கூறி இருப்பதைப் பார்த்து விட்டு முடிவெடுக்கட்டும். ஹாக்கிங் கூறுகிறார் :

``பேரண்டம் விரிந்து செல்கிறது எனும் கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சியாகும். நியூட்டனுக்கும் மற்றவர்களுக்கும் முன்னர் ஏன் இதைப் பற்றி யாருமே சிந்திக்கவில்லையென்றால் ஒரு மாறாநிலைப் (ளவயவஉ ரஎநசளந) பேரண்டம் விரைவிலேயே சுருங்கி விடும் என்று புரிந்து கொண்டிருப்பார்கள் என எளிதாக நம் அகக்கண் வியப்பெய்தலாம்.ஆனால் பேரண்டம் விரிந்து செல்கிறது என்றே வைத்துக் கொள்வோம். பேரண்டம் நன்கு மெதுவாக விரிவடைந்து கொண்டிருக்குமேயானால் ஈர்ப்பாற்றல் படிப்படியாக அதன் விரிவாக்கத்தை நிறுத்தியிருக்கும். பிறகு சுருங்கத் தொடங்கியிருக்கும். இருந்த போதிலும் விரிவாக்கம் ஒரு தீர்மான விகிதத்திற்கு (உசவைஉயட சயவந) மேல் இருந்தால் ஈர்ப்பாற்றல் அதை நிறுத்துவதற்கு ஒருபோதும் ஆற்றல் பெறாது. எனவே பேரண்டம் தொடர்ந்து எக்காலமும் விரிந்து கொண்டிருக்கும். இது ஒருவர் பூமியின் மேலிருந்து ராக்கெட்டை ஏவும் போது நிகழ்வதற்கு ஓரளவு ஒப்பான தாகும். அது மிகக் குறைவான வேகத்தைப் பெற்றிருந்தால் ஈர்ப்பாற்றல் படிப்படியாக ராக்கெட்டை நிறுத்துவதுடன் அது தரையில் விழத் தொடங்கும். அதற்கு மாறாக அந்த ராக்கெட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தீர்மான வேகத்திற்கு மேல் இருந்தால் (வினாடிக்கு ஏழு மைல்) ஈர்ப்பாற்றல் அதைக் கீழ்நோக்கி இழுக்கும் சக்தியைப் பெறாது. எனவே அது பூமியை விட்டு காலமெல்லாம் போய்க் கொண்டே இருக்கும். பேரண்டத்தின் இந்தப் பண்பு நியூட்டனின் ஈர்ப்பாற்றல் தத்துவத்திலிருந்து 19-ம் நூற்றாண்டில் அல்லது 18-ம் நூற்றண்டில் அல்லது 17-ம் நூற்றாண்டின் கடைசி கட்டத் தில் கூட எந்த நேரத்திலும் அனுமானித்திருக்கலாம். ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் வரை பிடிவாதமாக இருந்த ஒரு மாறாநிலைப் பேரண்டத்தில் (ய ளவயவஉ ரஎநசளந) நம்பிக்கை அவ்வளவு பலமாக இருந்தது. 1915-ல் ஐன்டீன் பொது சார்பியல் தத்துவத்தை உருவாக்கும் போது கூட பேரண்டம் மாறாநிலையானது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்ததால் அதன் சாத்தியத்தை உருவாக்குவதற்காக தன்னுடைய சமன்பாடு களில் (நளூரயவடிளே) இது வரை ``பேரண்ட மாறா குணாங்கம் (உடிளஅடிடடிபஉயட உடிளேவயவே) என அழைக்கப்பட்டு வந்த குணாங்கத்தைப் பயன்படுத்தினார். ஐன்டீன் அறிமுகம் செய்த `எதிர் ஈர்ப்பு (யவேபைசயஎவைல) என்பது மற்ற விசைகளைப் போலன்றி எந்த ஒரு குறிப்பிட்ட மூலத்திலிருந்தும் (ளடிரசஉந) வராமல் மிகச் சரியாக கால-இடத்தின் கட்டுமானத்திற்குள் கட்டப்படுவதாகும். கால இடத்திற்கு விரிவடையும் உள்ளார்ந்த தன்மை (வநனேநஉல) உண்டு என்றும் இதுவே பேரண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஈர்ப்பாற்றலையும் துல்லியமாக சமன் செய்கிறது என்றும் எனவே மாறாநிலைப் பேரண்டம் உருவாகிறது என்றும் ஐன்டீன் வாதிட்டார்.

(பார்க்க:பக்கம் 42:43)

ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டி லிருந்து இரண்டு முக்கியமான விபரங்களை அறிகிறோம். முதலாவதாக திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பறை சாற்றிக் கொண்டிருக்கும் `பேரண்டத்தின் விரிவாக்கம் எனும் இயற்பாடு (யீலளஉயட உயசநஉவநசளைவஉ) 17-ம் நூற்றாண்டின் கடைசி கட்டத்திலேயே கண்டுபிடிக்கும் ஆற்றலை அறிவியல் உலகம் பெற்று விட்டது என்பதாகும். (இதிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் அறிவியல் உலகத்திற்கு அறவே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க!) ஆயினும் எந்த ஒரு அறிவியல் மேதையாலும் இருபதாம் நூற்றாண்டு வரை அதை அனுமானிக்க இயலவில்லை.

இரண்டாவதாக இந்நாள் வரை அறிவியல் உலகில் தன்னிகரற்ற அறிவியல் மேதையாகத் திகழ்ந்து கொண்டி ருக்கும் ஐன்டீனின் தன்னிகரற்ற அறிவியல் கண்டு பிடிப்பாம் பொது சார்பியல் தத்துவம் பேரண்டம் மாறாநிலை பண்புடையதில்லை என்றும் அதற்கு மாறாக பேரண்டம் எப்போதும் விரிந்து கொண்டிருக்கும் பண்புடையது என்பதை யும் உட்பொருளாகக் கொண்டிருந்தது என்றும் அவரே உருவாக்கிய கணித சமன்பாடுகளிலிருந்து அவருக்கு தெரிய வந்தது. எனினும் பேரண்டம் மாறாநிலை (ளவயவஉ) பண்புடையது என்பதில் அவருக்கு இருந்த பிடிவாதமான நம்பிக்கையின் காரணமாக அவர் உருவாக்கிய கணித சமன்பாடுகளை அவருடைய நம்பிக்கைக்கேற்ப அவரே மாற்றி அமைத்தார் என்றும் இதற்காக `எதிர் ஈர்ப்பு எனும் தவறான ஒரு கருதுகோளை உருவாக்கி மேலும் அதற்காக `பேரண்டத்தின் மாறா குணாங்கம் எனும் ஒன்றை தமது கணித சமன்பாடுகளில் தவறாக அறிமுகப்படுத்தினார் என்பதுமாகும்.

அறிவியல் உலகின் முடிசூடா மன்னர்கள் கூட வழி தவறிய போதும் திருக்குர்ஆனுக்கு மட்டும் வழி தவறுவதே இல்லை! ஏன்? திருக்குர்ஆன் மானிடப் படைப்பு இல்லை என்றும் அது இறைவனிடமிருந்துள்ள ஒரு வெளிப்பாடே என்பதையும் இது நமக்கு அறிவுறுத்தவில்லையா?

இயற்கைக்கு அப்பால்

இப்பேரண்டத்தின் படைப்பு ஒரு படைப்பாளன் இல்லாமல் தான்தோன்றியாக (ளயீடிவேயநேடிரள) நடைபெற்ற நிகழ்ச்சி இல்லையென்றும் எல்லையற்ற ஆற்றலும் விரிவாக்க இயலாத நுண்ணறிவும் பெற்றவனே - இறைவனே - அதனை வடிவமைத்தான் என்பதை வன்மையாக நிருபித்துக் கொண்டிருக்கும் மற்றொரு உண்மையும் பேரண்டத்தின் விரிவாற்றல் எனும் அதன் இயற்பாடு தன்னகத்தே கொண்டுள்ளது. அதைக் குறித்த விபரங்களைப் பார்ப்போம்.

அறிவியல் மேதை ஹாக்கிங் கூறிய ராக்கெட் உதாரணத்தை மீண்டும் கவனத்தில் கொள்க. அந்த உதாரணத்தில் ராக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்க வேண்டிய வேகம் எக்காரணத்தைக் கொண்டும் வினாடிக்கு ஏழு மைல் என்பதில் சற்றே குறைந்தாலும் கூட ராக்கெட் புவிஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்பட்டு அது மீண்டும் பூமியில் வீழ்ந்து விடும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இப்படி ஒரு திட்டமிட்ட வேகம் ராக்கெட் பெற வேண்டுமானால் எந்த ராக்கெட்டும் தான்தோன்றித்தனமாக அதைப் பெற்று விடுவதில்லை. பல்லாயிரம் வருடங்களில் நாம் பெற்ற படிப்படியான அறிவியல் அறிவே புவிஈர்ப்பு விசையையும் கண்டுபிடித்து அதைத் தாண்டிச் செல்வதற்குரிய வேகத்தையும் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்ததோடன்றி அந்த வேகத்தை அடைவதற்குரிய ஆற்றலையும் கண்டுபிடித்து அந்த ராக்கெட்டை வடிவமைப்பு செய்தது என்பதை நாம் அறிவோம். பேரண்டத்தோடு ஒப்பிடும் போது கடுகினும் சிற்றளவுள்ள இந்த பூமியின் ஈர்ப்பு விசையை மீறுவதற்கே இவ்வளவு பிரச்சனைகள் இருந்தால் பேரண்டம் படைக்கப்படும் முன்னரே அதன் ஈர்ப்பு விசையை முன்கூட்டிக் கணித்து அதற்கேற்ற ஆற்றலுடன் பெருவெடிப்பை நிகழ்த்தியது யார்? இயற்கையா?

இந்த இடத்தில் `இயற்கை என்ற வாதம் பலனளிக்காது. ஏனென்றால் மற்ற இடங்களில் இந்த வாதத்திலுள்ள பேதமை இலைமறைவாக இருப்பதைப் போல் இந்த இடத்தில் மறைந்திருப்பதில்லை. இங்கு வெளிப்படையாகவே தென்பட்டு விடும்.

இயற்கையும் சோதிடமும்

இராக்கெட் உதாரணத்தில் இராக்கெட்டின் தொடக்க வேகம் வினாடிக்கு ஏழு மைலுக்கு மேல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டதையும் அதை விடக் குறைவாக தொடக்க வேகம் அமைந்து விட்டால் இராக்கெட் திரும்பவும் பூமியில் விழுந்து விடும் எனக் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இதைப் போன்று பெருவெடிப்பின் ஆற்றலும் இவ்வளவு காலமாக வீழ்ந்து விடாமல் இப்போதும் விரிவாகிக் கொண்டிருக்க வேண்டுமானால் பெருவெடிப்பின் தொடக்க வேகமும் பெருவெடிப்புக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெரு வெடிப்பே படைப்பின் தொடக்கம் என்பதும் அதற்கு முன் எதுவுமே இல்லை என்பதுமே பெரு வெடிப்புக் கோட்பாடாக இருக்கும் போது பெருவெடிப்பு தொடங்குவதற்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டிய அதனுடைய தொடக்க வேகத்தை நிர்ணயித்தது யார்?

இயற்கையா?

பெருவெடிப்புக்கு முன்னர் ஏது இயற்கை?

இயற்கை என்றால் என்ன என்பதை இந்த நூலின் மற்றொரு தலைப்பில் ஆய்வு செய்துள்ளோம். ஆனால் இயற்கை என்ற பெயரில் ஏதேனும் ஒன்று செயல்பட வேண்டுமானால் பொருட்கள் இருக்க வேண்டும். எனவே பொருள் இல்லையேல் இயற்கையும் இல்லை. பெரு வெடிப்புக்கு முன்னால் பொருட்கள் ஏதும் இல்லை யென்பதால் அந்த நேரத்தில் இயற்கையும் இல்லை. இயற்கையே இல்லாத போது பெரு வெடிப்பின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்தது யார்? இயற்கையின் இடத்தில் இறைவனையே அன்றி வேறொன்றையும் வேறொருவரையும் காணமுடியாது என்பதையே இது காட்டுகிறது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால் பெருவெடிப்புக்கு முன்பே இயற்கை இருந்தது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அந்த இயற்கையால் பேரண்டத்தின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்திருக்க இயலாது. ஏனெனில் இயற்கைக்கு சோதிடம் கிடையாது. புலனறிவுக்கு உட்பட்டதை வைத்தே இயற்கை தீர்மானங்களை எடுக்க முடியும். பூமியின் ஈர்ப்பு விசையை அதன் இயற்கை என்று கூறினால் பூமி இருப்பதால் தாம் அதில் அதன் இயற்கையாம் ஈர்ப்பு விசை தோன்றியது. இல்லாத பூமியில் இயற்கை தோன்றாது. இயற்கையின் இயற்கையே இப்படியென்றால் பெருவெடிப்பிற்கு முன் இல்லாத பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலை இயற்கையால் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?பெருவெடிப்பிலிருந்து தோன்றப் போகும் இம்மாபெரும் பேரண்டத்தின் பொருண்மையைக் கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டுமானால் பேரண்டம் தோன்றிய பிறகே அதைச் செய்ய முடியும். பேரண்டம் தோன்ற வேண்டுமானால் பெருவெடிப்பு நிகழ வேண்டும். பெருவெடிப்பு நிகழ வேண்டுமானால் அதனுடைய விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருவெடிப்பின் விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட வேண்டுமானால் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றப் போகும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றல் என்ன என்பது மிகத் துல்லியமாக பெரு வெடிப்புக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும். இயற்கையால் அது சாத்தியமா?

எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஒன்றை அதற்கான அறி குறிகள் எதுவுமில்லாமல் அறிதல் என்பது காலவேற்றுமை களால் பாதிக்கப்படாத; முக்காலமும் உணர்ந்த; மேலும் சரியாகக் கூறினால் ஒரே நேரத்தில் முக்காலங்களிலும் நிலை கொள்கின்ற சிறப்பியல்பை தனக்குள் பெற்றுக் கொண்ட ஒருவனாலன்றி வேறொருவராலும் இயலாத காரியமாகும். எனவே அப்படிப்பட்ட இயல்பைக் கொண்டவன் யாரோ அவனையே நாம் இறைவன் என்று அழைக்கிறோம். ஒருகால் கடவுளை மறுப்பதற்காக இயற்கையாலும் இப்படியெல்லாம் முடியும் என்று வாதிடும் அளவிற்கு இந்த விஷயத்தில் யாரேனும் பேதமை காட்ட முயன்றால் கடவுளைப் பெயர் மாற்றம் செய்து இயற்கை எனக் கூறுவதற்கு ஒப்பானதாகி விடுமே அன்றி படைப்பாளனின் இடத்திலிருந்து அவனை ஒரு போதும் அகற்றிப் பார்க்க முடியாது.

பெருவெடிப்பு ஒரு இயற்கை நிகழ்ச்சி எனக் கூறுவது கடுகளவும் பகுத்தறிவைப் பயன்படுத்தாத வாதமாகும். ஏனெனில் நிகழ்ச்சிகள் என்பது பொருட்களின் செயல் களாகும். எனவே பொருட்கள் இல்லையேல் செயல்களும் இருக்க முடியாது என்பது மிக மிக எளிய செய்தியாகும். இதைப் புரிந்து கொள்வதற்கு மிகச் சாதாரண அறிவே போதுமானதாகும். இருப்பினும் நாம் இயற்கை வாதிகளுக்கு சாதகமாக பெருவெடிப்பு இயற்கையாகவே தோன்றியது என்பதையும் அதிலிருந்து தப்பித்தவறி ஒரு பேரண்டம் தோன்றி விட்டதாகவும் கற்பனை செய்வோம். இவ்வாறு ஒரு பேரண்டம் தோன்றினால் கூட அந்த வேகத்திலேயே அப்பேரண்டம் தோன்றிய புள்ளியிலேயே வீழ்ந்து விடும்படி அப்பேரண்டத்தின் சொந்த ஈர்ப்பாற்றலே அதை நிர்பந்தம் செய்யும். அதற்கு மாறாக நாம் வாழ்வதைப் போன்ற சீரானதும் (ரகைடிசஅ) இவ்வளவு வழவழப்பானதுமான (ளஅடிடிவா) பேரண்டம் ஒரு போதும் உருவாக முடியாது. அப்படிப்பட்ட ஒரு பேரண்டம் உருவாகுவதற்கு நிகழ் தகவு (யீசடியெடைவைல) கூட இல்லை என்கிறார் இன்றைய உலகிள் தலைசிறந்த விஞ்ஞானியான ஹாக்கிங் அவர்கள். எனவே நாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற பேரண்டம் உருவாக வேண்டு மென்றால் பெருவெடிப்பின் ஆரம்ப வேகம் மிக மிகத் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

பேரண்டத்தின் விரிவாக்கத்தைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட செய்திகள் யாவும் அதை இறை மறுப்புக் கோட் பாட்டின் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலாகவே காட்சியளிக்கச் செய்கிறது. பேரண்டத்தின் படைப்பிற்கு கடவுளின் தேவையை வலியுறுத்திக் காட்டுவதற்காக பேரண்ட விரிவாக்கத்தின் தொடக்க வேகத்திற்கு நாம் அளவு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சில வாசகர்களாவது எண்ணிவிடக் கூடும். எனவே அதைக் குறித்த அறிவியலாளர் களின் கண்டுபிடிப்புகள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

திடுக்குறச் செய்யும் புள்ளி விபரங்கள்

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சில பாராக்களைப் படிக்கும் போது பேரண்டப்படைப்புக்கு மிக மிக இன்றியமை யாததாய் விளங்கும் அதன் இயற்பாடாம் விரிவாற்றலின் தீர்மானமான விகிதத்தின் (உசவைஉயட சயவந டிக வாந நஒயீயளேடி) தேர்வை நாம் மிகைப்படுத்திக் காட்டி கடவுளின் தேவையை வலியுறுத்துவதாக சிலர் எண்ணக் கூடும். ஆனால் அந்த எண்ணம் தவறானது என்பதை ஹாக்கிங் அவர்களின் கீழ்க்காணும் கூற்று அவர்களைத் தெளிவாக்கும். அவர் கூறுகிறார்: ``பெருவெடிப்பு நிகழ்ந்து ஒரு வினாடிக்குப் பிறகு விரிவாற்றல் நூறு ஆயிரம் மில்லியன் மில்லியன் பாகங்களில் ஒருபாகம் அளவு சிறியதாக இருந்திருந்தால் கூட பேரண்டம் இன்றைய நிலையை அடையாமல் குலைந்து போயிருக்கும்! (பக்கம்:128)

பேரண்டத்தின் விரிவாற்றலின் விகிதம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் விதம் நுண்மையிலும் நுண்மை என எவ்வளவு நுண்மைகளைக் கூறினாலும் தகும் என்பதையே ஹாக்கிங் அவர்களின் கூற்று புலப்படுத்துகிறது. (நூறாயிரம் மில்லியன் மில்லியன் என்பது ஒன்றுக்குப் பின் பதினேழு சைபர்கள் கொண்ட எண் ஆகும்!) இந்த அதி அற்புதமான தேர்வு பேரண்டம் இன்றுள்ள நிலையை அடையச் செய்ய ஆரம்ப கட்டத்தில் அதன் பணியை எவ்வளவு தூரம் துரிதப்படுத்தியது என்பதை மசாசூசெத் தொழிற்கலை விஞ்ஞான கழகத்தின் (அயளளயஉரளநவவள ளேவவைரவந டிக வநஉடிடடிபல) விஞ்ஞானி `அலன் குத் (ஹடய ழுரவா) அவர்களை மேற்கோள் காட்டி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :

``ஒரு வினாடியின் மிகச் சொற்பமான நேரத்திலேயே (வலே கசயஉவடி டிக ய ளநஉடினே) பேரண்டத்தின் ஆரம் (சயனரைள) ஒரு மில்லியன், மில்லியன், மில்லியன், மில்லியன்,மில்லியன், (ஒன்றுக்கு பின்னால் முப்பது சைபர்கள் கொண்ட எண்) மடங்கு பெரிதாகி விட்டது!! (பக்கம் : 134)

ஒரே ஒரு வினாடியின் சொற்பமான நேரத்திற்குள் இவ்வளவு பிரமாண்டமான விரிவாக்கமா? நமது அன்றாட வாழ்வியல் அறிவுக்கு முற்றிலுமாக முரண்பட்டு அணு அளவு கூட நம்ப முடியாததாய் காட்சியளிக்கும் மேற்கண்ட உண்மையான புள்ளி விபரங்களையெல்லாம் நம்ப வேண்டுமாயின் அந்த நபர் எல்லையற்ற ஆற்றலைப் பெற்ற ஒரு கடவுளின் உள்ளமையில் (நஒளைவயஉந) நம்பிக்கை கொண்டிருந்தாலே அன்றி அந்த நபரின் நம்பிக்கை அறிவார்ந்த நம்பிக்கையாக இருக்க இயலாது.

ஒரு வினாடியின் சொற்பமான நேரத்திற்குள் ஒன்றுக்குப் பின்னால் முப்பது சைபர்களைக் கொண்ட எண்ணின் மதிப்புக்கு நிகராக அப்போதிருந்த பேரண்டம் விரிவுபடுத்தப் (பேரண்டம் அப்போது ஒரு மைக்ரோன் - ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு - மட்டுமே இருந்திருந்தால் கூட அந்த சொற்ப நேரத்திலேயே 1,000,000,000,000,000,000,000 கிலோ மீட்டர் துரத்திற்கு அதன் ஆரம் விரிவடைந்திருக்கும்! இவ்வளவும் பெருவெடிப்பு நிகழ்ந்த வினாடியின் சொற்ப நேரத்திற்குள்)பட்டது எனில் ஹாக்கிங் கூற்றுக்கு இணங்க இப்பேரண்டம் உருவாகத் தொடங்கி இரண்டாயிரம் கோடி வருடங்கள் ஆகி இருப்பின் அது இப்போது எவ்வளவு கோடானு கோடி கோடி கோடி.......... கிலோ மீட்டர் அளவுக்கு விரிவடைந்திருக்கும்? இப்புள்ளி விபரங்களைப் பார்க்கை யில் ஒருவருக்கு நூறு தலைகள் இருப்பின் அந்த நூறு தலைகளும் சுற்றும்! இறையாற்றலின் மாட்சிமையை என்னென்றுரைப்பது!

அந்த சொற்ப நேரத்திலேயே இம்மாபெரும் விரி வாற்றலை வெளிப்படுத்தியதன் காரணமாகவே இப்போதும் இப்பேரண்டம் சீர்குலையாமல் நிலைபெற்றுள்ளது. இதை இறைவனே செய்தான் எனில் எந்த நோக்கத்திற்காக இவ்வளவு அரும் பணியை அவன் செய்தான்? அவனுடைய எந்தத் தேவையை பேரண்டம் நிறைவு செய்கிறது? இப்படிப்பட்ட கேள்விகளை பல தரப்பட்டவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இக்கேள்விகளை இந்நூலின் கடைசி அத்தியாயத்தில் நாம் பரிசீலனை செய்கிறோம். ஆயினும் மிக முக்கியமான ஒரு காரணத்தை இங்கு குறிப்பிடுவது சிறப்பாகும்.

இறைவனுடைய எந்தத் தேவைக்காகவும் இப்பேரண்டம் படைக்கப்படவில்லை. இறைவனுடைய படைப்பினங்களில் அவன் தேவைற்றவன் என்பதைத் திரும்பத் திரும்ப திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. (பார்க்க : 22:64, 3:97 நவஉ) இருப்பினும் இப்பேரண்டம் இவ்வளவு காலம் நிலை நிற்கும் விதத்தில் படைக்கப்படவில்லையாயின் மானிட இனம் இங்கு தோன்றி இருக்க இயலாது என்பதையே அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. பகுத்தறிவுள்ள உயிரினம் பேரண்டத்தில் எங்கேனும் தோன்றுவதற்குரிய காலகட்டம் இதற்கு முன் இப்பேரண்டத்தில் இருந்ததில்லை என்பதை யும் ஹாக்கிங் அவர்களின் நூல் குறிப்பிடுகிறது.

(பார்க்க : பக்கம் 130-133)

நவீன அறிவியலில் இறைவனின் தேவை

முன் பத்திகளில் மிக முக்கியமான மூன்று அறிவியல் உண்மைகளை நாம் கண்டோம். முதலாவதாக பேரண்டம் தோற்றம் எடுத்த ஆரம்ப கட்டத்தில் வழங்கப்பட்ட மிகக் கணிசமான, நுண்மையான மிகக் கவனமாகத் தீர்மானிக்கப் பட்ட துல்லியமான விரிவாக்க வேகமே இப்பேரண்டத்தை இப்போதும் நிலை நிறுத்தியுள்ளது என்பதாகும். இரண்டாவ தாக இப்படிப்பட்ட விதத்தில் இப்பேரண்டம் உருவாகி இருக்க வேண்டுமாயின் அதை வடிவமைத்து இயக்கும் அபாரமான ஆற்றல்களைப் பெற்ற இறைவன் இல்லாமல் நடைபெற்றிருக்க முடியாது என்பதாகும். மூன்றாவதாக இப்பேரண்டம் இந்த விதத்தில் தோன்றியதன் காரணமாகவே மானிடர்களாகிய நம்மால் இதில் தோன்ற முடிந்தது என்பது மாகும். இப்போது நாம் வந்தடைந்த இந்த முடிவுகளைக் குறித்து ஹாக்கிங் அவர்களின் கருத்து என்னவென்று பார்ப்போம். அவர் கூறுகிறார்:

ஐவ றடிரடன நெ எநசல னகைகஉரடவ வடி நஒயீடய றால வாந ரஎநசளந ளாடிரடன யஎந நெபர தரளவ வாளை றயல, நஒஉநயீவ யள வாந யஉவ டிக ய ழுடின றாடி வேநவேநன வடி உசநயவந நெபேள டமைந ரள (யீயபந 134)

(நம்மைப் போன்ற உயிரினங்களைப் படைக்க வேண்டும் என்ற நோக்கமுள்ள ஒரு கடவுளின் செயலைத் தவிர பேரண்டம் ஏன் இந்த விதத்தில் துவங்க வேண்டும் என விளக்குவது மிகக் கடினமாகும்)

நமது ஆய்வில் கண்ட உண்மைகளை எவ்வளவு பட்ட வர்த்தனமாக வெளியிடுகிறார் அறிவியல் மேதை ஹாக்கிங்! தங்களை அறிவியல் பற்றுள்ளவர்களாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவர்களில் சிலர் தோற்றமும் மறைவும் இயற்கையே அன்றி கடவுள் இல்லை என கூறிக் கொண்டிருக்கும் போது அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட வார்த்தை கள் எவ்வளவு அற்புதமாக இறைவனின் உள்ளமை ஓர் அறிவியல் தேவை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது!

நியூட்டன் மற்றும் ஐன்டீன் உள்ளிட்ட அறிவியலாளர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே ஹாக்கிங் அவர்களுக்கும் கடவுள் விஷயத்தில் சற்று நம்பிக்கை இருந்து விட்டால் அதில் வியப்பதற்கெதுவும் இல்லை எனக் கூறி ஹாக்கிங் அவர்களின் கூற்றை அறிவியல் அன்பர்களால் ஒருகாலும் ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் முன்னர் கூறப்பட்ட அறிவியலாளர் களில் யாரும் தங்களின் அறிவியல் ஆய்வுகள் கடவுளின் தேவையை வலியுறுத்துவதாகக் கூறியதில்லை. ஆனால் இதற்கு மாறாக ஹாக்கிங் அவர்களின் கூற்று கடவுளின் தேவை அவருடைய வெறும் நம்பிக்கையைச் சார்ந்ததன்று. அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததில்லை என்பது உலகறிந்த விஷயமாகும். ஆனால் பேரண்டத்தின் அறிவியல் ஆய்வுகளில் அவர் கண்ட அறிவியல் உண்மைகளே ஒரு கடவுளின் பணி அதில் அவசியம் என்பதை வலியுறுத்துவ தாக அவர் கூறுகிறார். எனவே இந்த நவீன அறிவியல் யுகத்தில் கடவுளை ஏற்றல் என்பதும், கடவுளின் தேவையும் ஓர் அறிவியல் உண்மையாகும்.

ஹாக்கிங் முழுமையாக இறைவனை ஏற்றுக் கொண்டதாக அவரது நூலிலிருந்து விளங்க இயலாது. அதற்குச் சில கேள்விகள் அவருக்குத் தடையாக இருப்பதாகத் தோன்றுகிறது. அக்கேள்விகளை நாம் இந்நூலின் இறுதியில் பரிசீலனை செய்துள்ளோம்.

இதுவரை நாம் இவ்விரு அத்தியாயங்களில் விவாதித்த விபரங்களை ஆய்வுக் கண்ணோடு பார்வையிடும் ஒருவருக்கு அவர் இதற்கு முன் திருக்குர்ஆனை வெறும் மேலோட்டமாகப் பார்த்தவராக இருந்திருந்தாலும் கூட இப்போது திருக்குர்ஆனின் ஆழிய அறிவியல் ஞானத்தின் தோற்றுவாய் இறைவனே அன்றி வேறில்லை என ஐயமறக் கண்டுணரலாம் என்பது திண்ணம்.

அத்தியாயம் 3

ஆகாயங்களைப் படைக்கும் அதிசயக் குரங்கு (?)

மனித இனம் உலகில் தோன்றி எவ்வளவு காலம் ஆயிற்று என்ற வினாவிற்கு சிலர் 30,000வருடங்கள் என்றும், வேறு சிலர் 2,00,000 வருடங்கள் என்றும் கூறுகின்றனர். இவைகளன்றி சில மாற்றுக் கருத்துக்களும் அதில் நிலவு கிறது. ஆனால் எவ்வளவு தொன்மை காலத்தில் மனிதன் தோன்றி இருப்பினும் வானம் இப்போது இருப்பது போல் அப்போதும் இருந்தது. அந்த வானை இப்போது நாம் பார்ப்பது போன்று அப்போதும் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை மானிடர்க்கு வெறும் கண்களுக்குப் புலப்படாத அதன் குறிப் பிடும்படியான பற்பல இயற்பியல் பண்புகள் திருக்குர்ஆனுக்கு மட்டும் புலப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட இயற்பாடுகளில் இரண்டை கீழ்க்காணும் திருமறை வசனம் கூறுகிறது :

ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்தான் என்பதை நீங்கள் காணவில்லையா?

(71:15)

இந்த வசனத்தில் முதலாவதாக வானங்களின் எண் ணிக்கை மொத்தம் ஏழு எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆயினும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் இது வரை ஆகாயத்தின் வெளித் தோற்றம் அல்லது வடிவம் எப்படிப்பட்டது என்பதை சரியாக விளங்க முடியவில்லை. ஆகவே ஆகாயங்களின் எண்ணிக்கை என்ன என்பதை அறிவியலாளர்களால் இதுவரை திட்டமாக மதிப்பிட முடியவில்லை. எனவே இது திருக்குர்ஆனுக்குரிய எதிர்கால அறிவியல் ஆதாரமாகும்.

பேரண்டங்களின் எண்ணிக்கை

அறிவியல் உலகம் பெருவெடிப்புச் சித்தாந்தத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஆகாயம் ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடும் எனக் கருதியதில்லை. ஆனால் பெரு வெடிப்புச் சித்தாந்தத்தைப் பற்றிய அறிவியல் அறிவு வந்ததற்குப் பின்னர் நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. இப்போதைய அறிவியலாளர்களின் கருத்து பேரண்டங்களின் எண்ணிக்கை ஒருகால் எண்ணிலடங்காததாக இருக்கலாம் அல்லது எண்ணிலடங்காத குட்டிக்குட்டி பேரண்டங்களைக் கொண்ட ஒரு எல்லையற்ற மகாப் பேரண்டமாகவும் இருக்கலாம். (பார்க்க : எ ப்ரீஃப் ஹிடரி ஆஃப் டைம் - பக்கம் 129-130) எப்படிப் பார்த்தாலும் ஒரே ஒரு வானம் (பேரண்டம்) எனும் கருத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருப்பது நாம் மேலே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆனுடைய அறிவியலை நோக்கிய பயணத்தின் முதல் கால்வைப்பாக இருக்குமோ என்பதற்கு காலம் பதில் சொல்லும். பேரண்டத்தின் அமைப்பைக் குறித்து திருக்குர்ஆன் மற்றொரு அரிய அறிவியல் தகவலையும் தருகிறது. அது வருமாறு :

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.

(37:6)

இத்திருமறை வசனத்திலும் வானங்கள் ஏழு இருப்பினும் நட்சத்திர அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது முதல் வானத்திலேயே ஆகும் எனத் தெளிவாகக் கூறியுள்ளது. பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது எனக் கருதும் அறிவியலாளர்கள் அவற்றுள் ஒன்று கூட நட்சத்திரங்களோ காலக்சிகளோ இருப்பதற்கு வாய்ப்பில்லை என முடிவு செய்ய வேண்டியிருக்கும். அப்படியானால் நமது பேரண்டத்தில் பல்லாயிரம் கோடானு கோடி நட்சத்திரங்களும் காலக்சிகளும் இருக்கின்றனவே! இதெப்படி எனக் கேட்டால் இது குறித்து அறிவியல் உலகில் நிலவி வரும் கருத்தை ஹாக்கிங் அவர்கள் கீழ்வருமாறு அறிமுகப்படுத்துகிறார்.

``ஐக வாந ரஎநசளந ளை ளயீயவயைடடல கேவைந டிச கை வாநசந யசந கேவைநடல அயலே ரஎநசளநள வாநசந றடிரடன யீசடியெடெல நெ ளடிஅந டயசபந சநபடிளே ளடிஅநறாநசந வாயவ ளவயசவநன டிரவ ய ளஅடிடிவா யனே ரகைடிசஅ அயநேச. ஐவ ளை ய வை டமைந வாந றநடட-மடிற டிசனந டிக அடிமேநலள யஅஅநசபே யறயல டி வலயீந றசவைநசள அடிளவ டிக றாயவ வாநல றசவைந றடைட நெ பயசயெபந, ரெவ எநசல டிஉஉயளடியேடடல லெ யீரசந உயஉந வாநல றடைட வலயீந டிரவ டிநே டிக ளாயமநளயீநயசள ளடிநேவள. ளுஅடையசடல, வாந உயளந டிக ரஎநசளந உடிரடன வை நெ வாயவ றந யசந டஎபே ய சநபடி வாயவ தரளவ யயீயீநளே லெ உயஉந வடி நெ ளஅடிடிவா யனே ரகைடிசஅ? ஹவ கசைளவ ளபைவ வாளை அபைவ ளநநஅ எநசல அயீசடியெடெந, நெஉயரளந ளரஉ ளஅடிடிவா சநபடிளே றடிரடன நெ நயஎடைல டிரவ ரேஅநெசநன லெ உயடிவஉ யனே சைசநபரடயச சநபடிளே. ழடிறநஎநசந ளரயீயீடிளந வாயவ டிடேல வாந ளஅடிடிவா சநபடிளே றநசந படயஒநைள யனே ளவயசள கடிசஅநன யனே றநசந உடினேவைடிளே சபைவ கடிச வாந னநஎநடடியீஅநவே டிக உடிஅயீடஉயவநன ளநடக-சநயீடஉயவபே டிசபயளைஅள டமைந டிரச ளநடஎநள றாடி றநசந உயயீயடெந டிக யளமபே வாந ளூரநளவடி : றுல ளை வாந ரஎநசள ளை ளடி ளஅடிடிவா? கூளை ளை ய நஒயஅயீடந டிக வாந யயீயீடஉயவடி டிக றாயவ ளை மடிற யள வாந யவோசடியீஉ யீசஉயீடந........ (யீயபந : 130)

அறிவியல் நூல்களை படிக்கும் வழக்கமில்லாதவர் களுக்கு மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் மேற்கோளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாகவே இருக்கும். எனவே அதன் நேரடியான மொழிபெயர்ப்பு அவர்களுக்குப் பயனளிக்காது என்பதால் இந்த மேற்கோளை மையமாக வைத்து நமது பாணியில் அதைக் கீழ்வருமாறு விளக்கலாம்.

பிரச்சனைகளை உருவாக்கும் வினா

இயற்பியல் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவர் தண்ணீர் என்பதன் கூட்டுப் பொருட்கள் எவை எனக் கேட்டால் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என மாணவர்கள் பதிலளிப்பார்கள். ஆசிரியர் மீண்டும் அவை என்ன விகிதத்தில் இணைந்தால் தண்ணீர் தோன்றும் எனக் கேட்டால் 2:1 என்ற விகிதத்தில் இணைந்தால் என பதில் கூறுவார்கள். இந்த வினாக்களுக்கு வேறு எந்த பதிலைக் கூறினாலும் அவை பிழையானதாக இருக்கும். ஆசிரியர் மீண்டும் தண்ணீர் எதற்காகத் தோன்றியது எனக் கேட்பாரேயானால் அவை உயிரினங்களின் பயன்பாட்டிற்காக என பெரும்பாலான மாணவர்கள் பதில் சொல்வார்கள். இதைப் போன்று பேரண்டம் எப்படித் தோன்றியது எனக் கேட்டால் பெரு வெடிப்பு, காலம், விரிவாக்கம், பொருட்கள் மற்றும் பற்பல விசைகளால் தோன்றியது என பதில் கூறலாம். இவை பேரண்டமாக எவ்வாறு உருப்பெற்றது எனக் கேட்டால் அதற்குரிய விதிகளால் என பதில் கூறலாம்.

இதுவரை கூறப்பட்டவைகளுக்கு அறிவியல் அடிப்படை உண்டு. எனவே வேறு பதில்களைக் கூறினால் நாம் இது வரை கண்ட அறிவியலுக்கு முரணாகும். இப்போது இன்னும் சற்று ஆழமாகச் சென்று பேரண்டம் ஏன் தோன்றியது எனக் கேட்டால் சிலருக்கு பதில் இல்லாமல் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இப்படிக் கூறுவார்கள். ``இனவிருத்தி செய்யக் கூடியதும் நம் போன்று சிந்தித்து ``பேரண்டம் ஏன் இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது எனக் கேட்கும் அளவிற்கு பகுத்தறிவுள்ளதுமான உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்கு என பதிலளிக்கிறார்கள். இது ஆந்தரபிக் கோட்பாடு என அழைக்கப்படும் அறிவியலாளர்களின் கருத்துரையே (எநசயடி) அன்றி அறிவியல் சித்தாந்தமன்று.

இந்த அறிவியல் கருத்துரை திருக்குர்ஆனை மெய்ப்பிக்க உதவும் தகவல் என்பதை கடைசி அத்தியாயத்தில் விளக்கியுள்ளோம். எனவே இது வரை பிரச்சனை எதுவும் இல்லை. ஆயினும் அடுத்த வினாவிற்குள் புகும் போது பிரச்சனைகள் எழுகின்றன.

இப்போது நமது வகுப்பாசிரியர் மாணவர்களை நோக்கி உயிரினங்களின் பயன்பாட்டிற்காகவே தண்ணீர் தோன்றியது எனில் அதைத் தோற்றுவித்தவர் யார் எனக் கேட்பாரேயானால் மாணவர்கள் இரண்டு விதமாக பதில்களைக் கூறுவார்கள். ஒரு பிரிவார் தண்ணீரைத் தோற்றுவித்தது விதிகளையும், பொருட்களையும் உருவாக்கிய கடவுளே எனக் கூறும் போது மறு பிரிவைச் சார்ந்தவர்கள் யாரும் எதையும் உருவாக்க வில்லை;எல்லாமே விதிகளின்படி தோன்றியவைகளே எனப் பதில் கூறுவார்கள். இதைப் போன்று பேரண்டம் உருவாக்கி யது யார் என்ற வினாவிற்கு சிலர் கடவுள் என்று கூறும் போது அந்த்ரபிக் கோட்பாடு கடவுளைத் தவிர்ப்பதற்கு ஒரு வழியைத் தேடிக் கண்டுபிடித்தது. அந்த பதிலைத் தான் ஹாக்கிங் நமக்கு முன்னர் கண்ட மேற்கோள் வழியாக அறிமுகப்படுத்தினார்.

எண்ணற்ற பேரண்டங்களின் தோற்றுவாய்

மானிடத் தோற்றம் நடைபெறுவதற்கு நட்சத்திரங்கள் இருக்கவேண்டுமென்பதை ஆந்த்ரபிக் கோட்பாடு வலியுறுத்துகிறது. நட்சத்திரங்களும் அவைகளை உருவாக் கும் நெபுலாக்களும் இணைந்து ஒரு குழுவாகச் செயல்படும் தொகுதியே காலக்சிகள் ஆகும். காலக்சிகளும்,நட்சத்திரங் களும் தோன்ற வேண்டுமாயின் குறைந்த பட்சம் பெரு வெடிப்பும்,விரிவாக்கமும் முன் அத்தியாயத்தில் குறிப்பிட்ட விதத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். மில்லியன் கணக்கான பேரண்டங்கள் தான்தோன்றித்தனமாக (ஒழுங்கும் வழவழப்பும் இன்றி) தோன்றியதாகவும், அவைகளில் ஒன்றே ஒன்று மட்டும் குழப்பமான நிலையிலிருந்து ஒழுங்கும் (சநபரடயச) வழவழப்பும் (ளஅடிடிவா) பெற்று காலக்சிகளும்,நட்சத்திரங்களும் தோன்றின என அனுமானித்தால் கூட அப்போதும் கடவுளின் தேவையை மறுக்க இயலாத நிலையே தொடரும். மில்லியன் கணக்கான பேரண்டங்களில் என்பதற்கு பதிலாக நூறு கோடி என்றோ அல்லது பத்து இலட்சம் கோடி என்றோ எண்ணிக்கை அதிகரித்தால் கூட கடவுளின் தேவை தவிர்க்க முடியாததாக இருக்கும். எனவே எண்ணற்ற பேரண்டங்கள் தான்தோன்றித் தனமாக தோன்றியதாகவும் அவைகளில் ஒன்றே ஒன்றில் நட்சத்திரங்களும் காலக்சி களும் தப்பித் தவறி தோன்றி விட்டன எனவும் வைத்துக் கொண்டால் கடவுளின் தேவையைத் தவிர்த்து விடலாம் என்று எண்ணி பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது என அனுமானித்தனர்.

இது ஒரு திறமையான (?) கண்டுபிடிப்பு. ஒருவர் ஒரு கொலையைச் செய்து விட்டால் அக்கொலைக்கு அவரைப் பொறுப்பாளியாக்கி விடுவார்கள். அந்தப் பொறுப்பிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமானால் அவர் சகட்டு மேனிக்கு கண்டவரையெல்லாம் வெட்டிக் கொல்ல வேண்டும். அப்போது அவர் எல்லாவிதமான கொலைகளின் பொறுப்பி லிருந்தும் விடுவிக்கப்படுவார். ஏனெனில் அவருக்குப் பைத்தியம். எனவே அவருடைய கொலைகளுக்கு நோக்கம் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்படும். ஆனால் பேரண்டங்களின் எண்ணிக்கையை எப்படிக் கூட்டினாலும் நாம் வாழுகின்ற அந்தப் பேரண்டம் நோக்கமின்றி படைக்கப்பட்டதாக எவ்வளவு சிறந்த வழக்குரைஞரின் வாதத் திறமையாலும் நிரூபிக்க முடியாத அளவிற்கு இது ஒழுங்கையும், வழவழப்பையும் பெற்றுள்ளது. இதை எப்படிச் சமாளிப்பது? ஆனால் ஆந்த்ரபிக் கோட்பாட்டினர் நாம் சிந்தித்தது போன்று பைத்தியக்காரத் தனமான ஒரு பைத்தியக்காரனைக் கொண்டு பிரச்சனையைச் சமாளிக்க முயலவில்லை. அதற்குப் பதிலாக ஒரு படுசூப்பர் ஐடியாவை (?) கண்டு பிடித்தார்கள். இதோ அந்த ஐடியா!

மந்திக்கு வந்த வாழ்வு!

ஒரு குரங்கைப் பிடித்து வந்து தட்டச்சு இயந்திரத்தில் உட்கார வைத்தால் அது சரியாக அந்த தட்டச்சு இயந்திரத்தின் விசைத் தட்டில் (முநல க்ஷடியசன) தடதடவெனத் தட்டுமாம். அப்படித் தட்டத் தொடங்கினால் பெரும்பாலான தாள்களில் எந்த வார்த்தையும் இல்லாமல் அவை வெறும் குப்பைக் கூளமாகவே (பயசயெபந) இருக்குமாம். இந்த நிலையில் ஏதேனும் ஒரு தாளில் `ளுகூஹசு எனும் ஒரு வார்த்தை கிடைக்க வேண்டுமானால் அதற்காக எவ்வளவு தாள்களை அக்குரங்கு வீணடிக்க வேண்டும்? அவை ஏராளமாக இருக்கும். இப்போது அந்தக் குரங்கு கூறமேடந, வறமேடந டவைவடந ளவயச என்ற கவிதை வரியை ஒரு தாளில் தற்செயலாக (தப்பித்தவறி) தடதட செய்ய வேண்டுமானால் எவ்வளவு தாள்கள் வீணாக்கப்படும்? ஆனால் நமது பேரண்டம் ஒரு பள்ளிச் சிறுவனால் உருவாக்கப்படும் தரத்திலன்றி நமது அறிவியலையெல்லாம் முடமாக்கிவிடும் பெருவெடிப்பு சிங்குலாரிட்டியிலிருந்து தோன்றியது. எனவே அதற்கீடான அறிவாற்றல் தேவைப்படும் ஒரு கவிதையை டைப் செய்ய வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு கவிதையைத் தேடுவது இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவதற்கு ஒப்பாகும் என்பதை விளக்கத் தேவையில்லை. அதற்காக முயற்சியைக் கைவிட்டு விடக் கூடாது. ஏனெனில் கடவுளின் பங்கைத் தவிர்த்தே ஆக வேண்டும். இருக்கவே இருக்கிறது ஷேக்பியரின் கவிதை கள். இக்கவிதைகளை மீறுவதற்கு உலகில் கவிதைகளே இல்லை. (இது உலகில் நிலவும் ஒரு பொதுவான கருத் தாகும்) எனவே அப்படிப்பட்ட கவிதை ஒரு குரங்கின் தடதட பொழுது போக்கிலிருந்து டைப் ஆகி வரவேண்டுமானால் அதனுடைய`நிகழ் தகவு (யீசடியெடெவைல) எண்ணற்றதாகும். இதன் பொருள் அக்குரங்கு எண்ணற்ற தாள்களை வீணடித்தால் மட்டுமே அதிலிருந்து ஒரு ஷேக்பியரின் கவிதை தோன்ற முடியும் என்பதாகும்.

அந்த ஷேக்பியரின் கவிதையே நாம் வசிக்கும் இந்தப் பேரண்டம். அக்குரங்கு வீணடித்த எண்ணற்ற ஏனைய தாள்களே ஏனைய ஒழுங்கற்ற (சைசடிபரடயச) மற்றும் வழவழப்பற்ற (ளஅடிடிவாடநளள) பேரண்டங்களாகும். இப்பேரண்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பேரண்டங்களாகவும் இருக்கலாம் (கேவைநடல அயலே ரஎநசளநள) அல்லது அவை யாவும் ஒரு குழுவாக இணைந்திருந்தால் அந்த மகா பேரண்டம் அண்ட வெளியில் எல்லையற்றதாகவும் (ளயீயவயைடடல கேவைந) இருக்கலாம்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பேரண்டங்களின் எண்ணிக்கையை எல்லையற்றதாகக் கூறியதற்குக் காரணம் கடவுளின் தேவையை மறுப்பதற்கே அன்றி அக்கருத்து அறிவியலை அடிப்படையாகக் கொண்டதில்லை என்பதை இப்போது விளங்கிக் கொண்டிருப்பீர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இக்கோட்பாடு தமக்குத்தாமே முரண் பட்டதே என்பதாகும்.

காலம் இல்லையேல் நிகழ்ச்சிகளும் இல்லை!

நாம் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் பேரண்டத்தைப் போன்று சீரான, வழவழப்பான ஒரு பேரண்டம் உருவாகுவதற்குரிய நிகழ்தகவு (நடைபெறு வதற்குரிய சாத்தியக் கூறு) எண்ணற்றவைகளில் ஒன்றாகும் எனில் அது உருவாகுவதற்கு எல்லையற்ற காலமும் தேவைப்படும். ஏனெனில் காலம் இல்லாமல் நிகழ்ச்சிகள் இல்லை. காலம் என்பதன் வரைவிலக்கணமே (னநகவைடி) `நிகழ்ச்சிகளின் இடைவெளி (ஒரு நிகழ்ச்சிக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கும் இடையிலுள்ள தூரம்) என்பதாகும். எனவே நிகழ்ச்சிகள் நடைபெற காலமும் இருந்தாக வேண்டும். இதிலிருந்து எண்ணற்ற பேரண்டங்கள் தோன்ற வேண்டுமாயின் அதற்காக எல்லையற்ற காலமும் தேவைப்படும் என்பது திண்ணம். சுருங்கக் கூறின் நமது பேரண்டம் எண்ணற்ற பேரண்டங்களுள் ஒன்றாகத் தோன்றும் நிகழ்தகவையே பெற்றுள்ளது எனில் அதன் பொருள் நமது பேரண்டம் தோன்றுவதற்கு எல்லையற்ற காலமும் தேவை என்பதாகும். இப்போது எழும் முதல் கேள்வி எல்லையற்ற காலத்தில் தோன்ற வேண்டிய நமது பேரண்டம் எப்படி இப்போதே தோன்றி விட்டது என்பதாகும்.

மேலும் இக்கோட்பாடு அறிமுகப்படுத்தியிருக்கும் நிகழ்தகவைக் கணித முறைப்படி பரிசோதனை செய்து பார்த்தால் கூட இப்பேரண்டம் தோன்றுதல் என்பது மிகவும் நிகழ்தகவற்றது எநசல அயீசடியெடெந - என்பதை ஹாக்கிங் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மேற்கோளில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். மேலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் இவ்வாறு அமைவதற்குக் காரணமாக இருந்த அதன் குறிப்பிடும்படியான தொடக்க நிகழ்ச்சிகள் ஏன் அப்படி நடைபெற்றது என்பதை ஒரு கடவுளின் செயலில்லாமல் விளங்கு வது கடினம் என அவர் குறிப்பிட்டு இருப்பதையும் கருத்தில் கொண்டால் ஹாக்கிங் மந்த புத்தி கூட இல்லாத இந்த மந்திக் கவிதை வாதத்தை ஏற்கவில்லை எனப் புலனாகிறது.

மந்திக் கவிதையின் அறிவியல் முரண்பாடுகள்

ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதம் காலம் எல்லையற்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்னர் கண்டோம். எனவே காலம் எல்லையற்றது இல்லையெனில் மந்திக் கவிதையும் இல்லை என்பது அதன் பொருளாகும். இப்போது நமது கேள்வி காலம் எல்லையற்றது எனும் வாதம் அறிவியல் சார்ந்ததா? என்பதே.

காலம் எல்லையற்றது இல்லையென்றும் அதற்கு ஒரு தொடக்கம் இருக்கிறது என்றும் பெருவெடிப்பு எந்தக் கணத்தில் தொடங்கியதோ அந்தக் கணத்தில் தான் காலம் தொடங்கியது என்பதையும் நாம் முன்னர் கண்டோம். மேலும் பெருவெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நடைபெற்றிருந்தால் கூட அதை நாம் அறிவியல் விதிகளால் கண்டுபிடிக்க இயலாது என்பதே நமது அறிவியலின் நிலை என்பதையும் முன் அத்தியாயங்களில் கண்டோம். இந்த நிலையில் பெருவெடிப்புக்கு முன்னால் எண்ணற்ற குழம்பிய சீரற்ற பேரண்டங்கள் தோன்றியுள்ளன என்பதை மந்திக் கவிதையின் ஆதரவாளர்கள் எந்த அறிவியல் விதிகளால் கண்டுபிடித்தனர் என்பதே நமது கேள்வியாகும்.

இறையியலை நிராகரித்து விட்டு அறிவியலை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்த மந்திக் கவிதை வாதம் உள்ளபடியே எல்லாக் கோணங்களிலும் அறிவியலுக்கு முரணாக இருப்பதால் அறிவியல் அன்பர் களால் இதை ஏற்க இயலாது என்பது ஐயத்திற்கு இடமில்லாததாகும்.

இது வரை விவாதித்த விபரங்களிலிருந்து நாம் வசிக்கும் இந்தப் பேரண்டம் கடவுளின் செயலின்றி தோன்றியிருக்க முடியாது எனக் கண்டோம். இருப்பினும் கடவுளின் பங்கு இல்லாமல் இப்பேரண்டம் தோன்றியதாக இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்க முடியுமா எனச் சிலர் சிந்திக்கத் தலைப்படுகின்றனர். இவர்களின் வாதத்திற்கு குறைந்த பட்சம் ஒரு வாதத்தகுதி(டயறபஉ)யாவது இருக்க வேண்டு மாயின் பேரண்டங்களின் தோற்றம் எக்காலத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் எவ்வித நோக்கமும் இல்லாத நிகழ்ச்சிப் போக்கு எனும் அறிவியல் சாத்தியமற்ற ஒரு கருத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது என கூற வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் பேரண்டங்களின் தோற்றத்தில் அறிவியல் பார்வை வலியுறுத்தும் கடவுளின் பங்கை ஏற்றுக் கொள்ளும் போது பேரண்டங்களின் எண்ணிக்கை ஒரு பிரச்சனையே இல்லை என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே பேரண்டங்களின் எண்ணிக்கை ஏழு எனத் திருக்குர்ஆன் கூறியதிலும் எவ்வித அறிவியல் முரண் பாடும் இல்லை என்பதும் மிகத் தெளிவாகும்.

அடுக்குகளாய் அமைந்த வானம்

அத்தியாயத்தின் தொடக்கத்தில் நாம் கண்ட திருக்குர்ஆன் வசனம் (71:15) ஆகாயங்களின் எண்ணிக்கை ஏழு என்பதோடு அவை பல அடுக்குகளாய் படைக்கப்பட்டுள்ளன எனும் ஓர் அரிய அறிவியல் தகவலையும் தந்துள்ளது. பேரண்டங்களின் (ஆகாயங்களின்) எண்ணிக்கை எவ்வளவு என அறிவியலால் தீர்மானிக்க முடியவில்லையென்றாலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் அடுக்குகளால் உருவானதே என்பதை அறிவியல் ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன.

சர் வில்லியம் ஹெர்ஷல் என்பவரே முதலாவதாக இத்துறையில் ஆய்வுகள் மேற்கொண்ட அறிவியலாளர் ஆவார். கலிலியோ கண்டுபிடித்த தொலை நோக்கியின் தொழில் நுட்பத்தில் சில மாற்றங்களைச் செய்து அதை விட முன்னேறிய மற்றொரு தொலை நோக்கியை உருவாக்கி அவர் விண்ணை ஆராயத் துவங்கினார். இருப்பினும் நவீன அறிவியல் உலகின் தொலை நோக்கியுடன் ஒப்பிடும் போது ஹெர்ஷலின் தொலை நோக்கியின் பார்வைத் திறம் மிகவும் குறைவாகவே இருந்ததால் பல வருடங்கள் இடைவிடாமல் முயற்சி செய்த பிறகும் ஆகாயத்தில் 688 அடுக்குகளைத் தாம் அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. பேரண்டங்களின் அடுக்குகளைப் பற்றிய சரியான தகவல் மேலும் மிகத் தாமதமாகவே அறிவியல் உலகம் கண்டுபிடித்தது.

1924ல் எட்வின் ஹப்பிள் என்பவர் தாம் பேரண்டம் என்பது காலக்சிகள் எனும் நட்சத்திர மண்டலங்களின் ஏராளமான தொகுதிகளால் உருவானதே எனக் கண்டு பிடித்தவராவார். காலக்சிகள் என்பதைச் சுருக்கமாக நட்சத்திரக் கூட்டங்கள் (ளவயச உடரளவநசள) நட்சத்திர மேகங்கள் (ளவயச உடடிரனள) அல்லது நெபுலாக்கள் இவற்றுடன் ஏராளமான ஒற்றை நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்கள் (வற ளவயசள) பன்மை நட்சத்திரங்கள் (அரடவயீடந ளவயசள) வால் நட்சத்திரங்கள் (உடிஅநவள) நியூட்ரான் நட்சத்திரங்கள் (ரேவசடி ளவயசள) கருங்குழிகள் (டெயஉம டிடநள) மற்றும் நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளிட்ட மாபெரும் ஓர் அண்டத் தொகுதியாகக் குறிப் பிடலாம். பேரண்டத்தில் இவைகளின் எண்ணிக்கை நூறு கோடியென்றும் ஒவ்வொன்றிலும் பதினாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் அறிவியலாளர் ஷேப்லி கணக்கிட்டுள்ளார். (பக்கம் 8-9)ஆனால் நவீன கணக் கீட்டின்படி கேலக்சியின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சில பதினாயிரம் கோடிகளாகும்.

(பார்க்க பக்கம் 38:39 எ ப்ரீஃப் ஹிடரி ஆப் டைம்)

நமது அறிவியல் திறமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு வருவதால் இதை விட அதிகமான காலக்சிகள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்கள் எதிர் காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம். எப்படிப் பார்த்தாலும் நாம் வசிக்கும் பேரண்டம் காலக்சிகளின் அடுக்குகளால் உருவாக்கப் பட்டிருப்பதால் ஏனைய ஆறு பேரண்டங்களும் அடுக்கு களின் தொகுதிகளாக இருந்து விட்டால் அது எவ்வித அறிவியல் முரண்பாடும் இல்லாததே என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

விண்ணகத்தின் அமைப்பைப் பற்றி நாம் இது வரை விவாதித்த விபரங்களில் சில எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை சார்ந்ததாக இருப்பினும் அவற்றுள் ஒன்றாகிய நாம் வசிக்கும் இப்பேரண்டம் என்பது ஏராளமான அடுக்குகளால் உருவாக்கப்பட்டதே என்பதை நாம் இப்போதே கண்டுபிடித்து விட்டிருக்கிறோம். வானங்கள் அடுக்குகளால் அமைந்தவையே எனப் பொருள்படும் திருக்குர்ஆன் வசனத்தை மெய்ப்பிக்கும் அறிவியல் ஆதாரமே இதுவாகும். நவீன அறிவியல் உலகில் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளின் உதவியால் ஆகாயத்தில் அறிவியல் ஆய்வுகள் நடத்துபவர்களால் மட்டும் அறிந்து கொள்ள முடியும். இந்த அறிவியல் உண்மை ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடிந்தது என்பதை சிந்திக்கும் போது திருக்குர்ஆன் பேரண்டங்களைப் படைத்த இறைவனின் ஞானத்திலிருந்து தோன்றியதே அன்றி ஒரு மனிதனின் அறிவிலிருந்து தோன்றி இருக்க முடியாது என்பது ஓர் அறிவியல் உண்மை யாக நம்மால் மிக எளிதாக விளங்க முடிகிறது.

அத்தியாயம் 4

சீராக அமைந்த வானங்கள்

சென்ற அத்தியாயத்தில் பேரண்டத்தின் சில முக்கிய மான இயற்பியல் குணங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். அந்த முக்கியமான பண்புகளில் ஒன்று நமது பேரண்டத்தின் சீரான மற்றும் ஒழுங்கான (ரகைடிசஅ யனே சநபரடயச) அமைப்பும் அதன் வழவழப்பான (ளஅடிடிவா) தன்மையுமாகும். மொத்த அறிவியல் உலகையும் பேரண்டத்தின் இப்பண்பு பெரும் வியப்பிற்குள் ஆழ்த்தும் போது அறிவியலாளர்களில் ஒரு பிரிவாராகிய இறை மறுப்பாளர்களை வியப்பிற்கு பதிலாக பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நமது சிற்றினம் (ளயீநஉநைள) இந்த பூமியில் தோன்றிய காலம் முதல் நம்முடன் தோன்றிய அறிவியல் அறிவின் உட்கிடக்கை (நசவையபந)கு ஏற்ற வகையில் எப்படியல்லாம் சிந்தித்த போதும் இப்படிப்பட்ட ஒரு பேரண்டம் தோன்ற வேண்டுமாயின் அது முன் கூட்டித் தீர்மானித்த நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற செயலாகக் காட்சியளிப்பதால் கடவுளைத் தவிர்க்க இயலாத நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் அறிவியலை ஏற்பதற்காகக் கடவுளை ஒப்புக் கொள்வதா அல்லது கடவுளை மறுப்பதற்காக அறிவியலைப் புறக்கணிப்பதா எனத் தீர்மானிக்க வேண்டிய கட்டம் வந்த போது கடவுளை மறுக்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றி பெற்றதால் அதற்கேற்ற ஓர் அறிவியல் புனைவை (ளஉநைஉந கஉவடி) கற்பனை செய்து கொண்டார்கள். இதன் விளைவாக பேரண்டம் எவ்வித நோக்கமும் இல்லாமல் இயற்கையாகத் தோன்றுகின்றன என்றும் அதனை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆந்த்ரபிக் மந்திக்கு ஏற்பட்ட தவறே நாம் வசிக்கும் இப்பேரண்டம் எனும் அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத ஒரு அறிவியல் புனைவை உருவாக்கி அதை அறிவியல் கருத்துரையாக அறிமுகப் படுத்துகின்றனர்.

நாம் வசித்துக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் சிறப்பான இயற்பியல் பண்புகளும் அதன் முக்கியத்துவமும் சென்ற நூற்றாண்டின் கடைசியில் தாம் தெரிய வந்தது. இது தெரிய வந்த போது அது எவ்வளவு பெரிய வியப்பை அறிவியல் உலகில் தோற்றுவித்ததோ அதை விடப் பெரிய வியப்பிற்குரிய செய்தி யாதெனில் நமது பேரண்டத்தின் இச்சிறப்பியல்புகளும் அதற்காக இறை மறுப்பாளர்கள் கூறும் காரணங்களும் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஏழாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் ஓங்கிய குரலில் பாரறிய பறை சாற்றிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

குறையற்ற வானங்கள்

அறிவியலாளர்களை வியக்கச் செய்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எவ்வித ஏற்றக் குறைச்சலை யும் நீர் காண மாட்டீர்! மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இரு முறை பார்வையைச் செலுத்துவீர்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்பி அடையும்.

(67 : 3-4)

மேற்கண்ட திருமறை வசனங்கள் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் தலைப்போடு தொடர்பு கொண்டது எனக் கூறப்பட்ட பிறகும் சட்டெனப் புரியாத நிலை பலருக்கும் காணப்படலாம். எனவே இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் வசிக்கும் இப்பேரண்டத்தின் ஒழுங்கான மற்றும் சீரான பரவலும் (னளைவசரெவடி) வழவழப்பான தன்மையும் அதன் மிக முக்கியமான இயற்பியல் குணங்களாகும் என முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். பேரண்டம் இவ்வாறு சீராக ஒழுங்காகப் பரவியுள்ளது எனில் அண்டவெளியில் எவ்வித ஏற்றக் குறைச்சலும் இல்லை என்பதே அதன் பொருளாகும், ஏற்றக் குறைச்சல் இல்லை என்றால் எதனுடைய ஏற்றக் குறைச்சல் எனும் கேள்வி வாசகர்களிடம் இப்போது எழுந்திருக்கும். விளக்குவோம்.

ஆகாயம் என்பது வெறும் சூன்யமான அண்டவெளியே அன்றி அப்படி எதுவும் இல்லை என இப்போதும் பொது மக்களில் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும். ஆகாயம் என்பது உண்மையிலேயே படைக்கப் பட்ட ஒரு பேருருவமாகும். அதில் பெரும் பெரும் நட்சத்திர மண்டலங்கள் (காலக்சிகள்) ஏராளமாக உள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே அதை விடப் பன்மடங்கு பிரமாண்டமான அண்டவெளி இருக்கிறது. இதைப் பற்றி அறிவியலாளர் டேவிட்சன் கூறுவது வருமாறு:

இந்த அண்டவெளியில் பல்வேறு தனிமங்களின் மூலக் கூறுகளும், அணுக்களும் பரவியுள்ளன. இவைகளுடன் அண்டத் துகள்களும் (உடிளஅஉ னரளவள) கலந்துள்ளன. இருப்பினும் பூமியில் உருவாக்கக் கூடிய வெற்றிடத்தை விட மிகக் குறைந்த வாயுப் பொருட்களே காலக்சிகளின் இடை வெளியில் இருக்கின்றன. அதே நேரத்தில் காலக்சிகளின் பரப்பளவை விடப் பன்மடங்கு பிரமாண்டமான இடை வெளியை அவை பெற்றுள்ள காரணத்தால் பேரண்டத்தி லுள்ள மொத்த நட்சத்திரங்களின் பொருண்மைக்கு நிகராகவோ அல்லது அதை விட அதிகமாகவோ பொருண்மையை காலக்சிகளின் இடைவெளியிலுள்ள பொருட்கள் பெற்றிருக்கும்.

(பார்க்க பக்கம் 1-2 அட்ரானமி ஃபார் எவரி மேன்)

பேரண்டப் பெருவெளி நம் கற்பளைக் கெட்டாத தூரம் பரவிக் கிடக்கின்ற போதிலும் நம் அறிவியல் கண்களுக்கு எட்டிய தூரமெல்லாம் அண்டவெளியில் பரவியிருக்கும் அண்டத் துகள்களும் ஏனைய மூலக் கூறுகள் மற்றும் அணுக் களும் செவ்வொழுங்காக ஒரே சீராகப் பரவியிருக்கின்றன. எந்த ஓர் இடத்திலும் ஏற்றக் குறைவு இல்லை. அவை எந்த ஓர் இடத்திலும் அடர்த்தி மிகுந்தோ அல்லது அடர்த்தி குறைந்தோ காணப்படவில்லை. அதோடு எந்த ஓர் இடத் திலேனும் அவை அறவே இல்லாமல் எவ்விதமான பிளவு களும் உருவாகவில்லை. இது மட்டுமின்றி பேரண்டம் மொத்தமும் பரவியுள்ள வெப்பமும் (2.2மு) ஒரே சீராக உள்ளன.

வழுக்கும் வானங்கள்!

அண்டவெளியின் அமைப்பு இதற்கு மாறாக சில இடங்களில் அடர்த்தி மிகுந்து காணப்பட்டால் அந்த இடத்தை நாம் ஒரு கரடுமுரடான அல்லது மேடான இடமாகக் கற்பனை செய்யலாம். அதே நேரத்தில் வேறு ஓர் இடத்தில் அண்டவெளி அடர்த்தி மிகக் குறைவாகக் காணப்பட்டால் அந்த இடத்தை ஒரு பள்ளமான இடமாகக் கற்பனை செய்யலாம். வேறு வார்த்தைகளில் கூறினால் நமது பேரண்டம் மேடு பள்ளங்களோ,பிளவுகளோ, குண்டும் குழியுமாகவோ இல்லாமல் வழவழப்பாக ஒழுங்குற அமைந்த ஆகாயமாகும். நமது ஆகாயப் பெருவெளி இவ்வளவு ஒழுங்குற அமைந்திருப்பது அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பேரண்டம் ஏன் இவ்வளவு வழுக்கலாக (ளஅடிடிவா) இருக்கிறது எனும் வினா ஹாக்கிங் அவர்களின் நூலில் பல இடங்களில் நாம் பார்க்கிறோம்.

ஹளவசடிடிஅல கடிச நஎநசல அய - நுனவைநன லெ ஆயசவ னுயஎனைளடி சுநஎளைநன நனவைடி 1954 - கூந ஹடனநே ஞசநளள - டுநவஉ றுடிசவா ழநசவள

பொருள் விளக்கம்

இப்போது அண்டவெளியின் வினியோகத்தைக் குறித்து திருக்குர்ஆன் கூறும் செய்தியை விளக்கமாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். அவ்வசனங்களில் கூறப்பட் டுள்ளபடி ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் எனும் முதலாவது செய்தியை நாம் ஏற்கனவே ஆய்வு செய்து விட்டோம். அவ்வசனங்களில் இரண்டாவதாகக் கூறப்பட்டிருக்கும் ``(அவனுடைய) படைப்பில் எவ்வித ஏற்றக் குறைவும் காண மாட்டீர்! என்பதன் பொருளும் வாசகர்கள் இப்போது விளங்கிக் கொண்டிருப்பீர்கள். அதாவது அண்டவெளியில் பரவியிருக்கும் அதன் பொருட்களை அவன் வினியோகம் செய்திருப்பதில் எவ்வித ஏற்றக் குறைவும் இல்லை என்பதாகும். ஆனால் ``மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? எனத் திருக்குர்ஆன் கூறுகிறதே இதன் பொருள் என்ன?ஆகாயத்தில் ஏதேனும் பிளவுகள் இருப்பதாக யாரேனும் கூறினார்களா? அப்படி யாரும் கூறவில்லையென்றால் மீண்டும் இரு முறை பார்வையைச் செலுத்துவீர்!எனத் திருமறை ஏன் கூற வேண்டும்? அது மட்டுமின்றி மீண்டும் இரு முறை பார்வையைச் செலுத்தினால் கூட அந்தப் பார்வைகள் ``களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும் என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. இதற்கெல்லாம் பொருளென்ன?

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து எவ்விதக் குறைபாடும் இன்றி வழவழப்பாகப் படைக்கப்பட்ட வானவெளியில் பிளவுகளைப் போன்ற சில குறைபாடுகள் உண்டு என சிலர் குறை கூறுகின்றனர் என்றும் அவர்களுக் குரிய அறிவுரையாகவே ஆகாயத்தை மீண்டும் நன்கு பார்வையிடும்படி கூறப்பட்டிருக்கிறது என்றும் நாம் யூகிக்க முடிகிறது. இந்த யூகம் மெய்யென்றால் ஆகாயத்தின் படைப்பில் குறைபாடுகள் உண்டு எனக் கூறியது யார் எனும் கேள்வி இப்போது எழுகிறது.

யார் அந்த விமர்சகர்?

இறைத் தூதர் நபிகள் நாயகம் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்) அவர்கள் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில் என்பதும் அவருடைய வாழ்நளில் தாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அவருக்கு வழங்கப் பெற்றது என்பதும் வரலாறு. இறைத் தூதரையும் திருக்குர்ஆனையும் விமர்சனம் செய்து கொண்டிருந்த நிராகரிப்பாளர்கள் இறைத் தூதரும் திருக்குர்ஆனும் போதித்த இலாத்தின் ஏகத்துவ வாதத்தை மட்டுமே நிராகரித்தார்களே அன்றி இறைவனின் உள்ளமையையோ, அவனது எல்லையற்ற படைப்பாற்றலையோ கடுகளவும் மறுத்ததில்லை. ஆகவே அவர்கள் இந்த விமர்சனத்தைச் செய்யவில்லையென்பது சர்ச்சைக்கு இடமில்லாததாகும்.

இந்த நிலையில் அன்று வாழ்ந்திருந்த அறிவியலாளர் களில் யாரேனும் இந்த விமர்சனத்தைச் செய்து இருக்கிறார் களா என்பதைப் பார்த்தால் அன்று நிலவி வந்த அறிவியல் கருத்துக்களில் பெரும் செல்வாக்கு செலுத்திய அரிடாட் டில் (ஹசளைவடிவடந384 க்ஷஉ - 322 க்ஷஉ) கூட இப்படிப்பட்ட விமர்சனத்தை நடத்தவில்லை எனத் தெரிய வருகிறது.

அறிவியல் வளர்ச்சியோ அல்லது வானியலைப் பற்றிய பிழையற்ற அறிவைப் பெறும் பொருட்டு தகுதி வாய்ந்த அறிவியல் கருவிகளோ இல்லாத பண்டைக் காலத்தில் வானியலில் அரிடாட்டிலுக்கு பெரும் பிழைகள் நேர்ந்துள்ளது என்பது உண்மையே. இதைப் பிரதிபலிக்கும் வகையில் நவீன அறிவியல் உலகின் அறிவியலாளர்கள் அதை நையாண்டியாகக் கூறுவதும் உண்டு.

பூமி பேரண்டத்தின் மையத்தில் அசையாதிருக்க சூரியன் அதைச் சுற்றி வருகிறது என்றோ,இலேசான பொருட்களை விட கனமான பொருட்கள் பூமியின் மீது வேகமாக வீழ்கின்றன என்றோ அரிடாட்டில் கூறினால் ஏனைய அறிவியலாளர்களின் தலைவிதி ``அரிடாட்டில் அவ்வாறு கூறினால் அது அப்படியே ஆகும் எனக் கூற வேண்டும் என்பதாகும். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு அறிவியல் உலகில் தன்னிகரில்லா செல்வாக்கு பெற்ற அரிடாட்டில் கூட ஆகாயத்தில் ஓட்டைகளோ, விரிசல்களோ இருக் கின்றன எனும் தவறான கருத்தைத் தெரிவிக்கவில்லை. பிறகு யார் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருக்க முடியும்?

பண்டைகால அறிவியலாளர்களில் யாரும் பேரண்டப் படைப்பில் இப்படிப்பட்ட ஒரு குறைபாட்டைக் கூறவில்லை என்பதில் இருந்து இப்படிப்பட்ட ஒரு விமர்சனம் செய்யப் பட்டிருப்பின் அது நவீன உலகின் அறிவியலாளர்களால் செய்யப்பட்டதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால் நவீன உலகின் அறிவியலாளர்கள் பேரண்டத்தின் படைப்பில் இப்படிப்பட்ட ஒரு குற்றச் சாட்டைக் கூறுவார்கள் என்பது ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரியும்?

ஆனால் ஆய்வுக்குரிய திருமறை வசனங்களை ஒன் றல்ல பலமுறை பார்வையை திரும்பத் திரும்பச் செலுத்தினா லும் இறைவனுடைய படைப்பில் குறை கண்டவர்களிடம் அவர்கள் கூறுவது போன்ற குறைபாடுகள் ஏதும் அங்கு இல்லையென்றும் அதை ஒன்றுக்குப் பலமுறை நன்றாகப் பார்த்து தெளிந்து கொள்ளும்படி கூறும் வார்த்தைகளாகவே அவை காட்சியளிக்கிறது. இந்த நிலையில் மெய்யாகவே நவீன உலகின் அறிவியலாளர்கள் யாரேனும் திருக்குர்ஆன் குறிப்பிடும் வகையில் குறை கூறியிருந்தால் திருக்குர்ஆ னுடைய இறைஞானமே அதை தீர்க்க தரிசனமாக முன் கூட்டியே கண்டு அதற்குரிய பதிலையும் முன்கூட்டியே கூறிவிட்டது என்பது தெளிவு.

ஹெர்ஷலுக்கு நேர்ந்த தவறு

நவீன வானியல் என்பது தொலை நோக்கியின் குழந்தை எனக் கூறினால் மிகையாகாது. எனவே தாயில்லாமல் சேயில்லை என்பதைப் போன்று தொலை நோக்கி இல்லை யேல் வானியலும் இல்லை. கலீலியோ 1609ல் தொலை நோக்கியை உருவாக்கி வானத்தை ஆய்வு செய்யத் துவங்கினார். அவர் நிலவின் நிலம் சார்ந்த சில குறிப்பிடும் படியான அடையாளங்களையும், சனிக் கோளின் வளையங் களையும் வியாழனின் (துரயீவைநச) நிலாக்களையும் (அடிடிளே), வெள்ளியின் (ஏநரேள) பிறை வடிவங்களையும் (யீயளநள) சூரியனின் அச்சில் சுழற்சியின் (யஒயைட சடிவயவடி) விபரங்களையும் கண்டுபிடித்தார். இதைத் தவிர அவரது மிகக் குறைந்த பார்வைத் திறம் கொண்ட தொலை நோக்கியால் நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பரப்பளவைக் கொண்ட பெருவெளி எனக் கண்டுபிடிக்க இயன்றதே அன்றி அதற்கு மேல் முன்னேற இயலவில்லை.

வானியல் ஆய்வின் முன்னேற்றம் தொலை நோக்கியின் பார்வைத் திறனைச் சார்ந்ததாகும். ஆனால் அதன் முன் னேற்றமோ மந்தமாகவே போய்க் கொண்டிருந்தது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1783 ல் வில்லியம் ஹெர்ஷல் (றுடைடயைஅ ழநசஉநட) எனும் உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் தொலை நோக்கியில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்களைச் செய்து அண்டவெளியை ஆராயத் துவங்கினார். மிகப் பொறுமை யாக தன் ஆய்வை நடத்திக் கொண்டிருந்த ஹெர்ஷலுக்கு ஏற்பட்ட வானியல் வியப்புகளில் ஒன்றைப் பார்ப்போம்.

ஒரு நாள் அவர் ஆகாயத்தின் வட திசை அரைக் கோளத் தில் (சூடிசவாநச நஅளையீநசந) தம் ஆய்வை நடத்திக் கொண்டிருந்த போது அவருடைய கழுகுக் கண்கள் எதன் மீதோ நிலைகுத்தி நின்று விட்டது. நம்பினாலும் சரி! இல்லாவிட்டாலும் சரி! எல்லையற்ற ஆச்சரிய மிகுதியால் ``அதோ ஆகாயத்தில் ஒரு ஓட்டை! வெளி உலகிற்கு ஒரு ஜன்னல்! எனக் கூக்குரலிட்டார். அடக்க முடியாத ஆச்சரியத்தால் (யுரேக்கா! யுரேக்கா! எனக் கூக்குரலிட்டுக் கொண்டே நிர்வாணமாக வீதியில் ஓடவில்லை யென்றாலும்) தம் சகோதரியை அழைத்து வந்து தாம் கண்ட ஆச்சரியத்தை தம் சகோதரிக்கும் காட்டியதாகவும் கூறப்படு கிறது. இவர் மட்டும் அன்றி ஆகாயத்தின் தென்பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்த அவருடைய மகன் ஜான் என்பவரும் இதைப் போன்று ஆகாயத்தில் கருநிறக் கோடுகளை (னுயசம டநேள) கண்டதாகவும் கூறப்படுகிறது.

(பார்க்க பக்கம் 50 நியூ ஹேன்ட் புக் ஆப் ஹெவன்)

பாவம் ஹெர்ஷல் அவர்கள் அண்டவெளியில் ஒரு மாபெரும் அற்புதத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் வாழ்ந்து சென்று விட்டார். ஆனால் அவரும் அவருடைய மகன் ஜான் என்பரும் ஆகாயத்தில் கண்டதாக் கூறிய ஓட்டையும், விரிச லும் (னுயசம டநேள - இருண்ட கோடு) உண்மையே தாமா? நிச்சய மாக இல்லவே இல்லை. நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொலை நோக்கியின் வளர்ச்சியில் முன்னேற்றங்கள் வந்த பின் வானு லகை ஆராய்ந்த அறிவியலாளர்கள் ஹெர்ஷலுக்கும் அவருக்குப் பின்னால் தோன்றிய ஆயிரக் கணக்கான அறிவியலாளர்களுக் கும் நேர்ந்த தவறைக் கண்டுபிடித்து விட்டார்கள். இதைப்பற்றி அதே நூலின் பக்கம் 93-94ல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

அதில் ஒரு வரி இவ்வாறு காணலாம். குடிச அயலே லநயசள வாநளந பசநயவ சைசநபரடயச யசநயள வாந நயஎநளே றநசந வாடிரபாவ வடி நெ டிடநள வாந ளமல றாஉ வாநசந றநசந டி ளவயசள ரெவ றந மடிற வாயவ வாந னயசம சநபடிளே யசந ளடைடிரநவவநள டிக ரடைடரஅயேவநன நேரெடயந வாயவ னைந வாந ளவயசள நொனே.

(பல வருடங்களுக்கு ஆகாயத்திலுள்ள இந்த ஒழுங் கற்ற பெரும் பிரதேசங்கள் நட்சத்திரங்களே இல்லாத ஓட்டைகளாகக் கருதப்பட்டன. ஆனால் அந்த இருண்ட பகுதிகள் நட்சத்திரங்களைப் பின் பக்கம் மறைத்துக் கொண்டிருக்கும் ஒருவித நெபுலாக்களின் நிழல் உருவங்களே என்பது நமக்குத் தெரியும்.)

திருக்குர்ஆனின் தீர்க்க தரிசனம்

திருக்குர்ஆனின் தெய்வீக ஞானத்தை நிரூபிக்கும் எவ்வளவு அற்புதமான அறிவியல் ஆதாரங்கள் இவை! 18ம் நூற்றாண்டிலும், 19ம் நூற்றாண்டிலும் தோன்றக் கூடிய

சூநற ழயனே க்ஷடிடிம டிக ழநளஎநளே - அஉ ழுசயற ழடைட க்ஷடிடிம ஊடிஅயீயலே ஐஉ, சூநற லுடிசம, டுடினேடி

சூயஅந டிக ஹரவாடிசள : 1. ழநசநெசவ து. க்ஷநயசன, 2. னுடிசடிவால ஹ. க்ஷநநேவ, 3.ழரப ளு. சுஉந

ஆயிரக் கணக்கான வானியல் விஞ்ஞானிகளுக்கு ஏற்படக் கூடிய தவறுகளை முன்கூட்டியே கண்டு அவைகளைச் சுட்டிக் காட்டும் பணியை அத்தவறுகள் தோன்றுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் செய்துள்ளது எனில் அதன் தெய்வீக ஞானத்தை யாரால் தாம் புறக்கணிக்க முடியும்? இருப்பினும் இந்த தெய்வீக வெளிப்பாட்டில் யார் அக்கறை காட்டினார்கள்? மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்கும் இந்த இறை வேதத்தை வெறும் ஆராதனைகளுக்கு மட்டும் உரியதாக எண்ணி ஒதுக்கி வைத்தனர்.

ஹெர்ஷலுக்குப் பிறகு ஆகாயத்தில் எப்பொழுதெல்லாம் ஒரு இருண்ட நெபுலாவை அறிவியலாளர்கள் பார்க்கிறார் களோ அப்பொழுதெல்லாம் அதை ஆகாயத்தின் ஒழுங்கற்ற பகுதியாம் குழியாகவோ, விரிசலாகவோ (திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள `ஃபுதூர் - எனும் வார்த்தை பிளவு, விரிசல், ஓட்டை, உடைந்து விடுதல், கிழிந்து விடுதல் என்பது போன்ற விரிவான அர்த்தங்களைக் கொடுக்கும் சொல்லாகும் என்பதைக் கவனத்தில் கொள்க.) கருதிக் கொண்டனர். சுருங்கக் கூறின் ஆகாயத்தில் ஏராளமான இருண்ட நெபுலாக்கள் இருப்பதால் அவை யாவும் ஆகாயத்தில் உள்ள குழிகளும், விரிசல்களுமாக கற்பளை செய்யப்பட்டு பேரண்டம் என்பதே குண்டும், குழியும் நிறைந்து ஒழுங்கற்ற ஒரு பேருருவமாகக் கிட்டத்தட்ட இரண்டு நூற்றண்டு கால அளவுக்கு அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால் திருக்குர்ஆன் ஆகாயத்தில் அப்படிப்பட்ட குறைபாடுகள் எதுவும் இல்லை என ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி இருந்தும் உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளுக்குக் கூட திருமறை கூறிய அறிவியல் உண்மைகளைக் கண்டு பிடிக்க மேலும் பதிமூன்று நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. திருக்குர்ஆன் மானிடப் படைப்பு இல்லை. அது தெய்வீக வெளிப்பாடே என்பதற்கு இதைவிட சிறந்த அறிவியல் ஆதாரங்கள் வேறென்ன இருக்கப் போகிறது?

மந்திக் கவிதைக்கும் செக்

இது வரை நாம் விவாதித்த விபரங்களிலிருந்து ஆகாயத்தின் படைப்பில் எவ்விக் குறைபாடுகளும் இல்லை எனத் திருக்குர்ஆன் கூறியது ஒரு மகத்தான அறிவியல் உண்மை என்தை நாம் ஐயமற விளங்கிக் கொண்டோம். இந்த வசனங்களில் திருக்குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் தனிப்பட்ட பாணி (பார்ப்பீராக! ஏதேனும் பிளவைக் காண் கிறீரா?)யிலிருந்து ஆகாயத்தின் படைப்பில் தவறுதலாகக் குறை கூறக் கூடிய விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்றும், அவ்வாறு எதிர்காலத்தில் அவர்கள் கூறப் போகும் குறைபாடுகளுக்குரிய பதிலே அந்தக் குறிப்பிட்ட பாணியில் திருமறை தெரிவித்திருக்கும் விபரங்களாகும் எனவும் நாம் விளங்கிக் கொண்டோம். இந்த விளக்கம் கூட பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு வார்த்தைக்கு வார்த்தை நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் விளங்கிக் கொண்டோம்.

ஆனால் அந்த வசனங்களின் இறுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும் ``களைப்புற்ற இழிந்ததாகவே பார்வை உம்மைத் திரும்ப அடையும் எனும் வரி ஹெர்ஷலுக்கோ,அவரைப் போன்ற தவறுகள் நேர்ந்த இதர விஞ்ஞானிகளுக்கோ கூறப்பட்டுள்ள வார்த்தைகளாக அவை ஒரு போதும் இருக்க முடியாது. அந்த எச்சரிக்கை முன் அத்தியாயத்தில் கண்ட ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதத்திற்கு கூறப்பட்ட வார்த்தைகளாக இருப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் அந்த வார்த்தைகளில் ஒரு கடுமையான எச்சரிக்கையும் அறைகூவலும் உள்ளன. பேரண்டத்தை ஆய்வு செய்யும் ஒருவர் இருண்ட நெபுலாவைப் பார்த்து தவறுதலாக அவை ஓட்டை என்பதை முடிவு செய்வதைக் குறித்து சொல்லப்பட்டதாக அது இருக்க இயலாது. ஏனெனில் பேரண்டத்தின் படைப்பில் இறைவனின் பங்கை நிராகரிக்க வேண்டும் எனும் எண்ணம் அவரிடம் சிறிதளவும் இல்லை. அவருடைய ஆய்வில் இயல்பாக நிகழும் ஒரு தவறுதலே அது ஆகும். எனவே இந்த எச்சரிக்கை பேரண்டப் படைப்பில் இறைவனின் பங்கை நிராகரிக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காக வேண்டுமென்றே குறைபாடுள்ள பேரண் டங்கள் எண்ணற்றவை உண்டு என்று எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் கூறிக் கொண்டிருப்பவர்களுக்கே அந்த எச்சரிக்கை பொருந்தும். மேலும் படைப்புப் பணியில் இறைவனை நிராகரித்து விட்டு அவனுடைய இடத்தில் ஒரு குரங்கை கற்பனை செய்து இறைமையை இழிவு செய்பவர் கள் யாரோ அவர்களே இந்த எச்சரிக்கைக்கும் அறைகூவலுக் கும் எல்லா விதத்திலும் பொருத்தமானவர்கள் ஆவார்கள். இந்த விளக்கத்திலிருந்து திருக்குர்ஆனுடைய இந்த எச்சரிக்கை ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கையே என்பது தெளிவு.

குறைபாடுடைய (குழம்பிய, சீரற்ற - (உயடிவஉ யனே சைசநபரடயச) பேரண்டங்கள் எண்ணற்றவை இருக்கின்றன எனக் கூறி இறைவனை நிராகரிக்க முயற்சி செய்து கொண்டி ருப்பவர்கள் எவ்வளவு தாம் முயற்சி செய்து விண்ணைத் திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்த்தாலும் அப்படிப்பட்ட குறைபாடுள்ள ஒரே ஒரு பேரண்டத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் பார்த்துப் பார்த்து கண்கள் சோர்ந்து போய் தங்களுடைய வாதத்தில் தோல்வியுற்று இழிவையும் தாங்கி அவர்களுடைய பார்வை அவர்களிடமே திரும்பி விடும் எனும் விளக்கம் இவ்வசனங்களிலிருந்து நாம் பெறுகிறோம். நன்கறிந்தவன் அல்லாஹ் ஆவான்.

ஃப்ரீடுமன் அனுமானமும் மந்திக் கவிதையும்

மந்திக் கவிதை வாதப்படி பேரண்டங்களின் பரவல் இரண்டு விதங்களில் அமையலாம் என முன்னர் கண்டோம். ஒழுங்கற்று குழம்பிக் கிடக்கும் எண்ணற்ற தனித்தனி பேரண்டங்கள் இருக்க அவற்றில் ஒன்றே ஒன்றாக நாம் வசிக்கும் வழவழப்பான பேரண்டம் இருக்கலாம் என்றோ அல்லது நாம் வசிக்கும் வழவழப்பான ஒரே ஒரு குட்டிப் பேரண்டமும் அதைத் தவிர ஒழுங்கற்று குழம்பிய வேறு எண்ணற்ற குட்டிப் பேரண்டங்கள் ஒன்றாக இணைந்த ஒரு எல்லையற்ற மகா பேரண்டமாக இருக்கலாம் என்பதே அவ்வாதமாகும். இது அறிவியல் தத்துவங்களுக்கு முரணான கற்பனை என்பதை நாம் முன்னர் கண்டோம். மேலும் ஒழுங்கற்ற குட்டிக்குட்டிப் பேரண்டங்களைப் பற்றிய வாதம் ஃப்ரீடுமன் அனுமானத்திற்கும் (இதைப் பற்றி முதல் அத்தியாயத்தில் கூறியுள்ளோம்.) முரண்பட்டதாகும்.

இப்பேரண்டம் எத்திசையிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பது அவருடைய முதல் அனுமானம். பேரண்டத்தின் எந்த இடத்திற்குச் சென்று தரிசனம் நடத்தினாலும் இதுவே உண்மையாகும் என்பது அவருடைய இரண்டாவது அனுமானமாகும். இவை உண்மையாக இருந்தால் மந்திக் கவிதையின் குழம்பிய குட்டிக்குட்டிப் பேரண்டங்களின் வாதம் தவறாகும். ஏனெனில் ஃப்ரீடுமன் அவர்களின் அனுமானம் உண்மையென்றால் நாம் வசிக்கும் பேரண்டத்தின் இப்பகுதி எப்படி இருக்கிறதோ அப்படியேதாம் பேரண்டத்தின் மற்ற எல்லா பகுதிகளும் இருந்தாக வேண்டும். எனவே பேரண்டத்தில் நாம் வசிக்கும் பகுதி செவ்வொழுங்குடன் வழவழப்பாக இருந்தால் பேரண்டத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளும் அவ்வாறே இருந்தாக வேண்டும். எனவே ஒழுங்கற்ற குழம்பிய வேறு குட்டிப் பேரண்டங்கள் நாம் வசிக்கும் இப்பேரண்டத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதே ஃப்ரீடுமன் அனுமானத்திலிருந்து பெறப்படும் விளக்கமாகும்.

இப்போது ஃப்ரீடுமன் அனுமானங்களுக்கு நிரூபணங் கள் கிடைக்கத் துவங்கியுள்ளன. 1965ல் இரு அமெரிக்க விஞ்ஞானிகளால் மைக்ரோ வேவ் டிடக்டர் (அஉசடிறயஎந னநவநஉவடிச) சோதனை இடப்பட்டுக் கொண்டிருந்த போது தற்செயலாக நிகழ்ந்த ஓர் அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் தமது நூலில் விவரிக்கிறார். அக் கண்டுபிடிப்பு ஃப்ரீடுமன்னின் முதல் அனுமானத்தை உறுதி செய்ததாக அவர் கூறுகிறார். அதை உறுதி செய்த அர்னோ பென்ஸியா (ஹசடி ஞநணேயைள) மற்றும் ராபர்ட் வில்சன் (சுடிநெசவ றுடைளடி) எனும் அறிவியலாளர்களுக்கு அக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கருதி, 1978 க்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. (பார்க்க பக்கம் :43-45 எ ப்ரீஃப் ஹிடரி ஆப் டைம்) அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த விகிதத்தில் முன்னேறிக் கொண்டிருந்தால் மெய்யான இறைவனின் கலப்பற்ற நூலாம் திருக்குர்ஆனிலிருந்து நாம் இங்கு ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனங்களின் கடைசி வரியின் நிறைவேற்றத்தை இந்த நூற்றாண்டிற்குள்ளாகவோ அல்லது அடுத்து வரும் ஓரிரு நூற்றாண்டுக்குள்ளாகவோ உலகம் காணத்தாம் போகிறது. ஏனென்றால் இது திருக்குர்ஆனின் வார்த்தை.

அத்தியாயம் 5

பூமியின் வடிவம் உருண்டை

பூகோளத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான இயற்பாடுகளில் ஒவ்வொரு நாளும் காலம் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றமும் ஒன்றாகும். மனித இனம் உலகில் வாழத் துவங்கிய காலம் முதல் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விந்தையைப் பார்த்து வியப்படைந்தவாறே வாழ்ந்து வந்தது. இதை ஆராய்ந்த பழங்கால அறிவியலாளர்கள் இதற்கான கோட்பாடு ஒன்றை உருவாக்கினர். புவி மையக் கோட்பாடு (கூந நயசவா உநவேநசஉ வாநடிசல) என்பது இதன் பெயராகும்.

பூகோளம் பேரண்டத்தின் மையத்தில் அசையாது நிலைபெற்றிருக்கிறது என்பதும் சூரியனும் இதர கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்பதும் இக்கோட்பாட்டின் கருத்தாகும். பழங்கால அறிவியல் உலகின் தன்னிகரற்ற அறிவியலாளராம் அரிடாட்டில் இக்கோட்பாட்டைச் சோதித்து அங்கீகாரம் அளித்தபடியால் இக்கோட்பாடு கேள்விக்கிடமில்லாமல் மொத்த உலகிலும் நம்பப்பட்டு வந்தது. இப்போது திருக்குர்ஆனின் அறிவியல் இக்கோட் பாட்டிற்கு எந்த அளவிற்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதைப் பார்போம்.

புவிமையத்தின் கோட்பாட்டில் பேரண்டத்தின் அச்சாணி யைப் போன்று அசையாதிருப்பதாக கற்பளை செய்யப்பட்ட பூமியைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

யாவும் விண்ணில் நீந்துகின்றன

``அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனை யும் படைத்தான். ஒவ்வொன்றும் வானவெளியில் நீந்துகின்றன.

(21:33)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்திக் கொண்டிருக்கின்றன என்றும் கூறியதிலிருந்து பூமியும் விண்ணில் நீந்திக் கொண்டிருப்ப தாகப் பொருள்படுகிறது. எனவே பேரண்டத்தின் மையத்தில் பூமி அசையாதிருப்பதாகக் கூறப்பட்ட புவிமையக் கோட் பாட்டை திருக்குர்ஆன் நிராகரித்து விட்டது என்பதே அதன் பொருளாகும்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து திருக்குர்ஆன் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்திய பதப் பிரயோகங்களின் (இரவும், பகலும்... விண்ணில் நீந்துகின்றன) வாயிலாக அது வெளிப் படுத்திய அறிவியல் பதினொன்றாம் நூற்றாண்டிலும், பதினே ழாம் நூற்றாண்டிலும் கோபர் நிக்கஸும், கலீலியோவும் உலகில் தோற்றுவித்த புரட்சிகரமான அறிவியல் கொந்தளிப்பை விட ஆழம் மிக்கத் தீவிரமான அறிவியலாகும் என்பதில் ஐயமில்லை.

ஏனெனில் மேற்கண்ட அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புகள் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் நகர்வைப் பற்றி மட்டும் குறிப்பிடும் போது திருக்குர்ஆன் பேரண்டத்தி லுள்ள அனைத்து நட்சத்திரக் குடும்பங்களின் நகர்வையும் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி விட்டது. திருக்குர்ஆன் மானிட அறிவிலிருந்து தோன்றியதில்லை என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரமாக இது தோன்றவில்லையா?

சூரிய மையக் கோட்பாடு

திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் விண்ணகப் பொருட்களின் நகர்வு பற்றியும் அதில் உள்ளடங்கிய பூமியின் நகர்வு பற்றியும் கூறிய அறிவியலை பல நூற்றாண்டுகள் கழிந்தாயினும் அறிவியல் உலகமும் அதை உண்மைப்படுத்தி விட்டது. நமது பள்ளிச் சிறுவர்கள் கூட இன்று பூமி ஆகாயத் தில் ஓய்ந்திராமல் சூரியனைச் சுற்றி வருகிறது எனக் கற்பிக்கப் பட்டு வருகிறார்கள். இதைக் கண்டுபிடித்த முதலாவது அறிவியலாளர் கோபர் நிக்க (1473-1543) ஆவார். ஜோஹன்ன கெப்ளர் (1571-1630) எனும் அறிவியலாளர் பூமியும், இதர கோள்களும் சூரியனைச் சுற்றிவரும் விதியைக் கண்டுபிடித்தார். இவர்களின் கோட்பாடு சூரிய குடும்பத்தின் மையத்தில் சூரியன் அசையாதிருக்க கோள்கள் யாவும் சூரினைச் சுற்றி வருகிறது எனக் கூறிற்று. இக்கோட்பாடு சூரிய மையக் கோட்பாடு (ளுடிடயச உநவேசஉ வாநடிசல) என அழைக்கப்பட்டது.

புவியின் வடிவச் சிறப்பு

பூமியின் மீது இராப்பகல் மாற்றம் எவ்வாறு நடைபெறு கிறது என்பதே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட விவாதப் பொருளாகும். சூரியன் பூமியைக் சுற்றி வருவதா லேயே இராப்பகல் மாற்றம் தோன்றுகிறது எனும் கருத்து தவறு என்றும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதனா லேயே இராப்பகல் மாற்றம் ஏற்படுகிறது என்பதே சரி என்பதையும் நாம் கண்டோம். பூமியின் மீது நிகழ்ந்து கொண் டிருக்கும் இராப்பகல் மாற்றத்திற்கு பூமி தன்னைத்தானே சுற்றுவது பிரதான காரணமாக இருந்த போதிலும் அம்மாற்றம் செவ்வனே நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் அமையும் பொருட்டு பூமியின் வடிவமும் அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம். பூமியின் உருவம் உருண்டையாக இல்லாமல் தட்டையாக இருந்திருப்பின் இராப்பகல் மாற்றம் இப்போது நடப்பதைப் போன்று செவ்வனே நடைபெறாமல் பூமியின் மொத்த நிலப்பரப்பிலும் ஒரே வினாடியில் சூரியன் திடீரென உதித்து சூரியன் திடீரென மறையும் நிலை ஏற்பட்டிருக்கும். எனவே பூமியின் உருண்டை வடிவம் பூமியின் நிலப்பரப்பில் சூரியனின் உதயமும் மறைவும் படிப்படியாக நடைபெற உதவிசெய்கிறது.

கடலில் செல்லும் கப்பல் தரும் படிப்பினை

பூமிசூரியனைச் சுற்றி வருகிறது என்பது பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகே அறிவியல் உலகம் தெரிந்து கொண்ட போதிலும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதை நிரூபிப்பதற்கு எளியதும் முற்றிலும் சரியானதுமான நிரூபணத்தைக் கடலில் செல்லும் கப்பலைப் பார்த்து கற்றுக் கொண்டிருந்தனர்.

கப்பல் ஒன்று கடலில் செல்லும் போது அக்கப்பல் நீண்டநேரம் கடலில் சென்று கொண்டே இருந்த பிறகு படிப்படியாகக் கப்பலின் உருவம் சிறுத்துக் கொண்டே வந்து கடைசியில் கப்பல் முற்றாக மறைந்து போவதில்லை. அதற்கு மாறாக கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பல் சற்று நேரத்திற்குப் பிறகு கப்பல் தெளிவாக கண்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும் போதே முதலாவதாக கப்பலின் அடிபாகம் மறைந்து போகிறது. அதன்பிறகு அதன் நடுப்பகுதி மறைந்து போகிறது. அதன்பிறகு கடைசியாக கப்பலின் கொடிமரமும் (பண்டைகாலங்களில் பாய்க்கப்பல்கள் மட்டுமே இருந்தன என்பதும் அவற்றிற்கு கொடி மரங்கள் இருந்தன என்பதையும் நினைவிற்கொள்க) மறைந்து கப்பல் முற்றாக மறைந்து போகிறது. இக்காட்சி கப்பல் ஒரு கீழ்நோக்கிய வளைவில் இறங்குவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இப்போது கடலிலிருந்து கரையை நோக்கி வரும் மற்றொரு கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் இதற்கு நேர்மாறான காட்சியைத் தாம் பார்க்க முடியும். கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் கப்பலின் கொடிமரமே முதலில் கடலுக்கு மேல் தோன்றும். அதன் பிறகு கடைசியாக கப்பலின் அடிப்பகுதியும் கடலுக்கு மேல் தோன்றி கப்பல் முற்றிலுமாக கடலுக்கு மேல் தென்படும். இக்காட்சி அக்கப்பல் கடலின் கீழ்நோக்கிய வளைவிலிருந்து மேலேறி வருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உலகின் எப்பகுதிக்குச் சென்று கப்பல் போக்குவரவைக் கவனித்தாலும் இவ்வாறே தென்படும். இது நமது பூமி அதன் எல்லா திசைகளிலும் கீழ்நோக்கி வளைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. இவ்வாறு எத்திசையிலும் வளைந் திருக்கும் ஒரு பொருள் உருண்டையாகவே இருக்கும் என்பதும் அந்த உருண்டையின் மேல் நின்று பார்ப்பதாலேயே அதன் வளைவு கீழ்நோக்கிக் காணப்படுகிறது என்பதும் கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வு செய்ததிலிருந்து தெரிந்து கொண்டார்கள்.

வானவெளியில் பூமியைப் படைத்து அதில் இராப்பகல் மாற்றம் செவ்வனே நடைபெறும் பொருட்டு பூமி உருண்டை வடிவத்தில் படைக்கப்பட்டுள்ளதை பள்ளிச் சிறுவர்களும் இன்று அறிகிரார்கள். ஆயினும் கடலில் செல்லும் கப்பல்களை ஆராய்ந்து பண்டை கால கிரேக்கத்து அறிவியலாளர்கள் பூமியின் வடிவம் உருண்டை என்பதைக் கண்டறிந் திருந்தார்கள். இப்போது அதற்குப்பின் தோன்றிய திருக் குர்ஆன் பண்டைகால கிரேக்கர்கள் கூறியதை ஏற்கிறதா? அல்லது மறுக்கிறதா? எனக் கேட்டால் திருக்குர்ஆனுடைய பதில் வருமாறு:

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறிமாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் ..... விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

(2:104)

மேற்கண்ட வசனத்தில் பண்டைகால விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு முறையையே எடுத்துக் கூறி அதில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலுள்ளவர்கள் அனைவருக்கும் சான்றுகள் கிடைக்கும் எனக் கூறியதிலிருந்து பண்டைகால விஞ்ஞானிகள் கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வு செய்து பூமி உருண்டை வடிவம் கொண்டது எனக் கூறுயதை ஏற்றுக் கொள்வதோடன்றி கடலில் செல்லும் கப்பலை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளுதல் என்பது மிகச் சிறந்த ஆய்வு முறையாகவும் அதிலிருந்து ஒன்றல்ல பல சான்றுகள் கிடைக்கலாம் எனவும் திருக்குர்ஆன் கூறுவதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆம்! அதுவே திருக்குர்ஆன்! பொய்யையும், மெய்யை யும் பிரித்தறிவிக்கும் அதி அற்புத வான்மறை! உண்மைகள் எதையும் அது ஒப்புக்கொள்ளும்! பொய்கள் எதையும் அது தன்னை நெருங்க விடாது! அதுவே தூய்மையின் ஒப்பற்ற உதாரணம்!

அந்தரத்தில் நிலை கொள்ளும் ஆகாயம்

இப்போது கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்வதிலிருந்து பல சான்றுகள் கிடைக்கும் என திருக்குர்ஆன் கூறியதற்கிணங்க முதலாவ தாக பூமியின் வடிவத்திற்கான சான்றைப் பெற்றோம். இது ``வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் எனத் திருக்குர்ஆன் கூறியதிலுள்ள ``பூமியைப் படைத்தல் என்ப திலுள்ள சான்றாகும். இனி திருக்குர்ஆனின் கூற்றிற்கிணங்க ``வானத்தைப் படைத்ததிலும் எனும் வார்த்தைகளை நிரூ பிக்க கடலில் செல்லும் கப்பல்களால் ஏதேனும் சான்று வழங்க முடியுமா எனப் பார்த்தால் அதோ முக்கியமான சான்று கப்பல் ஓட்டும் மனிதனுக்காகக் காத்திருக்கிறது.

இந்தச் சான்றை பெறுவதற்கு கடற்கரையில் நின்று கொண்டு கவனித்தால் மட்டும் போதாது. இதற்கு ஒரு நீண்ட கடற்பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஒருவர் நீண்ட தூரம் கடலில் பயணம் செய்து கொண்டே போனால் அவர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வந்து சேருவதால் பூமியின் வடிவம் உருண்டையானதே என்பதைத் தெரிந்து கொள்வ தோடு இப்பயணம் ஆகாயத்தைப் பற்றிய ஒரு மூடநம்பிக்கை யையும் விலக்கிவிடக் கூடியதாகும்.

ஆகாயத்தைப் பற்றிய பண்டைகால மூடநம்பிக்கைக ளில் ஒன்று எல்லையில்லா பூமியில் நெடுந்தொலைவிற்கப் பால் ஆகாயத்தின் குடை போன்று வளைந்து காணப்படும் முகட்டின் கீழ் விளிம்பு ஊன்றப்பட்டுள்ளது என்பதாகும். ஆயினும் பூமியை முழுமையாக ஒரு சுற்று சுற்றிவந்த போதும் ஆகாயத்தின் விளிம்பு பூமியில் எங்கும் ஊன்றப்படவில்லை என்பது மட்டுமன்றி ஆகாயத்தின் முகடு பூமியின் மீது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே தெரிந்ததும் ஒரு குறிப்பிடத் தகுந்த சான்றாகும். ஏனெனில் பூமியின் மீது ஆகாய முகடு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத் தெரிதல் என்பது பூமிக்குரிய அகாயம் விளிம்பற்றது என்பதற்கான ஓர் அற்புத மான அறிவியல் சான்றாகும். எனவே திருக்குர்ஆன் கூறியதற் கிணங்க கடலில் செல்லும் கப்பல் ஆயாகத்தின் படைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிவிப்பதிலும் தன்னால் இயன்றதைத் தரவல்ல ஒன்றாகும் என்பதையும் நாம் கண்டு விட்டோம். இதிலிருந்து பண்டை கிரேக்கர்களின் விளக்கத்தை விட திருக்குர்ஆனுடைய அறிவியல் வசனம் மேலும் விரிவான அறிவியல் தகவலை உள்ளடக்கியதாகும் என்பது தெளிவு.

பூமியின் கீழ்ப்பகுதியும் நடக்கத் தகுந்ததே!

பூகோளத்தின் உருவ அமைப்பைப் புரிந்து கொள்ளும் வகையில் மேலும் சில குறிசொற்களைத் (உடரநள) திருக்குர்ன் பயன்படுத்தியுள்ளது. சான்றாக பண்டைகால அறிவியலாளர் கள் பூமியின் வடிவம் உருண்டை என்பதை அறிந்திருந்தார்கள் எனக் கண்டோம். ஆயினும் கல்வியைப் பரப்பும் சாதனங்கள் மிகமிக அரிதாக இருந்த அக்கால கட்டத்தில் பொதுமக்களிடம் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைப் பற்றிய செய்திகள் வருவதும் அரிதாகவே இருந்தது. எனவே பொதுமக்களைப் பொருத்தவரை பூமி அப்போதும் தட்டையாகவே இருந்தது. பூமியின் வடிவம் தட்டையானது எனப் பொதுமக்கள் நம்பி வந்த காரணத்தால் பூமியின் மேற்பரப்பில் மட்டுமே மனிதர் களால் நடமாட முடியும் என்றும் அதன் பக்கவாட்டிலோ அதன் அடிப்பகுதிக்கோ செல்ல நேர்ந்தால் மனிதன் கீழே விழுந்து விடுவான் என நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் திருக் குர்ஆன் கூறிய செய்தி வியப்பிற்குரியதாகும். அது வருமாறு:

``அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்....

(67:15)

இந்த செய்தியில் பூமியின் படைப்பைப் பற்றி இரண்டு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலொன்று பூமி மனிதர் கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளது என்பதும் இரண்டாவதாக பூமியின் எல்லாப் பகுதிகளுக்கும் மனிதர்கள் சென்று பயன்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அது படைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியுமாகும். இந்த இரண்டாவது செய்தி பூமி தட்டையாக இருப்பதால் அதன் ஒரே பகுதியில் (மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் நடமாட முடியும் என்றோ அதன் பக்கவாட்டிலோ அடிப்பகுதியிலோ மனிதர்கள் நடமாட முடியாது எனும் நம்பிக்கையை திருக் குர்ஆன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ``எனவே அதன் பல பகுதிகளுக்கும் செல்லுங்கள் எனும் வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியதிலிருந்து திருக்குர்ஆன் எளிதாக விளங்கச் செய்கிறது.

கொலம்பஸின் தோல்வி

பூகோளத்தின் முன்னர் கூறப்பட்ட இயற்பாடுகளை திருக்குர்ஆன் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைக் கூறிவதில் கூட தேர்ந்தெடுத்த சில சொற்பிரயோகங்ளில் உள்ளடக்கித் தந் திருப்பதைக் காண முடிகிறது. கொலம்ப (உசளைவடியீநச உடிடரஅரௌ, 1451-1506) எனும் உலகப் புகழ் பெற்ற மாலுமியைப் பற்றி கேள்விப்படாதோர் அரிதாகும். கடற் பயணத்தை மேற்கொண்டு உலகம் உருண்டை என நிரூ பித்த மாவீரராக இவரைப் பற்றி அவ்வப்போது கூறப்படுவ துண்டு. ஆனால் இது தவறாகும். அவர் ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக்கி கடற்கயணம் செய்து ஆசியாவிற்கு ஒரு புதிய கடல்மார்க்கத்தை கண்டுபிடிப்பதாகக் கூறி இசபெல்லா மகாராணியிடம் பொருளுதவி பெற்று கடற்பயத்தை துவக்கி யது உண்மையே. தாம் கூறியபடி அவர் செய்து காட்டியிருந் தால் அவர் உலகம் உருண்டை என்பதை கடற்பயணத்தால் நிருபித்துக் காட்டிய மாவீரராவதற்கு தகுதி பெற்றிருப்பார். ஆனால் உண்மையில் அவர் தம்முடைய முயற்சியில் வெற்றி பெறவில்லை.

கொலம்ப முதலாவதாக 1492லும் அதன் பிறகு தொடர்ந்துள்ள வருடங்களில் மேலும் சில முயற்சிகளையும் செய்தபோதும் அவரால் ஆசியாவை அடைய முடியவில்லை. எனவே அமெரிக்காவிற்கு சென்று வந்த பெருமையோடு திருப்திபட்டுக் கொள்ளவேண்டியதாயிற்று. (அவர் அமெரிக்கா கண்டத்திற்கு சென்று வந்ததால் அவரே அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என பாடபுத்தகங்களில் கூட எழுதப்படு கிறது. ஆனால் அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்த முதல் மனிதர் இவர் இல்லை. அவருக்கு பல நூற்றாண்டு களுக்கு முன் லீஃப் எரிக்சன் (டுநகை நுசஉளடி) எனும் ஒரு கடல் கொள்ளைக்காரன் அமெரிக்கா சென்று வந்துள்ளான் என்பதும் நமது தலைப்போடு தொடர்பில்லாத செய்தியாகும்).

மாவீரர் துல்கர்னைன்

ஆனால் தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாற்றைக் கூறும் வியப்பிற்குரிய செய்தியையும் திருக்குர்ஆனில் நம்மால் பார்க்க முடிகிறது.

திருக்குர்ஆன் வழங்கப்படுவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் ``துல்கர்னைன் எனும் பேரரசர் ஒருவர் நீதிநெறி தவறாத சிறப்பான ஆட்சியை நடத்தி வந்தார். இந்த அரசரைப் பற்றிய செய்தியை வம்சாவழியாக கேள்விப் பட்டிருந்த அரேபிய மக்கள் தங்களுக்கு இடையில் இறைவ னுடைய தூதர் ஒருவர் தோன்றிய போது துல்கர்னைன் அவர் களைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்காக இறைத் தூதரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார்கள். தன்னுடைய தூதரிடம் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட வேண்டிய பதிலை இறைவன் தன்னுடைய தூதருக்கு அறிவிக்கிறான். இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

``(முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ``அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன் என்று கூறுவீராக! அவருக்கு பூமியில் (ஆட்சி செய்ய) நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் (பயணம்) சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் காண்டார். அங்கே (அவர்) சமுதாயத்தைக் கண்டார்....

(18:83-86)

பயணத்தின் திசை மேற்காகும்

இவ்வசனங்களில் கூறப்பட்டிருக்கும் பேரரசருக்கு ``துல்கர்னைனி என்பது பட்டப்பெயராகும். இச்சொல்லுக்கு ``இரு கொம்புகளின் உடைமையாளர் (டுடிசன டிக வறடி டிசளே) என்பது பொருளாகும். இவருடைய இயற்பெயர் என்ன என்பதோ அல்லது இவர் காலம், இவர் ஆண்ட தேசங்கள் எது என்பதோ திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. சிலர் இவரே மாவீரர் அலெக்ஸாண்டர் (ஹடநஒயனேயச வாந ழுசநயவ) என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் மற்றும் சிலர் இவர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஓர் அரசர் என்றும் வெவ்வேறு விதத்தில் அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால் இவையாவும் நமது தலைப்போடு தொடர்பு கொள்ளவில்லை.

நமது தலைப்போடு தொடர்பு கொண்ட விபரங்களாவன இறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய தமது பேரரசின் ஆட்சி நிர்வாகப் பணிகளை (உஎடை ஹனஅளைவசயவடி) முன்னிட்டு துல்கர்னைன் அவர்கள் ஒரு நீண்ட பயணத்தை துவங்கினார் என்பது முதலாவதாகத் தெரிய வருகிறது.

இரண்டாவதாக அவர் அப்பயணத்தின் ஒரு கட்டத்தில் ``சூரியன் மறையும் இடத்தை அடைந்தார் எனத் தெரிய வருகிறது. இது திருக்குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் அறிவியல் ஆழம் மிக்க தனிச்சிறப்பான சொற்பிரயோகமாகும். இதைப் பற்றி கூடுதல் விபரங்கள் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அத்தியாயத்தோடு தொடர்புள்ள விபரங்கள் வருமாறு :

  1. முதலாவது செய்தி``சூரியன் மறையும் இடத்தை அடைந்தார் எனத் திருக்குர்ஆன் கூறியதிலிருந்து துல்கர்னைன் அவர்கள் தமது (திருக்குர்ஆனின் வரலாற்றுப் புகழ் மிக்க) அந்த நீண்ட பயணத்தை மேற்கு திசையிலேயே ஆரம்பித்தார் என்பதாகும்.
  2. இரண்டாது செய்தி சூரியன் நீர்நிலையில் மறைவதை அவர் கண்டார் எனக் கூறப்பட்டதிலிருந்து அவரது அந்தப் பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது எனத் தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் மேலும் மேற்கு திசையில் அமைந்துள்ள கடயற்கரைக்கு வந்து சேரும் எந்த ஒரு நபரும் கடல் நீரில் சூரியன் மறைகின்ற அக்கண் கொள்ளாக் காட்சியை காணத் தவற மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே.
  3. அக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகர மக்களிடம் குற்றங்களை தடுப்பதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் தேவையான சில உத்தரவுகளை (இதைக் குறித்து திருக்குர்ஆனைப் பார்த்து தெரிந்து கொள்க) இறைவனின் வழிகாட்டுதலின்படி நடைமுறைப் படுத்தும்படி கட்டளை இட்டதாகத் தெரிய வருகிறது. அதன் பிறகு உலகின் வேறு சில பகுதிகளில் தாம் நிறைவேற்ற வேண்டிய வேறுசில முக்கியமான பணிகளுக்காக தமது பயணத்தை மீண்டும் தொடர்கிறார்.
  4. துல்கர்னைன் அவர்களுடைய இந்த நீண்ட பயணத் தில் அவர் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந் தார் என விளங்கப் பெற்றதிலிருந்து அதுவரை அவர் செய்தது தரை வழிப் பயணமே என்பதும் புலனாகிறது.

மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!

தன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் அவர்கள் திசைமாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும். திருக்குர்ஆனுடைய வாசகங்களில் அவர் பயணத்தில் சென்றடைந்த நாடு, நகரம், சந்தித்த மக்களினம் போன்ற விபரங்கள் எதற்கும் தரப்படாத முக்கியத்துவம் அவர் பயணம் செய்த திசைக்கு வழங்கப் பட்டுள்ளது என்பது கருத்தூன்றி கவனிக்க வேண்டிய சிறப் பம்சமாகும். எனவே துல்கர்னைன் அவர்களின் பயணத்தில் திசைமாற்றம் நடைபெற்றிருந்தால் திருக்குர்ஆனில் சிறப்பாகக் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் திருக்குர்ஆன் திசைமாற்றம் குறித்து எதுவும் கூறாமல் அவர் மீண்டும் பயணம் தொடர்ந்ததைப் பற்றியே கூறுகிறது. எனவே துல்கர்னைன் அவர்களுடைய மேற்கொண்டுள்ள பயணம் கடல்வழிப் பயணமாகும்.

துல்கர்னைன் அவர்களுக்கு அவ்வளவு பண்டைகாலத் திலேயே கடல்கடந்து பயணம் செய்யும் அளவிற்கு தகுதி வாய்ந்த பயண வசதிகள் இருந்தனவா என்ற ஐயம் எழுமாயின் அவருடைய பயணத்தையும் அப்பயணத்தில் செய்து முடிக்கவேண்டிய பணிகளுக்கும் தேவையான யாவும் அவருக்கு இறைவனால் வழங்கப்பட்டிருந்தது என்பதே ``ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத் தினோம் எனக் கூறப்பட்டதில் உள்ளடங்கிய கருத்தாகும். எனவே பேரரசர் துல்கர்னைன் தன்னுடைய பரிவாரங்களுடன் (திருக்குர்ஆனுடைய சம்பந்தப்பட்ட வசனங்களிலிருந்து பேரரசர் துல்கர்னைனின் பயணக்குழுவில் படைவீரர்களும் வல்லுநர்களும் தொழிலாளர்களும் அடங்கிய பெரும் பரிவாரமே இடம் பெற்றிருந்தது எனத் தெரிய வருகிறது) கடல் மார்க்கமாகப் பயணத்தைத் தொடர்கிறார். இப்பயணத் தைக் குறித்து திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

``பின்னர் ஒரு வழியில் சென்றார்

(18:89)

இந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள் ளது. ஆயினும் அப்பயணம் தரைவழிப் பயணமன்றி கடல் வழிப் பயணமே என்பது ``பின்னர் ஒரு வழியில் எனத் திருக்குர்ஆன் கூறியதிலிருந்து விளங்கலாம். இந்தப்பயணத் தில் அவர் சென்றடைந்த இடத்தைப் பற்றிய வியக்கத்தகு செய்தி ஒன்றை திருக்குர்ஆன் கூறுகிறது. ஆம்! இப்போது சென்றடைந்த இடம் :

``முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை.

(18:90)

என்னே வியப்பு! மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் அவர்கள் : ``முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார் இது எப்படிச் சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைய முடியுமா?ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்த தாகத் திருக்குர்ஆன் கூறுவதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.

இக்கடல் வழிப்பயணத்தின் முடிவில் அவர் மற்றொரு தேசத்தை (நிலப்பகுதியை) அடைந்தார் என்பது வீடுகளில் லாத ஒரு நாடோடிக் குழுவினரை தூல்கர்னைன் அவர்கள் அங்கு கண்டார். எனப் பொருள்படும் திருமறை வசனங்களி லிருந்து விளங்கலாம். இதன் பிறகு கடல் வழியிலிருந்து மீண்டும் தரைவழி பயணத்திற்கு மாறிய துல்கர்னைன் அவர்களின் பயணத்தின் தொடர்ச்சி திருமறையில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது.

நாம் இதுவரை கூறியதிலிருந்து பூமியின் மீது கடல் மற்றும் கரை வழியாக நீண்டதூரப் பயணம் செய்து பூமி உருண்டை வடிவம் கொண்டதே என நிறுவியவர் துல்கர்னைன் அவர்களே என்றும் அந்த வரலாறு திருக்குர்ஆன் எடுத்துக் கூறி உண்மைபடுத்துவதால் திருக்குர்ஆனின் அறிவியலும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமாகும்.

பூமியின் மீது நடைபெறும் இராப்பகல் மாற்றம் செவ்வனே நடைபெறும் பொருட்டு பூமி உருண்டை வடிவம் கொண்டுள்ளது என்பதைக் கண்டோம். அடுத்தபடியாக பூமின் அச்சில் சுழற்சியைப் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

அத்தியாயம் 6

நாள்தோறும் நடைபெறும் இராப்பகல் மாற்றம்

நாம் வாழும் இந்தப் பூமியில் எண்ணிலடங்காத உயிரினங் கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உயிரினங்களின் வாழ்க்கைக்கு பூமியின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றம் மிகவும் அவசியமாகும். பூமியில் நடை பெறும் இராப்பகல் மாற்றத்தைக் குறித்து பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அவை பிரதானமாக இராப்பகல் மாற்றத்தால் உயிரினங்கள் அடையும் பயன்பாடு பற்றியதும்,இராப்பகல் மாற்றம் நடைபெறச் செய்கின்ற அதன் அமைப்பைப் (குரஉவடி) பற்றியதுமாகும்.

இராப்பகல் மாற்றங்களால் நாம் அடையும் பயன்பாடுக ளில் சிலவற்றைத் திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

இராப்பகல் மாற்றங்களும் அதன் பயன்பாடுகளும்

நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்கக்கூடிய நிலையில் பகலையும் அல்லாஹ்வே ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்களின் மீது அருளுடையவன்; எனினும் மனிதர்களில் அதிக மானோர் நன்றி செலுத்துவதில்லை.

(40:61)

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

(25:47)

இராப்பகல் மாற்றத்தால் மனிதர்கள் அடையும் பயன் பாடுகளை இது போன்ற சில வசனங்களில் குறிப்பிடும் திருக் குர்ஆன் இராப்பகல் மாற்றத்திற்கான அதன் இயக்கத்தை நேரம் குறிப்பிடுவதற்காக சில வசனங்களில் கூறுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு:-

``சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலைநாட்டுவீராக!

(17:78)

இந்த வசனத்தில் மனிதர்களின் பேச்சு வழக்கில் (உடிடடடிளூரயைட டயபேரயபந) திருக்குர்ஆன் பேசுவதால் அது கூறும் அறிவுரையைப் புரிந்து கொள்வதில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படவில்லை. மனிதர்கள் விளங்கிப் பணியாற்ற வேண்டிய விபரங் களைக் கூறும் இது போன்ற இடங்களில் திருக்குர்ஆன் அறிவியலை நுழைத்து குழப்பத்தை உருவாக்குவதில்லை என்பதையும், மற்ற இடங்களில் அறிவியலோடு தொடர் பில்லாத ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் போது கூட அறிவியலைப் பயன்படுத்தி உள்ளது என்பதையும் திருமறையின் ஆய்விலிருந்து மிக அழகாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இராப்பகல் மாற்றத்தின் அறிவியலை உட்படுத்துவ தற்காக திருக்குர்ஆன் கையாண்ட மற்றொரு வார்த்தைத் தந்திரம் துல்கர்னைன் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியில் காணப்படுகிறது. இந்த வசனத் தொடரில் திருக்குர்ஆன் பயன்படுத்திய இரண்டு செய்திகளை நினைவு கூர்வோம். முதலாவது செய்தி, ``சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது..... என்பதும் இரண்டாவது செய்தி, ``.... சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்த போது.... என்பதுமாகும்.

மேற்கண்ட இரண்டு செய்திகளில் சூரியன் உதிப்பதற் கென்று ஒரு இடமும், சூரியன் மறைவதற்கென்று மற்றொரு இடமும் இருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுவதைத் தெளிவாகக் காண்கிறோம். சூரியனின் உதயமும், மறைவும் விண்ணில் நடைபெறும் நிகழ்ச்சியே என்பது நமக்குத் தெரியும். எனவே பூமியைச் சூரியன் சுற்றி வருவதாக இருந்தால் சூரியன் உதிக்கும் இடம் என்றோ அல்லது சூரியன் மறையும் இடம் என்றோ ஏதேனும் இடங்கள் விண்ணிலோ அல்லது பூமியிலோ இருக்க முடியுமா எனத் தேடிப் பார்ப்போம்.

உதிக்கும் இடமும் மறையும் இடமும்?

தேடலின் துவக்கமாக நாம் இப்போது சூரியன் பசிபிக் சமுத்திரத்தின் உச்சியில் ஒளி வீசிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். சூரியனின் ஒளிக்கதிர்கள் இப்போது பூமியின் அரைக்கோளத்தில் விழுகின்றன. எனவே அப்பகுதி பகலாக இருக்கிறது. அப்பகலின் ஒரு எல்லை சீனாவிலும் மற்றொரு எல்லை அமெரிக்காவிலும் இருக்கின்றன. சூரியன் இப்போது அமெரிக்கா இருக்கும் திசையை நோக்கி நகர்வதாகக் கற்பனை செய்தால் சூரியன் உதிக்கும் இடம் அமெரிக்காவிலும் சூரியன் மறையும் இடம் சீனாவிலும் இருக்கும். அதன் பொருள் அமெரிக்க மக்களுக்கு சூரியன் உதித்துக் கொண்டிருக்கும் என்பதும் சீனத்து மக்களுக்கு சூரியன் மறைந்து கொண்டிருக்கும் என்பதுமாகும்.

சூரியன் நகரத் துவங்கி பூமியைச் சுற்றி வரத் துவங்கியதும் உதிக்கும் இடமும் மறையும் இடமும் சூரியனுடன் நகரத் துவங்கி விடுகிறது. பூமியிலும் சரி ஆகாயத்திலும் சரி உதிக்கும் இடமும் மறையும் இடமும் எந்தவோர் இடத்திலும் நிலைத்து நிற்காமல் சூரியனுடன் நகரத் துவங்கி விடுகிறது. ஆனால் திருக்குர்ஆன் இராப்பகல் இயக்கத்தில் உதிக்கும் இடமும், மறையும் இடமும் இருக்கிறது என தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. திருக்குர்ஆனின் வார்த்தை உண்மையாக வேண்டுமாயின் உதிப்பதற்கும், மறைவதற்கும் தனித்தனி இடங்கள் இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனையாகும். எனவே இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமானால் இராப்பகலின் இயக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதே இப்போது நம்முன் இருக்கும் வினாவாகும்.

கட்டுண்டு நிற்கும் உதயமும் மறைவும்!

இது வரை நாம் செய்து பார்த்த கற்பனைக் காட்சிகள் புவி மையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது திருக்குர்ஆனுடைய கூற்றை மெய்பிக்கக் கூடிய உதிக்கும் இடமும் மறையும் இடமும் விண்ணில் உருவாகவில்லை என்பதால் இந்தச் சிந்தனை திருக்குர்ஆனுக்கு எதிரான சிந்தனை என்பதை எளிதாக விளங்க முடிகிறது. எனவே இப்போது இராப்பகல் இயக்கத்தை நடத்துவதற்கு நம் முன்னால் ஒரே ஒரு வழி மட்டுமேயாகும். அது சூரியனை நகராமால் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டு பூமியைச் சுழற்றிப் பார்ப்பதே ஆகும். எனவே நாம் இப்போது அந்தச் சோதனையைக் கற்பனை செய்து பார்ப்போம்.

இப்பவும் சூரியன் பசிபிக் சமுத்திரத்தின் மீது ஒளி வீசிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். எனவே பசிபிக்கின் மீதுள்ள பகலின் இரண்டு ஓரங்கள் முன் போலவே அமெரிக்காவிலும் சீனாவிலும் இருக்கும். இப்போது பூகோளம் மேற்கிலிருந்து கிழக்காக சுழல ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக பூமியின் மீதுள்ள பகல் பகுதி கிழக்கிலிருந்து மேற்காக நகரத் துவங்கும். எனவே முன் போன்றே அமெரிக்க மக்கள் சூரிய உதயத்தையும், சீனத்து மக்கள் சூரியனின் மறைவையும் பார்ப்பார்கள். பூமி மேலும் சுழலச் சுழல அமெரிக்காவில் இருந்த சூரியனின் உதயத்தையும் சீனாவில் இருந்த சூரியனின் மறைவையும் பூமியின் வெவ்வேறு பகுதிகள் பெற்றுக் கொள்கின்றன. ஆயினும் இப்போது ஆகாயத்தைப் பார்த்தால் அற்புதமான மற்றொரு காட்சியை நாம் காண்கிறோம்.

ஆம்! அமெரிக்காவிலும், சீனாவிலும் இருந்த உதயமும் மறைவும் பூமியின் வெவ்வேறு பகுதிகளால் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் ஆகாயத்தைப் பொருத்த வரை உதிக்கும் இடமும் மறையும் இடமும் எள்ளளவும் நகராமல் ஒரே இடத்தில் நிலைபெற்று இருக்கின்றன. பூமி சூரியனை முழுமையாக ஒரு சுற்று சுற்றி வந்த போதும் உதயமும் மறைவும் ஆகாயத்தில் நகராமல் நிலை நின்றதே அன்றி எங்குமே நகர்ந்து செல்லவில்லை. பூமியின் மீது கூட உதயமும் மறைவும் நகர்வதாகத் தோன்றுவதற்குக் காரணம் உண்மையில் ஆகாயத்தில் நிலைபெற்றிருக்கும் உதயம் மற்றும் மறையும் இடங்களுக்கு பூமியின் வெவ்வேறு பகுதிகள் சுழன்று வந்து அவை தாமாகவே உதயத்தையும் மறைவையும் பெற்றுக் கொள்வதனாலேயே அன்றி பூமியின் மீது கூட உதயமோ மறைவோ நகரவில்லை. எனவே பூகோளம் சுழல்வதால் பூமியின் மீது இராப்பகல் இயக்கம் நடைபெறுவதாக நாம் செய்து கொண்ட கற்பனை திருக்குர்ஆன் கூறும் இராப்பகல் அறிவியலை மிக அழகாகவும் அற்புதமாகவும் நிரூபித்து விட்டது.

இராப்பகலைத் தேடிச் செல்லும் நிலப் பகுதிகள்

சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக நம்பிக் கொண்டிருக் கும் ஒருவர் புவிஈர்ப்பு விசை தம்மைப் பாதிக்காத உயரத்தில் நின்று பூமியின் மீது நடைபெறும் இந்த அற்புதமான காட்சியை (ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்கும் உதயம் மற்றும் மறைவுக் காட்சிகளைக்) காண்பது விந்தை மிகு காட்சியாக இருக்கும்.

சூரியன் நகராமல் ஒரே இடத்தில் நின்றிருக்க (சூரியன் நகர்கிறது என்பதை மற்றொரு அத்தியாயத்தில் விளக்கி யுள்ளோம். ஆயினும் சூரியன் சூரியக் குடும்பத்திற்குள் நகர்வதில்லை என்றும் சூரிய குடும்பத்தைப் பொருத்தவரை சூரியன் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது என்பதையும் கருத்தில் கொள்க) பூமி தன்னைத் தானே சுற்றி இராப்பகல் மாற்றத்தைத் தோற்றுவிப்பதே விந்தைகள் தோன்றுவதற்குக் காரணமாகும்.

சூரியன் நகராமல் நின்று விடுவதால் இராப்பகல்களும் நகராமல் நின்று விடுகின்றன. இராப்பகல்கள் நகராமல் நிற்பதால் உதயமும் மறைவும் நகராமல் அதனதன் இடத்தில் கட்டுண்டு நின்று விடுகின்றன. ஆயினும் பூமியின் ஒவ்வொரு நிலப்பகுதிகளும் நகர்ந்து சென்று நகராமல் கட்டுண்டு நிற்கும் உதயம், மறைவு, இரவு மற்றும் பகல் ஆகியவைகளை அவைகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்கிறது.

சான்றாக பூமியின் ஏதோ ஒரு நிலப்பகுதி. இதை லண்டன் மாநகர் எனக் கொள்வோம். இப்பிரதேசம் சூரியன் உதிக்கும் இடத்திற்கு வருவதற்கு சில வினாடிகளுக்கு முன்னால் வரை லண்டன் மாநகரில் சூரியோதயம் இல்லை. ஆயினும் உதயம் நகராமல் கட்டுண்டு நிற்கும் இடத்திற்கு வந்ததும் லண்டனில் சூரியோதயம் நிகழ்கிறது. சில நிமிடங்களில் லண்டன் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது. உடனே லண்டன் சூரியோதயத்தை இழந்துவிட்டு முற்பகலாகி விடுகிறது.

இப்போது லண்டனைத் தொடர்ந்து அது வரை இரவாக இருந்த பெல்ஜியம் பூமியின் சுழற்சியால் சூரியன் உதிக்கும் இடத்தை அடைகிறது. உடனே அது வரை பெல்ஜியத்தில் இல்லாத சூரியோதயத்தை பெல்ஜியம் பெற்று விடுகிறது. சில நிமிடங்களில் பூமியின் சுழற்சி பெல்ஜியத்தையும் அந்த இடத்திலிருந்து நகர்த்தி விடுவதால் பெல்ஜியம் சூரியோதயத்தை இழந்து முற்பகலைப் பெறுகிறது. அதன் பின் பூமியின் சுழற்சி ஜெர்மெனியின் பான் (க்ஷடி ஊவைல) மாநகரை அங்கு கொண்டு வருகிறது. அப்போது பான் நகரமும் அது வரை இல்லாத சூரியோதயத்தைப் பெற்று விடுகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு இவ்வாறே தொடர்கிறது.

சூரியனின் மறைவிடத்தையும் மேற்கூறியவாறே பூமியின் சுழற்சியால் பூமியின் ஒவ்வொரு பிரதேசங்களும் தேடிவந்து பெற்றுக் கொள்கிறது. இவ்வாறு சூரியனுக்கு உதிக்கும் இடமும் உண்டு, மறையும் இடமும் உண்டு எனத் திருக்குர்ஆன் கூறிய இயற்பாடு பூமி அதன் அச்சில் சுழன்று இராப் பகல்களைத் தோற்றுவிக்கும் போதே ஏற்படுகின்றன என ஐயத்திற்கிடமின்றி நாம் கண்டு தெளிந்தோம்.

திருமறையில் வேரூன்றி நிற்கும் வானியல் ஆழம்!

எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மைகளைத் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே தமக்குள் ஆழமாக வேரூன்றச் செய்துள்ளது பார்த்தீர்களா? இந்த அற்புதத் திருமறை சூரியன் பூமியைச் சுற்றுகிறது எனும் பிழையான அறிவியலை ஆதரிக்கும் நூலாக இருக்க முடியுமா?

சூரியன் பூமியைச் சுற்றுகிறது எனும் கருத்தை ஆதரிக்கும் நூலே திருக்குர்ஆன் என யாரேனும் கூறினால் அவர் எவ்வளவு தான் உலகப் புகழ் வாய்ந்தவராகப் போற்றப் பட்டாலும் அவரது நேர்மையை, அல்லது அவரது ஆய்வுத் திறமையை எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்பதை விளக்கத் தேவையில்லையல்லவா?

சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் திருக்குர்ஆன் கூறியவாறு சூரியதோயத்திற்கென்றும் சூரிய மறைவிற்கென்றும் தனித்தனி இடங்களைத் தோற்றுவிக்கும் இயற்பாட்டை அந்த இயக்கம் தோற்றுவிக்காது என்பதை நாம் விளக்கி விட்டோம். எனவே சூரியன் பூமியைச் சுற்றுவதாகக் கூறப்பட்ட பிழையான கருத்தை திருக்குர்ஆன் ஏற்கவில்லை என்பதையும் பூமி தன்னைத்தானே சுற்றுவதாலேயே இராப்பகல் ஏற்படுகின்றன என்பதே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பதையும் திருக்குர்ஆனை ஆய்வு செய்யும் ஆய்வாளர்க்கு புலப்படுத்தவே இப்படிப்பட்ட தந்திரச் சொற்களை திருக்குர்ஆன் பயன்படுத்தியது என்பதையே இது காட்டுகிறது.

அறிவியல் கலவா பொருள் விளக்கம்

இதை மேலும் விளங்கிக் கொள்ள நாம் இங்கு ஆய்விற் கெடுத்துக் கொண்ட இரு வகையான சொற்றொடர்களி லிருந்தும் நாம் இங்கு விளக்கிய அறிவியல்களை நீக்கி விட்டுப் பார்த்தால் அவைகளின் பொருள் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம். முதல் சொற்றொடராம் ``..... சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது ..... என்பது``(அவருடைய பயணத்திற்கிடையில்) ஒரு நாள் சூரியன் மறையும் நேரத்தில் தமது இலட்சியத் தானங் களில் ஒன்றை அவர் சென்றடைந்தார் எனும் செய்தியை மட்டுமே அது தெரிவிப்பதாக அமையும். அவ்வாறே இரண்டாவது சொற்றொடராம் ``சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார் என்பது ``மீண்டும் அவர் பயணம் செய்து ஒரு நாள் சூரியன் உதிக்கும் நேரத்தில் தன்னுடைய மற்றொரு இலட்சியத் தானத்தை அவர் சென்றடைந்தார் எனும் தகவலை மட்டுமே அது அளிக்கக்கூடியதாக அமையும்.

இவ்வாறு அறிவியலை அகற்றி விட்டுப் பார்த்தால் ``சூரியன் உதிக்கும் இடம் என்பது சூரியன் உதிக்கும் நேரம் என்றும் ``சூரியன் மறையும் இடம் என்பது சூரியன் மறையும் நேரம் என்றும் சாதாரணமான பொருள் கொண்ட வார்த்தை களாகவே தோன்றுகின்றன. இது இறைவனின் நல்லடியார் ஒருவரைப் பற்றியும் இறைவன் அவருக்குச் செய்த உதவிகள் குறித்தும் அக்காலத்தில் அரபு நாட்டில் நிலவி வந்த பழங்கதை ஒன்றின் உண்மை நிலையை அறிய அரபு மக்கள் இறைத் தூதரிடம் கேள்வி கேட்டபோது அப்பழங்கதையின் சுவைக்கும், பாணிக்கும் ஏற்ற விதத்திலேயே திருக்குர்ஆன் பதில் சொல்வதாக அமைந்துள்ளது. இருப்பினும் சூரியன் உதிக்கும் நேரம் என்றும் சூரியன் மறையும் நேரம் என்றும் கூறவேண்டிய இடத்தில் திருக்குர்ஆனின் தோற்றுவாயின் ஆழம் காணமுடியாத அதி அற்புத சர்வ சம்பூரண ஞானத்தி லிருந்து ஒரு துளியின் துளியாம் இராப்பகல் இயக்கத்தின் அறிவியலை அதில் கலந்துவிட்ட போது சூரியன் உதிக்கும் நேரம் என்பது ``சூரியன் உதிக்கும் இடம் என்றும் சூரியன் மறையும் நேரம் என்பதும் ``சூரியன் மறையும் இடம் என்றும் மாறிவிட்டதாக திருக்குர்ஆனின் ஆய்வாளர்களுக்குப் புலப்படுவது மிகப் பொருத்தமானதும் ஏற்கத்தக்கதுமாகும்.

திருக்குர்ஆன் மெய்யாகவே இறைவனிடமிருந்து வரப் பெற்றதா? அல்லது இறைவனின் பெயரால் புனைந்துரைக்கப் பட்டதா? என ஆய்வு செய்து பார்க்கும்படித் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. இதன் அழைப்பிற்கிணங்க அறிவியல் பார்வை கொண்ட ஒருவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்ய முயல்வதோடு உலகில் மிகப் பெரிய வாக்குவாதத்தை உருவாக்கி மிகச் சிறந்த அறிவியலாளர்கள் சிலரைக் கொடுமைப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த இராப்பகல் மாற்றத்தின் அறிவியலைக் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது எனப் பார்க்க முயன்றால் அவருடைய ஆய்வுக் கண்களுக்குப் புலப்படுவதற்காகவே இப்படிப்பட்ட அறி வியல்களை இந்த விதத்தில் (எக்காலத்திலும் திருக்குர்ஆன் பெற்றிருக்க வேண்டிய நம்பிக்கையைத் தகர்க்காத விதத்தில்) திருக்குர்ஆன் கூறி வைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

உதிக்கும் இடங்களும் மறையும் இடங்களும் ஏராளம்!

உதிக்கும் இடத்தைப் பற்றியும் மறையும் இடத்தையும் இது வரை நாம் விவாதித்த விபரங்களைக் கவனமாக பார்வையிட்டவர்களிடம் இப்போது மற்றொரு கேள்வி எழலாம். சூரியன் நகராமல் ஓரிடத்தில் இருக்க பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் பூமிக்கு உதிக்கும் இடமும், மறையும் இடமும் உருவாகி விடுகிறது. அப்படிப் பார்த்தால் சூரியனுக்கு மேலும் சில கோள்களும் துணைக் கோள்களும் இருக்கின்றன. அவைகளும் தம்மைத்தாமே சுற்றிக் கொள்கின்றன. எனவே அவை ஒவ்வொன்றுக்கும் பூமிக்கு இருப்பதைப் போன்று உதிக்கும் இடங்களும் மறையும் இடங்களும் இருக்க வேண்டும். எனவே நமது சூரியக் குடும்பத்திற்குள்ளேயே பல உதிக்கும் இடங்களும் பல மறையும் இடங்களும் இருந்தாக வேண்டும். இதைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறியுள்ளதா? என்பதே அக்கேள்வியாகும்.

மிக அற்புதமாக இந்த விபரத்தையும் திருக்குர்ஆன் கூறுகிறது என்பதே அதற்குரிய பதிலாகும். அந்த பதில் வருமாறு :

``உதிக்கும் இடங்களுக்கும் மறையும் இடங்களுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.....

(70:40)

மேற்கண்ட வசனத்தில் உதிக்கும் இடத்தையும் மறையும் இடத்தையும் பன்மையில் கூறியதிலிருந்து திருக்குர்ஆனுடைய பதில் கூடுதல் விளக்கமின்றித் தெளிவாக விளங்குகிறது. ஆயினும் இங்கு கூடுதலாக மற்றொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பேரண்டத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங் களும் அவைகளில் பலவற்றிற்கு கோள் குடும்பங்களும் உண்டு என்பதையும் சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகம் கண்டுபிடித்ததன் பின்னணியில் மேற்குறிப்பிடப் பட்ட திருக்குர்ஆனறிவியல் மேலும் விரிவான பொருட் செறிவுடையதாகும். ஏனெனில் அங்கிங்கெனாதபடி பேரண்டம் எங்குமே ஏராளமான உதிக்கும் இடங்களும் ஏராள மான மறையும் இடங்களும் உள்ளதாக நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி அளிப்பதாலும் இச்செய்தியையும் உள்ளடக்கியதாக மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் காணப்படுவதாலும் அது விரிவான பொருட்செறிவுடைய திருக்குர்ஆன் வசனமாகும் என்பது தெளிவாகும்.

பகலை மூடும் இரவு!

சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை. தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியே இராப்பகலைத் தோற்றுவிக்கிறது எனும் அறிவியலை மற்றொரு வசனத்தில் இவ்வாறு காணலாம்.

``.... அவன் பகலை இரவால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன.

(13:3)

இதைத்தாம் நாம் முன்னரே கூறினோம். இம்மாமறைக் குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாமா? அல்லது இறைவனின் பெயரால் புனைந்துரைக்கப்பட்டதா? என ஆய்வு செய்யப் புகும் ஓர் ஆய்வாளர் அறிவியல் பார்வை உ டையவராக இருந்து விட்டால் உலகில் மிகப் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிய கோபர் நிக்க மற்றும் டார்வின் போன்றவர்களின் சித்தாந்தங்களைப் பற்றிய திருக்குர்ஆ னுடைய கருத்து என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்காமல் இருக்க மாட்டார். எனவே அப்படிப்பட்ட ஆய்வாளர்களுக்குள்ள சான்று களாக இருக்கும் பொருட்டே இப்படிப்பட்ட வசனங்களில் அறிவியல் உண்மைகளைத் திருக்குர்ஆன் உட்புகுத்தி உள்ளது. இப்போது இந்த வசனத்திலுள்ள அறிவியலுக்கு வருவோம்.

இந்த வசனத்தில் பகலை இரவு மூடுவதாகக் கூறப் பட்டுள்ள செய்தி உள்ளபடியே வியப்பைத் தருவதாகும். பகல் என்பது வெளிச்சமாக இருக்கும் என்பதும், இரவு என்பது இருட்டாக இருக்கும் என்பதும் நமக்குத் தெரியும். எனவே வெளிச்சமாக இருக்கும் பகலை மூடுவதற்கு இருட்டாக இருக்கும் இரவு வந்தால் இரவு அழிந்து போகும். உண்மை நிலை இவ்வாறு இருக்க பகலை இரவால் எவ்வாறு மூட முடியும்? எடுத்த எடுப்பிலேயே இது சாத்தியமில்லை என்று தோன்றினாலும் நாம் இதை ஆய்வுக் கண்களோடு அணுகிப் பார்ப்போம்.

இரவை மூடும் பகல்!

பகலை இரவால் மூடவேண்டுமானால் முதலாவதாக பகல் ஓரிடத்தில் கட்டுண்டு நிற்க வேண்டும். அதன் பிறகு இரவு நகர்ந்து வந்து பகலின் மீது படிய வேண்டும். அதன் பிறகு இரவால் பகலை மூட முடிகிறதா எனப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் பகலின் இயற்பியல் நகராமல் நிலையானதாகவும் இரவின் இயற்பியல் நகர்வதாகவும் இருக்க வேண்டும். ஆனால் சூரியன் பூமியைச் சுற்றுவதாக இருந் திருந்தால் இரவு, பகல் இரண்டுமே நகரக் கூடியதாகவே இருந்திருக்கும். எனவே இந்த நிலையில் பகலை இரவால் மூட முடியாது என்பது தெளிவாகும். திருக்குர்ஆன் தன் னுடைய மற்றொரு வசனத்தில் மேலும் இவ்வாறு கூறுகிறது:

``.....இரவை அவன் பகலால் மூடுகிறான்...

(7:54)

இந்த வசனத்தில் கூறப்பட்டவாறு இராப்பகல் இயக்கம் நடைபெற வேண்டுமானால் இரவு நகராமல் கட்டுண்டு இருக்க பகல் மட்டும் நகரக் கூடியதாக இருக்க வேண்டும். இப்போது மேற்கண்ட இரண்டு வசனங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விதத்தில் இரவும் பகலும் நகராமல் இருக்க வேண்டுமென்றாலும் மற்றொரு விதத்தில் இரவும் பகலும் நகர்ந்தே ஆக வேண்டும். ஆனால் சூரியன் பூமியைச் சுற்றி வருவதாலேயே இராப்பகல்கள் நடைபெறுவதாக இருந்திருந் தால் இராப்பகல்கள் எந்த இடத்திலும் எந்த நிலையிலும் ஒரே இடத்தில் கட்டுண்டு இருக்காமல் நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதையும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் மட்டுமே இப்படிப்பட்ட இயற்பாடுகள் சூரியக் குடும்பத்தின் இயக்கத்தில் தோன்றும் என்பதையும் நாம் முன்னரே கண்டுள்ளோம். இருப்பினும் மேல் விளக்கத்திற் காக அதை மீண்டும் ஒரு முறை சுருக்கமாகக் காண்போம்.

சூரியன் நகராமல் ஒரே இடத்தில் இருக்க பூமி சூரியனுக்கு முன் சுழன்று வருகிறது. சூரியன் நகராத காரணத்தால் விண்ணில் உள்ள இராப்பகல்களும் நகர்வதில்லை. ஆனால் பூமியின் மீது பகலாக இருக்கும் நிலப்பகுதிகள் பூமியின் சுழற்சியால் நகர்ந்து சென்று ஆகாயத்தில் நிலைபெற்றிருக்கும் இரவிற்குள் நுழைந்து தன்னை மூடிக் கொள்கிறது. இதைப் போலவே பூமியில் இரவாக இருக்கும் நிலப்பகுதிகள் பூமியின் சுழற்சியால் நகர்ந்து சென்று ஆகாயத்தில் நிலை பெற்றிருக்கும் பகலுக்குள் நுழைந்து பகலால் தன்னை மூடிக் கொள்கிறது.

பூகோளத்தின் அச்சில் சுழற்சி எவ்வளவு ஆழமாகவும் அற்புதமாகவும் திருக்குர்ஆனின் அறிவியலை நிரூபித்து நிற்கிறது!

பகலில் நுழையும் இரவும், இரவில் நுழையும் பகலும்

பூகோளத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றத்தின் மிகச் சரியான பிழையற்ற அறிவியலை இப்போது நாம் கண்ட விளக்கத்தின்படியே எடுத்துக் கூறும் மற்றொரு வசனத் தொடர் இதோ :

``அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும்,சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

(31:29)

இந்த வசனம் பூமியில் நடைபெறும் இராப்பகல் இயக்கம் என்பது பகலை இரவில் நுழைப்பதனாலும் இரவைப் பகலில் நுழைப்பதனாலும் ஏற்படுவதாகும் எனக் கூறியதிலிருந்து இராப்பகல் இயக்கத்தைத் தோற்றுவிப்பது புவி மையக் கோட்பாட்டின்படி அன்றி சூரியமையக் கோட்பாட்டின்படி ஆகும் என்பதை மீண்டும் ஐயத்திற்கிடமின்றித் திருக்குர்ஆன் நிரூபிக்கிறது!

புவிமையக் கோட்பாடு என்பது சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது எனும் பிழையான கருத்தாகும். எனவே சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் இரவு எப்போதும் பகலுக்குப் பிறகு ஓடிக் கொண்டிருக்குமே அன்றி அது எங்குமே நகராமல் நிற்பதில்லை. இரவை நகராமல் நிறுத்த முடியாவிடில் அதற்குள் பகலை எவ்வாறு நுழைக்க முடியும்?அவ்வாறே பகலை நகராமல் நிறுத்த முடியாவிடில் பகலுக்குள் இரவை எவ்வாறு நுழைக்க முடியும்? ஒரே ஒரு வழியே உண்டு. பகலை விட இரவை விரட்டினால் பகல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதற்குள் இரவை நுழைத்து விட முடியும். அப்படிச் செய்தால் இரவானது திரும்பத் திரும்ப பகலுக்குள் நுழையுமே அன்றி பகல் எப்போதுமே இரவுக்குள் நுழையாது! ஆனால் திருக்குர்ஆனோ பகலுக்குள் இரவு நுழைவது போல் இரவுக்குள் பகலும் நுழைவதாகக் கூறுகிறது.

எவ்வளவு சிறந்த கவனத்தோடு துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் இவை! இப்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் மட்டும் பகலோ இரவோ ஏதேனும் ஒன்று ஏதேனும் ஒன்றுக்குள் நுழைய முடிகிறதா? இல்லவே இல்லை! ஏன்? ஏனெனில் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகலும் இரவும் ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த இரண்டு பொருட்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒரு போதும் நுழையாது. எனவே பூமி அதன் அச்சில் சுழலும் போது மட்டுமே பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல்கள் நகராமல் ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்க முடிகிறது.

பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல்கள் கட்டுண்டு நிற்கும் போது பூமியின் பகல் பிரதேசம் பூமியின் சுழற்சியால் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் இரவுக்குள் நுழைய முடிகிறது. அதைப் போல் மறுபக்கம் பூமி யின் மீதுள்ள இரவுப் பிரதேசம் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் பகலுக்குள் நுழைய முடிகிறது.

``பகலுக்குள் நுழையும் இரவு! இரவுக்குள் நுழையும் பகல்! எவ்வளவு சிறப்பான அறிவியல் ஞானத்தை திருக்குர்ஆனின் மேற்கண்ட வார்த்தைப் பிரயோகங்கள் அதனை ஆய்வு செய்வோரின் கண்களுக்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டித் தருகிறது! இந்த சொற்பிரயோகங்கள் எவ்வளவு அற்புதமாக புவி மையக் கோட்பாட்டை மறுத்து விட்டு எவ்வளவு துல்லியமாக சூரிய மையக் கோட்பட்டை உண்மைப்படுத்துகிறது! இதற்கு மேலும் இம்மாறைக் குர்ஆன் புவிமையக் கோட்பாட்டை ஆதரிக்கும் நூல் என்றோ அல்லது இராப்பகல் மாற்றத்தின் பிழையற்ற அறிவியல் திருக் குர்ஆனுக்குத் தெரியாது என்றோ ஒருவரால் கூற முடியுமா?

பின் வாங்கிச் செல்லும் இரவு

சூரியக் குடும்பத்தின் இயக்கம் பற்றிய திருக்குர்ஆனின் அறிவியல் ஆழத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு வசனம் வருமாறு :

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீது ஆணையாக! வெளிச்சம் தரும் காலைப் பொழுதின் மீது ஆணையாக!

(74:33-34)

இந்த அற்புதமான திருமறை வசனம் இரவின் ஒரு இயற்பியல் குணத்தை இங்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இரவு என்பது பின்வாங்கிச் செல்லும் குணத்தையுடையது என்பதே அந்த இயற்பியல் குணமாகும். இந்த வசனத்தில் கூறப்படிருக்கும் தகவலைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் ``பின் வாங்கிச் செல்லுதல் என்றால் என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பின்வாங்கிச் செல்லுதல் என்பது ஒரு இயக்கம் எந்த திசையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அந்த திசையில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் முன்னேற இயலாமல் அது வரை அந்த இயக்கம் எந்த திசையில் சென்று கொண்டிருந்ததோ அத்திசைக்கு எதிர் திசையில் இயங்குவதையே ``பின் வாங்கிச் செல்லுதல் என்று கூறுகிறோம். இப்போது வழக்கம்போல் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவு எந்த இடத்திலாவது பின் வாங்கிச் செல்லும் நிலை ஏடற்படுகிறதா? எனப் பார்ப்போம். அவ்வாறு இரவு பின்வாங்கிச் செல்லும் நிலை அதில் காணப்பட்டால் இதுவே இராப்பகல் மாற்றத்தைப் பற்றிய திருக்குர்ஆனின் கருத்தாக முடிவு செய்யலாம். எனவே அந்த ஆய்விற்குள் செல்வோம்.

இப்போது சூரியன் பூமியைச் சுற்றுவதாக வைத்துக் கொண்டு இரவின் இயக்கம் எத்திசையில் எவ்வாறு நடைபெறும் எனப் பார்ப்போம். சூரியன் இப்போதும் பசிபிக் சமுத்திரத்தின் உச்சியில் இருப்பதாகக் கொள்வோம். சூரியனின் எதிரில் உள்ள பூமியின் அமெரிக்கா முதல் சீனா வரையிலான அரைக்கோளம் பகலாகவும் அந்த அரைக் கோளத்திற்கு மறுபக்கம் உள்ள பூமியின் அரைக்கோளம் இரவாகவும் இருக்கும். சூரியன் நகரத் துவங்கியதும் இரவும், பகலும் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்றாக நகரத் தொடங்கு கிறது. சூரியன் ஒரே திசையில் சுழல்வதால் இரவும் பகலும் ஒரே திசையில் பூமியின் மீது சுழன்று வருகிறது. சூரியன் திசைமாறிச் சுழலாத காரணத்தால் இரவோ அல்லது பகலோ ஒரு போதும் பின்வாங்கிச் செல்ல இயலவில்லை. எனவே சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் இரவுக்குப் பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் பண்பு ஒரு போதும் தோன்றுவதில்லை என்பதால் திருக்குர்ஆன் புவி மையக் கோட்பாட்டை ஒரு போதும் ஆதரிப்பதில்லை என்றும் இரவுக்கு பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் பண்பைத் தோற்றுவிக்கும் இராப்பகல் இயக்கம் எதுவோ அதுவே இதைப் பற்றிய திருக்குர்ஆனுடைய அறிவியல் கோட்பாடா கும் என்பதையும் ஐயத்திற்கிடமின்றி விளங்குகிறோம். எனவே வழக்கம் போல் பூமி தன்னைத்தானே சுற்றி இராப்பகலைத் தோற்றுவிக்கும் போது இரவுக்கு பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் குணம் ஏற்படுகிறதா? எனப் பார்ப்போம்.

பின்வாங்கல் என்பதன் அற்புதக் காட்சி

ஆய்வின் தொடக்கத்தில் சூரியன் நகராமல் ஒரே இடத்தில் இருப்பதாவும் இதன் காரணமாக பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல் நகராமல் கட்டுண்டு நிற்பதாகவும் பூமி அதன் அச்சில் சுழல்வதாகவும் வைத்துக் கொள்வோம். பூமியின் சுழற்சி அதன் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை - இதை இந்தியா எனக் கொள்வோம் - இரவுக்குள் பன்னிரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக ஒரே திசையில் நகரச் செய்துவிட்டு சூரியன் உதிக்கும் இடத்திற் குள் இந்தியாவை நுழையச் செய்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்த இரவின் நிலைமை இப்போது நாம் கவனித்தால் இரவின் ``பின்வாங்கல் மிக அற்புதமாக நடைபெறுவதை நம்மால் பார்க்க முடியும்!

ஆம்! உதய எல்லையை இந்தியா தொட்ட பிறகும் எந்தத் திசையில் பூமி சுழன்று வந்ததோ அதே திசையிலேயே இந்தியா தொடர்ந்து முன்னேறிய போதும் இந்தியாவில் உள்ள இரவு இந்தியா செல்லும் திசைக்கு நேர் எதிர் திசையில் பின்வாங்குகிறது. இந்தியாவைப் பின்தொடர்ந்து பாக்கி தான் வந்து கொண்டிருப்பதால் இந்தியாவிலிருந்து பின்வாங் கிய இரவு பாக்கிதானுக்குச் செல்கிறது. ஆனால் சில வினாடிகளில் பாக்கிதானும் உதய எல்லைக்குள் நுழையத் தொடங்குகிறது. எனவே பாக்கிதானுக்குப் பின்வாங்கிய இரவு ஈரானுக்குப் பின்வாங்கத் தொடங்குகிறது. இவ்வாறே ஈரானுக்குப் பிறகு படிப்படியாக எகிப்து, அட்லாண்டிக், அமெரிக்கா, பசிபிக், சீனா போன்ற இடங்களுக்குப் பின்வாங்கி திரும்பவும் இந்தியாவிற்கும், பிறகு பாக்கிதானுக்கும் பின்வாங்கிக் கொண்டே செல்கிறது!

இக்காட்சி எவ்வளவு அற்புதமாக திருக்குர்ஆனின் அறிவியலை நிரூபித்துக் காட்டுகிறது!

சூரியனின் உதய எல்லையில் நடைபெறும் பின் வாங்கும் இயற்பியல் குணம் இப்போது எளிதாக நம்மால் விளங்க முடிகிறது. ஆயினும் இரவின் இந்த இயற்பியல் குணம் பூகோளத்தில் இரவாக இருக்கும் அரைக்கோளம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சிப் போக்கே என்பதை இதற்கு மேல் வாசகர்கள் சுயமாகவே புரிந்து கொள்ள முடியும்.

இயற்கையின் நேர்முக வர்ணனை!

இரவு என்பது பின்வாங்கும் இயல்பைக் கொண்டது எனும் திருமறை அறிவியலின் விளக்கத்தை கோபர் நிக்க, கெப்ளர், கலீலியோ போன்ற சிறந்த அறிவியலாளர்கள் அறிவியல் உலகிற்கு வழங்கிய பங்களிப்புகளின் துணையால் இன்று நாம் சரியாக விளங்கிக் கொண்டோம். ஆயினும் இந்த அறிவியலாளர்கள் பிறப்பதற்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இரவு பின்வாங்கும் நிலையைக் கொண்டது எனக் கூற வேண்டுமாயின் அவர் யாராக இருக்க வேண்டும்? குறைந்த பட்சம் அவர் பூமியின் சுற்றுப் பாதைக்கு (டீசவை) அப்பால் நின்று கொண்டு அதே நேரத்தில் பூமியில் இராப்பகல் மாற்றம் நடைபெறுவதை மிகத் துல்லியமாகப் பார்த்தறியும் ஆற்றல் மிகு கண்களைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதோடு எந்தக் காட்சியையும் கற்பனை வளத்துடன் அதே நேரத்தில் பொய்யக் கலப்பின்றியும் வர்ணனை செய்யும் இலக்கிய அறிவும் பெற்ற ஒருவராகவே அவர் இருக்க வேண்டும்!

அப்படிப்பட்ட ஒருவர் இருந்தார் என நம்மால் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?ஒருகாலும் முடியாது என்பதே நமது பதிலாக இருக்கும். உண்மை நிலை இதுவே என்றால் சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்றும் அதற்கு மாறாக பூமியே தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இராப்பகலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை உள்ளடக்கிய இதைப் போன்ற வசனங்களைத் திருக் குர்ஆனால் எப்படிக் கூற முடிந்தது?

திருக்குர்ஆன் மானிடப் படைப்பன்றி இறைவனின் வார்த்தைகளே என நம்புவதில் இதற்கு மேலும் என்ன பிரச்னை?

அத்தியாயம் 7

சுழற்றும் பூமி

சென்ற அத்தியாயத்தில் பூமியில் நடைபெறும் இராப்பகல் மாற்றம் சூரிய மையக் கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்டதே எனத் திருக்குர்ஆன் கூறுவதை ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாகக் கண்டு விட்டோம். இருப்பினும் எந்த அறிவியல் உண்மையை நவீன அறிவியல் உலகின் விஞ்ஞானிகள் கூறிய போது உலகில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியதோ அந்த அளவிற்கு உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய அறிவியல் உண்மை; எந்த அறிவியல் கண்டுபிடிப்பு நவீன அறிவியல் உலகின் படைப் பிற்கு ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் அமைந்ததோ அந்த அளவிற்கு வினை வீரியம் கொண்ட அறிவியல் உண்மையாம் சூரிய மையக் கோட்பாடு கூடவா வெறும் ஒரு வேத நூலில், அதிலும் தொன்மையான ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய வேத நூலில் இருக்க முடியும் என்ற பிரமிப்பில் இப்போதும் சிலர் தயங்கி நிற்கக் கூடும். அவர்களின் தயக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக நாம் இங்கு ஒரு வினாவை எழுப்புவோம்.

விமானத்தை விஞ்சும் புவியின் வேகம்

இரண்டு விமானங்கள் முறையே ஒன்று டில்லியில் இருந்து ஹாங்காங்கிற்கும் மற்றொன்று ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கும் ஒரே வேகத்தில் ஒரே நேரத்தில் பறந்தால் அவை ஒரே நேரத்தில் தரை இறங்குமா? இக்கேள்விக்கு ``ஆம் என்றே அனைவரும் பதில் சொல்வார்கள். ஆயினும் அதைத் தொடர்ந்து ``எவ்வாறு? என்று மற்றொரு கேள்வியை எழுப்பினால் ``அவ்விரு விமானங்களும் பறக்கும் தூரமும், பறக்கும் வேகமும் ஒன்றாக இருப்பதால் அவை இரண்டும் ஒரே நேரத்திலேயே தரை இறங்கும்! என்று பதில் கூறப்படும். இந்தப் பதில் முறையான பதிலாகாது; குறை உடைய பதிலாகும்.

பூமியின் மீது மேற்கொள்ளப்படும் பயணமாக இருந்திருந்தால் இந்தப் பதில் போதுமானதே. ஏனென்றால் பூமி சுழன்ற போதிலும் பூமியின் மீது செய்யப்படும் பயணங்களை அது பாதிப்பது இல்லை. ஆயினும் விமானங்கள் தரையை விட்டு கிளம்பிய உடன் பூமியுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. எனவே பூமியின் சுழற்சி விமானப் பயணத்தைப் பாதிக்க வேண்டும்.

சான்றாக டில்லி விமானம் (டில்லி வடி ஹாங்காங் விமானம்) ஹாங்காங்கை நோக்கி மணிக்கு 650 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதே நேரத்தில் பூமியின் சுழற்சி விமானம் செல்லும் அதே திசையில் டில்லியை சுழற்றுகிறது. இப்போது விமானம் பறக்கும் அதே வேகத்தில் பூமியும் சுழலுவதாக இருந்தால் டில்லி விமானம் எப்போதுமே (டில்லியின் வானில் எங்கும் நகராமல் எப்போதும்) டில்லியின் வானத்திலேயே நின்றிருக்கும். இதிலிருந்து விண்ணில் பறக்கும் ஒருவர் கிழக்குத் திசையில் பறப்பதாக இருந்தால் பூமி சுழலும் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்க வேண்டும் என்றும் அப்போது மட்டுமே அவர் போக வேண்டிய இலக்கை எளிதாக அடைய முடியும் என்பதையும் அறியலாம்.

ஆனால் உண்மை என்னவெனில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1675 கிலோமீட்டர் என்பதாகும். இந்த நிலையில் டில்லி விமானம் ஒருமணி நேரம் பறப்பதாக இருந்தால் ஹாங்காங்கை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியும்? கீழ்க்கண்டவாறு இதை நாம் கணக்கிடலாம்.

விமானப் பயணங்களின் விபரீத விந்தைகள்

பூமியின் சுழற்சி வேகம் 1675 கிலோமீட்டர்கள். ஆயினும் விமானத்தை முந்தும் போது அதனுடைய சார்பியல் (சநடயவஎந யயீநநன) வேகம் (1675-650) 1025 கிலோமீட்டர்/மணி என்பதாகும். இதிலிருந்து டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறந்த போதும் அந்த விமானத்தால் டில்லியிலிருந்து முன்னேறிச் செல்ல முடியாமல் டில்லியிலிருந்து 1025கிலோமீட்டர் பின்வாங்கிச் செல்ல நேரிட்டது என்பதைப் பார்க்கிறோம். இதை மற்றொரு விதத்தில் கூறுவதாக இருந்தால் டில்லி விமானம் புறப்படுவதற்கு முன்னர் ஹாங்காங்கிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்ததோ அதைவிட 1025 கிலோமீட்டர் அதிக தூரத்திற்கு விமானம் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும்.

இப்போது ஹாங்காங் விமானத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். இந்த விமானம் ஹாங்காங்கிலிருந்து டில்லி நோக்கிப் பறக்கிறது. வேறு விதத்தில் கூறினால் பூமி சுழலும் திசைக்கு எதிர் திசையில் ஹாங்காங் விமானம் பறக்கிறது. எனவே இந்த விமானம் டில்லியை நோக்கி ஒரு மணி நேரத்தில் 650 கிலோ மீட்டர் முன்னேறிய போது டில்லியானது அதே நேரத்திற்குள் 1675 கிலோமீட்டர் தூரம் அந்த விமானத்தை நோக்கி முன்னேறுகிறது. எனவே இந்த விமானத்தின் சார்பியல் வேகம் இப்போது (650+1675)மணிக்கு 2325 கிலோ மீட்டர்களாகும். பூகோளத்தின் சுழற்சியால் இப்படிப்பட்ட விபரீத விளைவுகள் உள்ளபடியே ஏற்படுவதாக இருந்தால் ஹாங்காங் விமானம் 100 நிமிடத்தில் டில்லியை அடைய நேர்ந்திருக்கும்.

அதே நேரத்திலேயே டில்லி விமானமும் தரை இறங்குவதாக இருந்திருந்தால் அந்த விமானம் ஹாங்காங்கில் தரை இறங்கி இருக்க முடியாது. அந்த விமானம் தரை இறங்கிய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5,500 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஹாங்காங் இருந்திருக்கும். இப்படிப்பட்ட விபரீத விந்தை (ஞயசயனடிஒ) நடைபெறுமாயின் டில்லி விமானம் 39 மணி நேரம் கழிந்த பிறகே ஹாங்காங்கை அடைய முடியும்! எவ்வளவு கேலிக்குரிய முடிவாக இருக்கும் இந்த முடிவு! ஆனால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நமது விமானப் பயணத்திற்கு ஏற்படுகிறதா? இல்லவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் பூமி சுழலவில்லை என்பது இதன் பொருளாகுமா? ஒருக்காலும் இல்லை! பூமி சுழல்கிறது என்பதை ஐயத்திற்கிடமின்றி நாம் திருக் குர்ஆனிலிருந்து விளங்கினோம். பூமி சுழலும் என்பது திருக்குர்ஆனுக்குத் தெரியும் என்பது உண்மையாக இருந்தால் அந்த சுழற்சியால் ஏற்பட வேண்டிய மேற்குறிப்பிட்ட விந்தை வினோதங்களும்,அப்படிப்பட்ட பிரச்சனை எதுவும் நமது விமானப் பயணத் திற்கு ஏற்படாதவாறு இயற்கையின் ஏதோ ஒரு இயற்பாடு அதைத் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் திருக் குர்ஆனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? எனவே அதற்குரிய அறிகுறிகள் இங்கு காணப்படுகிறதா? என்பதே இங்கு எழும் நியாயமான வினாவாகும்.

இந்த வினாவிற்குக் கூட திருக்குர்ஆனில் பொருத்தமான பதில் கிடைத்ததென்றால் அதன் பிறகு சூரியன் பூமியைச் சுற்றவதாலேயே இராப்பகல் தோன்றுவதாகத் திருக்குர்ஆன் கூறுவதாக எவ்வளவு பலவீனமான அறிவுஜீவி கூறினாலும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்ததாகக் கூறுவது பொய். அல்லது ஆய்வில் அறிந்ததை அவர் நேர்மையாகக் கூறுவதாகச் சொல்வது பொய். இவ்விரண்டும் இல்லை யென்றால் அவர் அறியாதவர். அவருக்கு இந்த நூலைப் படிக்கத் தருவது நன்று.

பிரச்சனைகளைப் போக்கும் பூமியின் இயற்பாடு

இது வரை பூமியின் அச்சில் சுழற்சியால் நேரிட வேண்டிய விபரீத விளைவுகளைக் கண்டோம். அடுத்த படியாக பூமி தன்னைத்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றுகிறது என்பது நமக்குத் தெரியும். அதே நேரத்தில் பூமியின் சுற்றுப்புறங்கள் யாவிலும் விமானங்கள் பறக்கவும் செய்கின்றன. விமானங்கள் பூமியைச் சுற்றிப் பறக்கின்ற அதே நேரத்தில் பூமி மணிக்கு 1,08,000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வரும் பணியையும் செய்வதாக இருந்தால் பூமியைச் சுற்றிப் பறக்கும் விமானங்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே இருக்க முடியும்.

சான்றாக பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருவதற்காக நகர்ந்து செல்கிறதோ அந்தத் திசையில் பறக்கும் விமானங்கள் பூமியின் மீது மோதி நொறுங்கிப் போக வேண்டும். இதைப் போல் பூமி எந்தத் திசையில் நகர்கிறதோ அந்தத் திசையில் பறக்கும் விமானங்கள் ஒரு சில வினாடிகள் பூமியிலிருந்து தவறிப் போக வேண்டும். பூகோளத்தின் சூரியவலம் இப்படிப்பட்ட பிரச்சனைகளைத் தோற்றுவிக்கு மாயின் இந்தத் பூமியில் நமக்கு விமானப் பயணம் சாத்தியமாகுமா? ஆனால் நாம் இவ்விதப் பிரச்சனைகள் ஏது மின்றி விமானப் பயங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது விளக்கத் தேவையில்லை. இது உள்ளபடியே ஒரு வியப்பைத் தரும் உண்மை யாகும். இந்த வியப்பைத் தரும் உண்மையை நடத்தி வைக்கும் இயற்பியல் இயற்பாடு யாது? பூமியின் அச்சில் சுழற்சியும்,சூரியவலமும் திருக்குர்ஆனுக்குத் தெரிந்திருக்கும் போது அவைகளினால் ஏற்படும் விபரீத விளைவுகளைத் தவிர்க்கும் இயற்பியல் இயற்பாடு குறித்து திருக்குர்ஆனுக்கு ஏதேனும் தெரியுமா? என்று ஒரு வினா எழுமானால் நாம் இது வரை கூறிய பிரச்சனைகளும் அந்தப் பிரச்சனைகளைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு மற்றொரு இயற்பியல் நிகழ்ச்சிப் போக்கு அதில் வடிவமைப்புச் செய்து நமது எதிர்கால விமானப் பயணங்களை சாத்தியமாக்குகிறது எனும் செய்தியைக் கூட விளங்கச் செய்யும் வகையில் திருக்குர்ஆன் எடுத்துக் கூறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

திடுக்கிடச் செய்யும் திருமறை அறிவியல்!

விமானங்களை உருவாக்க மனிதன் கற்றுக் கொள்வதற்கு ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் திருக்குர்ஆன் இறங்கியது. எனவே பூமியின் சுழற்சியாலும்,சூரியவலத்தாலும் ஏற்படும் பிரச்சனையை நாம் இங்கு விமானத்தை உதாரணம் காட்டி விளக்கியதைப் போன்று விளக்க முடியாது. எனவே இதற்காக திருக்குர்ஆன் விமானத்தை விடப் பொருத்தமான மற்றொன்றை சான்று காட்டி இப்பிரச்சனையை மிக அழகாக விளக்குகிறது. அந்த வசனங்கள் இதோ :

``சிறகுகளை விரித்தும் சுருக்கியும் தங்களுக்கு மேல் பறக்கும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? கருணைமிக்க இறைவனைத் தவிர அவைகளை (இடையூறுகளிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கவில்லை (ஆம்!) திண்ணமாக அவன் யாவற்றின் மீதும் பார்வை உடையவன்!

(67:19)

விமானம் என்றால் என்னவென்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலகட்டத்தில் இறங்கிய திருக்குர்ஆன் அக்கால மக்களுக்கும் எளிதாக விளங்கும் விதத்தில் பறவைகளைச் சான்று காட்டி அவை பூமியுடன் தடுத்து வைக்கப்பட வேண்டி உள்ளது என்பதை எடுத்துக் கூறியது எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மை என்பது இப்போது மிகத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறதன்றோ! பூமியானது ஆகாயத்தில் நகராமல் நின்றிருப்பதாகக் கற்பனை செய்யப்பட்டால் ஒரு ஆய்வாளனின் கண்களுக்கு இந்த வசனம் வெறும் பிதற்றலாகவே தென்படும். ஆனால் பூகோளத்தின் சுழற்சியும், நகர்வும் பற்றி போதிய அறிவைப் பெற்றுக் கொண்ட நவீன உலகில் வாழும் ஒருவர் இம்மாறையை ஆய்வு செய்யும் போது மேற்கண்ட வசனத்தில் உள்ளடங்கிய அறிவியலின் ஆழம் அவரது உள்ளத்தை திடுக்கிடச் செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதை இப்போது நம்மால் உணர முடிகிறதன்றோ!

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக் கும் நாம் பூமியின் சுழற்சியாலும் அதன் நகர்வாலும் அதன் மீது பறக்கும் பறவைகளுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்துள்ளோம். பூமியின் ஈர்ப்பு விசையானது காற்று மண்டலத்திலும் பரவி இருப்பதால் பூமி காற்று மண்டலத்தையும் தன்னுடன் இணைத்தவாறே சுழல்கிறது. மேலும் சூரியனையும் சுற்றி வருகிறது. எனவே காற்று மண்டலத்தின் மிக பலம் வாய்ந்த கீழடுக்கில் பறக்கும் பறவைகளாயினும் விமானங்களாயினும் அவைகளின் நகர்வு (பறத்தல்) பூமியின் மீது ஓடும் வாகனங் களைப் போன்று பூமியுடன் பிணைக்கப்பட்டதைப் போல் நடைபெறுகின்றன.

பூமியின் ஈர்ப்பாற்றல் அதன் மீது பறக்கும் பறப்பவை களை நேரடியாக ஈர்ப்பதுடன் அவை பறப்பை நிகழ்த்தும் புலமாம் (குநைடன) காற்று மண்டலத்தையும் பூமியுடன் பிணைத் திருக்கும் விதத்தில் அவைகள் வடிவமைப்பு செய்யப்பட்ட காரணத்தால் பூமியின் மீது பறப்பவைகள் பூமியின் சுழற்சி மற்றும் அதன் நகர்வு போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வடிவமைப்பை இறைவன் தாமே செய்த காரணத்தால் இப்பறவைகளை பூமியின் சுழற்சியாலும் நகர்வாலும் ஏற்பட இருந்த இடையூறு களிலிருந்து இறைவன் தாமே தடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது மிகப் பொருத்தமான அதே நேரத்திமல் மிக சீரியஸான (ளுநசடிரள) நினைவூட்டல் என்பதும் இந்த வசனத்திலிருந்து நன்கு விளங்க முடிகிறது.

திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் இல்லை என்பதும் அது ஒரு வேத நூலே என்பதும் நமக்குத் தெரியும். அவ்வாறிருந்தும் இவ்வளவு அபூர்வமான அறிவியல் உமைகளையெல்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே திருக் குர்ஆன் கூறியுள்ளது எனில் நாம் முன்னர் கூறியது போன்று திருமறையின் தோற்றுவாய் யார் எள்பதை அணு அளவும் ஐயத்திற்கிடமில்லாத வகையில் அடையாளம் காட்டு வதற்காகும்.

உதாரணங்களின் அபாரமான பொருட் செறிவு

இப்போது மற்றொரு அறிவியல் வசனம் இந்த அறிவிய லுடன் மிகத் துல்லியமாகப் பொருந்துவதைப் பார்க்கலாம். பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயம் காற்று மண்டலமாகும். திருக்குர்ஆ னில் ஒரு வசனம், ``அல்லாஹ்வே பூமியை உங்களுக்கு வீடாகவும்,வானத்தைக் கூரையாகவும் அமைத்தான் (40:64) எனக் கூறுகின்றது. திருக்குர்ஆன் கூறியவாறு பூமி ஒரு வீடாகவும் அதைச் சூழ்ந்துள்ள ஆகாயம் (காற்று மண்டலம்) அந்த வீட்டிற்குக் கூரையாகவும் இருந்து விட்டால் வீடாகிய பூமி சுழலும் போது அதன் கூரையும் அதனுடன் சுழன்றாக வேண்டும்! அவ்வாறே அந்த வீடு நகரும் போது அதன் கூரையும் அதனுடன் நகர்ந்தாக வேண்டும்!

திருக்குர்ஆனின் ஒவ்வொரு உதாரணமும் எவ்வளவு விரிவான ஆழமான பொருட்செறிவைத் தருகின்றது என்பதை இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறதன்றோ!

பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தும் பூமி சுழல்வதை யும் நகர்வதையும் ஏன் உணர முடியவில்லை என இந்த இடத் தில் மீண்டும் ஒரு முறை நாம் ஒரு வினா எழுப்பினாலும் இந்த வசனத்திலிருந்தே அதற்குரிய பதிலைப் பெற முடியும். ஆம்! ஒரு இரயில் வண்டியில் நாம் பயணம் செய்யும் போது வண்டியின் உள்ளே உட்கார்ந்து கொண்டு அதன் கூரையைப் பார்த்தால் வண்டி நகர்வதை நம்மால் உணர முடியாது. இதைப் போன்று காற்று மண்டலம் பூமிக்குக் கூரையாக இருப்பதால் நாம் பூமிக்கு அப்பால் எங்கு பார்த்தாலும் அதன் கூரைக்கு உள்ளேயே பார்க்கிறோம். சன்னலே இல்லாத கூரையாக காற்று மண்டலம் இருப்பதால் வெளிச்சம் இருக்கும் போது (பகல் நேரத்திலோ,நிலா வெளிச்சத்திலோ) நம்மால் நமது கூரைக் கப்பால் பார்க்க முடிவதில்லை. பூமியின் நகர்வுகளை நாம் அறியாதிருப்பதற்கு இது ஒரு பிரதான காரணமாகும். இவ்வாறு திருக்குர்ஆன் தேர்ந்தெடுத்த இந்த அரிய உதாரணம் பற்பல அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

யாராலும் இட்டுக்கட்ட இயலாதது

இந்த அத்தியாயத்தில் பூமிக்கு மேல் பறக்கும் எதுவும் பூமியிலிருந்து விலகிப் போகாமல் தடுக்கப்பட வேண்டும் எனும் திருமறை அறிவியலை நாம் விளக்கமாகக் கண்டோம். இந்தச் செய்தியை ஏழாம் நூற்றாண்டில் ஒருவர் கூற வேண்டுமானால் அவர் யாராக இருக்க வேண்டுமென்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த வேதம் இறைவனின் வார்த்தைகள் இல்லை யென்றால் இறைத் தூதர் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) இதை இறைவனின் பெயரால் இட்டுக் கட்டினார் என்றே பொருள்படும். ஆனால் ஒருவர் இவ் வேதத்தை இட்டுக்கட்ட வேண்டுமானால் இவ்வேதத்தில் கூறப்பட்டுள்ள நவீன விஞ்ஞான உலகில் மட்டும் கண்டு பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அறிவியல் உண்மை களையும், பூமி சுழல்கிறது; அது சூரியனைச் சுற்றி வருகிறது; மேலும் அதற்கு ஈர்ப்பாற்றல் உண்டு; அந்த ஈர்ப்பாற்றலால் அது அதனைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலத்தையும் தன்னுடன் சுழற்றுகிறது என்பன போன்ற அறிவியல் உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும்.

ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய ஒருவரால் இந்த அறிவியல் உண்மைகளையெல்லாம் எப்படித் தெரிந்து கொள்ள முடிந்தது என்பதையும் திருக்குர்ஆன் இட்டுக் கட்டப்பட்டது எனக் கூறுபவர்கள் தெரிவிக்க வேண்டி யிருக்கும். இது சாத்தியமா? ஒருகாலும் சாத்தியமில்லை என்பதை விளக்கத் தேவையில்லை. இப்படிப்பட்ட பற்பல நியாயமான காரணங்களாலேயே திருக்குர்ஆன் ``இதை அவர் இட்டுக்கட்டி விட்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை... (32:3) என ஆணித்தரமாகப் பறைசாற்று கிறது! எனவே காய்தல் உவத்தலின்றி சிந்திப்பீர்களாக!

அத்தியாயம் 8

பேரண்டத்திற்குக் கடவுளின் தேவை

நாம் இது வரை பண்டைகால உலகை அடியோடு மாற்றி அமைத்த அறிவியல் உலகில் அறிவுப்புரட்சியை (ஐவேநடடநஉவரயட சநஎடிடரவடி) ஏற்படுத்திய சில அதி மகத்தான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்த்தோம். இதன் விளைவாகப் பேரண்டம் என்றால் என்ன? என்றும் அது எவ்வாறு தோன்றி யது? எவ்வாறு செயல்படுகிறது? என்பதையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் பேரண்டம் எதற்காகத் தோன்றியது? என்ற வினாவை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

ஒரு விதத்தில் இந்த வினா சிலருக்கு விரும்பத்தகாத தாகவே தோன்றும். பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு உணவாக பூமியில் என்னென்ன இருக்கின்றன என்றும் அவைகளை எவ்வாறு உற்பத்தி செய்யலாம் என்றும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டிய போதும் இவைகளையெல்லாம் பூமி ஏன் உற்பத்தி செய்தது என்ற வினாவை புறக்கணிப் பதையே வசதியாகக் கருதுகிறார்கள். மழையின்றி வாழ இயலாதவர்கள் மழை ஏன் பொழி கிறது என்றோ காற்றில்லாமல் வாழ முடியாதவர்கள் காற்று மண்டலம் ஏன் தோன்றியது என்றோ சிந்தித்துப் பார்க்காமல் தவிர்த்து விடுவதையே வசதியாகக் கருதுகிறார்கள். எனவே இத்துறை தத்துவஞானிகளின் குத்தகையாக மாறியது. இவர்களின் கூற்றுகள் எதுவும் சர்ச்சைக்கு இடமில்லாமல் ஏற்கப்பட்டு வந்தன. ஆயினும் சமீபத்தில் தோன்றிய அறிவியலாளர்கள் சிலர் பேரண்டம் எதற்காகத் தோன்றி யது? என்ற கேள்வியை மட்டும் அறிவியலாளர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்? எனச் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இன்று சில செய்திகள் தெரியாமல் போயினும் நாளையும் அவை தெரியப் போவதில்லை என ஏன் முடிவு செய்ய வேண்டும்? என சிந்திக்கின்றனர். அறிவியலாளர் ஷேப்லி அப்படிப்பட்ட ஒருவராகத் தெரிகிறார். அவர் ஓரிடத்தில் தமது கருத்தை இவ்வாறு தெரிவிக்கிறார்.

அறிவியலாளர்களின் எதிர்பார்ப்பு

பேரண்டம் என்பதென்ன? அது எவ்வாறு செயல்படு கிறது? பேரண்டம் எதற்காக?

முதல் கேள்வி பேரண்டம் என்பது என்ன? இந்த வினாவிற்கு அடிப்படையான வழிமுறையில் (நுடநஅயவேயசல றுயல) பொருட்கள், ஈர்ப்பு விசை, காலம், செல்களிலுள்ள உயிர்மப் பொருட்கள் (ஞசடிவடி ஞடயளஅ) போன்ற சிலவற்றைக் குறித்து முழுமையற்றதாயினும் ஓரளவு துணிச்சலான பதிலை (ய செயஎந யீயசவயைட யளேறநச) உருவாக்கி முணுமுணுக்கலாம்.

``எவ்வாறு? எனும் கேள்விக்கு இயற்கை விதிகளைப் பற்றியும், வெப்பத்தின் இறப்பையும் (னநயவா) காலக்சிகளின் விலகி ஓட்டத்தையும் விளக்க முயற்சிக்கலாம். ஆனால் மூன்றாவது கேள்வி பேரண்டம் ``எதற்காக? என்பதற்கு ``கடவுளே அறிவார்! என்று கூறி எங்களுக்கு வியக்கவே தோன்றுகிறது என்பதோடு இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட (சநளவசஉவநன) செய்தியே என்பது வெளிப்படையாகும். ஏதோ சில திருத்த முடியாத காரணத்திற்காக ``பேரண் டம் எதற்காக? என்பது மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்?என எங்களை நாங்களே வினவ ஆரம்பிக்கிறோம். மேலும் இப்போதுள்ள தொலை தூரப் புதிர்கள் எக்காலமும் இரகசியங்களின் பட்டியலிலேயே நிலைநிற்கும் எனும் கருத்தை நாம் ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? முன்னோர் களால் விளங்க முடியாமலிருந்த பலவும் நம்மைப் பொருத்த வரை நியாயமான பொதுப்படை சத்தியங்களாகவோ,இயக்கங்களாகவோ மாறி விட்டன. புதிர்களின் அடிப்படை மறைந்து விட்டது. நாம் கடினமாகப் பணியாற்றவும், சரியாக மற்றும் ஆழமாக சிந்திக்கவும் தொடர்ந்து முயற்சித்தால் பேரண்டத்தின் ``பல பிரதான எதற்காக? களில் சிலவற்றிற்கு நாம் விடையளிப் பவர்களாக மாட்டோமா? தத்துவ ஞானிகள் இல்லை என்றே கூறக் கூடும். ஆயினும் நான் இந்த வினாவை நிலை நிறுத்து கிறேன். (பக்கம் - 5)

இயற்கையும் சில அடிப்படை உண்மைகளும்

இயற்கையும் படைப்பும் (படைப்புப் பணி) ஒரு நாணயத்திற்கிருப்பதைப் போன்று ஒரு படைப்பினத்தின் இரு புறங்களாகும். எனவே அவை இரண்டும் ஒரே நேரத்தி லேயே தோன்றுகின்றன. இந்த விளக்கத்திலிருந்து இரண்டு உண்மைகள் வெளிப்படுகின்றன. முதலாவது உண்மை பொருள் இல்லையேல் அப்பொருளின் இயற்கையும் இல்லை என்பதாகும். எனவே பொருட்கள் எதுவும் இல்லையென்றால் `இயற்கை என எதுவும் இல்லை என்பதும் அதன் பொருளா கும். இரண்டாவது பொருள் தோன்றுவதற்கு முன் அதன் இயற்கை ஒரு போதும் தோன்ற முடியாது என்பதாகும்.

மேற்கண்ட அடிப்படை உண்மைகளோடு கூட்டி வாசிக்க வேண்டிய மற்றொரு அடிப்படை உண்மை யாதெனில் எப்பொருளுக்கெல்லாம் `தோற்றம் என்ற ஒன்று உண்டோ அவை அனைத்திற்கும் `தோற்றுவாய் என்ற ஒன்றும் உள்ளது என்பதாகும். இந்த உண்மையில் உள்ளடங்கி நிற்கும் மற்றொரு செய்தி ``தோன்றிய பொருட்கள் தோற்ற மடைவதற்கு முன்பே அதன் தோற்றுவாய் இருந்துள்ளது என்பதாகும். இப்போது நாம் எடுத்துச் கூறிய அடிப்படை உண்மைகளை ஓர் உதாரணத்தில் பொருத்திப் பார்த்து விளங்க முயற்சிப்போம்.

ஆகாயப் புரட்டு

பூமியில் உணவுப் பொருட்கள் தோன்றச் செய்வது யார்? என்ற கேள்விக்கு ``அது பூமியின் இயற்கை என ஒருவர் பதில் கூறுகிறார் எனக் கொள்வோம். இக்கூற்று பூமியில் உணவுப் பொருட்களைத் தோற்றுவிப்பது பூமியின் குணமாகும் என்பதே அதன் பொருளாகும். இதையே இயல்பு என்றும் கூறுகிறோம்.

உணவுப் பொருட்களைத் தோற்றுவிப்பது பூமியின் இயற்கையே (பூமியின் குணமே) என பதிலளிக்கப்பட்டால் அதன் மறு பக்கத்தை நாம் ``(பூமியின் இயற்கையே உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது என்றால்) பூமி தோன்றுவ தற்கு முன் (உணவைத் தோற்றுவிக்கும்) அதன் இயற்கையும் இருந்ததில்லை என வாதிக்கலாம்.

உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது பூமியின் இயற்கை எனக் கூறியவரிடம் நாம் தொடர்ந்து மற்றொரு வினாவை எழுப்புகிறோம். ``உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது இயற்கையே என்றால் அந்த பூமியைத் தோற்றுவித்தது யார்? இந்த வினாவிற்கு அந்த நபர்``பூமியைத் தோற்றுவித்தது அது உள்ளடங்கி இருக்கும் காலக்சியின் இயற்கை! என பதிலளிப்பார். நாம் உடனே அந்த சங்கிலித் தொடரிலிருந்து அடுத்த கேள்விக்குச் செல்கிறோம். பூமியைத் தோற்றுவித்தது காலக்சியின் இயற்கையே என்றால் காலக்சியைத் தோற்றுவித்தது யார்? இந்த விளாவிற்கு அது ``பேரண்டத் தின் இயற்கை என பதிலளிக்கப்படும். கடைசியாக ``அனைத்தையும் தோற்றுவித்தது பேரண்டத்தின் இயற் கையே என்றால் பேரண்டத்தை தோற்றுவித்தது யார்? என்று கேட்கிறோம். இக்கேள்விக்கு பேரண்டம் தோற்றுவிக்க வேண்டிய தேவையே இல்லை! ஏனெனில் அது தோற்றமோ அழிவோ இல்லாதது என்றே பதிலளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இவ்வளவு நாளும் உலகில் பெருவாரியான மக்களை ஏமாற்றி வந்த அகில உலக ஆகாயப் புரட்டை பெரு வெடிப்புக் கோட்பாடு பச்சைப் பொய் என நிரூபித்து பேரண்டத்திற்கு தோற்றமும் முடிவும் உண்டு என உறுதி செய்து விட்டது. எனவே இதற்கு மேல் பேரண்டத்தைத் தோற்றுவித்தது யார்?என்ற கேள்விக்கு என்ன பதில் கூற முடியும்?

இயற்கையின் அழிவு

விடைகிட்டா வினாக்களின் ஒரே பதிலாக நாத்திகக் கோயில்கள் பூஜை செய்யப்பட்டு வந்த ஏக விக்கிரகமாம் ``இயற்கையில் சரடைந்தால் இந்த வினாவிற்கு பதில ளிக்க முடியுமா?ஒரு காலும் முடியாது! ஏனென்றால் பேரண்டம் தோன்றியது பெரு வெடிப்பி லிருந்தே என்றும் அந்த பெருவெடிப்புக்கு முன்னால் எதுவுமே இருந்ததில்லை என்றும் அறிவியல் நிரூபித்து விட்டது. பெருவெடிப்புக்கு முன் ஒன்றுமே இல்லை யென்றால் பெருவெடிப்புக்கு முன் இயற்கையும் இல்லை என்பதே அதன் பொருளாகும். இல்லாத இயற்கையால் பெருவெடிப்பை எவ்வாறு நிகழ்த்த முடியும்? எனவே இயற்கை வாதம் இங்கு முற்றிலும் அழிவைத் தழுவி விட்டது. எனவே பேரண்டத்தைப் படைத்தது இயற்கை அன்றி ஆற்றல் மிகு படைப்பாளன் இருந்தாக வேண்டும் என்பது சர்ச்சைக்கு இடமில்லாத பேருண்மையாகும்.

இறக்கைகள் இல்லாமல் இராக்கெட் எவ்வாறு பறக்கிறது? எனக் கேட்டால் இறக்கைகளால் பறப்பது பறவைகளின் இயற்கை; இறக்கைகள் இல்லாமல் பறப்பது இராக்கெட்டின் இயற்கை என பதில் கூறப்படலாம். இதற்காக இராக்கெட்டைப் படைத்தது இயற்கை எனக் கூற முடியுமா? ஒரு பொருள் அது உயிருள்ளதாயினும், உயிரற்றதாயினும் அப்பொருளின் இயற்கைக் குணங்கள் யாவும் அப்பொருளின் படைப்பில் உடன் நிகழ்வுகளாகும். பொருள் இல்லாமல் இயற்கையும் இல்லை; இயற்கை இல்லாமல் பொருளும் இல்லை. பொருள் இல்லாத இயற்கை என்பது அர்த்தமற்ற வெற்று வார்த்தையாகும். எனவே பொருள் படைப்பினமே (படைக்கப்பட்டதே) எனில் அதன் இயற்கையும் படைப்பின மாகும். பொருளின் இயற்கைக்கு ஒரு போதும் அதன் படைப் பாளனாக இயலாது. பேரண்டம் என்பதும் ஒரு பிரமாண்டமான பொருட்குவியலாக இருப்பதால் அதற்கு ஒரு படைப்பாளன் இருந்தே ஆக வேண்டுமென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மீண்டும் பழைய பல்லவி

பெருவெடிப்புக் கோட்பாடும் இயற்கை பற்றி கூறப்பட்ட பொருள் விளக்கமும் உள்ளபடியே நாத்திகக் கோட்பாட்டிற்கு பலத்த அடியாகும். இந்தத் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள அவர்களிடம் எஞ்சி இருப்பது ஆதிகாலம் தொட்டு அவர்கள் எழுப்பி வந்த வெறும் ஒரு பாவனை வாதம் (அர்தமற்றதே ஆயினும் அர்த்தமுள்ளதைப் போன்று போலித் தோற்றத்தை உருவாக்கும் வாதம்) மட்டுமேயாகும். அந்த வாதம் இதோ : அனைத்தையும் தோற்றுவித்தது கடவுளேயானால் கடவுளைத் தோற்றுவித்தது யார்? கடவுளுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளங்காததால் அல்லது புறக்கணிப்பதால் எழும் வினாவே இதுவாகும்.

பேரண்டமும் இதிலுள்ள உயிருள்ளதும் இல்லாதது மான பொருட்கள் யாவும் சில அடிப்படைத் துகள்களால் உருவானவைகளே என்பது நமக்குத் தெரியும். அவ்வாறு உருவாகியுள்ள பொருட்களின் இயற்பியல் குணங்கள் பேரண்டத்தில் நிலவும் விதிகளுக்கு உட்பட்டவை யாகும் என்பதும் நமக்குத் தெரியும். மேலும் இப்பேரண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் இப்பேரண்டத்தின் விதிகளால் ஆளப்படுகின்றன என்பதும் அந்த விதியின் ஆளுகையி லிருந்து அவைகளால் தப்பிச் செல்ல முடியாது என்பதும் நமக்குத் தெரியும். இந்த விளக்கத்திலிருந்து பேரண்டமும் அதிலுள்ளவை யாவும் இப்பேரண்டத்தில் நிலை நிற்கும் விதிகளுக்கு அடிமைப்பட்டவை என்பது ஐயமறத் தெரிய வருகிறது.

எப்பொருளின் தோற்றமும் முடிவும் அதற்கிடைப்பட்ட காலத்தில் அதனுடைய வாழ்க்கையும் மீறமுடியாத விதி களுக்கு அடிமைப்பட்டுள்ளதோ அவை யாவும் படைப் பினங்களே என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை. ஆகவே இப்பொருட்களின் படைப்பாளன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதும் அப்படைப்பாளன் யார்? என்ற கேள்வியும் அர்த்தமுள்ளதாகும். ஆனால் படைப்பாளனுக்கும் கூட மற்றொரு படைப்பாளனைக் கற்பளை செய்யும் அறியாமையிலிருந்து எழும் படைப்பாளனின் படைப்பாளன் யார்? என்ற கேள்வி மிகவும் அர்த்தமற்ற கேள்வியாகும்.

படைப்பாளனின் நிலை பப்பினங்களின் நிலையி லிருந்து ஒப்பிட முடியாத அளவிற்கு வேறு பட்டதும் உயர் நிலைத் தகுதி உடையதுமாகும். இதன் காரணமாக அவன் படைக்கும் ஆற்றலைக் கொண்டவனாகவும் அவனன்றி வேறு யாருமே எதையும் படைக்க இயலாதவர்களாகவும் இருக்கிறார் கள். (மனிதர்கள் நிறையவே படைத்துக் கொண்டிருந்தாலும் அப்படைப்பினங்களின் மிக இன்றியமை யாத மூலப் பொருட்களை (சயற அயவநசயைடள) அவர்கள் படைப்பதில்லை என்பதைக் கருத்தில் கொள்க) படைப்பினங்களிலிருந்து இவ்வாறு வேறுபட்டு இருப்பதாலேயே அவன் படைப்பினங் களாலும் எட்டிப்பிடிக்க முடியாத சிறப்பியல்பில் நிலை கொள்கிறான். அவனுடைய மாட்சிமை பொருந்திய ``திரு உடல் படைப்பினங்களின் உடலைப் போன்று பேரண்டத் தில் உள்ள ஏதேனும் அடிப்படைத் துகள்களிலிருந்து தோன்றி யது இல்லை. ஏனெனில் பேரண்டத்தைத் தோற்றுவித்த பெருவெடிப்புக்கும் முன்னிருந்தே அவன் இருக்கிறான்.

படைப்பாளனாகிய இறைவன் எப்போதும் உள்ளவனா வான். அவனுக்கு தோற்றமோ முடிவோ இல்லை. அவனே அனைத்திற்கும் தோற்றுவாயாகவும் அவைகளின் வாரிசாகவும் இருக்கின்றான். மேலும் பேரண்டத்தில் செயல்படும் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்கும் படைப்பினங்களைப் போலன்றி அந்த விதிகளுக்கே தோற்றுவாயாகவும் அவைகளை ஆள்பவனாகவும் இருக்கிறான். ஆகவே எந்தெந்த காரணங்களால் படைப்பாளன் இல்லாமல் படைப்பினங்கள் தோன்ற முடியாதோ அவ்வகை காரணங்கள் அனைத்திலிருந்தும் அப்பாற்பட்டவனாகவும் தூய்மையான வனாகவும் இருக்கின்றான். எனவே படைப்பாளன் ஒரு போதும் படைக்கப்பட்டவனாக இருத்தல் இயலாத தாகும். இதையே வேறு வார்த்தையில் கூறினால் படைக்கப்பட்டவை எதுவும் படைப்பாளனாக முடியாது என்பதாகும்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து படைப்பினங்களைப் பற்றி கேட்பதைப் போல் படைப்பாளனின் படைப்பாளன் யார்? என்று கேட்பது முழு அபத்தமாகும் என்பதை எளிதாக விளங்கலாம்.

நாத்திக வாதத்தின் கணிதப் பிழை

படைப்பாளனைத் தோற்றுவிக்க மற்றொரு படைப் பாளன் தேவை என்ற வாதம் பிழையானதும் நகைப்பிற்குரிய தாகும் என்பதை மேலும் நுட்பமாக கீழ்க்கண்டவாறு விளங்கலாம்.

பேரண்டத்தைப் படைத்த படைப்பாளன் தோன்ற வேண்டுமானால் அவனைத் தோற்றுவிக்க மற்றொரு படைப்பாளன் தேவையென்று கூறினால் அந்த இரண்டாவது படைப்பாளனுடன் பிரச்சனை தீரப் போவதில்லை. அந்த வாதம் இரண்டாவது படைப்பாளனைத் தோற்றுவித்த மூன்றாவது படைப்பாளன் தேவையென்றும் அந்த மூன்றா வது படைப்பாளனைத் தோற்றுவித்த நான்காவது படைப்பாளன் தேவையென்றும் வாதிடத் தொடங்கி முடிவற்ற (கேவைந) படைப்பாளர்கள் தோன்ற வேண்டிய நிர்பந்தத்தை அந்த வாதம் ஏற்படுத்தும். வேறு வார்த்தையில் கூறினால் இப்பேரண்டம் தோன்ற வேண்டுமானால் அதற்கு முன் முடிவற்ற படைப்பாளர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும். ஆனால் முடிவற்ற நிகழ்ச்சிக்கு முடிவு என்பதே இல்லையென்பதால் படைப்பாளர்கள் தோற்றுவிக்கப்படும் நிகழ்ச்சி இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். நாளையும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். நாலாயிரம் கோடானு கோடி வருடங்களுக்குப் பிறகும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு விதத்தில்!

ஆம்! படைப்பாளனால் தோற்றுவிக்கப்பட வேண்டிய பேரண்டம் இப்போது தோன்றி விட்டது! இது ஒரு மறுக்க முடியாத சத்தியமாகும். படைப்பாளர்களின் தோற்றத்திற்கே முடிவில்லையென்றால் அதன் பிறகு தோன்றி இருக்க வேண்டிய பேரண்டம் இப்போதே எவ்வாறு தோன்றி இருக்க முடியும்? எனவே ``யாவையும் தோன்றுவித்தது கடவுளே என்றால் கடவுளைத் தோற்றுவித்தது யார்? எனும் கேள்வி ஒரு கணிதப் பிழையிலிருந்து உருவானதாகும். பேரண்டத் தைத் தோற்றுவித்தது கடவுள் என்றால் அந்தக் கடவுளைத் தோற்றுவிப்பதற்கும் ஒருவர் வேண்டும் எனும் வாதமும் கணித முறைப்படி பிழையான வாதமாகும்.

இரட்டை வேடம்

கடவுளின் தோற்றுவாய் பற்றி கேள்வி எழுப்புவது அபத்தமாகும் என்பதற்கு மற்றும் ஓர் காரணத்தைக் காண்போம். கடவுளின் இறைமை குணங்களில் `நிரந்தரன் (ஆதி அந்தம் இல்லாமல் என்றும் உள்ளவன்) என்பதும் ஒன்றாகும். நிரந்தரனான (நுவநசயேட) கடவுளை யாரேனும் தோற்றுவித்து இருப்பின் கடவுளுக்கு தோற்றம் (தோற்ற மெடுத்த நாள்) உண்டு எனப் பொருளாகி விடும். தோற்றம் உண்டென்றால் தோற்றமெடுத்த நாளுக்கு முன் கடவுள் இல்லை எனப் பொருளாகி விடும். கடவுள் என்றாலே `நிரந்திரன் (என்றும் உள்ளவன்) என்றிருக்கையில் அக் கடவுளைத் தோற்றுவித்தவர் யார் என்ற கேள்வி அபத்தமோ அபத்தமாகும்.

இங்கு நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு செய்தி நாத்திகத்திற்கு கடவுளைப் பற்றி பேசும் போது மட்டுமே இது போன்ற அபத்தங்கள் ஏற்படுகின்றன என்பதும் மற்றவை களைப் பற்றிப் பேசும் போது இப்படிப்பட்ட அபத்தங்கள் ஏற்படுவதில்லை என்பதுமாகும். சான்றாக நாத்திகர்கள் பேரண்டம் நிலையானது; என்றும் உள்ளது என்ற எண்ணத்தில் இருந்தவர்கள். எனவே பேரண்டம் எப்படித் தோன்றியது? என்று ஆத்திகர்கள் வினவினால்``பேரண்டம் யாராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை; ஏனெனில் அது என்றும் உள்ளது என பதில்கூறுவார்கள். ஆனால் என்றும் உள்ளவனான கடவுளைப் பற்றி கூறும் போது மட்டும்``கடவுள் மட்டும் எப்படி தோற்று விக்கப்படாமல் தோன்ற முடியும்? முடியவே முடியாது! என அடம் பிடிப்பார்கள்.

நமது அன்றாடக் காட்சி வழக்கில் ஒவ்வொரு நாளும் புதியன தோன்றி பழையன அழிந்து கொண்டிருக்கும் பொருட் குவியலால் தோன்றிய இப்பேரண்டம் தோற்றமோ முடிவோ இல்லாதது எனக் கூறி கடவுளைப் புறக்கணிப்பது அபாரமான அசட்டுத் துணிச்சலே என்றால் மிகையாகாது. இவ்வளவு நாளும் பேரண்டத்திற்கு ஒரு தொடக்கம் இருந்துள்ளது என்பதை அறிவியலால் நிரூபிக்க இயலாது போனதால் பேரண்டத்திற்கு கடவுள் இல்லை என அறிவியலின் பெயரால் பறை சாற்றிக் கொண்டிருந்த நாத்திகம் ஆத்திகர்களின் ஒழுக்க நெறியிலிருந்து (ஆடிசயடவைல) சமுக நெறிமுறை மற்றும் சம்பிரதாயங்கள் (நுவாஉள யனே சுவைரயடள) வரை யாவையும் கேலி செய்து கொண்டிருந்தது. ஆயினும் அக்கேலிச் சொற்கள் யாவையும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பெருவெடிப்புக் கொள்கை பூமராங் (க்ஷடிடிஅநசயபே) ஆக மாற்றி விட்டது. அறிவியலே தங்கள் மதம் என்று கூறிக் கொண்டிருந்த இவர்கள் இதற்கு மேல் கடவுட் கோட்பாட்டைத் தாக்க எந்த ஆயுதத்தைத் தேடப் போகிறார்கள்?

மானிடனின் விளங்கு திறன்

கடவுளை ஏற்பதில் நாத்திக சித்தாந்தத்திடம் இரண்டு பெரும் பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றுள் முதலாவது பொய்யான குட்டிக் குட்டிக் கற்பனை தெய்வங் களைப் போலன்றி மெய்யான ஏக இறைவன் என்பது எந்த நபராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடிகாத அளவு அறிவும் ஆற்றலும் பொருந்திய ஒருவனாவான். இப்படிப்பட்ட ஒருவன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்? இப்படிப்பட்ட எந்த ஒன்றும் எந்த ஒருவரும் எங்குமே இருப்பதாக யாரும் பார்க்கவோ, கேள்விப்படவோ செய்யாத போது அதிலிருந்து விதிவிலக்காக கடவுள் மட்டும் அப்படிப்பட்ட அறிவோடும் ஆற்றலோடும் என்றென்றும் இருக்கிறார் எனச் சிலர் கூறு வதை மானிட அறிவால் புரிந்து கொள்ள முடியவில்லையே?

அறிவால் புரிந்து கொள்ள இயலாததை ஏற்பது முட்டாள்தனமாகும் என்பன போன்ற எண்ணங்கள் கடவுளை ஏற்பதில் நாத்திகத்தின் முதலாவது முட்டுக்கட்டையாகத் தெரிகிறது.

மானிட அறிவால் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒன்றுமே எங்கும் இருக்க முடியாது என்ற தப்பெண்ணமே இந்த முட்டுக்கட்டைக்குக் காரணமாகும். மனிதனுடைய சிந்தனையும், அவனுடைய கற்பனையும் ஒரு எல்லைக்குட் பட்டதே அன்றி அந்த எல்லைக்கப்பால் உள்ளதைப் பற்றி சிந்திக்கவோ, கற்பனை செய்து பார்க்கவோ முடியாது என்பதை அறிவியலாளர்கள் பல உதாரணங்களால் எளிதாக விளங்கச் செய்கிறார்கள். ஒரு கிலோ மீட்டர் தூரம் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்கிறோம்; கற்பனையும் செய்கிறோம். ஆனால் ஒரு கோடி கிலோ மீட்டர் என்பதை எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை ஒரு போதும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. இதைப் போல பத்து அங்குல நீளமும், ஒரு அங்குல பருமனும் உள்ள மரக்கட்டையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். பருமனே இல்லாத பத்து அங்குல கட்டையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை.

அறிவியலாளர்கள் தரும் மேற்கண்ட உதாரணங்களி லிருந்து நமது சிந்தனைக்கும் விளங்கிக் கொள்ளும் ஆற்றலுக்கும் எல்லை உண்டென்பதை நன்கு விளங்கு கிறோம். நாம் பெற்றுள்ள விளங்கு திறன் (ருனேநசளவயனேபே யடைவைல) எல்லைக்குட்பட்டதாகும் என்பதையும் சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.

ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம்

வார்னர் ஹைசன் பர்க் (றுயசநேச ழநளைந க்ஷநசப) எனும் அறிவியலாளர் 1926ல் ஒரு புரட்சிகரமான கோட்பாட்டை உருவாக்கினார். அநிச்சய தத்துவம் (ருஉநசவயவைல ஞசஉயீடந) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணு (நுடநஉவசடி) எனும் மிகமிக சூட்சுமமான துகள்கள் அணுவின் மையக் கருவைச் சுற்றி ஒளியின் வேகத்தில் சுழல்கின்றன. அத்துகள்களின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வேகமும் அந்த நேரத்தில் சுற்றுப் பாதையில் அது இருக்கும் இடத்தை யும் அளக்க முயலும் போது ஏற்படும் விளைவிலிருந்து அறிவியலாளர் ஹைசன் பர்க் இக்கோட்பாட்டை உருவாக்கி யுள்ளார். அணுவில் நடத்தப்பட்ட அந்த சோதனையை அறிவியலாளர் ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

``ஒரு துகளின் எதிர்கால இடம் மற்றும் அதன் வேகம் ஆகியவைகளை ஒருவர் முன்னறிவிக்க வேண்டுமென்றால் அந்த நபரால் அந்தத் துகள்களின் தற்போதைய இடமும்,வேகமும் நுண்மையாக அளக்க இயல வேண்டும். இதைத் தெளிவாகச் செய்வதற்குரிய ஒரே வழி இப்பொருளின் மீது ஒளியைப் பாய்ச்சி பிராகாசிக்கச் செய்வதாகும். ஒளிக் கதிர்களில் சிலவற்றை அத்துகள் சிதறடித்து அது இருக்கும் இடத்தை அது அடையாளங்காட்டும். இருந்த போதிலும் ஒளிக் கதிர்களின் அலை முகடுகளுக்கு (றுயஎந ஊசநளவள) இடையிலுள்ள தூரத்தை விட நுண்மையாக அத்துகள் இருக்கும் இடத்தை ஒருவரால் அளக்க இயலாது. ஆகவே ஒரு துகளின் இருப்பிடத்தை நுண்மையாக ஒருவர் அளப்பதற்கு குறுகிய அளைநீளம் கொண்ட ஒளி அலைகள் தேவையாகிறது. இப்போது ப்ளாங்கின் குவாண்டம் கருது கோளின் படி (ணுரயவேரஅ ழலயீடிவாநளளை) ஒருவர் அவருக்குத் தோன்றியபடி குறைந்த அளவு ஒளியைப் பயன்படுத்த முடியாது. அவர் குறைந்த பட்சம் ஒரு குவாண்டம் ஒளியைப் பயன்படுத்த வேண்டும் . இந்த குவாண்டம் அத்துகளைத் தொல்லைப்படுத்தி அதன் வேகத்தை அனுமானிக்க முடியாத படி மாற்றி விடுகிறது. அதுவும் தவிர துகளின் இருப்பிடத்தை மேலும் நுண்மையாக அளப்பதற்காக ஒருவர் மேலும் குறுகிய அலைநீளம் கொண்ட ஒளியைப் பயன்படுத்தும் போது அது தனி குவாண்டத்தின் ஆற்றலை அதிகமாக்கும். இதன் விளைவாகத் துகளின் வேகம் அதிக அளவு பாதிக்கப்படும். இதையே வேறு வார்த்தையில் ``துகளின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக நீங்கள் அளக்க முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே துகளின் வேகத்தை உங்களால் அளக்க முடியும் எனக் கூறலாம். (பக்கம் :58-59)

துகளின் இருப்பிடத்தை அளக்க முயன்றால்அதே நேரத்தில் அத்துகளின் வேகத்தை துல்லியமாக அளந்தறிய முடியாது. எனவே இச்சோதனையிலிருந்து ஹைசன் பர்க் அவர்கள் மனிதனின் அறியும் ஆற்றலுக்கு மிக நிச்சயமாக ஒரு எல்லை உண்டு என்பதை நிரூபித்தார்.

லாப்லாசின் கொள்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி

மனிதனின் புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு என அறிவியல் வாயிலாக நிரூபித்த வெர்னர் ஹைசன் பர்க் அவர்களின் அநிச்சய தத்துவத்தின் கண்டுபிடிப்பு உண்மையிலேயே புரட்சிகரமான தத்துவமாக அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆயினும் பிரான்சு தேசத்து அறிவியலாளர் எம்.டி. லாப்லா (ஆயசளூரளை னந டுயயீடயஉந) என்பவரின் அதுவரை புகழ்வாய்ந்த கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த அறிவியல் தீர்மானக் கோட்பாட்டால் (ளுஉநைவேகைஉ னநவநசஅளைஅ) கவரப்பட்ட சிலர் அநிச்சய தத்துவத்தில் வெறுப்புடனேயே எதிர்கொண்டனர். லாப்லாசின் கோட்பாடு இப்பேரண்டத்தை முற்றிலுமாக தீர்மானிக்கின்ற (விவரிக்கின்ற) விதிகள் இருக்கின்றன என்றும் அந்த விதிகளை நாம் நெருங்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறியது. எனவே இக்கோட்பாடு டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு போன்று இறைமறுப்பாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் பேரண்டம் என்பது முற்றிலுமாக நம்மால் விளங்கிக் கொள்ளக் கூடிய விதிகளால் உருவாகியுள்ளது. எனவே இதைப் படைப்பதற்கு இயற்கையை மீறிய மற்றொரு சக்தி தேவையில்லை என வாதிட்டனர். இந்த வாதத்தைத் தகர்த்து எறிகிறது ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம். இதைப் பற்றி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

``நாம் பேரண்டத்தைப் பார்க்கின்ற விதத்திலேயே அநிச்சய தத்துவத்திற்கு ஆழமான சம்பந்தங்கள் (தாக்கங்கள்) உண்டு. இப்போது 50 வருடங்கள் கழிந்த பிறகும் கூட அவை பல தத்துவ ஞானிகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் கூட இது பெரும் விவாதத்திற்குக் கருப்பொருளாகவே இருக்கிறது. பேரண்டத்தின் தற்போதைய நிலையை ஒருவரால் சரியாக அளக்க முடியாவிடில் எதிர்காலத்தில் பேரண்டத்தில் நிகழப் போவதையும் அவரால் துல்லியமாகக் கூற முடியாது எனக் கூறும் அநிச்சய தத்துவம் அறிவியல் விதிகளால் முற்றிலும் தீர்மானிக்கப்பட்ட பேரண்டமாதிரி எனும் லாப்லாசின் அறிவியல் கனவை முடிவுக்குக் கொண்டு வந்தது. நம்மால் இப்போதும் கூட தற்போதைய பேரண்டத்தைத் தெல்லைப் படுத்தாமல் அதைப் பார்த்தறியும் (டீளெநசஎந) இயற்கையை மீறிய ஒருவர் (ளுடிஅந ளரயீநச யேவரசயட நெபே) இருக்கிறார் என்றும் அவருக்கு அனைத்தையும் தீர்மானிக்கும் விதிகள் உண்டென்றும் கற்பனை செய்யலாம். இருப்பினும் அப்படிப்பட்ட பேரண்ட மாதிரியில் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அக்கறை (ஐவேநசநளவ) கொள்வதற்கு ஒன்றுமில்லை. (பார்க்க பக்கம் : 59)

நமது அறிவால் அறிய முடியாததும், இயற்கையை மீறிய அறிவின் அதிபதியால் மட்டும் செய்யப்படுவதுமாகிய பணியில் நாம் அக்கறை காட்டுவதால் எவ்விதப் பயன்பாடும் இல்லை என வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டில் மேலும் முக்கியமான இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

முதலாவது செய்தி பேரண்டத்தைப் புரிந்து கொள்ள நாம் செய்யும் முயற்சிகளே பேரண்டத்தின் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி அதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள இயலாத நிலையை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது. இதன் விளைவாக அநிச்சய தத்துவம் அனுமதிக்கும் எல்லைக்கப் பால் பேரண்டத்தைப் புரிந்து கொள்ள நாம் தீவிரமாக முயற்சி செய்தால் நம்மால் பேரண்டத்தைப் புரிந்து கொள்ள இயலாத நிலையும் தீவிரமடையும்.

எனவே பேரண்டத்தைப் புரிந்து கொள்வதில் நமக்கு மிகுதியான தவறுகள் ஏற்படுவதால் பேரண்டத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் செய்கின்ற தீவிர முயற்சிகளும் தோல்வி கண்டு பேரண்டத்தை அதன் யதார்த்த நிலையில் முற்றிலும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நமது எண்ணம் (அல்லது லாப்லாசின் அறிவியல் தீர்மானக் கனவு) ஒருகாலும் நிறைவேற வாய்ப்பில்லாமல் போகிறது.

இரண்டாவதாக ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம் நாம் வசித்துக் கொண்டிருக்கும் இப்பேரண்டம் நம்மால் முற்றிலும் விளங்கிக் கொள்ள முடிகின்ற விதிகளால் நிர்ணயிக்கப்பட்டதே எனும் லாப்லாசின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததில் பிரபஞ்சம் சாரா ஒருவனின் (பிரபஞ்சாதிதமானவன் - ளுரயீநச யேவரசயட நெபே) தலையீடு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே கால இடத்தின் எல்லை அற்ற அடர்த்தி மற்றும் வளைவில் (ஐகேவைந னநளேவைல யனே ஊரசஎயவரசந டிக ளுயீயஉந-கூஅந) சிங்குலாரிட்டிக்குப்பதில் அநிச்சய தத்துவத்தின் செயற்பாடே நடைபெறுவதாக இருந்தாலும் கூட பேரண்டப் படைப்பில் கடவுளின் தேவை தவிர்க்க முடியாதது ஆகும் என்பதும் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து தெரிய வருகிறது. இருப்பினும் அநிச்சய தத்துவம் மெய்யான அறிவியல் கோட்பாடாக ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரு சிலர் கடவுள் பிரச்சனை வரும்போது அத்தத்துவத்திற்கு எதிராகச் சிந்தித்துக் கடவுளை மறுக்கும் போக்கைக் கடைபிடிக்கின்றனர் என்பது அபத்தமும் நகைப்பிற்குரிய முரண்பாடும் (ஞசயனடிஒ) ஆகும்.

அபத்தமோ அபத்தம்

நமது உள்ளங்கைகளால் அள்ளக் கூடியதும் நமது ஆய்வுக் கூடங்களில் சோதிக்கப்படக் கூடியதுமாகிய அற்பப் பொருளாம் அணுவின் இயற்பியலைக் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் அந்த அணுவையே படைத்தவனும் உள்ளங்கைகளால் மட்டுமன்றி ஐம்புலன் களால் கூட உணர்ந்து பார்க்க முடியாதவனுமாகிய இறை வனின் இயற்பியல் - படைக்கப்படுதலுக்கு உட்படாம லிருக்கும் அவனது இயற்பியல் - தனக்கு விளங்கியே ஆக வேண்டுமென அடம் பிடிப்பது அறிவுடமையாகுமா?

கடவுளின் உள்ளமை முழுமையாக எனக்கு விளங்காத வரை (யாராலும் படைக்கப்படாமல் எப்படித் தோன்றினான்) அப்படி ஒரு கடவுள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாதவரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதன்றோ?

மனித உடல் செல்களால் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதையும் அந்தச் செல்கள் பற்பல விதமான அணுக்களால் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதையும் நாம் அறிவோம். எனவே மனித உடலும் கூட அணுக்களால் தோற்றுவிக்கப் பட்டவை யாகும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மனிதனுடைய சொந்த உடலை உருவாக்கிய பொருளைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக அவன் படைக்கப்பட்டுள்ளதை அறிவியல் அவனுக்கு நிரூபித்துக் காட்டிய பிறகும் அவனைப் படைத்தவ னாக ஒருவன் இருக்க வேண்டுமானால் அப்படைப்பாளனின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பதை அவனால் முழுமையாக விளங்கிக் கொள்ளும் விதத்திலேயே இருக்க வேண்டுமென வாதிடுவது அபத்தத்திலும் அபத்தமன்றோ!

அற்பப் பொருளாம் அணுவைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக மனிதனைப் படைத்த இறைவன் மனிதனைப் படைத்த தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் ஆற்றலுடன் மனிதனைப் படைத்திருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதை விட பேதமை வேறு என்ன இருக்க முடியும்?

பிரதான செய்திகள்

இத்தலைப்பில் நாம் இதுவரை விவாதித்தவைகளி லிருந்து மிக முக்கியமான 4செய்திகளை ஐயமற விளங்கிக் கொண்டோம். அவற்றுள் முதலாவது பேரண்டம் முழுவதும் அறிவியல் விதிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்பதும் ஆளும் விதிகளுக்கு பேரண்டம் அடிமைப் பட்டிருப்பதால் அது ஒரு படைப்பினமே அன்றி வேறில்லை என்பதாகும்.

இரண்டாவதாக இயற்கை என்பது பொருட்கள் அனைத் திற்குமுள்ள இயற்பியல் குணங்கள் யாவையும் உள்ளடக்கிய பெயராகும். எனவே பொருட்கள் எதுவும் இல்லையேல் இயற்கையும் இல்லை. இதிலிருந்து பேரண்டம் தோன்றுவ தற்கு முன் எதுவும் இருக்கவில்லையென பெருவெடிப்புக் கோட்பாடு கூறுவதால் பேரண்டம் தோன்றுவதற்கு முன் இயற்கை என்ற ஒன்று இருந்தது என்றும் பேரண்டத்தைத் தோற்றுவித்தது இயற்கையே என்ற வாதமும் பிழையானது; மேலும் அது பெருவெடிப்புக் கோட்பாட்டால் முறியடிக்கப் பட்டு விட்டது.

மூன்றாவதாக பெருவெடிப்புக்கு முன் ஏதாவது இருந்ததாக வைத்துக் கொண்டால் கூட அதற்கும் பெரு வெடிப்பிற்கும் இடையில் எத்தொடர்பும் இருக்க முடியாது என பெருவெடிப்புக் கோட்பாடு கூறுவதால் (பக்கம் - 50, எ ப்ரீஃப் ஹிடரி ஆஃப் டைம்) பேரண்டத்தைத் தோற்றுவித்தது இயற்கையே என்ற வாதம் எவ்வகையிலும் செல்லத்தக்க தில்லை என்பது.

நான்காவதாக மனிதன் விளங்குதிறனுக்கு ஒரு எல்லை உண்டு என்றும் அதற்கப்பால் உள்ளதை நம்மால் விளங்க முடியாது என்பதையும் ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம் நிரூபித்துள்ளது. ஆகவே கடவுளின் `நிரந்தரன் (நுவநசயேட - தொடக்கமோ, முடிவோ இன்றி என்றென்றும் நிலைத் திருத்தல்) எனும் இயல்பு எவ்வாறு என நமக்கு விளங்க வில்லை என்பதற்காக இறைவளைன ஏற்க மறுப்பது அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரானதாகும். இவைகளை இந்த அத்தியாயத்தில் இது வரை நாம் விவாதித்தவை களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொண்டோம்.

மேற்கண்ட காரணங்களைத் தவிர கடவுளை ஏற்க வேண்டிய மற்றொரு இன்றியமையாத காரணத்தை முதல் இரண்டு அத்தியாயங்களில் நாம் கண்டுள்ளோம். நம்மால் புரிந்து கொள்ளப்படுகின்ற அறிவியல் விதிகளால் ஆளப்படுகின்ற இப்பேரண்டத்தைத் தோற்றுவித்த பெருவெடிப்பே கூட எவ்வாறு நிகழ்ந்தது என்பது இப்போது மட்டுமின்றி இனி எப்போதுமே நம்மால் தெரிந்து கொள்ள முடியாது என அறிவியல் வலியுறுத்தியும் கூட பெருவெடிப்பு நிகழ்ந்ததை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் நாம் அறிந்த அறிவியல் விதிகள் ஒன்றுக்குக் கூட கட்டுப்படாத வனும் அதற்கு மாறாக அவ்விதிகளையே தோன்றுவித்து நிர்வகிப்பவனுமாகிய இறைவனை நம்ப வேண்டுமானால் மட்டும் இறைவனுடைய உள்ளமையின் (நுஒளைவநஉந) அறிவியல் தமக்கு விளங்க வேண்டுமென வாதிடுவது சமானமில்லாத ஈடு இணையற்ற பேதமையாகும் என்பதை யும் ஐயமறக் கண்டு விட்டோம்.

அத்தியாயம் 9

மனிதனின் சுயரூபம்

சென்ற அத்தியாயத்தில் நாம் விவாதித்தது பேரண்டம் படைக்கப்பட்டதா? அல்லது தாமாகத் தோன்றியதா? என்பதைப் பற்றியதாகும். பேரண்டம் படைக்கப்பட்டதே என்றும் நாம் அந்த அத்தியாயத்தில் ஐயமறக் காண்டோம். பேரண்டம் தாமாகத் தோன்றியதாக இருந்திருப்பின் பேரண்டம் ஏன் தோன்றியது? என்பதை நாம் கண்டுபிடிப்பது அரிதாகும். ஏனெனில் இந்த ஆய்வில் தத்துவ ஞானிகள் மற்றும் அறிவியலாளர்கள் எனப் பலரும் ஈடுபட்டு ஆளுக் கொரு காரணத்தைக் கூறி அவற்றுள் எந்தக் காரணம் சரி என்று விளங்கிக் கொள்ள இயலாத சூழலை ஏற்படுத்தி விடும்.

சான்றாக ஒரு மோட்டார் கார் தாமாகவே உலகில் தோன்றி அதில் சிலர் பயணம் செய்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பாக்க நேரிட்டாலும் அந்த மோட்டார் கார் எதற்காகத் தோன்றியது என்பதை அப்போதும் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. அதே நேரத்தில் அந்த மோட்டார் கார் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்டிருந்தால் அக்கார் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை முற்றிலும் தவறில்லாமல் அக்காரை உருவாக்கிய நபரால் கூற முடியும். ஆயினும் மோட்டார் கார் என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது? என்பதை அறிவியலால் பிழையின்றி பதில் கூற முடிவதைப் போன்று மோட்டார் கார் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? எனும் வினாவிற்கு அறிவியலால் பதில் கூற முடியாது. எனவே பேரண்டம் என்பது இறைவனால் உருவாக்கப் பட்டது என்பதை ஐயமற விளங்கிக் கொண்ட நாம் பேரண்டம் என்பது என்ன? அது எவ்வாறு இயங்குகிறது?என்பதை அறிவியலிருந்து விளங்கிக் கொண்ட போதிலும் அது ஏன் தோற்றுவிக்கப்பட்டது எனும் வினாவை அதைப் படைத்த இறைவனைக் கேட்பதைத் தவிர வேறு வழியின்றி இருக்கிறோம்.

வானமும் பூமியும் மனிதனுக்காக

இறைவன் ஒருவனைத் தவிர இதற்கு பதில் சொல்லக் கூடிய தகுதி வேறு யாருக்கும் இல்லை என்ற நம்பிக்கையில் இறைவனின் நூலாகிய திருக்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் இதைக் குறித்து ஆணித்தரமாகப் பதிலளிக் கின்ற பற்பல வசனங்களை அதில் காண்கிறோம். சான்றாக சில வசனங்கள் வருமாறு :

``அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (சீரமைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான்.

(2:29)

``வானங்களில் உள்ளதையும் பூமியில் உள்ளதையும் உங்களுக்கு அல்லாஹ் வசப்படச் செய்ததையும் தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் விசாலமாக்கி இருப்பதையும் நீங்கள் காணவில்லையா?...

(31:20)

``வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தை யும் அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இதில் சிந்திக்கும் சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.

(45:13)

மேற்கண்ட திருமறை வசனங்கள் இப்பேரண்டம் மொத்தமும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டுள்ளதாக ஐயத்திற்கிடமின்றி கூறிவிட்டது. ஆயினும் வாசகர்கள் பலருக்கும் இந்த அறிவிப்பு அவ்வளவு எளிதாக - ஓர் ஆப்பிள் பழம் ஜீரணமாவதைப் போன்று ஜீரணமாகாது என்பது தெரிந்ததே. ஆப்பிள் பழம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது எனக் கூறினால் அதை எளிதாக விளங்க முடிகிறது. ஆயினும் துருவ நட்சத்திரம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது எனக் கூறினால் கடற்பயணம் பற்றிப் போதிய அறிவில்லாதவர் களால் அதை விளங்கிக் கொள்ள முடியாது.

இறைவனுக்கு இழப்பு இல்லை

பேரண்டம் படைக்கப்பட்டது மனிதனுக்காகவே என்பது எவ்வகையில் சரி என விளங்காமல் போனதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதலாவது காரணம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளங்காமற் போனதாகும்.

இறைவனுக்கு தாம் படைத்த யாவும் அடிமைகளாக இருந்த போதிலும் மனிதனை மட்டும் மிக அழகிய கோலத்தில் (நௌவ ளவயவரசந) படைத்ததை திருமறை (95:4) யில் காணலாம். எனவே மனிதனின் மீது இறைவனுக்கு விசேஷ கவனம் உண்டு என்பது தெளிவாகிறது. இருப்பினும் இப்பேரண்டம் என்பது அளவிடற்கரிய மாபெரும் ஆற்றலின் வெளிப்பாடாக இருப்பதால் பொதுவாக மானிட உள்ளங் களில் ஓர் ஐயம் ஏற்படலாம். யாரேனும் ஒருவர் தன்னுடைய வெறும் அடிமைகளின் பயன்பாட்டிற்காக இவ்வளவு பெரிய ஆற்றலைச் செலவிடுவார்களோ என்பதே அந்த ஐயமாகும். இறைவன் என்ற படைப்பாளனை மனிதன் என்ற படைப்பினத்தோடு ஒப்பிட்டதே இந்த ஐயத்திற்குரிய முதற் காரணமாகும்.

மனிதன் செலவு செய்யும் எதையும் அவன் இழந்து விடுகிறான். ஆனால் இறைவனின் கஜானாவில் எதுவுமே குறைவதில்லை. ஆற்றல் யாவும் இறைவனுக்கே சொந்தம். நம்மால் அதை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது என்பதை விளக்கும் ஐன்டீனுடைய``ஆற்றலின் அழிவின்மை விதி கூறுகிறது. அனைத்திற்கும் அவனே வாரிசாக இருப்பதால் அவன் செலவிட்ட ஆற்றல் யாவும் முடிவாக அவனிடமே திரும்புகிறது. எனவே `இழப்பு என்பதே இல்லாத பாக்கியம் நிறைந்தவனே இறைவனாவான்.

ஒருவர் என்ன செலவு செய்தாலும் அவருடைய கஜானாவிலிருந்து எதுவும் குறைவதில்லை எனில் அவருக்கு செலவு செய்வதில் தயக்கம் இருக்காது. எனவே மானிடனின் பயன்பாட்டிற்காக இறைவன் இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்தான் என்று கூறினால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லை.

மானிடனின் மீதுள்ள இறைவனின் பரிவு

இதைத் தொடர்ந்து மக்கள் மனதில் ஏற்படும் இரண்டாவது ஐயம் யாதெனில் இறைவன் தன்னுடைய ஆற்றலிலிருந்து என்ன தான் செலவிட்டாலும் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்படுவதில்லை என்பது உண்மையே. ஆயினும் மனிதனுக்காக இவ்வளவு பெரிய ஆற்றலைச் செலவிடும் அளவிற்கு மனிதர்களின் மீது இறைவன் பரிவு கொண்டவனாக இருக்க முடியுமா? என்பதே அந்த ஐயமாகும். இந்த ஐயத்தைப் போக்கும் வசனங்களும் திருக்குர்ஆனில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சில வருமாறு :

``.... எனது அருள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது...

(7:156)

``நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோனுமாவான்.

(2:143)

``..... அருள் புரிவதை அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்...

(6:12)

மேற்கண்ட திருமறை வசனங்கள் இறைவன் தனது படைப்பினங்கள் மீது பொதுவாகக் கருணை உள்ளவன் என்பதையும், அதிலும் குறிப்பாக மனிதர்களின் மீது தனிப்பட்ட விதத்தில் பரிவும், கருணையும் கொண்டவன் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இறைவன் தனது படைப்பினங்களின் மீது காட்டும் அன்பின் ஆழத்தைப் பற்றி விளக்கம் அளிக்கும் போது ``அல்லாஹ் தனது அன்பை நூறு பாகங்களாகப் பிரித்து அவற்றுள் ஒன்றை மட்டும் பூமிக்கு இறக்கி தொண்ணூற்றொன்பது பங்கை தன்னிடமே வைத்துக் கொண்டான். அந்த ஒரு பங்கைக் கொண்டே பப்பினங்கள் தங்களுக்கு இடையில் அன்பு காட்டு கின்றனர். என இறைத்தூதர் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) கூறியுள்ளார்.

(நூல் : சஹீஹ் புகாரி, எண் : 6000, 6469)

மேற்கண்ட நபி மொழியிலிருந்து ஒரு குழந்தையின் மீது அதன் தாய் காட்டும் அன்பைக் காட்டிலும் நூறு மடங்கு அன்பு நம் மீது இறைவனுக்கு உண்டு எனத் தெரிய வருகிறது. பொதுவாகப் படைப்பினங்களின் மீதும், குறிப்பாக மனிதர்களின் மீதும் இவ்வளவு அபாரமான ஆழம் காண முடியாத அளவு அன்புடையவனே இறைவன் எனில் இப்பேரண்டம் மிகமிக பிரமாண்டமானதாக இருந்த போதிலும் இதை மனிதனுடைய பயன்பாட்டிற்காக இறைவன் படைத்திருப்பின் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே அன்றி அதிலும் எவ்வித முரண்பாடும் காண்பதற்கில்லை.

மனிதன் ஒரு சமூக விலங்கு?

பேரண்டம் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டது எந்த வகையில் சரி என விளங்காமற் போனதற்கு மூன்றாவது காரணம் இம்மாபெரும் பேரண்டம் எந்த வகையில் மனிதனுக்குத் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிய அறியாமையாகும். இந்த அறியாமை நீங்க வேண்டுமாயின் மனிதன் யார்? என்பதை முதலில் மனிதர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மானிடனின் தோற்றத்திற்கு இம்மாபெரும் பேரண்டம் தேவையற்றது என்பதே அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் கருத்தாகும். இது எந்த அளவுக்குச் சரி என்பதற்கு எதிர்கால அறிவியல் உலகம் பதிலளிக்கட்டும். ஆயினும் மானிடனின் தோற்றத்திற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை யாயினும் அவன் தன்னுடைய வாழ்வின் குறிக்கோளை அடைய இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையாகும்!

கேட்டவுடன் சிலருக்காவது சிரிப்பை வரவழைக்கும் மேற்கண்ட பதிலைப் புரிந்து கொள்வதற்கு மனிதன் என்றால் யார்? என்பதைப் பிழையின்றி விளங்கிக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகும். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பெரும்பாலான கல்வியாளர்கள் கூட மனிதனுடைய தேவைகளைப் பற்றி பேசும் போது மனிதன் என்றால் யார்? என்பதைக் கருத்தில் கொள்ளமால் பேசுவதையே நம்மால் பார்க்க முடிகிறது.

உயிரியல் கலையில் உயிரினங்களை வகைப்படுத்தும் போது மனிதனை விலங்கினங்களின் பேரினத்திலுள்ள (ஹஅயட முபேனடிஅ) ஒரு சிற்றினமாக (ளுயீநஉநைள) சேர்க்கப் பட்டுள்ளது. மேலும் மனிதனுடைய வாழ்க்கை சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. எனவே மனிதன் ஒரு சமூக விலங்காகவே (ளுடிஉயைட ஹஅயட) அடையாளம் காணப்படுகிறான். மனிதனின் புறத் தோற்றமாகிய உடலமைப்பு மற்றும் வாழ்க்கை அமைப்பு ஆகியவைகளிலிருந்து மனித அமைப்பு மிகவும் வேறுபட்டதாகும். எனவே மிகச் சில சந்தர்ப்பங்களில் அவன் ஒரு சமூக விலங்கைப் போன்று காணப்படினும் அவனுடைய ஆன்மீக குணங்களில் (ளுயீசவைரயட ஊயசயஉவடிசள) அவன் எப்போதுமே தனித்தன்மை உடையவனாக காணப்படுகிறான்.

மானிடனின் தனிச்சிறப்பு

மனிதனைத் தவிர மொத்த விலங்கினங்களும் அவைகளின் இந்திரிய சுகங்களுக்காக (ளுநளேரடிரள ஞடநயளரசந) வாழும் போது மனிதர்கள் மட்டும் ஆத்ம சந்தோஷத்திற்கு அதிகமாக மதிப்பளிக்கிறார்கள். மனிதன் அவனுடைய படைப்பிலேயே பெற்ற கல்வித் திறனே அவனுக்கு இந்தக் குணத்தை ஏற்படுத்தியது. மனிதன் அவனுடைய ஆத்மாவைப் புரிந்து கொண்டு அதனுடைய மகிழ்ச்சிக்காக உழைப்பதனாலேயே அவன் ஏனைய உயிரினங்களிலிருந்து உயர் தகுதி பெற்றவனாகத் திகழ்கிறான். அவனுடைய இந்த உயர் தகுதியைப் பற்றி மெய்யான இறைவனின் கலப்பற்ற நூலாம் திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனைக் கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்! ஓதுவீராக! உமது இறைவன் பெரும் தயாள (குணமுடையவ)ன்! அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்! மனிதன் அறியாதவை களை (அவனுக்குக்) கற்றுத் தந்தான்!

(96:1-5)

அவன் (இறைவன்) மனிதனைப் படைத்தான். விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.

(55:3-4)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் ஏனைய உயிரினங்களிலிருந்து மனிதன் எவ்வாறு வேறுபடுகிறான் என்பதை அழகாக விளக்குகிறது. உலகில் இதுவரை அறியப்பட்டிருக்கும் முப்பது இலட்சம் உயிரின வகைகளில் வேறு எந்த ஒன்றுக்குமே வழங்கப்படாத சிறப்பம்சமே கற்கும் திறன் (புத்திமதி - ஐவேடடநஉவ) ஆகும். கல்வியை அவன் கலைக் கூடங்களிலிருந்தோ அல்லது வாழ்க்கை அனுபவங்களிலிருந்தோ பெற்றுக் கொள்கிறான். மனிதன் நினைவு திரும்பிய நாளிலிருந்து அந்த நினைவு நிலை நிற்கும் நாள் வரை கற்றுக் கொண்டே இருக்கிறான். ஏனெனில் கற்கும் திறன் அவனுடைய பிறவிக் குணமாகும். இறைவனால் அவனுக்கென்று தனிச் சிறப்பாக வழங்கப்பட்ட மாபெரும் கொடையாம் இந்தக் கற்கும் ஆற்றலைப் (புத்திமதி) பயன்படுத்துவதன் தரத்தைப் பொருத்தும் அதன் பிறகு கற்றபின் நிற்கும் தரத்தைப் பொருத்தும் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களிலிருந்து சிற்றில குணங்களில் வேறுபட்டு தனித்த மனிதர்களாக மாறுகின்றனர். மனிதர் களின் இந்த தனிச் சிறப்பான குணமாம் ``தனித்துவமே அவனை ஏனைய உயிரினங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்துகிறது.

மனிதன் ஒரு அடையாளச் சின்னம் இல்லை

சான்றாக ஒரு நாய் அந்த இனத்தைச் சார்ந்த அனைத்து நாய்களுக்கும் ஓர் எடுத்துக் காட்டும் அடையாளமுமாகும். இதைப் போன்றே ஒரு நீர்வாழ் உயிரினம் அதன் இனத்தைச் சார்ந்த அனைத்து உயிரினங்களுக்கும் ஓர் அடையாளமாகும். இவ்வாறே ஒர் பறவை அதன் இனத்தைச் சார்ந்த அனைத்து பறவைகளுக்கும், ஒரு மரமோ, செடியோ அதனதன் இனத் தைச் சார்ந்த அனைத்து மரம், செடிகளுக்கும் எடுத்துக்காட்டு களும்,அடையாளங்களுமாகும். ஏனெனில் அவை யாவும் அவற்றின் இனங்களுக் கிடையில் ஒன்றுக்கு ஒன்று சமமானவை; ஒரே மாதிரியானவை. ஆனால் மிகப் பெரிய வியப்பிற்குரிய செய்தி யாதெனில் இவ்வுலகில் இது வரை தோன்றியவர்களாயினும் இனி மேல் தோன்றப் போகிறவர்களாயினும் அவர்களில் ஒருவர் கூட மனிதனுக்கு எடுத்துக் காட்டாகவோ அடையாள மாகவோ இருக்க முடியாது என்பதாகும். மிகக் குறைந்த பட்சம் ஒரே பெற்றோருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்களில் ஒருவர் மற்றவருக்கு மாற்றாக,அடையாள மாக, எடுத்துக் காட்டாக முடியுமா எனக் கேட்டால் அப்போதும் கூட முடியவில்லை என்பதே அதற்குப் பதிலாக உள்ளது.

பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம் போன்றவற்றின் சிந்தனை மற்றும் செயல் வடிவங்களில் சமமானவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர் என்பது உண்மையே. இருப்பினும் அவர்களுக்கிடையிலுள்ள சமமற்ற சிந்தனை மற்றும் செயலின் தாக்கம் குறிப்பிட்ட சந்தர்ப்பங் களில் அவர்களை ஒருவரில் இருந்து மற்றவரை வேறு படுத்திக் காட்டும் அளவிற்கு பெரிதாகவே இருக்கும். எனவே எந்த மனிதரையும் மனிதர்களின் அடையாளமாக எடுத்துக் காட்ட இயலாது. மனிதர்களுக்கிடையிலான இந்த வேறு பாட்டைப் பற்றிய சிற்சில குறிப்புகள் திருக்குர்ஆனிலும் (39:9, 8:22, 2:171 நவஉ) காணமுடிகிறது.

மனிதனைத் தெரிந்து கொள்ளாத மாமேதைகள்

மானிடனுக்கு வழங்கப்பட்ட கற்கும் திறன் அவர்களை மந்தை வெளியிலிருந்து (ஊயவவடந குநைடன) தனித்தவர்களாக (ஐனேஎனைரயடள) ஆகும் திறனை வழங்கியதோடு மட்டுமன்றி இறைவனின் படைப்பினங்கள் அனைத்தையும் விட உயர் தகுதிக்கு உயர்த்தப்பட்டதையும் திருக்குர்ஆன் (2:30-34) சுட்டிக் காட்டுகிறது. மானிட வாழ்க்கைக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை. சூரியக் குடும்பமே போதுமானதாகும் எனச் சிலர் கூறுவதற்குக் காரணம் மானிடனின் மேற்கண்ட உயர் தகுதிகளைக் கருத்தில் கொள்ளாததன் விளைவேயாகும். தனித்த மனிதனை மனித இனத்திற்கு அடையாளமாகக் கொள்ளும் தவறிலிருந்து விஞ்ஞானிகளும் விடுபடவில்லை என்பதை நோபல் பரிசு பெற்ற டாக்டர். அலக்சி காரல் (னுச. ஹடயஒளை ஊயசசநட) கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

``உண்மைகளின் உலகம் மற்றும் அவைகளின் அடையாளங்களின் உலகம் ஆகிய இரு உலகங்களில் நாம் வாழ்கிறோம். நம்மைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காக சீரான கவனம் மற்றும் அறிவியல் வாயிலான வேறுபடுத்தல் கள் ஆகியவைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அக்கருத்து மறுக்க முடியாத உண்மைக்கு தவறாக இருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உண்மைகள் அடையாளங்களாகக் கொள்ளப்படுவதோடு தனிமனிதனை (ஐனேஎனைரயட) மனித இனமாகவும் கருதப்படுகிறது. படித்தவர்கள், மருத்துவர்கள் சமூகவியலாளர்கள் ஆகியவர்களால் செய்யப்படும் பெரும்பாலான தவறுகள் இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து வருவனவாகும். விஞ்ஞானிகள் என்பவர்கள் இயந்திரவியலின் தொழில் நுணுக்கம், இரசாயணம், இயற்பியல் மற்றும் உடலியல் போன்ற துறைகளில் பழக்கப்பட்டவர்களாகவும், தத்துவம் மற்றும் புத்திமதியின் கலாச்சாரம் (ஐவேநடடநஉவரயட ஊரடவரசந) போன்றவை களில் பழக்கமில்லாதவர்களாகவும் இருப்பது வெவ்வேறு ஒழுக்க எண்ணங்களின் கலப்புக்கும் பொதுவானதைக் குறிப்பிட்டதில் இருந்து அடையாளம் காணாமற் போனதற்கும் பொறுப்பாகும்.

(பார்க்க : பக்கம் 176, மேன் தி அன்னோன், வில்கோ பப்ளிஷிங் ஹெவ், மும்பை, 1959)

பொதுவானதைக் குறிப்பிட்டதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாமற்போனதாலேயே தனி மனிதன் எனும் குறிப்பிட்டதை மனித இனம் எனும் பொதுவானதற்குரிய அடையாளமாக்கும் தவறுகள் நடைபெறுகிறது என்பதை டாக்டர் காரலின் எடுத்துக் காட்டிலிருந்து விளங்குகிறோம்.

மானிடனின் அறிவு எக்காலமும் வளர்ந்து வரும்

மனிதனை ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளமாக இருப்பதிலிருந்து உயிரினங்கள் யாவற்றையும் விட மேலான தகுதிக்கு அவனை உயர்த்திய அவனுடைய கற்கும் திறனைப் பற்றி முன் பக்கங்களில் கண்ட திருக்குர்ஆன் வசனங்களின் கருத்து நம் கண் முன்னால் நிறைவேறி வருகிறது. திருக்குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் மிருகங்களின் மீதே பயணம் செய்து கொண்டிருந்தனர். இன்று உலகில் காணப்படும் வாகனங் களை அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க இயலாதவர் களாகவே இருந்தனர். ஆனால் இன்றைய உலகம் மிருகங் களில் பயணம் செய்வதை விட வசதியாக அவர்களின் மோட்டார் கார்களில் பயணம் செய்கிறார்கள் என்பதோடன்றி இதுவரை தங்களை சுமந்து கொண்டிருந்த மிருகங்களைக் கூட தங்கள் பார ஊர்திகளிலும் இரயில்களிலும் சுமந்து செல்லும் ஆற்றலைப் பெற்று விட்டார்கள்

மானிட வரலாற்றில் அவன் பெற்ற இந்த மாபெரும் முன்னேற்றம் எழுதுகோலின் உதவியைக் கொண்டு மனிதன் அறியாதிருந்ததை இறைவன் அவனுக்குக் கற்றுத் தந்தான் எனக் கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தின் நிறைவேற்றமே அன்றி வேறில்லை. அவ்வாறே மனிதனால் ஆகாயத்தில் எவ்வாறு பறக்க முடியும் என்ற கலையையும் நமது முன்னோர் கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்றைய உலகின் விமானங்களும், இராக்கெட்களும் மனிதன் அறியாதிருந் ததை கல்வியின் துணை கொண்டு இறைவன் அவனுக்குக் கற்று தருகிறான் என்று திருக்குர்ஆன் கூறிய வார்த்தைகளின் நிறைவேற்றமாகும்.

ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள பூமியின் வெவ்வேறு பகுதிகளில் அமர்ந்து கொண்டு மனிதர்களால் நேருக்கு நேர் பேசும் கலையையும் நம் முன்னோர்கள் அறிந்திருக்கவில்லை. ஆயினும் மனிதனின் கல்வித் திறன் அதை அவனுக்கு சாத்தியமாக்கியது.

இதைப் போன்று மானிட அறிவின் சாதனைகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகளை நாம் கூறமுடியும். மேலும் இன்று நம்மால் அறிந்து கொள்ள முடியாமலிருந்தும் பல கலைகளை திருக்குர்ஆனின் வெளிச்சத்தில் (96:3-4) பார்க்கும் போது நாளைய மனிதர்கள் அறிந்து கொள்ளப் போகிறார்கள் என்பது திண்ணம். எனவே மனிதனின் அறிவு என்பது எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் இயல்பைப் பெற்றதாகும்.

மனிதனின் அறிவை அவனுடைய புத்திமதியின் (ஐவேநடடநஉவ) உற்பத்திப் பொருளாகக் கருதினால் அதனுடைய உற்பத்திப் பணிகளே `கற்றல் (டநயசபே) ஆகும். (இந்த விதத்தில் பார்த்தால் அவனுடைய அறிவுக்கு மூலப் பொருள் யாது? மூலப் பொருள் இல்லாமல் உற்பத்தி நடைபெறா தன்றோ?) இதன் காரணமாகவே இறைவன் மனிதனுக்கு எழுதுகோலின் உதவியைக் கொண்டு கற்றுத் தந்தான் எனக் கூறினான். `எழுது கோல் என்பது கல்வியின் அடையாளம் என்பதை நாம் அறிவோம்.

எழுதுகோல்களின் மதிப்பு

ஐன்டீனுடைய சார்பியல் தத்துவங்கள் பெரும் மூளையைக் குழப்பும் (அடிளவ அனே டிபபடபே) கோட்பாடாகும் என்பதை நாம் அறிந்துள்ளோம். மிகச் சில அறிவியலாளர் களைத் தவிர மிகப் பெரும்பாலான அறிவியலாளர்களுக்குக் கூட அவருடைய கோட்பாடுகள் விளங்காதவைகளாகவே இருந்தன. இருந்த போதிலும் அந்த கோட்பாடுகள் முழுமை யாக நிரூபிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவரை உலகின் தலை சிறந்த விஞ்ஞானியாக ஒப்புக் கொள்ளச் செய்ததற்குக் காரணம் அவர் வரைந்து காட்டிய அவரது தத்துவங்களி லிருந்து வெளிப்பட்ட அவரது அறிவுத் திறனாகும்.

அணுகுண்டு தயாரிப்பது சாத்தியமே என்பதை விளக்கும் சில தாள்களை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரூவெல்டுக்கு (சுடிடிளந ஏநடவ) ஐன்டீன் 1939, ஆகட் மாதத்தில் எழுதிய போது அமெரிக்க ஜனாதிபதிக்கு இருநூறு கோடி டாலர் செலவில் மன்ஹாட்டன் திட்டத்தை ஆரம்பிப்பதில் எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. அணுகுண்டு தயாரிப்பது சாத்தியமே என்பதற்கு உலகின் எந்த ஒரு விஞ்ஞானியாலும் உத்தரவாதம் தர முடியாமலிருந்தும் அது மட்டுமன்றி ஐன்டீன் எழுதிய சமன்பாடுகளைக் கூட விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தும் ஐன்டீன் உடைய பேனாவிற்கு ரூவெல்ட் வழங்கிய மாபெரும் கண்ணியமே 200 கோடி டாலர் செலவிலான மன்ஹாட்டன் திட்டம் எனக் கூறினால் அது மிகையாகாது.

மன்ஹாட்டன் திட்டம் நிறைவேற்றப்பட்ட போது ஐன்டீனின் அறிவாற்றலைப் புகழ்ந்து பலரும் பாராட்டினர். ஜராம். எ. மெயர் (துநசடிஅந. ளு. ஆநலநச) எனும் அறிவியல் எழுத் தாளர் (ருளுஹ) தன்னுடைய நூல் ஒன்றில் ``இந்த யுகத்தின் மாபெரும் அறிவாளியின் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு சில சமன்பாடுகளின் (ஐஉடிஅயீசநாநளேடெந நுளூரயவடிளே) முகவிலைக்கென்றே முற்றிலும் இருநூறு கோடி டாலர் செலவிடப்பட்டது (பக்கம் 73 டீக ஹக்ஷஊ டிக ஞாளைஉள, யீலசயஅனை ஞரடெஉயவடிளே, ஐஉ, சூநற லுடிசம, ருளுஹ, 1944) எனப் புகழ்ந்துரைத்தார்.

பேரண்டத்தில் அறிவை விடச் சிறந்தது எதுவுமே இல்லை என்பதற்கு இது வரை கூறியவை சில உதாரணங் களாகும். இந்த உதாரணங்கள் மனிதன் அறிவுக்காக உழைக்கிறான் என்பதையும் அந்த அறிவு மனிதர்களை பூமியின் மீது அதிகாரம் படைத்தவர்களாக ஆக்கியுள்ளது என்பதையும் நிருபித்த போதிலும் மனிதனுக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் எப்படித் தேவைப்படுகிறது எனும் கேள்வி இப்போதும் நம்முன் நிலை பெற்றுள்ளது.

சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லும் மானிடத் தேவைகள்

பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு பூமியைத் தவிர சூரியனும் சந்திரனுமே போதுமானதாக இருந்தது. கடற்பயணயம் செய்யக் கற்றுக் கொண்ட போது வழிகாட்டுவதற்காக சில நட்சத்திரங்கள் தேவைப்பட்டன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கலீலியோ தொலை நோக்கியை உருவாக்கிய போது சூரியனைப் பற்றியும் சூரியனைச் சுற்றி வரும் கோள்களைப் பற்றியும் அதிகமான செய்திகளைச் சேகரிக்க முடிந்தது. கலீலியோ விட்டுச் சென்ற அறிவு அவர் இறந்த அதே வருடத்தில் பிறந்த நியூட்டனுக் குள் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இதன் விளை வாக பூமியை நிலைபெறச் செய்வதற்கு சூரியக் குடும்பம் தேவை; எனவே மனிதன் வாழ வேண்டுமானால் அதற்காக ஒரு சூரியக் குடும்பமே தேவை என விளங்கிக் கொள்ள முடிந்தது.

அவன் மனிதனாக இருந்ததால் அறிவுக்கான வேட்கை அவனை இடைவிடாமல் உழைக்கச் செய்தது. இதன் விளை வாக அவனுக்கு அவனுடைய படைப்பாளனாம் இறைவன் வழங்கிய எக்காலமும் வளர்ந்து செல்லும் (நஎநச நேசநயளபே) அறிவு நட்சத்திரங்களைப் பற்றியும் காலக்சியின் தோற்றத் தைப் பற்றியும் பற்பல முக்கியமான செய்திகளை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அவனுக்குக் கற்றுத் தந்தது.

இந்தச் செய்திகளின் உதவியால் மானிடனின் தோற்றத் திற்கு வெறும் சூரிய குடும்பம் மட்டும் போதாது என்றும் மனிதன் பூமியில் தோன்ற வேண்டின் அதற்காக கோடிக் கணக்கான நட்சத்திரங்களையும் கருங்குழி (க்ஷடயஉம ழடிடநள)களையும் குவாசர்களையும் (ணுரயளநசள) வால் நட்சத்திரங் களையும்,  நெபுலாக்களையும், எண்ணிலடங்காத விண் கற்களையும், இன்ன பிற பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு பிரமாண்டமான காலக்சியே தேவைப்படும் என அறிந்து கொண்டான். இதைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்.

``நமது வாழ்க்கைக்கு சூரியக் குடும்பம் நிச்சயமாக ஒரு பிரதான தேவையாகும். ஒருவர் இந்தப் பிரதான தேவையை மொத்த காலக்சிவரை விரிவடையச் செய்யலாம். ஏனெனில் கனமான தனிமங்களைத் தோற்றுவித்த முற்கால நட்சத்திரங் கள் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் மற்ற காலக்சி கள் யாவும் எந்த வகையிலும் தேவையானதாகத் தோன்ற வில்லை. மேலும் பேரண்டம் பேரளவில் எல்லா திசைகளி லும் இவ்வளவு சீராக இருக்க வேண்டிய தேவையும் இல்லை

(பக்கம் : 133)

மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் எடுத்துக்காட்டில் மானிட வாழ்க்கைக்கு மொத்த காலக்சியும் தேவை எனக் குறிப்பிடப்பட்டது மானிடனின் தோற்றத்தைக் கருத்தில் கொள்ளப்பட்டதனால் ஆகும். மனித உடலில் பேரளவிலும் (ஆயஉசடி நடநஅநவேள) சிற்றளவிலும் (ஆஉசடி நடநஅநவேள) ஏராளமான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றுள் சிற்றளவு தனிமங் களில் கனமான தனிமங்களாம் தங்கம், பிளாட்டினம் போன்றவைகளும் இருக்கின்றன. இக்கனமான தனிமங்கள் தோன்ற வேண்டுமாயின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் அழிவுற்று அந்த அழிவிலிருந்து பிறக்கும் இரண்டாம் அல்லது முன்றாம் தலைமுறை நட்சத்திரங்கள் தோன்ற வேண்டுமென நாம் முன்னர் கண்டுள்ளோம். இவ்வாறு ஒரு தலைமுறை நட்சத்திரங்கள் அழிந்து அவைகளின் அழிவிலிருந்து மற்றொரு தலைமுறை நட்சத்திரங்கள் பிறக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற வேண்டுமாயின் காலக்சியின் அமைப்பு இன்றியமையாததாகும். எனவே மானிடனின் உடலைத் தோற்றுவித்த பொருட்களைக் கருத்தில் கொண்டே மனித வாழ்க்கைக்கு இந்த மொத்த காலக்சியும் ஒரு பிரதானத் தேவையாகும் எனக் கூறப்பட்ட தற்குக் காரணமாகும்.

மானிட வாழ்க்கை நடைபெறுவதற்கு ஒரு காலக்சியே தேவையாகும் என இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவை ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள விஞ்ஞானிகளால் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. ஆயினும் திருக்குர்ஆன் கூறியதற் கிணங்க மனிதன் பெற்றுள்ள வளர்ந்து கொண்டே இருக்கும் அவனது அறிவு இருபதாம் நூற்றாண்டில் ஒரு காலக்சியே அவனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும் என அறிவுறுத்தியது. இதற்கு மேல் வருங்காலத் தலைமுறை யினரின் வளர்ந்து கொண்டிருக்கும் அறிவு இக்கூற்றை உறுதிப்படுத்துகிறதா அல்லது மாற்றியமைக்கிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும். ஆயினும் நமது நிலை இதிலிருந்து வேறுபட்டதாகும்.

சமூக வாழ்க்கை மனிதனின் குத்தகை இல்லை

மனிதனின் தேவை யாது என நிர்ணயம் செய்யும் போது குறைந்த பட்சம் முதலாவதாக``மனிதன் என்பது என்ன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே அவனுடைய தேவை என்ன என்பதை சரியாக நிர்ணயிக்க முடியும் என்பது விளக்கத் தேவையில்லை. பெரும் கல்விமான்கள் கூட இந்த இடத்தில் தவறி விடுகிறார்கள் என்பதை டாக்டர் காரலின் எடுத்துக் காட்டில் நாம் கண்டோம். கற்றவர்கள் மத்தியில் வழக்கமாக மனிதன் ஒரு சமூக விலங்காக (ளுடிஉயைட ஹஅயட) குறிப்பிடப்படுகிறான். உள்ளபடியே மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதற்கப்பால் எதுவும் இல்லை எனில் இம்மாபெரும் பேரண்டம் அவனுக்குத் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் ஒரு சமூக விலங்கு எனும் நிலைக்கு அப்பால் அவனிடம் ஏராளமான குணங்கள் நிறைந்துள்ளன. இந்தக் குணங்களே அவனை `மனிதன் எனும் பெயருக்குத் தகுதி வாய்ந்தவனாக இருக்கச் செய்கிறது. எனவே மனிதனைப் பொருத்தவரை`சமூக விலங்கு எனும் சொல் அவனைக் குறிப்பாக அடையாளம் காட்டுவதில்லை.

மனிதன் பெற்றுள்ள எக்காலமும் வளரும் அறிவு அவனைத் தவிர வேறு சில உயிரினங்களும் சமூக வாழ்க்கையை மேற்கொள்வதைக் கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவைகள் தங்களது இராச்சியத்தில் (தேன்கூடுகளில்) தொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தி பணிகளை ஈடுபட்டு ஒரு ஆட்சித் தலைவிக்கு (இராணித் தேனீ) கீழ் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே. இதைப் போன்று எறும்புகளின் பேரினத்தில் ஒரு குறிப்பிட்ட சிற்றினம் தேனீக்களினும் சிறந்த முறையில் சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பீட்டர் ஃபார்ப் (ஞநவநச குயச, ருளுஹ) எனும் அறிவியல் எழுத்தாளர் நிலத்தை உழுது உணவு உற்பத்தி செய்யும் ஒரு வகை எறும்புகளைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

``இவைகள் காளான் (குரபேரள) வளர்க்கும் எறும்பு களாகும். சில செல் எறும்புகளையும் (கூநசஅவைநள) மனிதர் களையும் தவிர இந்த உலக உருண்டையின் மீது தங்களின் அன்றாட உணவை உற்பத்தி செய்யும் ஒரே உயிரினம் இது ஆகும். அவைகள் காளான் பாத்திகளை உருவாக்குகின்றன; விதைக்கின்றன; களை எடுக்கின்றன; உரம் இடுகின்றன;விளைச்சல் நன்றாக இருக்கும் போது கூடுதல் தோட்டங் களுக்காக புதிய நிலத்தைச் சீர்படுத்துகிறது. 5,00,000 எறும்புகளின் விருத்தி அடைந்த ஒரு நகரத்திற்கான ஏக உணவாக இருக்கக் கூடிய அதன் விளைச்சலை அவை அறுவடை செய்கிறது. மனிதன் தோன்றுவதற்கு பத்து லட்சம் வருடங்களுக்கு முன்னிருந்து மண்ணின் விவசாயிகளாக வந்த இவைகள் அவைகளின் விவசாயத்தை குற்றமற்ற முறையில் செய்கின்றன

(பக்கம் : 72, லிவிங் எர்த், பிரமிட் பப்ளிகேஷன், யு.எ.ஏ)

மேற்குறிப்பிடப்பட்ட விபரங்களிலிருந்து சமூக வாழ்க்கை என்பது மனிதனின் தனிச் சிறப்பான அடையாளக் குறியீடு இல்லை என்றும் உலகைப் பொருத்தவரை அவனு டைய அடையாளக் குறியீடு (ஐனநவேகைஉயவடி) `புத்தியுள்ள உயிரி னம் (ஐவேநடடபைநவே க்ஷநபே) என்பதாகும் எனத் தெரிய வருகிறது.

மானிடனின் வரைவிலக்கணத்தின் முக்கியத்துவம்

வாசகர்கள் பலரும் இப்போதும் கூட `மனிதன் என்ற சொல்லின் வரைவிலக்கணம் கூறுவது நமது தலைப்போடு எந்த வகையில் தொடர்பு கொள்கிறது என்ற ஐயத்தில் இருக்கக் கூடும். ஆனால் `கடவுள் இருப்பது உண்மை யானால் இவ்வளவு பெரிய பேரண்டத்தை ஏன் படைத்தார்? இப்பேரண்டம் ஏதேனும் விதத்தில் மனிதனுக்குத் தேவைப்படுகிறதா? என்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்குரிய பதில் `மனிதன் என்ற சொல்லில் வரைவிலக்கணத்திலேயே புதைந்து கிடக்கிறது. எனவே மனிதன் என்ற சொல்லின் வரைவிலக்கணம் ஐயத்திற்கிட மின்றி விளங்கிக் கொண்ட பின்னரே இங்கு எழுப்பப் பட்டிருக்கும் சர்வதேச பிரசித்தி பெற்ற கேள்வியின் விடைக்குள் நாம் செல்ல முடியும்.

மனிதனின் வரைவிலக்கணத்திற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் உண்டானதற்குக் காரணம் மனிதன் ஒரு சமூக விலங்காக அறிமுகப்படுத்தப்படுவதும் ஒரு குறிப்பிட்ட ஏதேனும் மனிதனை மனித இனத்திற்கு அடையாளமாக (ளுலஅடிட) கூறப்படுவதுமாகிய தவறான போக்குகளுமாகும். டாக்டர். காரல் தன்னுடைய அதே புத்தகத்தில் மேலும் கூறுகிறார்.

``மனித இனம் என்பது இயற்கையில் எங்குமே காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் தனிமனிதர்கள் மட்டுமே உள்ளனர். மனித இனத்திலிருந்து தனி மனிதன் வேறுபட்டவனாவான். ஏனெனில் `அவன் என்பது ஒரு உறுதிவாய்ந்த உண்மை நிகழ்ச்சியாகும். அவன் செயலாற்று கிறான்; நேசிக்கிறான்; துன்புறுகிறான்;சண்டையிடுகிறான்; செத்துப் போகிறான். இதற்கு மாறாக மனித இனம் என்பது நமது மனங்களிலும், புத்தகங்களிலும் வாழுகின்ற அர்த்தமற்ற (ஞடயவடிஉ ஐனநய) கருத்தாகும்.

(பக்கம் : 175, மேன் தி அன்னோன்)

டாக்டர் காரல் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டு ஒரு எளிய உண்மையாகும். சான்றாக உங்கள் கார் ஓட்டுநரை விட ஐசக் நியூட்டனையோ, உங்கள் சகோதரனை விட உங்கள் தேசப் பிதாவையோ நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால் நியூட்டனும், தேசப்பிதாவும் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக இல்லையென்றும் அவர்களுக்குள் குடியிருந்த அவர்களின் தனித்துவத்திற்காகவே (ஐனேஎனையைடவைல) என்பதும் விளக்கம் தேவைப்படாத எளிய உண்மைகளாகும். இன்றைய அறிவியல் உலகின் முடிசூடா மன்னராக ஹாக்கிங் அவர்களை ஏனைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வது அவர் ஒரு சமூக விலங்கு என்பதற்காகவோ அல்லது அவர் மனித இனத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவோ இல்லை என்பதும் அவருக்குள் இருக்கும் தனி நபர் சிறப்பே (ஞசநளடியேடவைல) அதற்குக் காரணம் என்பதும் விளக்கம் தேவையற்றதாகும்.

மனிதனும் அவனது தனிநபர் சிறப்பியல்பும்

மரத்திலிருந்து பழங்கள் விழுவதை நியுட்டனுக்கு முன்னரும் ஏராளமான அறிவு ஜீவிகள் பார்க்கத்தாம் செய்தனர்.ஆயினும் நியூட்டனின் புத்தியிலிருந்து தோன்றிய கற்க வேண்டும் எனும் ஆர்வத்தை அவர் செயல்படுத்தத் துணிந்ததே ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவரை ஈடுபடச் செய்தது. இது நியூட்டனின் தனிநபர் சிறப்பு (ஞநசளடியேடவைல) ஆகும். இதற்கு மாறாக மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் (ஐனநவேஉயட) ஆகவும், அவர்களில் தனிநபர்கள் (ஐனேஎனைரயடள) யாரும் இல்லாமலும் இருந்திருந்தால் நியூட்டன் ஒருபோதும் தனிசிறப்பிற்குரியவராக ஆகியிருக்க முடியாது என்பது திண்ணம். இந்த நிலையே உலகில் வாழும் மனிதர்கள் பெற்று இருந்தார்கள் எனில் உலகில் எந்த கண்டுபிடிப்பையும் மனிதர்கள் நிகழ்த்தி இருக்க முடியாது. இதன் பொருள் மனிதனும் ஏனைய விலங்குகளைப் போன்று பகுத்தறிவில்லாமலே படைக்கப்பட்டனர் என்பதே ஆகும். அந்த நிலையில் மனிதனும் விலங்கைப் போன்றவனாகவே மாறி இவ்வளவு பெரிய பேரண்டம் அவனுக்கு தேவையற்ற தாகவே கருதப்பட்டிருக்கக் கூடும். ஆனால் நடப்பதோ வேறு விதமாக. இங்கு ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு தனிநபர் சிறப்புக்கு உரியவர்களாக உள்ளனர். டாக்டர் காரல் அதே நூலில் மேலும் கூறுகிறார் :

``நவீன சமூகம் தனிமனிதனைப் புறக்கணிக்கின்றது. அது மனித இனமாக மட்டுமே மனிதனை எடுத்துக் கொள்கிறது. அது ஒட்டு மொத்தமான எதார்த்தங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டு மனிதர்களை வேறுபட்டவர் களாவே நடத்துகிறது. தனி மனிதன் மற்றும் மனித இனம் எனும் கருத்துருவங்களில் உள்ள குழப்பம் தொழிலியல் சமூகத்தை (ஐனேளேவசயைட ஊஎடைணையவடி) மனிதர்களை தரம் பிரிக்கும் தவறுக்கு இட்டுச் செல்கிறது. நாம் அனைவரும் முற்றிலும் ஒரே மாதிரியாக இருந்திருந்தால் ஒருபெரும் மந்தையில் வாழ்ந்து பணியாற்றும் நாற்காலி விலங்குகளைப் போன்று வளர்க்கப்பட்டிருப்போம். ஆயினும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான தனிநபர் சிறப்பு (ஞநசளடியேடவைல) உண்டு. அவன் ஒரு அடையாளக் குறியாக நடத்தப்படக் கூடாது.

(பக்கம் : 198, மேன் தி அன்னோன்)

தொழிலியல் சமுதாயத்தில் மனிதர்கள் தொழிலாளி வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்கம் எனத் தரம் பிரிக்கப் பட்டதை தனிமனிதனை புறக்கணித்துவிட்டு மனிதர்களை மனித இனமாக மட்டுமே எடுத்துக் கொண்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த நடவடிக்கையில் மனிதர்கள் நாற்காலிக்கு ஒப்பாகவே நடத்தப்படுகின்றனர். ஆனால் மனிதர்கள் அனைவரும் தனிநபர்களே (ஐனேஎனைரயடள) என்பதும் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் தனிநபர் சிறப்பும் (ஞநசளடியேடவைல) உண்டு என்றும் எனவே மனிதர்களை மனித இனமாக பாவித்து நடத்தப்படக் கூடாது என்பதே டாக்டர் காரல் அவர்களின் கருத்தாகும். அறிவியலாளரும், தத்துவ ஞானியுமான டக்டர் காரலை நாம் மேற்கோள்காட்டி இருப்பது உலகில் தோன்றியுள்ள இலட்சக் கணக்கான உயிரினங்களில் ஒன்றாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் ஏனைய உயிரினங்கள் எதற்குமே இல்லாத பிறவிக் குணம் மனிதர்களுக்குள் இருக்கும் ``தனிநபர் சிறப்பியல்புகள் ஆகும் என்பதையும் மேலும் மனிதன் எப்போதும் ஒரு சமூக விலங்காகக் குறிப்பிடப்படுவது தவறான அணுகுமுறை யாகும் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்கே அன்றி டாக்டர் காரல் அவர்களின் கருத்துகள் யாவையும் ஏற்றுக் கொள்வதாக இதற்கு அர்த்தமில்லை.

பிரதான செய்திகள்

இந்த அத்தியாயத்திலிருந்து இதுவரை ஐந்து பிரதானமான தகவல்களை அறிந்து கொண்டோம். அவற்றுள் முதலாவது இப்பேரண்டம் படைக்கப்பட்டது மனிதர்களுக் காவே ஆகும் என்ற திருக்குர்ஆனின் பிரகடனம். இரண்டாவ தாக இவ்வளவு பெரிய பேரண்டத்தை இறைவன் மனிதர் களுக்காக படைத்த போதிலும் அவனுடைய ஆற்றலில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதால் இறைவன் தன்னுடைய அடியார்களுக்காக இப்பேரண்டத்தைப் படைத்ததில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பது.

மூன்றாவதாக மனிதர்களுக்கென இப்பேரண்டத்தைப் படைத்ததைக் காட்டிலும் மிகுதியான பரிவு மனிதனின் மீது இறைவனுக்கு உண்டு எனும் திருக்குர்ஆனின் விளக்கம். நான்காவதாக இவ்வளவு பெரிய பேரண்டம் எந்த வகையிலும் மனிதனுக்குத் தேவைப்படவில்லை எனும் அறிவியலாளர் களின் கருத்து மனிதனை வெறும் ஒரு சமூக விலங்காக மட்டும் கருத்தில் கொண்டதன் விளைவே என்பது. ஐந்தவாதாக மனிதனின் ஏனைய உயிரினங்கள் எதற்கும் இல்லாத எக்காலமும் வளர்ந்து கொண்டே செல்லும் இயல்புடைய அறிவைப் பிறவிக் குணமாகப் பெற்றவன் என்பதும் இப்பிறவிக் குணம் மனிதர்கள் ஒவ்வொருவரையும் தனிநபர் சிறப்புக்கு உரியவர்களாக ஆக்கியது என்பதுமாகும்.

அடுத்ததாக இம்மாபெரும் பேரண்டம் மனிதனுக்கு எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

அத்தியாயம் 10

பேரண்டம் படைக்கப்பட்டது எதற்காக?

சென்ற அத்தியாயத்தில் மனிதனை ஒரு சமூக விலங்காக கொள்வது தவறு எனக் கண்டோம். மனிதன் தன்னுடைய உயிரியல் அமைப்பில் விலங்கைப் போன்ற வனாக இருப்பினும் அவனுடைய வாழ்கையைப் பொருத்த வரை இரண்டு இலட்சியங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அவனுடைய உலகியல் வாழ்க்கையை அமைதிக்கு அடிப் படையாக அமைத்தலாகும். அவனுடைய சமூக வாழ்க்கை இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட தாகும். மனித வாழ்க்கையின் மற்றொரு இலட்சியம் அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப் படுத்தலாகும். இந்த இரண்டாவது இலட்சியமே ஆன்மீகத் தலத்தில் ஒரு உயிரினத்திற்கு மனிதன் எனும் தகுதியை வழங்குகிறது.

(உயிரியல் அடிப்படையில் ஓர் உயிரினத்தின் மனிதனாகும் தகுதிக்கு ``பகுத்தறிவே (புத்திமதி - ஐவேநடடநஉவ) போதுமானதாகும் என முன்னர் கண்டோம்.)

உலகில் தோன்றும் பகுத்தறிவுள்ள உயிரினங்கள் யாவுக்கும் உயிரியல் அடிப்படையில் மனிதனாகும் தகுதி உண்டென்றாலும் அவர்களில் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே ஆன்மீகத் தலத்தில் மனிதனாகும் தகுதியை உருவாக்கிக் கொள்கின்றனர். மனிதனுக்குள் இருக்கும் தனிநபர் சிறப்பில்பே அவர்களை ஆன்மீக தலத்தில் மனிதனாக ஆக்கும் தகுதியையோ அல்லது மனிதனாக அல்லாமல் (விலங்கினும் கீழானதாக) ஆக்கும் தகுதியையோ உருவாக்குகிறது. இம்மாபெரும் பேண்டம் என்பது ஓர் உயிரினத்தை மேற்கூறிய இலண்டு தலங்களிலும் மனிதனாக்குவதில் இன்றியமையாத பங்களிக்கிறது. அதோடு உயிரியல் தலத்தில் மனிதனாக இருப்பவரை ஆன்மீக தலத்தில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் மிக மிக இன்றியமையாததாகும்.

மனிதனின் படைப்புத் திறன்

நாம் இப்போது உயிரியல் தலத்தில் மனித வாழ்க்கைக்கு பேரண்டம் எவ்வாறு இன்றியமையாத வகையில் பயன் படுகிறது என்பதைப் பார்ப்போம். உயிரியல் தலத்தில் மனிதனின் வரைவிலக்கணம் அவனொரு ``பகுத்தறிவுள்ள உயிரினம் (ஐவேநடடபைநவே க்ஷசபே) என முன்னர் கண்டோம். அவன் பெற்றுள்ள இந்த பகுத்தறிவு எனும் பிறவிக்குணம் அவனை ஓயாமல் கற்கச் செய்து கொண்டிருக்கிறது. கல்வியின் மீது அவன் கொண்டுள்ள இந்த அடக்க முடியாத ஆர்வம் அவனை எப்போதும் புதியபுதிய விபரங்களை - அதுவரை அவன் அறியாதிருந்தவைகளைக் - கற்பவனாக மாற்றி முடிவில் ஏனைய உயிரிங்கள் எதற்கும் இல்லாத படைக்கும் திறனைப் பெற்றவனாக (மெய்யான படைப்பாளன் - ஒருபொருளை முழுமையாகப் படைக்கும் திறனுள்ளவன் - இறைவன் ஒருவனே என்பதை கவனத்தில் கொள்க) அவனை உயரச் செய்கிறது.

அவன் இதுவரை படைத்துள்ள இலட்சக் கணக்கான வெவ்வேறு பொருட்களில் தொலை நோக்கி என்பதும் ஒன்றாகும். இந்த தொலை நோக்கியின் உதவியைக் கொண்டு எந்த காலக்சி மனித வாழ்க்கைக்கு போதுமானது எனக் கூறிக் கொண்டிருக்கிறார்களோ அந்த காலக்சியையும் தாண்டி அதற்கப்பால் உள்ள கோடிக் கணக்கான காலக்சி களில் இப்போதே ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறான். அவன் படைத்த நிறமாலை நோக்கி எனும் கருவியைக் கொண்டு அந்த காலக்சியிலுள்ள நட்சத்திரங்களில் என்னென்ன தனிமங்கள் இருக்கின்றன என்பதை இந்த பூமியில் இருந்து கொண்டே ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஹார்வர்டு ஆராய்ச்சிக் கல்லூரியைச் (ழயசறயசன ஊடிடடநபந டிக டீளெநசஎயவடிசல) சார்ந்த திருமதி. ஹென்ரிட்டா எ. லெவித் (ஆளைள. ழநனேசவைவய ளு. டுநஎவை) என்பவரின் கற்கும் திறமை நட்சத்திரங்களின் ஒளியில் காணப்படும் ஏற்றஇறக்கங்களும் (குடரஉவரயவடி) அததற்குரிய காரணமும் கண்டுபித்ததின் வாயிலாக விஞ்ஞானிகளின் தொலைநோக்கியில் சிக்கும் ஏனைய காலக்சிகளின் நட்சத்திரங்கள் கூட எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை அளவுநாடாவைப் (ஆநயளரசபே வயயீ) பயன்படுத்தாமலே அல்லது தலையைச் சுற்ற வைக்கும் கணித விதிகளையோ சமன்பாடுகளையோ பயன்படத்தாமல் மிக எளிதாகக் கண்டுபிடிப்பதற்கு ஒரு பிழையற்ற நடைமுறை சாத்தியமான வழிமுறையைக் கண்டுபிடித்துத் தந்தது.

எட்வின் ஹப்பிள் எனும் அறிவியலாரின் கல்வித் திறன் பேரண்டத்திலுள்ள காலக்சிகளெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று ஒயாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவைகளின் நகர்வுக்கான விதியையும் (காலக்சிகள் நம்மிடமிருந்து தொலைவாகச் செல்லச் செல்ல அத்தொலை களுக்கேற்ற நேர்விகிதத்தில் (னுசைநஉவடல ஞசடியீடிசவடியேட) அவற்றின் நகரும் வேகம் அதிகரிக்கிறது எனும் விதி) கண்டுபிடித்தது.

மானிடனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் திருக்குர்ஆன் கூறிய கல்வித்திறனை அடையாளம் காண்பதற்காக கூறப்பட்ட சில உதாரணங்களே இவைகளாகும். இதைப் போன்று ஏராளமான ஆய்வுகள் பால்வழி மண்டலத்திற்கு அப்பாலுள்ள காலக்சிகளில் இப்போதே நடந்து வருகின்றன. இந்த நிலையில் நமது பேரண்டம் ஒரேஒரு காலக்சியை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்திருப்பின் மேற்கூறப் பட்டதும் கூறப்படாததுமாகிய ஆய்வுகள் பலவும் மனிதனால் நிகழ்த்த முடிந்திருக்குமா?

மானிடனின் கல்வித்திறன் எக்காலமும் முன்னேற்றப் பாதையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளிலேயே பூமியில் தோன்றப் போகும் எதிர்காலச் சந்ததியினர் எவ்வளவு கண்டுபிடிப்புகளை சிகழ்த்தக் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு சிந்ததித்தால் நமது பேரண்டம் ஒரேஒரு காலக்சியோடு முவுற்று இருந்திருப்பின் எதிர்காலச் சந்ததியினர்களால் கூட அவர்களின் கல்வித் திறனை நமது காலக்சிக்கு அப்பால் செயல்படுத்த முடியாது என்பதில் ஐயமில்லை. இந்த விளக்கங்கள் யாவும் இம்மாபெரும் பேரண்டத்திற்கு பதில் ஒரே ஒரு காலக்சி மட்டுமே இருந்திருந்தால் அந்த காலக்சி மானிடனின் கல்வித் திறனை முழுமையாகப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை என்பதே அதன் பொருளாகும். மானிடனுக்கு வழங்கப் பட்டுள்ள கல்வித் திறனே உயிரியல் அடிப்படையில் மனிதனை மனிதானாக்குகிறது என்பதை முன் அத்தியாயத் தில் நாம் மிக மிக விளக்கமாக ஐயத்திற்கிடமின்றி கண்டுள் ளோம். எனவே சுருங்கக் கூறின் ஓர் உயிரினத்தை இப்போது மட்டுமின்றி அந்த உயிரினம் உலகில் உள்ளளவும் அதை மனிதனாக வாழச் செய்வதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இப்போது எதிர்கால அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என நிரூபித் தாலும் எக்காலமும் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதனின் கல்வித் திறன் வெளிப்படுவதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் இன்றியமையாததாகும் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. மேலும் அந்த அறிவின் மூலப் பொருட்களில் ஒன்றாக இப்பேரண்டம் தவிர்க்க முடியாதபடி இடம் பெற்றுள்ளது என்பதும் அதற்குரிய காரணமாகும்.

கல்வித் திறனின் முக்கியத்துவம்

மனிதனின் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்பதை பரிசீலனை செய்யும் போது கல்வியாளர்களில் கூட பலரும் செய்யும் தவறு மனிதனின் உடல் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்பது மட்டுமே சிந்திக்கிறார்கள் என்பதாகும். மனிதனைத் தவிர ஏனைய முப்பது இலட்சம் உயிரினங்களும் (உலகில் இன்றுவரை கண்டுபிடிக்கப் பட்டவை) அவைகளின் உடலமைப்பிற்குரிய அடையாளங் களாக (உடல் அமைப்பிற்கப்பால் எதையும் செய்ய முடியாதவைகளாக) வாழ்வதால் அவைகளின் தேவை களைப் பற்றி சிந்திக்கும் போது அவைகளின் உடல் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதைப் பற்றி சிந்தித்தால் போதுமானதாகும். ஆனால் மனிதனையும் அந்த பட்டியலில் சேர்ப்பது அவனை வெறும் ஒரு சமூக விலங்காக மட்டும் கருத்தில் கொள்வதால் ஏற்படும் தவறாகும். மனிதனுக் கென்று ஒரு உடலமைப்பு உண்டு என்பது உண்மையே எனினும் அவனுக்குள் `கற்கும் திறன் எனப்படும் ஒன்று உண்டு என்பது மனிதனுக்கு உடலமைப்பு உண்டு என்பதை விட பெரிய உண்மையாகும். எனவே மனிதனின் தேவை களைப் பற்றி சிந்திக்கும் போது அவனுடைய உடல் வளர்ச்சிக்கு தேவையானவைகளைப் பற்றி சிந்திப்பதை விட மிகுதியாக அவனுடைய கற்கும் திறமையைச் செயல்படுத்து வதற்கு தேவையானவைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகும். இந்தச் சிந்தனைக்கு மட்டுமே மனிதனுக்கும் இம்மாபெரும் பேரண்டத்திற்கும் இடையிலுள்ள உறவையும் மானிட வாழ்க்கை இம்மாபெரும் பேரண்டத்தின் இன்றியமையா தேவையையும் புரிந்து கொள்ள முடியும்.

மனிதனின் கல்வித் திறனுக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமா?என இப்போதும் கூட சிலர் ஐயுறக் கூடும். அனால் மனிதனிலிருந்து கற்கும் திறனை எடுத்துவிட்டால் அவன் ஒரு விலங்கைப் போன்றவனாக அன்றி அவன் ஒரு விலங்காகவே மாறி விடுகிறான். ஏனெனில் விலங்கின் உடலமைப்பிலிருந்து மனிதனின் உடலமைப்பு எவ்வகையிலும் சிறப்படைவ தில்லை. அனால் ஏனைய உயிரினங்கள் அவைகளின் உடலமைப்பின் இயற்கை நிலைக்கு (இயல்புக்கு) அடிமைப்பட்டு வாழும் போது மனிதனை மட்டும் அவனுடைய உடலின் இயற்கைக்கு பலவிதத்திலும் கட்டுப்படாமல் வாழச் செய்யும் ஆற்றலை வழங்குவது அவனுக்குள் இருக்கும் கல்வித் திறனாகும் என்பதை அடிவரை இட்டு கருத்தில் கொள்ள வேண்டும்.

இயற்கையை வெல்லும் மனிதன்

மனிதனின் உடலமைப்பு அவனை இயற்கையாகவே நீரில் வாழ அனுமதிப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் கடலிலேயே வாழும் இயற்கை அமைப்பை உடலில் பெற்றுக் கொண்ட மீன்களால் கூட செல்ல முடியாத ஆழ்கடலின் அடிமட்டங்களுக்கு மனிதன் சென்று வந்து அவன் அவனுடைய உடலமைப்பின் இயற்கைக்கு கட்டுப்பட்டவன் இல்லை என்பதை நிலைநாட்டுகிறான். பறவைகளைப் போன்று காற்றில் பறக்கும் உடலமைப்பை அவன் பெற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் பறவைகளால் கூட செல்லமுடியாத உயரத்தில் அவன் ஆய்வுக் கூடங்களை (ளுமலடயளெ) அமைத்துப் பணியாற்றுகிறான். மிகப் பெரும் உடல் வலிமையைப் பெற்ற யானைகள் கூட அற்பமான உடல் வலிமையுள்ள மனிதனை மட்டும் தன் முதுகிலேற்றி அவனுடைய கட்டளைக்கு அடிபணிவது யானையின் இயற்கைக் குணத்தால் இல்லை. அதுவும் கூட மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வித் திறனின் ஆற்றலே அன்றி வேறில்லை.

மனிதன் சிறுகச் சிறுக இயற்கையை அடிமைப்படுத்தி தனது ஆற்றலை படிப்படியாக பெருக்கிக் கொண்டே வருகிறான் என்பதற்கு மேற்கண்டவை வெறும் உதாரணங் களாகும். மனிதனை மனிதன் என்ற சொல்லுக்கு தகுதியான வனாக ஆக்குவது அவனுக்குள் இருக்கும் கல்வித் திறமையே என்பதற்கு மேற்கண்டவை போன்று நூற்றுக் கணக்கான உதாரணங்கள் நம் கண்ணெதிரே இருக்கும் போது மனிதனின் கல்வித் திறனுக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி அறியாமையாகும் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கங்கள் தேவையில்லை எனக் கருதுவோம். எனவே ஒரு உயிரினத்தை அவனுடைய உயிரியல் தலத்தில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் இன்றியமையாத பங்கு செலுத்துகிறது என்பதிலும் இதற்கு மேல் ஐயம் ஏற்பட வாய்ப்பிருக்காது.

மானிடப் படைப்பின் நோக்கம்

இந்த அத்தியாயத்தில் நாம் இதுவரை கூறியதையும் இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாம் விவாதித்தவை களையும் கவனமாகப் பார்வையிடும் ஒருவரால் இறைவன் படைத்த இலட்சக் கணக்கான வெவ்வேறு வகை உயிரினங் களில் ஒன்றை மனிதனாக ஆக்கும் ஒரே நோக்கத்திற்காகவே இம்மாபெரும் பேரண்டம் படைக்கப்பட்டது என்பதைக் காண முடியும். எனவே இயல்பாகவே அவனிடத்தில் கேள்வி ஒன்று எழக்கூடும். ஓர் உயிரினத்தை மனிதனாக்குவதன் வாயிலாக (இதை வேறு வார்த்தைகளில் கூறினால்``மனிதனைப் படைப்பதன் வாயிலாக) அவனிடமிருந்து இறைவன் என்ன எதிர்பார்க்கிறான்?என்பதே அக்கேள்வியாகும். உள்ளபடியே கேள்விகளுக்கெல்லாம் பிரதானமாக இருக்கும் தகுதி பெற்ற கேள்வியே இக்கேள்வியாகும். இக்கேள்விக்கு விளக்கமான பதிலை அடுத்த அத்தியாயத்தில் கூறியுள்ளோம். இருப்பினும் இந்த இடத்திற்கு ஒரு சுருக்கமான பதிலை இப்படிக் கூறலாம். ``பரலோக வெற்றி பெற்று அழிவிலா இன்பத்தைப் பெற்று என்றென்றும் வாழ்வதற்குத் தகுதி வாய்ந்தவனாக அவன் ஆவதையே அவனிடமிருந்து அவனது இறைவனின் எதிர்பார்ப்பாகும்.

பரலோகத்தில் ஒருவர் வெற்றிபெற வேண்டுமாயின் இவ்வுலக வாழ்க்கையில் அவர் தமது ஆத்மாவைத் தூய்மைப் படுத்த வேண்டும். ஆத்தைத் தூய்மைப்படுத்துதல் என்றால் ஆத்மாவைப் படைத்தவனும் அது குடியிருக்கும் உடலைப் படைத்தவனும் அந்த உடலுக்குத் தேவையானதை நிறைவேற்ற இவ்வுலகைப் படைத்தவனுமாகிய இறைவன் எதை எதைத் தின்மை என்று கூறுகிறானோ அவைகளின் பால் அணுகாமல் இருத்தலும் எவை எவை நன்மை எனக் கூறியுள்ளானோ அவைகளைக் கடைபிடிப்பதில் முழு முயற்சி செய்வதுமாகும்.

ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவது எவ்வாறு எனப் புரிந்து கொண்டோம். ஆயினும் அதற்கும் பேரண்டம் இவ்வளவு பிரமாண்டமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று இன்னமும் விளங்காதிருக்கலாம். ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குத் தடங்கலாக இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது மட்டுமே இப்பேரண்டத்தின் கற்பனையில் அடங்காத பிரமாண்டப் பேருருவம் மனிதனின் பரலோக வெற்றிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை விளங்க முடியும். எனவே அவை களைப் பற்றிய சில சுருக்கமான செய்திகளைப் பார்ப்போம்.

மறுமையின் நம்பிக்கையில் பேரண்டத்தின் பணி

ஆத்மாவைத் தூய்மைப்படுத்துதல் என்பதை இறைவ னின் கட்டளைக்கு அடிபணிதல் என சுருங்கக் கூறலாம். இதை ஒருவர் செய்ய வேண்டுமானால் அவர் முதலாவதாக தம்மைப்படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்ப வேண்டும். அதை நம்புவதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என்பது உண்மையாகும். ஏனெனில் இப்பேரண்டத்தைப் போன்று கோடிக் கணக்கான பேரண்டங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் இறைவனை நம்பாதவர்கள் அப்போதும் இருக்கதாம் செய்வார்கள். அதற்குரிய காரணத்தை (இறைவனை நம்புவதில் நாத்திகச் சிந்தனைகளுக்குத் தடையாக இருப்பவைகளை) முன்னர் நாம் கண்டுள்ளோம். ஆயினும் ஒருவர் இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டுமென்றால் அவருக்குப் பரலோக வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். இந்தப் பிரச்சனையில் தாம் நமது பேரண்டத்தின் கற்பனைக் கெட்டா பேருருவம் தொடர்பு கொண்டுள்ளது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகிற்கு முடிவு காலம் ஒன்று உண்டு என்றும் அப்போது இப்பேரண்டத்தை அழித்துவிட்டு இதை விடச் சிறந்த மற்றொரு பேரண்டத்தை இறைவன் படைப்பான் என்றும் அப்பேரண்டத்திலேயே சொர்க்கமும், நரகமும் இறைவனின் விசாரணை மன்றமும் அமைய இருக்கிறது என்றும் அப்பேரண்டமே பரலோகமாகும் என்றும் ஒருவர் நம்ப வேண்டும். அங்கு நடைபெறும் இறைவனின் நீதிமன்ற விசாரணையில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் முடிவே இல்லாத சொர்க்கத்தின் சுக வாழ்விற்கும் இறைவனுக்குக் கட்டுப்படாதவர்கள் முடிவே இல்லாத நரக வாழ்க்கைகும் ஆளாக்கப்படுவார்கள் என்பதையும் அவர் நம்ப வேண்டும். ஆனால் உலகில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் இறைவனை நம்புகின்ற போதிலும் பரலோக வாழ்க்கையில் அவர்களில் பெரும் பாலானோர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதே உண்மை யாகும். இறைவனிடம் நம்பிக்கை கொண்ட பிறகும் பரலோகத்தில் நம்பாமலிருப்பதற்கு இறைவனின் அபாரமான ஆற்றலைப் புறக்கணிப்பது ஒரு பிரதான காரணமாகும்.

மனிதனுடைய விஞ்ஞான அறிவு வளர்ச்சி அடையாமல் இருந்தபோது இறைவனுடைய ஆற்றல் அபாரமானது என்பதில் நம்பிக்கை கொள்வதற்கு அவன் வாழும் பூமியும் அந்த பூமியில் உள்ளவைகளும் அவனுடைய வெறும் கண்களால் அவன் கண்ட வானமும்,சூரியன், சந்திரன், நட்சத்திராதிகளுமே போதுமானதாக இருந்தது. ஆயினும் மனிதனின் கல்வித் திறன் அவனுடைய விஞ்ஞான அறிவை படிப்படியாக வளரச் செய்து அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக்சியையும் ஊடுருவிப் பார்க்கும் ஆற்றலைப் பெறும் போது அந்த காலக்சிக்கப்பால் ஒன்றுமே இல்லாதிருப்பின் இறைவனின் ஆற்றலை விளங்கிக் கொள்வதில் அவனுக்குப் பெரும் பிழை ஏற்பட்டு விடக் கூடும். அந்தப் பிழையான எண்ணம் மறுமைக்கான நேரம் வரும்போது இறைவன் இப்பேரண்டத்தை அழித்துவிட்டு இதனினும் சிறந்த மற்றொரு பேரண்டத்தைப் படைக்க ஆற்றல் பெற்றவன் எனும் நம்பிக்கையையும் பாதிக்கக் கூடியதாகவே இருக்கும். இதற்கு மாறாக மனிதனின் விஞ்ஞான அறிவு வளர வளர அவன் உருவாக்கும் தொலைநோக்கிகளின் பார்வைத் திறனும் வளர வளர பேரண்டங்களில் உள்ள காலக்சிகளின் எண்ணிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே சென்றால் இறைவனின் ஆற்றலைப் பற்றிய அறிவியல் சமுதாயத்தின் மதிப்பீட்டில் கூட பிழை ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பு ஏற்படப் போவதில்லை. இறைவனின் ஆற்றலைப் பற்றிய இந்த பிழையற்ற சிந்தனை பரலோக வாழ்க்கையி லுள்ள நம்பிக்கைக்கு அறிவியல் சமுதாயத்திற்கு பலமான அடிப்படையும் அத்தாட்சியுமாகும்.

இம்மையினும் மறுமை பெரிது

மேற்கண்ட இரத்தினச் சுருக்கமான விளக்கத்திலிருந்து இப்பேரண்டத்தை இவ்வளவு பிரமாண்டமான பேருருவத் துடன் படைத்தன் வாயிலாக இறைவனின் ஆற்றல் அபார மானது என்றும் இப்பேரண்டத்தை அவன் அழித்துவிட்டு இதனினும் சிறந்த ஒன்றைப் படைப்பதற்கு அவன் ஆற்றல் பெற்றவன் என்பதற்கு மிக வலுவான ஆதாரமாக அதை ஆக்கியுள்ளான் என்பதையும் ஐயமறத் தெரிந்து கொள் கிறோம். இறைவனின் இந்த நடவடிக்கை உள்ளபடியே மனிதனுக்கு பரலோக வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி அவனை இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கச் செய்து அவனுடைய ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறதன்றோ! இதன் காரணமாகவே ஓர் உயிரினத்தை உயிரியல் அடிப்படையில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் தேவையான போதிலும் உயிரியல் அடிப்படையில் மனிதனாக இருப்பவனை ஆன்மீக அடிப்படையில் மனிதனாக ஆக்குவதற்கு இப்பேரண்டம் மிகமிகத் தேவை என்று கூறியதற்குக் காரணமாகும்.

மேலும் பரலோகத்தில் மனிதன் அனுபவிக்கப் போகின்ற இன்ப வாழ்க்கையாயினும் துன்ப வாழ்க்கையாயினும் அதன் தரத்தோடும் எல்லையற்ற அதன் கால அளவோடும் ஒப்பிடும் போது உலக வாழ்க்கை என்பது புறக்கணிக்கத்தக்க வீரியமற்ற சொற்ப நேர நிகழ்ச்சியாகும். எனவே பரலோக வாழ்க்கையில் வெற்றிக்குதவும் நம்பிக்கையை மனிதனுக்குள் உருவாக்கும் அபாரமான இறையாற்றலின் வெளிப்பாடாக இப் பேரண்டத்தை இறைவன் படைத்திருப்பது பரலோக வாழ்க்கையில் மனிதனை வெற்றி அடையச் செய்வதில் பெரிதும் உதவுகிறது என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

பரலோக வெற்றிக்கு உழைக்கும் குணமே ஆத்மீக அடிப்படையில் ஒருவரை மனிதனாக்கும் காரணியாகும். மனிதனால் சுயமாகத் தீர்மானிக்க முடியாத பரலோக வெற்றிக்குரிய காரியங்களை மனிதனுக்கு ஆத்மாவை வழங்கிய (தனி நபர் சிறப்பியல்பைத் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் இயல்பை அவனுடைய படைப்பில் அமைத்த) இறைவனால் மட்டுமே தீர்மானிக்க முடியும். அந்த செய்திகளை மனிதனுக்கு அறிவித்து அவனது படைப்பின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே அவனுடைய கலைக் கல்லூரிகளாக இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்து அவன் படிக்க வேண்டிய பாட புத்தகங்களாக வேதங்களை இறக்கி அவனது பேராசிரியர்களாக தூதரையும் வழங்கி மனித குலத்தை இறைவன் மிக மிகக் கண்ணியப் படுத்தினான். ஆனால் மனிதர்களில் ஒரு குழுவினர் இதைப் பற்றியயெல்லாம் சிந்திக்காமல் `ஆகாயங்களும் பூமியும் எல்லாம் மனிதர்களுக்காகவே இறைவன் படைத்தான் எனில் பேரண்டம் ஏன் இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது? என வினவிக் கொண்டிருக்கின்றனர்.

இக்கேள்விக்கு மனிதனுக்காக படைக்கப்பட்ட பேரண்டம் இவ்வளவு பிரமாண்டமானதாகவே இருக்க வேண்டும் எனும் பதிலை ஐயத்திற்கிடமில்லாமல் கண்டு விட்டோம். எனவே அறிவியல் சமூகம் எழுப்பும் அதிமுக்கிய மான வேறு சில கேள்விகளின்பால் இப்போது கவனம் செலுத்துவோம்.

அத்தியாயம் 11

கேள்விக் கணைகள்!

``கடவுளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதே மனிதர்களிடமிருந்து கடவுள் எதிர்பார்ப்பதாக இருந்தால் எல்லா மனிதர்களையும் அப்படிப்பட்டவர்களாகவே கடவுள் படைத்திருக்கலாமே! ஏன் கடவுள் அவ்வாறு செய்ய வில்லை?

ஆத்திகர்களை விமர்சிப்பதற்காக நாத்திகர்கள் பரவலாக எழுப்பி வரும் தாத்வீகமான கேள்வியே இதுவாகும். மேலோட்டமாகப் பார்க்கும் போது நியாயமாகத் தோன்றும் இக்கேள்வி குறையுள்ளதாகும். ஏனெனில் இறைவனுடைய கட்டளைக்கு ஒரு போதும் ஒரு விதத்திலும் மாறு செய்யாமல் வாழக் கூடியவர்களை இறைவன் ஏராளமாகப் படைத் துள்ளான். ஆனால் அவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப் படுவதில்லை. அவ்வாறு அழைப்பது தவறாகும். ஏனெனில் பொருட்களின் இயல்புகள் வேறுபடும் போது பெயர்களும் வேறுபட வேண்டும். மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குக் கற்றுத் தந்த முதல் கலையே பெயர்சூட்டும் கலையாகும் என்பது இறைவனின் வேதநூலாம் திருக் குர்ஆனில் காணலாம் (2:31). இறைவனின் கட்டளைகளை மட்டுமே சிரமேற்கொண்டு இம்மியளவும் அவனுக்கு மாறு செய்யாமல் செயற்படும் அப்படைப்பினங்களின் பெயர் `வானவர்கள் (ஹபேநடள) என்பதாகும். எனவே இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே கொண்டவர்களாக மனிதர்களை இறைவன் படைத்திருக்கக் கூடாதா? எனும் நாத்திகக் கேள்வி அர்த்தமற்றதாகும். அப்படியானால் உண்மையிலேயே மனிதர்களிடமிருந்து இறைவன் எதை எதிர்பார்க்கிறான்?

சுயமாக விரும்பி கட்டுப்படுதல்

இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழவும், கட்டுப்படாமல் வாழவும் கூடிய இயல்புடன் தான் நாடிய அளவு படைப்பினங் களைப் படைத்து அவர்களில் சுய விருப்பப்படி இறைவ னுக்குக் கட்டுப்பட்டு வாழ விரும்புகின்றவர்கள் அவ்வாறு வாழ்ந்து காட்டுவதற்காகவும் யார் இறைவனுக்குக் கட்டுப் படாமல் தான் தோன்றிகளாக வாழ விரும்புகிறார்களோ அவர்கள் அதற்கேற்றபடி வாழ்ந்து காட்டுவதற்காகவும் படைக் கப்பட்டவர்களே மனிதர்கள் என்ற பெயரில் அறியப்படுபவர் கள் ஆவார்கள். எனவே மனிதர்களில் இறைவனுக்குக் கட்டுப் பட்டு வாழாமல் இருப்பவர்கள் தோன்றுவது ஒருகாலும் இறைவனுடைய இயலாமைக்குக் காரணமாகாது.

இதைப் போன்று இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர் களை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதும், இறைவனை நிராகரித்து வாழ்பவர்களை நரகத்திற்கு இட்டுச் செல்வதும் அவர்கள் தேர்ந்து கொண்ட வாழ்க்கை நெறிகளின் இயல்பே அன்றி இறைவன் யாருக்கும் அநீதி செய்வதானால் இல்லை.

சுருங்கக் கூறின் சுயமாக விரும்பி இறைவனுக்கு அடி பணிந்து தங்கள் வாழ்க்கையை அர்பணிக்கத் தயாரானவர் களுக்கு அதைச் செயல்படுத்தவும் இறைவனை நிராகரித்து விட்டு விருப்பம் போல் உலக சுகங்களை அனுபவிக்க விரும்பு கின்றவர்களுக்கு அதைச் செயல்படுத்தவும் படைக்கப்பட்ட இனமே மனித இனமாகும். அவர்களுக்காகவே இப்பேரண்ட மும் படைக்கப்பட்டது. இதற்குப் பிறகு பரலோகமும் படைக் கப்பட போகிறது. இவ்விரண்டு உலங்களிலும் இறைவன் இடுகிற பணிகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நிறைவேற் றும் இயல்பைக் கொண்ட மற்றொரு படைப்பினத்தையும் இறைவன் படைத்தான். அப்படைப்பினமே இறைவன் இட்ட பணிகளை இம்மியளவும் பிசகாமல் செய்யும் இயல்புடன் படைக்கப்பட்ட வானவர்களாவர்.

அர்த்தமுள்ள சோதனை

நமது பகுத்தறிவின் நோக்கு நிலையிலிருந்து பார்க்கும் போது வானவர்களைப் போல் இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே பெற்றவர்களாக மனிதன் படைக்கப் படாமல் இருந்ததற்கு இரண்டு பிரதானமான காரணங்களைக் கூறலாம். முதலாவதாக இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே குணமாகக் கொண்டு ஓர் உயிரினம் படைக்கப்பட்டால் இறைவனுக்குக் கட்டுப்படும் விஷயத்தில் அவையாவும் மில்லிமீட்டருக்கு மில்லி மீட்டர் ஒரே மாதிரி யாகவே இருந்து விடும். அதன் பிறகு இவைகளுக்கிடையில் சோதனைகளை இறக்குவதில் அர்த்தமில்லை. ஆனால் இறைவன் தமக்குக் கட்டுப்படுவோரையும் கட்டுப்படாதவர் களையும் சோதித்தறிய நாடியதால் அதற்கேற்ற குணத்தை இயல்பாகக் கொண்டவனாக மனிதனைப் படைத்தான்.

இரண்டாவதாக எந்த உயிரினங்களின் இயல்பு இறைவனுக்குக் கட்டுப்படுதல் என்பதை மட்டுமே செய்யக் கூடியதாக இருக்குமோ அந்த உயிரினங்கள் மேற்கொள்ளும் கட்டுப்படுதல் வெறும் யாந்த்ரீகத் தன்மை வாய்ந்ததாக இருக்குமே அன்றி மானசீகமானதாக இருக்க முடியாது. ஆனால் மானசீகமாக (மனப்பூர்வமாக விரும்பி) இறைவனின் கட்டளைக்கு அடிபணியும் உயிரினங்கள் தோன்றுவதை சாத்தியமாக்க வேண்டும் என இறைவன் நாடியதால் மனித இனத்தை அவன் படைத்தான். இதன் காரணமாகவே இறைவனுக்குக் கட்டுப்பட்டோ அல்லது கட்டுப்படாமலோ வாழும் இயல்பை அவன் மனிதனுக்கு வழங்கினான்.

நாத்திக உலகிலிருந்து பரவலாக எழுப்பப்படும் ``மனி தனை இறைவனுக்குக் கட்டுப்பட்டவனாகவே படைக்கும் ஆற்றல் இறைவனுக்கு இல்லையா? எனும் கேள்விக்கு சுருக்கமாக விடை கண்டோம். இப்போது ஹாக்கிங் அவர்கள் எழுப்பும் ஓரிரு முக்கியமான வினாக்களைப் பார்ப்போம்.

எதிர்காலத் தலைமுறையினரின் பணி

பேரண்டப் படைப்பு நடைபெற்ற போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி ஒரு பெரும் புதிராக இருந்ததை ஹாக்கிங் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். அது இவ்வாறு:

``இப்பேரண்டம் பேரளவில் ஏன் இவ்வளவு சீராக இருக்கிறது? ஏன் இது எல்லா திசைகளிலும் விண்வெளியின் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரியாக உள்ளது? குறிப்பாக வெவ்வேறு திசைகளில் நாம் பார்க்கும் போதும் நுண்ணலை வெப்பப் பின்னணியில் கதிர்வீச்சு கிட்டத்தட்ட ஏன் இந்த அளவு ஒரே மாதிரியாக உள்ளது? இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலுள்ள மாணவர்களிடம் தேர்வு அறையில் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு ஓரளவு ஒத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் சரியாக ஒரே பதிலைத் தந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் செய்தித் தொடர்பு கொண்டார்கள் என்பது உறுதி. இருந்த போதிலும் மேலே விவரிக்கப்பட்ட மாதிரியில் முற்காலப் பேரண்டத்தின் பகுதிகள் (சுநபடிளே) மிக நெருக்கமாக இருந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தொலைவான மற்றொரு பகுதிக்கு பெருவெடிப்பிலிருந்து ஒளி செல்வதற்குறிய நேரத்தை பெற்றிருக்க முடியாது. சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒளியானது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாது என்றால் வேறு எந்தத் தகவலாலும் செல்ல முடியாது. எனவே முற்காலப் பேரண்டத்தின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றைப்போல் மற்றொன்று ஒரே வெப்ப அளவைக் கொண்டதாக இருப்பதற்கு விவரிக்கப்படாத ஏதோ ஒரு காரணம் இல்லாமல் அவை ஒரே வெப்பநிலையைக் கொண்டு ஆரம்பம் செய்யப்பட்டிருக்க முடியாது. (பக்கம் : 127-128)

கற்பனைக் கெட்டாத அளவு அதி, அதி விசாலமான இப்பேரண்டம் பேரளவில் எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை இதற்குமுன் இப்புத்தகத்தில் நாம் விளங்கியுள்ளோம். பேரண்டம் இவ்வாறு அமையவேண்டு மென்றால் தேர்வு எழுதும் மாணவர்கள் சில நேரங்களில் ஒரு மாணவனைப் பார்த்து அனைத்து மாணவர்களும் காப்பி அடித்தால் விடைகள் யாவும் ஒரே மாதிரி அமைவதைப் போன்று பேரண்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தகவல் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஒளியை விட அதிக வேகத்தில் தகவல் சென்றால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதாலும் ஒளியை மீறுகின்ற எந்த வேகமும் பேரண்டத்தில் இல்லை என்பதாலும் பேரண்டம் இவ்வாறு அமைந்ததற்கு நமக்குத் தெரியாத ஏதோஒரு காரணம் இருக்கிறது என்பதே ஹாக்கிங் அவர்களின் மேற்கோளில் காணப்படும் செய்தியாகும்.

இன்றைய மனிதனின் கல்வித்திறனால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் பேரண்டத்தின் பற்பல இரகசியங்களில் ஒன்றே ஹாக்கிங் அவர்களின் மேற்கோளில் நாம் காண்கி றோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத இரகசியங்கள் எதிர் காலத் தலைமுறையினரின் எக்காலமும் வளர்ந்து கொண்டி ருக்கும் கல்வித் திறனைப் பயன்படுத்தி அறிவைப் பெறுக்கு வதற்காக காத்திருப்பவையாகும். அவ்வாறு பெறப்படும் அறிவிலிருந்து பேரண்டதைப் படைத்த இறைவனின் ஆற்றல் அளவிடற்கரியது என்பதை உணர்ந்து அதற்கேற்ப இறைவனை கண்ணியப்படுத்துவதற்கு இப்பேரண்டத்தின் பிரமாண்டமும் அதன் முடிவுறாத இரகசியங்களும் உதவி செய்கிறது. அதற்கு மாறாக இப்பேரண்டத்தின் தோற்றத் தையும் இதில் தோன்றியுள்ள அனைத்தையும் பற்றிய அறிவையும் இப்போதே நாம் பெற்றுவிட்டால் எதிர்கால சந்ததியினரின் அறிவு வளர்ச்சிக்கு வழியில்லாமல் போய் விடும். இந்த நிலை இறைநூலாம் திருக்குர்ஆனின் கூற்றுக்கு மாற்றமானதாகும். எனவே பேரண்டத்தில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வரும் அறிவியல் உண்மைகள் மட்டு மின்றி கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் உண்மைகளும் இறைமறையாம் திருக்குர்ஆனை மெய்ப்பித்துக் கொண்டு வருகிறது என்பதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.

நவீன அறிவியல் யுகத்தின் பிரதான வினாக்கள்

இப்போது ஹாக்கிங் அவர்கள் தமது நூலில் எழுப்பி யுள்ள மற்றொரு முக்கியமான வினாவைப் பார்ப்போம். அது கீழ்க்கண்டவாறு போகிறது.

``நமது பேரண்டம் ஏதேனும் ஒரு நேரத்தில் எவ்வாறு இருந்தது என்பது நமக்குத் தெரிந்து விட்டால் காலத்தினுடன் அது எவ்வாறு முன்னேற்றமடையும் என்பதை அநிச்சய தத்துவத்தின் (ருஉநசவயவைல ஞசஉயீடந) எல்லைக்குள் நின்று கொண்டு நமக்குச் சொல்லித்தரும் ஒரு ஜோடி விதிகளை அறிவியல் திறந்து கட்டி இருப்பதாகக் தோன்றுகிறது. இந்த விதிகள் உண்மையிலேயே கடவுளால் கட்டளையிடப்பட்ட தாக இருக்கலாம். ஆனால் கடவுள் அந்த விதிகளுக்கேற்ப பேரண்டத்தை முன்னேறும்படி விட்டுவிட்டதாகவும் இப்போது அதில் தலையிடுவதில்லை எனவும் தோன்றுகிறது. ஆனால் பேரண்டத்தின் ஆரம்ப நிலையை அல்லது வடி வத்தை அவர் எவ்வாறு தேர்ந்தெடுத்தார். ஆரம்ப நேரத்தின் ``எல்லைக் கோட்டு நிலைகள் (க்ஷடிரனேயசல ஊடினேவைடிளே) என்னவாக இருந்தன?

ஒரு சாதகமான பதில் சொல்வதென்றால் பேரண்டத் தின் ஆரம்ப வடிவம் கடவுள் தேர்ந்தெடுத்ததற்கான காரணங் களை நம்மால் தெரிந்து கொள்ளக் கூடிய எதிர்பார்ப்பிற்கு இடமில்லை. இது நிச்சயமாக எல்லாம் வல்லவனாக இருக்கும் ஒருவரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். ஆனால் அவர் இப்பேரண்டத்தை இதைப் போன்று நம்மால் புரிந்து கொள்ள முடிகின்ற விதிகளுக்கு ஏற்ப அதை பரிணாமம் அடைய விட்டது எதற்காக? (பக்கம் : 129)

ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டில் இரண்டு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. ஒரு மகா, மகா பெரிவெடிப்பு சிங்குலாரிட்டி (பெருவெடிப்பு வினோதம்) யிலிருந்தே நமது பேரண்டம் உருவாகி வந்தது என்பதும் பெருவெடிப்பு சிங்குலாரிட்டி என்பது நாம் அறிந்திருக்கும் அனைத்து அறிவியல் விதிகளையும் பயனற்றதாக்கிவிடும் வினோதத் தன்மை வாய்ந்தது என்பதையும் நாம் முதல் அத்தியாயத்தில் கண்டுள்ளோம். இந்தப் பின்னணியில் ஹாக்கிங் அவர்கள் கேட்க விரும்பும் முதலாவது கேள்வி என்னவெனில் தொடக்கத்தில் இவ்வளவு பிரமாண்டமான பேரண்டத்தை உருவாக்கும் விதிகளை எல்லாம் கட்டளையிடும் அளவிற்கு மாபெரும் ஆற்றலைக் கொண்ட இறைவன் ஒருவன் இருந்திருந்தால் அதன் பிறகு தன் படைப்பாகிய இப்பேரண்டத்தின் பரிணாமப் போக்கில் தலையிடாமல் விதிகளின்படி பரிணமிப்பதற்காக விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டது ஏன்? இரண்டாவதாக படைப்பின் தொடக்க நிகழ்ச்சிகள் எந்தெந்த விதிகளால் எப்படி எப்படி நடைபெற்றன என்பதை முற்றிலும் நம்மால் அறிந்து கொள்ள முடியாத விதத்தில் நடைபெறச் செய்த கடவுள் அதன் பிறகு பேரண்டத்தில் நடந்து கொண்டிருப் பவை யாவும் மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ளும் அறிவியல் விதிகளின்படி நடைபெறச் செய்வது ஏன்?

இருபதாம் நூற்றாண்டின் கடைசி பகுதியைத் தாண்டி விட்டநாம் இதுவரை பெற்ற விஞ்ஞான அறிவின் பின்னணியில் பார்க்கும் போது இக்கேள்விகள் இரண்டும் பிரதானமானவைகளே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இக்கேள்விகளுக்கான விடைகள் இதுவரை நாம் கூறிய செய்திகளிலேயே இறைந்து கிடப்பதை சிலரேனும் கவனித் திருக்கக் கூடும். அவைகளை விளக்கமாகக் காண்போம்.

இறை ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு

பேரண்டத்தின் படைப்பில் இறைவன் அதற்கான விதிகளைக் கட்டளை இட்டதைத் தவிர வேறு எதிலும் தலையிடாமல் இருப்பது அவனுடைய தலையீடு அதில் தேவையில்லை என்பதனால் ஆகும். ஏனெனில் அவனுடைய ஆற்றல் அவ்வளவு மகத்தானது. சாலையில் ஓடிக் கொண்டி ருக்கும் கார் சாலையில் விலகிப் போகாமல் இருப்பதற்காக கார் ஓட்நரின் தலையீடு டீரிங் சக்கரத்தின் மீது (ளுவநநசபே றுநநட) எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இரயில் வண்டியின் ஓட்டுநருக்கு இரயில் வண்டிணயின் மீது இப்படிப்பட்ட தலையீடு தேவையில்லை. இரயில் ஓட்டுன ரின் தலையீடு இல்லாததால் இரயில் வண்டி பாதை விலகுவ தும் இல்லை. இது இரயில் வண்டி ஓட்டத்திற்கான பணிகள் அந்த விதத்தில் சீரமைக்கப்பட்டதன் விளைவாகும். இதைப் போன்று இப்பேரண்டம் மகா பிரமாண்டமானதாக இருந்த போதிலும் அதன் இயக்கத்தை தனது தலையீடு தேவைப்படா மலே நடைபெறச் செய்யும் அளவிற்கு சீரான விதிகளைத் தோற்றுவிக்கும் அதி மகத்தான அபார ஞானம் பெற்றவனாக இறைவன் இருப்பதால் அவன் தொடக்கத்தில் இட்ட விதி களுக்கான கட்டளையே இப்பேரண்டத்தை எப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே அவனது கட்டளை யால் நிலைபெற்று நின்று கொண்டிருக்கும் இப்பேரண்டத் தில் அதன் பிறகு அவனது தலையீடு தேவையும் இல்லை. எனவே அவன் தலையிடுவதும் இல்லை.

பேரண்டத்தின் இயக்கத்தில் இறைவன் ஏன் தலையிட வில்லை? எனும் கேள்வி எந்த அளவிற்கு பிறர் கவனத்தை ஈர்க்கிறதோ அதை விடப் பன்மடங்கு அக்கேள்வியின் வாசகங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் உண்மை திருக்குர்ஆன் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும். அதை விளக்குவோம்.

பேரண்டத்தை நிலைநிறுத்தும் ஈடற்ற கட்டளை

ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட வினாவில் இரண்டு அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று பேரண்டத்தின் இயக்கத்தில் இறைவனின் தலையீடு காணப்படவில்லை என்பது. மற்றொன்று இறைவன் இருப் பது உண்மையானால் அந்த இறைவன் கட்டளையிட்ட விதி களே பேரண்டத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது.

இருபதாம் நூற்றாண்டு வரையிலான அறிவியல் வளர்ச்சியிலிருந்து ஹாக்கிங் அவர்களைப் போன்ற அறிவியல் மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை மனிதக் கரங்களால் மாசுபடாத இறைவனின் பரிசுத்தமான வேதநூலாம் திருக்குர்ஆன் 1400 வருடங் களுக்கு முன் கூறியிருப்பதைப் பார்க்கும் போது உண்மையில் சில கணங்களுக்காவது நம்மை நாமே இழந்து விடுகிறோம். அந்த வசனங்கள் வருமாறு :

``அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலைபெற்று இருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது நீங்கள் பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.

(30:25)

மேற்கண்ட வசனங்கள் ஆகாயத்தையும் பூமியையும் நிலைபெறச் செய்திருப்பது (இயங்கச் செய்து கொண்டி ருப்பது) இறைவனின் கட்டளையே அன்றி அதை நிலைபெறச் செய்யும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் அவனே அவ்வப்போது செய்து கொண்டிருப்பதில்லை என்று கூறுகிறது. இதிலிருந்து பேரண்டத்தை நிலைநிறுத்தும் யாவும் - மிகப் பிரதானமாக விதிகளையும் - அந்தக் கட்டளை உள்ளடக்கி இருந்தது என்பதையும் ஐயத்திற்கிடமின்றி விளங்க முடிகிறது. இதே செய்தியைத்தாம் ஹாக்கிங் அவர்களும் தமது கேள்வியின் வாசகத்தில் கடவுள் பேரண்டத்தை விதிகளுக்கேற்ப முன்னேற விட்டு விட்டதாகவும் இப்போது அதில் தலையிடுவதாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் ஹாக்கிங் அவர்களின் கேள்விக்கு அடிப்படை யாக அமைந்த வாசகம் பேரண்டப் படைப்பைப் பற்றி முதல் அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு நிரூபணமாக அமைந்துள்ளது. அந்த வசனம்,

``அவன் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து ``ஆகு! என்றே கூறுவான். உடனே அது ஆகிவிடும்.

(2:117)

மேலும் மற்றொரு வசனத்தில்,

``ஏதேனும் ஒரு பொருளை அவன் படைக்க நாடும் போது `ஆகு! என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகிவிடும்.

(36:82)

எதைப் படைப்பதாக இருந்தாலும் இறைவனைப் பொருத்தவரை தொடக்கத்தில் இடுகின்ற ஒரேஒரு கட்டளையே போதுமானது என்று கூறும் திருக்குர்ஆனின் அறிவியலை எந்த அளவிற்கு வார்த்தைக்கு வார்த்தை அதி நவீன அறிவியல் உண்மைகள் நிரூபிக்கிறது என்பதற்கு ஹாக்கிங் அவர்களின் கேள்வியின் வாசகங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவ்வளவு அதிமகத்தான அறிவியல் உண்மைகள் எல்லாம் 1400வருடங்களுக்கு முன் உலகில் வாழ்ந்த ஒரு மனிதனின் சுய அறிவைக் கொண்டு கூறப்பட்டவைகளே என நம்புவதற்கு மானிடர் சிலரின் பகுத்தறிவால் எவ்வாறு சாத்தியமாகிறது என்பது உள்ளபடியே பெரும் வியப்பிற்குரிய செய்தியாகும்.

மனித அறிவுக்கு எட்டாததன் முதற் காரணம்

இப்போது ஹாக்கிங் அவர்களின் இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொள்வோம். பேரண்டத்தின் தொடக்கமாகிய பெருவெடிப்பும் ஆரம்ப வடிவம் மற்றும் எல்லைக்கோட்டு நிலைகளும் நம்மால் விளங்கிக் கொள்ள இயலாத விதத்தில் படைத்த இறைவன் அதன் பிறகு நம்மால் புரிந்து கொள்ளும் விதிகளின்படி இப்பேரண்டத்தை இயக்குவது ஏன்? என்பது அவருடைய இரண்டாவது கேள்வி. நாம் இதை இரண்டு கேள்விகளாக மாற்றி அமைத்து விடை காண்போம். எனவே முதல் கேள்வியாக, ``பேரண்டப் படைப்பின் தொடக்கம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலாத படி இறைவன் செய்தது எதற்காக? என்பதாக வைத்துக் கொள்வோம். இறைவன் அவ்வாறு செய்ததற்கு இரண்டு காரணங்களை திருக் குர்ஆனிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

முதல் காரணம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள வேற்றுமையை அடிப்படையாகக் கொண்ட தாகும். பெருவெடிப்பும் ஏனைய ஆரம்ப நிகழ்ச்சிகளும் ஒரு பொருளை சூனியத்திலிருந்து படைக்கும் படைப்பின் முழுமையான பணியாகும். இந்த ஞானம் இறைவனின் அடையாளமாகவே திருக்குர்ஆன் கூறுகிறது. சான்றாக :

``அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற உங்கள் தெய்வங் கள் பூமியில் அதனைப் படைத்தன என்பதை எனக்குக் காட்டுங்கள்......!

(35:46)

``...... அவர்கள் அல்லாஹ் படைத்தது போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார் என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன். அவன் தனித்தவன். அடக்கியாள்பவன்.

(13:16)

மேற்கண்ட வசனங்கள் ஒரு அணுவைக் கூட அல்லது அணுவிற்கே அடிப்படையாக அமைந்த ``குவார்க்குகளைக் (ணுரயசமள) கூட (இதற்கு மேல் நுண்மையாக இந்தத் தேதி வரை மனிதனால் சொல்ல முடியவில்லை) முழுமையாகப் படைக்கும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே அன்றி வேறு எவருக்கும் இல்லை என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. ஆற்றலின் தோற்றுவாய் ஞானமாகும் என்பதை நாம் முன்னர் கண்டுள்ளோம். எனவே ஒரு பொருளை முழுமையாகப் படைக்கும் ஆற்றல் என்பது இறைவனின் ஞானத்தைச் சார்ந்ததாகும். அந்த ஞானம் படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நிலை நிறுத்துவதில் பிரதான பங்கேற்பதால் படைப்பின் தொடக்கப் பணிகள் நாம் விளங்கிக் கொள்ளும் விதத்தில் இறைவன் நடைபெறச் செய்திருக்க வேண்டும் என்பது நடைபெறக் கூடாததாகும்.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம் இறைவனின் நாட்டத்தைச் சார்ந்ததாகும். மனிதனின் அறிவுக்கு ஒரு எல்லை உண்டு என நாம் முன்னர் கண்டுள்ளோம். இப்பேரண்டததில் இப்போது நிலைநிற்கும் அனைத்து விதிகளையும் அறியும் ஆற்றல் மனிதனுக்கு இருந்தும் கூட அந்த ஆற்றலால் பேரண்டத்தின் தொடக்க நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது மனிதனின் அறிவாற்றலின் எல்லைக்கப்பால் உள்ளதாகப் பொருள்படுகிறது. இந்த நிலையில் மனிதனுக்கு அதை இறைவன் ஏன் விளங்கச் செய்யவில்லை என்று கேட்டால் இறைவன் மனிதனை மனிதனை விட முன்னேறிய மற்றொரு படைப்பினமாக ஏன் படைக்கவில்லை? என்பதே அதன் அர்த்தமாகும். எந்தெந்த உயிரினங்களை எந்தெந்த ஆற்றலுடன் படைக்க வேண்டும் என்பது படைப்பின் நோக்கத்தை தீர்மானிக்கும் படைப்பாள னின் நாட்டத்தைப் பொருத்ததே என்பதால் மனிதனை இவ்வாறு (அநிச்சய தத்துவம் அனுமதிக்கும் எல்லைக்குட் பட்ட - இதைப் பற்றி நாம் முன்னர் விளக்கியுள்ளோம் - விதத்தில்) படைத்ததும், படைப்பின் முன்தொடக்க நிகழ்ச்சி களை அறியும் அறிவாற்றல் இல்லாமல் மனிதன் இருப்பதும் இறைவனின் நாட்டப்படி நடைபெறுவதாகும்.

மேற்கண்ட காரணங்கள் இரண்டும் அறைவனின் ஆற்றல் எல்லையற்றது என்பதை தெளிவாக்குகிறது. மனித னின் அறிவுக்கு எட்டியவரை பார்க்கும் போது இம்மாபெரும் பேரண்டத்தையே தமது ஒரேஒரு கட்டளையைக் கொண்டு படைக்கும் ஆற்றலையும் அதன் பிறகு அக்கட்டளையி லிருந்து தோன்றிய விதிகளாலேயே இப்போதும் பேரண்டத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அளவிற்கு இறைவனின் ஆற்றல் ஈடுஇணையற்றது என்பதும் தெரிய வருகிறது. ஆயினும் இறைவனின் ஆற்றல் நமது அறிவுக்கு எட்டியதை விட மிகப் பெரிதாகும் என்பதே பேரண்டப் படைப்பின் தொடக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதை மனித அறிவால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாமற்போனதிலிருந்து தெரிய வருகிறது.

எனவே இறைவனின் எல்லையற்ற ஆற்றலைப் பற்றிய மேற்கூறப்பட்ட அறிவியல் உண்மைகள் இப்பேரண் டத்தை அறைவன் அழித்து விட்டு மற்றொரு பேரண்டத்தையும் அதில் நம்மையும் தோன்றச் செய்வது இறைவ னுக்கு மிக மிக எளிதான விஷயம் என்பதை அறிவியல் பூர்வமாக நம்மை நம்பச் செய்கிறது. எனவே படைப்பின் முன் தொடக்கப் பணிகளில் நம்மால் விளங்கிக் கொள்ள இயலாத விதிகளை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? என்ற கேள்விக்கு நாம் விடை கண்டு விட்டதால் ஹாக்கிங் அவர்களின் அடுத்த கேள்விக்குச் செல்வோம்.

குருடன் கை சித்திரம்?

பேரண்டப்படைப்பின் முன் தொடக்கப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை நாம் அறியாத விதிகளால் இறைவன் நடைபெறச் செய்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற யாவும் நாம் அறிந்து கொள்ளும் விதிகளைப் பயன்படுத்தி நடைபெறச் செய்தது ஏன்?என்பதற்கு பிரதானமான மூன்று காரணங்களைத் திருக்குர்ஆனிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. அவற்றுள் முதலாவது காரணம் நாம் இந்த புத்தகத்தில் முன்னர் கூறிபடி இப்பேரண்டம் மனிதனின் உபயோகத்திற்காகப் படைக்கப் பட்டது என்பதாகும். இப்பேரண்டத்தை இயங்கச் செய்யும் விதிகளை எந்த அளவிற்கு மனிதன் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதைச் சிந்தித்தால் இக்கேள்விக்கு நிறைவான பதிலை அச்சிந்தனையிலிருந்து பெறமுடியும் என்பதில் ஐயமில்லை.

மனிதன் எப்போது நெருப்பைப் பற்ற வைக்கக் கற்றுக் கொண்டானோ அதுவே இயற்கை சக்திகளை மனிதன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியதன் முதல் கல்வைப்பாகும் என்பது அறிவியலாளர்களின் பரவலான ஒரு கருத்தாகும் என்பதை நாம் அறிவோம். பருப்பொருளை ஆற்றலாக மாற்றும் வினையே ``எரிதல் ஆகும். பருப் பொருளை ஆற்றலாக்குவது எப்படி என மனிதன் அறியாமல் இருந்திருந்தால் அவனால் நெருப்பை உருவாக்கியிருக்க முடியாது. எனவே நெருப்பின் பயன்பாட்டையும் அவனால் அறிந்திருக்க முடியாது. நெருப்பு மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை பட்டியலிட்டுக் கூற வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு அனைவரும் அறிந்ததே! சுருங்கக் கூறின் நெருப்பை உருவாக்கும் கலையை நம்மால் கற்றக் கொள்ள இயலாத வகையில் இறைவனே அதன் விதியை வடிவமைப்பு செய்திருந்தால் நாம் இன்றும் கூட விலங்குகளாகவே (சமூகப் பிராணிகளாக - ளுடிஉயைட ஹஅயேடள) இருந்திருப்போம் என்பதில் ஐயமில்லை.

மனிதனின் அறிவு படிப்படியாக முன்னேறி நீராவியின் ஆற்றலைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டு தமது வாழ்க்கை வசதிகளை பற்பல வகையில் பெருக்கிக் கொண்டான். காலம் செல்லச் செல்ல வளர்ந்து கொண்டே வந்த மானிடனின் கல்வித் திறன் நியூட்டனின் கண்டுபிடிப்புகளால் உலகின் போக்கையே திருப்பி விட்டது. இயந்திரவியல் தலத்தில் (ஆநஉயஉயட குநைடன) மனிதன் நுழைவதற்கான ஆற்றலை நியுட்டனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு உருவாக்கித் தந்தது.

ஐன்டீன் அவர்கள் இயற்கை விதியிலிருந்து கண்டு பிடித்த நு = ஆஉ2 எனும் சமன்பாடு நமது ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. தொலை பேசி கள்,ராடார்கள், இராக்கெட்கள், செயற்கைத் துணைக்கோள் கள் மற்றும் மின்சாரம் போன்றவை யாவும் இயற்கை விதிகளை மனிதன் தனக்கு சாதகமாக வசப்படுத்திக் கொள் கிறான் என்பதற்கு வலுவான சான்றுகளாக இருக்கின்றன. இந்த நிலையில் நம்மால் புரிந்து கொள்ள இயலாத விதிகளால் இறைவன் இப்பேரண்டத்தை இயங்கச் செய்திருப் பின் நாம் அவைகளை நமது வசதிக்காக எவ்வாறு பயன்படுத்தி இருக்க முடியும்? எனவே அது குருடன் கை சித்திரம் போன்று பயனற்றதாகும். இதுவரை நாம் கண்ட அறிவியல் ஆதாரங்களிலிருந்து நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய விதிகளால் இப்பேரண்டத்தை இறைவன் இயங்கச் செய் திருப்பது திருக்குர்ஆனிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொண்டதைப் போன்று இந்த வானங்களும் பூமியும் இதிலுள்ளவைகளும் மனிதனுக்காகவே படைக்கப் பட்டது என்பதை உண்மை என நிரூபித்துக் கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் ஆதாரமாகும்.

இறைவனுக்குத் தேவைகள் இல்லை

இப்பேரண்டத்திலுள்ள காலக்சிகள் எவ்வளவு என்பது இப்போதும் தெரியவில்லையாயினும் இதுவரை கண்டுபிடிக் கப்பட்டவைகளே பத்தாயிரம் கோடிக் கணக்கானவைகளா கும். அவை ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் கோடிக் கணக்கான நட்சத்திரங்கள். இவ்வளவு பிரமாண்டமான பேரண்டத்தைக் கண்ணுறும் அறிவியலாளர்களில் ஒரு சாராருக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் எவ்வகையிலும் மனிதனுக்குத் தேவையில்லை என்ற பிரமிப்பு ஏற்படுவதும் அதனால் இறைவன் உண்டென்றால் அந்த இறைவனுக்கு ஏதோ ஒரு வகையில் இப்பேரண்டம் தேவைப்படக் கூடும் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. மனிதன் வெறும் சமூகப் பிராணியாகக் கருதப்படுவதால் தோன்றுகின்ற இந்த எண்ணத்தை இதற்கு மேல் கைவிட வேண்டும் என்பதற் குரிய நியாயமான காரணங்களை இந்நூலில் பல இடங்களில் விளக்கியுள்ளோம். அறிவியல் சமுதாயத்தையும் கருத்தில் கொண்டு இப் பேரண்டத்தின் படைப்பாளன் இறக்கி வைத்த அவனுடைய கடைசி நூலில் கடுகளவும் ஐயத்திற்கும் இடமின்றி அவனுடைய தேவையைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:

``உமது இறைவன் தேவைகளற்றவன்; இரக்கமுள்ளவன்.

(6:133)

``அல்லாஹ் தன் படைப்பினங்களின் தேவையற்றவன்

(3:97)

``அல்லாஹ் தேவைகளற்றவன்

(2:112)

இப்பேரண்டத்தின் படைப்பாளனாம் அல்லாஹ்விற்கு எவ்விதத் தேவைகளும் இல்லை எனக் கூறும் வசனங்கள் திருக்குர்ஆனில் பற்பல இடங்களில் காணப்படுகின்றன. தேவையோடு இருத்தலும் அது நிறைவேறாத போது அழிவுறுதலும் படைப்பினங்களின் குணமாகும். தேவையற்ற சுயம் சம்பூரணனாக (ளுநடக ளுரககஉநைவே) இருத்தல் இறைமையின் பண்பாகும். எனவே ஹாக்கிங் அவர்கள் தன் நூலின் இறுத்தியில் எழுப்பிய``டீச னடிநள வை நேநன ய உசநயவடிச, யனே கை ளடி, னடிநள ந யஎந யலே டிவாநச நககநஉவ டி வாந ரஎநசளந? ஹனே றாடி உசநயவநன அழூ (அல்லது அதற்கு ஒரு படைப்பாளன் தேவையா? அப்படியானால் அவருக்கு இப்பேரண்டத்தின் மீது வேறு ஏதேனும் விளைவுண்டா? மேலும் அவரைப் படைத்தது யார்?) வினாவிற்கு திருக்குர்ஆனிலிருந்தும் அதை நிரூபிக்கும் அறிவியல் ஆதாரங்களைக் கொண்டும் நாம் நிறைவான பதிலைக் கண்டு விட்டோம். (கடவுள் உண்டென்றால் அவரைப் படைத்தது யார்? என்ற கேள்விக்கு நாம் இதற்கு முன் மற்றொரு இடத்தில் பதிலளித்துள்ளோம்) எனவே இறைவனின் பிரமாண்டமான படைப்பினமாகிய இப்பேரண்டத்தை இறைவனுக்கு ஏதோ தேவைகள் இருந்து அவைகளை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டது இல்லை என்றும் இது மனித இனத்திற்கு வசப்படுத்தப்பட்டு அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதற்காகவே படைக்கப் பட்டது என்பதில் இதற்கு மேல் ஐயத்திற்கு இடமில்லை.

நாம் இதுவரை கூறியதிலிருந்து நமது அறிவியல் ஞானத்திற்கு எட்டிய அறிவியல் விதிகளால் இறைவன் இப்பேரண்டத்தை இயங்கச் செய்திருப்பது இப் பேரண்டத்தை திருக்குர்ஆன் கூறியபடி மனித இனத்திற்கு வசப்படுத்தித் தருவதற்காகவே என்பதையும் நம்மால் புரிந்தது கொள்ள முடியாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப் படுமாயின் இப்பேரண்டம் நமக்கு வசப்படாது என்பதையும் ஐயமற விளங்கிக் கொண்டோம்.

இரண்டாவது காரணம்

நம்மால் புரிந்து கொள்ள முடியாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப்பட்டால் கவலைக்கிடமான மற்றொரு பிரச்சனையை அது தோற்றுவித்து விடும். உயிரியல் நோக்கில் அதுஒரு பிரச்சனையாகவே தோன்றாவிடினும் ஆன்மீகப் பார்வையில் அது மிக மோசமான பிரச்சனையாகும்.

இப்பேரண்டத்தை இயக்கும் விதிகள் எதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் இப்போதுள்ள பகுத்தறிவு நமக்கு இருக்கவும் செய்தால் இப்பேரண்டம் இறைவனின் தேவைகளுக்காவே படைக்கப் பட்டதன்றி மனிதனுக்காக அது படைக்கப்படவில்லை என மனிதனை நம்ப வைக்கும். மனிதனுக்காக இப்பேரண்டம் படைக்கப்பட்வில்லை என்றால் ஏனைய உயிரினங்களைப் போன்றே மனிதனிடமிருந்தும் இறைவன் எதையும் நாடவில்லை என்ற எண்ணத்தை அது தோற்றுவிக்கும். இறைவனுக்குக் கீழ்படிந்து வாழவே மனிதன் படைக்கப் பட்டான் என்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லாமல் போனால் மனிதன் மனம் போன போக்கில் விலங்குகளைப் போன்று வாழ்வதற்கு உரிமம் (டுஉநஉந) வழங்கப்படுவதாக அது அமைந்து விடும். இது மனிதனின் ஆன்மீக வாழ்க் கையை சீரழிக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இப்பேரண்டத்தின் படைப்பு இறைவனின் சொந்தத் தேவையை பூர்த்தி செய்யப் படைக்கப்பட்டது என்ற எண்ணம் மற்றொரு விதத்திலும் மனிதனுக்கு ஆன்மீக சீரழிவை உண்டாக்கும். எவ்வாறெனில் பேரண்டம் இறைவனின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் படைக்கப் பட்டது என்ற தப்பெண்ணம் இறைவன் தேவையால் கட்டுண்டவனாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒப்பான தாகும். இறைவனைப் பற்றி இவ்வாறு கூறுவது ஒரு மனிதனைப் பார்த்து நாய் என்றும், கழுதை என்றும் வசைச் சொல் கூறுவதை விட பெரும் குற்றமாகும். ஏனெனில் ஒரு மனிதனை விட நாயும், கழுதையும் எவ்வளவு கீழ்தரமானவை களோ அதை விட இறைவனோடு ஒப்பிடும் போது தேவை களால் கண்டுண்டிருக்கும் ஒருவர் மிகமிக கீழ்தரமானவரா வார். இறைவனைப் பற்றி இவ்வாறு எண்ணம் கொள்வது ஆன்மீகத் தலத்தில் மனிதனைச் சீரழித்து விடக் கூடியதாகும். எனவே மனித அறிவுக்கு எட்டாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப்பட்டால் அது மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கு எதிரான நடவடிக்கையாக இருந்திருக்கும். அறிவுக்கே தோற்றுவாயாம் இறைவனிடமிருந்து இது போன்ற அபத்தங்கள் ஒரு போதும் நிகழ்வதில்லை.

மூன்றாவது காரணம்

நாம் அறிந்த அறிவியல் விதிகளின் படி இப்பேரண்டம் இயக்கப்படுவதால் நாம் அடையும் மற்றொரு மாபெரும் பயன்பாடு அறிவியல் யுகம் தொடங்கிய பிறகு அதில் வாழும் மக்களுக்கு மெய்யான இறைவனையும் அவனது போதனை களையும் மிகச் சரியாக அடையாளம் காட்டப் பயன்படுகிறது என்பதாகும். பொதுவாக அறிவியல் சமுதாயத்தின் பகுத்தறிவைக் கொண்டு இப்பேரண்டத்திற்கு ஒரு படைப்பாளன் உண்டு என்பதையும் அவனது அறிவும் ஆற்றலும் எல்லையற்றது என்பதையும் வேறு சில இறைமைப் பண்புகளையும் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இறைவன் எதற்காக நம்மைப் படைத்தான் என்பதையும் நாம் நிறைவேற்ற வேண்டிய கடமை என்ன என்பதையும் இறைவனுடைய வேதங்களே கற்றுத்தர வேண்டியுள்ளது. ஆனால் வேதங்கள் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை முன்னுரையில் கூறியுள்ளோம். (தேவைப்படுவோர் மீண்டும் அதைப் பார்வையிடுக)

மனிதக் கரங்களால் தூய்மையற்ற நிலையில் வேதங்கள் (திருக்குர்ஆனைத் தவிர) இருக்கும் நிலையில் மனிதக் கரம் தொடாத தூய்மையான வேதம் உண்டா என்பதைக் கண்டறிய அறிவியல் சமுதாயம் அறிவியல் பார்வையை அளவுகோலாகக் கொள்கிறது. எனவே இந்தச் சமுதாயத்திற்கு அறிவியல் ஆதாரங்களைத் தரும் பொருட்டு ஏராளமான அறிவியல் உண்மைகளை கலப்படமற்ற இறைவனின் தூய்மையான வேதநூல் தன்னகத்தே கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத தேவை ஏற்படுகிறது. ஆனால் அந்த அறிவி யல் உண்மைகள் அந்தச் சமுதாயத்தின் அறிவியல் அறிவுக்கு எட்டாததாக இருந்தால் அந்த அறிவியல் உண்மைகளை கூறுவதால் எப்பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இறை வனின் தூய்மையான வேதநூல் எது என்பதை அறிவியல் சமுதாயம் அறிய வேண்டுமானால் வேதநூல் கூறும் அறிவி யல் உண்மைகள் அறிவியல் சமுதாயத்திற்கு எட்டியதாக இருக்க வேண்டும். அறிவியல் சமுதாயத்திற்கு அவை எட்ட வேண்டுமானால் இப்பேரண்டம் அறிவியல் சமுதாயத்திற்கு விளங்கும் விதிகளால் இயக்கப்படவும் வேண்டும். இதற்கு ஏராளமான சான்றுகளை நாம் திருமறையில் கண்டுள்ளோம். அவற்றுள் சில : ``வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டடையும் நாமே பிரித்தோம் என் பதையும் உயிரிள்ள ஒவ்வொரு பெருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (இத்திருமறை நமது வார்த்தைகள் இல்லை என்று கூறி) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? (21:30) என ஓரிடத்திலும், ``சிறகுகளை விரித்தும் சுருக்கியும் தங்களுக்கு மேல் பறக்கும் பறவை களை இவர்கள் பார்க்கவில்லையா?கருணை மிக்க இறைவனைத் தவிர அவைகளை (இடையூறுகளிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கவில்லை. (ஆம்!) திண்ணமான அவன் யாவற்றின் மீதும் பார்வையுள்ளவன் (67:19) என மற்றொரு இடத்திலும் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வசனங்களைப் போன்று மேலும் பற்பல வசனங்களை திருக்குர்ஆனில் நாம் பார்க்க முடியும். இந்த வசனங்களில் ஒரு தனிச்சிறப்பான வார்த்தைப் பிரயோகத்தை திருக்குர்ஆன் பயன்படுத்தி இருப்பது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். ``(திருக்குர்ஆனை) மறுப்பவர் சிந்திக்க வேண்டாமா?; ``அவர்கள் பார்க்கவில்லை? என்பன போன்ற பிரயோகங்கள் அறிவியல் சமுதாயத்தையே குறிப்பாக சுட்டுகிறது என்பதையும் அந்த வசனத்தில் கூறப்படுகின்ற அறிவியல் தகவல்கள் உண்மையானால் அந்த அறிவியல் உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு திருக்குர்ஆன் இறைவனின் வேதநூல் என்பதை அச்சமுதாய மக்கள் நம்ப வேண்டும் என்பதே அவ்வசனங்களின் பொருளாகும். ஆனால் அந்த வசனங்களில் கூறப்பட்ட செய்தி உண்மைதாமா என அறிவியல் சமுதாயம் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் பேரண்டத்தின் முன் தொடக்க நிகழ்ச்சி களுக்குப் பிறகு பேரண்டத்தின் இயக்கம் எவ்வாறு நடைபெற்றது என்பதையும் அந்த இயக்கத்தைத் தோற்று விக்கும் விதிகள் எவை என்பதையும் அறிவியல் சமுதாயத் தின் அறிவுக்குப் புரியும்படி இருக்கவேண்டுமல்லவா? எனவே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மை கள் உலக மக்களுக்கு படிப்படியாக நிரூபித்துக் காட்டி அறிவியல் பார்வையில் அணுகினாலும் திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதை அறிவியல் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டுமாயின் மனிதனுக்குப் புரிந்து கொள்ளும்படியான விதிகளின்படி இப்பேரண்டம் இயக்கப் படவேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

இதர வேதங்கள் பாதுகாக்கப்படாதது ஏன்?

இம்மாறையால் அதை வழங்கிய இறைவன் தற்போதும் செய்து காட்டிக் கொண்டிருக்கும் மற்றொரு அற்புதம் யாதெனில் இந்த வேதநூலைப் பாதுகாக்கும் பணியை இறைவனே செய்து கொண்டிருப்பதாகும். (பார்க்க 15:9) இதைக் கேள்விப்படும் சகோதர மதங்களைச் சார்ந்த சிலர், ``நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் குர்ஆனுக்கு முன் இறங்கிய வேதங்கள் எதையும் இறைவன் பாதுகாக்காமல் குர்ஆனை மட்டும் பாதுகாப்பது ஏன்? எனக் கேட்கின்றனர். அவர்களின் நியாயமான இக்கேள்விக்கு அதை விட நியாய மான பதிலைக் கூறுவது இந்த இடத்தில் பொருத்தமான தாகும்.

திருக்குர்ஆனுக்கு முன் இறக்கப்பட்ட இறைவனின் ஏனைய வேதங்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினருக் காகவும், ஒரு குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே செயல்பட வேண்டிய நிலைகளைக் கொண்டவையுமாகும். எனவே இவ்வேதங்களின் பாதுகாப்பை இறைவனே ஏற்றுக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவ்வேதங்களில் அவனே மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அவனே மாற்றப் போகும் வேதங்களை அவன் எதற்குப் பாதுகாக்க வேண்டும்? மேலும் விரிவஞ்சிச் சுருங்கக் கூறினால் இறைவனே பாதுகாப்பதாக ஒரு வேதம் அறிவிக்கப்பட்ட (அல்லது கருதப்பட்ட) பிறகு அந்த வேத புத்தகத்தில் கூறப்பட்டதற்கு மாற்றமான மற்றொரு சட்டத்தை மற்றொரு தூதர் வாயிலாக மற்றொரு வேதநூலில் கூறப்படுவது அந்த இறைத்தூதரையும் அவர் கொண்டு வந்த இறைவேதத்தையும் மக்கன் நிராகரிப்பதற்கு துணைபுரியுமே அன்றி அப்புதிய வேதத்தைப் பின்பற்றுவதற்குத் துணை புரியாது.

ஆனால் திருக்குர்ஆன் வேதங்களின் பட்டியலில் கடைசியானது. இது உலகிற்கிறங்கி 1400வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் எவ்வளவு நூற்றாண்டுகள் இவ்வுலகம் இருக்கப் போகின்றதோ அவ்வளவு காலத்திற்கும், உலக மக்கள் அனைவருக்கும் இது இறைவனின் வேதநூலாக நிலைநிற்க வேண்டியது. எனவே இந்நூல் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும். அதில் கலப்படங்கள் கலந்து விடாமல் அந்த நூல் தூய்மையாக, பரிசுத்தமாக, பரிசுத்தம் என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். இப்பணியைச் செய்யும் ஆற்றல் இவ்வுலக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருக்குர்ஆனை நாம் களங்கப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும் அவர்களால் அது இயலாத காரிமாகும். ஏனெனில் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர் மறைந்து போய் அவர்களுக்குப் பின் வரக்கூடியவர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்குத் தெரியும்?எனவே அப்பணியைச் செய்யும் பொறுப்பை அல்லாஹ்வே எடுத்துக் கொண்டான். இதுவே இறைவன் பல வேதநூல்களை உலகிற்குத் தந்திருந்த போதும் அந்நூல்கள் எதன்மீதும் செய்யாத இம்மாபெரும் அற்புதத்தை திருக் குர்ஆன் மீது செய்துகாட்டியிருப்பதற்குரிய காரணமாகும்.

திருக்குர்ஆனைப் பற்றிய திருத்தூதரின் மதிப்பீடு

திருக்குர்ஆனைப் பெற்றுத் தந்த இறைத்தூதர் முஹம்மத் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்) பற்பல அற்புதங்களைக் காட்டிய வரலாற்றை நபிமொழி நூல்களில் காணலாம். ஆனால் திருக்குர்ஆனுக்கு முன்னால் அந்த அற்புதங்கள் குறிப்பிடும்படியாக இல்லை என உணர்த்தும் அவருடைய அறிவிப்பு ஒன்று இவ்வாறு கூறுகிறது.

``மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக அற்புதங்கள் வழங்கப்படாமல் தூதர்களுக்கிடையில் ஒரு தூதரும் இருந்ததில்லை. ஆனால் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் அல்லாஹ் எனக்குத் தந்த இறைவெளிப்பாடாகும். எனவே மறுமை நாளில் வேறு எந்தத் தூதரையும் விட என்னுடைய பின்பற்றாளர்கள் அதிகமாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்

(ஸஹீஹ் புகாரி 4981, 7274)

தமக்கு வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமாக திருக் குர்ஆனை திருத்தூதர் அவர்கள் குறிப்பிடும் போது திருக் குர்ஆனின் பெயரோடு தம்மால் செய்து காட்டப்பட்ட எந்தஒரு அற்புதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அவரோ ஏனைய தூதர் களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற அற்புதங்கள் வழங்கப் பட்டிருந்தார் என்பது நபிமொழிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து திருக்குர்ஆன் எனும் அற்புதம் அவ்வளவு மக்கதத்தானதும் ஈடுஇணை அற்றது மாகும் என்பதை அறியலாம். திருக்குர்ஆன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட அற்புதங்கள் சிலவற்றையே இந்நூலில் நாம் இதுவரை கண்டுவந்தோம். அவைகளை காய்தல் உவத்தலின்றி சிந்திப்பீர்களாக! இந்த நூலின் முதல் தொகுதி (குசைளவ ஏடிடரஅந) முடிவுரையுடன் நிறைவடைகிறது.

-: முடிவுரை :-

திருக்குர்ஆனில் காணப்படும் அதிஅற்புதமான ஞானமாம் பேரண்டவியல், வானியல் மற்றும் வான் இயற்பியல் போன்ற வற்றிலிருந்து சில செய்திகளை மட்டுமே நாம் இந்நூலில் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் ஆய்வுக்கண் கொண்டு இம் மாமறையை ஆராய்பவர்களுக்கு அறிவியலின் பிரதான துறைகளைச் சார்ந்த ஏராளமான அறிவியல் உண்மைகளை அதில் அவர்கள் காணமுடியும். அச்செய்திகள் யாவும் திருக் குர்ஆன் ஒருக்காலும் மனித சக்தியால் இயற்ற முடியாதததும் இறைவனால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடியாதாகும் என்பதற்கு வலுவான ஆதாரங்களாகும்.

அறிவியல் ஆதாரங்கள் மட்டுமன்றி வரலாறு, இலக்கியம், தத்துவம் போன்ற பல்துறை சான்றுகளையும் இம்மாமறை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் காரணமாகவே திருக் குர்ஆனில் அதன் தோற்றுவாயாம் அகிலங்களின் அதிபதி கீழ்க்கண்டவாறு அறைகூவல் விடுத்துள்ளான். அது வருமாறு:

``இந்தக் குர்ஆனைப் போன்று (ஒருநூலை) கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இதைப் போன்றதைக் கொண்டுவர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே என்று (துதரே தாங்கள்) கூறுவீராக! (17:88)

இதைப் போன்ற அறைகூவல்கள் திருக்குர்ஆனில் அவ்வப்போது விடப்பட்டுள்ளன. (பார்க்க :2:23, 10:38, 28:49, 52:34, 11:13) இருப்பினும் இந்நாள் வரையிலும் திருக் குர்ஆனுடைய இந்த அறைகூவலை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

திருக்குர்ஆனைத் தவிர வேறுசில வேதநூல்களிலும் ஒருசில அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றனவே. இவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவைகளையும் இறைவனின் தூய்மையான வேதங்களே என ஏன் கூறக் கூடாது? என சிலர் வினவக் கூடும். அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய அறிவியல் உண்மைகள் அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு நூற்றாண்டு களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாகக் கூறும் ஞானம் இறைவனைச் சார்ந்ததாகும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அதைக் கூறிய நூல்களில் மனிதக் கரங்கள் புகாமல் தூய்மைகாகப் பாதுகாக்கப் பட்டுள்ளனவா என்பதைத் தீர்மானிப்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிரான செய்தி ஒன்று கூட அந்நூலில் இல்லாமலிருப்பதாகும். இந்த நிபந்தனையை நிறை வேற்றும் வேதநூல்கள் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. மெய்யும் பொய்யும் இரண்டறக் கலந்த அறிவியல் அறிவிப்புகள் ஒரு போதும் பாதுகாக்கப்பட்ட நூலாக இருக்க இயலாது. அதே நேரத்தில் பொய்யும், மெய்யும் இரண்டறக் கலந்த வேத நூல்கள் இருப்பது மனிதக் கரங்களால் முன் வேதங்கள் தூய்மை இழந்து விட்டதாகக் கூறும் திருக்குர்ஆனின் கூற்றை மெய்ப்பிப்பதற்கு ஆதாரமாகவே அமையும்.

ஏனைய வேதநூல்களில் நிலை இவ்வாறு இருக்கும் போது அந்த நூல்கள் எதிலும் கூறப்படாத ஏராளமான அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் கூறப்பட் டுள்ளது. ஆயினும் அவைகளில் ஒன்று கூட இன்றைய தேதிவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளால் பொய்ப்பிக்கப் படவில்லை என்பதோடு அந்த அறிவியல் கண்டு பிடிப்புகள் திருக்குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை மெய்ப்பிக்கும் பணியையே செய்து வருகின்றன.

திருக்குர்ஆனில் நாம் கண்ட மற்றொரு அற்புதம் அறிவியல் உலகில் தலைசிறந்து விளங்கிய அறிவியலாளர் களுக்குக் கூட தவறுகள் நேரும் அளவிற்கு மிகமிக சிக்கலான அறிவியல் செய்திகளைக் கையாளும் போது கூட திருக் குர்ஆனுக்கு மட்டும் எவ்விதத் தங்கு தடைகளோ. தயக்கமோ, தவறுகளோ எள்ளளவும் நேர்ந்து விடவில்லை என்பதாகும். சான்றாக இப்பேரண்டம் தோற்றமோ, முடிவோ இல்லாதது; பேரண்டம் நிலையானது (ளுவயவஉ); விண்ணகத்தின் ஓட்டைகள் உருவானது; பூமி நகராமல் ஒரே இடத்தில் நிலைபெற்றுள்ளது மற்றும் ஐன்டீனையும் அடிசறுக்கச் செய்த அவருடைய `எதிர் ஈர்ப்பு (யவேபைசடிறவைல) என அறிவியலாளர்களைத் தவறான முடிவிற்கு இட்டுச் சென்ற பிரச்சனைகளில் கூட திருக்குர்ஆன் அடிசறுக்காமல் மிகச் சரியான அறிவியல் தகவல்களையே தந்தது என்பதும் முடிவில் அறிவியல் உலகம் தவறுகளைத் திருத்திக் கொண்டு திருக்குர்ஆனின் அறிவியலையே ஒப்புக் கொள்ள நேர்ந்தது என்பதாகும்.

ஒரு எளிய அறிவியல் வாசகனால் அறிவியலின் மிகச் சில துறைகளைத் தனது சக்திக்கேற்ப ஆய்வு செய்ததிலேயே திருக்குர்ஆன் இறைஞானத்தால் வெளிப்படுத்தப்பட்டு பரிசுத்தமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இவ்வளவு வலுவான, ஆழமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதை வாசகர்கள் தேவையான கவனத்துடன் பரிசீலனை செய்யும்படி வேண்டுகிறேன். இந்நூலில் என்னிடமிருந்து தவறுகள் நேர்ந்திருந்தால் மன்னித்தருளுமாறு முதற்கண் இறைவனிடம் மன்றாடுகிறேன். மேலும் வாசகர்களின் கவனத்திற்கு ஏதேனும் தவறுகள் தென்படின் இவைகளைச் சுட்டிக் காட்டுமாறு சகோதரப் பாசத்தோடு வேண்டுகோள் விடுக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நன்றி அறிதலோடு அவைகளை ஏற்றுக் கொள்வேன்.

அண்ட சராசரங்களையும் அதில் நம்மையும் படைத்த இறைவன் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய வர்களாக நம்மை ஆக்குவானாக! அப்பணியில் இந்த எளியோனின் புத்தகத்தையும் பயன்படச் செய்வானாக!

17.08.2009. 22:38 PM

நூலின் பெயர் : மனிதனுக்கேற்ற மார்க்கம்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் : 56

விலை ரூபாய் : 12.00

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

முன்னுரை

பாமர மக்கள் தங்களின் மதத்தின் மீது கண்மூடித்தனமான பற்று வைத்திருந்தாலும் சிந்தனையாளர்களும், படித்தவர்களும் தங்களின் மதங்களை சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்து வருகின்றனர். சிலர் வெளிப்படையாகவே தங்களின் மதக் கோட்பாடுகளை எதிர்த்து வருகின்றனர்.

அவர்கள் சந்தேகிப்பதிலும் எதிர்ப்பதிலும் நியாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அறிவுக்குப் பொருத்தமில்லாமலும், மக்களை ஏமாற்றுவதற்கு உதவும் வகையிலும், ஒரு சாராருக்கு அநீதி இழைக்கும் வகையிலும் அந்தச் சித்தாந்தங்கள் இருப்பதால் தான் எதிர்க்கிறார்கள்; சந்தேகிக்கின்றார்கள்.

ஆனால் இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் அத்தகைய குறைபாடுகள் அற்றதாக அமைந்துள்ளன. நடுநிலைக் கண்ணுடன் இஸ்லாத்தை அணுகும் யாராக இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுவார்களே தவிர வெருண்டு ஓட மாட்டார்கள்.

இந்தக் கருத்தை மையமாக வைத்து, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரையே மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற இந்த நூல்.

இந்நூல் பல பதிப்புகளைக் கண்டிருந்தாலும் இந்தப் பதிப்பு பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் நேரடியாக, பேச்சு நடையிலிருந்து எழுத்து நடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாத மாற்று மத நண்பர்களுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூலாக அமைந்துள்ள இந்நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நபீலா பதிப்பகம்

சென்னை

  • மனித குல ஒருமைப்பாடு
  • சுயமரியாதை நிலவும்
  • நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்
  • கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை
  • இறைவனுக்குச் சோர்வும் உறக்கமும் இல்லை
  • கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
  • மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை
  • அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு
  • மனித உரிமை பேணுதல்
  • கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல்
  • மனிதன் கடவுளாக முடியாது
  • இஸ்லாம் தான் முதல் தோன்றிய மார்க்கம்
  • முஹம்மது இறைத் தூதரா?
  • இடைத் தரகருக்கு இடமில்லை
  • இஸ்லாத்தின் மீது விமர்சனங்கள்

மனிதனுக்கேற்ற மார்க்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

உலகில் உள்ள ஏராளமான மதங்களில் 120 கோடிக்கும் அதிகமான மக்களால் இஸ்லாம் பின்பற்றப்படுகிறது.

இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? இஸ்லாம் எந்த வகைகளில் ஏனைய மதங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது? என்பதை அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இஸ்லாம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை உலகத்திற்குச் சொல்கிறது:.

முதலாவது கொள்கை: வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.

இரண்டாவது கொள்கை: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்.

இவ்விரண்டு தாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

இந்தக் கொள்கைகளை ஒருவன் நம்புகின்ற காரணத்தினால் ஏனைய மதங்களிலிருந்து விலகி வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறி விடுகின்றான்.

இந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளில் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது? இந்த இரண்டு கொள்கைகளை ஏற்றவுடன் ஒருவன் முஸ்லிம் என்றும், ஏற்கவில்லையென்றால் அவன் முஸ்லிம் இல்லை என்றும் கூறும் அளவுக்கு அப்படி என்ன தத்துவம் இதில் இருக்கின்றது?

இந்த இரண்டு கொள்கைகள் ஒரு மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடுமானால் அந்த மனிதனின் வாழ்க்கையில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன.

மனித குல ஒருமைப்பாடு

கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளைப் பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் கடவுளைப் பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான்.

நாங்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும்; நீங்கள் எங்கள் வழியாகத் தான் பூஜை செய்ய வேண்டுமே தவிர நேரடியாகச் செய்ய முடியாது என்கிறான்.

எனக்கு மந்திரம் தெரியும் எனக் கூறினாலும், நானும் சுத்தமாகக் குளித்து விட்டுத் தான் வந்துள்ளேன் எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.

இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவை தானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.

மனிதனின் முயற்சியால் பெறுகின்ற கல்வி, பதவி, புகழ், போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதை ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால், அதைக் கடவுளும் ஏற்றுக் கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒருவன் சொல்லி ஒரே ஒரு கடவுள் தான் இந்த உலகத்திற்கு இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொள்ளும் போது மொழி, இனம், குலம், கோத்திரம், மற்றும் தேசத்தின் அடிப்படையில் மனிதன் உண்டாக்கிக் கொண்ட பிளவுகள் எல்லாமே அடிபட்டு போகிறது.

மொத்த உலகத்தையும் படைத்துப் பரிபாலித்து காத்துக் கொண்டு இருப்பவனும், அத்தனை மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பவனும் ஒரே ஒரு இறைவன் தான் என்று சொல்லும் போது நான் தமிழன்; நீ மலையாளி; அவன் கன்னடன் என்றெல்லாம் மொழியின் பெயரால் மனிதன் கூறுபட்டுப் போவதை இந்தக் கொள்கைப் பிரகடனம் தடுத்து விடுகின்றது.

நான் இந்தியன்; அவன் பாக்கிஸ்தானியன்; நீ அமெரிக்கன் என்று தேசத்தின் பெயரால் மனிதன் மனிதனைப் பிரித்துப் பார்க்கின்ற நிலையையும் இந்தக் கொள்கை மாற்றி விடுகின்றது.

அதைப் போல் நான் இந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன்; நீ அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்று குலத்தின் பெயரால் மனிதன் வேறுபட்டுப் போவதையும் இந்தக் கொள்கைப் பிரகடனம் துடைத்து எறிகின்றது.

மொத்த உலகத்திற்கும் ஒருவன் தான் படைப்பாளன்; மொத்த உலகத்தில் உள்ளவர்களும் அந்த ஒருவனால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அனைவரும் அந்த ஒரே இறைவனின் அடிமைகளாகி அடிமைகள் என்ற வட்டத்திற்குள் ஒன்றுபட்டு விடுகின்றனர்.

ஏக இறைவனுக்கு நாம் அடிமைகள் தான் என்று நம்பும் போது

தமிழனும் அவனுக்கு அடிமை

மலையாளியும் அவனுக்கு அடிமை

கன்னடனும் அவனுக்கு அடிமை

அரபு நாட்டவனும் அந்த ஏக இறைவனுக்கு அடிமை

என்று எல்லோரும் ஒன்றுபட்டு விடுகின்றோம்.

அனைவரும் ஒன்றுபட்டு நாங்கள் ஒரே ஒரு கடவுளுக்கு அடிமைகள் என்று கூறும் போது இன்னொருவனை விட தன்னை உயர்ந்தவன் என்று ஒரு மனிதன் கருத மாட்டான்.

என் தாய்மொழி தமிழ் என்பதால் நான் சிறந்தவன் என்று தமிழனோ, தன் தாய் மொழி மலையாளம் என்பதால் தான் உயர்ந்தவன் என்று ஒரு மலையாளியோ சொல்ல மாட்டார்கள். சொல்லவும் முடியாது.

இப்படிப்பட்ட ஒற்றுமை லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை - என்ற இந்தத் தத்துவத்தினால் ஏற்படும் பயனாகும்.

ஜாதியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து, மனிதர்களில் சிலரை நாயினும் கீழாக நடத்துவதைப் பரவலாக இந்தியாவில் காண்கிறோம். தோலின் நிறத்தை வைத்து மனிதனைத் தாழ்ந்தவன் என்றும் உயர்ந்தவன் என்றும் வேறுபடுத்துவதை மேலை நாடுகளில் பார்க்கிறோம். இத்தகைய வேறுபாடுகள் ஒழிய உலகத்தில் இது வரை தீட்டப்பட்ட திட்டங்கள் பயன் தந்துள்ளனவா எனில் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.

இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் அனைவரும் கடவுளுக்கு அடிமைகள் என்பதை மனிதன் உணர வேண்டும்; ஒப்புக் கொள்ள வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் இன்னொருவனை விடச் சிறந்தவன் என்று தன்னைப் பற்றி நினைக்க மாட்டான்.

நானும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றேன்.

நான் யாரைத் தாழ்ந்தவன் என்று நினைக்கின்றேனோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான்.

நான் யாரை உயர்ந்தவன் என்று கருதுகின்றானோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான் என்ற எண்ணம் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதிலிருந்து அனைவரையும் தடுக்கின்றது.

எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்பும் போது பிறப்பின் அடிப்படையில் ஒருவன் சிறந்தவன்; மற்றொருவன் கீழானவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் முற்றாகவே ஒழிந்து போகின்றன.

இதைத் தான் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 49:13

உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

திருக்குர்ஆன் 53:32

சுயமரியாதை நிலவும்

பதவிக்காகவும், பணத்துக்காகவும், இன்னும் பல ஆதாயம் கருதியும் தலைவர்களின் கால்களில் தொண்டர்கள் விழுந்து கிடப்பதையும், பாத பூஜை செய்வதையும் நாம் காண்கிறோம்.

மத குருமார்களோ, தலைவர்களோ யாராயினும் அவர்களும் மனிதர்களே!

அவர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் தேவைப்படுகின்றன.

மற்றவர்களைப் போல், அதை விட அதிகமாகவே அவர்களுக்கும் ஆசைகள் உள்ளன.

போட்டி, பொறாமை, பழிவாங்குதல், பெருமை, ஆணவம் போன்ற எல்லா பலவீனங்களும் அவர்களிடமும் உள்ளன.

மற்றவர்களைப் போலவே மலஜலத்தைச் சுமந்தவர்களாக அவர்களும் உள்ளனர்.

இதெல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இத்தகையவர்களிடம் தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து விடுகிறான். படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்த வேண்டும் என்பதை உணராததே இந்த அவலத்துக்குக் காரணம்.

அகில உலகுக்கும் ஒருவன் தான் எஜமான்; மற்ற அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்பதை அறிந்தால் இத்தகைய இழிவை மனிதன் தன் மேல் சுமத்திக் கொள்ள மாட்டான்.

முஸ்லிம் சமுதாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தம் உயிரினும் மேலாக மதிக்கின்றது. மற்ற எந்த மதத்தவரும் தம் தலைவர்களை மதிப்பதை விட அதிமதிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் சமுதாயம் மதிக்கின்றது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வணங்கியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வந்தவர்களும் அவர்களை வணங்குவதில்லை.

பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்றாலும் மனிதன் உழைத்துப் பெறுகின்ற கல்வி, பதவி, செல்வாக்கு, ஆற்றல் போன்ற தகுதிகளில் மனிதர்களிடையே வேறுபாடு இருப்பதை மறுக்க முடியாது. இந்த உயர்வு தாழ்வில் நியாயமும் உள்ளது.

மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ, சிறந்த பதவியை அடைந்து விட்டாலோ, அதிகாரத்துக்கு வந்து விட்டாலோ, மற்றவர்களை விட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்து விட்டாலோ இவற்றைப் பெறாத இன்னொருவன் அவனுக்குச் சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் விழுகின்றான்.

அரசியல் தலைவர்களுடைய கால்களில் விழும் கட்சிகளின் தொண்டர்களையும், செல்வந்தர்களின் கால்களில் விழும் ஏழைகளையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

தன்னை விடச் சிறந்தவன் என்று ஒருவனைப் பற்றி என்னும் போது அவனுடைய கால்களில் விழ வேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டு தான் இருக்கின்றான்.

இப்படிச் செய்வதிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை - என்ற தத்துவம் மனிதனைத் தடுத்து நிறுத்துகின்றது.

கடவுளுக்கு மாத்திரம் தான் மனிதன் அடிமை. கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது.

அனைவரும் நம்மைப் போலவே மல ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் என்பதையும். அனைவரும் தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் என்பதையும் எல்லா மனிதர்களும் நினைக்க ஆரம்பித்து விட்டால் தன்னப் போல உள்ள மனிதனின் காலில் விழ மாட்டார்கள். தன் காலில் மற்றவர்கள் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.

இதைத் தான் திருக்குர்ஆன் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 49:13

மனிதர்களே என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள். உங்கள் அனைவரின் மூலப் பிதா ஒரு ஆண் தான். உங்கள் அனைவரின் மூலத் தாய் ஒரு பெண் தான்.

ஒரு தாய், ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களைக் குடும்பங்களாகவும், கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள் உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத் தான். உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல என்று குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

இதற்குச் சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ? எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல்: அபூதாவூத் 1828

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.

நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே இதன் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத்

எழுந்து நின்று கூட தமக்கு மரியாதை செய்யக் கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற அடிப்படைக் கொள்கை தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசின் அதிபராக இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சிகளில் வலிமை மிக்கதாக இருந்தது.

இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும், தமக்காக எழுந்து நிற்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கொள்கைப் பிரகடனமே காரணம். அந்தக் கொள்கைக்கு மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தான் உண்மை.

நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்

இப்படி ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.

கேட்பதற்கு இனிமையான, நடைமுறைப்படுத்த முடியாத வறட்டு தத்துவம் என்று இதை நினைத்து விடக் கூடாது.

இந்தக் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொண்டால் அவனுடைய ஜாதி, கோத்திரம், பூர்வீகம் என்ன என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவே மாட்டார்கள். அவனை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய சகோதரன் என்று கருதி கண்ணியமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.

எவ்வளவு பெரிய மதகுருவானாலும், செல்வந்தரானாலும், செல்வாக்கு மிக்கவர்களானாலும் பள்ளிவாசல்களில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முதல் மரியாதை செய்யப்படுவதில்லை. எந்த வரவேற்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்வதானால் அவர்கள் பிரத்தியோகமாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.

பள்ளிவாசல்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். பின்னால் வந்தால் நாட்டின் ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும்.

வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்களும் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்க மாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்துங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்தச் சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

இந்தத் தெளிவைக் கொடுத்தது எது?

அவர்களை இப்படி உருவாக்கியது எது?

எவனுக்கும் தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தியது எது?

லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கை தான் அவர்களை இப்படி மாற்றியது.

கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் எடுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதைப் பாக்கலாம்

உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம்.

தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.

ஆக்குவதற்கு ஒரு கடவுள்!

அழிப்பதற்கு ஒரு கடவுள்!

காப்பதற்கு ஒரு கடவுள்!

துன்பத்தை நீக்க ஒரு கடவுள்!

இன்பத்தை வழங்க மற்றொரு கடவுள்!

மழைக்குத் தனி கடவுள்!

உணவு வழங்க இன்னொரு கடவுள்!

கல்விக்கு என்று ஒரு கடவுள்!

என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

ஒரு மனிதனை அழிக்க வேண்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா?காக்கப்படுவானா?

இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?

தமிழனுக்கும், மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும், அரபியனுக்கும் அல்லது குரைஷிக்கும் ஹபஷிக்கும் சண்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?

இந்தப் பூமியையும், ஏனைய கோள்களையும், அண்ட வெளியையும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.

ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7 ஆம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும்; அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்துச் சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எப்போதோ ஏற்படும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும்; எந்தெந்தப் பகுதியில் முழுமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.

பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால் தான் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை.

இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் கொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கின்றது.

ஒரு கடவுள் என்ற கொள்கையைக் கடந்த காலங்களில் எத்தனையோ பேர் போதித்துள்ளனர். ஆனால் அவர்கள் பிற்காலத்தில் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள் கொள்கைக்குச் சமாதி கட்டப்பட்டது.

ஆனால் கடைசி இறைத் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னார்கள்.

அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை.

நபிகள் நாயகத்துக்குச் சிலை வைக்கப்படவில்லை. நபிகள் நாயகத்தை எந்த முஸ்லிமும் வழிபடுவதில்லை.

நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அதன் எல்லையை முஸ்லிம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.

மனிதர்களிலேயே நபிகள் நாயகம் மிகச் சிறந்தவர்கள் என்பது தான் அந்த எல்லை.

இதைக் கடந்து கடவுள் நிலைக்கு அவர்களை எந்த முஸ்லிமும் உயர்த்துவதில்லை.

அதனால் தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும்.

கடவுளுக்குச் சொந்த பந்தங்கள் இல்லை

அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்ற உறவுகள் கடவுளுக்கு இருக்கக் கூடாது. இதை இஸ்லாம் அழுத்தமாக அறிவிக்கிறது.

அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:1-4

நீங்கள் யாரைக் கடவுள் என்ற நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தான் எனில் அங்கே ஒரு பலவீனம் ஏற்படுகிறது. உங்களுடைய கடவுள் கொள்கையில் உங்களுக்கே முரண்பாடு ஏற்படுகிறது.

முரண்பாடு என்னவென்றால் கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே ஒரு காலத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார் என்றும் சொல்கிறீர்கள்.

கடவுள் யாருக்கோ பிறந்தார் என்றால் அவர் பிறப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை. அதாவது கடவுளுக்கு முன்பே கடவுளுடைய பெற்றோர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.

கடவுளுக்கு முன்பே இவ்வுலகம் இருந்திருக்கிறது என்ற கருத்து இதனால் ஏற்படும்.

கடவுளுடைய தாயும், தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்தால் அவர்கள் தான் கடவுளர்களாக இருப்பதற்குத் தகுதி பெற்றவர்கள்.

இல்லாமையிலிருந்து இருவரின் உடற்சேர்க்கையினால் பிறந்தவர் எப்படிக் கடவுளாக முடியும்?

எனவே தான் நீங்கள் வணங்கும் ஒரு கடவுளான, உங்களைப் படைத்த அல்லாஹ்வுக்குச் சந்ததி கிடையாது. அவனுக்குத் தாய் தகப்பனும் கிடையாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கடவுளுக்குப் பெற்றோர் இருக்க முடியாது என்பது போல் கடவுளுக்குச் சந்ததியும் இருக்க முடியாது என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

யாருக்குச் சந்ததி தேவைப்படும்? அழிவை எதிர்பார்த்து இருப்போருக்குத் தான் சந்ததி தேவைப்படும். ஒவ்வொரு மனிதனும் அழிவை எதிர்பார்த்து இருப்பதன் காரணத்தினாலேயே சந்ததிகளை விரும்புகிறான்.

நாம் அழிந்து விடுவோம்; நம்முடைய பெயர் சொல்ல ஒருவன் வேண்டும்; நம்முடைய சொத்துக்களை அனுபவிக்க ஒருவன் வேண்டும்; நம்முடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் என்று எண்ணுகிற காரணத்தினாலும், வயதான காலத்தில் நம்மைக் கவணித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினாலும் தான் மனிதன் சந்ததியை விரும்புகிறான்.

தனக்கு அழிவு இல்லை; முதுமை இல்லை; என்றும் பதினாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பான் என்று ஒருவன் வரம் வாங்கினால் அவன் ஏன் சந்ததியை எதிர்பார்க்கப் போகிறான்? அவன் எப்போதும் சந்தோஷமாக ஜாலியாக உலகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பான்.

ஆனால் கடவுளுக்கு முதுமை இல்லை. கடவுளுக்குப் பலவீனம் இல்லை. கடவுளுக்குச் சோர்வு இல்லை. கடவுளுக்குச் சாவு இல்லை. இவையனைத்தும் இல்லாத ஒருவன் எதற்காகச் சந்ததியைத் தனக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மனைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும். அல்லாஹ் தனக்கு மனைவி இல்லை என்று திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:101

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ,  பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

திருக்குர்ஆன் 72:3

மேலும் மனைவி இருப்பது வேறொரு வகையிலும் கடவுளுக்குப் பலவீனமாகும்.

கடவுளுக்கு ஆசை வந்து உணர்ச்சி மேலிட்டு மனைவியோடு இணைந்திருக்கும் நேரத்தில் கடவுளே என்று யாராவது கூப்பிட்டால் என்ன ஆகும்?

அவர் இன்பத்தில் திளைத்து இருக்கும் நேரத்தில் கடவுளிடம் கேட்டால் அவர் எப்படிக் கொடுப்பார். மேலும் கடவுளுக்கு மனைவி இருந்து இன்பம் துய்ப்பதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவாரானல் அந்த நேரத்தில் உலகத்தைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் கடவுள் என்பவர் 24 மணி நேரமும் உலகத்தைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

மனிதனுக்கு எந்த நேரத்திலும் துன்பம் ஏற்படலாம். கடவுள் மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் என்னை ஒருவன் கொல்ல வரலாம். கடவுளே என்று நான் அவனிடம் அந்த நேரத்தில் பாதுகாவல் தேடப்போக அவன் போடா வெளியே என்று கூறினால் அது கடவுளுக்குரிய தகுதியாக இருக்காது.

மனைவியுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டே இந்த உலகத்தையும் கவனிக்கும் வகையில் கடவுள் ஏன் தன்னை ஆக்கிக் கொள்ள முடியாது? என்று சிலர் இதற்குச் சமாதானம் கூறுவார்கள்.

இந்தச் சமாதானத்தை ஒரு பேச்சுக்காக ஏற்றுக் கொண்டாலும், அவருக்கு இன்பம் தருவதற்கு இன்னொருவர் தேவைப்படுகின்றது. இன்னொருவரைச் சார்ந்தே இவரால் இன்பம் பெற முடிகின்றது என்பதை மறுக்க முடியாது. இதற்கு எந்தச் சமாதானமும் கூற முடியாது.

தனக்கே தன்னால் இன்பம் அளித்துக் கொள்ள இயலாதவர் பிறருக்கு எப்படி இன்பம் அளிப்பார்?

அதனால் தான் ஒருவனைக் கடவுள் என்று நம்புவீர்களானால் அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவனுக்குச் சந்ததி இல்லை என்றும் நம்புங்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தான் உங்களை எல்லா நேரத்திலும் கண்காணிக்க முடியும்.

இறைவனுக்குச் சோர்வும் உறக்கமும் இல்லை

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:255

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

திருக்குர்ஆன் 50:38

தூங்குகிறவன் கடவுளாக இருக்க முடியாது. கடவுள் தூங்கிக் கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் ஜீவராசிகளின் நிலை என்னவாகும்? சூரியன் சந்திரன் பூமி இவைகளையெல்லாம் கடவுள் கண்காணிக்க வேண்டி இருக்கிறது.

அவனுடைய படைப்பினங்களில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ பேருக்கு கடவுள் தூங்கும் நேரத்தில் எத்தனையோ தேவைகள் இருக்கும். அந்த நேரத்தில் இந்த உலகத்தை நிர்வகிப்பவன் யார்? அவனுக்குப் பிரதிநிதி யாராவது உண்டா? துணைக் கடவுள் என்று ஒருவனை துணை ஜனாதிபதி போல் நியமித்துக் கொள்ள முடியுமா?

அதனால் தான் கடவுள் என்று நீங்கள் நம்புகின்ற அவனுக்கு அவனுக்கு அசதி இல்லை என்றும், அவனுக்குத் தூக்கம் இல்லை என்றும் நம்புங்கள் என இஸ்லாம் சொல்கிறது.

தான் தூங்கி விட்டாலும் உலகத்தைக் கண்காணிக்கும் வகையில் கடவுளுக்கு ஆற்றல் இருக்க முடியாதா? என்று இந்த இடத்திலும் கேள்வி எழலாம்.

ஆனால் கடவுளின் கண்கள் ஓய்வின்பால் நாட்டம் கொள்ளும் போது, நம்மைப் போல் அவரும் பலவீனமாக உள்ளார்.

தொடர்ந்து வேலை செய்வதால் நமது உறுப்புகளுக்கு ஏற்படும் சோர்வு கடவுளுக்கும் ஏற்படும் என்றால் இத்தகைய பலவீனர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? என்ற அடிப்படையை எதிர்த்து எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது.

ஆக இந்த அடிப்படையில் ஏனைய மதங்களிலிருந்து இஸ்லாம் எல்லா வகையிலும் வித்தியாசப்படுகிறது. இப்படி எந்த மதமும் கடவுளைச் சொல்லவே இல்லை.

எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டு இருக்கிறான் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவரில் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 55:18

கடவுள் ஒரு வினாடி கூட ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார். ஓய்வு எடுத்துக் கொண்டால் கடவுள் என்று கருதுவதற்கே தகுதியற்றவராகிறார். ஏனெனில் ஒவ்வொரு விநாடியிலும் கோடிக்கணக்கான மக்களும், மற்ற உயிரினங்களும் கடவுளின் அருட்பார்வையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனக்கு என்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடவுள் போய்விட்டால் பின்பு எதற்கு அந்தக் கடவுள்?

இவ்வாறு சிறந்த கடவுள் கொள்கையை இஸ்லாம் உலகிற்குச் சொல்கிறது.

லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையினால் ஏற்படும் மிகச் சிறந்த பயன் இது.

கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்

பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான்.

கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும், கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் மனிதன் நேரடியாகப் பார்க்கிறார்கள்.

கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாரா? அதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பூஜை பொருள் கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.

நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்?

அதனால் தான் அல்லாஹ் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகிறது.

கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

கடவுளை நான் வணங்கப் போகிறேன்; அதற்காக 100 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப் போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை. நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 2:263

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்;  புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:267

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும், உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவைகளற்றவனாகவும், புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:131

உமது இறைவன் தேவைகளற்றவன்; இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.

திருக்குர்ஆன் 6:133

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 29:6

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 35:15

மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புபவன் இன்னொன்றையும் நம்புதல் வேண்டும்.

இந்த உலகம் ஒரு நேரத்தில் கடவுளால் அழிக்கப்படும். மொத்த உலகத்தையும் கடவுள் ஒரே நேரத்தில் அழிப்பார். அப்படி அழித்த பிறகு திரும்பவும் இந்த மொத்த உலகத்தையும் கடவுள் உயிர் கொடுத்து எழுப்புவார். மனிதனின் செயல்கள் பற்றி விசாரணை செய்வார். நல்லவனுக்குப் பரிசு கொடுப்பார். கெட்டவனுக்குத் தண்டனை கொடுப்பார். இதை மறுமை என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுள் இருக்கின்றான் என்றால் அவன் நீதி வழங்க வேண்டும்; நியாயம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களுக்கும் ஒழுங்கான தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்காத கடவுள் நமக்குத் தேவையில்லை.

கடவுள் என்று ஒருவன் இருந்தால் கடவுள் தன்னுடைய வேலையைச் செய்ய வேண்டுமா? இல்லையா? கடவுளுடைய வேலை என்ன?

எங்கெங்கே அக்கிரமம் நடக்கின்றதோ அங்கே நீதி வழங்க வேண்டும். நியாயம் வழங்க வேண்டும். ஆனால் இந்த உலகத்தில் நியாயம் கிடைப்பதை நாம் பார்க்க முடியவில்லை. ஒன்பது கொலை செய்தவன் வெளியே வந்து விடுகின்றான். இவனை யார் தண்டிப்பது?

எத்தனையோ பயங்கரவாதிகள் தங்கள் குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலே இவ்வுலகில் சொகுசாக வாழ்ந்து மரணிக்கின்றனர். சட்டத்தில் மாட்டிக் கொண்டாலும் குறுக்கு வழியில் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்தக் கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் அது முடியவில்லை. ஒன்பது கெலை செய்தவனைத் தண்டித்தால் கூட ஒரு தடவை தான் அவனைக் கொலை செய்ய முடியும். ஒன்பது பேர் துன்பப்பட்ட அளவுக்கு இவனைத் தண்டிக்க முடியாது. இந்த உலகத்தில் ஒருவனுக்குப் போதுமான தண்டனை கொடுக்க முடியாது.

நீதி செலுத்தும் கடவுள் இருந்தால் அவன் என்ன செய்ய வேண்டும்? இதற்கு எல்லாம் கணக்குத் தீர்க்க வேண்டும். நல்லவனுக்குச் சரியான பரிசு கொடுக்க வேண்டும். கெட்டவனுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

அநீதி இழைத்து விட்டு இவ்வுலகில் சொகுசாக வாழ்பவர்கள் தாங்கள் செய்த ஒவ்வொரு அக்கிரமத்துக்கும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் குளிர வேண்டும். இதற்குத் தான் கடவுள் தேவை.

இஸ்லாம் கூறுகின்ற மறுமை நம்பிக்கை இதற்குச் சரியான தெளிவைத் தருகிறது. கடவுள் நம்பிக்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.

இவ்வுலகம் மிகவும் அற்பமானது. இது ஒரு சோதனைக் களம். இங்கே தீயவர்கள் சொகுசாக வாழ்வதைக் கண்டு விரக்தியடையாதீர்கள்! நல்லவர்கள் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு உள்ளாவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள்!

நல்லவன், கெட்டவன் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவார். ஒவ்வொரு மனிதனின் தீய செயல்களுக்காகத் தண்டிப்பார். அந்தத் தண்டனை, தீயவனால் பாதிப்படைந்தவனின் மனதைக் குளிரச் செய்யும் அளவுக்கு இருக்கும்.

நல்லவனுக்குப் பரிசு வழங்குவார். நாம் வாழ்நாளை வீணாக்கவில்லை; பட்ட பாட்டுக்குப் பலன் கிடைத்து விட்டது என்று பெருமகிழ்ச்சி அடையும் அளவுக்கு அந்தப் பரிசு அமையும்.

இப்படி ஒரு நம்பிக்கை மனித உள்ளத்தில் ஏற்பட்டால் கடவுள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார்; பார்க்கிறார்; கேட்கிறார். அவருக்கு இயலாதது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு நம்பிக்கை கொள்ளும் போது மனிதன் தவறு செய்ய மாட்டான்.

மதவாதிகள் தவறு செய்கிறார்களே? முஸ்லிம்களும் தவறு செய்கிறார்களே? என்று கேட்கக் கூடாது. அப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் கடவுளை நம்பும் விதத்தில் நம்பவில்லை, அறை குறையாக நம்புகிறார்கள்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஒரு விசாரணை மன்றம் இருக்கிறது. மிகப் பெரிய சுப்ரீம் கோர்ட் இருக்கிறது. அந்த சுப்ரீம் கோர்ட்டில் அகில உலக மக்களுக்கெல்லாம் விசாரணை இருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வந்து விட்டால்

அவன் மது அருந்த மாட்டான்,

விபச்சாரம் செய்ய மாட்டான்.

மோசடி செய்ய மாட்டான்,

ஏமாற்ற மாட்டான்,

திருட மாட்டான்,

கொள்ளையடிக்க மாட்டான்,

கொலை செய்ய மாட்டான்.

வட்டி வாங்க மாட்டான்.

இந்த மக்களின் கண்களில் மண்ணைத் தூவி நாம் தப்பித்தால் கூட இன்னொரு வாழ்க்கையில் கடவுளிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று நம்புபவன் தவறு செய்ய மாட்டான்.

அறியாமல் அவனை மீறி ஒரு சில நேரங்களில் தவறு செய்யக் கூடுமே தவிர அதையே தொழிலாக, வாடிக்கையாகக் கொள்ள மாட்டான்.

இது போன்று நல்ல பண்பட்ட சமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் வல்லமை மிக்க ஒரு கடவுளை நம்ப வேண்டும். அந்தக் கடவுள் எல்லோருக்கும் நியாயம் வழங்குவார் என்று நம்ப வேண்டும்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு ஊட்டிய காரணத்தினால் தான் அந்தச் சமுதாய மக்களிடம் புரையோடிக் கிடந்த எல்லாத் தீமைகளும் அகன்றன. இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிற தீமைகளை விட அந்தச் சமுதாயத்தில் தீமைகள் அதிகமாக இருந்தன.

அப்படிப்பட்ட மோசமான சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருத்தி பண்படுத்தினர். இப்படி எல்லாத் தீய செயல்களிலிருந்தும் மனிதனை விடுவித்ததற்கு அடிப்படையாகத் திகழ்ந்தது கடவுளை நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வைத்து சரியான முறையில் அந்த மக்களின் உள்ளத்தில் பதியச் செய்தது தான்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு

கடவுளை எப்படி வழிபடுவது? கடவுளுக்கு எப்படி வணக்கம் செய்வது? கடவுளிடம் எப்படிப் பிரார்த்தனை செய்வது? என்பது மட்டுமே பெரும்பாலும் மதங்களில் கூறப்பட்டிருக்கும். திருமணம், பிறப்பு, இறப்பு தொடர்பான சில சடங்குகளும் கூறப்பட்டிருக்கும்.

ஆனால் இஸ்லாம் மட்டும் மனித வாழ்க்கையில் நடக்கும் அனைத்துக் காரியங்களிலும் தலையிட்டு இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

உண்ணுவது, பருகுவது, வியாபாரம், விவசாயம், கொடுக்கல், வாங்கல், ஆட்சி நடத்துவது, பொருளாதாரத்தைத் திரட்டுவது, செலவு செய்வது என்று எந்தத் துறையை எடுத்தாலும் அந்தத் துறைகளில் தலையிட்டு நீ இப்படித் தான் நடக்க வேண்டும் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான்.

இந்த உலகத்தில் நாம் வாழும் போது நாம் எத்தனையோ பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? எப்படி நடந்து கொண்டால் கடவுள் திருப்தியடைவார் என்று இஸ்லாம் சொல்லித் தருகிறது.

இப்படி உலகத்தில் எந்த மதத்தையும் நாம் பார்க்க முடியாது. பொருள் திரட்டுகிறாயா? நன்றாக திரட்டிக் கொள்! ஆனால் வட்டி வாங்காதே! ஏமாற்றாதே! மோசடி செய்யாதே! கலப்படம் செய்யாதே! அளவு நிறுவையில் குறை செய்யாதே! இந்த விதிகளுக்கு உட்பட்டு நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். இப்படி இஸ்லாம் இதில் தலையிடும்.

வியாபாரம் செய்பவன் மோசடி செய்கின்றான் என்றால் அவன் சார்ந்திருக்கின்ற மதம் அவனைத் தடுக்கின்றதா? தடுக்காது. மத ரீதியான எந்தச் சான்றுகளையும் காட்டி அவனைத் தடுக்கவும் முடியாது.

வட்டி பெரிய பொருளாதாரச் சுரண்டல். இதை நேரடியாகத் தடுக்கும் மதங்கள் இருக்காது.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு இதற்கு இன்ன இன்ன விதிமுறைகள் எனக் கூறுகிறது.

இதனால் கடவுளுக்கு எந்த லாபமும் கிடையாது. நீங்கள் திருடினால் என்ன?திருடாவிட்டால் என்ன?

நீங்கள் திருடுவதால் உங்களைப் போன்ற இன்னொரு மனிதன் பாதிக்கப்படுகின்றான். நீங்கள் வட்டி வாங்குவதால் ஒருவன் சுரண்டப்படுகிறான். நீங்கள் கலப்படம் செய்வதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்படி மனிதனுடைய நன்மைகளிலும், நலன்களிலும் அக்கறை கொண்டதால் தான் அனைத்திலும் இஸ்லாம் தலையிடுகின்றது.

கடவுளுக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று நாம் நினைக்கலாம். அந்த மாதிரி விஷயங்களிலும் மனித குல நன்மைக்காக இஸ்லாம் இஸ்லாம் தலையிட்டு தீர்வு சொல்கின்றது.

மனித உரிமை பேணுதல்

இன்னும் இஸ்லாத்தின் தனித்தன்மையை ஆராய்ந்தால் கடவுளுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களும், கடமைகளும் இருக்கின்றன. இதில் மனிதனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் கடவுள் தலையிடவே மாட்டார் என்று இஸ்லாம் அறிவிக்கிறது.

ஒரு மனிதனுக்கு நான் துரோகம் செய்து விட்டால் அதைக் கடவுள் மன்னிக்கவே மாட்டான். எப்போது மன்னிப்பான்? யாருக்கு நான் துரோகம் செய்தேனோ அவனிடத்தில் அந்தத் துரோகத்திற்கு மன்னிப்புக் கேட்டு, அவன் திருப்தி அடைந்த பின்பு தான் கடவுள் என்னை மன்னிப்பான்.

ஒருவன் தொழாமல் இருக்கின்றான். இது மனிதன் சம்பந்தப்பட்டது அல்ல. கடவுளுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமை. இந்தக் கடமை (தொழுகை)யை ஒருவன் செய்யாமல் இருக்கின்றான். இது கடவுளுக்கும், மனிதனுக்கும் சம்பந்தப்பட்ட விஷயமாகும். தவறாகச் செய்து விட்டேன் என்ற சொல்கிறாயா? இனி மேல் ஒழுங்காக நடப்பேன் என்கிறாயா? சரி என்று இறைவன் நாடினால் மன்னிக்கின்றான்.

நோன்பு என்பது ஒரு கடமை. இது கடவுளுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமை. நோன்பு வைப்பதால், அல்லது வைக்காமல் இருப்பதால் இன்னொரு மனிதனுக்கு இதில் நன்மையோ, தீமையோ இல்லை. இந்த நோன்பை ஒருவன் 10 வருடமாக வைக்கவில்லை. பின்பு திருந்தி நான் இனி மேல் நோன்பு ஒழுங்காக நோன்பு வைக்கிறேன். கடவுளே என்னை மன்னித்து விடு என்று கேட்டால் கடவுள் நாடினால் மன்னித்து விடுவான்.

அதே நேரத்தில் ஒரு மனிதனுக்கு நான் மோசடி செய்திருக்கின்றேன்; ஏமாற்றி இருக்கின்றேன்; களவு செய்திருக்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம். மனிதன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் தலையிட்டிருந்தால் கடவுளே! நான் திருடி விட்டேன்; என்னை மன்னித்து விடு! என்று கேட்டால் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.

கடவுளிடம் ஒரு காலத்திலும் மன்னிப்பு கிடைக்காது. காலமெல்லாம் நின்று தொழுதாலும், தவம் செய்தாலும் மன்னிப்புக் கிடைக்காது. கணவன் மனைவிக்குச் செய்த குற்றம், மனைவி கணவனுக்குச் செய்த குற்றம், தாய் மகனுக்கும், மகன் தாய்க்கும் செய்த குற்றம் ஆகியவற்றைச் சம்மந்தப்பட்டவர்கள் மன்னிக்காத வரை கடவுள் மன்னிக்கவே மாட்டான் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் ஒன்றே.

மதங்களைச் சிலர் வெறுப்பதற்குக் காரணம் என்ன? எல்லா அக்கிரமும் செய்கின்றான். பின்பு கடவுளே என்னை மன்னித்து விடு என்கிறான். தேங்காயை உடைத்தால் கடவுள் மன்னித்து விடுவான் என்கிறான். இது மனிதனைப் பண்படுத்துமா?

ஆனால் இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனிதனுக்குச் செய்கின்ற கடமைகளில் கடவுள் தலையிடுவது கிடையாது. இவ்வளவு சுயமரியாதை தருகின்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி ஞாபகத்திற்கு வருகிறது.

மறுமை நாளில் சில பேர் விசாரணைக்கு வரும் போது ஒருவன் அதிகமாக தர்மம் செய்து, ஹஜ் கடமையையும் நிறைவேற்றி, இன்னும் இஸ்லாம் கூறும் அனைத்துக் காரியங்களையும் ஒன்று விடாமல் செய்திருப்பான். இப்படி ஏராளமான நன்மைகளைப் பெற்றவனாக மறுமை நாளில் வந்து நிற்பான். அதே நேரத்தில் இந்த உலகத்தில் வாழும் போது ஒருவனை அநியாயமாக ஏசியும், அநியாயமாக ஒருவனுடைய பொருட்களைச் சுரண்டியும் இருப்பான். இப்படி இவனால் பாதிக்கப்பட்டவர்களும் வந்து நிற்பார்கள். இந்த நேரத்தில் அவனுக்கு நீதி வழங்கும் கடவுள் என்ன செய்கிறான் தெரியுமா? இவன் எனக்காக காலமெல்லாம் வழிபட்டவன். எனக்காகவே நேரத்தை ஒதுக்கியவன். எனக்கென்று தன்னையே அர்ப்பணித்தவன் என்று இறைவன் பார்ப்பதில்லை. மாறாக இவனுடைய நன்மைகளையெல்லாம் பிடுங்கி யாருக்கு இந்த உலகத்தில் அக்கிரமம், அநியாயம் செய்தானோ, அவனுக்குக் கொடுக்கிறான். எல்லா நன்மைகளையும் இழந்து வெறுங்கையோடு நிற்பான் என்று நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் கூறினார்கள். எவ்வளவோ தொழுது நோன்பு வைத்து இன்னும் ஏராளமான நன்மைகளைச் சுமந்து வருபவன் இன்னொரு மனிதனுக்கு அக்கிரமம் செய்தவனாக வந்து நின்றால் அந்த அக்கிரமத்தினால் பாதிக்கப்பட்டவன் கடவுளிடம் முறையிட்டால் அவனுக்கு நீதி வழங்குவது கடவுளுடைய கடமை.

அங்கு காசு பணம் செல்லாது. அங்கு எது மனிதனுக்கு வெற்றியளிக்கும்? அவன் செய்து வந்த நல்லறங்கள் ஒன்றே வெற்றியளிக்கும். ஆக அந்த உலகத்தில் எது செல்லுமோ அந்த நல்லறங்களையே பரிசாகக் கொடுத்து விடுகிறான்.

உன்னைத் துன்புறுத்தினானா? இந்த அளவுக்கு இவனுடைய நன்மையை நீ வைத்துக் கொள்! உன்னுடைய பொருளை ஏமாற்றினானா? அந்த அளவுக்கு இவனுடைய நன்மையை எடுத்துக் கொள்! இறைவன் அவனுக்கு நீதி வழங்குவான்.

இவன் செய்த நன்மைகள் இப்படியே கரைந்து, எந்த நன்மையும் கைவசம் இல்லாதவனாக நிற்பான். அதற்குப் பின் சிலர் வந்து எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்பார்கள். உன்னுடைய தீமையைத் தூக்கி உனக்குத் துரோகம் இழைத்த இவன் தலையில் வை! என இறைவன் கூறுவான். இப்படிப்பட்ட விதி முறைகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம்.

கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல்

யாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக இருந்தாலும் அதில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்கிறேன் என்ற பெயரில் மனைவி மக்களுக்குச் செய்யும் கடமைகளில் இருந்து கூட ஒருவன் விலகக் கூடாதென்று சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம். கடவுளை நான் வழிபடுகிறேன். பள்ளிவாயிலில் 24 மணி நேரமும் இருக்கின்றேன் என்று கூறிக் கொண்டு மனைவியைத் தெருவில் விட்டுவிட்டுச் சென்றால் அவன் கூட இஸ்லாமியப் பார்வையில் ஒரு குற்றவாளியே.

உன்னுடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையை மனிதன் செய்ய வேண்டும். கடவுளை வழிபடுகிறேன் என்று கூறிக் கொண்டு 24 மணி நேரமும் தூங்காமல் விழித்திருக்கக் கூடாது.

உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இதுவும் கூட அல்லாஹ்வுக்காகச் செய்யும் மார்க்கக் கடமை தான். தொழுகை, நோன்பு போல் இதையெல்லாம் நீ செய்ய வேண்டும். செய்யாவிட்டால் அல்லாஹ் விசாரிப்பான் எனக் கூறும் மார்க்கம் இஸ்லாம்.

ஏனைய மதங்களில் இது போல் பார்க்க முடியாது. மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லை என்றால் அது அவனுக்கும், அவன் மனைவிக்கும் உள்ள விஷயம் என்று ஏனைய மதங்கள் கூறும். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகின்றது தெரியுமா? மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லையென்றால் அதற்கும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும். ஒழுங்காக நடந்தால் பரிசும் ஒழுங்காக நடக்கவில்லையென்றால் தண்டனையும் தருகின்ற மார்க்கம் இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

வாகனத்தில் ஏறியிருக்கும் ஒரு மனிதன் தனது சாட்டையைக் கீழே போட்டு விடுகிறான். அதை இன்னொருவன் எடுத்துக் கொடுக்கிறான். இதுவும் ஒரு நல்லறம். உன் மனைவியின் வாயில் ஊட்டும் ஒரு கவள உணவு இருக்கின்றதே அதற்குக் கூட நன்மை இருக்கின்றது.

மனைவியை ஒழுங்காகக் கவனித்துக் கொண்டால் அதுவும் தொழுகை போல இறைவனிடம் பரிசு வாங்கித் தரும். ஒழுங்காக மனைவியைக் கவனிக்கவில்லையென்றால் தண்டனையைப் பெற்றுத் தருகின்றது. இப்படி ஒரு சித்தாந்தம் இந்த உலகில் இருந்தால், இதை மக்கள் எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்தால் எல்லாத் துறையும் சீராகுமா? ஆகாதா?

கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.

உனக்கு ஒரு ஆண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்த ஆண்மையை அனுபவி! உனக்குப் பெண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்தப் பெண்மையை அனுபவி! மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.

ஒருவன் கடவுளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று நபர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நான் இனி மேல் இரவில் தூங்க மாட்டேன்; விழித்திருந்து வணங்கிக் கொண்டிருப்பேன் என்றார். மற்றொருவர் நான் திருமணம் செய்யாமலே என் வாழ்க்கையைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர் நான் எப்போதும் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கப் போகின்றேன் என்றார்.

இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர்களிடம் நான் தொழவும் செய்கிறேன். தூங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன். நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். திருமணமும் செய்திருக்கின்றேன். எவன் ஒருவன் என்னுடைய இந்த வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல! என்று கூறினார்கள்.

கடவுளைத் திருப்திப்படுத்துகிறோம் என்ற பெயரில் நெருப்புக் குண்டத்தில் இறங்குவதும், உடம்பைக் காயப்படுத்திக் கொள்வதும், தன்னைத் தானே பல விதங்களில் வேதனைப்படுத்திக் கொள்வதும் இஸ்லாத்தில் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மனிதன் கடவுளாக முடியாது

இஸ்லாத்தின் மற்றொரு பகுதி முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்று ஒருவன் நம்ப வேண்டும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். அவர்கள் கூட அல்லாஹ்வுடைய செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்பவர் தானே தவிர அல்லாஹ்வாக முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான்.

ஆனால் நாம் இன்று பார்க்கிறோம். ஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.

ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் கடவுளாகவோ, கடவுளின் அம்சம் பெற்றவராகவோ ஆக முடியும் என்றால் நபிகள் நாயகத்தை இஸ்லாம் அவ்வாறு அறிமுகம் செய்திருக்கும். ஆனால் அவர்களைச் சிறந்த மனிதர் என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும் தான் இஸ்லாம் நம்பச் சொல்கிறது.

நபிகள் நாயகம் அவர்களிடம் பிரார்த்தனை செய்யவோ, வணக்கம் செலுத்தவோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையில் நபிகள் நாயகம் விலக்குப் பெற்றவர்கள் அல்ல என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

ஏகத்துவக் கொள்கையை சொல்லித் தந்த காரணத்தால், கடவுளுடைய சட்ட திட்டங்களை அவர்கள் மூலம் நாம் அறிந்து கொண்ட காரணத்தால் அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்பது தான் அவர்களைப் பற்றி இஸ்லாத்தின் நிலை.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் எதையெல்லாம் தந்தார்களோ அவை அனைத்தும் நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் இருந்து நமக்குத் தரப்பட்டவை என்ற நம்ப வேண்டும். இப்படி நம்புவது இஸ்லாத்தின் அடுத்த பாதியாகும்.

இஸ்லாம் தான் முதலில் தோன்றிய மார்க்கம்

உலகத்திற்கெல்லாம் கடவுள் ஒருவன்; அவன் ஆதியில் இருந்தே இருந்து கொண்டிருக்கின்றான் என்றால் 14 நூற்றாண்டுகளுக்கு முன் தானே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வந்திருக்கின்றார்கள்?

இப்படி இருக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்றால் இந்த 14 நூற்றாண்டுகளில் வாழும் மக்களுக்குத் தான் வழிகாட்ட வேண்டுமா? இதற்கு முன்னால் எவ்வளவோ மக்கள் வாழ்ந்திருக்கிறார்களே? என்ற சந்தேகம் வரலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் தான் அல்லாஹ்வுடைய தூதர் என்று இஸ்லாம் கூறினால் இந்தக் கேள்விக்கு இடம் உள்ளது. ஆனால் இஸ்லாம் அவ்வாறு கூறவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வுடைய தூதர்களில் ஒருவர் என்று தான் இஸ்லாம் சொல்கின்றது.

முதல் மனிதர் ஆதம் கூட அல்லாஹ்வின் தூதர் தான்; அவரும் இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கையைத் தான் சொன்னார்; ஆதமுக்குப் பிறகு நூஹ் நபியும், மூஸா நபியும், ஈஸா நபியும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையைத் தான் சொன்னார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஆதமிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை இடையிலுள்ள பல்லாயிரக் கணக்கான நபிமார்களும் இந்தக் கொள்கையைத் தான் கூறினார்களே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் முதன் முதலில் கூறியவர்கள் என்பது அல்ல.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப வேண்டும் என்பதன் கருத்து அவர்கள் இறைவனின் தூதர்களில் கடைசியாக வந்தவர் என்பது தான். அவருக்கு முன்னால் தூதர்கள் எவருமே வரவில்லை என்று நாம் நம்பக் கூடாது. திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் ஏராளமான இறைத் தூதர்கள் ஒரு கடவுளை வணங்குங்கள். மனிதனை வணங்காதீர்கள். கல்லை வணங்காதீர்கள் என்று சொன்னதாகப் பார்க்கிறோம்.

பிற மத நூல்களைப் புரட்டிப் பார்த்தால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டைப் பார்க்கிறோம். அதே போல் சித்தர்கள் பாடலில்,

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து மொனமொனன்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த சித்தர்கள் கூட நட்ட கல்லைத் தெய்வம் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லாக் காலங்களிலும் இந்தக் கொள்கை சொல்லப்பட்டது. அதன் பின் மறைந்து விட்டது. பிறகு வந்தவர்கள் மாற்றி விட்டார்கள்.

ஒரே கடவுளை வணங்குங்கள் என்று கூறியவர்களையே கடவுளாக மாற்றி விட்டார்கள். கடவுளைச் சொல்ல வந்த நன்மக்கள் கடவுளாக மாற்றப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசித் தூதராக வந்ததனால் இன்று வரை இந்தக் கொள்கையில் மாற்றமில்லாமல் சரியான அரண் போட்டு இஸ்லாம் தந்திருக்கின்றது.

இந்த வகையில் முதல் மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான் என்பது புலனாகிறது. முதல் மனிதனிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஒரு கடவுள் கொள்கை தான் இருந்தது. கடவுளுக்குரிய இலக்கணங்களையும் ஆதியிலே வாழ்ந்த நன்மக்கள் சொல்லிக் கொண்டு தான் வந்தார்கள்.

கடைசியாக வந்த நபி (ஸல்) அவர்கள் இந்தக் கொள்கையில் எந்த மாசும் வந்து நுழைந்து விடாத அளவிற்கு ஏராளமான ஏற்பாடுகளையும், அணைகளையும் போட்டு ஏகத்துவக் கொள்கை இன்று வரை நிலைத்து நிற்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.

முஹம்மது இறைத் தூதரா?

லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்பதையும் முஹம்மது ரசூலுல்லாஹ் - முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் - என்பதையும் நம்ப வேண்டும். நாம் சுட்டிக் காட்டிய அடிப்படையில் நம்ப வேண்டும். இப்படி யார் நம்பினார்களோ அவர்கள் தாம் முஸ்லிம்கள்.

அறிவுப்பூர்வமாகப் பேசும் சிலருக்கு இந்த இடத்தில் சந்தேகம் வரலாம். கடவுள் என்று ஒருவன் இருக்கின்றார் என்று கூறுகிறீர்கள். இதை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே? கடவுளே நேராக வந்து எல்லாவற்றையும் சொல்லி விட்டுச் சென்றால் ஏற்றுக் கொள்ளலாம். இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் தான்; முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடவுளுடைய தூதர் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதே அந்தச் சந்தேகம்.

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் தான் என்பதற்கு திருக்குர்ஆன் இன்று வரை ஒரு மாபெரும் நிரூபணமாக உள்ளது. திருக்குர்ஆனை நாம் புரட்டிப் பார்த்தால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தையும், அந்தக் காலத்தில் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும் பார்க்கும் போது உண்மையிலேயே இது முஹம்மது என்ற மனிதரால் சொல்லியிருக்க முடியாது.

20ம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்குரிய விஷயங்கள் அனைத்தும்  1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆனில் தெளிவாக, நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உருவாக்கி அதன் வழியாகச் சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய்க் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளான்.

நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இத்தகைய கால கட்டத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் வின்வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கான சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 55:33

விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்; மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்று கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.

விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

திருக்குர்ஆன் 6:125

இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

மேலும் மற்றொரு கோனத்திலும் வின்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!

திருக்குர்ஆன் 51:7

பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதன் தான் வாழ்ந்த பகுதியை விட வேறு ஒரு பகுதி இந்த உலகில் இல்லை என்று தான் விளங்கி வைத்திருந்தான்.

அமெரிக்காவை ஒருவன் கண்டுபிடித்தான் என்று அறிந்து வைத்திருக்கிறோம். இந்தப் பூமியில் இருக்கின்ற அமெரிக்காவையே ஒருவன் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது

இந்த உண்மையைப் பார்க்கும் போது இந்தக் குர்ஆன் 14 நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்த மனிதனின் கற்பனையில் தோன்றியது என்று சொல்ல முடியுமா?

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திர மண்டலத்திற்குப் போக முடியும் என்று கூறி இருக்கிறார் என்றால் இது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகச் சொன்னதில்லை. கடவுளுடைய வார்த்தை தான் என்பதற்கு இதுவே போதுமான சான்றாக இருக்கின்றது.

இது ஒரு சின்ன உதாரணம் தான்.

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 13:2

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன் 36:38

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.

பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான்.

உருண்டையாக இருக்கின்ற பூமி தான், இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி,சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.

பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது என்றான்.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது என்றும், தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.

இப்படி ஏராளமான விஞ்ஞான உண்மைகளைக் குர்ஆன் கூறுகிறது. குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளைப் பார்த்தால் இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் தான் என்பது தெரிய வரும்.

முஹம்மது என்ற மனிதரால் இப்படிப்பட்ட உண்மைகளை எப்படிக் கூற முடியும்? அவர்கள் வாழ்ந்த காலம் என்ன? எழுத்தறிவில்லாத ஒரு காலம். முஹம்மது அவர்களுக்கும் எழுத்தறிவு கிடையாது.

எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்க எந்த ஒரு அறிவியலும் ஏன் சாதாரண தொலை நோக்கியைக் கூட கண்டுபிடிக்காத காலத்தில் வாழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்கள் இந்தக் கோள்கள் அனைத்தும் சுழல்கின்றன. அவற்றுக்குரிய பாதையில் சுழல்கின்றன என்று கூறுபவர்களாக இருந்தால் அவர் சாதாரண முஹம்மதாக இருந்து கூற முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் என்ற அடிப்படையில் இருந்தால் மட்டுமே சொல்ல முடியும்

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மட்டுமே இதைச் சொல்ல முடியும். இன்னும் திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் அறிவியல் உலகம் கூறும் எல்லா விதமான உண்மைகளையும் அன்றே சொல்லி விட்டது. வேறு எந்த வேத நூலிலும் நீங்கள் இதைப் பார்க்க முடியாது.

மாறாக அவை விஞ்ஞானத்திற்கு எதிராகவே இருக்கும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னே அருளப்பட்ட திருக்குர்ஆனில் 6666 வசனங்கள் உள்ளன. ஆனால் இன்று ஒரே ஒரு வசனத்தைக் காட்டி இது அறிவியல் உண்மைக்கு மாற்றமாக இருக்கின்றது என்று யாராலும் கூற முடியாது.

14 நூற்றாண்டுகள் ஆன பிறகும், இன்றைய அறிவியல் உலகத்தில் இவ்வளவு கண்டுபிடிப்புகள் வந்தும் கூட பொய்ப்பிக்க முடியாத ஒரு நூலை கடவுள் தந்தார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் என்பதற்கு முஸ்லிம்கள் கையில் இன்றைக்கு இருக்கும் ஒரே ஆதாரம் இந்தத் குர்ஆன் தான். இந்தக் குர்ஆனை வைத்துத் தான் நாம் இஸ்லாம் மார்க்கம் கடவுளின் மார்க்கம் என்று நம்புகிறோம்.

இது முஹம்மது (ஸல்) அவர்கள் எழுதிய புத்தகம் என்று சொல்வார்கள். இது முஹம்மது எழுதிய புத்தகம் என்றால் இவையெல்லாம் அவருக்கு தெரியவே தெரியாது. அவருக்குத் தெரிய வேண்டுமானால் அவர் என்ன 20 ஆம் நூற்றாண்டு மனிதரா? 20 ஆம் நூற்றாண்டு மனிதர்களுக்குச் சொல்ல வேண்டியதை அவர் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றால் குர்ஆன் அவர் கற்பனையில் உதித்ததல்லை என்பது உறுதி.

(இது பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ள, வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இப்படிப்பட்ட ஒரு அருமையான தத்துவம்

மனிதர்கள் சிந்திக்க வேண்டிய தத்துவம்

அறிவுக்குப் பொருத்தமான தத்துவம்

மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தத்துவம்

முரண்பாடே இல்லாத ஒரு தத்துவம் தான் இஸ்லாம்.

இஸ்லாம் என்பது பிறப்பினால் வருவதில்லை. அதனைப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் போது வருகிறது. இதனை யாரும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இது அகில உலகத்திற்கும் பொதுவானது. மனிதர்களே! என்று தான் குர்ஆன் அழைப்பு விடுகின்றது.

முஸ்லிமான தாய் தந்தைக்குப் பிறந்தவன் எல்லாம் முஸ்லிம் இல்லை. ஆனால் முஸ்லிம் அல்லாத பெற்றோர்களுக்குப் பிறந்து இதனை ஏற்றுக் கொண்டு விட்டால் அவன் முஸ்லிம். உனது பூர்வீகம் என்ன? என்று கேட்க முடியாது. ஆகவே இஸ்லாம் என்பது நம்பி விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கைத் தத்துவம்.

இடைத் தரகருக்கு இடமில்லை

பொதுவாகவே மதங்கள் என்றால் மனிதனை ஏமாற்றும் ஒரு வழி என்று ஆகி விட்டது.

இதற்கு அடிப்படையாக அமைவது மதங்களில் காணப்படும் இடைத் தரகர் கோட்பாடாகும்.

எந்த மதமாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக நெருங்க முடியாது. அதற்குரிய மத குருமார்களிடம் போய் அவர்களுடைய துணையுடன் தான் கடவுளிடம் நெருங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால் கடவுளை நெருங்குவதற்கு உனக்கும், கடவுளுக்கும் இடையில் எந்த இடைத் தரகரோ, புரோகிதரோ இருக்கக் கூடாது.

மனிதன் கடவுளிடம் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்க வேண்டும். நேரடியாகக் கேட்க வேண்டும். கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் இன்னொரு மனிதன் புரோக்கராக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது.

பெயர் வைக்க வேண்டுமா?

கல்யாணம் நடத்த வேண்டுமா?

இறந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டுமா?

நீங்களாகச் செய்து கொள்ளலாம். இதற்கு மத குருவின் தயவு தேவை இல்லை என்று சொல்லி புரோகிதர்களை எல்லாத் துறையிலும் ஒழித்த மார்க்கம் இஸ்லாம் தான். எந்தத் துறையிலும் புரோகிதர் கிடையாது. புரோகிதர்களுக்கு வேலையே கிடையாது.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

திருக்குர்ஆன் 2:186

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 40:60

கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் புரோக்கர்கள் நுழைந்து மார்க்கத்தைச் சீரழித்து விடாத அளவுக்கு அணை கட்டிய மார்க்கம் இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ திருமணங்கள் நடந்திருக்கின்றன. அத்திருமணங்களில் மந்திரம் ஓத நபிகள் நாயகம் அவர்களை யாரும் கூப்பிட்டது கிடையாது. இவர்களும் சென்றது கிடையாது.

சம்பந்தப்பட்ட பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்தை நடத்திக் கொள்வார்கள். புரோகிதர் தேவையென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றிருக்க வேண்டும்.

ஏனைய மதங்களின் சுரண்டலைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கின்றார்களே அவர்கள் இஸ்லாம் குறித்து பயப்படத் தேவை இல்லை. உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் மதத்தின் பெயரால் ஒருவரை மற்றவர் சுரண்ட முடியாது. ஏமாற்ற முடியாது. அப்படிப்பட்ட ஒரு மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாத்தின் மீது விமர்சனங்கள்

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கம் என்பதை ஏற்றுக் கொள்ளும் எத்தனையோ நடுநிலையாளர்களுக்கு, இஸ்லாத்திலுள்ள சில விஷயங்கள் உறுத்தலாக இருக்கின்றன.

ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதித்துள்ளது அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது.

இதை இஸ்லாம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியாகவே வழங்கியுள்ளது.

விபச்சாரம், வைப்பாட்டி போன்ற தொடர்புகள் மூலம் வழிகெட்டு, எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி விடும் நிலையை விட சட்டப்படி மனைவியாக்கிக் கொள்வது எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல!

ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அவளை அம்போ என விட்டு ஓடுவதை விட அவளை மனைவி என அங்கீகரித்து, அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளை தனது பிள்ளைகள் என்று வெளிப்படையாக அறிவிப்பது எந்த விதத்திலும் தாழ்ந்தது கிடையது.

இவ்வாறு இஸ்லாம் அனுமதி அளித்ததற்குரிய காரணங்களைக் கூறினால் நீண்டு விடும்.

(பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது? என்பது பற்றி விரிவாக அறிய ஆர்வமுள்ளவர்கள், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

தலாக் என்ற சொல் மூலம் பெண்களை எளிதாக விவாகரத்துச் செய்யும் சட்டமும் சிலருக்கு உறுத்தலாக அமைந்துள்ளது.

இஸ்லாம் தம்பதிகளைச் சேர்ந்து வாழவே வலியுறுத்துகிறது. அதையும் தாண்டி வாழவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தங்கள் மனைவியரை தீ வைத்துக் கொளுத்தி,ஸ்டவ் வெடித்துச் செத்தாள்என்று சொல்லி தப்பித்து விடாமல் இருப்பதற்காகவே தலாக் முறையை வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு மண விலக்குப் பெறும் உரிமை பெண்களுக்கும் எளிதாக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

தலாக் விஷயமாக இஸ்லாம் கூறும் நியாயத்தை அறிந்து கொள்ளும் போது இது போன்ற சட்டம் தங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.

பெண்களின் ஆடைகள், பெண் கல்வி, ஜீவனாம்சம், சொத்துரிமை உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் இஸ்லாத்தில் ஏற்கத்தக்க விடை உள்ளது.

இது போல் ஜிஹாத் என்ற பெயரில் நடக்கும் பயங்கரவாதம், கடுமையான குற்றவியல் சட்டங்கள் போன்றவையும் பலருக்கு உறுத்தலாக உள்ளது.

பயங்கரவாதச் செயலுக்கும் ஜிஹாதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் இதை ஒரு போதும் அனுமதித்ததில்லை.

கடுமையான குற்றவியல் சட்டங்கள் தான் இன்றைய உலகுக்குத் தேவை என்பதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன.

(இவை குறித்து அறிந்து கொள்ள குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இது போல் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகள் சிலர் ஓரிறைக் கொள்கைக்கு எதிராக,இறந்தவர்களின் சமாதிகளை வணங்குவதும், நாகூர் ஆண்டவரே! என்று இறந்தவர்களை அழைத்து வேண்டுதல் புரிவதும் பலருக்கு உறுத்தலாக உள்ளது. இஸ்லாத்திலும் பல தெய்வ நம்பிக்கை உள்ளதோ என்ற சந்தேகம் இதனால் அவர்களுக்கு ஏற்படுகின்றது.

ஆனால் இவர்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு எதிரானது. இறந்தவரை வழிபடுவதையும், சமாதிகள் கட்டுவதையும், சமாதிகளை வழிபாட்டுத் தலமாக ஆக்குவதையும், அடக்கத்தலங்களில் திருவிழாக்கள் நடத்துவதையும் நபிகள் நாயகம் அவர்கள் கண்டிப்புடன் தடை செய்து விட்டனர்.

இஸ்லாத்தின் வேத நூலான குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளிலும் இச்செயல்களுக்கு அறவே அங்கீகாரம் கிடையாது. குடிகார முஸ்லிம் பெயர் தாங்கிகள் இருப்பதால் இஸ்லாம் போதைப் பொருளை அனுமதிக்கிறது என்று நாம் யாரும் புரிந்து கொள்ள மாட்டோம்.

அது போல் தான் இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய சமாதி வழிபாட்டைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

(சமாதி வழிபாடு பற்றி விரிவாக அறிய தர்கா வழிபாடு என்ற நமது வெளியீட்டைக் காண்க!)

இஸ்லாம் மார்க்கத்தைத் திருக்குர்ஆனிலிருந்து, நபிகள் நாயகத்தின் போதனைகளிலிருந்து அறிந்து கொள்ளக் கூடிய யாரும் இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறி நிறைவு செய்கின்றேன்.

05.11.2009. 18:27 PM

நூலின் பெயர் : திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் பாகம் 2

ஆசிரியர் : ஏ.கே.அப்துர் ரஹ்மான் பக்கங்கள் : 144 விலை ரூபாய் : 28.00

மதிப்புரை

ஒவ்வொரு நபிக்கும் இறைவன் அற்புதங்களை வழங்கினான். எனக்கு வழங்கப்பட்ட பெரிய அற்புதம் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி)

இன்றைய நவீன உலகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை இன்று மெய்ப்பித்து வருகின்றது.

காட்டுமிராண்டிகள் காலம் என்று அறியப்படும் காலத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. அந்தக் காலத்தில் வாழ்ந்த எவ்வளவு பெரிய அறிவாளி பேசுவதாக இருந்தாலும் அந்தக் காலத்து அறிவுக்கேற்பவே பேச முடியும். எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் விஞ்ஞான உண்மைகளை மெய்ப்படுத்தும் வகையிலோ அல்லது அதற்கு முரணில்லாத வகையிலோ அன்றைய மனிதர்களால் பேச முடியாது.

திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும் நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியலுக்கும் எதிராக அமையவில்லை என்பதுடன் பல அறிவியல் செய்திகளை முன்கூட்டியே அறிவித்தும் இருக்கிறது என்பது குர்ஆனை வாசிக்கும் அனைவருக்கும் புரியும் உண்மையாகும்.

அப்படியானால் குர்ஆன் முஹம்மது என்ற மனிதரால் கற்பனை செய்யப்பட்டது அல்ல. மாறாக அவர்களைத் தூதராக அனுப்பிய அனைத்தையும் படைத்த இறைவனின் கூற்றாகத்தான் இருக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஆயினும் இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் முழு அளவிலான ஆய்வு நூல் தமிழிலும் இன்னபிற மொழிகளிலும் வரவில்லை என்பது பெரும் குறையாக இருந்தது.

இந்தக் குறையைப் போக்கும் வகையில் அறிவியலையும் குர்ஆனையும் ஒப்புநோக்கும் ஆய்வை நீண்ட காலமாகச் செய்து வரும் எனது நண்பர் ஏ.கே. அப்துர் ரஹ்மான் அவர்கள்``திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் என்ற நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். இரண்டு பாகங்களையும் முழுமையாக நான் வாசித்ததில் ஆய்வுக் கண்ணுடன் இலாத்தை அணுகும் அனைவருக்கும் பயன் தரும் என்று நம்புகிறேன்!

அத்தகையோருக்கு இந்நூலை பரிந்துரை செய்கிறேன்.

அன்புடன்

பீ. ஜைனுல் ஆபிதீன்

புகழனைத்தும் அல்லாஹ்விற்கு!

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்நூல் திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்பைப் படிக்கத் தொடங்கிய ஒரு எளிய வாசகனால் எழுதப்பட்ட நூலாகும்.

அறிவியலைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டதன் காரணமாக இளம் வயதிலேயே அது தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். அறிவியல் செய்திகளில் ஓரளவு தனி ஈடுபாடு எனக்குள் இருப்பதைத் தாமதியாமல் புரிந்து கொண்டேன். சில வருடங்கள் கழித்து திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பு ஒன்று கிடைக்கப் பெற்று அதையும் படிக்கத் தொடங்கினேன். அப்போது அறிவியல் நூல்களில் நான் படித்த சில செய்திகள் செய்திச் சுருக்கம் போல் திருக்குர்ஆனில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். மேலும் படிக்கப் படிக்க சில செய்திகள் புரிகின்ற விதத்திலும்சில செய்திகள் புரியாதது போன்றும் தென்பட்டன. மற்றும் சில செய்திகள் நான் அதுவரை எந்த அறிவியல் நூல்களிலும் படிக்காதவைகளாகவும் இருந்தன. எனவே படிக்காத அறிவியல் செய்திகளுக்காக புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்கத் தொடங்கினேன்.

இவ்வாறு ஒருபுறம் திருக்குர்ஆனையும் மறுபுறம் அறிவியல் நூல்களையும் மாறிமாறி படிக்கத் துவங்கியபோது திருக்குர்ஆனில் கொஞ்சமும் எதிர்பார்த்திராத அறிவியல் செய்திகள் ஏராளமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூலாக இல்லாமல் வேத நூலாக இருந்தும்கூட இவ்வளவு பெருவாரியான அறிவியல் செய்திகள்,அதிலும் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் இறக்கப்பட்டிருக்கஅந்நூலில் இருபதாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் அதிநவீன அறிவியல் உண்மைகள்கூட சொல்லப்பட்டிருக்கும் அற்புதத்தைக் கண்டு பிரமித்துப் போனேன்.

திருக்குர்ஆனிலிருந்து பெருவாரியான அறிவியல் செய்திகள் வரத் தொடங்கிய போது அவற்றுள் சில செய்திகள் முரண்படுவதைப் போன்றும்வேறு சில செய்திகள் விளங்காதது போன்றும் தென்படத் தொடங்கியது. எனவே திருக்குர்ஆனுடைய வசனங்களுக்குள் ஆழமாக இறங்கிச் சென்று சிந்திக்கத் தொடங்கினேன். இதன் விளைவாக விளங்காத செய்திகள் விளங்கத் தொடங்கி முரண்பாடுகளும் விலகத் தொடங்கின. சில முரண்பாடுகளின் தீர்வு அந்தந்த வசனங்களின் ஆழங்களிலேயே இருந்தன. மற்றும் சில முரண்பாடுகளின் தீர்வு வேறு வசனங்களில் கிடைத்தன. ஆயினும் வேறு சில முரண்பாடுகள் தீர்க்கப்படாமலே காணப்பட்டன. ஏனெனில் அந்த முரண்பாடுகளின் காரணம்உள்ளபடியே அறிவியல் அனுமானங்கள் தவறாக இருந்ததாகும். நமது பணியை மேலும் தொடர்ந்தபோது தவறான அறிவியல் அனுமானங்கள் திருத்தப்பட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் திருக்குர்ஆனுடைய அறிவியலே உண்மை என நிரூபித்த அற்புதத்தையும் காண முடிந்தது.

ஆய்வுக் கண்களோடு பார்த்தால் திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதை நிரூபிப்பதற்காக ஏராளமான ஆதாரங்களை அது வழங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவைகளில் இறையியல்அரசியல்நீதிவரலாறுதத்துவம்இலக்கியம் மற்றும் அறிவியல் போன்ற துறைகள் குறிப்பிடத் தக்கவைகளாகும். அவைகளில் நாம் அறிவியல் சார்ந்த ஆதாரங்களையே இந்நூலில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் இல்லை என்றும்அது இறைவனால் வழங்கப்பட்ட வேத நூலே என்றும் நாம் அறிவோம். இருப்பினும் இதில் இந்த அளவிற்கு அறிவியல் செய்திகள் வழங்கப்படுவதற்கு இரண்டு காரணங்களை நம்மால் காண முடிகிறது. முதலாவதாக இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை பற்றிக் கூறும் போதும்,மானிடர்க்கு இறைவன் செய்துள்ள அனுக்கிரகங்களைப் பற்றிக் கூறும் போதும் அதில் இயல்பாகவே அறிவியல் வந்து விடுகிறது. இரண்டாவதாக திருக்குர்ஆன் இறைனிடமிருந்து வழங்கப்பட்ட கடைசி வேத நூலாக இருப்பதால் இந்த உலகம் உள்ளளவும் அது உலக மக்கள் அனைவருக்குமான இறைவனின் வழிகாட்டியாக இருந்து வருகிறது. எனவே உலகில் தோன்றிய அறிவியல் புரட்சிக்குப் பிறகும்இங்கு வாழும் அறிவியல் அபிமானிகளுக்கு இது இறைவனிடமிருந்து வந்துள்ள வேத நூலே என்பதற்கான ஆதாரங்களைத் தரும் பொருட்டும் அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் கூறப்படும் தேவை ஏற்பட்டது. இந்த இரண்டாவது காரணம் நம்மை வெகுவாகக் கவர்கிறது.

இந்த அறிவியல் யுகத்தில் அறிவியல் அபிமானிகளாக வாழும் கோடிக் கணக்கான மக்கள் எதை நம்புவதாக இருந்தாலும் அது அறிவியலுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று ஆராய்ந்து தீர்மானிக்கும் இயல்பைப் பெற்றுள்ளார்கள். அம்மக்களில் பெரும்பாலானவர்களின் ஒரு பொதுவான கருத்துவேத நூல்கள் யாவும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவைகளேஎனவே அவை யாவும் கடவுளின் பெயரால் மனிதர்களால் உருவாக்கப் பட்டவைகளே என்பதாகும். ஆனால் திருக்குர்ஆனைப் பொருத்தவரை அவர்களுடைய இக்கருத்து உண்மைக்குப் புறம்பானதாகும்.

திருக்குர்ஆனைத் தவிர மேலும் சில வேத நூல்கள் திருக்குர்ஆனுக்கு முன்னர் இறைவனால் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் பிற்காலத்தில் அவைகளில் ஒரு பக்கம் மகான்களின் உபதேசங்கள் குடியேறியபோதுமறுபக்கம் மத மேலாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பல திருத்தங்களும் நடைபெற்றுள்ளன என்று இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர். இவ்வாறு மனிதர்களின் சொந்தக் கருத்துக்களாக குடியேறிய வேத வசனங்களில் அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் தோன்றுவது இயல்பே. ஆயினும் திருக்குர்ஆன் இறைவனின் கடைசி வேத நூலாக இருப்பதாலும்உலகுள்ள காலம்வரை அது இறைவனின் வழிகாட்டியாக உலக மக்களுக்குப் பயன்பட வேண்டிய காரணத்தாலும் அதன் பாதுகாப்பை இறைவன் தானே ஏற்றுக் கொண்டான். எனவே திருக்குர்ஆனில் மானிடனின் வார்த்தைகள் - அவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தபோதிலும் - ஒன்றுகூட உட்புக முடியவில்லை. திருக்குர்ஆனில் உள்ள 77 ஆயிரம் வார்த்தை களும், 3,20,000 எழுத்துக்களும் இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடாகும்.

திருக்குர்ஆனில் எடுத்த எடுப்பிலேயே முரண்பாடாகத் தோன்றும் ஓரிரு செய்திகள் (சான்றாக பேரண்டம் படைக்கப்பட்டது ஆறு நாட்களில்ஆகாயம் பூமிக்குக் கூரை,ஆகாயத்தில் நிலை நாட்டப்பட்ட தராசு போன்றவை) நுனிப்புல் மேய்வதனால் தோன்றுவதாகும். வசனங்களுக்குள் ஆழமாக இறங்கிச் சென்று பார்த்தால் எதிர்பாராத நவீன அறிவியல் உண்மைகளின் அழுத்தத்தால் மூச்சுத் திணறலே ஏற்படக்கூடும். அந்த அளவிற்கு அபாரமான அறிவியல் உண்மைகள் அவற்றுக்குள் அடங்கி இருப்பதைக் காணலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் திருக்குர்ஆனுக்கு இருந்தும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சில அறிவியல் செய்திகளைப் பற்றிய ஆய்வுகள் மட்டுமே இத்துறையில் நடைபெற்றுள்ளதாகவே காண முடிகிறது. ஆனால் உலகுள்ளளவும் உலக மக்கள் அனைவருக்குமாக இறைவன் இறக்கி வைத்த ஒரே வேதமாகிய இத்திருமறைக்குரிய அறிவியல் ஆதாரங்களின் மீது விரிவான ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உலக மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் திருக்குர்ஆனின் நம்பிக்கையாளர்களாக இருக்கும் தகுதி வாய்ந்த அறிவியலாளர்களின் கவனத்திற்கு அதில் கூறப்பட்டுள்ள புரட்சிகரமான நவீன அறிவியல் உண்மைகளைப் பற்றிய செய்திகள் சென்றடையவில்லை. இந்நூல் அவர்களின் கவனத்தைக் கவர்ந்து திருக்குர்ஆனிலுள்ள அறிவியல் ஆதாரங்களைச் சிறந்த முறையில் அவர்களிடமிருந்து வெளிவரச் செய்வதற்கான ஒரு முயற்சியாகும். இம்முயற்சி நிறைவேற இறைவன் துணை புரிவானாக!

அல்ஜன்னத் பத்திரிக்கையில் 1992-ல் இருந்து தொடர்ச்சியாக சில வருடங்கள் திருக்குர்ஆனுடைய அறிவியல் ஆதாரங்களைக் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருந்தபோது வாசகர்கள் அளித்த அமோகமான வரவேற்பு மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். அக்கட்டுரைகள் கல்விக் கூடங்களையும் எட்டிசில கல்லூரிகளிலிருந்து திருக்குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதற்கான வாய்ப்பைக்கூட பெற்றுத் தந்துள்ளன. நான் எழுதிய கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிடும்படி நண்பர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இருப்பினும் திருக்குர்ஆனுடைய அறிவியல் ஆதாரங்களின் மீது வெளியிடப்படும் ஆய்வுப் புத்தகம் உள்ளபடியே தகுதி வாய்ந்த அறிவியலாளர்களிடமிருந்து வெளிவருவதே சிறப்பாக இருக்கும் எனக் கருதி நண்பர்களின் வற்புறுத்தல்களைத் தட்டிக் கழித்து வந்தேன். ஆனால் நான் எழுதிய கட்டுரைகள் வருடக்கணக்காக வெளியிடப்பட்ட மாதாந்திரப் பத்திரிகைகளில் சிதறிக் கிடப்பதால் அவை உரியவர்களின் கவனத்தை சென்றடையாத நிலையே ஏற்பட்டுள்ளது. இக்குறையை நீக்குவதற்காகவே நான் முதலில் எழுதிய கட்டுரை களில் சிலவற்றோடு திருக்குர்ஆனிலிருந்து இது வரை வெளிப்படுத்தப்படாத மற்றும் பல அறிவியல் ஆதாரங்களையும் இணைத்து இந்த முதல் தொகுதியை உருவாக்கி உள்ளேன்.

இந்நூலைப் படிக்கும் வாசகர்கள்ஒரு எளிய அறிவியல் நூல் வாசகனால் திருக்குர்ஆனிலிருந்து இந்த அளவிற்கு அறிவியல் ஆதாரங்களைப் பெற முடிகின்ற தென்றால் உள்ளபடியே ஒரு அறிவியலாளர் இப்பணியைச் செய்திருந்தால் திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்டதே என்பதற்கு எந்த அளவிற்கு மேலும் சிறப்பான ஆதாரங்களைப் பெற முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் இதுவரை திருக்குர்ஆனுடைய தோற்றுவாய் (ஆசிரியர்) யார் என்று அறியாத வாசகர்கள் இந்நூலில் காணும் அறிவியல் ஆதாரங்களைப் பார்வையிட்டு திருக்குர்ஆன் இறைவனிடமிருந்தன்றி வேறு யாரிடமிருந்தாவது வந்திருப்பதற்கு எள்ளளவாவது அல்லது எள்ளின் முனை அளவாவது வாய்ப்பிருக்கிறதா என்பதை விருப்பு வெறுப்பின்றி சிந்தித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என சகோதரப் பாசத்தோடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களது ஆய்வில் திருக்குர்ஆனின் தோற்றுவாய் இறைவனே என்பதை உங்கள் பகுத்தறிவு ஒப்புக் கொண்டால் திருக்குர்ஆனை உங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தபோதுசந்திக்கும் போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தி பற்பல கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்பையும் உருவாக்கித் தந்த துஹணுழ தலைவர் ளு. கமாலுதீன் மதனீ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையில் எழுதுவதற்கு வாய்ப்பை உருவாக்கித் தந்து,திருக்திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்புக்களில் எனக்கேற்படும் ஐயங்களைத் தீர்த்து வைத்து,எனது கட்டுரைகள் சிறப்பாக அமைய துணை புரிந்ததோடு மக்கள் மத்தியில் என்னை அறிமுகப்படுத்தி பற்பல கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்புக்களையும் உருவாக்கி என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்திய அப்போதைய அல்ஜன்னத் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பி ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இந்த நூலை எழுதும்போது திருக்குர்ஆனுடைய மொழி பெயர்ப்புகளில் ஏற்பட்ட ஐயங்களை நிவர்த்தி செய்து தந்த மௌலவி யூசுஃப்பெரும்பாவூர் அவர்களுக்கும்,அறிவியல் நூல்களைத் தந்து உதவிய அன்புச் சகோதரர்கள் பேராசிரியர் கூ.ஊ. அப்துல் மஜீத் மற்றும் முஹம்மது நஜீப்ஜமால் முஹம்மது கல்லூரிதிருச்சி மற்றும் ஹ.ஐ. அப்துல் மஜீத்பட்டிக்கரை ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னை அவ்வப்போது ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த பெயர் குறிப்பிடப்படாத சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த நூலை வல்ல இறைவனின் துணையோடு உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

முதல் பாகத்திற்கான முன்னுரையை வாசித்து விட்டீர்களல்லவாஇந்த இரண்டாம் பாகத்திற்கும் அந்த முன்னுரை முற்றிலும் பொருந்தக் கூடியதாக இருப்பதால் அதை இந்த இரண்டாம் பாகத்திற்குரிய முன்னுரையாக எடுத்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் பாகத்திற்கு வழங்கப்பட்ட முன்னுடையை வாசித்து விட்டீர்கள். இந்த இரண்டாம் பாகத்திற்கும் இந்த முன்னுரையே பொருந்தும் என்பதால் இதையே இந்த இரண்டாம் பாகத்திற்கும் முன்னுரையாக எடுத்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மண்ணகமும் விண்வெளியும் மர்மத் தராசில்

திருக்குர்ஆனை வாசிக்கும் ஒருவர் அதில் பற்பல நற்கரு மங்களை பற்றிய விபரங்களும் அவைகளைப் பின்பற்றி வாழும்படி கட்டளை இடப்படுவதையும் பார்க்க முடியும். அவற்றுள் பலவும் திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட கடைபிடித்து ஒழுகுவதைப் பார்க்கலாம். அவ்வகையான திருமறையின் கட்டளைகளில் ஒன்று நிறுத்தலளவையை குறையின்றிச் சரியாக நிலை நிறுத்துவதற்கான கட்டளையாகும். இக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு துல்லியமாக நிறுத்தக்கூடிய அளவைக் கருவிகள் நமக்குத் தேவை. இத் தேவையை நிறைவேற்ற உலக நாடுகளின் அளவையியல் துறையினர் (Metrology Department) அவ்வப்போது செயல்பட்டு மிகத் துல்லியமான அளவைக் கருவிகள் உருவாக்கி (திருக்குர்ஆனின் கட்டளையை நிறைவேற்ற) பெரிதும் உதவி செய்கின்றனர்.

அளவைகள் வணிகத்தின் உயிராகவும் வணிகம் சமூகத்தின் முதுகெலும்பாகவும் இருப்பதால் வணிகத்தைத் திறம்பட நடத்திச் செல்ல துல்லியமான அளவைகள் நமக்குத் தேவை. மேலும் ஒரு சமூகத்தின் சாந்தியும் ஒற்றுமையும் அதில் நிலவும் நீதியைப் பொருத்தே அமையும். நீதியை நிலைநாட்டுவதில் துல்லியமான அளவைகளை நிலை நாட்டலும் தவிர்க்க முடியாததாகும். எனவே அளவையியல் துறையினர் அறிமுகப்படுத்தும் துல்லியமான அளவை முறை களை மொத்த மனிதர்களுமே விரும்பி ஏற்றுக்கொள்கின்ற னர். இவ்வாறு திருக்குர்ஆனின் அளவை சம்பந்தமான கட்டளையை குறைந்தபட்சம் சொந்த விருப்பத்தின் பேரிலேனும் உலக மக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

சீர் குன்றிய அளவை முறைகள் :

அளவை இயல் என்பது அளக்கும் கலையாகும். இன் றுள்ளதைப் போன்று துல்லியமான அளவைக் கருவிகளோ அல்லது அளவை முறைகளோ இல்லையென்றாலும் அளவை இயல் என்பது மனித நாகரீகத்தின் அளவிற்குப் பழமை வாய்ந்ததாகும். அரை நூற்றாண்டுக்கு முன்னால் வரை உலகின் பெரும் பகுதிகளில் இராத்தல் (Pound) எனும் நிறுத்தலளவை பரவலாகப் புழக்கத்தில் இருந்து வந்தது. இராத்தலின் பிறப்பிடம் ரோமதேசம் எனக் கூறப்படுகிறது. பண்டைக் காலத்தில் ரோமானியப் பேரரசு உலகின் வல்லரசு களில் ஒன்றாக விளங்கியபோது அவர்களிடமிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய நிறுத்தலளவையே இராத்தல் ஆகும். இராத்தல் என்பதற்கு `லிப்ரா (Libra) எனும் சொல் ரோமாபுரியில் வழங்கப்பட்டு வந்தது. எனவே பவுண்டு (Pound) என்பதன் சுருக்கமான லிப்ரா என்பதன் சுருக்கமே (Lb) நிலை பெற்று விட்டது. லிப்ரா என்பது 7680 கோதுமை மணிகளின் எடைக்குச் சமமானதாகும்.

இதைப்போன்று தூரத்தை அளப்பதற்கு `மைல் (Mile) எனும் அளவையைப் பயன்படுத்தி வந்தோம். (நவீனப்படுத் தப்பட்ட மைல் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது) இச்சொல் இலத்தீன் மொழியின் `மில்லி பாசம் (Millee Passuum) எனும் சொற்களிலிருந்து தருவிக்கப்பட்டதாகும். இதன் பொருள் ஆயிரம் காலடிகளின் நடை தூரம் என்பதா கும். இந்த அளவை முறையும் ரோமானியர்களின் அளவை முறையாகும். ரோமானிய வீரரின் கால் நடையில் இரண்டு காலடிகளின் தூரம் ஒவ்வொன்றும் இரண்டரை அடிகளாகக் கருதப்பட்டு ஒரு மைல் என்பது 5000 அடிகளாக நிர்ணயிக் கப்பட்டது. (நவீனப்படுத்தப்பட்ட மைல் என்பது 5280 அடிக ளாக நிர்ணயிக்கப்பட்டு இப்போதும் உபயோகத்தில் உள்ளது.)

நேரத்தை அளத்தல் என்பது நமது மூதாதையர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. எளிதாக எடுத்துச் சொல்லக் கூடிய நேரத்தை அளக்கும் கருவிகள் அவர்களிடம் இருக்க வில்லை. அவர்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் மட்டும் பணியாற்றும் வழக்கத்தைக் கொண்டவர்களாக இருந்ததால் நேரத்தை அறிவதற்கு நிழலை அளக்கும் முறையைக் கையாண்டு வந்தார்கள்.

கொள்ளளவை (Volume) அளப்பதற்கு பொதுவாக அறியப்பட்ட அலகுகள் ஏதும் முற்காலத்தில் இருக்கவில்லை என்பதால் ஒவ்வொரு பிரதேசத்தாரும் அவர்களுக்குச் சொந்த மான அளவை முறைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். திருக் குர்ஆன் வழங்கப்பட்ட காலத்தில் அரேபியாவில் இருந்த கொள்ளளவை அலகுகள் `முத்து மற்றும் `சாஉ ஆகியவை களாகும். `முத்து என்பது ஒருவர் தம்முடைய இரு உள்ளங் கைகளையும் குழியாக இணைத்துப் பிடித்து அள்ளி எடுக்கும் அளவும் `சாஉ என்பது அதன் மும்மடங்குமாகும்.

இதுவரை கூறப்பட்ட விபரங்களிலிருந்து பண்டைக் கால அளவைமுறை எந்த அளவுக்கு அறிவியலுக்கு அன்னிய மாக இருந்தது என்பதை விளக்கும் மிகச் சில எடுத்துக் காட்டுகளாகும். இந்த அளவைமுறைகளை வைத்துக் கொண்டு வளர்ந்து வரும் மக்களின் நவீனத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய நீதிபூர்வமுமான சமுதாய அமைப்புக் களை நடத்திச் செல்ல இயலாது என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே நவீன அளவையியல் துறையினர் இத்துறையில் மிகத் துல்லியமான அளவைக் கருவிகளையும்,அளவைமுறைகளையும் உருவாக்கித் தந்துள்ளனர்.

நவீன அளவை இயல் துறையினரின் சாதனைகள் :

இன்றைய உலகின் விஞ்ஞானிகள் ஒரு வினாடியின் பத்து இலட்சம் பாகங்களில் ஒரு பாகத்தைக்கூட துல்லிய மாகக் கணக்கிடும் அணுக் கடிகாரத்தைப் பெற்றுள்ளனர். நமது பொறியாளர்கள் அங்குலத்தின் ஐம்பதாயிரம் பாகங் களில் ஒரு பாகத்தைக்கூட அளக்கக்கூடிய நுண்ணோக்கி (Microscope) பொருத்தப்பட்ட மைக்ரோ மீட்டரைப் (Micro Meter)பயன்படுத்துகின்றனர். நாம் எழுதுவதற்குப் பயன்படுத் தும் சாதரண தாள்கள் கூட இங்கு குறிப்பிடப்பட்ட அளவை விட நூறு மடங்கு அதிகப் பருமன் கொண்டதாக இருக்கும். அவ்வளவு நுண்மையாக நமது பொறியாளர்களால் அளக்க முடிகிறது.

நிறுத்தலளவையில் நாம் `ஈக்கி ஆர்ம் தராசை (Equi - Arm Balance) பெற்றுள்ளோம். இது ஒரு அவுன்சில் (அவுன்சு என்பது ஒரு இராத்தலில் பதினாறில் ஒரு பங்காகும்) இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் பாகங்களில் ஒரு பாகத்தைத் துல்லியமாக எடை போடும் திறன் பெற்றதாகும்.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நமது அளவையியல் துறையினர் நவீன உலகின் பல்வேறு அளவைத் தேவை களை நிறைவேற்ற மிகத் துல்லியமான அளவைக் கருவிகளை உருவாக்கித் தந்து நீதி சிறந்த சமுதாயத்தை மட்டுமின்றி ஆற்றல் மிக்க சமுதாயத்தையும் உருவாக்க உதவி செய்துள் ளார்கள் என அறிகிறோம். நமது ஆற்றல் என்பது நமது ஒற்றுமையில் மட்டுமின்றி மற்றொரு விதத்தில் பார்க்கும் போது நாம் பெற்றுள்ள தொழில் நுணுக்கம் மற்றும் இயந்திரங்களையும் (Technology and Machineries)சார்ந்திருக் கிறது. தொழில் நுணுக்கத்தை உயர் தரத்திற்குக் கொண்டு செல்வதற்கும் நமது இயந்திரங்களை வலிமை மிக்கதாக மாற்றுவதற்கும் நுண்மை வாய்ந்த மற்றும் துல்லியமான அளவை முறைகள் தேவையாகும். எனவே மனித சமூகத்தை நீதி காக்கும் சமூகமாகவும்ஆற்றல் மிக்க சமூகமாகவும் நிலை நாட்டுவதற்கு அளவையியல் துறையினரின் பணி பெரிதும் உதவி செய்திருப்பதோடு திருக்குர்ஆனுடைய கட்டளையை நடைமுறைப்படுத்துவதற்கும் உதவி செய்துள்ளது.

மனிதன் தன்னுடைய அறிவையும் வளர்ந்து வரும் மனித குலத்திற்கு பயனளிக்கும் கலைகளையும் பயிலும்படி திருக்குர்ஆன் பல முறை அதன் நம்பிக்கையாளர்களைத் தூண்டுகிறது. ஆயினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அதைத் தேவையான அளவிற்குப் பொருட்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையும் வருந்தத்தக்க செய்தியுமாகும்.

உயர்த்தப்பட்ட வானம்

நிறுத்தல் அளவையைச் சீராக நிலைநாட்டும்படி திருக்குர்ஆன் கூறும் செய்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

``அவன் வானத்தை உயர்த்தினான். தராசை நிலை நாட்டினான். தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.

(55:7-9)

என்ன சொல்கின்றன இந்த வசனங்கள்முதலாவதாக அல்லாஹ் வானத்தை உயர்த்தினான் எனக் கூறுகிறது. இந்த வசனம் கூறும் விஷயம் உண்மையாக இருந்தால் ஒரு காலத்தில் வானம் மிகத் தாழ்வாக இருந்தது என்பதும் பிறகு அதை உயர்த்தக்கூடிய ஆற்றலின் செயற்பாடு காரணமாக வானம் உயர்ந்துள்ளது என்பதும் உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் கல் தோன்றிமுள் தோன்றிமனிதனும் தோன்றிய காலம் முதல் இவ்வானம் இப்படியே இருந்து வருவதாகவே மனித குலம் எண்ணிக்கொண்டு இருக்கிறது. எனவே அதற்கும் முந்திய காலத்தில் வானம் எப்படி இருந்தது என்பது யாருக்குத் தெரியும்அதையும் கூறக்கூடிய திறமை அறிவியலுக்கே உண்டு என்பதும் அந்த அறிவியல் வளர்ச்சி இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே நாம் பெற்றுள்ளோம் என்பதும் நமக்குத் தெரியும். எனவே இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் இதைக் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்புக் களில் ஒன்றாம் பெருவெடிப்புக் கோட்பாட்டை நாம் முதல் தொகுதியில் முதல் அத்தியாயத்தில் கண்டோம். அந்த அத்தி யாயத்தில் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் ஆகாயம் சின்னஞ் சிறிய உருவத்துடன் காலக்சிகள் மிக நெருக்கமாக வும் நட்சத்திரங்கள்கூட பூமிக்கு மிக நெருக்கமாகவும் இருந் தன எனக் கூறியுள்ளது. மேலும் பேரண்டத்தின் விரிவாக்க ஆற்றலின் தொடர்ச்சியாகவே வானமும் வானகப் பொருட்க ளும் உயர்ந்து சென்றுள்ளன எனவும் கூறி, ``வானத்தை இறைவன் உயர்த்தினான் என்று இவ்வசனத்தில் கூறப் பட்டுள்ள திருக்குர்ஆனின் அறிவியலை உண்மைப் படுத்தும் அதனுடைய பணியைச் செவ்வனே செய்துள்ளது. எனவே திருக்குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்கும் ஏராளமான அறிவியல் சான்றுகளில் ஒன்றாக இந்தச் செய்தியும் இடம் பிடித்துக் கொண்டது. இரண்டாவது செய்தியாக இவ்வசனங்களில் குறிப்பிடப் பட்டிருப்பது ``(வானத்தை உயர்த்தி) தராசை நிலை நாட்டினான் என்பதாகும். உண்மையிலேயே இது ஒரு மெய்ச் சிலிர்க்கச் செய்யும் அபாரமான அறிவியல் பேருண்மையாகும்.

வானத்தில் ஒரு விந்தைத் தராசு :

திருக்குர்ஆன் வழங்கப்பெற்ற காலத்தில் வாழ்ந்த பாமர மக்களின் அறிவியல் மட்டுமின்றி அக்காலத்திலோ அதற் கடுத்த சில நூற்றாண்டுகளிலோ வாழ்ந்த உலகின் திறமை மிக்க அறிவியலாளர்களின் அறிவியல் அறிவைக்கூட அரபி யர்களோ அல்லது அதிலும் குறிப்பாக எழுதப்படிக்கத் தெரியாத இறைத்தூதர் முஹம்மத் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டுமாக!) அவர்களோ பெற்றிருந்தார்கள் என்றோ ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம். அப்போதும் கூட இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மை யாதென்று ஒருவர் விளங்கிக்கொண்டால் திருக்குர்ஆனின் ஈடு இணையற்ற அறிவியல் அற்புதங்களின்அழுத்தம் அந்த நபருக்கு மூச்சுத் திணறலைத் தோற்றுவிக்கும். (அந்த நபருக்குத் தேவையான அறிவியல் அறிவோடு நியாயமான இறையச்சமும் தேவையாக இருக்கவேண்டும் என்பது அடிவரை இடப்பட வேண்டியதாகும்.) அந்த மூச்சுத் திணறலை நாமும் சற்று அனுபவிக்கும் பொருட்டு வானத்தை உயர்த்தி தராசை நிறுவியதாகக் கூறும் திருக் குர்ஆன் அவ்வாறு நிறுவப்பட்ட தராசின் பயன்பாடு என்ன என்பதையும் அவ்வசனங்களில் கூறியுள்ளது. அந்த விபரத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

வானத்தை உயர்த்தி தராசை நிறுவியது ஏன் என்று ஒரு வினாவை இங்கு எழுப்பினால் அதற்கு அவ்வசனத்திலிருந்து பெறப்படும் பதில் ``தராசில் நீங்கள் நீதி தவறக்கூடாது என்பதற்காக என்பதாகும். இதன் பொருள்நாம் தராசில் பொருட்களை நிறுத்தும்போது நமக்கு நீதி தவறாமல் இருப்பதற்காகவே அத்தராசு நிறுவப்பட்டுள்ளது என்பதாகும். இதையே வேறு வார்த்தையில் கூறினால் `அத்தராசு நிறுவப் படாமல் இருந்திருந்தால் நம்மால் தராசில் நீதி தவறாமல் எடைபோட முடியாது என்பதாகும். இத்தராசை நிறுவியதன் பொருட்டு நம்மிடமிருந்து ஒன்றை இறைவன் எதிர்பார்ப்ப தாகவும் அவ்வசனங்கள் குறிப்பிடுகின்றன. நாம் நிறுப்பதில் குறைத்து விடாமல் நியாயமான நிறுத்தல் முறையை நிலை நாட்ட வேண்டுமென்பதே அந்த எதிர்பார்க்கப்படும் செயல் - ஒழுக்க நெறி - ஆகும் எனவும் அவ்வசனங்கள் குறிப்பிடு கின்றன.

சுருங்கக்கூறின்நாம் பொருட்களை நிறுத்தும்போது சரியாக நிறுத்தவேண்டும். நிறுத்தலில் நமக்குத் தவறு நேராதிருப்பதற்காக அல்லாஹ் வானத்தை உயர்த்தி ஒரு தராசை நிறுவியுள்ளான் என்பது இவ்வசனங்களின் பொருளாகும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தராசு இந்த பூலோகத்தில் எங்குள்ளதுநாம் பொருட்களை எடைபோடும் போது தவறு நேராமல் இருப்பதற்காக அந்தத் தராசில் தாம் எடை போடுகிறோமாஎன்ன கூறுகின்றன இவ்வசனங்கள்தலை சுற்றுகிறதா?!

நம்மால் உருவாக்கப்பட்ட தராசுகளிலேயே நாம் ஒவ் வொருவரும் எடைபோட்டுக் கொள்கிறோம். அவ்வாறன்றி ஆகாயத்திலிருந்து எங்கேனும் ஒரு தராசு தொங்கிக் கொண்டிருக்க உலக மக்களெல்லாம் அந்தத் தராசில் சென்று எடைபோட்டுக் கொள்வதில்லை. அப்படி இருந்தும் நாம் எடைபோட்டுக் கொள்வதெல்லாம் சரியாகவே இருக்கின்றன. இதெப்படி சாத்தியமாகிறது?

எடையும் பொருண்மையும் :

இப்போது திருக்குர்ஆன் கூறும் அறிவியலைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு `தாரசு மற்றும் எடை (Weight) என்பவற்றின் அறிவியல் விளக்கத்தை முதலாவதாகப் பார்ப்போம். தராசு என்பதை எடை காட்டும் கருவி என்றும் `எடை என்பதை பொருட்களின் பொருண்மை (Mass) என்றும் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இக்கருத்துக் கள் எந்த அளவிற்குச் சரியானவை எனப் பார்ப்போம்.

நம்மிடம் ஒரு மரக்கட்டையும்ஒரு இரும்புக் கட்டியும் உள்ளன. அவை ஒவ்வொன்றும் சரியாக 10 கன சென்டி மீட்டர் கொள்ளளவு கொண்டது. அவை ஒவ்வொன்றையும் தராசின் எடைத் தட்டுகளில் வைத்தால் இரும்புக் கட்டி வைத்திருக்கும் தட்டு கீழிறங்கியும் மரக்கட்டை வைத்திருக் கும் தட்டு மேல் ஏறியும் நிற்கும். இது ஏன் என்று கேட்டால் இரும்புக் கட்டி அதிகம் பொருண்மை கொண்டது என பதில் கூறப்படும். மரத்தை விட இரும்பு அதிகப் பொருண்மை கொண்டது என்பது உண்மையாக இருந்தாலும் மற்றொரு அர்த்தத்தில் இந்த பதில் தவறானதாகும். ஏனெனில் பொருண்மையும் எடையும் ஒன்று எனும் தவறான பொருள் இந்த பதிலில் உள்ளடங்கியுள்ளது. ஆனால் எடையும் பொருண்மையும் வெவ்வேறானவையாகும்.

இப்போது கூறப்பட்ட விபரங்களை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு நாம் விண்வெளியில் ஒரு சோதனையைச் செய்து பார்ப்பதாகக் கற்பனை செய்வோம். நாம் இப்போது எடை போட்டுப் பார்த்த அதே இரும்புக் கட்டிமரக்கட்டை மற்றும் எடை காட்டும் கருவி (தராசு) களை எடுத்துக்கொண்டு ஆயிரம் மைலுக்கு அப்பால் விண் வெளிக்குச் சென்று பூமியில் செய்து பார்த்ததைப் போன்று எந்தப் பொருள் எடை அதிகம் என எடை போட்டுப் பார்க் கிறோம். இப்போது என்ன காட்சியைக் காண்கிறோம்எடைத் தட்டுகளில் இரும்புக் கட்டியையும் மரக்கட்டையையும் வைத்த பின்னரும் எடைத் தட்டுக்கள் சலனமின்றி நிற்கின்றன. இப்போது நாம் இரும்புக் கட்டி வைத்திருக்கும் தட்டை மரக்கட்டை வைத்திருக்கும் தட்டை விட அதிக உயரத்திற்கு உயர்த்தினால் நாம் கைகளை எடுத்த பின்னரும் இரும்புக் கட்டி வைக்கப்பட்டிருக்கும் எடைத் தட்டு மரக்கட்டை வைத் திருக்கும் எடைத்தட்டை விட உயர்ந்தே நிற்கிறது! என்ன விசித்திரமான காட்சி இது?

இரும்புக் கட்டியைவிட மரக்கட்டை அதிகப் பொருண்மை உடையதாஎன்ன நேர்ந்து விட்டது நமது எடை காட்டும் கருவிக்கு?

இந்த விஷயத்தில் எடை காட்டும் கருவிக்கு எந்தப் பிரச்சனையும் நேரவில்லை. பிரச்னை நேர்ந்தது நமது பொதுவான ஒரு கருத்துக்கே ஆகும்! ஆம். பொருண்மையும் எடையும் ஒன்று என்ற பொதுவான கருத்து தவறாகும் என இந்த சோதனை நிரூபிக்கிறது. எடை என்பது இடத்திற்கு இடம் மாறுவதைப் போன்று பொருண்மை மாறுவதில்லை. எனவே எடை காட்டும் கருவி காட்டுவது பொருண்மையாக இருந்தால் பூமியில் எடையைக் காட்டியதைப் போன்று விண்வெளியிலும் எடையைக் காட்ட வேண்டும். ஆனால் விண்வெளிக்கு வந்தவுடன் எடை காட்டும் கருவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதிலிருந்து எடை காட்டும் கருவி காட்டுவது பொருண்மை இல்லையென்றும்,எனவே பொருண்மையும் எடையும் வெவ்வெறானவை என்றும் இச்சோதனை தெளிவாக்கிவிட்டது. எனவே `எடை என்றால் என்ன எனும் கேள்வி இப்போதும் நீடிக்கிறது!

புதிர் போடும் எடை :

பொருண்மையும்எடையும் வெவ்வேறானவை என்பதை இனம் காட்டியதோடு மட்டுமின்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய மற்றொரு செய்தியும் இச்சோதனையி லிருந்து வெளிப்படுகிறது. பூமியில் எடை காட்ட பயன் படுத்திக் கொண்டிருந்த அதே கருவியைத் தாம் நாம் விண்வெளியிலும் எடை காட்டப் பயன்படுத்தினோம். ஆனால் விண்வெளிக்குச் சென்றதும் அக்கருவி எடை காட்ட மறுத்து விட்டது. இந்தத் தராசை வைத்துக் கொண்டன்றோ நமது உலக விவகாரங்களை நாம் நடத்திச் செல்கிறோம். இந்தத் தராசை நம்பித்தானே நாங்கள் எடை போட்டுக் கொள்வதற்கு எங்களுக்கு வேறு எந்தத் தராசும் தேவை யில்லை எனப் பலரும் கருதி வந்தனர். ஆனால் நமது தராசுகள் யாவும் விண்வெளியில் செயல்படுவதைப் போன்றே பூமியிலும் செயல்படத் தொடங்கினால் எப்பொருளையாவது நம்மால் சரியாக எடை போட முடியுமாமுடியாது என்பதற்கு மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா?

திருக்குர்ஆனின் அறிவியல் எவ்வளவு ஆழமானது! பூமியில் எடை காட்டும் கருவி விண்ணில் எடை காட்ட மறுப்பதில் இருந்து எடை காட்டுதல் என்பது அக்கருவியின் சுயத் திறமையன்று எனவும் வேறு ஏதோ ஒரு கட்புலனாகாத அதிசயமான ஒரு சக்தி பூமியில் அதை எடை காட்டும் கருவியாகச் செயல்படச் செய்கிறது என்பதும் நாம் மேற்கண்ட ஆய்விலிருந்து தெரிந்து கொண்டோம். இந்தச் செய்தியை வார்த்தைக்கு வார்த்தை முன்னறிவிப்புச் செய்யும் விதத்திலேயே திருக்கர்ஆனின் வார்த்தைகளும் அமைந்துள்ளன. மனிதர்கள் வாழ்வது பூமியிலே அன்றி விண்ணில் அல்ல என்பதால் நமது எடை காட்டும் கருவியை விண்ணில் எடை காட்டச் செய்யாமல் பூமியில் எடை காட்டும்படிச் செய்து விட்டது! இந்த விபரத்தைக்கூட திருக்குர்ஆன் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கும்``தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்காக எனும் வார்த்தை அமைப்புக்களில் வெளிப்படுகிற இறைஞானத்தைக் காண்கிறோமல்லவா!

நாம் (மனிதர்களாகிய நாம்) நீதி தவறாமல் எடை போட வேண்டுமென்பதற்காகவே தராசு நிலைநாட்டப்பட்டது எனில் நாம் வாழும் பூமியில் நமக்குத் தவறு நேர்ந்து விடாமல் எடைபோட இயலும் விதத்தில் அத்தராசு நிலைநாட்டப் பட்டிருந்தால் போதுமானதன்றோ!

எடையின் வரைவிலக்கணம் :

நாம் இப்போதுஎடை என்பது எதைக் குறிக்கிறது என்றும் எடைக்கும் பொருண்மைக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன என்பதையும் பார்ப்போம். எடை என்பதின் அறிவியல் வரைவிலக்கணம் ``ஈர்ப்பாற்றலின் இழுவிசை (Weight is the pull of Gravitation) எனக் கூறலாம். எனவே ஒரு பொருளின் எடை என்பது அப்பொருள் இருக்கும் இடத்தைச் சார்ந்ததாகும். அதே நேரத்தில் பொருண்மை என்பது ``பொருட்களின் நகர்வுக்கு எதிரான தடை (Mass is the resistance against to motion on a given quantity of matter) எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். எனவே பொருண்மை என்பது அப்பொருள் இருக்கும் இடத்தைச் சார்ந்து வேறுபடுவதில்லை.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பூமியில் ஒரு பொருளை நாம் எடைபோடும்போது அப்பொருளின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது தெளிவாகும். அதே பொருளை நாம் நிலவில் எடை போடும்போது அப்பொருளின்மீது செயல்படும் நிலவின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது அதன் பொருளாகும். சான்றாகநமது மரக்கட்டையை பூமியில் நாம் ஒரு வில் தராசில் எடை போடுகிறோம் எனக் கொள்வோம். அதன் எடை 600 கிராம்கள் எனக் காண்போம். அதே தராசில் அதே மரக்கட்டையை நிலவில் எடை போட்டுப் பார்த்தால் 100கிராம் எடையைத் தாம் காட்டும். ஏனெனில் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு குறைவாகும். இவ்வாறே வெவ்வேறு கோள்களுக்குச் சென்று ஒரு பொருளை எடை போட்டுப் பார்த்தால் அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பு விசை அப்பொருட்களின் மீது எந்த அளவிற்குச் செயல்படுகிறது என்பதையே காட்டும் என்பதால்,ஒவ்வொரு கோளிலும் அப்பொருளின் எடை வேறுபட்டுக்கொண்டே இருக்கும். ஆயினும் அப்பொருளின் பொருண்மையில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

இதுவரை நாம் கண்ட அறிவியல் தகவல்களிலிருந்து ஒரு தெளிவான விளக்கத்தைப் பெறுகிறோம். நாம் பயன் படுத்தும் தராசுகளை எடை காட்டும் (எடையை அளக்கும்) கருவியாகப் பயன்படச் செய்வது ஈர்ப்பு ஆற்றலே என்பதால் ஈர்ப்பாற்றலின் செயற்பாடே தராசின் செயற்பாடாகும் என்பதே அந்த விளக்கமாகும். இதிலிருந்து எங்கு ஈர்ப்பாற்றலின் செயற்பாடு இல்லையோ அங்கு தராசின் செயற்பாடும் இல்லை. எனவே ``வானம் உயர்த்தப்பட்டு தராசு நிறுவப்பட்டது என்பதன் பொருள் ``வானம் உயர்த்தப்பட்டு ஈர்ப்பாற்றல் நிறுவப்பட்டது என்பதாகும் எனப் புரிந்து கொள்வதில் இப்போது எவ்விதச் சிக்கலும் இல்லையல்லவா!

இம்மாமறைக் குர்ஆனின் இறைஞானம் ஈடுஇணை அற்றதே!

அகில உலக ஈர்ப்பாற்றல் :

இப்போது நாம் கூறிய எடுத்துக்காட்டிலிருந்து மற்றொரு வினா எழலாம். திருக்குர்ஆன் கூறியபடி வானம் உயர்த்தப் பட்டு ஈர்ப்பாற்றல் நிறுவப்பட்டிருந்தால் வானத்தில் எல்லா இடத்திலுமே ஈர்ப்பாற்றல் உண்டு என்பது அதன் பொருளா கும். உண்மை நிலை இவ்வாறாக இருந்தால் விண்வெளியில் இரும்புக் கட்டியையும்மரக்கட்டையையும் எடை போட்டுப் பார்த்தபோதுஅங்கு தராசு எடை காட்டவில்லையே! ஏன்அங்கு ஈர்ப்பாற்றல் செயல்படவில்லையாசெயல்படவில்லை யெனில் திருக்குர்ஆனுடைய வார்த்தை எப்படி உண்மை ஆகும் என்பதே அக்கேள்வியாகும். நியாயமான இக்கேள்விக்கு ஐசக் நியூட்டன் அவர்களின் புகழ் வாய்ந்த கண்டுபிடிப்பாகிய அகிலத்தின் ஈர்ப்பாற்றல் (The law of Universal Gravitation) விதியிலிருந்து அதற்குரிய பதிலைப் பெறலாம். அந்த விதி வருமாறு :

``பேரண்டத்திலுள்ள பொருட்களின் துகள்கள் ஒவ் வொன்றும் மற்ற பொருட்களின் துகள்கள் ஒவ்வொன்றையும் அவைகளின் பொருண்மையின் மதிப்பிற்கு நேர் விகிதத்திலும் அப்பொருட்களின் மையங்களுக்கு இடையிலுள்ள தூரங் களுக்கு எதிரிடையான வர்க்க விகிதத்திலும் ஈர்க்கின்றன.

ஈர்ப்பாற்றலின் மேற்கண்ட விதி நமது எடுத்துக்காட்டில் கூறப்பட்ட பொருட்களுக்கு விண்வெளியில் எடை இழப்பு ஏற்பட்டதன் காரணத்தைச் சரியாக விளக்குகிறது. இதைச் சற்று எளிதாகக் கூறினால் பொருட்களுக்கு இடையிலுள்ள தூரம் கூடும்போது அவைகளுக்கு இடையிலுள்ள ஈர்ப் பாற்றல் குறைந்து கொண்டே வரும் என்பது ஈர்ப்பாற்றலின் விதியாகும். எனவே பூமியிலிருந்து ஒரு பொருள் தூரமாக (அல்லது உயரமாக) எடுத்துச் செல்லும்போது பூமியின் ஈர்ப்பு விசையின் செயற்பாடு அப்பொருளின் மீது குறைந்து கொண்டே வந்து முடிவில் அடையாளம் தெரியாத அளவிற்கு குறைந்துவிடும். இதுவே நமது எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்ட பொருட்களுக்கும் ஏற்பட்டது. இருப்பினும் அப்பொருட்களுக்கு எந்த இடத்தில் எடை இழப்பு ஏற்பட்டதோ அந்த இடத்தில் ஈர்ப்பாற்றலே இல்லை என்பது அதன் பொருளன்று. அதே இடத்தில் அதிகப் பொருண்மையுள்ள மற்றொரு பொருள் கொண்டு செல்லப்பட்டால் அப்பொருள் பூமியால் ஈர்க்கப்படுவதால் அதற்கு எடை இருக்கவே செய்யும். ஏனெனில் ஈர்ப்பாற்றலின் விதிப்படி பொருட்களின் பொருண்மை கூடும்போது அவைகளுக்கிடையிலுள்ள ஈர்ப்பாற்றலும் கூடும் என்பதாகும்.

இப்போது நமது எடுத்துக்காட்டில் கூறப்பட்ட பொருட்களுக்கு எடை இழப்பு ஏற்பட்டது திருக்குர்ஆனுடைய அறிவியலுக்கு முரண்படவில்லை என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டோம். நமது நிலவும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நிலவின் பொருண்மை பூமியின் பொருண்மையில் 1/81 பங்கு இருப்பதால் அது பூமியிலிருந்து ஏறத்தாழ 4,00,000கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தபோதிலும் நமது பூமியின் ஈர்ப்பாற்றல் அதன்மீது செயல்படுகிறது. எனவே அது பூமியின் துணைக் கோளாக கோடிக்கணக்கான வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையிலிருந்தும் இதற்குரிய சான்றுகளைக் காணலாம். ஒருவர் பத்து கிராம் எடையுள்ள ஒரு தங்க மோதிரத்தை வாங்கும் போது அதை எடை போட்டே வாங்குகிறார். அந்த மோதிரத் தைக் கொண்டுபோய் பார ஊர்திகளை எடைபோடும் எடை மேடையில் (Weigh bridge) எடைபோட முயன்றால் அந்த எடைமேடை மோதிரத்தின் எடையைக் காட்டாது. இதற்காக எடைமேடையைஎடை காட்டும் கருவி இல்லை என்றோ அல்லது மோதிரத்திற்கு எடை இல்லையென்றோ நாம் கூறுவது இல்லை. இதைப் போன்றே நமது எடுத்துக்காட்டில் கூறப்பட்ட பொருட்களுக்கு விண்வெளியில் எடை இழப்பு நேர்ந்த போதும் விண்வெளியில் ஈர்ப்பாற்றல் இல்லை என்று நாம் கூறுவதில்லை.

இந்த அத்தியாயத்தில் இதுவரை நாம் விவாதித்த விபரங்களைச் சரியாகக் கவனம் செலுத்திஅதன் பிறகு இங்கு ஆய்வு செய்த திருக்குர்ஆன் வசனங்களை (55:7-9) மீண்டும் பார்வையிட்டால் அத்திருமறை வசனங்கள் எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மைகளைத் தாங்கி நிற்கிறது என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். திருக்குர்ஆன் இந்த அறிவியல் உண்மையை ஏழாம் நூற்றாண்டில் கூறி இருந்தும்கூட அறிவியல் உலகம் இதைக் கண்டுபிடிக்க பதினெட்டாம் நுற்றாண்டில் தோன்ற வேண்டிய உலகின் மிகச் சிறந்த அறிவியலாளராம் ஐசக் நியூட்டனுக்காகக் காத்திருக்க வேண்டி இருந்ததெனில் இம்மாமறையின் இறைஞானத்திற்கு இது ஒரு வலுவான அறிவியல் ஆதாரமல்லவா?

விபரீத விளையாட்டு :

எடை என்பது பொருண்மை இல்லை என்றும்அது ஈர்ப்பாற்றலின் இழு விசையே என்றும்,அவ்விசை வானில் நிறுவப்பட்டுள்ளது எனும் விளக்கத்தைத் தரும் அறிவியல் உண்மையைத் திருக்குர்ஆன் வழங்க வேண்டுமெனில் அக்குர்ஆனின் ஆசிரியருக்கு குறைந்தபட்சம் விண்ணகப் பொருட்களின் சலனங்களைப் பற்றிய விதிகளின் சரியான அறிவு இருந்திருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனை ஆகும். எனவே இதற்கு மேலும் திருக்குர்ஆன் இறைத் தூதர் முஹம்மத் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக!) அவர்களின் சொந்தப் படைப்பு எனக் கூற முயன்றால் பேரண்டத்தின் ஈர்ப்பு விசையைப் பற்றிய புரட்சிகரமான கண்டுபிடிப்பின் பெருமையை இறைத்தூதர் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக!) அவர்களுக்கு வழங்க வேண்டியிருக்கும். அப்படிச் செய்தாலாவது திருக்குர்ஆன் இறை வேதம் இல்லையெனக் கூற இயலாதா என முயற்சி செய்தால் அது நியூட்டனையும்திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் மற்றும் பல அறிவியல்களைக் கண்டுபிடித்த அறிவியலாளர்களையும் அவமானப்படுத்தும் செயலாகவே இருக்கும். எனவே நாம் இதுவரை கண்டதும் இனிமேல் காணப்போவதுமாகிய அறிவியல் ஆதாரங்கள் திருக்குர்ஆனை என்னவாக விளம்பரப்படுத்துகிறதோ அதன்படி - மானிட சக்திக்கு அப்பாற்பட்டு இறை ஞானத்திலிருந்து தோன்றியதே எனும் கருத்தின்படி - எடுத்துக் கொள்வதே உண்மையின் தேட்டமும்நியாயமும்சாலச் சிறந்த வழிமுறையும் ஆகும்.

ஈர்ப்பாற்றலை பேரண்டத்தில் நிறுவியதன் வாயிலாக நாம் அடைந்துள்ள பயன்பாடுகளில் இப்போது கூறப்பட்டவை மட்டுமின்றி மற்றும் பல பயன்பாடுகளைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறியுள்ளது. அடுத்து வரும் சில தலைப்புகளில் அவைகளையும் பார்த்துவிட்டு இப்பேரண்டத்தைப் பேரளவில் (Large scale) ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஈர்ப்பாற்றலைப் பற்றி எந்த அளவிற்கு ஆழமான ஞானம் இத்திருமறையின் வசனங்களில் புதை பொருளாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைச் சிந்திப்பீர்களாக!

வானுலகைத் தாங்கும் மர்மத் தூண்

உயிரினங்களின் பேரினத்தில் ஒரு சிற்றினமாகிய மனித இனம் இலட்சக்கணக்கான ஏனைய இனங்களைப் போலன்றி சிந்திக்கும் திறனை - புரிந்து கொள்ளும் ஆற்றலைப் (புத்தியை) - பெற்ற இனமாக விளங்குகிறது. எனவே அறிவின்பால் அந்த இனத்திற்குள்ள வேட்கை அதன் பிறவிக் குணமாகும். இதன் காரணமாக அந்த இனத்தைச் சார்ந்தவர் கள் எதைக் கண்டாலும் எதைக் கேட்டாலும் ``ஏன்எப்படிஎதற்குஎனும் கேள்விகள் அவனுக்குள் எழுந்து கொண்டே இருக்கும். அறிவியலின்மீது அவனுக்குள்ள இந்த ஆர்வம் முறைப்படி கட்டுப்படுத்தாவிட்டால் அது அவனுக்குள் மூடநம்பிக்கைகளை உருவாக்கிவிடும். ஏனெனில் அறிவின் மீது அவனுக்குள்ள அடக்க முடியாத தாகம் அவனுக்கு விடை தெரியாத வினாக்களே இருக்கக் கூடாது எனப் பேராசை கொள்கிறது. இதன் காரணமாக எந்த வினாக்களின் விடையை அவன் தீவிரமாக எதிர்பார்க்கிறானோ அந்த வினாக்களுக்கு விடை கிட்டாதபோது அவன் தாமாகவே ஒரு விடையை உருவாக்கிக்கொள்கிறான். அவன் அதுவரை பெற்ற அறிவு அவன் இப்போது எதிர்நோக்கும் பிரச்னையோடு தொடர்பு கொண்டதாக இருப்பினும் தொடர்பு கொள்ளாததாக இருப்பினும் அவன் சுயமாக உருவாக்கும் விடைகிட்டா வினாக்களின் பதில்கள் அவனுடைய அதுவரையுள்ள அறிவின் தரத்தை ஒட்டியே அமையும்.

ஒருவர் தமக்குள் உருவாக்கிக்கொள்ளும் மூட நம்பிக்கை அவருடைய அதுவரையுள்ள அறிவின் தரத்தை ஒட்டி அமைவதால் சில மூட நம்பிக்கைகளை கேட்ட மாத்திரத் தில்`கொல் எனச் சிரிக்க வைக்கும். இதற்கு மாறாக வேறு சிலரின் மூட நம்பிக்கை அதைக் கேள்விப்படும் சிலரையாவது அதை நம்பும்படிச் செய்துவிடும். எது எப்படி இருப்பினும் விடைகிட்டாத வினாக்கள் தன்னிடம் இருக்கக் கூடாது என்பதுமனிதனின் பிறவிக் குணமாகிய அறிவின் பாலுள்ள வேட்கையின் முறைப்படி கட்டுப்படுத்தப் படாததன் வெளிப்பாடாகும். மனிதனுடைய பிறவிக் குணத்தின் கட்டுப்பாடற்ற தாக்கத்தை ஒருமுறை கைப்பிள்ளையிடம்கூட கண்டு வியந்து போனதுண்டு.

பூமிக்கும் பற்பல சுமை தாங்கிகள் :

கிராமப்புறமொன்றில் வீட்டு வாசலில் நடை பழகிக் கொண்டிருக்கும் இரண்டரை வயதுச் சிறுவனை நோய் பாதித்தபோது மருத்துவரிடம் எடுத்துச் செல்லப்பட்டு புட்டத்தில் ஊசி போடப்பட்டான். ஊசியால் குத்தப்பட்ட வேதனையை அவ்வப்போது எண்ணிஎண்ணி அழுது கொண்டே தம் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்த அவன் தம் தாயைப் பார்த்ததும் புட்டத்தை தடவிக்கொண்டே இவ்வாறு புகார் செய்தான் : ``அம்மா! என்ன முள்ளு குத்திச்சு!.

மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட அவனை மருத்துவர் என்ன செய்தார் என விளங்கிக்கொள்ள இயலாதிருந்த போதிலும் விடைகிட்டாத வினாக்கள் தன்னிடம் இருக்கக்கூடாது எனும் கட்டுப்பாடற்ற அறிவின் வேட்கையே அவனை அப்படிக் கூறச் செய்தது. வீட்டு வாசலில் நடைபழகும்போது அடிக்கடி நெருஞ்சி முட்கள் குத்திய அனுபவமே அந்த பதிலின் பிறப்பிடமாக அமைந்தது.

மனிதனுடைய இந்தப் பிறவிக்குணம் எழுப்பிய ஒரு வினா அவனைத் தொல்லைப்படுத்திக்கொண்டிருந்தது. இந்த உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பூமி தாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பூமியையும் ஏதோ ஒன்று தாங்கிக்கொண்டிருக்க வேண்டும். அந்தப் பொருள் எது என்பதே அந்த வினாவாகும். வினா எழுந்ததைப் போன்றே கட்டுப்படுத்தப்படாத வேட்கையிலிருந்து பதில்களும் பிறந்தன. அவைகளில் மகான்களாகக் கருதப்பட்டோரின் பதில்கள் புராணங்களில் இடம் பிடித்து புனிதங்களாயின. எனவே வெவ்வேறு புராணங்களில் பூமி வெவ்வேறு பொருட்களால் தாங்கிக் கொள்ளப்பட்டது.

இப்புராணங்களில் சில பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றிணைந்து சுமந்து கொண்டிருக்கின்றன எனக் கூறும் போதுவேறு சில பூமியை ஒரே ஒரு மீனின் வாலின்மீது இருப்பதாகக் கொள்கின்றன. என்ன மீன் என்பதைப் பற்றி அவைகளுக்குக் கவலை இல்லை. வேறு சில புராணங்கள் பன்றியின் மூக்கின்மீது பூமி நிற்பதாகக் கூறுகின்றன. மேலும் சில பழங்கதைகள் பூமி ஒரு காளையின் கொம்புகளுக்கு இடையில் இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால் மீன்களா யினும்பன்றிகளாயினும் அல்லது காளைகளாயினும் அவைகள் எதன் மீது நிற்கின்றன என்பதைப் பற்றி மூட நம்பிக்கைகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஹாக்கிங் அவர்கள் அவரது நூலைத்* தொடங்குவதும்கூட இது போன்ற வேடிக்கை நிறைந்த ஒரு கதையுடனாகும். அக்கதை வருமாறு :

``அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு அறிவியலாளர் (இவர் `பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் -(Bertrand Russle) எனச் சிலர் கூறுகின்றனர்) ஒருமுறை வானியலைக் குறித்து பொதுமக்களுக்கு ஒரு பேருரை (Lecture) நிகழ்த்தினார். அவ்வுரையில் அவர் பூமி எவ்வாறு அதன் சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும்சூரியன் எவ்வாறு நமது காலக்சி எனக் கூறப்படும் மிக விசாலமான நட்சத்திரங்களின் தொகுதியை முறைப்படி சுற்றி வருகிறது என்பதையும் மிக விரிவாக விளக்கினார். உரையின் இறுதியில் வயது முதிர்ந்த சிற்றுருவத்துடன் கூடிய மூதாட்டி ஒருவர் அறையின் பின் பகுதியிலிருந்து எழுந்து நின்று இவ்வாறு கூறினார் : ``நீங்கள் எங்களிடம் கூறியது அபத்தமா கும். உலகம் என்பது ஒரு இராட்சச ஆமையின் முதுகின்மீது தாங்கி நிறுத்தப்பட்டிருக்கும் தட்டை வடிவிலான தட்டு ஆகும்! இதைக் கேட்ட அறிவியலாளர் நன்றாகச் சிரித்து விட்டு ``அந்த ஆமையை எது தாங்கிக்கொண்டிருக்கிறதுஎன்று பதிலளித்தார். அதற்கு மூதாட்டி இவ்வாறு கூறினார் : ``நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கிறீர்கள் இளைஞரே! மிகவும் புத்திசாலியாக இருக்கிறீர்கள்! ஆயினும் அது கீழ்மட்டம்வரை ஆமைக் கோபுரமாகும்! என்றாள்.

அக்கால அறிவியலும் அவ்வாறே! :

மேற்கண்ட தகவல்களை நாம் இங்கு எடுத்துக் கூறியது வெறும் இலக்கியச் சுவையைக் கருத்தில் கொண்டதனால் மட்டுமின்றிவிண்ணகப் பொருட்களின் அமைப்பைப் பற்றி எந்த அளவிற்கு அறியாமையிலும்அந்த அறியாமையை ஒப்புக்கொள்ளும் மன வலிமை இல்லாததன் விளைவாக எழுந்த மூட நம்பிக்கையிலும்ஆதி காலம் தொட்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்வரை (நியூட்டன் தோன்றிய பின் ரஸலின் காலத்திலும் கூட) மக்கள் மூழ்கிக் கிடந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகவும்;அதன் பின்னணியில் ஏழாம் நூற்றாண்டில் இறங்கியசம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களை அணுக வேண்டும் என்பதற்காகவுமேயாகும்.

தூணில்லா விண்ணகம் :

நாம் இதுவரை பூமி மற்றும் ஆகாயங்களின் கட்டமைப்பு பற்றி சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை உலக மக்களின் நம்பிக்கை எப்படி இருந்தது எனப் பாத்தோம். இப்போது இவைகளைக் குறித்து திருக்குர்ஆனுடைய அறிவியல் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம். ஆகாயத்தின் கட்டமைப்பைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

நீங்கள் பார்க்கிற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்... நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

(13:2)

``நீங்கள் பார்க்கக்கூடிய தூண்களின்றி வானங்களைப் படைத்தான்.

(31:10)

எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மையை உள்ளடக்கிய வசனங்கள் இவை! ஆகாயத்தின் கட்டுமானத்தில் எந்தத் திசையில் எவ்வளவு தூரம் சென்று பார்த்தாலும் கண்களுக்கு தெரியக்கூடிய ஒரு தூணைக்கூட பார்க்க இயலாது எனும் செய்தி இந்த வசனங்களில் வெளிப்படை யாகத் தெரிகிறது. இப்படிக் கூறும்போது இது என்ன பெரிய செய்தி என இன்றைய மக்கள் எண்ணக் கூடும். ஆனால் திருக்குர்ஆன் வழங்கப்பட்ட காலகட்டத்தையும் அப்போது வாழ்ந்த மக்கள் விண்ணைப் பற்றியும்பூமி உட்பட விண்ணகப் பொருட்களின் கட்டமைப்புப் பற்றியும் எப்படிப் பட்ட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதைச் சிந்திக்கும்போது விண்ணகத்தின் கட்டமைப்பில் அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் கட்புலனாகும் பிணைப்பு (அது ஒரு தூணே ஆயினும்) ஒன்றுகூட இல்லை எனும் கூற்று உண்மையிலேயே ஒரு புரட்சிகரமான அறிவியல் பிரகடனமாகும்.

இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சி விண்ணகப் பொருட்களின் கட்டமைப்பிலும் இயக்கத்திலும்முற்காலங்களில் புகுந்து விட்டிருந்த அனைத்து அபத்தங்களையும் மூட நம்பிக்கைகளையும் துடைத்தெறிந்து துப்புரவாக்கி விட்டு விண்ணகத்தின் கட்டமைப்பை நிலை நிறுத்தும் விசைகளைப் (Forces) பற்றிய சரியான அறிவியல் அறிவை நமக்கு வழங்கியுள்ளது. ஆனால் திருக்குர்ஆன் எதிர்கொள்ள வேண்டியிருந்த பிரச்னை வேறு விதமானது. பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான உலக அறிவியலின் அறிவுக்களஞ்சியமாக விளங்கிய ஒரு தலை சிறந்த விஞ்ஞானியின் கண்களுக்கு எதிரே விழுந்த ஆப்பிள் இல்லை அது. அது திருக்குர்ஆன் ஆகும். தொன்மை வாய்ந்த ஏழாம் நூற்றாண்டின் அறிவியல் அறியாமையின் கும்மிருட்டை தங்கள் மூளையில் நிரப்பிக்கொண்டிருந்த பாமர மக்களிடமே திருக்குர்ஆன் முதலாவதாக பாடம் நடத்த வேண்டியிருந்தது. எனவே அப்போதிருந்த உலக மக்களுக்கு திருக்குர்ஆனி லிருந்து வெளிப்படையாகத் தெரிந்த அறிவியலே புரட்சிகரமான ஒன்றாகும்.

கட்புலனாகாத தூண்கள் :

திருக்குர்ஆனிலிருந்து வெளிப்படையாக பெறப்படும் அறிவியல் ஸவிண்ணகத்தின் கட்டமைப்பில் கட்புலனாகும் தூண்கள் (விண்ணகத்தைத் தாங்கி நிறுத்தும் பொருட்கள்) எதுவும் இல்லை எனும் அறிவியல் திருக்குர்ஆன் இறங்கிய காலத்திலேயே ஒரு புரட்சிகரமான அறிவியலாக இருந்தது. அதே நேரத்தில் அந்த வசனங்களின் வரிகளுக்கிடையி லிருந்து வெளிப்படும் அறிவியல்முன் பத்திகளில் நாம் குறிப்பிட்டதும் நியூட்டனால் கண்டுபிடிக்கப்பட்டஅறிவியல் உலகில் பெரும் புரட்சியை உருவாக்கியதுமாகிய ``அனைத்துலக ஈர்ப்பாற்றல் எனும் மகத்தான அறிவியல் உண்மையாகும்.

திருக்குர்ஆனிலிருந்து நாம் முன்னர் கண்ட வசனங்களில் (13:2, 31:10) பேரண்டத்தின் கட்டமைப்பில் எவ்விதமான தூண்களும் இல்லை எனக் கூறாமல் கட்புலனாகும் தூண்கள் இல்லை எனக் கூறப்படுள்ளது. இதன் பொருள் பேரண்டத்தின் படைப்பில் கட்புலனாகாத தூண்கள் உள்ளன எனத் திருக்குர்ஆன் கூறுவதாக எளிதில் புரிந்து கொள்ளலாம். திருக்குர்ஆனுக்கு இப்படிப்பட்ட கருத்து இல்லை எனில் குறைந்தபட்சம் ``தூண்களின்றி வானங்களைப் படைத்தான் என்றோ, ``தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான் என்றோ திருக்குர்ஆன் கூறுவதே இயல்பான வார்த்தைப் பிரயோகமாக இருந்திருக்கும். ஆனால் திருக் குர்ஆன் இங்கு இயல்பை மீறி ``நீங்கள் பார்க்கக்கூடிய தூண்கள் இன்றி எனும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதுபேரண்டத்தின் கட்டுமானத்தில் கட்புலனாகாத தூண்கள் (விண்ணகப் பொருட்களை விலகிப் போகாமல் அதனதன் இடத்திலேயே நிறுத்தும் கட்புலனாகாத ஏதோ பிணைப்புகள்) இருக்கின்றன எனும் கருத்தை உருவாக்குவதற்கே என்பதை மிக எளிதாகப் புரிந்துகொள்கிறோம்.

பேரண்டத்தின் கட்டமைப்பில் கட்புலனாகாத தூண்கள் இருப்பதாக திருக்குர்ஆனுடைய வரிகளுக்கிடையிலிருந்து விளங்கப்பெற்ற அறிவியல் பிரகடனம் உண்மையா எனத் தேடிக் கண்டுபிடிக்கும் தேவையில்லாதவாறு அப்படிப்பட்ட கட்புலனாகாத பிணைப்பு ஒன்று உள்ளது என்பதை இன்று நாம் அறிவோம். நியூட்டனின் திறமைமிக்க அரும்பணியே நமக்கு அதை வெளிப்படுத்தித் தந்தது. தம்முடைய கடினமான விடாமுயற்சியாலும் உலகை வியக்க வைத்த `கால்குலஸ் (Calculus) எனும் கணித முறையை உருவாக்கிகிரக சஞ்சாரங்களை விளக்கிக் காட்டியும் பேரண்டம் தாமாகவே காரணமின்றி நிலை பெற்றிருக்கவில்லைஅதனை நிலைநிறத்தும் கட்புலனாகாத ஒரு பிணைப்பு உண்டுஅந்தப் பிணைப்பே பேரண்டம் மொத்தமும் பரவி நிற்கும் ஈர்ப்பாற்றலாகும் எனக் கூறி திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் கூறிய அறிவியலை நியூட்டன் அறிந்தோ அறியாமலோ நிலைநாட்டியபோது உலக மக்களின் பெரு மதிப்பிற்குரியவராகஇன்று வரை எந்த அறிவியலாளருக்கும் கிட்டாத பெருமதிப்பிற்கு உரியவரானார்.

இதுவரை நாம் கண்டவை மட்டுமின்றி பேரண்டத்தின் அமைப்பில் ஈர்ப்பாற்றலின் பங்கு எந்த அளவிற்கு இன்றியமை யாதது என்பதைப் பற்றி திருக்குர்ஆன் போதிக்கும் அறிவியல் மேலும் ஆழமானது. இது தொடர்பாக அது மேலும் கூறுகிறது:

விலகத் தேடும் விண்ணும் மண்ணும் :

வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி நிச்சயமாக அல்லாஹ் தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அதன் பின்னர் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மை உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

(35:41)

மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டிருக்கும் செய்தி மிக அற்புதமானதும் அனைத்துலக ஈர்ப்பாற்றலின் இன்றியமை யாமையை விளக்கும் ஆழமான அறிவியல் உண்மையுமா கும். இவ்வசனத்தில் கூறப்பட்டிருக்கும் அறிவியலின் சாரம் ஆகாயங்களும் பூமியும் ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகும் என எளிதாக விளங்குகிறது. ஆனால் நமக்குள் உயர்ந்து வரும் கேள்வி எதற்காக இந்த பூமி ஆகாயத்திலிருந்து விலகாமல் தடுக்கப் பட வேண்டும் என்பதாகும். திருக்குர்ஆன் இறங்கிய நூற்றாண்டில் நாம் பிறந்திருந்தாலும் அல்லது பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியை ஆகாயத்திலிருந்து விலகாமல் தடுக்க வேண்டிய காரணம் என்ன என்பது ஒருக்காலும் நம்மால் தெரிந்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் இது குறித்து ஆய்வு செய்ய எந்த அறிவிய லாளரும் அப்போது தயாராக இருக்கவில்லை.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவராகக் கருதப்படும் கிரேக்க தத்துவஞானி`அரிஸ்டார்ச்ச (Aristarchus) என்பவர் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங் கள் அதைச் சுற்றி வருகின்றன எனும் கருத்தை வெளி யிட்டார். ஆனால் இவர் இது தொடர்பாக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. தம்முடைய தத்துவ நோக்கு நிலையிலிருந்து அறிவியல் சாரா அகப் பார்வையாகவே (Inspiration) அவர் இக்கருத்தைக் கூறினார். இருப்பினும் பண்டையக் காலம் தொட்டு நவீன அறிவியல் யுகம் தொடங்கும் வரை அறிவியல் உலகில் அரிடாட்டிலின் வார்த்தைகளே வேதவாக்காக (கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் தரத்திற்கு உயர்த்தப்பட்டகுறையேதும் இல்லாத வார்த்தைகளாக) இருந்தமையாலும் அவர் புவிமையக் கோட்பாட்டை அறிவியலாக ஏற்று உண்மைப்படுத்தியதாலும் அரிடார்ச்சஸின் கருத்து பிறந்த வேகத்திலேயே சமாதியாயிற்று.

அரிடாட்டிலைப்போன்றே கிருத்தவச் சபைகளும் புவிமையக் கோட்பாடே தங்களது வேதவாக்கு (பைபிளின் கருத்து) எனப் பிரகடனம் செய்ததாலும் அதை எதிர்த்துப் பேசுபவர்களைத் தண்டிப்பதற்குள்ள அரசியல் அதிகாரம் மேற்கத்திய நாடுகளில் திருச்சபைகளுக்கு இருந்த காரணத்தாலும் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவியலாளர்கள் துணிவு பெறவில்லை.

கோபர் நிக்கசின் மீது சபை நடவடிக்கை :

அரிடாட்டிலின் பிரம்மை சிறுகச் சிறுக மாறத் துவங்கிய காலகட்டத்தில் சிறந்த கல்வியாளரும் செல்வச் சீமானுமாகிய போலந்து நாட்டின் கோபர் நிக்க தம்முடைய வாலிபப் பருவத்திலேயே அரிடார்ச்சஸின் கருத்தைக் கேள்விப்பட்டு தம்முடைய ஓய்வு நேரத்தில் இவர் க்ராகோ பல்கலைக் கழகத்தில் (University of Cracow) பட்டம் பெற்று வானியலில் ஆர்வம் கொண்டவராக இருந்தபோதிலும் கிருத்தவ உயர் சபையில் (Cathedral)பணியாற்றுவதைப் பெரிதாக மதித்து ஏற்றுக்கொண்டவராவார் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ள துவங்கினார். விரைவிலேயே அரிடார்ச்சஸின் கருத்து சரியாக இருப்பதைக் கண்டார்.

கோபர் நிக்க சபை நடவடிக்கைகளுக்குப் பயந்து மிக இரகசியமாக தமக்கு மிக நெருங்கியவர்களிடமே தமது ஆய்வின் முடிவைத் தெரிவித்து வந்தார். பிறகு தமது அறுபதாம் வயதில் ரோமில் சூரிய மையக் கோட்பாட்டை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார். உடனே சபைகளின் நடவடிக்கையால் தமது கருத்துக்கள் தவறானவை எனக் கூறி தமது கூற்றைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆயினும் தமது எழுபதாம் வயதில் இறப்பதற்குச் சற்று முன் தனது ஆய்வின் முடிவை புத்தகமாக வெளியிடச் செய்தார்.

ஆர்க்கி மெடிசும் அவ்வாறே :

நாம் இதுவரை கூறிய விபரங்களிலிருந்து திருக்குர்ஆன் இறங்கிய காலத்திலும் அதன் பிறகு கிட்டத்தட்ட நீண்ட ஆயிரம் வருடங்கள் வரையிலும் பூமி ஆகாயத்தின் மையத் தில் அசையாதிருக்கும் கோள் என்பது எந்த விதத்திலும் ஐயுறப்படாத நம்பிக்கையாக இருந்ததோடு இத்துறையில் எந்த அறிவியலாளரும் எவ்வித ஆய்வும் மேற்கொள்ள வில்லை என்பதாகும். உண்மை நிலை இவ்வாறு இருக்கதாமுண்டுதாமிருக்கும் இடமுண்டு என அசைவற்றுக் கிடக்கும் இந்த பூமி ஆகாயத்திலிருந்து விலகிப் போவதற்கு வாய்ப்பு என்ன உள்ளதுஆகாயத்திற்கு வெளியே இதை இழுத்துச் செல்ல யாரேனும் முயற்சி செய்கிறார்களா?

ஆர்க்கி மெடிஸ்

பண்டைக்கால அறிவியல் உலகின் ஐன்டீனாக மதிக்கப்படும் ஆர்க்கி மெடிஸ் (Archimedes 287 B.C 212 B.C) ஒருமுறை இவ்வாறு கூறினார்: ``போதிய நீளமுள்ள ஒரு நெம்புகோலையும் நிற்பதற்கு ஒரு இடமும் தாருங்கள். நான் பூமியை நகர்த்திக் காட்டுகிறேன்.

நெம்புகோலின் (Liver) தத்துவத்தை விளக்கிய அவர் போதிய நீளமுள்ள நெம்புகோல் இருந்தால் எவ்வளவு பளுவான பொருளையும் நகர்த்தலாம் எனக் கூறுவதற்காகவே இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார். (ஆயினும் ஆதாரத் தானம் - Fulcrum - இல்லாமல் இதை அவரால் எப்படிச் செய்ய முடியும் எனும் வினாவைப் புறக்கணிப்போம்) அவர் கூறிய இந்த உதாரணத்திலிருந்து பண்டைக்கால அறிவியல் மேதைகளால் கூட பூமி அசுர வேகத்தில் விண்ணில் பறந்தோடிக் கொண்டிருக்கும் ஒரு கோள் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் நெம்புகோலின் இயந்திரவியல் பயன்பாட்டை (Mechanical Advantage) விளக்குவதற்கு ஓயாமல் நகர்ந்து கொண்டிருக்கும் பொருளை உதாரணம் காட்ட முடியாதல்லவா?

சுருங்கக்கூறின்திருக்குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரு புரட்சிகரமான அறிவியல் உண்மை என்பதற்கு மேல் திருக்குர்ஆனுடைய இந்த செய்தி ஏனைய செய்திகளைப் போன்றே திருக்குர்ஆன் மானிட அறிவிலிருந்து தோன்றியது இல்லை என்பதற்குச் சான்றளிக்கிறது.

விண்ணகப் பொருட்களின் விலகி ஓடும் காட்சி :

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக் கும் நாம் பெற்றுள்ள அறிவியல் வளர்ச்சிபூமி ஆகாயத்தி லிருந்து விலகிப் போகும் வாய்ப்பு உண்டு என்றும் அதைத் தடுத்துக்கொண்டிருக்கும் இயற்பாடு ஒன்று அதில் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையும் நமக்கு எளிதாகப் புரியும்படி செய்துள்ளது. சூரிய குடும்பத்திலுள்ள ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு இதர கோளை ஈர்த்துக்கொண்டிருக் கிறது என்றும் அவற்றிற்கிடையே பொருண்மை கூடிய சூரியன் ஒவ்வொரு கோளையும் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளது என்பதையும் இன்றைய உலகின் உயர் நிலைப் பள்ளிகளில் கூட பயிற்றுவிக்க தொடங்கி விட்டது.

இப்போதும் பூமி ஆகாயத்திலிருந்து விலகுவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என விளங்காதவர்களும் இருப்பார் கள். அவர்களின் பொருட்டு நாம் மேலும் ஒரு விளக்கத்தைப் பார்ப்போம்.

பூமி ஆகாயத்தில் ஓய்ந்திருக்கும் ஒரு கோள் இல்லை யென்றும் அது ஆகாயத்தில் பறந்தோடிக்கொண்டிருக்கும் கோள் ஆகும் என்பதும் நமக்குத் தெரியும். (திருக்குர்ஆன் கூறிக்கொண்டிருக்கும் இந்த அறிவியலை நாம் இந்நூலின் முதல் பாகத்தில் ஆய்வு செய்துள்ளோம்) இக்கோள் 600 கோடி கி.மீ. ஆரம் (Radius) கொண்ட (புளுட்டோ கோளையும் உள்ளடக்கிய கணக்கின்படி) சூரிய குடும்பத்தில் வசிக்கிறது. இந்தச் சூரிய குடும்பம் பால் வழி மண்டலம் (Milky way Galaxy) எனும் அதன் வசிப்பிடத்தில் வசிக்கிறது. இம்மண்டலத்தின் அதிகப்படியான பருமன் 20,000 ஒளி வருடங்களும்அதன் நீளம் 1,00,000 ஒளி வருடங்களுமாகும்.

ஒளி வருடம் என்பது காலத்தையன்றி தூரத்தைக் குறிக்கும் சொல் என்பது நாம் அறிந்ததே. ஒளியின் வேகம் வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் என்பதும் இந்த வேகத்தில் ஒளி பயணம் செய்தால் ஒரு வருடத்தில் ஒளி எவ்வளவு தூரம் செல்லுமோ அந்த தூரமே ஒரு ஒளி வருடமாகும் என்பதும் நமக்குத் தெரியும். பூமியின் வேகம் வினாடிக்கு 30 கிலோ மீட்டர் ஆகும். எனவே பூமியின் வேகத்தைப் போன்று 10,000 மடங்கு வேகத்தை ஒளி பெற்றுள்ளது. நவீன அறிவியல் உலகம் கண்டுபிடித்த இந்தப் புள்ளி விபரங்கள் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் திருக்குர்ஆன் வசனங்களில் உள்ளடங்கியுள்ள ஆழமான அறிவியல் உண்மையை நமக்கு தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. ஆம்! வினாடிக்கு முப்பது கிலோ மீட்டர் எனும் அமித வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பூமியின் விண்ணோட்டத்தை உரிய முறைப்படி திசை மாற்றம் செய்யப்பட்டிருக்காவிடில் இந்த பூமி சூரிய குடும்பத்தி லிருந்து மட்டுமின்றி சூரிய குடும்பத்தின் வசிப்பிடமாகிய பால் வழி மண்டலத்திலிருந்தே விலகி பேரண்டத்தின் ஆழங்களில் என்றோ மறைந்து போயிருக்கும்! அந்தக் கணக்கு வருமாறு :

பூமியின் வேகம் ஒளி வேகத்தில் 1/10,000 மடங்காக இருப்பதாலும் பால்வழி மண்டலத்தின் அதிகப்படியான பருமன் 20,000 ஒளி வருடமாக இருப்பதாலும் பூமிக்கு இந்தப் பரப்பளவைத் தாண்டவேண்டுமானால் (20,000x10,000) 20 கோடி வருடங்கள் போதுமானதாக இருந்திருக்கும். பூமியின் விண்ணோட்டம் இந்த மண்டலத் தின் நீளவாக்கில் அமைந்திருந்தால் கூட அதன் நீளத்தைத் தாண்டிச் செல்வதற்கு பூமிக்குத் தேவையான கால அளவு (1,00,000x10.000) வெறும் நூறு கோடி வருடங்களாகும். ஆனால் நமது பூமி நமது காலக்சியை விட்டுத் தாண்டிச் செல்லவில்லை என்பது மட்டுமின்றி வெறும் ஓரிரு மாதங்களிலேயே விலகிச்செல்லும் வாய்ப்புள்ள சூரிய குடும்பத்திலிருந்து கூட பூமி இன்னும் விலகிச் செல்லாமல் 500 கோடி வருடங்களாக சூரிய குடும்பத்திலேயே அது இருந்து வருகிறது.

மேலும் சூரிய குடும்பத்தை விட்டு விலகிச்செல்லாமல் பூமியைத் தடுத்து வைத்திருக்கும் இயற்பாடு எது என்பதும் இன்று நமக்குத் தெரியும். சூரியனின் ஈர்ப்பாற்றலே அந்த இயற்பாடாகும்.

சுருங்கக்கூறின்பூமியின் விண்ணோட்டம் வினாடிக்கு 30 கிலோ மீட்டர் எனும் அமித வேகத்தில் அமைந்திருப்ப தால் இந்த 500 கோடி வருடங்களுக்குள் நமது பூமி ஆகாயத் தில் அதன் வசிப்பிடமாகிய சூரிய குடும்பத்திலிருந்து மட்டுமின்றி பால்வழி மண்டலத்திலிருந்தே கூட விலகிச் சென்று இருக்க முடியும். ஆயினும் அதை அதன் வசிப்பிட மாகிய விண்ணகத் தொகுதியிலிருந்து விலகி விடாதவாறு சூரியனின் ஈர்ப்பாற்றல் அதைத் தடுத்து வைத்துக்கொண்டு காலமெல்லாம் அது தன்னையே சுற்றிவரும்படிச் செய்து கொண்டிருக்கிறது. இவை யாவையும் இப்பேரண்டத்தில் வடிவமைப்புச் செய்து அதைப் படைத்திருப்பது இறைவனே என்பதால் பூமியை விண்ணிலிருந்து விலகாதபடி தடுத்துக் கொண்டிருப்பது தாமே அன்றி வேறு யாரும் அல்லர் எனும் உண்மையை அவன் தனது சத்தியத் திருமறையில் பிரகடனப்படுத்துகிறான்.

விரண்டோடும் விண் பொருட்கள் :

பூமியும் இதர கோள்களும் மட்டுமின்றி நட்சத்திரங் களும்நட்சத்திர மண்டலமாம் காலச்சிகள் உள்ளிட்ட விண்ணகப் பொருட்கள் அனைத்தும் அவைகளுக்குரிய பாதையில் விண்ணில் ஓடிக்கொண்டிருக்கின்றன. கீழ்க் காணும் தகவல்கள் ``எ நியூ ஹான்ட் புக் ஆஃப் ஹெவன் எனும் நூலிலிருந்து (பக்கம் : 230-231) எடுக்கப்பட்டவை ஆகும்.

``பேரண்டத்தின் மற்ற தனித் தனி தொகுப்புகள் (Units) அனைத்திற்கும் அண்டத்துகள்களின் மேகங்களுக்கும் கூட சுயமான இயக்கங்கள் (Motions) உண்டு. சூரியனுக்கும் சொந்தமான இயக்கம் உண்டு. ஒவ்வொரு கோளும் அதனதன் பாதையில் விரையும்போது அவைகளின் துணைக் கோள்கள் அவைகளை வட்டமிடுகின்றன. எரி நட்சத்திரங் களும்விண் கற்களும்,குறுங்கோள்களுமாகிய சூரியனின் பரிவாரங்கள் அதைச் சுற்றி வருகின்றன. எல்லா நட்சத்திரங் களும் அறியப்படாத ஏதோ இலக்கை நோக்கி விரைகின்றன. அவ்வாறே நட்சத்திரக் குழுக்களும் (Star Clusters) வளைய நெபுலாக்களும் (Ring Nebulae) வெவ்வேறு திசைகளில் வெற்று வெளியினூடே (Empty Space) துரிதப்பட்டு ஓடுகின் றன. ஆனால் அத்துடன் கூடவே மொத்த நட்சத்திர மண்டல மும் முற்றாக ஸஜிட்டாரிய (Sagittarius)எனப்படும் நட்சத்திரத் தொகுதி (Star Constellation) இருக்கும் திசையில் அமைந்துள்ள அதன் மைய அச்சை மிகப் பெரும் வேகத்தில் சுற்றி வருகிறது. அந்த மைய அச்சை ஒருமுறை சுற்றி வருவதற்கு இருபது கோடி வருடங்கள் இத்தொகுதிக்கு தேவைப் படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் ஹைடன் பிளானிட்டோரிய ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் தரும் தகவல்களே முன் பத்தியில் கண்டோம். அத்தகவல்களிலிருந்து விண்ண கத்தின் உறுப்புக்களில் ஒன்று கூட ஓய்ந்திருக்காமல் யாவும் விரைந்து ஓடிக்கொண்டிருக்கின்றன என ஐயமின்றித் தெரிந்து கொள்கிறோம். இவற்றின் விண்ணோட்டத்தை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் இவை யாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப்போய் ஆகாயம் என்பதே பொருளற்ற வார்த்தையாக மாறியிருக்கும். இதன் காரணமாகவே விண்ணகப் பொருட்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப்போகாமல் தடுக்கப்பட வேண்டிய தேவை உருவாகிறது. இத்தேவையை நிறைவேற்ற பேரண்டத்தைப் படைத்த இறைவன் இதில் வடிவமைப்பு செய்த உபாயமே (Technique) அனைத்துலக ஈர்ப்பாற்றலாகும்.

பேரண்டத்தின் படைப்பில் ஈர்ப்பாற்றலை வடிவமைப்பு செய்திருந்த போதிலும் விண்ணகப் பொருட்கள் இயக் கத்தை (ஓட்டத்தை) நிறுத்தி விடவில்லை. அவைகளின் இயக்கங்கள் நிறுத்தப்படாமலும் அதே நேரத்தில் அவை விலகிப் போகாமலும் இருக்கும்படியான ஒரு உபாயமேதொழில் தந்திரமே - ஈர்ப்பாற்றலாகும். எனவே இந்த ஈர்ப்பாற்றலைச் செயலற்றதாக்கும் மற்றொரு உபாயம் இறைவனால் இதில் மேற்கொள்ளப்பட்டால் மிக நிச்சயமாக ஆகாயத்தின் தொகுதிகள் ஒவ்வொன்றும் விலகிப்போகத் தொடங்கி விடும். ஒருக்கால் அப்படி நடந்து விட்டால் அதன் பிறகு அவைகளின் விலகலைத் தடுத்து நிறுத்த இறைவனா லன்றி வேறு ஒருவராலும் இயலாது எனக் கூறும் திரு மறையின் வார்த்தைகளை யாரால்தான் மறுக்க இயலும்?

இதுவரை நாம் விவாதித்தறிந்த விபரங்களின் பின்னணி யில் மீண்டும் ஒரு முறை திருக்குர்ஆன் கூறும் அந்த அறிவி யல் வசனத்தை (35:41) படித்துப் பார்த்தீர்களானால் பிர மிக்கச் செய்யும் அதன் அறிவியல் ஆழம் வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். இப்போது நமக்கு முன் எழும் கேள்விகள் நியூட்டனோகலிலியோவோகெப்ளரோகோபர் நிக்கசோ தோன்றுவதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறங்கிய திருக்குர்ஆனுக்கு இவ்வளவு மகத்தானநவீன விஞ்ஞான உலகில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எப்படித் தெரிய வந்தது என்பதாகும். நாம் ஆய்வு செய்த வசனங்களில் (13:2, 35:41) கூறப்பட்ட அறிவியல் உண்மை களை ஒருவர் கூற வேண்டுமாயின் குறைந்தபட்சம் காலக்சி கள் உட்பட பேரண்டத்திலுள்ள பொருட்கள் யாவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும்அவைகளுக்காக இயக்க விதிகளும் அவைகளின் இயக்கத்தை ஆட்சி புரிகின்ற பேரண்டம் தழுவிய ஈர்ப்பாற்றலும்அதன் விதிகளும் தெரிந்த ஒருவராகவே அவர் இருக்க வேண்டும் என்பது இன்றியமையாத நிபந்தனையாகும். அப்படிப்பட்ட ஒரு நபர் ஏழாம் நூற்றாண்டில் இருந்தாரே எனில் அது மெய்யாகவே இப் பேரண்டத்தைப் படைத்த இறைவனே அன்றி வேறு யாராகவும் இருக்க முடியாது என்பதில் (அறிவியல் உண்மை களின் சிறப்பையும்அந்த அறிவியல் உண்மைகளால் நிரூபிக்கப்படும் ஒரு செய்தியின் செல்லுபடியாகும் தன்மையையும் ஓரளவு விளங்கிக் கொள்ளும் நபர்களுக்கு) இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது!

இப்போது நம் முன்னால் இருக்கும் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் தோன்றிதே என்பதும்அந்தக் குர்ஆனில் மேற் கண்ட விபரங்கள் யாவும் உண்டு என்பதும் உண்மை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டோம். எனவே திருக்குர்ஆனின் ஆசிரியர் வேறொரு வருமன்றி பேரண்டத்தைப் படைத்த இறைவனே என்பதில் இதற்கு மேல் எதற்காக ஐயப்பட வேண்டும்?

விண்ணில் ஆடும் மண் தொட்டில்

ஈர்ப்பாற்றலைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் சில திருமறை வசனங்களை முன் அத்தியாயங்களில் கண்டோம். அவ்வசனங்களில் பூமி ஆகாயத்தில் ஓய்ந்திருக் கும் பொருளன்று எனவும் அது விண்ணில் அமித வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளே எனும் அறிவியல் உண்மை அவ்வசனங்களில் மிக வலுவாகத் தொக்கி நிற்பதையும் கண்டோம்.

நமது பூமி சூரியனை ஓயாமல் சுற்றிவரும் ஒரு கோள் என நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் கோபர் நிக்கசால் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் இந்த சுற்றுப் பயணம் திரும்பத் திரும்ப ஒரே பாதையில் நடைபெற்றுக்கொண் டிருக்கிறது. பூமியின் ஒரே பாதையிலான இந்த ஓட்டம் ஒரே பாதையில் நகரும் ஊஞ்சலைப் போன்று முன்னும் பின்னுமா கவோ அல்லது சரியான வட்டப் பாதையில் சுழலும் ரங்க இராட்டினம் (Whirligig) அல்லது இராட்டைச் சக்கரம் (Spinnig Wheel) போன்றோ இல்லை. பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டப்பாதை (Ellipse) போன்றே அமைந்துள்ளது. ஆயினும் அதற்கேற்ற ஓர் உவமானச் சொல் இல்லை என்பதால் பூமியின் சுற்றோட்டத்தை ரங்க இராட்டினத்துடனோ அல்லது இராட்டைச் சக்கரத்துடனோ ஒப்பிடலாம். ஆயினும் திருக்குர்ஆனுடைய இலக்கியப் பார்வையில் பூமியின் சூரிய வலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு உவமான ஒற்றுமை(Analogue) அற்புதமானது. அது வருமாறு :

பூமி நமக்கொரு தொட்டில் :

``பூமியைத் தொட்டிலாகவும் மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?உங்களை ஜோடிகளாகப் படைத்தோம் உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம். (78:6-9)

மேற்கண்ட திருமறை வசனத்தில் பூமியின் சூரிய வலம் தொட்டிலோடு ஒப்பிடப்பட்டுள்ளது. ரங்க இராட்டினத்தை விட அல்லது இராட்டையை விட அறிவியல் நோக்கில் மிகச் சிறப்பாகப் பொருந்தும் எடுத்துக்காட்டே இந்தத் தொட்டில் எனும் ஒற்றுமை உவமானமாகும். ஏனெனில் தொட்டில் ஆட்டப்படும்போது அது ரங்க இராட்டினம் அல்லது இராட்டையைப் போன்று சரியான வட்டத்திலோ அல்லது ஊஞ்சலைப் போன்று ஒரு நேர்கோட்டுப் பாதையில் முன்னும் பின்னுமாக நகரவோ செய்வதில்லை. அதற்கு மாறாக தொட்டிலின் இயக்கம் ஒரு நீள் வட்டப்பாதையில் இயங்குவதைப் போன்ற இயக்கமாகவே இருக்கும்.

ஊஞ்சல்கள் பொதுவாக இரண்டுஇரண்டு தொங்கு தளங்களிலிருந்து தொங்க விடப்படுகின்றன. இதனால் ஊஞ்சல்கள் ஆட்டப்படும்போது இயல்பாகவே இது முன் சென்ற தடத்திலேயே திரும்பி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அதன் நகர்வு நேர்கோட்டுப் பாதையிலேயே அமைந்தாக வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக தொட்டில் என்பது ஒரே ஒரு தளத்திலிருந்து மட்டுமே தொங்க விடப்படுவதால் அது ஆட்டப்படும்போது அதன் முன்பக்க ஆட்டத்தின் முடிவிலும் பின்பக்க ஆட்டத்தின் முடிவிலும் இயல்பாகவே சிறு சிறு வளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருப்பதால் தொட்டிலின் ஆட்டம் நீள் வட்டமாக அமைந்து விடுகிறது.

எவ்வளவு அற்புதமான ஈடற்ற ஒற்றுமை உவமானம் இது! எவ்வளவு அற்புதமாக பூகோளத்தின் விண்ணில் நகர்வின் (Spatial Motion) அறிவியல் அமைப்பைப் பயன்படுத்தி தேன் சொட்டும் இலக்கியம் படைக்கிறது வான்மறைக் குர்ஆன்! திருமறையின் நம்பிக்கையாளர்கள் ஓரளவு அறிவியல் அறிமுகமும் இலக்கிய வேட்கையும் உடையவர்களாக இருந்தால் அணுவுக்குள் அண்டம் எனும் அற்புதம்போல் அவ்வளவு மகத்தான அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனின் இவ்வளவு சின்னஞ் சிறிய வசனங்களில் அடங்கி இருப்பதைக் கண்டு வியப்பெய்துவதோடன்றி அந்த அற்புதமான அறிவியல் உண்மைகள் பண்டைக்கால மக்களின் அறிவியல் அறியாமையால் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அவை இலக்கிய வேடத்தின் அலங்காரத்திற்குள் புதைந்து தேடுவோர் கண்களுக்கு மட்டும் புலப்படும்படி நிசப்தமாக வீற்றிருக்கும் பாங்கினைக் கண்டு உடல் சிலிர்க்கும் அனுபவத்தைப் பெற்றிருப்பர்!

தொட்டிலின் ஆட்டமே பிள்ளையின் தூக்கம் :

திருமறை பயன்படுத்தி இருக்கும் தொட்டில் எனும் ஒற்றுமை உவமானத்தின் (Analogue)இலக்கிய நயம் மேலும் ஆழமான அறிவியலைத் தன்னகத்தே கொண்டதாகும். இதை விளங்கிக்கொள்ள இன்றும் கூட உலகின் கோடிக்கணக்கான வர்களால் வினவப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வினாவை எடுத்துக் கொள்வோம். ``நாம் எதன் மீது நிற்கிறோமோஎதன் மீது நடக்கிறோமோஎதன் மீது நமது வாழ்க்கையின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோமோ அந்த பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதும்படுவேகத்தில் விண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மை யானால் அதை நம்மால் ஏன் உணர முடிவதில்லை என்பதே அக்கேள்வியாகும். படிக்காதவர்கள் மட்டுமின்றி உயர் நிலைப் பள்ளிகளில் இரண்டு மூன்று வருடங்கள் பயின்று பள்ளியைத் துறந்தவர்கள் கூட இக்கேள்வியை இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது இக்கேள்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் செய்தியாகும்.

இன்றைய காலகட்டத்தில் இக்கேள்விக்குரிய பதில் நமக்குத் தெரிந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அப்படி இருந்தும் இக்கேள்விக்குரிய அறிவியல் விளக்கத்தை உள்ளடக்கிய ஒரு ஒற்றுமை உவமானத்தைப் படைக்கும் முயற்சியில் இலக்கிய விற்பன்னர் ஒருவர் முயன்று பார்க்கும்போது நாம் முன்னர் கண்ட திருக்குர் ஆனின் தொட்டில் உவமானத்தில் உள்ளடங்கி இருக்கும் ஆழம் தெரியாத அறிவியல் உண்மை என்ன என்பது அவருக்குத் தெரியவரும். ஆம்! திருக்குர்ஆனின் தொட்டில் உவமானம் நாம் எடுத்துக்கொண்ட உலகம் தழுவிய வினாவின் (Universal question) பதிலை மிக அற்புதமாக உள்ளடக்கியதாகும். அந்த பதில் வருமாறு :

``ஆடிக் கொண்டிருக்கும் தொட்டிலின் ஆட்டத்தை உணராமலே குழந்தைகள் தொட்டிலில் உறங்குவது உண்மை என்றால் பூமியின் சுழலோட்டத்தை உணராமல் நாமும் அதன் மீது நமது வாழ்வியல் நடவடிக்கைகள் யாவும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மையாகும்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை நீண்ட ஆயிரம் வருடங்களாக திருக்குர்ஆனின் தொட்டில் உவமானத்தில் மிக அமைதியாகக் கண்ணுறங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் உண்மைகள் எந்த அளவிற்கு அகன்றவிரிவான பொருட்களைத் தந்து கொண்டிருக்கின்றன என்பது நமக்குச் சிறுகச் சிறுகப் புலனாகி வருகிறதன்றோஇத்துடன் நின்றுவிடவில்லை இதன் பொருள் விரிவு. திருக்குர்ஆனின் உவமானங்களில் ஒன்றாகிய இந்த பூமித் தொட்டிலிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கங்கள் பாமரனுக்கு மட்டுமின்றி அறிவியல் கல்வியின் தலைசிறந்த விதிகர்த்தாக்களின் வினாவிற்கும் பதிலளித்துக்கொண்டிருக்கின்ற பிரமிக்கச் செய்யும் பேரதிசயத்தையும் நம்மால் அதில் பார்க்க முடிகிறது.

பேரண்டத்தில் பேரளவும் சிற்றளவும் :

இன்றைய உலகின் தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகள் விடை தேடிக்கொண்டிருக்கும் வினாக்களுள் ஒன்று இப்பேரண்டம் ஏன் இவ்வளவு வழ வழப்பாக (Smooth) இருக்கிறது என்பதாகும். ஹாக்கிங் தன்னுடைய நூலிலும் சில இடங்களில் இக்கேள்வியைக் குறிப்பிட்டுக் காட்டியிருப்பதை நாம் பாகம் 1ல் விளக்கியுள்ளோம். மற்றோரிடத்தில்``பேரண்டம் பேரளவில் (Large Scale) பார்க்கும்போது ஏன் இவ்வளவு சீராக (Uniform)இருக்கிறது? (பக்கம் :127) எனக் கேட்கிறார். இக்கேள்வியின் சாரத்தை சரியாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு ``பேரளவு (Large Scale) மற்றும் சிற்றளவு (Small Scale) எனும் இத்துறையின் கலைச் சொற்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

சான்றாக சூரிய குடும்பத்தின் சுற்றளவு ஏறக்குறைய 3800 கோடி கிலோ மீட்டர்களாகும். இந்தச் சுற்றளவுக்குள் இருக்கும் கோள்கள்மற்றும் துணைக் கோள்கள் போன்ற பருப் பொருட்களின் (Celestial Bodies) கொள்ளளவு சூரிய குடும்பத்தின் பரப்பளவோடு ஒப்பிடும்போது மிகச் சொற்பமானதாகும். சொற்பமாக இருக்கும் இப்பொருட்களின் பொருண்மைஅடர்த்திவெப்பநிலை போன்ற மிக முக்கிய மான இயற்பாடுகளில் அவை தங்களுக்குள் வேறுபடுகிறது. அதே நேரத்தில் சூரிய குடும்பத்தில் பரவிக் கிடக்கும் பேரளவிலான அண்டவெளி அதன் பொருண்மைஅடர்த்தி மற்றும் வெப்பநிலை போன்றவற்றில் ஒரே சீராக ஏற்றக் குறைச்சலின்றிக் காணப்படுகிறது. மேலும்,நிரூபணமாகிக் கொண்டு வரும் ``ஃப்ரீடு மன் அவர்களின் அனுமானப்படி நமது சூரிய குடும்பத்தைப் போன்றே இதர சூரிய குடும்பங் களும் பேரளவில் காட்சி தரும் என்பதாகும்.

காலக்சிகளின் நிலையும் இவ்வாறேயாகும். நமது காலக்சி எவ்வாறு உள்ளதோ அவ்வாறே ஏனைய காலக்சி களும் இருக்கின்றன. பேரண்டத்தின் பெரும் பெரும் தனித் தொகுதிகளே காலக்சிகளாகும். காலக்சிகளின் பரப்பளவு பேரண்டத்தின் பரப்பளவில் மிகச் சொற்பமானதாகும். எனவே பேரண்டத்தில் விரிந்து கிடக்கும் அண்ட வெளி காலக்சி களின் பரப்பளவை விட பேரளவானதாகும். இதிலிருந்து சிற்றளவான காலக்சிகளுக்குள் சீரற்ற,வழவழப்பற்ற பருப் பொருட்கள் இருக்கின்றபோதிலும் பேரண்டத்தின் பேரள விலான தோற்றம் சீரானதாகவே உள்ளது. இந்த விளக்கம் பேரண்டம் பேரளவில் சீரானது என்பதன் பொருள் என்ன என்பதை ஓரளவு விளக்கக்கூடியதாகும்.

வேகத்திற்கேற்ற வழவழப்பு :

இப்போது மேற்கண்ட விளக்கத்திலிருந்து பேரண்டம் பேரளவில் சீராக இருப்பதன் காரணம் திருக்குர்ஆன் எடுத்துக்காட்டியபூமியைக் குறித்து தொட்டில் என்று கூறிய உவமானத்திலிருந்து வெளிப்படுவதை நாம் பார்க்கலாம். தொட்டிலில் கிடத்தப்படும் குழந்தை அமைதியாக தூங்க வேண்டுமானால் இரண்டு முக்கியமான நிபந்தனைகள் உள்ளன. முதலாவது நிபந்தனை தொட்டில் ஒரு சீரான வேகத்திலேயே ஆட்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதன் ஆட்ட வேகத்தில் திடீர்திடீர் என ஏற்றக் குறைச்சல் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் தூங்கும் குழந்தை கூட துயிலுணர்ந்து நிறுத்தாமல் அழத் தொடங்கிவிடும்.

இரண்டாவது நிபந்தனையைச் சரியாகப் புரிந்து கொள்ளும் பொருட்டுஒரு பேருந்துப் பயணத்தை உதாரணமாகக் கொள்வோம். பேருந்துகளில் நாம் சுகமாகப் பயணம் செய்ய வேண்டுமாயின் அப்பேருந்து ஒரு சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்க வேண்டும் என்பதோடு அதன் வேகத்திற்கேற்றவாறு சாலையின் தரமும் அமைந் திருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும். சான்றாக ஒரு பேருந்து மிகக் குறைந்த அளவு சீரான வேகத்தில் - மணிக்கு வெறும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் - செல்வதாக இருந்தால் அது செல்லும் சாலை ஓரளவு குண்டும் குழியுமாக இருந்தாலும் அதனால் பயணிகளுக்குப் பெரிய தொல்லை ஏற்படாது. ஆனால் அதே பேருந்து 100 கிலோ மீட்டர் (மணிக்கு) எனும் சீரான வேகத்தில் செல்வதாக இருந்தால் அது செல்லும் சாலை கான்கிரீட் செய்யப்பட்டு வழவழப்பாக இருக்க வேண்டும். இந்த நிலையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் எனும் சீரான வேகத்தில் செல்லும் ஒரு சூப்பர் சானிக் விமானத்திற்குச் சாலையாகப் பயன்படும் ஆகாயம் எப்படி இருக்க வேண்டும்?

அந்த வேகத்தில் முன்னால் கூறிய கான்கிரீட் சாலையில் இந்த விமானம் சென்றால் முன்னர் வழவழப்பாக இருந்த அதே சாலை இப்போது சொர சொரப்பாக (Rough)மாறிவிடும். அதில் செல்லும் வாகனத்தின் வேகம் கூடியதே அதற்குக் காரணமா கும். இந்தச் சொர சொரப்பு `உராய்வு (Friction) ஆகும். இந்த உராய்வை நீண்ட நேரம் தாங்க முடியாமல் அதன் சக்கரங்கள் வெடித்து அதில் செல்லும் பயணிகள் விபத்திற்குள்ளாகி விடுவார்கள். எனவே விமானங்களுக்கு வாயுமண்டலத்தின் வழவழப்பு தேவையாகிறது. ஆயிரம் கிலோ மீட்டர் வேகத் திற்கே இப்படியென்றால் இலட்சத்து எட்டாயிரம் கிலோ மீட்டர் (மணிக்கு) வேகத்தில் சுழன்றோடும் பூமியின் சாலை எவ்வளவு வழவழப்பாக இருக்க வேண்டும் என யூகிக்க முடிகிறதல்லவா!

பூமியின் விண்ணோட்டத்திற்குத் தேவையான இந்த விண்ணின் வழவழப்பைக் கூட பூமிக்குத் தேவையென திருக் குர்ஆன் கூறிக் கொண்டிருப்பதை அது பூமியை உவமித் திருக்கும் தொட்டில் உதாரணத்திலிருந்து அனுமானிக்க முடிகிறதல்லவா! தொட்டில் ஆட்டப்படும் வேகம் சீராக இருந்தால் மட்டும் போதாது. அது ஆட்டப்படும் இடம் குறைந்தபட்சம் வாயு மண்டலத்தின் வழவழப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனை யாகும். அதன் காரணமாகவே தொட்டில்கள் அனைத்தும் வாயுவில் தொங்கவிடப்படுகின்றன. எனவே பூமியைத் திருக்குர்ஆன் தொட்டிலோடு உவமானப்படுத்தியதில் இருந்து பூமி சுழன்றோடும் விண்வெளியும் மிக வழவழப்பாக இருக்க வேண்டிய அவசியம் அதில் வலியுறுத்தப்படுவதை நம்மால் எளிதாக விளங்க முடிகிறதன்றோ!

திருக்குர்ஆனுடைய இலக்கிய நயத்தில் கூட இவ்வளவு அளவிடற்கரிய ஆழமான அறிவியல் உண்மைகள் புதையல் களாக வந்து கொண்டிருப்பது திருக்குர்ஆன் இறை ஞானத்தி லிருந்து மட்டுமே தோன்ற முடியும் என்பதை பகுத்தறியும் மாந்தர்க்கு அறிவுறுத்துகின்ற மறுக்க முடியாத சிறந்த ஆதாரங்களாகும்.

ஆயிரக்கணக்கான வருடங்களில் உருவாகி வருவதும்விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப் போவதுமாகிய அறிவியல் உண்மைகளைக் கூட முன் கூட்டியே சுவைமிக்க இலக்கியப் பண்டங்களாகச் சமைத்துப் பரிமாறும் அளவிற்கு அறிவுத்திறன் பெற்ற ஒரு மானிட குலத்தவனைக் கற்பனை செய்வது இயலாத காரியமே என்பதால் திருக்குர்ஆனைப் படைக்கும் அறிவாற்றலும் மானிட குலத்துவனுக்கு இல்லை என்பது உண்மையல்லவா?

ஆகாயக் குன்றும் ஆகாயக் குழியும் :

பூகோளத்தின் வேகம் ஒரு இலட்சத்து எட்டாயிரம் கிலோ மீட்டர் என்பது பூமி சூரியனைச் சுற்றும் வேகமாகும். அதே நேரத்தில் சூரிய குடும்பத்துடன் இணைக்கப்பட்ட நிலையில் அது மணிக்கு ஒன்பது இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் நமது காலக்சியின் மைய அச்சைச் சுற்றி வட்டமிடுகிறது. இதைத் தவிர பேரண்டத்தின் பெரும் தொகுதிகளான காலக்சிகளும் பேரண்டத்தின் மைய அச்சைச் சுற்றி முன் கூறிய வேகங்கள் யாவையும் விட மிக மிக வேகத்துடன் சுழன்றோடுகின்றன. ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கஅதிகரிக்க அதற்கேற்றவாறு விண்ணகத்தின் வழவழப்பும் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அண்டவெளியில் ஏதேனும் ஓரிடத்தில் அதன் அடர்த்தி சற்றே மிகைத்திருந்தா லும் அது ஒரு மோதலை உருவாக்கும். இதைப் போன்று வேறோரிடத்தில் அதன் அடர்த்தி சற்றே குறைந்திருந்தாலும் அந்த இடத்தை ஒரு கோளோநட்சத்திரமோ அல்லது காலக்சியோ கடந்து செல்ல நேரும் போது ஒரு பள்ளத்தில் வீழ்வது போன்ற நிலைமையை உருவாக்கிவிடும். விண்வெளியில் பரவியுள்ள வெப்ப நிலையில் ஏதேனும் ஏற்றக் குறைச்சல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கேற்ற பாதிப்புக்களை அந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் விண்ணகப் பொருட்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த அபாயங்களைத் தவிர்க்கும் பொருட்டு நமது பேரண்டம் பேரளவில் இவ்வளவு சீராகவும் வழவழப்பாகவும் இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

எளிமையைச் சிக்கலாக்கும் அறிவியல் பற்று (?) :

ஏன் இந்த வானம் இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது எனும் கேள்விக்கு திருக்குர்ஆனிலிருந்து நாம் விளங்கிக் கொண்ட பதில் சிக்கலற்றதும் எளிமையானதுமாகும் என் பதைசிக்கலேதும் இன்றி வாசகர்களும் விளங்கிக் கொண்டிருப் பீர்கள். ஆயினும் எவ்வளவு எளிமையான பதிலாக இருந்த போதிலும் இதை ஒப்புக்கொள்வது சில அறிவியலாளர்களுக்கு அவ்வளவு எளிதானதில்லை. ஏனெனில் இதை ஒப்புக் கொண்டால் கடவுளின் தேவையையும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகி விடும். அதே நேரத்தில் கடவுளின் பங்கைத் தவிர்த்து விட்டால் பேரண்டத்தை இவ்வளவு வழவழப்பாக அமையும்படி செய்த எவ்விதமான அறிவியல் காரணத்தை யும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடவுளின் பங்கைத் தவிர்க்கப் பார்க்கும் முயற்சிகள் எவ்வளவு பலமான முட்டுச் சந்தை அடைந்து தொடர்ந்து செல்ல வழியின்றித் தவிக்க நேர்கிறது! பரிதாபம்! எனவே அவர்கள் பேரண்டம் இவ்வளவு சீரான வழவழப்புடன் இருப்பதற்கு நம்மால் விவரிக்க முடியாத ஏதோ காரணம் இருந்து விட்டுப் போகட்டுமே எனக் கூறி திருப்தி அடைகிறார்கள்.

ஆப்பிள்களை வீழ்த்தும் முற்கால அறிவியல் (?) :

இப்போது திருக்குர்ஆனுடைய மற்றொரு அறிவியல் வசனத்தின்பால் கவனத்தைச் செலுத்துவோம். நாம் எதன் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அந்த பூமிக்கு ஒரு ஈர்ப்பு விசை இருப்பது உண்மையாக இருந்தால் அதை ஏன் நம்மால் உணர முடியவில்லை எனும் வினா படிப்பறிவற்ற மக்களால் இப்போதும் கேட்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் பூமி என்பது ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றளவைக் (40,000 கி.மீ.) கொண்டு விண்ணில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் கோள் வடிவம் கொண்ட ஒரு பொருள் என்பதில் இப்போதும் ஐயம் கொள்ளும் அவர்களது மனப்பாங்கிற்கு முக்கியப் பங்குண்டு.

கோபர் நிக்ககெப்ளர்கலிலியோக்களுக்குப் பின்ன ரும் ஏராளமான ஆப்பிள்கள் ஏராளமான அறிவிலாளர்களின் முன்னால் வீழத்தான் செய்திருக்கும். ஆனால் அவர்களிடம் இல்லாத ஓர் இயந்திரவியல் அறிவுத்திறன் (Mechanical Aptitiude) நியூட்டனிடம் இருந்ததால் அவர் பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு எனும் மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கினார். அதே நேரத்தில் அவருக்கு முன் இருந்த அறிவியலாளர்களுக்கும் கூட ஆப்பிள்கள் வீழ்வதற்கு அவர்களுக்கே உரிய அறியாமைக் காரணம் இருக்கவே செய்தது.

பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் இயல்பாகவே மாறா தன்மை கொண்ட `எடை எனும் இயற்பாடு உண்டு (இது தவறான நம்பிக்கை என்பதை நாம் திருக்குஆனிலிருந்து முன்னர் கண்டுள்ளோம்) என்றும் அந்த எடையை எதேனும் ஒன்று எப்போதும் தாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்பி வந்தனர். இதன் காரணமாக பிடிமானமில்லாத எல்லாப் பொருட்களும் ஆப்பிள்கள் உட்பட) பூமியில் வீழ்ந்தாக வேண்டும் என்பது இயற்கையே அன்றி அதற்கு வேறு காரணங்கள் எதுவும் தேவை இல்லை என மகத்தான (?) விடை கண்டு திருப்தி அடைந்தனர்.

தரையில் வீழ்ந்த உயிரற்ற பொருட்கள் வீழ்ந்த இடத்தி லேயே நகராமல் கிடப்பதும் இறந்து போகும் உயிரினங்களின் உடல் கிடந்த இடத்திலே கிடந்து கொண்டிருப்பதும்கூட இயற்கையின்பாற்பட்டதே - அவற்றின் எடைகளை எதன் மீதாவது தாங்கி இருக்கும்படிச் செய்ய வேண்டும் எனும் நிர்ப்பந்தத்திற்காகவே - அன்றி பூமியின் மீது அவைகளை ஒட்டிக்கொண்டிருக்கும்படிச் செய்வதற்கு வேறு காரணம் ஏதும் தேவை இல்லை என அவர்களின் பேதை மனங்கள் அவர்களிடம் கூறின. அந்த அறியாமைக்கால எண்ணமே கல்வியறிவற்ற பாமரர்கள் பலரிடம் இப்போதும் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே``பூமிக்கு ஈர்ப்பு விசை என்ற ஒரு சக்தி இருப்பாதாகக் கூறப்படுவது உண்மையென்றால் நாம் நடக்கும்போதோஓடும்போதோ அல்லது குதிக்கும் போதோ நமது கால்களை எந்த ஒரு சக்தியும் இழுத்துப் பிடிப்பதாக நமக்குத் தெரியவில்லையேஎன அவர்கள் கேட்பதற்குக் காரணமாகும்.

இந்த வினாவிற்குரிய அறிவியல் விடையையும் திருக் குர்ஆன் இலக்கியச் சுவையுடன் விளம்பிக்கொண்டிருப்ப தால் அதை எளிதாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு பொருத்தமான உதாரணத்தின் உதவியை நாடுவோம்.

ஈர்த்திழுக்கும் பூ கரம் :

ஆறு மாதக் கைக்குழந்தை ஒன்றை மார்போடு அணைத்துக்கொண்டு கடைத் தெரு வழியாக நடந்து செல்கிறாள் ஒரு பெண். அவளின் மற்றொரு பிள்ளையாகிய ஐந்து வயது சிறுவன்அவளுடைய கையைப் பிடித்தவாறு அவளுடன் சென்று கொண்டிருக்கிறான். அவளுடன் நடந்து செல்லும் அந்தச் சிறுவன் தன் தாயின் கைகளைப் பற்றியவாறே கடைவீதிக் காட்சிகளை இரசித்துக்கொண்டே அவளுடன் சுதந்திரமாகச் சென்று கொண்டிருக்கலாம். அதை அவனுடைய தாய் தடுப்பதில்லை. ஆயினும் அவன் எப்போதேனும் கடைகளை நெருங்கிச்சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடைகளை நோக்கி நகரத் தொடங்கினால் அவனுடைய தாயின் கரம் உடனே அவனைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். அப்போது மட்டுமே தனது தாயின் பிடியிலேயே தான் இருந்து வருவதாகவும் தனது அசைவுகள் தனது தாயால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதையும் அவனால் உணர முடிகிறது.

இதைப் போன்றே அந்தத் தாயின் மார்பில் தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தையும் கடைத் தெருக் காட்சிகளை இரசிப்பதற்காக தன் உடலைப் பலவாறு திருப்பலாம். அதை அதன் தாய் தடுப்பதில்லை. ஆனால் அக்குழந்தை எப்போதாவது குதூகலத்தால் தாயின் மார்பிலிருந்து துள்ளிக் குதிக்க முயன்றால் அப்போது அந்தத் தாயின் அரவணைப்பு மேலும் சற்று இறுக்கமாகும். அப்போது மட்டுமே அக் குழந்தைக்கு தாமும் தம்முடைய தாயின் அரவணைப்பால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம் என்பது தெரியவரும்.

இதைப் போன்றே நாமும் நமது பூமித்தாயின் அரவணைப்பில் அதனுடன் சென்றுகொண்டிருக்கிறோம். நமது அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளில் அதனுடைய அரவணைப்பை நாம் உணருவதில்லை. ஆயினும் தாயின் மார்பிலிருக்கும் குழந்தை கடைத் தெருவைப் பார்த்துத் துள்ளிக் குதிப்பதைப்போல் நட்சத்திரங்களைப் பார்த்து வானை நோக்கி நாம் குதிக்க முயற்சித்தால் பூமித்தாய் உடனே நம்மை அவள்பால் இழுத்து அணைத்துக் கொள்ளும். குழந்தை வளர்ந்து ஆளான பிறகு அதன் தாய் அதனை சுதந்திரமாக விட்டுவிடுவதைப் போன்று நாமும் அறிவியல் வளர்ச்சி அடைந்து இராக்கெட்டில் ஏறினால் பூமித்தாயும் நம்மை சுதந்திரமாக விட்டுவிடும்.

நமது உதாரணத்தில் இதுவரை மனிதர்களைப் பற்றிப் பார்த்தோம். மனிதர்கள் மட்டுமன்றி விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் பூமியின் மணிக்கு கிட்டத்தட்ட 1800 கி.மீ. எனும் (சுழல்) வேகத்தில் சுழல்வ தால் அதன் மீதிருக்கும் பொருட்கள் உயிருள்ளவையா யினும்உயிரற்றவையாயினும் சிதறடிக்கப்படாமல் அவை களை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும். இப்போது இந்த அறிவியலை அற்புதமாக எடுத்துரைக்கும் வான்மறையின் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் இதோ :

``உயிருடன் உள்ளோரையும் இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக்கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?

(77:25,26)

எவ்வித மறுவிளக்கமும் இன்றி ``பூமியை ஈர்ப்பு விசை உள்ளதாகவே இறைவன் உருவாக்கியுள்ளான் என்பதே இந்த சின்னஞ் சிறு வசனங்களின் பொருள் என்பதை விளங்கிக் கொள்வதில் இப்போது யாருக்கும் எவ்விதப் பிரச்னையும் இருக்காதன்றோ?எவ்வளவு மகத்தான அரிய அறிவியல் உண்மைகளையெல்லாம் இறை ஞானத்தின் வெளிப்பாடாக எவ்வித ஆர்பாட்டமோஆராவாரமோ இன்றி முழுமையான அமைதியுடன் திருக்குர்ஆனின் தேர்ந்தெடுக் கப்பட்ட வசனங்களில் இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை மிக மிகத் தெளிவாக நம்மால் அடையாளம் காண முடிகின்றதோ!

பூமியின் அணைப்பில் ஆழ்ந்து கிடக்கும் அறிவியல்:

ஒன்றை ஒன்று அணைப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளாம் கைகள் இல்லாமலே விந்தைமிகு அறிவியல் கரமாம் ஈர்ப்பாற்றலால் பூமி நம்மை அணைப்பதாக திருக் குர்ஆன் கூறியிருக்கும் இந்த `அணைத்தல் எனும் சொல்லின் இலக்கியச் சுவையின் தித்திப்பு நாம் எடுத்துக் காட்டிய `தாய் - சேய் சான்றில் இருந்து அனுபவித்திருப்பீர்கள். ஆனால் அதன் இலக்கியத்திற்குள் இருக்கும் பச்சையான அறிவியல் மேலும் ஆழமானதே எனும் உண்மையை ஏனைய விண் ணகப் பொருட்களின் ஈர்ப்பு விசை பற்றிய அறிவிலிருந்து நம்மால் பெற முடிகிறது.

பூமி நாம் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக் கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படு கிறது. (நாம் அணியும் ஆடையின் எடையை நாம் ஒருபோதும் உணர்வதில்லை.) இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாகத் தென்பட்டால் நம்மால் இதன் மீது ஒருபோதும் வாழ இயலாது. சான்றாக ஒருவர் வியாழனுக்குச் சென்றால் அங்கு அவரால் எழுந்து நிற்கக்கூட முடியாமல் சிரமப்படுவார். ஏனெனில் வியாழனில் பூமியில் இருப்பதை விட இரண்டரை மடங்கு அதிகமான ஈர்ப்பு விசை செயல்படுகிறது. நமக்கு இதமான அணைப்பாக விளங்கும் நமது உடையின் எடையை ஒரு சிறு பிராணி - ஒரு குருவி - யின் மீது வைத்தால் அதனால் எப்படி எழுந்து நடமாட முடியாதோ அப்படிப்பட்ட நிலையே நாம் வியாழனுக்குச் சென்றால் ஏற்படக்கூடிய நிலையாகும்.

இப்போது வியாழனுக்குப் பதிலாக சூரியனின் பொருண்மையுள்ள ஒரு கோளுக்கு ஒருவர் செல்ல நேர்ந்தால் அவருக்கு ஏற்படும் நிலைமை ஒரு சிற்றெறும்பின் மீது நமது உடையின் எடையை வைத்தால் ஏற்படும் நிலைமைக்கு ஒப்பாகும். அந்த சிற்றெறும்பு தரையோடு தரையாக அழுந்திப் போவதைப் போன்று அந்த நபர் அக்கோளின் மீது அழுத்தப்பட்டு உடல் தட்டையாக்கப் (Flat)படுவார். ஏனெனில் பூமியின் ஈர்ப்பு விசை போன்று 28 மடங்கு ஈர்ப்பு விசை அக்கோளுக்கு இருப்பதே காரணமாகும்.

நாம் நமது உடையை இப்போது ஒரு யானையின் முது கில் போர்த்துகிறோம். அந்த யானை அதை எப்படி உணரும்யானையால் அதை ஒரு தழுவலாக உணர முடியாது. அதை வெறும் ஒரு தொடு உணர்வாகவே உணர முடியும். இந்த நிலையே புவி வாழ் மனிதன் ஒருவன் சந்தினுக்குச் சென்றால் ஏற்படும். ஏனெனில் புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே நிலவில் நிலவும் ஈர்ப்பு விசையாகும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து பூமியின் ஈர்ப்பு விசை மனிதர்களாகிய நம்மைப் பொருத்தவரை ஒரு `அரவணைப்பைப் (Embracing) போன்றே செயல்படுகிறது எனும் கருத்து நவீன வானவியலின் விரிவான எல்லைகளைத் தொட்டு நிற்கும் ஆழமான அறிவியல் உண்மை என்பதை ஐயமறக் கண்டு தெளிந்தோம். திருக்குர்ஆனடைய இந்த அறிவியல் அது வழங்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த அறிவியல் மேதைகளால் கூட கற்பனை செய்ய இயலாத அளவிற்கு ஆழஅகலங்களைக் கொண்டதே இந்த அறிவியலாகும் என்பதையும் ஐயமறத் தெரிந்து கொண்டோம். இருப்பினும் இந்த அறிவியலை நேருக்கு நேர் பச்சையாகக் கூறினால் அன்று வாழ்ந்த மக்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலால் (Perspicacity) எளிதில் உட்கொள்ள முடியாது என்பதால் அப்படிப்பட்ட அறிவியல் உண்மைகளை இலக் கியச் சுவைமிக்க காப்ஸ்யூல்களில் (Capsules) உட்புகுத்தி அறியாமைக் குழந்தைகளின் அறிவியல் வளர்ச்சிக்காக மருத்துவர்களையும் வெல்லும் பரிவோடு தேவைக்கேற்ப வழங்கிக்கொண்டிருக்கும் திருக்குர்ஆனின் ஈடு இணை யில்லா அதி அற்புத மேதமை இறைஞானத்தின் வெளிப் பாடே அன்றி மானிட ஆற்றலால் இயலாத காரியமே என்பதில் 1300 ஊ.ஊ மூளையைச் சொந்தமாக்கி 21-ம் நூற்றாண்டிற்குள் புகுந்துவிட்ட பின்னரும் ஒருவரால் சந்தேகப்பட முடியுமா?

திருமறையின் வடிவச் சிறப்பு :

திருக்குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் ஒற்றுமை உவமானங்களிலிருந்து வெளிப்படும் சொற்பொருட்கள் சுட்டும் செய்திகளின் இலக்கியச் சுவையும் அச்செய்திகளால் உவமிக்கப்படும் மையக்கருக்களிலிருந்து வெளிப்படும் அறிவியல் உண்மைகளும் வற்றாத ஊற்றைப்போன்று வந்து கொண்டிருப்பதைக் கருத்தூன்றிப் பயிலும் மானிடரைத் திகைக்க வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். இதைப் போன்று திருக்குர்ஆனின் வடிவ அமைப்பும் (Structure) அபாரமான பொருத்தத்துடன் அழகுற்று விளங்குவதையும் நம்மால் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. சான்றாகதிருக்குர்ஆன் முதல் வரியில் கூறிய`தொட்டில் எனும் சொற்பொருள் சுட்டும் மன சஞ்சலம் இல்லாத அமைதியான உறக்கம் (மனதில் சஞ்லங்களை உருவாக்குவது அதில் பதிந்துள்ள செய்திகளின் தாக்கமாகும். தொட்டில் பிள்ளை கள் மனதில் எதையும் பதியவைக்கும் பருவத்தை அடையாத தால் அவைகளின் தூக்கம் மனச் சஞ்சலங்கள் இல்லாத தூக்கமாகும்) எனும் செய்தி அந்த வசனத்தின் மையக் கருவாம் ``அமைதியான வாழ்வுக்கு ஏற்ற பூமியின் இயற்பாடு எனும் கருத்தை தெள்ளத் தெளிவாகப் பிரதிபலித்துக் காட்டும் மிக மிக அற்புதமான உவமானமாகும். மிகச் சரியாகப் பொருந்தக்கூடிய பூமியின் மற்றொரு இயற்பாட்டையே மாறுபட்ட அறிவியலாக இருந்த போதும் திருக்குர்ஆனில் அடுத்த வரியில் கூறப்பட்ட``மலைகளை முளைகளாக நாம் ஆக்கவில்லையாஎனும் வசனத்தில் நாம் காண்கிறோம்.

முதல் வரியில் பூமியைத் தொட்டிலாகக் குறிப்பிட்டதன் வாயிலாக வான் அறியலைக் கூறிய திருக்குர்ஆன் அடுத்த வரியில் மலைகளை முளைகளாக்கப்பட்ட செய்தியைக் கூறி புவிசார் அறிவியலுக்கு மாறியது. இருப்பினும் அந்த மாற்றம் திருக்குர்ஆன் முதல் வரியில் கூறிய சொற்பொருள் சுட்டும் செய்தியிலிருந்தும் அச்செய்தியின் மையக் கருத்திலிருந்தும் இம்மியளவும் விலகிப் போகவில்லை.

இரண்டாவது வரியில் கூறப்பட்டிருப்பது புவியியலைச் சார்ந்ததாக இருப்பதால் அது வேறு தொகுதியில் விளக்குவ தற்கே வாய்ப்புள்ளது. இருப்பினும் நமது பூமி அதன் இளம் வயதில் பெரும் அதிர்வுகளையும் பூகம்பங்களையும் ஓயாமல் நிகழ்த்தி வந்தது என்பதைக் கருத்தில் கொள்வது இந்த இடத்திற்குப் போதுமானதாகும். அப்போது பூமியின் மேட்டுப் பகுதிகளெல்லாம் திடீர் திடீரெனப் பள்ளங்களாவதும் பள்ளங்கள் மேட்டுப் பகுதிகளாக மாறுவதும் பூகோளத்தின் வழக்கமாக இருந்து வந்தது. பூகோளத்தின் அந்த நடத் தையை படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வந்த இயற் பாட்டிலிருந்து தோன்றி வந்ததே மலைகளாகும் என்பது அதைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளிலிருந்து தெரியவரும் அனுமானங்களாகும். இதிலிருந்து மலைகள் தோன்றவில்லை யெனில் பூமி இப்போதும் பழைய நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும் என்பது தெளிவு. இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் பூமியில் வாழ்ந்தால் மனச் சஞ்சலம் இல்லாமல் அவரால் அமைதியாக உறங்க முடியுமாமேலும் ஊண் உறக்கம் இன்றி விழிப்புடன் இருந்தால் கூட இந்த பூமி அவருக்கு ஒரு வாழ்விடமாக இருக்க முடியுமா? ``இல்லை! இல்லை! என்பதில் கருத்து வேற்றுமைகளுக்கும் இடமில்லை! எனவே முதல் வரியின் சொற்பொருள் சுட்டும் செய்தி யோடும் அச்செய்தியின் மையக் கருத்தோடும் இரண்டாம் வரியும் மிக அற்புதமாகப் பொருந்தி விட்டது.

இப்போது திருக்குர்ஆனுடைய ஆய்விற்குரிய வசனத் தொடரின் மூன்றாவது வரியில் கூறப்பட்டிருக்கும் ``உங் களை ஜோடிகளாகப் படைத்தோம் எனும் செய்தி வானி யல் மற்றும் புவியியல் ஆகியவைகளிலிருந்து வேறுபட்டு உயிரியலைக் கூறிய போதிலும் முன்னர் நிகழ்ந்தது போன்றே முதல் வரியுடன் மிக அழகாகப் பொருந்துகிறது. மேல் விளக்கங்கள் தேவையில்லாத அளவிற்கு இணையுடனல் லாத உறக்கம் எவ்வளவு சஞ்சலத்தை உருவாக்கும் என்பதும் இணையற்ற வாழ்க்கை எவ்வளவு நரக வேதனையாக இருக்கும் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதேயாகும்.

ஆய்விற்கெடுத்துக் கொண்ட வசனத் தொடரில் கடைசி யாக உள்ள ``உங்கள் உறக்கத்தை ஓய்வாக ஆக்கி னோம் எனும் வரி முன்னர் கூறப்பட்ட வானியல்புவியியல்உயிரியல் பிரிவுகளிலிருந்து வேறுபட்டு உளவியல் பிரிவைச் சார்ந்ததாக இருந்த போதிலும் இந்த வரியும் முன் போன்றே வசனத் தொடரின் முதல் வரியோடு முற்றிலும் பொருந்தி நிற்கிறது. மனிதனை இயக்குவது அவனது மனமே என்றும் அந்த மனம் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதேயாகும் என்பதும் விளக்கங்கள் தேவைப்படாத மனித அனுபவங்களா கும். இதைப்போல மனித வாழ்க்கைக்கு ஓய்வு தேவை என்பது அந்த ஓய்வு உடலளவில் மட்டுமின்றி உள்ளத் தளவில் இருக்க வேண்டும் என்பதும் மிக இன்றியமை யாததாகும் என்பதும் விளக்கங்கள் தேவையில்லாத மானிட அனுபவங்களாகும். எனவே ஓய்வற்ற வாழ்க்கை ஒரு நரக வேதனையே அன்றி அது உண்மையான வாழ்க்கையாக இருக்க முடியாது என்பதிலிருந்து இந்த வரியிலுள்ள விபரங்களும்அது கூறும் செய்தியின் அறிவியல் பிரிவு மாறிய போதிலும் முதல் வரியில் கூறப்பட்ட ``தொட்டில் எனும் சொற்பொருள் சுட்டும் அமைதியான உறக்கம் எனும் செய்தியேயாகும். அந்தச் செய்தியின் மையக் கருவாம் அமைதியான உலக வாழ்வு எனும் கருப்பொருளோடும் துல்லியமாகப் பொருந்தி நிற்கும் திருமறை வசனங்களின் வடிவ அழகும் பயில்வோர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அதன் இலக்கியச் சிறப்பம்சங்களாகும்.

அறிவியலுக்கு ஏன் இலக்கியம்?

திருக்குர்ஆனுக்குரிய தெய்வீக ஞானத்தின் சிறப்பம்சங் கள் அனேகமாக இருந்த போதிலும் இந்நூலில் நமது பணிதிருக்குர்ஆனுடைய விஞ்ஞான அறிவை சிறிதளவேனும் விளங்கிக்கொள்ள முயற்சிப்பதே அன்றி அதனுடைய ஈடு இணையற்ற இலக்கியச் சுவையை இனம் காட்டும் பணி யில்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் இந்த அத்தியாயத் தில் ஆய்வு செய்யப்பட்ட திருமறை வசனங்கள் அக்கால மக்களின் வானியல் அறியாமையைப் போக்கும் மிகக் கசப்பான அறிவியல் மருந்தாக இருந்ததால் அதை இலக்கியச் சுவையில் தோய்த்தெடுப்பதற்குப் பதிலாக அச்சுவையில் ஊறவைத்தே பரிமாறப்பட்டது. இதன் விளைவாகவே இந்த அத்தியாயத்தில் இலக்கியம் இழையோடும்படி நேர்ந்து விட்டது. ஆனால் திருக்குர்ஆனின் இலக்கியம் ஆழம் காண முடியாததாகும். நமது சிற்றறிவின் காரணமாக அதன் மேற் பரப்பின் கீழே நம்மால் செல்ல இயலவில்லை என்பதே உண்மையாகும். அறிவியலைக்கூட இந்த அளவிற்கு இலக்கிய மாக்கிச் சித்தரிக்கும் அறிவாற்றலை வெளிப்படுத்தும் மற்றொரு நூல் இவ்வையகத்தில் இருப்பதாக நாம் கேள்விப் படவில்லை. இவையாவும் திருக்குர்ஆனுடைய தெய்வீக ஞானத்தின் சிறப்பம்சங்களே!

இந்த அத்தியாயத்தில் விவாதித்த விபரங்களை கருத்தில் கொண்டு திருக்குர்ஆன் யாருடைய நூல் என்பதை வாசகர்களால் எளிதில் மதிப்பிட முடியும். அப்பணியில் இப்போது மெத்தனப்போக்கை கடைபிடித்தால் மற்றொரு நேரத்தில் தங்களைத் தாங்களே குறைகூறும் நிலை ஏற்பட்டு விடும்.

வாழத்தகுந்த கோள்

நாம் வாழுகின்ற இந்த பூமி எல்லையற்ற பரப்பளவைக் கொண்ட உலகமாக பழங்கால மக்களால் நம்பப்பட்டு வந்தது. அவர்களிலுள்ள தத்துவ சிந்தனையாளர்கள் அவர்களின் அறிவுக் கேற்ற கற்பனைத் திறனோடு வித்தியாசமான சில உலகங்களைப் பற்றிய விபரங்களை மக்களிடம் போதனை செய்தனர். காலப்போக்கில் மக்கள் எழுத்தறிவைப் பெற்ற போது அவர்களின் இப்பழங்கதைகளெல்லாம் புராணங்களில் நிரப்பப்பட்டன. அவர்கள் நம்பி வந்த வித்தியாசமான உலகங்கள் வானத்திற்கு மேலும் பூமிக்குக் கீழும் இருந்தன. அவற்றுள் சில இன்பங்கள் நிறைந்த வியத்தகு உலகங்களா கவும் வேறுசில துன்பங்கள் நிறைந்த கொடூரமானவைகளாகவும் இருந்தன. ஆனால் அந்த முற்கால சிந்தனையாளர்கள் ஒருவரும் நமது பூமியின் இயற்கை மற்றும் இயற்பியல் குணங்களை முழுமையாகப் பெற்று பூமியை ஒத்திருக்கும் உலகங்கள் வேறு உள்ளனவா என சிந்திக்கவில்லை. ஆனால் தற்போதைய விஞ்ஞானியர்களில் ஒரு சாரார் நமது பூமியை ஒத்த கிரகங்கள் வேறு உள்ளனவா எனத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நமது சூரியக் குடும்பத்தை அரித்தெடுத்த அறிவிய லாளர்கள் இப்போது இதர நட்சத்திரங்களின் சுற்றுச் சூழலில் நமது பூமியை ஒத்த கிரகங்கள் உள்ளனவா என தேடத் தொடங்கி விட்டனர். என்றேனும் ஒருநாள் அப்படிப்பட்ட கிரகங்கள் பலவற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் பரவலாக இருந்து வருகிறது.

மனுகுலத் தந்தை ஆதம்

உலகில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் இப்பேரண்டத்திற்கோர் படைப்பாளன் உண்டென்றும் அவனே மானிடப் படைப்பை நிகழ்த்தினான் என்றும் நம்பு கின்றனர். கடவுள் முதலில் ஆதமைப் படைத்து அந்த ஆதத்திலிருந்தே அவரின் இணையாம் ஹவ்வாவையும் படைத்துஅவ்விருவரிலிருந்தே மானிட குலத்தைப் பல்கிப் பெருகச் செய்தான் என்பது அவர்களது நம்பிக்கையாகும். இப்படைப்புச் செயலின் முதற்படியாக ஆதமையும் ஹவ்வா வையும் படைத்து அவர்களை இறைவன் சொர்க்கபூமி தோட்டத்தில் குடியமர்த்தினான். இதைக் குறித்து திருக்குர்ஆனின் அறிவிப்பு வருமாறு:

ஆதமே! நீயும் உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்! என்று நாம் கூறினோம்.

(2:35)

மேற்கண்ட வசனத்தில் ஆதமையும் அவரது இணையாம் ஹவ்வாவையும் படைத்த இறைவன் அவர்களை சொர்க்கத் தில் வசிக்கச் செய்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஷைத்தான் அவர்களை ஏமாற்றி அவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டான். அந்த நிகழ்ச்சியைத் திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப் படுத்தி னான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர் களை வெளியேற்றினான். ``இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்,வசதியும் உள்ளன என்று கூறினோம்.

(2:36)

இந்த வசனத்தில் நாம் தேடும் பொருள் குறித்து சில விபரங்கள் தொக்கி நிற்பதைக் காண்கிறோம். அந்த விபரங்கள் நம்மைப் பலவாறு சிந்திக்கத் தூண்டுகின்றன. சொர்க்கத்திலிருந்து வெளியேறும் மனிதனை குடியமர்த்துவ தற்காக கடவுள் ஏன் பூவுலகைத் தேர்ந்தெடுத்தான்இன்று நமக்குப் பேரண்டத்தில் கோடானு கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு என்பதும் அவற்றுள் பலவற்றிற்கும் கோள் குடும்பங்கள் (Planetary systems) உண்டென்றும் தெரியும். நமது விஞ்ஞானிகள் நவீன தொலை நோக்கியைக் கொண்டு பேரண்டத்தை ஆய்வு செய்து இப்பேரண்டத்தில் மொத்தமாகக் காணப்படும் நட்சத்திரங் களின் எண்ணிக்கை பத்து கோடானு கோடி 1022 (ஒன்றுக்குப் பிறகு 22சைபர்கள் உள்ள எண்ணின் மதிப்பு) நட்சத்திரங் களைப் பார்க்க முடிவதாகக் கணக்கிடுகிறார்கள். அவற்றுள் ஆயிரத் தில் ஒன்றுக்கு கோள் குடும்பங்கள் உள்ளதாக அபிப்பிரா யப்படுகிறார்கள். எனவே மொத்தமுள்ள நட்சத்திரங்களை ஆயிரத்தால் வகுக்கும் போது (1022/103) = 1019 = ஒரு லட்சம் கோடானு கோடி (ஒன்றுக்குப் பிறகு 19 சைபர்கள் உள்ள எண்ணின் மதிப்புக்குச் சமம்) நட்சத்திரங்களுக்கு கோள் குடும்பங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது.

(பார்க்க : தி நியூ ஹான்ட் புக் ஆஃப் ஹெவன் பக்கம் - 67)

நாம் இப்போது கண்ட புள்ளி விபரங்கள் பேரண்டத்தில் ஏராளமான கோள்கள் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. பேரண்டத்தில் கோடிக்கணக்கான கோள்கள் இருந்தபோதும் மனிதர்களைக் குடி அமர்த்துவதற்கு பூமி ஏன் தேர்வு செய்யப் பட்டது என்பது இங்கு இயல்பாக எழும் கேள்வியாகும்.

பூமியின் சிறப்பம்சங்கள்

``பூமியில் உங்களை (அதிகாரத்துடன்) வாழச் செய்திருக் கிறோம். உங்களுக்கு (வாழ்க்கைகுரிய) வசதி வாய்ப்புகளை யும் இதில் ஏற்படுத்தினோம், (இருப்பினும் நீங்கள்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

(7:10)

``(நீங்கள் எவைகளையெல்லாம் இறைவனுக்கு இணை கற்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையாஅல்லது) பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முனைகளையும் அமைத்து இரண்டு கடல் களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனாஅல்லாஹ் வுடன் வேறு கடவுளாகுறைவாகவே சிந்திக்கிறீர்கள்

(27:61)

மேற்கண்ட திருமறை வசனங்களில் பலதரப்பட்ட விபரங் கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நமது தலைப்புக்கேற்ற விபரங்களாவன: முதல் வசனத்தில் ``பூமியில் உங்களை (அதிகாரத்துடன்) வாழச் செய்திருக்கிறோம் எனக் குறிப் பிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் விண்ணில் பற்பல கோள்கள் இருப்பினும்நமக்கு பூமியில் வாழும் தகுதியே அல்லாஹ் வழங்கியுள்ளான் எனும் கருத்தை வெளிப்படுத்துகிறது. இதையே வேறு விதத்தில் கூறினால் நாம் வாழும் தகுதி படைத்த மற்றொரு கோள் பேரண்டத்தில் இல்லை என்பதாகும்.

இரண்டாவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகள்பூமி தாமாகவே (By Chance)மனிதனுக்கேற்ற வசிப்பிடமாக உருவாக வில்லையென்றும் அல்லாஹ் அதை அவ்வாறு உருவாக்கிய தால் மட்டுமே பூமி ஒரு வசிப்பிடமாக மாறியது என்றும் கூறுகிறது. மேலும் பூமியை வசிப்பிடமாக்கும் பொருட்டு அதில் மேற்கொள்ளப்பட்ட பல முக்கியமான பணிகளில் சிலவற்றையும் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அவைகளாவன: பூமியில் ஆறுகளை உருவாக்குதல்பூமியின் மேற்பரப்பில் நிலச்சரிவு கள் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு முளைகளைப் போன்று மலைகளை நாட்டுதல்கடல்களை உருவாக்கி அக்கடல்கள் சந்திக்கும் இடங்களில் அவைகளுக்கு இடையே கட்புல னாகாத தடைகளை ஏற்படுத்துதல் போன்றவையாகும்.

பூமிகளின் எண்ணிக்கை ஏழு

நாம் வாழும் இந்த பூமியை இதர கோள்களைப் போலன்றி நமக்கு வசிப்பிடமாக இறைவன் உருவாக்கிய தகவல் வேறு பல வசனங்களிலும் நம்மால் பார்க்க முடியும். ஆயினும் இந்த பூமியைப்போன்று வேறு ஒரு கோள் நாம் வாழும் பேரண்டத்தில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் (indication) திருக்குர்ஆனில் தென்படவில்லை. திருக்குர் ஆனில் ஓரிடத்தில்``அல்லாஹ்வே ஏழு வானங்களையும்பூமியில் அது போன்றதையும் படைத்தான் (65:12)எனக் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் : வானங்கள் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைக்கப்பட்டுள்ளதோஅவ்வாறு பூமியும் அடுக்கடுக்காகப் படைக்கப்பட்டுள்ளது எனும் விளக்கம் கிடைக்கிறது. அதே நேரத்தில் வானங்களின் (பேரண்டத்தின்) எண்ணிக்கை ஏழு என்பதைப்போன்று பூமிகளின் எண்ணிக் கையும் ஏழாகும் எனும் விளக்கமும் இந்த வசனத்திலிருந்து கிடைக்கிறது. இருப்பினும் இந்த விளக்கம் சரியாக இருந்தால் கூட ஏனைய ஆறு பூமிகள் நாம் வாழும் பேரண்டத்திலன்றி ஏனைய ஆறு பேரண்டங்களைச் சார்ந்ததாகும் என்பதால் நமது பூமியை ஒத்த மற்றொரு பூமி நாம் வாழும் பேரண்டத் தில் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் திருமறையிலிருந்து கிடைக்கவில்லை.

நாம் இதுவரை கண்ட திருக்குர்ஆன் வசனங்களின் விளக்கத்திலிருந்து முக்கியமான மூன்று தகவல்களை அறிந்தோம். அவைகளாவன : முதலாவதாக பேரண்டத்தில் ஏரானமான கோள்களும் துணைக் கோள்களும் இருந்த போதிலும்நாம் வாழும் பூமி மட்டுமே மனிதர்கள் வாழ்வதற் கேற்ற இடமாக இறைவனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும்இரண்டாவதாக பூமியின் ஏனைய உயிரினங்களைப் போலன்றி மனிதன் பூமியின் மீது ஆதிபத்தியம் (அதிகாரத் துடனான வாழ்க்கையை) நிலை நாட்டக் கூடியவனாகவே தோற்றுவிக்கப்பட்டான் என்பதும் மூன்றாவதாக இந்தப் பேரண்டத்தில் இந்த பூமியைத் தவிர வேறெந்த கோளும் மனிதன் வாழத் தகுந்த கோளாக இல்லை என்பதுமே அவைகளாகும்.

பூகோளம் உயிரினங்களுக்கேற்றதாய் மாறுதல்

இப்போது நாம் திருமறையிலிருந்து விளங்கிய முதல் செய்தியைப் பார்ப்போம். இப்பேரண்டம் ஒரு பெருவெடிப்பி லிருந்து தோன்றி படிப்படியான பரிணாம வளர்ச்சியிலிருந்து உருவாகப்பெற்றதாகும் என்பதை நாம் முன்னர் கண்டோம். இந்தக் கோட்பாட்டின்படி பார்க்கும்போது பெருவெடிப்புக்குப் பின்னரும் ஏராளமான வெடிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற தாகவும்அவற்றுள் ஒன்றாக விண்ணில் ஓரியன் எனும் பகுதியில் நடைபெற்ற ஒரு வெடிப்பு நிகழ்ச்சியிலிருந்தே நமது சூரியக் குடும்பம் பிறந்ததாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஓரியனிலிருந்து எறியப்பட்ட வாயுப் பொருட் கள் தசலட்சக்கணக்கான வருடங்கள் விண்ணில் சுழன்று கொண்டிருந்தபோது அதன் மையப் பகுதியிலிருந்து சூரியன் உருவாகியது. அதன் வெளிப்புறப்பகுதி காலப்போக்கில் குளிர்ச்சியான விண்வெளியில் குளிர்ந்து படிப்படியாக திரவமாகி பின்பு திடப்பொருளாகி சூரியனுக்குச் சுற்றிலும் காணப்படும் விண்ணகப் பொருட்களாக மாறின. அவ்வாறு மாறியவற்றுள் ஒன்றே நமது பூமியாகும். யுரேனிய காலக் கணிப்பைப் (Uranium Dating)பயன்படுத்தி பூமியின் வயதை அளந்தபோது நமது பூமி தோன்றி 5000 தசலட்சம் (500கோடி) வருடங்கள் ஆகிவிட்டதாகத் தெரிய வந்ததாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

(பார்க்க ஆஃப் டார் அன்ட் மென் பக்கம் : 85)*

பூகோளம் உருவம் பெற்ற தொன்மையான காலகட்டத் தில் காலக்சிகள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாகவும்நட்சத்திரங்கள்கூட பூமிக்கு மிக நெருக்கமானவைகளாகவும் இருந்தன. குறிப்பாக சூரியன் பூமிக்கு மிக நெருக்கமாக இருந்தமையால் வெப்பமும்,கதிரியக்கமும் (Heat and Radiations) பூமியின்மீது மிக வன்மையாக இருந்தன. நாம் அறிந்தவரை நமது பேரண்டத்தில் சுகவாச தலமாக இருந்து கொண்டிருக்கும் இந்த பூமி,அதன் இளம் வயதில் அமிதமான வெப்பத்தாலும்ஆற்றல் மிகு கதிரியக்கத்தாலும் பொசுக்கப் பட்டிருந்ததோடன்றி மிகக் குறுகிய பரப்பளவைக் கொண்டதும் மிக அடர்த்தி மிக்கதுமான விண்ணகத்தின் இறுக்கத்திற்குள் இருந்து வந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆகாய பூமிகளின் இளமைப் பருவத்தில் காணப்பட்ட இந்த நிலையைக்கூட அற்புதத் திருமறை மிகப் பொருத்த மான வார்த்தைகளில் ``வானங்களும் பூமியும் இணைந் திருந்தன (21:30) எனக் கூறியதை நாம் பாகம் 1ல் கண்டோம். பூமியின் இந்த நிலை மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்பது மட்டுமின்றி மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள உயிரினங்களாம் வைரபாக்டீரியாகடற்பாசி (Alga) போன்றவை கூட வாழ முடியாத நிலையே அப்போது இருந்து வந்தது. எனவே பூமியில் மனிதன் தோன்ற வேண்டுமாயின் அவனுடைய வாழ்க்கைச் சூழலுக்கும் வாழ்க்கைத் தேவை களுக்கும் மிக இன்றியமையாத உயிரினக் குழுக்கள் அவனுக்கு முன் தோன்றிபெருகுவதற் கும் ஏற்ற விதத்தில் பூமியின் சூழல் மாற்றப்பட வேண்டி இருந்தது என்பது மிகத் தெளிவாகும். எனவே கோடிக் கணக் கான வருடங்களில் பூமியிலும்அதைச் சூழ்ந்துள்ள விண் வெளியிலும் வேறு எந்தக்கோளிலோ அவைகளைச் சூழ்ந்துள்ள விண்வெளி களிலோ நடைபெறாத பற்பல மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டதன் விளைவாகவே இந்த பூமி ஒரு வசிப்பிடமாக மாற்றப்பட்டது என்பது ஐயத்திற்கிடமில்லாத உண்மையாகும்.

பூமியில் இப்போது மனிதனும்அவனுடைய சக உயிரினக் குழுக்களும் வாழ்ந்து கொண்டிருப்பது மேற் குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமே யாகும். சுருங்கக் கூறின்நமது பூமியின் தோற்றம் இதர கோள்களின் தோற்றம் நடைபெற்றதைப்போன்றே நடை பெற்ற போதிலும்அதன் பிறகு நமது பூமி மட்டும் திருக் குர்ஆன் கூறியது போன்று நாம் வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றப்பட்டது என்பது ஒரு மகத்தான உண்மையாகும்.

பெருவெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகிவரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றப்படுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதாக இருப்பினும் அறிவியல் பார்வையில் மிகமிகமிக கடினமான காரியமாகும். அவற்றுள் நாம் அறிந்தவரை முக்கியமான சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். இப்போது மனிதனை இறைவன் பூமியில் ஆதிபத்தியமுள்ளவனாக ஆக்கினான் எனக் கூறும் திருக்குர்ஆன் வசனத்தின் நிலை என்னவென்று பார்ப்போம்.

ஆதிபத்தியம் இறைவனின் தானம்

உயிரினம் (Living Body எனும் பேரினத்தில் (Genus) பூமி யில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 3தசலட்சம் (3 Million) சிற்றினங்களில் (Species) மனிதன் என்பது வெறும் ஒரு சிற்றினமாகும். ஆயினும் அந்த 30 லட்சம் சிற்றினங்களின் மீதுள்ள ஆதிபத்தியம் (Domination) மனிதனின் கைகளிலா கும். இந்த நிலை அவன் பெற்றதற்குக் காரணம் முதலாவதாக ஏனைய உயிரினங்கள் எதற்கும் புத்திமதி வழங்கப்படாமல் அவனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதாகும். இதன் விளைவாக ஏனைய உயிரினங்களை எவ்வாறு அடக்கி ஆளலாம் எனச் சிந்தித்து மனிதன் உபாயங்களைக் கண்டு பிடிப்பதைப்போல் ஏனைய சிற்றினங்களால் முடிவதில்லை. எனவே அவையாவும் மனிதனுக்கு அடங்கி வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும்படி அவை படைக்கப்பட்டன.

மனிதன் தன்னுடைய புத்திமதியின் துணைகொண்டு எவ்வளவு வலிமையான பிராணிகளாயினும் அவைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது பூண்டோடு கொன்றொடுக்கவோ ஆற்றலுள்ள உபகரணங்களைப் பெற்று இருக்கின்ற போதிலும்அவன் அவைகளை உருவாக்கிக்கொள்ளும் காலம்வரை அவை இல்லாமலே வாழ்ந்திருக்க வேண்டியிருந்தது. எனவே அவனை தொடக்கம் முதற்கொண்டே பூமியில் ஆதிபத்தியம் உள்ளவனாக இருக்கும்படி செய்வதற்காக அவனுடைய பண்டைகால கைக்கருவிகளை மீறித் தாக்கும் ஆற்றலுள்ள விலங்கினங்கள் தோன்றாமல் இருக்கும்படி செய்யப்பட்டது. அல்லது தோன்றியிருப்பின் மனிதன் தோன்றுவதற்கு முன் அவை வம்ச நாசம் செய்யப்பட்டது.

முன்னோரு காலத்தில் பூமியில் வாழ்ந்த ``டைனோசர் கள் (Dinosaurs) என்பவை இதற்கொரு எடுத்துக்காட்டாகும். அந்த இனத்தில் மிகவும் கொடூரமானதும் ஆபத்தானதுமான சில வகைகள் இருந்தன. அவைகள் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மெசோ சேயிக்யுகத் (Mesozoic Era) தில் ஜுராஸிக் காலகட்டத் (Jurassic Period) தில் உலகின் மீது ஆதிபத்தியம் செலுத்தியதாக அறிவியலாளர்கள் (பார்க்க : ஆஃப் தி டார் அன்ட் மென் பட்டியல்-11) கூறுகின்றனர். மனிதன் உலகில் தோற்றுவிக்கப்படும் காலகட்டத்தில் இந்த இனம் இங்கு வாழ்ந்து இருக்குமேயானால் நமது ஆதிகால மூதாதையர்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி இருப்பார்கள். நமது ஆதிகால மூதாதையர்கள் இந்த இனத்தை வெல்லும் கருவிகளைப் பெற்றிருக்காத காரணத்தால் அவைகளை எதிர்த்து வாழ்க்கையை நடத்தி இருக்க முடியாது. எனவே ஒரு பெரிய விண்கல் (Meteor) பூமியைத் தாக்கியதன் விளைவாக பூமியில் தோன்றிய இயற்கை மாற்றங்களால் அந்த இனங்கள் பூமியிலிருந்து பூண்டோடு அழிக்கப்பட்டன. இதன் வாயிலாக மனித இனம் தொடக்கம் முதற்கொண்டே பூமியின் மீது ஆதிபத்தியம் உள்ளவனாக வாழும் அரிய வாய்ப்பைப் பெற்றுக் கொண்டான்.

மனிதனுக்கு ஏற்றதாய் ஆவது எப்படி?

நாம் இப்போது பூமியைத் தவிர இப்பேரண்டத்தில் மனித வாழ்க்கைக்கு ஏற்ற கோள்கள் எதுவும் இல்லை எனத் திருக்குர்ஆனிலிருந்து கண்ட விளக்கம் தொடர்பாக நவீன அறிவியலின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். பேரண்டத் தில் கோடானு கோடிக்கணக்கான கோள்களும்துணைக் கோள்களும் இருப்பதாக அறிவியல் உலகால் அனுமானிக்க இயன்ற போதிலும்இதுவரை அவற்றுள் இரு நூற்றுக்கும் அதிகமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவைகளைப் பற்றிய விபரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால் நமது சூரியக் குடும்பத்திலுள்ள ஏனைய கோள்கள் மற்றும் துணைக்கோள்களைப் பற்றிப் போதுமான விபரங்கள் நமக்குத் தெரிய வந்துள்ளன. எனவே அவற்றுள் ஏதேனும் ஒன்று மனித வாழ்க்கைக்கு ஏற்புடையதா எனப் பார்ப்போம்.

ஒரு கோள் (அல்லது துணைக் கோள்) உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமாயின் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலாளர் ஷேப்லி அவர்கள் கூறுகிறார். அவையாவன :

1.அந்தக்கோள் நட்சத்திரத்திலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.

2. அக்கோள் சரியான வெப்பநிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப்பாதை (Orbit)அதற்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

3. அந்தக் கோளிற்கு விஷம் கலவாத ஒரு வளிமண்டலம் (Atmosphere) இருக்க வேண்டும்.

4. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுக்கள் (Sources) இருக்க வேண்டும்.

5. காற்றும்நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயணக் கலவையாக (Chemical Composition) இருக்க வேண்டும்.

6. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலைநிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.

(பார்க்க : ஆஃப் டார் அன்ட் மென்பக்கம் : 66-67)

மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர் கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வுகுறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால்மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக்கோள் பெற்றிருக்க வேண்டும். அவையாவன :

7. அந்த கோள் மனிதனின் உணவிற்கும் ஏனைய உப யோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங் களின் உற்பத்தியை (Production) பெற்றிருக்க வேண்டும்.

8. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை(Seasons) அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.

9. இராப்பகலை ஏற்ற விதத்தில் அமையும்படிச் செய்யும் அச்சில் சுழற்சியை (Axial Rotation)அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.

10. மனிதனுக்கு ஏற்ற விதத்திலான புவி ஈர்ப்பு விசையை அது பெற்றிருக்க வேண்டும்.

ஒரு நிலப்பரப்புஅது கோள்துணைக்கோள் அல்லது குறுங்கோள் (Minar Planet) எதுவாக இருப்பினும் அது மனித வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமாயின் குறைந்த பட்சம் மேற்கண்ட பத்து சிறப்பம்சங்களையாவது அந்த நிலப்பரப்பு பெற்றிருக்க வேண்டும். நாம் இப்போது நமது சூரியக் குடும்பத்திலுள்ள நிலப்பரப்புகளின் நிலை எப்படி உள்ளது எனப் பார்ப்போம்.

நமது சூரியக் குடும்பம் ஒன்பது பிரதான கோள்களையும் (புளூட்டோவையும் உள்ளடக்கிய கணக்கின்படி) ஆயிரக் கணக்கான குறுங்கோள்களையும் கொண்டிருந்த போதிலும்,வெள்ளியும்செவ்வாயுமே பூமிக்கு அருகில் இருக்கும் கோள் களாகும். எனவே பூமிக்கு அடுத்தபடியாக இவை சூரியனி லிருந்து கிட்டத்தட்ட சரியான தூரத்திற்கு அருகாமையில் இருக்கும் கோள்களாகும். அத்துடன் மனித வாழ்க்கைக்கு ஏற்ற கோளாகிய பூமியுடன் அவைகளுக்கு ஒப்பீட்டளவில் சில ஒற்றுமைகளும் இருக்கின்றன. அவ்விரு கோள்களில் வெள்ளி வழக்கமாக பூமியின் இரட்டை சகோதரி (Twin Sister) என அழைக்கப்படும் அளவிற்கு பூமியுடன் மிக நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

வெள்ளிக் கோளின் நிலை

வெள்ளி குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டலத்தை பெற்றிருப்பினும் அதில் பெரும் பகுதி கரி அமில வாயுவே ஆகும். வெள்ளியின் வளிமண்டலத்தில் உள்ள கரி அமில வாயுவின்(Carbon-di-Oxide) அளவு பூமியில் இருப்பதைப் போன்று 200 மடங்கு இருக்கக் கூடும் எனக் கூறுகிறார் அறிவியலாளர் ஹீத் அவர்கள். மேலும் சூரியனுக்கு நேருக்கு நேர் கீழ்பகுதியில் நிலவும் வெப்பம் தண்ணீரின் கொதி நிலைக்கு உயரக் கூடும் என்றும் அவர் கூறுகிறார். மேலும் காற்றில் கலந்துள்ள பெருவாரியான கரி அமில வாயுவின் காரணமாக வெள்ளியில் அமில மழை பெய்வதன் காரணமாக அதன் மேற்பரப்பு அரிக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது. வெள்ளியைப் பற்றிக் கூறப்படும் இத்தகவல்களே அது மனிதன் வாழ்வதற்கேற்ற கோளில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

செவ்வாய் வழங்கும் ஏமாற்றம்

நமது பூமிக்கருகில் இருக்கும் மற்றொரு கோள் செவ்வாய் (Mars) ஆகும். செவ்வாய் கோளுக்கும்பூமிக்கும் இடையில் இருக்கின்ற ஒரு சில சிறப்பான ஒற்றுமைகள் காரணமாக மனிதன் வாழ்வதற்கு செவ்வாய் ஒரு உகந்த கோளாகும் என சென்ற நூற்றாண்டில் கிட்டத்தட்ட கடைசி காலகட்டம்வரை அறிவியல் உலகம் நம்பிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் செவ்வாயைப் பற்றிக் கிடைத்துக் கொண்டிருக்கும் தகவல்கள் எல்லாம் நம் போன்ற மனிதர்கள் வாழ்வதற்கு செவ்வாய் உகந்த கோள் இல்லை என்பதாகும்.

செவ்வாயிலுள்ள பிராண வாயுவின் (Oxygen) அளவு ஒரு சதவீதத்தில் பத்தில் ஒன்றாகும். (பூமியில் இதனளவு 21 சதவீதம் என்பதைக் கருத்தில் கொள்க.) காற்றின் ஈரப்பதம் பூமியில் உள்ளதில் 5 சதவீதம் மட்டுமே ஆகும். (பார்க்க : நியூ ஹான்ட் புக் ஆஃப் ஹெவன்பக்கம்69) இங்கிலாந்து வானியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் (Jupiter Section) அலெக்ஸாண்டர்(Od Alexander) அவர்கள் செவ்வாயின் ஈர்ப்பு விசை பூமியினுடைய ஈர்ப்பு விசையில் 0.38பங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார். (பார்க்க : அட்ரானமி ஃபார் எவரி மென்பக்கம் :122,123) இந்தக் கோள் சூரியனிலிருந்து பூமியை விட மிகத் தொலைவில் இருப்பதால் செவ்வாய் பெறும் சூரிய வெப்பம் பூமி பெறும் சூரிய வெப்பத்தில் வெறும் 40 சதவீதம் மட்டுமேயாகும்.

செவ்வாய் கோளின் உற்பத்தியில் தண்ணீரைத் தவிர தாவர இனங்களோ அல்லது விலங்குகளோ அறவே இல்லை. நீரும் கூட திரவ நிலையில் இதுவரை செவ்வாயில் இருப்பதற் கான அறிகுறிகள் தென்படவில்லை.

ஒருசில வருடங்களுக்கு முன் அமெரிக்க நாட்டு துருவ ஆராய்ச்சிக் குழுவுக்கு துருவப் பகுதியிலிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு பாசிலைப் (Fossil) பற்றிய செய்திகள் அனைத்து செய்தி ஊடகங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு பெரிதாக பாராட்டப்பட்டுக்கொண்டிருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த பாசிலை ஆய்வுக்குட்படுத்தி அது செவ்வாயிலிருந்து விழுந்த விண்கல்லே என்றும் அந்தக் கல்லில் முன்னொரு காலத்தில் செவ்வாயில் சூட்சும உயிரிகள் (Microorgananisms) வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு அந்த பாசிலை பற்றி நடைபெற்ற விவாதங் களை நாம் புறக்கணித்து இப்போதும் அங்கு சூட்சும உயிரிகள் உண்டு என்றே வைத்துக்கொண்டாலும் மனித வாழ்வுக்கு சூட்சும உயிரிகள் மட்டும் போதுமானதன்று. எனவே செவ்வாய் கோளைப் பற்றி இதுவரை நாம் பெற்ற விபரங்களே அக்கோள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற கோள் இல்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கக் கூடியதாகும்.

சூரியனுக்கு தொலைவிலுள்ள கோள்களின் நிலை

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்களைப் பற்றி ஓரளவு விபரங்களை அறிந்து கொண்ட நாம்இப்போது சூரியனுக்கு தொலைவிலுள்ள கோள்களைப் பற்றி சில விபரங்களைக் காண்போம். புளூட்டோ (Pluto) எனும் 1930 மார்ச் மாதம் 13ம் தேதி `டோம் பர்க் (Tom Bargh) எனும் அறிவிய லாளரால் கண்டுபிடிக்கப்பட்ட கோளே சூரியனிலிருந்து மிக தொலைவில் இருப்பதாக அதுவரை அறியப்பட்டுள்ள கோளாகும். இது சூரியனிலிருந்து3,666 தச லட்சம் மைல் தொலைவில் இருப்பதால் மிகக் குறைந்த சூரிய வெப்பத் தையே இக்கோள் பெறுகிறது. புளூட்டோவை விட சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் நெப்டியூன்(Neptiune- - இது சூரியனிலிருந்து 2793 தசலட்சம் மைல் தொலைவில் இருக்கும் கோளாகும்) எனும் கோளின் வெப்பநிலை (-)330டிகு ஆகும். ஆகவே நெப்டியூனை விட தொலைவில் இருக்கும் புளூட்டோவின் வெப்பநிலை நெப்டியூனை விடக் குறைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. (பார்க்க: அட்ரானமி ஃபார் எவரி மென்பக்கம் 199) மனிதன் மட்டுமின்றி பூமியைச் சார்ந்த உயிரினங்களில் எந்த ஒன்றுமே (-)158டி கு வெப்பத்தை விடக் குறைவான வெப்ப நிலையில் வாழ முடியாது என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

இக்கோள் சுற்றுப் பாதையில் செல்லும் வேகம் வினாடிக்கு வெறும் மூன்று மைல்களாகும். (பூமியின் வேகம் வினாடிக்கு பதினெட்டரை மைல்களாகும்) எனவே புளூட்டோவின் ஒரு வருடம் என்பது நமது 248 வருடங் களுக்கு ஒப்பானதாகும். இதன் விளைவாக புளூட்டோவின் பருவ கால மாற்றம் பூமியின் பருவ கால மாற்றத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். (பார்க்க : அதே புத்தகம் பக்கம் 203) எனவே இக்கோள் எல்லா விதத்திலும் மனித வாழ்க்கைக்குத் தகுதியற்றது என்பதற்கு மேற்கண்ட காரணங்கள் போதுமானவையாகும்.

மெர்க்குரியைத் (புதன்) தவிர மற்ற அனைத்துக் கோள்களும் செவ்வாய்க்கும்,புளூட்டோவிற்கும் இடையில் அமைந்திருப்பதால் அவற்றுள் எதுவும் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் அமைந்திருக்கவில்லை. ஒரு நட்சத்திரத் திற்கும்அதன் கோள்களுக்கும் இடையிலுள்ள தூரத்தில் ஏற்படும் வேறுபாடு அந்தக் கோளின் இயற்பாட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகும். இதன் காரணமாக ஒரு கோள் உயிரினங்கள் வாழ்வதற்குத் தகுதி வாய்ந்ததா என்பதைத் தீர்மானிப்பதில் நட்சத்திரத்திலிருந்து அந்தக் கோள் அமைந்திருக்கும் தூரம் பிரதான பங்கேற்கிறது. செவ்வாய்க்கு அப்பாலுள்ள எந்த ஒரு கோளும் சூரியனி லிருந்து சரியான தூரத்தில் அமைந்திருக்கவில்லை எனும் ஒரே ஒரு காரணமே அக்கோள்கள் எதுவும் மனித வாழ்க்கைக்கு ஏற்ற கோள்களாக இல்லை எனத் தீர்மானிப்பதற்கு போதுமான காரணமாகும்.

புதன் கோளின் கதி!

நாம் இப்போது புதன் (Mercury) கோளின் நிலையைப் பார்ப்போம். இக்கோள் சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகும். சூரியனிலிருந்து இது 30 தசலட்சம் மைல் தொலை வில் இருக்கிறது. (பார்க்க : நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன்பக்கம் 63) இதன் காரணமாக அதன் மேற்பரப்பில் வெப்ப நிலை சில நேரங்களில் பூமியைவிட பத்து மடங்கு அதிகமாக உயர்ந்து விடுகிறது. அதன் பொருண்மை பூமியின் பொருண்மையில் 1/22 பங்கும் அதன் மேற்பரப்பின் ஈர்ப்பு விசை பூமியினுடையதில் 0.29 பங்குமாகும். மேலும் இந்தக் கோள் எப்போதும் சூரியனுக்கு ஒரேயொரு பக்கத்தையே காட்டிக் கொண்டிருப்பதால் இராப்பகல் அங்கு நிரந்தர மானதே அன்றி மாறுவதில்லை. (பார்க்க : அட்ரானமி ஃபார் எவரி மென்,பக்கம் 113-115) இக்கோள் மனித வாழ்க்கைக்கு ஏற்றதில்லை என்பதற்கு இவைகள் போதுமான காரணங்களாகும்.

குறுங்கோளின் பரிதாப நிலை

சூரியக் குடும்பத்தில் அறியப்பட்ட பெரிய கோள்கள் (புளூட்டோ சூரியக் குடும்பத்தின் பிரதான கோள் வரிசை யைச் சாராத கோள் என்பதற்கு சமீப காலத்தில் சில சான்றுகள் கிடைத்தாதாக கூறப்படுகிறது) மேற்கண்டவை களேயாகும். இவைகளைத் தவிர இக்குடும்பத்தில் ஆயிரக் கணக்கான சிறிய கோள்கள் (Minor Planets) இருக்கின்றன. இவைகளில் எதுவும் ஒரு காற்று மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக இல்லை. இவற்றுள் மிகப் பெரியது ``சிறிய (Ceres) என அழைக்கப் படும் கோளாகும். இதன் குறுக்களவு 485 மைல்களாகும். (பார்க்க : பக்கம் 112, அட்ரானமி ஃபார் எவரி மென்) அவை களின் பொருண்மை மிகக் குறைவாக இருப்பதால் அவைகளுக் கும் குறிப்பிடும்படியான ஈர்ப்பாற்றலும் இல்லை. மேலும் அவைகளில் எவ்விதமான உற்பத்திப் பொருட்களும் (நீர்தாவரம் மற்றும் விலங்கினங்கள்) இல்லை. எனவே இக் கோள்கள் எதுவும் மனித வாழ்க்கைக்கு ஏற்றவை இல்லை.

நிலவே! நீயுமா?

சூரியக் குடும்பத்திலுள்ள துணைக்கோள்களில் பூமி யின் துணைக்கோள் மட்டுமே சூரியனிலிருந்து கிட்டத்தட்ட சரியான தூரத்தில் அமைந்த துணைக் கோளாகும். இதன் விட்டம் 2160 மைல்களாகும். இதனுடைய மேற்பரப்பின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் 1/6 பங்காகும். ஆயினும் இந்த ஈர்ப்பு விசை ஒரு வளிமண்டலத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு வலுவற்றதாக இருப்பதால் நிலவில் காற்று அறவே கிடையாது. மேலும் அங்கு உற்பத்தி பொருட்களும் இல்லை. நிலாவின் இராப் பகல்களும் பூமியிலிருந்தும் பெரிதும் வேறுபடுகிறது.

நிலவின் அச்சில் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை என்பதால் நிலவின் ஒருநாள் அதன் மாதத்தைப் போன்று 28 நாட்களாகும். எனவே அங்கு 14 நாட்களுக்கு நீண்ட பகலும் 14நாட்களுக்கு நீண்ட இரவும் (பூமியின் கணக்குப்படி) இருந்து வருகிறது. இவ்வளவு நீண்ட இராப்பகல்களும் காற்று மண்டலம் இல்லாமையும் காரணமாக இது பூமிக்கு மிக அருகில் (ஏறத்தாழ பூமியிலிருந்து 4 லட்சம் கிலோ மீட்டர்) இருந்தும் கூட அதன் தட்ப வெப்ப நிலை பூமியிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. அங்கு பகல் நேரத்தின் உயர்ந்த வெப்ப நிலை 130டி ஊ ஆகவும் இரவு நேர வெப்ப நிலை மிகவும் குறைந்து சென்று இரவுப் பிரதேசத்தின் மையப்பகுதியின் வெப்ப நிலை (-)156டி ஊ அளவிற்கு தாழ்ந்து விடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

(பார்க்க : நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன்பக்கம் 93-97)

மேற்கூறப்பட்ட அனைத்து பாதகமான சூழல்களோடு நிலவில் மனிதனுக்குத் தேவையான எவ்வித உற்பத்திப் பொருட்களும் இல்லை என்பதையும் பார்க்கும்போது இந்த நிலப்பரப்பு பூமிக்கு மிக அருகில் இருந்தும் கூட புவி வாழ் உயிரினங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஏனையவற்றிலும் ஏமாற்றமே!

துணைக்கோளைப் பொருத்தவரை ஏனைய கோள் களுக்கும் துணைக்கோள்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும். ஆயினும் செவ்வாயின் துணைக்கோளைத் தவிர மற்ற துணைக்கோள்கள் யாவும் சூரியனிலிருந்து புவிவாழ் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான தொலைவில் அமைந்திருக்காமல் மிகவும் தொலைவில் அமைந்துள்ளன. எனவே அவைகளில் ஒன்றுகூட மனிதனுக்கு ஏற்ற வசிப்பிடமாக இருக்க இயலாது என்பது தெளிவு. ஆனால் செவ்வாயின் துணைக்கோள்கள் அமைந்திருக்கும் தூரம் ஓரளவு சாதகமாக இருப்பினும்அவை மிகவும் சிற்றுருவம் கொண்டவை. (ஒவ்வொன்றும் பத்து மைல் குறுக்களவு கொண்டவை) ஆகும். எனவே இவைகளும் மனிதனுக்கு வசிப்பிடமாக இருக்க தகுதியற்றவைகளாகும் என்பது தெளிவு.

நாம் இதுவரை கூறியதிலிருந்து சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர பெரும் கோள்கள்,குறுங்கோள்கள் மற்றும் துக்கோள்கள் என ஆயிரக்கணக்கான நிலப்பரப்புகள் இருந்த போதிலும்அவைகளில் ஒன்றுகூட மனிதன் வாழ்வ தற்கு ஏற்றதாக இல்லை என்பதை ஐயமறத் தெரிந்து கொண் டோம். (வேற்று நட்சத்திரக் கோள்கள் இப்போது கண்டு பிடிக்கப்பட்டிருப்பினும் அவைகளைப் பற்றிய கூடுதல் செய்திகள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை) எனவே இதுவரை நாம் தெரிந்து கொண்ட செய்திகள் யாவும்ஏனைய கோள்களைப் போலன்றி மனிதன் வாழ்வதற்கென்று அல்லாஹ்வால் வேண்டுமென்றே(Purposefully) உருவாக்கப் பட்ட கோளே பூமி எனத் திருக்குர்ஆன் கூறியதை நிரூபிக் கின்ற செய்திகளாகும்.

விண்ணகத்திலும் உயிரினங்கள்

இந்த அத்தியாயத்தில் நாம் இதுவரை குறிப்பிட்ட விபரங்களைப் பார்க்கும்போது பேரண்டத்தில் பூமியைத் தவிர வேறெங்கும் உயிரினங்கள் வாழ்வதில்லையா எனும் கேள்வி எழுவது இயல்பு. இந்த கேள்விக்கும் அற்புதத் திருமறை அழகாக பதிலளிக்கிறது. அந்த பதில் வருமாறு :

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் அவ் விரண்டிலும் உயிரினங்களை பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவை களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்.

(42:29)

மேற்கண்ட திருமறை வசனத்தின் வாயிலாக பூமியில் மட்டுமின்றி பேரண்டத்தில் பற்பல இடங்களிலும் அல்லாஹ் உயிரினங்களைப் பரவச் செய்துள்ளான் என்பதை ஐயத்திற் கிடமின்றி திருக்குர்ஆன் கூறிக்கொண்டிருப்பதைப் பார்க்கி றோம். இது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என நிரூபிப்பதற்காக காத்திருக்கும் எதிர்கால அறிவியல் கண்டு பிடிப்பைக் சார்ந்ததாகும். துருவப் பிரதேச ஆய்வின்போது செவ்வாயிலிருந்து பூமியில் விழுந்து பனியில் புதைந்து கிடந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையாக இருப்பின் மேலே குறிப்பிட்ட திருமறை வசனத்தை (42:29) முதலாவ தாக நிரூபித்த பெருமை அந்த பாசிலையும்அதற்காக உழைத்த விஞ்ஞானிகளையும் (அவர்கள் அதை விரும்பினாலும்விரும்பாவிட்டாலும்) சாரும்.

இந்த பாசிலைப் பற்றிய ஆய்வு முன்னொரு காலத்தில் செவ்வாயில் சூட்சும உயிரினங்கள்(Micro-Organism) வாழ்ந்தன என்பதையே கூறுகிறது. ஆனால் எதிர்காலத்தில் பேரண்டத்தின் தொலைதூர பிரதேசங்களில் முன்னேறிய உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டாலும் பூமி தொடர்பாக நாம் ஆய்வு செய்த வசனங் களுக்கு அது எதிரானதல்ல. ஏனெனில் புவிவாழ் மனிதனுக்கு அவனுடைய உயிரியல் மற்றும் இயற்பியல் குணங்களுக்கு ஏற்ற வசிப்பிடம் பேரண்டத்தில் வேறு எதுவும் இல்லை என்பதே நாம் கண்ட விளக்கமாகும். எனவே புவிவாழ் மனிதனிலிருந்து வேறுபட்ட முன்னேறிய உயிரினங் கள் பேரண்டத்தில் வேறு எங்கேனும் வாழ்வது நாம் எடுத்துக் கொண்ட விளக்கத்திற்கு எதிரானதல்ல. மேலும் அவ்வாறான நிகழ்ச்சிகள் திருக்குர்ஆனின் அறிவியலை (42:29) வலுவாக நிரூபிக்கும் சான்றாகவே அமையும்.

சான்றாக நாம் `கரிமம் அடிப்படையாகக் கொண்ட உயிரினங்களாக (Cabom Based Organism)படைக்கப்பட் டுள்ளோம். இதற்கு பதிலாக பேரண்டத்தின் மற்றொரு கோளில் சிலிக்கன்(Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அவை போன்ற வேறு ஏதேனும் தனிமத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கோள்களில் புவிவாழ் மனிதர்களாகிய நாம் ஒருபோதும் வாழ முடியாது. நமக்குரிய வசிப்பிடம் இந்த பேரண்டத்தில் இந்த பூமி மட்டுமே ஆகும் என்பதே பூமி தொடர்பான வசனங்களுக்கு நாம் வந்து சேர்ந்த விளக்கமே அன்றி பேரண்டத்தில் வேறெங்கும் உயிரினங்கள் இல்லை என்பதில்லை.

சுருங்கக்கூறின் ஏனைய கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் எதிலும் செய்யப்படாத மனிதனின் வாழ்க்கைத் தேவைகள் பூமியில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனப் பொருளுணர்ந்த திருக்குர்ஆன் வசனங்களின் நிரூபனங் களே மேற்கண்ட அறிவியல் உண்மைகளாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறை ஞானத்தின் வெளிப்பாடே என்பதை ஐயமின்றித் தெரிந்து கொள்ளலாம்.

தப்பமுடியாத வானிலிருந்து தப்பிச் சென்ற ஈதர்

பேரண்டத்தில் இருக்கக்கூடிய எண்ணிறைந்த கோள் களுக்கிடையே நாம் வசித்துக்கொண்டிருக்கும் பூகோளம் மனிதர்கள் வாழ்வதற்கேற்ற விதத்தில் தனிச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் தகவலை திருக்குர்ஆனில் நாம் பார்த்தோம். நவீன வானியல் கண்டுபிடிப்புகள் அதை நிரூபித்துக்கொண்டு வருவதையும் நாம் பார்த்தோம். இதைத் தொடர்ந்து பூமியைச் சூழ்ந்துள்ள வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் மிக முக்கியமான ஒரு செய்தியைத் தருகிறது. அது வருமாறு :

``அல்லாஹ்வே உங்களுக்கு இந்த பூமியை வசிப்பிடமாக வும்வானத்தை கூரையாகவும் அமைத்தான்.

(40:64)

இந்த வசனத்தில் பூமியைச் சூழ்ந்திருக்கும் ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக அமைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியைத் திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குர்ஆனுடைய இந்தக் கூற்று அண்மைகாலம் வரையிலுமே விமர்சிக்கப்பட்டு வந்துள்ள செய்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகாயம் என்பது என்ன பொருள்?

பூமிக்கு மேலே நீலநிற பட்டு போன்று வளைந்து காணப்படும் விண்ணின் தோற்றம் ஒரு திடப்பொருள் என்றே பண்டைகால மக்கள் எண்ணிக்கொண்டனர். அந்த திடப்பொருளே வானம் என்றும் அதன்மீது ஒளிரும் சூரியசந்திரநட்சத்திரங்கள் எல்லாம் அவர்களின் தெய்வங்களே என்ற நம்பிக்கையும் அவர்களில் பலரிடம் இருந்து வந்தது. காலம் செல்லச்செல்ல மக்களின் அறிவியல் பார்வை படிப்படியாக வளரத் துவங்கி அரிடாட்டில்,டாலமிகோபர் நிக்க போன்றவர்களையெல்லாம் தாண்டி நியூட்டன் யுகத்தை அடைந்தபோது ஆகாயத்தைப் பற்றிய பழைய தப்பெண்ணம் மங்கிப் போய் புதிய எண்ணம் தோன்றத் துவங்கியது.

ஆகாயம் என்பது ஒன்றுமே இல்லை. விண்ணகப் பொருட்களை எதுவும் தாங்கி நிறுத்தவில்லை. அவை சூன்யத்தில்ஈர்ப்பு விசையில் மிதக்கின்றன. விண்ணகப் பொருட்களுக்கு இடையிலாயினும் அதற்கு அப்பாலாயினும் எல்லையற்ற சூன்ய பெருவெளியே நிலவுவதாக ஆகாயத் தைப் பற்றிய புதிய எண்ணம் தலைதூக்க ஆரம்பித்தது.

ஆகாயத்தைப் பற்றிய இப்புதிய சிந்தனையும் திருக் குர்ஆனுக்கு எதிரானது ஆகும். ஆகாயம் எனும் பொருள் உண்மையிலேயே படைக்கப்பட்டிருப்பதாக அதன் ஏராளமான வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பொருள் படைக்கப்பட்டதாக இருந்தால் அதற்கு ஒரு வடிவமும்ஒரு பரிமாணாமும் இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் ஆகாயம் என்பது எல்லையற்ற சூன்யப்பெருவெளி எனக் கருதினால் அதற்கு எவ்வித வடிவமோ அல்லது பரிமாணமோ (Shape or Dimension) இருக்க முடியாது. நியூட்டனுக்கு பிறகு தோன்றிய வானத்தைப் பற்றிய இந்தப் பொதுவான கருத்து திருக்குர்ஆனுக்கு எதிரானது என்பதை அறியலாம். திருக்குர்ஆன் மற்றொரு வசனத்தில் இவ்வாறு கூறுகிறது :

``மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால்கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்

(55:33)

மேற்கண்ட வசனம் வானம்பூமி ஆகியவைகளின் எல்லைகளைக் குறித்து மிகத் தெளிவாகப் பேசுகிறது. எனவே திருக்குர்ஆனின் அறிவியலைப் பொருத்தவரை அது ஏழாம் நூற்றாண்டில் வழங்கப்பட்டதாக இருந்த போதிலும்வானம் என்பது எல்லையில்லாப் பெருவெளியில்லை. அதற்கு மாறாக வானத்திற்கும் எல்லை உண்டு என்பதே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு. இதிலிருந்து நியூட்ட னுக்குப் பிறகு தோன்றிய வானம் பற்றிய பொதுவான கருத்து திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டவர்களால் ஒப்புக்கொள்ள இயலாததாகும் என்பதை அறியலாம். இந்தப் பின்னணியில் திருமறையின் இந்த அறிவியல் இறை மறுப்பாளர்களால் கேலி செய்யப்பட்டே வந்தது.

வானம் எனும் ஈதர்!

வானம் என்ற சொல் பூமிக்கு மேல் குடை பிடித்தார் போன்று தென்படும் வெளிர்நீல முகட்டை குறிப்பதாகவே பண்டைகாலம் தொட்டு மக்கள் எண்ணி வந்தனர். வானம் என்ற சொல்லின் சரியான பொருள் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. பழங்கால நிலை அப்படியென்றால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரையிலும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் கூட வானம் என்பதன் சரியான கருத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர் எனில்இந்த வானம் பற்றிய `மன உரு (Concept)எவ்வளவு சிக்கலானது என்பதை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

வானம் என்றால் என்ன என்பதைப் பற்றி இப்போதும் கூட நம்மால் பரிபூரணமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்றாலும்அப்படி ஒன்று நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது என்பதையும் அதன் கட்டுமானப் பொருட்களில் சிலவற்றையும் இன்று நமக்குத் தெரியும். அந்த அறிவின் தொடக்கம் நியூட்டனுடைய பணியில் இருந்த போதிலும்அதை அவர்காலத்திலும் தொடர்ந்துள்ள ஒன்றரை நூற்றாண்டு வரையிலும் யாராலும் புரிந்துகொள்ள இயலவில்லை. எனவே ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த அறிவியலாளர்களின் கருத்தும்கூட வானம் என்பது சூன்யம் என்பதாகவே இருந்து வந்தது.

வானம் பற்றிய கருத்தோட்டம் ஒருபக்கம் இவ்வாறு போய்க்கொண்டிருந்தபோது `ஒளியின் ஒரு குறிப்பிட்ட இயற்பியல் பண்பு அறிவியலார்களைப் புதிர் போடச் செய்து கொண்டிருந்தது. பூமிக்கு மேல் காற்று மண்டலம் வெறும் 500 கிலோமீட்டருக்குட்பட்டதே என்றும் அதற்கப்பால் காற்றில்லாத வெறும் வானமே என்பதும் தெரிந்ததே. எனவே வானம் என்பது சுத்த சூன்யமாக (perfect vacuum) இருந்தால் சூரியனிலிருந்தும் அதற்கும் பல்லாயிரக் கணக்கான ஒளியாண்டுகளுக்கு அப்பாலுள்ள பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களிலிருந்தும் அவைகளின் ஒளி பூமிக்கு வருவது எவ்வாறுஒளி பயணிப்பதற்கு ஊடகம் எதுவும் இல்லை யென்றால் ஒளியால் எப்படி பயணம் செய்ய முடிகிறது?

இந்தக் கோள்வி ஒருபக்கம் தொல்லையைத் தந்து கொண்டிருந்தபோதே மற்றொரு கேள்வியும் அதில் கூட்டு சேர்ந்து கொண்டது. விண்ணகப் பொருட்களெல்லாம் ஓயாமல் ஓட்டம் நடத்துவதாக நியூட்டனுக்குப் பின்பு கண்டறிந்த காரணத்தால் ஒளியின் வேகத்தை எவ்வாறு நிர்ணயிப்பதுஎன்பதே அந்தக் கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் ஹாலந்து (Holland) தேசத்தின் புகழ் பெற்ற வானியல் மற்றும் கணித மேதையுமான `கிரிஸ்டியன் ஹைஜன், Christian Hygens-இவரே பிற்காலத்தில் ஒளியின் அலைவுக் கோட்பாட்டின் (Wave Theory of Light) தந்தை எனச் சிறப்பிக்கப்பட்டார். என்பவர் மேற்கண்ட சிக்கல்களைச் சமாளிப்பதற்கு வானமெங்கும் நிறைந்திருக் கும் `ஈதர் (Ether)எனும் விசித்திரமான பொருளை அறிமுகப் படுத்தினார். இதைப் பற்றி ஹாக்கிங் தனது நூலில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

``... ஆனால் நியூட்டனுடைய கோட்பாடு சார்பற்ற ஓய்வு (Absolute Rest) எனும் கருத்தை விரட்டியடித்தது. இதன் காரணமாக ஒளியானது ஒரு மாறாத நிலையான வேகத்தில் போவதாகக் கருதினால் அந்த வேகம் எதனைச் சார்ந்து அளக்கப்பட வேண்டும் என்பதும் கூறப்பட வேண்டும். ஆகவே இதற்காக எல்லா இடத்திலும் காலியாக உள்ள வெறும் வானத்தில் கூட (Empty Space)`ஈதர் எனும் ஒரு பொருள் இருப்பதாகக் கருதப்பட்டது. ஒலி அலைகள் காற்றில் செல்வதைப்போன்று ஒளிஅலைகள் ஈதரில் செல்லும் என்பதால் அவைகளின் வேகம் ஈதரைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

(பார்க்க : பக்கம் 20)

வேகங்களின் சார்பியல் பண்பு

மேல் குறிப்பிடப்பட்ட ஹாக்கிங் அவர்களின் எடுத்துக் காட்டில் கூறப்பட்டிருக்கும் ``வேகம் எதனைச் சார்ந்து அளக்கப்பட வேண்டும் எனும் சொற்றொடர்கள் அறிவியல் புத்தகங்களை வாசிக்கும் வழக்கமில்லாதவர்களுக்கு விளங்கிக் கொள்வது சற்று கடினமாக இருக்கும். இதை சிறு உதாரணத்துடன் விளக்குவோம்.

ஒரு தொடர் வண்டி (Train) நிமிடத்திற்கு 700 மீட்டர் வேகத்தில் செல்வதாகக்கொள்வோம். அதன் மீது ஒருவர் நிதானமாக நிமிடத்திற்கு 10 மீட்டர் வேகத்தில் நடப்பதாகக் கொள்வோம். இந்த நபர் என்ன வேகத்தில் நடக்கிறார் என உங்களிடம் கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்உங்களால் வெறுமனே எந்த பதிலையும் கூற முடியாது. ஏனெனில் அவருக்கு இப்போது இருவிதமான வேகங்கள் உண்டு. ஒன்று பூமியைச் சார்ந்து அவருடைய வேகம் நிமிடத்திற்கு 710 மீட்டர்களாகவும் தொடர் வண்டியைச் சார்ந்து அவருடைய வேகம் நிமிடத்திற்கு 10 மீட்டராகவும் இருக்கிறது. எனவே இரயில் வண்டியின் மீது நடப்பவரின் வேகத்தைப் பற்றி வினவப்பட்டால் எதனைச் சார்ந்து என்பதையும் கூறப்பட வேண்டும். அவ்வாறன்றி வேகத்தைக் கூற முடியாது. இதைப்போன்று ஒளியானதுஅதை உமிழும் பொருட்களும் அதைப் பெறும் பொருட்களும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் காரணத்தால் அதன் வேகத்தைக் கூறும் போது `எதனைச் சார்ந்து என்பதும் கூறப்பட வேண்டும் என்பதே மேற்கண்ட ஹாக்கிங் அவர்களுடைய மேற்கோளின் விளக்கமாகும்.

ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் என்று கூறும்போது அது ஒளியை உமிழும் அல்லது பெறும் பொருட்களைக் குறித்தன்றி அது பயணம் செய்யும் ஊடக மாம்(Medium) ஈதரைச் சார்ந்தே அந்த வேகத்தில் செல்கிறது என்பதே அதன் பொருளாகும். சுருங்கக்கூறின் ஆகாயம் என்பது அர்த்தமற்ற வார்த்தையோ அல்லது சுத்த சூன்யமோ இல்லை. மாறாக அது ஈதர் எனும் மூலப்பொருளால் உருவாக்கப்பட்டிருக்கும் நிஜப் பொருளாகும் என முடிவு செய்யப்பட்டது.

ஈதரை மறுக்கும் சத்தியத் திருமறை

ஆகாயம் என்பது உண்மையிலேயே ஒரு நிஜப்பொரு ளாகும் எனக் கூறிய திருக்குர்னின் அறிவியலை ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுவரை கற்றவர்களும் மறுத்து வந்த நிலையில் அவர்களின் மறுப்புக்கு ஈதரின் வருகை அக்கால கட்டத்தில் ஒரு பலத்த அடியாக அமைந்தது. ஆயினும் பொய்யின் நிழலைக்கூட தன்னிடம் அண்டவிடாத தூய குர்ஆன்தன்னை நிரூபிக்க வந்த ஈதரைத் தன்னை அண்ட விடாமல் விரட்டி அடித்தது. அந்த அரிய காட்சி இதோ:

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம். நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.

(51:47)

இந்த வசனம் மிகத் தெளிவாக வானம் என்பது ஆற்றலைக்கொண்டே படைக்கப்பட்டது என வெட்டொன்று துண்டிரண்டாக கூறிவிட்டது. இதன் வாயிலாக வானம் என்பது ஒரு அர்த்தமற்ற வெற்று வார்த்தையும் இல்லை. அது படைக்கப்பட்டிருக்கும் மூலப் பொருள்(Raw Material) ஈதரும் இல்லை. மாறாக வானம் ஆற்றல் எனும் மூலப்பொருளால் படைக்கப்பட்டிருக்கும் நிஜப்பொருள் ஆகும் என திருக் குர்ஆன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது!

வானத்தின் இயற்பியல் குணங்களை நமது விஞ்ஞானி கள் இதுவரை முழுமையாகப் புரிந்து கொள்ளாத போதிலும்அப்படி ஒன்று உண்டு என்பதும்அது ஆற்றலின் வடிவமா கவே இருக்கிறது என்பதும்மிக ஆழமானதும்ஐன்டீனின் வருகைக்குப் பிறகு மட்டுமே தெரிய வந்ததுமாகிய அரிய அறிவியலாகும். ஆனால் ஆகாயம் என்பது வெளிர் நீல வண்ணத்தில் பூமிக்கு மேல் குடை விரித்தாற்போன்று காணப்படும் ஒரு திடமான கவசமாகும் என பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருந்தவர்களின் தொன்மையான ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் தன் பெயரைக்கூட தம் தாய்மொழி யிலும் எழுதத் தெரியாத ஒருவரின் வாயிலிருந்து (அறிவி லிருந்தன்று) ஆகாயம் என்பது ஒரு திடப் பொருளே இல்லை. அது ஆற்றலின் வடிவமாகும் எனும் அரிய அறிவியல் உண்மையை வெளிப்படச் செய்த வியக்கத்தகு செய்தியையே மேற்கண்ட வசனத்தில் நம் கண்ணெதிரே நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

இதுவரை நாம் இந்த அத்தியாயத்தில் மூன்று திருக் குர்ஆன் வசனங்களை ஆய்விற்கெடுத்துக் கொண்டோம். அவற்றுள் (40:64, 55:33, 51:47) குடிகொண்டிருக்கும் அறிவியல் உண்மைகள் மிக அரிதானவைகளும்ஆழமான வைகளுமாகும். அவற்றுள் முக்கியமானவை வருமாறு :

1. ஆகாயம் என்பது வெற்று வார்த்தையன்றி அப்படி ஒரு பொருள் உண்மையிலேயே அல்லாஹ்வால் படைக்கப் பட்டுள்ளது. (இந்தத் தகவலை திருக்குர்ஆன் பற்பல இடங்களில் இவ்வாறு திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறுகிறது:

``வானங்களையும்பூமியையும் அவற்றுக்கு இடைப் பட்டவற்றையும் உண்மையைக் கொண்டன்றி அல்லாஹ் படைக்கவில்லை....

(30:8)

2. அந்த ஆகாயம் நமக்குக் கூரையாக இருக்கிறது.

3. அந்த ஆகாயம் ஒரு திடப் பொருள் இல்லை.

4. அந்த ஆகாயம் ஈதர் இல்லை.

5. அது எல்லையற்ற பெருவெளியில்லை. அதற்கு எல்லை உண்டு.

6. அந்த எல்லை விரிவடைகிறது.

7. அதன் எல்லையைத் தாண்டுவதற்கு பெரும் ஆற்றல் தேவை. அந்த ஆற்றல் இல்லாமல் நம்மால் அதன் எல்லை யைத் தாண்ட இயலாது.

8. அந்த ஆற்றலைப் பெற நம்மால் இயலுமானால் (இதில் ஒரு சவாலின் தொனி கலந்திருப்பதை கவனத்தில் கொள்க!) நாம் இந்த வான் உலகையும் தாண்டி செல்லலாம்.

இங்கு குறிப்பிடப்பட்ட அறிவியல் உண்மைகளில் வரிசை எண் இரண்டில் குறிப்பிட்ட செய்தி 18ம் நூற்றாண் டுக்குப் பின்னரும் ஐன்டீனுக்கு முன்னரும் கண்டுபிடிக்கப் பட்ட அறிவியல் தகவலாகும். மற்றவை யாவும் ஐன்டீ னுடைய காலத்திலும் அதற்குப் பின்னரும் கண்டுபிடிக்கப் பட்டவையாகும். ஆனால் உலகில் தோன்றிய அறிவியல் மேதைகளில் மிகவும் மதி நுட்பம் வாய்ந்த அதே ஐன்டீன் அவர்களே அறிவியல் வளர்ச்சி குன்றிய ஏழாம் நூற்றாண்டில் தோன்றி இருந்தால் திருக்குர்ஆன் கூறியிருக்கும் மேற்கண்ட அறிவியல் உண்மைகளில் எந்த ஒன்றையாவது அவரால் கண்டுபிடித்திருக்க முடியுமா என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்த்து அதன் பிறகு திருக்குர்ஆனில் காணப்படும் பல்வேறு அறிவுகளின் தோற்றுவாய் (Source) எதுவாக இருக்கும் என மதிப்பிடுவீர்களாக.

ஈதரைத் தேடும் விஞ்ஞானிகள்

அறிவியலாளர் ஹைஜன் அவர்கள் வானத்தின் கட்டு மானப் பொருளாக ஈதரை அறிமுகப்படுத்திய விபரத்தையும் திருக்குர்ஆன் அதை பற்பல நூற்றண்டுகளுக்கு முன்னி ருந்தே மறுத்துக்கொண்டிருக்கும் செய்தியையும் நாம் கண்டோம். இந்த நிலையில் அவ்விரு கருத்துகளைப் பற்றிய தற்போதைய அறிவியல் உலகின் நிலை என்ன எனும் வினா எழுகிறது. ஈதரைப் பற்றிய கருத்துரு குறுகிய ஆயுளி லேயே மடிந்து விட்டது என்பதே அதற்குரிய பதிலாகும். `ஒலி மற்றும் `ஒளி என்பவற்றிற்கிடையே சில இயற்பியல் குணங் களில் ஒருசில ஒற்றுமைகள் உள்ளதால் ஒலியானது காற்றில் எவ்வாறு பரவுகிறதோ அதைப்போன்று ஒளியானது ஈதரில் பரவுகிறது என்றெண்ணிக்கொண்டிருந்த அறிவியலாளர் களை வியப்பிற்குள்ளாகும் மற்றொரு நிகழ்ச்சி அரங்கேறியது.

இரயில் வண்டிஇரயில் நிலையத்தின் நடைதளத்தின் (Railway Platform) வழியாகச் செல்லும்போது குறைந்த வேகத்தில் ஓடிய போதும் அதனால் இரயில் வண்டியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது நடைதளத்தில் உள்ளவர்களால் உணர முடிகிறது. வினாடிக்கு 10 மீட்டரை விடக் குறைகுறைவான வேகத்தில் இரயில் வண்டி ஓடிய போதும் காற்று மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கும்போது வினாடிக்கு30,000 மீட்டர் வேகத்தில் ஓடும் பூமி ஈதரில் பாதிப்பை உருவாக்க வேண்டும் என நியாய மாகக் கருதப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட நுட்பமான சோதனைகளின்போது சோதனைக் கருவிகளில் நகர்வினால் தோன்றிய பாதிப்பைத் தவிர நகர்வின் பொருட்டு ஈதர் எனும் கற்பனை பொருளில் எந்த பாதிப்பும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.இச்சோதனைகள் மைக்கல்சன் மற்றும் மோர்லி (Michelson and Morley) என்பவர்களால் முதலாவதாகத் தொடங்கப்பட்டது. பிறகு அதுவரை பிரபலமாகாதிருந்த ஐன்டீன் அவர்களும் இது தொடர்பான ஆய்வில் இறங்கினார். இதைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

``மைக்கல்சன் மற்றும் மோர்லி என்பவர்களின் சோதனை களின்போது ஈதரில் நகரும் பொருட்கள் சுருங்குதல் மற்றும் கடிகாரத்தில் நேரம் தாமதமாகுதல் போன்றவைகளை விளக்குவதற்கு 1887க்கும் 1905க்கும் இடைப்பட்ட காலத் தில் ஹாலந்து நாட்டின் ஹென்ரிக் லாரன்ஸ் (Hendrik Lorents) அவர்களின் மிகவும் கவனத்தைக் கவர்ந்த விளக்கம் உட்பட பற்பல முயற்சிகள் செய்யப்பட்டன. இருப்பினும் அதுவரை அறியப்படாதவராக இருந்த விச்சர்லாந்து பேடன்ட் அலுவலக (Swiss Patent Office) எழுத்தாளராக இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905ல் தன்னுடைய புகழ்பெற்ற தாளின் வாயிலாக ``ஒருவர் காலம் சார்பற்றது எனும் கருத்தைக் கைவிடத் தயாராக இருந்தால் ஈதரைப் பற்றிய கருத்தைக் கொண்டிருப்பது முற்றிலும் தேவையற்றதாகும் எனச் சுட்டிக் காட்டினார்.

(பார்க்க : பக்கம் 20)

ஈதரின் மீது நடந்த குண்டுவெடிப்பு

சார்பு நிலையற்ற காலம் (Absolute Time) என்பது எவ்வாறு அறிவியல் அறியாமையாக இருந்ததோ அவ்வாறே ஈதரைப் பற்றிய அனுமானமும் அறிவியல் அறியாமையாகும் என்பது ஐன்டீன் அவர்களின் கூற்றாகும். காலம் சார்பானது எனும் உண்மையை விளங்கிக் கொண்டால் அந்த அறிவியல் அறிவு ஒளியைக் கடத்துவதற்கு ஒரு யாந்திரீக ஊடகம்(Mechanical Medium) தேவையில்லை என்பதையும் விளங்கச் செய்யும் என்பது அவரது கூற்றின் பொருளாகும். ஈதரைப் போன்று ஒளியைக் கடத்துவதற்கு ஒரு யாந்திரீக ஊடகம் தேவையில்லை எனில் வேறு எந்த இடத்தில் அது பரவுகிறது எனும் கேள்வி எழுவது இயல்பே. ஐன்டீன் அவர்கள் இந்தப் புதிரை கீழ்கண்டவாறு விடுவித்தார்.

ஒளி என்பது ஆற்றலின் வடிவமாகும். ஆற்றல் பொருண்மையைக் கொண்டதாகும். எனவே ஒளி பொருண்மையைக் (Mass) கொண்டதாக இருப்பதால் ஈர்ப் பாற்றலின் விதிகளுக்கு இணங்க பொருண்மை உள்ளவை களை ஈர்ப்பாற்றல் ஈர்க்கவே செய்யும். பேரண்டமெங்கும் ஈர்ப்பாற்றல் உள்ளது. எனவே ஒளியானது வேறொரு ஊடகத் தின் துணை இன்றி பேரண்டமெங்கும் ஈர்ப்பாற்றலின் கவர்ச்சியால் பரவிச் செல்கிறது என ஐன்டீன் விளக்க மளித்தார். ஐன்டீன் அவர்களின் இந்த விளக்கத்தை மிகச் சரியான அறிவியல் கண்டுபிடிப்பாக ஏனைய அறிவிய லாளர்கள் விளங்கிக் கொண்டபோது ஈதரின் மூலமான ஒளியின் யாந்திரீக கடத்தல் (Mechanical Transmission of Light) எனும் அனுமானத்தின் மீது ஐன்ஸ்டீன் அவர்கள் நடத்திய ஒரு `குண்டுவெடிப்பு - Bomb Shell - என அறிவியல் உலகம் அவரது தாளைப் புகழ்ந்துரைத்தது.

சுருங்கக்கூறின்திருக்குர்ஆனுடன் முரண்பட்டு நின்ற ஈதர் எனும் அறிவியல் அனுமானம் வழக்கம்போல் தகர்ந்து போய் திருக்குர்ஆன் கூறியவாறு ஆற்றலே (ஈர்ப்பாற்றல்) ஆகாயங்களின் கட்டுமானப் பொருளாக ஏற்றுக் கொள்ளப் பட்டது! பொய்யையும்,மெய்யையும் பிரித்தறிவிக்கும் திருக்குர்ஆனின் இறை ஞானத்தை எவ்வளவு அற்புதமாக ஈதரின் மறைவும்ஈர்ப்பாற்றலின் அரங்கேற்றமும் சான்றளித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தீர் களல்லவா! இதைப் போன்றதும் இதிலிருந்து வேறு பட்டதுமாகிய ஏராளமான சான்றுகளை முன்னிருத்தியே இந்த மாமறை தன்னை இறைவனின் வேதம் என நிரூபனம் செய்கிறது. தன்னை நிரூபிப்பதற்கு சான்றளிப்பதற்கென்றே வந்தாலும் அது பொய்யாக இருந்தால் அந்த சான்றுகளை ஏற்காமல் விரட்டியடிக்கும் அதிமகத்தான,ஈடுஇணையற்ற அதி அற்புத வேதம்! எந்த திசையிலிருந்து எவ்விதத் தவறு களையும் தன்னை அண்டவிடாமல் வலிமையுடன் தற்காப்பு செய்யப்பட்ட நேர்மையான இறைவேதம்! இந்தச் சான்றுக ளெல்லாம் தங்களிடம் வந்த பின்னரும் அதைப் புறக்கணித் துச் செல்வோரை கடுமையாக எச்சரிக்கும் வேதம்! அதன் எச்சரிக்கைகளில் ஒன்று வருமாறு:

நமது வசனங்களை வளைப்போரும் இந்த அறிவுரை தங்களிடம் வந்தபோது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்து விட முடியாது. நரகில் வீசப்படுபவன் சிறந்தவனாதீர்ப்பு நாளில் அச்சமற்றவனாக வருபவனாநினைத்ததைச் செய்யுங் கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன். இது மிகைக்கக் கூடிய வேதம்! இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

(41:40-42)

திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் தகவல்கள் யாவும் பொய்க்கலப்பற்ற தூய்மையான உண்மைகளாகும். பொய் களை அது தன்னிடம் நெருங்க விடுவதில்லை. பசுத்தோல் போர்த்திய புலியாக ஈதர் திருக்குர்ஆனை நெருங்கியபோது ஐன்டீன் பேனா அதைச் சுட்டுவீழ்த்தியதும் (அவர் அதை நோக்கமாகக் கொள்ளவில்லையாயினும்) மேற்கண்ட திருக் குர்ஆன் வசனத்திற்கு சான்றளிப்பதாகும்.

ஆற்றல் இன்றி பயணம் இல்லை

இப்போது திருக்குர்ஆனின் அறிவியலில் புதைந்து கிடந்ததும்ஐன்டீனுடைய சார்பியல் கோட்பாட்டால் வெளிப்பட்டதுமாகிய மற்றொரு அறிவியல் உண்மையின் பால் கவனம் செலுத்துவோம். திருக்குர்ஆன் மனிதன் மற்றும் ஜின் சமூகத்திற்குப் ஸ`ஜின் என்ற பெயரில் திருக்குர்ஆன் குறிப்பிடும் படைப்பினம் நமது பொருளியல் உலகைச் (தூல உலகை - Material World) சார்ந்தவை இல்லை. எனவே அவை நாம் அறிந்த அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு வாழும் படைப்பினங்கள் இல்லை. எனவே அவைகளைக் குறித்து எதுவும் நாம் ஆராய்ந்து அறிய முடியாது பொதுவான ஒரு அழைப்பை விடுத்துள்ளதையும் அதில் (55:33) ஒரு சவாலின் தொனி இருப்பதையும் கண்டோம். அதன் பொருளென்ன?இதைத் தெரிந்து கொள்வதற்கு முன் அதே வசனத்தில் ஆகாய பூமிகளின் எல்லையைத் தாண்ட வேண்டுமானால் அதற்குரிய ஆற்றல் இல்லாமல் நம்மால் தாண்டிப் போக முடியாது என அழுத்தமாகக் கூறப்பட் டுள்ளது. இந்த அறிவியல் செய்தியின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் இதைக் கூறி இருப்பது ஏழாம் நூற்றாண் டில் என்பதும் அக்காலத்தில் மனிதன் ஒரு மிதிவண்டி கூட கண்டுபிடிக்கவில்லை என்பதும் தெரிந்ததே. எனவே வெறும் ஒரு நீராவி இயந்திரத்தைக் கூட அக்கால மக்களால் கற்பனை செய்யப்பட்டிருக்க இயலாது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒருவர் விண்வெளிப் பயணத்தைப் பற்றியும்,அப்பயணம் வானத்தின் எல்லையைத் தாண்டும் தூரத்திற்கு செய்வதன் சாத்தியக்கூறு என்ன என்பது பற்றியும் கூறினார் என்றால் அதுவே நம்பமுடியாத அளவிற்கு வியப்பான செய்தியாகும்.

இந்த இடத்தில் திருக்குர்ஆனுக்கு முந்திய கால கட்டத்திலும் வானத்தின் எல்லையைத் தாண்ட முடியுமாமுடியாதாஎன்ற சிந்தனை தோன்றாவிடினும் வான்வழிப் பயணம் குறித்து புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளதே என வினவப்படலாம். ஆயினும் அந்தக் கதைகளில் வான்வழிப் பயணத்தைச் சாத்தியமாக்குவது பறக்கும் பறவைகளின் மீது அமர்ந்தோ அல்லது அப்படிப்பட்ட பறவையாக தாமே ஆகிக் கொள்வதன் வாயிலாகவோ அல்லது பறக்கும் ஆற்றல் பெற்ற பூதகணங்களை அடிமைப்படுத்துவதன் மூலமாகவோ அதுவும் அல்லது பறக்கும் இயல்பை வழங்கும் மந்திரச் சொற்களை உச்சரிப்பதன் வாயிலாகவோ மனிதன் விண்ணில் பறந்த கதைகளைத் தாம் கூறுகின்றன. இந்தக் கதைகளை இந்த 21ம் நூற்றாண்டு மனிதனின் அறிவியல் அறிவைக் கொண்டு அவையாவும் மனித இச்சைகளின் கள்ளத் தொடர்புக்கு வடிகாலாய் விளங்கும் மூடநம்பிக்கைகளே எனக் கேட்ட மாத்திரத்திலேயே முடிவு செய்யப்படக் கூடியவை களாகும். ஆனால் அதே நேரத்தில் தப்பும் தவறுகளோகுற்றம் குறைகளோ இம்மியும் நெருங்க இயலாத தூய சத்தியமாம் வான்மறைக் குர்ஆன் ``பறக்கும் இறக்கைளின்றி நீங்கள் வானில் பறக்க இயலாது என்றோ அல்லது அதைப் போன்ற பழம் புராணங்களின் வார்த்தைகளிலோ செய்தியைக் கூறாமல் ``ஆற்றலின் மூலமே அன்றி நீங்கள் அதை (ஆகயங்களின் எல்லையை) கடந்து செல்லமுடியாது என நவீன அறிவியல் உலகிற்கு மட்டுமே விளங்கும் அதன் ``விண்வெளிப் பயணவியல் (Astronautics) மொழியிலேயே கூறியுள்ளது. எனவே வான்மறையின் இந்தச் செய்தி இன்று நாம் பயன்படுத்தும் இராக்கெட்டுகளின் எரிபொருளின் ஆற்றலைவிட அதிகமான ஆற்றலுள்ள எதிர்காலத்தில் வடிவமைக்க இருக்கும் விண்வெளிக் கப்பல்களின் (அப்படி ஒரு எண்ணம் இப்போது இருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும்) எரிபொருளின் எரிசக்தியைக் குறித்தே கூறப் பட்டுள்ளது என்பது மேகமில்லா உச்சிவானத்துப் பௌர்ணமி போல் ஒளிவுமறைவில்லா தெளிவான தகவலாகும்.

அளவற்ற ஆற்றலின் தேவை

நாம் இப்போது ஆகாய பூமிகளின் எல்லையைத் தாண்ட வேண்டுமாயின் அதற்காக ஆற்றலின் இன்றியமையாமையை திருக்குர்ஆன் வலியுறுத்துவதன் உண்மை என்ன என்பதைப் பார்ப்போம். ஒருவர் புவிஈர்ப்பு சக்தியின் இழுவிசையிலிருந்து விடுபட வேண்டுமானால் அவர் ஒரு இராக்கெட்டில் பயணம் செய்யவேண்டும் என்பதோடு அந்த இராக்கெட்டின் தொடக்க வேகம் (Initial velacity) வினாடிக்கு ஏழு மைலுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அவர் சூரியக்குடும்பத்தைத் தாண்டிப்போக வேண்டுமானால் அவரது இராக்கெட் வினாடிக்கு 11 மைல் தொடக்க வேகத்தை எட்ட வேண்டும். ஆனால் அந்த வேகத்தைப் பெறுவது இன்று மிகக் கடினமான காரியமாகும். ஏனெனில் இராக்கெட்டின் வேகம் என்பது அதில் எரிக்கப்படும் எரிபொருளின் எரி சக்தியிலிருந்தே பெறப்படுகிறது. எனவே இன்று பயன்பாட்டில் உள்ள எரிபொருளை வைத்துக்கொண்டு சூரியக் குடும்பத்தைத் தாண்ட வேண்டுமானால் அதற்காக பெருமளவு எரிபொருளை இராக்கெட்டில் கொண்டு செல்ல வேண்டும். இது எளிதான காரியம் இல்லை.

இன்றைய தேதியில் நம்மிடம் இருக்கும் எரிபொருளின் ஆற்றலை வைத்துக்கொண்டு நமது காலக்சியை தாண்ட இயலாது என்பதே உண்மை. ஆனால் எதிர்காலத்தில் இன்றுள்ளதைவிட பெருமளவு ஆற்றலை வெளிப்படுத்தும் எரிபொருளை நமது விண்வெளிக் கப்பல்களில் பயன் படுத்தும் தொழில் நுணுக்கத்தை நமது விஞ்ஞானிகள் கற்றுக் கொண்டாலும் ஆகாயத்தின் எல்லையை நம்மால் தாண்டிச் செல்ல முடியுமா எனக் கேட்டால் `முடியாது என்பதே அதன் பதிலாகும். ஏனென்றால் ஆகாயத்தின் எல்லையைத் தாண்டிச் செல்வதற்கு நாம் பெற வேண்டிய ஆற்றல் அறவற்றது ஆகும்! அளவற்றது(Infinite) என்பதன் விளக்கம் அப்படிப்பட்டதாகும்.

எதிர்காலம் எப்படி?

இன்று ஐன்டீனுக்குப் பிறகு நாம் வாழ்ந்து கொண் டிருக்கிறோம். எனவே பொருண்மைக்கும்வேகத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிந்தவர்களாக இருக்கிறோம். ``பொருண்மை என்பது நகர்வுக்கு எதிரான தடை என்பது முன்னர் கூறியுள்ளோம். எனவே வேகம் எல்லை மீறிச் செல்லும்போதுநகரும் பொருளின் பொருண்மையும் எல்லை மீறிச் செல்லும். இந்த இயற்பாடு வேகத்தை எல்லை மீறாதவாறு செய்துவிடும். வேகத்தின் எல்லை என்பது ஒளியின் வேகமாகும்.

சான்றாக ஒருவர் ஆகாயத்தில் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தாலும் கோடானு கோடிக் கணக்கான வருடங்கள் பயணம் செய்யும் அளவிற்கு ஆகாய எல்லையின் தொலைவு தூரமானதும் ஓயாமல் விரிவடைந்து கொண்டிருப்பதுமாகும். எனவே அவ்வளவு காலம் ஒருவரால் பயணம் செய்யவோ அல்லது அப்படிப்பட்ட பயணத்திற்கு ஏற்ற விண்கலமோ இல்லையென்பதால் விண்ணகத்தின் எல்லையைத் தாண்டும் ஆற்றலை நாம் பெறவில்லை என்பதை நம் எளிதாக விளங்கிக் கொள்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் நிலமை மேலும் மேலும் முன்னேற்றமடைந்து நிலைமை அடியோடு மாறிவிடுவதாகவே கற்பனை செய்வோம். அந்த நிலையில்?

மனிதன் எதிர்காலத்தில் எப்போதேனும் வரம்பற்ற காலத் திற்கு பழுதேதும் இல்லாமல் பயணம் செய்யும் ஒரு விண் கலத்தை வடிவமைப்பதாகவும் அந்த விண்கலம் விண்வெளி யிலுள்ள ப்ளாஸ்மா (Plasma)வை எரிபொருளாக்கிப் பறக்கும் ஆற்றலைக் கொண்டு இருப்பதாகவும் வைத்துக் கொள் வோம். மேலும் அந்த விண்கலத்திற்கு அக்கலம் உள்ளளவும் உலகியல் சூழலே நிலைநிற்கும்படி செய்யப்பட்டுள்ள தாகவும் வைத்துக் கொள்வோம். இதைப் போன்று அதில் பயணம் செய்யும் மனிதர்களும் வரம்பற்ற காலத்திற்கு உயிர் வாழும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு விட்டதாகவும் வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்த விண்கலத் தில் பயணம் செய்யும் மனிதர்கள் என்றேனும் ஒருநாள் வானத்தின் எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாதா என்று கற்பனையின் கடைக்கோடிக்கு சென்று ஒரு கேள்வியை எழுப்பினாலும்நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அந்த நிலையிலும் அவர்களால் வானத்தில் எல்லையைத் தாண்டிச் செல்ல இயலாது என்பதே உண்மையாகும்! ஏன்?

எட்ட முடியாத வேகம்

ஏனென்றால் இரண்டு காரணங்கள் அதற்குத் தடையாக இருக்கிறது. முதலாவது காரணம் பேரண்டத்தின் பரப்பளவு நிலையானது இல்லை. அது ஓயாமல் விரிவடைந்து கொண் டிருக்கிறது. இந்த நிலையில் இப்பேரண்டத்தின் இப்போ துள்ள எல்லையை அடைவதற்கே அந்த விண்கலம் பல்லாயிரம் கோடி வருடம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் அந்த கால இடைவெளியில் பேரண்டமும் விரிவடைந்து கொண்டே இருக்கும். எனவே இந்த விண்கலம் மேலும் பல்லாயிரம் கோடி வருடங்கள் மேலும் பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் பேரண்டம் அப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கும். அந்த விண்கலம் எவ்வளவு காலம் பயணம் செய்தாலும் இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் பேரண்டத்தின் எல்லை யைத் தாண்டுதல் என்பது இயலாத காரியமாகும்.

பேரண்டத்தின் எல்லையை மனிதனால் தாண்டிச் செல்ல முடியாது என்பதற்கான இரண்டாவது காரணத்தைப் புரிந்து கொள்வதற்காக ஒரு வினாவை எழுப்புவோம். பேரண்டம் விரிவடைந்து கொண்டிருப்பதாலேயே மேற் கண்ட நிலமையிலும் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டிச் செல்ல இயலாத நிலை ஏற்படுவதாகக் கண்டோம். ஆனால் பேரண்டம் என்ன வேகத்தில் விரிவடைகிறதோ அதைவிட அதிகமான வேகத்தில் விண்கலம் பயணம் செய்தால் என்றேனும் ஒருநாள் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டி விடலாமல்லவா என்பதே அந்த வினாவாகும். பரிதாபமே! அதுவும் இயலாத காரியமாகும்! எப்படி?

எப்படியென்றால் பேரண்டத்தின் விரிவாக்க வீதம் (Rate) நிரந்தரமானதன்று. பேரண்டம் விரிவடைதல் என்பது அதற்குள் இருக்கும் காலக்சிகளுக்கிடைலான தூரம் விரிவடைவதைப் பொருத்து கூடிக்கொண்டே இருக்கும். காலக்சிகளுக்கிடையிலான தூரம் விரிவடையும்போது அவை விரிவடையும் வேகம் கூடிக்கூடி வரும் என்பதை நாம் (பார்க்க: பக்கம் 42, எ ப்ரீஃப் ஹிடரி ஆஃப் டைம்) முதல் தொகுதியில் கூறியுள்ளோம்.

எனவே பேரண்டம் விரிவடையும் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் விண்கலம் பயணம் செய்ய வேண்டு மாயின் ஒரு கட்டத்தில் இந்த விண்கலம் ஒளியின் வேகத்தை மீறி பயணம் செய்ய வேண்டி இருக்கும். இதுவும் இயலாத காரியமே! ஏன்?

சவாலின் காரணம் இதுவே!

ஏனென்றால் வேகத்திற்கு ஒரு உச்சவரம்பு உண்டு. அது ஒளியின் வேக (வினாடிக்கு3,00,000 கி.மீ.) மாகும். அந்த வேகத்தை எந்தப் பொருளாலும் மீற முடியாது என்பது ஐன்டீனுடைய சார்பியல் தத்துவத்திலிருந்து பெறப்படும் அறிவியல் உண்மையாகும். ஒளியின் வேகத்தை மற்ற பொருளால் ஏன் மீற முடியாதுஎன்பதையும் அவர் விளக்கி யுள்ளார்.

பொருளின் பொருண்மைக்கும் அதன் வேகத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு உண்டு என நாம் முன்னர் கூறினோம். ஸஐன்டீன் அவர்களின் புகழ்பெற்ற சமன்பாடாம் E=MC2(ஆற்றல் = பொருண்மைஒவேகம்ஒவேகம்) இந்த உறவைக் காட்டுகிறது எனவே எந்த ஒரு பொருளாவது அதன் பயண வேகம் ஒளியின் வேகத்தில் 10 சதவீதத்தை அடைந்தால் அதன் பொருண்மை 0.5 சதவீதம் அதிகமாகி விடும். பொருண்மை என்பது நகர்வுக்கு எதிரான தடையாகும் என முன்னர் கூறியுள்ளோம். எனவே ஒரு பொருளின் பொருண்மை கூடும்போது அதை நகர்த்துவதற்கு செலுத்தப் படும் ஆற்றலும் கூட வேண்டும்.

இப்போது அப்பொருள் ஒளியின் வேகத்தில் 90 சத வீதத்தை அடைந்து விட்டால் அப்பொருளின் பொருண்மை இருமடங்காகிவிடும். ஆனால் அதற்கு மேல் அப்பொருளின் வேகம் கூடும்போது அப்பொருளின் பொருண்மை கட்டுக் கடங்காமல் சரமாரியாக உயர்ந்து கொண்டே சென்று அப்பொருள் ஒளியின் வேகத்தை அடையும்போது அதன் பொருண்மை அளவற்றதாகி (Infinite) விடும். இப்பேரண்டத் தின் மொத்த ஆற்றலை ஒருங் கிணைத்தாலும் ஒரு பொருளை ஒளியின் வேகத்தை மீறச் செய்ய இயலாது என்பதே அதன் பொருளாகும்.

இப்போது திருக்குர்ஆன் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டுவதற்கு ஆற்றலின் பெயரை அழுத்தமாகக் கூறியதன் அர்த்தமும் பேரண்டத்தின் எல்லைத் தாண்டிப் பார்க்க அழைப்பு விடுத்ததில் ஒரு சவாலின் சுவை இருந்ததும் ஏன் என்பது மிக அழகாக இப்போது விளங்குகிறதன்றோஆம்! அதுதான் அல்குர்ஆன்! மெய்யான இறைஞானத்தின் வெளிப்பாடு.

பெரும் சுருக்கம்!

நம் முன் இப்போதும் ஒரு வினா எஞ்சி நிற்கிறது. பழுதே நேராத விண்கலம்சாவே இல்லாத மனிதர்கள் என்பன போன்ற நடைமுறை சாத்தியமில்லாத வெறும் கற்பனை களை ஆதாரமாகக் கொண்டே எதிர்கால மனிதர்களாவது பேரண்டத்தின் எல்லையைத் தாண்டிச் செல்ல முடியுமா என விவாதித்தோம். நடைமுறை சாத்தியமற்ற அந்தப் பட்டியலில் மற்றொன்றையும் இணைத்து திருக்குர்ஆனுடைய அறிவியல் ஆழத்தை மேலும் விளங்கிக் கொள்ள முயற்சிப் போம். எதிர்கால மனிதன் ஒளியின் வேகத்தை எப்படியோ அடைந்து விட்டான் என்பதே அந்த நடைமுறை சாத்தியமற்ற மற்றொரு கற்பனையாகும். இந்த நிலையில் அந்த மனிதர் களால் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டுவதில் என்ன பிரச்சனை என்பதே நம்முன் எஞ்சி நிற்கும் வினாவாகும். ஆனால் நாம் இதுவரை குறிப்பிடாத ஒரு பெரும் பிரச்சனை யில் அவர்கள் சிக்குண்டு விடுவதால் அப்போதும் அவர் களால் பேரண்டத்தின் எல்லையை தாண்டிப் போக இயலாத நிலையே ஏற்படும்!

ஐன்டீனுடைய பொது சார்பியல் கோட்பாட்டிற்கிசைய பார்க்கும்போது ஒரு பெருவெடிப்பு சிங்குலாரிட்டியிலிருந்து தோன்றிய இப்பேரண்டம் ஒரு ``பெரும் சுருங்கு சிங்குலாரிட்டி (A Big Crunch) யில் (பேரண்டம் மொத்தமாக அழிந்தால்) அழிய வேண்டும். அல்லது கருங்குழியின் உட்பகுதியிலுள்ள சிங்குலாரிட்டியில் (Singularity Inside a Black Hole) அழிவது போன்று (அந்தந்தப் பகுதிகளாக அழிவுற்றால் நட்சத்திரத்தில் நிகழ்வது போன்று) அழிய வேண்டும் என ஐன்டீனுடைய பொது சார்பியல் கோட்பாட்டிலிருந்து ஹாக்கிங் அவர்கள் தீர்க்க தரிசனம் (Prediction) செய்துள்ளார்.

(பார்க்க : பக்கம் 121)

அறிவியலாளர் ஹக்கிங் தீர்க்க தரிசனம் செய்துள்ள இப்பேரண்டம் சந்திக்கப் போவதாகக் கூறப்படும் பெரும் சுருங்கு சிங்குலாரிட்டி என்பதன் பொருள் யாதெனில் நமது பேரண்டம் ஒரு பெருவெடிப்பிலிருந்து தோன்றிய விரிவாற்ற லால் இப்போதும் விரிவடைந்து கொண்டிருப்பதாகவும் காலம் செல்லச் செல்ல அந்த விரிவாற்றல் பேரண்டத்தின் ஈர்ப் பாற்றலை மிகைக்க இயலாத கட்டம் வரும்போது பேரண்டம் சுருங்க ஆரம்பித்து விடும் என்றும் கூறப்படுகிறது. பேரண்டம் சந்திக்கப் போகும் இந்த நிகழ்ச்சியும் சிங்குலாரிட்டி விதிப்படியே (நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளுக்கும் அன்னியமான விதத்தில்) நடைபெறும் என்றும் அவர் கூறுகிறார். கிட்டத்தட்ட இப்படிப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நட்சத்திரம் கருங்குழியாக மாறும் போதும் நடைபெறும். ஆயினும் அந்த நிலைமை ஆயிரம் கோடி வருடங்களுக்குள் நடைபெற முடியாது என்பதையும் அவர் கூறியதை முதல் தொகுதியில் கண் டோம். அதே நேரத்தில் திருக்குர்ஆனுடைய கணித சமன் பாட்டிலிருந்து பேரண்டத்தின் அழிவு நூற்றாண்டு களுக்குட்பட்டதாகும் என நாம் விளக்கம் கண்டதையும் நினைவிற்கொள்க!

இப்போது பேரண்டத்தின் அழிவு கட்டம் என்பதே பேரண்டத்தின் சுருங்கு முகம் அல்லது பெரும் சுருக்கம் (Contracting Phase or Big Crunch) எனக் கூறப்படுகிறது. ஹாக்கிங் கூறினார் போன்று ஆயிரம் கோடி வருடங்களுக்குள் அது நடைபெறவில்லை என வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதே அதன் பொருளாகும். எனவே பேரண்டத்தின் எல்லையைத் தாண்டிச் செல்வதற்காகப் பயணம் செய்யும் விண்கலம் இப்பேரண்டத்தின் சுருங்கு முகம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அதன் எல்லையைக் கடக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனையாகும். இந்த நிலையில் அந்த விண்கலம் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தாலாவது பேரண்டத்தின் சுருங்கு முகம் ஆரம்பமாவ தற்கு முன் அதன் எல்லையைத் தாண்டிவிட முடியுமா எனக் கேட்டால் `முடியாது என்பதே பதிலாகும். விளக்கம் தேவையில்லாத அளவிற்கு பேரண்டத்தின் தற்போதைய பரப்பளவே அவ்வளவு பிரமாண்டமானதாகும்.

இயற்கை விதிகள் மனிதனுடைய விருப்பத்திற்கிசைய வளைந்து கொடுத்தாலன்றி வேறு வார்த்தைகளில் கூறினால் இயற்கை விதிகளை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கும் அதிகாரம் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தாலன்றி பேரண்டத் தின் எல்லையைத் தாண்டும் ஆற்றலை அவன் ஒருபோதும் பெறப்போவதில்லை என்பது திண்ணம். அந்த அதிகாரம் அவனுக்குக் கிடைக்கப் போவதுமில்லை. அவன் பேரண்டத் தின் எல்லையைத் தாண்டப் போவதும் இல்லை.

ஆயிரம் கோடி வருடங்களுக்குள் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டிவிட முடியாமல் போகவே விரைவி லேயே அவன் பேரண்டத்தின் சுருங்கு முகத்திற்குள் அகப்பட்டு விடுவான். இதன் விளைவாக காலம் முன்னோக்கி நகராமல் பின்னோக்கி நகரத் துவங்கும். இச்சூழ்நிலையில் எந்த நபராலும் அவரது வாகனத்தாலும் மேலும் முன்னோக்கிப் பயம் செய்ய இயலாமல் போவதோடு சுருங்கிவரும் பேரண்டம் அந்த நபரையும் அவரது வாகனத்தையும் படிப்படியாகச் சுருங்கி வரச் செய்து கடைசியில் எல்லையற்ற அடர்த்திக்குள் (சிங்குலாரிட்டிக்குள்) நுழையச் செய்து விடும். எனவே பேரண்டத்தைத் தாண்டிப் போகும் முயற்சி அந்த நபரை பேரண்டத்தில் முற்றிலுமாகக் கரைந்து போகச் செய்யுமே அன்றி பேரண்டத்திலிருந்து தப்பிச் செல்ல ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

அறிவியல் பூர்வமான எச்சரிக்கை

வானத்தின் எல்லையைத் தாண்டிப்போகும் ஆற்றலை மனிதன் ஒருபோதும் பெறப்போவதில்லை எனும் கருத் துணர்ந்த திருமறை வசனத்தின் வாயிலாக திருக்குர்ஆன் மனித குலத்தை எச்சரிக்கை செய்ய விரும்பும் கருத்து என்னவென்று பார்ப்போம். திருமறையின் குறிப்பிட்ட வசனத்திற்கு முன் பின் வசனங்களைக் கவனமாகப் பார்வை யிட்டால் இறைவனுடைய விசாரணையிலிருந்து மனிதன் தப்ப முடியாது என்பதற்கு ஆதாரமாகவே அச்செய்தி கூறப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. இறைவனுடைய கட்டளைக்கு வார்த்தைக்கு வார்த்தை அடிபணிந்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்திலிருந்தும் அதை ஆண்டு கொண்டிருக்கும் இயற்கை விதிகளிலிருந்தும் ஒருபோதும் தப்பிச் செல்ல இயலாத மனிதன் அவைகளின் மீதுள்ள அனைத்து அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ள இறைவனின் விசாரணையிலிருந்து மட்டும் எவ்வாறு தப்பிச் செல்ல முடியும் என மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவதாகவே அந்த வசனம் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. அவ்வசனத் தைக் கூறிய அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

இந்த அத்தியாயத்தில் நாம் விவாதித்த விபரங்களில் இருந்து திருக்குர்ஆனின் அறிவியல் ஞானம் எவ்வளவு ஆழமானது என்பதை ஓரளவு விளங்கிக் கொண்டோம். இவ்வளவு ஆழமான அறிவியல் உண்மைகள் குறிப்பாக விண்வெளிப் பயணம் கூட ஆற்றலைப் பயன்படுத்திச் செல்ல முடியும் என்றும் ஆயினும் அந்த விண்வெளிப் பயண வேகம் ஒளியின் வேகத்தை எட்ட முடியாதபடிச் செய்யும் இயற்பியல் விதிகள் இப்பேரண்டத்தை ஆண்டு கொண்டிருக் கிறது என்பதும் திருக்குர்ஆனுக்கு ஏழாம் நூற்றாண்டிலேயே தெரிந்திருந்தது எனில் அது எப்படி சாத்தியமாயிற்றுதிருக்குர்ஆன் மனித அறிவிலிருந்து தோன்றியது என்று இன்னுமா நம்புவீர்கள்?

ஆகாயத்தின் கட்டுமானப் பொருட்கள்

முந்தைய அத்தியாயத்தில் வானம் எந்தப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல் விஞ்ஞானிகள் ஒரு கட்டத்தில் தடுமாறிக் கொண் டிருந்ததையும்அந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஆகாயம் ஈதர் எனும் ஒரு விந்தைப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது எனும் ஒரு கருதுகோளை உருவாக்கியதையும் கண்டோம். இக்கருதுகோள் திருக்குர்ஆனின் அறிவியலுக்கு முரணாக இருந்ததையும் பிற்பாடு நடைபெற்ற அறிவியல் ஆய்வுகளில் ஈதர் என்பது வெறும் கற்பனையே அன்றி அது உண்மை யில்லை என்றும் அறிவியல் உலகம் நிரூபித்து விட்டதையும் கண்டோம். மேலும் திருக்குர்ஆனைப் பொருத்தவரை ஆகாயம் ஆற்றலால் உருவாக்கப்பட்டதாகும் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவதையும் முன் அத்தியாயத்தில் பார்த்தோம். எனவே ஆகாயத்தைக் குறித்து திருக்குர்ஆன் கூறும் அறிவியல் நவீன அறிவியல் உலகில் எந்த அளவு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

வானம் எனும் கருத்துருவம்

நாம் நமது பேச்சு வழக்கில் ஆகாயம்வானம்விண்ணகம்பேரண்டம் போன்ற பதங்களைப் பொருள் பேத மின்றிப் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் பேரண்டம் (Universe) என்று கூறும்போது விண்ணகப் பொருட்களையும் அவைகளைச் சூழ்ந்திருக்கும் அவற்றின் வாழ்விடத்தையும் குறிப்பதாகும். ஆனால் ஆகாயம்விண்ணகம்வானம் (Sky, Firmament, Heaven) போன்ற சொற்களைப் பொதுவாக பூமிக்கப்பால் இருக்கின்றவைகளை மொத்தமாகக் குறிப்ப தற்காகப் பயன்படுத்தினாலும் குறிப்பாகச் சுட்டுவது விண்ணகப் பொருட்களைச் சூழ்ந்துள்ள அதன் வாழ்விட மாகும். இதையே நாம் அண்டவெளி (Space) என்றும் அழைக் கின்றோம். இப்போது திருக்குர்ஆன் ``வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்துள்ளோம் (51:47) என்று கூறும்போது குறிப்பாகச் சுட்டுவது விண்ணகப் பொருட் களைச் சூழ்ந்துள்ள அவைகளின் வாழ்விடத்தையே ஆகும். திருக்குர்ஆனுடைய இக்கூற்று உண்மையே எனில் அதற்குரிய ஆதாரங்கள் யாவை என்பதையே நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

ஆகாயம் என்பது ஒன்றுமில்லாத வெற்று (சூன்ய) வெளியில்லை. அது ஆற்றல் நிறைந்த அண்டவெளியாகும் என்பதை நாம் இப்போது அறிவியல் வாயிலாக மட்டுமின்றி அனுபவபூர்வமாகவே அறிந்து வருகிறோம். ஏனெனில் அந்த ஆற்றல்களைப் பற்பல விதத்தில் நாம் நமது உபயோகத் திற்காகப் பயன்படுத்தி வருகிறோம்.

தொலைபேசியிலிருந்து தொலைகாட்சி வரைநீராவி இயந்திரத்திலிருந்து விண்வெளிக் கலங்கள் வரைமின் விளக்கிலிருந்து மின்சார இரயில்கள் வரைஅணுமின் நிலையங் களிலிருந்து அணுகுண்டுகள் வரை ஆயிரக் கணக்கான பயன்பாடுகளை நாம் இப்பேரண்டத்தில் பரவிக் கிடக்கும் ஆற்றல்களிலிருந்து பெற்று வருகிறோம். நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்கள் யாவும் கல்தோன்றி முள் தோன்றா காலம் முதல் இப்பேரண்டத்தில் இருந்து வருகின்றன. இந்த ஆற்றல்கள் இல்லையெனில் பேரண்டமே இல்லை. இப் பேரண்டத்தை ஒரு சீரான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு குழுவாக இயங்கச் செய்வதும் இந்த ஆற்றல்களே யாகும். இந்த ஆற்றல்களின் இயங்குதளமே ஆகாயமாகும்.

ஒரு பிரமாண்டமான பேருருவமாக ஆகாயம் இயங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் அதன் அமைப்பை முழுமை யாக நமது அறிவியலாளர்களால் இப்போதும் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆயினும் ஆகாயம் ஆற்றலால் உருவாகி யுள்ள விண்ணகப் பொருட்களின் இயங்குதளமாகும் என்பதும் அந்த ஆற்றல்கள் பற்பல விதங்களில் காணப்பட்ட போதிலும் அவை ஆதாரமாக நான்கு சக்திகளாகும் எனும் முடிவுக்கு வர அவர்களால் சாத்தியமாகியுள்ளது.

வானத்தின் கட்டுமானப் பொருட்கள்

விண்ணகத்தை உருவாக்கியுள்ள இந்த நான்கு ஆதார சக்திகளாவன : 1. பேரண்டத்தின் ஈர்ப்பு விசை (The Universal Gravitation)2. மின்காந்த விசை (The Electromagnetic Force) 3.வலுவான அணுக்கரு விசை (The Heavy Nuclear Force)4. இலகுவான அணுக்கரு விசை (The Weak Nuclear Force) என்பனவாகும். இந்த நான்கு ஆதார சக்திகளில் ஈர்ப்பாற்றலே மிகவும் வலுவற்றதாகும். ஆயினும் இது மட்டுமே தொலை வான இடங்களுக்குப் பரவும் ஆற்றலைப் பெற்றுள்ளது. இதைப் போன்று ஈர்ப்பு விசையானது மற்ற மூன்று விதமான விசைகளிலிருந்தும் வேறுபடும் அதனுடைய மற்றொரு அம்சம் அது எப்போதுமே ஈர்க்குமேயன்றி ஒருபோதும் விலக்கும் விசையாகச் செயல்படாது என்பதாகும். இப் புத்தகத்தில் பற்பல இடங்களில் ஈர்ப்பு விசையைப் பற்றி விரிவாகப் பார்த்து விட்டதால் மற்ற மூன்று ஆற்றல்களைக் குறித்து சுருக்கமாகக் காண்போம்.

அண்டவெளியை உருவாக்கியிருக்கும் ஆதார சக்தி களில் அடுத்ததாக வருவது மின்காந்த விசையாகும். இந்த விசையை 1870ல் இங்கிலாந்து தேசத்து கணிதவியல் அறிஞரான(Mathematician) ஜேம் கிளார்க் மாக்வல் (James Clerk Maxwel) என்பவரே அறிமுகப்படுத்தியவராவார். இதைப் பற்றி ஹாக்கிங் கீழ்ண்டவாறு கூறுகிறார்.

``அடுத்து வருவது மின்னேற்றம் உள்ள துகள்களுக் கிடையில் செயல்படும் எலக்ட்ரான் மற்றும் குவார்க்கைப் (Quarks) போன்றதும் ஆனால் மின்னேற்றம் இல்லாத ஈர்ப்பணுவைப்(Graviton) போன்று அல்லாததுமான மின்காந்த விசையாகும். இது புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் பெரும் ஆற்றல் கொண்டதாகும். இரண்டு எலக்ட்ரான்களுக்கு இடையிலுள்ள மின்காந்த விசையானது ஈர்ப்பு விசையைக் காட்டிலும் ஒரு தச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்ச (ஒன்றுக்குப் பின் நாற்பத்து இரண்டு சைபர்கள் கொண்ட எண்) மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகும். இருந்த போதிலும் அதில் நேர் மின்னேற்றம்எதிர் மின்னேற்றம் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டு நேர் மின்னேற்றங்களுக்கு இடையிலுள்ள விசையும் இரு எதிர் மின்னேற்றங்களுக்கு இடையிலுள்ள விசையும் விலக்கும் விசையாகவும் (Repulsive) ஆனால் நேர் மற்றும் எதிர் மின்னேற்றங்களுக்கு இடையிலுள்ள விசை ஈர்க்கும் (Attractive) விசை ஆகவும் இருக்கிறது. (பார்க்க : பக்கம் 75)

ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட மேற்கோளிலிருந்து மின்காந்த விசை எந்த அளவிற்கு அபாரமான ஆற்றல் கொண்டது என்பது நன்கு புலனாகிறது. இந்த விசை அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை அணுவின் மையக் கருவை ஒளி வேகத்தில் சுற்றி வரச் செய்கிறது. இது ஈர்ப்பாற்றல் கிரகங்களை சூரியனைச் சுற்றி வரச் செய்வதற்கு ஒப்பானதாகும். இருப்பினும் மின்காந்த விசையானது ஒரே ஒரு வினாடி நேரத்தில் எலக்ட்ரான்களை நூறு கோடி கோடி (ஒன்றுக்குப் பின் பதினாறு சைபர்கள் கொண்ட எண்ணின் மதிப்பு) முறை அணுவின் மையக் கருவைச் சுற்றிச் சுற்றி வரும்படி செய்கிறது. எனவே இந்த விசையானது சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி யில் செயல்படும் சூரியனின் ஈர்ப்புவிசையைப் போன்று அணுக்கருவுக்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையிலுள்ள இடைவெளியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மேற்கண்ட விபரங்களிலிருந்து மின்காந்த விசை இல்லாதிருந்தால் அணுக்கள் அதன் மையத்திலிருந்து சிதறிப் போய்விடும் என்பது எளிதாகப் புலனாகிறது. அணுக்களே பொருட்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். எனவே அணுக்கள் இல்லையேல் பொருட்கள் இல்லை. பொருட்களில்லையேல் வானமோவானகப் பொருட்களோ இல்லை. நவீன அறிவியல் உலகம் இந்த விசையின் துணையால் வானொலிதொலைக் காட்சி மற்றும் ராடார் போன்றவைகளை உருவாக்கியது.

இதற்கடுத்தாற்போன்று வருவது இலேசான அணுக் கருவிசை மற்றும் வலுவான அணுக்கரு விசை என்பவை களாகும். இவைகளும் அணுக்கருவிற்குள் செயல்படும் விசைகளாகும். இவைகளில் இலேசான அணுக்கருவிசை என்பது அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை அணுவை விட்டு தப்பிச் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. எலக்ட்ரான்கள் யாவும் எதிர் மின்னோட்டம் கொண்டவை என நாம் முன்னர் கண்டோம். எதிர் மின்னோட்டம் கொண்ட துகள்கள் ஒன்றையொன்று விலக்கும். அணுவிற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட எதிர் மின்னேற்றத் துகள்களாம் எலக்ட்ரான்கள் இருக்கும்போது அவைகளுக்கிடையில் இருக்கின்ற விலக்கும் விசையால் எலக்ட்ரான்கள் அணுவை விட்டு தப்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இலேசான அணுக்கரு விசையே இதைத் தடுத்து நிறுத்துகிறது.

நான்காவதாக வருவது வலுவான அணுக்கரு விசை யாகும். இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலகட்டம் வரை அணுவிற்குள் இருக்கும் ப்ரோட்டான் மற்றும் நியூட்ரான் எனும் துகள்கள் அடிப்படைத் துகள்களாகும் (Elementary Particles) என்றும்அவைகளைப் பிரிக்க முடியாது என்றும் நம்பி வந்தனர். ஆனால் அவைகள் அடிப்படைத் துகள்கள் இல்லையென்றும்அவை ``குவார்க்குகள் (Quarks) எனும் துகள் களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் 1969ல் முர்ரே ஜெல்மன் எனும் இயற்பியலாளர் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றார். இந்த குவார்க்குகள் நேர் மின்னேற்றம் கொண்ட துகள்களாகும். இவைகளே அணுவிற்குள் இருக் கும் புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியவைகளுக்கே அடிப்படைத் துகள்களாக விளங்குகின்றன.

குவார்க்குகள் குறைந்தபட்சம் ஆறு சுவைகளிலும் (Flavour) முன்று வர்ணங்களிலும் இருப்பதாகக் கருதப் படுகின்றன. (சுவைவர்ணம் போன்றவை குவார்க்குகளை வேறுபடுத்துவதற்காக வைக்கப்படும் பெயர்களே தவிர அவைகளுக்கு சுவையோ வர்ணமோ உண்டு என்பது இதன் பொருளில்லை) அதன் சுவைகளாவன : அப்டௌன்,ட்ரேஞ்ச்சார்ம்டுபாட்டம் மற்றும் டாப் (Up, Down, Strange, Charmed, Bottom and Top)இவைகளில் ஒவ்வொன்றும் சிவப்புபச்சைநீலம் என முன்று வர்ணங்களிலும் இருக்கின்றன. இரண்டு `அப் மற்றும் ஒரு `டௌன் குவர்க்குகள் இணைந்தால் வருவது ஒரு புரோட்டான் ஆகும். இதையே தலைகீழாகத் திருப்பினால் (இரண்டு டௌன் மற்றும் ஒரு அப்) அதிலிருந்து தோன்றுவது ஒரு நியூட்ரான் ஆகும். இதிலிருந்து புரோட்டானாயினும் நியூட்ரானாயினும் அவை களுக்குள் இருப்பது குவார்க்குகள் ஆகும் என்பதும் அந்த குவார்க்குகள் நேர் மின்னேற்றம் கொண்டவை என்பதும் நாம் தெரிந்து கொண்டோம். நேர்மின்னேற்றம் கொண்ட துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்பதால் குவார்க்குகள் ஒன்றை ஒன்று விலக்கி புரோட்டானிலிருந்தும்நியூட்ரானிலிருந்தும் வெளியேறிவிடாமல் தடுத்துக்கொண்டிருப்பது கனமான அணுக்கரு விசையாகும்.

பேரண்டத்தில் இம்மி அளவு இடம் கூட விட்டு விடாமல் மொத்த இடத்தையும் - அணுவிற்குள் இருக்கும் இடத்திலும் கூட இந்த நான்கு ஆதார சக்திகளே நிறைந்துள்ளது.

எனவே இந்த ஆற்றல்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் வானமும் இருக்கிறது. எங்கெல்லாம் அவை இல்லையோ அங்கெல்லாம் வானமும் இல்லை. இதிலிருந்து நமது அறிவியல் உலகம் இதுவரை சேகரித்திருக்கும் அறிவியல் விபரங்கள்``வானத்தை நாம் வல்லமை கொண்டு படைத்தோம் எனக் கூறிய திருக்குர்ஆனின் அறிவியலை முற்றிலும் உண்மைப்படுத்துகிறது என்பதை ஐயத்திற்கிட மின்றித் தெரிந்து கொண்டோம்.

ஆற்றலின் அழிவின்மை விதி

பொதுவாக நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் பல செய்திகளில் மறைந்திருக்கும் அறிவியல் பிழைகளை நாம் கண்டு கொள்வதில்லை. அவைகளைக் கண்டுகொள்ளத் துவங்கினால் நம்மால் பிறகு பேசவே இயலாத நிலை ஏற்பட்டு விடும். சான்றாக நாம் நீர்வீழ்ச்சிகல்கரிஅணுஉலை போன்றவற்றிலிருந்து மின்சார ஆற்றலை உருவாக்குவதாகக் கூறுகிறோம். ஆனால் இயற்பியலின் ஆழங்களுக்கு இறங்கிச் சென்று `ஆற்றல் என்பதன் இலக்கணத்தைக் கண்டறிந்த மாமேதை ஐன்டீன் ஆற்றல் நம்மால் ஒருபோதும் உருவாக்க முடியாது என்று கூறுகிறார். அவர் கண்டுபிடித்த ஆற்றலின் அழிவின்மை விதி (The Law of Conservaton of Energy) கீழ்கண்டவாறு கூறுகிறது.

``Enegy Can Never be Created Nor Destroyed but only Transformed ஆற்றலை ஒருபோதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆனால் மாற்றி அமைக்கவே முடியும்.

மேற்கண்ட அறிவியல் பிரகடனம் ஆற்றலை நாம் ஒருபோதும் உருவாக்க முடியாது என்று கூறும்போதுநாம் கல்கரியிலிருந்தும் இன்னபிற பொருட்களிலிருந்தும் (அவை களை எரித்து) வெப்பதை உருவாக்குகிறோமே (வெப்பம் என்பது ஆற்றலாகும் என்பதைக் கருத்தில் கொள்க) இது எப்படி என்ற கேள்வி எழலாம். ஆனால் கல்கரியிலிருந்தோ இன்னபிற பொருட்களிலிருந்தோ நாம் வெப்பத்தை உருவாக்கவில்லை. அதற்கு மாறாக அப்பொருட்களை நாம் வெப்பமாக மாற்றி அமைக்கவே செய்கிறோம் என்பதே உண்மையாகும். கல்கரி எனும் பொருள் வெப்பம் எனும் ஆற்றலாக மாறியது போன்றே ஆற்றல் பொருளாகவும் மாற முடியும் என்பது ஐன்டீன் அவர்கள் கூறிய மேற்கண்ட விதியின் பொருளாகும்.

ஆற்றலில் தோன்றும் பொருட்கள்

இப்போது மேற்கண்ட விதிக்கு இசையப் பார்த்தால் பெருவெடிப்பு நிகழ்ந்த மைக்ரோ கணத்தில் அதிலிருந்து வெளிப்பட்ட ஆற்றலே இன்று வானத்திலுள்ள பொருட்கள் அனைத்தையும் உருவாக்கியது எனில் ``வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு உருவாக்கினோம் எனும் திருமறை வசனத்தை அது மேலும் ஆழமாக நிரூபிக்கவே செய்யும் என்பது திண்ணம். எனவே இதற்கான ஆதாரத்தைப் பார்ப்போம்.

நமது இம்மாபெரும் பேரண்டம் அதன் ஆரம்ப நாட்களில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரே ஒரு வினாடியிலும் மிக சொற்பமான நேரத்தில் இப்பேரண்டம் 1032 (ஒன்றுக்குப்பின் 32சைபர்கள் கொண்ட எண்ணின் மதிப்பு) மடங்கு உருப்பெருக்கம் செய்தது என அறிவியலாளர் `அலன்குத் கூறியதை முதல் தொகுதியில் கண்டோம். இந்த நிகழ்ச்சி`பொருட்திணிப்பு (Inflation) என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த பொருட்திணிப்பு என்ற கருத்தைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

``இந்த பொருட்திணிப்பு எனும் கருத்து (The Idia of Inflation) பேரண்டத்தில் ஏன் இவ்வளவு பொருட்கள் இருக்கின்றன என்பதையும் விளக்க முடிந்தது. பேரண்டத் தில் தோராயமாக பத்து தச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்ச,தச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சதச இலட்சம் (ஒன்றுக்குப்பின் எண்பது சைபர்கள் கொண்டது) துகள்கள் நமது பார்வைத் திறனுக்கு எட்டிய வரை இருக்கின்றது. இவையெல்லாம் எங்கிருந்து வந்தனஇதற்குரிய பதில் குவாண்டம் கோட்பாட்டில் (Quantum Theory) துகள்கள் ஆற்றலிலிருந்து துகள்/எதிர்துகள்(Particle / Anti Particle) எனும் இணைகளாக இருவாகும் என்பதாகும்.

(பார்க்க : பக்கம் 136)

வானத்தின் கட்டுமானப் பொருட்களைக் கூறும்போது திருக்குர்ஆன் பருப் பொருட்களை(Corporeals) ஏன் விட்டு விட்டது என்பதற்குரிய அறிவியல் காரணம் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட மேற்கோளில் காணப்படுகிறது. வெறும் சூன்யத்திலிருந்து திடீரெனக் கிளம்பிய ஒரு அதிரடி வேட்டாம் பெருவெடிப்பிலிருந்து எவ்வாறு பல்லாயிரம் கோடானு கோடி கோடிக்கணக்கான பருப்பொருட்கள் அடிப்படைத் துகள்களிலிருந்து மாபெரும் நட்சத்திரங்கள் வரை தோன்றின எனும் கேள்விக்கு அவையாவும் பெரு வெடிப்பிலிருந்து தோன்றிய ஆற்றலிலிருந்து தோன்றி யவைகளே என்பதே ஹாக்கிங் அவர்களின் கூற்றாகும். எனவே அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் வானமாயினும் வானத்திலுள்ள பருப்பொருட்களாயினும் அவையாவும் ஆற்றலிலிருந்தே தோற்றுவிக்கப்பட்டது எனும் அறிவியல் ``வானத்தை நாம் வல்லமை கொண்டு படைத் தோம் எனக் கூறிய திருக்குர்ஆனின் அறிவியலை எவ்வளவு அழகாகஆழமாகஅற்புதமாக நிரூபித்து நிற்கிறது!

அறிவியல் உலகின் மைல் கற்களாக விளங்கும் அரிய கண்டுபிடிப்புகள் எங்கு எப்போது நிகழ்ந்தாலும் அவை பொய்க்கலப்பற்ற உண்மைகளாக இருந்தால் அவை உடனே திருக்குர்ஆனை இறைவேதம் என நிரூபிக்கும் சிறந்த சான்றுகளாக தன்னை அர்ப்பணம் செய்து அம்மாமறையின் முன் தலைவணங்கி நிற்கின்றன. அதே நேரத்தில் அவற்றுள் ஏதேனும் ஒன்று தவறாக இருந்து விட்டால் அதனுடன் இவ்வான்மறை முரண்படுவதோடு அறிவியல் உலகம் காலம் கடந்தேனும் அது தவறான அனுமானமே எனக் கூறி அதைக் களைந்து விட்டுஅது குறித்து திருக்குர்ஆனின் அறிவியலையே ஏற்றுக்கொண்டு தன் பணியை செவ்வனே செய்து வருகிறது. அற்புதமன்றோ இதுஇதற்கு நிகரான அற்புதம் வேறு எங்கேனும் உண்டாஅற்புதமென்றால் இஃதன்றோ அற்புதங்களுக்கெல்லாம் தலையாய அற்புதம்! இன்னுமா இம்மாமறை இறைவனின் வேதம் என்பதில் ஐயம் கொள்வீர்?

ஆற்றல்களின் ஒருங்கிணைப்பு

அறிவியல் உலகம் இப்போது மிகவும் ஆர்வத்துடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி முன்னர் கூறிய பேரண்டத் தின் நான்கு ஆதார சக்திகளுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரே ஒரு சக்தியே எனும் கண்டுபிடிப்பைப் பற்றிய அறிவிப்பு எங்கிருந்தேனும் வரக் கூடாதா என்பதாகும். ஏனெனில் இவ்வாறான ஒரு கண்டுபிடிப்பு பேரண்டத்தை மேலும் சிறந்த முறையில் விளங்கிக் கொள்ள அறிவியலாளர் களுக்கு பெரிதும் உதவி செய்வதாக இருக்கும். ஐன்டீன் அவர்கள் தமது இறுதிகாலத்தை இந்த ஆற்றல்கள் நான்கையும் ஒருங்கிணைப்பதில் செலவிட்டு தோற்றுப் போனார் என்பது வருந்தத்தக்கதே. இருப்பினும் இங்கிலாந் தின் இம்பீரியல் கல்லூரியின் `அப்துஸலாம் அவர்களும் ஹவார்டு பல்கலைக்கழகத்தின் டீவன் வீன்பர்க் அவர்களும் இணைந்து மின்காந்த விசையையும்,இலகுவான அணுக்கரு விசையையும் ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்று 1979ல் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.

நாற்பெரும் சக்திகளாக பேரண்டத்தை உருவாக்கிய ``பேராற்றல்களின் ஒருங்கிணைந்த கோட்பாட்டை - ழு.ரு.கூ - ழுசயனே ருகைநைன கூநடிசல - உருவாக்குவதில் முட்டுக் கட்டையாக நின்றிருப்பது ஈர்ப்பு விசையாகும். இது ஐன்டீனிடமும் இணங்க மறுத்த ஆற்றலாகும். இருப்பினும் ஜி.யு.டி. யை வெற்றிகரமாக உருவாக்கும் தூரம் தொலை வானத்தி லில்லை என்பதே பெரும்பாலான அறிவியலாளர்களின் கணிப்பாகும். எதிர்காலத்தில் ஜி.யு.டி. சாத்தியமானால் அது திருக்குர்ஆன் கூறும் இறைமறையின் ஏகத்துவ கோட்பாட்டிற்கு மேலும் மெருகூட்டும் கண்டுபிடிப்பாகவே அமையும். எனவே நாமும் அந்த நாளை ஆவலுடன் காத்திருப்போம்.

வானம் ஒரு கூரை

திருக்குர்ஆனிலிருந்து நாம் வாசித்த ஒருசிறு வசனத் தின் ஒரு சிறு பகுதிக்கே திருக்குர்ஆனுடைய வேறு பல அறிவியல் வசனங்களின் துணையுடன் விளக்கமளித்து வந்தோம். இப்போது அந்த வசனத்தின் கடைசி பகுதியை நெருங்கி விட்டோம். அதற்குள் நுழையும் முன்மீண்டும் அந்த வசனத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். அது வருமாறு :``அல்லாஹ்வே உங்களுக்கு இந்த பூமியை வாழத் தகுந்த இடமாகவும் வானத்தை ஒரு கூரையாக வும் அமைத்தான்.

மேற்கண்ட திருமறை வசனத்தில் காணப்படும் பூமி மனிதனுக்கு வசிப்பிடமாக்கப்பட்டுள்ளது எனும் செய்தியில் அடங்கியுள்ள ஏராளமான அறிவியல்களையும்மேலும் ஆகாயம் என்பது வெறும் ஒரு வெற்று வெளியின் பெயரில்லை. உண்மையிலேயே அப்படி ஒன்று படைக்கப்பட்டுள்ளது என்ற அறிவியலையும் பார்த்து விட்டோம். ஆயினும் பூமியைப் பொருத்தவரை ஆகாயத்திற்கு ஒரு சிறப்பான பணியை அல்லாஹ் வழங்கியுள்ளதாக அவனது நூலாம் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக அமைய வேண்டும் என்பதே அந்தப் பணியாகும். நாம் வீடுகளுக்குக் கூரைகளை அமைக்கிறோம். ஆனால் பூமிக்கு எதற்காக கூரைபூமிக்குக் கூரை இல்லையென்றால் பூமிக்கும் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டாஅப்படிப்பட்ட வாய்ப்புகள் ஏதும் இல்லையென்றால் பூமிக்கு கூரை அமைக்கப்பட்டுள்ளதாக திருக்குர்ஆன் கூறியது ஏன்?எனவே திருக்குர்ஆன் கூறியது உண்மையாக இருக்க வேண்டுமாயின் கூரை இல்லாதிருந்தால் பூமிக்கு உண்மையிலேயே ஏதேனும் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கவேண்டும் என்பது திண்ணம். ஆகவே அப்படிப்பட்ட தொல்லைகள் ஏதேனும் பூமிக்கு உண்டா எனப் பார்ப்போம்.

சீறிவரும் விண்கற்கள்

நமது பூமி சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும். நான்காவது மற்றும் ஐந்தாவது கோள்கள் முறையே செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவையாகும். இவ்விரு கோள்களுக்கு இடையில் ஆயிரக்கணக்கான குறுங்கோள்களுடன் (Minor Planets) கோடானு கோடி கணக்கான விண்கற்கள் மிக அகல மான வட்டப் பாதை வழியாக சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை இவ்வாறு சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண் டிருக்கும்போது அவற்றுள் சில பாதை விலகி பூமிக்கு அருகில் வந்து விடுகின்றன. அப்போது அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியின் மீது விழுந்து விடுகின்றன எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

அறிவியலாளர்களின் மேற்கண்ட கூற்றிலிருந்து இந்தக் கல்மழையிலிருந்து பூமி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் இல்லையேல் அது பூமிக்கு ஆபத்தாக முடியும் என்பதும் எளிதாகப் புலனாகும். ஏனெனில் விண்கற்களின் வேகம் அவ்வளவு அபாரமானதாகும். விண்கற்கள் பெரும்பாலும் சிற்றுருவம் கொண்டவையே ஆகும். அவை சிறு கூழாங் கற்களின் (Pabbles) பருமனிலிருந்து மணற்துளி வரை யிலானவைகளாகவே காணப்படுகின்றன. இருப்பினும் இவை அமிதமான வேகம் கொண்டவைகளாக இருப்பதால் இதன் தாக்குதல் பூமிக்கு கூரையில்லாதிருப்பின் மிக ஆபத்தாகவே அமையும். அவைகளின் வேகத்தை அறிவியலாளர் டேவிட் சன் கீழ்கண்டவாறு கணக்கிடுகிறார்.

விண்கற்களின் சாதாரண வேகம் (Normal Speed) வினாடிக்கு 26 மைல்கள். பூமி சூரியனைச் சுற்றும் வேகம் வினாடிக்கு 18 மைல்கள். எனவே பூமியும் விண்கற்களும் எதிர் எதிராக சந்தித்தால் விண்கல் மோதலின் தாக்கம் (26+1844 ஙூ மைல் / வினாடியாகும். அதே நேரத்தில் அவை ஒரே திசையில் ஒன்றை ஒன்று முந்தும் (Over Take) போது விண்கல் மோதலின் தாக்கம் (26-187 மைல் /வினாடியாகும். (பக்கம் : 243, அட்ரானமி ஃபார் எவரி மேன்)

விண்வெளிக் கப்பல்களையும் துளைத்துச் செல்லும் விண்கற்கள்

விண்கற்களின் இந்த அமிதமான வேகம் உயிரினங் களுக்கு மட்டுமன்றி விண்ணில் பயணம் செய்யும் விண் கலங்களுக்கும் மிக ஆபத்தானதாகும். ஒரு விண்கல் ஒரு அங்குலத்தின் நாற்பதில் ஒருபங்கு பருமன் மட்டுமே இருந்த போதிலும் அது வினாடிக்கு40 மைல் வேகத்தைப் பெற்று விட்டால் ஒரு அங்குலம் பருமன் கொண்ட இரும்புத் தகட்டை கூட துளைத்து விடும் ஆற்றல் பெற்றதாக அது மாறிவிடும். அப்படிப் பார்க்கும்போதுவிண்வெளியில் பயணம் செய்யும் நமது விண்வெளிக் கப்பல்கள் ஏன் இதனால் பாதிக்கப்படுவதில்லை என்ற கேள்வி இயல்பானதே. இத்துறையில் ஆய்வுகள் நடத்திய னுச. வில்கின் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

``.... எந்த நேரத்திலும் நிகழும் வாய்ப்புள்ள விண்கல் தாக்குதல் ஆபத்தானவையாகும். நமது பயணத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் - விண்கற் களுக்கு எதிரான திசை மாற்றுத் தகடுகள் (Deflection Plates) - தேவையாகும். அவற்றுள் ஒன்று கப்பலைத் தாக்கதாம் செய்தது என்றால் அது நேராகக் கப்பலுக்குள் சென்று விடும். ஏனெனில் விண்கற்கள் பூமியைவிட அதிகமான வேகத்தில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் மிக நுண்ணிய கிரகங் களாகும்.

(பக்கம் 92,93, அட்ரானமி ஃபார் எவரி மென்)

உயிரின வாழ்விற்கு

ஆகாயக் கூரையின் அவசியம்

இப்படி விண்வெளிக் கப்பல்களையே துளைக்கும் ஆற்றல் இந்த மணற்துளி போன்ற நுண்ணிய கிரகங்களுக்கு (Minute Planets-இவை சூரியனைச் சுற்றி வருகின்ற காரணத் தாலேயே இவைகளுக்கு கிரகங்கள் எனும் பெயர் கூறப்படுகிறது.) இருக்குமாயின் புவிவாழ் உயிரினங்களின் உடலைத் துளைப்பது அப்படியொன்றும் கடினமான காரியம் இல்லை என்பது தர்க்கத்திற்கு இடமில்லாத உண்மையாகும்.

இப்போது நமது வானிலை இயல் (Meterororlogy) மற்றும் விண்வெளிப் பயணவியல்(Aeronanatics) போன்ற துறை களில் ஆய்வுகள் நடத்தும் விஞ்ஞானிகள் பொய் சொல்ல வில்லை என உங்களால் ஏற்க முடிந்தால் இவ்வளவு ஆபத்தான உலோகத் தகட்டையே துளைக்கும் ஆற்றல் பெற்ற 10 கோடி விண்கற்கள் ஒவ்வொரு நாளும் பூமியின் மீது வீழ்ந்து கொண்டிருந்தால் இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி எந்த ஒரு உயிரினமும் வாழ்தல் சாத்தியமாஉலோகத்தைவிட ஆற்றல் வாய்ந்த உடலுள்ள உயிரினம் ஏதேனும் இவ்வுலகில் உண்டாஆயினும் இந்த பூமியில் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தொல்லையின்றி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது எப்படி சாத்தியமாகிறது?என்பதை சிந்தித்துப் பார்க்க வேடும். இதிலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் விண்கற் களுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு கூரையைப் போன்று செயல்படும் ஒரு பொருள் இருக்கிறது என்பது மிகத் தெளிவான செய்தியாகும்.

ஒவ்வொரு நாளும் நாம் செய்தித்தாளைப் புரட்டும் போதோ அல்லது வானொலி மற்றும் தொலைக்கட்சி செய்திகளின் வாயிலாகவோ பலவகையான விபத்துகளை பற்றிய செய்திளையும் அந்த விபத்துகளில் பலபேர் மரண மடையும் செய்தியையும் கேள்விப்படுகிறோம். ஆனால் விண்கற்கள் விழுந்து மக்கள் பலியாகும் செய்திகளை நாம் எப்போதேனும் கேள்விப்பட்டதுண்டாபூமிக்கு ஒரு கூரை இருக்கிறது என்று கூறிய திருக்குர்ஆனின் அறிவியலை இது நிரூபிக்கவில்லையா?

வெவ்வேறு திசையிலிருந்துவெவ்வேறு விண்கற்கள்

விண்ணிலிருந்து பூமியின் மீது விழும் விண்கற்களில் முன் கூறப்பட்ட விண்கற்களைவிட நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமான விண்கற்கள் சூரியக் குடும்பத்திற்கு அப்பாலிருந்து பூமியின் மீது வந்து விழுகின்றன. அவை களையும் கணக்கிலெடுக்கும்போது அறிவியலாளர் டேவிட்சன் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்குள் பூமியின் மீது 8000 தச இலட்சம் (8000 ஆடைடடி = 800 கோடி) விண்கற்கள் வீழ்வதாகக் கணக்கிட்டுள்ளார்.

(பக்கம் : 241, அட்ரானமி ஃபார் எவரி மென்)

மேற்கண்ட புள்ளி விபரத்தில் கூறப்பட்டபடி ஒவ்வொரு நாளும் 800 கோடி விண்கற்கள் பூமியில் வீழ்வதாகவும் அவற்றுள் ஒரே ஒரு சதவீதம் மட்டும் மனிதர்கள் வாழும் பகுதிகளைத் தாக்குவதாகவும் வைத்துக் கொண்டால் இப்போது இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொத்த மனிதர்களும் அழிவதற்கு ஒரு சில மாதங்களே போதுமான தாகும். ஆயினும் இந்த விண்கற்களால் நாம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கஒவ்வொரு நாளும் இந்த பூமியின் மீது இவ்வளவு பெருவாரியான விண்கற்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தி திருக்குர்ஆன் கூறியது போன்று பூமிக்கு ஒரு கூரை இருக்கிறது என்பதும் அந்தக் கூரை விண்கற்களால் நிகழக் கூடிய ஆபத்தைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மையென நிரூபிக்கிறதன்றோ?

விண்கற்களின் பரிமாணங்கள்

பூமிக்கு ஒரு கூரை இல்லாதிருந்தால் விண்கற்களின் தாக்குதல் உயிரினங்களுக்கு மட்டுமன்றி பூமியின் மேற் பரப்பையே தகர்க்கும் அளவிற்கு ஆபத்தானதாகும். ஏனெனில் விண்கற்களில் பெரும்பாலானவை மணற்துளியி லிருந்து சிறு கூழாங்கற்கள் வரையிலானவையாக இருந்த போதிலும் அவற்றுள் சில ஆயிரக்கணக்கான கிலோ கிராம் எடை கொண்டவையாகும். இத்துறையில் ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகள் ``சராசரியாக அவை சில மணற்துளி அளவே இருந்த போதிலும் அவற்றுள் டன் கணக்கில் எடைகொண்ட ஏராளமான விண் கற்களும் உண்டு (பக்கம் 131, நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன்) எனக் கூறுகிறார்கள்.

இந்த இடத்தில் சில வருடங்களுக்கு முன் (1994) நமது வியாழன் கோளில் ``ஷு மேகர் லெவி (Shoe Maker Levi) எனும் பிரமாண்டமான ஒரு விண்கல் 21 துண்டுகளாக சிதறுண்டு மோதியதை நாம் செய்தித் தாள்களிலும் ஏனைய ஊடகங் களின் வாயிலாகவும் அறிந்தோம். இதன் விளைவாக பூமியின் விட்டத்தை ஒத்த குழி அங்கு தோன்றியதையும்,இன்னபிற பாதிப்புகள் அங்கு ஏறபட்டதையும் செய்திகள் வாயிலாக அறிந்தோம். நமது பூமியிலும் நூற்றுக்கணக்கான கோடி வருடங்களுக்கு முன் இப்படிப்பட்ட பெரும் விண்கற்கள் அடிக்கடி வீழ்ந்து கொண்டிருந்ததாகவும் பூமியின் கூரை அந்த வீழ்ச்சியின் தாக்கத்தை பெருவாரியாகக் குறைத்து பூமியின் மேற்பரப்பு சிதைவடையாமல் காப்பாற்றியதாகவும் அறிவிய லாளர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் இப்படிப்பட்ட பெரிய அளவிலான விண்கல் தாக்குதல் ஒன்று அண்மை காலத்தில் நடைபெற்றதால் அதன் அடையாளம் மறைந்து விடாமல் இப்போதும் தெளிவாகக் காட்சி அளிக்கிறது. கீழ்காணும் வரிகள் அரிசோனாவில் நடைபெற்ற விண்கல் தாக்குதல் பற்றிய அறிவியலாளர் டேவிட்சன் அவர்களின் கூற்றாகும்.

அரிசோனாவில் விண்கல் தாக்குதல்

``அரிசோனாவிலுள்ள கானன்டயபோலாவிற்கருகிலுள்ள புகழ்பெற்ற குழி ஒருபெரிய விண்கல்லால் உருவாக்கப்பட்ட தாகும். இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடை பெற்றதால் இதற்கான பதிவேடுகள் ஏதும் இல்லை. இந்தக் குழி 570அடி ஆழமும், 4200 அடி விட்டமும் கொண்டதாகும். இந்தக் குழியின் ஆறு மைல் சுற்றளவிலிருந்து ஒவ்வொன்றும் பல டன்கள் எடைகொண்ட விண்கல் (இரும்பைப் பிரதானமாகக் கொண்டது) துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. பிரதான எடைப்பகுதி பூமிக்குள் புதைந்து போனது. இந்த விண்கல் தாக்குதலின் போது அகழப்பட்ட குழியிலிருந்து வீசி எறியப்பட்ட இருபது கனகஜ (20 ஊரஉ லுயசன) மண்ணிலிருந்து சமீபத்தில் 67 உலோக விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் ஙூ பவுண்டு எடை கொண்டவையாகும். அந்த குழியின் ஓரங்களில் சிடார் மரங்கள் (Cedar Trees) வளர்கின்றன. இம்மரங்கள் இங்கு வளர்வதற்கு முன்பே குழி அங்கு தோன்றியுள்ளது. மரங் களின் வயது 700 வருடங்களாக மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. அக்குழியின் சுற்றுப்புறத்திலுள்ள பாறைகளின் காலமாற்றச் சிதைவை (Weathering) மதிப்பீடு செய்து அக்குழி தோன்றிய அதிகபட்சக் காலம் நிர்ணயிக்கப்பட்டது. அது 5000வருடங்களாகும். இவ்விரு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச எல்லைக்குட்பட்ட காலத்திற்கிடையில் எப்போது வேண்டுமாயினும் அந்த விண்கல் வீழ்ச்சி நடைபெற்றிருக்கலாம்.

(பக்கம் : 252-253, அட்ரானமி ஃபார் எவரி மென்)

அறிவியலாளர் டேவிட்சனின் மேற்கண்ட மேற்கோளி லிருந்து பூமிக்கு கூரை இருக்கின்ற நிலையிலேயே அரிசோனாவில் விழுந்த விண்கல் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுத்தியது எனில் பூமிக்குக் கூரை இல்லாது இருந் திருப்பின் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடியுமல்லவா?

நாம் இப்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நமது பூமிக்கு கூரையாக அமைந்து இருப்பது பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் தங்கி நிற்கும் காற்று மண்டலமே என்பது பெரும்பாலான வாசகர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள். இருபதாம் நூற்றாண்டிலேயே பூமிக்குக் கூரையாக அமைந்திருக்கும் காற்று மண்டலம் இல்லாதிருப்பின் பூமியின் நிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பது சந்திரனை ஒப்பு நோக்கி புரிந்து கொள்ளும் வாய்ப்பை நமது அறிவியல் உலகம் பெற்றுவிட்டது. அங்கு காணப்படும் பெரும்பெரும் குழிகள் கூட பெரும் பெரும் விண்கற்களால் அகழப்பட்ட வையாகும் என அறிவியலாளர்களில் பலர் கருதுகின்றனர்.

பூமிக்கு ஒரு கூரை இல்லாதிருந்தால்.......

சந்திரனில் துளிகூட காற்று இல்லாததால் நிலவிற்கு கூரையே இல்லை. எனவே விண்கற்களின் தாக்குதல் சந்திரனை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. ``இயற்கையின் அணுகுண்டுகளைப் போன்று (Natural Atom Bombs) செயல்பட்ட பெரும் விண்கற்களால் தோன்றியவையே டைகோகோபர் நிக்கஅரிடார்ச்ச போன்ற பள்ளங்கள் என்று பல அறிவியலாளர்கள் நம்புவதாக அறிவியலாளர் வில்கின் கூறியுள்ளார் (பக்கம் : 30,அட்ரானமி ஃபார் எவரி மென்) மேலும் ``மிக துல்லியமான கோணத்தில் நிலவின் மீது வந்து மோதிய ஒருபெரும் விண்கல்லே நிலவின் பெரும் பள்ளத்தாக்குகளில் ஒன்றாகிய ஆல்பைன் பள்ளத் தாக்கை தோற்றுவித்ததாக அறிவியலாளர்கள் நம்புவதாக நியூ ஹாண்ட் புக் ஆப் ஹெவன் (பக்கம் : 12) கூறுகிறது.

செவ்வாய்-வியாழனுக்கு இடையில்

விண்கற்களின் தோற்றம்

சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வரும் விண் கற்கள் அவ்வப்போது நடைபெறுகின்ற வால்நட்சத்திரங் களின் சிதைவிலிருந்து தோன்றுவதாக நம்பப்படுகிறது. ஆயினும் செவ்வாய்க்கும்வியாழனுக்கும் இடையில் இருக்கும் விண்கற்கள் அங்கு முற்காலத்தில் ஒரு கோள் இருந்ததாகவும் அதன் சிதைவிலிருந்து குறுங்கோள்கள்விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்கள் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. இத்துறையில் புகழ்பெற்று விளங்கிய அறிவியலாளர் ஊர்ட் (Dr. J.H. Oort) அவர்களின் விளக்கத்தை அறிவியலாளர் டேவிட்சன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

``செவ்வாய்க்கும்வியாழனுக்கும் இடையில் முற்காலங் களில் இருந்த ஒரு கோள் உடைந்து சிதறியதிலிருந்தே குறுங்கோள்களும்விண்கற்களும் வால்நட்சத்திரங்களும் தோன்றின (பக்கம் : 237, அட்ரானமி ஃபார் எவரி மென்)

கற்களை அழிக்கும் காற்று!

நாம் இதுவரை கூறியதிலிருந்து பூமிக்கு மேல் விண்கற்கள் வினியோகிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவை சரமாரியாக பூமியின் மீது 24மணி நேரமும் வீழ்ந்து கொண்டிருக்கின்றன என்றும் ஆயினும் திருக்குர்ஆன் கூறியது போன்று காற்று மண்டலம் நமக்கு கூரையாக இருந்து இவைகளின் தாக்குதல்களிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டோம். இருப்பினும் காற்று எப்படி கற்களை தடுக்கும் என்ற ஐயம் மட்டுமே இப்போது சிலரிடம் எஞ்சி நிற்கும். எனவே அதைப் பற்றி ஹைடன் பிளானிட்டோரியம் விஞ்ஞானிகள் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.

``ஒவ்வொரு நாளும் 100,000,000 - ஐவிட அதிகமாக பூமியின் மீது வீசப்படும் விண்கற்கள் இடைவிடாத அருவி போன்று காற்று மண்டலத்தில் பொழிகின்றன. நமது பூமியைச் சூழ்ந்துள்ள காற்றுப் போர்வை (Air Blanket) இல்லாதிருப்பின் அவை பூமியின் தரைபகுதியை இடை விடாத தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கும். விண்கற்கள் என அழைக்கப்படும் இவை காற்றில் ஏற்படும் உராய்வின் காரணமாக வெப்பப்படுத்தப்பட்டு உருகி அல்லது எரிந்து சாம்பலாக மாற்றப்பட்டு பூமியின் விரிவான பரிமாணத்தில் தங்களது பங்கைச் செலுத்தும் பொருட்டு காற்று மண்டலத்தில் அடையாளம் தெரியாதபடி தங்கிவிடுகிறது.

(பக்கம் - 131, நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன்)

ஹைடன் பிளானிட்டோரிய விஞ்ஞானிகள் தரும் இரத்தின சுருக்கமான இந்த விளக்கம் விண்கற்களைபூமியை தாக்கவிடாமல் காற்று மண்டலம் எவ்வாறு தடுக்கிறது என்பதைக் கூறுகிறது.

இந்த பூமியைச் சூழ்ந்துள்ள வானம் நமக்குக் கூரையாகச் செயல்படவில்லையாயின்...! இங்கு எந்த ஒரு உயிரின மேனும் வாழ்ந்திருக்க முடியுமா?

விண்கற்களைப் பற்றி இதுவரை நாம் அறிந்த அறிவியல் உண்மைகளில் எந்த ஒன்றுமே பத்தொன்பதாம் நூற்றாண் டுக்கு முன் அறியப்பட்டிருக்கவில்லை. பூமியைச் சூழ்ந்திருக் கும் காற்று மண்டலம் வீட்டுக்கு கூரை போன்று ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே இருக்கிறது என்றும் அதற்கப்பால் காற்று மண்டலம் இல்லையென்றும் ஒருவர் அறிந்திரா விட்டால் பூமிக்குக் கூரை உண்டு என அவரால் கூறி இருக்க முடியுமா?

மேலும் பூமியின் மீது கல் மழையும் பெய்து கொண்டி ருக்கிறது என்றும் காற்று மண்டலமே அதைத் தடுத்து பூமியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்திராவிடில் பூமிக்குக் கூரையுண்டு என அவரால் கூறியிருக்க முடியுமா?

காற்று மண்டலத்தை பூமியின் கூரை என்று கூறியதி லிருந்து இந்த வீடான பூமி போகும் இடத்திற் கெல்லாம் அதன் மீது பொருத்தப்பட்டாற்போன்று இந்தக் காற்று மண்டலமும் போகிறது என்றும்பூமி சுழலும்போது காற்று மண்டலமும் அதனுடன் சுழல்கிறது என்றும் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் பூமியின் மீது ஒரு கூரை இருக்கிறது என்று அவரால் எப்படிக் கூறியிருக்க முடியும்?

மிக நிச்சயமாக குறைந்தபட்சம் மேற்கண்ட அறிவியல் செய்திகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பூமிக்குக் கூரை உண்டு என்று ஒருவரால் கூற முடியாது. எனவே இது நிச்சயமாக இறைவேதமே என ஏற்பதில் இன்னும் என்ன தயக்கம்ஒரு மானிடனுடைய அறிவிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் இவ்வளவு ஆழமான அறிவியல் உண்மைகள் பிறப்பெடுக்க முடியுமா?

இரும்பைப் பொழியும் வானம்

இப்போது பூமியின் வளிமண்டலத்தில் ஒவ்வொரு நாளும் பெய்திறங்கும் கோடிக்கணக்கான விண்கற்களைப் பற்றி இந்த வான்மறைக் குர்ஆன் தன்னுடைய மற்றொரு அறிவியல் வசனத்தில் மிக அற்புதமாகக் கூறியுள்ளது. அது வருமாறு:

``இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடுகளும் மிக்க வலிமைகளும் உண்டு

(57:25)

அறிவியலாளர்களை சொல்லொணா வியப்பிற்குள் ஆழ்த்தி விடக் கூடியதே மேற்கண்ட திருமறை அறிவிய லாகும். இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாமும்கூட இதுவரை ஆகாயத்திலிருந்து மழை பொழிவதைப் பார்க்கிறோமே தவிர இரும்பு பெய்வதைப் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆனுக்கு ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயம் இரும்பு மழை பொழிவதைப் பற்றி தெரிந்திருந்தது. இரும்பு வானிலிருந்து எவ்வாறு இறக்கப்படுகிறது என்பதை நாம் மீண்டும் கூற வேண்டியதில்லை. பூமியின் மீது இடை விடாமல் பெரும் எண்ணிக்கையில் பெய்திறங்கும் விண் கற்களின் பெரும் பகுதி இரும்பும்,சிலிக்கனும் ஆகும். சிலிக்கன் என்ற பெயரையோஅப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ ஏழாம் நூற்றாண்டினருக்கு தெரிந்திராத போதிலும் இரும்பைப் பற்றி அவர்கள் மிக நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் என்பது கூறத் தேவையில்லை. எனவே பிற்பாடு வரப்போகும் அறிவியல் யுகங்களிலும் உண்மை யைத் தேடும் அறிவியல் அன்பர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்கள் எளிதாகத் திருக்குர்ஆனை இறைவேதம் என அடையாளம் காணும் பொருட்டு சொல்லப்பட்டிருக்கும் ஏராளமான அறிவியல் உண்மைகளில் ஒன்றாக இரும்பின் பெயரைப் பயன்படுத்தி விண்கல் பொழிவைப் பற்றிய அறிவியலையும் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே எடுத்துரைத்து விட்டது. இதை அற்புதம் என்று கூறாமல் வேறு என்னென்று இதைக் கூற முடியும்?

அந்த இரும்பில் அவன் இட்ட அடையாளம்

வானிலிருந்து இரும்பு இறக்கப்படும் செய்தியைப் பற்றி திருக்குர்ஆன் கூறியதைப் போன்றே பூமியிலும் ஒரு அற்புதம் நடந்தேறியது. திருக்குர்ஆன் கூறிய செய்தியைக் கேட்ப வர்கள் வானிலிருந்து இறங்குவதாகக் கூறப்படும் இரும்பு ஏதோ சில விஞ்ஞானிகளின் புதைபொருள் ஆராய்ச்சியில் (Archaeological Reseaech) மட்டுமே கிடைக்கக் கூடியதாக இது இருக்கலாம் என்றே எண்ணக் கூடும். ஆனால் நடந்ததோ வேறு விதமாக!

இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு தாதுப் பொருள் என்பதும்தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமி உருவாகும்போது அதன் கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகிய இரும்பும் இருந்திருக்க வேண்டும். ஆயினும் பூமியில் இயல்பாக இருக்கும் இந்த இரும்பிலிருந்து விண்கற்களாக வரும் இரும்பை வேறுபடுத்திக் காட்டும் தடயம் ஒன்று அதில் இருந்தது. எல்லா உலோகங்களிலும் பொதுவாக வேறு உலோகங்கள் மிகக் குறைந்த அளவு கசடாகக் கலந்திருக்கும். இந்தக் கசடில்தாம் மேற்கூறிய அடையாளம் காணப்பட்டது.

நமது பண்டைகால முன்னோர்கள் பயன்படுத்தி வந்த விதவிதமான போர்க் கருவிகளைக் கண்ணுறும்போது அவை களின் வயதிலிருந்து அவைகளை உருவாக்கப் பயன் படுத்திய உலோகங்களை சோதித்து அறிய வேண்டும் என்ற எண்ணம் விஞ்ஞானிகளிடம் தோன்றுவது இயல்பே. எனவே அக்கருவிகளின் உலோகங்களைச் சோதித்தபோது பூமியில் இயல்பாக உள்ள இரும்பில் இல்லாத கசடுகளான கோபால்டு மற்றும் சிலிக்கன் ஆகியவை அக்கருவியிலுள்ள இரும்பில் இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் பெரும் வியப்பிற் குள்ளாயினர். விண்கற்களிலிருந்து கிடைத்த இரும்பைப் பகுப்பாய்வு செய்தபோதே அப்போற்கருவிகள் விண்கற்களாக பூமியில் பெய்திறங்கிய இரும்பால் செய்யப்பட்டவையாகும் எனத் தெரிந்து கொண்டார்கள். எனவே மழையைப் போன்று விண்ணிலிருந்து இறக்கப் படுவதாக திருக்குர்ஆன் கூறிய இரும்பு வெறும் தொல் பொருள் ஆராய்ச்சியினர் கண் டெடுத்த பொருளாக மட்டுமின்றிபண்டைகாலம் தொட்டே மனிதர்களின் பயன் பாட்டில் இருந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. பூமியின் மீது சரமாரியாகப் பெய்திறங்கும் விண்கற்களைப் பற்றிய திருக்குர்ஆனின் அறிவியல் ஞானம் எவ்வளவு ஆழமானது என்பதை இது எடுத்துக் காட்டுகிறதன்றோ?

ஆயினும் சிலர் அப்போதும் மறுப்பர்

நாம் இந்த அத்தியாயத்தில் இதுவரை கூறிய விபரங்களி லிருந்து பூமியைச் சூழ்ந்துள்ள மிகமிகச் சொற்பமான ஆகாயப் பகுதி அண்டவெளியின் கற்பனைக்கெட்டாப் பெருவெளியி லிருந்து வேறுபட்டு பூமியில் விழுந்துகொண்டிருக்கும் கோடானுகோடிக்கணக்கான விண்கற்களை அழித்து பூமியில் மேற்பரப்பை காப்பாற்றும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் இதன் காரணமாக அப்பகுதி பூமிக்குக் கூரையாகச் செயல்படுகிறது என்றும் இம்மியளவும் ஐயத்திற்கிடமின்றி தெரிந்து கொண்டோம்.

பூமிக்கு ஒரு கூரை உண்டு என்றும் அந்தக் கூரை இல்லையென்றால் விண்கற்களின் தாக்குதலால் உயிரினங்கள் இங்கு வாழ முடியாத நிலை ஏற்படும் எனும் இந்த அறிவியல் உண்மை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தி லேயே ஐயத்திற்கிடமின்றி அறியப்பட்டிருந்தது. இதைக் குறித்து அல்ஜன்னத் மாத இதழில் (12-93) ஒரு சுருக்கமான கட்டுரை எழுதியிருந்தோம். அக்கட்டுரையில் வழக்கம்போல் பூமிக்கு ஒரு கூரையுண்டு எனும் அறிவியலைத் திருக்குர்ஆன் கூறியதிலிருந்து திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கு அது ஆதாரமாகும் எனும் திருக்குர்ஆனின் உரிமைக் கோரலை யும் (Claim)எழுப்பி இருந்தோம். அக்கட்டுரையை எழுதும் போதே பூமியின் கூரையைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் மற்றொரு செய்தியும் கவனத்தை ஈர்த்தது. அது வருமாறு:

வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

(21:32)

மேற்கண்ட வசனத்தின் முதல் வரியில் கூறப்பட்டிருப்பது மேலும் ஆழமான அறிவியலாகும். அது மற்றொரு தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் இரண்டாவது வரியில் கூறப்பட்டிருக்கும் செய்தியைக் கண்டபோது பூமியின் மீது வலுவாக கவசமிட்டு நிற்கும் அதன் கூரையின் சான்றுகளை இதற்குமேல் புறக்கணிக்கும் துணிவு யாருக்கு இருக்கக் கூடும் என யோசித்தோம். ஆனால் இதைக் கூறியது திருக் குர்ஆன் அன்றோ?திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை யன்றோஎனவே நம்முடைய கட்டுரை வெளியான எட்டே மாதங்களில் பூமியின் கூரை என்ற அத்தாட்சிகளைப் புறக் கணித்து திருக்குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை உண்மையே என நிரூபிக்க இதோ நாங்கள் தயாராக வந்துள்ளோம் என ஆர்ப்பரித்துக்கொண்டு ஒருமாதம் இருமுறைத் தமிழ் பத்திரிகை தமிழகத்தில் குரலெழுப்பி நம்மை வியப்பிற்குள் ஆழ்த்தியது!

ஒரு விந்தை மிகு விமர்சனம்

அந்த பத்திரிகையில் பூமியின் மீது போர்த்தப்பட்டுள்ள கூரையின் சான்றுகளை புறக்கணிக்கப் புகுந்த கட்டுரை யாளர் எழுதிய மறுப்பின் பிரதான சாராம்சம்காற்று மண்டலத் தில் எரிக்கப்படும் விண்கற்கள் குண்டூசியின் கொண்டை அளவிற்கு பருமன் கொண்டவைகளே என்பதும் இவ்வளவு சின்னஞ்சிறிய விண்கற்களை காற்று மண்டலம் தடுக்கா விட்டாலும் அதனால் நமக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்றும் எனவே காற்றுமண்டலத்தை பூமியின் கூரை என்று குறிப் பிட்டிருப்பது திருக்குர்ஆனை இறைவேதம் என நிரூபிப்ப தற்காக செய்யப்பட்ட அறிவியல் மோசடியே என்பதாகும்.

எவ்வளவு வேடிக்கையான விமர்சனம் இது! இந்த அத்தியாயத்தை வாசித்த வாசகர்களால் உள்ளபடியே அறிவியல் மோசடி செய்பவர் யார் என்பதைக் கூடுதல் விளக்கமின்றித் தெரிந்து கொள்ள முடியும். காற்று மண்டலம் விண்கற்களைத் தடுக்காவிட்டாலும் அதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும்எனவே காற்று மண்டலம் பூமிக்குக் கூரையாகும் எனக் கூறுவது அறிவியல் மோசடி என இருபதாம் நுற்றாண்டின் இறுதியில்கூட அறிவியலின் மொத்த உரிமையாளர்களாய் தங்களைக் கூறிக்கொள்ளும் சிலரால் கூசாமல் கூற முடிகிறது என்றால் இது எதைக் காட்டுகிறது? ``அதிலுள்ள சான்றுகளை அவர்கள் புறக்கணிக் கின்றனர் எனத் திருக்குர்ஆன் கூறிய வார்த்தை யின் நிறைவேற்றத்தைக் காட்டவே இப்படியும் சிலரால் இப்போதும் கூற முடிகிறதே அன்றி இது வேறு எதையும் காட்டுவதாக நமக்குத் தெரியவில்லை!

எப்பாடுபட்டாவது திருக்குர்ஆன் ஒரு மானிடப் படைப்பே அன்றி இறைவேதம் இல்லை எனச் சாதிக்க வேண்டும் என்றெண்ணிகாற்றுமண்டலத்தில் எரிக்கப்படும் விண்கற்கள் குண்டூசியின் பருமன் அளவிற்கே பருமன் கொண்டவைகளாக இருப்பதால் காற்று மண்டலத்தின் உதவியின்றி அவை நம்மைத் தாக்கினாலும் அதனால் நமக்கு ஆபத்து ஒன்றுமில்லை எனக் கூறுவோர் அந்த நுண்மையான விண்கற்களில் ஒன்று ஒரு விண் கப்பலில் மோதினால் அந்த விண் கப்பலைத் துளைத்துச் சென்றுவிடும் என்பன போன்ற விபரங்களைக்கொண்ட அறிவியலாளர்கள் எழுதிய நூல்களைச் சிலராவது படித்துப் பார்த்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்ப்பது நன்று. ஏனெனில் விண் கப்பல்களின் கட்டுமானப் பொருட்களாம் உலோகங்களைக் காட்டிலும் மானிடனின் தோல் மிகவும் வலிமை வாய்ந்தது எனும் பரிகாசத்திற்குரிய ஒரு பச்சைப் பொய்யை நாகூசாமல் துணிந்து சொல்வதற்கு ஒப்பான சொயலாகும் அது.

மேலும் இதுபோன்ற பொய்களைக் கூறுவதன் வாயிலாக திருக்குர்ஆனைப் பொய்ப்பித்து,அதை ஒரு மானிடப் படைப்பாகக் காட்ட வேண்டும் என்ற அவர்களின் எண்ணத் திற்கு விரோதமாக அவர்கள் செய்யும் மோசடிகள் திருக் குர்ஆனை மேலும் மேலும் வார்த்தைக்கு வார்த்தை மெய்ப் பித்துஅதை இறைவேதம் என நிரூபிக்கவே பயன்படும் என்பதையும் கவனத்தில் கொள்வது நன்று.

கதிர்வீச்சைத் தடுக்கும் ஓசோன்

பூகோளத்தைச் சூழ்ந்துள்ள ஆகாயப் பகுதி பூமிக்கு ஒரு கூரையாக ஆக்கப்பட்டுள்ளது எனக் கூறும் திருக்குர்ஆனின் அறிவியலை நிரூபித்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியாக விண் கற்கள் சரமாரியாக அசுர வேகத்தில் பூமியின் மீது பாய்வதையும் அவைகளின் பேராபத்திலிருந்து காற்று மண்டலம் பூமியைக் காப்பாற்றிக்கொண்டிருப்பதையும் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். இந்த அத்தியாயத்திலும் முன் கூறப்பட்ட அதே திருக்குர்ஆன் வசனத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் மற்றொரு வலுவான ஆதாரத்தைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

இங்கு விவாதிக்கப்போகும் விபரங்கள் சூரியனுடன் தொடர்பு கொண்டவையாகும். இருபத்து ஒன்றாம் நூற்றாண் டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்சூரியன் என்பது பேரண்டத்தில் காணப்படும் பல்லாயிரம் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றாகும் எனவும்அது இயற்கை விதிகளால் ஆளப்படுகின்ற ஏனைய நட்சத்திரங்களைப் போன்று ஒரு பிரமாண்டமான அணு உலையே அன்றி வேறில்லை என்றும் அறிந்தவர்களாக இருக்கின்றோம். இருப்பினும் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் கூட சூரியனைக் கடவுளாக நம்பிக்கை கொண்டு வழிபடும் மனிதர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றனர்.

கம்ப்யூட்டர் யுகம் எனச் சிறப்பிக்கப்படும் இந்த யுகத்தில் கூட சூரியனின் மீதான பக்தி மக்களிடம் இந்த அளவுக்கு வேரூன்றிப் போயிருப்பின் சூரியனுடைய இயற்பியல் குணங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் `அது கடவுளே என நம்பிக்கை கொண்டிருந்த தொன்மை காலத்தில் சூரியனின் மீதுள்ள பக்தி எவ்வளவு வலுவானதாக இருந்திருக்கக்கூடும் என்பது யூகிக்கக் கூடியதே!

சூரியனின் அழிவுக்கதிர்

சூரியனுடைய உட்பகுதியில் தோன்றும் ஏராளமான அழுத்தமும் வெப்பமும் அணுக்களை அதன் சாதாரண நிலை யில் இருக்கவிடுவதில்லை. அணுக்களிலிருந்து அவற்றின் எலக்ட்ரான்கள் உரித்தெடுக்கப்பட்டு அவைகளின் அணுக் கருக்கள் பெரும் மோதல்களுக்கு இலக்காகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கில் இருந்து பெறப்படும் ஆற்றல் விண் வெளியில் இடைவிடாமல் பிரவாகித்துக்கொண்டிருக்கிறது. இதைப் பற்றி அறிவியலாளர்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றனர்.

``சூரியனின் மேற்பரப்பிலிருந்து கதிர்வீச்சு இடை விடாமல் வெளியேறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கதிர் வீச்சை நிலைநிறுத்துவதற்காக ஏறக்குறைய 40 இலட்சம் டன் சூரியப் பொருட்கள் ஒவ்வொரு வினாடியிலும் ஆற்ற லாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இம்மாபெரும் ஆற்றல் கிட்டத்தட்ட முழுவதுமே விண்வெளியில் வீணாக்கப்படும் போது அதில் 10 கோடியில் ஒரு பங்கு மட்டுமே கோள்களால் இடைமறிக்கப்படுகிறது.

(பார்க்க : அட்ரானமி ஃபார் எவரி மென்பக்கம் 23)

அறிவியலாளர்களின் மேற்குறிப்பிடப்பட்ட மேற்கோளி லிருந்து சூரியன் வெளியிடும் ஆற்றலிலிருந்து குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவு மிகக் குறைந்த ஆற்றலையே சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள் பங்கிட்டுக் கொள்கின்றன என்றும்அதிலும் ஒரு சிறு பகுதியையே பூமி பெறுகிறது என்றும் புலனாகிறது. இருப்பினும்பூமி பெறுகின்ற இந்த மிக மிகக் குறைந்த சூரியக் கதிர்வீச்சில் கூட உயிரினங்களை ஒட்டு மொத்தமாக அழிக்கக்கூடிய அளவிற்கு ஆபத்தான கதிர்வீச்சும் ஒன்றாகும். புறஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) என்பது இதன் பெயராகும். இதன் அலை நீளம் மிகக் குறுகிய தாக இருப்பதால் இது கட்புலனாகா ஒளிக்கதிர்களாகும். (கட்புலனாகும் ஒளியின் அலை நீளம் கிட்டத்தட்ட ஒரு சென்டி மீட்டரில் 4கோடியிலிருந்து 7 கோடியில் ஒரு பங்காக இருக்க வேண்டும்.) இந்த ஒளிக்கதிர்கள் மனிதர்களை மட்டுமன்றி புற்பூண்டுகளைக்கூட கூண்டோடு அழிக்கும் ஆற்றல் பெற்றவை ஆகும். இந்த மிகக் கொடிய ஆபத்தான கதிர்வீச்சிலிருந்து பூ உலகைக் காத்துஅதன் மீது உயிரினங் களை வாழவைத்துக் கொண்டிருப்பதும் பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலமாகும்.

ஓசோனும் ஒரு கூரையே!

காற்று மண்டலமும் அடுக்குகளாகவே அமைந்துள்ளது. அவற்றின் கீழ் மூன்று அடுக்குகளில் `ஓசோன் என்றழைக்கப் படும் கோளவடிவப்படலங்கள் காணப்படுகிறது. சூரியக் கதிர்கள் பூமிக்கு வரும் வழியில் காற்று மண்டலத்தை ஊடுருவும்போது அதிலுள்ள புறஊதாக் கதிர்கள் இந்த ஓசோன் படலங்களால் உட்கவரப்படுகிறது. இவை ``ஓசோன் அடுக்குகள் (Ozone Layers) என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும் புவிவாழ் உயிரினங்களுக்கு உயிர் கவசம் போன்று செயல்படும் இந்த படலங்களின் பருமன் வியப் பூட்டும் அளவிற்கு மிக மெல்லியவையாகும். இவற்றின் பருமன் 0.5 சென்டி மீட்டருக்கும் குறைவானதாகும்.

(பார்க்க : அமைதிக்கதிரவன்பக்கம் 273 முதல்பதிப்பு 1973,

மிர் வெளியீட்டாளர்மாகோ)

இப்போது பூகோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத் தில் இந்த ஓசோன் மட்டும் இல்லாதிருப்பின் பூமியை நோக்கிவரும் புறஊதாக் கதிர்கள் தங்குதடையின்றி நேராக பூமியை அடைந்து உயிரினங்கள்யாவையும் சிறுகச்சிறுக உருக்குலையச் செய்து காலப்போக்கில் முற்றாகவே அழித் திருக்கும் என்பது தெளிவு.

காற்று மண்டலம் விண் கற்களைத் தடுக்காவிட்டாலும் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனக் கூறி பூமிக்கு ஒரு கூரை உண்டு எனப் பிரகடனம் செய்த திருக் குர்ஆனையும்அதன் தோற்றுவாயாம் இறைவனையும் மறுத்தவர்கள்ஓசோனையோ அல்லது புறஊதாக்கதிர்களின் அழிவாற்றலையோ மறுப்பதற்கு என்ன விளக்கத்தைக் கூறப் போகிறார்கள்ஆயினும் அறிவியலை மதிக்கும் யாரும் இந்த பூமிக்கு ஓசோன் ஒரு கூரையே என்பதையும்எனவே பூமிக்கு கூரை உண்டு எனக் கூறிய திருக்குர்ஆனின் வார்த்தைகள் உண்மையே என்பதையும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

வானிலுள்ள கோள்களில் ஒன்று மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கோளாக மாறவேண்டுமாயின் என்னென்ன சிறப்பம்சங்களை அது பெற்றிருக்க வேண்டும் என்றும்,அதனுடைய ஆகாயம் அதற்கொரு கூரையாக அமைய வேண்டுமானால் அதன் செயற்பாடு என்னென்ன விதத்தில் அமையவேண்டுமென்றும் ஒரு சில அத்தியாயங்களில் நாம் விரிவாகப் பார்த்தோம். இந்தப் பின்னணியில் ``அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு ஒரு வசிப்பிடமாகவும்வானத்தை ஒரு கூரையாகவும் அமைத்தான் (40:64) எனத் திருக்குர்ஆன் கூறவேண்டுமானால் அதன் அறிவியல் ஆழம் எவ்வளவு அற்புதமானது என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மானிடனின் அறிவிலிருந்து இப்படிப்பட்ட அபாரமான அறிவியல் பிரகடனங்கள் ஒருபோதும் தோன்ற முடியாது என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை யோசிக்க வேண்டிய தேவையில்லை.

சூரியன் நடத்தும் விண்ணோட்டம்

முதல் பாகத்தில் மிகவும் விளக்கமாக நாம் பார்த்த சில அத்தியாயங்களில் திருக்குர்ஆன் புவி மையக் கோட்பாட்டை மறுப்பதாகவும் சூரிய மையக் கோட்பாட்டையே ஆதரிப்ப தாகவும் கூறினோம். ஆயினும் சூரிய மையக் கோட்பாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒரு பிழையான நம்பிக்கை நிலவி வந்துள்ளது. அந்த பிழையான நம்பிக்கைசூரியன் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது என்பதாகும். பூமி தம்மைத் தாமே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது எனக் கூறிய கோபர் நிக்ககெப்ளர்கலீலியோ போன்ற அறிவியலாளர்கள் கூட சூரியன் நகரவில்லை என்றும் அது ஒரே இடத்தில் நிற்கிறது என்றுமே கூறி வந்தனர்.

நவீன அறிவியல் உலகின் அதிவாரத்தை அமைத்த இந்த அறிவியலாளர்காளாலும் கூட சூரியனின் நகர்வைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கான காரங்களில் ஒன்றுபூமியில் நிகழும் இராப்பகல் மாற்றங்களுக்கு சூரியனின் நகர்வு எவ்வகையிலும் காரணமில்லை என்ப தாகும். இருப்பினும் திருக்குர்ஆன், ``இரவையும்பகலை யும்சூரியனையும்,சந்திரனையும் அவனே படைத்தான்ஒவ்வொன்றும் (அதனதன் பாதையில்) நீந்துகிறது (21:33) எனக் கூறியதை நாம் முன்னர் கண்டோம். இந்த வசனத்தில் சூரியனும் ஓய்ந்திருக்கவில்லை. அது ஓயாமல் விண்ணில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப் படையாக எடுத்துக் கூறுவதை நாம் கண்டோம்.

தொலைநோக்கியை கண்டுபிடித்த கலீலியோ அதன் உதவியால் சூரியனை ஆராய்ந்த பிறகும் கூட சூரியனின் அச்சில் சுழற்சியை மட்டுமே கண்டுபிடித்தாரே அன்றி சூரியனின் நகர்வை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த திறமை மிக்க விஞ்ஞானியும் கூட, ``சூரியன் நகரவில்லைஅது ஒரே இடத்தில் நிற்கிறது என்ற நம்பிக்கையில் இறந்து போனார். ஆயினும் அவருக்கும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இறங்கிய திருக்குர்ஆன், ``சூரியன் நகர்கிறது எனும் பிழையற்ற அறிவியலைக் கூறியுள்ளது எனில் திருக் குர்ஆனின் அறிவியல் ஞானம் காலத்தை வென்றது என்பதை ஏற்பதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

சூரியனுக்கு ஒரு வசிப்பிடம்

சூரியன் நகர்கிறது என்று கூறிய திருக்குர்ஆன் சூரியன் எங்கு நகர்கிறது என்ற அற்புதமான அரிய அறிவியலையும் கூறியுள்ளது. அந்த திருமறை வசனம் வருமாறு :

சூரியன் அதன் வசிப்பிடத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

(36:38)

மேற்கண்ட திருமறை வசனம் இரண்டு முக்கியமான அறிவியல் உண்மைகளை எடுத்துக் கூறுகிறது. முதலாவது அறிவியல் உண்மைசூரியனுக்கும் ஒரு வசிப்பிடம் இருக்கிறது என்பதாகும். இரண்டாவது அறிவியல் உண்மைசூரியன் நகர்கிறது என்பதும் அதன் நகர்வு அதன் வசிப்பிடத்திலாகும் என்பதுமாகும். திருக்குர்ஆன் கூறும் இந்த இரண்டு அறிவியல் உண்மைகளும் பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கு மிகவும் வியப்பிற் குரிய செய்தியாகும் என்பது திண்ணம்.

பண்டைகால மக்களைப் பொருத்தவரை நாம் வாழும் பூமிக்கு ஒரு வசிப்பிடம் இருப்பதையே அவர்களால் விளங்கிக்கொள்ள இயலாதவர்களாகவே இருந்தனர். ஏனெனில் பூமி என்பது அசையாமல் ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் ஒரு நிலமாகவே அவர்கள் நம்பி வந்தனர். எனவே நடமாட்டமே இல்லாத ஒரு பொருள் அது எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதால் அப்படிப்பட்ட ஒன்றுக்கு ஒரு வசிப்பிடத்தின் தேவையை யாரும் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் பூமி ஒரே இடத்தில் நிலைத்திருக்கவில்லை. அது ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்த வுடன் அது எந்த இலக்கை நோக்கி ஓடுகிறது என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடந்து பூமி உட்பட சூரியக் குடும்பத்தி லுள்ள அனைத்துக் கோள்களும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக் கின்ற போதிலும்அவை சூரியனைச் சுற்றிச் சுற்றி வருகின்றனவே ஒழிய சூரிய குடும்பத்திற்கு அப்பால் அவை செல்வதில்லை என நிரூபிக்கப்பட்டது. எனவே கோடிக் கணக்கான வருடங்களாக பூகோளமும் இதர கோள்களும் சூரியக் குடும்பத்திற்குள்ளேயே ஓடிக்கொண்டிருப்பதால் பூமிக்கென்று ஒரு வசிப்பிடம் உண்டென்றும் அது சூரியக் குடும்பமே என்றும் இப்போது நாம் விளங்கிக் கொள்கிறோம்.

பூகோளமும் இதரகோள்களும் மட்டுமன்றி துணைக் கோள்கள் பலவும் ஆயிரக்கணக்கான குறுங்கோள்களும்வால் நட்சத்திரங்களும்கோடானுகோடிக் கணக்கான விண் கற்களும் சூரியக்குடும்பத்தை வசிப்பிடமாகக் கொண்ட அங்கத்தினர்களாகும். இக்குடும்பத்தில் இவை கோடிக் கணக்கான வருடங்களாக அமைதியாக வாழ்ந்து கொண் டிருக்கின்றன. ஏனெனில் இவை மனிதனைப் போலன்றி பற்பல சட்டங்களுக்குக் கீழ்படியாமல் அவையாவும் இறைவ னின் சட்டமாகிய ஈர்ப்பு விதிக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ்கின்றன என்பதனால் ஆகும்.

பால்வழி மண்டலம்

இப்போது பூமி சூரியக் குடும்பத்தில் ஓயாமல் ஓடிக் கொண்டிருப்பதைப் போன்று சூரியனும் விண்ணில் ஓடிக் கொண்டிருக்கிறது என திருக்குர்ஆன் கூறியதிலிருந்து ``சூரியனுக்கும் ஒரு வசிப்பிடம் உண்டாஅல்லது ஒரு வரைமுறை இன்றி இது தான்தோன்றித் தனமாக(Random) ஓடிக் கொண்டிருக்கிறதாஎன்ற கேள்வி எழுவது இயல்பானதே! இதைத்தான்``சூரியன் இலக்கில்லாமல் ஓடவில்லை என்றும் சூரியன் அதன் வசிப்பிடத்தில் (தாம்) செல்கிறது என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

திருக்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னர் கூறிய இந்த அதிப்பிரதானமான அறிவியல் உண்மையை பன்னிரண்டு நூற்றாண்டுகள் (பதினெட்டாம் நூற்றாண்டு வரை) அறிவியல் உலகம் மறுத்துவிட்டு அதன் பிறகே இந்த அறிவியல் உண்மையை அறிவியல் உலகம் ஒப்புக் கொண்டது.

இன்று சூரியன் என்பது ஏனைய நட்சத்திரங்களைப் போன்று ஒரு நட்சத்திரம் என்றும்,நட்சத்திரங்கள் யாவும் விண்ணில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்றும்அவை விண்ணில் ஓடிக்கொண்டிருந்தபோதிலும் அவைகளுக் கென்று வசிப்பிடங்கள் இருக்கின்றன என்றும் அந்த வசிப்பிடங்கள் கேலக்சிகள் (Galaxies-நட்சத்திர மண்டலங் கள்) என அழைக்கப்படுகின்றன என்பதும் நமக்குத் தெரியும். நமது சூரியன் வசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திர மண்டலத்தின் பெயர் ``பால்வழி மண்டலம் (Milky Way Galaxy) என்பதாகும்.

ஒரு கேலக்சியில் (நட்சத்திர மண்டலத்தில்) நட்சத்தி ரங்களைத் தவிர வெவ்வேறு வகையான பற்பல விண்ணகப் பொருட்கள் இருக்கின்றன என்பதை முன்னர் கூறியுள்ளோம். இப்பொருட்கள் யாவும் கேலக்சியின் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வருகின்றன. இப்பொருட்களை அவைகளின் வசிப்பிட மாகிய கேலக்சியிலிருந்து விலகிப் போகாமல் கேலக்சியின் ஈர்ப்பு விசை தடுத்துக்கொண்டிருக்கிறது. நமது சூரியனும் பால்வழி மண்டலத்திலுள்ள கோடிக்கணக்கான ஏனைய நட்சத்திரங்களும் ஏனைய விண்ணகப் பொருட்களும் திரும்பத் திரும்ப கேலக்சியின் மையத்தைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் 18 கோடி வருடங்களுக்கு ஒருமுறை கேலக்சியின் மையத்தை சுற்றி வருகிறது.

மானிடனின் பார்வைத் திறன்

பதினெட்டாம் நூற்றாண்டுவரை உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் கூட சூரியன் நகரவில்லை எனத் திருக் குர்ஆனுக்கு மாற்றமாகக் கூறிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தின் அறிவியல் வளர்ச்சியின் அளவைக் கருத்தில் கொண்டால் அவர்களின் அறிவியல் கணிப்பில் ஏற்பட்ட பிழை இயல்பானதே ஆகும். (ஆனால் இயல்பை மீறிய மாபெரும் அற்புதம் சூரியனைப் பற்றித் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே நிகழ்த்திய அறிவியல் பிரகடனமாகும் என்பதைக் கருத்தில் கொள்க!) மேலும் சூரியனின் நகர்வைக் கண்டுபிடித்தல் என்பது மிகவும் சிரமப்பட்டு செயல்படுத்த வேண்டிய ஒரு முயற்சியாகும்.

சூரியன் என்பது ஒரு நட்சத்திரமாகும் என்று நமக்குத் தெரியும். ஆதிகாலம் தொட்டு உலக மக்கள் நட்சத்திரங்களை நிலையானவை என்றும் அவை நகரவில்லை என்றும் கருதி வந்தனர். எனவே நகரா நட்சத்திரங்கள் எனும் ஒரு சொல் வழக்கு அவர்களிடம் இருந்து வந்தது. நட்சத்திரங்களின் நகர்வைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதனாலேயே அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.

நட்சத்திரங்கள் எனபவை சிறு புள்ளிகளாக வானில் தென்பட்ட போதிலும் அவை பூமியைக் காட்டிலும் பல்லா யிரம் மடங்கு பெரியவையாகும் என்பதை நாம் அறிவோம். ஆயினும் அவை பூமியிலிருந்து கற்பனைக் கெட்டாத தொலைவில் இருப்பதாலேயே இந்த அளவிற்கு சின்னஞ் சிறிய புள்ளிகளாகத் தென்படுகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கோணத்தில் பார்த்தால் இப்போது புள்ளிகளாகத் தெரியும் நட்சத்திரங்களைக் காட்டிலும் மிகமிக தொலைவிலுள்ள நட்சத்திரங்களை நாம் முற்றிலும் பார்க்க முடியாது என்பதே அதன் பொருளாகும். பேரண்டத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் இருக்கையில் வெறும் 9000 நட்சத்திரங்களை மட்டுமே நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும். ஆயினும் அவற்றில் 6000 மட்டுமே சிரமமின்றி எளிதாகப் பாக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு நிலவற்ற வானை ஆராய்ந்தால் அந்த இடத்தில் நின்று கொண்டு 2500-3000 நட்சத்திரங்களை மட்டுமே நம்மால் பார்க்க முடியும்.

மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் மேற்கண்ட புள்ளி விபரங்கள் அவைகளின் அளவிடற்கரிய தூரத்தை நமக்குப் புலப்படுத்துகிறது. நமது சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ப்ராக்சிமா சென்டரி (Proxima Centauri)யாகும். இது நமது சூரியனி லிருந்து வெறும் நான்கு ஒளியாண்டு தொலைவிலேயே இருக்கின்றபோதிலும் இந்த நட்சத்திரம் நமக்கு வெறும் ஒரு புள்ளியாகவே தெரிகிறது. இந்த உதாரணங்கள் யாவும் தெரிவிப்பது என்னவெனில் மனிதனுடைய பார்வைத் திறனை தூரம் எவ்வாறு பாதிக்கிறது என்பதாகும். இந்த தூரங்களோடு ஒப்பிடுகையில் நட்சத்திரங்களின் நகரும் தூரம் மிகமிகக் குறைவானதாகும். இவ்வளவு குறைந்த தூரத்தை இவ்வளவு தொலைவிலிருந்து மனிதன் வெறும் கண்களால் பார்த்துப் புரிந்து கொள்வது மிகக் கடினமான காரியமாகும் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஆங்கிலேய வானியல் கழகத்தின் செய்திப் பத்திரிகை ஆசிரியர் அறிவியலாளர் பி. டூயிக்(P. Doig) அவர்கள் நட்சத்தி ரங்களின் நகர்வை பூமியிலிருந்து கொண்டு பார்த்து அறிவதில் உள்ள சிரமத்தை ஓர் உதாரணத்துடன் விளக்கி யுள்ளார். ஒரு நட்சத்திரம் நமது நிலவின் அகலம் எவ்வளவோ அவ்வளவு தூரம் நகர்ந்ததாக பூமியிலிருந்து பார்க்க வேண்டுமானால் அதற்காக 190 வருடங்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறுகிறார். சுருங்கக்கூறின் பூமியிலிருந்து பார்க்கும்போது நட்சத்திரங்கள் யாவும் நகராமல் ஒரே இடத்திலேயே இருப்பதாகத் தோன்றும் என்பதே இதன் பொருளாகும்.

நட்சத்திரங்கள் நகராதது போன்று தோன்றினாலும் நகராத நட்சத்திரம் இப்பேரண்டத்தில் எதுவுமே இல்லை (``ஒவ்வொன்றும் விண்ணில் நீந்துகின்றது) என்பதை இன்று நாம் அறிவோம். நட்சத்திரங்கள் நகர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் ஹெர்ஷல் எனும் அமெச்சூர் (Amateur) விஞ்ஞானியே ஆவார். நட்சத்திரங்களின் நகர்வைப் பற்றிய இக்கண்டுபிடிப்பே சூரியனும் நகர்கிறது என்ற புரட்சிகரமான கண்டுபிடிப்புக்கு அவரை இட்டுச் சென்றது.

வருந்தத்தகு செய்தி

வில்லியம் ஹெர்ஷலைப் பற்றி நாம் முன்னர் கூறி யுள்ளோம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் தமது வீட்டின் மாடியில் தொலைநோக்கியை வைத்துக்கொண்டு நடத்திய ஆராய்ச்சியின் விளைவாகவே 1783ல் சூரியன் நகர்கிறது என்ற அபூர்வமான வியக்கத்தகு புரட்சிகரமான உண்மையை அவர் கண்டுபிடித்தார். ஆனால் வருத்தத் திற்குரிய செய்தி யாதெனில் கற்றவர்களின் இடையில்கூட கணிசமானவர்களிடம் சூரியன் நகர்கிறது என்ற செய்தி இன்றும்கூட சென்றடையவில்லை என்பதாகும்.

தமிழகத்தின் கல்லூரிகளில் ஒன்றில் `குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரையாற்றும்படி நாம் அழைக்கப்பட்டிருந்தோம். நம்முடைய உரையின்போது சூரியன் நகர்கிறது எனக் கூறும் திருக்குர்ஆன் வசனத்தை (36:38) யும் விளக்கியிருந்தோம். ஆயினும் ஹெர்ஷலின் ஆய்வைப் பற்றி கூறத் தேவையிருக்காது எனக் கருதினோம். அது கல்லூரி அரங்கமாக இருப்பதால் மாணவர்களுக்கு தெரிந்த செய்திகளையே திரும்பக் கூறி அலுப்புத் தட்டும்படி செய்ய வேண்டாம் எனக் கருதியதே அதற்குக் காரணமாகும்.

ஆயினும் உரை முடிந்து கேள்வி பதில் நேரம் ஆரம்பித்த போது அரங்கிலிருந்து ஒருவர் இவ்வாறு கேட்டார் : ``சூரியன் நகரவில்லை என்றே நாங்கள் கற்பிக்கப்பட்டோம். ஆனால் திருக்குர்ஆன் சூரியன் நகர்வதாகக் கூறுகிறது என உங்களுடைய உரையில் கூறினீர்கள். விளக்கம் தேவை! ஒரு கல்லூரி அரங்கிலிருந்து இப்படி ஒரு கேள்வியை உண்மையிலேயே நாம் எதிர்பார்க்கவில்லை. விசாரித்த போது அந்த சகோதரர் மாணவர் இல்லை என்றும் அக்கல்லூரியின் ஒரு கடைநிலை ஊழியர் என்றும் தெரிய வந்தது. இந்த அனுபவம் தந்த படிப்பினை காரணமாக வில்லியம் ஹெர்ஷல் சூரியன் நகர்கிறது என எவ்வாறு நிறுவினார் என்பதை சுருக்கமாகத் தருகிறோம்.

ஹெர்ஷலின் அபாரத் திறமை!

ஹெர்ஷல் அவர்களின் மேற்கூறிய ஆராய்ச்சியைப் பற்றி அறிவியலாளர் டூயிக் மிக அழகாகவும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய உதாரணத்துடனும் விளக்கிக் கூறியுள்ளார். அது வருமாறு :

``ஏனைய நட்சத்திரங்களைப்போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத்தொகுதி ஒன்றில் பிரகாச மான வேகா (Vega) எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்த போது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையி லுள்ள தூரம் கூடிக்கொண்டே வருவதைக் கவனித்தார். அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார். இந்த நிகழ்ச்சி வெறும் கண்களுக்குப் புலனாகும் நட்சத்திரங்களில் வெளிப்படை யாக கவனத்தில் படுவதற்கு அந்த நட்சத்திரங்களின் நிலைகளை (Positions) ஏராளமான வருடங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். ஆயினும் 1783ல் இந்த நிகழ்ச்சியின் சரியான விளக்கத்தைத்தர வில்லியம் ஹெர்ஷ லுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்குக் காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார். இது இவ்வாறு இருக்க வேண்டு மாயின் பூமியில் இருந்து கொண்டு நட்சத்திரங்களைப் பார்வையிடுதல் (Observe) என்பது ஒருவர் காட்டுக்குள் நடக்கும்போது அவருக்கு அடிக்கடி ஏற்படும் காட்சியைப் போன்றதாகவே இருக்கும்.

ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாகக் கற்பனை செய்யவும். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும்போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர்எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக் கொன்று நெருங்கி வருவதாகவும் பார்ப்பீர்கள். இந்தத் தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது. சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்த திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சத்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிவதும் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமாகும். ஹெர்ஷல் ஆய்வு (Observe) செய்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் அவைகளின் சுய நகர்வைப் பெற்றிருந்தன. எனினும் நட்சத்திரங்கள் பற்பல திசை களுக்கும் நகர்கின்ற காரணத்தால் சராசரியாகப் பார்க்கும் போது ஒன்றின் நகர்வு மற்றொன்றின் நகர்வால் ஈடுகட்டப்பட்டது. ஆகவே இது சூரியன் மற்றும் அதன் கோள்களின் தங்களுக்கிடையிலான நகர்வு இவ்வளவு நாளும் எவ்வாறு கருதப்பட்டு வந்ததோ அதைப் போன்று நட்சத்திரங்களும் சராசரியாகப் பார்த்தல் நகராதவைகளாகவே கருதப்பட வேண்டும்.

அடுத்தமுறை நீங்கள் அழகான வேகா நட்சத்திரத்தை பார்க்கும்போது சூரியனும் அதனுடைய கோள்கள்துணைக் கோள்கள்குறுங்கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் ஆகிய அதன் ஏவலர்கள் (Attendants) அனைத்தையும் இழுத்துக்கொண்டு வினாடிக்கு 12மைலை விட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என நினைத்துக் கொள்ளவும்.

(பார்க்க : அட்ரானமி ஃபார் எவரி மேன்பக்கம் 297-98)

திருமறையின் வார்த்தைகள் வென்றே தீரும்

டூயிக் அவர்கள் தந்த மேற்கண்ட விளக்கத்திலிருந்து சூரியனும்விண்ணில் ஓடிக்கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் உண்மையை ஹெர்ஷல் எவ்வாறு கண்டு பிடித் தார் என்பதை அழகாக விளங்க முடிகிறது. மேற்கொண்டு நடைபெற்ற ஆய்வுகளின்போது சூரியன் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவதாகவும் பால் வழி மண்டலத் தின் மைய அச்சை ஒருமுறை சுற்றி வருவதற்கு சூரியன் 18 கோடி வருடங்களை எடுத்துக் கொள்வதாகவும் அறியப்பட்டுள் ளது. (பார்க்க : ஃபிஸிக் ஃபார் எவரி ஒன்பக்கம் 68 எனும் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு (அனைவருக்குமான இயற் பியல்) ஆசிரியர்கள் : எல் லாண்டாவோஅ. கிட்டகரோட்கிமிர் பதிப்பகம்மாகோ) மேலும் சூரியனின் இந்த விண்ணோட்டம் ஹெர்க்குலஸ் (Hercules) எனும் விண்மீன் கூட்டம் இருக்கும் திசை நோக்கியே நடைபெறுகிறது என்பதையும் இன்று நம்மால் அறிய நேர்ந்துள்ளது.

இவ்வாறு தாம் கோபர் நிக்ககெப்ளர்கலீலியோ போன்ற அறிவியலாளர்களும் அவர்களைப் பின்பற்றி 1783 வரை வந்து சென்ற அறிவியலாளர்கள் அனைவரும் ``சூரியன் அதன் வசிப்பிடத்தில் நகர்கிறது எனக் கூறிய திருக்குர்ஆனின் புரட்சிகரமான அறிவியல் பிரகடனத்தை மறுத்த போதுவில்லியம் ஹெர்ஷலால் அந்த அற்புதமான வசனம் உண்மை என உறுதியாக நிரூபிக்கப்பட்டு உலகின் தலை சிறந்த அமெச்சூர் விஞ்ஞானியாக புகழப்பட்டார்.

திருக்குர்ஆனின் தோற்றுவாய் பேரண்டத்தைச் சூன்யத்திலிருந்து படைத்த இறைவனே என்பதை ஏற்பதில் இதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும்இப்புத்தகத்தில் நாம் இதுவரை கூறியுள்ள விபரங்களைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் இந்த வேத புத்தகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளில் பல இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் தோன்றிய ஒரு மனிதரால்அவர் எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் கூறி இருக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் செய்தியாகும்.

விஞ்ஞானத்தின் பிரதான துறைகளைச் சார்ந்த மேலும் நூற்றுக்கணக்கான அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. எனவே திருக்குர்ஆனை வாசிக்கும் போது புண்ணியத்தைக் கருத்தில் கொண்டு வாசிப்பதை போன்று வசனங்களின் ஆழங்களுக்கு இறங்கிச் சென்று அது கூறும் செய்திகளை விளங்கிக் கொள்ள முயற்சிக்கவும் வேண்டும். அவ்வாறான வாசித்தலே முழுமையான பயனை அளிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் திருக்குர்ஆனை எவ்வளவு முறை வாசித்தோம் என்ற கணக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்காமல் திருக்குர்ஆனில் என்ன விளங்கிக் கொண்டோம் என்ற கணக்கைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் எனும் நூலின் இரண்டாம் பாகம் இங்கு நிறைவடைகிறது. இந்நூலில் நாம் விவாதித்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் எந்த அளவிற்கு ஆழமாகதிருக்குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டதும்இறை ஞானத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்த்து சரியாக முடிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குற்றம் குறைகள் ஏதேனும் தென்பட்டால் சுட்டிக் காட்டும்படியும் அவைகளை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொள்வேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான பாதையைக் காட்டத் துணை புரிவானாக

25.03.2010. 0:09 AM

வேதம் ஓதும் சாத்தான்கள்

சல்மான் ருஷ்டியின் நூலை ஆதரித்தும், நியாயப்படுத்தியும் ராம் ஸ்வரூப் என்பவர் எழுதிய நூலுக்கு 1990 களில் நான் எழுதிய மறுப்பு அப்போதைய அல்ஜன்னத் இதழில் இலவச இணைப்பாக வெளியிடப்பட்டது. இதை சில இணைய தளங்கள் தமது ஆக்கம் போல் வெளியிட்டுள்ளன.

அந்த நூல் இங்கே வெளியிடப்படுகிறது. ராம் ஸ்வரூப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல் என்று ஹிந்தி மொழியில் இவர் எழுதிய நூல் இந்திய அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றது.

இஸ்லாத்தைக் குறைகூறும் வாய்ப்புக்காக காத்துக் கிடந்த இவருக்கு சாலமன் ரஷ்டியின்' சாத்தானின் வசனங்கள்' என்ற நூல் சர்க்கரையாக அமைந்தது. இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அந்த நூல் எப்படியோ 'ராம் ஸ்வர்ப்' என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை படித்துவிட்டு புலமை சான்ற  கேள்விகள் என்ற தலைப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் 20-11-88, பக்கம் 5-ல் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.

தவறான வாதங்களையும், பொய்யான செய்திகளையும் உள்ளடக்கிய இஸ்லாத்தை நோக்கி அவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்பதால் இந்தக் கட்டுரை அவரது கேள்விகளை எடுத்து வைத்து அதற்கு விளக்கம் அளிக்கும் முன்பு ' சாத்தானின் வசனங்களையும், சல்மான் ரஷ்டியையும் பற்றி அவர் தரும் அறிமுகத்தைத் தந்துவிட்டு அவரது கேள்விகளுக்குச் செல்வோம்.

ராம்ஸ்வர்ப் சொல்கிறார்:-

சாலமன் ரஷ்டியின் சாத்தானின் வசனங்கள் இஸ்லாத்தையும், அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சிப்பதற்காகவே எழுதப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில்  இவர் 'மக்கா'  நகரை 'ஜாஹிலியா' என்ற பெயரால் தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்து மக்காவை இஸ்லாமிய வரலாறுகள்  'ஜாஹிலியா' என்றே குறிப்பிடுகின்றன. ருஷ்டி தனது நூலில் முஹம்மதை குறிப்பிடும் போது 'மஹவுன்ட்' என்றும் நபிகளின் எதிரியாக திகழ்ந்த அபூ ஸூஃப்யானை 'அபூஸிம்பல்' என்றும் சிறிய  மாற்றத்துடன் குறிப்பிடுகிறார். ஏனைய பாத்திரங்களைக் குறிப்பிடும் போது ரஷ்டி இந்த வித்தியாசத்தைக் கூட செய்யவில்லை. இஸ்லாமிய வரலாறுகளில் எவ்வாறு அவர்களின் பெயர் குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறே குறிப்பிடுகிறார். நபியின் சித்தப்பா ஹம்ஸா, இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட நீக்ரோ அடிமை பிலால், மற்றும் காலித் ஆகியோர் இதே  பெயர்களாலேயே இவரது நூலில் குறிப்பிடப்படுகிறார்கள். மக்காவில் - அதாவது ஜாஹிலியாவில் பன்னிரண்டு பரத்தையர் இருந்ததாகக் குறிப்பிடும் இவர், அந்தப் பரத்தையருக்கு  நபியின் மனைவியரின் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறார். இது கீழ்த்தரமான,  அநாகரீகமான சித்தரிப்பாக அமைந்துள்ளது. 'நான் இந்த நூலில் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை வெறும் கற்பனையாக எழுதப்பட்ட கதை தான் எனது நூல் என்று ரஷ்டி இப்போது பின்வாங்கினாலும் உண்மையில் அவர் இஸ்லாத்தையும் அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சனம் செய்வதை தலையாய நோக்கமாகக் கொண்டே தனது நூலை எழுதி இருக்கிறார் என்பது அவரது நூலைப் படிக்கும் போது உணர முடிகின்றது.

இவை யாவும்  சல்மான் ரஷ்டியைப் பற்றியும், அவரது நூல் பற்றியும் 'ராம் ஸ்வர்ப்' தருகின்ற அறிமுகமாகும். இந்தச் சிறிய அறிமுகத்திலிருந்து ரஷ்டியையும், அவரது நூலையும் நன்றாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாத்தை விமர்சிப்பது தான் அவரது நோக்கம் என்றால் 'ராம் ஸ்வர்ப்' போல் தெளிவாக நேரடியாக விமர்சிக்கலாம்.

தனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஏற்படுகின்ற ஐயங்களைத் தெளிவாக எழுப்பி இருக்கலாம். ரஷ்டியிடம் அந்தத் துணிவையும், நாகரிகத்தையும் காண முடியவில்லை. மாறாக மஞ்சள் பத்திரிக்கைகள், சினிமா கிசு கிசு செய்திகளைப் போல் நாலாம் தர நடையைத் தேர்வு செய்திருக்கிறார்.  'ராம்ஸ்வர்ப்' செய்யும் அறிமுகத்திலிருந்து இதை நாம் நன்றாக விளங்க முடிகின்றது. முஸ்லிம் அறிஞர் உலகும், ராம் ஸ்வர்ப் போன்றவர்களும் இஸ்லாத்தையே அவர் விமர்சனம் செய்துள்ளார் என்று கண்டுபிடித்துச் சொன்ன பிறகும் கூட அவர் துணிவுடன் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை.

நான் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை, கற்பனைக் கதைதான் நான் எழுதிய நூல் என்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் ரஷ்டி. அவ்வளவு துணிவும், நேர்மையும் கொண்டவர் ஒரு சமுதாயம் தங்கள் அன்னையர் என்று மதிக்கும் நபிகளின் மனைவியரின் பெயர்களைப் பரத்தையர்களுக்குச் சூட்டி மகிழும் வக்கிரபுத்தியும், கீழ்த்தரமான எண்ணங்களையும் உடையவர் தான் ரஷ்டி என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ராம்ஸ்வர்ப்.

'ராம்ஸ்வர்ப்' போன்றவர்களே ஜீரணிக்க முடியாத அளவுக்கு எழுதும் நாலாந்தர எழுத்தாளராக இவர் காட்சியளிக்கிறார். இவரைப் பற்றி எழுதுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் இத்துடன் விட்டுவிட்டு ராம்ஸ்வர்ப் எழுப்புகின்ற புலமை சான்ற கேள்விகளைப் பார்ப்போம்.

கேள்வி:-1

மக்கத்துக் காபிர்கள் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் ஆகிய பெண் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். பல தெய்வ வணக்கம் கூடாது என்று போதித்த முஹம்மதுக்குத் திடீரென ஒரு வஹி வருகிறது. அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவதான மனாத்தைப் பற்றி நீர் நினைத்ததுண்டா? அவை போற்றப்பட்ட பறவைகள்; அவற்றின் சிபாரிசுகள் நிச்சயமாக விரும்பப்படுகின்றது என்று அந்த வஹி கூறுகிறது. தங்களின் தெய்வங்களை முஹம்மது புகழ்ந்து கூறியவுடன் மக்காவாசிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து முஹம்மதுவைப் பின்பற்றி அல்லாஹ்வை வணங்க வழி ஏற்படுகிறது. இந்த உடன்பாடு அற்ப ஆயுளில் முடிந்து விடுகிறது.  அந்த தெய்வங்களைப் புகழ்ந்து தனக்கு வந்த வஹி, ஷைத்தானிடமிருந்து வந்தது என்பதை முஹம்மது சீக்கிரமே கண்டுகொண்டு, அதற்குப் பதிலாக வேறு வசனத்தைக் கூறுகிறார். முஹம்மதுவால் திருத்திக் கூறப்பட்ட அந்த வசனம் அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவாதாக மனாத்தைப் பற்றி நீர் நினைத்ததுண்டா? உங்களாலும் உங்கள் மூதாதையராலும் இட்டுக்கட்டப்பட்ட பெயர்களேயன்றி இந்த பெண் தெய்வங்கள் வேறில்லை.

(அல்குர்ஆன்53:19-23)

இந்தத் தகவல்கள் கற்பனையானது அல்ல; மாறாக இஸ்லாமிய வரலாற்று  ஆசிரியர்களான தபரீ, வாகிதி போன்றவர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ்களின் அடிப்படையிலே தனது நூலுக்கு 'சாத்தானின் வசனங்கள்' எனப் பெயரிட்டிருக்கிறார் ரஷ்டி.

இந்தக் கதையை கூட்டவோ, குறைக்கவோ இல்லாமல் சரியாகத் தரும் ரஷ்டி நம்முடைய உள்ளத்தில் முக்கிய வினாவையும் விதைக்கிறார். அதாவது ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து எவ்வாறு மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது? இந்த விஷயத்தில் குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லையே? மேலும் முஹம்மதுக்கு மட்டுமல்ல, அவருக்கு முன் தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் அவற்றை முறையாக இறைவன் ரத்து செய்து விட்டான். (அல் குர்ஆன் 22:52) என்று குர்ஆன் இயம்புகிறது.

பதில்:1

இந்த விபரங்களின் அடிப்படையில் 'ராம்ஸ்வர்ப்' கேட்க விரும்புவதும், சொல்ல வருவதும் என்னவென்றால் திருக்குர்ஆனில் ஷைத்தான்களின் வசனங்களும் இடம் பெற்றுள்ளன அவற்றை வேறுபடுத்தி அறிந்திட குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லை என்பது தான்.

இதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும், ஒரு குர்ஆன் வசனத்தையும் சமர்ப்பிக்கிறார். முதலில் 'ராம்ஸ்வர்ப்' தனது வாதத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸைப் பார்ப்போம். அந்த ஹதீஸைப் பற்றி 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்'என்று ராம்ஸ்வர்ப் குறிப்பிடப்படுவதிலிருந்து ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமானவைகளும் ஆதாரமாகக் கொள்ளத் தகாதவைகளும் உள்ளன என்பதை ராம்ஸ்வர்ப் அறிந்திருக்கிறார் என்பது தெரிகின்றது. ' ஆதாரப்பூர்வமான ஹதீஸ்' என்ற அடைமொழியுடன் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸ் உண்மையில் ஆதாரப்பூர்வமானது அல்ல; மாறாக இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்.  'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்' என்று சொல்லப்படுவதற்கு முஸ்லிம் உலகம் எந்தத் தகுதிகளை வரையறுத்திறுக்கிறதோ அந்தத் தகுதியை இது பெற்றிருக்கவில்லை.

உதாரணமாக ஹதீஸை ஒருவரிடமிருந்து ஒருவராக அறிவிப்பவர் தமக்கு முந்திய அறிவிப்பாளரைச் சந்தித்திருக்க வேண்டும்;  அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமையும்.

'ராம்ஸ்வர்ப்' எடுத்து வைக்கும் இந்த ஹதீஸில் இந்த இரண்டு தகுதிகளுமே இல்லாமலிருக்கின்றன. தபரி, வாகிதி குறிப்பிடுவதால் மட்டும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக ஆகிவிட முடியாது. இந்த ஹதீஸைப் பொறுத்தவரை இந்த நபர் எனக்குக் கூறினார் என்று அறிவிக்கும் இரண்டாம் நபர் முதலாம் நபரைச் சந்தித்ததவராகவோ, அவரது காலத்தில் வாழ்ந்தவராகவோ இல்லை. முப்பதுக்கும் மேற்பட்ட வழிகளில் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி பெரும்பாலான அறிவிப்புகளில் சொல்லி வைத்தாற் போல இந்தக் குறைபாட்டைக் கொண்டதாக உள்ளது.

காரல் மாக்ஸ் இதை என்னிடம் கூறினார் என ராம்ஸ்வர்ப் கூறினால் அந்தக் கூற்றின் நிறை எதுவோ அதே நிலையைத் தான் இந்தச் செய்தியும் பெறுகிறது.

மேலும் பல குறைபாடுகளையும் இந்தச் செய்தி உள்ளடக்கி இருக்கிறது.

'ராம்ஸ்வர்ப்' இப்போது இதை விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டதால் நாம் இவ்வாறு கூறவில்லை எவரும் விமர்சிப்பதற்கு முன் - பல நூறு ஆண்டுகளுக்கு முன் - வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் இதை அலசி இது பொய் என்று தள்ளுபடி செய்துள்ளனர். அவர்கள் தள்ளுபடி செய்த இந்தக் குப்பையைத் தான் ரஷ்டியும்,  ராம்ஸ்வர்பும் இப்போது கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகள் திட்டமிட்டுப் புனைந்த பெரும்  பொய்யாகும் இந்தச் செய்தி என்று அறிஞர் இப்னு குஸைமா குறிப்பிடுகிறார்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை சரியானதல்ல என்று 'பைஹகீ' எனும் அறிஞர் குறிப்பிட்டுவிட்டு இந்தச் செய்தியை அறிவிப்பவர்களின் குறைபாடுகளையும் பட்டிலிட்டுக் காட்டுகிறார்.

அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு எதுவும் இல்லாத வகையில் இது அமைந்துள்ளது என்று 'பஸார்' என்னும் அறிஞர் கூறுகிறார்.

இந்தச் செய்தியை நபித்தோழர்கள் எவரும் கூறாமல் நபித்தோழர்களின் அடுத்த காலத்தவர்கள் தான் அறிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் அது நடந்த காலத்தில் பிறந்தே இருக்காதவர்களால் எப்படி அறிவிக்க முடியும் என்று கேட்கிறார் ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள்.

ஒன்றிரண்டு அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழர்கள் அறிவிப்பதாகக் கூறப்படுகிறது.  ஆனால் நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் அடுத்தடுத்த அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இல்லை என்றும் இப்னு கஸீர் மேலும் கூறுகிறார்.

ஆதாரமற்ற இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தியைத் தான் ஆதாரப்பூர்வமானது என்கிறார் ராம்ஸ்வர்ப். இவர் எடுத்து வைக்கும் ஆதாரமே பொய் என்று ஆகிவிடும் போது அதனடிப்படையில் அவர் எழுப்பிய கேள்வியும் புலமை சான்ற கேள்வி (?) என்ற நிலையிலிருந்து இறங்கி விடுகின்றது.

அல்லாத், அல் உஸ்ஸா மற்றும் மனாத் பற்றி இன்று நாம் காணுகின்ற 53:19-23 வசனங்களைத் தவிர வேறு எதுவும் குர்ஆனில்  அருளப்படவில்லை.

இந்தக் கதை உருவாக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதையும் அறிந்து கொள்வது இங்கே அவசியமாகும்.

'அன்னஜ்மு' என்ற 53-வது அத்தியாயத்தை (அதாவது  அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயத்தை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியபோது ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களும், நபியின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர் என்று இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கும் செய்தி 'புகாரி' நூலில் இடம்பெறுகின்றது.

இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் நபியுடன் அவரது எதிரிகளும் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படுகின்றது. நபியுடன் சேர்ந்து நபியின் எதிரிகள் எப்படி ஸஜ்தா செய்திருப்பார்கள்? அவர்கள் ஸஜ்தா செய்யும் அளவுக்கு நபியுடன் ஒத்துப்போனார்களென்றால், அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நபி ஏதேனும் சொல்லி இருக்க வேண்டும். அவர்களின் தெய்வங்களைப் பற்றி புகழ்ந்து நபி ஏதேனும் சொல்லி இருந்தாலே அவர்கள் ஸஜ்தா செய்திருக்க முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதை புனையப்பட்டது.

நபியின் எதிரிகள் நபியுடன் சேர்ந்து ஸஜ்தா செய்யக் காரணம் தான் என்ன? என்ற ஐயம் சிலருக்கு எழலாம்.

நபியின் எதிரிகள் பல்வேறு கடவுளர்களை நம்புபவர்களாக இருந்தாலும் அவைகளைக் கடவுளர்களாக  எண்ணிக் கொண்டிருக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் மேலாக மிகப் பெரிய கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன் தான் அல்லாஹ் என்பதே அவர்களின் கொள்கையாக  இருந்தது.

வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நபியே நீர்அவர்களைக் கேட்டால்' அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள் அல்குர்ஆன் (31:25)

மேலும் (29:61, 29:63, 39:38, 43:9, 43:87, 10:18, 39:3) ஆகிய வசனங்களிலும் மக்கத்து மாந்தர்கள் அல்லாஹ்வை நம்பி ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்ற விபரம் கூறப்படுகிறது.

அன்னஜ்மு அத்தியாயத்தில் இடம் பெறும் அல்லாத்,  அல்உஸ்ஸா,  மனாத்  பற்றிக் கூறப்படும் வசனத்தை ஓதியபோது நபிகள் ஸஜ்தா செய்யவில்லை. மாறாக அந்த  அத்தியாயத்தின் கடைசியில் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்! வணங்குங்கள்!! என்று வருகின்ற வசனத்தை ஓதும்போது தான் நபிகள் ஸஜ்தா செய்தார்கள். அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வது நபிகளின் எதிரிகளுக்கும் உடன்பாடு என்பதால் அவர்களும் சேர்ந்து ஸஜ்தா செய்தனர்.

ஸஜ்தா செய்யுங்கள்! எனக் கட்டளையிடும் வசனங்களில் முதன் முதலில் அருளப்பட்டது அன்னஜ்மு அத்தியாயத்தில் உள்ள வசனமாகும். அதற்காக நபிகள்  ஸஜ்தா செய்த போது நபிகளின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர்.

அப்துல்லா எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  53:19 23 வசனத்தின் போது ஸஜ்தா செய்யவில்லை, அதன் இறுதி வசனத்தின் போதே ஸஜ்தா செய்தார்கள் என்று இதிலிருந்து   அறியலாம்.

53:1923 வசனத்தின் போது ஸஜ்தா செய்தார்கள் என்று சிலர் எவ்வித ஆதாரமுமின்றி நம்பிக் கொண்டு, அதற்கு ஒரு காரணத்தையும் சிருஷ்டித்து விட்டார்கள். அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட அந்தப் பொய்யான காரணம் தான்' ராம்ஸ்வர்ப்'  எடுத்துக் காட்டும் அந்தக் கதை.

ரஷ்டியும், ராம்ஸ்வர்ப்பும் எடுத்துக் காட்டிய செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஆகிவிடும் போது அதன்  அடிப்படையில் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அடிபட்டு அர்த்தமற்றுப் போகின்றன.

மேற்கூறிய அந்தப் பொய்யான நிகழ்ச்சியின் மூலம் ராம்ஸ்வர்ப் எழுப்பிய கேள்வி என்னவென்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

நபிக்கு ஷைத்தானிடமிருந்தும் வஹி வந்ததை ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது எப்படி? என்பதே அந்தக் கேள்வி.

நபிகளுக்கு ஷைத்தான் உதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறும் அந்தச் செய்தி பொய் என்று நிரூபணமான பின் பிரித்தறிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இல்லாத ஒன்றைப் பிரித்தறிய வழி முறையைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ராம்ஸ்வர்ப் எடுத்துக்காட்டிய அந்தச் செய்தி பொய் என்பதை ஏராளமான குர்ஆன் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.

முஹம்மத் நம் மீது எதையாவது இட்டுக்கட்டிக் கூறி இருப்பாரானால் வலக் கரத்தால் அவரைப் பிடித்து அவரது நாடி நரம்புகளைத்  துண்டித்திருப்போம்.

(அல் குர்ஆன் 69:44)

நாமே இந்த போதனையை அருளினோம் அதை நாமே பாதுகாப்போம். 

(அல்குர்ஆன் 15:9)

ஓதுவதற்காக அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத்திரட்டி (உம் உள்ளத்தில்) பதியச் செய்வதும், ஓதச் செய்வதும் நம்முடைய வேலையாகும்.

(அல்குர்ஆன் 75:16)

முஹம்மது தம் இச்சைப்படி பேசமாட்டார், அது இறைவனால் அறிவிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு இல்லை.

(அல்குர்ஆன் 53:3)

இந்த வசனங்கள் யாவும் வேத வசனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக்குகின்றன.

ஷைத்தான் குறுக்கிட்டு எதையும் சேர்த்துவிட முடியாது என்று அறைகின்றன.

இன்னும் தெளிவாக இது விரட்டப்பட்ட ஷைத்தானுடைய சொல் அல்ல (81:25) எனவும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதை ஷைத்தான்கள் இறக்கியருளவில்லை, அவர்கள் அதற்கு சக்தி பெறவும் மாட்டர்கள். (26:210)  என்றும் குர்ஆன் கூறுகிறது

ஷைத்தான்களால் உதிப்பு ஏற்படுத்தப்படும் என்பதை முற்றாக இந்த வசனங்கள் நிராகரிக்கும் போது ஆதாரமற்ற பொய்யான ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று முத்திரை குத்தி 'ராம்ஸ்வர்ப்' தன் கேள்வியை எழுப்புகின்றார்.

நபிகள் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டார்கள் என்ற தன் கூற்றுக்கு திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையும்  துணைக்கு அழைத்திருக்கிறார்.

முஹம்மதுக்கு முன் தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் இறைவன் அவற்றை முறையாக ரத்து செய்து விட்டான் என்று குர்ஆனுடைய 22:52 வசனம் கூறுவதாக ராம்ஸ்வர்ப் கூறுகிறார்.

அவர் குறிப்பிட்டது. போல் குர்ஆன் கூறுமானால் ராம்ஸ்வர்ப் உடைய கேள்வி புலமை சான்ற கேள்வி என்பதில் ஐயமில்லை. ஆனால் திருக்குர்ஆன் அவ்வாறு கூறவே இல்லை. ஒரு சிலர் செய்துள்ள தவறான மொழிபெயர்ப்பை நம்பி அவர் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்.

அல்குர்ஆன் 22:52 வசனத்திற்கு எந்த ஒரு தூதரை நாம் அனுப்பினாலும் அவரது உள்ளத்தில் ஷைத்தான் உதிப்பு ஏற்படுத்தாமல் இருந்ததில்லை; ஆனால் ஷைத்தான் ஏற்படுத்திய உதிப்பை அல்லாஹ் அகற்றி தன் வசனங்களை உறுதி செய்கிறான் என்று சிலபேர் மொழியாக்கம் செய்துள்ளனர்.

அதுதான் ராம்ஸ்வர்ப்புடைய இந்தக் கேள்விக்குக் காரணம்.

உண்மையில் அந்த வசனத்தின் பொருள் என்ன? என்பதைச் சொல்வதற்கு முன்னால் ராம்ஸ்வர்ப்புக்கு ஏற்படக்கூடிய ஒரு சந்தேகத்தை நாம் நீக்கி விடுவோம். இவரைப் போன்றவர்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் 'புலமை சான்ற கேள்வி (?) கேட்டுவிட்டதால் மொழிபெயர்ப்பு தவறு என்று நாம் சமாளிப்பதாக அவர் எண்ணக்கூடும். அவருக்கு அந்த சந்தேகம் வரத் தேவையில்லை. நாம் சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாக இப்போதைய அகராதிகளைக் காட்ட மாட்டோம். 1400 ஆண்டுகளுக்கு முன் நபித்தோழர்கள் சொன்னதையே சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாகத் தருவோம். தவறான மொழி பெயர்ப்புச் செய்தவர்கள்  -அவரது உள்ளத்தில் - என்று குறிப்பிட்ட இடத்தில் - மூலத்தில் -'உம்னிய்யத்'-  என்ற பதம் உள்ளது.

'உம்னிய்யத்' என்ற வார்த்தைக்கு அவர் அறிவித்த செய்தியில் என்பதே பொருளாகும் என்று நபிகளின் அன்புத் தோழரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர்.

புகாரியில் இது இடம் பெற்றுள்ளது.

அவரது மாணவர் முஜாஹித் அவர்களும், தபரீ அவர்களும் இதே பொருளையே தருகிறார்கள். நபித்தோழர்கள் 'உம்னிய்யத்'  என்ற வார்த்தைக்குச்  செய்துள்ள பொருளின் அடிப்படையில் அந்த வசனத்தில் பொருள் என்னவென்று பார்ப்போம்.

எந்த ஒரு தூதரை நாம் அனுப்பினாலும் அவர் அறிவித்த செய்தியுடன் ஷைத்தான் எதையும் சேர்க்காது இருந்ததில்லை;  ஷைத்தான் சேர்த்தவற்றை அகற்றி அல்லாஹ் தன் வசனங்களை உறுதி செய்கிறான் என்பதே அதன் பொருளாகும்.

அதாவது எந்த ஒரு தூதரும் இறைச் செய்தியை மக்களுக்குக் கூறினால் அவர் கூறிய செய்தியில் சில ஷைத்தான்கள் தங்களின் கைச்சரக்கையும் சேர்த்துக் கொள்வர். இறைவன் அவற்றை அடையாளம் காட்டி தன் வசனங்களை உறுதி செய்வான் என்று உத்திரவாதம் தருகிறது அந்த வசனம்.

நபிகளிடம் இறைச்செய்தியை எழுதுபவராக இருந்த  'அப்துல்லாஹ் இப்னு ஸஃது' என்பவர் நபி சொன்னதற்கும் அதிகமாக அவராகவும் சில வார்த்தைகளைச் சேர்த்து எழுதிக் கொள்வார். நபி அவர்கள் அதைக் கண்டுபிடித்து அகற்றுகிறார்கள் என்பதை ராம்ஸ்வர்ப் தன் மூன்றாவது கேள்வியில் ஒப்புக்கொள்கிறார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைச் செய்தியுடன் சில ஷைத்தான்கள் தங்கள் கைச்சரக்கைச் சேர்த்துவிட முயன்றனர் அவை அந்தக் கால அறிஞர்களால் அடையாளம் காட்டப்பட்டன. 'ராம்ஸ்வர்ப்' போன்றவர்கள் திருக்குர்ஆனில் உள்ளதாக எதையாவது சொந்தமாகக் கூறினால் இன்றைய அறிஞர்களாலும் அவை வெளிச்சம் போட்டு காட்டப்படும்.

இந்த இடத்தில்  'ராம்ஸ்வர்ப்'  போன்றவர்களுக்கு ஒரு சந்தேகம்  ஏற்படக் கூடும் 22:52 வசனத்தில் 'ஷைத்தான்' என்று தான் கூறப்படுகிறது. மனிதர்கள் சொந்தமாகச் சேர்ப்பதைப் பற்றி அல்லவே என்பது தான் அந்தச் சந்தேகம்.

திருக்குர்ஆன் அனேக இடங்களில் ஷைத்தான் என்ற பதத்தை வழி கெட்ட மனிதர்களுக்கும் பயன்படுத்தி இருக்கின்றது.

(பார்க்க! அல்குர்ஆன் 6:112, 2:14)

ஹதீஸ்களிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.

ராம்ஸ்வர்ப் தேடிப் பார்த்துச் சிரமப்படாமலிருக்க அவரே குறிப்பிட்டுள்ள ஒரு ஹதீஸைத் தருவோம். நபிகள் ஒரு கவிஞனைக் கண்டபோது இந்த ஷைத்தானைப் பிடியுங்கள் என்று கூறியதாக 'ராம்ஸ்வர்ப்' குறிப்பிடுகிறார். (அது பிறகு வருகின்றது.)

இதில் மனித இனத்தைச் சேர்ந்த ஒரு கவிஞனை நபிகள் 'ஷைத்தான்' என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். ஆக இந்த வசனம் 'ஷைத்தான் நபியின் உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்துவான். அவர் அதை இறைவனின் வஹி என்று எண்ணிக் கூறிவிடுவார் என்று கூறவே இல்லை. மாறாக நபி இறைச் செய்தியை மட்டுமே கூறுவார்.

அவர் கூறிய இறைச் செய்தியுடன் சில ஷைத்தான்கள் தங்களின் கைச்சரக்கையும் சேர்ப்பர்; அது இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு அகற்றப்படும் என்பதே பொருளாகும்.

'ராம்ஸ்வர்ப்' தன் புலமை சான்ற கேள்விக்கு ஆதாரமாகச் சமர்ப்பித்த ஹதீஸ் பொய்யானது; அவர் எடுத்து வைத்த குர்ஆன் வசனத்தின் பொருள் தவறானது என்று ஆகும் போது அவரது கேள்விக்கு எவ்வித ஆதாரமும் இல்லாது போய்விடுகின்றது.

கேள்வி:2

அவருக்கு இறைவனிடமிருந்து வஹி வருகிறது என முதன் முதலில் நம்பியவர் அவருடைய முதலாளியும், முதல் மனைவியுமான கதீஜா தான். ஆனால் இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை  வெளிப்படுத்துகிறான் போலும் என்று அவருடைய நேசத்துக்குரிய மனைவி ஆயிஷாவே அடிக்கடி  அவரை கிண்டல் செய்திருக்கிறார். மேலும் தான் முஹம்மதுக்குக் கொடுத்த அறிவுரைக்கேற்ப  மூன்றுமறை நபிக்கு வஹீ வந்ததாக உமர் பெருமையடித்துக் கொண்டார். இது உமருக்குத்  திருப்தியளித்திருக்கலாம். ஆனால் பலருடைய உள்ளங்களில் வினாக்களை எழுப்பிவிட்டது  என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:2

இந்த மூன்று நிகழ்ச்சிகளை இறைவேதத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இவர் தரும் அடுத்த சான்றுகளாகும்.

கதீஜா (ரலி) அவர்கள் தான் முதலில் விசுவாசம் கொண்டார்கள்;  அதை நாம் மறுக்கவில்லை. கதீஜா (ரலி) முதலில் விசுவாசம் கொண்டதால் இறைவேதம் என்று குர்ஆனை  நம்புவதற்கு என்ன தடை இருக்கிறது?

கணவருக்குப் பயந்து கொண்டு விசுவாசம் கொண்டிருக்கலாம் என்று சொல்ல வருகிறாரோ என்னவோ தெரியவில்லை. கதீஜா (ரலி) முதன்முதலில் விசுவாசம் கொண்டது அவர் இறைத் தூதர் என்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்யுமே தவிர அந்த நம்பிக்கையைப் பலவீனப்படுத்தாது.

(அ) கதீஜா ஒரு பெண். பொதுவாகவே பெண்கள் தங்களின் பாரம்பர்யமான நம்பிக்கையை எளிதில் விட முன்வர மாட்டார்கள். புதிய கருத்துக்களை ஏற்பதற்கு ரொம்பவும் தயக்கம் காட்டுவார்கள். தன்னுடைய பாரம்பர்யமான கொள்கையைத் தகர்த்தெறியும் புதுக் கொள்கையை கணவர் சொன்னவுடன் மறுப்பேதுமின்றி ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவரிடம் இறைத் தூதருக்கான அனைத்து அம்சங்களும் இருந்ததால் மட்டுமே அது சாத்தியமாயிற்று.

(ஆ) கதீஜா அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்தார்கள்; அவர்களின் செல்வத்தில் தான் நபிகளின் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. இது போன்ற நிலைமையில் கணவன் மீதுள்ள மதிப்பு தானாகவே சரிந்து போய்விடுவதை உலகில் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வத்தில் காலங்கழிக்கும் தன் கணவரை அவமதிப்புச் செய்வதற்கு பதிலாக, அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றே மிகமிக உயர்வான மதிப்பை வழங்கினார்கள் என்றால் நபியிடம் அதற்கான சிறப்புத் தகுதிகள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.

(இ) முஹம்மதை விட வயதில் மூத்தவரான கதீஜா தன்னைவிட மூத்தவர் என்ற மரியாதைக்காக இறைச் செய்தியை நம்பினார்கள் என்றும் சொல்ல முடியாது.

(ஈ) வெளி உலகில் நல்லவனாக, உத்தமனாக நடிக்கின்றவர்கள் தமது வீட்டில் அப்படி நடிக்க முடியாது. ஒருவனுடைய உண்மையான நடத்தையை மற்றவர்களை விட அவனது மனைவி தான் நன்றாக அறிய முடியும். அவனுடைய எல்லா பலவீனங்களும், கெட்ட குணங்களும் மனைவிக்குத் தெரிவது போல் எவருக்கும் தெரிய முடியாது. பதினைந்து ஆண்டுகள் நபியுடன் வாழ்க்கை நடத்திய கதீஜா அவர்கள் அவருடைய அப்பழுக்கற்ற, நேர்மையான, உள்ளேயும் வெளியேயும் ஒரே விதமாக வாழுகின்ற வாழ்க்கையைப் பார்த்துத் தான் அவர் இறைத்தூதர் என்றதும் ஏற்றுக் கொள்கிறார்கள். நபியின் பரிசுத்த வாழ்க்கைக்குச் சான்றாக அமைந்த கதீஜாவின் விசுவாசத்தை சம்மந்தமில்லாமல் இங்கே குறிப்பிடுகிறார் ராம்ஸ்வாப்.

இனி ஆயிஷா அவர்களின் விஷயத்துக்கு வருவோம். அதில் ராம்ஸ்வாப் சொந்தச் சரக்கைக் கலந்துவிட்டு அதனடிப்படையில் தன் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார்.  நீ விரும்பும் பெண்களை மணந்து கொள்ளலாம் என்ற வசனம் இறங்கிய போது உங்கள் ஆசையை உங்கள் இறைவன் விரைந்து நிறைவேற்றுகிறான் என்றே நான் கருதுகிறேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு வசனம் இறங்கியதைத் தான் இங்கே ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா அவர்களின் இந்தக் கூற்றை இவர் எப்படி உருமாற்றி விட்டார் தெரியுமா?  இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை  வெளிப்படுத்துகிறானோ என்று ஆயிஷா அடிக்கடி நபியைக் கிண்டல் செய்திருக்கிறார் என்று ராம்ஸ்வர்ப் கூறுகிறார்.

'அடிக்கடி', 'கிண்டல்' இவருடைய வசதிக்காகவே என்ற வாசகங்கள் ராம்ஸ்வர்ப் உடைய கைசரக்குகள். இது தான் புலமை சான்ற கேள்வியா? இது வடிகட்டிய பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?

ஒரு தந்தை தன் மகனுடைய ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் போது உன் தந்தை உன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அக்கரையாக இருக்கிறார் என்று கூறுவதற்கு என்ன நிலையோ அதே நிலைதான் ஆயிஷாவின் கூற்றுக்கும் உண்டு.

இந்தத் தில்லுமுல்லுகளை ராம்ஸ்வர்ப் ஏன் செய்திருக்கிறார் தெரிகிறதா? இவருடைய வசதிக்காகவே - குர்ஆன் இறங்கியது என்றால், இறைவனுடைய செய்தி அல்ல அது. இவர் தனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதை இறைவன் கூறுவதாகச் சொல்லி விடுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்த ஒட்டுவேலையின் நோக்கம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவரே இவருக்கு முரண்பட்டுக் கொள்கிறார். ஆயிஷாவுடைய சொல்லை சிதைத்ததன் மூலம் அவரது விருப்பத்திற்கேற்பவே குர்ஆன் இறங்கியது என்று சொல்லவரும் ராம்ஸ்வர்ப், அவருடைய விருப்பத்துக்கு மாறாக -அவருடைய தோழர்களில் ஒருவராகிய உமருடைய விருப்பத்திற்கேற்பவே மூன்று விஷயங்களில் வஹி வந்தது என்றும் ஒப்புக்கொள்கிறார்.

மேலும் உமர் (ரலி) அவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்று வசனங்கள் இறங்கியது வினாக்களை எழுப்பிவிட்டதாம். ஆயிஷா அவர்கள் கூற்றிலிருந்து எழும் வினாவுக்கு விடையாக அமைந்துள்ளதை அவர் வினா என்கிறார்.

ஆயிஷா அவர்களின் கூற்றைத் தேடிப்பிடித்து அதில் ஒட்டுவேலைகள் செய்த ராம்ஸ்வர்ப் அதே ஆயிஷாவின் மற்றொரு கூற்றையும் கவனித்திருந்தால் முறையாக இருக்கும்.

33:37 வசனத்தைப் பற்றி ஆயிஷா குறிப்பிடும் போது முஹம்மது இறை வேதத்தில் எதையும் மறைப்பவராக இருந்திருந்தால் தன்னைக் கண்டிக்கும் இந்த வசனத்தைத் தான் மறைத்திருக்க முடியும் என்று கூறுவதன் மூலம் அவர்களின் வசதிக்காகவே  குர்ஆன் இறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று மறுக்கிறார்கள்.  நபிகளின் விருப்பத்துக்கு மாறாக ஒன்றல்ல இரண்டல்ல! நூற்றுக்கணக்காண வசனங்கள் இறங்கியுள்ளன.

தன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டுமென நபிகள் பெரிதும் விரும்பினார்கள்.

நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம் இறங்கியது.

உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்த போது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள்.  உமக்கு அதிகாரத்தில் யாதொரு பங்குமில்லை (3:128) என்ற வசனம் அப்போது இறங்கியது.

குருடர் ஒருவரது விஷயத்தில் நபியின் அணுகுமுறையைக் கண்டித்து (80:1) வசனம் இறங்கியது.

செல்வந்தர்களுக்கும், உயர் குலத்தவர்களுக்கும் தனி மதிப்புத் தரலாம் என்று நபிகள் விரும்பிய போது (6:52) வசனம் இறங்கியது.

கைதிகளை என்ன செய்யலாம் என்ற விஷயத்திலும், பெண்களின் ஆடைகள் பற்றியும், நயவஞ்சகர்களுக்கு தொழுகை நடத்துவது பற்றியும் இவரது விருப்பம் வேறாக இருந்தது. இவரது தோழரான உமருடைய விருப்பத்துக்கு ஏற்ப வசனங்கள் இறங்கின.

நோன்பு நோற்பது, தன் சுகத்தைத் தியாகம் செய்வது போன்ற காரியங்களை இயல்பிலேயே எவரும் விரும்ப மாட்டார்கள். அவற்றைச் செய்யுமாறு அவருக்கும் சேர்த்தே கட்டளை வருகிறது. இவையெல்லாம் நபியின் விருப்பத்திற்குகேற்றவாறு தான் எல்லா வசனங்களும் இறங்கின என்ற ராம்ஸ்வர்புடைய சந்தேகத்தைத் தரைமட்டமாக்குகின்றன.

கேள்வி:3

முஹம்மது நபி மக்காவில் இருந்த போது, அவருக்கு எழுத்தராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸஃது பற்றி ஹதீஸ் கூறுகிறது. நபி சொன்னபடி அவர் இறைவழிபாட்டை எழுதிக் கொள்வார். நபி சில சமயங்களில் பாதியில் நிறுத்தி விடுவார். அப்போது அந்த எழுத்தர் வார்த்தைகளைப் போட்டு நிரப்புவார். அவர் சேர்த்து எழுதிய வார்த்தைகளும் இறைவேதத்துடன் ஒன்றிவிட்டதைக் கண்டு அவர் குழப்பமுற்றார். இது அவருடைய உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. இதைப் பற்றி பலரிடமும் அவர் பேச ஆரம்பித்தார். இஸ்லாத்தையும் கை விட்டார். முஹம்மது இதற்காக அவரை மன்னிக்கவே இல்லை. இருபது வருடங்கள் கழித்து நபி மக்காவை வெற்றி கொண்டபோது அப்துல்லாவை சிரச் சேதம் செய்யுமாறு கட்டளையிட்டார். நபியின் மருமகனும், அப்துல்லாவின் பால் குடிச் சககோதரருமான உஸ்மானின் சிபாரிசின் பேரில் காப்பாற்றப்பட்டார். நபியிடம் உஸ்மான், அப்துல்லாவைக் காப்பாற்றுமாறு உத்தரவிட்டபோது நபி நீண்ட பொழுது மௌனமாக இருந்தார். பிறகு சரி என்று சொன்னதாகவும், உஸ்மான் அவ்விடத்தைவிட்டு அகன்ற பிறகு நபி தம்மைச் சூழ்ந்திருந்த தோழர்களை நோக்கி நான் ஏன் அவ்வளவு நேரம் மவுனமாக இருந்தேன் தெரியுமா? அந்த இடைவெளியில் உங்களில் எவராவது எழுந்து அவருடைய தலையைக் கொய்துவிட மாட்டீர்களா? என்ற எண்ணத்தில் தான் மவுனம் சாதித்தேன் என்று சொன்னார். இப்னு இஸ்ஸாக் இவ்வாறு கூறுகிறார்.

பதில்:3

இரண்டு நோக்கங்களுக்காக இந்தச் செய்தியை ராம்ஸ்வர்ப் எடுத்துக் காட்டுகிறார்.

(1)இறை வேதத்துடன் மனிதர்களும் தங்கள் கைச்சரக்கைச் சேர்த்து விட்டார்கள் என்று நிரூபிப்பது

(2) நபி மிகவும் மோசமான குணம் கொண்டவர். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி யாராவது கொன்று விடமாட்டார்களா?  என்று  எதிர்பார்த்ததன் மூலம் கீழ்த்தரமான எண்ணங்களையே நபி கொண்டிருந்தார் என்று காட்டுவது.

இப்னு இஸ்ஹாக்கும், அபூதாவூத் போன்றவர்களும் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தாலும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் சிலர் நம்பகமற்றவராகவும், வேறு ஒருவர் அலி (ரலி) அவர்கள் பெயரால் பொய்களைப் பரப்பும் ஷியாக்களின் தலைவராகவும் இருக்கிறார். அவர்களால் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்லவே அல்ல.

உண்மையில் இது பற்றி வந்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தி இவ்வளவு தான்:-

அப்துல்லாஹ் இப்னு ஸஃது என்பவர் அல்லாஹ்வின் தூதரிடம் எழுத்தராக இருந்தார். ஷைத்தான் அவரை வழி கெடுத்து விட்டான். அவர் காஃபிர்களுடன் சேர்ந்து கொண்டார். மக்கா வெற்றியின் போது அவரைக் கொன்று விடுமாறு நபி கட்டளையிட்டார்கள். அவருக்காக உஸ்மான் அடைக்கலம் கோரிய போது உடனே அடைக்கலம் தந்தார்கள்.

இது தான் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்தச் செய்தி அபூதாவூத், நஸயீ ஆகியநூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் அடைக்கலம் கேட்டவுடனே அடைக்கலம் தந்ததாக உள்ளது. ஆதாரப்பூர்வமான இந்தச் செய்தியுடன் அந்தச் செய்தி முரண்படுவதாலும் அதன் அறிவிப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாததாலும் அந்தச் செய்தியின் அடிப்படையில் 'ராம்ஸ்வர்ப்' கருதுகின்ற இரண்டாவது நோக்கம்  அடிப்பட்டுப்போகின்றது.

இவரை யாராவது கொன்று விட மாட்டீர்களா என்ற அளவுக்குக் கடுமையான வார்த்தையை நபி பிரயோகம் செய்திருந்தால் - அவரை மனப்பூர்வமாக மன்னிக்கவில்லை என்று ஆகின்றது. மனப்பூர்வமாக அவரை நபி மன்னித்திருக்காவிட்டால், சம்மந்தப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஸஃது அவர்கள் மனந்திருந்தி திரும்பவும் இஸ்லாத்தில் இணைந்திருக்க மாட்டார். அவரது பிற்கால வாழ்க்கை இஸ்லாத்தின் மீதும், இறைத்தூதர் மீதும் இருந்த அளவு கடந்த நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

எகிப்துடன் நடந்த போரில் முஸ்லிம்களின் அணியில் இவர் பங்கெடுத்துக் கொண்டார். அதன் வெற்றிக்கு துணை நின்றவர்களில் பிரதானமானவராக அவர் இருந்தார். பல போர்க்களங்களில் பாராட்டப்படும் சாதனைகள் பல புரிந்தார். எகிப்து நாட்டின் நிர்வாகியாகவும் சில காலம் இருந்தார்.

அலி முஆவியா இருவருக்கிடையில் பூசல்கள் தோன்றிய போது எப்பக்கமும் சாராமல் இவர் நடுநிலை வகித்தார் என்று இப்னு யூனுஸ் என்னும் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்,

ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட படைக்கு இவர் தளபதியாகச் சென்று ஆப்பிரிக்காவை வெற்றி கொண்டார் என்று இப்னு ஸஃது என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

இஸ்லாமிய முக்கிய கடமையாக உள்ள தொழுகையை -வைகறைத் தொழுகையை -நிறைவேற்றி முடிந்ததும் இவரது உயிர் பிரிந்தது என்று புகாரி, பகவி ஆகியோர் கூறுகின்றனர்.

இந்த சரித்திரக் குறிப்புகள் அவருக்கு இஸ்லாத்தின் மீது இருந்த காதலுக்கு சான்றாக அமைந்துள்ளன. நபி இவரைப் பற்றி அந்த வார்த்தையைக் கூறி மனப்பூர்வமாக மன்னித்திருக்கா விட்டால் இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக அவர் நடந்து கொண்டிருக்க முடியாது என்று சிந்தனையாளர்கள் உணரலாம்.

இறைச் செய்தியுடன் தன் சொந்தச் சரக்கையும் சேர்த்துவிடுவார் என்ற கருத்தும் பொய்யானதாகும். ஏனெனில் நாம் குறிப்பிட்ட ஆதாரப்பூர்வமான அந்தச் செய்தியில் அந்த விபரம் இல்லை. நபியின் எழுத்தராக இருந்த என்ற வாசகம் அவரைப் பற்றி அறிமுகம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாசகம் தானே தவிர, வஹியில் கலப்படம் செய்தவர் என்று காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாசகம் அல்ல. வஹியை எழுதுபவராக இருந்த அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் என்று தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகின்றது. சொந்தச் சரக்கைச் சேர்த்தார் என்ற விபரமெல்லாம் அதில் இல்லை. எனவே ராம்ஸ்வர்புடைய முதல் நோக்கத்திற்கும் அடிப்படையில்லாமல் போய் விடுகின்றது.

'வஹியில் அவர் கலப்படம் செய்தார்' என்று ஒரு வாதத்துக்காக பொருள் செய்தாலும், ராம்ஸ்வர்புடைய கருத்துக்கு அதில் ஆதாரம் எதுவுமில்லை. ஏனெனில் வஹியில் அவர் செய்த கலப்படத்தைத் தான் நபி கண்டுபிடித்து அகற்றி விடுகிறாரே! வஹியில் யாரேனும் கலப்படம் செய்தால் இறைவனின் தூதருக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு விடும் என்றுதான் அதில் விளங்க முடியுமே தவிர, ராம்ஸ்வர்ப் விளங்குவது போல் விளங்க முடியாது.

கேள்வி:4

பல கடவுள் கொள்கைக்குப் பதிலாக முஹம்மது ஒரு கடவுள் கொள்கை வந்த போதும் இவரது இந்த வேத வெளிப்பாட்டினால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவில்லை. மதத்தில் ஒரு ஆழமும், கடவுள் கொள்கையில் ஒரு தீர்க்கமும், மக்களின் பழக்க வழக்கங்களில் ஒரு உயர்வும் ஏற்படவில்லை என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:4

இவரது இந்த வாதத்துக்கு இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு பாமரன் கூட பதில் சொல்ல முடியும். அவ்வளவு முட்டாள் தனமான கூற்றை இவர் எடுத்து வைக்கிறார். உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும் வித்தியாசங்களைக் கூட  உணர முடியவில்லை என்றால் ஷைத்தான் இவருடைய உள்ளத்தில் தான் உதிப்பை ஏற்படுத்தி இருக்கிறான் என்று அர்த்தம்.

யானையை,  பன்றியை,  ஆட்டை,  மாட்டை மாட்டின்  சானத்தை, அதன் மூத்திரத்தை, பல்லியை,  மூஞ்சூறை,  கல்லை,  மண்ணை,  மரத்தை எல்லாம் கடவுளர்களாக எண்ணி அதற்கு போய் சாஷ்டாங்கம் செய்து கொண்டிருந்த சமுதாயத்தை அந்த மூடக் கொள்கையிலிருந்து விடுவித்து இவற்றையெல்லாம் விட மனிதன் உயர்ந்தவன். மனிதனைப் படைத்த இறைவன் உயர்ந்தவன் என்று நிரூபித்துக் காட்டியது மாபெரும் புரட்சி இல்லையா?

கடவுளுக்கும் மனைவியர், மக்கள், அவர்களுக்குள்ளேயும் சண்டைகள், பிறன் மணை நோக்குதல், திருடுதல், விபச்சாரம் புரிதல், பொய் சொல்லுதல், உறங்குதல், உண்ணுதல் போன்ற மனிதனிடம் காணப்படும் எல்லா பலவீனங்களும் உண்டு என நம்பி, மனிதனை விடவும் மட்டமானவராகக் கடவுளை நம்பிக்கொண்டிருந்ததை மாற்றியமைத்து, கடவுள் எல்லா பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்று பறைசாற்றியது கடவுள் கொள்கையில் தீர்க்கமானதாக இவருக்குத் தென்படவில்லையா?

ஆதீனங்கள், மடங்கள், அவற்றின் பூசாரிகள், கடவுளின் புரோக்கர்கள், அவர்கள் உருவாக்கிய ராகு , எமகண்டம்,  ஜோசியம்,  ஜாதகம் , மாயம்,  மந்திரம்,  திதி,  திவசம்,  தாரை வார்த்துக் கொடுத்தல், தாயத்து,  தட்டு, தகடு போன்ற எல்லா சடங்குகளையும் அடியோடு அகற்றிக் காட்டியது! ஒரு ஆழமில்லையா?

காவி உடைக்குள்ளேயும் கமண்டலத்திலும் மனித உயர்வைத் தேடிக் கொண்டிருந்த மக்களை, நல்லொழுக்கப் பண்பாடுகளே மனித உயர்வுக்குக் காரணம் என்று உணர வைத்து  அவர்களை அதற்கேற்ப மாற்றியமைத்தது அந்த வேத வெளிப்பாடு செய்த மறுமலர்ச்சி அல்லவா?

இறை வேதங்களை சில ஜாதியினர் தங்கள் காதுகளால் கூட கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவர்களின் காதுகளில் ஊற்ற வேண்டுமென சட்டமியற்றிக் கொண்டு மனித சமுதாயத்தில் ஒரு பெரும் பகுதியினரை மிருகத்திலும் கீழாக நடத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் அனைவரும் சமமே என்று உரத்துச் சொல்லி, வேதத்தை முழு மனித சமுதாயத்துக்கும் பொது உடைமையாக ஆக்கியதை முஹம்மதுக்கு அருளப்பட்ட அந்த வேதத்தைத் தவிர வேறு எந்த வேதம் செய்து காட்டியது?

மது, மங்கை, சூது, ஆடல் பாடல்களில் காலத்தைக் கழித்தும் கொண்டிருந்த மாக்களை அதிலிருந்து விடுவித்தும், நாடோடிகளை நாடாள்வேராகச் செய்ததும், நேர்மை,  ஒழுக்கம், பண்பாட்டுக்கு முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்கிக் காட்டியதும் அந்த வேதம் செய்த பாதிப்பில்லையா?

ஒரு சமுதாயம் தன்னுடைய எல்லாப்பழக்க வழக்கங்களையும் சுத்தமாகத் துடைத்து எறிந்து விட்டு முற்றிலும் மாறுபட்ட புதிய கலாச்சாரத்தைத் தழுவிக் கொண்டதும், இவரது கண்களில் படவில்லையானால் கோளாறு இவரது கண்களில் தான் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் சொல்லித் தந்தது என்று தன்னுடைய அடுத்த கேள்வியில் குறிப்பிடுகிறார். முரண்பாட்டின் மொத்த உருவமாக ஒருவர் திகழ முடியுமென்றால் ராம்ஸ்வர்ப்பைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.

கேள்வி:5

போர், சமாதானம், கனீமத்தைப் பங்கிடுதல்  வெற்றி கொள்ளப்பட்டவர்களை நடத்தும் முறைகள், எப்படி உடுத்துவது, உண்பது, மலஜலம் கழிப்பது, புணர்வது எல்லாமே இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது;  இதனால் சல்மான் ரஷ்டி குர்ஆனைச் சட்டப் புத்தகம் எனப் பரிகசிக்கிறார் என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:5

ஆம்! குர்ஆன் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் சொல்லித் தருவது முட்டாள்களின் பரிகசிப்புக்கு உரியது என்றால் எமக்குக் கவலை இல்லை. முஸ்லிம் சமுதாயம் அதைப் பெருமைக்குரிய ஒன்றாகவே கருதுகிறது.

கடவுள் பன்றி உருவம் எடுப்பது, மீனும், மனிதனும் இணைந்து மனிதப் பிள்ளையைப் பெற்றெடுப்பது, யானை முகமும் மனித உடலும் கொண்ட விசித்திரப் படைப்பு, ஐந்தாறு கைகள், ஆறேழு முகங்கள் கொண்ட அதிசய உருவங்கள். இவைகளையே வேதத்தில் பார்த்துப் பழகி வந்தவர்களுக்கு முஹம்மதுக்கு வழங்கப்பட்ட வேதத்தில் இவையெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுக்கு பரிகசிப்பாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இவை தான் வேதத்தின் இலக்கணம் என்ற நம்பிக்கையுடையோர் நன்றாகப் பரிகசிக்கட்டும்!

கேள்வி:6

கவிஞர்களைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் முஹம்மது மிக மோசமாக நினைத்திருந்தார். அவர் குர்ஆனை வழங்கியதற்காக மக்கள் அவரைக் கவிஞர் என்று கவுரவித்ததை அவர் நிராகரித்தார். தன்னை நபி என்றே மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். ஒரு கவியுடைய கவிதையைக் கேட்ட போது அந்த ஷைத்தானைப் பிடியுங்கள்! ஒருவனுடைய வயிற்றில் சீழ் நிரம்பியிருப்பதை விட அவனுடைய உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பது மோசமானது என்று முஹம்மது சொன்னதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. மக்கத்துப் பரத்தையரையும்,  கவிஞர்களையும் மரண தண்டனைக்கு உள்ளாக்கும் போது எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று முஹம்மது கூறியதாக ரஷ்டியின் புத்தகத்தில் காணப்படுகின்றது. மறு புறமோ முஹம்மது தன்னுடைய தத்துவத்தைப் போற்றுவதற்காகவும், தனது வெற்றியை உயர்த்துவதற்காகவும், எதிரிகளை பழிப்பதற்காகவும் கஃபு இப்னு மாலிக், ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸூஹைர் போன்ற கவிஞர்களை அமர்த்திக் கொண்டார். அவர்களுக்கு தாராளமாக செல்வத்தையும், அடிமைப் பெண்களையும் பரிசில்களாக வழங்கினார்.

பதில்:6

நபியின் காலத்தின் அரபுலகிலும், உலகின் பல பகுதிகளிலும் கவிஞர்களுக்கு இருந்த மதிப்பு அளவிடற்கரியதாக இருந்தது. எழுதவும், படிக்கவும் தெரிந்திராத அன்றைய மக்கள், கவிஞர்களை  உன்னதமானவர்களாக, தெய்வீக அம்சம் கொண்டவர்களாக,  மனிதப் புனிதர்களாக, உத்தமர்களாக எண்ணி மதித்து வந்தனர். இந்தக் கவுரவத்தை எழுதவும் படிக்கவும் அறியாத அந்த நபிக்கு வழங்க முன்வந்த போது அதை நிராகரித்து விட்டார் என்றால் அது தான் அந்த நபியின் தனித்தன்மை.

அவர் உண்மையாளர்; பதவி, புகழுக்காக இவ்வாறு அவர் வாதிடவில்லை என்பதற்கு அது மகத்தான சான்றாகவும் அமைந்துள்ளதை நியாய உணர்வுடன் சிந்திப்பவர்கள் அறிய முடியும். அந்தக் கவுரவத்தை நிராகரித்துவிட்டு, எதைச் சொன்னால் மக்கள்  எதிர்ப்பார்களோ, துன்பம் தருவார்களோ, கொலை செய்யவும் கூட முயற்சிப்பார்களோ நாடு கடத்தத் துணிவார்களோ அந்த 'நபி' என்ற தகுதியை - அன்றைய மக்கள் நம்ப மறுத்து இழிமொழி  பேசிய நபி என்ற தகுதியை - வாதிட்டு அந்தத் துன்பங்களை எதிர்கெண்டாரே அது அவரது  நபித்துவத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது. 'கவிஞன்' என்ற தகுதியை அவர் மறுத்தது அவரது பலமாகவே உள்ளது. அதை பலவீனமாகக் காட்ட எண்ணுகிறார் ராம்ஸ்வர்ப்

'எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமுமில்லை' என்று முஹம்மது கூறியதாக ரஷ்டி குறிப்பிடுவது பச்சைப் பொய், அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. கவிஞர்களைப் பற்றி நபி (ஸல்) ராம்ஸ்வர்ப் குறிப்பிட்டப்படி மிகமிக மோசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததில்லை. கவிதை என்ற பெயரால் காம உணர்வைத் தூண்டி விடுவதையும், பெண்களின் அங்கங்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதையும், மதுபானங்களையும் போதைப் பொருட்களையும் வர்ணித்துப் பாடுவதையும், தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவனை அவனது குலத்தை - கோத்திரத்தை - உருவத்தை - விமர்சிக்கும் கவிஞர்களையும் தான் நபிகள் கண்டித்துள்ளார்கள். அத்தகைய கவிஞர்களையே ஷைத்தான் என வர்ணித்தார்கள்.

அத்தகைய கவிதைகளையே சீழை விடவும் மோசமானது என்றனர்.

'லபீத்' என்ற இஸ்லாத்திற்கு முற்பட்ட கவிஞரின் கவிதையை நபி (ஸல்) பாரட்டியதை புகாரியில் காண்கிறோம்.

நல்ல கவிதை ஒன்றை ஒரு நபித்தோழர் நபியின் முன்னே பாடிக்காட்டிய போது திரும்பவும் பாடுவீராக! என்று பலமுறை அதை அவர்கள் ரசித்துக் கேட்டதை நூல்களில் நாம் காண்கிறோம். (முஸ்லும்)

நபியவர்கள் ரசித்துக்கேட்ட அந்தக் கவிதை முஸ்லிம் கவிஞருடைய கவிதை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்தமாக கவியையும், கவிஞர்களையும் நபிகள் மறுத்தார்கள் என்பது உண்மைக்கு முரணாகும். நபியவர்களே நல்ல கவிஞர்களை வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்கு ராம்ஸ்வர்ப் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களையும் நபிகள் வரவேற்றது சான்றாக உள்ளது. இதில் இவர் குறை காண்பதற்கு எதுவுமில்லை. நபிக்கு இறங்கிய அந்த வேதமும் இரு வகைக் கவிஞர்களையும் குறிப்பிடுகிறது. நல்ல கவிஞர்களை வரவேற்கிறது.

(பார்க்க அல்குர்ஆன் 26:227)

கேள்வி:7

தன்னுடைய கவிதைகள் மூலம் முஹம்மதை எதிர்த்த காபிர்களை சிரச் சேதம் செய்யுமாறு ஆணையிட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. முஹம்மதின் போர்கள் (மகாஸி) நூல்களில் முக்கியப் பகுதியாக விளங்குபவை இந்தப் படுகொலைகள் தான் அஸ்மா, அஃபாக், கஃபு இப்னுல் அஷ்ரப் ஆகிய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம் என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:7

கவிஞர்கள் அவர்கள் கவிஞர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் ஒரு போதும் கொலை செய்யப்பட்டதில்லை. ஒரு சில கவிஞர்களாக இருந்தவர்கள் வேறு பல கிரிமினல் குற்றங்களைப் புரிந்ததால், அந்தக் கிரிமினல் குற்றங்களுக்காகவே கொல்லப்பட்டனர்.

'ராம்ஸ்வர்ப்' என்ற எழுத்தாளர் திருடி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நீதிமன்றம் அதற்காக தண்டனை வழங்குவதாக வைத்துக் கொள்வோம். அவர் எழுத்தாளன் என்ற காரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாக எவரேனும் கூறினால் அவனை விட முட்டாள் எவனுமிருக்க முடியாது.

அவர் ஹிந்துவாக இருப்பதால் தான் தண்டிக்கப்பட்டார் என்று கூறுவதும் முட்டாள் தனமானது.

இதே போல் தான் எவர் குற்றம் செய்தாலும் இஸ்லாம் சலுகை காட்டியதில்லை. குற்றவாளிகள் கவிஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிச்சலுகை எதுவும் இஸ்லாம் காட்டவில்லை. கவிஞர்களோ, கவிஞர் அல்லாதவர்களோ எவராக இருந்தாலும் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து இஸ்லாம் தப்பவிட்டதில்லை. அந்த அடிப்படையில் சில கவிஞர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தான் ராம்ஸ்வர்ப் விமர்சிக்கிறார். உதாரணமாக அவர் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களில் கஃபு இப்னு அஷ்ரபை எடுத்துக் கொள்வோம்.

நபிகள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் முதன் முதலில் 'பத்ரு' என்னும் போர்க்களத்தைச் சந்திக்கிறார்கள். அதில் நபிகள் மகத்தான வெற்றி பெறுகிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் மதீனாவில் - இஸ்லாமிய நாட்டில் ஒரு பிரஜையாக கஃபு இப்னு அஷ்ரப் என்ற கவிஞனும் இருந்தான். பத்ரு வெற்றிச் செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே மக்காவுக்கு ஓடி அங்கேயே தங்கி முஸ்லிம்களுக்கெதிராக மக்கத்துத் தலைவர்களைத் தூண்டி விட்டதோடு அவனது சொந்த நாட்டின் இரகசியங்களையும் அவர்களுக்குத் தெரிவித்தான்.

இதன் காரணமாகவே அவனைக் கொல்லுமாறு நபிகள் கட்டளையிட்டார்கள். இப்னு இஸ்ஹாக் இதனை குறிப்பிடுகிறார்.

ஆதாரப்பூர்வமான வேறு நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.

ஒரு நாட்டைச் சேர்ந்தவன், எதிரி நாட்டுக்கு - அதுவும் இரண்டு நாடுகளுக்குமிடையே பகைமை உச்சகட்டத்தை அடைந்திருக்கும் போது - போர் மேகங்கள் சூழ்ந்து நெருக்கடியான நிலையில் இருக்கும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவன் எதிரி நாட்டுக்கு இராணுவ இரகசியங்களைத் தெரிவித்தால் எந்த நாடும் அவனை மன்னிக்க முன்வராது. தேசத் துரோகிகளுக்கு கடுமையான தண்டனையை உலகில் எந்த நாடும் அளிக்கும்.

அந்த தேசத்துரோக்க் குற்றத்தையே கஃபு இப்னு அஷ்ரப் என்பவன் செய்தான்.

தேசத் துரோகி கவிஞர் என்பதற்காக அவனை மன்னிக்க வேண்டுமென்று  எதிர்பார்க்கிறார் ராம்ஸ்வர்ப். ஏனைய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையும்  அவர்கள் கவிஞர்களாக இருந்தார்கள் என்ற காரணத்துக்காக அல்ல என்பதை ராம்ஸ்வர்ப் உணர வேண்டும்.

கேள்வி:8

அல்லாஹ், அல்குர்ஆன், அந்நபி ஆகியவை  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டன என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:8

இஸ்லாம் ஒரு போதும் விமர்சனத்தை மறுத்ததில்லை. யாரும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் செய்து உண்மையை உணர்ந்து அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொண்டபின் ஒருவன் விமர்சிக்கக் கூடாது.

விமர்சித்தால் அவன் இன்னமும் அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இஸ்லாம் கருதுகிறது.

இதில் எந்தத் தவறும் இருப்பதாக எவரும் கருத மாட்டார்கள். ஒரு தேசத்தில் பிரஜையாக இருப்பவன் அந்த தேசத்தின் நீதிமன்றத்தை - அது வழங்கும் தீர்ப்பை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த தேசம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை விமர்சனம் செய்வது தடுக்கப்படுகின்றது. அவ்வாறு விமர்சனம் செய்தால் தேசத்துரோகி என்று அவனுக்குப் பட்டம் சூட்டப்பட்டு தண்டிக்கவும் படுகிறது. ஒரு தேசத்துக்கு என்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைகள் இருப்பதை ராம்ஸ்வர்ப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இது போலவே ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவனைக் கருதவேண்டுமானால் அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை அவன் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்பதற்கு முன்னால் அவன் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; கேள்விகள் கேட்கலாம் என்பது எப்படித் தவறாகும்?

ராம்ஸ்வர்ப் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். அல்லாஹ்வை, அவன் தூதரை, அவன் அளித்த வேதத்தை விமர்சனம் செய்யலாம். இஸ்லாம் அதற்கு பதில் தரும்.

அல்லாஹ்வை - வேதத்தை - நபியை -ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்ட சாலமன் ரஷ்டி விமர்சித்தால் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் இன்னமும் இஸ்லாத்தின் கொள்கைகளை அவர் நம்பவில்லை என்று கூறி அவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் என்று இஸ்லாம் முடிவு செய்கிறது.

எந்தக் கொள்கையை ஏற்றுவிட்டதாக ஒருவன் கூறுகிறானோ, அவன் அந்தக் கொள்கையை நம்பாதவனாக இருந்தால் அவனது கூற்று எப்படி உண்மையாக இருக்க முடியும்?

இதைத் தான் இஸ்லாம் கூறுகிறது. ராம்ஸ்வர்ப் இதில் குறை காண்பதற்கு எதுவுமில்லை. அவரது புலமை சான்ற கேள்விகள் எதுவுமே புலமை சான்றதாக இல்லை. பொய்யும், முரண்பாடும், பொருந்தா வாதங்களும் நிறைந்த தன் கேள்விகளுக்கு 'புலமை சான்ற கேள்விகள்' என்று அவர் பெருமிதப்பட்டுக் கொள்வதில் அர்த்தம் எதுவுமில்லை.

07.12.2009. 9:29 AM

கப்ஸா நிலைக்குமா?

நெல்லையைச் சேர்ந்த ஜெபமணி என்ற கிறித்தவ ஊழியம் செய்யும் ஒருவர் மெய்வழி என்ற  பெயரில்  1980  களில்  நடத்தி  வந்தார்.  அதில்  இஸ்லாத்தைக்  கொச்சைப்படுத்தி எழுதுவதே  இவரது  வாடிக்கையாக  இருந்தது.  ஆனால்  இவரது  எழுத்துக்களில்  எந்த விதமான அறிவுப்பூர்வமான வாதமும் இருக்காது.

இந்த நிலையில் இடையிடையே நூல் வடிவிலும் இஸ்லாத்தை ஏசி நூல்களை வெளியிடுவார். அப்படி அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று தான் கஅபா நிலைக்குமா என்ற நூல்.

1989 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்நூல் குறித்து பல சகோதரர்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்த போது அவரது அந்த நூலுக்கு மறுப்பாக கப்சா நிலைக்குமா என்ற நூலை வெளியிட்டோம். இதைக் கொள்கைச் சகோதரர்களின் பொருளுதவியுடன் இலவசமாக விநியோகம் செய்தோம்.

பகிரங்க விவாதத்துக்கும் அவரை நாம் அழைத்தோம். இதுவே அவருடன் நடத்திய விவாதத்துக்குக் காரணமாக இருந்தது.

அப்போதெல்லாம் பைபிள் குறித்து எனக்கு பெரிய அளவில் ஞானம் கிடையாது. இந்த விவாதத்துக்காக நான் பைபிளை பத்து தடவை படித்ததால் தான் பைபிள் குறித்து ஓரளவு அறிய முடிந்தது. அதற்காக எடுக்கப்பட்ட குறிப்புக்களை பயன்படுத்தித் தான் இயேசு இறை மகனா? இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆகிய நான்கு நூல்களை நான் எழுதினேன்.

பைபிளுக்குள் என்னை இழுத்து விட்ட ஜெபமனிக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

நேயர்களுக்கு பயன்படட்டும் என்று கருதி கப்சா நிலைக்குமா என்ற அந்த நூல் இங்கே வெளியிடப்படுகிறது.

கப்சா நிலைக்குமா?

(காபா நிலைக்குமா என்ற நூலுக்கு மறுப்பு)

முன்னுரை:

சமீப காலமாக தமிழகத்தில் நடந்த மத மோதல்களையும் சில இந்து மத வெறி இயக்கங்களின் அவதூறு பேச்சுகளையும் காரணமாக்கி நமக்கு இந்துக்களே விரோதிகள் என்று நண்பர்கள் கூறும் போதெல்லாம் இல்லை இல்லவே இல்லை இம்மோதல்கள் அரசியல் ரீதியானவை ஆனால் தத்துவ ரீதியிலும் சரித்திர ரீதியிலும் உலகளாவிய நிலையில் நமக்கு கிறிஸ்தவர்களே விரோதிகள் என்று நான் சொல்வது வழக்கம்.

இதை நிரூபிக்கும் வண்ணமாக அடிக்கடி சில வெயல்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் கிறிஸ்துவ பிரிவில் ஒரு சாராராகிய கத்தோலிக்கர்கள் முஸ்லி ம்களிடம் ஊடுருவவோ குழப்பம் ஏற்படுத்தவோ முயல்வதில்லை. அவர்களைக் குறை கூறித் திரியும் மற்றொரு பிரிவினரான புரோடஸ்டண்டுகள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் கிறிஸ்தவர்களில் ஒரு கூட்டம் நாமெல்லாம் வேதக்காரர்கள் சகோதரர்கள் என்று கையைக் குலுக்குவது போல் நடித்து காலை வாரி விடுவதற்காக இயங்குவதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆம் இவர்கள் ஈமான் யவ்முல்கியாமத் கஃபா என்றெல்லாம் அரபி எழுத்தில் பெரிய தலைப்பிட்டு தங்கள் பிரசுரங்களை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஷமத்தனமாய் வினியோகிப்பார்கள். முஸ்லிம்களும் அரபி எழுத்தையும் ஈமான் கஅபா போன்ற தலைப்புகளையும் பார்த்து வாங்கிப் படிப்பார்கள். அந்தப் பிரசுரங்களில் கர்த்தராகிய தேவனை விசுவாசிக்கும் படியும் இயேசுவே அந்தத் தேவன் என்பதும் காணப்படும். முகவரி பகுதியில் தபால் பட்டி எண் கொடுக்கப்பட்டு வேலூர் என்று அச்சிடப்பட்டிருக்கும்.

இது மட்டுமின்றி அக்பர் ஹக், மஜீது ஆபேல் என்று முஸ்லிம் பெயர்களைப் பெரிதாகப் போட்டு இவர்கள் நற்செய்தி அளிப்பதாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஒட்டி குழப்பம் ஏற்படுத்துவது இவர்களின் வழக்கம்.

அவ்வகையில் மற்றொரு மற்றோரு வழிகேடனின் விஷமத்தனம் தான் கஅபா நிலைக்குமா என்ற புத்தகம்.

அட்டையில் பெரிதாக ஈஸா அவர்கள் வானத்திலிருந்து இறங்கி தொழ வைப்பார்கள்

-ஹதீஸ் முஸ் லிம் 795, 782 என்றும்

வானத்திலிருந்து கல் ஒன்று கஅபாவின் மேல் விழுந்து கஅபா சிதறுவது போல் படத்தைப் போட்டு கஅபா என்ற பெரிய எழுத்திலும் நிலைக்குமா என்ற சிறிய எழுத்திலும் லாயிலாஹ இல்லல்லாஹி என்று வாசகமும் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் முறைகளைப் பாடமாக வரை படங்களுடன் கற்றுத் தர வேண்டுமானால் இந்நூலாசிரியரை அணுகுங்கள் என்ற புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருந்து இவர்களின் நோக்கங்களை அனைவரும் அறியலாம்.

இப்புத்தகத்தை எழுதிய மெய்வழி என்ற கிறிஸ்துவ மாதப் பத்திரிக்கையின் ஆசிரியரபன எம் டி ஜெபமணி எனபவர் தனது உரையில் ஜனாப் ஜின்னா பாரத நாட்டை பங்கிட்டமையால் முஸ்லிம் மக்களை வெறுத்தேன் என்கிறார்.

(பக்கம் 5)

இதில் இருந்து அவரது அறிவின் விசாலத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது முஸ்லிம்களை வெறுப்பதற்கு கொள்கைகளோ தத்துவங்களோ காரணங்கள் அல்லவாம். மாறாக அரசியல் ரீதியாக ஜின்னா பாரத நாட்டைப் பங்கிட்டதால் முஸ்லிம்களை வெறுத்தாராம்.

பாரத நாட்டைப் பங்கிட்டமைக்காக அவர் வெறுப்பது என்றால் பாரத நாட்டை வெள்ளை கிறிஸ்துவ அரசாங்கம் பங்கிட்டுக் கொடுத்ததே அப்படியானால் கிறிஸ்தவர்களையும் அல்லவா வெறுக்க வேண்டும். அதுவும் பாரதத்துக்கு சுதந்திரம் வழங்கும் முன் பாக்கிஸ்தானுக்குச் சுதந்திரம் வழங்கி பாரதத்தின் முகத்தில் கரியைப் பூசிய கிறிஸ்தவர்களை அல்லவா முதலில் வெறுக்க வேண்டும்.

பாரத நாட்டைப் பங்கிட்டமைக்காக பங்கிட்டவர்களை வெறுக்கலாம். அதில் ச்ம்பந்தப்பட்டவர்களை வெறுக்கலாம். பங்கிடப்பட்ட போதும் இந்தியாவை விட்டு போக மாட்டோம் என்று கூறி இன்றளவும் இந்தியாவிலேயே முஸ்லிம்கள் வாழ்கிறார்களே! பாகிஸ்தானுடன் சம்பந்தமின்றி உலகத்தின் பல பகுதிகளிலும் கோடானு கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்களே அவர்களையும் வெறுக்க வேண்டுமா?

யாரோ செய்த காரியத்துக்காக முஸ்லிம் சமுதாயத்தையே வெறுத்தேன் என்று கூறுபவன் கொஞ்சமாவது அறிவுடையவனாக இருக்க முடியுமா? இப்படிப்பட்ட அறை வேக்காடு தான் தக்க காரணம் எதுவும் இன்றி முஸ்லிம்களின் பால் வெறுப்பை வளர்த்துக் கெண்டு இந்தப் புத்தகத்தை எழுதியது என்பதில் இருந்தே இதன் தரத்தை உணரலாம் . இப்புத்தகத்தின் விமர்சனமே இக்கட்டுரை.

கப்ஸா நிலைக்குமா

நீங்கள் கெட்டிக்காரன் என்று நிரூபிக்கப் பல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் முட்டாள் என்று நிரூபிக்க ஒன்றே போதும் என்றான் டான் ஹெரால்ட என்ற அறிஞன். அந்த ஒரே ஒரு காரியத்தைச் செய்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஜெபமனி.

விவாதங்கள் அறிவின் அடிப்படையில் ஆதாரங்களின் துணையோடு அமைய வேண்டுமே தவிர மூடத்தனத்தில் எழக் கூடாது. ஒரு விஷயத்தைக் காய்த்தல் உவத்தலின்றி ஆராய வேண்டும். அஃதின்றி தானே புத்திசாலி என்ற மமதையில் தனக்குத் தோன்றியவாறெல்லாம் பேசுவது முட்டாள் என்று தன்னைத் தானே நிருபித்துக் கொள்ளப் போதுமானதமாகும்

பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையை ஆராய்ந்து சொன்னதற்காக கலிலியோவைக் குற்றவாளியாக்கிச் சிறையிலிட்ட மதத்தின் நூல் தொகுப்புக்களை வேதம் என நம்புபவர் இந்நூலில் பல இடங்களில் முஸ்லிம்களை முட்டாள்கள் எனக் கூறுவது அண்ணாந்து கொண்டு எச்சில் உமிழ்வது போல் உள்ளது.

ஆகாத முகத்தின் மேல் ஆத்திரப்பட்டு கையில் இருக்கும் கண்ணடியை உடைத்த மாதிரி கலகலத்துப் போய்விட்ட கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை (உதாரணம் மேற்கத்திய நாடுகள்) காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் இயலாமல் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கிறார்கள்.

மேனாட்டுக் கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக ஊட்டப்பட்ட நம்பிக்கைகளை மறு பரிசீலனை செய்து கருத்துக்களை துணிவாக வெளியிடத் துவங்கி விட்டனர்.

உதாரணமாக 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எட்டாம் தேதியென்று வெளியிடப்பட்ட அவேக் என்ற இதழில் பைபிளில் ஐம்பாதாயிரம் பிழைகள் இருப்பதாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.

1984ம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட உஹண்ப்ஹ் ய்ங்ஜ்ள் இதழில் ள்ட்ர்ஸ்ந் ள்ன்ழ்ஸ்ங்ஹ் ர்ச் ஆய்ஞ்ப்ண்ஸ்ரீஹய் க்ஷண்ள்ட்ர்ல்ள் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தெய்வீகத் தன்மையும் மறு உயிர்த்தலையும் அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களையும் பைபிளில் கூறப்பட்டவாறு நம்பவில்லை என்ற தகவல் தரப்பட்டது.

கிறிஸ்துவ மார்க்கம் புராணக் கதைகளின் நகல் என்றும் இயேசு நாதர் ஹோமரின் காப்பியத்தில் வரும் கடவுளர்கள் போன்று கற்பனைக் கடவுள் என்றும் மேல்நாட்டுக் கிறிஸ்துவ சமூகத்தினர் விமர்சிக்கின்றனர்.

பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான் என்பது போல பக்கத்துக்குப் பக்கம் இந்நூலில் அபத்தங்களும், அவதூறுகளுமே மிகைத்திருக்கின்றன.

குத்தினது சின்ன முள்ளாக இருந்தாலும் பிடுங்கித் தான் ஆக வேண்டும் என்பதற்காக இந்நூலை விமர்சிக்கின்றோம். முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் கடமை நமக்கு இருக்கிறது.

விமர்சனம் -1

சத்தியத்தை உண்மைப்படுத்தி வருவதாக சொல்லி க் கொள்ளும் மதம் ஒன்று அரபு நாட்டில் முகமது என்பவரால் உண்டாக்கப்பட்டது. இம்மதம் குறித்தே நாம் தெளிவடையப் போகிறோம் என்கிறார் ஜெபமணி (பக்கம் 22)

பதில் -1

இஸ்லாத்தைப் பற்றி எவர் வேண்டுமானாலும் விமர்சிப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. அனைத்துக்கும் இஸ்லாம் சரியான பதிலைத் தர தயாராகவே இருக்கிறது. எனினும் ஒரு மதம் குறித்து தெளிவடையப் போவதாகச் சொல்லும் ஜெபமணிக்கு நிச்சயமா அந்த அறிவுத் தகுதி அறவே இல்லை. ஏனெனில் ஒரு மதம் குறித்து தெளிவடைவது என்றால் அம்மதத்தைப் பற்றி அதன் கொள்கைகள் கோட்பாடுகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜெபமணி ஒரு ஞான சூன்யம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

முகமது (ஸல்) அவர்கள் ஒரு மதத்தைப் புதியதாக உருவாக்கவில்லை. அப்படி அவர்களும் சொல்லவில்லை. அவர்கலைப் பின்பற்றுபவரும் சொல்லவில்லை . இஸ்லாத்தின் ஸ்தாபகர் என்று முஹம்மது நபி தம்மைப் பற்றி பறை சாற்றவில்லை . முதல் மனிதர் ஆதம் ஜெபமணி பாஷையில் ஆதாம் தோன்றிய போது இஸ்லாமும் தோன்றி விட்டது. வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனை மட்டும் ஏற்று மற்ற அனைவரும் அவனது அடிமைகள் என நம்புவது தான் இஸ்லாம்

ஆதாம் முதல் ஆப்ரஹாம், மோஸே, ஈஸாக், இயேசு என்றெல்லாம் ஜெபமனியால் கூறப்படும் அனைவரும் இந்தக் கொள்கையைத் தான் போதித்தார்கள். தங்களை வணங்குமாறு அவர்கள் போதிக்கவில்லை. அவர்களையே வணக்கத்துக்குரியவர்களாக கடவுளின் குமாரர்களாக மக்கள் நம்பியதைத் தான் முஹம்மது (ஸல்) கண்டித்தார்கள். ஆதாமும், நோவாவும், ஆப்ரஹாமும், ஏசுவும் எதைச் சொன்னார்களோ அந்தக் கொள்கையைத் தான் முஹம்மது நபியும் சொன்னார்கள்.

முஹம்மது புதிய மதமொன்றை உருவாக்கினார் என்று கூறுவதே இஸ்லாம் பற்றி ஜெபமணிக்கு எதுவும் தெரியாது என்பதற்குச் சான்று.

இஸ்லாம் பற்றித் தெளிவடையப் போகிறோம் என்று கூறும் இவரது அறிவு தீட்சண்யத்தை அறிந்திட அவர் கையாண்டுள்ள சில வாசகங்களும் துணை செய்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆரம்பத்தில் நபித்துவ அடையாளத்தைப் பற்றி பேசிய வரக்கா பின் நவ்பல் என்பாரின் பெயரை இவர் தனது நூல் நெடுகிலும் பயன்படுத்தியுள்ள விதம் நகைப்பிற்கிடமானது.

வரக்கா என்பது அவரது பெயர். ஆனால் ஜெமணியோ அவரது பெயர் வரக்காபின் (வரக்கா மகன்) என்று புரிந்து கொன்டு தனது நூல் நெடுகிலும் வர்காபினை ,வர்காபினிடம், வர்காபினுக்கு என்றெல்லாம் எழுதுகிறார்.

இதே போல் அவர் எழுதிய சில சொற்கள் குர்ரான் அவ்லியாக்கள் மெஸிக் காபா ருஹ்மின் கொர்பான் நிஜ்ஜாத் இப்படிப் பல.

தமிழகத்தில் பிரபலமான முஸ்லிம் பெயர்களைக் கூட இவர் அறிந்து வைத்திருக்கவில்லை. ஸமாது (அப்துஸ் ஸமதைச் சொல்கிறாராம்) உலாமா என்றெல்லாம் எழுதுகிறார்.

இஸ்லாம் பற்றி தெளிவடையப் போகிறவரின் தரம் இந்த லட்சணத்தில் இருக்கிறது. இவர் பயன்படுத்திய பல வார்த்தைகள் முஸ்லிம்களுக்கும் புரியாது கிறிஸ்தவர்களுக்கும் புரியாது. இவர் தான் வரைபடத்துடன் முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்யும் முறையைக் கற்றுத் தருபவராம்.

இன்னும் கேளுங்கள்.

விமர்சனம் -2

முஸ்லிம்கள் தேவனை அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். அதே வேளை மானிடரில் சிறப்பானவரையும் அல்லாஹ் என்றே அழைக்கிறார்கள். நோவாவை சாதிக் அல்லாஹ் என்றும் இயேசுவை கலாமத்துல்லாஹ் என்றும் கிறிஸ்துவை முகீமின் அல்லாஹ் என்றும் இவர்களில் பரிசுத்த ஆவியானவராகிய ருஹீமின் அல்லாஹ்வை அறியக் கூடாதவர் என்று நம்புகின்றனர். குர்ஆன் 17;85 இங்கே முஸ்லிம்கள் அல்லாஹ் என்று குறிப்பட்டுக் கூறுவது தேவ மக்களையே என்கிறார் ஜெபமணி.

(பக்கம் 39)

பதில் - 2

நாம் நமது வாழ் நாளிலேயே இது போன்ற மூடரைக் கண்டதே இல்லை. இந்த முட்டாள் தனத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்ககிறதே என்று வேதனையுடன் தான் ஜெபமணிக்குப் பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்கள் தேவனைத் தவிர வேறு எவரையும் அல்லாஹ் என்று ஒருக்காலும் கூற மாட்டார்கள் என்பது சாதாரண நிலையில் உள்ள மாற்று மதத்தவர்களுக்கும் தெரியும். அல்லாஹ் என்று மானிடரைக் கூறுவது ஒரு புறமிருக்கட்டும் அல்லாஹ்வின் பண்புகளைக் கூட அல்லாஹ்விற்கு இருப்பதைப் போல் மற்றவர்களுக்கு இருக்காது என்று உறுதியாக நம்புவதே இஸ்லாம். மானிடர்களில் சிறப்பானவர்களை அல்லாஹ் என்று கூறுகிறோமாம். ஜெபமணி கூறுகிறார்.

அவர் எடுத்துக் காட்டிய சில சொற்றொடர்களில் அல்லாஹ் என்ற வார்த்தை இணைந்துள்ளது அல்லவா? அதனால் அவர் மானிடர்களையே அல்லாஹ் என்று முஸ்லிம்கள் கூறுவதாகத் தெளிவடைந்திருக்கிறார்.

கலீலுல்லாஹ் என்று ஆப்ரஹாமைக் கூறுகிறோம். உண்மை தான். அரபு மொழியில் அமைந்த அந்த சொற்றொடருக்கு என்ன பொருள்?

அல்லாஹ்வின் நண்பர் என்று பொருள்.

அதாவது ஆப்ரஹாம் அல்லாஹ்வுக்கு நண்பராகத் திகழ்ந்தார் என்கிறோம். (அதாவது ஆப்ரஹாம் வேறு அல்லாஹ் வேறு) மோஸேயை கலீமுல்லாஹ் என்று நாம் சொல்வது உண்மையே. அதன் பொருள் அல்லாஹ்வுடன் உரையாடியவர் என்பதாகும்.

நோவாவை சாதிகுல்லாஹ் என்கிறோம்.

அல்லாஹ்விடம் உண்மையாளராக நடந்து கொண்டார் என்பது அதன் பொருள்.

இயேசுவை கலிமத்துல்லாஹ் என்றும் ரூஹீம் மினல்லாஹ் என்றும் நாம் கூறுவது உண்மையே.

அதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் வாக்கு அல்லாஹ் அருளிய ஆவி என்பது தானே முறையே அந்த சொற்றொடர்களின் பொருள்.

அரபு பொழி தெரிந்தவர்களிடம் இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று கேட்டு தெளிவடைய முடியாமல் இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.

ஜெபமணியை அதுவுல்லாஹ் என்போம். இதன் பொருள் அல்லாஹ்வின் எதிரி என்பது.

இவ்வாறு அவரிடம் நாம் கூறும் போது தன்னையும் முஸ்லிம்கள் அல்லாஹ் என்று கூறுகிறார்கள் என்று அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வார் போலும். இந்த வார்த்தையிலும் அல்லாஹ் என்று இடம் பெற்றுள்ளதல்லவா?

இதை ஜெபமணிக்குப் புரியும் படியாக (அதாவது புரியக்கூடிய வகையில் அவருக்கு தலையில் சரக்கு இருக்குமானால்) தமிழ் இலக்கண விதியைக் கூறி விளக்கலாம்.

ஒருவனுக்கு சொந்தமான ஒரு பொருளை அல்லது அவனுடன் சம்மந்தப்பட்ட ஒரு பொருளைப் பற்றிக் கூறும் போது ஆறாம் வேற்றுமை உருபான அது என்ற உருபு பயன்படுத்தப்படும். அது அல்லது உடைய என்ற வார்த்தை வெளிப்டையாக வந்து ஒருவனுக்குரியதைச் சுட்டும். அவ்வுருபு சில வேளை வெளிப்படையாக வராமலும் இருக்கும்.

உதாரணமாக ஒரு நாய் இருக்கிறது என்றால் இது ஜெபமணியுடைய நாய் என்றும் ஜெபமணியது நாய் என்றும் கூறலாம். அதே மாதிரி ஜெபமணி நாய் என்றும் உருபு சேர்க்காமலும் கூறலாம்.

இது போன்ற அரபு பொழியில் கூறும் போது அதன் இலக்கன அமைப்புப்படி உருபு எதுவுமின்றி இரண்டு தனித்தனி வார்த்தைகள் இணையும் போது உருபு மறைந்து உரிமைப் பொருளை உணர்த்தி நிற்கும். இந்த இணைப்புக்கு அரபு இலக்கணம் இழாஃபத் என்று கூறும்.

இந்த இலக்கண விதியில் அமைந்த இணைப்புச் சொற்களே ஜெபமணி எடுத்துக் காட்டிய சொற்கள்.

ஆறாம் வேற்றுமையாகப் பயன்படுத்தப்பட்ட அந்த சொற்களிலிருந்து மானிடரில் சிறந்தவர்களை முஸ்லிம்கள் அல்லாஹ் என்று கூறுவதாக தெளிவடைந்துள்ள ஜெபமணியிடம் ஜெபமணி நாய் என்று கூறினால் தன்னைத் தான் நாய் என்று கூறுவதாக எடுத்துக் கொள்வார் போலும்.

இப்படியெல்லாம் உளறிவிட்டு குர்ஆனின் 17:85 வசனம் இங்கே முஸ்லிம்கள் அல்லாஹ் என்று குறிப்பிட்டுக் கூறுவது தேவ மக்களையே என்றும் முன்னர் சொன்ன பாராவை முடித்திருக்கிறார்.

குர்ஆனின் ஏதோ ஒரு எண்ணைக் குறிப்பிட்டவுடன் முஸ்லிம்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்பது தான் முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு இவர்களுக்கு அளிக்கப்பட்ட பால பாடம். அந்த வசனத்திற்கும் எடுத்து வைக்கும் வாதங்களுக்கும் சம்பந்தமிருக்க வேண்டுமென்பதில்லை. அந்த பால பாடத்தையே அட்சரம் பிசகாமல் அப்படியே நடைமுறைப்படுத்துகிறார் ஜெபமணி.

அல்குர்ஆன் 17:85 வசனம் தேவ மக்களை அல்லாஹ் என்றெல்லாம் கூறவில்லை. தேவனுக்கு மக்களில்லை என்பதை அல்குர்ஆனின் பல வசனங்கள் தெளிவாகச் சொல்கின்றன.

(ஜெபமணி போன்ற) வேதக்காரர் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து உயிர் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டனர். அவர்களுக்கு விளக்கமாகவே 17:85 வசனம் அருளப்பட்டது.

(நபியே) உம்மிடம் ரூஹைப் பற்றிக் கேட்கின்றனர் அது தனது இறைவனின் கட்டளையிலி ருந்தே உருவானது. நீங்கள் குறைந்த அளவே அறிவு கொடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறுவீராக.

இதுதான் 17:85 வசனம்

இதற்கும் மானிடரில் சிறந்தவரை அல்லாஹ் என்று கூறுவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இப்படிப்பட்ட மோசடிக்கார ஜெபமணி, அறியாமையை ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு தெளிவடைந்துள்ளதைக் காணுங்கள்.

விமர்சனம் 3

முகமது வரலாறு என்ற தலைப்பில் (பக்கம்23) வாயில் வந்தவாறு எல்லாம் உளறிக் கொட்டிவிட்டு அவர் மட்டும் தெளிவடைந்திருக்கிறார்.

அந்தத் தலைப்பில்

கதீஜாப் பிராட்டியார் யூத, சிரிய, கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார். முகமது, கதீஜாள் மூலம் சத்திய வேதத்தை மார்க்கத்தை அறிந்தார். கதீஜாவின் உறவினரும் போதகருமான வர்காபின் என்பவரைக் கொண்டு சத்தியத்தைத் தெளிவாக அறிந்து வந்தார். (அதாவது கிறிஸ்தவ மதத்தையும் பைபிளையும் கூறுகிறார் ஜெபமணி)

கி பி 619ல் கதிஜாள் மரித்தாள். முகமது சகல ஆஸ்திகளுடன் தன் ஜனத்தாரை அடைந்தார். அங்கு வாழ்ந்த சிலர் அவருடைய நாகிரீகத்தையும் அவர் வணக்க முறைகளையும் கண்டு அவரை விரும்பினர். அவர் வர்காபினிடம் கேட்டறிந்த சத்தியத்தை அவர்களுக்குப் போதிக்கையில் மெக்காவாசிகள் இப்புது உபதேசத்தால் வெகுண்டு கலகம் அடைந்து தங்கள் வணக்கங்கள் திருவிழாக்கள் நாசமடைந்து அதன் மூலம் அவர்கள் சம்பாதித்து வந்த வருமானங்களை இழந்து போக நேரிடும் என்று கண்டு இந்த உபதேசத்தைக் கை விடுமாறு பணித்தனர். வெகுமதிகளை முகம்மதுக்குத் தர முயன்றனர் என்கிறார் ஜெபமணி

(பக்கம் 23.24)

நமது பதில்

இதில் அவர் செய்த மோசடிகள் ஏராளம். அதை அனைத்தையும் விரிவாக அலசுவோம். முதலில் கதீஜா பிராட்டியார் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று ஜெபமணி நிலை நாட்டுவதற்கு என்ன காரணம் என்றால் யூத குலமே மனித சமுதாயத்தில் உயர்ந்த குலம்; அந்தக் குலத்தில் மட்டுமே தீர்க்கதரிசிகள் தோன்றுவர். அவர்கள் மாத்திரமே இறைவனுக்கு உவப்பானவர்கள் என்பது யூத கிறிஸ்தவ தலைமையின் நம்பிக்கை. யாராவது சத்தியத்தைச் சொன்னால் அவரை யூதர் என்பார்கள்; அல்லது யூதர்களிடம் தான் இவர் இதனைக் கற்றார் என்பார்கள். யூதர்கள் வழியாக அல்லாமல் சத்தியம் வெளிவர முடியாது என்பதும் இவர்களது நம்பிக்கை.

இந்த நம்பிக்கை இன்று நேற்றல்ல. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே அவர்களிடம் குடி கொண்டிருந்ததைக் குர்ஆன் கூறுகிறது.

யூதர்களும் கிறுஸ்தவர்களும் நாங்களே அல்லாஹ்வுடைய குமாரர்களாகவும் அவனால் நேசிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றோம் என்று கூறிகின்றனர்.

(அல்குர்ஆன் 5:18)

இந்த உயர் ஜாதிப் புத்தி தான் கதீஜாவையும் வரக்காவையும் யூத குடும்பம் என்று ஜெபமணியைச் சொல்ல வைக்கின்றது. அவ்விருவரும் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் தந்திருக்கிறாரா ஜெபமணி? ஆதாரம் தந்தால் தான் புத்திசாலிகளின் பட்டிய லில் சேர்ந்து விடுவாரே.

ஆப்ரஹாமுக்கு இரு மகன்கள். ஒருவர் இஸ்மவேல். மற்றவர் ஈஸாக். ஈஸாக்வுடைய புதல்வர் தான் இஸ்ரவேல். இவர் வழியாகத் தோன்றியவர்களே யூதர்கள். இதன் அடிப்படையில் தான் ஜெபமணியைச் சேர்ந்தவர்கள் கூட இஸ்மவேல் இஸ்ரவேல் என்று குறிப்பிடுவார்கள்.

இஸ்மவேலர்களின் பரம்பரையில் வந்த எவரும் யூத குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது. இஸ்மவேலர்களின் ஒரு கிளைக் குடும்பமே குரைஷிக்குலம். இந்த குறைஷிக் குலத்திலேயே முகமது தோன்றியதாக ஜெபமணி ஒப்புக் கொள்கிறார். (பக்கம் 23)

முகமது (ஸல்) எந்தக் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்களோ அதே குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அன்னை கதீஜாவும், வரக்கா பின் நவ்பலும். இதை ஒப்பு நோக்கி விளங்குவதற்காக முஹம்மது (ஸல்) அவர்களின் பாரம்பரியப் பட்டியலும் கதிஜா ரலி அவசர்களின் பாரம்பரியப் பட்டியலும் வரகா பின் நவ்பலின் பாரம்பரியப் பட்டியலும் தந்துள்ளோம். இரண்டும் எவ்வாறு ஒட்டி அமைந்துள்ளன என்பதை ஜெபமணிகள் உணரட்டும்.

முஹம்மது (ஸல்) கதீஜா(ரலி ) வரக்கா

காலிப் காலிப் காலிப் லுவை லுவை லுவை கஃபு கஃபு கஃபு முர்ரா முர்ரா முர்ரா கிலாப் கிலாப் கிலாப் குஸை குஸை குஸை அபதுல்முனாப் அப்துல் உஸ்ஸா அப்துல் உஸ்ஸா ஆ ஷிம் அஸத் அஸத் அப்துல் முத்தலிப் குவை த் நவ்பல் அப்துல்லாஹ் கதீஜா வரக்கா முஹம்மது (ஸல்)

(ஆதாரம்: இப்னு ஹிஷாம் அவர்களின் நபி வரலாறு என்ற நூல்)

முஹம்மது (ஸல்) அவர்கள் எப்படி இஸ்மவேலர்களடங்கிய குஸை என்பாரின் பரம்பரையில் தோன்றினார்களோ அந்தப் பரம்பரையிலே தான் கதீஜாவும் வரக்காவும் பிறக்கிறார்கள்.

வரக்கா பின் நவ்பல் அவர்கள் குறைஷிக் குலத்தில் பிறந்த பின்னர் கிறித்தவ மார்க்கத்தைத் தழுவிக் கொண்டவர் என்பதே உண்மை.

ஜெபமணி தனது நூலின் முன்னுரையில் என்ன ஆச்சரியம் ஆண்டவர் என் கரத்தைப் பிடித்து நான் அரியாத வேத இரகசியத்தையெல்லாம் எனக்குள் உணர்த்தி எழுவதை உணர்ந்தேன். என் கைகள் எழுதிய போதிலும் எழுதிய விபரம் என்னிடமிருந்து வெளிப்பட்டதில்லை என்பதை திருப்பி வாசித்த போது கண்டேன். வேத புத்தகத்தை குர்ரான் ஹதீஸ் நூல்களைப் புரட்டும் போதெல்லாம் என் கண்கள் உற்று நோக்கும் இடத்தில் எழுதுவதற்கு ஆதாரமான வசனங்கள் இருப்பதைக் கண்டு உண்மையாய் அதிசயித்தேன். ஆண்டவராலேயல்லாமல் எந்த ஒரு மனிதரிடமோ வேத பண்டிதர்களிடமோ அவர்கள் எழுதிய நூல்களி லிருந்தோ ஒன்றையும் நான் கேட்டோ வாசித்தோ அறியவில்லை என்பதற்கு தேவன் மாத்திரமே சாட்சி

(பக்கம் 6)

என்று குறிப்ப்பிட்டுள்ளார்.

ஜெபமணியாரே கலீலுல்லாஹ் என்றால் அல்லாஹ் என்று அர்த்தம் செய்தீரே அதுவும் கூட உமது ஆண்டவர் கையைப் பிடித்து எழுதியது தானா?

17;85 என்று போட்டு உளறினீரே அதுவும் ஆண்டவனின் கிருபா கடாட்சம் தானா?

கதீஜாளும், வர்காபினும் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் என புருடா விட்டீரே அதுவும் பரலோகத்திலிருக்கிற பிதா உம் கையைப் பிடித்து எழுதியது தானா?

குர்ரானும் ஹதீஸும் தேவையான போது உம் கண்களுக்கு காட்சி தருவதாகக் கூறுகிறீரே ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மட்டும் உம் கண்ணில் படாமல் போனதும் அந்த தேவனின் மகிமை தானா? அந்தச் சமயத்தில் மட்டும் பரமண்டலத்தில் இருக்கும் பிதா உம் கையை உதறி விட்டாரா? அந்த ஹதீஸை அப்படியே தருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன் முறையாக வஹீ வந்ததும் கதீஜா (ரலீ) யிடம் வந்து தன்னைப் போர்த்துமாறு கூறியதும் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் சகோதரரான நவ்பல் என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள். நவ்பல் என்பார் அஸது என்பாரின் மகனும் அஸது என்பார் அப்துல் உஸ்ஸா என்பாரின் மகனுமாவார். வரக்கா அவர்கள் அறியாமைக் காலத்திலேயே கிறித்துவ மார்க்கத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் தேர்ந்தவராகவும் (அராமிக் மொழி வேதமான) இன்ஜீலை ஹீப்ரு மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதி வைத்தவராகவும் இருந்தார். மேலும் அவர் கண்பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ர லி) அவர்கள் என் தந்தையின் சகோதரனின் மகனே! உமது சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள். என்றார்கள். நீர் என்ன கண்டீர்? என்று வரகா அவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் கண்டதைக் கூற அவர்கள் வந்தவர் ஜிப்ரீல் தான் என்று உறுதிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரக்கா அவர்கள் எந்தச் செய லும் ஈடுபடாமல் இறந்து விட்டார்கள்

(புகாரி ஹதீஸ் எண் 3

பரலோகத்தில் இருக்கின்ற பரம பிதா ஜெபமணிக்கு இந்த ஹதீஸைக் காண்பிக்கவில்லை போலும். தேவனே தன் கையைப் பிடித்து எழுதச் செய்ததாக உளறும் ஜெபமணியின் கூற்றுப் படி இதுவரை இவ்வளவு அறியாமையும் முட்டாள் தனமும் இவருடைய வாதங்களில் காணப்படுகிறதே இன்னும் பல அபத்தங்களைக் காணவிருக்கிறோமே அந்த அபத்தங்கள் கூட தேவனுடையது தானா?

வர்காபிடம் முஹம்மது சத்தியத்தைக் கற்றார் என்ற ஜெபமணியின் கூற்றும் தவறானது என்பதை மேலும் காண்போம்.

இறைவன் ஒருவன் தான்; ஆனால் அவனுக்கு ஒரு மகன் உண்டு. அந்த மகனுக்கு ஒரு தாய் உண்டு அந்த மகனுக்கும் தாய்க்கும் இறைமையில் பங்குண்டு. ஒன்றாக உள்ள இறைவன் மூன்றாக இருக்கிறார் என்பது அன்றைய மற்றும் இன்றைய கிறிஸ்துவ நம்பிக்கை.

வரக்காவிடம் முஹம்மது (ஸல்) பாடம் படித்திருந்தால் அந்தப் போதனைக்கு மாற்றமாக இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவன் தேவையற்றவன்; அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவில்லை; அவன் தான் படைப்பாளன்; உணவளிப்பவன்; உரிமையாளன்.; சட்டமயற்றுபவன் என்றெல்லாம் முஹம்மது (ஸல்) போதித்திருப்பார்களா?

முஹம்மது (ஸல்) எதைப் போதித்தார்களோ அதையே வரக்காவிடம் கற்றார் என்று ஜெபமணி வாதிட்டால் மற்றொரு உண்மையை அவர் ஒப்புக் கொண்டவராகி விடுகிறார். அதாவது வரக்கா முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் போதித்த கொள்கை தான் சத்தியம் என்று ஜெபமணி ஏற்றுக் கொண்டவராகிறார். அப்படியானால் வரக்காவிடம் முஹம்மது (ஸல்) கற்ற கொள்கைக்கு மாற்றமாக இன்றைய கிறிஸ்தவர்களின் கொள்கை அமைந்துள்ளதே இக்கொள்கை பிற்காலத்தில் திணிக்கப்பட்டது தான் என்பதை ஜெபமணி ஒப்புக் கொள்வாரா?

ஜெபமணியின் வாதப்படி வரக்கா போன்ற அன்றைய கிறிஸ்துவ மூத்த அறிஞர்கள் இறைவனுக்கு மனைவி மக்களில்லை என்று கொள்கையை வைத்திருக்கும் போது, அதை முஹம்மதுவுக்கும் போதித்திருக்கும் போது இதற்கு முரணாக பின்னர் திட்டமிட்டு திணிக்கப்பட்ட கிறிஸ்தவக் கொள்கையி ருந்து ஜெபமணி விலகிக் கொள்வாரா?

ஒன்று முஹம்மது (ஸல்) வரக்காவிடம் எதையும் கற்கவில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது வரக்காவிடம் கற்றார் என்றே சாதித்தால் வரக்கா போன்ற முற்காலப் பாதிரிகள் என்ன கொள்கையை முஹம்மதுவுக்கு போதித்தார்களோ அதை அதாவது இஸ்லாத்தை ஏற்றாக வேண்டும். இரண்டில் எதைச் செய்யப் போகிறார் திருவாளர் ஜெபமணி.

அவர் வர்காபினிடம் கேட்டறிந்த சத்தியத்தை அவர்களுக்குப் போதிக்கையில் மெக்காவாசிகள் இப்புது உபதேசத்தால் வெகுண்டு கலக்கம் அடைந்து தங்கள் வணக்கங்கள் திருவிழாக்கள் நாசமடைந்து அதன் மூலம் அவர்கள் சம்பாதித்து வந்த வருமானங்களை இழந்து போக நேரிடும் என்று கண்டு இந்த உபதேசத்தைக் கைவிடுமாறு பணித்தார்கள் என்று ஜெபமணி முன்னர் தாம் குறிப்பிட்ட பாராவில் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி பிழைப்பதையும், புரோகிதத்தையும் முஹம்மது (ஸல்) கடுமையாக எதிர்த்துள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறார் ஜெபமணி. இந்தக் கொள்கையை ஜெபமணியின் வாதப்படி வர்காபினிடம் அவர் கற்றறிந்ததால் வர்காபுடைய காலத்தில் கிறிஸ்துவ மார்க்கத்திலும் புரோகிதம் இருக்கவில்லை என்பது தெளிவு. ஜெபமணி போன்றவர்களே அதைப் பின்னர் தங்கள் இலாபத்திற்காக உருவாக்கிக் கொண்டார்கள் என்பதும் தெளிவு. புரோகிதத்தை எதிர்த்துப் போராடுவதை எந்த வர்காபினிடம் அவர் கற்றாரோ அந்த போதனையை ஜெபமணியும் அவரது காலத்தவர்களும் மறந்தது ஏன்?

வர்காவும் புரோகிதத்தை ஆதரிப்பவராக இருந்தார் என்று ஜெபமணி கூறினால் புரோகிதத்தை ஆதரிப்பவரிடமிருந்து புரோகிதத்தை எதிர்க்கின்ற ஞானத்தையும் துணிவையும் முஹம்மது (ஸல்) பெற்றிருக்க முடியுமா? குழப்பமே உனது மறு பெயர் தான் ஜெபமணியோ?

முஹம்மதுவுக்கு வெகுமதிகளைத் தர முயன்றனர் என்று ஜெபமணி கூறுவதன் மூலம் முகமது எதற்கும் அஞ்ஞாதவர்; விலை போகாதவர் என்பதை ஜெபமணி பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார். அவர் எழுதியதிலேயே இந்த வாசகம் மட்டும் தான் உண்மை.

அடுத்து வர்காவிடம் முஹம்மது (ஸல்) சத்தியத்தைக் கற்றார் என்று ஜெபமணி கூறியிருக்கிறார் அல்லவா? அதே வரக்கா முஹம்மதுவை இறைத் தூதர் இறுதித் தூதர் என்று நற்சான்று வழங்கினாரே அதனடிப்படையில் முஹம்மது இறைவனின் இறுதித் தூதர் தான் என்பதையும் ஜெபமணி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விமர்சனம் 4

இன்னும் திருக்குர்ஆனின் வசன எண்களைக் குறிப்பிட்டு இவர் செய்துள்ள தில்லுமுள்ளகள் ஏராளம். இவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாக கூறும் மேற்கோள் நூலான தமிழ்க் குர்ரான் ஆ.கா.அப்துல்கமீது பாகவியின் மொழி பெயர்ப்பு ஆகும். (பக்கம்111)

நம்மிடம் அந்தத் தமிழ்க் குர்ரான் உள்ளது. இவர் எண்கள் எடுத்துக் கொடுத்திருக்கும் வசனங்களின் விளக்கத்தை அதே எண்ணில் தேடிப் பார்க்கும் போது இவரின் பித்தலாட்டங்கள் அப்பட்டமாக அம்பலமாகின்றன. சான்றுக்குச் சிலவற்றைக் காண்பிப்போம்.

20:90. 19:18. 19:87 ல் கியாமத் (நியாயத் தீர்ப்பு) நாளில் பரிந்து பேசுபவன் அந்த ரஹ்மான் என்றும் கூறுகிறது 3:164 ல் அந்த ரட்சகனை யூதரி லிருந்து எழும்பப் பண்ணுவதாகவும் கூறுகிறது (பக்கம் 49) என்கிறார்.

நமது பதில்

ஆனால் இவர் குறிப்பிட்ட எண்களுக்கும் இவர் குறிப்பிட்ட விவரத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. சரியான மொழி பெயர்ப்புகளோ தவறான கொள்கையின் மீது எழுதப்பட்டிருக்கும் கிருத்தவக் கோட்டையைத் தகர்த்தெரியும் சம்மட்டிகளாகவே இருக்கின்றன.

இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி என்னுடைய ஜனங்களே நீங்கள் வழி தப்பி விட்டீர்கள் நிச்சயமாக உங்கள் இறைவன் ரஹ்மான் தான். என்னைப் பின்பற்றுங்கள். என்னுடைய கட்டளைக்கு வழிப்படுங்கள் என்று கூறினார்

திருக்குர்ஆன் 20:90

இங்கே கியாமத் பற்றியோ பரிந்துரை பற்றியோ கூறப்படவில்லை இஸ்ரவேலர்களான யூதர்கள் மெய்வழி மறந்து பொய் வழி புகுந்ததையும் ஹாரூன் (அலை) கூறுவதாகவும் ஹாரூனுக்கு மேலே ஒரு ரஹ்மான் இருக்கிறான் என்பதையும் தான் கூறுகிறது.

நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுமாறு ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன்

திருக்குர்ஆன் 19:18

இது தான் அவர் குறிப்பிட்ட வசனத்தின் பொருள் இதிலும் கியாமத் பற்றியோ பரிந்துரை பற்றியோ எதுவுமில்லை. மாறாக கிறித்துவர்கள் கடவுளாகவும் கடவுளைப் பெற்றெடுத்தாகவும் கன்னித்தாயாகவும் வணங்கும் மேரி என்ற மர்யம் (அலை) அவர்களின் கூற்றாக அந்த வசனம் அமைந்துள்ளது. கடவுளின் குமாரரோ கடவுளின் தாயோ தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முடியாமல் தனக்கும் கடவுளான ரஹ்மானிடம் பாதுகாப்பைத் தான் தேடியதைத் தான் 19:18 வசனம் கூறுகிறது.

ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் சிபாரிசு பேசச் சக்தி பெற மாட்டார்

திருக்குர்ஆன் 19:87

ஏசுவாக இருந்தாலும் அவரால் கூட கியாமத்தில் எதுவும் செய்ய முடியாது என்பது ஒரு புறமிருக்க பரிந்து பேசுவதற்குக் கூட இறைவனின் அனுமதியின்றி இயலாது என்று கூறி கிறிஸ்துவ நம்பிக்கையை இவ்வசனம் தகர்க்கிறது. இதிலும் இவர் கூறிய கருத்து எதுவுமே இல்லை.

3:164 ல் அந்த ரட்சகனை யூதரிலிருந்து எழும்பப் பண்ணுவதாகக் கூறுகிறது என்கிறார் ஜெபமணி (பக்கம் 49)

அல்லாஹ் விசுவாசிகளின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்தருளச் செய்தான். என்பது 3:164 வசனம்.

இங்கே ரட்சகனை எழும்பப் பண்ணுவதாக எதுவுமே இல்லை. ரட்சகன் தான் கூறக் கூடியதைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே மக்களிடம் எடுத்துச் சொல்லும் தனது தூதரை அனுப்புவதாகவே கூறுகிறான். மேலும் யூதர்களிலிருந்து என்றும் இவ்வசனம் கூறவில்லை. அவர்களிலிருந்து என்று மட்டும் இறைவன் இங்கே கூறுகிறான். அவர்கள் என்றால் எவர்கள்?

ஜெபமணி முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்தை உம்மிகள் என்று ஒப்புக் கொள்கிறார்கள். முஹம்மதுவின் சீடர்கள் உம்மிகள் (பக்கம் 30)

3:164 வசனத்திற்கு தொடர்பான மற்றொரு வசனம் 62:2 வசனமாகும்.

இந்த வசனத்தில் எழுத்தறிவில்லாத ஜனங்களுக்காக அவர்களிலேயே ஒரு தூதரை அவன் அனுப்பி வைத்தான்(62:2)

இதன் மூலம் அவர்களிலிருந்தே என்பது யூதர்களைக் குறிக்கவில்லை. உம்மிகளை அதாவது அரபுகளைத் தான் குறிக்கிறது. அந்த உம்மிகளுக்கு தூதராக அனுப்பப்பட்டவர் முஹம்மது (ஸல்) அவர்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

திருக்குர்ஆன் மட்டுமல்ல. இவர் கூறும் முன்னறிவிப்பு உபாகமம் 18:18ல் கர்த்தர் மேசேயிடம் கூறிய விபரத்தில் இடம் பெற்றுள்ளது. உன்னைப் போல் ஒரு தீர்க்கத்தரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரில் இருந்து எழுப்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார் என்பது அந்த வசனம்.

இவ்வசனத்தில் அவர் சகோதரர் என்பது யாரைக் குறிக்கும்?

மேலும் உபாகமம் 34:12ல் முகமுகமாய் அறிந்த மேஸேயைப் போல் ஒரு தீர்க்கத்தரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும் என்று கூறப்படுவதில் இருந்து இதை அறியலாம்..

மேஸேயைப் போல் ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலரில் எழும்பவில்லை. ஆனால் அவர்கள் சகோதரராகிய இஸ்மவேலரில் எழுந்தார். உன்னைப் போல் ஒரு தீர்க்கததரிசியை என்பது முஹம்மது (ஸல்) அவர்களைத் தான் குறிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மோசேவுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் தெளிவான வாழ்க்கைச் சட்டம் அருளப்பட்டது. இருவரும் எதிரிகளைச் சந்தித்தனர். அற்புதமான வழிகளால் வென்றனர். இருவருமே இறைத் தூதர்களாகவும் இராஜ்ய நிர்வாகிகளாகவும் இருந்தனர். இருவரும் கொலைச் சதிக்குப் பயந்து நாடு துறந்தனர். இவற்றிற்கு மேலாக இருவரும் தந்தை தாய் இணைந்து பிறந்தனர். மணமுடித்தனர். மக்களைப் பெற்றனர். குடும்பத் தலைவர்களாயினர்.

ஆனால் யூதரில் எழுந்த இயேசு இப்படி எதிலுமே மோஸேயுடன் ஒத்துப் போகவில்லை. எனவே இங்கே இயேசுவைக் கூறுவது அபத்தத்திலும் அபத்தம் குர்ஆன் 3:164வசனத்தில் கூறப்படுவதும் உம்மிகளில் உதித்த முஹம்மது (ஸல்) அவர்களைத் தான்.

இந்த வசனத்தில் கூறப்படுவது ஈஸாவைப் பற்றியே என்று கூறுவதன் மூலமும் தூதரை இரட்சகராக ஆக்கியதின் மூலமும் இரண்டு மோசடிகளைச் செய்திருக்கிறார் ஜெபமணி.

விமர்சனம் 5

அவரது மோசடியையும் அறியாமையையும் இன்னும் பாருங்கள் குர்ஆன் 21:42 ல் பகலிலோ இரவிலோ மானிடர் அறியாத வேளையில் வருகிறவர் நரக வேதனையி லிருந்து விடுவிப்பவர் என்றும் கூறுகிறது என்கிறார் ஜெபமணி (பக்கம்50)

நமது பதில்

அதாவது இத்தகைய தன்மை ஏசுவுக்கு உண்டு என்றும் அவரையே இவ்வசனம் கூறுகிறது என்றும் குறிப்பிடுகிறார் ஜெபமணி. உண்மையில் அந்த வசனம் கூறுவது என்ன?

இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையிலிருந்து எங்களை இரட்சிப்பவர் யார் என்று நீர் கேளும்

(அல்குர்ஆன் 21:42)

இதற்கும் ஜெபமணி கூறுவதற்கும் ஏதாவது சம்மந்தமிருக்கிறதா? இவரை விட அறிவிலியை உலகம் கண்டிருக்கிறதா? ஜெபமணி நாய் என்பதை எப்படி ஜெபமணி புரிந்து கொள்வாரோ அதே போல் தான் ரஹ்மானுடைய வேதனை என்பதை ரஹ்மான் என்று விளங்குகிறார்.

இப்புத்தகம் முழுவதும் எதை விட எதை சேர்க்க என்று தெரியாத அளவுக்கு மோசடிகள் மலிந்து உள்ளன. இவரது அறியாமைக்கு இன்னும் சில சான்றுகளையும் பாருங்கள்.

விமர்சனம் 6

குர்ஆன் 25:48. 27:63 பரிசுத்த ஆவியானவரை மழை காற்றாக உவமிக்கின்றது 2;87 66;12ல் இந்த துய ஆவியால் ஏசு பிறந்ததாவும் கூறுகிறது. (பக்கம் 51) என்று ஜெபமணி எழுதுகிறார்.

நமது பதில்

ஆனால் இவ்வசனங்கள் கூறுவதென்ன? அல்லாஹ் நிழலைக் கூட்டிக் குறைப்பது பற்றியும் சூரியனை நிழலுக்கு முன்னோடியாக்கியது பற்றியும் இரவை சிரமபரிகாரத்திற்குரிய நித்திரைக்காகவும் பகலை நடமாட்டத்துக்காகவும் படைத்தது பற்றிக் கூறிவிட்டு அடுத்த வசனங்களில் அவன் தான் அருள் மாரிக்கு முன்னதாக காற்றை நன்மாராயமாக அனுப்பி வைக்கிறான் (25;48) என்றும்

மேகத்திலிருந்து பரிசுத்தமான தண்ணீர் தருவது பற்றியும் கூறுகிறான்.

அதே மாதிரி 27;93 வசனம் என்ன கூறுகிறது தெரியுமா?

கடலிலோ கரையிலோ இருள்களிலோ உங்களுக்கு வழிகாண்பிப்பவன் யார்? அவனுடைய அருள்மாரிக்கு முன்னதாகக் காற்றை நன்மாராயமாக அனுப்பி வைப்பவன் யார்? என்று கூறப்படுகிறது.

மழை பெய்யுமுன் காற்று வருவதை இறைவன் கூற இவர் அக்காற்றையே பரிசுத்த ஆவியாகக் கற்பனை செய்து கொள்கிறார்.

அதே மாதிரி 2;87 ல் பரிசுத்த ஆவி (ரூஹுல் குத்ஸ்) என்று சொல்லப்படும் ஜிப்ரயீலையும் 66;12ல் இறைவன் புறத்திலிருந்து மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பத்தில் ஊதப்பட்ட ஆவியையும் இறைவன் குறிப்பிடுகிறான். இதை நாம் மறுக்கவில்லை. கிறித்துவக் கொள்கையை நிலை நாட்டுவதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறோம்.

(ஆவியில் இட்லி வேகும் என்றால் கூட பரிசுத்த ஆவியைத் தான் கூறுவதாக மக்களைக் குழப்புவது கிறித்தவ மத குருமார்களின் வழக்கம்)

விமர்சனம் 7

தூய ஆவியைக் குறித்து குர்ஆன் 17:39 ல் மகாமே மஹ்மூத் என்றும் கூறுகிறது என்கிறார் ஜெபமணி. (பக்கம் 51)

நமது பதில்

ஆனால் 17:39 ல் இறைவன் கூறுவதென்ன?

இவை உம் இறைவனால் உமக்கு வஹி மூலம் அருளப்பட்டது. ஆகவே அல்லாஹ்வுடன் மற்றோரு ஆண்டவனை ஆக்காதீர். நீர் நிந்திக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் தூக்கி எறியப்படுவீர் என்பது தான் அந்த வசனம்.

ஆண்டவனுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் அவனுக்கு குமாரன் இருப்பதாகக் கற்பனை செய்தது போல் செய்யலாகாது என்று கடுமையான எச்சரிக்கை தான் இவ்வசனத்தில் இருக்கிறது. பரலோகத்தில் இருக்கும் பிதா தான் இவரது கையைப் பிடித்து இப்படி எழுதச் செய்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறதல்லவா?

மகாமே மஹ்மூத் பற்றி இவர் குறிப்பிடாத மற்றொரு வசனம் குறிப்பிடுவது உண்மையே. அதற்கும் பரிசுத்த ஆவிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நபியே உம்மை மகாமே மஹ்மூதில் (உயர்ந்த இடத்தில்) உம் இறைவன் எழுப்புவான் என்று அந்த வசனம் கூறுகிறது.

