400. ஸஃபா, மர்வா
இவ்வசனத்தில் (2:158) 'ஹஜ், உம்ராவின் போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது குற்றமில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
விரும்பினால் ஸஃபா, மர்வாவைச் சுற்றலாம்; அல்லது விட்டு விடலாம் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
மாறாக, ஹஜ், உம்ராவின் போது ஸஃபா, மர்வாவில் தவாஃப் செய்வது கட்டாயக் கடமையாகும். (பார்க்க: புகாரீ 1545)
ஸஃபா, மர்வாவில் சுற்றுவது கட்டாயமாக இருந்தும், அதைக் குற்றம் என்று சிலர் நினைத்தனர். காரணம், ஸஃபா, மர்வாவுக்கு இடையே மனாத் எனும் அறியாமைக் காலக் கடவுள் சிலை இருந்தது.
ஸஃபா, மர்வாவை அறியாமைக் கால மக்கள் தவாஃப் செய்யும் போது அச்சிலையையும் சேர்த்துச் சுற்றி வந்தனர்.
அதே மக்கள் இஸ்லாத்தை ஏற்ற பின், மனாத் எனும் சிலை இருந்த இடத்தை நாம் எப்படிச் சுற்ற முடியும் என்று நினைத்து அதைப் பாவம் என்று கருதினார்கள்.
பாவம் என்று மக்கள் கருதியதால் தான், அது பாவம் இல்லை என்று கூறும் வகையில் இவ்வசனத்தில், 'குற்றமில்லை' என்று கூறப்பட்டுள்ளது. (பார்க்க: புகாரீ 1645, 1790, 4495, 4861)
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று இவ்வசனத்திலேயே கூறப்பட்டுள்ளதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வலியுறுத்தி உள்ளதாலும் ஹஜ்ஜின் போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது கட்டாயக் கடமை என்பதில் ஐயமில்லை.
400. ஸஃபா, மர்வா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode