Sidebar

20
Sat, Apr
1 New Articles

239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதை இவ்வசனங்கள் (12:109, 16:43, 21:7) கூறுகின்றன.

"பெண்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை இழிவுபடுத்துவது தான் காரணம்'' என்று கருதக் கூடாது.

ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பல்வேறு மதங்களில் வேற்றுமை காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை இத்தகைய வேற்றுமை ஏதும் இல்லை என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது.

நல்லறங்கள் மூலம் உயர் நிலையை அடைவதிலும், அதற்கான பரிசுகளை இறைவனிடம் பெறுவதிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இறைவன் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை என்பதைத் திருக்குர்ஆன் 40:40, 4:124, 16:97, 3:195, 33:35 வசனங்கள் கூறுகின்றன.

குறைவான நல்லறம் செய்த ஆணை விட நிறைவான நல்லறம் செய்த பெண் இறைவனிடம் உயர்ந்தவளாவாள். ஆணா, பெண்ணா என்று கவனித்து மறுமையில் பரிசுகள் வழங்கப்படுவதில்லை. கொள்கையும், நடத்தைகளுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

எனவே ஆன்மிக நிலையில் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதற்காக பெண்களில் நபிமார்கள் அனுப்பப்படுவது தவிர்க்கப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதற்கும், இறைச்செய்தி கொண்டு வரும் ஜிப்ரீல் என்ற வானவரைச் சந்திப்பதற்கும் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதால் இறைவன் பெண்களில் நபிமார்களை அனுப்பாமல் இருந்திருப்பானோ என்றால் அதுவும் இல்லை.

மூஸா நபியின் தாயாருக்கு ஒரு செய்தியைத் தன் புறத்திலிருந்து இறைவன் அறிவித்துள்ளான் என்பதை 20:38, 28:7 ஆகிய வசனங்களில் காணலாம்.

மர்யம் (அலை) அவர்களிடம் ஜிப்ரீல் எனும் வானவர் வந்ததையும் இறைக் கட்டளையைத் தெரிவித்ததையும் 3:47, 19:17 வசனங்களில் காணலாம்.

ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ விரும்பினால் அவன் கடந்த காலத்தில் வாழ்ந்த இரண்டு நபர்களைப் போல் வாழ வேண்டும். அவ்விருவர் தான் முஸ்லிம்களுக்குரிய முன்மாதிரிகளாவர் என்று 66:11-12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. அவ்விருவரும் பெண்களாவர்.

ஆன்மிகத்தில் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் முன்மாதிரிகளாக இரண்டு பெண்களையே இறைவன் குறிப்பிடுகிறான் என்றால் ஆண்களுடன் போட்டியிட்டு அவர்களையும் பெண்கள் மிஞ்ச முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அப்படியானால் பெண்கள் நபிமார்களாக அனுப்பப்படாதது ஏன்?

இறைத்தூதுப் பணி மிகவும் கடினமான பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவது ஆண்களில் கூட அனைவராலும் சாத்தியமாகாததாகும்.

இறைத்தூதராக அனுப்பப்படுவோர் தமது சமூகத்தில் இருந்த அத்தனை கொள்கை கோட்பாடுகளையும் தனியொருவராக நின்று எதிர்க்க வேண்டும்.

* அவ்வாறு எதிர்க்கும் போது கொல்லப்படலாம்!

* நாடு கடத்தப்படலாம்!

* கல்லெறிந்து சித்திரவதை செய்யப்படலாம்!

* ஆடையைக் கிழித்து நிர்வாணப் படுத்தப்படலாம்!

இன்னும் சொல்லொணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும்.

பெண்களாக இருந்தால் இவை அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து மேலும் துன்புறுத்துவார்கள்.

ஒட்டுமொத்த சமுதாயத்தையே தன்னந்தனியாக களத்தில் நின்று எதிர்ப்பதால் ஏற்படும் சிரமங்களை எந்தப் பெண்ணாலும் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது.

இன்றைக்குக் கூட உடலுக்கு அதிக வேதனை தராத பணிகளில் தான் பெண்கள் நாட்டம் கொள்கிறார்களே தவிர பாரம் இழுக்கவோ, மூட்டை தூக்கி இறக்கவோ பெண்கள் போட்டியிடுவதில்லை. விரும்புவதுமில்லை. இறைத்தூதர்கள் என்ற பணி இதைவிடப் பல மடங்கு கடினமான பணியாகும்.

பெண்களை இழிவு செய்வதற்காக இப்பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறு என்பதை மேலே நாம் எடுத்துக் காட்டிய சான்றுகள் சந்தேகமற நிரூபிக்கும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account