விமர்சனம் 8

குர்ஆன் 17:85 ல் முகமது ரூஹிமின் அல்லாஹ்வைக் குறித்து மிகச் சொற்ப ஞானமே தமக்கு அருளப்பட்டதாக கூறுகிறார் என ஜெபமணி கூறுகிறார். (பக்கம் 54)

நமது பதில்

இந்த வசனம் எதைக் குறிக்கிறது என்பதை முன்னர் இரண்டாவது விமர்சனத்தில் நாம் தெளிவுபடுத்தி விட்டோம். ஜெபமணி குர்ஆனில் ஈஸா (அலை) பற்றி வரும் ரூஹுல் குத்ஸ் என்ற சொல்லையும் பொதுவாக இறைவன் தன் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ரூஹு ஆவி என்ற சொற்களையும் ஒன்றாகக் கருதி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார். இவரை இப்படியே விட்டால் நீராவியைக் கூட பரிசுத்த ஆவு என்று சொன்னாலும் சொல்வார் போலும் என்று தெரிகிறது.

விமர்சனம் 9

முஹம்மதுவின் 40 வது வயதில் யூத சடங்காச்சாரத்திற்கு ஏற்ப ஹிர்ரா மலைக் குகையில் தங்கி கிபி 610 ல் உபவாசித்து வந்தார். இது சமயம் குர்ரா என்ற ஒ லியில் திகிலடைந்து பயந்து நடுங்கி கதீஜாவிடம் வந்தார். கதீஜாள் தன் உறவினரான வர்காபினுக்குத் தெரிவித்து அவர் முஹமதுவுக்குக் கேட்ட சத்தம் குறித்து தெளிவுபடுத்தினார். முகமதுவை ஆண்டவனுக்கு ஊழியக்காரன் ஆகும்படி ஆலோசனை கொடுத்தார். அவர் வேத சத்தியத்தையும் போதித்தார் என்பதையும் குர்ரானில்16:103. 6:7. 80:15. 69:39. 4ல் காண்கிறோம் என்று கூறுகிறார் ஜெபமணி. (பக்கம்24)

நமது பதில்

அதாவது முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேத வெளிப்பாடுகளை சத்தியத்தைப் போதித்தது வர்காபின் நவ்பல் என்ற கிருத்தவரே என்பது இவரது வாதம். அதற்குச் சான்றாக சில வசனங்களையும் எண்கள் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேதம் வந்ததது பற்றி வர்கா பின் நவ்ப லிடம் கூறிய ஒரு சில நாட்களிலே வர்காபின் நவ்பல் இறந்து விட்டார் என்பதை (புகாரி ஹதீஸ் எண் 3) முன்னர் குறிப்பிட்டு உள்ளோம். அதன் பிறகு இருபத்தி மூன்று ஆண்டுகள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேத வெளிப்பாடு வந்து கொண்டிருந்தது.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேதம் கிடைக்கத் துவங்கிய ஆரம்ப காலத்திலேயே மரணித்துவிட்ட ஒருவர் எப்படி 23 ஆண்டுகளாக முஹம்மதுவுக்கு வேத சத்தியத்தைக் கொடுத்திருப்பார்? இவர் தனது கூற்றுக்கு குர்ஆன் வசனங்களையே சான்றாகக் காட்டுவது தான் பெரிய வேடிக்கை.

அவர் குறிப்பிட்டுள்ள 16:103 வசனம் கூறுவதென்ன?

ஒரு மனிதனே அவருக்கு கற்றுக் கொடுக்கிறான் என்று அவர்கள் கூறுவதை நாம் அறிவோம். எவன் கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அவனுடைய மொழி அஜமி (அரபியல்லாத மொழி). இவ்வேதமோ மிகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது.

இது தான் ஜெபமணி தன் கூற்றுக்குச் சான்றாக்கும் வசனத்தின் மொழி பெயர்ப்பாகும் அதாவது முஹம்மது (ஸல்) காலத்திலேயே இது போன்ற குற்றச் சாட்டுகள் சொல்லப்பட்டதுண்டு. ஒரு மனிதர் வந்து கற்றுக் கொடுப்பதை அப்படியே முஹம்மது கூறுகிறார் என்பதே அக்குற்றச்சாட்டு.

கற்றுத் தரப்படபவர் என்று கூறப்படுபவருக்கோ அரபி மொழி தெரியாது. கற்றுக் கொண்டதாகக் கூறப்படும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கோ அரபு பொழி தவிர வேறு மொழி பேசத் தெரியாது. இந்தக் குர்ஆனோ மிகத் தெளிவான அரபு மொழியில் அமைந்துள்ளது. அவ்வாறிருக்க அந்த மனிதன் கற்றுத் தருகிறான் என்பது எப்படி சரியாகும்? என்று அர்குர்ஆனே பதில் அளிக்கிறது.

ஜெபமணியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தரும் விதமாக அமைந்துள்ள வசனத்தையே தன் கூற்றுக்கு சான்றாக்குபவனை விட அடி முட்டாள் வேறு யார் இருக்க முடியும்.

அடுத்து அவர் குறிப்பிடும் வசன எண் 6:7 இந்த வசனம் கூறுவதென்ன என்பதைப் பார்ப்போம்.

காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம்மீது அருள் செய்து அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்திருந்த போதும் இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை என்றே நிச்சயமாக நிராகரிப்போர் கூறியிருப்பார்கள்

(அல்குர்ஆன் 6:7)

அல்குர்ஆனை இறை வேதமல்ல என்று கூறும் நிராகரிப்பவர்கள் காரணங்களுடன் அவ்வாறு கூறுவதில்லை. புத்தகமாக வானி லிருந்து வேதத்தை இறக்கி வைத்து அதனை அவர்கள் தொட்டுப் பார்த்தாலும் மறுப்பார்கள் என்று இறைவன் கூறுவதன் மூலம் அவர்கள் சத்தியமென உணர்ந்து கொண்டு மணமுரண்டாகவே மறுக்கின்றனர் என்கிறது இவ்வசனம்.

ஜெபமணி போன்றவர்களை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் இந்த வசனத்தையும் கூட அவர் தனக்கு ஆதாரம் என்று கூறும் பேதமையை என்னவென்பது?

அடுத்து அவர் குறிப்பிட்ட வசனம் கூறுவதைப் பாருங்கள்!

லவ்ஹுல் மஹ்பூல் என்னும் மிக்க கண்ணியமான பதிவுப் புத்தகத்தில் வரையப்பட்டுள்ள இவ்வேதம் மிக்க மேலான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது

(80:15.16)

அல்குர்ஆன் இறைவன் வசமுள்ள பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து அருளப்ட்ட உண்மை வேதம் என்கிறது. இதையும் கூட ஜெபமணியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர் எடுத்துக் காட்டிய மற்றொரு வசனம் 69:39.40 ஆகும். அவ்வசனங்கள் கூறுவதென்ன?

நீங்கள் பார்க்காதவைகளின் மீதும் சத்தியமாக இது நிச்சயமாக மிக்க சங்கை பொருந்திய (ஜிப்ரீல் என்னும்) தூதர் வழியாகக் கூறப்பட்டதாகும்.; என்கின்றன அவ்வசனங்கள்.

வரகாவோ மற்ற யாருமோ முஹம்மதுவுக்கு எதையும் கற்பித்ததில்லை. மாறாக இறைவனாலேயே அருளப்பட்டது தான் என்பதை இவ்வசனங்கள் யாவும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன. எவற்றுக்குப் பாதகமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளனவோ அவற்றுக்குச் சாதகமானதாக இவ்வசனங்களை விளங்கிக் கொண்ட மதியீனத்தைப் பாருங்கள்.

முகமதுவுக்கு முன் வேதத்தை வர்காபின் போதித்தார். அஜமு மொழியில் தாம் கேட்டவற்றை தமது சகோதரர்களுக்கு முகமது அரபு மொழியில் சொன்னார் என்ற ஜெபமணியின் கூற்றுக்கும் (பக்கம் 37) இவ்வசனங்களுக்கும் சம்பந்தமிருக்கிறதா மறுப்பு இருக்கிறதா என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

விமர்சனம் 10

ஜெபமணியின் கருத்து மோசடிகளைச் சொல்லிக் கொண்டே போனால் நீண்டு விடும். எனவே இறுதியாக மிக முக்கியமான மோசடி ஒன்றை குர்ஆனின் பெயரால் செய்திருப்பதை சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.

19:19. 3:39 லும் ஏசுவை குலமன் சக்கியான் (பரிசுத்தர்) இப்னுல்லாஹ் (தேவ மைந்தர்) என்றும் கூறியுள்ளது (பக்கம் 55)

இஸ்லாம் எந்த தேவ மைந்தன் கொள்கையை ஆழமாகவும், அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் குர்ஆன் நெடுகிலும் மறுத்துரைக்கின்றதோ அந்தக் கொள்கையே குர்ஆனில் உள்ளது என்று கூறச் துணிந்து விட்ட இந்த மோசடிப் பேர்வழியை என்னவென்பது?

அவர் குறிப்பிட்ட வசனங்களிலோ, ஏனைய வசனங்களிலோ எவ்விடத்திலும் ஏசுவை தேவ மைந்தன் என்று சொல்லப்படவேயில்லை. மறாக இறைவனுக்கு மக்களில்லை என்பதை அல்குர்ஆன் தெளிவாகவே எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தேவன் ஜெபமணி கையைப் பிடித்து எழுதும் போது இவ்வசனங்கள் அவரது கண்களுக்குத் தென்படவில்லை போலும்.

19:19 வசனத்தில் ஏசுவைப் பரிசுத்தமான குழந்தை என்று கூறுவதை நாம் மறுக்கவில்லை.

விபச்சாரத்தின் மூலம் பெற்றெடுத்ததாக அன்றைய யூத சமுதாயம் மேரியைக் குற்றம் சாட்டினர். ஏசு அது போல் தவறான முறையில் பிறந்தவர் அல்லர். பரிசுத்தமான முறையிலேயே பிறந்தவர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டுமெண்பதற்காக இவ்வசனத்தைக் கூறுகிறான்.

விபச்சாரத்தின் மூலம் பிறவாத அனைத்துக் குழந்தைகளும் பரிசுத்தமான குழந்தைகளே. ஏசுவும் பரிசுத்தமான முறையில் பிறந்தவரே என்பதை முஸ்லிம்கள் மறுக்கவில்லை. இதனால் பரிசுத்தமான முறையில் பிறந்தவர்களெல்லாம் தேவனுக்குப் பிள்ளைகளாகி விட முடியுமா? ஜெபமணியின் தெளிவு இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது.

அடுத்து அவர் கூறக் கூடிய 3:37. 39 வசனங்கள் கூறுவதென்ன வென்பதையும் காண்போம்.

அவளை (மேரியை) அவளுடைய இறைவன் அழகிய முறையில் ஏற்று கொண்டான். அவளை அழகிய முறையில் வளந்திடச் செய்தான். அவளை வளர்க்கும் பொறுப்பை ஜக்கரியா ஏற்றுக் கொள்ளுமாறு செய்தான் (3:37)

இந்த வசனத்தில் அவளை மனவியாக இறைவன் ஏற்றுக் கொண்டதாக ஜெபமணி புரிந்திருக்கிறார் இதனாலேயே இப்னுல்லாஹ் என்று ஏசுவை இவ்வசனம் கூறுவதாக வாதிடுகிறார்.

அதற்கு முன்னுள்ள இரன்டு வசனங்களையும், இந்த வசனத்தையும் ஒழுங்காக அல்லது மேலோட்டமாக பார்த்தாலே ஜெபமணியின் முட்டாள்தனம் வெட்ட வெளிச்சமாகும்.

இம்ரானுடைய மனைவி (அதாவது மேரியின் தாய்) கர்ப்பமாக இருந்த போது தன் கர்ப்பத்தில் உருவான குழந்தையை இறைவனுக்காக நேர்ச்சை செய்கிறார் .

இவ்வாறு நேர்ச்சை செய்யும் போது கர்ப்பத்தில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பது அவருக்குத் தெரியவில்லை. அது மட்டுமல்ல அது ஆண் குழந்தையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறார். இதனாலயே பெண்ணாகப் பிறந்ததும் பெண்ணைப் பெற்று விட்டேனே என்று கூறுகிறார். இந்த விபரங்கள் அவர் எடுத்துக் காட்டிய வசனங்களின் முன்னுள்ள இரு வசனங்களில் கூறப்படுபவையாகும்.

அதாவது தன் கர்ப்பத்தில் ஆண் குழந்தை வளர்வதாக எண்ணிக் கொண்டு அக்குழந்தையை இறைவனுக்காக நேர்ச்சை செய்து அதை ஏற்குமாறு கேட்கிறார். அவர் நேர்ச்சை செய்ததை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக இறைவன் கூறுகிறான். இந்த வசனத்தின் மூலம் இறைவனின் மனைவி என்று மேரியைக் குர்ஆன் கூறுவதாக ஜெபமணி வாதிடுகிறார்.

இந்த வசனத்தில் உள்ள அபத்தம் எவருக்கும் புரியுமென்றாலும் ஜெபமணிகளுக்கு புரிய வைப்பதற்காக அதை நாம் விளக்குவோம்.

மேரியின் தாயார் தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்று எண்ணிக் கொண்டு அதை இறைவனுக்காக நேர்ச்சை செய்வதாக கூறினார். குழந்தையை இறைவனுக்கு நேர்ச்சை செய்வதென்றால் அதற்கு என்ன பொருள்?

இறைவனுக்கு மனைவியாக ஆக்குவது என்பது தான் பொருளா? அப்படியானால் தன் கருவில் வளர்வது ஆண் குழந்தை என்று எண்ணிக் கொண்டு அல்லவா அவர் நேர்ச்சை செய்கிறார். ஆண் குழந்தையை மனைவியாக்க முடியுமா? தன் குழந்தையை இறைவனுக்காக நேர்ச்சை செய்வதென்றால் அதை இறைவனுடைய மார்க்கத்தை நிலை நாட்டும் பணிக்கு அர்ப்பணிப்பது என்பதே பொருள்.

இந்தப் பணிக்கு ஆணே ஏற்றவன் என்று கருதியே அவ்வாறு நேர்ச்சை செய்கிறார். பிறந்தது பெண் குழந்தை ஆனாலும் அப்பெண்ணின் நேர்ச்சை அடிப்படையில் மார்க்கச் சேவைக்காக இறைவன் மேரியை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறான்.

மேலும் அவ்வசனத்திற்கு மனைவியாக ஏற்றான் என்று பொருள் கூறும் ஜெபமணி, அதே வசனத்திலேயே குழந்தை மேரியைப் பற்றித் தான் கூறப்படுகிறது என்பதைக் கவனிக்கவில்லை. கபருவப் பெண் மேரியைப் பற்றிக் கூறப்படவில்லை என்பதையும் சிந்திக்கவில்லை.

இறைவன் மனைவியையும் மகனையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று 6:101.72:33. 112:3 வசனங்களில் இறைவன் தெளிவாகக் கூறுவதையாவது ஜெபமணி கவனிக்க வேண்டாமா?

அடுத்து 3:39 வசனத்தையும் தன் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கிறார் ஜெபமணி.

ஜக்கரியாவுக்கு யஹ்யா என்ற குமாரர் பிறக்கவிருப்பது பற்றி அவ்வசனம் கூறுகிறது. மேலும் ஏசுவை இறைவாக்கு என்று அல்குர்ஆன் கூறுவது போலவே அவ்வசனத்தில் யஹ்யாவையும் இறைவாக்கு என்று கூறுகிறது.

ஜெபமணி கூறும் கருத்துக்கு இதில் என்ன சான்று இருக்கிறது. மாறாக ஜெபமணிக்கு எதிரான கருத்தே இவ்வசனத்தில் இருக்கிறது.

ஏசுவை இறைவனின் வாக்கு (கலிமத்துல்லாஹ்) என்று இறைவன் கூறுகிறான் அல்லவா? அதே வார்த்தையை யஹ்யா என்பவருக்கும் பயன்படுத்தியதன் மூலமும் எல்லா மாந்தருமே கலிமத்துல்லாஹ் தான்; இறைவனின் வாக்கால் உத்திரவால் உருவாக்கப்பட்டவர்கள் தான் என்று அவ்வசனம் கூறி கிருத்தவக் கோட்பாடுகளைத் தகர்க்கிறது. இதையும் அவர் இறை மகன் கோட்பாட்டுக்குச் சான்றாக்குவது விந்தையிலும் விந்தையே.

விமர்சனம் 11

கிபி 8 வது நூற்றாண்டில் அரபு மொழி இலக்கிய நடைக்குக் கொண்டு வரப்பட்டது என்று அரபு சரித்திரம் கூறுகிறது. அதன் பின்னரே குர்ரானும் ஹதீஸும் இலக்கிய வடிவில் எழுதப்பட்டதாக இஸ்லாமிய சரித்திரங்கள் கூறுகிறது. அதாவது முஹம்மதுவின் காலத்தில் அரபு பேச்சு மொழியாக மாத்திரமே இருந்தது. எழுத்து இலக்கியங்கள் இருக்கவில்லை. முகம்மதுவின் சீடர்கள் உம்மிகள். முகமதுவிடம் மனனமாக அறிந்தவற்றையே கிபி 8 வது நூற்றாண்டில் அரபு மொழியில் எழுதப்பட்டது. உம்மிகள் சொன்ன யாவுமே சரியானவை அல்ல என்பதை என் கையில் உள்ள குர்ரான் புத்தகத்தின் பக்கம் 13 ஆசிரியர் விவரித்துள்ளார் என்று ஜெபமணி கூறுகிறார். (பக்கம் 30)

நல்ல ஆராய்ச்சி தான் போங்கள்! ஒரு எழவும் தெரியாதவன் என்று கிராமப்புறத்தில் குறிப்பிடுவார்கள் அல்லவா அதற்குரிய முழுத் தகுதியையும் இதில் ஜெபமணி பெற்றிருக்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் உடனுக்குடன் எழுதி வைக்கப்பட்டது. அவற்றை எழுதுவதெற்கென்றே வஹியை எழுதக் கூடிய எழுத்தர்கள் பலர் இருந்தனர் என்பதை புகாரி உட்பட பல நூல்கள் கூறுகின்றன.

குர்ஆனைத் தவிர வேறெதனையும் (குர்ஆனுடன் சேர்த்து) எழுத வேண்டாம் என்று நபிகள் (ஸல்) வலியுறுத்தி குர்ஆன் எழுதப்பட வேண்டுமென நபிகளே ஏற்பாடு செய்தது முஸ்லிம் என்ற ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது.

இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்வார் என்று அபுஹீரைரா (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபிகளின் ஒரு போதனையை எழுதித் தருமாறு அபூ ஷாஹ் என்பவர் நபிகளிடம் கேட்ட போது இதை அபூஷாவுக்கு எழுதிக் கொடுங்கள் என்று நபிகள் உத்தரவிட்டது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

பலரும் தனித்தனியாக குர்ஆனை எழுதி வைத்திருந்தனர். நபிகள் மரணமடைந்த உடனேயே அவர்களின் மிக உற்ற தோழரும் இஸ்லாத்தின் முதல் கலீபாவான அபூபக்ரு (ரலி) ஒன்று திரட்டிய செய்தி புகாரி உட்பட எல்லா ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

உஸ்மான் (ரலி) என்ற மூன்றாவது கலீபா அவர்கள் அந்தப் பிரதியைப் பல பிரதிகளாக்கி அந்தப் பிரதியில் ஒன்று இன்றளவும் இஸ்தான்பூல் (துருக்கி) நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் நபிகள் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு நாட்டு மன்னர்களுக்கு நபியவர்களால் இஸ்லாம் பற்றி அறிமுகம் செய்யும் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிகழ்ச்சிகள் புகாரி உட்பட எல்லா ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

நபிகள் காலத்தில் மக்கத்துக் காஃபிர்களுடன் ஹுதைபியா உடன்படிக்கை எழுதப்பட்டது. இந்த விபரம் இடம் பெறாத ஹதீஸ் நூலே இல்லை எனலாம்.

இஸ்லாமிய வரலாறு இவ்வளளவு தெளிவாக இருக்க ஞான சூன்யம் ஜெபமணிக்கு இது தெரியாமலிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

ஏனெனில் ஆண்டவராலேயெல்லாமல் எந்த ஒரு மனிதரிடமும் வேத பண்டிதரிடமும் அவர்கள் எழுதிய நூல்களிருந்து ஒன்றையும் நான் கேட்டோ வாசித்தோ அறியவில்லை என்பதற்கு தேவன் மாத்திரமே சாட்சி என்று முன்னுறையில் ஜெபமணி குறிப்பிடுகிறார்.

ஐயா ஞான சூன்யமே தேவனுடன் சேர்ந்து நாங்களும் நீர் ஒன்றையுமே வாசித்தோ கேட்டோ அறியவில்லை என்பதற்குச் சாட்சிகளாக இருக்கிறோம். எதையும் வாசித்தறியாமல் விட்டு அடிப்பவர் என்று தன்னைப் பற்றி கூறிக் கொள்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

இலக்கண இலக்கியங்கள் கற்ற பல கவிஞர்கள் நபிகளின் காலத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்திருக்கின்றதை அரபி வரலாறு தெளிவாகக் கூறுகிறது. இம்ரவுல்கைஸ், முதனப்பீ போன்ற கவிஞர்களையும் ஹஸ்ஸான், கஃபு போன்ற நபித்தோழர்களான கவிஞர்களையும் உதாரணமாகக் கூறலாம்.

நாம் அவரை பிலிப் கே ஹிட்டி, ரேன்ல்ட் நிக்கல்ஸன், புரோக்கல் மேன் போன்றார் எழுதிய அரபு வரலாறு அரபு இலக்கிய வரலாறு போன்ற நுல்களையும் படிக்குமாறு சிபாரிசு செய்கிறோம். அந்த நூற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆங்கிலம் தெரிந்த யார் துனையுடனாவது அவற்றைப் படித்தபின் ஜெபமணி இது போன்ற அபத்தங்களை எழுதத் துணிய மாட்டார் என நம்புகிறோம்.

முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயம் உம்மிகள் எனக் கூறப்பட்டது பெரும்பான்மையோரைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். அவர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கனிசமான அளவுக்கு இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

குர்ஆன் இறை வேதமல்ல அல்லது நபி காலத்திலேயே தொகுக்கப்படவில்லை என்று கூறி பொய்யான ஆதாரமற்ற தகவலைக் கூறியவர் இந்தக் குற்றச்சாட்டுக்குரிய பைபிளைப் பற்றி சிறிது எண்ணிப் பார்க்க வேண்டாமா?

குர்ஆனுக்கும் முந்தைய காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தான் அதிகம் இருந்திருப்பார்கள் என்பதும் உண்மை. ஏசுவின் காலத்தில் பைபிள் தொகுக்கப்படவில்லை என்பதும் உண்மை.

இதனால் மூஸாவுக்கு அருளப்பட்ட பழைய ஏற்பாட்டில் மூஸாவின் மரணம் பற்றிக் கூறப்படுகிறது.

மிகப் பழங்காலத்தில் தான் மனிதக் கற்பனைகள் கலந்து எழுதப்பட்டது. மூல மொழியும் செத்துப்போய் பல நூறு ஆண்டுகளாகி விட்டன (இன்னும் பைபிளின் கதை அடுத்த விமர்சனத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளது) இந்த இலட்சனத்தில் நபிகள் காலத்திலேயே பாதுகாக்கப்பட்ட குர்ஆனைப் பற்றி தெளிவடைய வந்து விட்டார் ஜெபமணி

இதில் பெரிய தாமஷ் என்னவென்றால் இதே ஜெபமணி இதே நூலின் பக்கம் 62ல் கூறுவது தான் முஹம்மது குர்ஆன் (3:50 56)ல் ஏசுவை நிராகரியாது அவரைப் பின்பற்றும் படி குர்ரானில் எழுதி வைத்திருக்கிறார் என்கிறார் ஜேபமணி

எழுதத் தெரியாத காலத்தில் எப்படி எழுதி வைத்தார் என்று கேட்டு விடாதீர்கள்.

30ம் பக்கத்தில் கூறுவதை 62ம் பக்கத்தில் அவரே மறுத்துக் கெள்கிறார்.

முகம்மது குர்ஆனை எழுதினார் என்று கூறியவர் மற்றோரிடத்தில் 6:7 ல் கடிதத்தில் எழுதப்பட்டதையே தேவன் முகமதுவுக்குக் கொடுத்து அதை அவர்கள் தொட்டு பார்த்திருந்தும் நிராகரித்தனர் என்றும் கூறப்படுகிறது (பக்கம் 69) என்கிறார்.

6;7 வசனம் என்ன கூறிகிறது என்பதை முன்பே விளக்கி விட்டோம். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் முகமதுவுக்கு கடிதமாக இறைவன் எழுதிக் கொடுத்தான் என்று ஜெபமணி.

கூறுவதைத் தான். எழுதத் தெரியாத முஹம்மதும் அவர் சமுதயமும் இறைவன் எழுதிய கடிதத்தை எப்படிப் படித்திருக்க முடியும்.

முரண்பாடே உனக்கு மறு பெயர் ஜெபமணியா?

விமர்சனம் 12

மேற்படி நூலுல் பக்கம் 32. 33லும் 36. 37 லும் 38. 39 லும் ஜெபமணியின் உளறல்கள் உச்சகட்டமான உளறல்களாக உள்ளன. அந்த இடங்களில் அவர் கூறுவதை அப்படியே தந்து விட்டு விரிவாக அவற்றை அலசுவோம்.

இசுலாத்தின் மதநூலான குர்ரானில் வர்காபின் முகம்மதுவுக்குப் போதித்த யூத கிறிஸ்துவ வேதத்திலிருந்து அறுபது சதிவீதமான வசனங்களையும் கத்தோலிக்க விக்கிரக வணக்கத்தாரிடமிருந்து இருபத்தைந்து சதவீதமான வசனங்களையும் மீதமானவைகள் முகமது பேசிய நிர்வகித்தவற்றிலிருந்தும் தொகுத்து குர்ரானை அமைத்துள்ளார் என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். ஆனால் முகமதுவுக்கு வானத்திலிருந்து குர்ரான் இறக்கப்பட்டது என்று மிகைப்படக் கூறி முஸ்லிம்களை ஏமாற்றுகின்றனர்.

வேதம் ஆவியால் மனித உள்ளத்தில் உணர்த்தப்பட்டு அவர்களின் அவர்களின் சுய மொழியில் எழுதப்பட்டதே. மேலே நாம் கூறியுள்ள படி குர்ரானில் கொள்கைகளையும் முகமதுவின் சரீர சுத்திகரித்தல் நம்பிக்கை தொழுகை விதிகள் முகமதுவின் சில ஆலோசனைகளும் நீங்கலாக மற்ற அனைத்தும் சத்திய வேதத்திலிருந்து நாசுக்காக எடுத்தெழுதப்பட்டுள்ளதை எழுத்தறிவும் கண்பார்வை உள்ளவர்களும் குர்ரானில் கண்டு கொள்ளக்கூடிய உண்மையாயிருக்கிறது. அதை இங்கே கொஞ்சம் ஆராய்வோம். யூத வேத புருடர்களைக் கொண்டு மேசே காலம் முதல் எழுதப்பட்ட வேதம் பகுதிகளிலிருந்து எடுத்து எழுதப்பட்ட குர்ரானில் ஆங்காங்கு சரித்திரக் குறிப்புகளை மட்டுமே காண்கிறோம். ஆனால் அதன் முழு அடிப்படையை ஆத்மீக விபரத்தை குர்ரானில் காண முடியவில்லை. குர்ரானில் காணப்படும் குறிப்புகளின் முழு விளக்கத்தை பைபிளில் தான் காண முடியும் என்கிறார் ஜெபமணி. (பக்கம் 31. 31)

வேத வசனங்கள் யாவும் தேவ ஆவியானவரால் தேவதாசர்கள் உள்ளத்தில் ஏவப்பட்டு அவர்கள் பேசும் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இச்செயலை முஸ்லிம்கள் முகமதுவுக்கு அரபு மொழியில் (பொட்டலம் கட்டி) வானிலிருந்து இறங்கியதாக அறிவுக்கு பொருத்தமற்று மிகைபடக் கூறுகிறார்கள். முகமதுவுக்கு முன் வேதத்தை வர்காபின் போதித்தார். ஆஜ்மி மொழியில் தான் கேட்டவற்றை தமது சகாக்களுக்கு முகமது அரபு மொழயியல் சொன்னார் என்பதே சரியான கருத்து. இதன் உண்மை விபரத்தை அறியாத முஸ்லிம்கள் (திருமண நாளில் மணமகனையும் சவக்கிடங்கண்டை செத்தவனையும் மிகைப்படப் புகழ்வது போல் புழுகி) குர்ஆனைக் குறித்தும் மிகைப்படவும் நம்புகின்றனர். அல்லது நம்பப் பண்ணுகின்றனர் என்பதே உண்மை. ஏனெனில் ஏனெனில் பைபிளில் இல்லாத புதிய காரியம் எந்த ஒன்றையும் முகமது முஸ்லிம்களுக்கு சொல்லிவிடவில்லை என்கிறார் ஜெபமணி (பக்கம் 38. 37)

கி பி 628 வரையிலும் முயன்றும் முகமதுவால் இசுலாத்தை ஒரு மதமாக்க முடியவில்லை. இசுலாத்தை மதமாக்கும்படி முகமது கிறித்துவ அஸ்திபாரங்களையே 60 சதவிகிதம் புகுத்தியுள்ளார்.

யூத சரித்திரமின்றி இசுலாத்தை ஒரு மதமாக மெருகூட்ட முடியாமல் யூத சரித்திர பாரம்பரியங்களையும் 30 சதவிகிதம் இசுலாத்தில் புகுத்தினார். மீதான விபரங்களை தம் சகாக்களின் கேள்விகளுக்குத் தந்த பதிலிலும் ஆட்சி நிர்வாகத்திற்காய் முகமதுவால் தரப்பட்ட ஆலோசனைகளுமாகக் சேர்த்துக் குர்ரான் அமைக்கப்பட்டது. கிபி 8ம் நூற்றாண்டில் இசுலாமிய ஆளுநர்களால் அரபு இலக்கியத்திற்கேற்ப குர்ரான் திருத்தி எழுதப்பட்டது என்பதே சரித்திரம் என்கிறார் ஜெபமணி (பக்கம் 38. 39)

நமது பதில்

இந்த மூன்று பாராக்களிலும் அவர் கூறக் கூடிய மையக் கருத்து குர்ஆன் பைபிளிலிருந்து எடுத்தெழுதப்பட்டது என்பதே. இதை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் நாம் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அந்த மையக் கருத்துக்குச் செல்வதற்கு முன்னால் இந்த மூன்று பாராக்களிலும் உள்ள முரண்பாடுகளையும் பொய்களையும் காண்போம்.

பைபிளிலிருந்து எழுதப்பட்டதே குர்ஆன் என்று வாதிடும் ஜெபமணி முகமதுவுக்கு வானத்திலிருந்து குர்ரான் இறக்கப்பட்டது என்று மிகைபடக் கூறி முஸ்லிம்கள் ஏமாற்றுகின்றனர். வேதம் தேவ ஆவியால் மனித உள்ளத்தில் உணர்த்தப்பட்டு அவர்கள் சுய மொழியில் எழுதப்பட்டதே என்றும் கூறுகிறார். அதாவது வானத்திலிருந்து குர்ரான் இறக்கப்பட்டதாகக் கூறுவது மிகைபடக் கூறலாம்.

மனித உள்ளத்தில் தேவனால் உணர்த்தப்பட்டதே வேதமாம். இதன் மூலம் வானத்திலி ருந்து இறக்கப்பட்டதைத் தான் மறுக்கிறார். தேவனால் முகமதுவின் உள்ளத்தில் உணர்த்தப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார். அவரது வாதப்படி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உள்ளத்தில் உணர்த்தப்பட்டதே குர்ரான் என்பதை ஒப்புக் கொண்டாலும் அவர் வாதமே பைபிளிலிருந்து எழுதப்பட்டது என்பது தானே. அவரது அந்த முந்தைய வாதத்தை மறுக்கின்றதே என்னே தெளிவு.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஹி வந்த துவக்க காலத்திலேயே வரக்கா இறந்து விட்டார் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம் . ஜெபமணியின் வாதத்தை ஏற்றுக் கொண்டு பார்த்தாலும் முகமதுவுக்கு உள்ளத்தில் உணர்த்தப்பட்டதே வேதம் என்ற முந்தைய கூற்றுடன் வரக்காவிடம் வேதத்தைக் கற்றார் என்ற இந்தக் கூற்றுக்கு முரண்படுகிறது.

பைபிளில் இல்லாத புதிய காரியம் எந்த ஒன்றையும் முகமது முஸ்லிம்களுக்குச் சொல்லிவிடவில்லை என்று ஒரு இடத்தில் கூறும் ஜெபமணி மற்றொரு இடத்தில் யூத கிறிஸ்துவர்களிடமிருந்து 60 சதவிகிதமானவற்றையும் கத்தோக்கரர்களிடமிருந்து இருபத்தைந்து சதிவீதத்ததையும் மீதியைப் புதிதாகவும் சேர்த்துச் சொன்னதாகக் குறிப்பிடுகிறார். இந்த சதிவீதம் கூட மற்றோர் இடத்தில் 90 சதவீதமாகப் போகின்றது.

இனி ஜெபமணியின் பிரதானமான குற்றச்சாட்டுக்கு வருவோம். பைபிளிலிருந்து குர்ஆன் எடுத்தெழுதப்பட்டதாக ஜெபமணி கூறுகிறார் அல்லவா? அவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் என்னவென்பதை முதலில் காண்போம்.

ஆதம், நூஹ், இப்றாகிம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், யூசுப், தாவூத், சுலைமான், ஜக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, ஹாரூன், ஈஸா, லூத் ஆகிய தீர்க்கதரிசிகளைப் பற்றி குர்ஆன் கூறுகிறது. இவர்களைப் பற்றி பைபிளும் கூறுகிறது. குர்ஆனை விட பைபிள் முந்தியது என்பதால் பைபிளிலிருந்து எடுத்தெழுதப்பட்டது குர்ஆன் என அவர் புரிந்திருப்பதாலேயே இவ்வாறு கூறுகிறார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியயாம் இருப்பது போல் சிலருக்குத் தோன்றலாம்.

ஆனால் சிந்தனையுடையோர் இந்த வாதத்தில் எந்த சாரமும் இல்லை என்பதை உணரலாம்.

இறைக் கோட்பாடு சட்ட திட்டங்கள் கொள்கைகள் வழிகாட்டும் நெறிகள் ஏவல்கள் விலக்கல்கள் வணக்கமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையிலே மதங்கள் வேறுபடுகின்றன. இவை தான் மதங்களுக்கு அஸ்திவாரங்கள்.

மேலே கூறப்பட்ட யாவற்றிலுமே கிறிஸ்துவத்திலிருந்தும் யூத மதத்தி லிருந்தும் இஸ்லாம் நூற்றுக்கு நூறு வேறுபட்டு இருக்கின்றது. மாறுபட்டு நின்று கிறிஸ்துவக் கோட்பாட்டை ஆணித்தரமாகவும் மறுக்கின்றது. கிறிஸ்துவ அஸ்திபாரங்களையே 60 சதவிகிதம் புகுத்துள்ளார் முகம்மது என்ற ஜெபமணியின் கூற்று சரிதானா என்று அவரே சிந்திக்கட்டும்.

மனிதன் பாவியாகப் பிறக்கிறான் அவனது பாவத்தைச் சுமப்பதற்காக சிலுவையில் ஏசு தன்னைப் பலி கொடுத்தார் என்ற கிறிஸ்துவ அஸ்திவாரமும் மனிதன் நல்லவனாகவே பிறக்கின்றான் ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது என்ற குர்ஆனின் கோட்பாடும் ஒன்றா?

ஆதாமும், ஏவாளும் செய்த தவறுகளினால் அவரது சந்ததிகளும் பாவிகளே என்று கூறக் கூடிய கிறிஸ்துவக் கோட்பாடும் தந்தையின் பாவத்தை மகன் சுமக்க மாட்டார் என்ற குர்ஆனின் கோட்பாடும் ஒன்றா?.

கடவுளுக்கு ஒரு மகன் உண்டு. அந்த மகனுக்கு தாய் உண்டு என்ற கிறிஸ்துவ கோட்பாடும் கடவுளுக்கு மனைவி மக்கள் இல்லை என்ற குர்ஆனின் கோட்பாடும் ஒன்றா?

ஏசு தான் மறுமையில் அனைவரையும் காப்பாற்றுவார் என்ற கிறிஸ்துவக் கோட்பாடும் இயேசுவையும் இறைவன் விசாரிப்பான் என்று கூறக்கூடிய குர்ஆனின் கோட்பாடும் ஒன்றா?

இப்படி ஆயிரமாயிரம் அடிப்படைக் கோட்பாடுகளில் கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. இவரோ கிறிஸ்துவ அஸ்திபாரங்களிலிருந்து தான் குர்ஆன் எழுதப்பட்டது என்கிறார்.

அப்படியானால் பைபிளில் கூறப்படும் தீர்க்கதரிசிகளைப் பற்றி இஸ்லாமும் கூறுகிறதே என்ற கேள்விக்கு என்ன பதில்?

அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி பைபளும் குர்ஆனும் கூறுவது உண்மையே. ஆனால் பைபிள் கூறுவதற்கும் குர்ஆன் கூறுவதற்குமிடையே பல வித்தியாசங்கள் உள்ளன. பைபிள் அவர்கள் பற்றிக் கூறப்படும் பல விஷயங்களை குர்ஆன் பொய் எனக் கூறுகிறது. (விபரம் கீழே வருகிறது)

பைபிள் அவர்களின் பிறப்பு இறப்பு மற்றும் (சரித்திரம் என்ற பெயரில்) அங்கே போனார்; இங்கே போனார்; அவரைச் சந்தித்தார்; இவரைச் சந்தித்தார்; அவர்களுடன் சல்லாபித்தார்; இவர்களுடன் சல்லாபித்தார்; இவனைக் கொன்றார்: கூழ் சாப்பிட்டார்; கறி சாப்பிட்டார் என்று வளவளவென்று பேசும்.

குர்ஆன் எவரைப் பற்றியும் இப்படியெல்லாம் சொல்வது இல்லை. ஏனெனில் அவர்கள் கூழ் சாப்பிட்டதாலோ அல்லது கறி சாப்பிட்டதாலோ யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அதில் எந்தப் போதனையும் இல்லை.

உண்மையை அதாவது ஓரிரைக் கொள்கையை அவர்கள் எடுத்துச் சொன்ன போது அந்தத் தீர்க்கதரிசிகள் பட்ட கஷ்டம், அதைத் தாங்கிக் கொண்டு துணிந்து அவர்கள் நடத்திய போராட்டம், அவர்களது போதனை ஆகியவற்றை மட்டும் குர்ஆன் கூறும்.

இவ்வாறு அவர்களிடம் கூறிவிட்டு படிப்பினை உள்ளது என்றும் சேர்த்துக் கூறுகிறது குர்ஆன். இவற்றைக் கூறுவதால் கொள்கையில் மக்கள் உறுதியடைய முடியும். துணிவு ஏற்படும். தெளிவு ஏற்படும். காலையில் வெள்ளைச் சட்டை போட்டார்; கறுப்புச் சட்டை போட்டார் என்றும், ஜெபமணிக்கு ஆரோக்கிய சாமி பிறந்தார் என்றும் இப்படியே நூறு பட்டியல் போடுவதால் யாருக்கு என்ன நன்மை?

பைபிள் இதைத் தானே சொல்கிறது? இதைத் தான் கூடுதல் விபரமென்கிறார் ஜெபமணி. இந்தக் கூடுதல் விபரங்களால் யாருக்கு என்ன நன்மை? என்ன படிப்பினை? மனிதனுக்கு வழிகாட்ட அருளப்பட்ட குர்ஆனில் இதையெல்லாம் ஜெபமணி எதிர்பார்க்கிறார்.

அவருக்கு கதை வேண்டுமானால் சாண்டில்யன் நாவலையோ அல்லது பைபிளையோ படித்துக் கொள்ள வேண்டுமேயன்றி உண்மையான வேதத்தில் கதைகளை எதிர்பார்த்தால் ..?

கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிக் கூறுவதைக் காப்பியடிப்பது என்று எந்த அறிவாளியும் கூற மாட்டான்.

நியூட்டனைப் பற்றியோ, புத்தரைப் பற்றியோ, பவுலைப் பற்றியோ, ஐன்ஸ்டினைப் பற்றியோ, கார்ல் மார்க்ஸ் பற்றியோ ஜெபமணி எதையாவது எழுதினால் பேசினால் அவர் முன்னுள்ளவர்களிடமிருந்து காப்பியடித்தார் என்று சொல்ல முடியுமா? முன்னால் யாரேனும் இவர்களைப் பற்றி எழுதி விட்டால் அதை எழுதும் உரிமை யாருக்கும் இல்லை என்பாரா ஜெபமணி?

அல்லது கார்ல் மார்க்ஸ் பற்றி பலர் எழுதி விட்டதால் காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காக காரல் மார்க்ஸ் என்பதை கூறல் மூக்ஸ் என்று கூற வேண்டுமென்கிறாரா ஜெபமணி?

அப்படியானால் பைபிளில் கிறிஸ்துவ மார்க்கத்திற்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, ஆப்ரஹாம் பற்றிக் கூறப்படுவதும் காப்பியடித்தல் என்கிறாரா?

கடந்த கால சரித்திரங்ளைப் பொருத்தவரை காப்பியடித்தல் என்பது எப்போது வரும்?யாரேனும் எழுதியதை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மற்றவர் எழுதி அதைத் தன்னுடையது என்று கூறினால் அதைக் காப்பி எனலாம்.

பைபிள் கூறுவது போல் குர்ஆன் கூறவில்லை. அதற்குக் மாற்றமாகக் கூறுகிறது என்றால் அது எப்படி காப்பியடித்தலாகும்? சிந்திப்பாரா ஜெபமணி?.

உதாரணமாக இந்திரா காந்தியைப் பற்றி ஒருவர் எழுதிய நூலில் அவரை நேர்மையாளர் என்று எழுதப்பட்டதாக வைத்துக் கொள்வோம். அதற்குப் பின் மற்றொருவர் எழுதிய நூலில் இந்திராவை நேர்மையற்றவர் என்று எழுதியாக வைத்துக் கொள்வோம்.

பின்னவர் முன்னவரிடமிருந்து காப்பியடித்தாகக் கூற முடியுமா? கூறுபவன் புத்திசாலியாக இருக்க முடியுமா? இந்திராவைப் பற்றி இரண்டு விமர்சனங்களுக்கும் எவ்வளவு வித்தியாசங்களோ அவ்வளவு வித்தியாசம் குர்ஆன் கூறுவதற்கும் பைபிள் கூறுவதற்கும் இடையே உள்ளன.

ஆதம் பெண்ணால் தான் கெட்டார் என்று கூறி ஆண் வர்க்கத்தைப் பரிசுத்தப்படுத்த முயல்கிறது பைபிள். இருவரும் சேர்ந்தே அந்தத் தவறைச் செய்தார்கள் என்று இருவரையும் சமநிலையில் நிறுத்துகிறது குர்ஆன்.

ஏவாளை தவறிழைக்கச் செய்தது நல்ல பாம்பு என்கிறது பைபிள். பகுத்தறிவு இல்லாத பாம்பு பல்லி எல்லாம் பகுத்தறிவுள்ள மனிதனைக் கெடுக்க முடியாது என்பதால் ஆதாம் ஏவாள் இருவரையுமே பாவத்திற்கு பொறுப்பாளியாக்குகிறது குர்ஆன்.

ஆதாமும், ஏவாளும் செய்த பாவத்திற்கு மன்னிப்பு இல்லை. எல்லாப் பாவங்களையும் ஏசு சுமந்து கொள்கிறார் என்கிறது பைபிள். அவ்விருவரும் செய்த தவறை அவர்கள் உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாகவும் அதன் பின் இறைவன் அவர்களை மன்னித்ததாகவும் குர்ஆன் கூறுகிறது.

மூஸா (அலை) அவர்களைப் பற்றி பைபிள் கூறும் போது மேலும் கர்த்தர் அவனை நோக்கி உன் கையை உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையை தன் மடியிலே போட்டு வெளியே எடுக்கும் போது இதோ அவன் கை உறைந்த மழையைப் போல் வெண் குஷ்டம் பிடித்திருந்தது.

(யாத்திராகமம் 4:6)

ஆனால் திருக்குர்ஆனோ பளீரென அவரது கை பிரகாசித்ததாகக் கூறுகிறது. அதாவது திருக்குர்ஆன் அதை ஓர் அற்புதமாக சொல்லிக் காட்டுகிறது. பைபிளோ அசிங்கமான நோய் என்கிறது.

பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே குர்ஆன் என்று ஜெபமணயின் கூற்று பொய் என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

சுலைமான் நபியின் பிறப்பு பற்றி பைபிள் கூறுவது என்ன தெரியுமா? ஈசாய், தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமனைப் பெற்றான் என்கிறது பைபிள்

(மத்தேயு 1:6)

அதாவது உரியா என்பவனின் மனைவியுடன் கூடி தாவீது ராஜா சாலமனைப் பெற்றான் என்று கூறுவதன் மூலம் சாலமனை விபச்சாரப் புத்திரன் என்கிறது பைபிள்; அது மட்டுமன்றி தாவீது விபச்சாரம் செய்தார் என்பதையும் கூறுகிறது இதையே மற்றோர் இடத்தில் பைபிள் கூறும் போது

உரியா என்பவனின் மனைவி குளித்துக் கொண்டிருந்த போது தாவீது அவளைப் பார்த்து ஆசை கொண்டு அவளை அழைத்து வரச் செய்து அவளுடன் கூடியதாகவும் அதன் மூலம் அவள் கருவுற்றதாகவும் அதன் பின் உரியாவை தாவீது கொலை செய்ததாகவும் 11 சாமுவேல் பதினொன்றாவது அதிகாரம் 2 முதல் 15 வரையிலும் பைபிள் கூறுகிறது.

ஆனால் திருக்குர்ஆனோ தாவூது (அலை) அவர்களையும், சுலைமான் (அலை) அவர்களையும் இறைவனின் தூதர்களாகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியான சிறந்த வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் கூறுகிறது.

ஒரினப் புணர்ச்சியைக் கண்டித்து சீர்திருத்துவதற்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட லூத் நபி பற்றி பைபிள் கூறுவதைக் கேளுங்கள்.

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோட கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். அப்போது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர் வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறையின் படியே நம்மோட சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுப்போம். அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள் . மூத்தவள் போய் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்ததையும் அவன் உணராதிருந்தான்.

மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பர்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும்படி நீ போய் அவரோட சயனி என்றாள்.  அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்துள்ளார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய் அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாரேயே காப்பவதியானார்கள் இப்படிக் கூறுகிறது பைபிள்

(பார்க்க ஆதியாகமம் 19:30 - 38)

இதையெல்லாம் குர்ஆன் கூறவில்லை தான். குர்ஆனில் சுருக்கமாகக் கூறப்பட்டதற்கு பைபிளில் தான் விளக்கம் காண முடியும் என்று ஜெபமணி கூறுகிறார். இது தான் மேலதிகமான விளக்கம் போலும். ஒரு சீர்திருத்தவாதி தீர்க்கதரிசி மதுபானம் அருந்தியதாகவும் பெற்ற மகளுடன் புணர்ந்ததாகவும். கூறுவது தான் வேதமா?

ஆதியாகமம் 9:21ல் நூஹ் நபி பற்றிக் கூறும் பைபிள் அவர் குடித்து விட்டு போதை தலைக் கேறி நிர்வாணமாக கிடந்ததாகக் கூறுகிறது. திருக்குர்ஆன் நூஹ் நபி பற்றி ஒழுக்கத்தின் உறைவிடமாகக் கூறுகிறது. பைபிளிலிருந்து குர்ஆன் எப்படி காப்பியடிக்கப்பட்டிருக்கும்? பதில் சொல்வாரா ஜெபமணி?

அல்லாஹ்வைப் பற்றி கர்த்தரைப் பற்றிக் கூட பைபிள் கூறும் போது கடவுள் அம்மனமாக நடப்பேன் என்று கூறியதாகக் கூறுகிறது. (மீகா 1:8) குர்ஆன் இறைவனை இப்படியெல்லாம் அறிமுகம் செய்யவில்லை.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பல நபிமார்களை குடிகாரர்களாகவும், விபச்சாரம் செய்தவர்களாகவும், பெற்ற மகள்களுடன் புணர்ந்தவர்களாகவும் வேட்;டியை அவிழத்துவிட்டு நிர்வாணமாகக் கிடந்தவர்களாகவும் பைபிள் கூறுகிறது. வழிகாட்ட வந்தவர்களே இப்படி நடந்திருக்கும் போது நாம் நடந்தால் தவறா என்ற சிந்தனையைத் தான் இது உருவாக்கும்.

குர்ஆன் இப்படியெல்லாம் கூறாமல் இருப்பதை ஜெபமணி குறை என்கிறார். காப்பியடிக்கப்பட்டது என்கிறார். ஜெபமணி இது போன்ற போக்கைக் கைவிடவில்லை என்றால் பைபிளில் இடம் பெற்ற எழுதக் கூசும் அசிங்கங்கள் அம்பலமாவதைத் தவிர வேறு வழியில்லை.

பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று ஜெபமணி கூறுவதற்கு அவர் மதத்தைச் சேர்ந்த அவரை விடவும் அறிவிலும் கல்வியிலும் மிகப் பெரியவர்களே பதிலளித்துள்ளனர். காய்த்தல் உவத்தலின்றி அவற்றையாவது ஜெபமணி படித்தால் உண்மையை உணர்வார்.

ஆல்பிரட் குல்யாயும் என்ற கிறஸ்துவ மதத்தைச் சேர்ந்த அறிஞரால் எழுதப்பட்டு பெங்குவின் புத்தக நிறுவனம் வெளியிட்ட இஸ்லாம் என்ற ஆங்கில நூ லில்

தற்போது நம்மிடம் இருக்கின்ற குர்ஆன் மேற்சொன்ன நிலை அல்லது நிலைகளில் இருந்த முகமது மொழிந்தவைகளின் தொகுப்பாகும். அவர் மொழிவதைக் கேட்டவர்கள் வெளிப்பாட்டின் அறிகுறிகளை உணர்ந்தனர் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும். அப்படி இல்லாவிட்டால் அவர் சாதரணமாக பேசிய பரம்பரை நடை குர்ஆனிலுள்ள மொழி நடைகளோடு நிச்சயம் சேர்ந்திருக்கும் (பக்கம் 56)

இஸ்லாமின் முடிவான அற்புதம் குர்ஆனாகும். முகம்மது இறைவனின் தூதர் என்பதற்கான இறுதி அத்தாட்சி இது. அதைப் பெற்றவர் கற்றறியாதவராயிருந்தும் அதன் அரேபிய மொழி நடை சிறந்து விளங்குவது அது கடவுளிடமிருந்து வந்தது என்பதைக் கூட்டக் கூடும். வைதீக நம்பிக்கையின் படி இதன் இலக்கிய நடை இதன் பொருளுடன் இணைந்துள்ளதாகும். எவ்வளவு கவனமாகச் செயல்பட்டாலும் எவ்வளவு வெற்றிகரமாகப் பொருளைப் பாதுகாப்பதாக இருந்தாலும் மொழி பெயர்ப்பானது குர்ஆனின் இலக்கிய நடையை மாற்றுவதால் இந்த நூற்றாண்டின் இடைக்காலம் வரையும் குர்ஆனை மொழி பெயர்ப்பது விரும்பத்தகாததாகவும் இயலாததாகவும் கொள்ளப்பட்டது.

இப்படிச் சொல்வது யார்? முஸ்லிம்களிடம் எப்படி கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக கென்னத் கிரேக் என்பவர் ஆங்கிலத்தில் ற்ட்ங் ச்ஹண்ற்ட் ர்ச் ண்ள்ப்ஹம் என்ற நூலை எழுதினார். அதை இஸ்லாமிய நம்பிக்கைகள் என்று மொழியாக்கம் செய்து நாகர்கோவில் கிறிஸ்துவ இறையியல் குழு எனும் அமைப்பு 1971ம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலின் 75 76ம் பக்கம் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.

 ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டு கூறினார் அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்

(மாத்தேயு 27:46)

ஒன்பதாம் மணி நேரத்திலே இயேசு எலோயீ எலோயீ லாமா சபக்தானி என்று மிகுந்து சப்தமிட்டுக் கூறினார். அற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

(மாற்கு 15:34)

ஆதாம் செய்த பாவத்தால் உலகின் மனித இனத்தின் மீது படிந்த பாவக்கறையைத் தன் இரக்கத்தால் போக்குவதற்காக கர்த்தரின் சித்தத்தால் நிச்சயிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர் உலக மக்களின் பாவங்களைப் போக்க சிலுவையில் பலியானவர் ஏன் கர்த்தரை நோக்கி என்னை ஏன் கை விட்டீர் என்று கதற வேண்டும்?

நாட்டுச் சுதந்திரத்துக்காக போராடிய கட்டப் பொம்மன், பகத்சிங் போன்றோர் கூட தூக்குத் தண்டனையைக் கண்டு அஞ்சவில்லை. சமீபகால சரித்திரமான விடுதலைப் புலிகள் கூட சயனைட் சாப்பிட்டு இறப்பதற்குத் தயங்கவில்லை. காலிஸ்தான் இயக்கத்திற்காக தூக்குத் தண்டனையைப் பெற்றவர்கள் கூட சாவதற்குத் தயங்கவில்லை. மகிழ்ச்சியுடன் மரணத்தை ஏற்பதாகக் கூறினார்கள். சாதாரண விடுதலை இயக்கத்திற்கு இல்லாத தயக்கமும் பயமும் மனித இனத்தின் மீட்பரான இயேசுவுக்கு வந்ததென்ன?

ஐயா ஜெபமணியாரே! மனித இனத்தின் பாவ மீட்புக்கு இயேசு பலியானதாக நம்புகிறீரே! அவர் தானாகப் போய் பிலாத்துவிடம் அகப்பட்டுக் கொண்டு மனித இன பாவ மீட்புக்கு என்னைப் பலி கொடுக்கிறேன் என்றா சொன்னார்? இல்லையே! மாறாக தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தானே முயன்றார். அப்படித் தானே பைபிள் கூறுகிறது.

குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதுமில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதுமில்லை

(எசேக்கியேல் 18;20)

என்று கர்த்தர் சொல்லியிருக்க மனிதகுல பாவத்தைச் சுமக்க ஏன் வர வேண்டும்?

பிதாக்கள் செய்த அக்கிரமத்தை பிள்ளைகளிடமிருந்தும் பிள்ளைகளுடைய பிள்ளையிலிருந்தும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்

(உபாகமம் 5:9 யாத்ராகமம் 34:7)

என்று கர்த்தர் சொன்னதற்கு மாற்றமாக அனைவரது பாவத்தையும் சுமக்க ஏசு ஏன் வந்தார்? எல்லோருடைய பாவத்தையும் இயேசு சுமந்து கொண்டால் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்க முடியாமல் போகுமே? இது கர்த்தரின் சித்தத்துக்கே இடையூறல்லவா?

நரகத்தைப் பற்றி ஏசு பயமுறுத்துகிறாரே? அனைவருடைய பாவங்களையும் ஏசு சுமந்து விட்டால் நரகத்திற்குப் போகக் கூடியவர்கள் யார்? நரகம் காலியாகவே கிடக்க வேண்டியது தானா?

ஒரு வேளை தன்னுடைய சிலுவைப் பலியை நம்பியவர்களை மட்டும் அவர் ரட்சிப்பார் என்றால் இயேசு பிறப்பதற்கு முன்னுள்ளவர்களின் பாவத்தின் கதி என்ன?

அப்பாவமும் நீங்கி விட்டது என்று சொன்னால் இயேசுவின் சிலுவை மரணத்தை நம்பாமலும் பாவம் நீங்கி விடுகிறது என்று ஆகின்றதே?

அப்படியில்லை என்று கூறினால் பாவம் செய்த பிறகு தானே தண்டனை? இயேசுவின் காலத்தில் பிறக்காதவர்களின் பாவத்தை எப்படி ஏசு சுமப்பார்? ஒரே குழப்பமாக இறக்கிறதா? சிலுவை தத்துவமே குழப்பம் தான்.

பாவத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டிய மனிதன் தன் பாவத்தைச் சுமக்க இரத்தம் சிந்திய ஒருவர் இருப்பதாக அறியும் போது துணிந்து பாவம் செய்வானே? பின் உலகில் பாவம் எப்படிக் குறையும்?

ஜபமணியாரே பதில் சொல்லுவீரா? இந்த பைபிளிலிருந்தா குர்ஆன் காப்பியடிக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள்.

பக்கம் 18 ல்

போதித்தவனையே தெய்வமாகக் கருதி அவனையே வணக்கத்திற்குரியவனாக்கிக் கொண்டனர் என்கிறார்.

இறைவனைப் போதிக்குமாறு வந்த இயேசுவை இறைவனாக்கிக் கொண்ட ஜெபமணியாரே நீர் எழுதியதை நீரே சிந்தியும்.

சிரிப்பதற்கு எதுவும் வேண்டுமல்லவா? அதையும் பைபிள் தரத் தவறவில்லை.

அவன் காணிக்கையாவது போஜனப் பலியாகப் படைக்கும் பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய நாவினால் நிறைந்ததும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று நுப்பது சேக்கல் நிறை உள்ளதுமான ஒரு வெள்ளித் தளமும் எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கலமும் ஆகிய இவ்விரண்டும் தூப வர்க்கம் நிறைந்த பத்து சேர் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூப கரண்டியும் சர்வாங்க தகன பலியாக ஒரு காளையும் ஒரு ஆட்டுக் கடாவும் ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும் பாவ நிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும் சமதானப் பலியாக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும் ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஒரு வயதான ஐந்து ஆட்டிக் குட்டிகளுமே

(எண்ணாகமம் 7)

இப்படியே பட்டியல் நீளுகிறது. இப்படியெல்லாம் அமைந்துள்ள பைபிளிலிருந்துதான் குர்ஆன் காப்பியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார் ஜெபமணி.

பைபிளைப் பற்றி ஆராய்ந்த மேலை நாட்டு கிறித்தவ அறிஞர்கள் கூறுவதென்ன? அதையும் ஜெபமணிக்கு நினைவூட்டுவோம்.

பைபிளின் பெயருக்கு கடவுளின் வார்த்தை என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவது நமக்கு நன்கு பழக்கப்பட்ட ஒன்று. அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் கடவுள் நேரடியாக ஏவியதாக பழைய காலத்திலும் தற்காலத்தில் சில பகுதிகளிலும் நம்பப்படுகின்றது. ஆனால் புத்தகத்தின் திறனாய்வும் தற்கால ஆய்வும் மேற்கண்ட கருத்துகளை தற்கால அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள இயலாததாக ஆக்கி விட்டன. ஒரு சில பழமையாளர்களைத் தவிர யூதக் கிறித்தவ அறிஞர்கள் தங்களின் புனித புத்தகத்தில் மனிதனுடையவும் அதே போன்று புனித சக்தியுடையவும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொண்டனர்.

(இது ஆல்பிரட் குல்யாயும் என்ற கிருத்துவ அறிஞர் ஆங்கிலத்தில் எழுதிய இஸ்லாம் என்ற நூ லில் பக்கம் 55ல் இடம் பெற்றுள்ளது)

மனிதக் கற்பனைகள் கலந்து கதைகளாக்கப்பட்டு விட்ட பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவதற்கு ஜெபமணி வெட்கப்பட வேண்டாமா?

புத்தகம் நீண்டு விடக் கூடாது என்பதனாலேயே இதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையென்றால் பைபிள் விமர்சனத்திற்கு பல நூல்கள் எழுதும் அளவுக்கு சரக்குகள் உள்ளன.

விமர்சனம் 13

இனி அடுத்த விமர்சனத்திற்கு வருவோம். இசுலாமிய வரலாறு என்ற தலைப்பில் அவர் கூறுவதைக் கேளுங்கள்.

இது காலத்தில் கத்தோலிக்கர், சேசு, மரியாள், சூசை சிலைகளைக் கொண்டு தங்கள் மதத்தை விருத்தி செய்துள்ளதையும் அறிந்து சிலையின்றி மதம் நிலையாது என்பதை முஹம்மது கண்டார். ஆகவே மெக்காவில் வணக்கத்திலிருந்த கஃபா கல்லைத் தங்கள் ஆதி தகப்பன் ஆபிரகாம், இஸ்மவேலைப் பலியிட்ட கல் இந்தக் கஃபா கல் என்று விளம்பி அந்தக் கல்லை தம் மதத்துக்கு அஸ்திபாரம் ஆக்கத் திட்டமிட்டார். இந்தக் கருப்புக் கல்லை வாழ்வில் ஒரு முறை வலம் வந்து தொட்டு முத்தி செய்தோரெல்லாம் சுவனபதியை அடைவர் என்று புதிதாகப் போதிக்கவும் செய்தார். தம் சகாக்களில் உண்மையான சீடர்களை மெக்கா திருவிழாவில் கருப்புக் கஃபா கல்லைத் தொழ வரும்படி அனுப்பி வைத்தார். இந்தக் கருப்புக் கல்லை வணங்குவதற்குச் செய்யும் பிரயாணத்திற்கு ஹஜ் என்று பெயர் . இது ஆரியரின் காசி யாத்திரைக்கு ஒப்பான ஒன்று. இந்தக் கருப்புக் கல்லை வணக்கத்திற்குள் கொண்டு வந்த முகமது மற்ற 359 சிலைகளையும் உடைத்து இல்லாமலாக்கி விட்டார். கஃபா சிலை நிலை நிறுத்தப்பட்டு விட்டது

(பக்கம் 26. 27)

ஜெபமணியாரின் உளறல்களிலே இது தான் உச்சகட்டமான உளறல் எனலாம்! ஜெபமணியின் அறியாமையை அகற்றி விட்டு அவரது வாதத்துக்கு விளக்கமளிப்போம்

கஃபா என்பது ஒரு கல் அல்ல. செவ்வகமாக அமைந்த ஒரு கட்டிடமே கஃபா என்பது. அந்தக் கட்டிடத்தின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல் ஹஜருல் அஸ்வத் என்று சொல்லப்படும் கறுப்புக் கல்லாகும். இந்தக் கருப்புக் கல்லை முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் இருந்து கொண்டு வந்தார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் கல் கஃபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருந்து.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முப்பத்தி ஐந்தாம் வயதில் அவர்களுக்கு இறைவனின் வேத வெளிப்பாடு வருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்திருந்த கஃபா கட்டிடம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டுவதற்கான வேளையில் மக்காவாசிகள் ஈடுபட்டிருந்தனர்.

அந்தக் கட்டடத்தில் முன்னர் கறுப்புக் கல் பதிக்கப்பட்டிருந்த இடமளவுக்கு கஃபா கட்டிடம் உயர்ந்த போது அந்தக் கருப்புக் கல்லை எந்தக் கோத்திரத்தினர் பழைய இடத்தில் எடுத்து வைப்பது என்று அவர்களுக்கிடையே சச்சரவு ஏற்பட்டது. முடிவில் முதன் முதலாக இந்த இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர் கூறும் முடிவை ஏற்பது எனத் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் காத்திருந்த போது முதன் முதலாக முஹம்மது (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். பிரச்சனையை அவர்களிடம் ஒப்படைத்த போது சதுரமான துணி ஒன்றைக் கொண்டு வரச் செய்து அதில் அந்தக் கல்லை வைத்து அனைவரும் அந்தத் துணியை உயர்த்த முஹம்மது (ஸல்) அவர்கள் அந்தக் கல்லை தம் கையால் எடுத்து பழைய இடத்திலேயே வைத்து கட்டிடம் எழுப்பப்பட்டது.

கஃபா கருப்புக் கல் பற்றிய சுருக்கமான விளக்கமாகும் இது. இந்தச் சாதாரண விபரங்களைக் கூட அறிய வகையில்லாத ஜெபமணி கஃபா கல் சிலை என்றெல்லாம் பிதற்றி இருக்கிறார்.

கஃபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்ட அந்தக் கல்லை நபியவர்கள் தொட்டு முகர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை. அது கடவுள் என்பதற்காகவா? அல்லது கஷ்டங்களைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையிலா? அந்தக் கல்லுக்கு தெய்வீக அம்சம் இருக்கிறது என்ற எண்ணத்திலா? இல்லை. இல்லவே இல்லை.

அந்தக் கல்லைத் தொட்டு முகர்ந்த நேரத்தில் நபியின் மிக நெருங்கிய தோழர் உமர் (ரலி ) அவர்கள் நீ ஒரு கல் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்; உனக்கு எந்த நன்மையும் செய்ய இயலாது. உன்னால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு முகர்ந்த காரணத்தினால் நானும் அவ்வாறு செய்கிறேன்; உன்னிடம் தெய்வீக அம்சம் இருப்பதால் அல்ல என்று குறிப்பிட்டார்கள்

(புகாரி. முஸ்லிம் மற்றும் ஏராளமான ஹதீஸ் நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.)

இதிலிருந்து அக்கல் பூஜிக்கப்படவில்லை; தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. அப்படியானால் என்ன காரணத்துக்காக அப்படிச் செய்ய வேண்டும்?

காஃபாவை மீண்டும் கட்டிய போது அதைக் கட்டிய அனைவரும் பல தெய்வக் கொள்கைக்காரர்கள் தான். ஓரிறைக் கொள்கையில் அன்று எவருமே இருக்கவில்லை. அந்தக் கட்டடத்தின் அஸ்திவாரம் முதல் மேல் மட்டம் வரை பல தெய்வ நம்பிக்கையாளர்களலேயே கட்டப்பட்டது. ஆனால் அந்தக் கருப்புக் கல் மாத்திரம் பல தெய்வ நம்பிக்கையில்லாதிருந்த நபியவர்களால் எடுத்து வைக்கப்பட்டது. இறை ஆலயத்தின் அந்த ஒரு கல்லைத் தன் கையால் எடுத்து வைக்க முடிந்ததே என்பதற்காக அதைத் தொட்டு முகர்ந்திருக்கலாம். தங்கள் நபியவர்களால் எடுத்து வைக்கப்பட்டது என்பதற்காக முஸ்லிம்களும் அவ்வாறு செய்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சந்திர மண்டலத்திலிருந்து ஆம்ஸ்ட்ராங் தலைமையில் சென்ற குழு அங்கிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தார்கள். அது சாதாரண மண் தான் எனினும் அயல் கிரகத்து மண் என்பதற்காக பல நாடுகளுக்கும் அவை அனுப்பப்பட்டன. சென்னைக்கும் வந்தது. மண் என்று தெரிந்திருந்தும். அதைப் போய்ப் பார்த்தவர்களும் தொட்டு உணர்ந்தவர்களும் ஏராளம்.

இப்படிச் செய்ததால் அந்த மண்ணை வணங்கி விட்டதாக யாரேனும் கூறினால் அவனை விடப் பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது.

அயல் கிரகத்திலிருந்து வந்தது என்பதற்காக அந்த மண்ணைப் பலரும் சென்று தொட்டுத் தடவிப் பார்க்க விரும்பினார்கள். சுவனத்திலிருந்து ஆதம் (அலை) கொண்டுவந்த அந்தக் கல் சுவனத்தின் பொருட்களில் இவ்வுலகில் இருப்பது அந்தக் கல் மாத்திரமே என்ற நம்பிக்கையில் அயல் உலகின் பொருள் என்று நம்பப்படுவதால் அது தொட்டுப் பார்க்கப்படுகிறதே தவிர வேறு எந்தத் தெய்வீக அம்சமும் அந்தக் கல்லுக்கு இல்லை. அப்படி தெய்வீக அம்சம் இருப்பதாக எவனாவது நம்பினால் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

சாதாரணக் கல் என்று முஸ்லிம்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டு அதற்கு எந்தச் சக்தியும் இல்லை என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனமும் செய்து விட்டு அது நன்மையளிக்கவோ, தீமையளிக்கவோ எந்தச் சக்தியும் பெறாது என்பதையும் உலகறியச் சொல்லி விட்டு முஸ்லிம்கள் அதைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.

இவ்வளவு தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டு உள்ளத்திலும் அந்தக் கல் பற்றிய எந்த தெய்வீக அம்சம் எதையும் கொள்ளாமல் தொட்டுப் பார்ப்பதை வணக்கம் என்று ஜெபமணி கூறினால் அவரை விட அறிவிலி இருக்க முடியுமா? முடியாது.

காணக் கிடக்காத அபூர்வமான பொருளைக் கண்டு அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தால் அதை வணங்குவதாக யாரேனும் கூறுவார்களா? அந்தக் கறுப்புக் கல்லைத் தொடும் போது அதை விட மேலதிகமான தெய்வீக நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்காது.

விமர்சனம் 14

மெக்கா வர்த்தகர்கள் மதீனாவைக் கடந்து செல்லும் போதெல்லாம் மெதினா வாசிகள் வஞ்சம் தீர்க்கும்படி அவர்களைக் கொள்ளையடித்தனர். இப்படிக் கொள்ளையடிப்பதைத் தங்கள் மதத்தின் படி மார்க்க யுத்தம் என்கிறார்கள் என்று கூறுகிறார் ஜெபமணியார்

(பக்கம் 25)

மக்கா மதீனா ஆகிய ஊர்கள் இன்று ஒரு நாட்டின் இரண்டு நகரங்களாக உள்ளன. ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மதினா சென்ற பிறகு மக்காவில் தனி ஆட்சியும் மதினாவில் தனி ஆட்சியும் நடந்து வந்தன. மதினாவின் ஆட்சித் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்காவின் ஆட்சித் தலைவராக அபூஜஹ்ல் அவனது மரணத்திற்குப் பின் அபூசுப்யான் ஆகியோர் இருந்தனர். இதைக் கவனத்தில் கொண்டு இப்பிரச்சனையை அலசுவோம்.

இந்தியாவும் சோவியத் யூனியனும் இரண்டு தனித் தனித் நாடுகள். நட்புறவு நாடுகள். நட்புறவு நாடுகள் என்றாலும் இந்தியாவிலிருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டு சோவியத் யூனியனின் அனுமதி பெறாமல் ஜெபமணி போக முடியுமா? அப்படிப் போனால் சோவியத் அரசு அப்பொருட்களை பறிமுதல் செய்வதில்லையா?

நட்பு நாடுகளுக்கிடையே கூட இந்த நிலை என்றால் இந்தியாவும் பாக்கிஸ்தானும் போல் பகை நிலவும் நாடுகளுக்கிடையே எதையேனும் அனுமதி பெறாமல் கொண்டு செல்ல முடியுமா? அதுவும் போர் மோகம் சூழந்துள்ள நேரங்களில் இதை எந்த அரசேனும் அனுமதிக்குமா? ஒருக்காலும் அனுமதிக்காது.

இலங்கையிலிருந்து கடத்தி வரும் தங்கத்தை இந்திய அரசு பறிமுதல் செய்கிறது. அதைக் கொள்ளையடித்தல் என்பாரா?

அட இது கூட வேண்டாம். தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு அனுமதி இன்றி நெல்லைக் கூட எடுத்துப் போக முடியாதே. அப்படி எடுத்துச் சென்றால் அரசு பறிமுதல் செய்கிறதே. இது கொள்ளையடிப்பது ஆகுமா?

இது போன்று தான் நபிகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிக்குள் எதிரி நாட்டினர் அதுவும் கடுமையான எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்பதை அனுமதிக்க முடியுமா? ஆட்சித் தலைவர் என்ற முறையில் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களையும் அந்தப் பகுதிகளையும் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டல்லவா? இதனடிப்படையிலேயே அது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இது தவறா?

கிறித்தவர்களின் ஆட்சி நடக்கும் நாடுகளுக்கு கிறித்தவரான ஜெபமணி கூட இந்தியாவில் உள்ள பொருட்களை வியாபார நோக்கில் அந்த அரசின் அனுமதி பெறாமல் கொண்டு செல்ல முடியாதே. அது ஏன்?

கொண்டு சென்றால் பறிமுதல் செய்து கைதும் செய்கிறார்களே? இது நியாயம் என்று கூறினால் இதை விடவும் ஆயிரம் மடங்கு நியாயம் நபிகளின் செயலுக்கு கூறலாமே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜெபமாலையை உருட்டிக் கொண்டு நாடோடியாக ஊர் சுற்றிக் கொண்டு இருந்தவர் அல்ல. மாறாக ஆட்சித் தலைவராக போர்ப்படைத் தளபதியாக இருந்தவர்.

மக்காவும், மதீனாவும் அன்றைய நிலையில் இரு வேறு ஆட்சிகள் நடந்த இரு நாடுகள். இரு ஊர் வாசிகளும் ஒருவருக்கொருவர் பகை கொண்டிருந்த நேரம். இந்த நேரத்தில் அத்து மீறி மதீனா நாட்டில் (நகரத்தில் அல்ல) திமிராகப் பிரவேசிக்கும் போது மதீனா நாட்டின் இறையாண்மைக்குச் சவால் விடும் போது , அந்த நாடு கை கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறாரா ஜெபமணி? நுனிப்புல் மேயும் ஜீவன்களால் இதைப் புரிந்து கொள்ள முடியுமா?

விமர்சனம் 15

இப்படியாக பதர் யுத்தத்தால் மெக்காவாசிகளை முகமது உடனிருந்து வெற்றிக் கொண்டார். இது முதல் முகமதுவின் புகழ் பரவ ஆரம்பித்தது. மெக்காவாசிகள் மதினாவிலுள்ள யூதர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு உஹித் என்ற போரில் முகமதுவின் படையினரை படுதோல்வி அடையச் செய்து விட்டனர். ஆயினும் மதினா நகரைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. யூதர்கள் இந்தப் போரில் மெக்காவாசிகளுக்கு வஞ்சகமாக உதவியதை அறிந்து முகமது யூதர்களில் 800 பேரைக் கொன்று அவர்களின் பெண்களைச் சிறைபிடித்து மனையாட்டிகளாக்கிக் கொண்டனர். இது மதினா மக்களுக்கு பெரும் மகிழச்சியையும் புதிய தெம்பையும் உண்டாக்கியமையால் யூதர்களை அழிப்பதையே தங்கள் மார்க்கக் கடமை சொல்ல ஆரம்பித்தனர். தானியேல்6:10ல் படி சமயம் வரை முகமது எருசலேமை உற்று நோக்கியே தொழுதார் என்கிறார் ஜெபமணி.

 (பக்கம் 26)

எப்படியிருக்கிறது ஜெபமணியின் பிதற்றல்? உலக வரலாற்றில் போர்க்களத்தில் புதுநெறி புகுத்தியவரும் எதிரிகளையும், கைதிகளையும் நியாயத்துடன் நடத்தியவருமான முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி வரலாற்றுக்கு முரணாகச் சித்தரிக்கும் இலரைப் பண்டைய வரலாற்றைக் கொஞ்சம் படிக்கச் சொல்கிறோம்.

எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கியும், விளைநிலங்களை எரியூட்டியும், தோற்றவனின் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்ததும், தோற்றவரின் மனைவியரின் கூந்தலை வெட்டி அவமதித்ததும் தான் கடந்த காலப் போர் நெறிகளாகக் கருதப்பட்டு வந்தன.

இவற்றையெல்லாம் மாற்றி அமைத்த நபிகள் நாயகம் (ஸல்) பற்றி கொச்சையாக விமர்சிக்கிறார் ஜெபமணி. இதற்கு விளக்கம் தருவதற்கு முன் ஜெபமணியின் வேத நூலான பைபிள் சமாச்சாரத்தைக் கொஞ்சம் பார்ப்பது நல்லது.

யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரத்தங்களை அக்கினியால் சுட்டெரித்தான். அக்காலத்திலே யோசுவா திரும்பி ஆத்சோரைப் பிடித்து அதன் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப் போட்டான். ஆத்சோர் அந்த ராஜ்ஜியங்களூக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது. அதிலிருந்த நர ஜீவன்களையெல்லாம் பட்டாயக் கருக்கினால் வெட்டிச் சங்காரம் பண்ணினார்கள். சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை. ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான். அந்தப் பட்டணங்களில் உள்ள மிருக ஜீவன்களையும் மற்றப் பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்து தீருமட்டும் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டிப் போட்டார்கள் சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.

(யோசுவா 11:9 .11. 14)

அவர்களை நோக்கி ஸ்திரீகள் எல்லோரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா?குழந்தைகளில் எல்லா ஆண்களையும் புருஷ சம்போகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்? ஸ்திரீகளில் புருஷ சம்போகத்தை அறியாத எல்லாப் பெண்களையும் உங்களுக்காக உயிரோடு விட்டு வையுங்கள் ? என்கிறது பைபிள்

(எண்ணாகமம் 31:15 .17 . 18)

இது போல் இன்னும் அனேக வசனங்கள் பைபிளில் மலிந்து கிடப்பதைக் காணலாம். அதுவும் கர்த்தரின் கட்டளைப்படியே நடந்ததாகக் கூறப்படுகிறது. போரில் சம்பந்தப்படாத பச்சிளம் குழந்தைகளையும் வெட்டிக் கொல்லுமாறு சொல்லும் மதம் உலகத்தில் ஏதேனும் உண்டா? இவ்வாழ்வை அனுபவித்த பெண்களையெல்லாம் வெட்டிக் கொல்லுமாறு கடவுள் கூறுவாரா? கன்னி கழியாத பெண்களை மட்டும் நீங்கள் அனுபவிப்பதற்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கடவுள் கூறுவாரா?

கிறிஸ்துவம் கூறுகிறது; பைபிள் கூறுகிறது; கிறிஸ்தவர்களின் கர்த்தர் கூறியிருக்கிறார். இதை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஜெபமணியார் 800 யூதர்களைக் கொல்ல நபிகளார் உத்தரவிட்டதை விமர்சனம் செய்யும் அருகதையில்லாதவர். ஜெபமணிக்கு இந்த அருகதை இல்லை என்றாலும் அவரது விமர்சனத்திற்கு நாம் விளக்கம் தருவோம். அதற்கு முன்னால் முக்கிய விஷயம் ஒன்றை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

குற்றங்களையும், குற்றவாளிகளையும் இஸ்லாம் பார்க்கும் பார்வை வேறு. ஏனைய அரசியல் மத சித்தாந்தங்களின் பார்வை வேறு.

தொடர்ந்து குற்றங்கள் புரிவோருக்கு எந்த போதனையும் பயன் தராது. திருடுபவன் அதைத் தவறு என்று தெரிந்து தான் திருடுகிறான். விபச்சாரம், கொலை செய்தவனுக்கு அது தவறு என்று நன்றாகவே தெரியும். தவறு என்று நன்றாகத் தெரிந்தும் தவறு செய்பவனை திருத்தவும் அவனது தவறிலிருந்து சமுதாயத்தைக் காப்பதும் எப்படி?

இஸ்லாம் சொல்கிறது; இது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்; திருடினால் கையை வெட்ட வேண்டும்; விபச்சாரத்திற்குக் கல்லெறிந்து கொல்ல லேண்டும். இது போன்று எல்லா குற்றங்களுக்கும் இஸ்லாம் வழங்கும் தண்டனைகள் கடுமையானவை. குற்றவாளிகளிடம் இஸ்லாம் இரக்கம் காட்டுவதில்லை. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் சவூதி அரேபிய அரசாங்கம் தனது நாட்டில் குற்றங்களைக் குறைத்துள்ளது. உலகில் எந்த நாடுகளை விடவும் சவூதியில் மட்டும் தான் குற்றங்கள் குறைவு என்பது நிரூபணமாகி வருகின்றது

(மற்ற விஷயங்களில் சவூதி இஸ்லாத்தைப் பின்பற்றுகிறதா? என்பது தனி விஷயம்.)

குற்றவாளிகளுக்குரிய தண்டனை போதுமானதாக இல்லாவிட்டால் ஐம்பது முறை சிறை சென்றவர் மீண்டும் கைது என்ற செய்திகளைத் தான் படிக்க வேண்டும். ஐம்பது முறை ஒருவன் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறான்; மக்கள் வரிப்பணத்தில் அவனுக்கு சிறைச் சாலையில் வசதிகள் செய்யப்படுகின்றன. இதன் பிறகும் ஐம்பத்தி ஒன்றாவதாகவும் அதே தவறை செய்கிறான் என்றால் என்ன காரணம்? இந்தத் தண்டனை அவனை எச்சரிக்கப் போதுமானதாக இல்லை. இது அவனோட முடிந்து விடக் கூடியது அல்ல. இதைக் காணும் மற்றவர்களுக்கும் கூட குற்றம் செய்யத் துணிவைப் பெறுகிறார்கள்.

திருடுபவனின் கையைப் பகிரங்கமாக வெட்டினால் அவனும் திருட மாட்டான். திருடும் எண்ணம் வந்து விட்டாலும் மற்றவனும் இதற்கு அஞசி திருடுவதைத் தவிர்ப்பான், இதை இஸ்லாம் கூறுகிறது. இது கொடூரமாகத் தெரிந்தாலும் இது அவசியமான கொடூரமே.

நல்லவர்களையும், அப்பாவிகளையும் பாதுகாக்க இந்தக் கொடூரம் அவசியமே. உலகம் இன்றைக்கு இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று சிந்திக்கத் தலைப்பட்டு விட்டது.

இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு சில யூதர்களை இஸ்லாம் வெட்டிக் கொன்றதை அணுகுவோம். மதீனா என்பது தனி நாடு. அந்த நாட்டுப் பிரஜைகள் அந்த நாட்டிற்கு விசுவாசமாகவும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டும் நடக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்தக் கட்டத்தில் அந்த நாட்டு பிரஜைகள் அந்த நாட்டு ரகசியங்களை எதிரி நாடாகிய மக்காவுக்குச் சொன்னால்- படையடுத்து வருமாறு தூண்டினால்- கள்ள உறவு வைத்திருந்தால்- அதை விட துரோகச் செயல் எதுவும் இருக்க முடியாது. எதிரிகள் படை எடுத்து வந்து அங்குள்ள மக்களை கருவருப்பதற்கு இந்தத் துரோகிகள் காரணமாக இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மேகம் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்தியப் பிரஜை இந்நாட்டு இரகசியங்களை பாகிஸ்தானுக்குக் காட்டிக் கொடுத்தால் இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? மாறாக தண்டிக்கும் கைது செய்யும் சிறையிடும்! நாடு கடத்தும்.

ஆனால் எல்லாக் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்குகின்ற இஸ்லாம் பல உயிர்கள் பலியாகும் வகையில் நாட்டைக் காட்டி கொடுத்தவர்களுக்கு மரண தண்டனையையே பரிசாக வழங்குகிறது. அப்போது தான் மற்றவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள்.

ஜெயிலில் போடுவதாலோ, கைது செய்வதாலோ இக்குற்றங்களைக் களையெடுப்பது சாத்தியமில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இது போன்ற தேசத் துரோகிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இன்னமும் அந்தக் காரியத்தைச் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றால் தண்டனை போதவில்லை என்பது தானே இதன் பொருள் .

மதீனாவை ஒரு ஊர் என்று பார்க்காமல் ஒரு நாடு என்று புரிந்து கொண்டால் முகம்மது நபி மதத் தலைவர் மட்டுமின்றி ஆட்சித் தலைவராவும் இருந்தவர்கள் என்பதையும் புரிந்து கொண்டால் தன் நாட்டு விசுவாசமான பிரஜைகளைக் காப்பதற்காக எடுத்த நியாயமான நடவடிக்கையே இது என்பதை ஜெபமணியால் விளங்க முடியும்

விமர்சனம் 16

பலதார மணம் பற்றியும் ஜெபமணி கிண்டல் செய்திருக்கிறார். அதற்கு நமது அல் ஜன்னத் இதழில் வெளிவரும் மாற்றாரின் பார்வையில் இஸ்லாம் என்ற தொடர் கட்டுரையில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதால் அதற்கான நியாயங்களை இங்கே கூறுவது கூறியது கூறலாகி விடும். அதனால் அதைத் தவிர்ப்போம் .

ஆனால் ஜெபமணி ஒப்புக் கொண்ட பைபிள் பல தார மணம் பற்றிக் கூறுவதை மாத்திரம் ஜெபமணிக்கு எடுத்துக் காட்டுவது இங்கு அவசியமாகிறது.

ஆபரகாமுக்கு சாரா என்றொரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 12:5 லும், கேத்தூரால் என்று இன்னொரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 25:1லும் பல மனைவிகள் ஒரே சமயத்தில் அவருக்கு இருந்ததை ஆதியாகமம் 25:6லும் கூறப்படுகிறது.

ஏசா என்பவருக்கு (இஸ்ஹாக் நபியின் மகன்) யூதித், பஸ்மாத் என்ற பெயர்களில் இரு மனைவியர் இருந்ததை ஆதியாகமம் 29:34ல் கூறுகிறது. மேலும் அதே ஏசா மகளாத் என்பவளையும் திருமணம் செய்து கொண்டதாக ஆதியாகமம் 28:9 கூறுகிறது. அவருக்கு ஆதாள். அக்கோ பாமாள் என்று மேலும் இரு மனைவிகள் இருந்ததை ஆதியாகமம் 36:2 கூறுகிறது.

யாக்கோபு அவர்களுக்கு அதாவது யூத கிறித்துவ பரம்பரையின் தந்தையாகிய இஸ்ரேல் எனும் யாக்கோபுக்கு லேயாள் என்று மனைவி இருந்ததாக ஆதியாகமம் 29:23 லும்  இராகேல் என்று மற்றொரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 29:28 லும் பில்காள் என்று இன்னொரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 30:4 லும் சில்பாள் என்று ஒரு மனைவி இருந்ததாக ஆதியாகமம் 30:9 லும் கூறப்படுகிறது.

மாதிரிக்குச் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். பலதாரத் திருமணத்தைக் கிண்டல் செய்ய ஜெபமணிக்கு அருகதை இல்லை என்பதற்காகவே இந்த எடுத்துக் காட்டுக்கள். பல தாரமணம் சரியானதே என்பதற்கான நியாயங்கள் மாற்றாறின் பார்வையில் இஸ்லாம் கட்டுரைத் தொடரில் விளக்கப்பட்டு வருகிறது.

விமர்சனம் 17

தானியேல் 6:10ன் படி இது சமயம் வரை முகமது எருசலேமை உற்று நோக்கியே தொழுதார்

(பக்கம் 26)

இது சமயம் முகமது எங்கிருந்தும் கடவுளைத் தொழலாம் என்ற கொள்கையி லிருந்து மாறி ஒவ்வொரு தொழுகையிலும் கிப்லா மேற்கி லிருக்கும் கஃபா கோயிலை எண்ணி அதை உற்றுப் பார்க்கும் நிலையிலும் தொழுது கொள்ளும் படி ஒரு நிலமையையும் 40ரக்அத்துகள் நிலைகளில் பிரதான நிலையாகவும் நியமித்தார்

(பக்கம் 28)

40 ரக்அத்துகள் என்று இவர் கூறுவதிலிருந்து இவர் இஸ்லாம் பற்றி அடைந்துள்ள தெளிவை அறிந்து கொள்கிறோம்.

முஸ்லிம்கள் கஃபாவை நோக்கித் தொழுவது அங்கே இறைவன் இருக்கிறான் என்பதற்கு அல்ல. வணக்க முறைகளில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். ஒரு இடத்தில் தொழுபவர்களில் சிலர் கிழக்கிலும் வேறு சிலர் மேற்கிலும் மற்றும் சிலர் வடக்கிலும் முன்னோக்கி நின்றால் ஒழுங்கு கெடும். ஏதேனும் ஒரு பக்கமாக அனைவரும் முன்னோக்க வேண்டும். இறைவனை வணங்குவற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட கஃபா ஆலையம் இருக்கும் திசையை இஸ்லாம் தேர்ந்தெடுத்தது. எந்தப் பக்கத்தை தேர்ந்தெடுத்தாலும் அதில் கேள்விகள் எழுவது இயற்கை.

கஃபாவுக்குள்ளே இறைவன் இல்லை என்பதைப் பகிரங்கமாக அறிவிக்கும் விதமாக ஜெருசலேம் நோக்கியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதும் காட்டியுள்ளனர். கஃபா திசை எந்தப் பக்கம் என்பது தெரியாத போது எந்தப் பக்கமும் முன்னோக்கித் தொழலாம் என்றும் இஸ்லாம் கூறுகிறது. உலக முஸ்லிம்கள் அனைவரின் கொள்கையும் நடவடிக்கைகளும் ஒரே விதமாக அமைந்திருக்க வேண்டும் என்பது போலவே அவர்கள் முன்னோக்கும் பொருளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. கஃபாவில் இறைவன் இருப்பதாகவோ அல்லது காஃபாவை வணங்குவதாகவோ எவரேனும் நம்பினால் அவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றார்.

விமர்சனம் 18

இப்படி இருக்க இசுலாம் சகோதரத்துவம் ஜாதி பேதமற்ற மார்க்கத்தைக் கொண்டது என்று கூறுவது பண்பாட்டுக்கு ஒவ்வாது என்பது நம் கருத்து. தமிழக அரசு முஸ்லி ம்களில் 8ஜாதியரை ஞ்.ர்.ம்.ள்.ய்ர் 1564 30லி7லி85 ல் குறிப்பிடுகிறது ஆகவே தமிழகத்தில் முஸ் லிம்கள் மத்தியில் 8க்கும் அதிகமான ஜாதி பிரிவுகள் உண்டு என்பது தெளிவாகிறது. என்கிறார் ஜெபமணி

(பக்கம் 31)

ஒரு மதத்தை ஒரு கட்சியை விமர்சனம் செய்வது என்றால் அந்த மதத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டும். அந்த மதத்தின் அடிப்படை சட்ட நூல்களை விமர்சிக்க வேண்டும். அது தான் விமர்சனத்தின் இலக்கணமாகும். இஸ்லாம். கூறாததை சில இஸ்லாமியர்கள் தவறாகச் செய்து வருவதை எடுத்துக் காட்டி அதற்கு இஸ்லாத்தைப் பொறுப்பாளியாக்குவது மதியீனம் அல்லவா?

மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஒரே ஆண் ஒரே பெண்ணிடமிருந்து படைத்தோம். உங்களைப் பல்வேறு கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியிருப்பது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு. இறைவனிடம் உங்களில் சிறந்தவர் இறைவனை அஞ்சி நடப்பவரே என்று அல்குர்ஆன் ஜாதிக்கு எதிராக சவுக்கடி தருகிறது.

ஜாதிக்கு எதிராக இஸ்லாம் எடுத்த கடும் நடவடிக்கையைப் போல் வேறு எந்த இஸங்களும் எடுத்திருக்க முடியாது. ஒரு சில முஸ்லிம்கள் முட்டாள்தனமாக தங்களை பிரித்துக் கொண்டு விட்டார்கள் என்றால் அதற்கு இஸ்லாம் எப்படிப் பொறுப்பாகும்?

திரவியராஜ் என்ற பாதிரியார் மருமகளைக் கற்பழித்துக் கொலையும் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளாரே? இதைக் காரணமாக வைத்து கிறித்துவ மார்க்கம் தான் இவ்வாறு போதித்தது என்று நாம் கூறினால் ஜெபமணி ஒப்புக் கொள்வாரா?

முஸ்லிம்களில் எட்டு ஜாதியினர் இருப்பதாக அரசாங்க கெஜட் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். அரசாங்க கெஜட் என்ன முஸ்லிம்களின் வேதப் புத்தகமா?தீர்க்கத்தரிசியின் உபதேசமா? அப்படி எட்டு ஜாதி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்குமானால் முட்டாள்தனமாகக் குறிப்பட்டுள்ளார்கள் என்று நாம் கூறுவோம்.

ஆயிரம் தான் ஜெபமணி புலம்பினாலும் கிறித்தவ நாடார் கிறித்துவ முதலியார் என்று கிறித்தவத்தில் இணைந்த பின்னரும் ஜாதியை ஒட்டி வைக்கிறார்கள். இஸ்லாத்தில் அப்படி எல்லாம் கிடையாது என்பதைப் புதிதாக இஸ்லாத்தில் இணைவோர் புரிந்து வைக்கிறார்கள். அனுபவப் பூர்வமாக அதை உணர்ந்தும் இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் முஸ்லிம்களுக்கும் ஒன்றை நினைவு படுத்துவது அவசியமாகிறது. அரசாங்கச் சலுகைகள் பெறுவதற்காக மரைக்காயர், லெப்பை, இராவுத்தர், தக்னி என்றெல்லாம் தங்களைத் தனி இனமாகக் காட்டி சலுகை பெறுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும். பொருளாதார ரீதியில் மாத்திரம் முஸ்லிம்களை ஏழை பணக்காரர் என்று பார்த்து சலுகை பெறுவதற்கு போராட வேண்டும். அரசாங்க கெஜட்டில் முஸ்லிம்களை லெப்பை தக்னி என்றெல்லாம் பிரிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

(அடிக்கோடிட்ட பாரா அன்றைய நிலையில் நாம் எழுதியது. அந்தக் கருத்தை நாம் பின்னர் தக்க காரணத்துடன் மாற்றிக் கொண்டோம்.)

ஜெபமணி போன்ற அறிவீனர்கள் இஸ்லாத்திலும் ஜாதி உண்டு என்று எண்ணுவதற்கு இடமளிக்கலாகாது. என்பதை நினைவூட்டுகிறோம். இந்த நினைவூட்டல் ஷாபி, ஹனபி என்று தங்களை தனி இனமாகக் ஆக்க முயற்சிப்பவர்களுக்கும் சேர்த்தே.

ஜாதி பற்றி பேச வந்துள்ள ஜெபமணியை இனி கவனிப்போம். இஸ்லாத்தை விமர்சிப்பது என்றால் அல்குர்ஆன் ஹதீஸ் இரண்டை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்ற அளவு கோல் படியே கிறித்துவத்தை நாம் விமர்சிக்கும் போது பைபிளையே விமர்சிப்போம்.

கிறித்தவர்கள் பல ஜாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்காக கிறித்தவம் ஜாதியை ஆதரிக்கிறது என்று ஜெபமணியை போல் நாம் விமர்சிக்க மாட்டோம்.

பைபிள் அதை ஆதரித்தால் மட்டுமே கிறித்தவத்தை பொறுப்பாளி ஆக்குவோம்.

கிறித்தவர்கள் ஒவ்வொரு ஜாதிக்கும் தனிக் கோவில், தனிக் கல்லறை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக கிறித்தவ மதத்தை இதற்குப் பொறுப்பாக்க மாட்டோம். பைபிளே அதை அனுமதிக்கின்றதா என்று பார்ப்போம்.

இந்த அளவுக்கோலின்படி பைபிள் ஜாதி பற்றி கூறுவதென்ன?

அன்னிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம். சகோதரனிடத்திலோ உனக்கு வர வேண்டியதை விட்டுவிடக் கடவது

(உபாகமம் 15:3 )

அன்னிய ஜாதியானிடம் ஒரு விதமாகவும் தனது ஜாதியானிடம் இன்னொரு விதமாகவும் நடக்கும் படி பைபிள் போதிக்கிறதா இல்லையா ? ஜாதியை வலி யுறுத்துகிறதா இல்லையா?

ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசிர்வதித்து கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல்.... என்கிறது பைபிள்

(ஆதியாகமம் 28:1 )

திருமணம் செய்வதற்கு ஈசாக்கு ஜாதி பார்த்ததாக கிருத்தவ மதமே ஒப்புக் கொள்கிறது.

அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரி ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்! என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்கு பிரதியுத்தமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அவர்களுடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர் காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி வெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர் அவனை நோக்கி பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

(மத்தேயு 15:22 26 )

இஸ்ரவேல் அல்லாத இனத்தினரை நாய்கள் என்று தேவ குமாரன் வர்ணித்ததற்கும் வர்ணாசிரமத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

பைபிள் இஸ்ரவேலரைப் பிராமணர்களைப் போல் உயர்ந்த ஜாதியாகக் கூறுகிறது என்பதற்கு வேறு என்ன சான்று தேவை? உலக ரட்சகர் என்று இன்று அறிமுகப்படுத்தப்படும் ஏசு இஸ்ரவேல் ஜாதிக்கு மட்டுமே அனுப்பப்பட்டதாக வாக்கு மூலம் தருவதையும் ஜெபமணியார் கவனிக்க வேண்டும்.

இஸ்ரவேல் குடும்பத்தைச் சேராத ஜெபமணி கூட பைபிள் முடிவுப்படி நாய்களுக்குச் சமமானவரே! என்பதை அவர் உணர வேண்டும் இதே வார்த்தைகள் மாற்கு 7:27 லும் கூறப்படுகிறது.

இப்படி ஏராளமான வசனங்களை பைபிளில் காண முடியும். கிறித்தவர்களின் வேதம் எப்படி ஜாதியை வலியுறுத்துகின்றதோ அதே போல் முஸ் லிம்களுடைய வேதம் ஜாதியை வ லியுறுத்தினால் ஜெபமணி விமர்சனம் செய்யலாம். இஸ்லாத்தின் வேதம் ஜாதியை வேரறுக்கும் போது அதை விமர்சிப்பதில் நியாயம் என்ன இருக்கிறது?

விமர்சனம் 24

உம்மிகள் சொன்ன யாவுமே சரியானவை அல்ல என்பதை என் கையிலுள்ள குர்ஆன் புத்தகத்தின் பக்கம் 13ல் இதன் ஆசிரியர் விவரித்துள்ளார். இங்கே 454 வசனங்கள் ஆயிஷாவின் வசனங்களுக்கு மாறுபாடாக உள்ளது. ஆயிஷா அவ்வசனங்களைத் திருத்தி சேர்த்ததாகவும் அறிவித்தது

என்று திருவாய் மலர்ந்துள்ளார் ஜெபமணி.

இவர் குறிப்பிட்ட புத்தகத்தில் என்ன உள்ளது என்பதைக் கூறும் முன் ஜெபமணியன் அறிவீனத்தைச் சுட்டிக் காட்டுவது அவசியமாகி விட்டது. முன்னர் கி பி எட்டாம் நூற்றாண்டிலேயே குர்ஆன் எழுதப்பட்டது என்று கூறியவர் இங்கே ஆயிஷா (ர லி) அவர்களின் காலத்திலேயே எழுதப்பட்டதாக ஒப்புக் கொள்கிறார். தான் என்ன சொல்கிறோம் என்று புரியாத மரமண்டையாருடன் தாம் நாம் மோத வேண்டிய நிலை.

அவர் குறிப்பிடுவது ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் வெளியிட்ட நீண்ட முன்னுரையுடன் கூடிய பழைய தமிழ் தர்ஜீமாவைத் தான். அதில் கூறப்படுவது என்னவென்றால் திருக்குர்ஆனின் வசனங்கள் எத்தனை என்பதில் உள்ள கருத்து வேறுபாடு கூறப்படுகிறது.

ஆயிஷா (ர லி) அவர்களின் கருத்துப்படி குர்ஆன் வசனங்கள் 6666 மற்றும் சிலரது கருத்துப்படி 6212 என்று பட்டியல் போடப்படுகின்றது. 6212க்கும் 6666 க்கும் இடையே உள்ள வித்தியாசம் 454 ஆக இந்த 454 வசனங்கள் ஆயிஷாவால் சேர்க்கப்பட்டன எனத் தெளிவடைந்துள்ளார் ஜெபமணி.

இந்த விஷயத்தில் அவருக்கு அறியாமை இருப்பதை மன்னிக்கலாம். ஏனெனில் வேண்டுமென்று அவர் இவ்வாறு கூறவில்லை. அவர் புரிந்து கொண்ட லட்சனம் இவ்வளவு தான். அதன் விளக்கத்தை இனி காண்போம்.

திருக்குர்ஆனில் எந்த ஒரு வார்த்தையும் யாராலும் கூட்டப்படவுமில்லை. குறைக்கப்படவும் இல்லை. இன்று எதனைக் குர்ஆன் என்றுக் கூறுகிறோமோ அது தான் 14நூற்றாண்டுகளாகக் குர்ஆனாக இருக்கிறது.

அப்படியானால் எதற்காக எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட வேண்டும். இதைத் திருக்குர்ஆன் முதல் அத்தியாயத்தைக் கூறி விளக்கலாம்.

அல்ஹம்து ல்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது ஒரு வசனம் அர்ரஹ்மானிற் ரஹீம் என்பது மற்றொரு வசனம். சில பேர் இவ்விரண்டும் ஒரு வசனம் என்பார்கள். அதாவது சிலருடைய கருத்துப்படி அவை இரண்டு வசனங்கள். வேறு சிலருடைய கருத்தின் படி இரண்டும் சேர்ந்து ஒரு வசனம்.

குர்ஆனுடைய வசனத்தின் முடிவு எங்கே? மறு வசனத்தின் ஆரம்பம் எங்கே? என்று எழுந்த கருத்து வேறுபாட்டினால் திருக்குர்ஆனின் வசன எண்கள் எத்தனை என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் இரு வேறு எண்களைக் கூறுவோரின் கருத்துப்படியும் குர்ஆனில் கூடுதல் இல்லை. குறைவும் இல்லை. இதையும் ஜெபமணியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விமர்சனம் 25

குர்ரான் 2:196 . 37:107 ஆகியவை ஆபிரஹாம் இஸ்மவேலைப் ப லியிட்டதாகக் கூறுகிறது என்கிறார் ஜெபமணியார்.

 (பக்கம் 7)

மனிதப் பலியின் மீதே தன் மதத்தின் அஸ்திவாரம் அமைந்துள்ளதால் அவருடைய பார்வை இப்படிப் போகின்றது. ஆபிரகாம் இஸ்மவேலைப் ப லியிட முயன்றதும் அதன் பின் இறைவனின் கட்டளைப் பிரகாரம் இஸ்மவேலுக்குப் பதிலாக ஒரு ஆட்டைப் ப லியிட்டதும் தான் திருக்குர்ஆன் கூறக்கூடிய செய்தியாகும்.

விமர்சனம் 26

குர்ரான் 17:94 95 இறைவன் மனிதன் மத்தியில் மனிதாக வந்தார் என்கிறது எனக் கூறுகிறார் ஜெபமணி.

மனிதர்களிடம் நேரான வழி வந்த போது அல்லாஹ் ஒரு மனிதரையா தூதராக அனுப்பி வைத்தான் என்று கூறுவதைத் தவிர அவர்கள் விசுவாசம் கொள்வதைத் தடை செய்ய ஒன்றுமே இல்லை. (அதற்கு) நபியே நீர் கூறும் பூமியில் மனிதர்களே வசித்திருந்து அதில் சாவதானமாக நடந்து திரிந்து கொண்டிருந்தால் நாமும் வானத்திலி ருந்து ஒரு மலக்கையே (நம்முடைய) தூதர்களாக அவர்களிடம் அனுப்பியிருப்போம் (அல்குர்ஆன்17:94,95) இது தான் அவர் குறிப்பிட்ட வசனம். இதி லிருந்து இறைவனே மனிதனாக வந்தார் அவர் தான் ஏசு என்று ஞானம் பெறுகிறார் ஜெபமணி.

ஐயா ஜெபமணியாரே! தமிழில் உள்ள இந்த மொழி பெயர்ப்பு கூட உமக்கு புரியவில்லை என்றால் உம்மைப் பற்றி நாங்கள் என்ன முடிவுக்கு வருவது? இறைவன் மனிதராக வருவான் என்று இதில் கூறப்படவே இல்லையே! மனிதர்களுக்கு அனுப்பப்படும் இறைவனின் தூதர் (இறைவன் அல்ல ) மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று கூறுகிறது. இதன் மூலம் ஏசு மனிதனிடம் தூதராக வந்ததால் ஏசுவும் மனிதன் தான் தெய்வப் பிறவி அல்ல என்று தான் விளங்குகிறது

விமர்சனம் 27

குர்ரான் 5:112, 8:49 , 3:55 இயேசுவை சிருட்டிகனாக்குகின்றது என்கிறார் ஜெபமணி.

(பக்கம் 79)

ஈஸா (அலை) அவர்கள் ஒருசில பறவை வடிவங்களை உருவாக்கி அவற்றைப் பறவைகளாக ஆக்கியதாக அவ்வசனங்கள் கூறுவது உண்மையே. ஆனால் அகே வசனத்திலே என் அனுமதியுடன் அவ்வாறு செய்தீர் என்று இறைவன் கூறுவதாக இடம் பெற்றுள்ளதே உமது கண்களுக்குத் தென்படவில்லையா? இறைவன் நாடினால் அவன் நாடும் போது எவர் மூலமாகவும் அற்புதங்கள் நிகழலாம் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகிறோம். அந்த வகையில் இறைவன் அனுமதித்த சில சமயங்களில் ஈஸா (அலை) அவர்களும் அற்புதங்கள் செய்ததை நம்புகிறோம். இதனால் அவர் சிருஷ்டிப்பவர் என்று ஆகிவிட முடியுமா?

அப்படியானால் மூஸா (அலை) அவர்கள் இறந்தவனை உயிர் பித்தததை குர்ஆன் 2:72 கூறுகிறதே அவரும் சிருட்டிப்பவரா? அவரும் தேவ மைந்தனா? இதை ஜெபணி ஏற்பாரா?

ஆபிராகம் பறவைகளை உயிர்ப்பித்ததாக 2:260 வசனங்கள் கூறுகிறதே? அவரும் கூட சிருட்டிப்பவர் தானா ? அவரும் கூட தேவ மைந்தன் தான் என்று ஜெபமணியார் ஒப்புக் கொள்வாரா?

பைபிளும் குர்ஆனும் மோசே கைத்தடியால் பாம்பை உருவாக்கியதாகக் கூறுகின்றனவே அவரும் கூட சிருட்டிகன் தானா?

விமர்சனம் 28 28

குர்ரான் 3;45. 4;71 இயேசு இறைவனின் வார்த்தையானவர் என்று கூறுவதாக ஜெபமணியார் கூறுகிறார்.

கலிமத்துல்லாஹ் இறைவனின் வாக்கு என்று குர்ஆன் ஈஸா (அலை) அவர்களைக் கூறுவது உண்மையே. இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் இறைவனின் உத்தரவால் படைக்கப்பட்டதால் இறைவன் அவ்வாறு கூறுகிறான். இதனால் தேவ மைந்தன் ஆகி விட முடியுமா?

ஆகி விட முடியும் என்றால் 3:30 வசனத்தில் யஹ்யாவையும் இறைவன் க லிமதுல்லாஹ் என்று கூறுகிறான். அதற்கும் இது தான் பொருளா? யஹ்யாவும் ஏசுவும் சம நிலையில் உள்ளவர் என்பதை ஜெபமணியார் ஒப்புக் கொள்ளத் தயாரா?

விமர்சனம் 29

குர்ரான் 21:91 19:19 இயேசு இறைவனின் அருளானவர் என்று கூறுவதாக ஜெபமணி கூறுகிறார்.

(பக்கம் 79)

இறைவனின் உத்தரவுப் பிரகாரம் மர்யம் பிரசவித்ததையும் அவரையும் அவரது மனைவியையும் உலகுக்கு ஒரு அத்தாட்சியாக- அதாவது இறைவன் நினைத்தால் தந்தையின்றிக் கூடப் படைக்க முடியும் என்பதற்குச் சான்றாக ஆக்கினோம் என்று அவ்வசனங்கள் கூறுகின்றன. உலகுக்கே அருளானவர் என்று கூறவில்லை. அப்படி வேறு சிலரை குறித்து கூறி இருந்தாலும் அதற்கு இறைவன் என்பது அர்த்தமில்லை.

விமர்சனம் 30

குர்ரான் 3:45 இயேசு வானில் பூமியில் கெம்பீரமானவரும் இறைவனின் மிக நெருங்கியவருமாம் என்கிறார் ஜெபமணி

(பக்கம் 79)

இதை நாம் மறுக்கவில்லை. ஜபமணியே முன்பு குறிப்பிட்டப்படி ஆபிரகாமை கலீலுல்லாஹ் என்றும் மோஸையை கலீமுல்லாஹ் என்றும் கூறி அவர்களும் இறைவனுக்கு நெருக்கமானவர்களே என்கிறது. ஈஸா (அலை) ஒரு சிறந்த மனிதர் என்பதை எந்த முஸ்லிமும் மறுக்கவில்லையே. கடவுளின் குமாரர் என்று கூறுவதைத் தான் மறுக்கின்றனர்.

விமர்சனம் 31

3:55. 4:158. 19:15. 33 இயேசு மரித்து உயிர்த்து இறைவனால் உயர்த்தப்பட்டவர் என்கிறது என்கிறார் ஜெபமணி

(பக்கம் 79)

அவ்வசனங்களில் மரித்து உயிர்தெழுந்தார் என்று கூறப்படவில்லையே. அவரைக் கொல்லவுமில்லை சிலுவையில் அறையவுமில்லை. என்று தன்னளவில் இறைவன் உயர்த்திக் கொண்டான் என்று தானே அவ்வசனங்கள் கூறுகின்றன. சிலுவையில் அறையப்பட்டதையே மறுக்கும் இவ்வசனங்களை சிலுவைப் ப லிக்கு அதாரமாக்கும் பேதமையை என்னவென்பது.

விமர்சனம் 32

3:56 98:6 இயேசுவை நிராகரிப்போர் இம்மை மறுமையில் வாதிக்கப்படுவர் என்று கூறுவதாக ஜெபமணி கூறுகிறார்.

ஏசுவை எந்த முஸ்லிமும் நிராகரிக்கவில்லையே? எல்லா நபிமார்களையும் அவர்கள் நம்பத்தான் செய்கிறார்கள் . அவரைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ கடவுளின் அம்சம் என்றோ கூறி இறைவனை நிராகரிப்பதைத் தானே முஸ்லி ம்கள் மறுக்கின்றனர்.

விமர்சனம் 33 33

7:157 , 3:164 இயேசு பாவ விலங்கை விலக்கியவர் என்று கூறுவதாக ஜெபமணி தெளிவடைந்துள்ளார் (பக்கம் 79)

3:164 வசனம் நபி (ஸல்) அவர்களையே கூறுகிறது என்பதை முன்னர் விளக்கினோம் 7:157 வசனம் சொல்வதென்ன என்பதை இனிமேல் காண்போம்.

மோசேவுக்கு அருளப்பட்ட தவ்ராத்திலும் ஏசுவுக்கு அருளப்பட்ட இஞசீலிலும் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை பற்றிக் கூறப்பட்டதையும் அந்த முஹம்மது பாவ விலங்கை அகற்றுவார் எனவும் அவ்வசனம் கூறுகிறது.

ஏசுவுக்கு அருளப்பட்ட வேதத்திலேயே இனி வருபவர் என்று கூறப்பட்டால் அவர் ஏசுவாக எப்படி இருக்க முடியும்? ஏசு அல்லாத வேறொருவராகத் தானே இருக்க முடியும்.

விமர்சனம் 34

56:10 . 14 இயேசு இரகசியமாக வருகிறவர் என்று குர்ஆன் கூறுவதாக ஜெபமணி கதையளக்கிறார்.

அவ்வசனங்கள் உலக முடிவு நாள் பற்றியும் மலைகள் தூள் தூளாகப் பெயர்த்தெடுக்கப்படுவதையும். (வானத்துக்கல் உட்பட) கூறுகின்றன. இதில் என்னய்யா இரகசியம்?

விமர்சனம் 35

36:68 . 70 மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசியார் என்று இயேசு, யோவான் 3:3 . 5. 7 ல் சொல்லி யவற்றை விளக்குகிறது என்கிறார் ஜெபமணி.

அவ்வசனங்கள் உயிருள்ளவர்களுக்கு எச்சரிக்கைச் செய்வதாக குர்ஆன் அருளப்பட்டது எனவும், முஹமதுவுக்கு நாம் கவிதையைக் கற்றுத் தரவில்லை எனவும் கூறுகிறது.

கவிதையை அறியாத ஒருவர் அழகு நடையில் குர்ஆனை மக்கள் முன் வைத்தார் என்றால் அது இறை வேதம் என்பதற்கு தெளிவான சான்று என்று தான் அவ்வசனங்களிலிருந்து விளங்கலாம்.

விமர்சனம் 36

5:82-85 3:113. 114 199 ல் இயேசுவுக்குள்ளானோர் மாத்திரமே நித்தியத்தில் வாழ முடியும் என்கிறது எனக் கூறுகிறார் ஜெபமணி.

அவர் குறிப்பிட்ட 5:82 - 85 பல கிறித்தவர்கள் நபிகளின் காலத்தில் நபியிடம் வந்து அவருக்கு அருளப்பட்ட வேதத்தை கேட்டு கண் கலங்கி கிறித்தவத்தி லிருந்து விலகி இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறுகிறது.

ஜெபமணியும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் இவ்வசனத்தைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

3:113 . 114 வசனங்களும் இதே கருத்தையே கூறுகின்றன.

3:199 வசனமும் அன்றைய கிறித்தவர்கள் முஹம்மதுவுக்கு அருளப்பட்ட வேதத்தை ஏற்று இஸ்லாத்தில் இணைவதன் மூலம் நித்திய வாழ்வை அடைந்ததாகக் கூறுகிறது.

ஜெபமணியின் விளங்கும் திறன் எத்தகையது என்பதற்கு இவையெல்லாம் தெளிவான சான்றுகள்.

விமர்சனம் 37

3:64 இயேசுவின் மத்தியஸ்தால் ஒன்றுபடவும் எனக் கூறுவதாகக் கூறுகிறார்.

3:64ல் மனிதர்களை அதாவது இயேசுவைக் கடவுளாக்குவதில்லை என்று கூறி இறைவனுக்கு இணை வைக்காதிருந்தால் நாம் ஒன்று படலாம் என்ற அழைப்பு விடப்படுகிறது.

இதையெல்லாம் படிக்கும் வாசகர்கள் இந்த டுயூப்லைட்டிற்கா பதில் சொல்ல வேண்டும் என்று எண்ணிவிடாதீர்கள் ஏனென்றால் டியூப்லேட்டாவது தாமதாமாகவாவது எரிந்து விடுமன்றோ.

விமர்சனம் 38

2:248 . 61:9 . 2:38. 129 .160 .40:53 .54 ஏசுவின் மார்க்கமே சகல மார்க்கத்தையும் வெல்லும் என்று கூறுவதாக உளறுகின்றார்.

2:248 வசனம் தாலூத் பற்றிக் கூறுகிறது.

61:9 நபி (ஸல்) அவர்களைக் குறிக்கிறது என்பதை முன்பே விளக்கியுள்ளோம்.

2:38 ஆதம் (அலை) அவர்களைக் குறிக்கிறது.

2:129 ஆபிரகாமும் இஸ்மாயீலும் தங்கள் சந்தததிகளிலி ருந்து ஒரு தூதரை அனுப்புமாறு இறைவனிடம் பிரார்த்தித்ததாக உள்ளது. இஸ்மவேல் பரம்பரையில் ஏசு வராததால் அது ஏசுவைக் குறிக்காது முஹம்மது (ஸல்) அவர்களையே குறிக்கிறது.

2:160 இறை வேதத்தை மறைக்கும் ஜெபமணி போன்றோரை அடையாளம் காட்டுகிறது.

40:53 . 54 வசனங்கள் இறை வேதத்தில் தக்க சான்று இன்றி ஜெபமணி போல் தர்க்கம் என்று உளறிக் கொட்டக் கூடாது எனக் கூறுகிறது.

அவர் குறிப்பிட்ட ஒரு வசனமும் ஏசுவைக் குறிக்கவில்லை.

ஆதியாகமம் 18:10 எண்ணாகமம் 24:5 மாற்கு 36:7 மத்தேயு 63:1 லூக்கா 7:12ஆகிய வசனங்கள் 1989ல் தமிழ் நாட்டில் தோன்றக்கூடிய ஜெபமணி எனும் மூடரைப் பற்றிக் கூறுகிறது என்று நாம் எழுதுவதற்கும் ஜெபமணி எழுதியுள்ளதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

விமர்சனம் 39

61:6 இயேசு கூறிய தேற்றரவாளனாகிய தூய ஆவியானவரைக் கூறுவதாகக் ஜெபமணி கண்டுபிடித்துள்ளார்.

61:6 முன்பே விளக்கப்பட்டுவிட்டது.

விமர்சனம் 40

43:45 5:92 8:1 இயேசு வணங்கப்படத் தக்கவர் என்று கூறுவதாக ஜெபமணி உளறுகிறார்.

43:35 இவ்வுலகில் நிலையாமை பற்றியும் மறுமையின் சிறப்புப் பற்றியும்

5:92 நபிகளின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது பற்றியும்

8:1 போர்ப் பொருட்கள் பங்கிடுவது பற்றியும் கூறுகிறது

எடுத்துக்காட்டும் எண்களுக்கும் இந்த மண்ணாங்கட்டி எடுத்துவைக்கும் கருத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா?

இப்படி குர்ஆன் என்று போட்டு பல நம்பர்களை விட்டு அடிக்கும் இந்தச் சாமியார் வேலையை உமது ஆலயங்களோடு நிறுத்திக் கொள்வீராக என்று ஜெபணிக்கு கூறி ஆசீர்வதிக்கிறோம்.

விமர்சனம் 41

ஈஸா அலைஹிவஸல்லம் என்ற சொல்லிலிருந்தே இஸ்லாம் என்பது பிறந்தது என்கிறார் ஜெபமணி.

ஜெகன் மேரி என்பதிலிருந்து தான் ஜெபமணி பிறந்தது என்றும், பார்த்து திருடுபவர் என்பது தான் பாதிரியார் என்று திரிந்தது என்றும், முருகவேல் என்பதே சாமுவேலானது என்றும் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதே அளவு முட்டாள்தனமானது ஜெபமணியின் இந்த அரிய கண்டுபிடிப்பு.

இறுதி விமர்சனம்

தனது நூல் நெடுகிலும் இயேசு பற்றி பைபிள் கூறும் வசனங்களை அள்ளித் தெளித்து அவரைக் கடவுளாக்க முயன்றுள்ளார். பைபிளை வேதமென நம்பியவர்கள் தான் இதில் ஏமாற முடியுமே தவிர முஸ்லிம்கள் அல்ல.

ஆனால் அவர் அள்ளித் தெளித்தது பைபிள் வசனங்கள் என்பதால் பைபிள் வசனங்கள் கொண்டே அவர் எடுத்துக் காட்டும் பைபிள் வசனங்களை மறுப்போம்.

1) அப்போது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு ஏசு க யாலை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

(மத்தேயு 3:13)

இன்னொருவரால் ஞானஸ்நானம் பெற்றவர் தான் தேவ மகனாகப் பிறந்தாராம். அந்தோ பரிதாபம்

2) அப்பொழுது ஏசு அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வீராக என்று எழுதியிருக்கிறதே என்றார்

(மத்தேயு 4:10)

இறைவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும் இயேசுவை ஆராதிப்பவர் ஜெபமணி உட்பட சாத்தான் என்கிறார் இயேசு.

3) சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான். அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் என்று என்னப்படுவார்கள் என்றார் இயேசு

(மத்தேயு 5:9)

தேவனுடைய புத்திரர் என்ற பதம் அன்றைய வழக்கில் தேவனுடைய அடிமைகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது என்பதற்கு இது சான்று. இயேசு மாத்திரம் தேவனின் புத்திரர் அல்ல. சமாதானம் பண்ணும் அனைவரும் தேவனின் புத்திரர்களே என்று இயேசுவே கூறுகிறார்.

இப்படிச் செய்வதனால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திராய் இருப்பீர்கள் என்றார் இயேசு..

4) அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போல் இருக்க வேண்டாம். மனுஷர் காணும் படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதகளின் சந்திகளில் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.

மத்தேயு 6:5

ஜெபமணி போன்ற பாதிரிமார்களுக்கு சொல்லப்பட்ட இந்த போதனையை அலட்சியம் செய்வதேன்?

5) அவர்களைப் போல் நீங்கள் செய்யாதிருங்கள் உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்வதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அறிந்திருக்கிறார்.

மத்தேயு 6:8

பிதாவிடம் அதாவது கர்த்தராகிய கடவுளிடமே பிரார்த்திக்க வேண்டும் என்று ஏசு கூறியுள்ளார். தன்னிடம் பிரார்த்திக்க அல்ல.

6) இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது என்றார் ஏசு

மத்தேயு 6:24

ஜெபமணி போன்றோர் மூன்று எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய புறப்பட்டதேன்?

7) ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை அறிந்திருக்கும் போது பரலோகத்தி ருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? 

மத்தேயு 7:11

இறைவனிடம் மட்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார் ஏசு.

8) பரலோகத்தி லிருக்கிற என் பிதாவின் சித்தாந்தத்தின் படி செய்கிறவனே பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே தீர்க்கதரிசினம் உரைத்தோம் அல்லவா?உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அனேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை அக்கிரமச் செயகக்காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்

மத்தேயு 7:21.22. 23

ஏசு தேவ குமாரன் அல்ல என்பதற்கும் ஏசுவைக் கர்த்தனாக்கும் ஜெபமணி போன்றோர் அந்நாளில் ஏசுவால் கைவிடப்படுவார்கள் என்பதற்கும், இவர்களெல்லாம் அக்கிரமக்காரர்கள் என்பதற்கும் இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா?

ஜெபமணியாரே அந்நாள் பற்றிய நம்பிக்கையும் தேவனைப் பற்றிய பயமும் உமக்கு இருந்தால் ஏசுவின் இந்தப் போதனையை இன்றளவும் நடைமுறைப்படுத்தும் இஸ்லாத்தின் பால் திரும்புவீரா?

1) மனிதருடைய கற்பனைகளை உபதேஷங்களாகப் போதித்து வீணாய எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கத்தரிசி நன்றாய் சொல்லியிருக்கிறான் என்றார்.

மத்தேயு 15:9

மனிதர்களின் கற்பனைகளைக் கலந்து வைத்துக் கொண்டு தான் ஏசுவைத் தேவகுமாரன் என்கிறார்கள் என்பதற்கு இது சான்றாக உள்ளது.

2) அதற்கு அவர் (ஏசு) நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?தேவன் ஒருவன் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே என்றார்

மத்தேயு 19:17

தன்னை நல்லவன் என்று கூறுவதற்கே சம்மதிக்காமல் அது கடவுளின் தனித்தன்னை என்று கூறியவரையா ஜெபமணியாரே தேவ குமாரன் என்று கூறிகிறீர்கள்.

11) அவருடைய சீஷர்கள் அதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு அப்படியானால் யார் இரட்சிக்கப்படக் கூடும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து மனுஷரால் இது கூடாதது தான் தேவனாலேயே எல்லாம் கூடும் என்றார்கள்.

மத்தேயு 19:25. 26

இரட்சகன் இறைவன் மட்டுமே நான் அல்ல என்று இவ்வளவு தெளிவாக அறிவித்த பின்னரும் ஏசுவை இரட்சகர் என்று ஜெபமணியாரே கூறத் துணியலாகுமா?

12) ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

மத்தேயு 20:23

மறுமையில் இரட்சிப்பது இறைவனின் தனி உரிமை. தனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை என்று ஏசு பிரகடனம் செய்த பின்பும் ஏசு இரட்சிப்பார் என்று கூற முடியுமா?

இந்தக் கருத்தில் அனேக வசனங்கள் பைபிளில் காணப்படுகின்றன. மனிதக் கரங்களால் மாசு படுத்தப்படாமல் இன்றளவும் பைபிளில் எஞ்சி நிற்கின்ற உண்மையான ஏசுவின் போதனைகள் இவை.

ஜெபமணி எடுத்துக்காட்டும் பைபிள் வசனங்களின் கருத்துகளை இவ்வசனங்கள் அடியோடு மறுக்கின்றன. இரண்டும் நிச்சயம் உண்மையாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். எதை உண்மை என்று ஏற்றாலும் பைபிளில் கலப்படம் உள்ளது என்று நிரூபணமாகும்.

எனவே ஜெபமணி தன் தவறான கிறித்தவக் கோட்பாட்டை விட்டு விலகி கலப்படமற்ற தூய வேதத்தைப் பெற்ற ஒரே இறைவனை மாத்திரமே வணங்கச் சொல்கின்ற தூய இஸ்லாத்தை தெரிந்தெடுக்குமாறு பரிந்துறை செய்கிறோம்.

முடிவுரை

ஜெபமணியின் அவதூறு நூலுக்கு நம்மால் இயன்றவரை நாகரீகமாகவும் விளக்கமாகவும் பதிலளித்துள்ளோம். அவரது நடைக்கும் தரத்துக்கும் நாமும் இறங்குவதற்கு நமது மார்க்கமான இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

சில அன்பர்கள் இப்பிரசுரத்தை இலவசமாக வெளியிடுவதற்குரிய செலவை ஏற்றுள்ளனர். அவர்கள் ஏற்ற போது இருந்ததை விட பன் மடங்கு காகிதத்தின் விலை ஏறிவிட்டதால் சுருக்கமான முறையிலே மறுப்பளித்துள்ளோம். ஜெபமணியின் எதிர் விளைவைப் பொறுத்து தேவைப்பட்டால் மிக விரிவாக மற்றொரு நூல் இன்ஷா அல்லாஹ் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வஆகிரு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமின்.

05.01.2011. 12:50 PM

More Articles …