ஏகத்துவம் செப்டம்பர் 2006
அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக்
"ஜாக்” இப்போது ஒரு தெளிவான முடிவில் இருக்கின்றது. எந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மாணம் செய்ய அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மூலமாக்காமல் விடுவதில்லை என்பது தான் அந்த முடிவு! அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கும் அக்கிரமத்தில் ஒரு கரை காணாமல் இருக்கப் போவதில்லை என்று கலகக் கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான களத்தில் குதித்திருக்கின்றது.
தவ்ஹீதுக்கு எதிரான காரியங்கள் நடக்கும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் .அப்படித் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் எதையும் செய்யாமல் ஒதுங்கியாவது இருக்க வேண்டும். ஆனால் ஜாக் பரிவாரமோ, தானும் செய்யாமல், செய்பவர்களையும் செய்யவிடாமல் தடுத்து வருகின்றது. அதாவது அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கின்றது. இதற்கு அண்மையில் மேலப்பாளையத்தில் நடந்த ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறலாம்.
வண்ண நிறங்களில் வாண வேடிக்கைகள்
மேலப்பாளையத்தில் உள்ள தர்ஹாக்களில் வழக்கமாக கந்தூரிகள் நடக்கும். ஆனால் இந்த முறை நடந்த கந்தூரிகள், வருடாந்திர உரூஸ் விழாக்கள் வேண்டுமென்றே நமக்கு எதிராகத் திட்டமிட்டு படு விமர்சையாகவும், படோடபமாகவும் அமைந்திருந்தன.
உண்மையில் அவை கோயில் திருவிழாக்களைத் தோற்கடிக்கும் விதமாக இருந்தன. அதிகமான பணச் செலவில் டிஜிடல் மியூசிக் பேண்ட் வாத்தியங்கள், அதிர வைக்கும் வாண வேடிக்கைகள் என அமர்க்களமாக, ஆர்ப்பாட்டமாக அதிகாலை வரை நடத்தப்பட்டன. சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்வோர் கூட இந்த அக்கிரமங்களைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் வெறுத்து, வெதும்பிக் கொண்டிருந்தனர்; வேதனைப்பட்டுக் கொண்டிருந்தனர். உடனே நாம் முதல் கட்ட நடவடிக்கையாக இந்தக் கந்தூரிகளில் நடந்த அட்டூழியங்களையும் அனாச்சாரங்களையும் கண்டித்து, துண்டுப் பிரசுரம் வெளியிட்டோம். இது மக்களிடத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, கந்தூரி நடந்த தெருக்களில் ஒன்றான மேலப்பாளையம் பஸீரப்பா தெருவில், தர்ஹா வழிபாடு எதிர்ப்புப் பொதுக் கூட்டம் என்ற தலைப்பில் 19.08.2006அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். இதற்காக மேலப்பாளையம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இதைக் கண்ட ஜாக் கலகக் கும்பல், கூட்டத்தைத் தடுத்து நிறுத்தும் விதமாகக் காவல்துறையில் புகார் செய்தனர். இவர்கள் தங்களது புகாரில், "பஸீரப்பா தெருவில் நடைபெற விருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே சம்பந்தப்பட்ட தர்ஹா கூட்டத்தினர் இந்தப் பொதுக் கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று தவமிருக்கின்றனர். தகுந்த முகாந்திரங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றவாறு இவர்களும் காவல் துறையில் புகார் கொடுத்து, கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு சூட்சுமத்தையும் சூழ்ச்சி வலையையும் பின்னினர்.
அது மட்டுமின்றி நமது சகோதரர்களிடம், "கூட்டம் நடக்குமா? பார்த்து விடுவோம்” என்ற ரீதியில் சவாலும் விட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த இந்தப் புகாரின் காரணமாகவும் இவர்கள் பரப்பி விட்ட வதந்திகள் காரணமாகவும் அன்று பொதுக்கூட்டம் நடக்குமா? என்பது கேள்விக் குறியாகி நகரமே பரபரப்பில் ஆழ்ந்தது. இதனால் கூட்டம் நடக்கும் தெருவில் காவல்துறை ஏராளமான காவலர்களை நிறுத்தி வைத்தது.
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே!
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! சூழ்ந்த ஞானம் படைத்த அவன், இவர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்தான். இறைவனின் மகத்தான கிருபையால் அன்று இரவு கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆயிரக்கணக் கானவர்கள் என்று சொல்லும் அளவுக்கு அலை அலையாய் மக்கள் திரண்டு வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் தவ்ஹீதுவாதிகள் அல்ல! சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
அந்த அளவுக்கு இந்தக் கந்தூரி வெறியாட்டங்கள் பாதிப்புக்கும் கொதிப்புக்கும் உள்ளாக்கியிருந்ததை நாம் உணர முடிந்தது. சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கு ஏற்பட்ட இந்த சூடு, கொதிப்பு எல்லாம் அழைப்புப் பணியைச் சொல்லி அரபு நாட்டில் சம்பளம் வாங்கும் ஜாக் கும்பலுக்கு ஏற்படவில்லை.
ஜாக் கலகக் கும்பலின் இந்தப் புகார் மற்றும் வதந்திகளால் ஏற்பட்ட மற்றொரு விளைவு, தொடர்ந்து ஏகத்துவப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதற்குக் காவல்துறையினர் கடும் கெடிபிடிகளைச் செய்ய ஆரம்பித்தனர். வழக்கம் போல் அடுத்த வாரம் 26.08.06 அன்று மேலப்பாளையத்தில் ஏகத்துவப் பிரச்சாரக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி வாங்கச் சென்ற போது, "நீங்கள் கூட்டம் நடத்துவதால் எங்களுக்கு அதிகமான சிரமம் ஏற்படுகின்றது. பாதுகாப்பு அதிகம் தர வேண்டியுள்ளது. எனவே அனுமதி தர முடியாது” என்று மறுத்து விட்டனர்.
பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய பின், கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆக, ஜாக் கலகக் கும்பல் செய்த இந்தக் காரியங்களால் ஒட்டு மொத்த ஏகத்துவப் பிரச்சாரமும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டு விட்டது. இதிலிருந்து இவர்கள் செய்வது அழைப்புப் பணியல்ல! அழைப்புப் பணிக்கு எதிராக ஆப்புவைக்கும் பணி என்பது நிரூபணமாகின்றது. இனியும் இவர்களை ஏகத்துவவாதிகள் என்றுநம்பி நம் ஈமானை இழந்து விடாமலிருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.
அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode